மௌனம் - 22
அன்று நண்பர்கள் குழு விநாயக் வீட்டில் கூடியிருந்தது. நிமலன் அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தைக்காக டெல்லி வரை சென்று இருந்தான். வர்மாவும் தன் நிலாவை அழைத்துக் கொண்டு ஒரு வெளிநாட்டு ட்ரிப் சென்று விட்டான்.
அதனால் அவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் இன்று இங்கே சேர்ந்து இருந்தனர். அபிராமி இரண்டு நாள் பயணமாக மதுரை வரை ஒரு கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று இருந்தார். அதனால் இன்றைய இவர்களின் குழு இங்கே கூடி இருந்தது.
சமையலறையில் சிக்கன் ஸ்டஃப்டு பிரட் டோஸ்ட்டை விநாயக் செய்து கொண்டிருக்க.. அவன் அருகில் மேடை மேல் ஏறி அமர்ந்து வளவளத்துக்கொண்டு இருந்தாள் அபி.
“ஹ்ம்ம் அப்புறம் என்னாச்சு சொல்லு வினய், கேட்கவே செம மாஸா இருக்குடா இந்த சீன், இப்படியெல்லாம் இவனுங்களை தூக்கி போட்டு மிதிச்சா தான் உண்டு.. இல்லைனா ஈசியா வெளியே வந்துடுவானுங்க, செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு பாவமா முகத்தை வைச்சுட்டு தையல் மெஷின் வாங்கிட்டு போயிடுவாங்க பர** பயலு**” என்று அவள் திட்டிக் கொண்டிருக்க.. அதுவரை தொலைக்காட்சியை பார்த்தவாறு அமர்ந்திருந்த தர்ஷன் “அவ்வா பேட் வேர்ட்ஸ் பேசறே நீ..” என்றபடியே அங்கு வந்து நின்றான்.
“ஆமாடா அப்படித்தான் பேசுவேன் என்ன செய்வே..?” என அவனைப் பார்த்து இவள் இதழை சுழிக்க.. “நான் என்ன செய்வேன்.. ஆண்ட்டிகிட்ட சொல்லி உன் வாயிலேயே நாலு போட சொல்லுவேன், வேற எதுவும் செய்ய மாட்டேன்ப்பா..” என அவனும் அவளைப் பார்த்து பழிப்பு காண்பித்தான்.
“ச்சீ ப்பே..” என்று அபி முறைக்க.. “ஹே தீனி பண்டாரம் இங்கேயே செட்டில் ஆகிட்டியா நீ..! என்னடா அவன் உள்ளே போய் இவ்வளவு நேரமாகுதே இன்னும் ஆளையே காணோமேன்னு பார்த்தேன்.. இப்போ இல்லை புரியுது, இங்கே அவன் செய்யும் போதே நீ உள்ளே தள்ளிட்டு இருந்தா எப்படி வெளியே எங்களுக்கு வரும்..?” என்று அவன் விடாமல் அவளை வம்புக்கு இழுக்க தொடங்கினான்.
“ஆமா நான் இங்கே எடுத்து சாப்பிட்டதை இவரு பார்த்தார், போடா..” என்று முகத்தை சுழித்தவள், “நீயே சொல்லு வினய், நான் ஒண்ணு கூட எடுக்கலை தானே..!” என அவனையே சாட்சிக்கு அழைக்க.. விநாயக் சிரித்துக்கொண்டே “அவ எதுவும் எடுக்கலை தர்ஷு, நான் இப்போ தான் செய்யவே ஆரம்பிக்கறேன்.. இவ்வளவு நேரம் பிரிப்பரேஷனுக்கே சரியா இருந்தது..” என்றான்.
“ஆமா இதைத்தான் பெரியவங்க உதவியா இல்லைனாலும் உபத்திரவமா இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.. இப்படி ஒரு உபத்திரவத்தை பக்கத்திலேயே வெச்சுட்டு இருந்தா உனக்கு வேலை எப்படி சீக்கிரம் முடியும்..? அவனை தொல்லை கொடுத்தது போதும் குரங்கு, எழுந்து வெளியே வா..” என்றான் தர்ஷன்.
“ஹாங் அங்கே வந்து உன் முகத்தை பார்த்துட்டு உட்கார சொல்றியா..? அதுக்கு நான் இங்கேயே இருப்பேன், போ போ..” என அவளும் அவனை வெறுப்பேற்ற.. “ஏன் எனக்கு என்ன குறைச்சல்..? ஊரே தவம் இருக்கும்மா என் முகத்தை பார்க்க..” என்று சொல்லியபடியே எட்டி அவள் தலையில் தட்டினான் தர்ஷன்.
“அப்போ அங்கேயே போய் உன் அழகு முகத்தை காட்டு, இங்கே எங்களுக்கு வேண்டாம்..” என இவளும் சலிக்காமல் பதில் கொடுக்க.. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி இருவரையும் திரும்பி முறைத்தவன் “மரியாதையா இரண்டு பேரும் வெளியே ஓடிடுங்க..” என்றான்.
“இதைத்தான் நான் சொன்னேன்..” என்று தர்ஷன் அங்கிருந்து நகர போக.. “எல்லாம் உன்னால் தான்டா, இவ்வளவு நேரமும் வினய் என் கூட நல்லா தான் பேசிட்டு இருந்தான்.. நீ வந்த பிறகு தான் என்னையும் சேர்த்து விரட்டறான்..” என்று புலம்பியபடியே இறங்கியவன், “அவன் தான் போயிட்டானே.. நான் இங்கேயே இருக்கவா..?” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு விநாயக்கிடம் கேட்டாள்.
அதற்குப் புன்னகையுடன் என்றாலும் மறுப்பாக தலையசைத்த விநாயக், “வேண்டாம் நீ திரும்ப இங்கே உட்கார்ந்தா, அவனும் திரும்ப வந்து நிற்பான்.. எனக்கு வேலை முடியணும், பசிக்குதுடா சீக்கிரம் முடிச்சா தானே சாப்பிட முடியும்..!” என அவளை அனுப்பிவிட்டு, இரண்டு பக்கமும் நானஸ்டிக் தவ்வா வைத்து வேக வேகமாக வேலையை பார்த்தான் விநாயக்.
அவளுக்கும் பசி எடுக்கவும் மறுப்பேதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள் அபி. திடீரென்று தான் இன்று அனைவரும் சந்திப்பது என முடிவானது. வழக்கம் போல் எங்காவது பொதுவான ஒரு இடத்தில் சந்திக்க நினைத்தவர்கள், பின் மற்ற இருவரும் வர முடியாத சூழ்நிலை என்று தெரிந்து அடுத்து என்ன செய்யலாம் என பேசி இறுதியாக விநாயக் வீட்டிலேயே சந்திப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
சிறுவயதிலிருந்தே அனைவரும் ஒரே வீதியில் அடுத்தடுத்தும் எதிரெதிர் வீடுகளிலும் தான் வசித்தார்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்கள் சந்தித்துக் கொள்வது வெளியிடங்களில் தான். அனைவருமே பெரிய வீட்டுப் பிள்ளைகள் என்பதால் ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒவ்வொருவரின் தேவைக்கு என்று அவரவர் பெயரில் கண்டிப்பாக இருந்தது.
அதில் ஒன்றைத்தான் ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்வார்கள். தவிர்க்க முடியாத சில நேரங்களில் அவசர சந்திப்புக்கு மட்டுமே யாருடைய மொட்டை மாடியிலாவது குழுவை கூட்டுவார்கள்..
நேற்று மதியம் வெளியில் சென்றிருந்த விநாயக், இன்று காலை பதினொரு மணியளவில் வீடு திரும்பியிருந்தான். மீண்டும் வெகு தூரம் பயணிக்க அவனுக்கு சோர்வாக இருந்தது. அதோடு உடலும் உறக்கத்திற்கு கெஞ்சவும் இங்கேயே அனைவரையும் வரச் சொல்லி விட்டிருந்தான்.
மூவரும் வெளியே ஏதோ பேசி சிரித்து அமர்க்களம் செய்து கொண்டிருப்பது கேட்க.. அதையெல்லாம் கவனித்தவாறே வேகமாக சமைத்து முடித்து தனி தனி தட்டில் கொண்டு வந்து அவர்கள் கையில் கொடுத்தவன், தானும் அங்கு அமர்ந்து கொள்ள.. பொதுவாக பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
என துஷ்யந்தின் அலைபேசி இசைத்தது. அதில் அனைவரின் கவனமும் அந்தப் பக்கம் திரும்ப.. விழிகளாலேயே அவர்களிடம் சொல்லிக் கொண்டு அலைபேசியை எடுத்தபடி நகர்ந்து சென்றான் துஷ்யந்த்.
அவன் மீண்டும் வந்து அமரவும், “ஆஹான் தென்றல் வந்து தீண்டுச்சா மச்சான்..?” என்று தோளோடு இடித்து லேசாக கேலி செய்தான் விநாயக். அதில் புன்னகையோடு தனக்கே உரிய ஸ்டைலில் இரு பக்க மீசையையும் இருவிரல் கொண்டு ஒருமுறை நீவி விட்டுக் கொண்டவன், “தீண்டுச்சா.. தீண்டலையான்னு எனக்குன்னு ஒரு கதையை தனியா வெச்சு இருப்பாங்க, அப்போ தெரிஞ்சுக்கலாம்.. இப்போ உன் கதையை பார்ப்போமா..! அடுத்து என்ன பிளான்..?” என்றான் துஷ்யந்த்.
இதில் அவ்வளவு நேரமும் இருந்த விளையாட்டுத்தனம் காணாமல் போக முகத்தை தீவிரமாக மாற்றியவன் “பிளான் நிறைய இருக்கு, ஒண்ணு ஒண்ணா தான் செயல்படுத்தணும் பார்க்கலாம்..” என்றான் விநாயக்.
இதில் மூவரின் முகமும் தீவிரமான யோசனைக்கு செல்ல.. “சரி அதை விடு, உன் படம் எப்போ ரிலீஸ்..?” என விநாயக் தான் அடுத்த பேச்சை துவக்கி வைத்தான். “ஹ்ம்ம் அனேகமா இந்த தீபாவளிக்கு இருக்கும்னு நினைக்கறேன்..” என துஷ்யந்த் சொல்லவும், “என்னடா நீயே இவ்வளவு யோசிக்கறே..! உன்கிட்டையே படம் எப்போ ரிலீஸ்னு ப்ரொடியூசர் மேடம் சொல்லலையா என்ன..?” என்று விநாயக் முகத்தை பார்த்தபடியே துஷ்யந்தை வம்புக்கு இழுத்தான் தர்ஷன்.
“அதெல்லாம் சொன்னாங்க, இந்த படத்தில் கொஞ்சம் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வொர்க் நிறைய இருக்கு.. அதனால் ஒருவேளை தாமதமாகலாம்னு கூட சேர்த்து தான் சொன்னாங்க.. அதனால் தான் சரியா என்னால் சொல்ல முடியலை.. இப்போ என்ன தீபாவளிக்கு மிஸ் ஆனா பொங்கலுக்கு வரப்போகுது.. அதுவும் இல்லைனா நியூ இயர்க்கு ரிலீஸ் செஞ்சுக்கலாம் விடு..” என்று புன்னகைத்தான் துஷ்யந்த்.
“அடுத்து என்ன படம் துஷி..?” என்றாள் அபி. “ஒரு ஆக்ஷன் த்ரில்லர், செம கான்செப்ட்.. நியூ டைரக்டர், பட் ஸ்கிரிப்ட் நல்லா இருந்ததினால் ஓகே செஞ்சுருக்கேன்.. அடுத்த மாசத்தில் ஷுட் ஸ்டார்ட் ஆகும்னு நினைக்கறேன்..” என்றான் துஷ்யந்த்.
“அப்போ அதுவரைக்கும் நீ ஃப்ரீயா..?” என்று தர்ஷன் கேட்கவும், “இல்லை மச்சான் ஒரு படத்துக்கு டப்பிங் ஒர்க் போயிட்டு இருக்கு.. இன்னொரு படத்துக்கு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு, பிஸியா தான் ஓடிட்டு இருக்கேன்..” என தன் வேலைகளைப் பற்றி பகிர்ந்து கொண்டான் துஷ்யந்த்.
“அப்புறம் மச்சி கங்கிராட்ஸ், சமீபமா இரண்டு விஷயங்கள் நீ செஞ்சதை பற்றி கேள்விப்பட்டேன்.. ஆனால் அப்போ என்னால் நேரில் வந்து உன்னை பார்த்து பாராட்ட முடியலை.. இரண்டுமே கொல மாஸ் மாமே.. இப்படியே நீ கலக்கு..” என்று விநாயக்கிற்கு கை கொடுத்தான் துஷ்யந்த்.
அதற்கு ஒரு புன்னகையோடு தலையசைத்தவன் “பெருசா நான் எதுவும் செஞ்சுடலை மச்சி, நாம கஷ்டப்பட்டு பிடிச்சு கொடுக்கும் ஒரு குற்றவாளிங்க எந்த தண்டனையும் இல்லாம ரொம்ப சுலபமா வெளியே வரும் போது எல்லாருக்கும் வரும் ஒரு தார்மீக கோபம் தான் எனக்கும்.. அப்போ அவங்க வெளியே வராம இருக்க என்ன செய்யணுமோ அதை தான் நானும் செஞ்சேன்..” என்றான் விநாயக்.
“நீ நினைக்கிறது தப்பே இல்லை வினய், இப்படி எல்லாம் செஞ்சா தான் சில மிருகங்களுக்காவது தண்டனை கிடைக்கும்.. இல்லை அத்தனையும் நாட்டில் சுத்தும், நாம காட்டில் வாழ வேண்டியதா மாறிடும்..” என்று அபி தன் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியவாறே பேச.. “நீ எதுக்கு இப்போ இவ்வளவு பொங்குறே..?” என்றான் தர்ஷன்.
“அப்படிதான்டா பொங்குவேன், எனக்கு இந்த நாட்டு மேலேயும் இங்கே இருக்க மக்கள் மேலேயும் அக்கறை இருக்கு.. உன்னை மாதிரி இல்லை, வயசு வாரியா சைஸு வாரியா சைட் அடிச்சா போதும்னு வாழ்ந்துட்டு போக..” என்று அபி அவனை கேலி செய்ய.. “எனக்கும் இந்த நாட்டு மேலேயும் அதில் இருக்க பொண்ணுங்க மேலேயும் அக்கறை இருக்கு, அதனால் தான் அவங்களை பார்த்து ரசிக்கறேன்..” என்றான் தர்ஷன்.
“இது என்ன மாதிரி பதில்..?” என அபி முறைக்க.. துஷ்யன் மற்றும் விநாயக் அவன் பேசிய விதத்தில் சேர்ந்து சிரித்தனர். “ஆமா மச்சி ஒரு பொண்ணு இன்னைக்கு பார்த்து பார்த்து அலங்காரம் செய்யறது எல்லாம் எதுக்கு..? நம்மளை மாதிரி நாலு பேர் பார்த்து ரசிக்க தானே..! நாமளும் கண்டுக்கலைனா அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்..? அப்படி எந்த பொண்ணும் மனம் வாடிப் போயிட கூடாதுன்னு தான் பெரிய மனசு செஞ்சு என் வேலையையெல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு அவங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கறேன்..” என தர்ஷன் தீவிரமான முக பாவத்தோடு பேசிக்கொண்டு இருந்தான்.
அதில் கடுப்பானவள் “சரி சரி இவனை விட்டா இப்படியே வெட்டி கதை பேசி நேரத்தை ஒட்டிடுவான்.. நான் உங்ககிட்ட எல்லாம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், அதுக்காக தான் இன்னைக்கு பேசலாம்னு கூப்பிட்டேன்.. ஆனா அவங்க இரண்டு பேரும் எஸ் ஆகிட்டானுங்க.. சரி அப்புறம் நான் அவங்ககிட்ட தனியா பேசிக்கறேன்..” என தொடங்கினாள் அபி.
அதில் மற்ற இருவரின் கவனமும் அவள் பக்கம் திரும்ப.. தர்ஷன் மட்டும் அதில் பெரிதாக ஈடுபாடு இல்லாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“இவன் ஏன் இப்படி விளக்கெண்ணெய் குடிச்சா மாதிரி இருக்கான்..? இவனுக்கு முன்னேயே விஷயம் தெரியுமா..!” என்று தான் ஒரு நல்ல போலீஸ்க்காரன் என்பதை மீண்டும் நிரூபித்தான் விநாயக். “ஹ்ம்ம் தெரியும்..” என்று தலையசைத்த அபி “நான் ஏதாவது ஒரு கிராமத்துக்கு போய் வேலை செய்யலாம்னு இருக்கேன்..” என்றாள்.
‘இது என்ன புதிதாக..?’ என்பது போல் இருவரும் அவளை பார்க்க.. “அப்பாவோட ஆசை வினய்..” என அபி சொல்லவும் “ஆமா அங்கிள் கூட ஆறு மாசத்துக்கு ஒரு முறை இதுபோல போவாரே..” என்றான் துஷ்யந்த்.
“ஆமா, ஆனா அவர் பதினைந்து நாள் கேம்ப் தான் போவார்.. நான் அப்படி இல்லை..” என்று சொல்லி அவள் சிறு இடைவெளி விடவும் இருவரும் கேள்வியாக அவளை பார்த்தனர். “நான் ஒரு வருஷமோ இல்லை இரண்டு வருஷமோ அங்கேயே தங்கி வேலை செய்யலாம்னு இருக்கேன்..” என்றாள் அபி.
அதில் அவளை வியப்பாக அவர்கள் பார்க்க.. “இங்கே நாம எவ்வளவு தான் சேவை செஞ்சாலும் அது வீணா போறது போல அப்பாவுக்கு ஒரு எண்ணம்.. இங்கே நிறைய ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இருக்கு, நிறைய ஸ்பெஷலிஸ்ட்ங்க இருந்துட்டே இருப்பாங்க.. ஒருத்தர் இல்லைனா ஒருத்தர் நிச்சயம் அவசரத்துக்கு பார்ப்பாங்க.. ஆனா இன்னும் சில கிராமங்களில் பல வசதிகள் கிடைக்கறதே இல்லை.. அப்படி ஒரு இடத்தில் தான் நம் தேவை அதிகமாக இருக்கும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்லுவார்.. அதனால் தான் நானும் அங்கே போய் சும்மா பத்து நாளோ பதினைந்து நாளோ இருந்து டிரீட்மென்ட் கொடுப்பதை விட, அவங்க கூடவே இருந்து கொஞ்ச நாள் என்னால் முடிஞ்ச உதவிகளை செய்யணும்னு நினைக்கறேன்..” என்றாள் அபி.
“நல்ல விஷயம் தான் செய்..” என்று விநாயக் சொல்லவும், துஷ்யந்தும் தன் இருக்கைகளின் கட்டைவிரலையும் உயர்த்திக் காண்பித்து புன்னகைத்தான். “இந்த சப்போர்ட் செய்யறது, சிங்கப் பெண்ணேன்னு பாடறது.. இந்த நாட்டுக்கு சேவை செய்யவே நீ பிறந்து இருக்கேன்னு கொஞ்சறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.. முதலில் அவ எந்த ஊருக்கு போக முடிவு எடுத்து இருக்கான்னு கேளுங்க..?” என்றான் தர்ஷன்.
அதில் மற்றவர்களின் கவனம் அபியின் பக்கம் திரும்ப.. அவள் சொன்ன ஊரைக் கேட்டு இருவருமே திகைத்து பார்த்தனர்.
********
அன்று நந்தினிக்கு பிறந்தநாள்..
பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாதாரணமாகவே அறைக்குள் தயாராகி கொண்டிருந்தவளின் மனம் ஒருவனையே சுற்றிக் கொண்டிருந்தது.
இதற்கு மேலும் இங்கே தனியே இருந்தால் தன் மனதை தன்னாலேயே கட்டுப்படுத்த முடியாது எனப் புரிந்து கீழே இறங்கி வந்தாள் நந்தினி. அங்கே வழக்கம் போல் நடுநாயகமாக வேதவல்லி அமர்ந்திருக்க.. அவரை நேருக்கு நேர் பார்க்காமல் பார்வையை தழைத்துக் கொண்டே இறங்கியவளை சமையலறையில் இருந்து கவனித்து விட்டிருந்த சித்ரா “இப்படி வா..” என்று பூஜை அறைக்கு அழைத்துச் சென்று மனதார பிராத்தித்து கொண்டவர், “நீயும் நல்ல வேண்டிக்கோ.. நீ ஆசைப்படுற எல்லாம் நடக்கணும், எல்லாம் கிடைக்கணும் நல்லா வேண்டிக்கோ..” என்றார்.
அதில் அவரை வெறுமையாக திரும்பி பார்த்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக விழிமூடி நின்றாள். அவளுக்கு இப்போது எந்த வேண்டுதலும் இல்லை. வருட கணக்காக வேண்டியது எதுவுமே நடக்காததில் உண்டான ‘விரக்தியா..! சோர்வா..!! இல்லை தனக்கு எதுவுமே சரியாக நடக்காது என்ற எண்ணமா..?’ என தெரியவில்லை.
மற்றவர்களுக்கு என்று வரும் போது ஒரு விஷயத்தை முனைப்பாக செய்ய நினைப்பவள், அதுவே தனக்கென வரும் போது அதை பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை.
இப்போதும் அப்படியே அவள் அமைதியாக விழிமூடி நின்றிருக்க.. சித்ரா அங்கு இருந்த விபூதியை எடுத்து மகளின் நெற்றியில் பூசினார். அதிலேயே விழிகளை திறந்தவளிடம் “ஹாப்பி பர்த்டே நந்தும்மா..” என்று மகளின் கன்னம் பற்றி வருடினார் சித்ரா. அவரை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் நந்தினி.
பத்து வயது குழந்தையாக தன் கணவரை இழந்த நிலையில் மகளின் கைபிடித்தப்படி ‘இவளை எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோமோ..?’ என்று கலங்கி நின்றதெல்லாம் அவர் மனக்கண்ணில் ஓடியதில் சித்ராவின் விழிகளும் லேசாக கலங்கியது.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்களது பெரிதான பிரச்சனைகள் எதுவுமில்லாத ஒரு வாழ்க்கை.. மற்ற வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களைப் போல உணவிற்கும் இருப்பிடத்திற்கும் வாழ்க்கையோடு போராட வேண்டியது இல்லை. ஆனால் இவரின் போராட்டம் முற்றிலும் வேறு ஒருவரோடு இருந்தது.
வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும் குறைவில்லை என்றாலும் இங்கு கொடுப்பதை சொல்லி காண்பித்துக் கொண்டே இருப்பதும் ஒருவகை நரகம் தான் என வெளியில் இருப்பவர்களுக்கு சொல்லி புரிய வைத்து விட முடியாது..
இங்கே அத்தனையையும் பொறுத்துக் கொண்டு பேசவே மறந்தது போல் அவர் இருந்ததின் இன்றைய பலன் நந்து தன் கண் முன் வளர்ந்து படித்து நல்ல ஒரு நிலையில் தன் சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறாள்.
இந்த நொடி இதுவே அவருக்கு போதும் என மனம் எண்ணினாலும் அவளுக்கு வளமான வாழ்க்கையை நல்ல ஒரு இடத்தில் அவளுக்கு பிடித்த ஒருவனோடு அமைத்துக் கொடுத்து விட வேண்டும் என்று அவர் மனதிற்குள் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.
இன்று அவளின் இருபத்து ஐந்தாவது பிறந்தநாள்.. இதுவரை அவளின் திருமண பேச்சை யாருமே எடுக்கவில்லை. அதுவே சித்ராவுக்கு ஒரு மன குறை தான். அவராக தொடங்கவும் தயக்கமாக இருந்தது திருமணம் என்றால் எத்தனை செலவுகள் இருக்கும் சட்டென அதை சொல்லி வேதவல்லி ஏதாவது பேசிவிட்டால் என்ற பயமே அவரை தயங்கி தடுமாறி தனக்குள்ளேயே தவிக்க செய்து கொண்டிருந்தது.
இதெல்லாம் மனதில் ஓட மகளின் முகத்தையே அவர் லேசாக கண்களில் தேங்கி இருந்த விழி நீரோடு பார்த்துக் கொண்டிருக்க.. தன் துயரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு “என்னம்மா என்னாச்சு..?” என்றாள் நந்தினி.
அதில் வேகமாக விழிகளை மூடி ஒண்ணுமில்லை என்பது போல் தலையசைத்தவர், கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே திரும்பி அவர் தானே தொடுத்து வைத்திருந்த பூவை கொடுத்தவாறே “இந்தா இதை வெச்சுக்கோ.. சீக்கிரம் வா, கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்..” என்றார்.
அவர் கையில் இருந்த மல்லிகைப்பூவை பார்த்த நந்தினிக்கு மனம் மீண்டும் அவனை நோக்கியே சென்றது. அதில் அவள் அப்படியே வாங்காமல் நிற்க, மகளின் கையைப் பிடித்து “ஹ்ம்ம் பிடி, வெச்சுக்கோ.. என்ன யோசனை..? நேரமாகுது பார் சீக்கிரம் கிளம்பு..” என்றார் சித்ரா. அதை மறுக்க முடியாமல் பூவை வாங்கி வைத்துக் கொண்டவளின் மனது அவளை அறியாமலேயே..
மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்
என்று தனக்குள்ளேயே பாடியது. இது அவளின் பல வருட வழக்கம், மல்லிகை பூவை பார்த்தாலே அவன் நினைவு தான் நந்தினிக்கு வரும். அவன் அன்று வாங்கி கொடுத்த மல்லிகை பூவை இந்தப் பாடலை முணுமுணுத்தபடியே தான் வைத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
அதன் பின் எப்போது மல்லிப்பூவை பார்த்தாலோ, இல்லை வைத்துக் கொண்டாலோ அவளுக்கு இந்தப் பாடல் தன்னையறியாமலே மனதில் ஓடும்.
அதில் அவள் அங்கே அப்படியே அசையாமல் நின்று விட, நந்தினியின் கண்கள் கலங்கியது. ‘அவனுக்கு தன் நினைவாவது இன்று வருமா..? தனக்கு பிறந்தநாள் என்றாவது தெரியுமா..!’ என்றெல்லாம் கழிவிறக்கத்தில் கண்கள் கலங்க அவள் நின்றிருக்க.. “இன்னும் என்ன தான் செஞ்சுட்டு இருக்கா அங்கே உன் மக..?” என்ற வேதவல்லியின் குரல் அவளின் மோன நிலையை கலைத்தது.
பூவை மகளிடம் கொடுத்துவிட்டு சித்ரா எப்போதோ வெளியில் சென்று விட்டிருந்தார். அவரிடம் வேதவல்லி கத்திக் கொண்டிருப்பது புரிய.. வேகமாக அங்கிருந்து வெளியில் வந்தாள் நந்தினி.
அவளையே கடுகடுவென பார்த்துக் கொண்டிருந்த வேதவல்லியை நெருங்கி அவரின் காலை தொட்டு நந்தினி வணங்கவும், “ஹ்ம்ம் நல்லா இரு..” என்றபடியே தன் அருகில் இருந்த நகை பெட்டியை எடுத்து திறந்து காண்பித்தார் வேதவல்லி.
இரண்டு சவரன் அளவில் இருக்கும் மெல்லிய சின்னச்சின்ன பூக்களை கோர்த்தது போலான கழுத்தை ஒட்டிய வகையிலான ஒரு சின்ன செயின் அது. அவரின் வசதிக்கும் அந்தஸ்துக்கும் இது மிகக் குறைவு என்று தெரிந்தாலும் “தேங்க்யூ வேதாம்மா..” என அவள் கூறவும், அவரின் பார்வை நந்தினியின் கழுத்தில் பதிந்தது.
எப்போதும் போல் இன்றும் விநாயக் வாங்கி கொடுத்திருந்த அந்த செயினை தான் அவள் அணிந்திருந்தாள். “இன்னைக்கும் இதையே தான் போடணுமா..? முதலில் அதை கழட்டி ஏறி, இந்தா இதை போட்டுக்கோ..” என அவர் சிடுசிடுக்க.. அவளால் எப்படி அதை செய்து விட முடியும்..? அதில் உண்டான தயக்கத்தோடு தன்னையும் அறியாமல் நந்தினியின் வலது கை உயர்ந்து அந்த செயினை கெட்டியாக பற்றியது.
தான் சொல்லியும் கேட்காமல் அவள் அப்படியே நிற்பதில் உண்டான கடுப்போடு “சிலை மாதிரி ஏன் அப்படியே நிற்கறே..? ஒரே விஷயத்தை எத்தனை முறை உனக்கு சொல்றது.. ஹ்ம்ம் கழட்டு, நானே இதை போட்டு விடறேன்..” என்றார் வேதவல்லி.
“இல்லை வேதாம்மா, நேரமாகுது அம்மா கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க.. நீங்க கெடுங்க நான் அப்புறம் போட்டுக்கறேன்..” என நந்தினி சமாளிக்க முயன்றாள். “என்னது அப்புறம் பொட்டுக்குவியா..? நீ எப்போவோ போட்டுக்கவா நான் இன்னைக்கு வாங்கி கொடுத்தேன்..!” என்றார் எரிச்சல் குரலில் வேதவல்லி.
அடுத்து அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார் எனப் புரிந்து சட்டென்று தணிந்து வந்தவள், “சரி கொடுங்க நான் இப்போவே போட்டுக்கறேன்.. இது கழுத்து வரைக்கும் அழகா இருக்கும், அப்படியே போட்டுக்கறேன்..” என நந்தினி அவர் கையில் இருந்ததை வாங்க போக.. சட்டென அதை பின்னுக்கு இழுத்துக் கொண்டவர், “அதை முதலில் கழட்டிட்டு போடு, நான் வாங்கி கொடுத்த பொருளுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு.. அதை எங்கே போய் வாங்கினியோ தெரியலை, நூல் மாதிரி இருக்கு.. எப்போ பாரு அதை போட்டுட்டே இருக்க வேண்டியது.. கருமம் என்ன நல்லா இருக்கோ அது..!” என்று சிடுசிடுத்தார் வேதவல்லி.
இதில் செய்வதறியாது விழித்தாள் நந்தினி. “என்ன எல்லாம் அப்படியே நின்னுட்டு இருக்கீங்க..? கோவிலுக்கு போகணும் நேரமாகுது சீக்கிரம் கிளம்புன்னு சொன்னீங்க.. அப்புறம் ராகு காலம் வந்துடுச்சு, எமகண்டம் வந்துடுச்சுன்னு என்னை யாரும் குறை சொல்லக்கூடாது, நமக்கு நிறைய நேரமும் இல்லை.. நந்துக்கு பிளைட்டுக்கு அப்புறம் லேட் ஆகிடும்..” என அவளைக் காப்பாற்றுவதற்காகவே அங்கு வந்தது போல் கூறினான் நிதின்.
“ஆங் அதை மறந்து போனேன் பாரு, இந்த வீட்டுக்கு பொம்பளைங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது.. மசமசன்னு வேடிக்கை பார்த்துட்டு நிற்க சொன்னா நல்லா நிற்பாங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா..” என்று நிதினிடம் அவர் சொல்லவும், “ஹ்ம்ம் சரி அதையும் கொடுங்க வேதம்மா, காரில் போகும் போது நந்து போட்டுக்குவா..” என்று எளிதாக அவரின் கையில் இருந்த நகை பெட்டியை வாங்கி கொண்டு வெளியேறி இருந்தான் நிதின்.
அவன் பின்னேயே நந்தினியும் விட்டால் போதும் என்பது போல் சென்று விட, அதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாத சித்ராவும் புஷ்பாவும் கூட பூஜைக்குத் தேவையான ஆளுக்கு ஒரு பொருளை கையில் எடுத்தபடி வெளியேறி இருந்தனர்.
இன்று மதியம் நந்தினி மலேசியா கிளம்பி செல்கிறாள். ஒரு படத்தின் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடப்பதாக இருந்தது. வளர்ந்து வரும் ஒரு இயக்குனரை வைத்து இவர்கள் எடுக்கும் புது படம் அது. முழுக்க புது முகங்களை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்தனர், காரணம் அந்த கதைக்கு இளமை பட்டாளம் தேவைப்பட்டது.
கதையும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் இளமை புதுமை கலந்த ஒரு காதல் கதை தான். அதில் எல்லா வேலைகளும் முடிந்து தயாராக இருக்க.. இன்று படக்குழு மலேசியா செல்ல திட்டமிட்டு இருந்தனர். தயாரிப்பாளர் என்ற முறையில் நந்தினியும் உடன் சென்று அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை.
முழுக்க புதுமுகங்கள் என்பதால் அவர்களுக்கு இந்த துறையில் இருக்கும் பல விஷயங்களைப் பற்றி தெரிந்திருக்காது.. அதோடு இயக்குனரும் வளர்ந்து வரும் ஒருவர் என்பதால் அனைவரையும் பொறுப்பாக உடனிலிருந்து சமாளிக்க வேண்டியது தயாரிப்பாளரின் கடமை.
அதை சரியாக செய்து முடித்து வேதவல்லியிடம் நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்று எண்ணத்தோடே இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகோத்தமனிடம் தானே செல்வதாக கேட்டு அனுமதி பெற்று இருந்தாள் நந்தினி. அப்போது ஒரு வீம்புக்காக செய்து விட்டிருந்தவளுக்கு இப்போது இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பது கொடும் கனவாக இருந்தது.
இங்கே இருந்தால் பேசிப்பழகி சிரித்து மகிழவில்லை என்றாலும் தொலைவில் இருந்தாவது வாரத்தில் இரண்டொரு முறை விநாயக்கை பார்த்துக் கொள்ளலாம்.. ஆனால் அங்கு சென்று விட்டால் அதுவும் முடியாது. அலைபேசியில் பேசி தன் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் அவளுக்கு இல்லை. இதெல்லாம் மனதில் ஓட கிளம்ப வேண்டிய நேரம் வர வர, அது கொடுத்த பதட்டமும் தவிப்பும் அவளுள் அதிகரித்துக் கொண்டே சென்றது.