மௌனம் - 9
ஆர்கே ப்ரொடக்ஷனை ரகோத்தமன் பொறுப்பெடுத்து பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவர்கள் நிறுவனத்தில் அப்போது எடுத்த படத்தில் அபிராமி தான் நாயகி.
பட சம்பந்தமான பேச்சுவார்த்தைக்காக முதலில் சந்தித்துக் கொண்ட போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து இருந்தது. அடுத்தடுத்து அபிராமி இதே நிறுவனத்தில் மூன்று படங்கள் நடித்து முடிக்கும் முன் அவர்களின் காதலும் பிரிக்க முடியாத நிலையை அடைந்து இருந்தது.
ஒரு படப்பிடிப்பிற்காக அபிராமி கொடைக்கானல் சென்றிருக்க.. அந்த வருட நவராத்திரி கச்சேரிக்காக அவரின் குடும்பம் மொத்தமும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊர்களில் உள்ள கோவிலில் கச்சேரிகள் ஏற்பாடாகி இருக்க.. கார் மற்றும் விமானத்தில் மாறி மாறி பயணித்துக் கொண்டு இருந்தனர். நவராத்திரியின் இறுதி நாளில் ஒரு கார் விபத்தில் துரதிஷ்டவசமாக மொத்த குடும்பமும் உயிரை விட்டிருந்தது.
இந்த விபத்து பற்றி அறிந்த நொடி அபிராமி அடித்துப் பிடித்து அங்கிருந்து கிளம்பி ஊர் வந்து சேர்வதற்குள் அரை உயிராகி விட்டிருந்தார். அங்கு படப்பிடிப்பில் உடன் இருந்த ரகோத்தமன் அபிராமியை கை தாங்கலாக அழைத்து வந்த புகைப்படம் தான் அன்றைய தலைப்புச் செய்தியாக மறுநாள் தினசரிகளின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருந்தது.
முன்பே இருவரைப் பற்றியும் அரசல் புரசலாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தாலும் அதை உறுதி செய்வது போலான சாட்சிகள் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. இப்போது கிடைத்த புகைப்படத்தை வைத்து தங்கள் சந்தேகம் உறுதியானதாக பல ஊடகங்களும் மார் தட்டிக் கொண்டிருந்தது.
இப்போது போல் அன்றைய நாளில் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் 24 மணி நேரமும் கேமராவுடன் வளைய வரவில்லை என்றாலும் ஊடக புகைப்படக் கலைஞர்கள் முக்கியமான இடங்களில் எப்போதுமே இருப்பார்கள்.
அதிலும் விமான நிலையங்களிலும் படப்பிடிப்பு தளங்களிலும் எப்போதுமே யாராவது ஓரிரு புகைப்பட கலைஞர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அப்படி தான் இன்றும் அபிராமியின் வீட்டினர் பற்றிய தகவல் தெரிந்தவுடன் அவர் வீட்டின் முன்பும் விமான நிலையத்தின் முன்பும் குவிந்திருந்தவர்களுக்கு தீனி போடும் வகையில் வந்து இறங்கினர் இருவரும்.
அழுதழுது வீங்கிய முகத்துடன் தலை கலைந்து சோர்வாக நடைதளர்ந்து ரகோத்தமன் மேல் சாய்ந்த படி அபிராமி நடந்து வர, தன்னோடு சேர்த்து அபிராமியை அத்தனை அன்பாகவும் அக்கறையாகவும் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார் ரகோத்தமன்.
இதை தினசரியில் பார்த்த வேதவல்லி கொந்தளித்துக் கொண்டிருந்தார். முன்பே அவருக்கும் இந்தச் செய்தி லேசாக தெரிந்திருந்தாலும் அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை தன்னை மீறி என்ன நடந்து விடப் போகிறது என்ற எண்ணம் தான் அவருள் நிறைந்திருந்தது.
தன் அண்ணன் மகளான புஷ்பாவை ரகோத்தமனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் வேதவல்லியில் விருப்பமாகவும் திட்டமாகவும் இருந்தது. இந்த வருட இறுதிக்குள் அவர்களின் திருமணத்தை முடித்து விட அவர் நினைத்திருக்க.. அதை கெடுப்பது போலான இந்த செய்தியும் புகைப்படமும் ஊர் முழுக்க அன்று பேசு பொருளாக மாறி இருந்தது.
அதில் தினசரியை கசக்கி தூர எறிந்தவர் “எவ்வளவு திமிரு இருந்தா கட்டின பொண்டாட்டி மாதிரி அவன் கூட உரசிட்டு வருவா..!” என்று கேவலமாக திட்டியவர் “இவனை சொல்லணும், இவனுக்கு எங்கே போச்சு அறிவு..?” என்று மகனையும் திட்டிக் கொண்டே அமர்ந்திருக்க.. இதையெல்லாம் அவருக்கு பின் தூணுக்கு அருகே நின்று கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்பா.
சிறுவயதிலேயே அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவோடு இவர்களின் திருமண பேச்சு வார்த்தையும் தொடங்கி விட்டிருக்க.. அப்போதிலிருந்தே ரகோத்தமனை மனம் முழுக்க நிரப்பிக் கொண்டு வளர்ந்திருந்தார் புஷ்பா.
அதில் அபிராமியோடு சமீபமாக ரகோத்தமனை இணைத்து வைத்து பரவும் செய்திகள் பற்றி அவருக்கும் தெரிய வந்திருந்ததில் மனம் வாட, நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார் புஷ்பா.
அவருக்கும் ஓரளவு ரகோத்தமனின் மனம் புரிந்து இருந்தது. இத்தனை வருடத்தில் உரிமையாக ஒருமுறை கூட ரகோத்தமன் பார்வை புஷ்பாவின் மேல் படிந்ததே இல்லை. இதெல்லாம் சேர்ந்து புஷ்பாவுக்கு ஒரு வகையில் பயத்தை கொடுத்துக் கொண்டே இருக்க.. இன்று அதை உறுதியாக்குவது போல் இப்படி ஒரு செய்தி.
அபிராமியை அவர் பார்க்கும் விதமும் தன் கையணைப்பிற்குள் அவரை வைத்திருக்கும் விதமும் காணும் போதே புஷ்பாவின் கண்ணீர் உடைப்பெடுத்தது.
புகைப்படம் வந்ததற்கே அத்தனை அமர்க்களம் செய்து கொண்டிருந்த வேதவல்லி, அடுத்தடுத்து நடந்ததில் எரிமலையாகி போனார். அபிராமியின் குடும்பத்தினருக்கு ஒரு மகனாக முன் நின்று அத்தனை கடமைகளையும் செய்திருந்தார் ரகோத்தமன்.
கொஞ்ச நஞ்சம் சந்தேகத்தோடு பேசிக்கொண்டிருந்த அத்தனை பேரின் வாயையும் தன் செயலின் மூலம் நீங்கள் நினைப்பது தான் சரி என அடைத்திருந்தார் ரகோத்தமன்.
இதில் வீட்டையே வேதவல்லி போர்க்களமாக மாற்றி இருக்க.. அவரை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் ராதாகிருஷ்ணன். இனி ஒரு நாளும் தாமதிக்கக்கூடாது அடுத்த முகூர்த்தத்திலேயே ரகோத்தமன் புஷ்பாவின் திருமணம் நடந்தாக வேண்டும் என்று வேதவல்லி முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்க.. விவரம் அறிந்து ரகோத்தமன் ஒரேடியாக அதை மறுத்தார்.
“உன்கிட்ட இங்கே யாரும் அனுமதி கேட்டு நிற்கலை, உனக்கு கல்யாணம் புஷ்பா கூட மட்டும் தான்.. ஒழுங்கா வந்து தாலி கட்டி குடும்பம் நடத்தும் வழியை பாரு..” என்று விட்டு அதற்கான ஏற்பாடுகளை வேதவல்லி கவனித்துக் கொண்டிருக்க.. இனிமேலும் அமைதியாக இருக்க விரும்பாத ரகோத்தமன் வேதவல்லி குறித்திருந்த முகூர்த்தத்திற்கு ஒரு வாரம் முன்பே அபிராமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.
அன்றே ஊடகங்களிலும் புகைப்படங்களோடு அந்தச் செய்தி வருமாறு ரகோத்தமன் ஏற்பாடு செய்துவிட்டு இருக்க.. தனக்கு எதிராக நின்ற மகனை மன்னிக்க முடியாமல் ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தார் வேதவல்லி.
திருமணத்தை வீட்டிற்கு தெரியாமல் செய்து கொண்டு இருந்தாலும் அபிராமியை அழைத்துக்கொண்டு அவர் முதலில் வந்ததென்னவோ தன் வீட்டிற்கு தான். ஆனால் வாசலிலேயே நிறுத்தி இருவரையும் அவமானப்படுத்தி வேதவல்லி விரட்டி விட, இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்து இருந்த ரகோத்தமன் துளியும் கவலைப்படாமல் அபிராமியோடு வெளியேறி விட்டார்.
இது அபிராமிக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது. தனக்குத்தான் உறவென யாரும் இல்லை என்றாகிவிட்டது, ரகோத்தமனாவது தன் உறவுகளோடு இருக்க வேண்டும் என நினைத்தார் அபிராமி. ஆனால் தன்னாலே அவர் உறவுகளை விட்டு பிரிந்து இருக்கும் நிலை உருவாகியது அவரை மனதளவில் பெரிதும் வருத்தியது.
இதில் ரகோத்தமனே எதிர்பாராத ஒன்று தயாரிப்பு நிறுவனத்திற்கு இனி அவர் வரவே கூடாது என வேதவல்லி சொல்லியது. ஆரம்பத்தில் இதை எதிர்பாராமல் திகைத்து நின்றாலும், பின் பரவாயில்லை என்று ஒதுங்கிக்கொண்டார் ரகோத்தமன்.
அபிராமிக்கு தான் இதெல்லாம் மனதை வலிக்க செய்துக் கொண்டே இருந்தது. தன்னால் அவரின் உரிமைகளை எல்லாம் விட்டு ஒதுங்கி இருப்பது போல் தோன்ற.. அதையும் அபிராமி சொல்லாமலே புரிந்து கொண்டிருந்த ரகோத்தமன் “எனக்கு உன்னை விட வேற எதுவுமே முக்கியம் கிடையாது அபி.. இன்னைக்கு பணம் இல்லைனா நாளைக்கு சம்பாதிச்சுக்கலாம்! ஆனா நீ அப்படி இல்லை..” என்று காதலோடு பேசி அபிராமியை சமாதானம் செய்திருந்தார் ரகோத்தமன்.
இதில் தன்னிடம் உள்ள சொத்துக்களை வைத்து ரகோத்தமனை ஏதாவது தொழிலை தொடங்க அபிராமி சொல்ல.. “ம்ஹூம் இது உன் சொத்து.. உனக்கானது, நான் எனக்கான பாதையை தேடிக்கறேன்..” என்றிருந்தார் ரகோத்தமன்.
“இது நம்மோடது, உனக்கு எனக்குன்னு ஏன் பிரிக்கறீங்க..?” என அபி சொல்லியும், அதை ஏற்றுக் கொள்ளாத ரகோத்தமன் அபியை பேசி வழக்கம் போல் சமாதானம் செய்துவிட்டு தனக்கான வருமானத்தை ஏற்பாடு செய்யும் வேலைகளை ஒரு புறம் செய்து கொண்டிருந்தார்.
இதற்கு இடையில் அவர்களின் காதல் திருமண வாழ்க்கை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அத்தனை அழகாக சென்று கொண்டிருந்தது. வழக்கமான வசதியான பெற்றோர்களின் மனநிலையிலேயே ரகோத்தமனின் வருமானத்தை தடை செய்தால், அவர் விரைவாக தங்களை தேடி வந்து விடுவார் என நினைத்திருந்த வேதவல்லியின் எண்ணத்தை இங்கு பொய்யாக்கி இருந்தார் ரகோத்தமன்.
நான்கைந்து மாதம் கடந்த பிறகும் ரகோத்தமன் வீட்டிற்கு வராததோடு அபிராமியுடன் சந்தோஷமாக வாழ்வதையும் அறிந்து கொண்ட வேதவல்லிக்கு அவர்களை எப்படி பிரிப்பது என்று எண்ணம் தான் மனம் முழுக்க நிறைந்திருந்தது.
ராதாகிருஷ்ணனுக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. பெற்றோர்களாக ரகோத்தமனுக்கு ஒரு வாழ்வை இவர்கள் முடிவு செய்து வைத்திருந்தாலும் அது வேண்டாம் என எண்ணித் தானாக ஒரு வாழ்க்கையை அவர் தேடிக் கொண்டிருந்தார்.
தங்களை ஒதுக்கி வைத்து விட்டு ரகோத்தமன் இப்படி திருமணம் செய்து கொண்டதில் ஆரம்பத்தில் ராதாகிருஷ்ணனுக்குமே கொஞ்சம் மன வருத்தம் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவரை அந்த நிலைக்கு கொண்டு சென்றதும் வேதவல்லியின் பேச்சும் செயல்களும் தான் என்ற புரிதல் இருந்ததால், விரைவாகவே மகனை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் தயாராக விட்டார் ராதாகிருஷ்ணன்.
ஆனால் வேதவல்லி அப்படியெல்லாம் இல்லை. இப்போதும் மகனை ஏற்றுக் கொள்ள அவர் தயார் தான்.. ஆனால் மகனை மட்டுமே..! அபிராமியை விட்டு எப்போது ரகோத்தமன் வந்தாலும் இருகரம் கொண்டு அவரை வரவேற்பார் வேதவல்லி.
இதற்கிடையில் அபியின் விஷயம் அறிந்து புஷ்பா மனமுடைந்து இருந்த நேரங்களில் கூட வேதவல்லி அத்தனை நம்பிக்கை கொடுத்திருந்தார். நிச்சயம் ரகோத்தமனுக்கு உன்னுடன் தான் திருமணம் நடக்கும்.. அதை நான் நடத்திக் காண்பிப்பேன் என்றெல்லாம் அவர் பேசியிருக்க.. தன் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு இருந்த புஷ்பா இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் மனதளவில் தளர்ந்து போனார்.
சாப்பிடாமல் உறங்காமல் அவர் அழுது கொண்டே இருக்க.. அப்போதும் கொஞ்சமும் சூழ்நிலையை உணர்ந்து புஷ்பாவை தேற்ற முயலாமல் மீண்டும் மீண்டும் போலியாக ஒரு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டே இருந்தார் வேதவல்லி.
“இதெல்லாம் காதலே இல்லை.. அவ அழகு மேலே இருக்க ஒரு மயக்கம், சீக்கிரம் அதெல்லாம் வெறுத்துப் போய் திரும்ப வந்துடுவான்.. ஒரு நடிகை கூட எல்லாம் யாராலும் குடும்பம் நடத்த முடியாது, நீ வேணும்னா பாரு.. ஒரு மாசத்தில் நீங்க சொன்னது தான் சரின்னு வந்து என் காலில் விழுவான்..” என்று அவர் பேசி இருக்க.. சிறு வயதில் இருந்தே அத்தையின் பேச்சை பெரிதாக நம்பி வாழ்ந்து கொண்டிருந்த புஷ்பாவுக்கு இதுவும் அப்படித்தான் நடக்கும் என்று தோன்றியது.
அதில் வேதவல்லியின் பேச்சை நம்பி அவர் காத்திருக்க.. நான்கு மாதம் கடந்த பிறகும் ரகோத்தமன் திரும்ப வரவே இல்லை. இதில் இனி தன் வாழ்வு ரகோத்தமனோடு இல்லை எனப் புரிந்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார் புஷ்பா.
அதேநேரம் இங்கு அபி தாய்மையுற்று இருந்தார். இருவருக்கும் அது அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது. இரு பக்க உறவுகளும் இல்லாமல் வாழ்க்கையை தொடங்கி இருந்தவர்களுக்கு, தங்களுக்கென வரும் புது உறவு, தங்களின் காதலின் சாட்சி, அதோடு பெரியவர்கள் இனி குழந்தைக்காகவாவது தங்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்றெல்லாம் அபிராமி எதிர்பார்த்துக் கொண்டிருக்க.. அப்படி எதுவுமே நடக்கவில்லை.
அபிராமியின் வற்புறுத்தலினால் ரகோத்தமன் தன் வீட்டிற்குச் சென்று தனக்கு குழந்தை பிறக்க போகும் விஷயத்தை பகிர்ந்து கொள்ள.. “அதை ஏன் இங்கே வந்து சொல்லிட்டு இருக்கே.. ஊருக்குள்ள எத்தனையோ நாய் குட்டி போடுது, அதையெல்லாம் தெரிஞ்சு வெச்சுட்டு நான் என்ன செய்யப் போறேன்..?” என்று எகத்தாளமாக பேசியிருந்தார் வேதவல்லி.
இதில் அதிகம் மனம் காயப்பட்டு போன ரகோத்தமன், அதன்பின் இங்கு வரவே இல்லை. அபிக்கு 5 மாதமாகி இருந்தது. தன் வீட்டினர் இருந்திருந்தால் இப்போது ஐந்தாம் மாதம் பூ முடித்திருப்பார்கள்.. அப்படி தனக்கு யாரும் இல்லாததில் உண்டான கவலையோடு அன்று முழுக்க மனம் கனக்க.. அமைதி வேண்டி கோவிலுக்கு சென்றிருந்த அபிராமியை எதேச்சையாக பார்த்தனர் புஷ்பா மற்றும் அவளது அன்னை ராதா.
மெல்லியப்பட்டு சேலை தலை நிறைய மல்லிகைப்பூ பெரிய பொட்டு வகிட்டில் குங்குமம் தாய்மையோடான பூரிப்பு முகத்தில் படர்ந்து இருக்க.. பூஜையை முடித்துக் கொண்டு மெல்ல நடந்து கொண்டிருந்தவளின் முன் தன் முந்தானையை விரித்தபடி அழுகையோடு வந்து நின்றார் ராதா.
அவரை புரியாமல் பார்த்தார் அபிராமி, அழுகையோடு நின்றிருந்த ராதாவையும் புஷ்பாவையும் கண்ட அபிராமிக்கு ஏனோ சட்டென கடந்து செல்ல முடியவில்லை. அடுத்து பேச வராமல் அபிராமி அப்படியே இருவரையும் பார்த்திருக்க.. “உன் முன்னே மடியேந்தி நிற்கறேன் ம்மா.. எனக்கு மடிப்பிச்சை போடுவியா..!” என்றார் கண்ணீரோடு ராதா.
அதில் ஏதோ வேண்டுதல் என்று புரிந்து கொண்ட அபிராமி “அம்மா நான் பணம் எதுவும் பெருசா கொண்டு வரலைங்களே..” என்றவாறே வேகமாக தன் வளையலை கழட்ட முயல.. “எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் ம்மா.. என் பொண்ணுக்கு வாழ்க்கை பிச்சை போடுவியா..?” என்றார் மீண்டும் அவள் முன் முந்தானையை விரித்து பிடித்தபடியே ராதா.
இதில் புரியாமல் திகைத்து அபிராமி இருவரையும் பார்க்கவும், “எனக்கு இவ ஒரே பொண்ணு.. என் வாழ்க்கையே இவ தான்.. இந்த நாலு மாசத்தில் மூணு முறை தற்கொலை முயற்சி செஞ்சுட்டா.. ஒவ்வொரு முறையும் காப்பாற்றி கொண்டு வரதுக்குள்ளே என் உயிர் போய் உயிர் வருது.. எந்த நிமிஷம் எதை செஞ்சுப்பாளோன்னு மனம் பதட்டத்திலேயே இருக்கு, இவளை நினைச்சு உண்டான கவலையிலேயே நெஞ்சு வலி வந்து இவங்க அப்பா படுத்துட்டாரு.. கோவில்னு பார்க்கறேன், இல்லை உன் காலில் விழுந்து கேட்டு இருப்பேன்.. எனக்கும் என் பொண்ணுக்கும் நீதான் ம்மா தாலி பிச்சை கொடுக்கணும்..” என்று அவர் பேசிக் கொண்டிருந்த எதுவுமே அபிராமிக்கு புரியவில்லை.
அவள் இன்று இருந்த மனநிலையில், இது வேறு குழப்பத்தை கொடுக்க.. இருவரையும் புரியாமல் பார்த்தவாறே நின்றிருந்தார் அபிராமி. இதுவரை ரகோத்தமன் இவர்களைப் பற்றி எதுவுமே பேசி இருக்கவில்லை. அதில் அபிராமிக்கும் எதுவும் தெரியவில்லை.
ஆனால் சம்பந்தமே இல்லாமல் தன்னிடம் வந்து இப்படி பேசிக் கொண்டிருந்தவர்களை யோசனையாக பார்த்தவள், சுற்றும் ஒற்றும் பார்த்தவாறே “அம்மா உங்க மன வருத்தம் எனக்கு புரியுது, ஆனா ஏதோ தவறு நடந்திருக்குன்னு நினைக்கறேன்.. நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசறீங்க..” என அவள் சொல்லி முடிக்கவும் “இல்லைம்மா தவறு எதுவும் நடக்கலை, நீ யாருன்னு தெரிஞ்சு தான் வந்து பேசறேன்.. நான் ரகோத்தமனோட மாமி..’ என அவர் சொல்லி முடிக்கவும் தான் அபிராமிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
அதில் அவள் லேசாக தடுமாறவும் சட்டென புஷ்பா வந்து அபிராமியை தாங்கி பிடித்திருந்தாள். இருவரும் நேருக்கு நேர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள.. புஷ்பாவின் விழிகள் அபிராமியின் மேடிட்டு இருந்த வயிற்றின் மேல் படிந்து மீண்டது.
அழுதழுது சிவந்து வீங்கி போயிருந்த முகமும் அந்த கண்களில் இருந்த ஏக்கமும் அபிராமியை வெகுவாக அசைத்துப் பார்க்க.. அதே நேரம் “சின்ன வயசில் இருந்து இவ அத்தை ரகோத்தமன் தான் உன் புருஷன்னு சொல்லி சொல்லியே வளர்த்து இவளை இப்படியாக்கி வெச்சு இருக்காங்க.. அது நடக்கலைனதும் இவ நடைப்பிணமா மாறிட்டா.. வாயும் வயிருமா இருக்கும் உன்கிட்ட இப்படி கேட்கறது சரி இல்லைன்னு எனக்கு தெரியும்.. ஆனா எனக்கு வேற வழி இல்லைம்மா, எனக்கு தாலி பிச்சை கொடும்மா.. இவ உயிரை காப்பாற்றி கொடும்மா..” என்று அவர் அழுகையோடு கைகூப்பி கேட்கவும், பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார் அபிராமி.
*****
இரவு எட்டு மணி அளவில் வீடு திரும்பிய ரகோத்தமன் இருளிள் மூழ்கி இருந்த வீட்டை கேள்வியாக பார்த்தபடியே உள்ளே நுழைந்தார். விளக்குகளை அவர் ஒளிர விட, கண்ணீர் வழியும் முகத்தோடு கன்னத்தில் கை வைத்தபடி அபிராமி சோபாவில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அதில் திடுக்கிட்டவர் “அபி என்னாச்சும்மா..? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கே..!” என்று பதட்டத்தோடு நெருங்கி கேட்கவும், கண்ணீரோடு அவரை நிமிர்ந்து பார்த்தவர் இதுவும் பேசாமல் சட்டென இடையோடு ரகோத்தமனை சேர்த்து அணைத்து கொள்ள.. என்னவென புரியாவிட்டாலும் அவளுக்கு இப்போது தேவை இந்த அணைப்பு என்று மட்டும் புரிந்து ரகோத்தமன் அமைதியாக அபிராமியின் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அன்று முழுக்க அபிராமி கொஞ்சமும் சரியில்லை.. வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை, சாப்பிடவில்லை கண்ணீர் மட்டுமே வழிந்து கொண்டிருக்க.. எதையோ நினைத்து கலங்கி போய் அமர்ந்திருந்தார்.
என்ன நடந்திருக்கும் என புரியாமல் ரகோத்தமனுக்கு எதை எதையோ நினைத்து மனம் பதைத்தது. ஆனால் அவளாக சொல்ல விரும்பாத போது கேட்டு தொந்தரவு செய்ய விரும்பாமல் தன் அருகாமை இப்போது அபிராமிக்கு எவ்வளவு முக்கியம் எனப் புரிந்து அமைதியாக உடன் இருந்தார்.
இரண்டு நாட்கள் இப்படியே செல்ல.. மூன்றாம் நாள் காலை அவர் முன் வந்து நின்றார் அபிராமி. அவர் காத்திருந்த நேரம் வந்துவிட்டது என புரிய நிமிர்ந்து அபிராமியின் முகம் பார்த்த ரகோத்தமன் “என்னம்மா சொல்லு..” எனவும் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..’ என்றாள் மெல்லிய குரலில் அபிராமி.
“இது என்ன புதுசா இருக்கு, முன்னெல்லாம் பேச இப்படி அனுமதி கேட்டு இருக்கியா என்ன..?” என்றார் சிறு புன்னகையோடு ரகோத்தமன். ஆனால் பதிலுக்கு சிரிக்காமல் கையை பிசைந்து கொண்டு நின்ற அபிராமியின் உடல் மொழியே பெரிதாக ஏதோ சரியில்லை என அவருக்கு புரிய வைத்திருந்தது.
அதில் ரகோத்தமன் அமைதியாகவே அபிராமியின் முகம் பார்த்து அமர்ந்திருக்க.. எதையோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக பல நிமிடங்கள் இருந்த அபிராமியை கண்டவருக்கு மனம் பிசைந்தது.
அபிராமியின் கையை இறுகப்பிடித்துக் கொண்டவர் “எதுவா இருந்தாலும் சொல்லு..” எனவும் கண்கள் கலங்க ரகோத்தமனை பார்த்த அபிராமி “எனக்கு.. எனக்கு ஒரு வாக்கு கொடுப்பீங்களா..?” என்றார்.
“வாக்கா.. என்ன வாக்கு..?” என அவர் நெற்றியை சுருக்கவும் “நான் என்ன சொன்னாலும் மறுக்காம செய்வேன்னு எனக்கு வாக்கு கொடுங்க..” என்று அபிராமி அவர் முன் தன் வலது கையை நீட்ட.. கூர்மையாக அபிராமியின் முகத்தைப் பார்த்தவர் “என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும் அபி, நீ சொல்லி நான் எதையும் மறுக்க மாட்டேன்..” என்றார்.
அதில் பேச வராமல் திணறிய அபிராமி உடைப்பு எடுக்க முயன்ற கண்ணீரை கட்டுப்படுத்தியவாறே “எனக்கு தெரியும், ஆனாலும் இப்போ எனக்கு நீங்க வாக்கு கொடுங்க.. இந்த விஷயத்தில் நிச்சயம் நான் சொல்றதை கேட்பேன்னு சொல்லுங்க..” என்று மீண்டும் கையை நீட்ட.. “அப்படி என்ன சொல்ல போற அபி..?” என்றார் சற்று அழுத்தமான குரலில் ரகோத்தமன்.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் அபிராமி கையை மட்டும் நீட்டிக் கொண்டிருக்க.. “உன்கிட்ட எதுவோ சரியில்லை.. நீ இப்படி எப்போவும் இருந்ததில்லை.. என்கிட்ட உனக்கு எதிர்பார்ப்புகளே கிடையாது, அப்படிப்பட்ட நீ இன்னைக்கு இப்படி கேட்கறேனா நிச்சயம் நான் அதுக்கு மறுப்பு தான் சொல்லுவேன்னு உனக்கு தெரிஞ்சுருக்கு இல்லையா..!” என்றார் அபிராமியின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி ரகோத்தமன்.
தன்னை இந்த அளவு புரிந்து வைத்திருப்பவரை எண்ணி மேலும் அபிராமியின் மனம் பாரமாக.. கண்ணீர் அவளின் கட்டுப்பாட்டையும் மீறி வழிந்து கொண்டிருக்க.. “அபி..” என்றார் சற்று அழுத்தமான குரலில் ரகோத்தமன்.
அதில் கண்ணீர் விழிகளோடு ரகோத்தமனை பார்த்தார் அபிராமி. “உனக்கு இத்தனை வலிகளையும் வருத்தத்தையும் கொடுக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் நாம பேச வேண்டாம்..” என்றார் முடிவான குரலில் ரகோத்தமன்.
“இல்லை, எனக்கு பேசணும்.. பேசியே ஆகணும், நான் வாக்கு கொடுத்துட்டேன்..” என்றார் அபிராமி. “வாக்கா யாருக்கு..? நீ என்ன வாக்கு கொடுத்தே..! நான் என்ன வாக்கு உனக்கு கொடுக்கணும்..?” என்று துண்டு துண்டாக அபிராமி பேசியதை எல்லாம் இணைத்து குழப்பத்தோடு கேட்டார் ரகோத்தமன்.
அதில் நீண்ட ஒரு பெருமூச்சை எடுத்து விட்டபடியே ரகோத்தமனை தீர்க்கமாகப் பார்த்த அபிராமி “நீங்க.. நீங்க உங்க மாமா பொண்ணு புஷ்பாவை கல்யாணம் செஞ்சுக்கணும்..” என்றிருந்தார்.
அதில் உண்டான அதிர்வோடு “என்ன சொன்னே..?” என்று ரகோத்தமன் எழுந்து நின்று விட, “நான் குழந்தை மேலே சத்தியம் செஞ்சு கொடுத்துட்டு வந்துட்டேன்.. உங்களை அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு..” என்றார் அபிராமி.