About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 11 💖
ரஞ்சன் உடைமாற்றி தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்தவன் விழிகள் சந்தனாவில் நிலைத்தன. ஏனோ பக்கவாட்டாய்த் தெரிந்த அம்முகத்தில் உயிர்ப்பில்லாதது போலொரு எண்ணம் இவனுக்கு. திரும்பிக் கூடத்தைப் பார்க்க, ஷோபனா உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட உணவை வாங்கி வைக்க, லட்சுமி அவளுக்கு உதவினார்.
சில நொடிகள் தயங்கிய இவனது கால்கள் பின்னர் அதை உடைத்துவிட்டு அவளை நோக்கி நகர்ந்தன. தன்னருகே அரவம் உணர்ந்தும் சந்தனா திரும்பவில்லை.
பெருமூச்சை வெளிவிட்டவன், “என்னாச்சு டாக்டர், உங்களுக்கும் உங்க ஹஸ்பண்ட்க்கும் எதாவது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா?” என இவன் குரல் செவியைத் தொட்டதும் ஸ்மரணை வரப்பெற்றவள், அவன்புறம் திரும்பி புன்னகைக்க முயன்றாள். அவ்வளவே, மற்றபடி சர்வ நிச்சயமாய் உதடுகளில் சிரிப்பில்லை.
“ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துக்கிறேன்னு நினைக்காதீங்க டாக்டர். நம்ப வாழ்றது ஒரு வாழ்க்கை. எஸ், உங்க ஹஸ்பண்ட் மேல தப்பு இருக்கலாம். இல்ல, உங்க சைட் மிஸ்டேக் இருக்கலாம். வாட் எவர், நீங்க அவர்கிட்டே பேசுங்க. அவர் மேல எவ்வளோ லவ் வச்சிருக்கேன்னு புரிய வைங்க. பேசுனா எல்லாம் சால்வ் ஆகிடும்னு தோணுது. இப்போ உங்களுக்குத் தேவை உங்க மனசுல இருக்கதை ஷேர் பண்ண ஒரு சோல். கண்டிப்பா அது உங்க ஹஸ்பண்டாதான் இருக்க முடியும்...” என்றவன் சில நொடிகள் நிறுத்தி, “நீங்க அவரை ரொம்ப மிஸ் பண்றீங்களா டாக்டர்?” என அவன் கேட்டதும், இவள் உதட்டைக் கடித்து தலையை மெதுவாய் அசைத்தாள். சட்டென விழிகளில் நீர் நிரம்பின.
“பாருங்க... நீங்க வாய் வார்த்தையா சொல்லலை. பட் உங்களோட கண்ணீர் சொல்லுது உங்களோட அன்பை. முதல் தடவை உங்களை மீட் பண்ணதுல இருந்து இப்போ வரைக்கும் உங்க சிரிப்புல ஏதோ ஒன்னு குறையும். உங்க கண்ல லைக் சம்திங் என்னென்னு என்னால சொல்ல முடியலை. அது உங்க ஹஸ்பண்டை நீங்க பிரிஞ்சு இருக்கதாலன்னு ஒரு எண்ணம். சீக்கிரம் அவரோட சேர என்னோட விஷ்ஷஸ்...” என்றவன் திரும்பி வெள்ளை ரோஜா ஒன்றைப் பறித்தான்.
“சாரி ரோஸ், இந்த டைம்ல நீங்க தூங்கிட்டு இருப்பீங்க. பட், வேற வழியில்லாம உங்களை டிஸ்டர்ப் பண்றேன்!” என முணுமுணுத்தவனின் வார்த்தைகள் அருகிலிருந்தவளின் செவியையும் தொட்டன.
“இந்தாங்க டாக்டர்... வொய்ட் ரோஸ், உங்க ஹஸ்பண்டை இதைக் கொடுத்து சமாதானம்
பண்ணுங்க. கண்டிப்பா உங்களைப் புரிஞ்சுப்பாரு...” என்றவன் செய்கையில் இவளது உதடுகளில் புன்னகை ஏறியது. அதை வாங்காது அவனையே பார்த்தாள்.
“டாக்டர்... சந்தனா...” என அவன் அழைக்க, “ஹம்ம்... தேங்க் யூ சார். பட் வொய்ட் ரோஸ் வேணாம். ரெட் ரோஸ் எடுத்துக்கிறேன்...” என சிவப்பு நிற ரோஜாவைப் பறித்தாள்.
“சூப்பர்... ரெட் ரோஸ் இஸ் அ சிம்பள் ஆஃப் லவ். சோ, சீக்கிரம் உங்க லவ் உங்ககிட்டே வந்துடுவாரு...” என்றவன், “இந்த சாரை கட் பண்ணிட்டு, ரஞ்சன்னு நீங்க கூப்பிடலாம். நானும் டாக்டரைக் கட் பண்ணிட்றேன்...” என்றான் துள்ளலானக் குரலில்.
இவளது முகம் மெதுவாய் மலர, “தேங்க் யூ ரஞ்சன்...” என்றாள் உணர்ந்து.
“யூ ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம் சந்தனா. இப்போ கேக் வெட்டப் போகலாமா?” என அவன் கேட்க, இவள் தலையை அசைத்ததும் இருவரும் கூடத்தை அடைந்தனர்.
ஷோபனா தானே செய்த அணிச்சலின் நடுவில் அழகாய் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வைத்தவள், “கட் பண்ணுங்க ரஞ்சன்...” என அவன் கைகளில் கத்தியைக் கொடுத்தாள். தனக்காகவென மனைவி செய்திருந்த அணிச்சலை பார்த்தவன், புருவத்தை உயர்த்தி மெச்சுதலாய்ப் பாரட்டியவாறே கத்தியை வாங்க, இவளது முகம் மலர்ந்து போனது.
“ஹேப்பி பெர்த்டே ரஞ்சன், ஹேப்பி பெர்த்டே அங்கிள், ஹேப்பி பெர்த்டெ டாடி...” என்ற குரல் செவியை அடைய, சிறிதான கூச்சத்துடன் அணிச்சலை வெட்டி மகனுக்கு முதலில் ஊட்டியவன், மனோவிற்கு அடுத்ததாய் ஊட்டினான். சந்தனா மென்புன்னகையுடன் அவர்களை கைபேசியில் பதிந்தாள்.
அவன் மனோவுக்கு ஊட்டுவதைப் பார்த்து,
“ரஞ்சன்... பரவாயில்லை. நீங்க ஷோபிக்கு கொடுங்க...” என்றவளின் குரலை அவர்கள் இருவரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. அடுத்ததாய் மனைவிக்கு அவன் கொடுக்க, அவள் ஆசையுடன் அதை உண்டாள். மனம் நிறைந்து போயிருந்தது. மனோவும் சந்தனாவும் தாங்கள் கொண்டுவந்த பரிசை உரியவனிடம் கொடுக்க, புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டான்.
பின்னர் ஷோபனா அணிச்சலை சிறு சிறு பகுதிகளாக வெட்டி கிண்ணத்தில் வைத்து அனைவருக்கும் கொடுத்தாள்.
சந்தனா சாப்பிடவில்லை. வாங்கி மேஜையில் வைத்தாள்.
“சாரி சந்தனா... எக் போடாம கேக் செய்யலாம்னு நினைச்சேன். பட், அது சரிவராதுன்னு எக் கலந்துட்டேன்...” ஷோபி தயங்க, “ப்ம்ச்... அதெல்லாம் ஒன்னும் இல்ல ஷோபி...” என இவள் புன்னகைத்தாள்.
சிறிது நேரம் கழிய, “சரி வாங்க. எல்லாரும் சாப்பிடலாம்...” என்ற ஷோபி உணவை மேஜை மீது எடுத்து வைக்க, மற்றவள் அவளுக்கு உதவினாள்.
“சந்தனா, நீங்க போய் உக்காருங்க. நானே சர்வ் பண்றேன்...” என சந்தனாவைக் கட்டாயப்படுத்தி அமர வைத்தாள் ஷோபனா. ஐவருக்கும் அவளே உணவைப் பரிமாற, மனோ சந்தனாவின் சேலையில் பழச்சாற்றை சிந்திவிட்டான்.
“ம்மா... சாரி மா...” என அவன் பாவமாய் விழிக்க, இவள் மென்மையாய் அவனை முறைத்தாள்.
“பொறுமையா சாப்பிடணும். சிந்தக் கூடாது மனோ. இது நம்ப வீடில்லை...” இவள் மெல்லிய குரலில் அதட்ட, ரஞ்சன் அவளை முறைத்தான்.
“இருந்தாலும் சந்தனா, நீங்க இவ்வளோ ஸ்டிரிக்டா இருக்க கூடாதுங்க!” என அவன் கடிய, இவள் சிரித்துவிட்டாள்.
“ச்சு... அப்படியெல்லாம் இல்ல ரஞ்சன். நான் முன்னவே சொல்லி இருக்கேனில்ல. இவனுக்கு சேட்டை அதிகம். பொறுமையே இல்ல. இப்போல இருந்து சொல்லிக் கொடுத்தாதான் கத்துப்பான்...” எனக் கூறியவள் எழுந்து சென்று சேலையைக் கழுவிவிட்டு வர, அவளது அலைபேசி இசைத்தது.
அதை இவள் ஏற்று பேச, “ஓ... நைட் ட்யூட்டில டாக்டர் ஷைலஜா இருப்பாங்களே?” என இவள் கேட்க, மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ, “ஓகே, ஒரு ட்வென்ட்டி மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன்...” என்றவளின் முகத்தை ஷோபனா கேள்வியாக நோக்கினாள்.
சில நொடிகள் தயங்கிய சந்தனா, “ஷோபி, அது ஒரு எமர்ஜென்சி கேஸ். இப்போ நான் ஹாஸ்பிடல் போகணும். சாரி...” என்றாள் சங்கடமாய். ஷோபனாவிற்கு வருத்தமிருந்தாலும், “பரவாயில்லை சந்தனா. ஒரு டாக்டரா உங்களோட சிட்சுவேஷன் புரியுது. நீங்க கிளம்புங்க...” என்றாள் அவளது தோளில் தட்டி.
ரஞ்சனும் அவளது பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். “மனோ... அம்மா வர லேட்டாகும். பாட்டியை ரொம்ப தொல்லைப் பண்ணாம டைம்க்கு தூங்கிடணும்...” என மகனிடம் அறிவுறுத்தியவள், லட்சுமியிடமும் பேசிவிட்டு வெளியே சென்றாள்.
காலணியை மாட்டிவிட்டு அவள் நிமிர, ரஞ்சன் தலையை அசைத்தான். இவளும் பதிலுக்குப் புன்னகை புரிய, “சந்தனா, ஒரு நிமிஷம்...” என்றவன் கையைக் கழுவிவிட்டு எழுந்தான்.
“இப்போவே டைம் எய்ட் ஆச்சு. தனியா எப்படி போவீங்க. நானும் வரேன்...” என்றான்.
“ஐயோ... இல்ல ரஞ்சன், பரவாயில்லை. நானே மேனேஜ் பண்ணிடுவேன்...” என்றாள்.
“நோ... நோ. நானும் வரேன்...” எனக் கிளம்பியவன், “ஷோபி போய்ட்டு வரேன்...” என மனைவியிடம் தலையை அசைக்க, அவள் சம்மதமாய் புன்னகைத்தாள்.
இந்த நேரத்தில் ரஞ்சனைத் தொந்தரவு செய்கிறோமே என்று சங்கடமாய் சந்தனா அவனைப் பார்க்க, “ம்ப்ச்... சந்தனா. வாங்க...” என அவன் மகிழுந்தை உயிர்ப்பிக்க, இருவரும் மருத்துவமனையை அடைந்தனர்.
அவனையும் உடன் அழைத்துச் சென்றவள், “ரஞ்சன், நீங்க இங்க வெயிட் பண்றீங்களா? நான் போய் பார்த்துட்டு வரேன்...” என அவள் நகர, இவன் வெளியே இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
இளம் வயது பெண் ஒருத்தி கத்திக் கூச்சலிட்டுக்
கொண்டிருக்க, இவனுக்கும் அந்தச் சத்தம் செவியை அடையத்தான் செய்தது. பெண்ணின் பெற்றவர்கள் ஏதோ கூற, சந்தனா அந்தப் பெண்ணிடம் பேசி அமைதிப்படுத்த முயன்று தோற்றுப் போனாள்.
பெருமூச்சை வெளிவிட்டவள் செவிலியரை அழைத்து அந்தப் பெண்ணிற்கு மயக்க ஊசியைப் போட பணித்தாள். சில நிமிட போராட்டத்திற்குப் பின் அந்தப் பெண் மயக்க நிலைக்குச் செல்ல, அவளைக் கட்டிலில் கிடத்தினர்.
பெருமூச்சோடு அவளின் உடல்நிலையை சோதித்துக் குறிப்பெழுதியவள், தன்னறைக்கு வந்து அமர, அந்தப் பெண்ணின் பெற்றவர்களும் வந்தமர்ந்தனர்.
“உங்கப் பொண்ணுக்கு என்னாச்சு மா?” என இவள் கேட்க, எதிரெயிருந்தப் பெண்மணி கதறியழுதார்.
“என்னத்த சொல்ல சொல்றீங்க டாக்டரம்மா. எம்புள்ளை சொந்தக்காரப் பையன் ஒருத்தனைக் காதலிச்சா. அந்தப் பையனுக்கு இவ மேல விருப்பம்தான். பையன் வீடு எங்களைவிட வசதி. இவளை அவங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே புடிக்கலை. நானும் இவகிட்டே சொல்லிப் பார்த்தேன். பணம்தானே பிரச்சனை, நான் வெளிநாட்டுக்குப் போய் சம்பாத்திக்கிறேன்னு அவனுக்காக வெளிநாடு போய்ட்டா. இதுதான் நேரம்னு அவங்க வீட்ல அவசர அவசரமாக ஒரு பொண்ணைப் பார்த்து அந்தப் பையனுக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அது தெரிஞ்சு எம்மவ உடைஞ்சு போட்டா மா. சரியா சாப்பிடலை, தூங்கலை, யார்கிட்டேயும் பேசலை. ஒரு வார்த்தைக் கூட அழலைமா. நான் அவளே சரியாகிடுவான்னு விட்டுட்டேன் மா. போகப் போக எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டா. ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்க ஆரம்சிச்சுட்டா மா...” என அவர் கதறியழ, சந்தனா உணர்வு துடைத்த முகத்துடன் அவரைப் பார்த்தாள். அந்தக் கண்ணீர் அவளை ஏதோ செய்து தொலைத்தது.
மனம் தறிக்கெட்டு எங்கோ பயணிக்கத் தொடங்க, அதை வெகுபிரயத்தனப்பட்டு கட்டுக்குள்கொண்டு வந்தவள், மேலும் அவர்களிடம் தகவல்களைப் பெற்றாள். அவர்களுடைய மகளைக் கண்டிப்பாக குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கையை அளித்து வெளியே வந்தவள் உதடுகளில் அதீத அமைதி. ரஞ்சன் எழுந்து நின்றான்.
“போகலாமா சந்தனா?” என அவன் கேட்டதற்கும் வெறும் தலையை மட்டும் அசைத்தாள். இருவரும் வீட்டை நோக்கி நகர, “சந்தனா... ஆர் யூ ஓகே?” என அருகிலிருந்தவனின் வார்த்தைகள் கூட அவளது செவியை எட்டவில்லை.
“சந்தனா... உங்ககிட்டேதான் கேட்டேன்...” என அவன் மீண்டும் அழுத்திக் கேட்க, “என்ன ரஞ்சன்?” என வினவினாள்.
“இல்ல, என்னாச்சு அந்தப் பொண்ணுக்கு. உங்களுக்கு சொல்ல விருப்பம் இருந்தா மட்டும் சொல்லுங்க...” என அவன் நிறுத்த, சாளரத்தில் பார்வையைப் பதித்தவளிடம் சில நிமிடங்கள் மௌனம்.
“அந்தப் பொண்ணு ஒரு பையனை லவ் பண்ணாளாம். இவ இல்லாத நேரம் அவன் வீட்ல கட்டாயப்படுத்தி வேறப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களாம். அதனால இவ மென்டலி ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா...” என்றாள். சொல்லும் போதே குரல் உடையத் தயாராகி இருந்தது. கவனமாய் அதை அருகிலிருப்பவனிடம் இருந்து மறைத்துவிட்டாள்.
அதைக் கேட்டவனிடம் பேச்சே இல்ல. “பாஸ்டர்ட்... இவனுக்கு எதுக்கு லவ் எல்லாம்? கட்டாயப்படுத்துனா வேறப் பொண்ணைக் கல்யாணம் பண்ணுவானா?” என இவன் வார்த்தைகள் கடுமையாய் வந்தன.
ஒரு நொடி அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “அந்தப் பையனுக்கு என்ன சிட்சுவேஷன்னு நமக்குத் தெரியாதில்ல ரஞ்சன். அவன் மேல மட்டும் தப்பு சொல்லக் கூடாதில்ல?” எனக் கேட்டாள்.
அவள் குரலில் என்ன இருந்ததென அறிய முயன்று தோற்றவன், “நோ சந்தனா, நீங்க என்ன சொன்னாலும் அவன் பண்ணது தப்பு. அவனுக்காக வெயிட் பண்ண இந்தப் பொண்ணை அவன் ஏமாத்திட்டான். அவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வரும்...” என்றவன் வார்த்தைகள் கடுமையை சுமந்து வந்தன. இவளிடம் கனத்த அமைதி.
அவர்கள் இருப்பிடம் வரை சென்று அவளைவிட்ட ரஞ்சன், “சாரி டாக்டர், கொஞ்சம் கோபமா பேசிட்டேன்...” என மன்னிப்பை யாசித்துவிட்டு அவன் அகல, சந்தனா அவனையே சில நொடிகள் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.
***
சந்தனாவிற்கு தீனா இல்லாது வெறுமையாய் இருந்தது அன்றைய நாள். அவளும் மனோவும் மட்டும் அமர்ந்திருந்தனர். அவனால் ஓடியாடி விளையாட முடியாதே என இவள் அவனுக்காகக் கவலைப்பட்டு உட்கார்ந்தவாறே சில விளையாட்டை கூற, இருவரும் விளையாடினர். ஆனாலும் நேரம் செல்லவில்லை.
“மனோ... உன் ரோஜாக்கு நான் தண்ணி ஊத்துறேன். நீ என் ரோஜாவுக்குத் தண்ணி ஊத்து...” என அவள் நீரைப் பிடித்து வர, இருவரும் சிரிப்புடன் செடிகளுக்கு நீரைப் பாய்ச்சினர்.
“குட்டி... உனக்காக ஒன்னு வச்சிருக்கேன் நான்...” என்றவன் மெதுவாய் நடக்க, இவள் வாயில்வரை அவனை அழைத்துச் சென்றாள். அதற்கு மேலும் முன்னேறாது நின்றுவிட உள்ளே சென்றவன் வெளியே ஒரு நெகிழிப்பையோடு வந்தான்.
“குட்டி, அப்பா ஊர்ல இருந்து வரும்போது எனக்கு சாக்லெட் வாங்கிட்டு வந்தாரு. இது பேர் மார்ஷ்மெல்லோ, இது பெரரோச்சர். ரொம்ப டேஸ்டா இருக்கும். உனக்கு எடுத்து வச்சேன் நான். வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் சாப்பிடு...” என அவன் நீட்ட, இவள் கைகளைப் பின்னே கட்டிக் கொண்டாள்.
“இல்ல மனோ... எனக்கு எதுவும் வேணாம். வா, நம்ப விளையாடலாம்...” என்றாள் அந்தப் பேச்சைவிடுத்து.
“குட்டி... ஏன் வேணாம்னு சொல்ற. உனக்கு பல் வலி இப்பவும் இருக்கா. மாத்திரை போடலையா நீ?” என அவன் வினவ, “ஆமா... ஆமா...” என்றாள் தலையை அசைத்து.
“சரி, சரியானதும் சாப்பிடு...” என்றான்.
“வேணாம் மனோ... நீ என்கூட விளையாட வரீயா? இல்லையா?” என அவள் கோபமாய்க் கேட்க, “சரி குட்டி... வா, விளையாடலாம்...” என்றவன் உள்ளே சென்று இன்னெட்டை வைத்துவிட்டு அலைபேசியை எடுத்து வந்தான்.
“குட்டி... கார் ரேஸ் விளையாடலாம்...” என்றவன் கைபேசியை உயிர்ப்பிக்க, இவள் ஆர்வமாய்ப் பார்த்தாள். நிறைய பேர் இதுபோல கைபேசி வைத்திருப்பதைக் கவனித்திருக்கிறாள். அதில் என்ன இருக்கிறது என ஆர்வம் எழுந்தாலும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவளது முகத்தைப் பார்த்தவன், “இந்தா குட்டி... நீ முதல்ல விளையாட்றீயா?” என வினவினான்.
“இல்ல மனோ... எனக்கு இதைப் பத்தி தெரியாது. நீ விளையாடு. நான் வேடிக்கைப் பார்க்குறேன்...” என அவள் குத்தவைத்து அவனுக்கருகே அமர்ந்தாள். அவன் விளையாடத் தொடங்கியவன், எப்படி இயக்குவது என அவளுக்குச் சொல்லிக் கொடுக்க, கவனமாய்க் கேட்டுக்கொண்டாள். அவனே இருமுறை விளையாடினான்.
“குட்டி... இப்போ உன் டர்ன். நான் அவுட் ஆகிட்டேன்...” என அவன் அலைபேசியை இவளிடம் கொடுக்க, கொஞ்சம் பயமாய் இருந்தது இவளுக்கு. ரஞ்சனிடம் எதையும் வாங்கி உண்ணக் கூடாது, அவனது பொருட்களைத் தொடக் கூடாதென தாய் அறிவுறுத்தியது நினைவு வர,
“ப்ம்ச்... மனோ, நீ விளையாடுனது எனக்குப் புரியவே இல்ல...” பொய்யாக் கூறினாள்.
“ஐயோ... இது ரொம்ப ஈஸி லெவல், ஜெய்ச்சுடலாம். நான் டூ ஹண்ட்ரட் லெவல் முடிச்சிட்டேன்...” என அவன் கூற, “அப்படியா?” என அதிசயமாய்க் கேட்டாள். அதில் அவனுக்கு ஏகபெருமை.
“ஆமா... ஆமா... நானும் தீனாவும் சேர்ந்து விளையாண்டோம். நான்தான் ஜெய்ச்சேன்...” என மனோ கூற, இவள் தலையை அசைத்தாள்.
அவன் மீண்டும் விளையாட, “மனோ... இதை இப்படி கொண்டு போ... தோ, இடிக்க வருது பாரு...” என அவள் யோசனை கூற, அவள் கூறியபடியே செய்தவன், “உனக்குத்தான் விளையாட வருதே குட்டி. அப்புறம் ஏன் விளையாட மாட்ற?” வினவினான்.
“அது... அதில்ல மனோ, உன் விளையாட்டுப் பொருள் எதையும் தொடக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க...” என்றாள் சோகமாய்.
“ஏன் குட்டி... சாரி, நான் உன்னை ஃபர்ஸ்ட் டைம் அடிச்சுட்டேன்ல. அதான் ஆன்ட்டி அப்படி சொல்லிட்டாங்களா. இனிமே அடிக்க மாட்டேன் குட்டி. இந்தா, போன்...” என அவன் சோகமாய்க் கொடுக்க,
“மேடம் திட்டுவாங்க மனோ. நான் சொல்றேன், நீ அதுபடி விளையாடு. உன் டர்ன் வரும்போது நீ விளையாடு...” என அவள் கூற, அரைமனதாய் சரியென்றவன் தொடர, நேரமானதும் சந்தனா பள்ளிக்கு கிளம்பவிட்டாள். மாலை அவள் வரும் நேரம் மனோ அவளுக்காக காத்திருந்தான்.
வந்ததும் புத்தகத்தைத் எடுத்து வைத்து அமர, இவன் அவளுக்கு வீட்டுப் பாடங்களை செய்ய உதவினான். இதுவே தொடர்கதையாகிப் போனது.
சந்தனாவின் காலையும் மாலையும் மனோவுடன் தொடங்கி அவனுடன்தான் முடிவடையும். பள்ளியில் நடந்தது அத்தனையும் அவனிடம் ஒப்பிப்பதை அவள் வாடிக்கையாக வைத்திருந்தாள். இருவரும் சிரித்து விளையாடுவது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது என நாட்கள் வேகமாய் நகர்ந்தன. சந்தனா தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறவில்லை. அவனுடைய விளையாட்டுப் பொருட்கள் எதையும் தொடவில்லை. அவனிடம் எதையும் வாங்கி உண்ணவில்லை. மற்றபடி மனோ அவளுக்கு உற்றத் தோழனாகிப் போனான்.
சனி ஞாயிறு வந்தால் அவர்களுக்கு வெகு குஷியாகிப் போய்விடும். வெயில் என்றும் பாராது அங்கிங்கு என விளையாடுவார்கள். மகன் வெயிலில் வாடுவது பொறுக்காத சதாம்பிகா, கணவரிடம் கூற, வீட்டை ஒட்டி மணல் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிறிதாய் கொட்டகை ஒன்றை அமைத்து கட்டில் ஒன்றை அங்கு வைத்துவிட்டார் மனிதர். இவர்கள் இருவரது வாசமும் அதன்பிறகு அங்குதான் வாசம் செய்யத் தொடங்கியது.
சனிக்கிழமை அன்றும் வகுப்பிருக்கிறதென அந்தவாரம் அரசு விடுமுறையை சரிக்கட்ட ஆசிரியர்கள் கூறிவிட, சந்தனா பள்ளி சீருடையில்லாது வண்ண உடையில் செல்லலாம் என துள்ளலாகக் கிளம்பினாள். இரவு சுட்ட சப்பாத்தி மீந்துவிட, பூரணி அதை முட்டையை ஊற்றி தக்காளி வெங்காயம் சேர்த்து புதுவித உணவு ஒன்றை தயார் செய்ய, “ம்மா... என்னமா செய்ற?” என மகள் ஆர்வமாய் வினவினாள்.
“முட்டை சப்பாத்தி செய்றேன் குட்டி...” என்றவர் சமைத்தவற்றை இவளுக்குத் தட்டிலிட்டுக் கொடுக்க, ஒரு வாய் உண்டாள். ருசியாய் இருக்க, “ம்மா... சூப்பரா இருக்கு மா. டெய்லியும் செஞ்சு தருவீயா மா?” எனக் கேட்டாள்.
“டெய்லி சப்பாத்தி சுட முடியாது குட்டி. மிதமிருந்த சப்பாத்திலதான் செஞ்சேன். அடுத்த வாரம் செஞ்சுத் தரேன்...” என அவர் கூற, தலையை அசைத்து உண்டவள், டப்பாவிலும் அடைத்துக் கொண்டாள்.
“குட்டி... மதிய சாப்பாடு எடுத்துட்டல்ல. இது எதுக்கு?” என அவர் கேட்க, சில நொடிகள் திருதிருத்தவள், “ம்மா... பதினொரு மணிக்கு பரேக்ல சாப்பிட மா. அப்போ பசிக்குது மா...” பொய்க் கூறினாள். காலையில் ஏழு மணிக்கே மகள் உண்டுவிடுவதால் பசிக்குமென எண்ணியவர், “ஆமா டி... காலைல சீக்கிரமே சாப்பிட்ற இல்ல. பசிக்கத்தான் செய்யும், இனிமே ரெண்டு டிபன் எடுத்துட்டுப் போ...” என அவர் கூற, தலையை பலமாய் ஆட்டி வைத்தாள் சின்னவள்.
மனோ எப்போதும் போல சந்தனாவிற்காகக் காத்திருக்க, இவள் பையுடன் துள்ளலாக வந்தாள். “குட்டி... இன்னைக்கு ஸ்கூலா? பேக் மாட்டிருக்க?” அவன் வினவ, “ஆமா மனோ... இன்னைக்கு ஸ்பெஷல் க்ளாஸ். அதான் கலர் ட்ரெஸ் போட்டிருக்கேன்...” என்றாள் சந்தோஷமாய்.
“அப்போ... இன்னைக்கு கிட்டி விளையாட முடியாதா?” என அவன் சோகமாய்க் கேட்க, “ஆமா... நம்ப நாளைக்கு விளையாடலாம் மனோ. இன்னைக்கு உனக்கு நான் முட்டை சப்பாத்தி எடுத்துட்டு வந்திருக்கேன்...” என டப்பாவை அவனிடம் நீட்டினாள் சந்தனா.
“முட்டை சப்பாத்தியா? எப்படி இருக்கும் அது?” என இவன் அதை உண்டான்.
“நல்லா இருக்கே குட்டி... நீயா செஞ்சீயா?” அவன் கேட்க, “ஹம்ம்...ஆமா. நான்தான் செஞ்சேன்...” என அவள்
சிரிப்புடன் பொய்க் கூறினாள்.
“பொய்தானே சொல்ற குட்டி... உனக்கு சமைக்க தெரியாதுல்ல?” அவன் சரியாய் கேட்டுவிட, அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள். அவன் உண்டு முடிய, இவள் டப்பாவை கழுவி பையில் வைத்தாள்.
“குட்டி... அடுத்த வாரம் எக்ஸாம் லீவ்க்கு தீனா வர்றான்...” மனோ கூறியதும், இவளது முகம் மலர்ந்தது.
“அப்படியா... சூப்பர் மனோ, நம்ப மூனு பேரும் சேர்ந்து ஒளிஞ்சு பிடிச்சு விளையாடுவோம்...” என துள்ளலாய்க் கூறியவள், அவனருகே பொத்தென அமர்ந்தாள்.
மனோ காலை எடுத்து அவளருகே வைக்க, “இன்னைக்கும் கால் வலிக்குதா மனோ?” என சந்தனா அக்கறையாய்க் கேட்க, வலிக்கவில்லை எனினும் மனோவின் தலை தானாய் அசைந்தது. அவனது காலை எடுத்து தன் மடிமீது வைத்தவள், மெதுவாய் அமுக்கினாள்.
அடிக்கடி விளையாடும்போது மனோ கால் வலிக்கிறது என அமர்ந்துவிட, இவள் அவன் காலை பிடித்துவிடுவாள். சுகமாய் இருக்க, கால் வலிக்கவில்லை எனினும் பொய்க் கூறி காலை அவள்புறம் நீட்டுவதை வாடிக்கையாக்கியிருந்தான் மனோ.
“மனோ... ஜூஸ் குடிக்க வா...” என சதா குரல் கொடுத்ததும் சந்தனா ஓடிச்சென்று அவரிடம் பழச்சாற்றை வாங்கிவந்து அவனிடம் கொடுத்தாள். அவன் குடித்து முடித்ததும் மீண்டும் குவளையை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தாள். இப்போதெல்லாம் அவளுடைய கால்கள் மனோவிற்கு சொந்தமாகிப் போயின.
இவள்தான் அவனுக்காக அங்குமிங்கும் ஓடினாள். அவனை அமர்ந்த இடத்திலே பார்த்துக்கொண்டாள். அவன் எழுந்து நடந்தால், தன்னுடைய தோளில் அவன் கையைப் போட்டு தாங்கிக் கொள்வாள். முதலில் அவன் காலையே வருத்தமாய்ப் பார்த்துதான் அத்தனையும் செய்தாள். ஆனால், இப்போதெல்லாம் அது தன்னுடைய கடமையென்பது போல அவனை அக்கறையாய்ப் பார்த்துக் கொண்டாள்.
சிலசமயம் விளையாட்டில் தோற்கும் நிலை வந்தால், “குட்டி... கால் வலிக்குது. போதும், நாளைக்கு விளையாடலாம்...” என அவன் பின்வாங்கிவிட, இவளுக்கு அத்தனைத் தெளிவு இல்லை.
“ஐயோ... மனோ, ரொம்ப வலிக்குதா? நான் மேடம்கிட்டே கேட்டு மாத்திரை வாங்கிட்டு வரவா?” என அவள் கேட்க, “வேணாம் குட்டி... கால் அமுக்கிவிட்டா, சரியாப் போய்டும்...” என அமர்ந்துவிடுவான். இவள் அவனுக்கு காலை மெதுவாகப் பிடித்துவிடுவாள். இப்படித்தான் அவர்களது நாட்கள் நகர்ந்தது.
“குட்டி... என் ரோஸ் நிறைய பூத்திருக்கு. உன் தொட்டில பூவே இல்ல?” மனோ கூற, இவளது முகம் வாடிப்
போனது.
“ஆமா மனோ... என் செடில பூவே இல்ல...” என சந்தனா விழிகள் கலங்க, “குட்டி... இந்தா, இந்த ரோஸை உன் தொட்டில வைப்போம்!” என வெள்ளை ரோஜா ஒன்றைப் பறித்து அந்தத் தொட்டியில் வைத்தான்.
“பாவம், பூவுக்கு வலிக்கும்...” என அவள் கூற, “சாயங்காலம்தான் பூ தூங்கும். அதனால வலிக்கும். இப்போ ரோஸ் முழிச்சிருக்கும் குட்டி, வலிக்காது!” என மனோ கூற, இவள் தண்ணீரைப் பிடித்துச் செடிக்கு ஊற்றினாள். நேரமானதை உணர்ந்து சந்தனா பள்ளிக்கு கிளம்ப, இவன் தந்தை முன்னே சென்று நின்றான்.
உமாநாதன் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.
“வா மனோ...” என அவர் கைத்தாங்கலாக மகனை அழைத்து அமர வைத்தார்.
“ப்பா... எனக்கு ரோஸ் செடி வேணும்...” என்றான்.
“ஈவ்னிங் வரும்போது அப்பா வாங்கிட்டு வரேன் டா...”
“இல்ல, எனக்கு மார்னிங்கே வேணும்...” அவன் அடமாய் நிற்க, “ஆஃபிஸ்க்கு டைமாச்சு மனோ...” என்றார் அவர்.
“வாங்கித் தாங்கப்பா...” என அவன் கத்தத் தொடங்க, இப்போதுதான் மகன் மனநிலை சரியாகி வருகிறது. அவனைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள மருத்துவர் அறிவுறுத்தியது அவருக்கு நினைவு வர, “சரி டா... வா, நான் வாங்கித் தரேன்...” என அவனை கடைக்கு அழைத்துச் சென்றார்.
“அப்பா... ரெட் ரோஸ் எனக்கு, வொய்ட் ரோஸ் குட்டிக்கு பா. அவளுக்கு வொய்ட் ரோஸ் பிடிக்கும்!” என இவன் கேட்டவற்றை வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் அவர்.
“ப்பா... ரெட் ரோஸை எடுத்துட்டு வந்து இங்க வைங்க. இந்த ரோஸ் தொட்டியை பின்னாடி வச்சுடலாம். வொய்ட் ரோஸ் இங்க வைங்க...” என மகன் அவரை ஒருவழியாக்கிவிட்டான். ஆனாலும் உமாநாதன் முகத்தில் அயர்வையும் மீறி சந்தோஷம் மிளிர்ந்தது. மனதளவில் மனோ நன்றாய் மீண்டுவிட்டானென மருத்துவர் கூறிய வார்த்தைகள் அவருக்கு எத்தனை பெரிய ஆசுவாசத்தை அளித்தன என்பதை அவர் மட்டுமே அறிவார்.
“சரி பா... நீங்க ஆஃபிஸ் கிளம்புங்க...” என்றவன் மாலை வீட்டிற்கு வரும் சந்தனாவிற்காக அப்போதே காத்திருக்கத் தொடங்கினான். அவள் வந்து இந்த ரோஜாக்களைப் பார்த்ததும் எப்படி சந்தோஷப்படுவாள் என எண்ணியவனின் முகம் மலர்ந்தது. அவன் நினைத்தது போலவே மாலை பள்ளி முடிந்து வந்த சந்தனா துள்ளி குதித்தாள்.
“மனோ... என் செடில ரோஜா பூத்திருக்கு. நாலு ரோஜா அதுவும்... சூப்பரா இருக்குல்ல?” என அவள் ஆர்ப்பரிக்க, “குட்டி... நான் மேஜிக் பண்ணி ரோஸ் வர வச்சேன்...” என்றான் அவன்.
“மனோ... நிஜமா வா? உனக்கு மேஜிக் தெரியுமா?” என அவள் கேட்க, “ப்ராமிஸா குட்டி...” என அவன் சத்தியம் செய்ய, சந்தனாவின் சந்தேகம் முழுதாய் அற்றுப் போனது. சத்தியம் செய்தாலே அதை உண்மையென நம்பும் மனது அவளுடையது.
“மனோ...செம்ம, எனக்கு வெள்ளை ரோஜா செடி ஒன்னு வேணும். மேஜிக் பண்ணி வர வைக்குறீயா? அம்மாகிட்ட கேட்டேன், வாங்கித் தரவே இல்ல...” என்றாள் சோகமாய். அவள் கேட்டதும் இவனுக்கு சந்தோஷம் தாளவில்லை. காலையில் அவளுக்காக வாங்கி வைத்த வெள்ளை ரோஜா செடியை மாயாஜாலம் செய்து வரவைத்ததாகக் கூறி கொடுத்துவிடலாம் என எண்ணியவன், “சரி குட்டி... ஒன் டைம்தான் மேஜிக் பண்ண முடியும். நீ கண்ணை மூடி, ரோஸ் வேணும்னு சொல்லிட்டே இரு.
நான் மேஜிக் போட்டு வர வைக்கிறேன்...” என்றான்.
“மனோ... என் முன்னாடி மேஜிக் பண்ணிக் காட்டு. நானும் பார்க்குறேன், ஆசையா இருக்கு பா...” என்றாள்.
“ஐயோ... நீ பார்த்தா மேஜிக் பலிக்காம போய்டும் குட்டி. உனக்கு ரோஸ் வேணுமா? வேணாமா?” என அவன் கேட்க, “வேணும்... வேணும்” என பலமாய் தலையை அசைத்தாள் சந்தனா.
“அப்போ கண்ணை மூடித் திரும்பிக்கோ...” என்றான் அவன். இவளும் திரும்பி நிற்க, சுவரைப் பிடித்து மெதுவாய் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து சென்றவன் ரோஜா செடியருகே நின்றான். லேசாய் கால் வலிக்க, சில நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு மெதுவாய் அதை நகற்றிக்கொண்டு வந்து அவள் முன்னே வைத்தான்.
கால் வலியெடுத்தது போல. அதைப் பொறுத்தவன், “குட்டி... மேஜிக் போட்டுட்டேன்...” எனக் கூறியதும் கண்ணைத் திறந்த சந்தனா வியந்து போனாள். உண்மையிலே அவள் முன்னே வெள்ளை ரோஜா செடி ஒன்றிருக்க, மனோவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“மனோ... சூப்பர்... நிஜமா நீ மேஜிக் பண்ணிட்ட. தேங்க்ஸ் மனோ... ரெண்டு வெள்ளை ரோஜா இருக்கு. எனக்குதானே இது? நான் எடுத்துக்கவா?” என மூச்சுவாங்கப் படபடவென கேட்டாள்.
“ஆமா குட்டி... உனக்குத்தான். வீட்டுக்கு எடுத்துட்டுப் போ...” என அவன் கூற, அவளது முகம் மலர்ந்தது. பின்னர் எதையோ யோசித்தவள், “மனோ... அம்மா திட்டுவாங்க. எனக்கு வேணாம்...” என்றாள் வருத்தமாய்.
“குட்டி... ஆன்ட்டி திட்ட மாட்டாங்க. நான் அப்பாகிட்டே சொல்லி பேச சொல்றேன்...” என அவன் கூறினாலும், தாய் ஒப்புக் கொள்ள மாட்டார் என செடியை நிராசையாய்ப் பார்த்தாள். தந்தையிடம் பேசச் செல்கிறேன் என இவன் நடக்க, சந்தனா அவனை வீட்டு வாயிலருகே அழைத்துச் செல்ல, இவன் உமாநாதனிடம் பேசி பூரணியை ஒப்புக்கொள்ளச் செய்தான்.
பூரணியும், “வீட்டுக்குப் போகும்போது எடுத்துட்டுப் போகலாம்...” என கூற, சந்தனாவின் முகம் மலர்ந்து போனது.
மனோ அவளது சிரித்த முகத்தைப் பார்த்து புன்னகைத்தான். அவனைக் கைத்தாங்கலாக கொட்டகைக்கு அழைத்து வந்தாள் அவள். காலை நீட்டி சுவரில் சாய்ந்து அமர்ந்த மனோவுக்கு கால் வலியெடுத்தது. பூந்தொட்டியை குனிந்து தள்ளியதில் லேசாய் காலுக்கு அழுத்தம் கொடுத்திருந்தான். அதனாலே வலியெடுத்தது.
அவனது முகத்தைப் பார்த்த சந்தனா, “மனோ... நடந்தது கால் வலிக்குதா?” எனக் கட்டுப் போட்டிருந்த காலில் மெதுவாய்த் தடவிக் கொடுத்தாள்.
“நான் நாளைக்கு வெள்ளை ரோஜா வச்சுட்டு ஸ்கூலுக்குப் போவேன் மனோ...”
“நாளைக்கு சண்டே, ஸ்கூல் லீவ் குட்டி...” என அவன் நினைவுபடுத்த, “ஆமால்ல... அப்போ திங்கள்கிழமை வச்சுட்டுப் போவேன்...” என்றாள் குஷியாய். பின்னர் அவள் சுவரில் சாய்ந்து அவன் பக்கத்தில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுத, மனோ அவளது மடியில் தலை வைத்துப்படுத்தான்.
“மனோ வலிக்குதா ரொம்ப? நான் மேடம்ட்ட மாத்திரை வாங்கிட்டு வரவா?” அவள் கேட்க, “இல்ல குட்டி... கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன்...” என அவன் வசதியாய்ப் படுத்தான். ஒருபக்க காலில் அவன் தலையிருக்க, மறுபுறமாய் நோட்டை வைத்து வீட்டுப் பாடம் எழுதினாள் சந்தனா.
“குட்டி... நானும் அடுத்த வருஷம் ஸ்கூலுக்குப் போவேன். அப்போ எனக்கு ஹோம் வொர்க் எழுதி தரீயா?”
“எனக்கு இங்கிலிஷ் தெரியாதே மனோ!”
“நீ எனக்கு மேக்ஸ் எழுதி கொடு. நான் உனக்கு இங்கிலீஷ் எழுதித் தரேன்...” என இருவரும் உடன்படிக்கைக்கு வந்தனர்.
“குட்டி... நானும் உன் ஸ்கூல்ல சேர்ந்துடவா?” அவன் கேட்க, “ஆமா மனோ... நீயும் என்கூடவே வரீயா? எங்க ஸ்கூல்ல பெரிய இடம் இருக்கு. நம்ப விளையாடலாம். நான் உன்னைப் பார்த்துக்குறேன்...” பெரிய மனுஷியாய் அவள் கூற, இவனும் தலையை அசைத்துக் கொண்டான்.
தொடரும்...
Latest Post: நம் காதல் நாணலன்றோ Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page