About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 13 💖
வேலை முடித்து வந்த ரஞ்சன் அலுப்புத் தீரக் குளித்துவிட்டு தலையை துவட்டியபடியே வெளியே வர, அவனது விழிகள் பால்கனியில் நிலைத்தன. புதிதாய் முளைத்திருந்த வெள்ளை ரோஜா செடியைப் பார்த்ததும் இவனது அதரங்களில் முறுவல் பூத்தது. அதனருகே சென்று நின்றவன், “ஷோபி, வொய்ட் ரோஸ் எனக்குத் தெரியாம வாங்குனீயா?” எனக் கேட்டான்.
சமையலறையில் இருந்தவள் எட்டிப் பார்த்தாள். “இல்ல ரஞ்சன், இது சந்தனா கொடுத்தாங்க. அவங்க வீட்ல வச்சிருந்தாங்க. டைம்க்கு தண்ணீ ஊத்த முடியலை. வாடிப் போகுது, நீங்களே எடுத்துட்டுப் போங்கன்னு சொன்னாங்க. ஓகேன்னு எடுத்துட்டு வந்துட்டேன்...” பதிலளித்தாள் ஷோபனா.
“ஓ...” என உதட்டைக் குவித்துக் கேட்டுக் கொண்டான் இவன்.
“பாவம்ங்க... ஃபீவர் போல சந்தனாவுக்கு. ரொம்ப டல்லாகிட்டாங்க. அவங்களுக்கு வேற ஏதோ மனசுல கஷடம் இருக்கோ, என்னவோ? முன்ன மாதிரி சிரிக்கவே மாட்றாங்க. எப்பவுமே ஏதோ யோசனையாவே இருக்காங்க!” என்றாள் வருத்தமான குரலில்.
ரஞ்சன் அமைதியாய் அவளது பேச்சை அவதானித்தான்.
“யெஸ் ஷோபி, நான் கூட அதை ஃபீல் பண்ணேன். அவங்க முகத்துல, சிரிப்புல ஏதோ மிஸ்ஸிங். அவங்க ஹஸ்பண்டை ரொம்ப மிஸ் பண்றாங்க போல!” என்றான்.
“இருக்கும்ங்க. சீக்கிரம் ரெண்டு பேரும் சமாதானம் ஆனா சரி...” என இவள் பெருமூச்சுவிட்டாள். இவன் அவளிடம் தன் பிறந்தநாளன்று பேசியதைப் பகிர, ஷோபனாவும் சந்தனாவின் கணவனைப் பற்றி யோசிக்கலானாள்.
ரஞ்சனுக்கு அவர்களுக்கு இடையே சண்டை இருக்குமென துளியளவும் தோன்றவில்லை.வேறு ஏதோ காரணமெனத் தோன்றினாலும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தான் தலையிட முடியாது என்ற எண்ணத்தோடு நகர்ந்தான்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தன. அன்று ஷோபனா மகனைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக கடகடவென படிகளில் இறங்கினாள். இன்னும் ஐந்து நிமிடத்தில் பேருந்து வந்துவிடும். நேர தாமதத்தை எண்ணி விரைவாய் இறங்கினாள்.
கடந்த ஓரிரண்டு நாட்களாக மின்தூக்கிவேறு இயங்கவில்லை. சரிசெய்வதாய் பொறுப்பாளர் உரைத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எண்ணிக் கொண்டே அவள் கீழே இறங்க, சந்தனா மேலேறி வந்தாள். அன்று அவளுக்கு இரவு நேரப்பணி. மாதத்தில் இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மருத்துவர்களும் இரவு நேரப் பணிபுரிவர்.
அன்று சந்தனாவுடைய முறை. தூங்காத விழிகள் லேசாய் சிவந்திருக்க, அதை மூக்குக் கண்ணாடியில் மறைத்திருந்தாள். எப்போதாவது தலைவலித்தால் கண்ணாடியை பயன்படுத்துவது உண்டு. தூக்கமில்லாது இரவு லேசாய் தலைவலியை உண்டு பண்ணியிருந்தது.
முகம் அப்பட்டமாய் சோர்வைக் காண்பித்தது. இவள் அவளைக் கவனிக்காது கடந்து செல்ல முற்பட, ஷோபியின் நடை நிதானப்பட்டது.
“இப்போ ஹெல்த் எப்படி இருக்கு சந்தனா. ஹோப் யூ பெட்டர் நவ்?” என அவள் அக்கறையாய் வினவ, இவள் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். நான் நன்றாய் இருக்கிறேன எனக் கூற முயன்ற புன்னகையில் சர்வநிச்சயமாய் உயிர்ப்பில்லை. ஏன் இந்தப் பெண் பொய்யுரைக்கிறாள் என அவளுக்கு யோசனையானது.
கண்கள் உள்ளே சென்றிருக்க, கருவளையம் சூழ்ந்திருந்தது. இரண்டு நாட்கள் முன்பு பார்த்ததை விட, இன்னுமே சோர்ந்து தெரிந்தாள் பெண். அவளது பார்வைக் கொடுத்த சங்கடத்தில், “என்னாச்சு ஷோபி?” எனக் கேட்டாள் இவள்.
“டூ மினிட்ஸ் சந்தனா...” என்ற ஷோபனா லட்சுமி அம்மாவிடம் அஷ்வினையும் மனோவுடன் சேர்த்து பத்திரமாய்ப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிடக் கூறிவிட்டு இவளருகே விரைந்தாள். சந்தனா அமைதியாய் இவளைப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.
“நிஜமா நல்லா இருக்கீங்களா சந்தனா?” ஷோபனா அவளது முகத்தை ஊன்றிப் பார்த்தவாறு கேட்க, இவளிடம் சில நொடிகள் கனத்த அமைதி. அதை விழுங்கியவள், “ஹம்ம்...” எனத் தலையை அசைத்தாள்.
“நீங்க ஓகே இல்லையோன்னு தோணுது சந்தனா. ரெண்டு நாள் முன்னாடி பார்த்ததை விட இப்போ ரொம்ப டயர்டா தெரியுறீங்க. அஸ் அ ஃப்ரெண்டா உங்களை நினைச்சு வருத்தமா இருக்குங்க. நீங்க உங்க ஹெல்த்தை சரியா கவனிக்கிறது இல்லையா?” எனக் கேட்டவள் குரல் முழுவதும் அவள் உடல் நலத்தின் மீதான கரிசனமும் அக்கறையும் கொட்டிக் கிடந்தன.
அதை சிந்தாமல் சிதறாமல் உள்வாங்கியவள், சோபையாய்ப் புன்னகைத்தாள். “தேங்க் யூ ஷோபி. ரொம்ப நாள் கழிச்சு இப்படி கன்சர்னா வார்த்தையைக் கேட்குறேன்.
பட் டோன்ட் வொர்ரீ, ஐ கேன் டேக் கேர் மை செல்ஃப். நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு வந்ததால பார்க்க டல்லா இருக்கேன். மத்தபடி ஐ’யம் ஓகே...” என்றாள் எதிரிலிருப்பவளை சமாதானம் செய்யும்விதமாக.
இருந்தும் ஷோபிக்கு மனம் கேட்கவில்லை. “சாரி சந்தனா, உங்ககிட்டே நான் அட்வான்டேஜ் எடுத்துக்கிறேன்னு நினைக்க வேண்டாம். நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா?” தயங்கியபடியே கேட்டாள். சந்தனா புரியாது அவளை நோக்கினாள்.
“உங்க ஹஸ்பண்ட்கிட்டே ஒரு டைம் நீங்கப் பேசலாம் இல்ல ?” எனக் கேட்டவள் குரலில் சந்தனா முகத்திலிருந்த புன்னகை கரையத் தொடங்க, பார்வையை அவளிடமிருந்து அகற்றிவிட்டாள். அருகேயிருந்த செடி கொடியென விழிகள் அலைபாய்ந்தன.
அவள் முகத்தையே பதிலுக்காயாப் பார்த்திருந்த ஷோபனா, “சந்தனா...” என அழைத்தாள். சில நொடிகள் காக்க வைத்தே அவளிடம் பார்வையைப் பதித்தாள் இவள்.
“ஹம்ம்... எனக்குத் தோணலை ஷோபி!” என்றாள். குரலில் என்ன இருந்தது என ஷோபிக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவள் கண்களிலிருந்த சோகமா? ஆற்றாமையா? எதுவெனப் பிரித்தரிய முடியாத போதும், இவளுக்கு கவலை அப்பியது.
“பேசக் கூட முடியாத அளவுக்கு அவர் மேல கோபமா? அவரை வெறுத்துட்டீங்களா நீங்க?” என்ற கேள்வியில் இவளது உதடுகள் மெதுமெதுவாக விரிந்தன. அதிராமல் புன்னகைத்தவள், “இந்த ஜென்மத்துல நானே நினைச்சா கூட அவரை வெறுக்க முடியாது ஷோபி...” என்றாள். குரலில் நேசம் ததும்பி வழிந்தது.
அதை உணர்ந்தவள், “இந்த அளவுக்கு அவரை நேசிக்குற நீங்க ஏன் ஒரு முயற்சி பண்ணக் கூடாது சந்தனா. எனக்கும் ரஞ்சனுக்கும் இடையில சண்டை வரலைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆரம்பத்துல ஒரு சில சண்டை வந்தது. முதல் தடவை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியாம தடுமாறுனோம். பட், அடுத்தடுத்து சண்டை வந்தா, நானோ அவரோ இறங்கி வந்து பேசிடுவோம். ப்ராப்ளம் அப்போவே சால்வ் ஆகிடும் சந்தனா. அதை நினைச்சுத்தான் நானும் அவர்கிட்ட உங்களைப் பேச சொல்றேன். ஐ க்நோ, இது உங்களோட பெர்சனல். பட், உங்களை, உங்க முகத்தைப் பார்த்து எப்படியோன்னு விட முடியலை என்னால. நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லைன்னுதான் பேசுறேன் சந்தனா. நீங்க என்னைத் திட்டுனாலும் பரவாயில்லை. உங்க ஹஸ்பண்ட்கிட்டே ஒரே ஒரு தடவை மனசுவிட்டுப் பேசுங்க...” என ஷோபனா கூற, சந்தனா அவளை வெறுமையாய்ப் பார்த்தாள். என்ன பதிலளிப்பது எனத் தெரியாது மனம் மெதுவாய் உடைந்தழ தயாராக, “என்னால முடியல ஷோபி...” என்றாள். குரல் கொஞ்சமே கொஞ்சம் கலங்கியிருந்தது போல. இத்தனை நேரம் முடியும் என்றிருந்த எண்ணம் எதிரிலிருப்பவளின் பேச்சில் லேசாய் உடைந்தது.
“டாக்டரம்மா...” என அவளைப் பிடித்து அருகேயிருந்த கல்மேஜையில் அமர வைத்தாள் ஷோபனா.
“ஏன் பேச முடியலை. நான் வேணா உங்களுக்காக அவர்கிட்டே பேசவா?” என இவள் அக்கறையாய்க் கேட்க, ஷோபனா தலையை இடம் வலமாக வேண்டாம் என அசைத்தாள்.
“சில இடத்துல பேசுனா பிரச்சனை சால்வ் ஆகும் ஷோபி. பட், சம்டைம்ஸ் அமைதியா இருந்தா பிரச்சனையை அவாய்ட் பண்ணலாம்...” என்றாள் வருத்தம் மிகுந்தக் குரலில். ஷோபனா அவளை வேதனையுடன் பார்த்தாள்.
“எனக்கும் அவருக்கும் இடையில யாரு வந்தாலும் அவருக்குப் பிடிக்காது ஷோபி. ரொம்ப பொசசீவ் அவரு...” சந்தனா கூறும்போது அவளது முகமும் குரலும் அவளவனின் மீதான நேசத்தில் தோய்ந்து வந்தது. மற்றவள் அமைதியாய்ப் பார்த்தாள்.
“அவருக்கு நான்னா ரொம்ப பிடிக்கும் ஷோபி. என்னை மட்டுமே பிடிச்சிருந்தது. என் முகத்துல எப்பவுமே சந்தோஷம் இருக்கணும்னு நினைப்பாரு. இப்போ என் கூட அவர் இல்லைதான். பட், அவரில்லைன்னு என்னைக்குமே நான் தனிமையை ஃபீல் பண்ணதில்லை. அவர் என் கூடவே இருக்க மாதிரி எண்ணம். அவரோட வாழ்ந்த நாட்களெல்லாம் என் மனசுல இன்னும் இருக்கு. சாகும் வரைக்கும் இருக்கும் ஷோபி. நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்ல, ஐ மீன் எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால அவரோட நினைப்பு ரொம்ப வந்துடுச்சு. மத்தபடி ஐ’யம் ஓகே. நான் அழுதா அவருக்குப் பிடிக்காது. சிரிச்சுட்டே இருக்கணும்னு சொல்லுவாரு. அவருக்காகவே என்னை நான் சந்தோஷமா வச்சுப்பேன். மனோ இருக்கான், எனக்கு அவன் அவனுக்கு நான், அப்புறம் லட்சுமி அம்மான்னு சந்தோஷமா இருக்கேன் நான். நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க!” என்றாள் தன்னை மீட்டுக் கொண்ட பாவனையில். இத்தனை நேரமிருந்த கலக்கம், சோர்வெல்லாம் நீங்கியிருந்தது. முகம் தெளிய, உதடுகளில் நீண்ட நாளைக்குப் பின்னர் புன்னகை படர்ந்தது.
“உங்க மனசு போல சீக்கிரம் நல்லது நடக்கும் டாக்டரம்மா. உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட சொல்லுங்க. தனியா இருக்கோம்னு ஃபீல் பண்ணா, ஒரு கால் பண்ணுங்க. நான் வரேன், இல்ல நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க...” என்றாள் அன்பான குரலில்.
ஒரு நொடி சந்தனாவின் மனம் அந்த அன்பில் நனைந்து போனது. “தேங்க் யூ ஷோபனா... தேங்க் யூ சோ மச்!” என்றவளின் குரல் லேசாய் நெகிழ்ந்திருந்தது.
“நீங்களே உங்க தேங்க்ஸை வச்சுக்கோங்க. என்னமோ தெரியலை உங்க முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்னு ஆசையா இருத்துச்சு. டெய்லி காலைல கண் முழிச்சதும் அவர் ரூமைப் பார்த்து, போட்டோஸ் பார்த்து ஸ்மைல் பண்ணிட்டேதான் எழுந்திருப்பாரு. அந்த ஸ்மைலுக்கு ப்யூர்லி நீங்கதான் காரணம் சந்தனா. அவர் சிரிச்சிட்டே இருந்தா, என்னோட நாள் ரொம்ப சந்தோஷமா போகும். எங்க எல்லாரோட சிரிப்புக்கும் காரணமான உங்க முகத்துல ஒரு ஸ்மைலைப் பார்க்கணும்னு ஆசை. சீக்கிரம் பார்ப்பேன்...” என்ற ஷோபியின் பதிலில் சந்தனா முகத்தில் முறுவல் பூத்தது. இருவரும் அப்படியே படிகளில் ஏறி அவரவர் தளத்தை அடைந்தனர்.
***
சந்தனா புத்தகத்தை மடியில் வைத்தவாறு வாயிலை ஒட்டி அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கவலையும் பயமும் அப்பிக் கிடந்தது. விழிகளைப் புத்தகத்தில் வைத்திருந்தாலும் அவளது செவிகள் என்னவோ அறைக்குள்ளேதான் இருந்தன.
“என்னால முடியாதுங்க. கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க வைக்கவா ஒத்தப் புள்ளையைப் பெத்து வளர்க்குறேன். அதுவும் அந்த ஸ்கூல்ல டீச்சர்ஸ் என்னைக்காவது ஒழுங்கா க்ளாஸ்க்கு வர்றாங்களா? பாதிநாள் ஸ்கூல் பசங்க வெளியேதான் திரிவாங்க. அப்படி இருக்க ஸ்கூல்ல போய் இவனை சேர்த்துவிடச் சொல்லி அடம்புடிக்குறான். நீங்களும் அமைதியா இருக்கீங்க?” சதாம்பிகா கோபத்தில் இரைய, மனோ கண்ணில் வழியும் நீரோடு தாயை முறைத்துப் பார்த்தான்.
உமாநாதனுக்கும் மகனை அரசுபள்ளியில் சேர்க்க துளிகூட விருப்பமில்லை. ஆனால், அவன் ஒரு மாதமாக அவரிடம் பேசி கெஞ்சி கரைத்திருக்க, மனைவி அசைவதாய் தெரியவில்லை. சதாவின் ஆதங்கமும் அவரளவில் சரிதானே. உமாநாதன் மகனை முடியாது என்மது போல பார்க்க, அவன் விழிகள் மேலும் கலங்கின.
“ப்பா... ப்ளீஸ் பா, நானும் சந்தனா படிக்கிற ஸ்கூலுக்கே போறேன் பா. சந்தனா என்னைப் பத்திரமா பார்த்துப்பா பா...” என்றான் கடைசி முயற்சியாக. குரல் முழுவதும் கெஞ்சல்தான்.
“மனோ... அந்த ஸ்கூல் போய் படிச்சா, நீயும் அந்தப் பசங்க மாதிரியாகிடுவ. கொஞ்சம் கூட டிசிப்ளின் இல்லாம போய்டும். உன்னோட படிப்பே வீணாகிடும். இனிமே அந்தக் ஸ்கூல்ல சேர்த்துவிடுங்கன்னு கேக்காத. உடம்பு சரியில்லாத பையன்னு கூடப் பார்க்க மாட்டேன்...” என்றைக்காவது ஒருநாள் சதா மகனிடம் கோபப்பட்டு பேசுவது உண்டு. ஆனால், இப்போது அவரது குரலில் எரிச்சலும் இருந்தது. வருடா வருடம் லட்சக் கணக்கில் செலவு செய்து பையனைப் பெரிய தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைத்துக் கொண்டிருக்க, இவன் அரசுபள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்றகிறானே என அவருக்கு ஏக எரிச்சல் மூண்டது. சந்தனாவோடு அவனைப் பழகவிட்டது தவறென மூளைக் கூறியது.
“மனோ... அம்மா சொல்றதும் சரிதான் டா. இவ்வளோ நாள் இங்க படிச்சிட்டு அங்கப் போய் மீடியம் மாறும், க்ளாஸ் என்விரான்மெண்ட் எல்லாமே மாறும். உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் டா. இங்கேயே படி...” என உமாநாதன் அவன் கையைத் தொட, வெடுக்கெனக் கோபத்தில் அவர் கரத்தைத் தட்டிவிட்டவன் விறுவிறுவென வெளியே நடந்தான்.
சந்தனா அவன் வெளியே வந்ததும் அவனருகே செல்ல, அவர்களது ஆஸ்தான கட்டிலில் சென்று இவன் அமர்ந்தான். கண்களில் கண்ணீர் வழிந்தது. என்ன செய்வதெனத் தெரியாது தானும் கலங்கிப் போய் அவனைப் பார்த்திருந்தாள்.
அந்த வருடம் முடிந்து அடுத்தக் கல்வியாண்டு துவங்கியிருந்தது. சந்தனா ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள். மனோ இப்போது ஊன்று கோல் உதவியில்லாது சிறப்புக் காலணி அணிந்து தனியாய் நடக்கப் பழகியிருந்தான். அவனது உடல்நிலையை சோதித்த மருத்துவர், அவன் தாராளமாய் பள்ளிச் செல்லலாம் என கூறிவிட, நாளை திங்கட்கிழமை சென்று பள்ளியில் மகனை எட்டாம் வகுப்பு சேர்த்துவிடலாம் எனப் பெற்றவர்கள் முடிவெடுத்திருந்தனர். ஏற்கனவே அவன் படித்த பள்ளிதான் அது. ஒரு வருடம் இவனது உடல்நிலையைக் காண்பித்து வர இயலாது என முன்பே பெற்றவர்கள் கூறி அனுமதி வாங்கியிருந்தனர்.
அதனால் அவன் ஒரு வயது அதிகம் இருந்தப் போதும், எட்டாம் வகுப்பில்தான் சேர வேண்டிய கட்டாயம். அதெல்லாம் மனோவுக்குப் பெரிதாய் தெரியவில்லை.
குட்டியும் அவனும் ஒரே பள்ளியில் பயில வேண்டும் என்று அவனுக்கு ஆசையாயிருக்க, அதனாலே தாய் தந்தையிடம் கேட்டு அடம்பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆனால், அவர்கள் இவன் வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை. அதனாலே கோபமாய் தந்தை கையைத் தட்டிவிட்டு வந்தான்.
சந்தனா அவனருகே அமர்ந்தாள். மனோ அவளது மடியில் படுத்து முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவன் அழுகிறான் என்பதை உணர்ந்தவள், “மனோ, அழாத டா. மேடம் சொன்னாங்க இல்ல, எங்க ஸ்கூல் உங்க ஸ்கல் அளவுக்குப் பெருசுல்ல. டீச்சர் வரமாட்டாங்க. வந்தாலும் அடிப்பாங்க தெரியுமா? நீ உன் ஸ்கூலுக்கே போ...” என்றாள் அவனை சமாதானம் செய்யும் விதமாக. பொய்தான் கூறினாள். மனோ அழுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் நண்பனின் கண்ணீரில் அவளுக்கும் அழுகை வந்தது.
மனோ அப்படியே படுத்திருந்தான். சந்தனா எதையோ பேசி அவனை சமாதானம் செய்தாள். அவன் உணவு உண்ணாதது நினைவு வர, “மனோ, நீ சாப்பிடலை இல்ல. பசிக்கும், என் டப்பால இருக்க சோறை சாப்டுறீயா?” எனக் கேட்டாள்.
“எனக்கு வேணாம்...” அவன் குரல் தெளிவில்லாது வந்தது.
“மனோ... தக்காளி சோறு எடுத்துட்டு வந்தேன். கொஞ்சம் சாப்பிடு மனோ...” என இவள் உணவை அவனுக்கு ஊட்ட, கண்ணைத் துடைத்துக்கொண்டு அமைதியாய் உண்டான். இருவருக்குமே அன்று விளையாட விருப்பமில்லை. அமைதியாய் அமர்ந்திருந்தனர். சந்தனா ஆறாம் வகுப்பில் நுழைந்து ஒரு வாரம் கடந்திருக்க, மனோவின் உடல்நிலையை மருத்துவரிடம் கேட்டறிந்தப் பின்னரே பள்ளியில் சேர்க்க வேண்டுமென அவனது பெற்றவர்கள் தாமதித்து இருந்தனர்.
அவன் கண்ணில் வழிந்து காய்ந்திருந்த நீரைத் தன் துப்பாட்டாவால் துடைத்துவிட்டவள், “மனோ... அழாத டா. நம்ப வீட்ல விளையாடலாம். நான்தான் டெய்லி வருவேன் இல்ல?” என அவனை சமாதானம் செய்து இயல்புக்கு கொண்டுவந்தப் பிறகே சந்தனா விடைபெற்றாள்.
மறுநாள் பெற்றவர்களுடன் சென்று மனோ முன்பு படித்தப் பள்ளியிலே எட்டாம் வகுப்பு சேர்ந்திருந்தான். அவனுடைய நண்பர்கள் எல்லாம் ஒன்பதாம் வகுப்பிலிருக்க, அவனால் புதிய நண்பர்களை எளிதில் ஏற்க முடியவில்லை. புதிய வகுப்பும் பிடிக்காதது போலொரு எண்ணம். அதனாலே தாய் தந்தையிடம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றினான்.
சிறிது நாட்களில் அவனே சரியாகிவிடுவான் என பெற்றவர்கள் விட்டுவிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக புதிய நண்பர்கள், புது வகுப்பு என அவன் அனைத்தையும் ஏற்கும் மனநிலைக்கு வந்திருந்தான்.
இன்னும் சரியாய் நடக்க முடியவில்லை அவனால். ஒரு வருடம் சிறப்பு காலணி அணிய வேண்டும் என மருத்துவர் கூறியிருக்க, மற்றவர்கள் விளையாடுவதை இவன் வேடிக்கை மட்டும் பார்ப்பான். ஆனால், சந்தனாவுடன் இருக்கும்போது இருவரும் சேர்ந்து விளையாடினர். அவனுக்காகவென இவள் மெதுவாய் நடப்பாள். அவனால் என்ன விளையாட முடிகிறது என யோசித்து செயல்படுவாள். அவன் உட்கார்ந்து கொண்டே அது இதுவென எத்தனை வேலை வாங்கினாலும் சலிக்காமல் செய்தாள்.
இப்போதெல்லாம் மனோவின் வீட்டுப் பாடங்கள் அனைத்தும் சந்தனாவிற்குப் பாத்தியப்பட்டாதிகியிருந்தன. அவன் எதுவுமே செய்யாது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே கூறுவான். இவள் அவனுக்காக எழுதுவது, படம் வரைவது என அனைத்தையும் செய்து கொடுப்பாள்.
ஆங்கிலம் புரியாது அவள் தடுமாறுகையில் இவன் உதவிக்கரம் நீட்டுவான். காலை எட்டு மணிக்கு மனோ பள்ளிக்கு கிளம்பிவிடுவதால் அவர்களது காலை நேர விளையாட்டு அருகிப் போனது. அவனுக்கு கால் குணமாகும் வரை பள்ளிப் பேருந்தில்தான் சென்றுவர வேண்டும் என்று சதா கூறியிருக்க, வேறு வழியின்றி சம்மதித்திருந்தான் மகன். முன்பெல்லாம் தாத்தாவும் அவனும் இருசக்கர வாகனத்தில் செல்வார்கள். அவன் தாத்தா இவனை பள்ளிக்கு காலை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவார். மாலை சரியாய் பள்ளிமுடியும் நேரம் வந்து காத்திருப்பார். அதனால் பெற்றவர்களுக்குப் பயமில்லாமல் இருந்தது. ஆனால், இப்போது அவன் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு ஒரு வருடம் தனியாய் செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.
மாலை பள்ளி முடிந்து சந்தனா வந்து அவளது வீட்டுப் பாடங்களை செய்து கொண்டிருப்பாள். மனோ சற்று தாமதமாகத்தான் வருவான். வந்ததும், “குட்டி... அசைமெண்ட் எழுதிக் குடு குட்டி. எனக்கு கை ரொம்ப வலிக்குது...” என்பான் இல்லாத கைவலியை உருவாக்கி.
“இங்கிலிஷ்ல இருக்கு மனோ... போ, எனக்குத் தெரியாது...” என அவள் மறுக்க, “நான் எப்படி எழுதணும்னு சொல்றே குட்டி. நீ அதுபோல எழுது...” என ஏய்ச்சு அவளை வேலை வாங்குவான். இதுவே தொடர்கதையாகிப் போனது.
ஒவ்வொரு பரிட்சை முடிந்து விடுமுறை கிடைத்ததும் தீனா இங்கே வந்துவிடுவான். அவன் வந்துவிட்டால் மனோவிற்குப் பொறாமை பொங்கி எழும். அவனது குட்டியை இவன் சொந்தம் கொண்டாட வந்துவிட்டான் என அவனை முறைத்துக் கொண்டே சுற்றுவான்.
மூவரும் சேர்ந்து விளையாடும் போது, “என் குட்டி, என் ஃப்ரெண்ட்...” என மனோ முனைக்க, “அவ எனக்குத்தான் ஃப்ர்ஸ்ட் ஃப்ரெண்ட். உனக்கில்ல...” என தீனா ஒரு பக்கம் அவனை கடுப்பேற்றுவான். இருவரும் தென்துருவம் வடதுருவமாய் நிற்க, சந்தனா அவர்களை சமாதானம் செய்யத் திணறிப் போவாள். ஒருவழியாய் சமாதானம் செய்துவிடுவாள். ஆனாலும் மறுமுறை தீனா வரும்போது புதிதாய் எதாவது சண்டை முளைக்கும்.
ஒவ்வொரு முறை தீனா வரும்போது இவளுக்கென்று எதையாவது எடுத்து வருவான். தாயிடம் கொடுத்த சத்தியத்திற்காக சந்தனா அவனிடம் எதையும் வாங்க மாட்டாள். மனோ தீனாவைப் பார்த்து அவளுக்கு எதாவது வாங்கி வருவான். தீனாவைக் கூட அவளால் எளிதில் சமாளிக்க முடிந்தது. மனோ அதிகம் பிடிவாதம் பிடித்தான். அதுவும் சந்தனாவிடம் அவனது பிடிவாதத்திற்கு எல்லையே இல்லாது போனது. வயதிற்கு மூத்தவன் அவன் என்றாலும், சந்தனாதான் அவனுக்காக அனைத்திலும் விட்டுக் கொடுத்துப் போவாள். பெரிய மனுஷியாய் அவனை அக்கறையாய்ப் பார்த்துக் கொள்வாள்.
மனோவுக்கு சந்தனா தனக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றொரு அடம் மனதிலிருக்கும். அதனாலே தீனா வந்ததும் அவன் முன்னே தன்னுடைய உரிமையை நிலைநாட்ட அவள் மடியில் உரிமையாய்ப் படுத்துக் கொள்வான். உணவை ஊட்டிவிடச் சொல்லுவான். அவளை வேலை ஏவுவான். தீனாவும் அவனுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல அவனும் அவளை வேலை வாங்கத் தயங்கவில்லை என்பதே உண்மை. ஆக மொத்ததில் சந்தனா அவர்கள் இருவருக்கும் கையெழுத்திட்டுப் பதியப்படாத சொத்தாகிப் போயிருந்தாள்.
இரண்டு வருடங்கள் வெகு சீக்கிரம் கடந்திருந்தது. தீனாவும் மனோவும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க, சந்தனா எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள்.
முன்பு போல விளையாட்டுத்தனமாய் இல்லாது சந்தனா கொஞ்சம் பொறுப்பாய் மாற ஆரம்பித்திருந்தாள். வயது மட்டுமின்றி அவளது சூழ்நிலையும் அவளது மனமுதிர்ச்சிக்கு காரணமாகியிருந்தது. காலையில் எழுந்ததும் பூரணிக்கு சமையலில் உதவுவது, தானே பள்ளிக்கு கிளம்பிச் செல்வதென ஓரளவிற்கு தாயின் சுமையைக் குறைக்கப் பழகியிருந்தாள்.
அவ்வப்போது எதாவது சமைக்கிறேன் என தாயிடம் அடம்பிடித்து சமையலில் அ, ஆ-வில் தொடங்கி இப்போது ஐ வந்திருந்தாள். அன்று சனிக்கிழமை பள்ளிவிடுமுறையாக இருக்க, இரவு சுட்ட சப்பாத்தியை முட்டை சப்பாத்தி செய்கிறேன் என இவள் தாயிடம் கேட்டு ஓரளவிற்குத் திருப்தியாய் செய்து முடித்திருந்தாள்.
“குட்டி... நல்லா செஞ்சிருக்க டி...” என பூரணி மகளைப் பாராட்ட, முகம் மலர்ந்தது சின்னவளுக்கு. அப்படியே ஒரு டப்பாவில் அடைத்துப் பைக்குள் திணித்துக் கொண்டாள். அவள் எது சாப்பிட்டாலும் மனோவிற்கு என மனம் தானாய்க் கேள்வியெழுப்ப, அவனுக்கென்று எடுத்துச் சென்றுவிடுவாள்.
சற்றே மெலிந்திருந்த உடல்வாகு வயதிற்கேற்ப கூடியிருக்க, மீசை அரும்பத் துவங்கியிருந்தது மனோவுக்கு. பதினாறின் துவக்கத்தில் இருந்தான். நன்றாய் விவரவம் தெரிய ஆரம்பித்திருந்தது அவனுக்கு.
சந்தனா தாயுடன் எப்போதும் போல சதாம்பிகா வீட்டிற்குச் சென்றாள். மனோ இல்லையென்பதை வெறிச்சோடி கிடந்த வீடே பறைச்சாற்ற, அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் காலை ஆறுமணிக்கே எழுந்து நண்பர்களுடன் மட்டைப் பந்து விளையாடச் சென்றுவிடுவான். எட்டு மணிக்கு மேல் சந்தனாவைக் காண வருவான். அன்று எட்டு மணியைக் கடந்தும் அவன் வரவில்லை. சந்தனாவிற்கு பொழுதே நகரவில்லை. எல்லா செடி கொடிக்கும் போதும் என்ற அளவிற்குத் தண்ணரீ ஊற்றியவள், அமர்ந்துவிட்டாள்.
மூச்சு வாங்க மிதிவண்டியை ஓட்டி வந்த மனோ அதை நிறுத்த, இவள் எழுந்து அவனருகே சென்றாள்.
“எதுக்கு மனோ ஃபாஸ்டா வர்ற? மூச்சு வாங்குது பாரு. தண்ணி குடி...” எனத் தண்ணீர் பொத்தலை அவனிடம் நீட்டினாள்.
“இல்ல குட்டி... இன்னைக்கு மேட்ச் முடிய டைமாய்டுச்சு...” என மூச்சு வாங்க பதிலளித்தான். சதா இவன் குரலில் வெளியே எட்டிப் பார்க்க, வீட்டிற்குள்ளே சென்று பத்து நிமிடத்தில் குளித்து உடைமாற்றி வந்தான்.
“மனோ... சாப்பிட வாடா!” சதா உணவை எடுத்துவைத்து அழைக்க, “பசிக்கலை மா...” என அவன் வெளியே வர, சந்தனா ஆர்வமாய்க் காத்திருந்தாள். அவளருகில் பொத்தென அமர்ந்தவன், இயல்பாய் அவளது டப்பாவை எடுத்து உண்ணத் தொடங்கினான்.
அவன் முகத்தையே பார்த்திருந்தாள் சின்னவள்.
“என்ன குட்டி?” அவன் கேட்க, “முட்டைச் சப்பாத்தி எப்படியிருக்கு மனோ? நான்தான் செஞ்சேன்...” என்றாள் ஆர்வமாய்.
“குட்டி... பொய் சொல்லாத. இது டேஸ்டா இருக்கே...” உண்டு கொண்டே அவன் கூற, அவனை முறைத்தவள், “ப்ராமிஸா நான்தான் செஞ்சேன் மனோ. நம்ப மாட்டீயா?” எனக் கேட்டாள் உதட்டைச் சுழித்து. அவளது சத்தியத்திலே அவனுக்கு அவளது கூற்றின் உண்மை புரிந்தது. இந்த சில வருடங்களில் அவள் சத்தியம் செய்தால் அது உண்மை என்றும், அதை மீற மாட்டாள் என்றும் மனோ அறிந்து வைத்திருந்தானே. அதை சில பல முறை அவனுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டான்.
“சரி... சரி. நான் நம்புறேன் குட்டி...” அவன் பேசும்போதே சதா குரல் கொடுத்தார்.
“மனோ, சாப்பிடதான் இல்ல. ஜூஸ் போட்டு வச்சிருக்கேன். அதை வந்து குடுச்சிட்டுப் போ டா...” அவர் அழைக்க, “குட்டி... ஜூஸை வாங்கிட்டு வா...” என இவன் கூறிமுடிக்கும் முன்னே அவள் எழுந்து சென்று பழச்சாற்றை வாங்கி வந்திருந்தாள்.
“சாப்பிட்டு குடி மனோ...” சந்தனா கூற, “இதுவே வயிறு ஃபுல்லாகிடுச்சு குட்டி. நீ கொஞ்சம் ஜூஸ் குடிச்சுட்டு குடு. நான் மீதியைக் குடிக்கிறேன்...” என்றான் அவன்.
“ஐயோ... இல்ல மனோ, ஜூஸ்ல ஐஸ் போட்டிருப்பாங்க. எனக்கு சளி புடிச்சிருக்கு. அம்மா திட்டுவாங்க, வேணாம் டா...” என்றாள் மறுப்பாய். மனோ எது கொடுத்தாலும் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சந்தனா தட்டிக்கொண்டே இருந்தாள். அவனிடமிருந்து எதையுமே வாங்கி உண்ணவில்லை. முதலில் சிறு பையனாக இருந்ததால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதுதான் இதை கவனித்தான்.
“குட்டி...இதுல ஐஸ் போடலை. சர்க்கரை கம்மியா போட்டிருக்கு. அதனால உனக்கு பல்லும் வலிக்காது, சளியும் புடிக்காது. குடி...” என்றான் விடாப்பிடியாக. அவள் என்ன சொல்வதெனத் தெரியாது தடுமாறிப் போய் அவனைப் பார்த்தாள்.
"நான் கொடுக்குற எதையுமே நீ சாப்பிட்றதில்லை குட்டி. ஆனால், உன்கிட்ட மட்டும் டெய்லி நான் வாங்கி சாப்பிட்றேன்...” எனக் கூறியவன் கையில் மிச்சமிருந்த உணவை அவளிடம் திணித்தான்.
“இனிமே உன்கிட்ட நான் எதையும் வாங்கி சாப்பிட மாட்டேன்...” என்றான் கோபமாய். சந்தனா என்ன செய்வது எனத் தெரியாது அவனைப் பார்த்தாள்.
“ஏன் வாங்கி சாப்பிட மாட்ற. ஆன்ட்டி எதுவும் திட்டுனாங்களா?” அவன் சரியாய்க் கேட்க, இல்லையென தலையை அசைத்தாள்.
“பொய் சொல்லாத... நான் உங்கம்மாகிட்டே கேக்குறேன்!” மனோ எழ, பதறிப்போய் அவன் கையைப் பிடித்தவள், “மனோ... அம்மாகிட்ட கேக்காத, என்னைத் திட்டுவாங்க. நானே சொல்றேன்...” எனத் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்ததைக் கூறிவிட்டாள்.
“ச்சு... இதானா குட்டி. உங்கம்மா கையைப் பிடிச்சு தடவி காத்துல ஊதிவிட்று. ப்ராமிஸ் அழிஞ்சு போய்டும்...” என்று இலகுவாகப் பதிலளித்தான்.
“போ மனோ... அதெல்லாம் தப்பு. அம்மா அப்புறம் வெளுத்துடுவாங்க...” என்றாள் பயத்துடன்.
“அதெல்லாம் அடிக்க மாட்டாங்க குட்டி. நீ இந்த ஜூஸைக் குடி. நான் ஆன்ட்டிகிட்டே சொல்றேன்...”
“போ மனோ... நான் குடிக்க மாட்டேன்!” சந்தனா உறுதியாய்க் கூற, “அப்போ நான் கூட இனிமே பேச மாட்டேன். நீ எது கொடுத்தாலும் வாங்க மாட்டேன்...” என்றவனை இவள் அதிர்ந்து பார்த்தாள்.
“மனோ... அப்படிலாம் சொல்லாத டா. நான் ஜூஸ் குடிச்சா அம்மா திட்டுவாங்க...” என்றாள் அழும் குரலில்.
“எனக்குத் தெரியாது. நீ இன்னைக்கு குடிக்கணும்!” அவன் விடாப்பிடியாக கூற, இவள் அசையவே இல்லை. கோபத்தில் அவன் எழுந்து சென்றுவிட, இவள் சோகமாய் அவனைப் பார்த்து நின்றாள்.
மாலை வேண்டுமென்றே இவள் வந்தது தெரிந்தும் அவன் வீட்டைவிட்டு வெளியே வரவே இல்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை எப்போதும் போல மட்டைப் பந்து விளையாடச் சென்றுவிட்டான். சந்தனா அவனுக்காக காத்திருக்க, மனோ விரைவாய் வரவில்லை. வெண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்தான்.
அவன் வந்ததும், “மனோ... சாரி டா. அம்மாகிட்டே ப்ராமிஸ் பண்ணி கொடுத்துட்டேன். அதை என்னால அழிக்க முடியாது. என்கிட்ட பேசு மனோ...” என கலங்கிய குரலில் உரைத்தவளை சட்டை செய்யாது அவன் வீட்டிற்குள் சென்றுவிட, இவள் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள். மறுநாளும் சந்தனா அவனிடம் பேச முயற்சிக்க, மனோ பிடி கொடுக்கவில்லை.
செவ்வாய் கிழமை மனோ பள்ளிக்குத் தயாராகி வர, சந்தனா வரவேயில்லை. பூரணியும் அன்று விடுமுறை எடுத்திருந்தார். அவளைக் காணாது மனம் தவித்தாலும், மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டான். அடுத்து வந்த மூன்று நாட்களும் அவர்கள் வராது போய்விட, இவனுக்கு அவளைக் காணாது நாளே செல்லவில்லை.
“ம்மா... குட்டி ஏன் வரலை? பூரணி ஆன்ட்டியும் வரலையேமா?” என சதாவிடம் கேட்க, “அவ இனிமே வரமாட்டா மனோ...” என்றார் அவர்.
அவர் பதிலில் அதிர்ந்தவன், “ஏன் மா... ஏன் வர மாட்டா?” எனத் தவிப்புடன் கேட்டான்.
“அதெல்லாம் உனக்கு எதுக்கு டா... ஸ்கூலுக்கு டைமாச்சு. போய் கிளம்பு...” என அவர் நகர்ந்திருக்க, இவனுக்கு எதுவுமே புரியவில்லை. சந்தனா படிக்கும் பள்ளிக்குத்தான் நேரே மிதிவண்டியை செலுத்தினான்.
தொடரும்...
Latest Post: நெஞ்சம் 18 Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page