About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 1 💖
நவம்பர் மாதத்தின் முதல் வாரம். மெலிதான குளிரும் கொஞ்சமே கொஞ்சம் வெயிலும்
எட்டிப் பார்த்து வார நாட்களை வரவேற்றுக் கொண்டிருந்தன. மழை காலத்திற்கே உரிய மந்தமும் மங்கலுமாய் காட்சியளித்தது பெங்களூரின் பிரதான சாலை. நேற்று பெய்த மழையின் எச்சங்களாய் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று வருவோர் போவோரை முகத்தை சுளிக்க செய்து கொண்டிருந்தது.
சாலையோரம் நடப்பவர்கள் மகிழுந்தில் செல்பவர்களை மனதில் அர்ச்சித்தவாறு சென்று கொண்டிருந்தனர். “கார்ல தானே போறாங்க. ப்ளைட்ல போறதா நினைப்பு. கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துப் போறதில்லை. தண்ணீயை நம்ப மேல தெறிக்க வைக்கிறது!” என்ற முணுமுணுப்போடு அந்த வயதான பெண்மணி சாலையைக் கடந்தார்.
இவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தவாறே அமைதியாய் ஜன்னலில் தலை சாய்த்திருந்தாள் சந்தனா. அவளது கையைப் பிடித்து விரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன்.
“ம்மா... அது என்ன, ம்மா இது என்ன!” என வளவளத்தவனின் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதிலளித்த வண்ணமிருந்தாள் அவள்.
இந்திரா நகரின் வலதுபுறமிருந்த சாலையையொட்டி அவர்கள் பயணித்த அவுரி நிற மகிழுந்து தன் வேகத்தை மெதுவாய்க் குறைத்துக்கொண்டு வந்து நின்றது.
“ம்மா... பாய், பாய்!” என தன் அம்மாவின் கையைப் பிடித்துச் செல்லம் கொஞ்சி முத்தமிட்ட சிறுவனைக் கண்டவளின் முகம் கனிந்து போயிருந்தது.
அவனது கன்னத்தை தடவியவள், “சேட்டை பண்ணாம சமத்தா இருக்கணும் மனோ!” என அன்பும் கட்டளையுமாய் அவனிடம் உரைத்தவாறே மகிழுந்தைவிட்டு இறங்கிய பெண்ணின் வதனம் முப்பதை தொடவில்லை என பறைசாற்றிக் கூறினாலும், அவள் அதைத் தொட்டு சில வருடங்கள் கடந்திருந்தன.
சாலையைக் கடந்து சி.எஸ்.ஐ கிறிஸ்டின் மருத்துவமனை மற்றும் கல்லூரி எனப் பெரிதாய் முகப்பிலிருந்த பலகையைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள் சந்தனா.
பருத்திப் புடவையொன்று அவளது மெலிதான உடலைப் பாந்தமாய்த் தழுவியிருக்க, விழிகளை மூக்கு கண்ணாடி மறைந்திருந்தது. பெயருக்கு ஏற்றாற் போல சந்தமான முகம் முழுவதிலும் மெல்லிய புன்னகை விரவியிருக்க, “குட்மார்னிங் டாக்டர்!” என்ற செவிலியரின் வணக்கத்தை ஏற்றவளின் உதடுளும், “குட்மார்னிங் சிஸ்டர்!” என்ற வார்த்தையை உதிர்த்தன.
இரண்டாம் தளத்தை அடைந்து தனதறைக்குள் அவள் நுழைய, அவளுக்குப் பின்னே செவிலியரும் நுழைந்தார். சந்தனா எம்பிபிஎஸ், எம்.டி மனநல மருத்துவர் என்ற பலகையைக் கடந்து பின்னிருந்த நாற்கலியை சற்றே நகர்த்தி வசதியாய் அமர்ந்தாள்.
“டாக்டர், தேவா அவங்க பேரண்ட்ஸோட வந்திருக்காங்க. வர சொல்லவா?” எனக் கேட்ட செவிலிப்பெண்ணிற்கு தலையை அசைத்தவளின் விழிகள் வாயிலை நோக்க, முகம் முழுவதும் புன்னகையுடன் ஒரு பெண் நுழைய, அவளையடுத்து பெற்றவர்களும் உள்ளே நுழைந்தனர்.
“வாங்க தேவா... உட்காருங்க, எப்படி இருக்கீங்க?” என சந்தனா சின்ன சிரிப்புடன் வினவினாள்.
“ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் டாக்டர். நல்லா சாப்ட்றேன், நல்லா தூங்கி எழுறேன். லாஸ்ட் வீக் அம்மா, அப்பாவோட லக்கி பாஸ்கர் மூவி பார்த்தோம். அப்புறம் நைட் டின்னர் வெளிய முடிச்சிட்டுத்தான் வீட்டுக்கே போனோம். என்னோட கசின் மேரேஜ் நெக்ஸ்ட் வீக் இருக்கு. இன்னும் டூ டேய்ஸ்ல மதுரை போறோம். ரொம்ப நாள் கழிச்சு எல்லாரையும் மீட் பண்ண போறதை நினைச்சு ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன்!” என மடை திறந்த வெள்ளம் போல பேசிய பெண்ணைக் காண்கையில் சந்தனாவுக்கு மனம் நிறைந்து போனது. தலையை மட்டும் அசைத்து முன்னிருந்த பெண்ணிற்குத் தனது செவியை ஈன்றாள்.
“இப்போலாம் யாரோட நினைப்பும் வர்றதில்லை டாக்டர். என் அப்பா அம்மாவுக்குப் பொண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சீக்கிரமே என் மனசு முழுசா மாறுனதும் அவங்க அமைச்சுக் கொடுக்குற வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துப்பேன்!” என மகள் பேசப் பேச அருகிலிருந்த பெற்றவருக்கு அழுகை வரப் பார்த்தது. சந்தனாவை நோக்கி அவர் கையெடுத்துக் கும்பிடவும், “ஐயோ சார்!” என இவள் சங்கடப்பட்டாள்.
அந்தப் பெண்ணின் தாய், தந்தையைப் போல கண்ணீரைக் கட்டுப்படுத்தவில்லை. பொலபொலவென உவர் நீர் அவரது முகத்தை நனைக்க, மகள் கையை அழுத்திப் பிடித்தார்.
“சார், உங்கப் பொண்ணு ரொம்ப நல்லா இருக்கா. இனிமேலும் நல்லா இருப்பா, நீங்க அழாதீங்க. அவளுக்காக ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்குறது உங்களோட பொறுப்பு!” என சந்தனா கூறவும், “நிச்சயமா டாக்டர், என் பொண்ணை இனிமே அழவிட மாட்டோம்!” என அந்த மனிதர் மனமுவந்து கூறினார்.
“டாக்டர், ஐ ஹேவ் அ சம்திங் ஃபார் யூ” துள்ளலான குரலுடன் தன் முன்னே நீண்ட விரல்களையும் அதிலிருந்தப் பரிசையும் வாங்கத் தயங்கினாள் இவள்.
“ப்ளீஸ் டாக்டர், ப்ளீஸ் டோன்ட் சே நோ. இது உங்களுக்காக நானே செஞ்சேன்!” என இறைஞ்சும் விழிகளுக்கு மனம் முந்தி சம்மதம் தெரிவித்துவிட, பரிசோடு உபரியாக வந்த இன்னட்டுகளையும் இவளது விரல்கள் இறுகப்பற்றின.
“டாக்டர், நான் உங்களை ஒரு டைம் ஹக் பண்ணிக்கலாமா?” என தேவா கேட்டதும் இவள் எழுந்து நிற்கவும் ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள் அந்தப் பெண்.
“ஃபர்ஸ்ட் லைஃப் என் அம்மா, அப்பா கொடுத்தது. இந்த லைஃப் நீங்க கொடுத்திருக்கீங்க. நான் வாழ்க்கைல எவ்வளோ முட்டாளா இருந்திருக்கேன்னு நினைக்கும்போது சிரிப்பு வருது டாக்டர். தேங்க்ஸ் டூ யூ, என் அப்பா, அம்மா முகத்துல இருக்க சிரிப்பு நீங்க கொடுத்தது. அதை என்னைக்கும் நான் வாடாம பார்த்துப்பேன். வாழ்க்கைல எது வந்தாலும் அதை ஃபேஸ் பண்ற தைரியம் என்கிட்ட இப்போ இருக்கு” எனக் கூறியபடி அவளை இறுக்கியணைத்தக் கரத்தின் தன்னம்பிக்கையிலும் வார்த்தையின் வலிமையிலும் இவளுக்கு அப்படியொரு ஆசுவாசம் கிடைத்தது.
இன்னும் சில பல நிமிடங்கள் பேசி நன்றி நவிழ்ந்துவிட்டு அவர்கள் சென்றும் கூட சந்தனா முகத்திலிருந்த புன்னகை வாடவே இல்லை. முதல்முறையாக இந்தப் பெண் தேவா மருத்துவமனை வரும்போது அழுது முகம் சோர்ந்து தற்கொலை முயற்சிக்கு சாட்சியாகக் கையில் கட்டோடுதான் வந்திருந்தாள்.
இன்றைய தலைமுறைக்கு பிரதிநிதியாக விளங்கும் ஐடி கலாசரத்தில் இவளுமொரு அங்கமே. கொஞ்சம் நிறத்தில் குறைவும் சற்றே கூடுதல் உடல் எடையும் இவளது தன்னம்பிக்கையை தளரச் செய்யும் காரணிகள். இருந்தும் அதையெல்லாம் புறந்தள்ளி சந்தோஷமாய் வளம் வந்தவளை காதல் நோய் அரித்ததுத் தொலைத்தது. முதலில் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க, இடையில் அந்த வாலிபவன் இவளது நிறத்தையும் உடலையும் காரணம் காண்பித்து மறுத்துவிட்டு வீட்டில் பார்த்திருக்கும் பெண்ணை மணம் முடித்துவிட்டான்.
அதை இந்தப் பெண்ணின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கனவே இருந்த தாழ்வு மனப்பான்மை இன்னுமே அவளை அதலப் பாதாளத்திற்கு இட்டுச் சென்றுவிட, உண்ணாது உறங்காது நாட்களை கடத்தி கடைசியில் அது தற்கொலைக்கு வித்திட்டிருந்தது. அவள் மருத்துவமனைக்கு வரும்போதிருந்த மனநிலையை மாற்றி தன்னம்பிக்கையை விதைத்திருந்தாள் சந்தனா.
இப்போது இந்த தேவாவின் முகத்திலிந்த தெளிவும் தன்னம்பிக்கையும் அவள் கடந்து வந்த பாதையின் எச்சங்கள்தான். தன்னுடைய வார்த்தையின் பலனாய் இன்று இந்தப் பெண்ணைக் காண்கையில் ஆயிரத்தொராவது முறையாக இந்த மருத்துவத்துறையைத் தான் தேதெடுத்ததற்கு மனதிலே நன்றி நவிழ்ந்திருந்தாள்.
சந்தனா மனநல மருத்துவராகப் பணிபுரிய தொடங்கிய இத்தனை வருடங்களில் அவள் கடந்து வந்த பெண்கள் ஏராளம். ஆண்களை விட பெண்களே உணர்வுகளுக்கு அடிமையானவர்கள் என்பதை அவள் உளப்பூர்வமாக உணர்ந்திருந்தாள். கணவன் வன்கொடுமை, பிறந்த வீட்டில் பிரச்சனை, காதல் தோல்வி, புறத்தோற்றத்தால் தாழ்வுமனப்பான்மை கொண்டு ஒடுங்கியவர்கள், வாழ்க்கையில் தோற்றுப் போய் நிற்கதியற்று நின்றவர்கள் என எத்தனையோ மனிதர்களை சந்தித்து அவர்களை நல்வழிப்படுத்தி வாழ்க்கையை மீட்டெடுத்திருக்கிறாள். அதிலிருக்கும் அலாதி திருப்தியின் தேடலுக்கு இன்று ஒவ்வொருவரும் உணவிடுகின்றனர்.
“டாக்டர், இன்பேஷண்ட் வார்ட்ல இருந்து ஒருத்தவங்க வெய்ட் பண்றாங்க. வர சொல்லவா?” செவிலியர் வினவ, “வர சொல்லுங்க மேரி!” என்ற சந்தனா தன் மேஜை மீதிருந்த கோப்பில் விழிகளை ஓட்டினாள்.
“மே ஐ கம்மின் டாக்டர்?” என்றவரை நிமிர்ந்து பார்த்தவள், “யெஸ் கம்மின்...” என்றாள்.
மத்திய நடுத்தர வயது தம்பதியர் வந்து அமர்ந்தனர். ஒரு நொடி அந்த ஆணைப் பார்த்துவிட்டு அப்பெண்ணின் முகத்தை சில நொடிகள் ஆழ்ந்து கவனித்தவள், “சொல்லுங்க செல்வி, உங்களுக்கு ஏதாவது பேசணுமா?” என வினவினாள்.
“அவகிட்டே என்ன மேடம் பேச்சு. என்கிட்ட கேளுங்க, வர வர ஒரு வேலையும் ஒழுங்கா பார்க்க மாட்றா. கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதில்லை. புள்ளைங்களை பார்க்குறதில்லை. சமைச்சா உப்பு போட மாட்றா. மோட்டரை போட்டா ஆஃப் பண்றது இல்ல. பக்கத்து வீட்டுல தண்ணிப் போய்டுச்சுன்னு அவங்க சண்டைக்கு வர்றாங்க, தண்டத்துக்கு இருக்கா. வீட்ல இருக்க வேலையைக் கூடப் பார்க்குறது இல்ல. எது சொன்னாலும் மூஞ்சிய மூஞ்சியைப் பார்க்குறா. பைத்தியம் புடிச்சுப் போச்சுன்னு உங்கக்கிட்டே கூட்டீட்டு வந்தேன்!” என்றவர் வார்த்தைகளில் ஆதங்கம் அப்பிக் கிடந்தது. மனைவி மீதுதான் முழுத் தவறு என்று மனம் அத்தனையாய் நம்ப, முகத்தில் அதைக் காண்பித்தவாறு அமர்ந்திருந்தார் அந்த மனிதர்.
அவர் பேசப் பேச அருகிலிருந்த மனைவியின் விழிகள் கலங்க, விரக்திப் புன்னகையொன்று அவரது இதழ்களில் தவழ்ந்தது.
அதைப் பார்த்த சந்தனா பொறுமையாய் அவர் பக்கம் திரும்பினாள்.
“உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது சார்?” இவள் வினவ, அசூசையாய்ப் பார்த்தவர், “அதெதுக்கு டாக்டர் இப்போ? அவகிட்ட பேசி முதல்ல பைத்தியத்தை தெளிய வைங்க!” என்றார் காரமாய்.
“கண்டிப்பா சார், அதுக்கு முன்ன நான் கேட்குற டீடெயில்ஸ்க்கு மட்டும் பதில் சொல்லுங்க!” பொறுமையாய் கூறினாள்.
“பதினைஞ்சு வருஷமாச்சு!” என விட்டேற்றியாகப் பதிலளித்தார் அந்த மனிதர்.
“ஓ… லவ் மேரேஜா?”
“இவளை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிட்டாலும். எல்லாம் என்னைப் பெத்தவங்க பண்ண வேலை!” காட்டமாய்க் கூறினார்.
“நீங்க என்ன வேலை பார்க்குறீங்க? உங்க வொய்ஃப் படிச்சிருக்காங்களா? வேலைக்குப் போறாங்களா?”
“நான் ஐடி மேடம். இவ ஏதோ பேருக்கு படிச்சிருக்கா. வீட்ல இருக்க வேலையையே பார்த்துக் கிழிச்சிட்டா. வெளிய வேலைக்கு அனுப்ப?”
“ஓ… அப்போ வீட்ல அவங்க பார்க்குறது எல்லாம் வேலைன்ற வார்த்தைக்கு கீழதான் வருதோ சார்?” இவள் பேச்சில் அவரது முகம் மாறியது.
“ஆமா… பெரிய வேலை, வீட்ல பொண்டாட்டி வேலை பார்க்குறது ஒன்னும் அதிசயம் இல்லையே!”
“ஹம்ம்… ரொம்ப சரியா சொன்னீங்க சார். காலைல எழுந்து காஃபி போட்டு, சமைச்சு முடிச்சு, புள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி, உங்களை ஆஃபிஸ்க்கு அனுப்பிட்டு, வீட்டைக் க்ளீன் பண்ணி ட்ரெஸ் வாஷ் பண்ணணும். ஈவ்னிங் நீங்க வந்ததும் சுடசுட காபி ஸ்நாக்ஸ் கொடுக்கணும். நைட்டு நீங்க சாப்ட சாப்பாடு செஞ்சு கொடுத்து, படுக்குற பெட் வரைக்கும் சரி பண்ணிக் கொடுக்கணும். ஒருநாள் இல்ல, வாரத்துல ஏழு நாள், மூனு வேளை விதவிதமா சமைக்கணும். மாசத்துல முப்பது நாள், வருஷத்துல முந்நூத்து அறுபத்தஞ்சு நாளும் செய்யணும். இதெல்லாம் என்ன பெரிய வேலை ஏன் சார், நீங்க கஷ்டப்பட்டு வாரத்துல ஐஞ்சு நாள் வேலை செய்றீங்க. அதுவும் லேப்டாப் முன்ன உட்கார்ந்து. அதனால உங்களுக்கு வீட்டு வேலை எல்லாம் பெரிய டாஸ்க்கா இருக்காதில்லை!” என அவள் பேசி முடிக்கவும் சில நொடிகள் அந்த மனிதரிடம் அமைதி.
“என்ன டாக்டர் நீங்க, என்னமோ என் மேல தான் தப்பு இருக்க மாதிரி பேசுறீங்க. நீங்க ட்ரீட்மெண்ட் பார்க்க வேண்டியது எனக்கில்லை. என் பொண்டாட்டிக்கு. அவளுக்குப் பார்க்க முடியுமா? முடியாதா?” என எகிறினார். அவரை அமைதியாகப் பார்த்தவள், அந்தப் பெண்ணின் புறம் திரும்பினாள்.
“என்ன படிச்சிருக்கீங்க? மேரேஜ்க்கு முன்னாடி வொர்க் பண்ணீங்களா? இப்போ ஏன் ஹவுஸ் வொய்ஃபா இருக்கீங்க?” என சந்தனா கேட்டதும் அவரிடம் சில நொடிகள் அமைதி.
“எம்.பி.ஏ படிச்சிருக்கேன் டாக்டர், ஹெச்.ஆர்-ஆ வொர்க் பண்ணேன். மேரேஜ்க்குப் பிறகு ஹஸ்பண்ட், குழந்தைகளைப் பார்த்துக்கணும்னு வீட்ல இருக்கேன்!”
“சோ, உங்க ஹஸ்பண்ட்காக தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போறீங்க? ரைட்?” என இவள் கேட்டதும், அந்தப். பெண்ணின் தலை ஆமாம் என்பது போல அசைந்தது.
“உங்க ஹஸ்பண்ட் அண்ட் குழந்தைகளை ரொம்ப பிடிக்குமோ?” இவள் கேட்டதும்,
“என் உலகமே அவங்க தான் டாக்டர்!” என்று விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தார்.
அந்த மனிதர் புறம் திரும்பிய சந்தனா, “பார்த்தீங்களா சார், அவங்க பேசுனதைக் கேட்டீங்களா? இங்க வந்ததுல இருந்து உங்களோட வொய்ஃபை குறை மட்டுமே சொல்லிட்டு இருந்தீங்க நீங்க. ஆனால், அவங்க ஒரு வார்த்தை உங்களைப் பத்தி பேசலை. நல்ல படிச்சு ஒரு நல்ல வேலைல இருந்தவங்க. இப்போ வீட்ல இருக்க காரணம், வெளிய போகத் தெரியாம இல்ல. உங்களையும் குழந்தைகளையும் எந்தவித குறையும் இல்லாம பார்த்துக்கணும்னுதான். எத்தனையோ பெண்கள் வேலைக்குப் போய்ட்டு வீட்டையும் கவனிச்சாலும், இன்னும் நம்ப குடும்பத்துக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணணுமோ, கேர் பண்ணணுமோன்னு குற்ற உணர்வுல இருக்காங்க. அப்படியெதும் ஆகிடக் கூடாதுன்னு உங்க மனைவி யோசிச்சு இருக்காங்க.
உங்களுக்காகன்னு பார்க்குற அவங்களுக்கு நீங்க என்ன செஞ்சீங்க? தண்டச் சோறுன்னு பட்டம் வேற. எங்க ஒரு ரெண்டு நாள் அவங்க செய்ற. வேலையை நீங்க செஞ்சுப் பாருங்க பார்க்கலாம். நிச்சயமா முடியாது. என்னைக்காவது ஒருநாள் நம்ப பொண்டாட்டி வருஷம் முழுசும் வேலை செய்றாளே, நமக்கு வாரத்துல ரெண்டு நாள் லீவு இருக்கு. அவளுக்கு ரெஸ்ட் குடுப்போம்னு உங்களுக்குத் தோணியிருக்கா? ஒரே ஒருநாள் அன்பா, அனுசரணையா ஒரு கப் காஃபி போட்டுக் கொடுத்து இருக்கீங்களா? ச்சு, அதெல்லாம் விடுங்க. அட்லீஸ்ட் அவங்களைத் திட்டாம இருந்து இருக்கீங்களா? உங்களோட பேச்சுதான் அவங்களை இப்படி டிப்ரஷன்குள்ள கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. பிரச்சனை அவங்களுக்கு இல்ல, உங்ககிட்டே தான் இருக்கு. நீங்கதான் மாறணும்!” என சந்தனா கூறி முடித்ததும்,
“வந்ததுல இருந்து நானும் பார்க்குறேன்... உங்க இஷ்டத்துக்கே பேசீட்டு இருக்கீங்க. இதுல எனக்குத்தான் பிரச்சனையாம்? இதெல்லாம் ஹாஸ்பிடல்னு உங்களை நம்பி வந்தேனில்ல, என்னை சொல்லணும்!” என சந்தனா கூறிய உண்மை தன்னை சுட்டாலும், அதை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர், பட்டென இருக்கையில் இருந்து எழுந்தார்.
திரும்பி மனைவியை முறைத்தவர், “எல்லாம் இவளை சொல்லணும். இவ சரியா இருந்தா, யாரும் என்னை எதுக்கு கேள்வி கேட்கப் போறாங்க!” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவர், “வந்து தொலைடி...” என விறுவிறுவென அறையைவிட்டு வெளியேறினார்.
அந்தப் பெண் சந்தனாவை வேதனையுடன் பார்த்துவிட்டு இருக்கையிலிருந்து எழ, “இது என்னோட விஸ்டிங் கார்ட். என் பெர்சனல் நம்பர் இருக்கு. ஃப்ரீயா இருக்கும்போது என்னைக் காண்டாக்ட் பண்ணுங்க...” என அவர் கையில் ஒரு அட்டையைத் திணித்தாள்.
“தேங்க் யூ டாக்டர்!” என அவர் அகலவும், சந்தனா பெரிய மூச்சொன்றை இழுத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள். இது போல எத்தனையோ நபர்களை கடந்திருந்தாலும், மனம் கொஞ்சம் பாரமாய் இருந்தது. அரைமணி நேரம் கூட அவருடன் தன்னால் பொறுமையாகப் பேச முடியவில்லை. ஆனால், இந்தப் பெண்மணி எப்படி இத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என அவருக்காக மனதில் இரக்கம் சுரந்தது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கூட அவளால் எளிதில் மீட்டெட்டுக்க முடிந்தது. இந்த சமூகத்தின் ஆணாதிக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களை அத்தனை எளிதில் குணப்படுத்த முடியவில்லை.
***
கோயம்புத்தூர் நகரின் கிராமப்புறம் அது. கொஞ்சமே கொஞ்சம் நகரத்தின் வளர்ச்சியை வரவேற்றுக் கொண்டிருந்தது அந்தப் பகுதி. அதில் பத்துக்கு பதிமூன்று என்ற அளவிலிருந்த சிறிய ஓட்டு வீட்டில் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருந்தாள் சிறுமி ஒருத்தி.
“குட்டி, இந்தப் பக்கம் வந்து விளையாடு. வீட்டை கூட்ட விடு!” என்ற அதட்டலுடன் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார் அன்னப்பூரணி.
“பூரணி, சீக்கிரம் வா. உன்னைக் கூட்டீட்டுப் போய் வேலைக்கு சேர்த்து விட்டுட்டு நான் என் பொழப்பைப் பார்க்கணும்!” பக்கத்து வீட்டு மரிக்கொழுந்து சேலையை உதறிவிட்டு இடுப்பில் சொருகியவாறே சத்தமிடவும், விரைவாய் சுத்தம் செய்து முடித்த பூரணி, “இதோ வந்துட்டேன் கா!” என வீட்டைப் பூட்டிவிட்டு மகளின் கையைப் பிடித்தார்.
“புள்ளையை எதுக்கு அவ்வளோ தூரம் கூட்டீட்டு வர. இங்கேயே விட்டுட்டு வர்றதுதானே?” என்ற கேள்வியுடன் அவர் இரண்டெட்டு வைக்க, “இல்லக்கா... ஊருக்குப் புதுசு. எங்கேயும் தொலைஞ்சுப் போய்ட்டா என்ன பண்றது. என் கூடவே வரட்டும்!” உதடுகள் பதிலை உதிர்க்க, அந்த மூத்தப் பெண்ணின் நடைக்கு ஈடுகட்டும் வகையில் மகளின் கையை இழுத்துக் கொண்டு நடந்தார் பூரணி.
“ம்மா... கை வலிக்குது. விடும்மா!” என அவரது கையை உதறிவிட்டு சின்னவள் முன்னே ஓடவும், “குட்டி பார்த்து...” என தாய் அதட்டினார். இருபது நிமிட நடை பயணத்தில் அந்தப் பெரிய வீட்டை அவர்கள் அடைந்தனர். வீட்டின் முன்னே இருந்த காயம்பூ நிற மகிழுந்தை கடந்து அந்த விசாலமான வரண்டாவினுள்ளே நுழைந்தனர்.
“ம்மா... சதாம்மா!” மூத்தவர் குரல் கொடுக்கவும், “இதோ வரேன் மரிக்கொழுந்து!” என்றவாறு வந்து நின்ற பெண்மணியின் வலது கை கழுத்தோடு சேர்த்து கட்டிடப்பட்டிருந்தது. முகத்தில் வலியின் சாயல் தென்பட்டது. விபத்திலிருந்து மீண்டவர் என அவரது தோற்றமே எடுத்துரைத்தது.
“நல்லா இருக்கீங்களா சதாம்மா? தம்பி எப்படி இருக்காரு?” மரிக்கொழுந்து வினவ, சதாம்பிகா பதிலளித்தார்.
“இருக்கோம் மரிக்கொழுந்து. அவனை நினைச்சுத்தான் கவலையா இருக்கு!” என அவரிடம் பெருமூச்சு எழுந்தது.
“விடுங்கம்மா... ஏதோ நம்ப கெட்ட காலம். இப்படியெல்லாம் நடந்து போச்சு...” என வருந்தியவர், “இது பூரணி... எங்க ஊர்காரப் புள்ளை. புருஷனைப் பறிகொடுத்துட்டு, எங்கப் போறதுன்னு தெரியாம இங்க வந்துருக்கா. வேலை வேணும்னு கேட்டாள். நீங்க வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னது ஞாபகம் வர, இவளைக் கூட்டீட்டு வந்தேன்!” என பூரணியை அறிமுகம் செய்தார்.
சதாம்பிகா பூரணியை விழிகளால் அளந்தார். பருத்திப் புடவை ஒன்றை அணிந்திருந்தவர், கழுத்து வெறுமையாக இருந்தது. கொண்டையிட்டிருந்தார். வெயிலில் நடந்து வந்ததால் முகம் வியர்வையில் குளித்திருந்தது.
இவர் பார்வையை உணர்ந்து, “வணக்கம்மா...” என்றார் பூரணி.
அதை தலையசைத்து ஏற்றுக்கொண்ட சதாம்பிகா, “நம்பிக்கையான ஆள் தானே மரிக்கொழுந்து?” என வினவ, “அதெல்லாம் பூரணி தங்கம்மா. நல்ல புள்ளை, வாழ்க்கை சரியில்லாம போச்சு. அதனாலதான் வேலைக்கு வர்றா. கை சுத்தம் இவளுக்கு!” என மரிக்கொழுந்தின் வார்த்தைகள் உண்மையில் பூரணி மீதான அக்கறையில் தோய்ந்திருந்தது.
“சரி, அப்போ வேலைக்கு வரட்டும்!” சதா உரைத்ததும், “சரிங்க மா, நீங்க மத்ததைப் பேசிக்கோங்க. எனக்கு வேலைக்கு நேரமாச்சு. நான் போவணும்!” என மரிக்கொழுந்து விடை பெற்றார்.
“காலைல ஏழு மணிக்குள்ள வந்துடணும். வாசல் தெளிச்சு கோலம் போடணும். டீ, காஃபி போடணும், காலைக்கு சமைக்கணும். துணியை மிஷின்ல போட்டு காயப்போடணும். மதியத்துக்கும் சமைக்கணும்!” என்னென்ன வேலைகள் எனப் பட்டியலிட்டவர், மாத சம்பளத்தையும் உரைத்தார்.
“இதெல்லாம் உங்களுக்கு சரின்னா, இன்னைக்கே வேலைக்கு சேர்ந்துக்கோங்க!” என அவர் கூறியதும், “எனக்கு எல்லாம் சரிங்கம்மா, வேலைக்கு சேர்ந்துக்குறேன்...” எனப் பூரணி பதிலியம்பினார்.
அங்கே விளையாடிக் கொண்டிருங்கும் சிறுமியைப் பார்த்தவர், “இந்தப் பொண்ணு?” எனக் கேள்வியாய் நிறுத்தினார்.
“எம் பொண்ணுதான் மா. பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டுட்டேன். திங்கள் கிழமைல இருந்து போய்டுவா மா!” என கேட்காததற்கும் பதிலளித்தார்.
“சரி, சரி. சின்ன பிள்ளை, எதையும் உடைச்சிடுவா. அதனால பத்திரமா பார்த்துக்கோங்க!” என அவர் கூற, “இல்ல மா, உள்ள கூட்டீட்டு வரலை. அவ இங்கனயே என் கண் பார்வையில விளையாடட்டும்!” என்றுவிட்டார்.
“அப்போ சரி... வந்து வேலையைப் பாருங்க. மேல ரூம்ல என் பையன் இருக்கான். அந்த ரூம் மட்டும் நீங்க சுத்தம் பண்ண வேணாம். நான் பார்த்துக்குறேன்...” என்றவர் நீண்ட நேரம் நின்று பேசியதில் முதுகு வலித்ததற்கு அறிகுறியாக முகத்தைச் சுளித்தார்.
அவர் வீட்டுக்குள்ளே நடக்க, “குட்டி, அம்மா போய் வேலையைப் பார்க்குறேன். நீ இங்கேயே விளையாடணும். எங்கேயும் போகக் கூடாது!” என மகளிடம் அறிவுறுத்தினார்.
“போம்மா... நானும் உன்கூட உள்ள வர்றேன்” சின்னவள் சிணுங்கினாள்.
“உள்ள வரக்கூடாது டா தங்கம். நீ சமத்தா விளையாடீட்டு இருந்தா, அம்மா போகும்போது உனக்கு மிட்டாய் வாங்கித் தரேன்...” என மகளிடம் பேரம்பேசினார்.
“நிஜமா வாங்கித் தருவீயா மா?” எனக் கேட்டாள் சின்னவள்.
“அம்மா பொய் சொல்ல மாட்டேன் குட்டி!” என மகளை கண்ணுக்கு முன்னே விளையாட பணித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் பூரணி.
அருகே கொட்டி வைத்திருக்கும் மணலருகே சென்ற சின்னவள்,
அதில் சரிந்து விளையாடத் துவக்கினாள். பின்னர் மணல்வீடு ஒன்றைக் கட்டி, அதற்கருகே குட்டியின் வீடு என தமிழில் எழுதினாள். அம்மாவிடம் காண்பிக்க வேண்டும் என்றொரு ஆர்வம் அவளுக்கு. மெதுவாய் வீட்டை எட்டிப் பார்க்க, பூரணி சமையலறையில் இருந்தார்.
இவள் சில நொடிகள் யோசித்துவிட்டு உள்ளே அடியெடுத்து வைக்க, மாடியில் ஏதோ சப்தம் கேட்டது. யாரோ கத்துவது போலிருக்க, தயங்கியபடியே மேலே பார்த்தாள். மீண்டும் அந்தக் கத்தல் தொடர்ந்தது. தாயைத் திரும்பி பார்க்க, அவர் வேலையில் மும்முரமாக இருந்தபடியால், அந்தச் சப்தம் அவரது செவியை எட்டவில்லை.
ஏதோ கீழே விழுந்து உடையும் சப்தம் கேட்க, தனது பிஞ்சுக் கால்களைக் கொண்டு வேகவேகமாக படியேறி அந்த அறை வாயிலில் நின்றாள். மூச்சு வாங்கியது, வெளியே தாழிட்டிருந்த அறையை மெதுவாய்க் கையை வைத்துத் தள்ள, திறந்து கொண்டது.
அந்த அறையே அலங்கோலமாக கிடக்க, இவள் பார்வை அங்கே கீழே அமர்ந்திருந்தவனிடம் சென்றது. அவளது வயதைவிட ஒன்றிரண்டு வயது மூத்தவன் போலிருந்தான். கால்களில் கட்டுப் போட்டிருக்க, அதை அசைக்க முடியாது அமர்ந்திருந்தவனின் நெற்றியிலும் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. தூரத்திலிருந்த பொம்மை ஒன்றை அவன் எடுக்க முயற்சித்து முடியாது போனதால் கத்தியிருக்கிறான் என இவளால் உணர முடிந்தது.
“பொம்மை வேணுமா? நான் எடுத்து தரவா?” எனக் கேட்டவளுக்கு அவனைப் பார்த்து பாவமாய் இருந்தது.
விறுவிறுவென சென்று அந்தப் பொம்மையில் அவள் கையை வைக்க, “ஏய்... தட்ஸ் மை டாய்!” என கையில் கிடந்ததை அவள் மீது தூக்கியெறிந்திருந்தான் பெரியவன்.
“ஆ... அம்மா!” என்ற அலறலோடு கீழே விழுந்த சந்தனாவின் வலதுபுற நெற்றியில் லேசாய் ரத்தம் கசியத் துவங்க, இவள் அழுகை பெரிதானது.
தொடரும்...
கருத்துக்களைப் பகிர 👇,
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page