உயிர் – 2
“ஹாய் டார்லிங்...” என இப்படித் திடிரெனத் தன முன் வந்து அபய் நிற்பான் எனக் கொஞ்சமும் எதிர் பார்த்திராதவள், உச்சபட்ச அதிர்வோடு திரும்பி தன் அருகில் இருந்த ரோஹித்தை பார்க்க...
அவனும் அதிர்வும் குழப்பமுமாக அபய்யை தான் புரியாத பார்வை பார்த்தப்படி நின்று கொண்டு இருந்தான். என்ன செய்வது எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் விழித்தவள், ‘என்ன நடந்தாலும் அபய்யை யார் என்றே தெரியாது எனச் சமாளித்து விட வேண்டும்... ரோஹித்திற்கு மட்டும் என் கடந்த கால வாழ்க்கை தெரிந்தது அவ்வளவு தான், நான் செத்தேன்...’ என்ற ரீதியில் யோசித்தவள்,
‘அவன் அப்படி அழைத்து குழந்தையை என்று சொல்லி சமாளித்துவிடலாமா...?’ எனச் சட்டெனத் தோன்றிய எண்ணத்தோடு, திரும்பி அபய்யை பார்க்க... அந்த விடாகண்டனோ மிருவிற்கு அந்த வாய்ப்பை கூட அளிக்காமல் அவளையே இமைக்காமல் பார்த்தப்படி நின்று கொண்டு இருந்தான்.
அதில் இருந்த ஒரு வாய்ப்பும் தவறிப் போனதில் ‘வடை போச்சே’ என்பது போல மிரு முழிக்க, அதற்குள் அபய் “ஹொவ் ஆர் யூ மினி டார்லிங்...” என வேறு கேட்டு இருந்தான்.
அபய்யின் வாய் மொழியில் விளிக்கப்படும் இந்த மினி டார்லிங் என்ற வார்த்தைகளுக்காக ஒரு காலத்தில் காத்திருந்ததும், அப்படி அவன் விளிக்கும் போது வண்ணத்துப் பூச்சியைப் போல் அவன் முன் சென்று நிற்பதும் மனதில் நிழலாட, அதற்கு நேர்மாறான இன்றைய நிலையின் நிதர்சனம் புரிய, மிரு பதில் அளிப்பதற்குள்
ரோஹித், “மினி... சாரி இவங்க மினி இல்லை மிர்னா...” என நீ யாரையோ நினைத்துக் கொண்டு தவறாகப் பேசறீங்க என்று அபய்யிடம் விளக்கம் அளிக்க முயன்றான்.
‘அட விளக்கெண்ணெய்... ஆளு தான் மீசை தாடியெல்லாம் இல்லாம சும்மா நெய் குழந்தை மாதிரி இருக்கான்னு பார்த்தா... ஆளும் பச்சை புள்ளையா இருக்கியேடா...!!’ என மனதிற்குள் ரோஹித்தை கழுவி ஊற்றியவன் பதில் அளிப்பதற்குள், ரோஹித் எடுத்துக் கொடுத்த பாயிண்ட்டை பிடித்துக் கொண்ட மிரு,
“எஸ்... நீங்க வேற யாரையோ நினைத்து என்கிட்டே பேசறீங்கன்னு நினைக்கறேன் மிஸ்டர்...” எனவும், “எக்சாட்லி... நானும் அதைத் தான் அவருக்குப் புரிய வைக்க நினைத்தேன் பேபி...” எனக் கூறியவாறே ரோஹித் மிருவை பார்த்து புன்னகைத்தான்.
அவனின் அந்தப் பேபி என்ற அழைப்பு மேலும் அபய்யை கடுப்பாக்க, “நோ... நோ... ஷி ஸ் மை லவ்... இது லவ்வர்ஸ் கோரல், உங்களுக்குப் புரியாது... மேடம் என் மேல கோபமா இருக்காங்க, அதான் என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்றாங்க... டோன்ட் வொர்ரி நான் பார்த்துக்கறேன்... நீங்க கொஞ்சம் அப்படி ஓரமா ஒதுங்கி நின்னு வேடிக்கை பாருங்க... மேடம் வாயாலேயே ஒத்துக்க வைக்கறேன்...” என்றவன் மிருவை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க,
மிரு இரண்டடி பின்னால் நகர்ந்தால் மிரட்சியோடு, அபய்யை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க வைப்பதோ சமாளிப்பதோ அவ்வளவு எளிதல்ல என்பது புரிய, இப்போது ஏன் இந்த அதிரடி என்று புரியாமலும் எப்படித் தப்பிப்பது எனத் தெரியாமலும் வேறு வழியின்றி ரோஹித்தை பார்த்தாள்.
அதுவரை இருவரையும் குழப்பத்தோடு மாறி மாறி பார்த்தப்படி நின்றிருந்த ரோஹித் “பாஸ்... வெய்ட், வெய்ட்... வாட், லவ்வர்ஸா... ஹா ஹா ஹா...” என வாய் விட்டு சிரித்தவன், “அப்போ நிச்சயமா இந்தப் பீஸ் நீங்க நினைக்கற ஆள் இல்லை... அதுக்கு நான் கேரண்டி, பிகாஸ் மேடமுக்கு லவ்னாலே பிடிக்காது...” எனப் பேசிக் கொண்டு சென்றான்.
பின் மிருவின் பக்கம் திரும்பி “அது என்ன சொல்லுவ அடிக்கடி, “ஆஹான்... லவ் எனக்கு ஆல் லாங்குவேஜ்லையும் பிடிக்காத ஒரே வார்த்தை... ஆஆங்ங்...” எனக் கூறி சிரித்தான்.
‘இப்போ இது ரொம்ப முக்கியம், நீ தனியா வா...’ என மனதிற்குள் பல்லைக் கடித்தப்படி ரோஹித்தை அர்சித்துக் கொண்டு நின்றிருந்தாள் மிரு.
“ஒன்பது வருஷமா இவ கூட இருக்கேன் பாஸ்... என் லவ்வை சொன்ன அன்னைக்கு விட்டா பாருங்க ஒரு அடி, இப்போ வரை வலிக்குது... அதுல இருந்தே நான் டூ ஸ்டேப் பேக் தான்...” எனக் கன்னத்தைத் தடவியபடி பேசியவனை முறைத்த மிரு, ‘இவன் வேற மானத்தை வாங்கறான்...’ என எண்ணினாள்.
“ஆனா அப்பவும் நீங்க விலகினது போலத் தெரியலையே...?!” என அபய் ஒரு மாதிரியான குரலில் ரோஹித் கையில் இருந்த சுபிக்ஷாவையும், அவனை நெருங்கி நின்றிருந்த மிருவையும் பார்த்தப்படி கேட்கவும், “அதெப்படி சார் விலக முடியும், ஐந்து வருஷ காதலாச்சே... இவ கைல கால்ல விழுந்து சம்மதம் வாங்கறதுக்குள்ள எங்க ஸ்டேரைட்டா அறுபதாம் கல்யாணம் தானோன்னு நான் நினைச்சுப் பயந்தது எனக்குத் தானே தெரியும்...” என்றவன்,
சற்று தயங்கி “உங்களை ஒண்ணு கேட்கலாமா சார்...?” எனவும், “ம்ம்..” என அபய் ஆமோதிக்க, “நீங்க அபய்வரகுணன்... அம் ஐ ரைட்...” என ஒரு வித தயக்கத்தோடு கேட்க, “இதைக் கேட்கவா இவ்வளவு யோசிச்சிங்க... எஸ், ஐ ம் அபய்... ப்ளீஸ் டூ மீட் யூ...” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனுக்குக் கொஞ்சமும் ரோஹித்தின் மேல் கோபம் எல்லாம் இல்லை...
மினிக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விடாதா என்ற எதிர்ப்பார்ப்பு மட்டுமே பல நாட்கள் அவன் உறக்கத்தைத் தடை செய்து கொண்டு இருந்தது. அது இன்று கண் முன் சாத்தியமாகி இருப்பதைக் கண்டு அலைபுறுதலோடு இருந்த மனம் சற்று ஆசுவாசம் அடைந்ததென்னவோ நிஜம் தான்.
ஆனால் ஏதோ ஒன்றை தவறவிட்டது போன்ற ஒரு தவிப்பும் மனம் முழுவதும் படரத் தொடங்கி இருந்தது. இப்போதைக்கு அதைப் பற்றி எல்லாம் எண்ணாமல் ஓரம் தள்ளியவன், அங்கிருத்து நிச்சயம் விலகி தான் சென்று இருப்பான்.
அவள் வாழ்க்கைக்கு இடயூறாகவோ தடையாகவோ இருந்து விடக் கூடாது என்று..! ஆனால் அது அவனின் மினி குறைந்த பட்சம் அவனைக் கண்டதும் ஓடி வந்து பேசும் அளவிற்கு இப்போது இருவருக்குள்ளும் சூழ்நிலை சரி இல்லை என்றாலும், இயல்பாக ஒரே ஒரு பார்வை பார்த்திருந்தாலுமே போதும், அவள் வெளிப்படுத்திய அந்த அந்நிய பார்வை தான் அவனைப் பெரிதும் சீண்டிவிட்டது.
அதுவே அவளின் கண்களைச் சில நொடிகளாவது தன்னைப் பயத்தோடும் பதட்டத்தோடும் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் தர, அதை உடனே செயல்ப்படுத்தினான்.
இது தான் அபய், தனக்குத் தோன்றுவதை வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் செயல்ப்படுத்துவான்.
சிறு குழந்தைகள் தனக்கு மிகவும் பிடித்த பொம்மையைச் சற்று வளர்ந்த பிறகு விளையாடாமல் அப்படியே வைத்து இருப்பர், சில வருடங்களில் வீட்டில் இருப்பவர்கள் வேறு யாருக்காவது கொடுத்து அதை அவர்கள் கையில் வைத்து விளையாடுவதைப் பார்க்கும் போது தன்னை மீறி அதன் மேல் உரிமை உணர்வு எழுமே...!!
அது போலத் தான், தான் பிரிந்து விட்டோமே அவள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும், என நினைத்தவன் தான். ஆனால் தன் பொருள் கை விட்டு போனதன் வலி இன்னும் அவனுக்கு மனதில் பதியவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இப்போது அமையவில்லை, எனவே சாதரணமாகப் பேசி விட்டு செல்லவே முனைந்தான்.
இல்லை நல்லவேளை இதுவரை அப்படி ஒன்றை அபய் உணரவில்லை என்று நினைக்க வேண்டுமோ...? ஒருவேளை உணர்ந்து இருந்தால் சற்றும் யோசிக்காமல் மிருவை தூக்கிக் கொண்டு சென்றாலும் சென்றுவிடுவான்.
ஒரு சிறு அறிமுகத்திற்குப் பிறகு விடைப் பெற முயன்றவனை, “பாஸ் உங்க மினி...” எனத் தயக்கத்தோடு ரோஹித் இழுக்கவும், நக்கலான ஒரு பார்வையை மிருவை நோக்கி நொடிக்கும் குறைவான நேரம் பார்த்தவன்,
“நிச்சயம் இவங்க இல்லை...” எனப் பதிலளிக்க, “எப்படிச் சார் கண்டுபிடிச்சீங்க...?” என ஒரு ஆர்வத்தில் ரோஹித் கேட்டுவிட, ‘இப்போ அது ரொம்ப முக்கியம்...’ என்று மனதிற்குள் பல்லை கடித்தபடி நின்றிருந்தாள் மிரு.
இருவரும் பேசபேச, அவளுக்குத் தான் ரத்த அழுத்தம் எகிறியது. ஏனென்றால் அபய்யை பற்றி நன்கு தெரிந்தவள் என்பதால் அவன் எப்போது எப்படி நடந்து கொள்வான் என ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அறிந்து இருந்தவள்,
‘இதற்கு மேல் இவன் எதையும் பேசி சொதப்பிடும் முன் கிளம்பிவிட்டால் நல்லது’ என நினைத்து இருக்க, மிருவின் மனதின் தவிப்பை உணராது ரோஹித் மேலும்மேலும் அபிய்யிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு இருந்தான்.
“அது தான் இவங்க இல்லைன்னு தெரிஞ்சிடுச்சே அப்பறம் டிடேயில் எதுக்கு, வேண்டாம் விடுங்க...” எனக் குறும்பாகக் கூற, “எப்படின்னு ஒரு ஆர்வம் தான் சார்...” தெரிந்தே ஆக வேண்டும் போலக் குரலில் ரோஹித் கூற,
“ம்ம்... ஒகே...” எனத் தன் தோள்களை அசால்டாகக் குலுக்கியவன், மிருவின் மேல் தன அழுத்தமான பார்வையைப் பதித்தப்படி நெருங்க, மிருவிற்கு மனம் தடதடக்கத் துவங்கி இருந்தது. ‘இப்போ என்ன சொல்லப் போறானோ...?!’ என்ற கேள்வியோடு அவனைப் பார்த்தவளுக்கு அப்போது தான் அபய்யின் பார்வை தன் இதழின் மேல் நிலைத்து இருப்பது தெரிந்தது.
அதன் பின் மூச்சு விடக் கூட மறந்து துடிக்கும் தன் இதழ்களைக் கட்டுப்படுத்த போராடியவள், பற்கள் கொண்டு கீழ் உதட்டை கடித்து தன் பதட்டம் வெளியே தெரியாமல் மறைக்க முயல, அவளின் முயற்சியை நொடியில் கண்டு கொண்டவனுக்கு இதுவே போதுமானதாக இருக்க,
“இதோ இந்த ஆரஞ்சு பழத்தை வெட்டி வெச்சது போல இருக்கே இந்த லிப்ஸ் தான் காட்டிக் கொடுத்தது வித்தியாசத்தை, என் மினிக்கு அப்படியே செரி பழ நிறத்தில் அதே பளபளப்போடு இருக்கும்...” என்ற சத்தமாகக் கூறியவன், “சுவையும்...” என்றான் மெல்லிய முணுமுணுப்போடு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்...!
ரோஹித்துமே இந்தப் பதிலை எதிர் பார்க்கவில்லை என்பதால் இதற்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் திகைத்து நிற்க, அதற்குள் தன்னை மீட்டுக் கொண்ட மிரு, “கிளம்புவோமா...?” என அபய்யின் மீதான தன் ஒட்டு மொத்த கோபத்தையும் வார்த்தைகளில் காண்பித்தவள், ரோஹித்தை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
நகர்வதற்கு முன் அபய்யை ‘நீயெல்லாம் திருந்தவே இல்லையா...?!’ என்பது போல ஒரு வெறுப்பான பார்வை பார்த்து விட்டு செல்ல, அவனோ அதற்க்கெல்லாம் அசருபவனா என்ன...?! அசால்ட்டாக மிருவை பார்த்துக் கண்சிமிட்டினான்.
மூவரும் அங்கிருந்து செல்வதையே பார்த்தப்படி நின்றிருந்த அபய்யின் கண்களில், அப்போதே ரோஹித் தோள்களில் தொத்தியபடி அவன் கழுத்தை கட்டி கொண்டு தன்னையே பார்த்தப்படி செல்லும் சுபிக்ஷா பட, அவளை நோக்கி யோசிக்காமல் ஒரு பறக்கும் முத்தத்தைப் பறக்கவிட்டான்.
ஏனோ அவர்கள் இருந்த வரை தெரியாத ஒரு தனிமை உணர்வும் ஏக்கமும், அவர்கள் விலகிய அடுத்த நொடி மெல்ல படர தொடங்கி இருந்தது.
தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கியவனை ஓட்டமும் நடையுமாக வந்து எதிர் கொண்டான் விக்டர். அபய்யின் அந்தரங்க உதவியாளன், அபய் கையால் இட்ட வேலையை தலையால் செய்து முடிப்பவன், கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக அபய்யோடு இருப்பவன்,
அபய் ஒன்றும் இறுக்கமானவனோ உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவனோ கிடையாது. எப்போதும் அவன் இருக்கும் இடம் கலகலப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் இருக்கும், ஆனால் அவனையும் எப்போதும் கலகலப்பாக வைத்து இருப்பது விக்டர் தான்.
இந்த ஒரு குணத்திற்காகவே அவனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான் அபய். தன் தனிமையை விரட்ட, அனைவரும் இருந்தும் யாருமற்று இருப்பது அத்தனை எளிதல்ல.
கிட்டதட்ட பத்து வருடங்களாக அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவனுக்குத் தவிர்க்க முடியாத சில நேரங்களில் தன்னைச் சார்ந்தவர்களை மனம் தேடும், அந்தத் தவிப்பை கூட வெளிகாட்டிக் கொள்ள விரும்பாதவன் அதைத் தனக்குள் மறைத்துக் கொண்டு இன்னும் அதிகமாக அந்த நேரங்களில் வேலையில் மூழ்கி விட முனைவான்.
ஆனால் அபய்யின் நிழலாக இருப்பவனுக்குப் புரியாதா அவன் மனது. மெல்ல தன் குரங்கு சேட்டையும் கோணங்கி தனமுமான செயல்களால் அபய் மனதை திசை திருப்பித் தொடர்ந்து தன்னைத் திட்டுவது போல எதையாவது செய்து, அதில் அவனைப் பிஸியாக்கி விடுவான்.
அபய்க்கும் விக்டரின் இந்தச் செயல் தெரிந்தாலும், தெரிந்து கொண்டது போலக் காண்பித்து கொள்ள மாட்டான். ஆனால் அவன் மேல் உள்ள பிடித்தம் இன்னும் அதிகமாகும்.
இப்போது கூடத் தான் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கத் தான் சென்று விட்டு வந்து இருக்கிறான் எனத் தெரிந்தாலும், “வாங்க சார்... நான் வந்து பன்னிரண்டு மணி நேரம் ஆகுது... இப்போ தான் என்னைப் பார்க்க உங்களுக்கு டைம் கிடைத்ததா...?!” என வம்பிழுத்துக் கொண்டே நடந்தான்.
“ஏன் கேக்க மாட்டீங்க... பாஸா இருக்கறது ரொம்ப ஈஸி ஜி... ஆனா அவருக்குப் பிஎவா இருக்கறது அவ்வளவு ஈஸி இல்லை தெரிஞ்சுக்கோங்க... அது நெம்பக் குஷ்டம், இங்க தொழில் தொடங்க போற நீங்க கூட இன்னைக்குத் தான் வந்து இருக்கீங்க... உங்களுக்கு வாக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக இந்த வேலையைப் பார்க்க நான் இங்கே வந்து இருபது நாள் ஆகுது... என்னைப் பார்த்து, இந்தக் கடமை கண்ணாயிரத்தை பார்த்து ரொம்ப அசால்டா கேக்கறீங்க கேள்வி...” என மாடுலேஷனோடு பேசியவன்,
“என்னை என்ன உங்களைப் போல உட்கார்ந்த இடத்தில இருந்து ஈஸியா வேலை பார்க்கற ஆளுன்னு நினைச்சீங்களா...? பறந்து பறந்து பல வேலைகளை செய்றவன், இதுல நடுவுல நடுவுல பொதுச் சேவை வேற...” எனத் தன் புகழை பாடியப்படி வந்து கொண்டு இருந்தவனை, அபய் நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன், “யாரு நீ பொதுச் சேவை...” என்றான்.
லிப்ட்டில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தவனின் முன் வந்து வழி மறிப்பது போல நின்றவன், “நம்பலையா நீங்க..?” எனவும், “வழியை விடுடா...” என அதற்குப் பதில் அளிக்காமல் தன் அறையை நோக்கி சென்றவனின் பின்னால் ஓடியவன்,
“நிஜம் பாஸ்... நானும் சேவை எல்லாம் செய்வேன்...” என்றான் என்னை நம்புங்க என்பது போன்ற பாவமான குரலில், “எது இந்த சாப்பிடற சேவை தானே... அதாவது நல்லா இருக்குமா..? இல்ல, அதுவும் நீ செய்யற வேலை போல தான் இருக்குமா...?!” என்றான்.
அதில் அழும் பாவனையோடு முகத்தை வைத்து கொண்டு, “பாஸ்ஸ்ஸ்..” என்றான் விக்கி. அதற்குள் தன் அறைக்குள் நுழைந்தவன், “சரி, சரி... அழாதே, நம்பறேன்... என்ன செஞ்ச... இன்னைக்கு நீ எந்தக் குழந்தைகிட்ட இருந்தும் ஸ்நாக்ஸ் பிடுங்கி சாப்பிடலையா...?!” என்றான்.
“பாஸ்... நான் எவ்வளவு பெரிய காரியம் செஞ்சுட்டு வந்து இருக்கேன்... நீங்க இப்படி கலாய்க்கறீங்க...” என முகத்தைத் தூக்கியவன், “ஒரு பெண்ணோட வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுத்துட்டு வந்து இருக்கேன்...” என்றான்.
அதில் இரு புருவத்தையும் வியப்பாக உயர்த்தியவன், “எங்க...? என்ன ஆச்சு...? ஏதாவது அக்ஸிடன்ட்டா...” எனக் கேட்க, “அதெல்லாம் இல்லை பாஸ்... பேங்க்ல தான்...” என்றவன், “இருங்க இருங்க... திருட்டு, கொள்ளை எல்லாம் எதுவும் இல்லை...” என அவனே சேர்த்து சொன்னான்.
‘அப்போ வேறென்ன...?!’ என்பது போலப் பார்த்து இருந்தவன், வாயை திறந்து எதுவும் கேட்கவில்லை. “என்னன்னு கேட்டா என்னவாம்...? பொறாமை...” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தவன்,
“இன்னைக்கு மதியம் பேங்க்ல ஒரு லேடி டெபாசிட் செய்ய வந்து இருந்தாங்க... அவங்களுக்கு என்ன ப்ரேச்சனையோ இல்லை யாருக்கு என்ன தேவையோ பாவம், அவங்க வீட்டுக்காரரை டெபாசிட் செய்ய முயற்சி செஞ்சாங்க...” எனக் கதை சொல்லி கொண்டு இருக்க,
“ஹே... அவங்க வீட்டுக்காரருக்கு டெபாசிட் செய்ய வந்தாங்களா...?” என இடையிட்டவனைப் போலியாக முறைத்தவன், “என்ன பார்த்தா அவ்வளவு முட்டாள் போலவா இருக்குப் பாஸ்... அந்தம்மா அவங்க வீட்டுக்காரரை தான் டெபாசிட் செஞ்சுது பாஸ்...
ONE HUSBAND AND EIGHTY RUPEES ONLYன்னு எழுதி வெச்சிட்டு எனக்கு முன்னாலே தான் லைன்ல நின்னுக்கிட்டு இருந்தது... பார்த்ததும் பாவமா போச்சு... அதான் அக்கா உங்களுக்கு என்ன ப்ரச்சனைன்னு எனக்குத் தெரியலை, ஆனா ஒரு தம்பியா நினைச்சு சொல்றேன்...
உங்க வீடுகாரரை டெபாசிட் செய்றதுக்குப் பதிலா அடகு வெச்சா இன்னும் லாபம் அதிகம், சரி ஒரு வீட்டுகாரரை தான் டெபாசிட் செஞ்சிட்டீங்க... மத்தவங்களையாவது என்ன செய்யறதுன்னு நல்லா யோசிச்சு முடிவு செய்ங்கன்னு சொல்லிட்டு வந்தேன்...” எனச் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல அபய்யோ புரை ஏறும் வரை வெடித்துச் சிரித்துக் கொண்டு இருந்தான்.