மௌனம் - 35
அவ்வளவு பெரிய வீட்டில் தனியே அமர்ந்து இருந்தார் வேதவல்லி. வேலையாட்கள் வீடு முழுக்க இருந்தாலும் அவருக்கு தனித்து விடப்பட்டது போல் இருந்தது.
சித்ரா மட்டுமல்ல புஷ்பாவும் வீட்டை விட்டு வெளியேறி விட்டிருந்தார். நிதினுக்கும் வேதவல்லிக்கும் இடையில் நடந்த பிரச்சனையில், நந்தினி மற்றும் விநாயக்கிற்கு எதையும் பிரித்து கொடுக்க மாட்டேன் என வேதவல்லி அடமாக இருக்க.. அவர்களுக்கு சேர வேண்டியதை கொடுத்தேயாக வேண்டும் என நின்றான் நிதின்.
மொத்த சொத்தையும் நான்காக பிரித்து நால்வரின் பேரிலும் எழுதிவிட ரகோத்தமனிடம் நிதின் சொல்ல.. “எந்த ஓடு**க்கோ பிறந்தவனுக்கும் அவன் கூட ஓடிப் போனவளுக்கும் நான் எதுவும் கொடுக்கவே மாட்டேன்..” என்றார் திமிராக வேதவல்லி.
“இதை சொல்லும் உரிமை உங்களுக்கு கிடையாது, தாத்தா எழுதி வெச்ச உயிலின் படி சொத்தை பிரிச்சு தான் ஆகணும்..” என்று நிதின் பேச.. இதில் தான் பிரச்சனை தொடங்கியது.
காலையில் அவன் சொத்தை பற்றி வந்து பேசிவிட்டு சென்றதற்கு பின் மாலையில் இவன் அதையே பேசுவது வேதவல்லிக்கு ஆத்திரத்தை கொடுக்க.. வார்த்தைகளில் வரம்பே இல்லாமல் மொத்த குடும்பத்தையும் எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு பேசிவிட்டு இருந்தார்.
அதில் உண்டான கோபத்தோடு “கொஞ்சம் கூட மரியாதையோ மனிதாபிமானமோ இல்லாத பணம் மட்டுமே முக்கியம்னு நினைக்கும் உங்களை மாதிரி ஒரு கேவலமான ஆள் இருக்கும் இடத்தில் இனி எனக்கு இருக்க விருப்பமில்லை.. இந்த வீடு உங்க பேரில் தாத்தா எழுதி வெச்சது நீங்களே இங்கே இருந்துக்கோங்க.. ஆனா இங்கிருந்து போனதுக்காக இதை எல்லாம் நிறுத்திடுவேன் மட்டும் நினைக்காதீங்க.. நான் நினைச்சதை நடத்தி முடிச்சுட்டு தான் ஓய்வேன்..” என்று கறாராக பேசிவிட்டே வெளியில் சென்று இருந்தான் நிதின்.
அவன் வீட்டை விட்டு சென்றதிலிருந்து அழுது கொண்டே இருந்த புஷ்பா மறுநாள் காலை தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து விட்டு ரகோத்தமன் முன் சென்று நின்றார். “நான் நிதின் கூடவே போயிடலாம்னு இருக்கேன், எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை..” என அவர் சொல்லவும், ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்காமல் சோர்வாக புஷ்பாவை பார்த்தார் ரகோத்தமன்.
“என் மகள் கூட தான் என்னால் இனி இருக்க முடியலை.. மகனையும் இழக்க நான் விரும்பலை, ஒருவேளை நாங்க இரண்டு பேரும் தனியா இருக்கறது தெரிஞ்சு மானுவும் திரும்ப எங்ககிட்ட வந்தாலும் வரலாம்..” என்று புஷ்பா சொல்லவும் “உன் விருப்பம்..” என முடித்துக் கொண்டார் ரகோத்தமன்.
ஏனெனில் நேற்றைய நிதினுடனான வாக்குவாதத்தின் போது எப்போதும் பேசுவது போல் அபிராமியையும் விநாயக்கையும் மட்டுமல்ல, புஷ்பாவையும் அவரின் இரு பிள்ளைகளையும் கூட மோசமாகத்தான் பேசி இருந்தார் வேதவல்லி.
அபிராமியின் வாழ்க்கையில் புகுந்து அந்தக் குடும்பத்தை கெடுத்து புஷ்பா குடும்பம் குழந்தையென இங்கு சொகுசாக வாழ்வதாகவும், இதில் யோசிக்காமல் யாருக்கோ சொத்தைத் தூக்கி கொடுக்க அவரின் பிள்ளை நினைப்பதாகவும் பேசிவிட.. இதில் உண்டான கோபத்தோடும் யாரையும் எப்போதும் விட்டு வைக்காமல் இப்படி வார்த்தைகளில் விஷம் தடவி பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் தான் வீட்டை விட்டு நிதின் கிளம்பி இருந்தான்.
அதையெல்லாம் மனதில் வைத்து இரவெல்லாம் அழுது கொண்டிருந்த புஷ்பா தன் மகனோடு செல்ல எடுத்த முடிவு சரிதான் என்றே ரகுத்தமனுக்கும் தோன்றியது. அதில் அவர் அமைதியாகவே இருந்து விட, புஷ்பா கிளம்பி வெளியில் வரும் போது தான் வேதவல்லிக்கு விஷயமே தெரிந்தது.
அப்போதும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “இப்படி எல்லாம் பிளாக் மெயில் செஞ்சு என்னை சம்மதிக்க வைக்க நினைச்சா உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.. நீ வெளியே போனா எனக்கென்ன..? பிச்சை எடுத்தா எனக்கென்ன..? இந்த சொத்தில் இருந்து ஒரு ரூபா கூட யாருக்கும் நான் கொடுக்க மாட்டேன்..” என்று திமிராகவே வேதவல்லி பேச, அதை எல்லாம் நின்று கேட்க கூட விரும்பாமல் வெளியேறி விட்டிருந்தார் புஷ்பா.
ஆனால் அதுவரை அமைதியாகவே இருந்த ரகோத்தமன் பின் மெதுவாக வேதவல்லியின் பக்கம் திரும்பி “இப்போ இந்த நிமிஷம் புஷ்பா கூடவே வெளியே போக எனக்கு ஒரு நொடி போதும் ம்மா.. ஆனா நானும் போயிட்டா நீங்க இங்க அனாதையாகிடுவீங்க.. உங்களுக்கு எப்படியோ, ஆனா எனக்கு பெத்த கடன்னு ஒண்ணு இருக்கு..
இதுவே உங்க சின்ன பிள்ளை உயிரோடு இருந்திருந்தா யோசிக்காம நான் கிளம்பி போய் இருப்பேன்.. அவனும் இல்லை, இனி சித்ராவும் உங்க பக்கமே வரமாட்டா.. நானும் போயிட்டா உங்க நிலையை யோசிச்சுப் பாருங்க.. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நான் இந்த வீட்டில் இருக்கேன்..
ஆனா இது கூட உங்க சொத்தை ஏமாற்றி வாங்க தான் இங்கே இருக்கேன்னு நீங்க நினைச்சா தாராளமா நினைச்சுக்கோங்க.. எனக்கு அதை பத்தி எந்த கவலையும் இல்லை, இன்றிலிருந்து நான் இங்கே சாப்பிட கூட மாட்டேன்..” என்ற விட்டு அவர் உள்ளே சென்றுவிட, “என்னடா ஆளாளுக்கு மிரட்டி பார்க்கறீங்களா..? நீங்க போயிட்டா என்னால் வாழவே முடியாதா என்ன..? நான் ராணிடா, என்னைக்கும் நான் தான் இந்த வீட்டுக்கு ராணி.. யார் இருந்தாலும் போனாலும் எனக்கு எந்த கவலையும் கிடையாது..” என்ற திமிராகவே பேசியவர், அடுத்த ஒரு வாரத்திலேயே அந்தத் தனிமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து போனார்.
எப்போதும் மொத்த குடும்பத்தையும் தன் பிடியில் வைத்தே பழகி விட்டிருந்தவர், இப்போது அதிகாரம் செய்யக்கூட யாரும் இல்லாமல் ராஜ்ஜியத்தை இழந்த ராணி போல் அமர்ந்திருந்தார். அவர் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்க வேலையாட்கள் தயாராகவே இருந்தாலும் அனைவரிடமும் எரிந்து விழுந்து கத்தி தீர்த்துக் கொண்டே இருந்தார் வேதவல்லி.
எல்லா வேலைகளிலும் குற்றம் சொல்லிக்கொண்டு எதிலும் திருப்தி அடையாமல் அவர் சொல்வதையே சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தாலும் அதில் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து என வேதவல்லி செய்து கொண்டிருந்த அமர்க்களத்தில் வேலை ஆட்களும் வெறுப்பாகினர்.
வேதவல்லிக்கு வேலையாட்கள் சமைத்துக் கொடுப்பது எப்போதுமே பிடிக்காது. வீட்டினர் தான் சமைக்க வேண்டும் என்பதில் எப்போதுமே பிடிவாதமாக இருப்பார். சித்ராவும் அத்தனை பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து வைப்பார்.
வேதவல்லியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு எது ஒத்துக்கொள்ளும், எது ஒத்துக்கொள்ளாது.. எது பிடிக்கும், எது பிடிக்காது என்று அறிந்து செய்வதோடு மற்றவர்களுக்கும் அவர்களுக்கு பிடித்தது போல் அத்தனை வகையை செய்து மேஜையை நிரப்பி விடுவார்.
இன்று இவருக்கென சமைக்கப்பட்ட ஒற்றை உணவு மட்டும் மேஜையில் சாப்பிடாமல் காய்ந்து கொண்டிருந்தது. வேதவல்லி கேட்டிருந்தது போலத்தான் சமையல் செய்பவரும் செய்து கொடுத்திருந்தார். ஆனால் இவருக்குத்தான் அதன் ருசி கொஞ்சமும் பிடிக்கவில்லை.
இதில் பசி ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம் என்று தனித்து அமர்ந்திருந்தவருக்கு “ஓ இப்படி எல்லாம் என்னை எல்லா பக்கமும் கார்னர் செஞ்சு, உங்க வேலைய முடிச்சுக்க பார்க்கறீங்களா..? அது ஒரு நாளும் நடக்காது, சிங்கம் வயசானாலும் சிங்கம் தான்..!’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தார் வேதவல்லி.
**
இரண்டு மாதம் கடந்திருந்தது..
அன்று அபிராமி கோவிலுக்குச் சென்று இருந்தார். பெரும்பாலும் மற்றவர் பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மதிய நேரத்தில் கோவிலை மூடும் சமயமாக பார்த்து தான் செல்வது அபிராமியின் வழக்கம்.
அன்றும் அப்படியே சென்றிருந்தவர், மன நிறைவோடு பூஜையை முடித்துக் கொண்டு பிரகாரத்தில் அமர்ந்திருக்க.. அவரை காண அங்கு வந்தார் புஷ்பா. தன்முன் வந்து நின்றவரை அமைதியாக அபிராமி பார்க்க.. “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றார் தயக்கத்தோடு புஷ்பா.
“சொல்லுங்க..” என அபிராமி மென்மையான குரலிலேயே கேட்கவும், அவருக்கு எதிரில் அமர்ந்த புஷ்பா “மானு எப்படி இருக்கா..?” என தொடங்கவும் “ஹ்ம்ம் நல்லா இருக்கா.. ஏன் நீங்க அவ கூட பேசலையா..?” என்றார் அபிராமி.
“இல்லை, பேசிட்டு தான் இருக்கேன்.. இத்தனை வருஷமா என் கூட இருந்த போது இல்லாத சந்தோஷமும் அமைதியும் அவள் குரலிலும் முகத்திலும் இப்போ நிரந்தரமா இருக்கு..” என புஷ்பா சொல்லவும், ஆமோதிப்பாக அபிராமியிடம் இருந்து ஒரு தலையசைப்பு மட்டுமே வந்தது.
அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் புஷ்பா அமைதியாக.. அங்கு ஒரு சங்கடமான மௌனம் நிலவியது. பின் மெல்ல நிமிர்ந்து அபிராமியை பார்த்தவர், “இப்போ நானும் நிதினும் கூட அந்த வீட்டில் இல்லை, தனியா தான் இருக்கோம்..” எனவும் ‘தெரியும்’ என்பது போல் அதற்கும் அபிராமியின் தலை அசைந்தது.
“மானுவை எங்க கூட வந்துட சொல்லி கூப்பிட்டேன்..” என்று மெல்லிய குரலில் புஷ்பா சொல்லவும், அவளின் பதில் என்னவாக இருக்கும் என்று புரிந்து அமைதியாகவே இருந்தார் அபிராமி. ஆனாலும் ஒரு பேச்சை தொடங்கி விட்டு சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் “இல்லை, நான் இங்கேயே இருக்கேன்னு மானு சொல்லிட்டா..” என்றார் புஷ்பா.
அதற்கும் சரி என்பது போல் அபிராமி தலையசைக்க.. “என் கூட இருக்கிறதை விட உங்க கூட இருக்க அவ விரும்புறது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.. ஆனா நிதின் அவளுக்கு பிடிச்ச மாதிரி இனியாவது வாழட்டும் ம்மா விடுங்கன்னு சொன்னான்..” எனவும் ஒரு மென்மையான புன்னகை அபிராமியின் முகத்தில் வந்தது.
அடுத்து “நானே உங்களை வந்து சந்திக்க நினைச்சு இருந்தேன்..” என்ற புஷ்பாவை எதற்காக என்பது போல அபிராமி பார்க்க.. “இப்போ எதிர்பாராம இங்கே உங்களை பார்க்கவும் உங்களுக்கு நன்றி சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்..” என்றார் புஷ்பா.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அபிராமி “இதுக்காக எல்லாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியம் எதுவுமில்லை.. மானு நல்ல குழந்தை, அவ என் கூட இருக்கறது எனக்கும் சந்தோஷம் தான்.. அவளை எந்த குறையும் இல்லாம நான் பார்த்துப்பேன்..” என்று அமைதியான குரலிலேயே கூறினாலும் அதில் ஒரு உறுதி தொனித்தது.
அதை புரிந்து கொண்ட புஷ்பாவுக்கு அடுத்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அதில் மெல்ல சிறு தலைசைப்போடு எழுந்து கொண்டவர், “கிளம்புறேன்..” என்று விட்டு நகர முயல.. “ஒரு நிமிஷம்..” என்ற அபிராமியின் குரல் அவரை தடுத்து நிறுத்தியது.
புஷ்பாவும் என்ன என்பது போல் என்று திரும்பிப் பார்க்க.. “நாம இது போல இனி சந்திச்சு பேசிக்க வேண்டாம்னு எனக்கு தோணுது.. இதுவரை எப்படி இருந்தோமோ, அப்படியே விலகி இருக்கிறது தான் இரண்டு பேருக்குமே நல்லது..” என்றார் அபிராமி.
அந்த குரலிலோ முகத்திலோ கோபம் துளியும் இல்லை என்றாலும் அவர் சொல்லிய வார்த்தைகளை மறுக்க முடியாத அளவிற்கு அதில் ஒரு அழுத்தம் இருந்தது. இதில் என்ன பேசுவது என தெரியாமல் புஷ்பா அப்படியே நின்று இருக்க.. “உங்களுக்கும் எனக்கும் இடையில் இருக்க ஒரே விஷயம் மானஸா..” என்று அந்த ஒரே என்பதில் அழுத்தத்தைக் கூட்டிக் கூறியவர், “உங்க மகளா அவ எனக்கு அறிமுகம் ஆகலை, என் மகனோட தங்கையா தான் எனக்கு அறிமுகமானா.. என் மகனோட தங்கை எனக்கு மகள், அப்படித்தான் அவளை பார்த்துப்பேன்..
இனி மானு சம்மந்தமா என்ன பேசறதா இருந்தாலும் நீங்க நந்துகிட்டேயோ இல்லை சித்ராகிட்டேயோ பேசிக்கோங்க.. அவங்களுக்கு தெரியாம எங்க குடும்பத்தில் எதுவும் நடக்க போறது இல்லை.. அவங்களே உங்களுக்கு வேண்டிய தகவலை சொல்லிடுவாங்க.. நாம எவ்வளவு தான் முதிர்வோட நடந்துக்க முயற்சி செஞ்சாலும், சில விஷயங்களை மூடி மறைச்சு இயல்பா பேசி பழக முடியாது..
இதோ இப்போ நீங்க என்கிட்ட பேசணும்னு வந்து நின்ற போதும், என் மகனை நான் வயிற்றில் சுமந்துட்டு இந்த கோயிலுக்கு வந்த போது இதே போல வந்து நீங்க நின்றது தான் எனக்கு ஞாபகம் வந்தது.. அதில் இப்போவும் என்கிட்ட இருந்து என்ன கேட்கப் போறீங்களோ..? எதை எடுத்துப்பீங்களோன்னு தான் என் அடிவயிறு கலங்கியது..
எவ்வளவு தான் கடந்து செல்ல முயற்சி செஞ்சாலும், சில விஷயங்களை மறந்து செல்ல முடியாது.. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்..” என்றிருந்தார் அபிராமி.
கோபப்படவில்லை, முகம் திருப்பவில்லை, ஆனால் அத்தனை முதிர்ச்சியாக இனி என் கண்ணு வந்து விடாதே என்ற வார்த்தைகளை அவர் சொல்லிய விதமும் அதில் பொதிந்திருந்த பொருளும் புஷ்பாவுக்கு அத்தனை அவமானத்தை கொடுத்தது.
சமீபமாகத்தான் நிதின் கூட அவரோடு இதைப்பற்றி விளாவாரியாக பேசி இருந்தான். “ஒரு அத்தை மகனா நீங்க அவரை விரும்பினதில் தவறே இல்லைம்மா.. ஆனா அவருக்கு திருமணமானது தெரிஞ்ச பிறகும் அவர் தான் வேணும்னு பிடிவாதமா நின்றது ரொம்ப தப்பு..
அதை தப்புன்னு கூட சொல்ல கூடாது, துரோகம்.. இன்னைக்கு நாம இன்னொருத்தர் வாழ்க்கையை திருடி வாழ்ந்துட்டு இருக்கோம்..” என அவன் சொல்லவும், தன் தரப்பை சொல்ல புஷ்பா முயல..
“நீங்க எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் செஞ்ச தப்பு மாறிடாது.. வீட்டு பெரியவங்க ஆயிரம் சொல்லி இருப்பாங்க, அதைக் கேட்டு நடக்கணுமா வேணாமான்னு நாம தான் தெளிவா ஒரு முடிவு எடுக்கணும்.. நீங்க அங்கே சுயநலமா யோசிச்சுட்டீங்க, இன்னைக்கு அதனால் கல்யாணம் செஞ்சும் அவங்க தனியா வாழறாங்க.. அப்பா இருந்தும் விநாயக் ஒதுங்கி வளர்ந்தான்..
ஆனா அதை பத்தி எல்லாம் கவலையே இல்லாம நாம இங்கே சந்தோஷமா குடும்பமா வாழ்ந்துட்டு இருக்கோம்.. இது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..?” என்று அவன் சொல்லிய பிறகு பல வருடங்களாக அவருள் இருந்த குற்ற உணர்ச்சி மேலும் அதிகமாகி இருந்தது.
ஒரு அன்னையாக தன் மகனிடம் இருந்து கேட்க கூடாத வார்த்தைகள், தன் தவறை புரிய வைக்கும் விதத்தில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தே நிதின் பேசி இருந்தாலும் அதிலிருந்த உண்மை புஷ்பாவை அவமானமாக உணர வைத்தது.
இன்று அதை பல மடங்கு அதிகரிப்பது போல் ‘உன்னை பார்த்தாலோ, நீ என் முன் வந்து நின்றாலோ என்னிடமிருந்து எதை பறித்துக் கொள்வாயோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது..!’ என அபிராமி பேசியிருந்தது வேறு அதிக வலியை கொடுக்க.. வேறு எதுவும் பேசாமல் கண் கலங்க தலையசைத்து விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார் புஷ்பா.
**
நிதின் சொல்லி இருந்தது போலவே பிடிவாதமாக என்று வேதவல்லியை எதிர்த்து அவரை எதுவும் செய்ய முடியாத நிலையில் நிற்க வைத்து மொத்த சொத்தையும் நான்கு பாகமாக பிரித்து எழுத முயல.. வேதவல்லியை சமாளிப்பதற்காக எல்லா வகையிலும் முன்னே வராமல் பின் இருந்தே உதவி கொண்டு இருந்த விநாயக், சொத்தை நான்காக பிரிப்பதற்கு மட்டும் கொஞ்சமும் சம்மதிக்கவில்லை.
தனக்கு அதில் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்று அவன் உறுதியாக சொல்லிவிட, “அது எப்படி உனக்கு சேர வேண்டியதை கொடுத்து தானே ஆகணும்..?” என்று சண்டைக்கு நின்றான் நிதின்.
“எனக்கும் அந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு முடிவு செஞ்சு இத்தனை வருஷமா நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. இந்த சொத்தை மட்டும் நான் எப்படி வாங்கிப்பேன்..?” என விநாயக் கேட்க.. “நீ முடிவு செஞ்சுட்டா சம்மந்தம் இல்லாம போயிடுமா..? இன்னைக்கும் ரகோத்தமன் தான் உனக்கு அப்பா, ராதாகிருஷ்ணன் தான் உன் தாத்தா..!” என்றான் கோபமாக நிதின்.
“ஆனா அந்த உறவு தான் எனக்கு வேண்டாம்னு சொல்றேன்.. அதே போல அந்த உறவால் வர எந்த உரிமையும் எனக்கு வேண்டாம், சொத்தை மூன்று பங்கா பிரிங்க.. நான் எனக்கு இதில் பங்கு வேண்டாம்னு எழுதிக் கொடுத்துடறேன்..” என்று அவன் முடிவோடு சொல்லிவிட, நிறைய முறை வாதாடி பார்த்து விட்டு விட்டான் நிதின்.
அதில் நந்தினி பார்த்துக்கொண்டிருந்த தயாரிப்பு நிறுவனம் அவளுக்கே வருமாறு எழுதிக் கொடுத்தவன், தன் விளையாட்டுத்தனங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு பொறுப்போடு தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள தொடங்கினான்
இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடக்கும் போதே நிதினை நேரில் சந்தித்து இருந்த மானஸா “அண்ணா சாரி, நீங்க என் மேலே கோபமா இருக்கீங்கன்னு அம்மா சொன்னாங்க.. உங்ககிட்ட என் பிரச்சனையை சொல்ல கூடாதுனோ உதவி கேட்கக் கூடாதுனோ நான் என்னைக்குமே நினைச்சதே இல்லை..
ஆனா அந்த வீட்டில் நாம எல்லாரும் ஒரே நிலையில் தான் இருந்தோம், அவங்களை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு என் மனதில் அழுத்தமா பதிஞ்சு போயிருந்தது.. அதனால் தான் உங்ககிட்ட சொல்லி மட்டும் என்னாகப் போகுதுன்னு நான் சொல்லாமலே இருந்துட்டேன்..” என்றவளின் வார்த்தைகள் அவனுக்கு சரியாகப் புரிந்தது.
‘அதானே இத்தனை வருடம் கூடவே இருந்து அவளுக்கு என்ன செய்து விட்டேன்..? இப்போது செய்ய மாட்டேனா..! என்று நினைத்துக் கோபம் கொள்ள.. அவள் என்னிடம் சொல்லாததும் சரியாகத்தான் இருக்கிறது..’ என்று புரிந்து கொண்டவனாக “அதெல்லாம் பரவாயில்லைடா, இதுவரை எப்படியோ.. ஆனா இனி நீ என்கிட்ட எதையும் தயக்கமில்லாமல் பேசலாம், கேட்கலாம்.. இப்போ நான் அங்கே இல்லை, உனக்கு தெரியும் தானே..! என்னால் இனி எல்லாமே செய்ய முடியும்..” என்று புன்னகையோடு கூற.. அவளும் அதை புரிந்து கொண்டதாக தலையசைத்தாள்.
****
அந்த வார இறுதியில் ஒரு பட பிரமோஷனுக்காக சென்று இருந்த நந்தினி அங்கே மயங்கி விழ.. நிதின் தான் அவளை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். செல்லும் வழியிலேயே விநாயக்கிற்கு தகவல் கொடுக்க.. அவனும் அங்கே விரைந்து வந்தான்.
அதற்குள் அவளை பரிசோதித்து முடித்திருந்த மருத்துவர், நந்தினி தாயாக போகும் தகவலை சொல்ல.. சந்தோஷ அதிர்வில் பேச்சற்று நின்று விட்டான் விநாயக்.
அதே நேரம் இங்கு வந்தவுடன் விநாயக் பதட்டத்தோடு அபிராமிக்கும் சித்ராவுக்கும் அழைத்து சொல்லி இருக்க.. அவர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். விஷயம் கேள்விப்பட்டு இருவரும் தங்கள் வயதை மறந்து துள்ளி குதித்தனர்.
அதன் பின் நந்தினியை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டாடி தீர்த்து விட்டனர். அதே போல் அவளுக்கு தேவையானதை செய்து, கண்ணும் கருத்துமாக பார்த்தும் கொண்டனர்.
அதேநேரம் எப்போதும் போல் அபிராமி தன் கோவில் கச்சேரியிலும், மானஸா தன் படிப்பிலும், நந்தினி தயாரிப்பு நிறுவனத்திலும், விநாயக் வழக்கம் போல் தன் பரபரப்பான வேலையிலும் பிஸியாக ஓடிக் கொண்டிருந்தனர்.
எத்தனை வேலை இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பமாக எங்கேயாவது சென்று சந்தோஷமாக பொழுதை கழிப்பது அவர்களின் முக்கிய வழக்கமாக இருந்தது. அந்த நேரங்களில் சித்ராவையும் மறக்காமல் தங்களோடு சேர்த்துக் கொள்வார்கள்..
அன்று வெகு நாட்களுக்குப் பிறகு அப்படி கிடைத்த ஒரு நேரத்தை போக்க கடற்கரை பங்களாவுக்கு வந்திருந்தனர். அபிராமியையும் சித்ராவையும் ஏழு மாத வயிற்றோடு இருக்கும் நந்தினிக்கு அருகில் அமர வைத்துவிட்டு விநாயக் சமைத்துக் கொடுக்க.. மானு அவர்கள் இருக்கும் இடத்திற்கே அதை கொண்டு சென்று கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டாள்.
“அதெல்லாம் வேண்டாம், நீங்க ஏதாவது படம் பார்த்து சந்தோஷமா நேரத்தை போக்குங்க.. நாங்க சமைக்கிறோம்..” என சித்ரா சொல்லியும் “எல்லா நாளும் அதை தானே நீங்க செய்றீங்க..? ஒரு நாள் ஓய்வில் இருங்க..” என்றான் விநாயக்.
“நீங்க மட்டும் என்ன ஓய்வா வீட்டிலா இருக்கீங்க..? தொடர்ந்து வேலை செஞ்சுட்டு தானே வரீங்க.. உங்களுக்கும் ஓய்வு தேவை தானே..!” என்றார் சித்ரா.
“இது ஒரு நல்ல கேள்வி, ஆனா நீங்க எல்லா நாளும் செய்யும் அதே சமையலை இன்னைக்கும் செய்யறேன்னு சொல்றீங்க.. நான் அப்படி இல்லையே, இத்தனை நாள் செஞ்ச வேலை வேற.. அதிலிருந்து ஒரு மாற்றமா நான் இதை செய்யறேன்.. அதனால் எனக்கு இது சந்தோஷமா தான் இருக்கு..” என்று அவர்களை அமைதியாக்கி விட்டு அன்று முழுக்க அவனே அனைத்தையும் பார்த்துக் கொண்டான்.
இதெல்லாம் சித்ராவுக்கு அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது. இப்படி எல்லாம் அவர்கள் ஒரு நாளும் விடுமுறையை ரசித்து மகிழ்ந்தது இல்லை. எல்லா நாளையும் போல அதுவும் ஒரு நாள் போல தான் கழியும். அப்படியெல்லாம் கடினமான நாட்களை கடந்து வந்திருந்த தன் மகளின் சந்தோஷமான வாழ்க்கையை எண்ணி அவருக்கு பல நேரங்களில் மனம் நெகிழ்ந்து போகும்.
இன்றும் அப்படியே பெரியவர்கள் இருவரும் பிள்ளைகளைப் பற்றி பேசியபடி வெளியில் தோட்டத்தில் அமர்ந்திருக்க.. உள்ளே மானு ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விநாயக் நந்தினியை அழைத்துக் கொண்டு மெல்ல கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தான். இப்போதெல்லாம் பெரும்பாலும் இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இருப்பதில்லை. நந்தினியும் தன் மனதில் தோன்றுவதை தயக்கமில்லாமல் கேட்கவும் பேசவும் தொடங்கி இருந்தாள்.
இப்போதும் அதே போல தன் பங்காக வந்த சொத்தை பற்றி பேசியவாறு அதை எப்படி எங்கு இன்வெஸ்ட் செய்வது என அவள் கேட்க.. அவனும் தான் யோசித்து வைத்திருந்ததை அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் இருவரும் அலைகளுக்கு மிக அருகில் அமர்ந்து கொள்ள.. “உங்களுக்கு எப்போ இந்த சொத்து பற்றி தெரிய வந்தது..?” என்றாள் நந்தினி. “ஹ்ம்ம் ஒரு அஞ்சு வருஷம் முன்னே இருக்கும்..” என அவன் கூறவும், “அப்போவே வா..?” என்றாள் திகைப்போடு நந்தினி.
“ஆமா ராதாகிருஷ்ணனோட லாயர் கேசவன் என்னை வேற ஒரு வேலையா பார்க்க வந்தார்..” என அவன் தொடங்கவும், வலிக்காமல் அவன் வாயில் மெதுவாக அடித்தவள் “இதென்ன பெரியவங்களை பெயர் சொல்லி கூப்பிடற பழக்கம்..?” என்று கண்டிப்போடு சொல்ல.. உடனே மறுத்து எதுவும் பேசாமல் தழைந்து வந்தவன் “சரி உங்க தாத்தா..” என்று மீண்டும் தொடங்க.. “அதென்ன எனக்கு மட்டும் தாத்தா, உங்களுக்கு அவர் யாராம்..?” என்றாள் நந்தினி.
“அவர் எனக்கு யாரும் இல்லை யது, அது உனக்கும் தெரியும்.. இப்போ வேற விஷயத்துக்கு போவோமா..?” என்று அவன் முறைக்கவும் “சரி சொல்லுங்க கேட்போம்..” என்றாள் நந்தினி. இப்படித்தான் இருவரும் மற்றவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அதை தொடர்வதெல்லாம் இல்லை.. உடனே மாற்றிக் கொண்டு புரிதலோடும் காதலோடும் தங்கள் வாழ்க்கையை அழகாக கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
“லாயர் கேசவனோட மகன் ஒரு மிகப்பெரிய கேஸில் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டிருந்தான்.. அந்த வழக்கில் மட்டும் அவன் உள்ளே போய் இருந்தா குறைந்தது பதினாலு வருஷம் வெளியே வந்து இருக்கவே முடியாது.. நான் எதுவும் செய்யலைன்னு என்கிட்ட சத்தியம் செஞ்சு பேசும் போது அவன் கண்ணில் தெரிஞ்ச உண்மையை மட்டுமே ஆதாரமா வெச்சு நான் சில விஷயங்களை தோண்டி பார்க்கும் போது தான் இது அவன் முன்னாள் மனைவியோட மிகப்பெரிய பழிவாங்கும் திட்டம்னு எனக்கு புரிஞ்சது..
அதிலிருந்து எந்த பிரச்சனையும் இல்லாம அவனை நான் தான் வெளியே வர உதவி செய்தேன்.. அந்த நன்றிக்கு தான் இந்த விஷயத்தை பற்றி கேசவன் என்கிட்ட சொன்னார், உங்க வேதவல்லி இந்த உயில் விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு இவரை மிரட்டி வெச்சிருந்து இருக்காங்க..” என்றவன்
“இதை பத்தி தெரிஞ்ச பிறகு தான் நான் இன்னும் உன் விஷயத்தில் கவனமா இருந்தேன்.. உங்க வேதாம்மாவுக்கு நீ என்கூட பேசறதோ பழகுறதோ லேசா தெரிஞ்சா கூட போதும் இன்ஸ்டன்ட் வில்லியா மாறி என்ன முடிவு வேணாலும் எடுப்பாங்க..
நான் சொத்து விஷயத்தில் சொல்லலை, என் வேலையை பற்றி உனக்கே நல்லா தெரியும்.. நான் எப்போ எங்கே இருப்பேன்னு தெரியாது, உன்னால் என்னை தொடர்பு கொள்ள முடியாத ஒரு நேரத்தில் அவங்க தன் வில்லத்தனத்தை அவிழ்த்து விட்டிருந்தா உன்னால் அதைத் தாங்கி இருக்கவே முடியாது..
சொத்து விஷயத்தில் அவங்க வேற மாதிரி, யாரையும் என்னவும் செய்ய தயங்க மாட்டாங்க.. நிதினை உனக்கு கல்யாணம் செஞ்சு வெச்சு இருப்பாங்கன்னு அப்போ எனக்கு தோணலை.. ஏன்னா என்கிட்ட அப்படி பேசுவானே தவிர நிதினுக்கு அப்படி ஒரு எண்ணமே உன் மேலே இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்..
அதனால் என்ன செய்வாங்க, என்னன்னு நமக்கு தெரியாது.. ஒருவேளை அப்படி ஒரு சிக்கலில் நீ மாட்டி இருந்தா ரொம்ப மோசமாகி இருக்கும் நிலைமை.. நான் இங்கே இருந்தா அதை நடக்க விடமாட்டேன் தான்.. ஆனா ஒருவேளை இல்லைனா.. இதையெல்லாம் யோசிச்சு தான் உன் பக்கமே நான் திரும்பாம இருந்தேன்.. இது அவங்களுக்கு பயந்து இல்லை, ஆனா அம்மாவை மாதிரி வாய்ப்பு கொடுத்து மாட்டிக்காம சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்..” என அவன் சொல்லவும், இது போல் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் அவன் தன்னை மட்டுமே யோசித்து தன்னிடம் இருந்து விலகி இருந்ததை புரிந்து கொண்டிருந்தவள், நெகிழ்வோடு விநாயக் தோளில் சாய்ந்தாள்.
*
அடுத்த மூன்றாம் மாதம் நள்ளிரவில் நந்தினிக்கு பிரசவ வலி எடுக்க.. விநாயக் அவளைக் கைகளில் தூக்கிக் கொண்டு ஓடினான். எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என டிரைவரை அங்கேயே தங்க வைத்திருந்தார் அபிராமி. ஒருவேளை விநாயக் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அவளுக்கு வலி எடுத்தால் பயன்படுமென்று எண்ணியே அவர் இதை செய்திருந்தார்.
அதில் வேகமாக டிரைவர் காரை எடுக்க.. மொத்த குடும்பமும் நள்ளிரவில் மருத்துவமனை சென்று இறங்கியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் விநாயக் மஹாதேவ் - யது நந்தினி இருவரின் பெண்ணரசி இந்த பூமியில் ஜனித்து இருந்தாள்.
தனக்கு பேத்தி பிறந்ததை கேட்ட நொடி முதல் அபிராமியை கைகளில் பிடிக்க முடியவில்லை. நந்தினியோடு பிரசவ அறையிலேயே இருந்த விநாயக் குழந்தையை அங்கேயே கையில் வாங்கி, கொஞ்சி முதலில் நந்தினிக்கும் பின் குழந்தைக்கும் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தவன், தானே குழந்தையை வெளியே கொண்டு வர.. அபிராமிக்கும் சித்ராவுக்கும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.
மானஸா அத்தை ஆகிவிட்ட சந்தோஷத்தை துள்ளி குதித்துக் கொண்டாடிக் கொண்டிருக்க.. மறுநாள் நிதின் மட்டும் குழந்தையை பார்க்க வந்திருந்தான்.
புஷ்பாவுக்கும் ரகோத்தமனுக்கும் கூட இங்கு வந்து குழந்தையை பார்க்க ஆர்வமாக தான் இருந்தது. ஆனால் தேவையில்லாத சங்கடங்களை தவிர்க்கவே அவர்கள் வராமல் இருந்து விட்டனர்.
இருவரும் பசியாறும் நேரம் மட்டுமே குழந்தையை நந்தினியிடம் கொடுத்து மற்ற நேரங்களில் கீழேயே விடாமல் தங்கள் கைகளிலேயே வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். நந்தினி வீடு திரும்பிய பிறகும் கூட அப்படியே தான் தொடர்ந்தது. சித்ரா நந்தினியை பார்த்துக்கொள்ள.. குழந்தையை அபிராமி பார்த்துக் கொள்வார்.
மறுநாள் இது அப்படியே மாறி அபிராமி நந்தினியை பார்த்துக்கொள்ள.. சித்ரா குழந்தையை பார்த்துக் கொள்வார். விநாயக் வீட்டில் இருக்கும் நேரம் அவன் கைகளில் இருப்பாள் பெண்ணரசி.
“நீங்க இரண்டு பேரும் எங்கே வேணாலும் போங்க.. வேலைன்னு ஓடுங்க, என்ன வேணா செய்ங்க.. எவ்வளவு ஜாலியா வேணும்னாலும் இருங்க, இந்த குட்டி செல்லத்தை மட்டும் என்கிட்ட கொடுத்துடுங்க.. நான் வளர்த்துக்கிறேன்..” என்று அபிராமி தினம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது அத்தனை சந்தோஷம். தன் மகளுக்கு செய்து பார்க்க முடியாததை எல்லாம் பேத்திக்கு செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்..
இதில் இரு பாட்டிகளின் செல்லமாக அவர்களின் கைகளில் சமத்தாக இருந்த மகளை நந்தினி தன் அறையிலிருந்து நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருக்க.. அவள் அருகில் அமர்ந்திருந்த விநாயக் லேசாக நந்தினியின் தோளை இடித்து ‘என்ன..?’ என்று விழிகளால் வினவினான்.
“இந்த இரண்டு பாட்டிகளும் செய்யும் அமர்க்களம் இருக்கே.. என்கிட்டே பாப்பாவை இன்ஸ்டால்மெண்ட்ல தான் கொடுக்கறாங்க.. என்னால் பாப்பா கூட விளையாடவே முடியலை தெரியுமா..?” என அவள் மெல்லிய குரலில் குறைப்பட்டுக் கொள்ளவும், “அவ்வளவு தானே..! விடு, அவங்க அந்த பாப்பாவை வளர்க்கட்டும்.. நாம உன் கூட விளையாட இன்னொரு பாப்பாவை ரெடி செஞ்சுக்கலாம்..” என்று கண் சிமிட்டினான் விநாயக்.
அதில் செல்லமாக நந்தினி அவனை முறைக்கவும், அதற்கு நேர் மாறாக அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தவன், “உனக்கு டிவின்ஸ் ஓகேவா..?” என கிசுகிசுப்பாக கேட்டவாறே அவளின் முகத்தை நோக்கி குனிந்தான்.
நிறைந்தது
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா