All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மௌனமாய் நீ காதலாய் ...
 
Notifications
Clear all

மௌனமாய் நீ காதலாய் நான்..!! - (Story Thread)

Page 4 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 24
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
1786208404-IMG-20260808-WA0003.jpg
 
 
மௌனம் - 25
 
தன் அறையில் அமர்ந்திருந்த மானசாவுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. சற்று முன் அவள் கண்ட காட்சியின் தாக்கமே அவளுக்கு இன்னும் குறையவில்லை.
 
 
ஏதோ சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததில் உண்டான யோசனையோடே தன் பால்கனியில் வந்து நின்றவளுக்கு கீழே கண்ட காட்சியில் ஒரு நொடி தலையே சுற்றியது.
 
 
விநாயக் மற்றும் நந்தினி இருவரும் மாலையும் கழுத்துமாக வந்து நின்றிருக்க.. அவளின் கையை பிடித்தப்படி வேதவல்லியிடம் கோபமாக கத்திக் கொண்டிருந்தான் விநாயக். 
 
 
‘அவளுக்கு அவர்கள் இருவரையும் இப்படி சேர்த்து வைத்து பார்த்ததை கண்டு அதிர்வதா..! இல்லை வேதவல்லியிடம் இப்படி பேசுவதைக் கண்டு திகைப்பதா..!!’ என்று கூட தெரியவில்லை. இதுவரை வேதவல்லி பேசுவதை மட்டுமே அனைவரும் கேட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தே வளர்ந்திருந்தவளுக்கு விநாயக்கின் இந்த ஆக்ரோஷமான மிரட்டல் குரல் எல்லாம் புதிதாக இருந்தது.
 
 
அதிலேயே அசையாமல் நின்று விட்டவளுக்கு அதன் பிறகு நடந்த எதுவும் மனதில் பதியவே இல்லை. விநாயக் இங்கிருந்து கிளம்பிச் சென்ற பிறகும் வேதவல்லி கத்திக்கொண்டே இருக்க. ரகோத்தமன் அவரை சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் ரகோத்தமன். 
 
 
இதையெல்லாம் அசையாமல் பார்த்தபடி நின்றிருந்தவள், அப்படியே திகைப்பு மாறாமல் வந்து அமர்ந்து வெகு நேரம் ஆகிய பிறகும் கூட அவளுள் நடப்பதெல்லாம் நிஜம்தானா என்ற திகைப்பு மிச்சம் இருந்தது. தனக்கு மிகவும் பிடித்த இருவர் திருமணம் செய்து கொண்டது அவளுக்கு அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது.
 
 
‘நாம பார்த்தது நிஜம்தானா..? நிஜமாவே வினய் அண்ணா நந்து அக்காவை கல்யாணம்..’ என யோசித்தவள், பட்டென தன் வாயில் போட்டுக்கொண்டு “அய்யோ இனி அவங்க அக்கா இல்லை, அண்ணி..” என சொல்லிக்கொள்ள.. அவளுக்கே சந்தோஷத்தில் சிரிப்பு கூட வந்தது. 
‘இது எப்படி..? இது எப்படி நிஜமாச்சு..! இது சாத்தியம் தானா..? அவங்க இரண்டு பேரும் காதலிச்சாங்களா..! நிஜமாவா..? நமக்கு எதுவும் தெரியலையே..! எப்போ எப்படி இதெல்லாம் நடந்திருக்கும்..?’ என்று அவளுள் விடை தெரியா ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்க.. மனமும் ஒரு வகையில் சந்தோஷ பரபரப்பில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது. 
 
 
**
 
 
விநாயக் அறைக்குள் அமர்ந்திருந்த நந்தினிக்கு கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்தது. எதிலோ பெரிதாக தோற்றது போல் மனம் தவித்துக் கொண்டிருக்க.. அது கொடுக்கும் ஏமாற்றத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 
 
 
‘அப்போ இந்த கல்யாணம் எல்லாம் வெறும் பழிவாங்க தானா..? என்னை பத்தி ஒரு நிமிஷம் கூட அவர் யோசிக்கலயா..! நான்.. என் காதல் எதுவுமே அவருக்கு முக்கியம் இல்லையா..?’ என அவள் மனம் கேட்டுக் கொண்டே இருக்க.. அதற்கான பதில் தெரியாமல் தான் அமர்ந்திருந்தாள் நந்தினி. 
 
 
திடீரென தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டு வந்து தன் முன் நின்ற விநாயக்கை கண்டு எத்தனை சந்தோஷமாக சம்மதித்திருந்தாள் நந்தினி. ஆனால் அதெல்லாம் வெறும் பழிவாங்க தான் என தெரிய வந்த போது மனம் சுக்கு நூறாக உடைந்து இருந்தது.
 
 
மற்றவர் முன் கேட்க முடியவில்லை என்றாலும் இங்கே அறைக்குள் வந்தவுடன் ‘ஏன் இப்படி செய்தாய்..? இது நிஜம் தானா..!’ என விநாயக்கின் சட்டையைப் பிடித்து கேட்டு விட அவளுக்கு ஒரு நொடி ஆகாது.. ஆனால் ஆம் அப்படித்தான், இது உன்னை விரும்பி நடந்த திருமணம் இல்லை.. வேதவல்லியை பழிவாங்க நடந்தது..’ என்று தன் முகத்தைப் பார்த்து விநாயக் மேலும் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டால், அதன் பின் அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதே..!
 
 
அதற்கு உண்மையா பொய்யா என தெரியா ஒரு திரிசங்கு நிலையிலேயே இருந்து விடலாம் என்பது போல் தோன்ற.. அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டவளின் கண்ணீர் கூட ஒரு கட்டத்தில் வற்றி காய்ந்து விட்டிருந்தது.
 
 
ஆனால் அவளின் நிலையில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எதிரில் தெரிந்த சுவரை வெறித்துக் கொண்டு கொஞ்சமும் அசைவின்றி அப்படியே அமர்ந்து விட்டாள் நந்தினி. 
 
 
சட்டென நந்தினி அப்படி பேசி விட்ட கோபத்தில் அங்கிருந்து வெளியேறி இருந்த விநாயக், தன் உடற்பயிற்சி அறையில் இரு கைகளையும் தலைக்கு கொடுத்து விட்டதை வெறித்தபடி படுத்திருந்தான். 
 
 
‘என்ன வார்த்தை சொல்லிட்டா..? யாரையோ பழிவாங்க நான் இவளை கல்யாணம் செஞ்சுக்கணுமா..! அப்படித்தான் செஞ்சுக்கணும்னா இத்தனை வருஷம் நான் ஏன் தள்ளி இருக்கணும்..? கொஞ்சம் கூட யோசிக்க தெரியலை, படிச்ச முட்டாள்..’ என்று அவன் மனம் கொதித்துக் கொண்டு இருந்தது. 
 
 
அதேநேரம் ‘அவ அவசர புத்தி தான் உனக்கு தெரியுமே..! அப்புறம் இப்படி கோபப்பட்டா என்ன அர்த்தம்..?’ என அவனின் மற்றொரு மனம் அவளுக்காக பரிந்து பேச.. ‘அது தெரிஞ்சு தானே இத்தனை நாள் தள்ளி நின்னேன்.. இன்னைக்கு எத்தனை சந்தோஷமான நாள்..? எப்படியெல்லாமோ நடக்கணும்னு நினைச்சுருந்தா எங்க கல்யாணம் இப்படி நடந்தது கொஞ்சம் வருத்தம் தான்.. ஆனாலும் எங்க காதல் கை கூடி வந்திருக்கு, அது கூட அவளுக்கு புரியலை.. சரி பேசி புரிய வைக்கலாம்னா அதுக்கும் வாய்ப்பே கொடுக்கலை.. இவளை வெச்சுட்டு..’ என சலித்துக் கொண்டே எழுந்தவன், முதல் நாளே அவளிடம் கோபப்பட்டதை எண்ணி வருந்தியவனாக நந்தினியை சமாதானம் செய்ய நினைத்து மீண்டும் அறைக்கு சென்றான் விநாயக். 
அவள் எதுவும் சாப்பிட்டு இருக்கவில்லை என்பதால் அபிராமி தயார் செய்து வைத்திருந்த உணவை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தவனை அவள் பார்வையை திருப்பிக் கூட பார்க்கவில்லை. அவளின் கோபம் புரிந்தாலும் அமைதியாகவே சென்று நந்தினியின் முன் உணவை வைத்தவன், “நாம கொஞ்சம் பேசலாமா யது..?” என்றான்.
 
 
“இன்னும் என்ன பேசணும்..? அதான் பேச வேண்டியதை எல்லாம் அங்கேயே பேசிட்டீங்களே..!” என அவள் சொல்லவும், இழுத்து பிடித்த பொறுமையோடு “அங்கே பேசுனதை கேட்ட தானே.. அதே மாதிரி இங்கே பேசுவதையும் கொஞ்சம் கேளு..” என்றான் விநாயக். 
 
 
“வேண்டாம் சாமி, ஒரு இடத்தில் பேசுனதை கேட்டதே போதும்.. அதுவே காலம் முழுக்க இங்கே அப்படியே இருக்கும்..” என அவள் தன் இதயத்தை தொட்டு காண்பிக்க.. “யது வழக்கத்தை மீறி ஒண்ணு நடக்குதுனா ஏன் எதுக்குன்னு யோசிக்க மாட்டியா..? கொஞ்சம் பொறுமையாக இ,ரு அவசரப்படாதே..!” என்றான் அமைதியான குரலிலேயே விநாயக்.
 
 
“அதுதான், அதைத்தான் யோசிக்க தெரியாத முட்டாளா இருந்து இருக்கேனே..! கண்ணை மூடிட்டு நீங்க கேட்டதும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்க கூடாது தான்.. நான் செஞ்ச அந்த தப்புக்கு நீங்க நல்ல பாடம் சொல்லிக் கொடுத்துட்டீங்க, ரொம்ப நன்றி..” என அதுவரை அடங்கி இருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க கையெடுத்து அவனை பார்த்து கும்பிட்டாள் நந்தினி. 
 
 
இது என்ன முட்டாள்தனமான பிடிவாதம்..? அவன் சொல்ல வருவதை கேட்கவே தயாராக இல்லை என்பது போல் அவள் பேசுவதும் நடந்து கொள்வதும் அவனுக்கு அத்தனை கோபத்தை கொடுத்தது. இப்போது என்ன பேசினாலும் தன் வார்த்தையில் கட்டுப்பாடு இருக்காது, சட்டென ஏதாவது அவள் மனம் வருந்தும்படி பேசி விடுவோம் என்று புரிய.. அவளையே முறைத்துப் பார்த்தபடி நின்றான் விநாயக். 
 
 
‘தன்னை திருமணம் செய்ய சம்மதித்ததே தவறு என்பது போல் அவள் சற்றுமுன் பேசியது அவனுக்கு அத்தனை வருத்தத்தை கொடுத்தது.. ஆனால் அவள் பேசியதின் அர்த்தம் அது இல்லை.. அவள் உணர்ந்து அதை சொல்லவில்லை என அவனுக்கு புரிந்தது போல், அவளுக்கு ஏன் என்னை புரியவில்லை..?’ என்ற ஆதங்கம் அவனுள் நிறையவே இருந்தது.
 
 
அதில் அமைதியாகவே அவளிடம் இருந்து நகர்ந்தவன், இப்போதைக்கு எதையும் பேசி தொந்தரவு செய்ய விரும்பாமல் “சரி நேரமாகுது சாப்பிட்டு படு..” என்றான்.
 
 
“எனக்கு வேண்டாம்..” என நந்தினி முகத்தை திருப்பிக் கொள்ள.. பொறுமையற்று அவளை பார்த்தவன் “நீ வந்ததில் இருந்து ரூமுக்குள்ளேயே இருக்கே.. சாப்பிடலைன்னு அம்மா ரொம்ப கவலைப்படறாங்க, நீ தப்பு செஞ்சதாவே இருக்கட்டும்.. என்னை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு நீ எடுத்த முடிவு தப்பாகிடுச்சுன்னே வெச்சுக்கோ.. இனி என்ன செய்ய போறே..? இதை மாற்ற நினைக்கிறாயா..? இல்லை இப்படி நீ சாப்பிடாம உண்ணாவிரதம் இருக்கறதில் தான் ஏதாவது மாறிடுமா..! எதுவா இருந்தாலும் இங்கே தான் இருந்தாகணும், அதுக்கு தகுந்தது போல இருக்கிறது தான் உனக்கு மட்டும் இல்லை எல்லாருக்குமே நல்லது.. யார் சொல்ல வர்றதையும் கேட்காம புரிஞ்சுக்காம இப்படி உட்கார்ந்து அழுதுட்டு தான் இருக்க போறேன்னா தாராளமா செய்.. ஆனா குளிச்சு டிரஸ் மாத்திட்டு சாப்பிட்டு பொறுமையா செய்.. யாரும் உன்னை தடுக்கலை..” என்று விட்டு மாற்று உடையை எடுத்து கொண்டு வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தான் விநாயக்.
 
 
அதில் அவன் சென்ற திசையை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதும் அவன் வார்த்தைகளில் இருந்த பொருள் புரிவதற்கு பதில் விநாயக்கின் கோபம் மட்டுமே தெரிந்தது. 
 
 
‘எவ்வளவு ஈசியா சொல்லிட்டு போயிட்டாங்க.. நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் அழு, ஆனா என்னை தொந்தரவு செய்யாம அழுன்னு சொல்றாங்கனா, நான் எந்த வகையிலும் அவருக்கு முக்கியமில்லைன்னு தானே அர்த்தம்..? அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்..?’ என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள், “அதான் அங்கேயே தெளிவா சொல்லிட்டாங்களே, இது வேதாம்மாவை வருத்தப்பட வைக்க பழிவாங்க நடந்த கல்யாணம்னு, போதும்.. இத்தனை வருஷமா ஆசைப்பட்டு கற்பனையில் காதல் வளர்த்து காத்திருந்தது எல்லாம் போதும்..” என மெலிதாக அவள் புலம்பியபடி நின்றிருக்கும் போதே, குளித்து முடித்து வெளியில் வந்தான் விநாயக்.
 
 
அவன் பார்வையில் வேறு எதுவும் பேசாமல் நந்தினி அமைதியாக தலையை குனிந்து கொள்ள.. அங்கிருந்த உடை மாற்றும் அறையை காண்பித்தவன் “இந்த கபோர்டில் உனக்கான டிரஸ் எல்லாம் இருக்கு.. அவசரத்துக்கு கொஞ்சம் தான் எடுத்தேன், மீதி என்ன தேவையோ அப்புறமா வாங்கிக்கலாம்.. போய் குளி..” என்று இப்போது இளக்கமே இல்லாத லேசான கட்டளை குரலில் சொல்லிவிட்டு உறங்க தயாரானான் விநாயக்.
 
 
அவன் சொல்லியதிலேயே லேசாக திகைத்தவள், அங்கு சென்று பார்க்க.. இவளுக்கான உடைகள் தயாராக இருந்தது. இதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் பல நாள் திட்டமிட்டே அவன் தன்னை திருமணம் செய்து கொண்டிருப்பதாகவே நினைத்தவள், வருத்தத்தோடு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளியல் அறைக்குள் நுழைய.. அவள் உணர்வுகள் புரிந்து நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவன் “இனி நிறைய பொறுமை வேணும்டா வினய் உனக்கு..” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சென்று படுத்து விட்டான்.
 
 
பார்த்த நொடி முதல் அவனுக்குள் வந்து விட்டிருந்தவள், இன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவன் மனைவியாக முழு உரிமையோடும் உறவோடும் இந்த அறைக்குள் முதல் முறையாக வந்திருக்கிறாள். அதை அனுபவித்து ரசிக்க முடியாத மனநிலைக்கு தன்னை அவள் கொண்டு வந்திருப்பதில் உண்டான மன போராட்டங்களோடு விழி மூடி படித்திருந்தான் விநாயக்.
 
 
சில நிமிடங்களுக்கு பின் குளித்து முடித்து வெளியில் வந்தவள், எதைப்பற்றிய கவலையும் இல்லாதது போல் உறங்கிக் கொண்டிருப்பவனையே சில நொடிகள் நின்று வெறுமையாக பார்த்து விட்டு திரும்ப.. அங்கு விநாயக் கொண்டு வந்து வைத்திருந்த உணவு அப்படியே இருந்தது. 
 
 
அதை சாப்பிடும் மனது அவளுக்கு துளியும் இல்லை. ஆனால் அபிராமி கொடுத்து அனுப்பியதாக விநாயக் சொன்னது நினைவுக்கு வரவும், இதை சாப்பிடாமல் இருந்து அவரின் மனதை நோகடிக்க விரும்பாமல் மெல்ல அதை சாப்பிட தொடங்கினாள் நந்தினி.
 
 
அடுத்து அவளுக்கு எங்கு உறங்குவது என்பது பெரும் பிரச்சனையானது. படுக்கையில் அவன் அருகில் சென்று படுக்க லேசான தயக்கம் உண்டாக.. பார்வையை அந்த இடம் முழுக்க சுழற்சியவள், அங்கு பெரிய சோபா போல் எதுவும் இல்லாததை கண்டு அடுத்து என்ன செய்வது என்ற யோசனையோடு நின்றிருக்க.. “இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் நிற்கப் போறே..? இன்னைக்கு இல்லைனாலும் கொஞ்சம் கொஞ்சமா இந்த வாழ்க்கையை ஏற்க பழகு.. இப்போ அமைதியா படுத்து தூங்கு..” என்றான் அவளை திரும்பியும் பார்க்காமல் விழிகளை கூட திறக்காமல் விநாயக்.
 
 
தன் மன உணர்வுகளை புரிந்து கொண்டது போல் அவன் பேசியதிலேயே மெல்ல எட்டிப் பார்த்தவள், விழிமூடி விநாயக் படுத்து இருப்பதைக் கண்டு ‘இவங்களுக்கு எப்படி நான் என்ன நினைக்கறேன்னு தெரிஞ்சது..?’ என மனதிற்குள் நினைத்தபடியே லேசான தயங்கத்தோடு அவனின் மறுபக்கம் வந்து படுத்துக்கொண்டாள் நந்தினி.
 
 
*
 
 
இந்தத் திருமணத்தை அபிராமி எந்த அளவு அமைதியாக ஏற்றுக் கொண்டாரோ.. அதற்கு நேர் மாறாக வேதவல்லியின் வீடு பெரும் போர்க்களமாக மாறி இருந்தது. 
 
 
சிறுவயதில் இருந்து இத்தனை செய்தும் கொஞ்சமும் நன்றி இல்லாமல் நந்தினி இப்படி நடந்து கொண்டதாக சொல்லி கத்திக்கொண்டு இருந்தவர், பெண்ணை சரியாக வளர்க்கத் தெரியவில்லை என சித்ராவையும், தன்னை பழிவாங்க நினைப்பவனுடன் செல்லும் அளவுக்கு அவளுக்கு இங்கு என்ன குறை வைத்தோம் என்று நந்தினியையும், இப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து சுற்றுவதை அறிந்து கொள்ளாமல் பொறுப்பற்று இருந்ததற்காக ரகோத்தமனையும், வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்காமல் விட்டதற்காக புஷ்பாவையும் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் வசை பாடிக் கொண்டிருந்தார்.
 
 
எப்போதுமே வேதவல்லிக்கு வார்த்தைகளில் வரைமுறை இருக்காது கோபம் வந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் என்ன வேணுமானாலும் பேசக்கூடியவர், இன்று நடந்திருந்த விஷயங்கள் வேறு அவரை கோபத்தில் கொந்தளிக்க செய்து கொண்டிருக்க.. பேச்சுக்களும் அதற்கு ஏற்றது போல் மிக மோசமாகத்தான் வந்தது.
 
 
அதே நேரம் சோர்வாக வீட்டிற்குள் நுழைந்த நிதின் அங்கு இருந்த கனமான சூழ்நிலையைக் கண்டு விழிகளை சுருக்கினான். வீட்டில் இருந்த ஒருவரின் முகமும் சரியில்லை. புஷ்பாவும் சித்ராவும் அழுதழுது வீங்கிய முகத்தோடு இருக்க.. ஏதோ நடக்கக்கூடாது நடந்தது போல் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தார் ரகோத்தமன். வேதவல்லியை பற்றி சொல்லவே வேண்டாம், ஆத்திரத்தில் முகம் ரத்தமென சிவந்திருந்தது. 
 
 
இதைப் பார்த்தவாறே உள்ளே நுழைந்தவனை கண்ட வேதவல்லி “இங்கே இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு.. நீ எங்கேடா போய் தொலைஞ்சே..?” என்று கத்த.. “என்னாச்சு..?” என்றான் நிதின்.
 
 
“என்ன நொன்னாச்சு..? வீட்டில் இருக்க ஒருத்தி என்ன செய்றான்னு கூட பாக்காம ஆம்பளையா நீங்க இரண்டு பேரும் எதுக்கு இந்த வீட்டில் தண்டமா இருக்கீங்க..!” என்று எடுத்ததும் வேதவல்லி கத்தியதில் எரிச்சலானவன், “முதலில் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க..” எனவும் “ஹ்ம்ம் சொல்றாங்க சுரைக்காயில் உப்பு இல்லைன்னு..” என வேதவல்லி சிடுசிடுக்க.. “என்னன்னு தான் யாராவது சொல்லுங்களேன்..” என்றான் எரிச்சலோடு நிதின். 
 
 
அதில் சுருக்கமாக ரகோத்தமன் அனைத்தையும் சொல்லி முடிக்க.. “என்ன இதெல்லாம் எப்போ நடந்தது..?” என்று அவன் அதிர்வோடு கேட்க.. “ஹாங் நீ வீட்டில் நடக்கறதை பத்தி கவலை இல்லாம தண்டமா ஊர் சுத்திட்டு இருந்தப்போ..” என்றார் இடக்காக வேதவல்லி.
 
 
இதில் அவரை முறைத்தவன் சட்டென தன் அலைபேசியை எடுத்து நந்தினிக்கு அழைக்க முயல.. “யாருக்கு… அவளுக்கா..! இந்த வீட்டில் இருந்து இனி அவளை யாரும் கூப்பிடவே கூடாது.. நமக்கும் அவளுக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை..” என்று திட்டவட்டமான குரலில் வேதவல்லி கூற.. அப்படியெல்லாம் இதை விட முடியாது என அதை மறுத்து நிதின் பேச என்று அங்கு ஒரு கலவரம் வெடித்து கொண்டிருந்தது.
 
 
******
 
 
வெகு நேரம் விழித்தே இருந்ததாலோ என்னவோ நந்தினி மறுநாள் காலை கண் விழிக்கும் போது நன்றாகவே விடிந்து இருந்தது. பக்கத்தில் திரும்பி பார்க்க.. அங்கு விநாயக் இல்லை. 
 
 
இத்தனை அருகில் அவனை வைத்துக் கொண்டு அவனிடம் இருந்து விலகி இருக்க வேண்டி உள்ளதை எண்ணி உண்டான வருத்தமும் கவலையும் அவளுக்கு உயிர் வலியை கொடுத்துக் கொண்டு இருக்க.. விநாயக் மேல் பட்டுக்கொள்ளாமல் உறங்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்தவளுக்கு வெகுநேரம் உறக்கமே வரவில்லை.
 
 
இதைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பவனை வெகுநேரம் முறைத்துக் கொண்டே படுத்திருந்தவள், அதன் பின் எப்போது உறங்கினாலோ அவளுக்கே தெரியவில்லை. இப்போது கண்விழித்துப் பார்க்கும் போது விநாயக் அருகில் இல்லாததை எண்ணி நிம்மதி உண்டாவதற்கு பதில் வருத்தமே எழுந்தது. அவள் மனம் என்ன எதிர்பார்க்கிறது என்று நந்தினிக்கே புரியவில்லை.
 
 
விநாயக் அருகில் வந்தாலோ, பேசினாலோ அவனைப் பார்க்கவோ, பேசவோ பிடிக்கா ஒரு மனநிலை எழுகிறது.. அதுவே அவன் விலகிச் சென்றால் அதுவும் வலிக்கிறது.  
 
 
என்னதான் செய்வது எனப் புரியாமல் அவள் அப்படியே அமர்ந்திருக்க.. அதே நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் விநாயக். உடற்பயிற்சி செய்துவிட்டு வந்திருப்பான் போலும் கையில்லா டி-ஷர்ட், முட்டியை தொட்டும் தொடாமல் இருந்த ஷார்ட்ஸ் என்று தன் கையில் இருந்த துண்டை வைத்து வியர்வையை ஒற்றியபடி உள்ளே நுழைந்தவனை, அன்று தன்னை மறந்து பார்த்திருந்த நினைவு தான் அவளுக்கு வந்தது. 
 
 
அதில் தன்னை மீறி அவன் மேல் ஆவலாக படிய துடித்த விழிகளை கட்டுப்படுத்திக் கொண்டு திரும்புவதற்குள் நந்தினி தவித்து போனாள். அவளின் இந்த முயற்சி புரிந்ததோ இல்லையோ சிறு மென்னகையோடு நந்தினியை பார்த்தவன் “எழுந்தாச்சா.. குட் மார்னிங், அம்மா காலையில் கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க.. சீக்கிரம் ரெடியாகிடு..” என்றவன் அதற்கு மேல் உன்னிடம் எனக்கு எந்த பேச்சுவும் இல்லை என்பது போல் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
 
 
அவனின் இந்த விலகல் அளவுக்கு மீறி வலித்தது. அதில் விநாயக் சென்ற திசையையே அவள் பார்த்துக் கொண்டு இருக்க.. அடுத்த சில நிமிடங்களில் குளித்து முடித்து பாத்ரோப்புடன் வெளியில் வந்தவனை கண்கள் தெறித்து விழும் அளவுக்கு அதிர்வோடு பார்த்தவள், தவித்து தடுமாறி அவனை ஏறேடுத்தும் பார்க்காமல் பார்வையை தழைத்துக் கொள்ள.. அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் உடைமாற்றும் அறைக்குள் சென்று விட்டான் விநாயக்.
 
 
அதன் பிறகே நந்தினிக்கு தன் தவறு புரிந்தது. இவ்வளவு நேரத்தில் அவளுக்கான உடையை கூட எடுக்காமல் அமர்ந்திருந்தை எண்ணி தலையில் தட்டிக் கொண்டவள், அவன் தயாராகும் வேகத்தை பார்த்து நேரமாவதை உணர்ந்து இதற்கு மேலும் காத்திருக்க வேண்டாம் என்ற முடிவோடு குளியலறைக்குள் சென்றாள். 
 
 
அங்கே அவளுக்காகவே வைக்கப்பட்டது போல் ஒரு பாத்ரோப் இருப்பதைக் கண்டு ‘இதை எப்போ எடுத்து வெச்சுருப்பாங்க..?’ என்ற யோசனையோடே குளித்து முடித்து அவள் வெளியில் வருவதற்குள், அவன் முழுதாக தயாராகி பால்கனியில் யாரோடோ அலைபேசியில் பேசியபடி நின்றிருந்தான்.
 
 
விநாயக் அறைக்குள்ளேயே இருந்து தன்னை சங்கடப்படுத்த விரும்பாமல் விலகி அங்கே நின்று இருப்பது புரிய.. இதை எண்ணி சந்தோஷிப்பதா வருந்துவதா என தெரியா மனநிலையோடே தானும் வேகமாக தயாரானாள் நந்தினி.
 
 
நேற்று இருந்த கோபத்தில் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியாதது இன்று அவளுக்கு லேசாக மனதில் பதிந்து யோசனைக்குள்ளாக்கியது. அவளுக்கென விநாயக் வாங்கி வைத்திருந்த அத்தனையும் நந்தினி பல வருடங்களாக பயன்படுத்தும் அதே நிறுவனங்களின் பொருட்கள். 
 
 
அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் அவ்வளவு எளிதில் வேறு புது பொருட்களை உபயோகித்து விடமாட்டாள். அதில் உண்டான யோசனையோடே அலங்கார மேஜை முன் வந்து நின்றவள், அங்கு இருந்த நகை பெட்டியை யோசனையோடு பார்த்தாள்.
 
 
மெல்ல அதை திறந்து பார்க்க.. உள்ளே கெம்ப்பு கல் வைத்த ஆன்டிக் வகை நகை செட் இருந்தது. வெள்ளை மற்றும் சிகப்பு கற்கள் பொறித்த அந்த நகையை பார்க்கும் போதே அதன் மதிப்பை பறைசாற்றுவதாக இருந்தாலும் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்துப் போட்டுக் கொண்டு வந்திருப்பது போல் பார்ப்பவர்களுக்கு ஒரு நாளும் கண்ணை உறுத்தாது. 
 
 
சேலை அணிந்து கோவிலுக்கு செல்லும் புது மணப்பெண் அணிந்து கொள்ளக்கூடிய பொருத்தமான நகை தான். மெல்லிய பதக்கம் வைத்த ஒரு ஆரமும் அதே டிசைனில் செய்யப்பட்ட ஒரு கம்மலும் ஒரு ஜோடி வளையலும் அங்கே இருந்தது.
 
 
அதை அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்த விநாயக் “இது உனக்கு தான், அம்மா கொண்டு வந்து கொடுத்தாங்க.. நீ குளிச்சுட்டு இருக்கேன்னு சொன்னேன்.. இதை கோயிலுக்கு நீ போட்டுட்டு வந்தா சந்தோஷப்படுவேன்னு சொல்லிட்டு போனாங்க..” என்றவன், அதற்கு மேல் நீ போட்டுக்கொள் என்றும் வற்புறுத்தவில்லை.. போட்டுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று அபிராமி சொல்லி சென்றார் என்றும் சொல்லவில்லை.. இது இனி உன் விருப்பம், சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்பது போல் தன் அலைபேசியை அருகில் இருந்த மேஜை மேல் வைத்தவன், தன் போக்கில் உள்ளே சென்று ஏதோ செய்து கொண்டிருக்க.. அவன் சென்ற திசையை இரு நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றவள், பின் தலையை கிளிப் செய்து கொண்டு மெல்லிய அலங்காரத்தோடு தயாராக தொடங்கினாள்.
 
 
இறுதியாக அந்த நகை பெட்டியை பார்த்தவள், சிறு பெருமூச்சுடன் அதை கையில் எடுத்தாள். அதே நேரம் வெளியில் வந்த விநாயக் அங்கிருந்த இழுப்பறையில் இருந்து தன் பர்ஸ், வண்டி சாவி என்று எடுத்துக் கொண்டிருக்க.. முதலில் கம்மல் அணிந்தவள், அடுத்து வளையல் போட்டுக்கொண்டு இறுதியாக ஆரத்தை கையில் எடுத்தாள்.
பெட்டியில் வைத்துப் பார்த்த போது இருந்ததை விட அவள் அதை தன் மேல் வைக்கும் போது அத்தனை அழகாக கண்ணை பறித்தது அந்த நகை. நிச்சயம் விலை உயர்ந்ததாக தான் இருக்க வேண்டும் என அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
 
 
‘இதை நான் போட்டுக் கொண்டு தான் ஆக வேண்டுமா..? இதற்கு நான் தகுதியானவள் தானா..! ஏன் தேவ் அம்மா இப்படி எல்லாம் செய்யறாங்க..? அவங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணம் தானே இது..! அதை வைத்து கொஞ்சம் கூட அவர்களுக்கு கோபம் உண்டாகவில்லையா..? வேதவல்லி அளவுக்கு இல்லை என்றாலும் கோபமாக இரண்டு வார்த்தைகள் திட்டி விட்டால் கூட பரவாயில்லை என்று நந்தினியின் மனம் நினைத்தது.
 
 
அவரின் இந்த அன்பு தான் அவளுக்கு மேலும் குற்ற உணர்ச்சியை கொடுத்தது. இதில் லேசாக விரல்கள் நடுங்க ஆரத்தை அணிய முடியாமல் அவள் தடுமாற.. “கொடு நான் போடறேன்..” என்று அவளிடம் இருந்து அதை வாங்கி நந்தினிக்கு அணிவித்தான் விநாயக்.
 
 
தன் கையில் இருந்து ஆரத்தை அவன் வாங்கிக் கொண்டது முதல், இதோ இப்போது மெதுவாக நந்தினியின் கூந்தலை ஒதுக்கி அந்த ஆரத்தை அவளுக்கு விநாயக் அணிவித்துக் கொண்டிருப்பது வரை.. எதிரில் இருந்த கண்ணாடி வழியே அவனையே அவள் பார்த்துக் கொண்டிருக்க.. அப்போதே அவன் கைகளில் இருந்த காப்பு அவள் கண்ணில் பட்டது. 
 
 
முதலில் அதை சாதாரணமாக பார்த்தவள், பின் திகைத்து விழி விரிய அப்படியே அசையாமல் கண்ணாடி வழியே அவன் கைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு சில நொடிகளுக்குப் பிறகே உண்மை உரைக்க.. சட்டென திரும்பி “இது..?” என்று அவள் விநாயக்கின் கைகளை பிடிக்க வருவதற்குள் அவளுக்கு நகையை அணிவித்து முடித்து இருந்தவன் “நேரமாகுது அம்மா காத்திருப்பாங்க வா..” என்று விட்டு முன்னே செல்ல.. அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றிருந்தாள் நந்தினி.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
1786208617-IMG-20260808-WA0004.jpg
 
 
மௌனம் - 26
 
சில நொடிகள் தன் கண்ணில் கண்டதை நிஜமென நம்ப முடியாமல் சிலையென நின்று விட்டிருந்த நந்தினிக்கு அதன் பின்பே உயிர் வந்தது. அதில் வேகமாக விநாயக்கைக்குத் தேடி அவள் படிகளில் இறங்கி வர, அவனோ வெளிவாயிலில் தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தான். 
 
 
அங்கே ஓட்டமும் நடையுமாக நந்தினி அவனை தேடிச் செல்ல.. “பூஜைக்கு ஏற்பாடு செய்ய அம்மா முன்னேயே கிளம்பி போயிட்டாங்க, நமக்காக அங்கே காத்திருப்பாங்க.. நேரமாகுது சீக்கிரம் ஏறு..” என அவளை பேசவே விடாமல் அவன் முந்திக் கொண்டதில், வேறு வழியில்லாமல் விநாயக்கின் பின்னே ஏறி அமர்ந்தவளின் யோசனையெல்லாம் அவன் கரத்தில் பளபளத்துக் கொண்டிருந்த அந்த பிளாட்டினம் காப்பின் மீது தான் இருந்தது. 
 
 
வழியில் இதைப் பற்றி பேச நினைத்து இருமுறை முயன்றவளுக்கு மனதில் இருந்த அதீத பரப்பரப்பின் காரணமாக சரியான வார்த்தைகள் கூட கிடைக்கவில்லை. அவள் தன் மனதில் இருக்கும் கேள்வியை வார்த்தையாக கோர்த்து அவனிடம் சேர்ப்பதற்குள் கோவில் வந்து விட்டிருந்தது. 
 
 
இதில் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நந்தினி இறங்கி நிற்கவும், நேராக அங்கிருந்த பூக்கடையின் முன் சென்று நின்றவன் மல்லிகை பூவை வாங்கி அவளிடம் நீட்டினான். அவன் பின்னேயே வந்திருந்த நந்தினி விழிகளில் அத்தனை கேள்வியும் முகத்தில் உண்டான கலக்கமுமாக அவனைப் பார்க்க.. “நேரமாகுது யது..” என்றான் விநாயக். 
 
 
அதில் அமைதியாகவே அவனிடம் இருந்து பூவை வாங்கி கொண்டவள் அதை தலையில் வைத்தவாறே விநாயக்கை பின் தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்தாள். அங்கே பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்துவிட்டு இவர்களுக்காக காத்திருந்தார் அபிராமி. இருவரும் இப்படி ஜோடியாக இணைந்து வருவதைக் கண்டவரின் முகம் மலர்ந்தது.
 
 
“வாங்க வாங்க..” என இருவரையும் சந்தோஷமாக அவர் வரவேற்க.. அவரின் அருகில் சென்று விநாயக் நிற்க, அவனுக்கு பக்கத்தில் நின்றாள் நந்தினி. 
 
 
அடுத்து பூஜை ஆரம்பமாக.. அத்தனை நிறைவாக எல்லாம் நடந்து முடிந்தது. மகனின் வாழ்க்கையை எண்ணி மனதிற்குள் எத்தனை சஞ்சலங்களை சுமந்திருந்தாரோ தெரியவில்லை.. இன்று அவன் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனிடம் சரணடைந்திருந்தார் அபிராமி.
 
 
விநாயக் மற்றும் நந்தினியின் பேரில் நடந்து முடிந்த பூஜையை கண்ணாரக் கண்டு ரசித்தவரின் விழிகள் ஆனந்தத்தில் கலங்கி போனது. அபிராமி சிறப்பு பூஜைக்காக கொடுத்திருந்த பெரிய வெள்ளி தட்டை கொண்டு வந்து அர்ச்சகர் அவரிடம் நீட்டவும், “என் மருமககிட்ட கொடுங்க, இனி எல்லாம் அவதான்..” என நந்தினியின் பக்கம் கை காண்பித்தார் அபிராமி. 
 
 
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் ஒரு நொடி திகைத்த நந்தினி என்ன செய்வது எனப் புரியாமல் தடுமாறி நிற்கவும் “ஹ்ம்ம் வாங்கிக்கோ..” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் விநாயக். அதில் அவள் கையை மெதுவாக நீட்டவும், அவளின் சேலை முந்தியை எடுத்து அந்த கரங்களில் வைத்த அபிராமி “இப்படி வாங்கிக்கோடா..” என்றார்.
 
 
நந்தினியும் அதேபோல் செய்ய.. அடுத்து பூ குங்குமம் என்று அர்ச்சகர் ஒவ்வொன்றாக கொண்டு வந்து கொடுக்க.. தனக்கானதை வாங்கி வைத்துக் கொண்ட அபிராமி, விநாயக்கின் பக்கம் திரும்பி “நந்துக்கு நீயே வெச்சு விடு..” என்றார். இதில் அவன் மறுப்பேதும் சொல்லாமல் சொன்னதை செய்ய போக.. நந்தினிக்கு தான் லேசான குறுகுறுப்பு உண்டானது.
 
 
அவள் கனவில் நினைத்து ஏங்கியதெல்லாம் இன்று நிஜத்தில் நடந்து கொண்டிருக்க.. இதை சந்தோஷமாக ஏற்று அனுபவிக்க முடியாத ஏதோ ஒரு சஞ்சலம் அவளுள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் நேற்று அளவுக்கு அது அத்தனை வீரியமாக இருக்கவில்லை.. மனம் லேசாக தடுமாற அமைதியாகவே நந்தினி நின்றிருக்க.. அவள் நெற்றியிலும் வகிட்டிலும் அழுத்தமாக குங்குமத்தை வைத்தான் விநாயக். 
 
 
எல்லாம் முடிந்து மெதுவாக பிரகாரத்தைச் சுற்றி வந்து மூவரும் ஓர் இடத்தில் அமர்ந்திருக்க.. “என் மனசு இன்னைக்கு எவ்வளவு நிறைஞ்சு இருக்கு தெரியுமா..? இப்படி ஒரு நாள் உன் வாழ்க்கையில் வரவே வராதோன்னு நான் தினம் ஏங்கி தவிச்சு அழுது இருக்கேன்..” என்ற அபிராமியை இடையிட்டவன் “ஓ அப்போ அப்படியே என்னை சாமியாரா மாற்ற திட்டம் போட்டு இருக்கீங்க, அப்படித்தானே அபிராமி மம்மி..?” என்று கேலியாக கேட்டான் விநாயக்.
 
 
“ஆமா நாங்க போடறோம் திட்டம்.. நீ எல்லாம் முரட்டு சிங்கிளா தான் இருக்க போறேன்னு நான் முடிவு செஞ்சு ரொம்ப நாளாச்சு மகனே..!” என அவரும் கேலி செய்ய.. இருவரும் இப்படியே மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வம்பு இழுத்து பேசிக் கொண்டிருந்ததை அதிசயமாக பார்த்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தாள் நந்தினி. 
 
 
சில நிமிடங்களுக்கு பின் “சரிம்மா நேரமாகுது கிளம்புவோமா..? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” என்று விநாயக் சொல்ல.. “நீங்க கிளம்புங்க, நான் இப்படியே அம்மன் கோவில் போயிட்டு அப்புறமா வரேன்..” என்றார் அபிராமி. 
 
 
“இனி எங்க மம்மியை கையிலேயே பிடிக்க முடியாது..” என்று அப்போதும் வம்பு இழுத்து அவரின் கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டே அவன் எழுந்து நிற்க.. நந்தினி அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். “என்ன மேடம் கிளம்பும் ஐடியா இல்லையா..?” என்று அவளைப் பார்த்து விநாயக் கேட்கவும் “என்ன நானா..?” என்றாள் சிறுத்திகைப்போடு நந்தினி. 
 
 
“இல்லை, உன்னை இல்லை.. அதோ பக்கத்தில் இருக்காங்களே அவங்களை கேட்டேன்..” என்று அவளுக்கு பின் விநாயக் கையை காண்பிக்கவும், நந்தினியும் திரும்பி பின்னே பார்த்தாள். அதில் அவன் முறைக்கவும், நந்தினியின் இந்த அப்பாவி தனத்தை கண்டு சிரித்து விட்டார் அபிராமி.
 
 
“வினய் உன்னை தான்ம்மா கூப்பிடறான், எப்படியும் வீட்டுக்கு போய் யூனிபார்ம் மாத்திட்டு தான் கிளம்புவான்.. அதான் உன்னையும் கூப்பிடறான், நீ கிளம்பு நான் வர நேரமாகும்..” என அபிராமி சொல்லவும் ‘சரி’ என்ற தலையைசைப்போடு எழுந்து கொண்டாள் நந்தினி.
 
 
அபிராமியின் முன் இருந்த பூஜை தட்டை எடுத்துக் கொண்ட விநாயக் “டிரைவர்கிட்ட கொடுத்திடறேன்மா..” என்று விட்டு முன்னே நடக்க.. அவன் பின்னே சென்றவளின் பார்வை முழுக்க மீண்டும் அவன் காப்பின் மேல் மட்டுமே இருந்தது. 
 
 
இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அவனிடம் இதைப் பற்றி பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடே அவனோடு வீடு வந்து சேர்ந்தவளுக்கு பாவம் அதற்கான வாய்ப்பு அதன் பின் கிடைக்கவே இல்லை.
 
 
விநாயக் வீட்டை நெருங்குவதற்குள் மூன்று அழைப்புகள் அவனுக்கு வந்துவிட்டது. எதையும் ஏற்காமல் யார் என மட்டும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தவன், அடுத்த நொடி அலைபேசியை எடுத்து அடுத்தடுத்து யார் யாரோடோ பேசியவாறே சென்று உடைமாற்றிக் கொண்டு வெளியில் வர, அவனோடு பேச எண்ணி அறையில் கையை பிசைந்தபடி குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தவள் அதற்கான வாய்ப்பே கிடைக்காததில் உண்டான திகைப்போடு அவனை பார்த்தாள்.
 
 
அதில் அவளை கடந்து ஒரு தலையசைப்போடு கிளம்ப முயன்றவன், அந்தப் பார்வையில் அப்படியே நின்று அலைபேசியை ஒரு நொடி அணைத்துவிட்டு “அம்மா சீக்கிரம் வந்துடுவாங்க, தேவையில்லாம நிறைய யோசிச்சு குழப்பிக்காம அமைதியா சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. நான் எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது, முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வர பார்க்கறேன்..” என்று அவளின் தலையை மெதுவாக தடவி கொடுத்தபடியே கூறியவன், வேகமாக அங்கிருந்து கிளம்பி விட்டான். 
 
 
அவனின் இந்த அக்கறையான பேச்சிலும் அன்பான தொடுகையிலுமே அசையாமல் அப்படியே நின்று விட்டிருந்தவளுக்கு, அதன் பிறகே அவனிடம் கேட்க நினைத்தது நினைவுக்கு வந்தது. இதில் வேகமாக நந்தினி கீழிறங்கி வர, விநாயக் தன் இரு சக்கர வாகனத்தில் வெளிவாயிலை கடந்து சென்று கொண்டிருந்தான்.
 
 
இன்று அவன் அணிந்திருக்கும் இந்த காப்பு நந்தினி அவனுக்காக வாங்கியது போலவே இருந்தது. அன்று அத்தனை ஆசையோடு அவள் அதை விநாயக்கிடம் கொடுத்த போது அவன் அதை தூக்கி வீசி விட்டுச் சென்றது மீண்டும் நினைவுக்கு வர, இந்த நொடி அது நடந்தது போல் அவளின் விழிகள் மீண்டும் கலங்கத் தொடங்கியது.
 
 
‘அன்று வேண்டாம் என தூக்கி வீசியது எப்படி அவன் கையில் வரும்..? இது அதுதானா..! இல்லை அதேபோல் இருக்கும் வேறு ஒன்றா..?’ என்று அவள் மனம் தவித்துக் கொண்டிருக்க.. அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. 
 
 
அதை பற்றி அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பும் படபடப்பும் அவளுள் நிறைந்து இருக்க.. “இல்லை, இது அதுவா இருக்க வாய்ப்பே இல்லை.. அது எப்படி அவங்க கையில் வரும்..?” என்று அவளுக்குள்ளேயே கேட்டுக் கொண்டு சோர்வாக அமர்ந்தவளின் மனக்கண்ணில் அன்றைய நாள் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.
 
 
அன்று தன் பரிசை அத்தனை ஆசையாக கொண்டு சென்று அவனிடம் கொடுத்ததை வாங்கி விநாயக் வீசிவிட்டுச் சென்றதை தாங்க முடியாத துயரத்தோடு அங்கிருந்து அழுது கொண்டே கிளம்பி விட்டிருந்தாள் நந்தினி.  
 
 
வீடு வந்து சேர்ந்த பிறகும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதே கரைந்தவளுக்கு நள்ளிரவுக்கு பிறகே அந்த பரிசை பற்றிய நினைவு வந்தது. அதை எடுத்துக் கொண்டு வராமல் அப்படியே விட்டு வந்தது புரிய.. வேகமாக எழுந்து அமர்ந்தவளுக்கு இப்போதே சென்று அதை எடுத்துக்கொள்ள உடலும் மனமும் பரபரத்தது. 
 
 
ஆனால் இந்த நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பவும் முடியாது. அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமானால் நிச்சயம் கார் தேவை. அப்போது அவளுக்கென தனி கார் கிடையாது. அவளை கார் ஓட்டவும் அனுமதித்து இருக்கவில்லை. டிரைவரும் இப்போது வீட்டில் இல்லை, இதெல்லாம் மனதில் ஓட.. செய்வதறியாமல் வாயிலுக்கும் தன் அறைக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
அவனின் செயலிலேயே அன்று எப்படியும் அவளுக்கு உறக்கம் வந்திருக்காது. அதோடு இதுவும் சேர்ந்து கொண்டதில் துளியும் ஓய்வின்றி வாயிலிலேயே காத்துக் கிடந்தவள், விடிந்த பின் டிரைவர் வந்த உடன் அவரை அப்படியே அழைத்துக் கொண்டு தீக்ஷாவின் வீட்டிற்கு கிளம்பி விட்டிருந்தாள்.
 
 
இத்தனை அவசரமாக மகள் காலையில் கிளம்புவதை கண்டு என்னவென விசாரித்த சித்ராவிடம் தன் கழுத்திலிருந்த செயின் அங்கே விழுந்து விட்டதாக சொல்லி சமாளித்து விட்டாள் நந்தினி. சித்ராவும் செயின் காணோமென வேதவல்லிக்கு தெரிந்தால் நிச்சயம் பெரிய அமர்க்களம் நடந்து விடும் என்பதால் அவர் எழுந்து கொள்ளும் முன் சென்று எடுத்து வருமாறு கூறி மகளை அனுப்பி வைத்திருந்தார்.
 
 
அத்தனை பதட்டமும் தவிப்புமாக அங்கே சென்று இறங்கியவள், வாசலில் அவன் வீசி சென்ற பரிசுப் பொருள் இல்லாததை கண்டு அதிர்ந்து, செடி மறைவில் காருக்கு அடியில் என்று ஒரு இடம் விடாமல் தேடியும் அவளுக்கு அது கிடைக்கவே இல்லை.
 
 
பின் தீக்ஷாவுக்கு ஏதாவது இதைப் பற்றி தெரியுமா என அறிந்து கொள்ள அவளிடம் சென்று கேட்க.. அவளோ அதுவரை தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். திடீரென தன்னை உலுக்கி எழுப்பி நந்தினி கேட்க வருவது கூட அவளுக்கு புரியவில்லை. 
 
 
“என்ன கிப்ட்..? யார் கொடுத்தாங்க..?” என்று அவள் அரை தூக்கத்தில் கேட்க.. “அதையெல்லாம் விடு.. நீ ஏதாவது பார்த்தியா..? எடுத்து வெச்சு இருக்கியா..? இல்லை உங்க வீட்டில் இருக்க யாராவது எடுத்து வெச்சாங்களான்னு கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரேன்.. இல்லை கேட்டு சொல்லேன்..” என்று இவள் பரபரத்துக் கொண்டே இருக்க.. நிதானமாக தன் உறக்கத்தை கலைந்து முகம் கழுவிக் கொண்டு வந்து நந்தினியை தீர்க்கமாகப் பார்த்த தீக்ஷா “அப்படி என்ன கிப்ட் அது..?” என்று கேட்கவும், இனி மறைத்து என்ன ஆகப்போகிறது.. தன் மனதின் வலியை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள தான் வேண்டுமென உணர்ந்து அன்று தான் முதல் முறையாக அங்கு நடந்த அனைத்தையும் தீக்ஷாவிடம் சொல்லி இருந்தாள் நந்தினி. 
 
 
இதையெல்லாம் கேட்டு திக்ஷுவுக்கு அத்தனை ஒரு அதிர்வு. தன் முன் இத்தனை விஷயங்கள் நடந்திருக்க.. எப்படி இதையெல்லாம் கவனிக்காமல் போனோம் என்ற கேள்வியும் “உனக்கு நிஜமாவே தெரியுமா நந்து.. வினய் அண்ணாக்கு உன்னை பிடிச்சுருந்ததா..?” என்று வேறு கேட்டு வைக்க.. இப்போது இருக்கும் மனநிலையில் நந்தினியை அந்த கேள்வி மேலும் உடைத்து போட்டது.
 
 
“அப்படி தான் நம்பினேன், நம்பினேன்னு கூட இல்லை.. அது தான் நிஜம், இப்போ தான் என்னவோ தெரியலை இப்படி நடந்துக்கிட்டாங்க.. எனக்கு தெரியும் அவங்களுக்கு என்னை பிடிச்சுருக்கு, இல்லைனா எனக்கு ஏன் பூ வாங்கி தரணும்..” என்றெல்லாம் கேட்டு அவள் அழ தொடங்க.. தீக்ஷுவுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று கூட என்று புரியவில்லை. 
 
 
இருவரும் அப்போதே கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் சின்ன பெண்கள் என்பதால் இதைப்பற்றி தெளிவாக பேசி சமாதானம் செய்யவும் தீக்ஷுவுக்கு தெரியவில்லை. ஆனால் நந்தினி அழுவதை பார்க்கவும் முடியாமல் அவளோடு சேர்ந்து எவ்வளவு தேடியும் அந்த பரிசு பொருள் இறுதி வரை நந்தினிக்கு கிடைக்கவே இல்லை. 
 
 
இவர்கள் இப்படி எதையோ தேடிக்கொண்டு இருப்பதைக் கண்டு சூர்யகலா என்னவென்று விசாரிக்க.. “இல்லை பாட்டி நந்தினி நேற்று வந்த போது அவளுடைய பர்ஸ் கீழே விழுந்துடுச்சு.. அதான் தேடிட்டு இருக்கோம்..” என்று தீக்ஷு சமாளிக்க.. “எங்கே நம்ம வீட்டுக்குள்ளேயா..? வேலை செய்யறவங்ககிட்ட கேளுங்க, எடுத்து வெச்சுருப்பாங்க..” என்றார் தனக்கேயான அதிகாரத்தோடு சூர்யகலா. 
 
 
ஏனெனில் தன் வீட்டில் விழுந்த ஒரு பொருள் நிச்சயம் காணாமல் போகாது என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதற்கு நந்தினி “இல்லை பாட்டி வெளியே தான் விழுந்திருக்கும்னு நினைக்கறேன்.. நான் கிளம்பும் வரை என் கையில் தான் இருந்தது..” என்று மெல்லிய குரலில் சொல்லவும் “அப்போ நாம எதுவும் சொல்ல முடியாதே..!” என்றவர், அங்கு வேலை செய்பவர்களை அழைத்து வீதியை சுத்தம் செய்பவர்கள் வந்து சென்று விட்டனரா என விசாரிக்க.. அரைமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வந்து சென்றது தெரிந்தது. 
 
 
‘இனி யார் எனத் தேடி எங்கே சென்று கேட்டு எப்படி அதை வாங்க முடியும்..?’ என புரியாமல் திகைத்த நந்தினி, தன்னால் முடிந்த வரை தீக்ஷுவிடம் சொல்லி விசாரித்துப் பார்த்தும் அவளுக்கு அது இறுதி வரை கிடைக்கவே இல்லை.
 
 
இன்று அதை விநாயக் கையில் கண்டவுடன் அவள் மனம் அத்தனை ஆர்ப்பரித்தது. ஆனால் அது நிஜம் தானா என தெரிந்து கொள்ள தான் இந்த நொடி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
 
இதில் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாத ஒரு மனநிலையோடு சோர்வாக அப்படியே அமர்ந்து விட்டாள் நந்தினி.
 
 
 ******
 
 
அதேநேரம் தன் வழக்கமான அம்மன் கோவிலில் வந்து மகன் மருமகள் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் அபிராமி.
 
 
அவர் மனம் இன்று உணரும் இந்த அமைதியும் நிறைவும் இதுவரை அவர் வாழ்வில் உணர்ந்திடாததாக இருந்தது. அதை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அனுபவித்தபடி அமைதியாக அவர் அமர்ந்திருக்க.. மெதுவாக அவர் முன் வந்து நின்றார் ரகோத்தமன். 
 
 
சற்று தள்ளி அவர் தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்த போதே அபிராமி பார்த்து விட்டிருந்தார். ஆனாலும் அசையாமல் அப்படியே அவர் இருக்க.. மெதுவாக அவரின் முன் வந்து நின்றவர் “அபி உன் கூட கொஞ்சம் பேசணும், நான் இங்கே உட்காரலாமா..?” என்றார். 
 
 
அதற்கு அபிராமி சரி என்றோ வேண்டாம் என்றோ எதுவும் சொல்லவில்லை, அமைதியாகவே இருக்க.. அதையே அவரின் சம்மதமாக எடுத்துக் கொண்ட ரகோத்தமன் சற்று தள்ளி இடைவெளி விட்டே அமர்ந்தார்.
 
 
அங்கு ஒரு கனமான மௌனம் நிலவியது. இவ்வளவு தூரம் தன்னை தேடி வந்திருப்பவர் அவராகவே பேசட்டும் என அபிராமி அமைதியாக பார்த்திருக்க.. மெல்ல நிமிர்ந்து அபிராமியை பார்த்த ரகோத்தமன் “என்ன செய்யலாம்னு இருக்கே அபி..?” என்றார்.
 
 
அதில் ஒற்றைப் புருவத்தை புரியாமல் உயர்த்தி “எதை பத்தி கேட்கறீங்க..?” என்றார் அபிராமி. “எல்லாம் வினய் விஷயம் தான், அவன் இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை.. என் மேலேயும் அம்மா மேலேயும் உள்ள கோபத்தில் இப்படி ஒரு முடிவை அவன் எடுத்து இருக்கவே கூடாது.. எங்களை பழிவாங்க இதுதான் வழியா..?” என அவர் சொல்லிக் கொண்டிருக்க.. விழிகளை சுருக்கி “பழிவாங்கவா..!” என்றார் அபிராமி.
 
 
“ஆமா ஏன் உனக்கு தெரியாதா.. உன்கிட்ட எதுவும் சொல்லலையா..?” என்று ரகோத்தமன் கேட்கவும் “நீங்களே சொல்லுங்களேன்..” என்றார் அமைதியான குரலிலேயே அபிராமி. 
 
 
“நிதினுக்கும் நந்தினிக்கும் கல்யாணம் செய்யலாம்னு பேசி முடிவு செஞ்சு இருந்தோம்.. அம்மாவுக்கு ஆரம்பத்தில் இதில் பெருசா உடன்பாடு இல்லை.. ஆனா நந்தினி வீட்டில் இல்லாத நேரமா பார்த்து இரண்டு மாசமா நான் தான் பொறுமையா பேசி எப்படியோ அவங்களை சம்மதிக்க வெச்சு இருந்தேன்.. இப்போ அடுத்த வாரம் நிச்சயம் செய்யலாம்னு இருக்கும் போது இப்படி வந்து நிற்கறான்..” என்று அவர் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்க.. அமைதியாக ரகோத்தமன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் அபிராமி. 
 
 
“எல்லாத்தையும் நான் ஒவ்வொன்னா சரி செய்ய முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. இவன் அதை மொத்தமா சரி செய்ய முடியாத அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டான்.. இப்படி ஒரு கோபமா அவனுக்கு எங்கே மேலே..!” என்றவர் அபிராமி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு “என்ன அபி எதுவுமே சொல்ல மாட்டேன்றே..?” என்றார். 
 
 
“என்ன சொல்லணும்..? அதான் நீங்க சொல்லிட்டு இருக்கீங்களே..! சொல்லி முடிங்க..” என்று அபிராமி சொல்லவும் “என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை, ஆனா வினய் செஞ்சது சரில்லை..” என்று கூறியவர் “உனக்கு இதில் கோபமே இல்லையா..?” என்று நிமிர்ந்து அபிராமியை பார்த்து கேட்கவும் ‘இல்லை’ என்பதாக அசைந்தது அபிராமியின் தலை.
 
 
“என்ன..?” என்று நம்ப முடியாமல் அவர் கேட்கவும் “ஏன் கோபப்படணும்..? அவனுக்கு பிடிச்ச பொண்ணை அவன் கல்யாணம் செஞ்சுருக்கான், இதில் கோபப்பட என்ன இருக்கு..?” என்றார் அபிராமி.
 
 
“கோபப்பட என்ன இருக்கா..! நிதினுக்கு நிச்சயம் செய்ய இருந்த பொண்ணை..” என்று ரகோத்தமன் கூறவும் “நீங்க அப்படி பார்க்கறீங்க..? நான் இன்னொருத்தனை காதலிச்சுட்டு இருந்த பொண்ணை தான் நீங்க நிச்சயம் செய்ய இருந்ததா பார்க்கறேன்..” என்றார் அபிராமி. 
 
 
“காதலா..! அவங்களுக்குள்ளே காதல் இருந்ததுன்னு நிஜமா நீ நம்பறியா..?” என்றார் ரகோத்தமன். அதற்கு அபிராமி பதிலேதுவும் சொல்லவில்லை. அதில் சந்தேகம் வந்தவராக அபிராமியின் முகத்தை பார்த்தவர் “உனக்கு.. உனக்கு இதைப்பற்றி முன்னேயே தெரியுமா..?” எனவும் ‘ஆம்’ என்பது போல தலையசைத்தார் அபிராமி.
 
 
“எப்படி தெரியும்..? எப்போ தெரியும்..? அப்போவே நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நான் இவ்வளவு தூரம் இதை வளர விட்டிருக்க மாட்டேனே..!” என்று ரகோத்தமன் பரபரக்க.. “இதுக்கு என்ன அர்த்தம் அப்படி என்ன செஞ்சு இருப்பீங்க..?” என்றார் அபிராமி.
 
 
“இவங்க இரண்டு பேரும் வாழ்க்கையில் ஒண்ணு சேரவே முடியாது.. அப்படி சேர்ந்தா அது திரும்ப பெரிய பிரச்சனையை தான் நமக்குள்ளே கொண்டு வரும்னு பேசி புரிய வெச்சு இருப்பேன்.. ஏற்கனவே இருக்க பிரச்சனையை சரி செய்ய தான் நாம பார்க்கணும்.. மேலும் அதிகமாக்க பார்க்கக் கூடாது.. யார் யார் கூட சேரணும் இருக்கில்லை..” என்றவர், “சொல்லு அபி, உனக்கு முன்னேயே தெரியுமா..?” என மீண்டும் கேட்டார் ரகோத்தமன்.
 
 
அவர் பேசிய விதத்திலேயே முகம் மாறி போயிருக்க “அவன் ஒரு பொண்ணை காதலிக்கறான்னு தெரியும், இரண்டு வருஷத்துக்கு முன்னே கல்யாண பேச்சை நான் எடுக்கும் போது எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு ம்மா.. அது யாரு என்னன்னு நேரம் வரும் போது நானே அதை பத்தி உங்ககிட்ட பேசறேன், அதுவரை வேறு எதுவும் கேட்காதீங்கன்னு சொல்லி இருந்தான்.. ஆனா அது நந்தினின்னு எனக்குத் தெரியாது, அவன் சொல்லவும் இல்லை..” என்றார் அபிராமி. 
 
 
“இரண்டு வருஷமாவா..!” என தனக்குள்ளேயே யோசித்தவர், ‘அப்படி இருக்க வாய்ப்பே இல்லை..’ என்ற முடிவுக்கு வந்தவராக “இல்லை, இவங்களுக்குள்ளே அப்படி ஏதாவது இருந்திருந்தா அரசல் புரசலாவாவது எனக்கு தெரிஞ்சிருக்கும்.. எனக்கு அப்படி இருக்க வாய்ப்பே இல்லைன்னு தான் தோணுது.. எங்க மேலே இருக்க ஒட்டுமொட்டு கோபத்துக்கும் சேர்த்து பழிவாங்க தான் வினய் இப்படி செஞ்சுருக்கணும்..” என்று அழுத்தம் திருத்தமாக ரகோத்தமன் சொல்லவும், “அப்போ நந்தினிக்கும் உங்க மேலே கோபம்னு சொல்றீங்களா..? அவளும் உங்களை பழிவாங்க நினைச்சு இருக்கான்னா, அந்த அளவுக்கு நீங்க எல்லாம் சேர்ந்து அவளுக்கு என்ன செஞ்சீங்க..?” என்றார் அபிராமி. 
 
 
அதில் திகைத்து ரகோத்தமன் அபிராமியின் முகம் பார்க்கவும், “இங்கே நந்தினின்னு உயிரும் உணர்வும் உள்ள ஒருத்தி இருக்கான்றதையே மறந்துட்டு பேசிட்டு இருக்கீங்க.. வினய் கோபப்பட்டு தான் பழி வாங்கிட்டான்னு யோசிக்கும் நீங்க நந்தினி அதுக்கு எப்படி உடன் படுவான்னு ஏன் யோசிக்கலை..” என்று அபிராமி கேட்ட பிறகே தன் தவறு புரிய.. நெற்றியை நீவி விட்டுக் கொண்டவராக “அப்போ இது..” என தொடங்கியவருக்கு அடுத்து பேச வார்த்தைகள் கூட வரவில்லை.
 
 
சில நொடிகள் அப்படியே அமைதியாக கழிய.. “சரி எனக்கு நேரமாகுது..” என அபிராமி எழுந்து கொள்ள நினைக்க.. “அபி உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தானா..?” என்று அவர் கேட்கவும், “ஆமா..” என்று துளியும் யோசிக்காமல் உடனே பதிலளித்திருந்தார் அபிராமி.
 
 
அதில் அடுத்து என்ன கேட்பது என்று கூட தெரியாமல் ரகோத்தமன் பார்த்திருக்க.. “என் பிள்ளை நல்லா இருக்கணும்னு நினைக்க இந்த உலகத்தில் அவனுக்குன்னு நான் மட்டும் தானே இருக்கேன்.. அவனுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுத்து இருக்கான், இதில் எனக்கு முழு சம்மதம் தான்..” என்று கொஞ்சம் அழுத்தமாகவே பதிலளித்திருந்தார் அபிராமி. 
 
 
இதைக் கேட்டு திகைத்தவராக அபியை பார்த்து “அப்போ வினய்க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றியா..? அவன் நல்லா இருக்கக்கூடாதுன்னு நான் நினைப்பேனா..!” என்று சிறு பதட்டத்தோடு ரகோத்தமன் கேட்கவும், “அப்படி நான் சொல்லலை, கொஞ்ச நேரம் முன்னே நீங்க தான் சொன்னீங்க.. உங்க மகனை பத்தி அவன் கல்யாணத்தைப் பத்தி கவலைப்பட்டு நீங்க இவ்வளவு தூரம் வந்து பேசும் போது, என் மகன் வாழ்க்கையை பத்தி நான் கவலைப்பட கூடாதா..” என்றார் அபிராமி. 
 
 
“ஐயோ நான் அப்படி சொல்லலை..” என்ற ரகோத்தமன் வேறு ஏதோ சொல்ல வருவதற்குள் அவரை கைநீட்டி தடுத்து இருந்த அபிராமி “இங்கே வந்து நீங்க அடுத்து என்ன செய்யலாம்னு ஆரம்பிச்ச போது என் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு எட்டிப் பார்த்தது.. 
 
 
பிள்ளை திடீர்னு யாருக்கும் தெரியாம இப்படி கல்யாணம் செஞ்சுட்டு வந்திருக்கான்.. ஊரை கூட்டி ஒரு ரிசப்ஷனாவது வைக்கலாமான்னு கேட்க தான் வந்திருக்கீங்களோன்னு நினைச்சேன்.. ஆனா நீங்க உங்க பிள்ளை வாழ்க்கையை பத்தி கவலைப்பட்டு தான் என்னை தேடி வந்திருக்கீங்கன்னு அப்புறம் தான் புரிஞ்சுது.. பரவாயில்லை இது எனக்கு பழகின ஒண்ணு தான், என் பிள்ளையை என்னால் பார்த்துக்க முடியும்..
 
 
ஆனா திரும்ப உங்களை பழிவாங்க தான் இப்படி ஒரு கல்யாணத்தை என் பிள்ளை செஞ்சுகிட்டான்னு சொல்லாதீங்க.. அப்படி ஒரு தப்பை அவன் என்னைக்கும் செய்ய மாட்டான்.. நிஜமாவே நந்தினியை பிடிச்சு காதலிச்சதால் மட்டுமே நடந்த கல்யாணம் இது..” என்றார் அபிராமி. 
 
 
“நீ என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்க அபி, ஒருவேளை நீ சொல்றது போல இருந்தா எனக்கும் சந்தோஷம் தான், ஆனா இது அப்படி இல்லாம போனா.. அதை தான் நான் சொல்ல வந்தேன்..” என்று ரகோத்தமன் அவசரமாக பேசவும், ஒரு இதழ் பிரியா கசந்த புன்னகை அபிராமி இதழ்களில் நெளிந்தது. 
 
 
அதை கண்டு “நான் அப்போ இருந்த மனக்குழப்பத்தில் ஏதோ உளறினதை எல்லாம் நீ வேற மாதிரி புரிஞ்சுட்டே அபி.. எனக்கு வினய் எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாதா..? அவன் நல்லா இருக்கக் கூடாதுன்னு நான் நினைப்பேனா..! திடீர்னு இப்படி நிதினுக்கு முடிவு செஞ்சுருந்தா பொண்ணை அவசரமா யாருக்கும் தெரியாம ஏன் கல்யாணம் செஞ்சுக்கணும்னு யோசிக்கும் போது தான் ஒருவேளை இது பழிவாங்கலா இருக்குமோன்னு எனக்கு தோணுச்சு..” என்று அவர் தன் தரப்பை விளக்க முயன்றார்.
 
 
“உங்களுக்கு வினய் மேலே எவ்வளவு அக்கறை இருக்குன்னு அவன் இருக்கும் போது நிதினுக்கு கல்யாணம் பேசி நீங்க முடிவு செஞ்சதிலேயே தெரிஞ்சுகிட்டேன்.. இனி இதை பத்தி பேச எனக்கு விருப்பமில்லை, எந்த வகையிலும் இனி என்னை தொந்தரவு செய்யாதீங்க..” என்று தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு அபிராமி அங்கிருந்து சென்றுவிட, அபிராமி சென்ற திசையையே கவலையும் அதிர்வுமாக பார்த்துக் கொண்டு இருந்தார் ரகோத்தமன்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
 
 
MNKN - 25 & 26
 
 
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
1786471515-IMG-20260811-WA0001.jpg
 
 
மௌனம் - 27(a)
 
இரண்டு நாட்கள் அமைதியாகவே கழிந்தது. ஏதோ முக்கியமான வேலையில் விநாயக் இருப்பதும் புரிய.. எப்போது வீட்டுக்கு வருகிறான் எப்போது கிளம்புகிறான் என்று அவளால் கணிக்கவே முடியவில்லை.
 
 
இதில் அவனிடம் நந்தினி பேச நினைத்த எதற்கும் பேச சந்தர்ப்பமே அமையாமல் ஒருவிதமான மனபோராட்டத்தோடே அமர்ந்திருந்தாள் நந்தினி. அவளின் முகத்தைப் பார்த்தவாறே வந்து பக்கத்தில் அமர்ந்த அபிராமி “என்னடா முகம் எல்லாம் வாடி இருக்கு..? என்ன யோசனை..? அம்மா ஞாபகமா..!” என்று ஆறுதலாக தலையை வருடியபடியே கேட்கவும் சட்டென அவளுக்கு விழிகள் கலங்கி போனது.
 
 
“அம்மா.. அம்மாவும் என்னை வெறுத்துடுவாங்க இல்லை அத்தை..” என்று லேசான திணறலோடு நந்தினி கேட்கவும், மறுப்பாக தலையசைத்து புன்னகைத்த அபிராமி “எந்த அம்மாவும் தன் பிள்ளையை அப்படி எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வெறுத்துட மாட்டாங்க.. கோபம் இருக்கும் தான், அதுக்காக வெறுத்துடுவாங்களா என்ன..?” என்றவர், அப்போதும் அவள் முகம் தெளியாததைக் கண்டு “அவங்க தனியா இருக்கும் நேரம் எதுன்னு உனக்கு தெரியும் இல்லையா.. அந்த நேரத்தில் மெதுவா கால் செஞ்சு பார்.. ஆரம்பத்தில் பேச மாட்டாங்க தான், ஆனா அதுக்காக நீ உன் தோல்வியை ஏத்துக்க கூடாது.. திரும்பத் திரும்ப முயற்சி செய்யணும், அப்போ கண்டிப்பா பேசுவாங்க புரியுதா..” என்று கூற, “நிஜமாவா..?” என்பது போல் விழிகளில் லேசான நம்பிக்கையை தேக்கி அபிராமியை பார்த்தாள் நந்தினி.
 
 
உடனே மணியை பார்த்தவள், பெரும்பாலும் சித்ரா இந்த நேரங்களில் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அறையில் தான் அமர்ந்து ஏதாவது எம்பிராய்டரி செய்து கொண்டிருப்பார் என்று நினைவு வரவும், பெரும் தயக்கத்திற்கு பிறகே அவரின் எண்ணிற்கு அழைத்து இருந்தாள் நந்தினி.
 
 
எப்போதுமே அவளின் அழைப்பை இரண்டாவது ரிங்கிலேயே ஏற்கும் சித்ரா இந்த முறை முழுதாக அழைப்புச் சென்று நின்றும் ஏற்கவில்லை என்றவுடன் நந்தினியின் மனம் வாடியது.
 
 
அதில் இரு கைகளாலும் அலைபேசியை இறுகப்பிடித்தபடி ஒரு நொடி அப்படியே மனம் சுருங்கி அமர்ந்து விட்டவளுக்கு, பின் அபிராமியின் வார்த்தைகள் நினைவு வரவும் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தாள் நந்தினி. 
 
 
மூன்றாவது அழைப்பை சித்ரா வேகமாக எடுத்து “என்ன தான்டி உன் பிரச்சனை..? எதுக்கு இப்படி தொடர்ந்து கூப்பிட்டு தொல்லை செஞ்சுட்டு இருக்கே..? இதை வேற அம்மா பார்க்கணுமா..!” என்று படபடக்க.. இதுவே வேறு சந்தர்ப்பமாக இருந்தால் சித்ரா இப்படி பேசியதற்கு மனம் வருந்தி இருப்பாளோ என்னவோ..! ஆனால் இன்று அபிராமியின் பேச்சோ இல்லை தொடர்ந்து நடக்கும் சில விஷயங்களோ ஏதோ ஒன்று அவளை கொஞ்சம் சரியாக யோசிக்க செய்திருந்தது. 
 
 
“இப்போ நான் கூப்பிட்டது உங்களுக்கு பிரச்சனையா..? இல்லை உங்க அம்மா பார்த்துடுவாங்கன்றது தான் பிரச்சனையா..?” என நந்தினி சரியாக கேட்க.. ஒரு நொடி அந்தப் பக்கம் அமைதி நிலவ.. “இரண்டுமே தான்..” என்றார் சித்ரா.
 
 
“என் மேலே கோபமான்னு நான் கேட்க மாட்டேன்ம்மா.. நிச்சயம் உங்களுக்கு என் மேலே கோபம் இருக்கும், ஆனா என்னை வெறுத்திட மாட்டீங்க தானே..!” என கேட்கும் போதே அவளுக்கு குரல் அழுகையில் உடைந்தது. 
 
 
இதில் அந்தப் பக்கம் இருந்த சித்ராவுக்கும் அதே நேரம் கண்கள் கலங்கிவிட, பதிலேதும் பேச முடியாமலும் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும் தவித்து கொண்டிருந்தார். 
 
 
“சொல்லுங்கம்மா ஏன் அமைதியா இருக்கீங்க..? ஒரு வார்த்தைக்கு கூட உன்னை நான் வெறுத்திட முடியுமான்னு ஏன் உங்களால் சொல்ல முடியலை.. அப்போ நான் வேண்டாமா உங்களுக்கு..? நான் செஞ்சது தப்பு தான், ஆனா அதுக்காக என்னை மொத்தமா வேண்டாம்னு சொல்லிடுவீங்களா..?” என நந்தினி கேட்க.. அவளின் அழுகையையும் கேள்வியையும் எதிர்கொள்ள முடியாமல் அலைபேசியை அணைத்து விட்டிருந்தார் சித்ரா.
 
 
இதுவே முன்பு என்றால் தன்னோடு பேச பிடிக்காமல் தான் அலைபேசியை அணைத்து விட்டாரோ என்று எண்ணி வருந்தி இருப்பாள் நந்தினி. ஆனால் சற்று முன் அபிராமி பேசியது மனதில் ஓட, தன்னை எண்ணி அவர் வருந்துவது புரிந்து கண்ணீரோடு அப்படியே நந்தினி அசையாமல் அமர்ந்திருக்க.. அதே நேரம் சோர்வாக அறைக்குள் நுழைந்தான் விநாயக்.
 
 
“காவிரியில் தண்ணி வரலைன்னு நாடே வரட்சியில் வாடும்னு எல்லாம் கவலைப்பட்டுட்டு இருக்காங்க.. இங்கே வந்து பார்த்தா தானே தெரியும், இந்த டேம் எப்போவும் திறந்தே இருக்கும்னு..” என அவளைப் பார்த்து சொல்லியபடியே அவன் குளிக்கச் சென்று விட, விநாயக் சென்ற திசையையே முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தினி. 
 
 
‘என் வருத்தம் இவருக்கு அவ்வளவு கேலியா போச்சோ..!’ என அவள் கோபமாக அமர்ந்திருக்கும் போதே குளித்து முடித்து வெளியில் வந்தவன், வேறு உடைக்குமாறி அலங்கார கண்ணாடியின் முன் நின்று தலை சீவிக் கொண்டிருக்க.. அவனையே முறைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்போதே மீண்டும் அந்த காப்பு கண்களில் பட்டது.
 
 
இதில் இதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் வேகமாக எழுந்து வந்து சட்டென அவன் கைகளை நந்தினி பிடித்து இருக்க.. ‘என்ன..?’ என்பது போல் அவளை கேள்வியாக பார்த்தான் விநாயக்.
 
 
“இது.. இது.. இந்த காப்பு..!” என அவள் விநாயக் கையைப் பார்த்தபடியே பரபரப்போடு கேட்கவும், அவளின் பதட்டத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லா குரலில் “ஆமா காப்பு.. ஏன் இதுவரை நீ காப்பையே பார்த்ததில்லையா..?” என்றான் விநாயக்.
 
 
“ம்ப்ச், அதில்லை இந்த காப்பு..” என்றவளை இடைமறித்து அப்போதும் “என்ன இந்த காப்புக்கு..?” என அவளிடம் இருந்து தன் கைகளை எடுத்துக்கொள்ள அவன் முயல.. அதற்கு அனுமதிக்காமல் இறுக்கமாக மீண்டும் அந்த கைகளைப் பிடித்துக் கொண்டவள், இனி இவனிடம் கேட்டுப் பயனில்லை எனப் புரிந்து, அந்த காப்பின் உள்பக்கமாக எதையோ வேகமாக தேடினாள்.
 
 
அவளின் செயல்களை எல்லாம் இதழுக்குள் மறைத்த சிறு மென்னகையோடு பார்த்தபடி நின்றிருந்த விநாயக் வேண்டுமென்றே அவளுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்காதது போல் கையை அசைத்துக் கொண்டே இருக்க.. “கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா..!” என்று அதட்டினாள் நந்தினி. 
 
 
அதற்கு வியப்பாக இதழ்களை பிதுக்கியவன், “சும்மா தானே இருக்கேன்..! நான் என்ன செஞ்சேன்..? கல்யாணமாகி இத்தனை நாள் ஆச்சு, இன்னும் சும்மாதான் இருக்கேன்..” என்று கூறவும், அந்தக் காப்பில் வேகமாக எதையோ தேட முயன்று கொண்டிருந்தவள், இதில் அப்படியே தன் முயற்சியை நிறுத்தி லேசாக விழிகளை உயர்த்தி அவனை பார்க்கவும், அவனோ எதுவுமறியா முகத்தோடு நின்றிருந்தான்.
 
 
இதில் லேசாக குழம்பிய நந்தினி ‘நிஜமாவே இப்போ இவங்க அப்படித்தான் சொன்னாங்களா..? இல்லை எனக்கு தான் தப்பா கேட்டுதா..?’ என்று புரியா யோசனையோடே அசையாமல் நின்று விட, அவளின் அந்த நிலையை பயன்படுத்தி சட்டென தன் கையை அவளிடம் இருந்து எடுத்துக் கொண்டவன், “நீ சாப்பிட்டியா..? இல்லைனா நீயும் வா, பயங்கரமா எனக்கு பசிக்குது.. நான் சாப்பிட்டு தூங்கணும்..” என்றவாறே அறையில் இருந்து வெளியேறி இருக்க.. அவன் சென்ற திசையையே செய்வதறியாது பார்த்தபடி நின்று விட்டாள் நந்தினி.
 
 
*****
 
 
அபிராமி சொல்லிக் கொடுத்திருந்தது போல் நான்கு நாட்கள் விடாமல் தொடர்ந்து சித்ராவை அவள் அழைத்துக் கொண்டே இருந்ததற்கான பலன் ஐந்தாவது நாள் கிடைத்தது. 
 
 
“எனக்கு உன் மேலே கோபம் எல்லாம் இல்லை நந்து.. கொஞ்சம் வருத்தம் தான், ஆனா அது கூட இப்போ இல்லை.. நீ எடுத்த முடிவு சரியா தான் இருக்கும்னு எனக்கு தோணுது, நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்..” என தொடங்கி, அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் மற்றவர் அறியாமல் பேசத் தொடங்கினார் சித்ரா. 
 
 
இதில் இத்தனை நாள் இருந்த மனபாரம் லேசாக நீங்கி மெல்ல தனக்கு பிடித்த ஒரு பாடலை முணுமுணுத்தபடியே பால்கனியில் நின்றிருந்தாள் நந்தினி.
 
 
“என்னடா இது அதிசயமா இருக்கு.. வழக்கமா அசோகவன சீதை மாதிரி சோக சித்திரமா உக்காந்திருக்க வேண்டிய மேடம் இன்னைக்கு சந்தோஷமா இருக்காங்க போலேயே..!” என கேட்டபடியே அவளை பின்னிருந்து அணைத்திருந்தான் விநாயக். 
 
 
இதில் திகைத்து “என்ன செய்யறீங்க..?” என கேட்டப்படியே அவனிடமிருந்து விலக முயன்றவளால் தன் முழு மறுப்பை காண்பிக்க முடியாமல் போக.. காற்றாகி போன குரலில் கேட்டாள் நந்தினி. 
 
 
“ஹ்ம்ம், நான் என்ன செஞ்சேன்.. ஒண்ணுமில்லை..” என்று அவன் பெருமூச்சோடு சொல்லவும், அவனை திரும்பி முறைத்தாள் நந்தினி. அதையெல்லாம் துளியும் கண்டுக்கொள்ளாமல் அவளின் முக வடிவை அவன் அளக்க முயல.. விநாயக் கைகளை தட்டி விட்டடவள், “இதெல்லாம் என்கிட்ட வேண்டாம், நான் உங்க மேலே கோபமா இருக்கேன்..” என்றாள் நந்தினி. 
 
 
அதை துளியும் கண்டு கொள்ளாமல் “ஓகே இருந்துக்கோ, நான் வேண்டாம்னு சொல்லலையே..! ஆனா எனக்கு கோபம் எல்லாம் இல்லைப்பா.. அதனால் நான் இப்படியே இருந்துக்கறேன்..” என்றவன் மேலும் ஒருமுறை அவளை இறுக்கமாக அணைத்து விட்டே விலகி செல்லும் முன் அவளை பார்த்து விஷமமாக விழி சிமிட்டி விட்டே விநாயக் செல்ல.. அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. 
 
 
அவன் பேச்சும் செயலும் அவளுக்கு புரிந்து கொள்ள முடியா வகையில் தான் இருந்தது. இப்படியே தினம் அவளை குழப்பி விட்டு ரசித்து கொண்டிருந்தான் விநாயக்.
 
 
அன்று அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல் அவள் நடந்து கொண்ட கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் அன்றைய நாளின் அதிர்வில் அவள் அப்படி நடந்து கொண்டதாகவே இருக்கட்டும், அதன் பிறகாவது நிதானமாக யோசித்து இதை பற்றி வந்து பேசி தெரிந்து கொள்ள கூட முயலாதது வேறு அவனுக்கு சிறு ஊடலை கொடுத்திருக்க.. ‘நீயா எப்போ வந்து கேட்கறேன்னு நானும் பார்க்கறேன்.. அதுவரை நானா திரும்ப இனி இதை பற்றி பேச மாட்டேன்..’ என முடிவெடுத்தவனாக அவளை சுற்றலில் விட்டுக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
ஒரு வாரம் இப்படியே செல்ல அவனை எப்படி சமாளிப்பது என தெரியாமல் குழம்பிய நந்தினி பெரும்பாலும் விநாயக் வீட்டில் இருக்கும் நேரம் அவன் எதிரில் செல்வதை தவிர்த்துக் கொண்டிருந்தாள். இதை அறிந்து தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டவன், ‘எவ்வளவு நாள் நீயும் ஓடறேன்னு நானும் பார்க்கறேன்..’ என நினைத்தப்படியே அதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்தான் விநாயக்.
 
 
இன்று விநாயக் விடுமுறையில் வீட்டில் இருக்க.. நந்தினி அபிராமியோடு கீழேயே செட்டில் ஆகிவிட்டிருந்தாள். “தினம் அவன் வெளியே போயிடறான், இன்னைக்கு ஒரு நாள் தான் வீட்டில் இருக்கான்.. நீ போய் அவன் கூட இருடா..” என நந்தினியிடம் அபிராமி சொல்ல.. “இல்லை அத்தை, அவங்க ரெஸ்ட் எடுக்குறாங்க.. நான் அங்கே இருந்தா தொந்தரவா இருக்குன்னு தான் இங்கே வந்துட்டேன்..” என்று புன்னகையோடு பேசி சமாளித்து இருந்தாள் நந்தினி.
 
 
அதற்கு மேல் அவளை வேறு எதுவும் சொல்லாமல் அபிராமி தன் போக்கில் சமையலை தொடங்கி விட அவருக்கு உதவி செய்ய நந்தினி முன் வந்தாலும் வேண்டாம் என மறுத்து அவளை அங்கேயே அமர வைத்து நந்தினியோடு பேசியபடியே சமைத்துக் கொண்டிருந்தார் அபிராமி. 
 
 
அதே நேரம் இப்போது சித்ரா ஓய்வாக அறைக்குள் இருக்கும் நேரம் என நினைவுக்கு வரவும், நந்தினி அலைபேசியை எடுத்து சித்ராவுக்கு அழைத்து பேசிக் கொண்டிருக்க.. பெரும்பாலும் ஐந்து நிமிடமோ இல்லை பத்து நிமிடமோ தான் இருவரும் பேசுவார்கள்.. அதற்கு மேல் சித்ரா பேச்சை நீடிக்க மாட்டார். 
 
 
ஏதாவது ஒரு வகையில் வேதவல்லிக்கு இதைப் பற்றி தெரிய வந்தால் அதன் பிறகு இதுபோல் சில நிமிடங்கள் பேசக்கூட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்ற பயம் சித்ராவுக்கு இருந்தது. அதை அவர் வார்த்தைகளில் சொல்லவில்லை என்றாலும் நந்தினிக்கும் தெளிவாக அவரின் மனநிலை புரிந்ததில் அவளுமே அதற்கு மேல் பேசுமாறு தொந்தரவு செய்யவில்லை.
 
 
இன்றும் அப்படியே அவர் பேசிக்கொண்டு இருக்க.. திடீரென “ஒரு நிமிஷம் நந்து..” என்று விட்டு அவர் சிறு இடைவெளி விட, யாரோ வந்து விட்டார்கள் போலும் என எண்ணி அமைதியாக இருந்தவள், திடீரென அங்கு கேட்ட கூச்சலிலும் “ஐயோ..” என்ற சித்ராவின் குரலிலும் பதறிவிட்டாள்.
 
 
“ம்மா.. ம்மா என்னாச்சு..? என்ன நடக்குதுன்னு சொல்லுங்களேன்..” என்று இங்கே நந்தினி பதறி கொண்டிருக்க.. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அபிராமி கூட அவளின் அருகில் வந்து நின்று விட்டார். “என்னாச்சு நந்து ம்மா..?” என அவரும் குரலில் கவலையோடு கேட்கவும், “தெரியலை அத்தை, அம்மா நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க.. திடிர்னு ஒரு நிமிஷம் சொன்னாங்க, அதுக்கு பிறகு பார்த்தா ஏதேதோ சத்தமெல்லாம் கேட்குது.. அங்கே ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன்..” என அவள் பயந்து சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்திருந்த விநாயக் அலைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டிருந்தான். 
 
 
மூவரின் கவனமும் அலைபேசியில் இருக்க.. கலவையான சத்தங்கள் அந்தப் பக்கம் இருந்து கேட்டுக் கொண்டிருந்தது. அதிலும் வேதவல்லியின் குரல் ஆங்காரத்தோடு பெரிதாக ஒலித்துக் கொண்டிருக்க.. இங்கு பதறி போனாள் நந்தினி. 
 
 
அவளை தோளில் லேசாக தட்டி “நீ பேசு.. அவங்களை பேச சொல்லு.. என்னாச்சுன்னு கேளு..” என்று ஆறுதல் படுத்திக் கொண்டு இருந்தான் விநாயக். அதில் கொஞ்சமே கொஞ்சம் பதட்டம் தணிந்தாலும் தன்னால் தான் அங்கு ஏதோ சித்ராவுக்கு பிரச்சனை என்று உடல் லேசாக நந்தினிக்கு நடுங்கி கொண்டே தான் இருந்தது. 
 
 
இதில் “ம்மா.. ம்மா..” என்று மட்டும் அவள் அழுகை குரலில் அழைத்துக் கொண்டே இருக்க.. அவளின் இந்த தொடர் முயற்சிக்கு சில நிமிடங்களுக்கு பின் பலன் இருந்தது. “ஐயோ நீ லைனில் இருக்கறதையே நான் மறந்துட்டேன்.. நந்து நான் அப்புறம் பேசறேன்..” என்று சித்ரா அலைபேசியை வேகமாக அணைக்க முயல.. “ஐயோ ப்ளீஸ் என்னாச்சுன்னு சொல்லுங்களேன், எனக்கு பயமா இருக்கு..” என கத்தினாள் நந்தினி. 
 
 
“அது.. இங்கே அம்மா..” என சித்ரா தொடங்கவும் “என்னாச்சு நீங்க என் கூட பேசறது தெரிஞ்சு போச்சா..? உங்களை ரொம்ப திட்டிட்டாங்களா..!” என்று நந்தினி கேட்கவும் “இல்லை, அதெல்லாம் ஒண்ணுமில்லை.. இங்கே பிரச்சனையே வேற..” என்றார் சித்ரா. 
 
 
“ப்ளீஸ்மா என்கிட்ட மறைக்காதீங்க, அங்கே என்னாச்சுன்னு சொல்லுங்க..” என்றாள் அப்போதும் அவர்களின் வார்த்தைகளை நம்பாமல் நந்தினி. 
 
 
இதில் தன்னை நினைத்து அவள் வருத்திக் கொண்டிருப்பதை அறிந்தவர் என்பதால் “நந்து நிஜமா சொல்றேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இங்கே மானுவுக்கு தான் பிரச்சனை..” என்றார் சித்ரா. அதில் திகைத்தவளாக “என்ன மானுவுக்கா..? அவளுக்கு என்ன..?” என்றாள் புரியாமல் நந்தினி. 
 
 
“அம்மா.. அம்மா அவளை அடிச்சுட்டாங்க..” எனவும் “என்னது..?” என்று பெரிதும் அதிர்ந்து நந்தினி குரல் கொடுக்கவும், இங்கே கேட்டுக் கொண்டிருந்த மற்ற இருவருக்கும் கூட அப்படித்தான் இருந்தது. 
 
 
“என்னம்மா சொல்றீங்க..? இதுவரைக்கும் அவங்க அடிச்சதெல்லாம் இல்லையே..! இத்தனை வருஷம் இல்லாம இப்போ ஏன்..?” என்று நந்தினி பெரும் திகைப்போடு கேட்கவும், “ஆமா அதான் எனக்கும் புரியலை.. அந்த சத்தம் கேட்டு தான் நானும் வெளியில் வந்தேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது..” என்று பேசிக் கொண்டிருந்தவர், திடீரென குரலை தழைத்துக் கொண்டு “நந்து நீ தனியா தானே இருக்கே..?” என்றார். 
 
 
அதில் அவள் மற்ற இருவரையும் சங்கடமாக பார்க்கவும், விஷயம் தங்களைப் பற்றியது என புரிந்து கொண்டிருந்த விநாயக் ‘ஆம்’ என கூறுமாறு தலையசைத்தான். அதை மறுக்க முடியாமல் நந்தினியும் “ஆமாம்மா, தனியா தான் இருக்கேன்..” என சொல்ல.. “மானு உங்க மாமியாரை பார்த்து பேசி இருக்கான்னு அத்தைக்கு யாரோ சொன்னாங்களாம்.. அவங்க கூட என்ன பேச்சுன்னு கேட்டு தான் அடிச்சிட்டாங்க..” என்று மெல்லிய குரலில் சித்ரா சொல்லி முடிக்கவும், இங்கு அபிராமியின் முகம் அப்பட்டமான வலியை தத்தெடுத்தது.
 
 
இதில் நந்தனியின் பார்வை அபிராமியின் முகத்தில் பதிந்து அடுத்து விநாயக் பக்கம் திரும்ப.. முகம் இறுக ஒரு நொடி நின்றவன், பின் வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
 
 
அதே நேரம் வேதவல்லி சித்ராவை அழைக்கும் குரல் கேட்க.. “அம்மா கூப்பிடறாங்க, நான் அப்புறம் பேசுறேன்..” என அவசரமாக சித்ரா அழைப்பை துண்டித்து விட்டு செல்ல.. மானஸாவை எண்ணி உண்டான கவலையோடு தலையில் கை வைத்தப்படி அங்கேயே அமர்ந்து விட்டாள் நந்தினி. 
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 27(a)
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
1786893808-IMG-20260816-WA0005.jpg
 
 
மௌனம் - 27(b)
 
மதிய நேரம் என்பதால் மானஸாவை அடிக்கும் போது ரகோத்தமன் வீட்டில் இல்லை. புஷ்பாவின் மூலம் விவரம் அறிந்து வேகமாக அவர் அப்போதே அங்கே வந்து சேர்ந்திருக்க.. ரகோத்தமனை கண்டதும் வேதவல்லியின் கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
 
 
அதில் இடைவெளி இல்லாமல் அவர் கத்திக் கொண்டே இருக்க.. அதே நேரம் வீட்டிற்குள் புயலென கோபத்தோடு நுழைந்திருந்தான் விநாயக். அவனை திடீரென அங்கு கண்டு ஒரு நொடி அதிர்ந்து நின்றவர்கள், என்னவென புரிந்து கொள்ளும் முன் வேதவல்லியின் அருகில் வந்து நின்றிருந்தவன் அவரை முறைத்து கொண்டே “மானு..” என சத்தமாக அழைக்க.. அடுத்த நொடி வேகமாக தன் அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்திருந்தாள் மானஸா.
 
 
இங்கே என்ன நடக்கிறது என புரியாமல் மாடியின் வளைவை பிடித்தப்படி அவள் நின்றிருக்க.. அவளை நிமிர்ந்து பார்த்தவன் முகமெல்லாம் வீங்கி சிவந்து வந்து நின்றவளை கண்டு வருந்தி ‘வா’ என்பது போல் விரலசைக்க.. துளியும் தயங்காது வேகமாக அவன் அருகில் வந்து நின்றாள் மானஸா.
 
 
அவனின் ஒற்றை குரலுக்கே அத்தனை வேகமாக வெளியில் வந்து இருந்தவளையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அடுத்து அவளின் செயலில் திகைத்து நின்றிருக்க.. தன் அருகில் வந்த நின்றவளின் கன்னங்களில் பதிந்திருந்த விரல் தடத்தையும், அது கன்றி சிவந்திருந்த விதத்தையும் கண்டவனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் உண்டானது.
 
 
“நீ எல்லாம் மனுஷியா..! இல்லை ராட்சசியா..? ஒரு சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம அவளை இப்படி அடிச்சு வெச்சுருக்கே..” என்று வேதவல்லியை பார்த்து அவன் கோபமாக கேட்கவும், “நிறுத்துடா.. என் வீட்டு பொண்ணை நான் என்ன வேணும்னாலும் செய்வேன், உனக்கு என்ன..?” என்றார் திமிரான குரலில் வேதவல்லி.
 
 
“நீ என்ன செஞ்சாலும் வேடிக்கை பார்க்க, உன் வீட்டு ஆளுங்களை போல என்னை நினைச்சுடாதே..” என்று எச்சரிக்கும் குரலில் அவன் சொல்லவும் “என்னடா செய்வே..? என்ன செய்வே..! உன்னால் என்னை என்ன செஞ்சுட முடியும்..?” என்று அத்தனை நக்கலாக கேட்டிருந்தார் வேதவல்லி. 
 
 
“என்ன செஞ்சுட முடியும்னு காண்பிக்கவா.. பார்க்கறியா..” என்று அவனும் எகிறி கொண்டு போக.. “வினய்..” என்று அவனை பிடித்து நிறுத்தி தடுக்க முயன்றார் ரகோத்தமன்.
 
 
ஆனால் அவரிடம் இருந்து திமிறி கொண்டு தள்ளி நின்றவனை அப்போதும் அடங்காமல் பார்த்த வேதவல்லி, “என் வீட்டுக்குள்ளே வந்து என்னை கேள்வி கேட்க நீ யாருடா..?” என்றார்.
 
 
“அவளோட அண்ணன்..” என்றவனின் வார்த்தைகளில் கிண்டலாக அவனை பார்த்த வேதவல்லி, “அது யாருடா எனக்கு தெரியாத அண்ணன்..?” எனவும், “உனக்கு எல்லாம் தெரியணும்னு அவசியமே இல்லை.. அவளுக்கு தெரிஞ்சா போதும்..” என்றான் அவரை விட கிண்டலான குரலில் விநாயக்.
 
 
“ரகு என்ன நடக்குது இங்கே..? என் வீட்டுக்குள்ளே வந்து என்னை கேள்வி கேட்டுட்டு இருக்கான், நீ என்ன வேடிக்கை பார்க்கறியா..?” என இவனிடம் காண்பிக்க முடியா கோபத்தை மகனின் பக்கம் திருப்பினார் வேதவல்லி.
 
 
அதை பற்றியெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத விநாயக், “ஏன் இவளை அடிச்சே..?” என்று மானஸாவை தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்து பிடித்தவாறே கேட்டிருந்தான்.
 
 
அவர்களின் அந்த நெருக்கம் தன்னையே அவன் கேள்வி கேட்பது எல்லாம் சேர்ந்து வேதவல்லியை வெறுப்பாக்கி இருக்க.. “வீட்டுக்கு உதவாதுன்னு ஒதுக்கி வெச்ச குப்பைக்கிட்ட ஒட்டி உறவாடிட்டு இருந்தா அடிக்காம பின்னே கொஞ்சுவாங்களா..!” என்றார் அருவருப்பாக முகத்தை சுழித்துக் கொண்டே வேதவல்லி.
 
 
அதில் முகமும் கைகளும் இறுக வேதவல்லியை முறைத்தவனின் பார்வை ஒருமுறை ரகோத்தமன் மேல் வெறுப்பாக படிந்து மீண்டது. பின் “வைரமாகவே இருந்தாலும் அது இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.. அதோட மரியாதை தெரியாத, இல்லை புரியாத முட்டாள் கையில் கிடைச்சா அது வெறும் கல் தான்.. 
 
 
கையில் கிடைச்ச பொக்கிஷத்தோட பெருமையும் மதிப்பும் தெரியாத உன்னால் ஒதுக்கி வைக்கப்பட்ட எங்க அம்மாவும் சரி என் தங்கச்சியும் சரி விலை மதிப்பில்லா வைரங்கள்.. அவங்களுக்கான அங்கீகாரத்தை நீ கொடுக்க வேண்டிய அவசியமில்லை.. 
 
 
அதை எதிர்பார்த்து நாங்களும் காத்திருக்கலை, மரியாதை தெரியாத உன் கூட இருக்கிறதை விட பெருமதிப்போட உன்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கிறதே எங்களுக்கு நல்லது..” என்றவன், சிறு இடைவெளி விட்டு மானஸாவை திரும்பிப் பார்த்து “என் கூட வந்துடுடா.. இனி நீ இங்கே இருக்க வேண்டாம்..” என்றான்.
 
 
“ஓஹோ நீ கூப்பிட்டதும் அவ வந்துடுவாளா..?” என அத்தனை கேலியாக வேதவல்லி கேட்டு முடித்த அடுத்த நொடி அதற்கு நேர் மாறாக மானஸா சரியென்ற தலையசைப்போடு விநாயக் கைகளை பிடித்துக் கொண்டாள்.
 
 
இதை வேதவல்லி மட்டுமல்ல ரகோத்தமன் புஷ்பா கூட கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதில் உண்டான அதிர்வோடு “மானு..” என புஷ்பா அழைக்க.. “என்னடி இன்னும் மானு மயிலுன்னு கொஞ்சிட்டு இருக்கே..? நாலு போட்டு கழுதையை உள்ளே கூட்டிட்டு போ..” என்று ஆத்திரம் தாங்காமல் கத்தியவர் விநாயக்கை பார்த்து “முதலில் வெளியே போடா..” என்றார். 
 
 
“நான் போக தான் போறேன், பின்னே இந்த வீட்டில் உட்கார்ந்து உன் வெட்டி அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு அடிமையா வாழ எனக்கு என்ன தலையெழுத்தா..?” என விநாயக் சொல்லவும், “மானு என்னம்மா இதெல்லாம்..?” என்று ரகோத்தமன் தன் மகளின் தலையைக் கோதி தன் பக்கம் அழைத்துக் கொள்ள முயல.. அவளோ அவர் கை தன்மேல் படுவதற்கு முன் சட்டென நகர்ந்து விநாயக்கின் முதுகின் பின் போய் மறைவாக நின்றாள்.
 
 
இதை நம்ப முடியாமல் பார்த்த ரகோத்தமன் அப்படியே அசையாமல் நின்று இருக்க.. “இங்கே சிலை மாதிரி நின்றது போதும், ரகு முதலில் உன் பொண்ணை நாலு போட்டு உள்ளே இழுத்துட்டு போ.. அவளுக்கு மனசிலும் உடம்பிலும் பயம் விட்டு போச்சு போல..” என்று மகனிடம் பாய்ந்தவர், மேலும் இதைக் கேட்டு மானஸா விநாயக்கோடு ஒன்றி கொள்வதை கண்டு “அவளுக்கு இப்போ நீ கன்னம் பழுக்கும் அளவுக்கு கொடுக்கறியா..? இல்லை நான் கொடுக்கட்டுமா..!” என்றார் வேதவல்லி. 
 
 
அதில் அவன் பொறுமை எல்லாம் பறந்து போக.. “எங்கே அவ மேலே கை வை பார்க்கலாம்.. தைரியம் இருந்தா என் முன்னே என் தங்கச்சி மேலே கை வை.. வுமன் அப்யூசிவ் கேஸ் போட்டு முட்டிக்கு முட்டி தட்டி குடும்பத்தோட உள்ளே தள்ளிடுவேன்..” என விரல் நீட்டி எச்சரித்தவன், “அவ மேஜர், என் கூட மானு வருவதை தடுக்கும் உரிமை இங்கே யாருக்கும் இல்லை..” என்று ஆக்ரோஷமாகவே பேசினான். 
 
 
அதேநேரம் மனம் தாங்காமல் “என்ன இருந்தாலும் என்கிட்ட இருந்து என் பொண்ணை பிரிக்கறது சரியில்லை..” என புஷ்பா முதல் முறையாக முன்னே வந்து விநாயக்கை பார்த்து பேசவும், அவரை ஒரு வெறுமையான பார்வை பார்த்தவன் “மாட்டை அடிக்கற மாதிரி உங்க பொண்ணை அடிச்சப்போ வேடிக்கை பார்த்துட்டு இருந்த நீங்க எல்லாம் பெத்தவங்கன்னு சொல்லிக்க தகுதியே இல்லாதவங்க..” என்று விட்டு தன் மானஸாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான் விநாயக்.
 
 
அவன் சொல்லிச்சென்ற வார்த்தைகளில் இருந்த உண்மை சுட, அசையாமல் அப்படியே நெஞ்சில் கை வைத்தப்படி அவர்கள் சென்ற திசையை பார்த்துக் கொண்டு புஷ்பா நின்று விட, வேதனையோடு அவர்கள் வெளியேறுவதை பார்த்திருந்தார் ரகோத்தமன். 
 
 
இப்படி தன் வீட்டுக்குள் வந்து தன்னையே அதிகாரம் செய்து ஒவ்வொரு முறையும் எதுவும் செய்ய முடியாத நிலையில் தன்னை அவன் நிற்க வைத்து செல்வதில் உண்டான கொதிப்பு அடங்காமல் “இப்படி வேடிக்கை பார்க்க தான் இந்த வீட்டில் ஆம்பளைன்னு இன்னும் நீ இருக்கியா..?” என்று கொஞ்சமும் யோசிக்காமல் வார்த்தைகளை வீசினார் வேதவல்லி. 
 
 
அதில் வெறுமையாக திரும்பி வேதவல்லியை பார்த்த ரகோத்தமன் “நான் பல வருஷமா இந்த வீட்டில் இப்படித தான் இருக்கேன் ம்மா.. அப்போ எல்லாம் உங்களுக்கு அது சௌகரியமா தானே இருந்தது, இப்போவும் அப்படியே எடுத்துக்கோங்க..” என்றவர், மானஸா சென்ற திசையை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு, “என் பொண்ணே என் மேலே நம்பிக்கை இல்லாம, என்னால் அவளுக்காக எதுவும் செய்ய முடியாதுன்னு நினைச்சு எப்போ அவன் பின்னே போய் மறைஞ்சு நின்றாளோ அப்போவே அவ அப்பான்னு சொல்லிக்கும் தகுதியை நான் இழந்துட்டேன்.. இதுக்கு மேலே அவளை என்ன சொல்லி எப்படி தடுத்து நிறுத்த முடியும்..?” என்று விட்டு ஓய்ந்து போனவராக தன் அறையை நோக்கி மெல்லிய தள்ளாட்டத்தோடு நடந்தார் ரகோத்தமன். 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
1786894065-IMG-20260816-WA0006.jpg
 
 
மௌனம் - 28
 
நந்தினி கவலையோடு வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருக்க.. அவளை தனியே விட்டுச் செல்ல மனமில்லாமல் உடன் அமர்ந்து ஆறுதலாக நந்தினியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார் அபிராமி.
 
 
அதே நேரம் மானஸாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் விநாயக். அவளை எதிர்பாராமல் இங்கே கண்ட இருவரின் கவனமும் வீங்கி சிவந்திருந்த மானஸாவின் முகத்தில் பதிய.. அடுத்த நொடி வேகமாக அவளை நெருங்கியவர்கள், 
“ஐயோ என்ன இப்படி வீங்கி இருக்கு..” 
 
 
“ரொம்ப வலிக்குதா..?” என்று கேட்டவாறே துளியும் தயக்கம் இல்லாமல் அவளை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
 
 
இதில் மானஸாவிற்கு விழிகள் கலங்கி போக.. எதுவும் பேச முடியாமல் அவள் தடுமாறி நின்றிருக்கும் போதே நந்தினி ஆறுதலாக அவளை பிடித்து அமர வைக்க.. அபிராமி வேகமாகச் சென்று ஐஸ் பேக் கொண்டு வந்தார். 
 
 
விரல் தடத்தோடு வீங்கி சிவந்திருந்த கன்னங்களை பார்க்கும் போதே அனைவருக்கும் அத்தனை வருத்தமாக இருந்தது. மானஸாவின் கன்னத்தை மெதுவாக பிடித்து அபிராமி ஒத்தடம் கொடுக்கத் தொடங்க.. வலியில் “ஸ்ஸ்ஸ்” என முனகினாள் மானஸா.
 
 
அவள் கண்கள் கலங்கி நிற்க.. அன்று சின்ன பொம்மை போல் சிரித்துக் கொண்டே பேசிய மானஸாவை பார்த்திருந்த அபிராமிக்கு இப்படி கண்ணீர் வழியும் முகத்தோடு அவளைப் பார்க்க மனம் வலித்தது.
 
 
‘இதெல்லாம் என்னால் தானோ..!’ அவளின் இந்த நிலைக்கு நானே காரணமோ..!’ என்ற வருத்தம் மேலோங்க.. “சாரிடா கண்ணா, ரொம்ப சாரி.. உன் இந்த நிலைமைக்கு நானே காரணமாகிட்டேனே..!” என அவர் வருத்தத்தோடு சொல்லவும், “அச்சோ, இதுக்கு நீங்க காரணம் இல்லை ம்மா.. அவங்க எப்போவும் என்கிட்ட இப்படித்தான் நடந்துப்பாங்க, இதுவரை பாசமா இருந்து இப்போ மட்டும் கோபமா நடந்த மாதிரி நீங்க ஏன் உங்க மேலே பழியை எடுத்துக்கறீங்க.. இது எனக்கு பழகிப்போன ஒண்ணு தான், ஆனா என்ன இதுக்கு முன்னே இப்படி கை வெச்சது இல்லை.. அதில் ஒரு படி மேலே போயிருக்காங்க, அவ்வளவு தான்..” என்று மெல்லிய குரலில் வருத்தத்தோடு பேசினாலும் தெளிவாகவே பதிலளித்தாள் மானஸா.
 
 
அபிராமிக்கு இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நொடியில் இருந்தே மனம் தாங்கவில்லை. அதில் அவளை நேரில் கண்ட பிறகு அவர் மனம் குற்ற உணர்வில் குறுகுறுத்தது. ‘எப்படி இந்த சின்ன பெண்ணை இந்த அளவுக்கு அடிக்க மனம் வந்தது..? நான் அப்படி என்ன செஞ்சுட்டேன்..? என் கூட பேசினதுக்கே இந்த அளவு அடிக்கும் அளவு என் மேலே ஏன் இவ்வளவு வெறுப்பு..?’ என்று எண்ணிக்கொண்டவராக அபிராமி மானஸாவின் தலையை அன்போடு வருடி விட்டுக் கொண்டிருக்க.. “இனி மானு நம்ம கூட தான் இருக்கப் போறோம்மா..” என்றான் முடிவான குரலில் விநாயக்.
 
 
அதைக் கேட்டு மகிழ்ந்தவராக “தாராளமா இருக்கட்டுமே.. எனக்கு பெண் குழந்தைங்கனா ரொம்ப ஆசை.. அழகழகா டிரஸ் போட்டு அலங்காரம் செஞ்சு பார்க்கலாம், இவனுங்களுக்கு டிரஸ்ன்னு பார்த்தா அது பேண்ட், ஷர்ட், ஜீன்ஸ்ஓ டீஷர்ட் மட்டும் தான்.. இதை தவிர என்ன இருக்கு எடுக்க..? அதுவே பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு அழகான டிரஸ் இருக்கும் தெரியுமா..? கடைக்கு போனா எனக்கு அவ்வளவு ஆசையா இருக்கும், 
 
 
அதையெல்லாம் வாங்கி இவனுக்கா போட்டு அழகு பார்க்க முடியும்..? என் குறையை தீர்க்க இவங்க கூட்டத்தில் இருந்த ஒரே ஏஞ்சல் அபி தான்.. நான் என்ன சொன்னாலும் கேட்பா, நான் என்ன செஞ்சாலும் அமைதியா இருப்பா.. ஹ்ம்ம் இப்போ அவளும் இல்லை, வேலை விஷயமா வெளியூர் போயிருக்கா.. 
 
 
ஆனா என் வருத்தத்தை போக்க இப்போ ஒண்ணு இல்லை, இரண்டு பொண்ணுங்க வீட்டுக்கு வந்தாச்சு..” என்று நந்தினியின் முகவாயை ஒரு கையிலும் மானஸாவின் முகவாயை ஒரு கையிலும் பிடித்து கொஞ்சினார் அபிராமி.
 
 
“அபி மம்மி, அப்போ இத்தனை நாள் நான் தான் இந்த உலகத்திலேயே பெஸ்ட் சன்னுன்னு நீங்க சொன்னதெல்லாம் பொய்யா..?” என்று வருத்தப்படுவது போலான குரலில் கேட்ட விநாயக், 
 
 
பெத்து எடுத்தவ தான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான்
என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
 
 
என்று சிவாஜிகணேசன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு முகத்தில் ஆயிரம் பாவனைகளை காண்பித்து சோக கீதம் வாசிக்க.. “அட போடா அரட்டை..” என மகனை லேசாக அடித்து சிரித்தார் அபிராமி.
 
 
விநாயக்கின் இந்த செயல் அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க.. மானஸா கூட தன் வருத்தத்தை மறந்து இவர்களை பார்த்து தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருக்க.. நந்தினிக்கு தான் எப்படி எதிர்வினையாற்றுவது என்றே தெரியவில்லை. 
 
 
‘எனக்குத் தெரியாமல் அவருக்கு இப்படி ஒரு முகம் இருக்குமென அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை.. இன்னும் இதுபோல் எனக்குத் தெரியாமல் எத்தனை முகம் அவருக்கு இருக்கிறது..?’ என்ற யோசனையோடு நந்தினி மூவரையும் பார்த்திருக்க.. அத்தனை அழகாக அபியோடும் மானஸாவோடும் வம்பு இழுத்து விளையாடி அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
*****
 
 
தர்ஷன் வீட்டிற்கே வந்து மானஸாவிற்கு மருத்துவம் பார்த்திருக்க.. அடுத்த இரண்டு நாள் ஓய்வில் அவளுக்கு முகம் முழுமையாக சரியாகி இருந்தது.
 
 
மானஸா பேசி சிரித்து இயல்பாக இருப்பது போல் தெரிந்தாலும் அவள் விழிகளில் மட்டும் நிரந்தரமாக ஏதோ ஒரு சோகம் தங்கி விட்டது போன்ற ஒரு உணர்வு அபிராமிக்கு எழுந்தது.
 
 
அதில் அன்று விநாயக் மாலை கொஞ்சம் சீக்கிரமாக வரவும் மானஸாவை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியில் சென்று வருமாறு கூறினார் அபிராமி. 
 
 
அவனுக்கும் அது சரி என்று தான் தோன்றியது. நிச்சயம் அது அவளுக்கு ஒரு நல்ல மனம் மாற்றமாக இருக்கும் என நினைத்தவன், நந்தினி மானஸா மற்றும் அபிராமியை அழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பினான்.
 
 
ஆரம்பத்தில் அபிராமி அவர்களை மட்டும் சென்று வருமாறு சொல்லி வர மறுக்க.. நந்தினியும் மானஸாவும் அவர் வந்தால் தான் நாங்களும் செல்வோம் என அடம் செய்து அழைத்து வந்திருந்தார்கள்.
 
 
திடீரென வெளியே கிளம்பியதால் பெரிதாக எந்த திட்டமும் இல்லாமல் மனம் போன போக்கில் காரை ஓட்டிக்கொண்டு இருந்தவனுக்கு, மாலை நேரத்தில் தென்றல் காற்றை ரசிப்பது போல் சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவை வெளியில் முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம் என்று தோன்றியது.
 
 
அதை அவன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள.. அவர்களுக்கும் இதுவே சரி எனப்பட்டது. இதில் நிறைய கூட்டம் வரும் இடம் வேண்டாம் என முடிவெடுத்தவனாக சற்று ஆள் அரவமற்ற அமைதியான இடத்தை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
தற்போது ஈசிஆர் பக்கம் சென்றால் இரவு ஒருவேளை தாமதமானால் கூட அங்கிருக்கும் இவர்களின் பண்ணை வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று தோன்றவும், காரை அந்தப் பக்கம் திருப்பினான் விநாயக்.
 
 
மானஸா வழியெங்கும் ஆர்வமாக பார்வையை செலுத்திக் கொண்டு வர, அதை கவனித்திருந்த அபிராமி அவளுக்கு அங்கிருந்த சில விஷயங்களை விளக்கிக் கொண்டே வந்தார். அப்போதே “இந்த பக்கம் ஒரு போட் ஹவுஸ் கூட இருக்கு மானு..” என அவர் சொல்லவும், “என்ன நிஜமாவா..? அதெல்லாம் ஊட்டி கொடைக்கானலில் தானே இருக்கும்..! இங்கே எப்படி..?” என்றாள் மானஸா.
 
 
“ஹ்ம்ம் நீ அங்கே இருந்து வரவும், அப்படியே லேக்கையும் அலேக்கா தூக்கிக் கொண்டு வந்து இங்கே வெச்சுட்டாங்க..” என்று விநாயக் கேலி செய்யவும், “அண்ணாவை பாருங்கம்மா..” என செல்லமாக சிணுங்கி அபிராமியிடம் அவள் செல்லம் கொஞ்ச.. “அவன் கிடக்கறான், விடுடா..” என்றவர், “ நிஜமாவே நீ போட் ஹவுஸ் பார்த்ததில்லையா..?” என்று கேட்க ‘இல்லை’ என்பதாக அசைந்தது மானஸாவின் தலை. 
 
 
“அவ என்ன.. இங்கே இருக்க நானே பார்த்ததில்லை..” என்று நந்தினி சொல்லவும், “அட பொண்ணுங்களா இதை கூட பார்க்காம சென்னையில் பிறந்து வளர்ந்து என்ன தான் செஞ்சுட்டு இருந்தீங்களோ..!” என அலுத்து கொண்டவராக தன் மகனின் பக்கம் திரும்பி “நாம போட் ஹவுஸ் போகலாம் வினய்..” என்றார் அபி
 
 
அதில் அவனும் நேராக அங்கு காரை கொண்டு சென்று நிறுத்த.. வார நாள் என்பதால் பெரிதாக கூட்டம் எதுவுமில்லை. அபிராமி தண்ணீரில் வரவே மாட்டேன் என்று காரிலேயே அமர்ந்து கொள்ள.. மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான் விநாயக். 
 
 
அபிராமியும் வந்திருந்தால் இரண்டு இரண்டு பேர்களாக செல்லும் படகை எடுத்திருப்பான். ஆனால் இப்போது மூவர் மட்டும் என்பதால் அதற்கேற்ற படகை எடுத்தவன், அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்க.. அவர்களின் முகம் பார்த்தது போல் எதிரில் அமர்ந்து மெல்ல படகை செலுத்த தொடங்கினான் விநாயக்.
 
 
மானஸாவுக்கு அத்தனை ஆச்சரியம்.. அந்த இடம் அவ்வளவு அழகாக மாலை நேர சூரிய கதிர்கள் தன் பொன் வர்ண அழகை அந்த இடம் முழுக்க வாரி இறைத்து இருக்க.. தண்ணீரின் குளுமையும் மெல்ல அசைந்து ஆடிக்கொண்டு நகர்ந்த படகும் கண்டு மற்றதெல்லாம் மறந்து போக அந்த நொடியை வெகுவாக ரசித்தாள் மானஸா.
 
 
நந்தினிக்கும் இந்த நொடி அப்படித்தான் இருந்தது. தன் மன சங்கடங்களை எல்லாம் தள்ளி வைத்து விட்டு விநாயக்குடன் செலவழிக்க கிடைத்த இந்த நிமிடத்தை வெகுவாக ரசித்து மனதில் நிறுத்திக் கொள்ள முயன்றவளுக்கு மனதின் ஓரம் அவ்வப்போது ஒரு சிறு சுணக்கம் எட்டிப் பார்க்க தான் செய்தது. 
 
 
‘எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கு.. எத்தனை இனிமையான நேரம்..? இவருக்கு மட்டும் நிஜமாகவே என்னை பிடிச்சுருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..?’ என்று மனதில் எழும் கேள்வியை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.
 
 
‘பிடிச்சுருக்கா.. பிடிக்கலையா..! என்னை காதலிச்சு கல்யாணம் செஞ்சாங்களா..? இல்லை பழிவாங்க செஞ்சாங்களா..! இவங்க ஹீரோவா..? இல்லை ஆன்டி ஹீரோவா..!’ என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவள், கண் முன் கிடைக்கும் சந்தோஷத்தை முழுதாக ஏற்று அனுபவிக்கவும் முடியாமல் உதறித் தள்ளி விலகிச் செல்லவும் முடியாமல் ஒருவித தவிப்பான மனநிலையோடே அமர்ந்திருக்க.. அவள் முகத்தில் வந்து போகும் பாவனைகளையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த விநாயக்கின் குரல் திடீரென ஒலித்தது.
 
 
வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரெண்டின் நினைவலைகள்..
 
 
என்று அவன் பாடத்தொடங்கவும், திடுக்கிட்டு பார்த்தாள் நந்தினி. 
 
 
அதே நேரம் குழப்பமாக விநாயக்கை பார்த்த மானஸா “என்ன ண்ணா பாட்டு இது..?” எனவும், “சிச்சுவேஷன் சாங்டா, நல்லா இருக்கில்லை..” என அவன் கண் சிமிட்டு சிரிக்கவும், அவளும் உடன் இணைந்து சிரித்தாள்.
 
 
இதில் நந்தினி முகம் அப்பட்டமாக மாறிப்போனது. முகம் வெளிறி அவள் அமர்ந்திருந்த கோலத்தை கண்டவன், ‘இருடி உனக்கு இருக்கு..’ என மனதிற்குள் எண்ணி கொண்டவனாக நந்தினியை பார்த்து,
 
 
 மன வினைகள் யாருடனோ 
 மாயவனின் விதி வகைகள்
 விதி வகையை முடிவு செய்யும்
 வசந்த கால நீர் அலைகள் 
 
 
என்று விழிகள் பளபளக்க குரலை மாற்றி விநாயக் முணுமுணுக்க.. அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. 
 
 
அதை கண்டு தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன், ‘என் மேலே உனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை வரலை இல்லை.. இப்படியே குழம்பு..!’ என நினைத்து கொண்டான்.
 
 
அங்கிருந்து கிளம்பி கடற்கரை செல்லும் வரைக்கும் மானஸா வாய் ஓயாமல் அவளின் முதல் படகுசவாரி அனுபவத்தையும் அது கொடுத்த சந்தோஷத்தையும் அபிராமியிடம் சொல்லிக் கொண்டே வர.. நந்தினிக்கு தான் அதெல்லாம் கனவு போல் இருந்தது.
 
 
ஒருநேரம் தன்னிடம் அத்தனை இணக்கமாக இருப்பவன், மற்றொரு நேரம் வேறு முகம் காட்டுவது அவளுக்கு புரியா குழப்பத்தை கொடுக்க.. அவளுக்கு சுற்றி இருக்கும் அழகை ரசிக்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை..
 
 
அடுத்த சில நிமிடங்களில் மற்றவர்கள் எல்லாம் கடற்கரையில் நடந்து அலைகளில் கால் நனைத்து அந்த குளிர் காற்றை ரசித்து மகிழ்ந்து என்று தங்களுக்கு கிடைத்திருக்கும் அரிதான நேரத்தை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்க.. அவளுக்குத்தான் அவர்களோடு ஒன்றவே முடியவில்லை. 
 
 
அதற்காக அவளை யாரும் தனியே விட்டு விட்டார்கள் என்றும் அர்த்தம் இல்லை. அபிராமியும் மானஸாவும் ஆளுக்கு ஒரு பக்கம் அவளை பிடித்துக் கொண்டு தங்கள் பேச்சில் அவளையும் இணைத்துக் கொள்ள தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க.. பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை என அவர்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
அவளுக்கு தன் மனநிலையை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ‘என்ன எதிர்பார்க்கிறாள்..? எது அவளை தடை செய்கிறது..? எதற்கு இந்த மனம் இன்னும் ஏங்குகிறது..?’ என்றும் தெரியவில்லை. ஆனால் நடக்கவே வாய்ப்பில்லை என்று நினைத்ததெல்லாம் கண் முன் நடந்து கொண்டிருந்தும் மனதில் ஏதோ ஒரு வெறுமை இந்த நொடி வரை நிறைந்திருந்தது.
 
 
அதில் ஏதோ யோசனையோடே பாதையில் கவனம் இல்லாமல் நந்தினி மெதுவாக நடந்து கொண்டிருக்க.. “ஹை இது சூப்பரா இருக்கில்லை..” என்ற மானஸாவின் குரல் அவளின் கவனத்தை கலைத்தது. அதில் நந்தினி திரும்பி பார்க்க.. அங்கு கலர் கலராக பலூன்களை வைத்து துப்பாக்கியால் குழந்தைகள் சுட்டு விளையாடும் விளையாட்டு இருந்தது.
 
 
ஒரு ஆறு வயது பெண் குழந்தை தன் தந்தையோடு நின்று விளையாடிக் கொண்டிருக்க.. அதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள் மானஸா.
 
 
அந்தக் குழந்தை அங்கிருந்து நகர்ந்ததும் “உனக்கும் விளையாடணுமா..?” என்றான் விநாயக். “ஹாங் ஆசையா தான் இருக்கு, ஆனா எனக்கு விளையாட தெரியாதே..!” என அவள் தயங்க.. “வா நான் சொல்லி தரேன்..” என்று அவளை அங்கு நகர்த்திச் சென்றான் விநாயக். 
 
 
அதில் வேறு வழி இல்லாமல் மற்ற இருவரும் அவர்களை பின் தொடர.. நான்கைந்து பேர் ஒரே நேரத்தில் நின்று சுடக்கூடிய அளவில் அது மிகப் பெரிய பலூன் போர்டாக இருந்தது. ஐந்து துப்பாக்கிகள் வரிசையாக இவர்களுக்கு அருகில் வைக்கப்பட்டு இருக்க.. அதில் ஒன்றை எடுத்து மானஸாவிடம் கொடுத்தவன், “ஹ்ம்ம் சுடு..” எனவும் “எனக்கு தெரியாது ண்ணா..” என்றாள் மானஸா.
 
 
“ரொம்ப ஈஸிடா, ஏதோ இந்த துப்பாக்கியை இப்படி பிடிக்கணும்.. அங்கே இருக்க ஏதாவது ஒரு பலூனை மட்டும் போகஸ் செஞ்சு மெதுவா இந்த ட்ரிக்கரை அழுத்தணும், அவ்வளவுதான் ட்ரை செய்..” என்றான்.
 
 
மானஸாவும் அவன் சொல்லிக் கொடுத்திருந்தபடியே முயற்சிக்க.. ஆனால் ஒன்று கூட அங்கிருந்த பலூனில் படவே இல்லை. அதேநேரம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த நந்தினியை பார்த்து அபிராமி “நீயும் ட்ரை செய்டா, ஏன் சும்மா நிற்கறே..?” எனவும் “இல்லை அத்தை வேண்டாம்..” என தயங்கினாள் நந்தினி. 
 
 
“அட வாங்க நந்துக்கா, எனக்கும்..” என்று தொடங்கியவள் “அச்சச்சோ அக்கா இல்லை, அண்ணி.. நந்து அண்ணி..” என்று சிரிக்க, அவளின் அந்த அழைப்பு நந்தினிக்கு சிறு புன்னகையை கொண்டு வந்திருந்தது. அதற்குள் மானஸாவே நந்தினியின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டிருக்க.. அங்கிருந்த பெண்மணி நந்தினியிடம் ஒரு துப்பாக்கியை கொடுத்தார். 
 
 
சற்றுமுன் மானஸாவுக்கு விநாயக் சொல்லிக் கொடுத்ததை கவனித்திருந்ததால் அதேபோல் நந்தினி முயன்று பார்த்தும் ஒரு பலூனை கூட அவளால் சுட முடியவில்லை. அதேபோல் தான் மானஸாவுக்கும் எல்லாம் தவறிக் கொண்டே இருக்க.. “ம்ஹூம் என்னால் இது முடியலை..” என்று சிறு சிணுங்கலோடு மானஸா திரும்பி விநாயக்கை பார்க்க.. “எல்லாம் முதல் முறையே சரியா வந்திடுமா என்ன..? முயற்சி செஞ்சா கண்டிப்பா வரும், இவ்வளவு சீக்கிரம் தோல்வியை எல்லாம் ஒத்துக்கவே கூடாது.. எங்கே இன்னொரு முறை ட்ரை செய்..” என்றான் விநாயக்.
 
 
அதில் நந்தினியை திரும்பி பார்த்தவள், அவளும் போதும் என்பது போன்ற முகபாவனையோடு நின்றிருக்க.. “இன்னும் ஒரே ஒருமுறை ட்ரை செய்யலாம் அண்ணி..” என்று விட்டு தன் கவனத்தை பலூன் பக்கம் திருப்பினாள் மானஸா. அதிசயத்திலும் அதிசயமாக இந்த முறை அவள் குறி வைத்த அத்தனையும் சரியாக வெடித்து சிதறியது. 
மூன்று பலூன்கள் இது போல் வெடித்ததை நம்ப முடியாமல் விழிகளை விரித்தபடி திரும்பியவளுக்கு, தன் பின்னே விநாயக் துப்பாக்கியோடு நின்று அவள் குறி வைத்ததை எல்லாம் சுட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. 
 
 
அதில் சந்தோஷமாக சிரித்தவள், “அதானே பார்த்தேன், நான் இவ்வளவு சீக்கிரம் தேறிட்டேனான்னு எனக்கே ஷாக் ஆகிடுச்சு..” என்று சிரிக்க “அதெல்லாம் தேறிடுவே.. எல்லாமே பயிற்சியில் வருவது தான், உனக்கும் சீக்கிரமா வந்துடும்..” என்றவன், “சரி போகலாமா..?” எனவும் சரி என்ற தலையசைப்போடு நகர்ந்த மானஸா அப்போது தான் நந்தினி இன்னும் அசையாமல் அங்கே நிற்பதை கண்டாள்.
 
 
இறுதிமுறை இருவரும் துப்பாக்கியை எடுத்த பிறகு நந்தினி இதுவரை ஒரு குண்டை கூட சுட்டு இருக்கவில்லை. மானஸா தான் ஆர்வ கோளாறில் வேகமாக சுட்டிருந்தாள். ஆனால் நந்தினி ஒவ்வொரு பலூனாக பார்த்து தன் கையில் இருந்த துப்பாக்கியை அதை நோக்கி குறி வைத்து என்று பொறுமையாக தானே முயன்று கொண்டிருக்க.. அதை பார்த்த மானஸா “அண்ணா ப்ளீஸ் அண்ணிக்கும் கொஞ்சம் என்னை போலவே ஹெல்ப் செய்யுங்களேன்..” என்று சொல்லவும், “சரி நீ அம்மா கூட காருக்கு போ, நான் அவளை கூட்டிட்டு வரேன்..” என்றான் விநாயக். 
 
 
“ஏன் எல்லாரும் ஒண்ணாவே போகலாமே..!” என்று மானஸா சொல்ல.. அதற்குள் மகனின் முகத்தை கவனித்திருந்த அபிராமி “இல்லைடா, நிறைய நேரமா நடக்கறது எனக்கு கால் வலிக்குது.. நாம முதலில் காருக்கு போயிடுவோம் வா..” என மானஸாவை அங்கிருந்து அழைத்துச் செல்ல.. அவர்கள் இருளில் சென்று மறையும் வரை பார்த்திருந்தவன் பின் நந்தினியின் பக்கம் திரும்பினான். 
 
 
அப்போதும் நந்தினி சுற்றி நடந்த எதை பற்றியும் அறிந்து கொள்ளாமல் தன் முழு கவனத்தையும் எதிரில் இருந்த பலூன் மீது மட்டுமே வைத்து மிகத் தீவிரமாக குறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை சில நொடிகள் அப்படியே பார்த்தவன் சிறு புன்னகையோடு நந்தினியை நெருங்க.. இவ்வளவு நேரம் குறிப்பார்த்தில் ஒரு பலூனை தேர்ந்தெடுத்து அதை சுடத் தயாரானான் நந்தினி.
 
 
அதேநேரம் விநாயக்கின் கரங்கள் அவளை சுற்றி வளைத்திருக்க.. நந்தினியின் இரு கரத்தின் மீதும் தன் இரு கைகளை அழுத்தமாக பதித்து அவளை துப்பாக்கியை சரியாக பிடிக்க செய்தவன், நந்தினியின் கன்னத்தோடு கன்னம் உரச.. அவளின் விரல்களை கொண்டே ட்ரிக்கரை அழுத்தி அவள் குறி பார்த்திருந்த பலூனை வெடிக்க செய்திருந்தான்.
 
 
திடீரென இப்படி அவன் அணைத்தது போல் பிடித்ததிலேயே உறைந்து விழிகள் விரிய அசையாமல் அப்படியே நின்று விட்டவள், பலூன் வெடித்த சத்தத்திலேயே உணர்வு வரப்பட்டு பார்வையை திருப்ப.. அதற்குள் அந்த வரிசையில் இருந்த அத்தனை பலூன்களையும் அவளின் கையை வைத்தே அடுத்தடுத்து சுட்டு முடித்திருந்தான் விநாயக்.
 
 
இதில் அங்கிருந்த பெண்மணி இருவரையும் சிறு புன்னகையோடு பார்க்கவும், அவரை சங்கடமாக பார்த்த நந்தினி மெதுவாக விநாயக் கை வளைவில் இருந்து விலக முயல.. அதற்கு வாய்ப்பளிக்காமல் மேலும் அவளை தன்னோடு சேர்த்து இறுக பிடித்தவன் “இன்னொருவன் ரவுண்ட் சுடுவோமா..?” என அவள் காது மடல் உரச கிசுகிசுக்க.. அவளுக்கு உடல் முழுதும் கூசி சிவந்தது.
 
 
அந்த இருள் சூழ்ந்த இடத்தின் தனிமை, ஈரக்காற்றின் குளுமை மனதுக்குப் பிடித்தவனின் நெருக்கம் என எல்லாம் சேர்ந்து அவள் மனதை படபடக்க செய்ய.. வேகமாக விநாயக் கைகளில் இருந்து விலகி காரை நோக்கி ஓடினாள் நந்தினி.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
 
 
MNKN - 27(b) & 28
 
 
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 5 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
1787122880-IMG-20260819-WA0002.jpg
 
 
மௌனம் - 29
 
அன்று காலை பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. அபிராமி வழக்கம் போல் தன் காலை பூஜையில் கவனமாக இருக்க.. பூ பறிப்பதற்காக வெளியில் வந்த நந்தினி அங்கு இருந்த பைகளை யோசனையாக பார்த்தாள்.
 
 
வாயிலுக்கு நேரெதிரே இரண்டு பெரிய பைகள் வைக்கப்பட்டு இருப்பதை யோசனையாக பார்த்தவள், நேராக வந்து அபிராமியிடம் விஷயத்தை சொல்ல.. அவரும் எழுந்து வந்து என்னவென பார்த்தார். 
 
 
அதை பற்றி வாயிற்காவலாளி கந்தனிடம் அபிராமி விசாரிக்க.. அவர் புஷ்பா வந்து சென்ற விஷயத்தை கூறினார். கந்தன் இங்கே பல வருடங்களாக வேலை செய்பவர் என்பதால் அவருக்கு அனைவரையும் நன்றாகவே தெரியும். அதில் அவர் சிறு தயக்கத்தோடு சொல்லி முடிக்கவும் “எப்போ வந்தாங்க..?” என்றார் அபிராமி. 
 
 
“ஒரு மணி நேரம் முன்னே மேடம்..” என அவர் சொல்லவும், அபிராமி அமைதியாக இருக்க.. “நான் கூட உள்ளே கொண்டு போய் வைக்கவான்னு கேட்டேன் மேடம், ஆனா அவங்க தான் வாசலிலேயே வெச்சுடுங்க.. அவங்க தேவைப்பட்டா எடுத்து உள்ளே வெச்சுக்கட்டும்னு சொன்னாங்க..” என்று தானாகவே கந்தன் சேர்த்து கூறவும், சரி என்ற தலையசைப்போடு அந்த பொருட்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் அபிராமி.
 
 
வரவேற்பு அறையில் அமர்ந்து நந்தினி அதற்குள் இருப்பது என்னவென்று பார்க்க.. அது அனைத்தும் மானஸாவின் பொருட்களாக இருந்தது. அவளின் கல்லூரி புத்தகப் பை, சில உடைகள், மானஸாவின் அலைபேசி என்று அவளின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் மட்டுமே அதில் இருக்க.. இப்போது என்ன செய்வது என்பது போல் நந்தினி அபிராமியை நிமிர்ந்து பார்த்தாள்.
 
 
“அப்படியே அங்கே இருக்கட்டும் நந்தும்மா, மானு எழுந்து வந்ததும் அவ என்ன செய்யணும்னு முடிவு செஞ்சுக்கட்டும்..” என்று விட்டு அபிராமி சமையலறைக்குள் சென்றுவிட, புஷ்பாவை எண்ணி உண்டான கவலையோடு அங்கேயே அமர்ந்து விட்டாள் நந்தினி.
 
 
புஷ்பாவின் மீதெல்லாம் அவளுக்கு எந்த ஒரு கோபமும் எப்போதுமே இருந்ததில்லை. சில வீடுகளில் இது போல் வாழ்க்கையை இழந்து அடைக்கலம் தேடி வரும் நாத்தனாரையும், அவரின் மகளையும் வேறாக பார்த்து ஒதுக்கி வைக்கும் எத்தனையோ விஷயங்கள் பற்றி அவளும் கேள்விப்பட்டு இருக்கிறாள்..
 
 
ஆனால் ஒரு நாளும் புஷ்பா அப்படியெல்லாம் இவர்களிடம் நடந்து கொண்டதே இல்லை.. மற்ற இரு பிள்ளைகளை பார்ப்பது போல் தான் நந்தினியையும் பார்த்தார், ஒரு சகோதரியை போல தான் சித்ராவிடம் பழகுவார்..
 
 
அபிராமிக்கு அவர் செய்தது மிகப்பெரிய பாவம் என்றாலும் தன்னிடம் அவர் நடந்து கொண்டதில் எந்த ஒரு தவறையும் சொல்லி விடவே முடியாது. இதையெல்லாம் யோசித்தபடியே நந்தினி அமர்ந்திருக்க.. அதே நேரம் அவசரமாக கிளம்பி வெளியில் வந்தான் விநாயக்.
 
 
இப்போது இவரிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா..! இல்லையா..? என்று புரியா ஒரு குழப்பமான மனநிலையோடே நந்தினி அவனைப் பார்க்க.. சமீபமாக அவள் இப்படியான குழப்பத்தோடே தன்னை பார்த்து வைப்பதில் உண்டான எரிச்சலோடு அவளைப் பார்த்துவிட்டு என்னவென்று கூட கேட்காமல் விநாயக் வெளியேற முயல.. அதற்குள் மகனுக்கு சூடாக பாலை கொண்டு வந்த அபிராமி “இதையாவது குடிச்சுட்டு போ, சீக்கிரம் கிளம்புவேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே..!” என்றார். 
 
 
“முன்னேயே ஷெட்யூல் போட்டு செய்யற வேலையா ம்மா என்னோடது..? திடீர்னு ஒரு அவசரம்..” என்றவன், அவரோடு பேசியபடியே அந்த பாலை குடித்து முடித்திருந்தான். மகனிடம் அங்கு இருந்த பொருட்களை காண்பித்து அபிராமி நடந்ததை சொல்ல.. “மானுகிட்ட கொடுங்கம்மா..” என்றதோடு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான் விநாயக்.
 
 
அதிலேயே இது அவள் முடிவு எடுக்க வேண்டிய ஒரு விஷயம், இதில் நாம் தலையிடக்கூடாது என சொல்லாமல் மகன் சொல்லி சென்றது புரிய.. சிறு புன்னகையோடு சமையலறைக்குள் நுழைந்துக்கொண்டார் அபிராமி.
 
 
இதையெல்லாம் அறியாத மானஸா அப்போதே உறக்கம் கலைந்து எழுந்து வந்து அவள் அறையின் பால்கனியில் நின்றாள். விழிமூடி லேசாக முகத்தை உயர்த்தி அந்த காலை நேர காற்றை அனுபவித்து அவள் நின்றிருந்ததை சற்று தள்ளி இருந்த காரில் அமர்ந்து விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்பா.
 
 
வீட்டில் இருந்து வெளியே வந்த விநாயக் பார்வையில் அந்த கார் விழ, உள்ளே இருப்பது யார் என புரிந்து கொண்டவன் அமைதியாகவே அவரை கடந்து சென்றான்.
 
 
இது மானஸாவின் பல வருட பழக்கம். அவளுக்கு தினமும் எழுந்தவுடன் சில நிமிடங்களாவது இப்படி வெளிக்காற்றை சுவாசித்தபடி சூரிய ஒளி முகத்தில் பட வந்து நிற்க வேண்டும். அதேபோல் இன்றும் அவள் வந்து நிற்க.. ஐந்து நாட்களுக்குப் பிறகு மகளின் முகம் எங்காவது தெரிந்து விடாதா..? என்ற ஏக்கத்தோடு, எப்படியாவது இன்று அவளை பார்த்துவிட்டே கிளம்ப வேண்டும் என்ற முடிவுடன் அமர்ந்திருந்த புஷ்பா, மகளின் முகத்தையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
 
 
மெல்லிய சிறு புன்னகை அவள் முகத்தில் படர்ந்திருக்க.. அந்த காலை நேரத்தை அவள் ரசித்து நின்றிருந்த கோலம் அத்தனை அழகாக இருந்தது. இரவு உடையில் லேசாக தலை கலைந்து எந்த ஒப்பனையும் இல்லாமல் நின்றிருந்தாலும், மானஸாவின் முகத்தில் ஏதோ தனி ஒரு அழகு மிளிர்ந்தது.
 
 
வீட்டில் இருந்தாலும் சரி விடுதியில் இருந்தாலும் சரி, எப்போதும் நிரந்தரமாக அவள் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் படர்ந்து இருக்கும். மகளின் முகத்தை அப்படியே பார்த்து, பழகி இருந்தவருக்கு இன்று அதெல்லாம் காணாமல் போய் ஒரு அமைதியும் சந்தோஷமும் அந்த முகத்தில் மிளிர்வது போல் இருந்தது. 
 
 
இதில் இமைக்காமல் மானஸாவின் முகத்தையே நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்த புஷ்பா, அவள் தங்களோடு இருந்ததை விட, இங்கு நிம்மதியும் சந்தோஷமுமாக இருப்பதை வலியோடு உணர்ந்தார். 
 
 
**
 
 
இத்தனை களேபரங்களும் வீட்டில் நடக்கும் போது நிதின் அங்கே இல்லை, துபாய் சென்றிருந்தான்.
 
 
திடீரென பதினைந்து நாள் பயணமாக தன் நண்பர்களோடு செல்லப்போவதாக அவன் வந்து நின்ற போது மகனை வருத்தத்தோடு பார்த்தார் ரகோத்தமன்.
 
 
‘நந்தினி மனம் என்னவென்று தெரியாமல் தேவையின்றி இவன் மனதில் ஆசையை வளர்த்து தவறு செய்த விட்டோமோ..?’ என்று அவருக்கு கவலையாக இருந்தது. அதற்கேற்றார் போல் நிதினின் முகம் அத்தனை வெறுமையாக இருந்தது. 
 
 
அன்றைய வேதவல்லியுடனான வாக்கு வாதத்திற்கு பிறகு நிதின் வீட்டில் அதிகம் இருப்பதில்லை. அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்தவராக ரகோத்தமன் எதுவும் கேட்காமல் இருந்துவிட, புஷ்பா தான் மிகவும் தவித்து போனார்.
 
 
இதில் திடீரென தன் பயணத்தை பற்றி நிதின் வந்து சொன்னதும் ரகோத்தமன், எந்தத் தடையும் சொல்லவில்லை. அவன் மன ஆறுதலுக்கு இப்படி ஏதாவது தேவை என்று புரிந்து கொண்டவராக அவர் அமைதியாக இருந்துவிட.. வழக்கம் போல் வேதவல்லி தான் குதித்துக் கொண்டிருந்தார்.
 
 
“நீ எல்லாம் என்ன ஆம்பளை பிள்ளை..? நீ கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய பொண்ணை இன்னொருத்தன் தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சுருக்கான்.. ஆனா அதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லாம இப்படி ஊர் சுத்தக் கிளம்பிட்டே..” என்று அவர் ஆத்திரத்தில் கத்த.. “வேற என்ன செய்ய சொல்றீங்க..? அருவாளோட போய் அவளை வெட்டி போட்டுட்டு வரவா..? இல்லை அவனை வெட்டிட்டு அவளை தூக்கிட்டு வரவா..!” என்றான் நிதின்.
 
 
இதைக் கேட்டு சித்ரா தான் மிகவும் பதறிப் போனார். கொஞ்சமும் யோசிக்காமல் வேதவல்லி ‘எங்கே அப்படியே செய்..!’ என்று அவனுக்கு கட்டளையிட்டு விடுவாரோ..! என்று தவித்துக் போனவராக, எதுவும் இடையில் பேச முடியாமல் சித்ரா பார்த்திருக்க.. புஷ்பா தான் மனம் தாங்க முடியாமல் “நிது என்ன பேச்சு இது..?” என்று கண்டிப்போடு கேட்டிருந்தார்.
 
 
“வேற என்ன செய்ய சொல்றீங்க..? எங்கிருந்தாலும் வாழ்கன்னு வேணும்னா பாடட்டுமா..!” என அவன் வெறுப்பாக கேட்க, “இப்போ எதுக்கு அவனை சமாதானம் செய்யறே..? அவன் கோபம் நியாயமானது தானே..!” என்றார் வேதவல்லி.
 
 
அவரின் பேச்சு புஷ்பாவுக்கு பயத்தை கொடுத்தது. ‘எங்கே இப்படியே பேசி கோபத்தை தூண்டி அவனை தேவையில்லாத எதையும் செய்ய வைத்து விடுவாரோ..!’ என்று பயந்தார். இதில் ரகோத்தமன் இடையிட்டு நிதினை அங்கிருந்து வேறு எந்த பேச்சுக்களும் இல்லாமல் கிளம்ப செய்திருந்தார்.
 
 
அதில் இங்கு அதன் பின்பு நடந்த எந்த ஒரு கலவரமும் அவனுக்குத் தெரியாமலே போனது. ஏற்கனவே மன வருத்தத்தில் இருப்பவனை மேலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் புஷ்பா, மகனிடம் அனைத்தையும் மறைத்து விட்டார்.
 
 
எத்தனை சிரமம் இருந்தாலும் கடமையே கண்ணாக உழைத்துக் கொண்டிருந்த நந்தினி, இப்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு செல்வதில்லை. நிதின் ஊரிலேயே இல்லை, சமீபத்திய நிகழ்வு தந்த சோர்வில் ரகோத்தமனும் வீட்டிற்குள்ளேயே சுருண்டு கொண்டிருந்தார். 
 
 
இதில் அத்தனை வேலைகளும் தடைப்பட்டு நிற்க.. ரகோத்தமனை தொடர்பு கொள்ள முயன்று முடியாத டில்லிபாபுவிடமிருந்து வேதவல்லிக்கு அழைப்பு வந்தது.
 
 
இரண்டு நாட்களாக இதைப் பற்றி அவருக்கு தகவல் தந்து கொண்டு தான் இருந்தார் டில்லிபாபு. இதில் இப்போது ஏன் அழைக்கிறார் எனப் புரிந்து அதில் உண்டான எரிச்சலோடு “என்னய்யா உனக்கு..?” என வெறுப்போடு வேதவல்லி அலைபேசியை எடுத்து கத்தவும், “மேடம் இங்கே அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கணும்.. யாருக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்து இருக்காங்கன்னு தெரியலை, என்ன பிராஜெக்ட் ஷுட்டிங் எங்கே எதுவும் தெரியலை.. இரண்டு நியூ டைரக்டர் வந்து வெயிட் செய்யறாங்க..” என அவர் பட்டியலிட்டுக் கொண்டே போக.. “இப்போ என்ன என்னை வந்து அங்கே உட்கார்ந்து வேலை பார்க்க சொல்றியா..?” என்று எரிந்து விழுந்தார் வேதவல்லி. 
 
 
“அதில்லை மேடம்..” என்று தொடங்கியவருக்கு அடுத்து என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை. ஏனெனில் இதெல்லாம் தெரிந்த ஒரே ஆள் நந்தினி. இரண்டு நிறுவனங்களின் அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பாள். 
 
 
நிதின் கூட அவன் பார்க்கும் நிறுவனத்தின் தகவல்களை மட்டுமே அறிந்து வைத்திருப்பான். மற்றபடி நந்தினியின் விஷயத்தில் தலையிடுவது இல்லை, ஆனால் நந்தினி அப்படியல்ல. 
 
 
அதில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அவளிடம் இருந்து சரியான தகவலையும் விவரத்தையும் அறிந்து வேலைகளை முடித்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது அவள் ஒதுங்கிக் கொண்டு எதுவாக இருந்தாலும் ரகோத்தமனிடம் கேட்டுக் கொள் என சொல்லிவிட்டு இருக்க.. அவரையோ சமீபமாக தொடர்பு கொள்ளவே முடியவில்லை. 
 
 
இதில் என்ன செய்வது என்று புரியாமல் தயங்கி தான் வேறு வழியே இல்லாமல் வேதவல்லிக்கு அழைத்து இருந்தார் டில்லிபாபு. ஏனெனில் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு அவரால் பதில் சொல்லவே முடியவில்லை. 
 
 
ஏன் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கிறது..?
 
 
இன்று என்னை பேச்சுவார்த்தைக்கு வர சொல்லி இருந்தார்கள்.. அவர்கள் ஏன் வரவில்லை..? 
 
 
என் கதையை அவர்களிடம் கொடுத்திருந்தேன்.. ஹீரோவிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லியிருந்தார்கள்.. அது என்னவானது..? 
 
 
என்று தினம் நான்கு பேராவது கேட்டுக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
இதில் கையை பிசைந்து கொண்டு டில்லிபாபு வேதவல்லியின் பதிலுக்காக காத்திருக்க.. பல வருடங்களுக்கு முன்பே இதிலிருந்து எல்லாம் ஒதுங்கிக் கொண்டிருந்த வேதவல்லிக்கு எதை பற்றிய முழுமையான தகவலும் தெரியாது. 
 
 
அதோடு அதை எல்லாம் மொத்தமாக அறிந்து வைத்திருப்பது நந்தினி என்று தெரிய வந்த கோபமும் சேர்ந்து கொள்ள.. எந்த பதிலும் சொல்லாமல் பட்டென அழைப்பை துண்டித்து விட்டு ரகோத்தமனை தேடிச் சென்றார் வேதவல்லி.
 
 
“நீயும் உன் மகனும் என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க..? நமக்குன்னு ஒரு கம்பெனி இருக்குன்னு ஞாபகமாவது இருக்கா..! அவன் எனக்கு என்ன வந்ததுன்னு எங்கேயோ ஊர் சுத்த போயிட்டான், நீ ஏதோ கப்பலே கவிழ்ந்த மாதிரி கன்னத்தில் கை வெச்சுட்டு மூலையில் உட்கார்ந்து இருக்கே.. நம்மை நம்பி படம் எடுக்க வந்தவங்களுக்கு யார் பதில் சொல்றது..? அந்த வீணா போனவன் என்னன்னா இந்த கம்பெனியே அந்த ஓடிப்போனவ தலைமையில் தான் நடக்கற மாதிரி ஒரு படம் காட்டறான்..” என்று வானத்திற்கும் பூமிக்குமாக அவர் குதித்துக் கொண்டே இருக்க.. அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத நிதானத்தோடு தன் அன்னையை ஏறிட்டுப் பார்த்திருந்த ரகோத்தமன் “இதுதான் நம்ம கம்பெனியோட உண்மையான நிலவரம் ம்மா, கடந்த ஐந்து வருஷமா கம்பெனி இப்படித்தான் நடந்துட்டு இருக்கு யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்காமல் பசி தூக்கம் இல்லாம ஓடி உழைச்சிட்டு இருந்த ஒருத்தியை தான் இனி கம்பெனிக்குள்ளே வரக்கூடாதுன்னு நீங்க சொல்லி இருக்கீங்கன்னு இனியாவது புரிஞ்சுக்கோங்க..” என்றார். 
 
 
“அவளுக்கு தான் எல்லாம் தெரியும், அவ தான் எல்லாம் செஞ்சானா.. அப்புறம் நீயும் உன் பிள்ளையும் எதுக்கு தண்டமா..?” என்று அவர் எரிச்சலோடு கேட்கவும், “நாங்க தான் எல்லாம் செய்யணும்னா அப்புறம் நீங்க எதுக்கும்மா..?” என்றார் ரகோத்தமன். 
 
 
அதில் திகைத்து நின்ற வேதவல்லி “என்ன..? என்ன பேசறேன்னு உனக்கு புரியுதா..! வர வர இந்த வீட்டில் எனக்கு மரியாதை இல்லாம போச்சு, எல்லாம் அவன் சொல்லி கொடுத்ததா..!” என்று மீண்டும் தொடங்க.. அதே நேரம் அங்கு வந்து நின்றான் நிதின். 
 
 
“ச்சீ, இந்த வீட்டுக்குள்ளே வந்தாலே கொஞ்சம் கூட நிம்மதியே இல்லை.. எப்போவும் கூச்சலும் குழப்பமுமா இருக்க இது வீடா..? இல்லை சந்தை கடையா..!” என அவன் எரிச்சலோடு கேட்டுவிட்டு அங்கிருந்து செல்ல.. அவன் சென்ற திசையை முறைத்துக் கொண்டு நின்றார் வேதவல்லி.
 
 
**
 
 
அடுத்த ஒரு மணி நேரத்தில் நந்தினி வெளியில் செல்ல தயாராகி அபிராமியின் முன் வந்து நின்றாள். “ஒரு வேலை விஷயமா பிரண்ட்ஸ்கிட்ட கேட்டு இருந்தேன் அத்தை, இன்னைக்கு அது சம்பந்தமா வர சொல்லி இருக்காங்க.. நான் போயிட்டு வந்துடறேன்..” என்று நந்தினி கூறவும், அபிராமிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
 
 
இத்தனை நாள் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவள் இப்படி ஒரு மாதமாக வீட்டிற்குள்ளேயே அடைந்து இருப்பது அவருக்குமே வருத்தமாக தான் இருந்தது. விநாயக்கிடம் கூட சென்ற வாரத்தில் ஒரு நாள் இதைப்பற்றி அபிராமி பேசியிருந்தார். 
 
 
“நாம என்னம்மா இதில் செய்ய முடியும்..? அவ தான் முடிவு எடுக்கணும், சில விஷயங்களில் நாம தள்ளி இருப்பது தான் சரி.. எந்த முடிவா இருந்தாலும் அவ எடுக்கட்டும், நாம துணை இருக்கலாம்..” என்று மகன் சொல்லிவிட, அவருக்கும் அது தான் சரி என தோன்றியது.
 
 
வேதவல்லி திரும்ப நந்தினியை அந்த நிறுவனத்திற்குள் அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்க மாட்டார் என அபிராமிக்கும் தெரிந்தே இருந்தது. அதில் அவளே அடுத்து என்னவென முடிவு செய்யட்டும் என்று இவர்கள் காத்திருக்க.. இப்போது நந்தினி வேலை தேடுவதாக வந்து நிற்கிறாள்.
 
 
அவளுக்காக அதேபோல் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக உருவாக்கித் தரவும் அபிராமி தயார் தான். ஆனால் அதை சொல்லி நந்தினியின் முயற்சியிலும் விருப்பத்திலும் தலையிடுவது சரியில்லை என்று நினைத்தவராக, அமைதியாகவே “சரி நல்லபடியா போயிட்டு வாடா, உனக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும்..” என்றார்.
 
 
நந்தினியும் எப்படியாவது தனக்கு இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே கேப் பிடித்து மெட்ரோ ஸ்டேஷனுக்குச் சென்று இறங்கினாள்.
 
 
அதேநேரம் குளித்து தயாராகி கீழே வந்த மானஸாவை அன்போடு வரவேற்று அபிராமி சாப்பிட வைத்தார். அதன் பின் மெதுவாக அங்கிருந்த பைகளை சுட்டிக்காட்டி அவர் விவரம் சொல்லவும், அதைச் சென்று எடுத்துப் பார்த்தவள் உள்ளிருந்தவைகள் எல்லாம் அவளுக்கு தேவையானவைகளாக மட்டுமே இருக்க.. சிறு தயக்கத்தோடு திரும்பி அபிராமியை பார்த்து “இதெல்லாம் இங்கே இருக்கட்டுமா ம்மா..? நான் இதையெல்லாம் எடுத்துக்கலாமா..!” என்றாள்.
 
 
அதில் புன்னகையோடு அவளின் தலையை அன்பாக வருடிவிட்டவர் “இது என்னடா கேள்வி.. இதெல்லாம் உனக்கு தேவைன்னு தானே, உங்க அம்மா கொண்டு வந்து கொடுத்திருக்காங்க.. அப்புறம் என்ன என்கிட்ட அனுமதி எல்லாம் கேட்கறே, உனக்கு என்ன தோணுதோ செய்..” என்று விட்டு அவர் எழுந்து உள்ளே சென்றுவிட, தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள் மானஸா.
 
 
இங்கு மெட்ரோ ஸ்டேஷனில் நந்தினி தனக்கான ட்ரெயின் வருவதற்காக காத்திருக்க.. அவளின் விழிகள் சுற்றுப்புறத்தை மெதுவாக அலசியது. இது அவளின் முதல் மெட்ரோ பயணம். பெரும்பாலும் காரிலேயே செல்வதால் மெட்ரோவில் செல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு வந்ததில்லை.
 
 
அதில் அந்த இடம் அங்கு வரும் மக்கள் என்று அனைத்தையும் நந்தினி பார்த்துக் கொண்டிருக்க.. திடீரென அவள் விழிகள் ஒரு இடத்தில் நிலையாக அப்படியே நின்றது. அங்கு விநாயக், ஒரு பெண்ணுடன் பேசியபடி வந்து கொண்டிருந்தான்.
 
 
ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து மாடர்னாக அவள் இருந்தாள். இருவரும் எதையோ தீவிரமாக பேசியபடியே வர, அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. ‘இது தான் அவருக்கு அவசர வேலையா..? இந்த பொண்ணை பார்க்க தான் அவ்வளவு அவசரமா ஓடி வந்தாரா..!’ என்று மனதிற்குள் கேள்வி எழ, கோபமாக அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் நந்தினி.
 
 
அதேநேரம் விநாயக்கும் அவளை பார்த்திருக்க.. அவன் புருவங்கள் கேள்வியாக வளைந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் நேராக அவளிடம் வந்து நின்றவன், “என்ன இங்கே..?” எனவும், “ஒரு வேலை விஷயமா போயிட்டு இருக்கேன்..” என்ற நந்தினியின் பார்வை அவன் அருகில் நின்ற பெண்ணின் மேல் ஒருமுறை படிந்து மீண்டது.
 
 
சரி என்ற தலையசைப்போடு நின்ற விநாயக் அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அதேபோல் அவன் ஏன் இங்கே வந்தான் என்பதையும் சொல்லவில்லை. இதில் நந்தினிக்கு லேசான மனசுணக்கம் உண்டானது. 
 
 
‘என்கிட்ட மட்டும் ஏன் என்னன்னு கேட்டாங்க.. அவங்க மட்டும் எதுவும் சொல்லலை, என்கிட்ட ஏன் சொல்லணும்னு நினைக்கிறாங்களா..?’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டவளாக விநாயக்கை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள் நந்தினி.
 
 
ட்ரெயின் வருகிறதா என்று பார்ப்பது போல் நின்றிருந்தாலும் விநாயக் அவளின் முக திருப்பலை கவனித்தே இருந்தான். ‘உனக்கும் நான் ஏன் இங்கே வந்தேன்னு தெரிஞ்சுக்கணும்னா, வாயை திறந்து என்கிட்ட கேளு.. நான் உன்கிட்ட கேட்டேன் இல்லை, அதே போல..!’ என்று நினைத்தவன் தானாக எதையும் சொல்லவே இல்லை.
 
 
இதில் தவிப்பாக நந்தினி அவர்கள் இருவரையும் பார்ப்பதும் பின் பார்வையை திருப்பிக் கொள்வதும் மீண்டும் அடுத்த நொடியே பார்ப்பதும் என்று நின்றிருக்க.. அவர்கள் செல்ல வேண்டிய ட்ரெயினும் அங்கு வந்து சேர்ந்தது.
 
 
மூவரும் அதில் ஏறிக்கொள்ள.. காலை நேரம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே கூட்டம் இருந்தது. இன்று வேலைக்கு செல்லும் பலர் அதிகம் பயன்படுத்தும் ஒரு போக்குவரத்து இது என்பதால் நெருக்கியடித்து நின்றிருந்தனர்.
 
 
நந்தினிக்கு இது முதல் அனுபவம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சிரமத்தை அனுபவித்தாள். எங்கே பிடித்து எப்படி நிற்க வேண்டும் என்பதில் தொடங்கி, மற்றவர் நகர்ந்து செல்லும் போது இடித்து விட்டு செல்வதில் தடுமாறி விழாமல் நிற்பது வரை அவளுக்கு எல்லாமே சிரமமாக தான் இருந்தது.
 
 
இதை கவனித்திருந்த விநாயக், சட்டென அங்கு இருந்த கம்பிக்கு அருகில் நந்தினியை நகர்த்தி நிறுத்தி அவளுக்கு இருபுறமும் தன் கையை அணைவாக வைத்துக் கொண்டான். இப்போது அவன் கை வளைவுக்குள் நிற்பது போல் நந்தினி விநாயக் முகத்தைப் பார்த்தபடி நின்றிருக்க.. அவன் பார்வையும் அவள் முகத்தில் தான் பதிந்திருந்தது.
 
 
அந்தக் கூட்டத்தில் இது மற்றவர் பார்வைக்கு வித்தியாசமாக தெரியாது என்றாலும் நந்தினிக்கு தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஏதோ இருவரும் இத்தனை பேர் முன்பு நெருங்கி நின்றிருப்பது போல் இருக்க.. விழிகளை தயக்கமாக சுழற்றினாள் நந்தினி.
 
 
அவள் மனதை உணர்ந்தது போல் மெல்லிய புன்னகையோடு பார்வையை திருப்பிக் கொண்டவன், அப்படியே பயணிக்க.. அவர்களுக்கு அருகில் நின்றிருந்த யாராவது ஒருவர் அவ்வப்போது அசைந்தோ, இடித்தோ இவர்களை மேலும் நெருங்கி நிற்க செய்து கொண்டிருந்தனர்.
 
 
அதில் அவ்வப்போது இருவரின் உடல்களும் லேசாக உரசி கொண்டிருக்க.. அவர்கள் முகங்கள் அத்தனை நெருக்கமாக வந்தது. நூலிழை இடைவெளியில் இருவரின் இதழ்களும் இருக்க.. நந்தினிக்கு தான் அந்த நொடிகள் பெரும் தவிப்பை அவளுள் விதைத்துக் கொண்டிருந்தது.
 
 
நந்தினி விழிகளை உயர்த்தி அவனை பார்க்கவும், விநாயக் இதழ்களில் ரகசிய புன்னகை நெளிந்தது. 
 
 
வண்டி செல்லும் வேகத்தில் அவள் மேல் விநாயக் அழுத்தமாக உரசி விலக.. நந்தினிக்கு பெரும் அவஸ்தையானது. அவளின் நிலை புரிந்தாலும் கொஞ்சமும் விலகாமல் அப்படியே நின்று அவளை மேலும் சோதித்து கொண்டிருந்தான் விநாயக்.
 
 
இதில் நந்தினி இயல்பாக நிற்க முடியாமல் தடுமாறி, பாதத்தை அழுந்த ஊன்றி தன்னை சமாளித்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருக்க.. அதை கண்டு கொண்டவனோ அவ்வபோது வேண்டுமென்றே நந்தினியின் கன்னத்தோடு கன்னம் இழைய விட்டு அவளின் தவிப்பை ரசித்துக் கொண்டிருந்தான்.
 
 
ஒரு கட்டத்தில் இதற்கு மேல் முடியாது என தோன்றினாலும் அவளுக்கு விலக தோன்றவில்லை. தன்னவனின் இந்த நெருக்கம் இன்னும் இன்னும் வேண்டுமென மனம் சண்டித்தனம் செய்ய.. அவனை அப்படியே அணைத்து கொள்ள பரபரத்த மனதை அடக்க வெகுவாக சிரமபட்டுப் போனாள் நந்தினி.
 
 
அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி யூடியூப்பில் பாடல்களை மெல்லிய சத்தத்தில் கேட்டு கொண்டிருந்தவர், திடீரென நந்தினியின் மனதை பிரதிபலிப்பது போல் அடுத்த பாடலை ஒலிக்க செய்தார்.
 
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
 
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
 
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே …ஏ…மனம் ஏங்குதே
மீண்டும் வாழ.. மனம் ஏங்குதே
 
 
அந்தப் பாடல் அவளின் நிலையை மேலும் சோதிக்க.. அவனை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை இங்கும் அங்கும் அலைய விட்டவள், விநாயக் பார்வையில் உண்டான உறுத்தலில் மெல்ல விழிகளை உயர்த்த.. அந்த கண்களில் அத்தனை குறும்பு கொப்பளித்தது.
 
 
அவனின் விழிகளில் ஈர்க்கப்பட்டவர்களாக அப்படியே அசையாமல் அவன் முகத்தை பார்த்தபடியே நந்தினி நின்றுவிட, திடீரென விநாயக்கின் ஒரு கரம் நந்தினியின் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து இழுத்தது. இதில் திடுக்கிட்டவளாக அவள் சுற்றும் முற்றும் பார்க்க.. “இப்படியே நிற்க எனக்கும் ஆசை தான், ஆனா அடுத்து நாம இறங்கணுமே..!” என்றான் அவளின் காது மடலில் லேசாக தன் இதழ்கள் உரச விநாயக்.
 
 
இதில் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல் நந்தினி அவன் சொல்வதை எல்லாம் செய்ய.. அவளை பத்திரமாக தன் கை வளைவிலேயே வைத்து ட்ரெயினில் இருந்து கீழே இறக்கி விட்டிருந்தவன், “ஓகே நீ கிளம்பு, வீட்டுக்கு திரும்ப போகும் போது கேப் புக் செஞ்சுக்கோ.. இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது, டேக்கேர்..” என அவளிடம் சொல்லி கையசைத்து விட்டு திரும்பினான் விநாயக். 
 
 
அதே நேரம் விநாயக்கோடு வந்திருந்த பெண் சற்று தள்ளி நின்று அவனிடம் சைகையில் ஏதோ சொல்ல.. அதன் பின் வேறு எந்த பேச்சும் இல்லாமல் வேகமாக அந்தப் பெண்ணை நோக்கி விநாயக் நகர.. அந்த நொடி இவர்களை பார்த்து விட்டு அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் அவசரமாக ஓடுவது தெரிந்தது. 
 
 
அவர்களை இரு பக்கமும் இருவரும் விரட்டிக் கொண்டு ஓட.. அதன் பின்பே அந்தப் பெண்மணியும் போலீஸ் என்று புரிய.. ‘அப்போ வேலை விஷயமா தான் வந்திருக்காங்களா..!’ என்று நினைத்துக் கொண்டவளாக மெல்ல நடக்க தொடங்கினாள் நந்தினி.
 
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
 
MNKN - 29
 
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
1787336484-IMG-20260821-WA0002.jpg
 
 
மௌனம் - 30
 
நிதினுக்கு மானு இப்படி வீட்டை விட்டு சென்றதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை. அதுவும் விநாயக்குடன் அவள் சென்றதை கேள்விப்பட்டதிலிருந்து அத்தனை அதிர்வு அவனுள் பரவியது.
 
 
“என்னம்மா சொல்றீங்க..? இவளுக்கு எப்படி அவனை தெரியும்..? எவ்வளவு நாளா பழக்கம்..” என அவன் கேட்ட எந்த கேள்விக்கும் புஷ்பாவிடம் பதில் இல்லை. அவர் கையை பிசைந்து கொண்டு அமைதியாக கவலை படிந்த முகத்தோடு நின்றிருக்க.. அது வேறு அவனுக்கு எரிச்சலை தந்தது.
 
 
“ம்ப்ச், எப்போ பாரு இப்படி எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னனு நிற்காதீங்க ம்மா, இப்போ நடந்து இருக்க பிரச்சனை உங்க பொண்ணுக்கு.. அவ வீட்டை விட்டு போயிருக்கா, அவளை இந்த வீட்டில் இருக்க பெரிய மனுஷி அடிச்சிருக்காங்க.. ஏன்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா..?” என்று கத்தினான் நிதின்.
 
 
“நான் எப்படி நிது அவங்களை..?” என்று அப்போதும் புஷ்பா தயங்கவும் அவரை எரிச்சலோடு பார்த்தவன் “மானு இந்த வீட்டை விட்டு போனதில் தப்பே இல்லை.. பார்த்துட்டே இருங்க, அடுத்து நானும் அதை தான் செய்யப் போறேன்..” என்று விட்டு தன் கையில் கிடைத்த பூ ஜாடியை தூக்கி சுவரில் வீசி எறிந்து விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான் நிதின்.
 
 
அந்த சத்தம் கேட்டு பதறிப் போய் ஓடி வந்த சித்ரா கண்ணீரோடு நின்றிருக்கும் புஷ்பாவை கண்டு “என்னாச்சு அண்ணி..?” என அருகில் செல்ல.. “நான் என்னன்னு சொல்ல, எனக்கு என்ன செய்யறதுனே புரியலை.. என்னால் எதையும் சமாளிக்கவும் முடியலை, இப்போ மானு இந்த வீட்டில் இருந்து போனதுக்கு நான் தான் காரணம்னு நிது சொல்லிட்டு போறான்..” என அவர் அழவும், ‘எப்படி என்ன சொல்லி அவரை தேற்றுவது..?’ என தெரியாமல் விழித்தார் சித்ரா. 
 
 
ஏனெனில் வேதவல்லிக்கு எதிராக இந்த வீட்டில் இருப்பவர்கள் ஒன்றை செய்து விடுவது அத்தனை சுலபம் இல்லையே..! அதை நன்றாக அறிந்தவர் என்பதால் புஷ்பாவின் நிலை சித்ராவுக்கு தெளிவாக புரிந்தது.
 
 
“கவலைப்படாதீங்க, நிது ஏதோ கோபத்தில் பேசிட்டு போறான்.. இங்கே நடக்கற பிரச்சனைகளுக்கு நீங்க எப்படி காரணமாக முடியும்..?” என்று மெல்லிய குரலில் அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் சித்ரா.
 
 
“என்ன இங்கே ஒரே கொஞ்சலும் குலாவலுமா இருக்கு..?” என்றபடி அங்கு வந்து நின்றார் வேதவல்லி. அதில் இருவரும் சட்டென விலக.. வேகமாக தன் முகத்தை புஷ்பா துடைத்துக் கொண்டார்.
 
 
“இப்போ எதுக்கு நீ அழுதுவடியறே..? இங்கே என்ன எழவா விழுந்து கிடக்கு..!” என்ன அவர் சிடுசிடுக்க.. “ஐயோ அத்தை அப்படி எல்லாம் பேசாதீங்க..” என்றார் புஷ்பா. 
 
 
“நீயும் உன் பிள்ளைகளும் நடந்துக்கற விதத்துக்கு வேற எப்படி பேச சொல்றே..?” என்று எரிச்சலில் கத்தியவர், சித்ராவை பார்த்து “நீ என்ன இங்கே வேடிக்கை பார்த்துட்டு நிற்கறே..? நீ என்னமோ நல்ல பிள்ளையை பெத்து ஒழுக்கமா வளர்த்துட்ட மாதிரி தான், போ.. போய் வேலையையாவது ஒழுங்கா பாரு..” என வெறுப்பை அப்பட்டமாக குரலில் தேக்கி சொல்லவும், எதுவும் பேசாமல் சித்ரா அங்கிருந்து வெளியேறி இருந்தார்.
 
 
****
 
 
“நான் ஏன் வரணும்..? அங்கே எல்லாம் நான் வரலை..!” என்றாள் நந்தினி. “ஏன் வரலை..?” என்று விநாயக் கேட்கவும், ‘ஏன்னு உங்களுக்கு தெரியாதா..?’ என்பது போல் அவனை பார்த்தாள் நந்தினி.
‘எதுவாக இருந்தாலும் நீயே சொல்..’ என்பது போல் பதிலுக்கு அவனும் பார்த்திருக்க.. “அங்கே வந்து நான் என்ன செய்யப் போறேன்..? தேவையில்லாத பிரச்சனை தான் வரும்..” என்றாள் முடிவான குரலில் நந்தினி.
 
 
“என்ன பிரச்சனை வரும்னு சொல்றே..?” என்று ஒன்றுமறியாத பாவனையில் விநாயக் கேட்கவும், “ஏன் உங்களுக்கு தெரியாதா..” என்றாள் நந்தினி. “தெரியாம தானே கேட்கறேன், என்ன பிரச்சனை வரும்னு சொல்லு நானும் தெரிஞ்சுக்கறேன்..” என அவன் விட்டுக் கொடுக்காமல் பேசவும், பொறுமையற்று அவனைப் பார்த்தவள், எதுவும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.
 
 
அவனும் அவள் முகத்தையே கன்னத்தை கைகளில் தாங்கியபடி பார்த்துக் கொண்டிருக்க.. நிச்சயம் விநாயக் பதில் சொல்லாமல் விடப்போவது இல்லை என்று புரிந்தவளாக “ஏன் இப்படி அடம் செய்யறீங்க..? சொன்னா புரிஞ்சுக்கோங்களேன், அங்கே நான் வந்தா தேவையில்லாம பிரச்சனையாகும்..” என்றாள் நந்தினி.
 
 
“அதான் என்ன பிரச்சனையாகும்னு சொல்லு, நான் ஏன் அடம் செய்யப் போறேன்..? சரியான காரணம் இருந்தா நீ சொல்றதுக்கு நானும் சம்மதிக்கறேன்..” என விநாயக் கேட்கவும் “எனக்கும் அந்த கம்பெனிக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லைனு முடிவான பிறகு அவங்க நடத்தும் இந்த ஃபங்ஷனுக்கு நான் எதுக்கு வரணும்..?” என்றாள் நந்தினி. 
 
 
“சரியான பாயிண்ட், ஆனா நாம அவங்க கெஸ்ட்டா போகலையே..! துஷி தானே நம்மை இன்வைட் செஞ்சு இருக்கான்.. அவன் கெஸ்ட்டை வரக்கூடாதுன்னு சொல்ல இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..? இல்லை அப்படித்தான் சொல்லிடுவாங்களா..! அதையும் பார்த்துடுவோம்..” என்றான் விநாயக்.
 
 
இதில் அவனை செய்வதறியாது பார்த்தவள் “இதெல்லாம் வேணும்னே வம்பு செய்யறதுக்கு போற மாதிரி இருக்கு, வேண்டாம் நாம ஒதுங்கியே இருப்போம்..” என்றாள் நந்தினி. 
 
 
“ஏன் எதுக்கு ஒதுங்கி இருக்கணும்..? அப்படி என்ன தப்பு நாம செஞ்சுட்டோம்..!” என்றவன் “ஒருவேளை என்னை கல்யாணம் செஞ்சுட்டதை நினைச்சு ரொம்ப வருத்தப்படறியோ..!” எனவும் அவனை முறைக்க முயன்று தோற்றவள், “இதற்கான பதில் என்னன்னு உங்களுக்கே தெரியும்..” என்றாள்.
 
 
“அது எப்படி நீ சொல்லாம எனக்கு தெரியும்..?” என அவன் கேட்கவும், “தெரியாம தான் என்னை கல்யாணம் செய்துக்கிட்டீங்களா..?” என்றாள் நந்தினி. 
 
 
“பார்றா..!” என்று போலியாக ஆச்சரியப்பட்டவன் “ஓ, அப்போ நான் சொல்லாம என்னை பத்தியும் உனக்கு தெரிந்திருக்கும் அப்படித்தானே..!” எனவும், பதிலின்றி விழித்தவள் சிறு திணறலோடு அவனைப் பார்க்க.. மேலும் அவளை சோதிக்க விரும்பாமல் “சரி நேரமாகுது சீக்கிரம் கிளம்பு..” என்று விட்டு எழுந்தான் விநாயக். 
 
 
“இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், திரும்ப கிளம்புன்னு சொன்னா என்ன அர்த்தம்..?” என்றாள் நந்தினி. “ஹ்ம்ம், நீ தேவையில்லாம யோசிச்சு குழம்பறேன்னு அர்த்தம்..” என்றவன், “நமக்காக துஷி அங்கே காத்திருப்பான்.. அவனை ஏமாற்றக் கூடாதுன்னு நினைச்சா கிளம்பு..” என்று சொல்லிவிட்டு செல்ல.. செய்வதறியாது சில நொடிகள் அங்கேயே கையை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள் நந்தினி.
 
 
இன்று துஷ்யந்த் நடித்து நந்தினி தயாரித்திருந்த அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இந்தப் படத்திற்காக பசி உறக்கம் இல்லாமல் அவள் உழைத்திருக்கிறாள். இந்த விழாவிற்கான அத்தனை ஏற்பாடுகளையும், செய்து வைத்திருந்ததும் கூட அவள் தான்.
 
 
ஆனால் இடையில் நடந்திருந்த இந்த பிரச்சனைகளில் அவளுக்கு இந்த தேதியே மறந்து போயிருந்தது. இதைப் பற்றிய தகவலையே இன்று சமூக வலைத்தளங்களில் வந்திருந்த விளம்பரங்களை பார்த்து தான் அவள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
 
 
அந்த நொடி அவளுள் உண்டான வருத்தத்தை வார்த்தைகளில் வர்ணித்து விட முடியாது. ஆனால் இனி அதெல்லாம் வேண்டாம் என முடிவு செய்த பிறகு இதைப் பற்றியெல்லாம் யோசித்து வருந்துவதை விட அனைத்தையும் இனி கடந்து சென்று தான் ஆக வேண்டும் என எண்ணிக்கொண்டு அவள் அடுத்த வேலையில் கவனம் செலுத்த முயல.. அங்கே சென்றேயாக வேண்டும் என்று வந்து நின்றான் விநாயக். 
 
 
‘இது தேவையில்லாமல் அங்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி விடுமோ..!’ என்ற பயம் நந்தினிக்கு நிறையவே இருந்தது. இதில் யோசனையோடு அவள் அமர்ந்திருக்க.. இறுதியாக விநாயக் சொல்லிச் சென்ற வார்த்தைகள் அவள் மனதில் சிறு நெருடலை கொடுத்தது. 
 
 
துஷ்யந்த் தனியே அவளையும் அழைத்து பேசி இருந்தான். அவனுக்காகவாவது செல்ல வேண்டும் என முடிவெடுத்தவளாக எழுந்து தயாராக தொடங்கினாள் நந்தினி.
 
 
இவள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் விநாயக் முழுதாக தயாராகி வெளியில் வந்திருந்தான். அவனை கண்டவளின் விழிகள் விநாயக்கிடம் இருந்து துளியும் நகராமல் அப்படியே அவனை ரசித்திருக்க.. நந்தினியின் பார்வை புரிந்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன், வேண்டுமென்றே அதை கவனிக்காதது போல் அலைபேசியோடு பால்கனியின் பக்கம் நகர்ந்தான்.
 
 
எப்போதும் காவலனுக்கே உரிய விதத்தில் மட்டுமே உடை அணிபவன் இன்று அதிலிருந்து முற்றிலும் மாறி தயாராகி வந்திருந்தான். நல்ல அடர் நீல நிற சட்டையில் அதற்கு பொருத்தமான அத்தனை விதங்களிலும் தயாராகி வந்திருந்தவனை, ‘இப்படி பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிறது..?’ என்று தான் அவள் மனம் நினைத்தது.
 
 
முதன்முதலில் அவனை நந்தினி பார்த்த போது இப்படி தான் தன் மேல் தனி ஒரு கவனம் எடுத்து தன்னை அழகு படுத்திக் கொண்டிருந்தான் விநாயக். அதன் பின் அவனிடம் நிறைய மாற்றங்கள், மீண்டும் அப்படி அவனை பார்க்கவே முடியாதோ என்று கூட பல நேரங்களில் நினைத்து வருந்தி இருக்கிறாள் நந்தினி. 
 
 
ஆனால் இன்று மீண்டும் அப்படி தன் முன் வந்து நின்றவனின் மேல் இருந்து விழியை எடுக்க முடியாமல் ஓர பார்வையால் விநாயக்கைப் பார்த்தபடியே உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தவளின் இதழ்கள் அவளையும் அறியாமல் மெல்ல முணுமுணுத்தது.
 
 
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
 
 
என்னை உனக்குள் தொலைத்தேன்
ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகையே நானும் உனக்கேன் புரியவில்லை
 
 
என்று முணுமுணுத்துக் கொண்டே தன் உடைகளை எடுக்க முயன்றவளின் கைகள் தானாக அவன் சட்டைக்கு பொருத்தமான நிறத்தில் இருந்த உடையின் மீதே செல்ல.. அதை எடுத்து தன் மார்போடு அணைத்தபடி ‘இப்படி போடலாமா..! வேண்டாமா..?’ என்று ஒரு நொடி யோசித்தவள், பின் இதைத்தான் போட வேண்டும் என்று முடிவு எடுத்தவளாக அதையே அணிய தொடங்கினாள்.
 
 
நல்ல அடர் நீல நிறத்தில் தங்க ஜரிகைகளால் டிசைன் செய்யப்பட்டிருந்த கிராண்ட் வொர்க் லெஹங்கா அது. ‘இது கொஞ்சம் அதிகமா தோணுமோ..?’ என்று ஒரு சிறு தயக்கம் உண்டானாலும், அதை புறம் தள்ளிவிட்டு ‘தோன்றினா தோணட்டும், பரவாயில்லை..!’ என்று முடிவெடுத்தவளாக நந்தினி உடையை அணிந்து முடிக்க இருந்த இறுதி நொடியில் அவளுக்கு ரவிக்கையின் ஜிப்பை மேலே ஏற்றுவது பிரச்சனையானது.
 
 
கீழிருந்து பாதி வரை இழுத்துக் கொண்டு வந்து விட்டிருந்தவளுக்கு, அதன் பின் மேலே ஏற்ற முடியவில்லை. வெவ்வேறு முறைகளில் முயற்சி செய்தும் நந்திகைக்கு கை எட்டவில்லை. இதில் அவள் தொடர்ந்து அதனோடு போராடிக் கொண்டிருக்க.. விநாயக் கரங்கள் அவளின் கைகளின் மேல் அழுத்தமாக படிந்தது. 
 
 
இதில் திகைத்து நந்தினி பார்வையை திருப்ப முயல.. அதற்கு அவளுக்கு தைரியமே வரவில்லை. ‘இவங்க எப்படி இங்கே..? என்று யோசிக்கும் போது தான் அவனைப் பற்றி யோசித்து கொண்டே உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தவள், கதவை மூட மறந்து விட்டிருந்ததே அவளுக்கு புரிந்தது.
 
 
இதை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவள், ‘ஐயோ இப்போ என்னை பத்தி என்ன நினைச்சு இருப்பாங்க..? நான் இதெல்லாம் வேணும்னே செய்யறேன்னு நினைச்சுட்டாங்கனா..!’ என்று மனம் படபடக்க நந்தினி நின்றிருக்க.. விநாயக்கின் கை அந்த ஜிப்பை பிடித்திருந்த விதத்தில் அவனின் இரு விரல்கள் அவள் முதுகில் அழுத்தமாக படிந்து கொஞ்சம் கொஞ்சமாக மேல் ஏறியது.
 
 
இது அவளுள் பெரும் அவஸ்தையை உருவாக்க.. விழிகளை அழுந்த மூடி இந்த நொடிகளை கடக்க அவள் முயல, கிட்டத்தட்ட அந்த ஜிப்பை மேலே ஏற்றி முடித்து இருந்தவனின் விரல்கள் அங்கிருந்து நகர்வதற்கு பதிலாக மீண்டும் அதை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கிக் கொண்டிருந்தது.
 
 
இதில் உண்டான திகைப்போடு விழிகளை திறந்தவள், அதிர்வோடு விழி விரிய அப்படி அசையாமல் நின்றுவிட.. அவன் விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருந்ததில், தெரிந்த வெற்று முதுகில் அவன் இதழ்கள் மெல்ல ஊர்ந்தது.
 
 
அதில் அசைய மறந்து அப்படியே நின்று விட்டவள், தன் தவிப்பை மறைக்க வெகுவாக போராட.. அதை மேலும் கூட்டுவது போல் அவன் இதழ்களும் விரல்களும் அவளின் முதுகில் விளையாடத் தொடங்கி இருந்தது.
 
 
இதில் சரியாக நிற்க முடியாமல் தடுமாறி நந்தினி பின்னால் சரிய.. அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவன், இன்னும் அழுத்தமாக தன் கன்னத்தை தேய்த்து அந்த வெற்று முதுகில் தன் இதழை பதித்தான்.
 
 
அதில் முற்றிலும் தளர்ந்து போய் நந்தினி அவன் கரங்களில் நெகிழ.. அதேநேரம் அவளின் அலைபேசி அடித்தது. இதில் தன் மோன நிலை கலைய.. விழிகளை திறந்தவள் அவனிடமிருந்து விலக முயல, அதற்கு வாய்ப்பே அளிக்காமல் மேலும் நந்தினியை தன்னோடு சேர்த்து விநாயக் இறுக்கிக் கொள்ள.. மீண்டும் அந்த அலைபேசி கரடியாய் கத்தியது.
 
 
இதில் நந்தினி பதட்டமாக.. அது அவளின் உடல் மொழியில் மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. அதில் வேறு வழியில்லாமல் அவளிடம் இருந்து விலகி நின்றவன் “நான் கார்கிட்ட இருக்கேன், சீக்கிரம் ரெடியாகி வா..” என்று லேசான கரகரப்போடான குரலில் சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
 
 
அவன் அங்கிருந்து சென்ற பின் முற்றிலும் தளர்ந்து போனவளாக லேசாக உடல் தள்ளாட அங்கே இருந்த சுவரில் சாய்ந்து நின்றவள், விழி மூடி இந்த நொடிகளை கடந்து வர முயல.. மீண்டும் விடாமல் அவளின் அலைபேசி அடித்தது. 
 
 
இதில் கையை நீட்டி சற்று தள்ளி இருந்த அலைபேசியை எடுத்து நந்தினி பார்க்க, டில்லிபாபு தான் விடாமல் அழைத்துக் கொண்டிருந்தார். அன்றே இனி அந்த நிறுவனத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நந்தினி சொல்லிவிட்ட பின் டில்லிபாபு அவளை எதற்கும் அழைத்திருக்கவில்லை. 
 
 
இன்று இத்தனை பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியிருக்கும் இந்த நாளில் இத்தனை முறை அழைக்கிறார் என்றால் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே அழைப்பை ஏற்று நந்தினி பேச.. பட தயாரிப்பு சம்பந்தமான சில தகவல்களை ரகோத்தமன் கேட்க சொன்னதாக டில்லிபாபு கூறவும், அதற்கான பதிலை மட்டும் கூறிவிட்டு கிளம்பி கீழே வந்திருந்தாள் நந்தினி.
 
 
அழகு பதுமையாக கீழே இறங்கி வந்தவளை விழிகள் விரிய பார்த்த அபிராமி “தேவதை மாதிரி இருக்கேடா..” என்று அவளின் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தார். “கொஞ்ச நேரம் இரு, சுத்தி போட்டுடறேன்.. இரண்டு பேரும் இன்னைக்கு அவ்வளவு அழகா இருக்கீங்க..” என்று அபிராமி படபடக்க.. “ம்மா நேரமாகுது, இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றான் வாயிலிருந்து விநாயக். 
 
 
“ம்ப்ச், ஒரு இரண்டு நிமிஷம் ஆகுமா..?” என அபிராமி சலித்துக் கொள்ள.. “நேரம் ஆகுதும்மா..” என்றான் மீண்டும் விநாயக். “சரி நீங்க திரும்ப வந்ததும் மொத்தமா சுத்தி போட்டுக்கறேன், கிளம்புங்க..” என்றார் அபிராமி. 
 
 
அதே நேரம் கீழே இறங்கி வந்த மானஸா நந்தினியை பார்த்து “வாவ் அண்ணி இவ்வளவு அழகை இத்தனை நாள் எங்கே ஒளிச்சு வைச்சுருந்தீங்க..?” என்று அவளின் கன்னம் பிடித்து கொஞ்ச.. “நீ வரலையா..?” என்றாள் நந்தினி. 
 
 
“நானா..! ஐயோ வேண்டாம்டா சாமி, நீங்க போயிட்டு வாங்க..” என அவள் கையெடுத்து கும்பிடவும், “ஏன்..?” என்றாள் நந்தினி. “வான்ட்டடா எனக்கு வண்டியில் ஏற இஷ்டமில்லைபா..” என்றாள் மானஸா.
 
 
அதன் பின் நேரமாவதை உணர்ந்து நந்தினி வேகமாக வெளியில் வர, விநாயக் காரில் ஏறி அமர்ந்திருந்தான். அவன் அருகில் ஏறி அமர்ந்தவளுக்கு விநாயக் முகத்தை ஏறிட்டு பார்க்கவே முடியவில்லை. 
மனம் படபடக்க விழிகளை கூட உயர்த்த முடியாமல் பார்வையை தழைத்துக் கொண்டு முகத்தை வெளிப்பக்கம் திரும்பியபடியே பயணித்தவளின் நினைவெல்லாம் சற்று முன் நடந்ததையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. 
 
 
பாதையில் கவனமாக இருந்தாலும் அவ்வப்போது விநாயக்கின் பார்வை அவள் மேல் படிந்து விலகிக் கொண்டிருக்க.. நந்தினியின் தவிப்பு அவன் விழிகளில் தவறாமல் விழுந்தது.
 
 
இதில் அவன் இதழ்களில் அழகான ஒரு புன்னகை தவழ.. விடாமல் அவளையே விழிகளால் பருகிக் கொண்டிருந்தான் விநாயக். இதை அறிந்து மேலும் சிவந்து போனவளாக அங்கு இயல்பாக அமர முடியாமல் நந்தினி தடுமாறிக் கொண்டே இருக்க.. விழா நடக்கும் இடமும் வந்து சேர்ந்தது.
 
 
அதுவரை அவளுள் இருந்த சந்தோஷ உணர்வுகள் எல்லாம் வடிந்து காணாமல் போயிருக்க.. உடலில் தானாக ஒரு பதட்டம் வந்து தொற்றிக் கொண்டது. விழிகள் அலைபாய, கைகளை பிசைந்தபடியே தவிப்போடு நந்தினி அமர்ந்திருக்க.. அவளைப் பார்த்தபடியே காரிலிருந்து இறங்கி வந்து அவள் பக்க கதவை திறந்து பிடித்தவன் ‘இறங்கு..’ என்பது போல் தன் வலது கையை அவளிடம் நீட்டினான். 
 
 
மறுக்காமல் அந்த கையைப் பிடித்துக் கொண்டவள், பெரும் பதட்டத்தோடே இறங்கி நிற்க.. அவள் கைவிரல்களை தன்னோடு சேர்த்து இறுக்கமாக கோர்த்துக் கொண்டவன், விழா நடக்கும் அரங்கிற்குள் நந்தினியுடன் நுழைந்தான். 
 
 
வழக்கமாகவே துஷ்யந்த் படத்திற்கு மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இதுவரை அவன் நடித்திராத வகையிலான கதாபாத்திரம் மற்றும் மிகப் பிரம்மாண்டமான திரைப்படம் என்பதால் விழாவும் மிக பிரம்மாண்டமாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
 
இதையெல்லாம் முன் நின்று ஏற்பாடு செய்தது நந்தினி தான். உரிமையாக உள்ளிருந்து அனைவரையும் வரவேற்க வேண்டியவள், இன்று யாரோ போல் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு உள்ளே நுழைவதில் உண்டான வருத்தத்தோடு மெல்ல நடந்து வந்து கொண்டிருக்க.. நந்தினியின் மனநிலை புரிந்தது போல் இறுக்கமாக அவள் கைகளை பிடித்துக் கொண்டு விநாயக் அழைத்து வர.. அவளை யார் என அறிந்திருந்த ஊடகங்கள் சுற்றி வளைத்து இந்த காட்சியை படம் எடுத்தது.
 
 
இது அங்கிருந்த பெரிய திரையில் காட்சியாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்கள் எல்லாம் மிக முக்கிய திரை பிரபலங்கள் என்பதால் அவர்கள் நுழைவாயிலில் வரும் போதிலிருந்து, அவர்களுக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கையில் சென்று அமரும் வரையிலான காட்சியை ஒளிபரப்பவே மிகப்பெரிய திரை அங்கு வைக்கப்பட்டிருந்தது.
 
 
அந்த அரங்கில் நிறைந்திருக்கும் எல்லா ரசிகர்களுக்கும் அவர்களின் அபிமான நட்சத்திரங்களை இதன் மூலம் தெளிவாக காண முடியும் என்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. அதில் இப்போது விநாயக் மற்றும் நந்தினி ஜோடியாக வருவதை முதல் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வேதவல்லியின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.
 
 
அதில் பார்வையை திருப்பி அவர் பார்க்க.. இருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த முதல் வரிசையில் துஷ்யந்த் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்து இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர்.
 
 
அவளுக்கும் இந்த நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி ஒதுக்கி வைத்த பிறகு நந்தினி இன்று வந்ததையே ஏற்றுக் கொள்ள முடியாத வேதவல்லிக்கு, தனக்கு நிகராக முதல் வரிசையில் விநாயக்குடன் அவள் அமர்ந்திருந்ததும் இருவரும் கைகோர்த்தபடி வந்ததோடு இப்போது வரை அப்படியே அமர்ந்திருப்பதையும் காணக் காண ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பெருகியது.
 
 
அதில் சற்று தள்ளி ஒரு முக்கிய பிரமுகரோடு நின்று பேசிக் கொண்டிருந்த ரகோத்தமனை கையசைத்து தன்னருகில் வருமாறு அழைத்தார் வேதவல்லி. அவர் பார்வை சென்ற திசையையும் அழைத்ததில் இருந்த பொறுமையற்ற உடல் மொழியையும் கண்டே எதற்கு அழைக்கிறார் என புரிந்து கொண்டிருந்த ரகோத்தமன் அமைதியான முக பாவத்தோடே சென்று அவர் அருகில் அமர்ந்து “சொல்லுங்கம்மா..” எனவும், “என்னத்த சொல்ல சொல்றே..? அவ எதுக்கு இங்கே வந்தா..? முதலில் வெளியே போக சொல்லு, அவ இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது..” என்று கட்டளையிட்டார் வேதவல்லி. 
 
 
அதற்கு மறுப்பான தலையசைப்போடு வேதவல்லியை பார்த்த ரகோத்தமன் “அது முடியாதும்மா..” எனவும் “ஏன் முடியாது..?” என்று அவர் பேச்சை முடிக்க கூட விடாமல் வேதவல்லி ஆத்திரத்தில் படபடக்க.. “நந்தினி நம்ம வீட்டு சார்பாவோ, நம்ம நிறுவனத்தின் சார்பாவோ இங்கே வரலை.. அவ இந்த படத்தோட ஹீரோ துஷ்யந்த் அழைப்பின் பேரில் இங்கே வந்து இருக்கா.. அவளை நாம இங்கே இருந்து அனுப்ப முடியாது, அது இந்த படத்தோட ஹீரோவை அவமானப்படுத்துவது போல ஆகிடும்..” என்று பொறுமையாகவே விளக்கினார் ரகோத்தமன்.
 
 
“அவன் ஏன் இவளை கூப்பிட போறான்..? அப்படி என்ன அவனுக்கு இவ முக்கியமானவளா ஆகிட்டா..? இந்தப் படத்தில் நடிக்கும் போது வந்த பழக்கம் தானே..! அப்போ இந்த நிறுவனத்தின் மூலம் தானே அவங்க பழகி இருக்காங்க..?” என்று தனக்கே உரிய வகையில் ஒரு காரணத்தை கண்டுபிடித்து அவர் அப்போதும் சிடுசிடுக்க.. “அதெல்லாம் இல்லை, துஷ்யந்த் பிரெண்ட் தான் விநாயக்.. அவங்க இரண்டு பேரும் சின்ன வயசில் இருந்து ரொம்ப க்ளோஸ், அதனால் தான் ஸ்பெஷல் இன்விடேஷன் போயிருக்கு.. இதில் நாம் தலையிட முடியாது..” என்று அங்கு வந்து வேதவல்லியின் முன் மண்டியிட்டு அமர்ந்து சொல்லி இருந்தான் நிதின். 
 
 
சற்று முன் நடந்ததை எல்லாம் மேடையின் ஏற்பாடுகளை இறுதியாக ஒரு முறை சரி பார்த்துக் கொண்டிருந்த நிதின் கவனித்து விட்டே வேகமாக கீழே இறங்கி வந்து வேதவல்லிக்கு புரியுமாறு பேசி இருந்தான்.
 
 
“ஓ அப்போ அதனால் தான் இவ்வளவு பெரிய படத்தில் அவனை போட்டாளா இவ..?” என்று அதிலும் ஒரு குறையை கண்டுபிடித்து வேதவல்லி முகத்தை திருப்ப.. “நேத்து வரைக்கும் அவன் தான் இந்த படத்துக்கு சரியான தேர்வுனு சொல்லிட்டு இருந்தது நீங்க தானே..? இப்போ என்ன மாத்தி பேசறீங்க..?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு நிதின். 
 
 
“நீ என்னடா திடீர்னு அவ பக்கமா நின்னு பேசிட்டு இருக்கே..?” என்று சந்தேகமாக வேதவல்லி நிதினை பார்க்கவும் “நான் இந்த ப்ரோக்ராம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம நடந்து முடியணும்னு பேசிட்டு இருக்கேன்.. உங்களுக்கே தெரியும் இங்கே எவ்வளவு மீடியா இருக்குன்னு, நந்தினி நம்ம ஃபேமிலி மெம்பர்னு எல்லாருக்கும் தெரியும்.. இந்த பட தயாரிப்பில் பெரும் பங்கு அவளோடதுன்னும் எல்லாருக்கும் தெரியும், இதுவரை இந்த படத்தைப் பத்தின எல்லா தகவல்களும் அவள் மூலமா தான் வெளியே வந்திருக்கு.. அதனால் எல்லார் கண்ணும் இப்போ நம்ம மேலே தான் இருக்கும்.. கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்க கத்துக்கோங்க, வீட்டில் நடந்துக்கறது போல இங்கே ஏதாவது சீன் கிரியேட் செய்ய நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்..” என்று முகம் மாறாமல் பெரியவர்களிடம் மரியாதையோடு ஏதோ நிகழ்ச்சி தொடர்பாக பேசிக்கொண்டு இருப்பது போலான பாவனையோடே சொல்லிக் கொண்டிருந்தான் நிதின். 
 
 
“என்னடா என்னையே அடக்க பார்க்கிறாயா..?” என்று அப்போதும் பல்லை கடித்துக்கொண்டு வேதவல்லி கேட்கவும், “எனக்கு வீட்டு விஷயங்களை பிசினஸில் கொண்டு வரது கொஞ்சமும் பிடிக்காது.. நந்தினி இங்கே வந்தது ஏன் எதுக்குன்னு உங்களுக்கு கேட்க தோணினா, தாராளமா இந்த ப்ரோக்ராம் முடிஞ்ச பிறகு அவ வீட்டுக்கு போய் சண்டை போடுங்க.. இப்போ அமைதியா இருங்க, இல்லை என்னால் அதெல்லாம் முடியாதுன்னு சொன்னா.. உங்களை வீட்டுக்கு அனுப்பிட்டு நான் ப்ரோக்ராம் நடத்த வேண்டி இருக்கும், எப்படி வசதின்னு யோசிச்சு முடிவு செஞ்சுக்கோங்க..” என்றவன், அடுத்த ஒரு நொடி கூட அங்கு நிற்காமல் எழுந்து சென்று விட்டான். 
 
 
அதில் அவன் சென்ற திசையை திகைப்போடு வேதவல்லி பார்த்துக் கொண்டிருக்க.. அடுத்து ரகோத்தமனிடம் அவர் கோபமாக எதையோ சொல்ல வருவதற்குள் மீண்டும் சென்ற வேகத்திலேயே திரும்ப வந்திருந்த நிதின், “உங்க அம்மாகிட்ட சொல்லி வைங்க, இங்கே நான் சொல்றது தான் நடக்கும், நடக்கணும்.. நான் தலை குனியறது போல எதையாவது செஞ்சாங்க அப்புறம் மனுஷனா இருக்க மாட்டேன்..” என்று அவரிடம் முகம் மாறாமல் பேசி விட்டு அவன் சென்று விட, அவன் பேசியதில் உள்ள நியாயம் புரிந்து ரகோத்தமன் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து சென்று விட்டார். 
 
 
இதில் தன்னையே அவன் நந்தினிக்காக மிரட்டி சென்ற கோபத்தில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.. அவள் இங்கே இருக்கும் போது தான் எழுந்து சென்று விடவே கூடாது என்ற எண்ணத்தோடு ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார் வேதவல்லி.
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 568
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 30
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா


   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page