மௌனம் - 18
இதுவரை தனியே வெளியே சென்றே பழக்கம் இல்லாத மானஸாவின் முதல் அனுபவமே மிக பயங்கரமாக இருந்தது. பயம், பதட்டம், இருள் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கலக்கம் எல்லாம் ஒன்று சேர, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வழி எந்தப் பக்கம் என்று கூட தெரியாமல் சந்து சந்தாக ஓடிக்கொண்டிருந்தாள் மானஸா.
அவர்களும் விடாமல் பெரும் சிரிப்பும் கேலியாமாக சத்தமாக கத்தியப்படி அவளை விரட்டிக் கொண்டிருக்க.. பயத்தில் அவளுக்கு ஏதேதோ செய்தது. “கடவுளே கடவுளே..!” என்று முணுமுணுத்தபடியே எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு விட வேண்டும் என்ற எண்ணத்தோடு கண்ணீர் வழிய அவள் ஓடிக் கொண்டிருந்தாள்..
இன்று இங்கு வந்து இருக்கவே கூடாது, நல்லபடியாக வீடு போய் சேர்ந்து விட்டால் போதும் என்றெல்லாம் மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்தவள், இருளான ஒரு சந்தில் ஓடிக்கொண்டிருக்க.. கால் இடறி அவள் கீழே விழவும் அந்த வீதியைக் கடந்து விநாயக் நடந்து செல்வது தெரிந்தது.
அதில் தன் ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி “அண்ணாஆஆஆ..” என்று பெருங்குரல் எடுத்து மானஸா கத்தி இருக்க.. அலைபேசியில் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தவன் யாரோ அழைத்தது போலான குரலில் நின்று திரும்பிப் பார்த்தான்.
அவன் பின்னே யாரும் இருப்பது போலே தெரியவில்லை. அதில் மேலும் அவன் நடக்க தொடங்கவும், அருகில் இருந்த சந்தில் இருந்து சிலர் சிரிப்பும் கேலியுமாக பேசிக்கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்டது.
இதில் நெற்றியை சுருக்கியவன் சற்றுமுன் ஒரு பெண் குரல் கேட்டது போல் இருந்ததை எண்ணி, அப்படியே நான்கடி பின்னுக்கு நகர்ந்து சந்திற்குள் பார்க்க.. அங்கு மானஸா விழுந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ள முயன்று கொண்டிருப்பது தெரிந்தது.
அதேநேரம் இருளில் ஒரு சிலர் அவளை நெருங்குவதும் தெரிய, நொடியில் சூழ்நிலை புரிய.. வேகமாக அங்கு விரைந்தவன் மானஸாவை கை கொடுத்து தூக்க.. அவனைக் கண்டதில் உண்டான நிம்மதியோடும் தைரியத்தோடும் “அ.. அண்ணா.. ஆஆ..” என்று மீண்டும் அவனை அழைத்தபடி இறுக விநாயக்கை அணைத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் அழைப்பும் இந்த அணைப்பும் அவனை திகைக்க செய்திருக்க.. அதை அப்போதைக்கு புறம் தள்ளி வைத்து விட்டு அவளை நோக்கி ஓடி வந்தவர்களை முறைப்பாகப் பார்த்தவன் “என்னடா செஞ்சுட்டு இருக்கீங்க..?” என்றான்.
“ஹாங் பார்த்தா தெரியலை, ஓடி பிடிச்சு விளையாடறோம்..” என அதில் ஒருத்தன் நக்கலாக சொல்லவும் “ஓஹோ, ஓட கால் இருக்கணும் இல்லை.. ஓட விட்டு வெளுத்துடுவேன் ஜாக்கிரதை..” என்றான் அழுத்தமானக் குரலில் அவர்களை முறைத்துக் கொண்டே விநாயக்.
“ஹை தோடா..!”
“நாங்க அப்படியே பயந்துட்டோம்..!”
“இவர் பெரிய..” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையை படு நக்கலாக சொல்ல.. இறுதியாக பேசியவன் ‘பெரிய’ என்று சொல்லி அடுத்து என்ன சொல்ல வந்தானோ அதற்குள் விநாயக்கின் முஷ்டி அவன் வாயை உடைத்து இருந்தது.
ஓங்கி ஒரே குத்து தான் விட்டிருந்தான். அதற்கே அவன் வாயில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் வெளிவந்திருக்க.. நான்கு பற்கள் வேறு கீழே உடைந்து விழுந்து இருந்தது. இதை கண்டு மற்றவர்கள் மிரண்டு நின்றிருக்க.. “உங்களைப் போல வாய் வீராப்பு பேசறவன்னு நினைச்சுட்டீங்களா..! வாயை உடைச்சுட்டு தான்டா பேசுவேன்..” என்று அவன் கர்ஜித்த விதத்தில் அவர்களுக்குள் குளிர் பரவியது.
“எவ்வளவு திமிரு இருந்தா, ஒரு பொண்ணை இப்படி பப்ளிக்கா விரட்டிட்டு வருவீங்க.. இதில் அத்தனை பேரும் போதையில் வேற இருக்கீங்க.. போலீஸ்காரன்கிட்டேயே உங்க வேலையை காட்டறீங்களா..?” என்று இதழ் மடித்து ஒருவித ஆத்திரத்தை அடக்கிய குரலில் அவன் பேசிக் கொண்டே செல்ல.. “என்னது போலீசா..?” என அங்கிருந்தவர்கள் மிரண்டனர்.
அதுவரை அவன் கைவளைவில் பாதுகாப்பாக இருந்த மானஸா கூட ‘போலீசா..!’ என்ற அதிர்வோடு தான் விநாயக்கின் முகத்தை லேசாக நிமிர்ந்து பார்த்திருந்தாள்.
அடுத்த நொடி நால்வரும் சிதறி ஒவ்வொரு திசையில் ஓட பார்க்க.. அதற்கு வாய்ப்பே அளிக்காமல் மானஸாவை சற்று தள்ளி நிறுத்தி இருந்தவன், புயல் வேகத்தில் சுழன்று ஒவ்வொருவரையும் அடித்து சாய்த்து இருந்தான். எல்லாம் இப்போதே கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்திருக்கும் சின்ன பிள்ளைகள்.
இவனின் முறுக்கிய தேகத்தின் வேகத்திற்கு முன் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதோடு அவர்கள் போதையிலும் வேறு இருக்க.. வெகு சீக்கிரமாகவே விநாயக் தன் வேலையை முடித்துக் விட்டிருந்தான்.
வலி தாங்காமல் வீதியில் சுருண்டு ஒவ்வொருவரும் முனகிக் கொண்டிருக்க.. “பொறு** ராஸ்க** இந்த வயசுலேயே இதெல்லாம்..” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவன், பார்வையில் கோழிக்குஞ்சாக நடுங்கி இருளில் நின்றிருந்த மானஸா விழவும், அப்படியே தன் வார்த்தைகளை உள் இழுத்துக் கொண்டவன், தன் அலைபேசியை எடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்தான்.
அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து தன்னை முறைப்படி அறிமுகம் செய்து கொண்டவன், இங்கு இப்படி ஒரு சூழ்நிலை என்பதை சொல்லி வந்து இவர்களை அள்ளிச் செல்லுமாறும், இது சம்பந்தமாக வேறு ஏதேனும் அவன் எழுதி கொடுக்கவோ, சாட்சி சொல்லவோ வேண்டி இருந்தால், நாளை காலை காவல் நிலையத்திற்கு வருவதாகவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன், சுற்றும் முற்றும் பார்க்க.. அங்கு ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
வேகமாக அங்கே சென்று எதையோ தேடியவன், நீண்ட ஒரு கயிறை எடுத்துக் கொண்டு வந்தான். நால்வரையும் எழுந்து ஓட முடியாதபடி அங்கு இருந்த மரத்தோடு சேர்த்து கட்டி வைத்தவன், அதன் பின்பே மானஸாவின் பக்கம் திரும்பினான்.
அவளோ உடல் நடுக்கம் இன்னும் கொஞ்சமும் குறையாமல் அழுகையோடு அப்படியே அருகில் இருந்த சுவரைப் பிடித்தபடி நின்றிருக்க.. அந்த நிலையில் அவளைக் கண்டவனின் மனம் ஏதோ செய்தது.
அதில் இரண்டு எட்டில் அவளை நெருங்கியவன், “ஹேய் பேபி கேர்ள் ரிலாக்ஸ், எல்லாம் ஓவர்.. யூ ஆர் இன் சேஃப் ஹான்ட்ஸ்..” என்றவனை அவள் மீண்டும் தாவி அணைத்துக் கொள்ள.. சிறு திகைப்போடு அவளை பார்த்தான் விநாயக்.
இந்த நொடி வரை அவள் உடல் நடுங்கி கொண்டிருக்கவும், சின்ன பெண் அளவுக்கு அதிகமாக பயந்து இருக்கிறாள் என புரிய.. ஆதரவாக அவளின் தலையை வருடியவன், “ஒண்ணுமில்லைமா.. பயப்படாதே, நான் உன் கூட இருக்கேன்.. உன் வீடு எங்கே இருக்கு..?” என்று மென்மையான குரலில் பேசினான் விநாயக்.
“வீ.. வீ.. அ.. அ.. ண்.. ணா..” என அவள் திக்கி திணற பயந்து போய் இருப்பதில் பேச முடியாமல் சிரமப்படுவதாக நினைத்தவன் “உனக்கு வீடு பக்கத்துலேயா..?” என்றான்.
இதுவரை அவள் வாழ்நாளில் பார்த்தே இல்லாத ஒரு அதிர்வை கண்டிருந்ததில் உண்டான அதிர்வு லேசாக நீங்கி, தன்னை சார்ந்த ஒருவனை பார்த்து விட்ட நிம்மதி மெல்ல அவளுள் படர தொடங்கி இருக்க.. அவனுக்கு தன்னை யார் என்றே தெரியவில்லை என புரிந்த நொடி அவளுக்கு மேலும் அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது.
சிறுவயதில் இருந்து தேள் கொடுக்குப் போலான வார்த்தைகளை மட்டுமே கேட்டு வளர்ந்து இருந்தது.. அனைவரும் வீட்டில் இருக்க, இவள் மட்டும் விடுதியில் இருந்தது எல்லாம் சேர்ந்து யாருக்கும் தன்னை பிடிக்காது யாருக்கும் தான் முக்கியம் இல்லை என்ற எண்ணமே அவளின் தன்னம்பிக்கையை வெகுவாக அசைத்துப் பார்த்திருந்தது.
அதில் மேலும் அவள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் திணற.. “ஒண்ணுமில்லைமா, ஏன் இவ்வளவு பயப்படறே..? எல்லாம் சரியாகிடுச்சு, முதலில் இங்கே இருந்து நாம கிளம்புவோம் வா..” என்று அவள் அங்கு நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே மேலும் பயப்படுகிறாளோ என நினைத்து விநாயக் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.
அவனுக்கு மறுப்பேதும் சொல்லாமல் அவளும் உடன் செல்ல.. நடக்கத் தொடங்கியவுடன் லேசாக அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்த விநாயக் முயல.. அவளோ மேலும் அவனோடு இறுக்கமாக ஒன்றி கொண்டாள்.
இதில் ஒற்றைப் புருவத்தை கேள்வியாக உயர்த்தியவன் “உன் பேர் என்ன..?” எனவும் “மா.. மா..” என்று அவள் திணற.. “இன்னும் என்ன பயம் உனக்கு..?” என ஏதோ கேட்க முயன்றவனுக்கு, அப்போதே ‘அவளுக்கு பேசும் போது இப்படியாகும் பிரச்சனை இருக்குமோ..!’ எனத் தோன்றியது.
வேறு எதுவும் அதை பற்றி கேட்காமல் “உன் வீடு எங்கே..?” எனவும் சிறு தயக்கத்திற்கு பிறகு அவள் வீடு இருக்கும் பகுதியை கூறினாள் மானஸா. அதில் அவன் நடை அப்படியே நிற்க.. “அவ்வளவு தூரமா..! அப்போ இங்கே இந்த நேரத்தில் என்ன செய்யறே நீ..?” என்றவனின் குரலில் லேசாக கடுமை சேர்ந்து இருந்தது.
இதுவரை எதிர்பாராமல் எப்படியோ அவர்களிடம் சிக்கிக் கொண்டாள் என நினைத்திருந்தவன், ‘ஒருவேளை தெரிந்தே விரும்பி அவர்களோடு வந்திருப்பாளோ..!’ என்று நினைத்து குரலில் கடுமையைக் கொண்டு வந்திருக்க.. “ப்.. ப்.. ரெ.. ண்.. ட்.. பர்த்.. டே..” என்று தொடங்கி எப்படியோ நடந்த அனைத்தையும் அவள் சொல்லி முடித்திருக்க.. அவனுக்கு பாவமாக போனது.
கோழிக் குஞ்சாக தன் கரங்களில் நடுங்கிக் கொண்டிருப்பவளை காணும் போதே ஏதோ ஒரு உணர்வு அவனை அசைத்துக் கொண்டிருக்க.. ‘இந்த நேரத்தில் அவன் மட்டும் இந்த பக்கம் வராமல் போயிருந்தால், அவள் நிலை என்னவாகி இருக்கும்..?’ என்று தான் அவனுக்கு அந்த நொடி தோன்றியது.
இங்கு இருக்கும் துஷ்யந்த்தின் பீச் ஹவுஸில் நண்பர்கள் எல்லாம் இன்று கூடியிருந்தனர். சமீபமாக துஷ்யந்த் நடித்த ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. அதை கொண்டாட மாலையிலிருந்து அனைவரும் இங்கு இருக்க.. இன்று நண்பர்களே சேர்ந்து சமைக்கலாம் என்ற விபரீத முடிவு எடுத்து அதற்கான வேலைகளில் இறங்கி இருக்க.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை உணவு செய்ய முனைந்ததில் சில பொருட்கள் தேவைப்பட்டது.
அதை வாங்குவதற்காகவே வெளியில் வந்திருந்தான் விநாயக். இரண்டு தெரு தள்ளி இருந்த சூப்பர் மார்க்கெட் செல்ல வந்திருந்தவன், தர்ஷனும் உடன் வருவதாக சொல்லி தன் காரை எடுக்க முயலவும் “வண்டியெல்லாம் வேண்டாம், நான் அப்படியே ஒரு வாக் போய் வாங்கிட்டு வரேன், அதுக்குள்ளே நீ இங்கே இருக்க பஞ்சாயத்தை பார்..” என தன் இருசக்கர வாகனத்தை கூட எடுக்காமல் காலாரா நடந்து வந்து கொண்டிருந்த போது தான் மானஸாவை கண்டான்.
ஒருவேளை தர்ஷனுடன் காரில் சென்றிருந்தால் இவளை பார்த்து இருக்கும் வாய்ப்பும் அவனுக்கு கிடைத்திருக்காது. அப்போது இந்த பெண்ணின் நிலை என்னவாகி இருக்கும் என்று தான் அவன் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதில் லேசாக மானஸா அவன் சட்டையை பிடித்து இழுக்க.. ‘என்ன..?’ என்பது போல் அவள் முகத்தை திரும்பிப் பார்த்தான் விநாயக். “உங்களுக்கு என்னை தெரியலையா..? “ என்று அவள் கேட்க.. விழிகளை சுருக்கியவன் “என்ன..?’ எனவும் “நா.. நான் சொன்னேனே, நீங்கள் கவனிக்கலையா..?” என்று மீண்டும் அவள் கேட்கவும் “என்ன சொன்னே..?” என்றான் விநாயக்.
“நா.. நா.. இ.. ல்.. லை.. நீ.. நீங்க..” என்று அவன் பார்வை தன் மேல் கூர்மையாக பதிந்திருப்பதில் உண்டான தடுமாற்றத்தோடு அவள் அடுத்த வார்த்தை வராமல் அவனை தயக்கமாக பார்க்கவும், “அவசரப்படாம.. பயப்படாம.. பொறுமையா பேசு..” என்றான் அப்போதும் மென்மையாகவே விநாயக்.
அதில் உண்டான தைரியத்தோடு “நான் உங்க தங்கச்சி தான், என்னை உங்களுக்கு தெரியலையா..?” என்று மானஸா கேட்டிருக்க.. “தங்கச்சி..?” என்று புரியாமல் விழிகளை சுருக்கினான் விநாயக். அவனின் செயலில் மேலும் மனதளவில் அடிப்பட்டு போனவள், “அப்.. அப்பா.. அப்பா தான்.. நீங்க அண்ணான்னு..” என்று திணற “யாரு உங்க அப்பா..?” என்றான் கூர்மையாக அவளையே பார்த்தப்படியே குரல் இறுக விநாயக்.
அதுவரை அவன் தன்னிடம் இருந்த விதத்திற்கும் இந்த கேள்வியை கேட்கும் போது பார்த்த விதத்திற்கும் உள்ள வித்தியாசம் மானஸாவுக்கு தெளிவாக புரிந்தது.
அதில் உண்டான பெரும் தயக்கத்தோடு “ர.. ரகோ..” என்று அவள் சொல்லிக் கூட முடிக்கவில்லை வேகமாக அவளை உதறி கொண்டு தள்ளி நின்றிருந்தான் விநாயக்.
இதில் பயந்து போய் மானஸா அவனை பார்க்க.. கோபமாக அவளை முறைத்துப் பார்த்தவன், வேறு எதுவும் பேசாமல் வேகமாக அங்கிருந்து செல்ல முயல.. இதை கொஞ்சமும் எதிர்பாராமல் திகைத்து நின்ற மானஸா அழுகையோடு அவனை பின்தொடர்ந்தாள்.
வீதி முனைவரை சென்றவன், அவள் தன் பின்னே வருவதில் உண்டான எரிச்சலோடு நின்று திரும்பிப் பார்த்து “கொஞ்ச நேரத்துக்கு முன்னே அவங்க வாங்கினதை பார்த்தே இல்லை, இன்னொரு அடி எடுத்து என் பின்னே வெச்சே.. உனக்கும் அதே மாதிரி விழும்..” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு செல்ல.. மானஸாவுக்கு பயத்தில் உடல் நடுங்கியது.
ஆனால் இது அவளுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத இடம். இங்கு அவனைத் தவிர அவளுக்கு வேறு யாரையும் தெரியாது. ஸ்ரீ வீடு இப்போது எந்த பக்கம் என்று கேட்டால் கூட அவளுக்கு சொல்லத் தெரியாது. அப்படி இருக்க..இருளில் எவ்வளவு நேரம் தனியே நின்றிருக்க முடியும்..? இதற்கு விநாயக் அடித்தால் கூட பரவாயில்லை என்று எண்ணி அவன் பின்னே மானஸா செல்ல முயல.. அவன் பொறுமை பறந்தது.
“ஏய் என்ன உங்க அப்பா சொல்லி இந்த ட்ராமா எல்லாம் நடக்குதா..? என்னை வெச்சு விளையாடறீங்களா..!” என அவன் கோபமாக கத்த.. “இல்.. இல்லையில்லை அண்ணா..” என்றவள் அவனின் பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தி “இல்லை..” என்று வேகமாக தலையசைக்க.. “பொதுவாவே எனக்கு பொறுமை கொஞ்சமும் இல்லை.. அதை சோதிக்காதே..!” என்று விட்டு அவன் மீண்டும் செல்ல.. அழுகையோடும் தயக்கத்தோடும் பல அடிகள் இடைவெளி விட்டே அவனை மீண்டும் பின்தொடர்ந்தாள் மானஸா.
இதில் ஆத்திரத்தில் திரும்பி விநாயக் அவளை அடிப்பது போல் கையை ஓங்கிக் கொண்டு வர, மானஸா பயத்தில் அப்படியே மடிந்து அங்கு அமர்ந்துவிட்டாள். அதே நேரம் தர்ஷனிடம் இருந்து விநாயக்கிற்கு அழைப்பு வந்தது.
அதை எடுக்காமல் அவன் தவிர்க்க.. மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்ததில் எரிச்சலானவன் எடுத்து “என்னடா..?’ என்று பல்லை கடிக்கவும் “ஏன் மச்சி பக்கத்தில் இருக்க சூப்பர் மார்க்கெட் தானே போறேன்னு சொன்னே..! ஃபேக்டரிக்கே போயிட்டியோ..?” என்றான் இவன் மனநிலை புரியாமல் அவன் கேலியாக.
“மரியாதையா சொல்றேன் போனை வைச்சுடு..” என அவன் இருக்கும் ஆத்திரத்தில் வார்த்தைகளை அழுத்தத்தைக் கூட்டி சொல்லவும், மறுவார்த்தை பேசாமல் அழைப்பை துண்டித்திருந்த தர்ஷனுக்கு எதுவோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.
ஆனால் விநாயக் தன் வேலையில் கவனமாக இருக்கும் போது யாராவது தொந்தரவு செய்தால் இப்படித்தான் பேசுவான் என்பதால் பெரிதாக வேறு எதையும் யோசிக்காமல் அவன் தன் நண்பர்களிடம் சென்று “இங்கே இருக்கறதை வைச்சு செஞ்சுடுவோம், அவன் இப்போதைக்கு வரமாட்டான்..” என்றிருந்தான்.
இங்கு தன் கோபத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளை காணும் போதே அவனுக்கு மனம் ஏதோ செய்தது. சற்று முன் நடந்ததில் இருந்து இப்போது வரை மீண்டிடாதவளை தன் கோபம் வேறு பயம் கொள்ள செய்திருப்பது புரிந்து, தன்னை முயன்று அமைதிப்படுத்திக் கொண்டவன் “இங்கே பார், யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாம, கொஞ்சமாவது யோசி.. இத்தனை வருஷமும் இல்லாத சொந்தம் இப்போ எப்படி வரும்..? புரியுதா உனக்கு..!” என பல்லை கடித்துக்கொண்டு கேட்கவும், பதிலின்றி அவனைப் பார்த்து அழுகையில் தேம்பிக் கொண்டு இருந்தாள் மானஸா.
யார் மேலோ உள்ள கோபத்தில் இந்த சின்ன பெண்ணை வருத்துவது புரிய, நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவன், அவள் அருகில் மண்டியிட்டு அமர.. அவளோ அழுதால் கூட திட்டுவானோ என்று பயந்து தன் இரு கரங்களைக் கொண்டு வாயை இறுக்கமாக பொத்திக் கொண்டாள்.
தன்னைக் கண்டு அவள் பயப்படுவது மேலும் அவனுக்கு வருத்தத்தை கொடுக்க.. சற்று முன் தன்னிடம் அத்தனை உரிமையாக அவள் நின்றிருந்த நிலை நினைவுக்கு வரவும், “லுக்..” என்று தொடங்கியவன் பின் “உன் பெயர் என்ன..?” என்றான்.
“மா.. மான்..” என்றவள் அழுகையுடன் பேசியதில் ‘ஸா’ வெளியில் வராமலே போனது. அதில் உண்டான புன்னகையோடு “மான்..! புள்ளி மானா நீ..?” என்று தன்னை மீறி அவன் கேட்டு விட்டிருக்க.. ‘ஹாங்..’ என்று மருண்டு விழித்தாள் மானஸா.
அதில் தன்னையே ஆச்சரியமாக நினைத்தவன், ‘எப்படி இவ்வளவு கோபத்திலும் இவளிடம் தன்னால் புன்னகையோடு பேச முடிகிறது..?’ என்று மனதிற்குள் யோசித்தவாறே “மானு இங்கே பாரு..” என்றவன், நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு “நேரமாகுது வீட்டுக்கு போ..” என்றான்.
“என.. க்கு.. எனக்கு.. வழி தெரியாது..” என அவள் சொல்லவும், “இங்கே எப்படி வந்தே..?” என்றான் விநாயக். “கா.. காரில்.. ஆ.. ஆனா.. டிரைவர் பத்து மணிக்கு தான் வருவாரு..” என அவள் திக்கி திணறி மெதுவாக பேசி முடிக்கவும், மணியை பார்த்தான் விநாயக்.
அது இப்போதே ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க.. மேலும் ஒரு மணி நேரம் அவள் காத்திருக்க வேண்டி வரும் என்று புரிந்து, “அப்போ கால் செஞ்சு சீக்கிரம் வர சொல்லு..” என்றான் விநாயக்.
“என் ஃபோன் அங்கே..” என அவள் திணறவும் கையில் பை எதுவும் இல்லாமல் அவள் இருப்பது அப்போதே புரிய.. “அந்த வீடு எங்கே இருக்கு..?” என்றான் விநாயக். ‘தெரியவில்லை’ என்பது போல் அவள் தலையசைக்க.. அவன் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது.
ஆனாலும் சற்று சத்தமாக பேசினால் கூட அவள் மிரண்டு விடுகிறாள் எனப் புரிந்து வெகுவாக இழுத்து பிடித்த பொறுமையோடு தன் அலைபேசி எடுத்து அவளிடம் நீட்டினான் விநாயக்.
அதையும் அவள் வாங்காமல் அவனை பரிதாபமாக பார்க்க.. “இப்போ என்ன..?” என்றான் விநாயக். “எனக்கு.. எனக்கு யார் நம்பரும் தெரியாது..” என அவள் அழுகை எட்டிப் பார்க்கும் குரலில் சொல்லவும், விநாயக்கிற்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
இதில் நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன், தன் அலைபேசியில் இருந்து சட்டென நந்தினிக்கு அழைத்திருந்தான். ஆனால் அன்று பார்த்து அவள் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக அவனுக்கு தகவல் வரவும் யோசனையாக விழிகளை சுருக்கியவன், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பின் வேறு யாருக்கும் அழைக்க பிடிக்காமல் அவளை யோசனையாக பார்க்க.. மானஸாவும் செய்வதறியாது அவனை பார்த்தாள்.
இரண்டு நிமிடம் தீவிரமாக யோசித்தவன் பின் “நான் உன்னை வீட்டில் விடட்டுமா..?” எனவும் வேகமாக சரியென அசைந்தது அவள் தலை. இதற்காகத்தான் அவன் பின்னே வந்திருக்கிறாள் எனப் புரிந்து “சரி எழுந்திரு..” என்றான் விநாயக்.
அவளும் சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை போல் எழுந்து நிற்க.. அவளின் அந்த செயலில் லேசாக மென்னகை உண்டாக சிறு இடைவெளி விட்டு அவளோடு நடந்தவன், தர்ஷனுக்கு அழைத்தான். “சொல்லு மச்சி..” என்று அவன் கேட்கவும் “என் பைக் சாவி எடுத்துட்டு வெளியே வா..” என்று சொல்லி அடுத்து தர்ஷன் எதுவும் கேட்க கூட வாய்ப்பு கொடுக்காமல் அலைபேசியை அணைத்து இருந்தான் விநாயக்.
அதில் தன் காதில் இருந்த அலைபேசியை எடுத்து கேள்வியாக பார்த்த தர்ஷன் “என்னை என்னன்னு தான்டா நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்..? “ என்று புலம்பியவாறு அவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து நிற்க.. அடுத்த மூன்று நிமிடங்களில் மானஸாவோடு அங்கு வந்தான் விநாயக்.
சிறு பெண்ணாய் அழகு பொம்மை போல் அவன் பின்னே நடந்து வருபவளையே யோசனையாக தர்ஷன் பார்க்க.. “அங்கே என்ன சிலை மாதிரி நிற்கறே..? சாவிய கொடு..” என்றான் விநாயக்.
‘யார்..? என்ன..?’ என்று கேட்கத் தோன்றினாலும் அவன் வேலை சம்பந்தமான ஏதோ ஒன்றாக இருந்தால் பதில் வராது என்று புரிந்து தர்ஷன் அமைதியாகவே சாவியை கொடுக்க.. மானஸாவை வண்டியில் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் விநாயக்.
அடுத்த சில நிமிடங்களில் ரகோத்தமன் வீட்டிற்கு இரண்டு வீடு முன்னதாகவே விநாயக் தன் வாகனத்தை நிறுத்தி இருக்க.. மெல்ல இறங்கி அவன் முகம் பார்த்து “தேங்க்ஸ் அண்..” என்று தொடங்கியவள், அவன் பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தினாள்.
‘கிளம்பு’ என்பது போல் அவன் தலையசைக்க.. ‘சரி’ என்ற தலையசைப்போடு அவளும் அங்கிருந்து நகர முயல, “ஒரு நிமிஷம்..” என்றவன் “முடிஞ்ச வரைக்கும் தனியா எங்கேயும் போகாதே.. வீட்டில் யாராவது இருந்தா துணைக்கு கூட்டிட்டு போ.. இல்லை கொஞ்சம் வளர்ந்த பிறகு தனியா போ..” என அவன் இறுக்கமான குரலிலேயே கூறினாலும் அதில் அவள் மேலான அக்கறை லேசாக ஒட்டிக்கொண்டு இருந்தது.
அதற்கும் மானஸா சரி என்று தலையை மட்டும் அசைக்க.. மீண்டும் ‘போ’ என்பது போல் அவன் விழியசைத்தான். அதில் மெல்ல அடிமேல் அடிவைத்து தன் வீட்டை நெருங்கியவள், கேட்டில் கை வைக்கச் சென்று பின் ஷாக் அடித்தது போல் வேகமாக அதை இழுத்துக்கொண்டு அப்படியே மதில் சுவர் பக்கம் ஒதுங்கி மறைவாக நின்றாள்.
தன் வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு அவள் உள்ளே சென்ற பின் கிளம்ப நினைத்து காத்திருந்த விநாயக் மானஸாவின் செயல்கள் புரியாமல் விழிகளை சுருக்கி பார்க்க.. அவளோ உள்ளே லேசாக எட்டிப் பார்ப்பதும் பின் தன்னை மறைத்துக் கொள்வதுமாகவே நிற்க.. என்னவென்று புரியாமல் அவள் அருகில் சென்று அவன் வண்டியை நிறுத்தினான்.
அவனைக் கண்டு மேலும் மருண்டவள், ‘வேகமாக இங்கிருந்து போங்க..!’ என்பது போல் கையை அசைக்க.. எதற்கு என்று புரியாமல் விநாயக் விழிகளை சுருக்கும் போதே உள்ளிருந்து வேதவல்லியின் பெரும் குரல் கேட்டது.
மானஸாவின் பயம் ஏன் என்று இப்போது புரிய.. “வா வண்டியில் ஏறு..” என்றான் சட்டென விநாயக். அவன் அப்படி சொல்வான் என்று எதிர்பாராத மானஸா திகைத்து விநாயக் முகத்தை பார்க்கவும் ‘வா’ என்பது போல் அவன் மீண்டும் விழியசைக்க.. யோசிக்காமல் சென்று அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் மானஸா.
சற்று தள்ளி இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லர் அழைத்துச் சென்றவன், அங்கு அவளை அமர வைத்து ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து மெல்ல விசாரிக்க.. எந்த தயக்கமும் ஒளிவு மறைவுமின்றி அனைத்தையும் அழுகையோடு பகிர்ந்து கொண்டிருந்தாள் மானஸா.
இதையெல்லாம் கேட்டவனுள் அத்தனை ஆத்திரம் கனன்றது. ‘எத்தனை கொடூரமான பிறவி.?’ என்று வேதவல்லியை பற்றி அருவருப்பாக நினைத்தவன், ‘இந்த சின்ன பெண்ணை மனதளவில் எவ்வளவு நோகடித்து இருக்கிறார்..?’ என்று கோபத்தோடு எண்ணியவாறே அவளை சமாதானம் செய்தான்.
இந்த வார்த்தைகள் எல்லாம் அவளின் இத்தனை வருட வலியை ஒன்றுமில்லாமல் செய்து விடாது என்று புரிந்தாலும், தன்னைப் போலவே வேதவல்லியால் பாதிக்கப்பட்ட இன்னொரு ஜீவன் என்ற எண்ணமே மானஸாவை தனக்கு நெருக்கமானவளாக அவனை நினைக்க செய்திருந்தது.