மௌனம் - 11
அதன் பின் முற்றிலும் ரகோத்தமன் வேதவல்லியிடம் இருந்து ஒதுங்கிக் கொண்டார் எனலாம். அவராக ஏதாவது கேட்டால் மட்டுமே ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வதோடு மரியாதையுடன் விலகி நின்று கொண்டார்.
விருப்பமே இல்லை என்றாலும் தன் கழுத்தில் அணிவித்த மாங்கல்யத்திற்கு மதிப்பளித்து ரகோத்தமன் தன்னோடு வாழ்வதை புரிந்து கொண்ட புஷ்பா, எல்லா வகையிலும் அவருக்கு துணை நிற்க தொடங்கினார்.
புஷ்பாவை வைத்து ரகோத்தமனை தன் வழிக்கு வரவழைக்க நினைத்திருந்த வேதவல்லிக்கு இது மிகப் பெரிய அடி. அபிராமியை ரகோத்தமன் வாழ்க்கையில் இருந்து விரட்டி அடிக்க புஷ்பா மூலம் எத்தனையோ முயற்சிகளை வேதவல்லி எடுத்தும் எல்லாம் தோல்வியை சந்தித்தது.
தனக்காக தன் காதல் கணவனை விட்டுக் கொடுத்த அபிராமியின் மேல் தனி ஒரு அன்பும் மரியாதையும் புஷ்பாவுக்கு உண்டாகியிருந்தது. அதோடு தன் கணவனின் மனதில் நிறைந்திருப்பவர் என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள.. அவர்களுக்கான உரிமைகளில் தலையிடாமல் இருந்து விடுவார் புஷ்பா.
ராதா கிட்டத்தட்ட வேதவல்லலியின் மற்றொரு வடிவம் எனலாம். அவரும் தன் மகளிடம் எவ்வளவோ இதைப்பற்றி பேசி பார்த்தும், எதற்கும் புஷ்பா வளைந்து கொடுக்க தயாராக இல்லை. அவர் எதிர்பார்த்தது ரகோத்தமன் உடனான ஒரு வாழ்க்கை. அது கிடைத்துவிட்ட பிறகு வேறு எதுவும் தனக்குத் தேவையில்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டிருந்தார் புஷ்பா.
இதெல்லாம் சேர்ந்து புஷ்பாவை ஓரளவு ரகோத்தமனுக்கு பிடிக்க தொடங்கி இருந்தது. பக்கத்தில் இருந்து பார்த்து பேசி பழக தொடங்கிய பின்பே, வேதவல்லி போலவோ ராதா போலவோ புஷ்பா கொஞ்சமும் இல்லை என்று அவருக்கு புரிந்தது.
அதோடு புஷ்பாவை புரிந்து கொள்ளவும் முயன்றார். இந்த திட்டங்களில் எல்லாம் புஷ்பாவுக்கும் தொடர்பு உண்டு என முன்பு நினைத்திருந்தவர், அதன் பிறகு சமாதானமாகி புஷ்பாவுடன் நேரடியாக அனைத்தையும் பேசி பார்த்த போது தான் இதெல்லாம் புஷ்பாவுக்கு தெரியாது என்பதும், தனக்கு கிடைத்த வாய்ப்பை மறுக்க மனமில்லாமல் அமைதியாக இருந்து விட்டதையும் மறுக்காமல் மறைக்காமல் ஒத்துக் கொண்டிருந்தார் புஷ்பா.
இப்படி இவர்கள் வாழ்க்கை இடையில் கொஞ்சம் தடுமாறினாலும் அதன் பின் சமநிலையில் சரியாகப் பயணிக்க தொடங்கி இருக்க.. வேதவல்லி மட்டும் தன் முயற்சிகளை ஒருபோதும் கைவிடவில்லை. ராதாகிருஷ்ணனில் தொடங்கி ரகோத்தமன் புஷ்பா என்று அனைவரிடமும் முயன்று பார்த்தவர் யாரும் தனக்கு கை கொடுக்காததில் அவ்வப்போது திட்டங்களை மட்டும் தான் மாற்றிக் கொண்டிருந்தாரே தவிர தன் மனதை மாற்றிக் கொள்ளவில்லை.
இதில் வேதவல்லியின் அத்தனை முயற்சிகளுக்கும் எப்போதும் துணை நிற்பது ராஜேந்திரன் மட்டுமே..! அதில் குறுக்கு வழியில் கூட முயன்று பார்த்து இருவரும் தோற்று இருந்தனர். அதன் அடுத்த படியாக சற்றும் யோசிக்காமல் தன் முயற்சியில் மனம் தளறாத வேதாளம் போல் புஷ்பாவின் மீது இருந்த தன் கவனத்தை புஷ்பாவின் மகன் நிதினின் பக்கம் திருப்பி இருந்தார் வேதவல்லி.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிஞ்சு மனதில் மற்றவர்களை விட, ‘நான் மட்டுமே உன் வாழ்க்கையின் நலனை பற்றி யோசிப்பேன்.. நான் சொல்வதை நீ கேட்டு நடந்தால் மட்டுமே உன் வாழ்க்கை சிறக்கும்..!’ என்றெல்லாம் பதிய வைத்துக் கொண்டே இருந்தார்.
அது சரியாகவும் வேலை செய்தது. தன் பெற்றவர்களை விட பாட்டியிடமே அதிகம் இருக்கத் தொடங்கினான் நிதின். அப்போதெல்லாம் நந்தினி இங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவள் தன் தந்தையுடன் அந்த வீட்டில் வளர்ந்து கொண்டு இருந்தாள்.
அந்த நேரம் மானஸாவும் பிறந்திருக்கவில்லை என்பதால் ஒரே பேரனின் மேல் அதீத பாசத்தோடு வேதவல்லி நடந்து கொள்வதாக புரிந்து கொண்ட ரகோத்தமனும் இதை பெரிதாக நினைக்கவில்லை. புஷ்பாவும் இதில் எல்லாம் தலையிடுவது இல்லை.
பிள்ளைக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டு அவர் அங்கு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருக்க.. இந்த உறவு சிக்கலோ தன்னை சுற்றி இப்படி ஒரு சதி வலை நடப்பதையோ அறியாத விநாயக், தாயின் அன்பிலும் தந்தையின் அதீத பாசத்திலும் அந்த வயதிற்கேயான அத்தனை சந்தோஷங்களோடும் வளர தொடங்கியிருந்தான்.
ரகோத்தமனின் அன்பின் காரணமாக அமைதியாக இருந்தாலும் அபிராமிக்கு வேதவல்லியின் குணமும் அவர் அடுத்து என்ன செய்ய முயல்கிறார் என்பதும் நன்றாக புரிந்தே இருந்தது.
ஆனால் ரகுத்தமனை விட்டு விலகி நிற்பதெல்லாம் தன்னால் முடியாது எனப் புரிந்தே அமைதியாக அனைத்தையும் பொறுத்துக் கொள்ள தொடங்கிய அபிராமி, முதலில் செய்தது தன் பிள்ளையின் பாதுகாப்பையும் அவனின் இளமைப் பருவம் இயல்பாக அமைதியாக செல்ல வேண்டும் என்பதையும் உறுதி செய்தது தான்.
அதில் அவர் தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பிள்ளைகளோடு சேர்த்து விநாயக்கையும் மிகப் பெரிய பள்ளி ஒன்றின் விடுதியில் சேர்த்து விட்டிருந்தார். அதோடு நடிப்பதையும் அபிராமி நிறுத்தவில்லை. தன் மகனுக்கு தேவையான எல்லாம் எப்போதும் கிடைக்க யார் உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ தேவையான அனைத்தையும் செய்துக் கொண்டிருந்தார்.
அதில் அவ்வப்போது எழும் சலசலப்புகள் எல்லாம் அவனுக்கு தெரியாமலே போனது. விநாயக் விடுமுறையில் வரும் நேரங்களில் பெரும்பாலும் அவனோடு இருப்பது போல் பார்த்துக் கொண்டார் ரகோத்தமன்.
இப்படியே வாழ்க்கை சென்று விட்டால் பிறகு விதி என்று ஒன்று இருப்பதை அனைவரும் மறந்தே போவார்களே..! அப்படித்தான் விநாயக்கின் பத்து வயதில் ஒரு சம்பவம் நடந்திருந்தது.
அந்த வருட விடுமுறையில் வந்திருந்தவன், வழக்கம் போல் தன் நண்பர்களோடு இணைந்து புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றுக்கு தினமும் சென்று கொண்டிருந்தான். அங்கு தான் நிதினுடன் அவனுக்கு அறிமுகமானது.
அந்த வயதுக்கேயுரிய துடிப்புடன் தன் நண்பர்களோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த விநாயக் குழுவினரை பார்த்ததும் அவர்களோடு சென்று தானாகவே அறிமுகம் செய்து இணைந்து கொண்டான் நிதின்.
ஒற்றைப் பேரனாக அதிக செல்லத்தில் வளர்ந்ததில் வேதவல்லியின் குணமும் கொஞ்சம் அவனிடம் சேர்ந்திருந்தது. அவன் நடந்து கொண்ட விதம், பேசும் முறை என எதுவுமே நண்பர் குழுவில் இருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை.
அதில் பெரும்பாலும் அனைவரும் ஓரிரு வார்த்தைகளோடு அவனிடம் இருந்து விலகிக் கொள்ள.. மீண்டும் மீண்டும் வந்து பேசி பார்த்து அதற்கு சரியான எதிர்வினை இல்லாததில் உண்டான சோர்வோடு தனியே விளையாட சென்ற நிதினை கண்டு ஏனோ விநாயகிற்கு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
இதில் உண்டான இறக்கத்தில் அவன் மட்டும் சென்று நிதினுடன் பேசிக் கொண்டிருந்தான். இதனால் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்பு நிலவிக் கொண்டிருந்தது. இதை கண்டு விநாயக்கின் நண்பர்களே அவனை அவ்வப்போது கேலி செய்து கொண்டிருந்தனர்.
இதெல்லாம் வேதவல்லியின் கண்ணில் இருவரும் சேர்ந்து நின்று பேசுவது படும் வரை மட்டும் தான். வழக்கமாக ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு டிரைவருடன் வந்து செல்வது நிதினின் பழக்கம். அன்று வேறொரு வேலையாக வெளியில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வேதவல்லி பேரனை அழைத்துச் செல்ல அங்கு வந்திருக்க.. விநாயக் உடன் சிரித்து பேசியபடியே வெளியில் வந்த நிதின் அவர் பார்வையில் விழுந்தான்.
அபிராமியை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பவருக்கு விநாயக்கை நன்றாகவே அடையாளம் தெரிய.. அவர் முகம் கடுக்கடுவென மாறியது. விநாயக்கை பார்த்து கை அசைத்து விட்டு புன்னகையுடன் நிதின் வந்து காரில் ஏறிக்கொள்ள.. வேதவல்லி எதுவுமே பேசவில்லை.
தன்னை கண்டதும் அணைத்து முத்தமிட்டு கொஞ்சும் வேதவல்லியின் இந்த அமைதியை புரியாமல் பார்த்தவன், ஏதேதோ பேசிக்கொண்டே வர.. எதற்குமே வேதவல்லியிடம் பதிலே இல்லை. இதில் சோர்ந்து போனவன் அமைதியாகி விட்டான்.
வீடு வந்து உடைமாற்றி சாப்பிட்டு முடித்து என நேரம் செல்ல.. மீண்டும் அவன் வேதவல்லியை காண சென்ற போதும் அவர் அவனிடம் பேசவே இல்லை.
தன்னை எப்போதும் கை வளைவிலேயே வைத்துக் கொஞ்சி கொண்டிருக்கும் பாட்டியின் இந்தப் பாரா முகம் அவனை அதிகம் வருத்தியது. அந்த வயதிற்கே உரிய குணத்தில் சட்டென அவனுக்கு முதலில் அழுகை தான் வந்தது.
அவன் அழுது கொண்டே ஏன் பேசவில்லை எனக் கேட்க.. “நீ என்ன செஞ்சிருக்கேன்னு தெரியுமா..? யார் கூட பேசி பழகிட்டு இருக்கேன்னு தெரியுமா..? அவன் உன் வாழ்க்கையை அழிக்க வந்தவன், உன்னை இந்த வீட்டில் இருந்து விரட்ட நினைக்கறவன்.. உங்க அம்மாவையும் அப்பாவையும் பிரிக்க நினைக்கற கூட்டம் அது..” என தொடங்கி அந்த பிஞ்சு நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் அன்று முழுக்க நஞ்சை கலந்து கொண்டிருக்க.. சிறுவயதில் இருந்தே வேதவல்லி தனக்கு நல்லது மட்டுமே செய்வார் என நம்பி வளர்ந்திருந்த நிதினும் அதை எல்லாம் உண்மை என்று துளியும் சந்தேகமில்லாமல் நம்பினான்.
அதன் விளைவு மறுநாள் வெடித்தது. வழக்கம் போல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் குழுமியிருந்த நண்பர்கள் விளையாடியவாறே பேசி கொண்டிருக்க.. சற்று தாமதமாகவே அங்கு வந்தான் நிதின். அவனைக் கண்டதும் மலர்ந்து புன்னகைத்து விநாயக் கையசைக்க.. அவனோ இவனை முறைத்துக் கொண்டே முகம் திருப்பியப்படி சென்றான்.
அதில் என்ன விஷயமென தெரியாமல் நெற்றியை சுருக்கிய விநாயக், “என்னாச்சு இவனுக்கு..?” என்றான். அதில் அந்த பக்கம் திரும்பி பார்த்த வர்மா “உனக்கு எப்படி அவனை பிடிச்சதுன்னு எங்களுக்கு புரியவே இல்லை.. அவனும் அவன் ஆட்டிட்டியூடும்..” என எரிச்சலோடு சொல்லி சென்றான்.
மற்றவர்களும் இதைக் கண்டு கொள்ளாமல் இருந்தாலும், இத்தனை நாள் நன்றாக பேசி பழகிவிட்டு நிதின் இன்று திடீரென காரணமே இல்லாமல் இப்படி நடந்து கொள்வதில் விநாயகிற்கு மனம் சஞ்சலமாக இருந்தது.
அதில் மீண்டும் ஒருமுறை நிதினுடன் சென்று விநாயக் பேச முயல.. அப்போதும் முகத்தை சுழித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் நிதின். அவன் நடவடிக்கை புரியாமல் இரு நொடிகள் அசைவின்றி நின்று விட்டவன், பின் தோள்களை குலுக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அதற்குப் பின் நிதினை விநாயக் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. தன் நண்பர்களோடு விளையாடி முடித்து வெளியில் வந்த விநாயக் கார் வருவதற்காக காத்திருந்தான்.
ஒரே வீதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் நண்பர்கள் ஒவ்வொருவரும் தனி தனி காரில் வருவது வழக்கம் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து டிரைவர் அனைவரையும் மொத்தமாக அழைத்து செல்வர்.
அன்றும் அப்படியே வழக்கத்திற்கு மாறாக அரைமணி நேரத்திற்கு முன்பாகவே இவர்களின் விளையாட்டு முடிந்து இருக்க.. வெளியில் வந்து பார்க்கிங்கில் நண்பர்கள் குழு அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தது.
அன்று விநாயக்கின் பிறந்தநாள் என்பதால் மாலை நடக்க இருக்கும் பார்ட்டி பற்றியும் என்ன உடை எடுத்திருக்கிறான், என்னவெல்லாம் கொண்டாட்டம் என்றெல்லாம் பேச்சு சென்று, ரகோத்தமன் இந்த பிறந்த நாளுக்கு என்ன பரிசு வாங்கி கொடுப்பார் என்று ஆவலோடு காத்திருந்த விநாயக் அதைப் பற்றியும் அபிராமி என்னவெல்லாம் செய்து இருப்பார் என்பதை பற்றியும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் சற்று தள்ளி அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த நிதினுக்கு நேற்றைய வேதவல்லியின் பேச்சு மட்டுமே நினைவுக்கு வர, அவன் ரத்தம் கொதித்தது. தன் தந்தையை, தனக்கு மட்டுமே சொந்தமான வாழ்க்கையை இவன் பங்கு போட பார்ப்பதாக புரிந்து கொண்டவனுக்கு அவன் வாழ்க்கையை தான் பங்கு போட்டு இருப்பது பாவம் தெரியவில்லை.
அதில் தன்னை கட்டுப்படுத்த அவன் போராடிக் கொண்டிருக்க.. இதையெல்லாம் கொஞ்சமும் அறியாத விநாயக் எப்போதும் போல் தன் நண்பர்களிடம் ரகோத்தமனுக்கு தன் மேல் எவ்வளவு பாசம் என்பதை எல்லாம் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டிருந்தான்.
அவர்களுக்கும் ரகோத்தமனை தெரியும் என்பதால் அதைப்பற்றி பேசி சிரித்து நண்பர்கள் மகிழ்ந்து கொண்டிருக்க.. இதை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அங்கு வந்து நின்றிருந்த நிதின் “ரொம்ப சந்தோஷமா இருக்கியா..? வெக்கமே இல்லாம எங்க அப்பாகிட்ட பிச்சை வாங்கறதும் இல்லாம அதை பெருமையா வேற பேசிட்டு இருக்கியா நீ..?” என்று ஆத்திரத்தில் கத்தி இருந்தான்.
இதில் அனைவரும் புரியா திகைப்போடு அவனை பார்க்க.. நேற்றிலிருந்து அவன் மேல் இருந்த கோபத்தில் நிதின் வார்த்தைகளில் கட்டுப்பாடு இல்லாமல் பேசிக் கொண்டே செல்ல.. ஒரு கட்டத்தில் விநாயக்கிற்கும் கோபம் வந்துவிட்டு இருந்தது.
அதில் நிதினை விநாயக் அடித்து விட்டிருக்க.. அங்கு கொஞ்சம் கை களப்பானது. ஏற்கனவே இருந்த கோபம், தன் மேலேயே விநாயக் கை வைத்ததில் உண்டான ஆத்திரம் என்று நிதினும் அவனை அடிக்கப் பாய.. சுற்றிலும் அரண் போல் அவன் நண்பர்கள் நின்று விநாயக்கை நெருங்கவிடாமல் நிதினை தடுத்தனர்.
முழு தவறும் அவன் மேல் இருக்க.. அடிக்கக்கூட விடாமல் இப்படி இடையில் வந்து நிற்பவர்களை கண்டு உண்டான கோபத்தோடு நிதின் எகிறி கொண்டு செல்ல.. அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தார் வேதவல்லி.
விநாயக்கை சந்திக்க இதுவரை அவருக்கு சந்தர்ப்பமே கிடைத்ததில்லை. அவன் இங்கு வருவது தெரிந்த பின் அவ்வளவு எளிதாக விட்டு விடுவாரா என்ன..? அதில் முழு வன்மத்தோடு விநாயக்கை காண அங்கு வந்தவர் கண்டது நிதின் அடி வாங்கும் காட்சியை தான்.
அவ்வளவு தான் எரிமலையாக கொந்தளித்து விட்டவரின் வாயிலிருந்து வந்த நெருப்பு பிழம்பு அந்த சிறுபாலகனை சுட்டு பொசுக்கி இருந்தது.
“அடுத்தவங்க குடும்பத்தில் புகுந்து குழப்பம் செஞ்சு தாலி கட்டாம உங்க அம்மா உன்னை பெத்து வளர்த்து விட்டா.. நீ இங்கே வந்து முறையா பிறந்த என் பேரன் மேலேயே கை வைப்பியா..?” எனத் தொடங்கி அவன் அன்னையை, அவன் பிறந்த விதத்தை, அவர்கள் வாழும் வாழ்க்கையை, அபிராமியின் ஒழுக்கத்தை என்று சின்ன பையனிடம் பேசுகிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் அவர் பேசி விட்டு சென்றிருக்க.. அதன் தாக்கத்தில் அசைய மறந்து அதிர்வோடு அப்படியே தரையில் மடங்கி அமர்ந்து விட்டான் விநாயக்.
அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க.. உடனிருந்த அவன் நண்பர்கள் கூட பெரும் திகைப்பில் அடுத்து என்ன என புரியாமல் சில நிமிடங்கள் நின்று விட்டனர். இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என அந்த வயதில் அவர்களுக்கு தெரியவில்லை.
பின் முதலில் தன்னை மீட்டுக் கொண்டது நிமலன் தான். வேகமாக அவன் விநாயக்கை தூக்கி நிறுத்தி தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள.. அப்படி ஒரு கண்ணீர் அந்த நொடி அவனிடமிருந்து வெடித்தது.
‘என்ன சொல்லி தேற்றுவது..? எப்படி சமாதானம் செய்வது..?’ என தெரியாமலே அவனை வீட்டிற்கு அவர்கள் அழைத்து வந்திருக்க.. மகனின் பிறந்த நாளுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டு ஆவலோடு அவன் வருகைக்காக காத்திருந்தார் அபிராமி.
அன்று அபிராமியின் டிரைவர் தான் இவர்களை அழைத்து வர சென்றிருந்தார். அவர் சென்று பார்த்த போது அனைத்தும் நடந்து முடிந்து விட்டிருக்க.. கண்ணீரோடு விநாயக் இருந்த நிலையை கண்டவருக்கு உள்ளம் பதறி துடித்தது. என்ன நடந்தது என எவ்வளவு விசாரித்தும் யாரும் எதையும் சொல்லவில்லை.
அவர்களின் அமைதியே மேலும் பயத்தை கொடுக்க.. வேறு எதுவும் கேட்காமல் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டிருந்தவர், அபிராமியை தயக்கத்தோடு பார்த்தார். அவரின் பார்வை ஏன் என புரியாமல் “என்னாச்சு..” என்றபடியே காரை நெருங்கியவர் ‘ஏன் இன்னும் விநாயக் இறங்கவில்லை..?’ என்று கேள்வியோடு கதவை திறக்க.. அவன் மட்டுமல்ல அத்தனை பேரும் உள்ளே அமர்ந்திருந்தனர்.
“என்ன செல்லங்களா இப்போவே இப்படியே உங்க பிரண்ட் பர்த்டே கொண்டாட வந்தாச்சா..! வாங்க வாங்க உங்களுக்கு பிடிச்ச எல்லாம் செஞ்சு வெச்சு இருக்கேன்..’ என்று புன்னகையோடு அவர்களை வரவேற்றவர், அவர்கள் முகங்களில் கண்ட வெறுமையிலும் வருத்தத்திலும் துணுக்குற்று தன் மகனைப் பார்க்க.. அவனோ தன் இரு கைகளாலும் தலையைத் தாங்கி பிடித்து அப்படியே நிமிராமல் அமர்ந்திருந்தான்.
அதில் அடிவயிறு பதற “கண்ணா என்னாச்சு..?” என்று விநாயக்கின் கையை அபிராமி பிடிக்க முயல.. வேகமாக அவரிடம் இருந்து தன் கைகளை இழுத்துக் கொண்டவன், மற்றொரு பக்கம் கதவை திறந்து கொண்டு இறங்கினான்.
அதன் பின் ஒவ்வொருவராக காரில் இருந்து இறங்க.. அவர்களை பார்த்து கிளம்புமாறு தலையசைத்தான் விநாயக். ஆனால் அப்போதும் அவனை அப்படி தனியே விட்டுச் செல்ல மனமில்லாமல் அவர்கள் தயக்கத்தோடு நிற்க, அவன் லேசாக நிமலன் மற்றும் துஷ்யந்தின் கையை அழுத்தி கொடுக்க.. அதுவே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது.
இதில் இப்போது அவனுக்கு வேண்டியது தனிமை எனப் புரிந்து மற்றவர்கள் அபிராமியிடம் லேசான தலையசைப்போடு சொல்லிக்கொண்டு கிளம்பி விட, அனைவரின் செயல்களையும் கண்டு என்னவென புரியாமல் மனமும் உடலும் பதற நின்றிருந்தார் அபிராமி.
அவர்கள் செல்வதற்காகவே காத்திருந்தவன் வீட்டிற்குள் நுழையாமல் பிரதான நுழைவாயிலின் முன்னே இருந்த படிக்கட்டில் சென்று அமர்ந்து கொள்ள.. அவன் செயல்களெல்லாம் பயத்தை கொடுத்ததில் “கண்ணா என்னப்பா..?’ என்றார் அபிராமி தவிப்பான குரலில்.
அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை விநாயக், அதோடு அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் அவன் அமர்ந்திருக்க.. கவலையும் தவிப்புமாக டிரைவரை திரும்பி பார்த்தார் அபிராமி. அவரும் தனக்கு எதுவும் தெரியாது என சைகையில் சொல்ல.. விநாயக்கின் முன் மண்டியிட்டு அமர்ந்து அபிராமி எவ்வளவு கேட்டும் அவன் விழிகளைக் கூட உயர்த்தி அவரை பார்க்கவில்லை.
இப்படியே நேரம் செல்ல.. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்திருந்த நிலையில் மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் எண்ணத்தோடு அவனுக்கான பரிசு பொருட்களை கைநிறைய அள்ளிக்கொண்டு வந்து இறங்கினார் ரகோத்தமன்.
வழக்கத்திற்கு மாறாக இப்படி வாயிலில் அமர்ந்திருப்பவனை கண்டு யோசனையாக அவர் உள்ளே வரவும், விழிகளை உயர்த்தி அவரைப் பார்த்து “அங்கேயே நில்லுங்க..” என்றான் விநாயக்.
அதில் புரியாமல் அவர் பார்க்க.. “நான் யாரு உங்களுக்கு..?” என்று விநாயக் அவர் முன் சென்று நின்று கேட்கவும், ஏதோ விளையாடுகிறான் போல் என நினைத்து “வினய்..” என தொடங்கி புன்னகையுடன் ஏதோ பேச முயன்றவரை தடுத்தவன், “நான் யார் உங்களுக்கு..?’ என்று மீண்டும் அழுத்தம் திருத்தமான குரலில் கேட்கவும் ‘எதுவோ சரியில்லை’ என அவருக்கு புரிந்தது.
“இது என்ன கண்ணா கேள்வி.. நீ என் உயிர்..” என்று அவர் சிறு புன்னகையை வரவழைத்துக் கொண்டு பேச முயல.. முறைப்போடு அவரைப் பார்த்தான் விநாயக். “இன்னைக்கு உனக்கு என்னாச்சு கண்ணா..?” என பிள்ளை முகத்தை மெல்ல வருடி அவர் கேட்க முயல.. வேகமாக இரண்டு அடிகள் பின்னுக்கு நகர்ந்தவன்.
“நிதின் யாரு.?’ என்றான் அடுத்ததாக கூர்மையாக அவரை பார்த்தபடியே விநாயக். இதில் அவ்வளவு நேரமும் சமாளிப்பாக பேசிக்கொண்டு இருந்தவரின் கையிலிருந்த பரிசு பொருட்களெல்லாம் கீழே விழுந்து சிதற.. அபிராமியும் இதை துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்வோடு நெஞ்சில் கைவைத்தபடி நின்று விட்டார்.
இருவரிடமிருந்தும் பதில் வரவில்லை என்றவுடன் “சொல்லுங்க உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கா..? நாங்க உங்களுக்கு இரண்டாவது குடும்பமா..!” என்று அவன் கேட்ட எதற்கும் அவரிடம் பதில் இல்லை.
ஆனால் வேகமாக தன்னை மீட்டுக் கொண்டவர் “கண்ணா அப்படியெல்லாம் இல்லை.. நான் உனக்கு விளக்கமா எல்லாம் சொல்றேன், உள்ளேவா..” என்று அவசரமாக அக்கம் பக்கம் பார்த்தபடியே அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல அவர் முயல.. “முடியாது, எனக்கு இங்கே இப்போவே பதில் தெரிஞ்சாகணும்.. அதுக்கு பிறகு தான் நான் உள்ளே போறதா வேண்டாமான்னு யோசிக்கணும்..” என்றான் விநாயக்.
இதில் அவனைக் பெற்றவர்கள் இருவருமே அதிர்ந்து நிற்க.. “சொல்லுங்க, நாங்க உங்களுக்கு இரண்டாவது குடும்பமா..?” என மீண்டும் அவன் கேட்க “இல்லை, இல்லை.. நீங்க தான் என் முதல் குடும்பம்..” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் ரகோத்தமன்.
அந்த வயதில் அவர் சொல்ல வருவதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் நெற்றியை சுருக்கியவன் பின் “நிதின் உங்க பையனா..?” என்று கேட்க அவர் ஆம் என தலையசைத்தார். அதன் பின் வேறு எதுவும் பேசாமல் திரும்பி அபிராமியை பார்த்தவன் “நீங்க முறையில்லாம இவர் கூட வாழறீங்களா..?” என்று கேட்க.. எந்த ஒரு அன்னையும் தன் பிள்ளையிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்கவே கூடாது என்பது போல் விழிமூடி தன் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்றவாறே இரு காதுகளையும் பொத்திக்கொண்டார் அபிராமி.
சில நொடிகள் அமைதியாக நின்றவன் பின் மீண்டும் “அம்மா.. எனக்கு பதில் வேணும் சொல்லுங்க.. நீங்க இவர் மனைவியா..? இல்லையா..!” என்று கேட்க “நான் அவர் மனைவி தான் கண்ணா.. நான் முறையா தான் அவர் கூட வாழந்துட்டு இருக்கேன்..” என்றார் அபிராமி.
“உங்க அம்மாவை தான் நான் விரும்பி காதலிச்சு கல்யாணமும் செஞ்சேன்.. உங்க அம்மா தான் என் முதல் மனைவி..” என ஒரே நேரத்தில் இருவரும் மகனிடம் சொல்லி இருக்க.. ‘பிறகு ஏன் அவர்கள் இருவரும் தன்னை அவ்வளவு கேவலப்படுத்தி அப்படி எல்லாம் பேசினார்கள்..?’ என்று தோன்றினாலும் அதற்கான விடை தேடிச் செல்ல அவனுக்கு மனம் இல்லை.
‘இனி இப்படி ஒரு பேச்சு தனக்கு வேண்டாம்.. தன்னை பார்த்து யாரும் இப்படி எல்லாம் இனி பேசி விடவே கூடாது..!’ என்று மட்டுமே அவன் மனதில் இருக்க.. “இனி நீங்க எங்க வீட்டுக்கு வர வேண்டாம்..” என கூறியிருந்தான் விநாயக்.
அதில் அதிர்ந்து ரகோத்தமன் “வினய்..” என்று அழைக்கவும், “இனி என்னை அப்படி கூப்பிடாதீங்க.. உங்களுக்கும் எனக்கும் இனி மேல் எந்த சம்பந்தமும் கிடையாது, நீங்க இந்த வீட்டுக்குள்ளே அடி எடுத்து வெச்சா.. அதுக்கு பிறகு நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்.. உங்க அம்மாக்கிட்டேயும், உங்க பையன்கிட்டேயும் போய் சொல்லுங்க.. அவங்களுக்கே உங்களை திரும்ப கொடுத்துட்டேன்னு சொல்லுங்க.. எங்களுக்கு சொந்தம் இல்லாத எதையும் நாங்க சொந்தம் கொண்டாட விரும்பலைன்னு சொல்லுங்க.. யார் வாழ்க்கையையும் திருட வேண்டிய அவசியமோ, யார் போடும் பிச்சையிலோ வாழ வேண்டிய தேவையோ எங்களுக்கு இல்லைன்னு நான் சொன்னேன்னு சொல்லிடுங்க..” என்று கூறியவன், அபிராமியின் பக்கம் திரும்பி “உங்களுக்கு நான் வேணுமா..? இல்லை அவர் வேணுமான்னு முடிவு செஞ்சுக்கோங்க ம்மா.. நான் வேணும்னா அவர் இனி இந்த வீட்டுக்குள்ளே வரக்கூடாது..” என்றான் விநாயக்.
இத்தனையும் பேசும் போது அவன் முகம் இறுகி, விழிகள் சிவந்து இருக்க.. அவர் முன் அழுது விடவே கூடாது என்பதில் அத்தனை உறுதி தெரிந்தது. அதை கண்டு ரகோத்தமனே சிறிது தடுமாறி தான் போனார்.
அதே நேரம் கதறி அழுது கொண்டிருந்த அபிராமி, இனி யோசிக்க எதுவும் இல்லை என்பது போல சட்டென முடிவு எடுத்தவராக “எனக்கு நீதான் முக்கியம், எனக்கு நீ மட்டும் போதும் வினய்..” என்று சொல்லிவிட முற்றிலும் உடைந்தே போனார் ரகோத்தமன்.
‘மகன் ஏதோ கோபத்தில் பேசுகிறான், நிச்சயம் அபிராமி அவனை சமாதானம் செய்வார்..’ என்று நினைத்திருந்தவருக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அபிராமியின் பதில் இருக்க.. தவிப்போடு “அபி..” என்றார் ரகோத்தமன்.
அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் மகனின் கைப்பிடித்தபடி அபிராமி உள்ளே செல்ல முயல.. வாயில் வரை சென்றவன் திரும்பி நின்று ரகோத்தமனை பார்த்து “நான் என் வாழ்க்கையிலேயே வெறுக்கும் ஒரே ஆள் நீங்க தான்.. இனி என் கண் முன்னே வந்துடாதீங்க..” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான்.
ஆனால் ரகோத்தமனால் அப்படி உடனே அங்கிருந்து சென்று விட முடியவில்லை. வாயிலேயே அவர் அதிர்வு மாறாமல் அமர்ந்து விட, அவர் முன் வீராப்பாக பேசி விட்டு வந்தாலும் அவனுள்ளிருக்கும் சிறுப்பிள்ளை இத்தனை நாள் அனுபவித்த தந்தையின் அன்பு இனி தனக்கு இல்லை என்ற எண்ணத்தில் உடைந்து கதற தொடங்க.. அபிராமி தன் வலிகளை எல்லாம் மறைத்து மகனை மார்போடு அனைத்து கொண்டார்.
இருவரும் அங்கு தங்கள் வலிகளை கண்ணீரில் கரைத்துக் கொண்டிருக்க.. அதையே ரகோத்தமன் வெளியே செய்து கொண்டிருந்தார்.