All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

ராமனின் மோகனம் ஜானக...
 
Notifications
Clear all

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

Page 4 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 490
 
ஜானகி மந்திரம் 31 A
 
அடுத்த கணமே, 
 
ஸ்ரேயாவின் அறைக் காட்சியிலிருந்து கேமரா 'ஸ்விஷ் கட்' (Swish Cut) ஆகி மீண்டும் வெளியே வர...
 
பின்னணியில் மியூட் ஆகியிருந்த இசைஞானியின் அந்த மெலடி, இம்முறை தாளக் கட்டுகளுடன் அதிரடியாக எகிறித் தொடங்கியது.
​மாண்டேஜ் பாடலின் முதலாவது சரணம் கண்டாலாவின் மலைக் காற்றில் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்தது.
 
லொகேஷன்: காட்சியின் பின்னணி அப்படியே ஒரு கனவுலகமாக மாறுகிறது. கண்டாலாவின் பிரம்மாண்டமான, பச்சைப்பசேலென்ற ஒரு மலையடிவாரம். சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சூழ, தரை முழுக்க இயற்கையாய் பூத்துக் குலுங்கும் வெளிறிய ஆரஞ்சு நிறம் (pastel orange), அடர் திராட்சை நிறம் (Deep Wine), மின்சார நீலம் (Electric Blue), மயில் நீலப்பச்சை (Teal green) மற்றும் தாமிர வர்ணம் (Metallic Copper) என வகை வகையான காட்டுப் பூக்கள் ஒரு மாயாஜால பலவண்ணக் கம்பளம் விரித்தாற்போல் காற்றில் அசைந்தாடுகின்றன.
 
"இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
ஓஓ இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்..."
மைதிலி இப்போது இளமஞ்சள் நிற அனார்கலி உடையில், வெள்ளை மலர் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மின்ன, பூக்களின் நடுவே தேவதையாய் மலர்ந்திருந்தாள். மனோ, காபி பிரவுன் நிறக் கோட்டும் (Brown Blazer), அதற்கு பொருத்தமான வெளிர் நிறச் சட்டையும் அணிந்து செம ஸ்டைலாக மாறுகிறான்.
 
​அந்தப் பூக்களுக்கு நடுவே இருவரும் நேருக்கு நேர் நிற்கிறார்கள். மைதிலி தன் இரு கைகளையும் சற்றே விரித்து, முகத்தில் வெட்கப் புன்னகையோடு இடமும் வலமுமாக தன் உடலை வளைத்து, பூக்கள் மீது மெதுவாக மிதப்பது போல் ஓரிரு அடிகள் எடுத்து வைத்து நளினமாக ஆடுகிறாள். மனோ அவளது அசைவுகளுக்கு கச்சிதமாக தன் கால்களை நகர்த்தி, அவளைத் தன் காதலால் ஆட்கொள்வது போல் பின் தொடர்கிறான்.
 
​“ஒரு கோவில் மணியின் ராகம்... லலல லலல லலல..
 
பாடல் வரிகளின் 'லலல' பீட்ஸிற்கு ஏற்ப, கேமரா அவர்களைச் சுற்றி '360 டிகிரி' கோணத்தில் வேகமாக சுழல்கிறது. இப்போது மனோவும் மைதிலியும் ஒருவரையொருவர் பார்த்தபடி, தங்களின் வலது கையை மட்டும் மேலே உயர்த்தி, விரல்களால் காற்றில் ஒரு அழகான முத்திரையை பதிப்பது போல் மெதுவாக அசைக்கிறார்கள். அப்படியே தங்களின் இடது கையை இடுப்பில் வைத்தபடி, அந்தப் பூந்தோட்டத்தின் புல்வெளியில் வட்டமாக சுழன்று (Spins) ஆடுகிறார்கள். மைதிலியின் பறக்கும் கூந்தலும், அவளது மஞ்சள் நிற உடையின் விளிம்புகளும் அலைபாய, அவளின் வெள்ளை நிறத் துப்பட்டா, காற்றில் மிதக்கும் வெண் மேகத்தின் துண்டு போல அவளை சுற்றி ஒரு அழகான வட்டப் பாதையை உருவாக்குகிறது.
 
​“ஒரு கோவில் மணியின் ராகம்...
ஒரு வானில் தவழும் மேகம்...
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே...”
 
இசை இன்னும் மென்மையாக கரைய, மனோ சட்டென்று தன் கைகளை மைதிலியின் தோள்களுக்கு அருகில் கொண்டு வருகிறான். ஆனால், அவளைத் தொடாமல் அவளது உடலின் அசைவுகளுக்கு இணையாக தன் பிளேஸர் கைகளை அசைக்கிறான். மைதிலி லேசாக சரிந்து தன் இரு கைகளையும் மார்போடு குவித்து வைத்துக்கொண்டு, மனோவுக்கு மிக அருகில் வந்து, பின் அப்படியே பின்னோக்கி சில அடிகள் எடுத்து வைத்து நளினமாக விலகி ஓடுகிறாள். அவள் விலகும் போது, மனோ அவளது பாதச் சுவடுகளை பார்த்தபடி, காற்றில் மிதக்கும் அந்த வெண் மேகங்களை நோக்கித் தன் கைகளை உயர்த்தி, அவளைத் தன் முழு உலகமாக ஏற்கும் தோரணையில் அந்தப் புல்வெளியில் கம்பீரமாக நடந்து வந்து அவளோடு இணைகிறான். இருவரின் முகத்திலும் அந்தப் பூக்களின் பிரகாசமும், எல்லையற்ற காதலின் ஏக்கமும் அப்பட்டமாக தெரிகிறது!
 
அந்த வினாடியில்... கேமரா மைதிலியின் முகத்தில் closeup காட்டி நிற்கிறது.
 
​திடீரென, 'டிங்...' என்ற மொபைலில் மெசேஜ் டோன் சத்தம்.
 
அந்தச் சத்தம் கேட்ட அடுத்த கணமே, கனவுலகத்தின் அந்தப் பலவண்ணப் பூக்களும் மலையடிவாரமும் அப்படியே மெதுவாகக் கலைந்து மறைகின்றன.
​பின்னணியில் ஒலித்த 'நெற்றிக்கண்' பாடலின் முதல் சரணத்துக்கான மியூசிக் சட்டென்று முழுமையாக நின்றுபோக, அந்த மெசேஜ் டோனின் சத்தம் மைதிலியை அப்படியே நிஜ உலகத்திற்குள் இழுத்து வருகிறது.
 
அடுத்த சரணத்துக்கு போவதற்குள் ரெண்டு முக்கிய சம்பவங்களை பார்த்து விடலாம்.
 
சம்பவம் 1:
ஐந்தாவது செமஸ்டரின் இறுதியில், சன்ஷைன் யாரென்று பாபி தீவிரமாக தேடத் தொடங்கிய நேரத்தில், எதிர்பாராத விதமாக ஒரு பைக் விபத்து அவனுக்கு ஏற்பட்டது. இடது கால் எலும்பு முறிந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவன் மருத்துவமனையிலேயே முடங்கி கிடக்க நேர்ந்தது. காலேஜிற்கு வராமல் மெடிக்கல் லீவில் அவன் இருந்ததால், சன்ஷைன் கேர்ள் பற்றிய உண்மையை அவனால் மேற்கொண்டு துப்புத் துலக்க முடியாமல் போனது.
 
​சம்பவம் 2 :
 
அதே காலகட்டத்தில், அவளது சொந்த ஊரான மஞ்சாரிலிருந்து அம்மா ஜான்சி போன் செய்திருந்தாள். சாகர் மாமாவின் மகன் சஞ்சீவ், போதைக்கு அடிமையாகி திருட்டு வழக்கில் ஜெயிலுக்குப் போயிருக்கும் அதிர்ச்சி தகவலை சொன்னாள். 
 
"அவன் லட்சணம் ஊருக்கே தெரிஞ்சுப் போச்சு மைதி. இனி அவனுக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்கன்னு, உன்னை அவனுக்கு கட்டி வைக்க மாமாவும் அத்தையும் ரகசியமா பேசிட்டு இருக்காங்க. நீ அங்கேயே ஜாக்கிரதையா இரு" என்று ஜான்சி எச்சரித்தாள். அவளின் ஆஸ்துமா பிரச்சினை மோசமாகிக் கொண்டிருப்பதை, அன்று மைதிலிக்கு தெரியாமல் ஜான்சி மறைத்துவிட்டாள்.
 
 
மியூட் ஆகியிருந்த இசைஞானியின் மெலடி மீண்டும் தாளக் கட்டுகளுடன் இரண்டாவது சரணமாக ஒலிக்கத் தொடங்குகிறது.
 
​"இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும்...
(ல ல ல லலல லலல...)
எடை போடக் கம்பன் இல்லை எனக்கந்த திறனும் இல்லை...
இலை மூடும் வாழைப் பருவம்...”
 
அதே கண்டாலாவின் பச்சை பசேல் என்ற மலையடிவாரம். காற்றில் அசைந்தாடும் பல்வேறு வர்ணப் பூக்களுக்கு நடுவே கனவு மீண்டும் தொடர்ந்தது.
மைதிலி இப்போது புதுமையான மென்மையான பிஸ்தா கிரீன் (Soft Pistachio Green) நிறச் சுடிதாரில் தேவதையாய் நின்றிருந்தாள். அதன் குர்தி முழுவதும் நுட்பமான வெள்ளைச் சில்க் நூல் வேலைப்பாடுகள் மின்ன, அவளது தோளில் இருந்த மெல்லிய Soft Grey நிறப் பட்டு துப்பட்டா காற்றில் அலை அலையாய் மிதந்தது. மனோ, டார்க் ஆலிவ் கிரீன் நிற கார்கோ ஷர்ட், அதன் உள்ளே ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் டெனிம் பேண்ட் அணிந்து செம கூலாக நின்றிருந்தான்.
மைதிலி தன் பிஸ்தா கிரீன் சுடிதாரின் விளிம்புகள் அங்கிருந்த வண்ணப் பூக்களின் மீது பட்டு உராய்ந்து செல்ல, முகத்தில் வெட்கப் புன்னகையோடு இடமும் வலமுமாக தன் உடலை வளைத்து, பூக்கள் மீது மெதுவாக மிதப்பது போல் ஓரிரு அடிகள் எடுத்து வைத்து நளினமாக ஆடினாள். அவளது காற்றில் பறக்கும் துப்பட்டாவின் அசைவுகளுக்கு கச்சிதமாக தன் கால்களை நகர்த்தி, மனோ அவளைத் தன் காதலால் ஆட்கொள்வது போல் பின் தொடர்ந்தான்.
 
​எங்கிருந்தோ நுழைந்த சஞ்சுவும் இந்துவும் கைகளைக் கட்டிக்கொண்டு, இவர்களை முறைத்து பார்த்தபடி, சத்தமாக கேட்டார்கள்:
 
​"ஏய்... என்னடி பண்ணிட்டு இருக்க?!"
 
​அந்த ஒற்றைக் குரலில், பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த 'நெற்றிக்கண்' பாடலின் இசை அப்படியே கட் ஆனது! 
 
​மனோவும் மைதிலியும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க...மலையடிவாரமும், பூக்களும், கனவு காட்சியும் அப்படியே காற்றில் கலைந்து சட்டென்று மறைந்து... காட்சி அப்படியே நிஜ உலகிற்கு தாவியது.
 
​படுக்கையில் படுத்தபடி கனவு கண்டு கொண்டிருந்த மைதிலியின் அருகே சஞ்சுவும் இந்துவும் அதே பொசிஷனில் கை கட்டியபடி நின்றிருந்தனர்.
 
இரவு மணி 11
 
மைதிலி பதறிப் போய் எழும்பி உட்கார,
இந்து: "ஏய், என்னடி பண்ணிட்டு இருக்க? முகமெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கு. கனவு கண்டுகிட்டு இருக்கியா?" 
 
இருவரும் அப்போதுதான் வாஷ்ரூமிற்குப் போய், முகத்தில் அப்ளை செய்திருந்த பேசியல் ஸ்க்ரப்பை கழுவிவிட்டு, கைகளில் டவலோடு அறைக்குள் நுழைந்திருந்தனர். அவர்களின் ஈர முகத்தில் இன்னும் அந்த பேசியல் க்ரீமின் நறுமணம் மெலிதாக எஞ்சியிருந்தது.
 
​மைதிலியின் இதழ்களில் இன்னும் எஞ்சியிருந்த வெட்கப் புன்னகையை பார்த்த கணத்திலேயே, அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அந்த இரு தோழிகளும் நொடியில் புரிந்து கொண்டனர். 
 
​சஞ்சு டவலால் முகத்தை துடைத்துக்கொண்டே கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். 
 
"எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி கனவு கண்டுக்கிட்டே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருப்பே சுட்கி? நேர்ல போய் அவன்கிட்ட விஷயத்தை சொன்னாதான் என்ன?"
 
மைதிலி ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தப்பிப்பதற்காக வாய் திறக்க... அதை சட்டென்று கவனித்த இந்து, தன் கையை நீட்டி அவளை பேசவிடாமல் தடுத்தாள்.
 
​"வேண்டாம் தாயே! தூங்க போற நேரத்துல உன்னுடைய சொற்பொழிவை கேக்குறதுக்கு நாங்க ரெடியா இல்ல. நீ என்னென்ன சாக்குப்போக்கு காரணங்கள் சொன்னாலும்... நிஜம் என்ன தெரியுமா? அவன் இப்போ உன்னை முழு மனசா லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். காலேஜ் முடியறதுக்கு வெறும் ஒன்றரை மாசம் தான் இருக்கு. இப்ப சொல்லாம நீ எப்ப சொல்லப் போற? ஏதாவது ஒரு காலகட்டத்துல சொல்லித்தானே ஆகணும்... இல்ல, கடைசி வரைக்கும் சொல்லாமலயே இப்படியே ஊருக்குப் போயிடப் போறியா?"
 
​'காலேஜ் முடியப் போகுது...' — இந்து தற்செயலாக அந்தப் புள்ளியைத் தொட்டதும், மைதிலியின் உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.
​காலேஜ் முடிய இன்னும் நாற்பத்தைந்து நாட்கள். கணிதம் மிகத் துல்லியமானது. நாட்கள் கரையும் வேகம் பயமுறுத்துகிறது. சட்டென்று அவளது கண்ணிமைகளின் ஓரத்தில் நீர் கோத்துக் கொண்டது. லென்ஸுக்குள் புகுந்த தூசி போல ஒரு மெல்லிய வலி. கண்கள் குளமாகி, அந்த நீர்திரைக்கு பின்னால் சஞ்சுவின் முகமும் இந்துவின் முகமும் மங்கலாக தெரிந்தன. 
 
​சஞ்சு அவளது கைகளை பற்றிக்கொண்டாள். "இந்து கேட்கிறது கரெக்ட்தானே சுட்கி.... எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லாம இப்படி இழுத்துட்டே போக முடியும்? ஒருவேளை... நீ அவன்கிட்ட விஷயத்தை சொல்லி, அவன் வேற மாதிரி ஏதாவது பதில் சொன்னா உன்னால தாங்க முடியாதுங்கிறது உண்மைதான், எங்களுக்கு புரியுது. அதுக்காக இப்படியே சொல்லாமலே இருக்கிறதுல என்ன நியாயம் இருக்கு?"
​அவளுக்குள் ஒரு மௌன யுத்தம் நடந்து கொண்டிருந்தது. வார்த்தைகளால் நிரப்ப முடியாத ஒரு அந்தரவெளி அது. காதலின் வதையே இந்த bloody தவிப்புதான். Sunshine யாரென்ற உண்மை தெரிந்து, அவன் அவளைத் தவிர்த்து விட்டால், இதுவரை ரகசியமாய் ஆராதித்த இந்த ஒட்டுமொத்தக் கனவுலகமும் நொறுங்கி தவிடுபொடியாகிவிடுமே என்ற பயம் ஒருபுறம்; சொல்லாமல் பிரிந்தால், எஞ்சிய வாழ்நாள் முழுக்க இந்த குற்ற உணர்ச்சியே ஒரு தீராத ரணமாக தன்னை அரித்து தின்றுவிடுமே என்ற பதற்றம் மறுபுறம். அவளது இதயம் ஒரு ஊசலாட்டத்தின் உச்சியில் நின்றது. இரண்டு பக்கமும் பாதாளம் தெரிந்த ஒரு குறுகிய பாலத்தில் தத்தளிப்பவளை போலிருந்தது அவளது நிலை.
 
​மைதிலி பதில் சொல்ல முடியாமல் தவிப்பதைப் பார்த்த இந்து, சஞ்சுவின் பக்கம் திரும்பினாள்.
 
"எனக்கென்னவோ இவ கடைசி வரைக்கும் அவன்கிட்ட சொல்ல மாட்டான்னுதான் தோணுதுடி. என்ன ஆனாலும் சரி, பேசாம நாமளே மனோகிட்ட போய் உண்மையை சொல்லிட்டா என்ன?"
 
​"சீச்சீ... நல்லாவே இருக்காதுடி!" சஞ்சு அதை உடனே மறுத்தாள். 
 
"நான் இதைப்பத்தி யோசிக்காம இல்ல. ஆனா, மனோகிட்ட போய் 'உன்னோட சன்ஷைன் காதலி இவதான்'னு நாம மூணாவது மனுஷங்களா சொல்றதை விட... மைதிலியே நேர்ல போய் 'நான் தான் உன்னோட சன்ஷைன்'னு சொல்லும்போது அவனுக்கு எப்படி இருக்கும்? சும்மா அதிரும்ல..." —
 
சொல்லும்போதே சஞ்சுவின் கைகளில் இருந்த ரோமங்கள் குத்திட்டு நின்றன. தன் உடலை ஒருமுறை சிலிர்த்துக் காட்டினாள். 
 
"அப்படியே பையனுக்கு Goosebumps ஆயிரும்!"
 
​தொடர்ந்து சஞ்சுவின் கண்கள் பிரகாசமடைந்தன. 
 
"அதைவிட இன்னொன்னு சொல்றேன் கேளு... ஒருவேளை, அவனா தேடி இவதான் அந்த 'சன்ஷைன்'னு கண்டுபிடிச்சு வந்து நின்னா எப்படி இருக்கும்?"
 
​அந்த ஒரு நொடி... மூவருமே அமைதியாயினர். அந்த அற்புத தருணத்தை, மனோ மைதிலியை அடையாளம் காணும் அந்த காதல் காட்சியை தங்களின் கற்பனையில் ஓடவிட, மூவரின் உடலும் ஒருசேர சிலிர்த்துப் போனது! அறையின் மௌனத்தில் அவர்களின் மூச்சுக்காற்று மட்டும் சூடாய் ஏறி இறங்கியது.
 
​இந்து தான் முதலில் அந்த சிலிர்ப்பிலிருந்து வெளியே வந்தாள். 
 
"அதான்... அவன் கண்டுபிடிக்கிற மாதிரியே தெரியலையே! அவன் ஏதோ ரொம்ப டீசண்டா, 'சன்ஷைன்' மனசு புண்படக் கூடாதுன்னு நேர்ல வரச் சொல்லி கட்டாயப்படுத்தாம இருக்கிறான். இப்படி ஒருத்தன் எங்கயாவது இருப்பானா? இதுக்கு மேல எனக்கெல்லாம் பொறுமை இல்லை சுட்கி. நாளைக்கு நீயே அவன்கிட்ட போய் நேர்ல பேசி, உண்மையை சொல்றே... உனக்கு பயமா இருக்கு, உன்னால முடியாதுன்னா சொல்லு, நானே நேர்ல போய் அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுறேன். அவ்வளவுதான்!"
 
​மைதிலி பயத்தோடும் தயக்கத்தோடும் தன் இரு தோழிகளையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவளது கண்கள் 'வேண்டாம்' என்று கெஞ்சின.
 
​சஞ்சு அவளை சமாதானப்படுத்தும் குரலில், "நாம கற்பனை பண்ற மாதிரி எல்லாம் எதுவும் இங்க நடக்காது சுட்கி. இப்போதைக்கு வேற வழியே இல்லை, நீயே போய் சொல்லிரு... என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், கவலைப்படாதே. உனக்குத்தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோமே! அதனால கவலைப்படாதே. நாங்க சொல்றத இனிமே நீ கேளு. நாளைக்கு அவன் காலேஜுக்கு பைக்ல வருவானா, இல்ல கார்ல வருவானா?"
 
​மைதிலி தன் கண்களை துடைத்துக்கொண்டு, லேசான நடுக்கத்துடன் சொன்னாள், "நாளைக்கு Wednesday... அதனால கார்லதான் வருவாரு."
 
இந்து: ஓஹோ!!! அவரு schedule அவரைவிட இவங்களுக்கு தான் கரெக்டா தெரியும் போலருக்கு... என்று கலாய்க்க, மைதிலி எதுவும் சொல்லவில்லை.
 
சஞ்சு: ​"சூப்பர்! கார்னா இன்னும் வசதி... பிரைவசி கிடைக்கும்!" என்று சஞ்சு குதிக்க, "ஓகே... நாளைக்கு எந்த இடத்துல வச்சு, எப்படி, எந்த வழியில அவன்கிட்ட சொல்லலாம்?" என்று மைதிலியின் சார்பாக சஞ்சுவும் இந்துவும் தீவிரமாக ஸ்கெட்ச் போட ஆரம்பித்து, ஆலோசனையில் இறங்கினர்.
 
'நாளைக்கு என்ன ஆகப்போகிறதோ...' என்ற டென்ஷனில், தன் காதலின் விதியை தீர்மானிக்கப் போகும் இரு தோழிகளையும் மாறி மாறிப் பார்த்து கொண்டிருந்தாள் மைதிலி!
 
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 490
 

ஜானகி மந்திரம் 32

​மறுநாள் மாலை 4 மணி

​கண்டாலா SSG காலேஜின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே இருந்த பஸ் ஸ்டாப்.

​மாலை நேரத்து வெயில் மெல்லத் தணிந்து, மலைப் பிரதேசத்துக்கே உரிய இளங்காற்று வீசத் தொடங்கியிருந்தது. காலேஜ் முடிந்த நேரம் என்பதால், பஸ் ஸ்டாப் முழுக்க 2003-ன் அசல் இளமை. மாணவ-மாணவிகளின் அலைமோதும் கூட்டம். சுடிதார், சல்வார், ஜீன்ஸ், டீ சர்ட் என ஆங்காங்கே குழுக்களாக நின்று லேட்டஸ்ட் ரிங்டோன்களை பற்றிப் பேசிக் கொண்டும், போன்களில் மெசேஜ் தட்டிக்கொண்டும், புரபசர்களை கலாய்த்துக்கொண்டும், அந்த இடமே கலகலத்து கொண்டிருந்தது.

காற்றில் ஃப்ரெஷ்னெஸ்.
காற்றில் கலர் கலரான அரட்டைகள்.
காற்றில் சிரிப்புகள்.

​ஆனால், அந்த கூட்டத்தை தாண்டி கொஞ்சம் தள்ளி நின்றிருந்த மைதிலிக்கு மட்டும் உலகமே தடுமாறி போயிருந்தது. அந்த மார்ச் மாதத்து இளவெயிலிலும் அவளது நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகள், வெளியில் இருக்கும் வெயிலின் ஒத்தடமல்ல; நெஞ்சுக்குள் பற்றி எரியும் ரகசியத் தீயின் கசிவுகள்! அவளது கால்கள் பூமிக்கு மேலே நாலங்குலம் மிதப்பது போலொரு நிலைதடுமாற்றம்.

​சஞ்சுவும் இந்துவும் ஒரு ஸ்கெட்ச் போட்டிருந்தார்கள். சிம்பிள். எஃபெக்டிவ்.
​மனோ இன்று தனியாகத்தான் வருவான். பாபி கால் ஒடிந்து மெடிக்கல் லீவில் இருப்பதால், காரின் பேஸஞ்சர் சீட் காலியாக இருக்கும் என்பது கேரண்டி. 'இந்த வழியேதான் அவன் போவான்' என்பது நூறு சதவீத லாஜிக். ஏனென்றால் வெளியேறுவதற்கு வேறு வழியே இல்லை.

​பிளான் இதுதான்: மனோவின் காரை நிறுத்து. மைதிலியை ஏற்றி விடு. மைதிலியின் பார்ட் டைம் வேலைக்கு அவள் போகும் அவசரத்தை காரணமாக சொல். மார்க்கெட் ஏரியா வரைக்கும் 'லிப்ட்'. அந்தச் சில நிமிடங்கள் காருக்குள் மைதிலி சன்ஷைன் ரகசியத்தை உடைக்க வேண்டும்.
​எல்லாம் காகிதத்தில் பக்காவாக இருந்தது.

ஆனால், மைதிலியை ஒப்புக்கொள்ள வைத்து, அவளை ஹாஸ்டல் அறையிலிருந்து இந்த பஸ் ஸ்டாப் வரை இழுத்துக்கொண்டு வருவதற்குள் சஞ்சுவிற்கும் இந்துவும் நாக்கு தல்லேது!

​மைதிலி நடுங்கும் உதடுகளைப் பிரித்து, "எனக்கு நிஜமாவே ரொம்ப பயமா இருக்குடி. ப்ளீஸ், இந்த பிளான் வேண்டாமே! நான் பேசாம பஸ்ஸுலேயே வேலைக்கு கிளம்புறேன்..." என்று நேற்று இரவிலிருந்து இப்போது வரை 108-வது முறையாக அதே பல்லவியை பாடினாள்.

​தோழமையின் உச்சம் என்பது அடுத்தவர் பயப்படும்போது கோபப்படுவதல்ல; அரவணைப்பது. சஞ்சு மெல்ல அவளருகே வந்து, மைதிலியின் குளிர்ந்து போயிருந்த கைகளை தன் இரு உள்ளங்கைகளுக்குள் பொத்திக் கொண்டாள். அந்தத் தொடுதலில் 100% நட்பின் கதகதப்பு.

"சுட்கி, நீ அவனை எப்படில்லாம் காதலிக்கிற... எந்தளவுக்கு மனசுக்குள்ளேயே முக்கியத்துவம் கொடுக்கிறேன்னு நாங்க கூடவே இருந்து பார்த்துக்கிட்டே இருக்கோம். எத்தனையோ ராத்திரிகள்ல நாங்க ரெண்டு பேரும் வியந்து போயிருக்கோம். வெளிப்படையாக சொல்லணும்னா, நம்ம ஏஜ் பசங்க பண்ற தமாஷான காதல்களை பார்த்து எங்களுக்கு லவ் மேல பெரிய அபிப்ராயம் இல்லாமதான் இருந்தது. காதல்ங்கிறது வெறும் கவர்ச்சியோன்னு கூடத் தோணியிருக்கு. ஆனா, உண்மையான காதல்னா என்ன, அதோட உன்னதம் என்னங்கிறதை உன்னைப் பார்க்கும் போதுதான் நாங்க உணர்ந்தோம் சுட்கி!

At the same time, அவன் உன் மேல வச்சிருக்கற லவ்வும் எந்த விதத்துலயும் குறைஞ்சது இல்லை. நீங்க ரெண்டு பேரும் எந்த காரணத்தைக் கொண்டும் பிரிஞ்சிரக் கூடாது, கண்டிப்பா ஒண்ணு சேரணும்... அதனாலதான் உன்னை இப்படி வற்புறுத்துறோம்."

​சஞ்சுவின் குரல் லேசாக தழுதழுக்க மேலும் தொடர்ந்தாள்.

"யோசிச்சுப் பாரு சுட்கி, காலேஜ் முடியறதுக்கு வெறும் ஒரு மாசம்தான் இருக்கு. எக்ஸாம்ஸ் முடிஞ்சதுன்னா எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கமா ஊருக்கு போயிருவோம். அதன் பிறகு எல்லாரும் வேற வேற உலகத்துல பிஸியாயிருவோம். வாழ்க்கையில புதுசு புதுசா பிரச்சனைகள் வந்து சூழ்ந்துக்கும். இன்னைக்கு நாங்க கூட இருந்து தர்ற இந்த தைரியம் கூட அப்போ உனக்குக் கிடைக்காதுடி. சொன்னா கேளு... இப்பப் போய் அவன்கிட்ட உண்மையைச் சொல்லிடு!" என்று உள்ள கிடக்கையை வெளிப்படுத்தினாள்.

​இந்துவும் அவளது இன்னொரு கையைப் பற்றிக் கொண்டாள். "ஆமா சுட்கி, சஞ்சு சொல்றது அட்சர சுத்தமா உண்மை. மனோ ரொம்ப ஜென்டில்மேன்டி. 'சன்ஷைன்' முகத்தைக் காட்ட விரும்பலைன்னா, அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு அவன் நேர்ல பார்க்க வரச் சொல்லி கட்டாயப்படுத்த மாட்டான்; தேடியும் வரமாட்டான். அதனால எப்படியும் நீயாப் போய் சொன்னா மட்டும்தான் இந்த உண்மை அவனுக்கு தெரியும். இந்த ஹாஸ்டல் லைஃப், காலேஜ் லைஃப் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சு போயிடும். அப்புறம் உன்னோட இந்த அழகான கனவு வெறும் கனவாவே கரைஞ்சு போயிடும்டி. இந்தக் கனவு கலையாம இருக்கணும்னா, அதை நீ நிஜமாக்கியே ஆகணும். தயவுசெஞ்சு நாங்க சொல்றதை கேளு... போய் சொல்லு!"

​காலேஜ் கேட்டின் வழியே மனோவின் கார் எப்போது வெளிப்படும் என்று வாசலையே பார்த்தபடி அந்த இரு தோழிகளும் அவளுக்குள் தைரியத்தை விதைத்து கொண்டிருக்க... மைதிலி சுற்றியிருந்த அத்தனை இளமைக் கூட்டத்தின் சத்தத்திற்கும் நடுவே, தனக்குள் மட்டும் ஒரு நிசப்தமான மௌனக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்!

​காற்றின் திசையறியாது காம்பஸில் சுழலும் காந்த ஊசியைப் போல, அவளது கண்கள் காலேஜ் கேட்டையும் தன் தோழிகளையும் மாறி மாறிப் பார்த்துப் தவித்து நின்றது!

இந்து மெல்ல மைதிலியின் முகத்தைப் பார்த்துவிட்டுச் சஞ்சுவின் பக்கம் சாய்ந்தாள். "சஞ்சு, இவ முழிக்கிற முழியைப் பார்த்தா இன்னைக்கு இவ பேசிக்கிற மாதிரி தெரியல... ப்ச்ச்... எனக்கு நம்பிக்கை இல்லைடி" என்றாள் அப்பட்டமான சலிப்புடன்.

சஞ்சு சட்டென்று ஒரு ஐடியா மின்னியவளாய் இந்துவின் பக்கம் திரும்பினாள். "இங்க பாரு இந்து, இவ காரில் ஏறிய உடனே 'நான்தான் சன்ஷைன்'னு மொத்த ரகசியத்தையும் கொட்டி எல்லாத்தையும் சொல்லக்கூட வேண்டாம். ஜஸ்ட்... காருக்குள்ள ஏறி, 'என்னை அங்க இறக்கிவிடுங்க, இங்க இறக்கிவிடுங்க'ன்னு சாதாரணமா நாலு வார்த்தை பேசட்டும். போன்ல கேட்கிற குரலுக்கும், நேர்ல கேட்கிற குரலுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். மனோவுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், இவ வாய்ஸை வச்சு சன்ஷைனை கண்டுபிடிக்கிறானான்னு பாத்துரலாம். அட்லீஸ்ட் இதையாவது செய்டி. என்ன சொல்ற?!"

​இந்து மைதிலியை பார்த்து ஒரு சலிப்பான லுக் விட்டுட்டு, "பாயிண்ட் ஓகேதான் சஞ்சு. ஆனா, அந்த நாலு வார்த்தையைக் கூட இவ ஒழுங்கா பேசுவாளாங்கிறதுதான் எனக்கு டவுட்டா இருக்கு!"

​சஞ்சு மைதிலியை பார்த்தாள்.
​பெண்ணிடம் அப்பட்டமான நடுக்கம். உதறல்.

ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாய் சஞ்சு சொன்னாள்: "சரி ஓகே. நீ ரொம்ப பயப்படுற. உனக்காக நாங்க இதுகூடவா செய்யக் கூடாது? பேசாம நாங்களே மனோகிட்ட போய், 'இவதான் உன் சன்ஷைன்'னு ஓப்பனா சொல்லிடுறோம். ஆனா... அது அவ்ளோ நல்லா இருக்காதேன்னு பார்க்கிறேன்."

​மைதிலியிடம் பதிலில்லை. அவள் கைகள் தானாக அவளது சுடிதார் துப்பட்டாவின் நுனியைச் சுருட்டி, கசக்கி, பிழிந்து கொண்டிருந்தன. கால்கள் ஒரே இடத்தில் நிற்காமல் தாளம் தட்டின. மூச்சுக்காற்று சூடாக வெளிவந்தது.

அதே விநாடி.
​எஸ்.எஸ்.ஜி காலேஜ் கேட். மனோவின் கார் மாஸாக வெளியே வந்தது.

​சட்டென்று அந்த இடமே பரபரப்பானது! சஞ்சுவும் இந்துவும் நொடியில் அலர்ட் ஆனார்கள்.

​"அவன் கார் வந்துருச்சு! இவ பேசப் போறது இல்லை... நாமளே காரை நிறுத்தி, எல்லாத்தையும் பேசி எல்லாம் வா!" என்று சஞ்சு அவசரமாய் இந்துவை இழுத்துக் கொண்டு காரை மடக்குவதற்காக ரோட்டை நோக்கி சென்றாள்.

​அந்த நொடியில்... தயங்கி நின்றிருந்த மைதிலி பரபரப்புடன் அவர்கள் இருவரின் அருகே சென்று முதுகை தட்டினாள்!

​இருவரும் பின்னே திரும்பி பார்க்க, சஞ்சு ஆச்சரியமும் பதற்றமும் கலந்து, "என்னடி?" என்று கேட்டாள்.

​மைதிலி தன் கண்களில் தேங்கியிருந்த நீர்த்திரையைத் துடைத்துக் கொண்டு, பயத்தையெல்லாம் ஒரு நொடியில் விழுங்கிவிட்டு, தீர்மானமான குரலில் சொன்னாள்: "நானே பேசுறேன்!"

​அந்த ஒற்றை வார்த்தையில் இருவரின் முகமும் முகம் அப்படியே பிரகாசமானது. "வெரி குட்... சூப்பர்!" என்று உற்சாகமாகக் கத்தினாள் இந்து.

​அடுத்த கணமே, மனோவின் கார் அந்தப் பஸ் ஸ்டாப்பை தாண்டி செல்ல... சஞ்சுவும் இந்துவும் உற்சாகமாக கைதட்டி, 'மனோ' என்று சத்தமிட்டார்கள்.

​டயர்கள் மெலிதாக தார்ச்சாலையில் உரச, கார் கச்சிதமாக அங்கே வந்து நின்றது. பஸ் ஸ்டாப்பில் இருந்த மொத்தக் கூட்டமும் தங்களின் பேச்சுகளை நிறுத்திவிட்டு, ஆர்வமாக இவர்களை நோக்கி திரும்பியது.

​ஸ்பாட்லைட்.

​மனோ வலது பக்க டிரைவர் சீட்டில் இருந்தபடியே, இடது பக்க பேசஞ்சர் சீட் விண்டோ கிளாஸை நைஸாக கீழே இறக்கினான். ஸ்டீயரிங்கில் ஒரு கையை வைத்தபடி, இடது புறமாகச் சாய்ந்து, வெளியே நின்ற இவர்களை எட்டிப் பார்த்தான்.

​முகத்தில் அவனுக்கே உரிய அந்த ஈஸியான புன்னகையுடன், "என்ன கேர்ள்ஸ்... இன்னைக்கும் ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான்.

​இந்து உடனே சாமர்த்தியமாக முந்திக்கொண்டாள். "நோ நோ... பிரச்சனை எதுவும் இல்லை மனோ. எங்க ரூம் மேட் மைதிலிக்கு இன்னைக்கு ஒர்க்குக்கு லேட் ஆயிருச்சு. நீங்க போற வழி தான்... If you don't mind, அவளை மார்க்கெட் ஏரியால மெயின் ரோட்டில் விட்ற முடியுமா?"

​மனோ மைதிலியின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு புன்னகைத்தான்.

​"I don't mind at all..." என்று சொன்னவன், தொடர்ந்து, "Ask her to come and get in" என்றான்.


மனோ சம்மதித்த அந்த விநாடி, மைதிலியின் உலகத்தில் புவி ஈர்ப்பு விசை திடீரென பல மடங்கு அதிகமானது போலிருந்தது. நரம்புகள் இழுத்துக் கொண்டன. கால்கள் தரைக்குக் கீழே நூறு அடி ஆழத்தில் வேர்விட்டது போல அப்படியே கல்லாய் உறைந்து நின்றாள். ‘ஐயோ... முடியாது’ என்று உள்ளுக்குள் அலறியபடி அவள் பின்வாங்க நினைத்த அந்த மைக்ரோ நொடியை தோழிகள் இருவரும் மிகச் சரியாகப் படித்துவிட்டார்கள்.

சுற்றியும் கல்லூரி மாணவர்களின் கண்கள். ஒரு 'சீன்' கிரியேட் ஆகிவிடக் கூடாது.

சஞ்சுவும் இந்துவும் மிக இயல்பாக நடப்பது போல, மைதிலியின் இருபுறமும் அரணாக வந்து நின்றார்கள். வெளியில் யாருக்கும் சந்தேகம் வராதபடி, தங்களின் கைகளை அவளது முதுகில் கச்சிதமாகப் பதித்து, ஒரு ரோபோட்டை நகர்த்துவது போல அவளைக் காரை நோக்கி முன்னோக்கித் தள்ளினார்கள்.

​இவர்களின் தள்ளு முள்ளில், எப்படியோ தட்டுத்தடுமாறி மைதிலி காரின் கதவருகே சென்று நிற்க... அவளது டென்ஷனை பார்த்த மனோ சத்தமாகச் சிரித்துவிட்டான்.

​"அட... தைரியமா வாங்க! நான் ஒண்ணும் உங்களைக் கடிச்சிர மாட்டேன். எங்க விடணும்னு சொல்லுங்க... விட்டுடுறேன்" என்றான் கலகலப்பாக.

​வெளியே நின்ற சஞ்சு, மைதிலிக்கு இன்னும் தயக்கம் குறையாததைக் கண்டு, "இல்ல... உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு ஃபீல் பண்றா, அதான் வேற ஒண்ணும் இல்ல மனோ" என்று பேலன்ஸ் செய்தாள்.

​மனோ காரின் ஸ்டீயரிங்கில் கைகளை தட்டியபடி, "எனக்கு என்ன கஷ்டம்? நான் என்ன அவங்களை தலையிலயா தூக்கிட்டுப் போறேன்? கார்லதானே போறோம்... அதுவும் நான் போற வழிதானே, வாங்க!" என்றான்.
​மைதிலி மெதுவாகக் காரின் பின் பக்கக் கதவின் ஹேண்டிலைப் பிடித்து, பின் சீட்டில் ஏறப் போக...

​மனோ சட்டென்று அவளை தடுத்து, "அட... முன்னால வாங்க, பேசிக்கிட்டே போவோம்!" என்றான் மிக எதார்த்தமாக.

​அவன் 'முன்னால வாங்க' என்று சொன்னதும் மைதிலி என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க... சஞ்சுவும் இந்துவும் கண்சிமிட்டி, "அட... அவருதான் சொல்றார்ல, ஏறுடி!" என்று அவசரமாய் அவளை முன் பக்கக் கதவை நோக்கி திருப்பி, கதவைத் திறந்து அவளை முன் சீட்டிற்குள் ஏற்றிச் சொருகி, 'டப்'பென்று கதவை சாத்தினர்!

​கார் கிளம்பியது.

​சாலையோரம் நின்ற சஞ்சுவும் இந்துவும், ஏதோ நாலு லாரி மண்ணை அள்ளிப் போட்டுக் காரியத்தை முடித்த திருப்தியில், தங்களின் கைகளைத் தட்டித் தூசியைப் போக்கிக் கொண்டனர்.

"அப்பாடா, ஒரு வழியாக ஏத்தி அனுப்பியாச்சு!"

​இனி காருக்குள்...

​காருக்குள் அவனருகில் அமர்ந்திருந்த அந்த நிலை மைதிலியின் நெஞ்சை அதிரச் செய்தது உண்மைதான். அவளது இதயம் கூண்டுக்குள் அடைபட்ட பறவையாய் படபடவென அடித்துக் கொண்டது. என்றாலும், அவள் ஒன்றும் கோழை இல்லையே! தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, அவள் முடிந்தவரை தளரவிடாமல் தாக்குப்பிடித்தாள்.

​ஆனாலும், அவனுக்கு மிக அருகில், அவனது பெர்சனல் ஸ்பேஸுக்குள் அமர்ந்திருப்பது அவளுக்குள் ஒரு புதுவிதமான தவிப்பை ஏற்படுத்தியது. மனோவின் கைகள் ஸ்டீயரிங்கை லாவகமாக கையாண்ட விதம், அவனது அசைவுகள், அந்த அசாத்தியமான கூல்னஸ்... எல்லாமே அவளுக்குள் ஒரு காந்த ஈர்ப்பை நிகழ்த்தி கொண்டிருந்தன. இந்தத் தூரத்திலிருந்து அவனை பார்ப்பதும், அவனது இருப்பை உணர்வதும் அவளது நரம்புகளுக்குள் ஒரு மெல்லிய சிலிர்ப்பைக் கடத்தியது.

​இதற்கெல்லாம் மேலாக, மனோவிடமிருந்து வீசிய அந்த 'அசாரோ விசிட்' பெர்ஃப்யூமின் நறுமணம் அவளை மேலும் சிரமப்படுத்தியது. உள்ளுக்குள் ஒரு மயக்கம் அவளைச் சூழ்ந்தது.

​[எடிட்டிங் கட் — டைரக்டரின் mind voice]

​டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன்: "ஹலோ... இந்த இடத்துல ஒரு 'கட்' கொடுத்துட்டு நேரா நிகழ்காலத்துக்கு போயிரலாமா? ஏன்னா, வழக்கமா இந்த கதையில் இந்த மாதிரி perfume smell வரும்போது டைம் ஜம்ப் பண்றதுதானே ஃபார்முலா?"

​வேணாம்! ஆடியன்ஸ் கொலவெறியில் காண்டாகிறது என் மனக்கண்ணுல அப்படியே தெரியுது. அதனால நோ கட்!

ஓகே... ஓகே... கட் பண்ணல. சீன் கன்டினியூ ஆகட்டும்!"

​மனோ கார் டிரைவ் செய்தபடி எதார்த்தமாகக் கேட்டான்.
​"Why do you get tensed for everything?"

​வாயை திறந்து இதற்குப் பதில் சொன்னால் மாட்டி விடுவோமோ, போனில் தினமும் பேசும் தன் 'சன்ஷைன்' குரலை அவன் டக்குனு கண்டுபிடித்து விடுவானோ!

பேசாமல் அப்படியே அமைதியாக இருந்துவிடுவதே இந்த நிமிஷத்திற்கு உசிதம் என்று மைதிலியின் உள்மனம் ரகசியத் தராசில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால், சில நேரங்களில் மௌனம் என்பது பதிலை விடவும் ஆபத்தானது. ‘சொல்லித்தான் பார்ப்போமே, நடப்பது நடக்கட்டும்’ என்றொரு விசித்திரமான தைரியம் எங்கிருந்தோ அவளுக்குள் வந்து குடியேறியது.

​"நான்... பி.காம் ஃபைனல் இயர்..." என்றாள் மெல்ல.

​அவளது வாய்ஸை கேட்ட அந்த விநாடி, மனோவின் கைகள் ஸ்டீயரிங்கில் தானாக இறுகின. சாலை மீதிருந்த அவனது மொத்தக் கவனமும் சிதற, முகத்தை அப்படியே இடது புறமாகத் திருப்பி அவளை உற்றுப் பார்த்தான்.

​எங்கேயோ கேட்ட குரல்.
அடிக்கடி கேட்ட குரல்.

​மைதிலி அவன் பார்ப்பதை உணர்ந்து: "என்ன... இப்படிப் பார்க்கிறீங்க?"

​அவனது கவனம் முழுக்க அவளது முகத்திலேயே இருந்ததால், அடுத்த நொடி, கார் சாலையின் மையக்கோட்டை தாண்டி லேசாக விலகுவதை அவனது Reflex எச்சரித்தது.
​சட்டென்று சுதாரித்துக் கொண்டான். காரை லாவகமாக ஸ்டீயரிங்கை இடப்பக்கம் திருப்பி காரை சரியான டிரேக்கிற்குள் கொண்டு வந்தான்.

காரின் ஸ்பீடோமீட்டர் 40-ஐக் காட்டியது. அந்த வேகம் குறைதல் அவனுள் எழுந்த கேள்விகளின் வேகம் அதிகரிப்பதன் அறிகுறியாகவே இருந்தது.

"இல்ல... உங்க வாய்ஸ் அடிக்கடி கேட்ட மாதிரி ரொம்ப ஃபெமிலியரா இருக்கு" என்றான் குழப்ப பார்வையுடன்.

தன் குரலைக் கேட்டதும் அவனிடம் ஏற்படும் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்றுதான் மைதிலியும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

​மைதிலிக்கு உள்ளுக்குள் லேசாக மூச்சு வந்தது. அவன் தன் குரலை வைத்து முழுமையாக கண்டுபிடிக்கவில்லை என்பது அவளுக்கு புரிந்தது. அவனது மூளையின் நினைவகத்தில் ஒரு சின்னக் குழப்பம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. இப்போது அவள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் காதலியை கண்டதும் வரும் பரவசம், ஆச்சரியம், அந்த 'கண்ணாடி' கண்கள்... எதுவுமே அவனிடம் இல்லை என்று மைதிலிக்கு ஏமாற்றம்.

​மாறாக, ஒரு கணக்கு தப்பும்போது வரும் குழப்பம் போன்ற பார்வை.
​எதிர்பாராத புதையல் கிடைத்தால் மனிதனுக்குத் திகைப்புதானே வரும்? 'இது நிஜம்தானா?' என்ற சந்தேகம். ஆனால் அவனது முகம் ஒரு கம்ப்யூட்டர் ஹேங் ஆனது போல குழப்பமாக இருந்தது.

அவளுக்குள் இருக்கும் அந்த மாபெரும் பயமும் எட்டிப் பார்த்தது. ஒருவேளை... நான்தான் சன்ஷைன் என்று தெரிந்ததும் அவனுக்குள் ஏமாற்றம் வந்துவிட்டதோ? போனில் தன் குரலை கேட்டு அவன் உருவாக்கி வைத்திருந்த அந்த கற்பனை தேவதையின் பிம்பத்திற்கு, இதோ அவனருகில் அமர்ந்திருக்கும் இந்த எளிய பி.காம் மாணவியின் அசல் முகம் ஈடுகொடுக்கவில்லையோ என்ற சந்தேகம் அவளை வாட்டியது.

​மனோ மீண்டும் பேச்சை தொடர்ந்தான். "நீங்க டிரான்ஸ்ஃபர் ஸ்டூடண்ட் தானே? இப்பதானே இந்த காலேஜுக்கு வந்திருக்கீங்க?"

​"கரெக்ட்..." என்று ஆரம்பித்த மைதிலி, இம்முறை வேண்டுமென்றே தன் வாய்ஸ் மாடுலேஷனை மாற்றிக் கொண்டாள். தனக்கு இந்த ஊர் புதிது என்பதையும், தன் பூர்வாசிரமத்தை பற்றியும், தன் வாழ்வியலை பற்றியும், எளிய வார்த்தைகளில் பேசத் தொடங்கினாள்.

​அவள் பேசப் பேச...

​'ஒருவேளை இவள் தான் நம்ம சன்ஷைனோ?' என்ற சந்தேகம் அவனது மூளையை தாக்க, அவனது புருவங்கள் சுருங்கி முகத்தில் ஒரு குழப்பம் அப்பட்டமாக ரேகையாய் ஓடியது.

ஆனால், பெண்களின் மனது எப்படி ஆண்களுக்கு புரிவதில்லையோ, அதே மாதிரி ஆண்களின் மனதும் பெண்களுக்கு புரிவதில்லை.
​அவன் குழம்பியது நிஜம்தான். ஆனால், அது ஏமாற்றத்தால் வந்த குழப்பம் இல்லை. இதுவரைக்கும் போனில் மட்டுமே கேட்டுப் பழகிய ஒரு குரல், இப்போது திடீரென்று நிஜத்தில், தன் காருக்குள் கேட்கும்போது—'இது அந்த அசல் குரல் தானா, இல்லை வேறொரு குரலா?' என்ற அந்த டெக்னிக்கல் ஒப்பீட்டு தவிப்பை தவிர அவனுக்குள் வேறு எந்த குழப்பமும் இருக்கவில்லை. அவனது கணினிக் கணக்குகள் மேட்ச் ஆகாமல் தடம் புரண்டதே அந்தப் பார்வைக்குக் காரணம் என்பதை அவளது பெண் மனம் அறியவில்லை.

இதற்கிடையே, ​

​இந்துவின் வாட்ச் முள் நகர்வது போல தெரியவில்லை. வழக்கமாக அந்த சாலையில் வரும் ஒன்றிரண்டு லோக்கல் ஆட்டோக்கள் கூட இப்போது ஆப்சென்ட். அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் தான் வரும். தார்ச்சாலை முழுக்க மாலை நேரத்து வெறிச்சோடிய மௌனம்.

​"இப்ப என்னடி செய்யறது?" இந்து கத்தினாள். குரலில் அப்பட்டமான டென்ஷன்.
​அதே விநாடி. தூரத்தில் ஒரு பைக் சத்தம். 4-ஸ்ட்ரோக் எஞ்சின் சத்தம். ஒருவன் ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டரில் வேகமாக வந்து கொண்டிருந்தான். சஞ்சு சட்டென்று நடுரோட்டுக்கு வந்து கையை நீட்டி மறித்தாள். இருவரும் சாதாரண சல்வாரில் இருந்தாலும், உடையை மீறிய, ஓப்பனை தேவைப்படாத அழகிகள். தார்ச்சாலையில் இரண்டு அழகான கல்லூரிப் பெண்கள் லிப்ட் கேட்டால், பிரேக் மிதிக்காத அசடர்கள் இந்த உலகத்தில் மிகக் குறைவு. உடனே பிரேக் அடித்து நிறுத்தினான்.

​"என்ன விஷயம்?" என்றான் அவன், ஹெல்மெட் கண்ணாடியை ஏற்றிவிட்டு.
​"மார்க்கெட் ஏரியா வரைக்கும் போகணும். அர்ஜென்ட்!"

​பைக்காரன் லேசாகத் தயங்கினான். "ஓ ஸாரி... நான் மார்க்கெட் ஏரியா வரைக்கும் போகலையே. பாதியிலேயே வகாவ்லி ரோட்டில கட் அடிச்சு உள்ள போயிருவேன்.

​சஞ்சு அவனது தயக்கத்தை நொடியில் முறித்தாள்.
"சரி ஓகே, அதுவரைக்குமாவது எங்களை டிராப் பண்ணுங்க. ஆனா... கொஞ்சம் வேகமா போங்க ப்ளீஸ்!"

​அவர்கள் ஏறி அமர்ந்த அடுத்த கணம் பைக் வேகம் எடுத்தது. தன் வாழ்நாளில் இரண்டு அழகான பெண்களை பின்னால் ஏற்றிக்கொண்டு அவன் பயணித்ததே இல்லை போல! அந்த எக்ஸைட்மென்ட்டில், வேண்டுமென்றே அவ்வப்போது சடன் பிரேக்குகளை போட்டுக் கொண்டே பைக்கை செலுத்தினான்.

​ஆனால், அவனது சில்மிஷங்களை கவனிக்கும் மனநிலையில் சஞ்சுவும் இந்துவும் இல்லை. மைதிலி காருக்குள் என்ன பாடுபடுகிறாளோ என்ற டென்ஷனில், இருவரின் உடம்பும் விறைப்பாக இருந்தது. பைக் அந்த ரைட் கட் திருப்பத்திற்கு வந்து நின்றது. இருவரும் டக்கென்று இறங்கி, அவனுக்கு ஒரு இயந்திரத்தனமான நன்றியை சொன்னார்கள்.
​தனக்குக் கிடைத்த பூர்வபுண்ணிய பாக்கியத்தை நினைத்து, மனசுக்குள் கடவுளுக்கு தோப்புக்கரணம் போட்டுக்கொண்டே, அவன் ரைட் திரும்பி தன் ஊரை நோக்கி பைக்கை முறுக்கினான்.

​அவர்கள் நின்று பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனோவின் காரை காணவில்லை. மார்க்கெட் ஏரியா பக்கம் போகும் வாகனங்கள் எதுவுமே இல்லை காலேஜ் பக்கம் போகும் வாகனங்கள் தான் ஒரு சில ரோட்டில் சென்று கொண்டிருந்தன.

​இந்து தன் நகங்களை கடித்தபடி, "இவ அங்க போய் சன்ஷைன் ரகசியத்தை சொன்னாளா இல்லையா... என்ன ஆச்சுன்னே தெரியலையேடி! எனக்கு பிபி ஏறுது!" என்றாள்.

அதே நேரம்,

​காரின் ஸ்பீடோமீட்டர் முள் 40-க்கும் 50-க்கும் நடுவே ஊசலாடிக்கொண்டிருந்தது. மனோவின் மனசும் அப்படித்தான்.
​போனில் கேட்கும் சன்ஷைனின் குரல் வேறு; இதோ பக்கத்து சீட்டில் அமர்ந்து பேசும் மைதிலியின் குரல் வேறு. வழக்கமாகவே மொபைல் நெட்வொர்க்கின் சிக்னல் அலைவரிசையில் சுருங்கி வரும் குரலுக்கும், நேரடி குரலுக்கும் ஏகப்பட்ட டெசிபல் வித்தியாசங்கள் உண்டு. அது போக, மைதிலி இப்போது வேண்டும் என்றே தன் அசல் மாடுலேஷனை மாற்றி, மிகவும் எச்சரிக்கையாக, வேறொரு டோனில் பேச்சை திசை திருப்பிக் கொண்டிருந்தாள்.

​குரல் மேட்ச் ஆகிறது போல தோன்றுகிறது, அதே சமயம் பிடிபடாமல் நழுவுகிறது. அவளது திட்டமிட்ட டோன் மாற்றத்தால் அவனால் உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

​அவள் சொன்ன தகவல்களிலிருந்து அவளை பற்றி ஒரு சில விஷயங்கள் தெரிந்து கொண்டான்.

​அவள் ஒரு டிரான்ஸ்ஃபர் ஸ்டூடண்ட்.
​வசதி இல்லாத குடும்பப் பின்னணி.
​படிப்புச் செலவுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ஓடி ஓடிப் பார்ட் டைம் வேலை பார்க்கிறாள்.
​அவ்வளவுதான்.

Sunshine தன்னுடைய பர்சனல் விவரங்களை அவனிடம் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அதனால் இவளையும் சன்ஷைனையும் அவனால் சம்பந்தப்படுத்தி பார்க்க முடியவில்லை.

மனோவின் குழப்பம் மைதிலிக்கு ஏமாற்றம். அவளது அகத்தில் இரண்டு எதிர் எதிர் துருவங்கள் மோதிக்கொண்டன. ஒரு பக்கம், 'எக்காரணத்தை கொண்டும் தான்தான் சன்ஷைன் என்கிற ரகசியத்தை இப்போதைக்கு சொல்லவே கூடாது' என்கிற அசாத்தியமான பிடிவாதம். இன்னொரு பக்கம், 'இந்த தவிப்புக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து, எல்லா உண்மையையும் கொட்டி, இங்கயே ஒரு எண்ட் கார்டு போட்டுவிட்டால் என்ன?' என்கிற ஒரு விசித்திரமான விரக்தித் துணிச்சல்.

​​பாதுகாப்பு வளையத்திற்குள் ஒளிரும் ரகசியத்தை அப்படியே நீட்டிப்பதா, அல்லது ஒரே அடியில் உடைத்துவிட்டு அதன் விளைவுகளை சந்திப்பதா? இந்த இரண்டு எண்ணங்களும் அவளது இதய பிரதேசத்தை யுத்தக் களமாக்கின.

​ஒரே சீட்டில், சில அங்குல இடைவெளியில் அவனது உலகமும் அவளது உலகமும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்தன.

காரின் முன் கண்ணாடி வழியே பாய்ந்த அந்த மாலை நேரத்துச் செவ்வான வெளிச்சம், சாலையோர மரங்களின் நிழல்களோடு போட்டி போட்டுக்கொண்டு அவளது முகத்தில் விழுந்தது. அதுவரை பதற்றத்தில் இருந்தவள், சட்டென்று தன் கைகளை மடியில் கோர்த்துக் கொண்டு நேராக நிமிர்ந்து அமர்ந்தாள். அவளது விரல்கள் இப்போது நடுங்கவில்லை; மாறாக ஒரு தீர்க்கமான அமைதியோடு லாக் ஆகியிருந்தன.

​அவளது பார்வையில் இருந்த அந்தத் தடுமாற்றம் மறைந்து, கண்கள் விண்ட்ஷீல்டிற்கு அப்பால் விரிந்திருந்த தார்ச்சாலையின் ஏதோ ஒரு புள்ளியில் நிலைத்தன. பயத்தின் அத்தனை அலைகளையும் ஒரே விநாடியில் தனக்குள்ளேயே ஆழமாக புதைத்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவள் போல அவளது உதட்டின் ஓரத்தில் ஒரு மிக மெல்லிய, அழகான புன்னகை அரும்பியது.
அவளது முகத்தில் இப்போது தவிப்பில்லை; ஒரு தெளிவு மட்டுமே எஞ்சியிருந்தது.
​அந்த விசுவல் மாற்றம் அவளது குரலிலும் எதிரொலித்தது.

​"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." என்று அவள் மெல்ல ஆரம்பித்த அந்த விநாடி—

​​மாலை நேரத்து இளங்காற்று முகத்தில் அடிக்க, இந்து மற்றும் சஞ்சுவின் தலைமுடி கலைந்து முகத்தில் விழுந்தது. வாகனங்கள் ஏதாவது வருகிறதா என்று ரோட்டோரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்து பதட்டமாக நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.
"எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்குதுடி... இவ என்ன சொன்னாளோ, அவன் என்ன பண்ணுனானோ? என்ன ஆச்சோ? பஹுத் கபராஹட் ஹோ ரஹீ ஹை.."

​சஞ்சுவின் முகத்திலும் பயம் அப்பட்டமாக தெரிந்தது. ஒருவேளை தாங்கள் செய்தது தவறோ என்று கூட யோசனைகள் வந்தது.

சஞ்சு: "சும்மா இருந்தவளை நாமதான் உசுப்பேத்தி அனுப்பி வச்சோம். நாம பண்ணது தப்போன்னு இப்ப தோணுதுடி. ஒருவேளை ஏதாவது நெகட்டிவா நடந்துச்சுன்னா... மைதிலியால அதை தாங்கவே முடியாது. அவ தைரியசாலி தான் ஆனா இந்த விஷயத்துல ரொம்ப வீக்.
மனசு உடைஞ்சு எதையாவது பண்ணிக்கிட்டா என்ன பண்றது! நாம உடனே அவளை போய் பிடிக்கணும்!"

​இனி ஒரு விநாடி கூட அங்கே நின்று வண்டிக்காக காத்திருப்பது நேர விரயம் என்று இருவருக்குமே புரிந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அடுத்த கணமே, மார்க்கெட் ஏரியாவை நோக்கி தார்ச்சாலையில் ஓடத் தொடங்கினார்கள்!

துப்பட்டாக்கள் காற்றில் படபடக்க, இருபதுகளின் அசல் இளமை குலுங்க, வேகமான ஓட்டத்திற்கு ஏற்ப மார்புகள் அசைந்து அலையிட, தார்ச்சாலையில் அந்த இரண்டு இளம் பெண்களும் ஓடிய விதம் எதிர்படுபவர்களை சுண்டி இழுக்கும், ஒரு அசல் இளமையின் அசைவுப் படம் போல இருந்தது.

ஆனால் அவர்களோ, 'மைதிலிக்கு ஏதாவது நெகட்டிவா நடந்திர கூடாது' என்ற ஒற்றை வெறியில் தங்களின் அத்தனை எனர்ஜியையும் அந்தத் தார்ச்சாலையில் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

​இந்துவையும் சஞ்சுவையும் கடந்து சென்ற ஒரிரு டூ-வீலர்களும், காரில் இருந்தவர்களும் இவர்களை விசித்திரமாக பார்த்துவிட்டு சென்றனர்.

"எதுக்கு இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி ஓடுறாங்க?" என்ற கேள்விக் குறி பார்வைகள்.

எதையும் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.
​கொஞ்ச நேரம் ஓடியவர்கள் ​ஓரிடத்தில் நின்று மூச்சு வாங்கிக் கொண்டார்கள்.

திடீரென்று பின்னால் ஒரு பைக் வரும் சத்தம் கேட்டது.
​இந்து கையை நீட்டினாள். நல்லவேளையாக அந்த பைக் இவர்களை கடந்து செல்லாமல், சடாரென பிரேக் அடித்து நின்றது.
​இருவரும் ஒரு விநாடி கூடத் தாமதிக்கவில்லை.

பைக்காரன் "எங்க போகணும்?" என்று கேட்பதற்கு முன்பாகவே, சஞ்சுவும் இந்துவும் பைக்கின் பின் சீட்டில் ஏறி தங்களை சொருகிக் கொண்டனர்.
​"மார்க்கெட் ஏரியா! ப்ளீஸ் வண்டிய எடுங்க! கொஞ்சம் அர்ஜென்ட்"

பைக் உடனே புறப்பட்டது.

தொடரும்


This post was modified 13 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 490
 
ஜானகி மந்திரம் 32 A
 
 
​அடுத்த பத்தாவது நிமிடம்.
 
​மார்க்கெட் ஏரியாவில் இருவரையும் அந்தப் பைக்காரன் கொண்டு வந்து விட்டான். சஞ்சுவும் இந்துவும் அவசரமாக வண்டியிலிருந்து துள்ளி இறங்கி, அவனுக்கு அவசர அவசரமாக ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு சுற்றிலும் பார்த்தார்கள்.
 
மணிக்கூண்டு மார்க்கெட்டுக்கு செல்லும் பிரதான சாலையில் மாலை நேரத்து நெரிசல். பக்கத்தில் பஸ் ஸ்டாப் இருந்தது. ஆனால், மனோவின் கார் அங்கெங்குமே இல்லை. மைதிலியையும் காணவில்லை.
 
​இந்துவின் முகம் வெளுத்தது. "எங்கடி? ஒருவேளை நேரடியா கஃபேவுக்கே போயிட்டாளா?"
 
​சஞ்சுவின் பார்வையும் நாலாபுறமும் தேடியது.
 
"தெரியலையே... வா, முதல்ல அங்க போய் பார்ப்போம்."
 
​இருவரும் மணிக்கூண்டு மார்க்கெட்டை நோக்கி செல்லும் சாலையில் வேகமாய் ஓடினார்கள். அவர்கள் ஓட ஆரம்பித்த சில விநாடிகளிலேயே, எதார்த்தமாக இடதுபக்கம் பார்த்தாள் இந்து.
 
தார்ச்சாலையை விட்டு இறங்கிச் செல்லும் ஒரு ஆள் அரவமற்ற ஒற்றையடி பாதை. அதன் ஓரத்திலிருந்த ஒரு பெரிய மரத்தினடியில் யாரோ ஒரு பெண் தனியாக நிற்பது தெரிந்தது.
 
​மாலை மங்கும் வேளையில், தூரத்திலிருந்து பார்த்தபோதே இந்துவின் கண்கள் சட்டென்று அவளை அடையாளம் கண்டுகொண்டன. 
 
அது மைதிலி!
 
​"சஞ்சு... அங்க பாரு, மைதிலி!"
 
​இருவரும் திரும்பி, ஒற்றையடி பாதையில் படபடவென இறங்கி, அவளை நோக்கி "மைதிலி... மைதிலி!" என்று கத்திக்கொண்டே ஓடினார்கள்.
 
​அவர்களது குரல் கேட்டு, கண்களில் தேங்கியிருந்த நீருடன் மைதிலி அவர்களை திரும்பிப் பார்த்தாள்.
அழுகையை அடக்க முடியாமல் உதடுகள் துடித்தபடி, கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்தவளை பார்த்ததும், சஞ்சுவிற்கும் இந்துவிற்கும் நெஞ்சு 'சுரீர்' என்றது. 
 
ஏதோ விபரீதம் நடந்துவிட்டது, நெகட்டிவ் ரிசல்ட் என்பதை அவளது முகம் அப்பட்டமாக சொல்லாமல் சொல்லியது. அவளை எப்படித் தேற்றுவது, ஆறுதல்படுத்த என்ன வார்த்தைகளை சொல்வது என்று தெரியாமல் தவித்தபடியே அவளை நெருங்கினார்கள்.
 
​சஞ்சு அவளது கைகளை பற்றிக்கொண்டு, "என்னடி ஆச்சு? ஏன் இங்க வந்து தனியா அழுதுட்டுருக்க?" என்று மூச்சு வாங்கக் கேட்டாள்.
 
​மைதிலி பதில் பேசவில்லை. தவிப்போடு தோழிகள் இருவரையும் உற்றுப் பார்த்து கொண்டிருக்க, அவள் தொடர்ந்து இருவரையுமே பதில் சொல்லாமல் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்
 
இந்து பொறுமை இழந்து...
​"கேக்குறோம்ல... பதில் சொல்லுடி, என்ன ஆச்சு? நீ அவன்கிட்ட உண்மையை சொன்னியா? அவன் என்ன சொன்னான்?"
 
​[ஃபிளாஷ்பேக் கட் — காருக்குள்]
 
​காரின் விண்ட்ஷீல்டுக்கு வெளியே மரங்களின் நிழல் முகத்தில் விழுந்து மறைய, மைதிலி மெல்லத் தன் முகத்தை மனோவின் பக்கம் திருப்பினாள்.
 
​"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..."
 
​மனோ ஸ்டீயரிங்கிலிருந்து கைகளை எடுக்காமல், தன் கூல் புன்னகையோடு லேசாக தலை சாய்த்தான்.
 
"Yes... சொல்லுங்க."
 
​மைதிலி தொண்டையை கனைத்துக் கொண்டாள். உள்ளுக்குள் எகிறிய இதயத் துடிப்பை அடக்கி, அசாத்தியமாக ஒரு தைரியத்தை வரவழைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள். ஆனால், அவனை திரும்பிப் பார்த்த அந்த மைக்ரோ விநாடி... அவளுக்குள் இருந்த 'சன்ஷைன்' பயந்து உள்ளே ஒளிந்துகொண்டாள். அவள் சொல்ல வந்த விஷயம் அப்படியே தொண்டைக்குள் லாக் ஆகிவிட, அவளறியாமலேயே பேச்சு வேறு தடம் மாறியது.
 
​"காலேஜ்ல எல்லாரும் உங்களை பத்தி ரொம்ப நல்லவிதமா சொல்றாங்க. ஆஹா ஓஹோன்னு புகழ்றாங்க. நீங்க காலேஜ் ஸ்டூடண்ட் யூனியன் லீடர். பசங்களோட குறைகளைக் கேட்டு உடனே நிவர்த்தி பண்றீங்க... எல்லாம் ஓகேதான். ஆனா நீங்க பண்ற ஒரு விஷயம் எனக்கு பிடிக்கல...." என்று இழுத்தாள்.
 
​"என்ன விஷயம்?" என்றான் அவன் எதார்த்தமாக.
 
​"இந்த பைக் ரேஸ் எல்லாம் ரொம்ப டேஞ்சரான விஷயம் ஆச்சே! அதை எதற்காக நீங்க பண்ணனும்? அதை மட்டும் நீங்க தவிர்க்கக் கூடாதா?"
​அவள் உடைக்க வந்த ரகசியம் வேறு, ஆனால் பயத்தில் அவளது வாய் கேட்ட கேள்வி முற்றிலும் வேறாக மாறிப் போனது!
 
​மனோ இதைக் கேட்டு சட்டென்று சிரித்தான்.
 
​"அடேங்கப்பா... இதான் விஷயமா? எதுலதான் டேஞ்சர் இல்லை? உலகத்துல எல்லாத்துலயும் தான் ஆபத்து இருக்கு. வீட்ல ஃபேன் போடுவதற்காக சுவிட்ச் போடப் போறோம்... ஷார்ட் சர்க்யூட்ல கரண்ட் ஷாக்கடிச்சு செத்துப்போனவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. பாம்பு கடிச்சுப் பொழைச்சவனும் இருக்கான்... ஆனா, செருப்பு கடிச்சு செப்டிக் ஆகி செத்தவனும் இருக்கான். பயந்துகிட்டே இருந்தா நம்மால எதையுமே பண்ண முடியாது!"
 
​அவன் பைக்கின் கியரை மாற்றுவது போலப் பேச்சை லாவகமாகத் திருப்பினான்.
​"நீங்க கேட்டதுனால ஒரு stats சொல்றேன்... உலகத்துல நடக்குற மொத்த பைக் விபத்துக்கள்ல, ரேஸ் டிராக்ல ஓட்டுற ரேசர்களுக்கு நடக்குற விபத்து வெறும் 1 சதவீதத்துக்கும் கம்மிதான். ஏன்னா, அவங்க முறையான சேஃப்டி கியர்ஸ், ஹெல்மெட், ட்ரெய்னிங்கோட வண்டி ஓட்டுறாங்க. ஆனா, முறையான ஹெல்மெட் போடாம, டிராஃபிக் ரூல்ஸை மதிக்காம சாதாரண ரோடுகள்ல சுத்துற பொதுமக்களுக்குத்தான் 99 சதவீத விபத்துக்கள் நடக்குது. சோ, ரேஸிங் என்கிறது ஒரு கால்குலேட்டட் ரிஸ்க்... ஒரு ஸ்போர்ட்ஸ். அதனால பயப்படத் தேவையில்லை..."
​இப்படியாக அவனது அந்தப் பேச்சு, ரேஸிங் பற்றிய ஒரு விவாதமாகவே முடிந்துபோயிருந்தது.
 
அதற்குள் மார்க்கெட் ஏரியாவும் வந்துவிட, மைதிலி காரை விட்டு இறங்கியிருந்தாள்.
 
​[நிகழ்காலம் — ஒற்றையடிப் பாதை மரத்தடி]
 
​ஃபிளாஷ்பேக்கை கேட்டு முடித்த இந்துவிற்கும் சஞ்சீவிற்கும் ஒரு பக்கம் செம கடுப்பாக இருந்தது. 'இவ்வளவு தூரம் ஸ்கெட்ச் போட்டு காருக்குள் ஏற்றி அனுப்பி அரக்க பறக்க ஓடி வந்தா இவள் போய்ப் பைக் ரேஸை பற்றிப் பேசிவிட்டு வந்திருக்கிறாளே!' என்று ஆத்திரமாக வந்தது. ஆனால், இன்னொரு பக்கம்... அப்பாடா, ரகசியம் இன்னும் உடையவில்லை, இப்போதைக்கு இவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற பெரிய ஆறுதலும் எட்டிப் பார்த்தது.
 
​இந்து: "அடிப்பாவி! ரெண்டு பேரும் மட்டும் தனியா காரில் இருந்தீங்க. எவ்வளவு பெரிய கோல்டன் சான்ஸ்.. ஏன்டி சொல்லல?"
 
​மைதிலி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள். அவளது கண்களில் இப்போது அப்பட்டமான ஒரு வலியும், முதிர்ச்சியும் தெரிந்தன.
 
​"நான் பேச ஆரம்பிச்ச முதல் ரெண்டு வரியிலயே... என் வாய்ஸைக் கேட்டதும் அவன் முகத்துல ஒரு சின்ன ஏமாற்றத்தையும், குழப்பத்தையும் பார்த்தேன்..." என்று அவளது குரல் உடைந்தது.
 
அவளே மேற்கொண்டு பேசட்டும் என்று இருவரும் பேசாமல் காத்திருந்தார்கள்.
 
ஒரு சில நொடிகளுக்கு பிறகு மைதிலி தொடர்ந்தாள்.
 
​"நான் தான் அவனோட சன்ஷைன்னு சொல்லி, அவன் மனசுக்குள்ள தாங்கி பிடிச்சிருக்கற அந்த அழகான காதல் கனவை, என் நிஜ முகத்தைக் காட்டி நான் கலைக்க விரும்பல. போன்ல அவனுக்கு நான் தேவதையாவே இருந்துட்டு போறேன். இப்ப மட்டுல்ல... எப்பவுமே... அவன் என்னை பற்றி நினைக்கிற வரைக்கும்... எனக்கு போன் வர வரைக்கும்... என் கூட பேசுற வரைக்கும்... 
 
அதனால நேர்ல போயி அவனோட கனவை கலைக்க எனக்கு மனசு வரல. அதான்... அதான் என்னால சொல்ல....!" என்று மேற்கொண்டு சொல்ல முடியாமல் 
வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத அந்தப் பெருவலியை விம்மல்களாக கொட்டினாள். அதுவரை அவளுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த காதலின் மொத்த பாரமும் அந்த ஒற்றை அழுகை கரைத்து விடப் போவதில்லை.
​சஞ்சுவும் இந்துவும் பேச்சற்று நின்றார்கள். 
 
அடுத்த விநாடி, இருவரின் கண்களிலும் கண்ணீர் கசிவு. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வார்த்தைகள் தீர்ந்துபோன அந்த இடத்தில், நட்பைத் தவிர வேறென்ன ஆறுதல் இருக்க முடியும்?
 
​இருவரும் மெல்ல நகர்ந்து மைதிலியின் இருபுறமும் நெருங்கினர். எவ்விதக் கேள்விகளும் இன்றி, அவளை தழுவி, அவளை அப்படியே தங்களுக்குள் ஆறுதலாக கட்டிக்கொண்டனர். 
 
ஒற்றையடிப் பாதையின் மங்கலான அந்தி வெளிச்சத்தில், தோழிகளின் இறுக்கமான அணைப்பின் கதகதப்பில், மைதிலி முகத்தை புதைத்துக் கொண்டு தன் மனபாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைத்தாள்.
 
தொடரும்


   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page