மௌனம் - 1
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
என்று இனிமையாக உருகி ஒலித்துக்கொண்டிருந்த அபிராமியின் குரலைக் கேட்டபடியே மாடியிலிருந்து இறங்கி வந்தான் விநாயக் மஹாதேவ்.
எப்போதுமே அந்தக் குரலில் இருக்கும் அன்பும் அக்கறையும் இனிமையும் கொஞ்சமும் குறையாமல் இன்றும் அந்தப் பாடலில் இழைந்து கொண்டிருக்க.. ‘குறை ஒன்றும் இல்லையாமே..!’ என மனதிற்குள் எண்ணியவனின் இதழ்களில் ஒரு அலட்சிய புன்னகை தவழ்ந்தது.
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடலில் இருந்த பொருளும், அதைப் பாடும் போது அபிராமியின் குரல் உணர்த்திய பாவமும் கொஞ்சமும் தனித்துத் தெரியவில்லை. நிஜமாகவே தன் வாழ்வில் எந்த ஒரு குறையும் பிரச்சனையும் இல்லை என உணர்ந்து அவர் பாடுவது போல் இருக்க.. ‘எப்படி இவங்களால் மனசறிஞ்சு இப்படி ஒரு பொய்யை உண்மை போல் குரலில் கொண்டு வர முடியுது..?’ என்று நினைத்தவனாக உணவு மேஜையை விநாயக் நெருங்கவும், அபிராமி எழுந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.
“குட் மார்னிங் வினய்..” என மகனைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்து புன்னகைக்க.. “மார்னிங் ம்மா..” என்றவாறுறே அவன் அமரவும், வேகமாக மகனுக்குப் பரிமாற வந்தார் அபிராமி.
தனக்கு மட்டும் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த அபிராமியை கேள்வியாகப் பார்த்தவன் “நீங்க சாப்பிடலையா..?” எனவும் “நான் அப்புறம் சாப்பிடறேன், நீ சாப்பிடு..” என்றார் தயக்கத்தோடே அபிராமி.
‘ஏன்..?’ என்பது போல் விநாயக் சாப்பிடாமல் அப்படியே நிறுத்தி அவரின் முகத்தைப் பார்க்க.. அவரோ பதிலின்றிப் பார்வையை தழைத்துக் கொண்டார். இதில் யோசனையானவன் “ம்மா.. திரும்ப விரதம் அது இதுன்னு எதுவும்..” எனக் கண்டன குரலில் கேட்கவும், “இல்லை.. இல்லை.. இப்போ எல்லாம் நான் விரதமே இருக்கறது இல்லை வினய்..” என்றார் அவசரமாக அபிராமி.
‘அப்புறம் என்ன..?’ என்று அப்போதும் அவன் யோசனை கொஞ்சமும் மாறா விழிகளோடு அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க.. “அது கோவில்.. கோவிலுக்குப் போகலாம்னு இருக்கேன், நான் வந்து சாப்பிட்டுக்கறேன்..” என்றார் அபிராமி.
“ம்ப்ச்..” என்ற சலிப்போடு எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இதென்ன என்ற எண்ணத்தோடு பார்வையைத் திருப்பியவனுக்கு அப்போதே தன் தட்டில் இருந்த பாதாம் அல்வா கண்ணில் பட்டது. அதில் ஒரு நொடி நெற்றியை சுருக்கியவனுக்குக் காரணம் புரிய.. சட்டெனச் சாப்பிடாமலே எழுந்து கொண்டான் விநாயக்.
அதைக் கண்டு பதட்டமான அபிராமி “வினய் சாப்பிட்டு போப்பா..” எனப் பின்னேயே செல்ல, “நீங்களே கொண்டாடிக்கோங்க..” என்று விட்டு வேகமாக வெளியே சென்று விட்டிருந்தான் விநாயக்.
அதில் மகன் சென்ற திசையைக் கவலையோடு பார்த்தவாறே நின்று விட்ட அபிராமியின் விழிகளில் கண்ணீர் நிறைந்தது. ‘அத்தனை எளிதாக மறந்து விடக்கூடிய நாளா இது..? அவனுக்காகக் கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டு இருந்தாலும் மொத்தமாக ஒதுக்கி விட முடியாதே..!’ என மனம் மருக.. சில நொடிகள் அப்படியே நின்றவர், பின் கோவிலுக்கு நேரமாவதை உணர்ந்து கிளம்பினார்.
காவல் துறை வாகனத்தில் சென்று கொண்டிருந்த விநாயக்கின் முகம் இறுகி இருந்தது. தன் கோபத்தை வெகுவாகக் கட்டுப்படுத்த அவன் போராடிக் கொண்டிருப்பது தன் கை விரல்களை அவன் அழுந்த மூடி இருந்த விதத்திலேயே தெரிந்தது.
‘எப்படி..? எப்படி எதுவுமே நடக்காதது போல் இந்த நாளை அவரால் கொண்டாட முடிகிறது..? இத்தனைக்குப் பிறகும் இது தேவையா..!’ என்றெல்லாம் மனம் கொந்தளித்துக் கொண்டிருக்க.. எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விநாயக்.
எப்போதும் காலையில் தன்னை பார்த்தவுடன் லேசாகப் புன்னகைத்து இரண்டொரு வார்த்தையாவது பேசும் விநாயக்கின் இந்த அமைதி யோசனையைத் தர, தன்னையும் அறியாமல் இரண்டு முறைக்கும் மேல் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தபடியே இருந்தார் ஓட்டுனர் முருகன்.
அந்த மனநிலையிலும் முருகனின் பார்வையைக் கண்டு கொண்டிருந்த விநாயக் திரும்பி ‘என்ன..?’ என்பது போல் பார்க்க.. ‘ஒண்ணுமில்லை’ என்ற தலையசைப்போடு அவர் திரும்பிக் கொண்டாலும் அந்தப் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்தே இருந்த விநாயக், தன் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டாம் என்ற முடிவோடு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துத் தன்னை இயல்பாக்கிக் கொள்ள முயன்றான்.
இது அவனின் பல வருட பழக்கமாக இருந்ததால் நொடியில் கைக் கொடுத்தது. தன்னை இயல்பாக்கி கொண்டு நிமிர்ந்து அமர்ந்து சாலையில் கவனத்தைப் பதித்தான் விநாயக். நொடி நேரத்தில் அவனுள் வந்திருந்த மாற்றத்தை கண்டு கொண்டிருந்த முருகனின் முகமும் சிறு புன்னகைக்கு மாறி இருந்தது.
திரும்பிப் பார்க்காமலேயே அதையும் கவனித்து இருந்த விநாயக், வழக்கமான தன் அதே கம்பீரத்தோடு காவல் நிலையத்திற்குள் நுழைந்தான்.
*******
வேகமாகத் தயாராகித் தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள் யது நந்தினி.
வழக்கமான ஹேண்ட் பேக் வலது கையில் இருக்க.. இடது கையிலிருந்த மூன்று கோப்புகளைச் சரி பார்த்தபடியே படியில் இறங்கி வந்தவளை யோசனையாகப் பார்த்த சித்ரா “என்னடா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டே..?” என்றார்.
“கொஞ்சம் வேலை இருக்கும்மா..” என்றபடியே சென்று பூஜை அறையின் முன் நின்றவள், அவசரமாக ஒரு வணக்கத்தைக் கடவுளுக்குப் போட்டு விட்டு திரும்ப.. “சீக்கிரம் கிளம்புவேன்னு நேத்தே சொல்லி இருக்கக் கூடாதா..? இன்னும் டிபன் கூட ஆகலை..” என வருத்தப்பட்டவராக “ஒரு நிமிஷம் இரு..” என அவர் உள்ளே செல்ல போக, “நோ ம்மா ப்ளீஸ் வேண்டாம், எனக்கு நேரமில்லை..” என்றாள் அவசரமாக யது நந்தினி.
“வேண்டாம்னா என்ன அர்த்தம்..? சாப்பிடாம போவியா நீ..!” என சித்ரா தன் மறுப்பைக் குரலில் கொண்டு வந்து கேட்கவும், அதற்கு நந்தினி பதிலளிப்பதற்குள் “அப்படி என்ன அவசர வேலை..?” என்றிருந்தார் இவ்வளவு நேரமும் அங்கு அமர்ந்து அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த வேதவல்லி தன் கணீர் குரலில்.
அதில் வாயில் பக்கம் செல்ல இருந்த நந்தினி வரவேற்பறையின் பெரிய சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருந்த தன் பாட்டியின் பக்கம் திரும்பி “ஒரு மீட்டிங் இருக்கு வேதாம்மா, சீக்கிரம் போகணும்..” என்றாள்.
“அப்படி என்ன மீட்டிங்..? நிது இதை பத்தி எதுவும் சொல்லலையே..!” என அவன் இன்னும் கிளம்பாமல் இருப்பதை எண்ணி, அவர் யோசனையாகப் பேத்தியின் முகம் பார்த்தார். அந்தச் சந்தேகப் பார்வையைக் கண்டுகொள்ளாதது போலான முகபாவனையோடு “இது நிது ப்ராஜெக்ட் இல்லை வேதாம்மா.. என்னோட ப்ராஜெக்ட், மூணு நாள் முன்னே நடந்திருக்க வேண்டிய மீட்டிங்.. அப்போ கேன்சல் ஆகிடுச்சு, திடீர்னு தான் இன்னைக்கு ஷெட்யூல் செஞ்சாங்க..” என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் இயல்பாகவே பதில் கூறினாள் நந்தினி.
அதற்கு யோசனையாகத் தலையசைத்த வேதவல்லி வேறு எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க.. இதற்கு மேல் அங்கு நிற்க நேரமில்லாமல் வேகமாக வெளியேறி தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தாள் நந்தினி.
அதுவரை தன் மகள் சாப்பிடாமல் கிளம்புவதை எண்ணி உண்டான கவலையோடு இருந்த சித்ராவுக்கு வேதவல்லியின் சந்தேகப் பார்வையும் கேள்வியும் எதற்கு எனப் புரிந்த நொடி முகம் லேசாக இருண்டது.
அதில் அவர் சமையலறைக்குள் நுழைந்து கொள்ள.. மெல்ல தன் அருகில் இருந்த அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார் வேதவல்லி. அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “மேடம்..” என்ற பணிவான டில்லிபாபுவின் குரல் கேட்க.. “இன்னைக்கு நந்தினிக்கு என்ன மீட்டிங்..?” இதை பத்தி நிதினிக்கு எதுவும் தெரியாதா..?” என்று சுற்றி எல்லாம் வளைக்காமல் நேரடியாகக் கேட்டு விட்டிருந்தார் வேதவல்லி.
“இல்லை மேடம், இது நந்தினி மேம் பார்க்கும் ப்ராஜெக்ட்.. நம்ம ஆர்கே புரொடக்ஷன் ப்ராஜெக்ட்.. மூணு நாள் முன்னே நடக்க வேண்டிய மீட்டிங் அப்போ ஹீரோ கொஞ்சம் பிசி, ஒரு ஷூட்டிங்கில் ஸ்ட்ரக் ஆகிட்டார்.. அதனால் அப்போ மீட்டிங் கேன்சல் ஆகிடுச்சு, நேத்து நைட்டு தான் இதை கன்பார்ம் செஞ்சாங்க..” என அவர் விளக்கம் அளிக்க, அனைத்தையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டவர் ‘சரி’ என்று அழைப்பை துண்டித்திருந்தார்.
டில்லிபாபு கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக இந்த நிறுவனத்தில் வேலையில் இருப்பவர். வேதவல்லியின் கணவர் ராதாகிருஷ்ணன் இருந்த போதிலிருந்தே அவருக்கு உதவியாளராக இருந்தவர், அதன் பின் ரகோத்தமன் பொறுப்பை ஏற்ற போதும், இப்போது அடுத்தத் தலைமுறையான நிதின் மற்றும் நந்தினியிடம் பொறுப்பு வந்த போதும் தொடர்ந்து தன் கடமையைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்.
வேலையில் மட்டுமல்ல விசுவாசத்திலும் டில்லிபாபுவை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது. அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பாத வேதவல்லி கூட டில்லிபாபுவை நம்புவார். அவர் வார்த்தைகளில் உண்மை இருக்கும், இந்தக் குடும்பத்திற்கும் இவர்களின் நிறுவனத்திற்கும் எது நல்லதோ அதை மட்டுமே செய்யக்கூடியவர் டில்லிபாபு.
அதனாலேயே அவர் பேசியதை கேட்ட வேதவல்லி வேறு எந்தக் கேள்விகளும் இல்லாமல் அழைப்பை துண்டித்து விட்டு தன் இருக்கையில் இருந்து மெல்ல எழுந்தார். எழுபத்து ஐந்து வயதாகும் வேதவல்லி இப்போதும் கொஞ்சமும் குறையா அதே கம்பீரத்தோடும் அதிகாரத்தோடும் தான் அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தார்.
இன்றும் அவர் வைத்தது தான் அங்கு எழுதப்படாத சட்டம். அவர் கட்டளையே சாசனம். இந்த வயதிற்கே உரிய தளர்ச்சி உடலில் தெரிந்தாலும் இன்றும் பனாரஸ் சேலை, தன் அந்தஸ்தை பிரதிபலிக்கும் நகை என்று தனக்கே உரிய அலங்காரத்தோடு தான் தினமும் தயார் ஆவார் வேதவல்லி.
இப்போது அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றவர், தன் அருகில் இருந்த ஒற்றைக் கணமான தங்க நிற முலாம் பூசப்பட்ட கைத்தடியை பிடித்தபடி மெல்ல நடந்தார். அந்தக் கைத்தடியை ஒவ்வொரு முறை அவர் எடுத்து வைத்து நடக்கும் போதும் உண்டாகும் ஓசைக்கே அவர் வரும் அரவம் உணர்ந்து அந்த வீடே அமைதியாகும்.
இப்போதும் அந்தக் கைத்தடியை அழுத்தமாக ஊன்றியவாறே தன் அறையை நோக்கி அவர் செல்ல.. தன் அன்னையின் அத்தனை பேச்சையும் சிறு வருத்தத்தோடு கேட்டபடியே சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார் சித்ரா.
‘தன் மகளின் மேலான அவரின் சந்தேகப்பார்வை என்று மாறுமோ..!’ என்ற கவலை சித்ராவினுள் எப்போதும் போல் இன்றும் மேலெழுந்து வந்து அழுத்தியது. நந்தினிக்குமே இது பெரும் வருத்தத்தைத் தரக்கூடிய ஒன்று தான்.
ஆனால் அவரால் இதில் என்ன செய்து விட முடியும்..? எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்று எதிர்பார்ப்போடு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் பலரை போல் தான் சித்ராவின் வாழ்க்கையும் இருந்தது.
இங்கு இவ்வளவு நடந்து கொண்டிருக்க.. நேராகத் தன் காரைக் கொண்டு சென்று அந்தப் பழமையான அந்த அம்மன் கோவிலின் முன் நிறுத்தினாள் நந்தினி. மெல்ல இறங்கி ஒரு அர்ச்சனை கூடையை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவள், அந்தக் காலை நேர பரபரப்பு கொஞ்சமும் இல்லாமல் அமைதியாக இருந்த கோவில் கருவறையின் முன் சென்று நிற்க.. அவளை நன்கு அறிந்திருந்த அர்ச்சகர் “வாம்மா, என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்..?” என்றபடியே புன்னகையோடு வந்து நின்றார்.
“கொஞ்சம் வேலை இருந்தது சாமி..” என்றவள் தன் கையில் இருந்த அர்ச்சனை கூடையை அவரிடம் கொடுக்க.. அதை வாங்கிக் கொண்டவர், நந்தினியின் முகம் பார்க்க.. அர்ச்சனை பொருட்களைத் தொட்டபடியே “விநாயக் மஹாதேவ், சிம்ம ராசி.. உத்திரம் நட்சத்திரம்..” என்று அவள் சொல்லி முடிக்கவும், அர்ச்சகர் உள்ளே செல்ல.. விழிமூடி கடவுளை மனதில் நிறுத்தி தன் வேண்டுதலை அவர் பாதத்தில் மனதார வைத்தாள் நந்தினி.
அடுத்தச் சில நிமிடங்களில் அர்ச்சகர் ஆரத்தி தட்டுடன் நந்தினியின் முன் வந்து நிற்க.. அதைப் பக்தியோடு தொட்டு விழிகளில் ஒற்றிக்கொண்டவளுக்கு விபூதி குங்குமம் பூ கொடுத்தவரின் தட்டில் ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை போட்டாள் நந்தினி.
அதில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய, கையோடு கொண்டு வந்திருந்த அர்ச்சனை கூடையை அவளிடம் கொடுத்தார் அர்ச்சகர். அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டவள், மீண்டும் ஒருமுறை அங்கு வீற்றிருக்கும் அம்பிகையை மனதார ரசித்து விட்டு வெளியில் வந்தாள்.
பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வந்தவள் அங்கிருந்த பிரகார தூணின் அருகில் அமர்ந்தாள். எப்போதும் எதையோ நினைத்து அழுத்திக் கொண்டிருக்கும் மனம் இந்த நொடி நிர்மலமாக இருந்தது. அவள் இந்தக் கோவிலில் உணரும் ஒருவகை நிம்மதியை எங்கும் இதுவரை உணர்ந்ததில்லை.
இன்றும் அதே போல் இருக்க, இங்கேயே இப்படியே அமர்ந்து விட்டால் கூட நன்றாக இருக்கும் எனத் தோன்றினாலும், இன்று அவளுக்கு இருக்கும் கடமைகள் வரிசை கட்டி அவள் மனக்கண்ணில் வந்து போக.. விழியை அழுந்து மூடி ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவள், பின் எழுந்து கொள்ள நினைத்துக் கண்களைத் திறக்க.. அதேநேரம் அபிராமி கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அவரைக் கண்டதும் அவளுள் சிறு எதிர்பார்ப்பு உண்டாகச் சட்டென அபிராமியின் பின் பார்வையால் தேடினாள் நந்தினி. நிச்சயம் விநாயக் வர வாய்ப்பில்லை எனப் புரிந்தாலும் மனம் தன் எதிர்பார்ப்பை நிறுத்துவதில்லையே..!
ஒவ்வொரு வருடமும் அபிராமி மட்டுமே இந்த நாளில் வருவார் எனத் தெரிந்திருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாகச் சென்னையில் இல்லாதவன் இப்போது இங்கு வந்து இருக்க.. ‘ஒருவேளை தன் அன்னையோடு அவனும் வர கூடுமோ..!’ என்ற எண்ணம் அவர் மட்டும் உள்ளே நுழைந்ததில் பொய்த்துப் போனது.
இப்படி ஒருத்தி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை எல்லாம் கொஞ்சமும் உணராமல் கருவறையில் தெரிந்த அம்பாளின் உருவத்தை மட்டுமே கண்களில் நிறைத்துக் கொண்டு நேராக அங்குச் சென்று நின்றவரை கவலையோடு பார்த்தவாறே எழுந்து கொண்டாள் நந்தினி.
மீட்டிங் செல்ல அவளுக்கு நேரமானது. இதற்கு மேல் தாமதித்தால் சரியான நேரத்தில் அங்குச் செல்ல முடியாது என்று புரிந்து மெல்ல அங்கிருந்து நடந்தாள் நந்தினி.
அர்ச்சகர் அபிராமியை கண்டதும் முகம் மலர்ந்து “அடடே வாங்கோ.. வாங்கோ அபிராமிம்மா..” எனவும் “எப்படி இருக்கீங்க சாமி..?” என்றார் மெல்லிய புன்னகையோடு அபிராமி.
“எனக்கு என்ன..? உங்களை போலப் பெரியவா புண்ணியத்தில் நன்னா இருக்கேன்.. நீங்க என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரவே இல்லை..” என்று அவர் விசாரிக்கவும், “கொஞ்சம் உடம்பு முடியலை சாமி, அதிகம் வெளியே போறது இல்லை..” என்றவர், அர்ச்சனை கூடையை அவரிடம் நீட்டி “விநாயக் மஹாதேவ்..” எனவும், தானாக அர்ச்சகர் “சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம்..” என்று முடிக்கச் சிறுத்திகைப்போடு அவரைப் பார்த்தார் அபிராமி.
“அபிராமிம்மா உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. போன வருஷம் கூட இதே பேரில் ஒரு பொண்ணு வந்து அர்ச்சனை செஞ்சதுன்னு சொன்னேனே..! அந்த பொண்ணு இன்னைக்கும் வந்தா, இப்போ தான் இங்கே உட்கார்ந்துட்டு இருந்தா.. இருங்கோ..” என நந்தினி அமர்ந்திருந்த பக்கம் அவர் விழிகளால் தேட, அந்த இடமோ யாருமில்லாமல் காட்சி அளித்தது.
‘வருடம் தவறாமல் தன் மகன் பெயரில் சரியாக வந்து அர்ச்சனை செய்து செல்வது யார்..?’ என்ற பரபரப்பு அவருள்ளும் எழ, விழிகளைச் சுழற்றினார் அபிராமி.
“அடடா, அந்தப் பொண்ணு பேர் எனக்குத் தெரியலை அபிராமிம்மா.. ஆனா அடிக்கடி இங்கே வர பொண்ணு தான், நிறைய முறை பார்த்து இருக்கேன்.. உங்களுக்குத் தெரிஞ்சவங்களா தான் இருப்பா..” என்றார் அர்ச்சகர்.
‘எனக்குத் தெரிந்தவனா யாரா இருக்க முடியும்..?’ என மனம் யோசனையில் மூழ்க.. நிச்சயம் அவன் நட்பு வட்டத்தில் இருக்கும் யாரும் இல்லை என்று மட்டும் மனம் உணர்த்தியது. இன்றைய நாளை கொண்டாடுவது அவனுக்கு பிடிக்காது என்று தெரிந்த பிறகும் அந்த ஐவரும் ஒருநாளும் அவன் விரும்பாத ஒன்றை செய்ய மாட்டார்கள்.
இவர்களைத் தவிர வேறு யாரையும் அவருக்கு அவ்வளவு நெருக்கமாகத் தெரியாது எனும் போது யார் என்று அவருக்குத் தெரியவில்லை.
அதில் முகம் கலங்க அவர் நின்றிருந்த நிலையைக் கண்ட அர்ச்சகர் “சரி விடுங்கோ, இப்போ என்ன உங்க பிள்ளையாண்டான் பேருக்கு அர்ச்சனை தானே செஞ்சுட்டு போயிருக்கா.. ஒரே நேரத்தில் இரண்டு பிரார்த்தனை உங்க பிள்ளை பேரில் நடந்தா எல்லாம் நல்லதுக்கு தான்..” என்று அவர் சொல்லிக் கொண்டே கருவறைக்குள் செல்ல.. அது அப்படியே பலிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு கைகூப்பி அம்பாளை பார்த்தபடியே நின்றார் அபிராமி.
இங்குத் தன் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நந்தினியின் மனமெங்கும் அவன் ஒருவனே நிறைந்திருக்க.. ‘இன்று அவனை ஒருமுறை கண்டுவிட மாட்டோமா..!’ என மனம் வெகுவாக ஏங்கியது.
இது எப்போதுமே அவளுள் இருக்கும் ஏக்கம் தான் என்றாலும் இன்று அவனின் பிறந்தநாள். உரிமையாக அருகில் நெருங்கி சென்று வாழ்த்து தான் சொல்ல முடியாது, தூரத்தில் நின்றாவது ஒருமுறை பார்த்து விட மனம் தவித்தது.
கடந்த இரண்டு வருடங்களாக அவன் ஊரிலேயே இல்லை. ஆனாலும் சென்ற வருடம் மனம் அவனைப் பார்த்தேயாக வேண்டும் எனச் சண்டித்தனம் செய்ததில், சட்டென மதியத்திற்கு மேல் முடிவெடுத்து மும்பைக்கு விமானம் ஏறி விட்டிருந்தாள் நந்தினி.
இதுவே இருவருக்குள்ளும் எல்லாம் இயல்பாக இருந்திருந்தால், விநாயக் எதிர்பாரா நேரத்தில் அவன் முன் சென்று நின்று “சர்ப்ரைஸ்” என்று சந்தோஷமாகச் சொல்லி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கலாம்.
ஆனால் அப்படி ஒரு வரம் தான் அவளுக்கு கிடைக்கவில்லையே..! மனமெங்கும் அவன் மேலான நேசம் நிறைந்திருக்க.. ‘இப்படி தள்ளி நின்று தவித்துக் கொண்டிருக்காமல் உரிமையாக அவனருகில் நிற்கும் நாள் தன் வாழ்வில் வருமா..?’ என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
‘வாழ்க்கை முழுக்க இப்படியே போய் விடுமோ..!’ என்ற பயமும் சமீபமாக அவளுள் எழாமல் இல்லை. இப்போதே வீட்டில் அவ்வப்போது திருமணப் பேச்சுக்கள் எழும் போதெல்லாம், மனம் பயத்தில் மத்தளம் கொட்ட தொடங்கும்.
‘எப்படி இதைத் தடுத்து நிறுத்துவது..? என்ன சொல்லி மறுப்பது..?’ என்றெல்லாம் அவள் ஆயிரம் யோசித்து வைத்திருந்தாலும், அதெல்லாம் வேதவல்லியின் முன் வேலைக்கு ஆகாது என்று அவளுக்குமே நன்றாகத் தெரியும்.
இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் எனச் சொல்லியே இன்னும் எவ்வளவு காலம் அவளால் தள்ளிப் போட முடியும்..? என்றாவது ஒருநாள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமே..!
‘எனக்கு ஒருத்தரை பிடிச்சுருக்கு, நான் கல்யாணம்னு செஞ்சுக்கிட்டா அவரைத்தான் செஞ்சுப்பேன்..’ என உறுதியாகக் கூட அவளால் யாரிடமும் அடித்துப் பேச முடியாத சூழ்நிலை. ‘விநாயக் என்ன மனநிலையில் இருக்கிறான்..? இது சாத்தியப்படுமா..!’ என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
அப்படி இருக்க அவன் பெயரையும் கொண்டு வராமல், திருமணப் பேச்சும் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நிற்கிறாள் நந்தினி.
இதையெல்லாம் யோசித்தபடியே அன்று மும்பையில் சென்று இறங்கி இருந்தவள், அவன் இருக்கும் இடம் தேடிச் சென்று விட்டாலும், தள்ளி நின்றே அவனை மனதார ரசித்துத் தன் மனப் பெட்டகத்தில் பூட்டிக்கொண்டு கிளம்பி வந்திருந்தாள்.
அன்று தூரத்தில் இருந்த போது கூட பார்க்க முடிந்த தன்னால் இன்று கூப்பிடும் தூரத்தில் இருந்தும் அவனை பார்க்க முடியாததை நினைத்து மனம் பாரமாக.. சிக்னலில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தவளின் பார்வை ஏதேச்சையாக எதிர்ப்பக்கம் பதிய.. அங்குத் தன் காவல்துறை வாகனத்தில் ஸ்டைலாகச் சாய்ந்து நின்று அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் விநாயக்.
அவனைக் கண்டதும் அவளுள் அத்தனை உற்சாகம். அவ்வளவு நேரம் அழுத்திக் கொண்டிருந்த மனபாரம், துன்பம், வலி, வேதனை என எல்லாம் ஒரே நொடியில் கரைந்து காணாமல் போனது போல் மனமும் உடலும் லேசாகி விட்டிருந்தது.
விழிகள் கூடக் கலங்கத் தொடங்கி விட்டிருக்க.. தன் கண் முன் இருப்பவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்து விட்டிருந்தாள் நந்தினி.
எப்போதும் போல் அதே கம்பீரம், கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே திமிரான உடல் மொழி, வாகனத்தில் சாய்ந்து நின்று ஒற்றைக் காலை அவன் ஸ்டைலாக மடித்து வைத்திருந்த விதம் கூட அத்தனை அழகாக இருந்தது.
‘இமைத்தால் கூட அவன் அங்கிருந்து சென்று விடுவானோ..!’ என்பது போல் இமைக்காமல் அவனையே நந்தினி பார்த்துக் கொண்டிருக்க… தொடர்ந்து யாரோ தன்னைப் பார்ப்பது போலான உறுத்தலில் விழிகளைத் திருப்பினான் விநாயக்.
எதிர்புறம் காரில் அமர்ந்தபடி நந்தினி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட நொடி அவன் முகம் இறுகியது. ‘எங்கே போனாலும் இவ தொல்லை தாங்க முடியலை.. என்னை நிம்மதியாவே இருக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டுச் சுத்துவா போல..!’ என்று நினைத்தவன் முறைப்போடு அவளைப் பார்க்க.. அந்த விழிகளில் தெரிந்த உக்கிரத்திலேயே தன் மோனநிலை கலைய லேசாக விழிகளைத் தழைத்துக் கொண்டாள் நந்தினி.
அப்போதே சிக்னலும் மாறி இருக்க.. பின்னால் இருந்து தொடர்ந்து ஹாரன் ஒலிக்கத் தொடங்கியது. அதில் அங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழ்நிலையை உணர்ந்து மெல்ல கலக்கமும் தவிப்புமாக மீண்டும் நந்தினி தன் பார்வையை விநாயக் பக்கம் திருப்பவும், வெறுப்போடு அவளைப் பார்த்துவிட்டு சட்டென்று தன் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் விநாயக்.
அவனின் இந்த உதாசீனம் தான் ஒவ்வொரு முறையும் அவளை அதிகம் பாதிக்கும். இப்போதும் அப்படியே ஒரு அடிப்பட்ட பார்வை அவனைப் பார்த்தவள், கலங்கிய விழிகளோடு காரை அங்கிருந்து எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா