ஹாய் டியர்ஸ்
இதோ அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்துட்டேன்.. இப்போ நாம தொடங்க போகும் கதை இழை - 3.
இழை சீரிஸின் அடுத்த கதை.. நிமலன், மஹேந்திர வர்மனுக்கு அடுத்து விநாயக்..
மே 15ம் தேதி முதல் கதை வரும்..
இப்போ கதையை பற்றி பார்க்கலாமா..?
கதையின் பெயர் : மௌனமாய் நீ காதலாய் நான்..!!
நாயகன் : விநாயக் சக்ரவர்த்தி
நாயகி : யது நந்தினி
இனி கதையை பற்றி ஒரு குட்டி டீஸர் பார்க்கலாமா..?
மௌனம் டீசர்
கண் முன் இருந்த கோப்பில் பார்வையை பதித்திருந்த விநாயக் கதவு லேசாக தட்டப்படும் சத்தத்தில் பார்வையை உயர்த்தி “எஸ்..” என்றான். அதே நேரம் கையில் ஒரு மெல்லிய கோப்போடு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த யது நந்தினியை கண்டவனின் முகம் இறுகியது.
அதுவரை இயல்பாக இருந்த முகத்தில் தன்னை கண்டதும் கடுமை பரவியதை அவளும் உணர்ந்தே இருந்தாள். நந்தினியை அங்கு கண்டதும் வெறுப்போடு அவளை பார்த்தவனின் பார்வை நந்தினியின் முகத்திலேயே கூர்மையாக பதிந்திருக்க.. தன்னை அவன் உட்காரக் கூட சொல்லாததை எல்லாம் கொஞ்சம் கண்டு கொள்ளாமல் “ஒருகம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்றாள் நந்தினி.
அவள் அந்த வார்த்தையை உச்சரித்ததும், விநாயக்கின் முகத்தில் எரிச்சல் பரவியது.
அவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் “ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்று தன் முன் வந்து நின்றவளை ஆராய்ச்சியாக பார்த்த விநாயக் “என்ன கம்ப்ளைன்ட்..? யார் மேலே..?” என்றான்.
அதில் மெல்ல புன்னகைத்துக் கொண்டே, “விளக்கமா நானே சொல்லட்டுமா..? இல்லை எழுதி கொண்டு வந்ததை கொடுக்கட்டுமா..?” என நந்தினி கேட்கவும், வார்த்தைகளில் பதில் சொல்லாமல் அவள் எழுதிக் கொண்டு வந்ததை கேட்டு கையை நீட்டினான் விநாயக்.
அவன் நீட்டிய கையை ஒரு நொடி பார்த்தவளின் விழிகளில் குறும்பு கூத்தாட, சட்டென விநாயக்கின் கைகளை பிடித்து லேசாக குலுக்கியவள் “ஹலோ நான் யது நந்தினி, உங்க பேர் என்ன..?” என்றாள்.
அதில் அவளை முறைத்தவாறே வேகமாக தன் கையை நந்தினியிடம் இருந்து விடுவித்துக் கொண்டு நகர்ந்து நின்றவன், “என்ன கம்பிளைன்ட்..?” என்று குரலில் இறுக்கத்தை கொண்டு வந்து கேட்டிருக்க.. தன் கையிலிருந்த புத்தகத்தின் இடையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள் நந்தினி.
அவள் தனியே வந்திருப்பது, கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் அவனுக்கு சந்தேகத்தை கொடுத்தாலும் தன் வேலைக்கு மதிப்பளித்து அவளிடம் முடிந்தவரை இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தவன் அவளின் புகார் கடிதத்தை படித்து முடித்த நொடி ருத்ர மூர்த்தியாக மாறிப் போனான்.
வணக்கம் ஏசிபி சார்..
எனக்கு ஒருத்தரை ரொம்ப பிடிச்சுருக்கு, அவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.. ஆனா அவர் என்னை கண்டுக்கவே மாட்டேன்றார், இது இந்த குட்டி இதயத்தில் எவ்வளவு வலியை கொடுக்குது தெரியுமா..? என் மனசில் ஆசையை வளர்த்துட்டு இப்போ இப்படி ஒதுக்கி வைக்கறது சரியான்னு நீங்களே விசாரிச்சு சொல்லுங்க..
இப்படிக்கு உங்களையே நினைச்சு உங்களுக்காக வாழ்ந்துட்டு இருக்கும்
உங்கள் யது நந்தினி
என எழுதி இருந்ததை படித்த நொடி அவனுள் அவ்வளவு ஆத்திரம் கனன்றது.
அந்த காகிதத்தை சுக்கல் நூறாக கிழித்து அவளின் முகத்திலேயே வீசியவன், “அறிவில்ல உனக்கு..? படிச்சவ தானே நீ..? எதில் விளையாடறதுன்னு இல்லையா.. இங்கே உன் விளையாட்டை பார்க்க தான் நாங்க உட்கார்ந்து இருக்கோமா..?” என்று காய்ந்து விட்டான் விநாயக்.
நிச்சயம் கோபப்படுவான் என்று தெரியும் தான். ஆனால் இவ்வளவு கடினமான வார்த்தைகளில் திட்டுவான் என எதிர்பார்க்காத நந்தினி, சிறுத்திகைப்போடு அப்படியே நின்ற விட, அவள் விழிகள் தானாக கலங்கியது.
இதுவரை அவளை இப்படி எல்லாம் யாரும் திட்டியதோ கடுமையாக பேசியதோ கிடையாது. ஆரம்பத்திலிருந்தே அவள் இவனிடமிருந்து மட்டுமே கோபத்தையும் ஒதுக்கத்தையும் வெறுப்பையும் எதிர்கொள்கிறாள். ஆனாலும் இந்த மனதிற்கு அவனை தானே பிடித்து தொலைக்கிறதே..! என்ன செய்ய..?
வேறு எங்கும் சென்று அவனை தனியே சந்திக்கவோ பேசவோ இதுவரை விநாயக் சந்தர்ப்பமே கொடுக்காமல் போனதால் தான், அந்த வயதிற்கேயான விளையாட்டு தனத்தோடு இப்படி காவல் நிலையத்திற்கே அவனை சந்திக்க வந்திருந்தாள் யது நந்தினி.
இது சரியென அவளும் சொல்லவில்லை. ஆனால் இப்படியாவது தன் மனதிலிருப்பதை மீண்டும் அவனுக்கு தெளிவாக ஒருமுறை புரிய வைத்துவிட, நினைத்தே வந்திருந்தவளுக்கு அவனின் வார்த்தைகளும் அந்த குரலில் இருந்த வெறுப்பும் விழிகளை கலங்கச் செய்ய.. இதழ் கடித்து அழுகை வெடித்துக் கொண்டு வெளியில் வராமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் நந்தினி.
அதெல்லாம் இன்று நினைவு வர, முகத்தில் மேலும் கடுமை ஏற, அவளை முறைப்போடுப் பார்த்தவன் “கெட் அவுட்..” என்றான் பல்லை கடித்தபடியே.
தன் கையில் இருந்த கோப்பை அவன் முன் வைத்து ஏதோ சொல்ல முயன்றுக் கொண்டிருந்த நந்தினி விநாயக்கின் இந்த அதட்டலில் திகைத்து அவனைப் பார்க்க.. “உன்னை வெளியே போன்னு சொன்னேன்..” என்றான் கொஞ்சமும் கோபம் குறையாத குரலில் விநாயக்.
இதில் செய்வதறியாது அப்படியே நந்தினி அசையாமல் நின்று விட, அவளின் அந்த நிலை கூட அவனை கோபப்படுத்தியது. அதில் அவள் தன் முன் வைத்திருந்த கோப்பை எடுத்து கதவை நோக்கி வீசியிருந்தவன் “உன்னை வெளியே போக சொன்னேன், கெட் லாஸ்ட் டேமிட்..” என குரலை உயர்த்தி அவன் கர்ஜிக்க.. சட்டென உண்டான அவமான உணர்வோடு வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் நந்தினி.
அந்த அறைக்கு எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றபடி அலைபேசியில் யாரோடோ பேசிக் கொண்டிருந்த ரகோத்தமன் தன் அருகில் வந்து நின்றவளின் மேல் பார்வையை பதித்த நொடி “நான் அப்புறம் கூப்பிடறேன்..” என அழைப்பை துண்டித்து விட்டு, “நந்து என்னடா..?” என அவளின் கலங்கிய விழிகளையும் பதட்டமான உடல் மொழியையும் கண்டு ஆறுதலாக அவளின் தோளைப் பற்றினார்.
‘ஒண்ணுமில்லை’ என்பது போல் வேகமாக தலையசைத்தவள், அதற்கு நேர்மாறாக இதழ் மடித்து தன் கண்ணீரை கட்டுப்படுத்த போராடுவது அவருக்கு புரிந்தது.
இதுவே உள்ளே என்ன நடந்திருக்கும் என ஓரளவு அவருக்கு புரிய வைக்க போதுமானதாக இருக்க.. வருத்தத்தோடு திரும்பி விநாயக்கின் அறை கதவை பார்த்தார் ரகோத்தமன். தன்னை கண்டால் கோபப்படுவான் என்று தான் நந்தினி அவரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
ஆனால் அவளைக் கூட இப்படி அவன் விரட்டி அடித்து இருப்பது வருத்தத்தை கொடுக்க.. நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவருக்கு அவன் மேல் கோபம் கூட வரவில்லை. வருத்தமே மேலோங்கியது.
************
அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அபியோடு அமர்ந்திருந்தான் விநாயக். அது பின் மதிய நேரமென்பதால் பெரிதாக கூட்டமில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆட்கள் இருக்க.. கழுத்தை நீவியவாறே பார்வையை சுழற்றியவன், நிதினோடு உள்ளே நுழைந்துக் கொண்டிருந்த நந்தினியை கண்டான்.
அவள் அலைபேசியில் தீவிரமாக பேசிக் கொண்டே வந்ததில் விநாயக் இங்கே இருப்பதை கவனிக்கவில்லை. மாறாக இவனை பார்த்திருந்த நிதின், உரிமையாக நந்தினியின் தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.
இதை கண்டெல்லாம் அவனுக்கு கொஞ்சமும் கோபம் வரவில்லை. கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் தான் இருவரையும் பார்த்து வைத்தான் விநாயக்.
அதே நேரம் கேள்வியாக அவனை விழிகளை உயர்த்தி பார்த்தாலும் நிதினிடமிருந்து விலக முயலவில்லை நந்தினி. அப்படியே அவளை அழைத்து வந்து வேண்டுமென்றே விநாயக் முன்பிருந்த மேஜையில் நிதின் அமர, அப்போதே அழைப்பை துண்டித்து விட்டு திரும்பிய நந்தினி இதை கண்டு திடுக்கிட்டாள்.
நிதின் அப்போது வரையும் தன் தோள் மேல் கைப் போட்டிருப்பதை கண்டு சங்கடமாக நெளிந்த நந்தினி லேசாக விழிகளை உயர்த்தி விநாயக்கை பார்த்தாள்.
அவனோ கொஞ்சமும் இவர்களை கண்டுக் கொள்ளாமல் அமர்ந்திருக்க.. நிதினின் பக்கம் பார்த்த நந்தினி “உங்க பிரச்சனையில் என்னை கொண்டு வராதேன்னு நான் முன்னேயே சொல்லி இருக்கேன் நிது..” எனவும், “நானும் அவனுக்கு உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு முன்னேயே சொல்லி இருக்கேன் நந்து..” என்றான்.
‘நீ விட்டுக் கொடுத்தா மட்டும் அவர் அப்படியே என்னை ஏத்துப்பாரா..?’ என விரக்தியோடு நினைத்துக் கொண்டவள், சோர்வாக திரும்பி அவனை பார்த்து “ப்ளீஸ், என்னை எதிலும் கொண்டு வராதே நிது..” என்றாள்.
அவள் குரலில் இருந்த வருத்தமும் வலியும் புரிந்தாலும் வேண்டுமென்றே “உன்னை கொண்டு வராம எப்படி..? நீ எனக்கு தானே சொந்தம்..?” என்றவனின் வார்த்தைகள், விநாயக் அவளிடம் பேசியதை நினைவுப்படுத்தி விட, அவளுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது.
அதே நேரம் அவ்வளவு நேரமும் மெனு கார்டில் பார்வையால் வலம் வந்துக் கொண்டிருந்த அபி அப்போதே விழிகளை உயர்த்தியவள், நந்தினியை அங்கு கண்டு ஆர்வமாக விநாயக் பக்கம் திரும்பி பார்க்க.. அவனோ தன் அலைபேசியில் கவனமாக இருந்தான்.
‘அதானே..!’ என சலித்துக் கொண்ட அபி, “ஆண்ட்டி உனக்கு பொண்ணு பார்க்க சொல்லி இருக்காங்க வினய், நிமல், மஹி, துஷி எல்லாம் சொல்லிட்டேன்.. அவங்க வந்ததும் உனக்கு பெண் தேடும் படலத்தை தொடங்க போறோம்..” என்றாள் வேண்டுமென்றே ஓர பார்வையால் நந்தினியை பார்த்தப்படி அபி.
அவளின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் நந்தினியின் முகம் அப்பட்டமாக அதிர்வை காண்பிக்க.. “ஓஹோ.. ஆனா தர்ஷனை ஏன் விட்டுட்டீங்க..?” என்றான் இப்போது அது தான் முக்கியம் என்பது போல் விநாயக்.
“அவனா..? அவனை உனக்கு பொண்ணு பார்க்க சொன்னா அவனுக்கு விதவிதமா பார்த்துப்பான்.. வேண்டாம்பா..” என அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்து விட, அடக்க மாட்டாமல் சிரித்தான் விநாயக்.
அந்த புன்னகையை நந்தினி ஏக்கமாக பார்த்திருக்க.. அவளை கவனித்தவாறே விநாயக்கிடம் போட்டு வாங்க நினைத்து “சிரிக்கறதெல்லாம் இருக்கட்டும், பொண்ணு பார்த்துடலாமா..?” என்றாள் அபி.
அவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “பொண்ணு தானே தாராளமா பாருங்க.. நானும் எவ்வளவு நாளைக்கு தான் பேச்சிலரா இருக்கறது..” என்றிருந்தான் விநாயக்.
இதில் விழிகள் கலங்கி நிற்க.. அவனை வெறுமையாக பார்த்தாள் நந்தினி.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. மௌனமாய் நீ காதலாய் நான் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..