All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள் 4

 

VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்
(@vsv6)
Eminent Member Author
Joined: 8 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 4 

 

“எப்படி நடந்தது இது? இவள் மீது எனக்கு விருப்பமா? இல்லை பிடித்தமா? என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அருவி அவளுக்குரிய இடத்தில் சென்று அமர்ந்து விட்டாள். துகிலன் தான் சற்று திகைப்புடன் கடைக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவளுக்கு அது போல் எந்த எண்ணமும் இல்லை. அவளுக்குரிய இடத்தில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.. 

 

அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டே தான் அமரும் நாற்காலியில் அமரந்தான். அதை சுத்தம் செய்வதும் அருவியின் வேலை தான். பெரிய நாற்காலியில் போடப்பட்டிருக்கும் டவலை உதறி அதன் மீது ஒழுங்காக போட்டிருப்பாள். 

 

இன்றும் தூய்மையாக இருந்த நாற்காலியை ஒரு பார்வை பார்த்தவன் பக்கவாட்டாக திரும்பி ஒரு பார்வை பார்க்க, அருவியோ கம்ப்யூட்டரில் தான் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தாள்.. 

 

“அருவி” என அழைத்ததும் சட்டென்று திரும்பியவளை எதிர்கொள்ளவே ஒரு நிமிடம் தடுமாறிப் போனான் துகிலன்.. 

 

கண்விழிகள் கதை பேசுமா? அவனிடம் பேசியதே.. தன் முட்டைக்கண்களை விரித்து அவள் பார்த்த ஒரு பார்வையில் உள்ளுக்குள் படபடவென வந்தது துகிலனுக்கு.. இப்படியொரு உணர்வை அவன் இதுவரை அனுபவித்ததே இல்லை.. 

 

இதயத்தில் இதுவரை இருந்த வெற்றிடத்தை தன் ஒற்றைப் பார்வையால் நிரப்பியிருந்தாள் அருவி.. ஆனால் அதை அவள் உணரவேயில்லை என்பது தான் அந்தோ பரிதாபம்.. 

 

“சொல்லுங்க அண்ணா?” அருவியின் வார்த்தையில் முகத்தில் சுடுதண்ணீர் ஊற்றினாற் போன்று சட்டென்று தன் இருக்கையை விட்டு எழுந்தமர்ந்தான் துகிலன்.. 

 

அவள் இவ்வளவு நாள் அண்ணா என்று தான் அழைப்பாள்.. இன்றும் அப்படித்தான் அழைத்தாள். இவ்வளவு நாள் அவளின் அழைப்பை ஏற்றுக் கொண்டவனால் இன்று ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவனின் சலனமில்லாத மனதில் அரியணை போட்டு அமர்ந்தவள் அல்லவா அது.. 

சட்டென்று ஒரு வித கோபம் அருவியின் மேல் வந்தது.. 

 

“நான் உனக்கு அண்ணனா?” என சத்தமாக கத்திக் கேட்க வேண்டும் போன்று இருந்தது.. ஆனாலும் முடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு அவனுக்கு. “அண்ணா.. அண்ணா” என்ற அருவியின் அழைப்பை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் வேகமாக கார்சாவியை எடுத்தவன் அந்த இடத்தை விட்டே வெளியேறி விட்டான் துகிலன்.. 

 

அவளை விட்டு விலகி வந்தவனுக்கு இன்னுமே அதிகமாக வேர்த்து விறுவிறுத்தது.. நானா இப்படி? என நினைத்துக் கொண்டே காரில் ஏறியமர்ந்தான். அவனின் நினைவுகளில் காலையில் சகுந்தலாவிடம் போட்ட சண்டை தான் நியாபகத்திற்கு வந்தது. 

 

காலையில் எழுந்ததில் இருந்தே சிடுசிடுவென அமர்ந்திருந்தார் சகுந்தலா. சற்று நேரத்திற்கு முன்பாக தான் நேற்று பார்த்த பெண் வீட்டார் போன் பண்ணியிருந்தனர். “மாப்பிள்ளை வேண்டாம்” என இரண்டே வார்த்தையில் சொல்லியிருந்தால் கூட அவரின் மனது ஆறியிருக்கும். 

 

ஆனால் அவர்களோ ஒரு கொலைகாரனுக்கு தன் பெண்ணை கட்டிவைக்க விருப்பமில்லை என சொல்லிவிட, அவர் சொல்லிய வார்த்தையில் ஜீவனே நின்று விட்டது சகுந்தலாவிற்கு. ஆசை ஆசையாக பார்க்கும் பெண்களிடத்தில் எல்லாம் இவன் உண்மையை சொல்கிறேன் என தட்டிக்கழித்தே வர, ஒரு நிலையில் வெறுப்பு தான் வந்தது பெண் பார்க்கும் படலத்தை நினைத்தாலே.. 

 

அவிரன் இருந்திருந்தால் அவரின் மனச்சுணக்கத்தை கண்டுக் கொண்டிருப்பான். காலையில் வேலை இருக்கிறது என்று சென்று விட்டான். அவிரன் சொந்தமாக சகுந்தலா ஈவென்ட் மேனேஜ்மெண்ட் வைத்து நடத்தி வருகிறான்.

 

படித்து முடித்து என்ன செய்யப் போகிறாய்? என துகிலன் கேட்டவுடனே அவனின் பதில் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்பது தான். 

 

துகிலனின் எந்த உதவியும் இல்லாமல் அவிரன் தன் உழைப்பை மட்டும் நம்பி இந்த ஈவென்ட் மேனேஜ்மெண்ட் பிசினஸ் நடத்தி வருகிறான். தன் பிள்ளைகள் யாரின் சுய உதவியும் இல்லாமல் சுயம்புவாய் எழுந்து நிற்பதை பார்த்தவருக்கு ஒரு வித பெருமிதம் தான்.. 

 

இவனின் தொழிலை பற்றி அவனுக்கு தெரியாது. அவிரனின் தொழிலை பற்றி துகிலனுக்கு தெரியாது. ஆனாலும் இருவரும் சமூகத்தில் நல்ல நிலைமையில் தான் இருக்கின்றனர். 

 

இருவரிடத்திலும் சகோதர பாசம் இருந்தாலும் ஒரு வித மரியாதையும் சேர்ந்தே இருந்தது. அவர்கள் அன்பில் என்றும் குறை இருந்ததில்லை. ஒருவரின் மேல் இன்னொருவர் மரியாதை கலந்த அன்பு வைத்திருக்கின்றனர். 

 

காலையில் குளித்து முடித்து வெளியே வந்த துகிலன் எப்பொழுதும் போல் சாப்பிடுவதற்காக அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான். எப்பொழுதும் சகுந்தலா தான் பரிமாறுவார். ஆனால் இன்று ஏனோ பரிமாற பிடிக்கவில்லை அவருக்கு. 

 

அமைதியாக ஹாலில் இருந்த சோபாவில் உட்காருந்திருந்தார். சாப்பிட அமர்ந்தவனின் பார்வை ஒரு நிமிடம் ஹாலில் இருந்த சகுந்தலாவின் மேல் அழுத்தமாக படிந்தது. அவரும் அவனை தான் பார்த்தார். ஆனால் இருவரும் எதுவும் பேசவில்லை.

 

நான் பெரிதா? நீ பெரிதா? என்ற வீம்பு இருவரிடமுமே இருந்தது. 

 

ஏனோ அதற்கு மேல் அங்கிருந்து அமர்ந்து சாப்பிட அவன் மனம் விரும்பவில்லை. வேகமாக துகிலன் எழவும் சற்று பதைபதைத்து போனார் சகுந்தலா. அவன் ஒரு வேளை சாப்பிடவில்லை என்றாலும் அவருக்குத் தானே கஷ்டம்.. 

 

வேகமாக தட்டை எடுத்து வைத்தவரின் வாய் சும்மா இருக்கமாட்டேன் என சபதம் எடுத்ததோ என்னவோ?.. 

 

“பொண்ணு வீட்டுல இருந்து போன் பண்ணாங்க?”.. என அவர் சொல்லிவிட்டு துகிலனின் முகத்தைப் பார்க்க, அவன் எங்கே அவரைப் பார்த்தான்?.. இட்லிக்குண்டானை முழுங்கியவன் போன்று அசையாமல் அமர்ந்து இட்லியை மென்றுக் கொண்டிருந்தான்.. 

 

“வாயை திறந்து ஏதாவது கேட்குறானா பாரு” என முணுமுணுத்துக் கொண்டே இட்லிப்பொடியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார்.. 

 

அவரின் முணுமுணுப்பை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. இது என்ன அவனுக்கு புதிதா? இவர்களோடு சேர்த்து எத்தனையோ பேர் அவனை பற்றிய உண்மை தெரிந்து வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றனர். அதனால் அவனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. 

 

சாப்பிட்டு முடித்து கைகளை கழுவியவன் மெல்ல வெளியேற பார்க்க, “அப்பனே முருகா என் பையனுக்கு ஏத்த பொண்ணை நீ தான் ப்பா கண்ணுல காட்டணும்” என பூஜையறையில் நின்று மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தவரை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், தன் போனை எடுத்து காதில் வைத்தான்.. 

 

“என்ன பண்றான்?” என சகுந்தலா ஓரக்கண்ணால் துகிலனை தான் பார்த்துக் கொண்டிருந்தார். 

 

அவனும் போனை எடுத்து காதில் வைத்தவாறே, “உங்க முருகனுக்கு உண்மையாவே சக்தியிருந்தா.. எனக்குன்னு பொறந்தவளை இன்னைக்குள்ள காமிக்கட்டும்” என கோபத்தில் போனில் கத்திவிட்டு அவரை அழுத்தமாக பார்த்தபடி வெளியேறிவிட்டான்.. 

 

அவனைப் பொறுத்தவரை கல்யாணம் என்பது எட்டாக்காய்.. இந்த ஜென்மத்தில் அது தனக்கு நடக்காது என்பதில் மிக உறுதியாக இருந்தான். 

 

ஆனால் ஒரே நாளில், ஏன் ஒரே நொடியில் ஒரு பெண் தன்னை அடியோடு வீழ்த்தி விடுவாள் என்று அவன் கனவில் கூட எதிர்பார்த்ததில்லை. 

 

இதுவரை தடுமாறாத மனம் ஒரு நொடியில் தடுமாறி நின்றது.. அது காதலா? இல்லை விருப்பமா? என அறியாது நின்றான்.. நீண்ட நேரம் காரில் அமர்ந்திருந்தவாறே யோசித்தவன் ஒரு முடிவோடு தன் ட்ராவல்ஸை நோக்கி வண்டியில் புறப்பட்டான்.

 

அவன் உள்ளே நுழையும் நேரம் மூர்த்தியும், அருவியும் தான் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். இன்றும் பேசிக் கொண்டிருந்தவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவன் மூர்த்தியை அந்த இடத்தில் இருந்து அனுப்ப வேண்டும் என நினைத்தான்.. 

 

“மூர்த்தி ரொம்ப தலைவலிக்கு மூணு டீ வாங்கிட்டு வா.. நல்லா இஞ்சி போட்டு ஸ்ட்ராங்கா வாங்கிட்டு வா.. அப்படியே சமோசா ஏதாவது இருந்தாலும் வாங்கிட்டு வா” என தன் சட்டை பாக்கெட்டில் இருந்து காசை எடுத்துக் கொடுத்தான்.. 

 

மூர்த்தி அங்கிருந்து செல்வதை பார்த்தவன் தன் சீட்டில் வந்து அமர்ந்தான்.. 

 

“அருவி” என அழைக்க, திரும்பி மெல்ல அவனை தான் பார்த்தாள்.. காஜலிடாத விழிகள் இரண்டும் அவனை கபளீகரம் செய்வதை போல் உணர்ந்தான்.. 

 

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீயா?” என துகிலன் கேட்பதற்கும், 

 

வாசலில் இருந்தே மூர்த்தி, “அருவி உன்னைப் பார்க்க வருண்னு ஒருத்தர் வந்திருக்காரு” என உள்ளிருக்கும் இருவருக்கும் கேட்கும் வண்ணம் சத்தமாக சொல்வதற்கும் சரியாக இருந்தது. 

 

“ஏன்டி வேலை வேலைன்னு நச்சரிக்கிற?” என மதியழகியின் மேல் எரிந்து விழுந்தாள் மைதிலி. அவளின் பால்ய கால நண்பீ. 

 

“இல்லைடி எந்தளவுக்கு எனக்கு வேலை சிக்கீரம் கிடைக்குதோ?.. அப்போ தான் எங்கக்காவுக்கு சிக்கீரம் கல்யாணம் கிடைக்கும் எங்கப்பா எங்க அக்காவை ஒரு பணம் கொடுக்கிற ஏடிஎம் மிஷினா தாண்டி பார்க்கிறாரு.. அம்மா தான் அக்காவுக்கு ஒரு கல்யாணம் பண்ணிக் கொடுத்திரணும்னு போராடுறாங்க” என சொன்னவளின் குரலில் அவ்வளவு அழுத்தம் நிறைந்திருந்தது.. 

 

“சரி விடு என் அண்ணாவோட ப்ரண்ட் இங்கே ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நடத்திட்டு இருக்காரு.. அவர்கிட்ட உனக்கு ஏற்கனவே ஒரு வேலைக்கு சொல்லி வச்சிருந்தேன்.. வர்றீயா ஒரு எட்டுப் பார்த்திட்டு வரலாம்” என்ற மைதிலியுடன் அவளின் ஸ்கூட்டியில் ஏறினாள்.. 

 

இருவரும் மிகப்பெரிய மேரேஜ் ஹாலில் முன்பாக ஸ்கூட்டியை நிப்பாட்டினர்.. 

 

“சரி மதி நீ உள்ளே போ.. நான் ஸ்டாண்ட் போட்டு வந்திடுறேன்” என மைதிலி பார்க்கிங் ஏரியாவை நோக்கிச் செல்ல, மதியோ அங்கிருந்த அலங்காரத்தைப் பார்த்தவரோ அங்கு உள்ளே நுழைந்தாள்.. 

 

“ஈவென்ட் மேனேஜ்மெண்ட் ஹெட் எங்கே இருக்காங்க?” என்றதும் ஒருவன் அவிரனை நோக்கி கைக் காட்டியபடி, “அவர் தான் எங்க ஓனர் அவிரன்” என்றவனை பார்த்துக் கொண்டே முன்னே சென்றாள்.. 

 

“ஹலோ” என்ற குரலில் மெல்ல திரும்பினான் அவிரன். 

 

தன் முன்னால் நின்றிருந்தவளை ஏற இறங்க பார்த்தான் அவிரன். அழகுச்சிலையின் பெட்டகமாக நின்றிருந்தவளை பார்த்தவனின் விழிகள் இடுங்கியது.. 

 

அவனின் மேல் கீழ் பார்வையை தப்பாக எண்ணியவள், “பாக்குறதை பாரு கண்ணு அவிஞ்சுப் போறவன்” என மெல்ல முணுமுணுக்க, எதிரில் இருந்தவனின் முகமோ சற்று காட்டமானது.. அவனுக்குத்தான் லிப் ரீடிங் தெரியுமே

 

“நான் அவிஞ்சுப் போனா உனக்கென்ன? இல்லை அறைவேக்காடா இருந்தா உனக்கென்ன?” என்றவனை திகைத்துப் பார்த்தாள்.. 

 

“என்ன சொல்லி சமாளிக்கலாம்” என திருதிருவென முழித்தபடி நின்றிருந்தவளின் அருகில் வந்து நின்றாள் மைதிலி

 

“அண்ணா இவ தான் என்னோட ப்ரண்ட்.. வேலைக்கு கேட்டிருந்தேன்ல அது இவளுக்குத்தான்” என்ற மைதிலியை பார்த்து, “ம்ம்” எனும் விதமாய் தலையாட்டியவன் இதழ்களை சுழித்தான் அந்த அழகியைப் பார்த்து.. 

 

“சரி என்ன வேலை தெரியும் உனக்கு?” என சற்று கடினக்குரலில் பேசியவனை எரிச்சல் மீதூற பார்த்தவள், 

 

“எல்லா வேலையும் தெரியும் சார்?” என திமிருடன் சொன்னவளை நக்கலாக பார்த்துக் கொண்டே, கண்களை சுழற்றியவனின் பார்வை அங்கு பூந்தோரணம் கட்டிக்கொண்டிருந்தவனின் மேல் வன்மத்துடன் படிந்தது.. 

 

“சந்தோஷ்” என்ற குரலில் நிலைவாசலில் இருந்தவன் திரும்பாமலேயே “சொல்லுங்க அண்ணா” என்று கேட்டான். ஏணிப்படியின் உச்சத்தில் நின்றிருந்ததால் அவனால் சட்டென்று திரும்ப முடியவில்லை. அவன் வேகமாக திரும்பினால் கூட அந்த ஏணி நழுவி இடுப்பு உடைந்து கிடப்பான் என்பது உறுதி.. 

 

“நீ இறங்கி வா.. இந்த அம்மணி போய் தோரணம் கட்டட்டும்” என்றவனை நக்கலாக பார்த்துக் கொண்டே திரும்பிய மதியழகியின் விழிகள் அச்சத்தில் உறைந்தது.. 

 

அவள் உயரத்திற்கு கிட்டத்தட்ட வவ்வால் போல தலைகீழாக தொங்கிக் கொண்டு தோரணம் கட்டினால் தான் உண்டு.. அவளோ நான்கடி பதுமை. அழகை அள்ளிக் கொடுத்த ஆண்டவன் உயரத்தை அளந்து தான் கொடுத்திருக்கிறான். 

 

“முடிச்சி விட்டாய்ங்க டா” என வாய்விட்டு சொன்னபடி முழி பிதுங்கி நின்றவளை பார்த்த அவிரனின் இதழில் சிறு புன்னகை. 


   
ReplyQuote

You cannot copy content of this page