About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 2 💖
தன் அறையில் அமர்ந்து மருத்துவம் சம்பந்தமான புத்தகம் ஒன்றில் கவனத்தை செலுத்தியிருந்தாள் சந்தனா. மனம் கொஞ்சமும் அதில் லயிக்கவில்லை. காலையிலிருந்தே ஏதோ தவறாக நடக்கப் போவதாக உள்மனம் இரைச்சலாய் இரைந்து கொண்டிருக்க, அதைப் புறந்தள்ள முயன்றாலும் அவளால் முடியவில்லை.
தலைவேறு லேசாய் வலிப்பது போலிருந்தது. ஒரு தேநீரை வரவைத்து உதட்டுக்குக் கொடுத்தாள். மென்சூடாய் இருந்த தேநீர் தொண்டையில் இறங்கவும், கொஞ்சம் மந்தமான மூளையும் மனதும் தெளிந்ததை போல உணர்ந்தவளின் கைகள் அலைபேசியை எடுத்து மனோ படிக்கும் பள்ளியின் ஆசிரியர் இலக்கத்தைத் தட்டின.
அவன் என்ன செய்கிறான் எனக் கேட்டறிந்தாள். அவன் சமத்தாய் இருக்கிறான் என்பதை அறிந்ததும் இவளது உதடுகளில் நிம்மதி புன்னகை விரவின. முன்பு போல அல்லாது மனோவின் நடவடிக்கைகளில் அத்தனை மாற்றம். இப்போதெல்லாம் எதற்கும் அடம்பிடிப்பதில்லை. அமைதியாய் சொல்பவற்றைக் கேட்டுக் கொள்கிறான். எப்போதாவது தன்னிடம் செல்ல சிணுங்கல்கள் உண்டு என அவனது சிந்தனையில் மூழ்கியிருந்தவளின் முகம் கனிந்து போயிருந்தது.
அனுமதி இல்லாது பட்டென கதவு திறக்கவும் ஒரு நொடி வேகவேகமாய் இதயம் துடித்தடங்க, உள்ளே நுழைந்தவரைக் கண்டதும் அவளது உடல் தளர்ந்தது.
“வாங்க அக்கா... எப்படி இருக்கீங்க?” என உள்ளே நுழைந்தப் பெண்மணியைப் பார்த்ததும் வினவினாள்.
“நான் நல்லாக்கிறேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க?” முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்தவாறு கேட்டார் அப்பெண்மணி.
“எனக்கென்ன, ரொம்ப நல்லா இருக்கேன் கா. ஹம்ம், நீங்க என்ன இந்தப் பக்கம்?” அவளது நெற்றி யோசனையாய் சுருங்கியது.
“அதும்மா...” என சில நொடிகள் தயங்கியவர், “போனமுறை காய்ச்சல்னு உங்ககிட்டே மாத்திரை வாங்கீட்டுப் போனேனில்ல மா. அதை என் மவ நாலஞ்சு மாத்திரையை ஒன்னா முழுங்கிட்டா மா. நான் பயந்து போய் இங்க கூட்டீட்டு வந்தேன். டாக்டர் பார்த்துட்டு ஒரு ஊசி போட்டாங்க. பயப்பட்ற மாதிரி ஒன்னும் இல்ல. இனிமே இப்படி பண்ணாதன்னு திட்டுனாங்க மா!” பேசிக் கொண்டே கடல் நீல வண்ணத்திலிருந்த மாத்திரையை அவள் முன்னே வைத்தார் பெண்மணி. அதை எடுத்துப் பார்த்தாள் சந்தனா.
அவள் காய்ச்சலுக்காக கொடுத்த பாராசிட்டமால் மாத்திரை அது.
“அக்கா... இந்த மாத்திரையை எல்லாம் ஒரே நேரத்துல போட்டா என்னாகும் கா?” ஆர்வமாய்க் கேட்ட சின்னவளைப் பார்த்துப் புன்னகைத்தவள், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம். அப்படி இருக்கும்போது எல்லா டேப்லெட்டையும் ஒரே நேரத்துல சாப்ட்டா என்னாகும்னு நீயே சொல்லு காவேரி!” என இவள் வினவியது நினைவில் நிழலாடியது. அவள் விளையாட்டிற்கு கேட்டிருப்பாள் என நினைத்து அதை கவனிக்காத தன் அறியாமையை எண்ணி தன்னை மனதிற்குள் நிந்தித்துக் கொண்டாள்.
“வெளியதான் உக்கார வச்சிருக்கேன் மா. நான் உள்ளாற வந்தா அவ எதுவும் பேச மாட்டா. நான் போய்ட்டு அவளை அனுப்பி விட்றேன். என்னென்னு கேட்டு சொல்லுங்க மா. ஒத்தைப் புள்ளையைப் பெத்து கஷ்டப்பட்டுட்டு படிக்க வச்சா, இவ இப்படியொரு காரியம் பண்ணி வச்சிருக்கா. எனக்கு மனசே ஆறலை. அவ அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னைத்தான் திட்டுவாரு...” கவலை அரித்திருந்தது அவரது குரலை.
“அக்கா... பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இருக்காது. சின்ன புள்ளை ஏதோ விளையாட்டுதனமா செஞ்சிருப்பா. நீங்க அவளை வர சொல்லுங்க. நான் என்னென்னு கேட்குறேன்!” என அவரை சமாதானம் செய்தாள்.
“சரிங்கம்மா... நான் அவளை அனுப்பிவிட்றேன்!” என்றவர் வெளியே சென்று மகளை உள்ளே அனுப்ப, முகமெல்லாம் அழுத தடயங்களோடு உள்ளே நுழைந்தாள் பதின்ம வயது சிறுமி. பள்ளி சீருடையைக் கூட அவள் மாற்றவில்லை. சந்தனாவின் முகத்தைக் கூடப் பார்க்காது வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
“காவேரி... என் முகத்தைப் பாரு முதல்ல!” அதட்டலாய் ஒலித்தக் குரலுக்கு செவி சாய்த்தவள், இவளது முகத்தைப் பார்த்தாள். இன்னுமின்னும் அவளுக்கு அழுகைப் பொங்கியது.
“எதுக்கெடுத்தாலும் அழக்கூடாது, அழுகை எதுக்கும் சொல்யூஷன் இல்லன்னு சொல்லியிருக்கேன் இல்ல? போய் ஃபேஸ் வாஷ் பண்ணீட்டு வா!” என அவளைப் பணித்தாள். தலையை அசைத்த காவேரி முகம் கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள்.
“இந்த தண்ணியைக் குடிச்சு ரிலாக்ஸாகு!” என எதிரிலிருப்பவளை ஆசுவாசம் செய்தவள், “இப்போ சொல்லு, எதுக்காக அத்தனை டேப்லெட்டை ஒரே நேரத்துல சாப்ட்ட. என்ன பிரச்சனை உனக்கு? எதுவா இருந்தாலும் அம்மா, அப்பாகிட்ட சொல்லணும் தானே? நீயா இப்படி முடிவெடுப்பீயா?” அக்கறையும் அதட்டலுமாய் இவளது குரல் ஒலித்தது. நன்றாய் படிக்கும் பெண், துறுதுறுவென இருப்பவள், இப்போது ஒடுங்கி அமர்ந்திருந்தவிதம் கண்டு மனதில் துணுக்குற்றது.
“பயமா இருக்கு கா...” தேம்பலுடன் தெளிவில்லாது குரல் இவளது செவியை அடைந்தது.
“என்ன பயம், யாரும் உன்னை மிரட்டுறாங்களா?” சந்தனா இருக்கையை முன்னகர்த்தி வினவ, தலையை அசைத்த காவேரி, “என் க்ளாஸ் பையன் சாம். நல்ல ப்ரெண்டா இருந்தோம். திடீர்னு ஒருநாள் லவ் பண்றேன்னு சொன்னான். அதுல இருந்து நான் அவன்கிட்ட பேசுறது இல்ல. பட், அவன் என் பின்னாடியே வர்றது, நான் போகும் போது, வரும்போது அவன் பேரை ப்ரெண்ட்ஸைவிட்டு கத்த வைக்கிறதுன்னு ஒரு மாதிரி பண்ணிட்டே இருக்கான் கா. என்னால மிஸ்கிட்ட சொல்ல முடியலை. அவனோட அம்மாவும் எங்க ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. சொன்னா யாரும் நம்புவாங்களான்னு தெரியலை. இப்போ லவ் பண்ணலைன்னா, தப்பு தப்பா உன்னைப் பத்தி ஸ்கூல் சுவத்துல எழுதி வைப்பேன்னு மிரட்டுறான் கா. அம்மா, அப்பாகிட்ட சொன்னா என்னைத்தான் திட்டுவாங்க. பசங்க கூடப் பேசக்கூடாதுன்னு சொல்லிதான் ஸ்கூல் அனுப்புவாங்க!” என அவள் தேம்பவும், பெரிதாய் ஏதோ வரப்போகிறது எனப் பயந்த சந்தனாவிடம் இப்போது சின்ன ஆசுவாசம்.
“உன் மேல தப்பு இருக்கோ காவேரி?” இவள் வினவ, “ஐயோ அக்கா... நான்... நான் எந்தத் தப்பும் பண்ணலையே கா!” என்றாள் படபடவென.
“ஹம்ம்... அப்படியா. பட் நீ அழுறதைப் பார்த்தா அப்படித் தெரியலையே. தப்பு செஞ்சவங்கதானே இப்படி அழுவாங்க!” சந்தனா கூறியதும் சின்னவளின் அழுகை மட்டுப்பட்டிருந்தது. முகத்தை இரண்டு கைகளாலும் அழுந்தத் துடைத்தாள். அந்த செய்கையில் இவளது உதடுகள் மலர்ந்தன.
“காவேரி, ஒன்னை மட்டும் நினைப்புல வச்சுக்கோ. நம்ம மேல தப்பு இல்லாத இடத்துல பயந்து அழணும்னோ இல்ல இந்த மாதிரி தப்பான முடிவெடுக்கணும்னோ நினைக்காத. எது வந்தாலும் அதை ஃபேஸ் பண்ற தைரியம் உன்கிட்ட இருக்கணும். இன்னைக்கு ஸ்கூல்ல ஒரு பையன் மிரட்டுறான்னு இப்படியொரு முடிவெடுத்திருக்க. நாளைக்கு காலேஜ்ல, நீ வேலை பார்க்குற இடத்துலன்னு நாலு பேரில்ல நாப்பது பேரை இந்த மாதிரி பார்க்குற சந்தர்ப்பம் வரலாம். அதுக்காக ஒவ்வொரு தடவையும் இது போல சூசைட் அட்டெண்ட் பண்ணுவீயா நீ? சாவுதான் எல்லாத்துக்கும் சொல்யூஷனா என்ன? கிடையாது டா!”
“நானும் உன் வயசைக் கடந்துதான் வந்திருக்கேன். என்னைக் கூட ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு பையன் இப்படி மிரட்டியிருக்கான்!” என இவள் கூறியதும், காவேரியின் முழுக்கவனமும் இவளிடம் குவிந்தது.
“நிஜமாவா கா? நீங்க எப்படி ரியாக்ட் பண்ணீங்க?” அவள் கேட்க,
“ஹம்ம்... நான் உன்னை மாதிரி அழலாம் இல்ல பா. ரொம்ப தைரியமான பொண்ணு. என் அம்மாகிட்ட போய் சொல்லிட்டேன். அம்மா அந்தப் பையன் கிட்ட பேசுனாங்க, ஸ்கூல் மிஸ்கிட்ட பேசி பிரச்சனையை சால்வ் பண்ணிட்டாங்க!” என்றாள்.
“ஓ...” என்ற காவேரியின் குரலில் சுருதி இறங்கியிருந்தது.
“என்னாச்சு காவேரி?”
“உங்கம்மா உங்களைத் திட்டலை. ஆனால், என் அம்மா என்னைத் திட்டுவாங்க...”
“தப்பு பண்ணாதானே திட்டுவாங்க. நீதான் எந்தத் தப்பும் பண்ணலையே!”
“ப்ம்ச்... அதான் சொன்னேனே கா. அம்மாவுக்கு பசங்களோட பேசுனா புடிக்காதுன்னு. இப்படியெதாவது பிரச்சனைன்னு நான் அவங்ககிட்ட சொன்னா, என்னைத்தான் திட்டுவாங்க...” என்றாள் ஏமாற்றமாய்.
“காவேரி, நீயா எல்லாத்தையும் ஏன் முடிவு பண்ற. ஒரு தடவை உங்க அம்மாகிட்டே பேசிப் பார்க்கலாம் இல்ல. கண்டிப்பா அவங்க உனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க!” என்றாள் உறுதியாய்.
“போங்க கா. உங்களுக்கு என்னத் தெரியும் என் அம்மாவைப் பத்தி. எனக்குத்தான் தெரியும்!” சின்னவள் முகத்தைத் திருப்ப, இவளது உதடுகளில் புன்னகை ஏறின.
“சரி, நீ சொல்றது சரியா இல்ல, நான் சொல்றது சரியான்னு பார்ப்போமா?” என இவள் சவால் விட, “ஹம்ம்...” என காவேரி தலையை அசைத்தாள். அவளின் அம்மாவை அழைத்து அமர வைத்த சந்தனா, “ஏன் கா, காவேரி மேல தப்பு இல்ல. அவளுக்கொரு பிரச்சனைன்னு வந்தா நீங்க அவளைத் திட்டுவீங்களா? இல்ல சப்போர்ட் பண்ணுவீங்களா?” எனக் கேட்டாள்.
“இதென்னம்மா கேள்வி, எம்புள்ளை எந்தத் தப்பும் பண்ணாம நான் எதுக்குத் திட்டப் போறேன். என் ராஜாத்தி அப்படி தப்பெல்லாம் பண்ண மாட்டா. சமத்துகுட்டி அவ!” என்றவர் மகளின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவ, அந்த விரல்களைப் பார்த்த சந்தனாவிற்கு தாயின் நினைவு தொற்றிக் கொண்டது.
ஒருநாள் ஒருநொடியேனும் தாயின் பிம்பத்தை நினைவலைகளை யாரோ ஒருவரேனும் தட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதோ இன்று காவேரியின் தாயின் வடிவத்தில் நடந்திருந்தது.
குட்டி குட்டி என நாளுக்கு நூறு முறையாவது அழைத்திடும் தாயின் நினைவில் மனம் கனத்துப் போனது. தாய்ப் பறவைக் குஞ்சை அடைகாப்பது போல எங்கு சென்றாலும் தன்னை அழைத்துச் செல்லும் பெண்மணி இப்போது உடனில்லை என்பது மனதிற்குள் அத்தனை கஷ்டம்தான். இருந்தும் கடந்து வந்துவிட்டாள். ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல. கிட்டதட்ட ஏழெட்டு வருடங்கள் அவரில்லாது வாழ்க்கையை நகர்த்தியிருந்தாள். தாய் இறந்தப் போதுதான், யார் உடனில்லை என்றாலும் நமக்கான வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்றொரு நிதர்சனத்தை உணர்ந்திருந்தாள்.
“ம்மா... நிஜம்மா என்னைத் திட்டமாட்டீயா நீ?” காவேரியின் குரலில் நிகழ் காலத்திற்கு வந்தாள் சந்தனா.
“நான் எதுக்கு என் தங்கத்தைத் திட்டப் போறேன் டி?” எனக் கேட்டவரின் குரலில் மகள் மீதான பாசம் கொட்டிக் கிடந்தது.
“பார்த்தியா காவேரி. நான் சொன்னதுதான் உண்மை. இனிமே எந்த ப்ராப்ளம்னாலும் யார்கிட்டே ஷேர் பண்ணுவ நீ?”
“அம்மாகிட்ட தான் கா!” துள்ளலாய்க் கூறினாள் சின்னவள்.
“குட் கேர்ள். இனிமே இந்த மாதிரி எதுவும் பண்ண கூடாது!” எனப் பேசிக் கொண்டே தேவா கொடுத்த இன்னட்டை அவளிடம் நீட்டியவள், “சமத்தா இந்த டெய்ரிமில்கை சாப்ட்டுட்டு இருக்கணும். நான் அம்மாகிட்ட பேசணும்!” என அவளை வெளிய அனுப்பிய சந்தனா அந்தப் பெண்மணியிடம் உரையாடத் துவங்கினாள்.
“ஏன் கா காவேரியை பசங்க கூடப் பேச வேணாம்னு சொன்னீங்க?”
“காலம் ரொம்ப கெட்டுக்கிடக்கு மா. இப்ப இருக்க பசங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு. பொட்டைப் புள்ளைக்கு எதுக்கு ஆம்பள பசங்க சகவாகம்?” அவர் தன்னிலையை விளக்கினார்.
“நம்ம பார்க்குற பத்துல ரெண்டு ஆண்கள் தப்பா இருக்காங்கன்றதுக்காக எல்லாருமே தப்பானவங்க சொல்வீங்களா கா? ஏன் உங்க வீட்ல ஆண்கள் இல்லையா? உங்க அப்பா, உங்க ஹஸ்பண்ட்னு எல்லாரோட வாழ்க்கைலயும் ஆண்கள் கலந்திருக்காங்க கா. உங்கப் பொண்ணுக்கு ஒதுங்கிப் போக சொல்லிக் கொடுக்காதீங்க. எது வந்தாலும் அதை ஃபேஸ் பண்ண சொல்லிக் கொடுங்க கா. பசங்ககிட்டே பேச வேணாம்னு சொல்லாதீங்க. நாளைக்கே உங்கப் பொண்ணுக்கு எதாவது ஒன்னுன்னா, கண்டிப்பா ப்ரெண்டா அவங்க முன்னாடி நிப்பாங்க. ஆம்பளைங்களே இல்லாத உலகத்துல நம்ப வாழலையே கா. நல்லவங்க கெட்டவங்களைப் பிரிச்சுப் பார்த்துப் பழகுன்னு சொல்லிக் கொடுங்க. அதுதான் வாழ்க்கைக்கு சரியா இருக்கும்!” என்றாள். அவர் அமைதியாய் இருந்தார்.
“எல்லாத்தையும் விட எல்லா சிட்சுவேஷன்லயும் அம்மா, அப்பா பொஷிஸன்லயே இருக்காதீங்க. கொஞ்சம் புள்ளைங்களோட மனசைப் புரிஞ்சுக்கோங்க. நீங்க வாழ்ந்த சூழ்நிலை வேற. இப்போ அவங்க வாழ்ற சூழ்நிலை வேற. எதா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லு டா, நான் பார்த்துக்கிறேன்னு அவகிட்டே சொல்லி இருந்தீங்கன்னா, உங்கப் பொண்ணு இவ்வளோ தூரம் வந்திருக்க மாட்டா. அது வெறும் வார்த்தை இல்ல. உங்கப் பொண்ணுக்கு நீங்க கொடுக்குற தன்னம்பிக்கை, தைரியம் கா!” என இவள் பேச, அவர் தலையை மட்டும் அசைத்தார். அவர் முகம் ஆழ்ந்த சிந்தனையிலிருக்க, கண்டிப்பாக தான் பேசியதை அவர் சீர்தூக்கிப் பார்ப்பார் என்ற நம்பிக்கையில் ஆசுவாச மூச்சை வெளிவிட்டாள். மேலும் சில பல நிமிடங்கள் பேசிவிட்டு அவரை அனுப்பி வைத்தாள்.
“ம்மா... மனோ வந்துட்டான்!” என்ற குரலுடன் பள்ளிப் பையும் சீரூடையுமாய் உள்ளே நுழைந்தான் பத்து வயது மனோகர். சந்தனாவிற்கு ஐந்து மணி வரை மருத்துவமனை பணி நேரம். அதனால் மனோ பள்ளி முடிந்ததும் ஓட்டுநர் அவனை இங்கே அழைத்து வந்துவிடுவார். அவளது அறையின் பக்கவாட்டில் சிறிய தடுப்பு போல் அமைத்து, அதில் சிறிய நீள்விருக்கை ஒன்றை போட்டிருந்தனர். சந்தனா மகனுக்காகவென இவற்றை செய்திருந்தாள்.
“ம்மா... ராகுல் இன்னைக்கு ஃபேமிலி ட்ரீ வரைஞ்சானா, நானும் வரைஞ்சேன்!” என ஒரு காகிதத்தை எடுத்து சின்னவன் நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவளின் விழிகள் மெலிதாய் கலங்கின. தாய் தந்தை என்றிருக்கும் இரண்டு இடங்களிலும் ஒரு பெண் பொம்மையை வரைந்து அம்மா, அப்பாவென இவள் பெயரைக் கூறிப்பிட்டிருந்தான்.
“ரொம்ப அழகா இருக்கு மனோ!” என மகன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனும் பதிலுக்கு தாயின் முகம் முழுவதும் ஆசை தீர எச்சில் செய்தான்.
***
கைகள் தன் போல ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்து கொண்டிருக்க, பூரணி ஏதோ சிந்தனையிலிருந்தார். திடீரென கேட்ட மகளின் சத்தத்தில் பட்டென கையிலிருந்த சுத்தம் செய்யும் குச்சியைக் கீழே போட்டவர், “குட்டி, குட்டி... எங்க இருக்க நீ?” என பதறிப் போய் கத்தினார்.
அழுதுகொண்டே எழுந்தமர்ந்த சந்தனா நெற்றியில் கையை வைக்கவும், அவளது கை முழுவதும் குருதியில் நனைந்து போனது. லேசான அடி என்றாலும் இவளுக்கு ரத்தம் வெகுவாய் சிந்தியது.
“என்னாச்சு?” என சதாம்பிகா மகனின் அறையை நோக்கி வர, பூரணியும் மேலிருந்துதான் சத்தம் வந்ததோ என அவருடன் படியேறினார்.
தாயைக் கண்டதும் விம்மித் துடித்த அழுகையைக் கட்டுப்படுத்திய சந்தனா, “ம்மா...” என ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள். அவளிடமிருந்து தேம்பல வெளிப்பட, “ஐயோ, குட்டி... குட்டி என்னாச்சு டி? எப்படி முகத்துல ரத்தம் வருது?” எனப் பதறியவர், சேலையை எடுத்து அவளது நெற்றியில் வைத்து அழுத்தினார்.
“ம்மா... ம்மா அவன்தான் பொம்மையை தூக்கி என் மேல எறிஞ்சான் மா!” என இவள் தேம்ப, “உன்னை யாரு இங்க வர சொன்னது?” என்ற சதாம்பிகாவின் அதட்டல் குரலில் சின்னவளின் அழுகை நின்றிருந்தது. பயந்த விழிகளுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.
“ஏன் மா அன்னப்பூரணி, நான் என்ன சொன்னேன் உங்ககிட்டே? உங்கப் பொண்ணு உள்ள வர வேணாம்னுதானே சொன்னேன்? ஹம்ம்... உங்களையே இந்த ரூம்க்குள்ள வரக் கூடாதுன்னுருக்கேன். உங்க மக எதுக்கு வந்தா?” எனக் கோபமாய்க் கேட்டார் சதாம்பிகா. மேலும் சந்தனாவை ஏகத்துக்கும் அவர் முறைத்த வண்ணமிருந்தார்.
“இல்ல மா, சின்ன புள்ளை தெரியாம வந்துட்டா!” என்ற பூரணிக்கு விழிகள் எல்லாம் கலங்கிப் போயின. இது போல சுடுசொற்கள் எல்லாம் இதற்கு முன்பு கேட்டுப் பழக்கம் இல்லை அந்த பெண்மணிக்கு. கணவர் இருந்தவரை எங்கேயும் வெளியே வேலைக்கு அவரை செல்ல அனுமதித்து இல்லை. இப்போது இப்படியொரு சூழ்நிலையில் அவருக்கு அழுகை வரும் போலானது. அமைதியாய் நின்றார். மகளுக்கு வேறு அடிபட்டுவிட்டதே என இன்னும் அதிகமாய் அழுகை வரப் பார்த்தது.
“மாம்... தட் நீயூ கேர்ள் ஸ்டோல் மை டாய்!” இத்தனை நேரம் அமைதியாய் இவற்றை வேடிக்கைப் பார்த்த அச்சிறுவன் இடைபுகுந்தான்.
“அவனோட. பொம்மையை எடுத்தீயா நீ? அதான் அவன் உன்னை அடிச்சானா?” மகன் மீது தவறில்லை என்று தெரிந்ததும் அவரது குரலில் காரம் கூடியது.
“இல்ல... இல்லை... ஏதோ சத்தம் கேட்டுச்சு. அதான் மேல வந்தேன். பொம்மையை எடுக்க கஷ்டப்பட்டான்... அதான் நான் எடுத்துக் கொடுக்கலாம்னு அதை தொட்டேன். உடனே கையில இருந்த பொம்மையை எடுத்து என் மேல எறிஞ்சுட்டான். நான் எதையும் எடுக்கலை மா!” என சின்னவள் தேம்பியழத் தொடங்க, “பொய் சொல்றீயா நீ? என் பையன் பொய் சொல்ல மாட்டான்!” என மகன் பக்கமிருந்து மட்டுமே பேசினார் சதாம்பிகா.
“ம்மா... என் பொண்ணு அப்படியெல்லாம் பண்ண மாட்டா மா!” பூரணி ரோஷக் குரலில் கூறினார்.
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல, முதல்ல ரெண்டு பேரும் ஹாலுக்குப் போங்க. நான் வரேன்!” என அவர்களை அனுப்பியவர், “மனோ... திஸ் இஸ் நாட் அ குட் ஹேபிட். அந்தப் பொண்ணை ஏன் ஹேர்ட் பண்ண நீ?” என அவர் கேட்கவும், சின்னவன் முறைத்துக் கொண்டு மற்றையபுறம் திரும்பினான்.
“மிஸ்டேக் இஸ் நாட் மைன் மா. தட் கேர்ள் ஸ்டோல் மை டாய். சோ, ஐ டிட் திஸ்!” என்றான் ஆங்கிலத்தில். இடதுபுறம் தலையில் ஒரு கட்டும் காலில் பெரிதாய் ஒரு கட்டுமிட்டிருந்தனர் அச்சிறுவனுக்கு. நடந்த விபத்தில் அவனுக்கு முன்மூளையில் அடிபட்டிருந்தது. காலில் பலத்த அடி. எழுந்து நடக்கவே ஒரிரு வருடங்களாகலாம் என மருத்துவர் கூறியிருந்தார். மேலும் (post-Traumatic stress Disorder) பிடிஎஸ்டி-யினால் பாதிக்கப்பட்டிருந்தான். இத்தனை நாட்கள் கூடவே இருந்த தாத்தாவை விபத்தில் பறிகொடுத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தூக்கத்தில் எழுந்து உளறுவது, அவ்வப்போது கத்துவது, நொடிக்கு நொடி மனநிலை மாறுவது என அவன் உடலும் மனதும் சமநிலை தவறியிருந்தது. சில வாரங்கள் மருத்துவமனை வாசம் முடிந்து இப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்தான்.
ஓடியாடி விளையாண்ட கால்களும் அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காது விபத்தினால் ஓய்வில் இருந்துவிட, அதுவும் அவ்வப்போது கோபமாய் வெளிப்பட்டுத் தொலைத்தது. மகனின் இந்நிலை பெற்றவர்களைக் கவலைக் கொள்ள செய்திருந்தது. மருத்துவர் அவன் சீக்கிரம் குணமடைந்துவிடுவான் என்றும் மருந்து மாத்திரைகளை சரியாய் உட்கொள்ளுமாறு கூறியிருந்தார். அவனது மனநிலை சரியாகும்வரை அவனை அக்கறையாக கவனித்துக் கொள்ள அறிவுருத்தியிருந்தார்.
அதனாலே அவனது அறைக்குள் தாயும் தந்தையும் மட்டுமே நுழைவார்கள். வேற்று ஆட்கள் யாரேனும் வந்துவிட்டால் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எதாவது ஒரு வகையில் அவர்களைக் காயப்படுத்திவிடுகிறான் என்று அவனது அறைக் கதவை பூட்டியே வைத்திருந்தார் சாதம்பிகா.
எதுவும் பேசாது மகனருகில் வந்தவருக்கு மனம் வலித்தது. அவனது தலையை இடது கையால் மெல்லத் தடவினார். அவரது கையைத் வேகமாய் தட்டிவிட்டவன், “டோன்ட் டச் மீ மாம்!” என்றான் சீறலாய். தாயிடம் கூட அவ்வப்போது கோபமுகம்தான் காண்பித்தான். அவன் அடங்கிப் போகும் ஒரேயொரு மனிதர் அவனது தந்தை உமாகாந்தன் மட்டும்தான். தந்தை மகனுக்கு இடையே அப்படியொரு பிணைப்பு இருந்தது.
உமாகாந்தன் அரசு அலுவலகம் ஒன்றில் உயர்பதவியில் இருப்பவர். அலுவல் காரணமாக மகனை உடனிருந்து அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. வேலை முடிந்து வந்ததும் மகனுடன் பொழுதைக் கழிப்பார். தாய் தந்தை இருவரது வேண்டுதலிலும தங்களது மகன் விரைவில் குணமடைய வேண்டும் என்பதுதான் பிரதானம். கடவுள் சீக்கிரம் தங்களுக்கு செவி சாய்க்க வேண்டுமென நிதமும் அவரிடம்தான் சரணடைந்திருந்தனர்.
முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த சதா கூடத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“இங்க வா பொண்ணே!” என சந்தனாவை அழைக்க, அவள் தாயின் முகம் பார்த்தாள். அவர் தலையை அசைக்க, சதா அருகே சென்றாள்.
சின்னவளுக்கு முதலுதவி செய்து முடித்தவர், “பூரணி, என் பையனுக்கு உடம்புக்கு முடியலேன்னு ஏற்கனவே நான் சொல்லிட்டேன். இன்னைக்கு சின்ன காயத்தோட போச்சு. அவனை நம்மால எதுவும் சொல்ல முடியாது. அவனோட நிலைமை அப்படி. உங்களுக்கு வேலை வேணும்னா உங்கப் பொண்ணை கூட்டீட்டு வராதீங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது. இப்போ கிளம்புங்க. நாளைக்கு காலைல சீக்கிரம் வந்துருங்க!” எனப் பொறுமையாய் கூறினார்.
பூரணிக்கு என்ன பதிலுரைப்பது எனத் தெரியவில்லை. ஒரு வாரமாய் அலைந்து திரிந்தும் எங்கேயும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த வேலை மரிக்கொழுந்து இவருக்காக சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதை விட்டுவிட்டால் கண்டிப்பாக அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றக் கூடக் கையிருப்பில் பணமிருக்காது. வேலை இல்லையென்றால் கண்டிப்பாக தன் பிறந்த வீட்டில் சென்று நிற்க வேண்டி வரும். அதை அறவே வெறுத்தார் பெண்மணி. கணவர் இறந்து மூன்று நாட்கள் கூட கடக்காத நிலையில் மகளை சுமையாக எண்ணிய பெற்றவர்களை நினைக்கும்போது மனம் ஆறவேயில்லை. அவர்கள் வெளியேறு என்று உரைப்பதற்கு முன்னே தனியாய் வந்துவிட்டார். இனி எதற்காகவும் அங்கே சென்று நிற்க விருப்பமில்லை.
“சரிங்க மா...” எனத் தலையை அசைத்துவிட்டு மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற பூரணிக்கு மகளை எங்கே அனுப்பவதென தெரியவில்லை. ஆண்பிள்ளையாய் இருந்தால் கூட தனியே விட்டுவிட்டு சென்றிருப்பார். பெண்ணாய் போய்விட எங்கே சென்று யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியவில்லை. மரிக்கொழுந்து வீட்டில் அவரைத் தவிர யாருமில்லை. மகளைத் திருமணம் செய்து கொடுத்து இரண்டு தெரு தள்ளிதான் குடி வைத்திருந்தார். அங்கே உதவிக் கேட்க மனம் வரவில்லை. நாதியற்று நின்றுவிட்டோமே என அவரது தலையணை கண்ணீரில் நனைந்தது.
அவருக்கு அருகே படுத்திருந்த சந்தனா நிமிர்ந்து தாயைப் பார்த்தாள். ஒன்பது வயது முடிந்து பத்தைத் தொடக் காத்திருந்த சிறுமிக்கு என்னப் புரிந்ததோ? தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள், “ம்மா... நீ அழாதம்மா. நான் இனிமே அந்த பெரிய வீட்டுக்குள்ள வரமாட்டேன் மா. வெளிய தான் இருப்பேன். அப்பா ப்ராமிஸா மா!” என்றாள் தவறிழைத்த பாவத்துடன். மகளைப் பார்த்தப் பூரணி அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். மனப் பாரத்தை இறக்கி வைக்கக் கூட ஒரு தோள் இல்லையே என நெஞ்சம் விம்மித் துடித்தது.
“நான் தனியா இருந்துப்பேன் மா. அப்பாதான் சாமியா இருக்காரு இல்ல. அவர் என்னைப் பார்த்துப்பாரு மா. நீ வேலைக்குப் போய்ட்டு வா!” என்றாள் தந்தை புகைப்படத்தை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு. தந்தை இறந்துவிட்டாரென புரிந்து கொள்ளவே அவளுக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. தங்கத் தட்டில் வைத்துத் தாங்கிய தகப்பன் திடீரென விட்டுச் சென்றதை அந்தப் பிஞ்சு மனது ஏற்றுக் கொள்ளவில்லை. அழுது அடம்பிடித்தாள்.
பூரணி மகளை சமாதானம் செய்ய முடியாது தானும் அழுது கரைய, தாயின் கண்ணீரைக் கண்டதும் சின்னவளுக்கு மெல்லப் புரியத் தொடங்கியது. தந்தை இனிமேல் வர மாட்டார் என்ற உண்மையை வலிக்க வலிக்க தாயும் மகளும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
“அதெல்லாம் வேணாம் குட்டி. உன்னை தனியா விட முடியாது. ஒனரம்மாகிட்டே நான் பேசிக்கிறேன்!” என மகளைத் தட்டித் தூங்க வைத்தவர், தானும் உறங்கிப் போனார்.
மறுநாள் மகளுடன் வந்த பூரணியைக் கண்டனமாகப் பார்த்த சதாம்பிகா, “உங்களுக்கு வேலையில்லை பூரணி. ஒருநாள் செஞ்ச வேலைக்கு சம்பளத்தை வாங்கீட்டுப் போகலாம் நீங்க!” என்றுவிட்டார்.
தொடரும்...
கருத்துக்களைப் பகிர 👇,
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: sujitha Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page