About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
முதல் வேளையாகப் பிரஹாசினியின் வீட்டில் நடந்த அனைத்தையும் தனது கணவருக்கு அழைத்து ஒப்புவித்து விட்டாள் ஆரவி.
அதைக் கேட்டு,”சூப்பர்மா! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! உன் அண்ணனுக்கு என்னோட வாழ்த்துகளைச் சொல்லிடு” என்று மகிழ்வுடன் கூறினான் ரஞ்சித்.
“அடுத்த தடவை அவங்க வீட்டுக்குப் போகும் போது உங்களையும் கூட கூட்டிட்டுப் போகனும்னு அண்ணா சொல்லிட்டு இருந்தார். நீங்க எப்போ இங்கே வருவீங்க?”
“எனக்கு லீவ் கிடைக்க மாட்டேங்குதும்மா. அங்கே அடுத்து எப்போ போகனும்?” என்றான் அவளது கணவன்.
ஆரவி,”அவங்க நம்ம சம்பந்தத்துக்கு ஓகே சொல்லிட்டா உடனே பூ வைக்கப் போகனும். அப்போ வருவீங்க தானே?”
“கண்டிப்பாக வருவேன்ம்மா” என்றதும் மேற்படி சில விஷயங்களைப் பேசி விட்டு அழைப்பை வைத்தான் ரஞ்சித்.
தனது தமையனின் திருமணம் உறுதியாகும் வரைத் தன்னுடைய வீட்டில் தங்கி இருப்பதாகத் தன் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் தெரிவித்து விட்டுத் தான் அன்றைய தினம் பிரஹாசினியின் வீட்டிற்குச் சென்றிருந்தாள் ஆரவி.
அதனால் தான் இப்போது அவனுக்குச் செல்பேசியில் அழைத்து விஷயத்தைக் கூறினாள்.
அடுத்து வந்த நாட்களில் திவ்யனின் வேலை மற்றும் அலுவலகத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தன்னுடைய நண்பர்களின் மூலமாக அறிந்து கொண்டான் நீரஜ்.
அதைத் தெரிந்து கொண்ட பின்னர், தனது தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற பொறுப்புத் தனக்கும், தனது பெற்றோருக்கும் கூடுதலாகவே இருந்தது.
அதை நல்லபடியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தனர். இப்போதோ அந்த திவ்யனைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் அதற்கு ஏற்றவாறு இருந்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான் நீரஜ்.
இவ்விஷயத்தைப் பெற்றோரிடமும் உரைத்து விட அவர்களது மனதில் இருந்த சிறு நெருடலும் மறைந்து விட்டது.
அதனால் தங்கள் வீட்டுப் பெண்ணை அந்தத் திவ்யனுக்குத் திருமணம் செய்து வைக்கச் சம்மதித்து விட்டார்கள் விருச்சிகனும், உமாராணியும்.
இதை மாப்பிள்ளை வீட்டார் வந்து பிரஹாசினிக்குப் பூ வைத்து விட்டுச் செல்லும் வரையிலும் எந்தச் சொந்தக்காரர்களுக்கும் தெரியப்படுத்தி விடக் கூடாது என்று முடிவெடுத்தனர் பிரஹாசினியின் குடும்பத்தார்.
திவ்யனின் தந்தைக்கு அழைத்து,”எங்க பொண்ணை உங்கப் பையனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க எங்களுக்குச் சம்மதம் சம்பந்தி” என்று உற்சாகத்துடன் உரைத்தார் விருச்சிகன்.
“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி. நாங்களும் இதைக் கேட்கத் தான் காத்திருந்தோம்!” என்று கூறித் தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார் மகுடபதி.
“ஆமாம் சம்பந்தி. நீங்க உங்க வீட்டில் கலந்து பேசி எப்போ பூ வைக்க வருவீங்கன்றதை எங்களுக்குத் தகவல் சொல்லிடுங்க”
“சரிங்க சம்பந்தி” என்றவரோ அழைப்பைத் துண்டித்து விட்டுத் தன் மனைவியை அழைத்து, விஷயத்தைச் சொல்லவும்,
“நான் இதை என்னோட அக்கா, தங்கச்சிங்க கிட்டே கலந்து பேசிட்டுச் சொல்லவாங்க?” என அவரிடம் கேட்டார் சோமசுந்தரி.
“வேண்டாம்மா. நிச்சயத்தப்போ எல்லாருக்கும் சொல்லிக்கலாம்” என்றதும் அவரது மனைவியின் முகம் வாடிப் போய் விட்டது.
“சரி சொல்லு. அப்பறம் அவங்களையும் பூ வைக்க அழைச்சிட்டுப் போகனும்ல? அதையும் சொல்லி அதுக்குத் தயாராகி வரச் சொல்லிடு” என்றார் மகுடபதி.
“சரிங்க” என்று மகிழ்ச்சியாகத் தன் சகோதரிகளுடன் செல்பேசியில் உரையாடப் போய் விட்டார் சோமசுந்தரி.
“அம்மாவோட முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பாருங்க அப்பா” என்று கேலி செய்தாள் ஆரவி.
“ம்ஹ்ம். அவளுக்கும் தன்னோட பையன் கல்யாணத்தைப் பத்தி எல்லார்கிட்டேயும் சொல்லனும்னு ஆசை இருக்கும்ல? அதான்” என்றுரைத்தார் தந்தை.
ஏற்கனவே பிரஹாசினியின் வீட்டிலிருந்து வந்தது முதல் அவளுடன் தினமும் செல்பேசியில் பேசித் தங்களது காதலை இன்னும் வலிமையாக வளர்த்துக் கொண்டு இருந்தான் திவ்யன்.
இப்போதோ அவளது பெரியப்பாவும், பெரியம்மாவும் தங்களது திருமணத்திற்குப் பச்சைக் கொடிக் காட்டி விட்டனர் என்பதை அறிந்ததும் இன்னும் கடிவாளமிடாத குதிரையைப் போல அவளுடன் இனிமேல் பேசவே போவதில்லை என்னும் அளவிற்குப் பேசிக் கொண்டு இருக்கிறான்.
பிரஹாசினியும் கூட இவ்வளவு நாட்களாகத் தான் கொண்டிருந்த தயக்கங்கள் அனைத்தையும் உதறி விட்டு அவனுடன் நன்றாகப் பேசிச் சிரிக்கிறாள்.
அவர்களது அந்த உரையாடல்கள் யாவும் எல்லை மீறாமல் நாகரீகமாகத் தான் இருந்தது. அதேபோல் அவளிடம் என்றுமே கண்ணியம் தவறிப் பேசவில்லை திவ்யன்.
அதனாலேயே அவனுடன் பேசுவதில் எந்தச் சங்கடமும் இருக்கவில்லை பிரஹாசினிக்கு.
அதனால் செல்பேசியிலேயே தங்களது காதல் பயிரைச் செவ்வனே வளர்ந்து வரவும்,
ஒரு சில நாட்கள் கழித்துப் பிரஹாசினியைப் பெண் பார்த்துப் பூ வைப்பதற்கான நாளையும், கையோடு நிச்சயத்தார்த்தத்தை நடத்தப் போகும் தினத்தையும் குறித்து விட்டுத் திவ்யனும், அவனது குடும்பமும், ஒரு சில உறவினர்களும் வந்து சேர்ந்தார்கள்.
ஆனால் தங்களது சொந்தங்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதை அவர்களிடம் முன்னதாகவே தெரியப்படுத்தி விட்டனர் விருச்சிகன், உமாராணி மற்றும் நீரஜ்.
அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று இங்கிதத்துடன் ஒப்புக் கொண்டார்கள் திவ்யனும், அவனது குடும்பமும்.
பிரஹாசினியின் வீட்டாரிடம்,”இவர் தான் எங்க பொண்ணு ஆரவியோட வீட்டுக்காரர்” என்று ரஞ்சித்தை அறிமுகப்படுத்தி வைத்தார் மகுடபதி.
“அப்படியா? சரிங்க” என்று அவனது வேலை மற்றும் மற்றதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர், பெண் பார்க்கும் சடங்கின் முதன்மை நிகழ்வாகப் பிரஹாசினியை அழைத்து வரச் சொன்னார்கள்.
பிரஹாசினியே ஒரு கை தேர்ந்த அழகுக்கலை நிபுணி என்பதால் அவளே தன்னை அழகாகவும், நேர்த்தியாகவும் அலங்கரித்துக் கொண்டுத் தன் பெரியம்மா கொடுத்த காபி கோப்பைகள் அடங்கிய தட்டுடன் அனைவரின் முன்னிலையிலும் காட்சியளித்தாள்.
“இவங்க நல்லா மேக்கப் போட்டு இருக்காங்களே?” என்று அவளை மெச்சினாள் ஆரவி.
விருச்சிகன்,“எல்லாருக்கும் காஃபியைக் கொண்டுப் போய்க் கொடும்மா” என்றதும்,
“முதலில் மாப்பிள்ளைக்குக் கொடு பிரஹா” என்றார் உமாராணி.
அதைப் பின்பற்றித் திவ்யனிடம் சென்று தட்டை நீட்டினாள் பிரஹாசினி.
அவனோ அவளை ரசனை மிகுந்த பார்வையுடன் வருடிக் கொண்டே கோப்பையை எடுத்துக் கொள்ள,
அதன் பிறகு மற்றவர்களுக்கும் காபி கொடுத்து விட்டு நின்று கொள்ள,”இங்கே வந்து என் பக்கத்தில் உட்காருங்க அண்ணி” என அவளைத் தனக்கு அருகில் இருந்த இடத்தில் அமர வைத்துக் கொண்டாள் ஆரவி.
அதைக் கண்டு அனைவரும் மென்நகை புரிய, மாப்பிள்ளை வீட்டாருடன் வந்திருந்த உறவினப் பெண் ஒருவர்,”இது உங்க சொந்தப் பொண்ணு இல்லையாமே? தம்பி பொண்ணு தானே? அப்போ நகை எதுவும் போடாமல், வரதட்சணை கொடுக்காமல் அப்படியே அனுப்பி வச்சிருவீங்களா?” என்று கேட்டார்.
அதைக் கேட்டு முகத்தைச் சுழித்துத் தலையைக் குனிந்து கொண்டாள் பிரஹாசினி.
அவரது பேச்சில் கோபமடைந்த திவ்யனோ,”சித்தி!” என்று அவரை அடிக்குரலில் அதட்டினான்.
“என்னடா? நான் என்ன இல்லாததையா பேசிட்டேன்? நான் சொன்னது உண்மை தான?” என்று கூறித் தன் பேச்சை நியாயப்படுத்தினார்.
“ப்ச்” என்று அவரை எரிச்சலுடன் பார்த்தாள் ஆரவி.
அவளது காதுகளில்,”உன் சொந்தக்காரங்கப் பிரச்சினை பண்றதுக்குன்னே வந்து இருக்காங்க போலவே!” என்று கூறிப் பொருமினான் ரஞ்சித்.
“ஆமாம்ங்க! அவங்களுக்கு இது தானே பொழப்பே!” என்று சலித்துக் கொண்டாள் ஆரவி.
அப்போது ஏதோ சொல்ல வந்த சோமசுந்தரியைத் தடுத்து,”ஆமாம்ங்க. நீங்க சொன்னது எல்லாம் உண்மை தான். ஆனால் அவளை இத்தனை வருஷமாக எங்க சொந்தப் பொண்ணு மாதிரி தான் வளர்த்துருக்கோம். அப்படியிருக்கும் போது அவளோட கல்யாணத்தில் எந்தக் குறையும் வர விடாமல் எல்லாமே செஞ்சி அனுப்பி வைப்போம்!” என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு உறுதி அளித்தார் விருச்சிகன்.
“நீங்க எதுக்கு இப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? நாங்க அதையெல்லாம் எதிர்பார்க்கலை. உங்கப் பொண்ணை மட்டும் எங்க வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைங்க. அது போதும்” என்று கூறி விட்டார் மகுடபதி.
அதற்குப் பிறகு அவரது உறவினர்கள் யாரும் எதிர்மறையாக எதுவும் பேசி விடவில்லை.
அப்போது தான், அனைவருக்கும் மனம் இலகுவாக இருந்தது.
அதே மனநிலையிலேயே, ஆரவியை அழைத்து,”உங்க அண்ணி தலையில் இந்தப் பூவை வச்சு விடும்மா” என்று கூறி அவளது கையில் மல்லிகைப் பூவைத் தந்தார் சோமசுந்தரி.
அவளும் அந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்து முடித்தாள்.
தனது தங்கையிடம் வந்து,”கங்கிராட்ஸ்டா பிரஹா” என அவளை வாழ்த்திக் கைக் குலுக்கி விடுவித்தான் நீரஜ்.
“தாங்க்ஸ்ண்ணா” என்று கூறிப் புன்னகை செய்தாள் பிரஹாசினி.
இவ்வளவு நேரமாகத் தன்னவளைப் புடவை மற்றும் மிதமான அலங்காரத்தில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவனோ அவளது தலையில் பூ இல்லாமல் வெறுமையாக இருப்பதைக் கண்டுச் சுனங்கிப் போயிருந்தான் திவ்யன்.
இப்போது தான் அந்தக் கவலையும் தீர்ந்து அவளது முழுமையான அழகுத் தோற்றத்தைக் கண்களால் பருகினான்.
“அதான் பூ வைக்கிற வைபவம் முடிஞ்சாச்சே! இப்போதாவது இங்கே கை நனைக்கலாம்ல?” என்று அவர்கள் அனைவரையும் உணவருந்த வைத்து விட்டனர்.
இறுதியாக கிளம்பும் தருவாயில் தன்னவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தமையனின் தவிப்பைக் கண்டுப் புன்னகைத்து,
“மூனு வருஷம் வெயிட் பண்ணிட்டீங்க. இன்னும் மூனு மாசம் தானே அண்ணா? அதையும் கடந்துட்டா அவங்களைக் கல்யாணம் செய்து உங்களோடவே நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடலாம். அதுவரைக்கும் வெயிட் பண்ண மாட்டீங்களா என்ன?” என்று அவனிடம் வினவினாள் ஆரவி.
அதைக் கேட்டதும் முகிழ்நகை முகிழ்த்திய திவ்யனோ, தன்னவளைப் பார்த்துக் கொண்டே,”நான் அவளுக்காக எவ்வளவு வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணுவேன்ம்மா” என்று உறுதியாக உரைத்து விட,
அதில் பிரஹாசினி மட்டுமில்லாமல் அங்கேயிருந்த மற்றவர்களும் கூட அவனது காதலைக் கண்டுப் பிரம்மித்துத் தான் போனார்கள்.
தன்னவனை இப்போதே திருமணம் செய்து கொண்டு அவனைத் திகட்டத் திகட்டத் தன் காதலில் மூழ்கடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது பிரஹாசினிக்குள்.
அவர்கள் விடைபெற்றுக் கிளம்பியவுடன்,”நீ உனக்கு ஏத்த நல்ல மாப்பிள்ளையைத் தான் தேர்ந்தெடுக்கிற பிரஹாம்மா” என்று அவளை ஆசீர்வதித்தார்கள் அவளது குடும்பத்தார்.
இந்தப் பூ வைக்கும் வைபவம் முடிந்த சில நாட்களிலேயே தங்களது உறவினர்கள் அனைவருக்கும் பிரஹாசினியின் திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்ட தகவலைத் தெரிவித்து விட்டார்கள் விருச்சிகன் மற்றும் உமாராணி.
அதைக் கேட்டதும் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி விட்டனர் அவர்களது உறவினர்கள்.
அதற்கு ஒருபடி மேலே போய், அவர்களது வீட்டிற்கே வந்து,”என் பசங்களுக்குக் கொடுக்காமல் அந்நியத்தில் போய் மாப்பிள்ளை எடுத்து இருக்கீங்கள்ல! அந்தக் கல்யாணத்துக்கு நாங்க வரவே மாட்டோம்! நாங்கன்னு இல்லை, நம்ம சொந்தக்காரங்களும் யாருமே வர மாட்டாங்க! பிரஹாசினியோட படிப்பில் இருந்து இப்போ கல்யாணம் வரைக்கும் அவ சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் காதும், காதும் வச்சா மாதிரி முடிக்கிறீங்கள்ல? அது எதுவுமே அவளுக்கு நல்லபடியாக அமையாது!” என்று சாபம் கொடுத்து விட்டுப் போனார் ரமணி.
அதில் மனமுடைந்து போன பிரஹாசினியிடம்,”நல்லவங்க கொடுக்கிற சாபமே சில நேரம் பலிக்கிறது இல்லை. இவங்க கொடுக்கிறது எல்லாம் பலிக்கவா போகுது! விடு டி. இனிமேலாவது அவங்க தொல்லை இல்லாமல் நிம்மதியாக இந்த மூனு மாசத்துக்குள்ளே கல்யாணத்துக்கு ரெடி ஆகு” என்று அவளிடம் வலியுறுத்தினார் உமாராணி.
பிரஹாசினி தனக்கு அனுப்பி வைத்த அவளுக்குப் பூ வைக்கும் நாளில் எடுத்தப் புகைப்படத்தையே மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் திவ்யன்.
அவன் தன் தங்கையிடம் சொன்னதைப் போலவே இவளுக்காக எத்தனை வருடங்கள் வேண்டும் என்றாலும் தன்னால் காத்திருக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தான்.
அதேபோல் அவன் தன்னவன் தனக்காக செய்த செயல்களை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவிற்குக் கொண்டு வந்த பிரஹாசினியோ இப்படியானதொரு எதிர்கால வாழ்வு தனக்குக் கிடைத்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்தாள் பிரஹாசினி.
தாங்கள் ஒருவருக்கொருவர் பார்க்காமலும், பேசாமலும் மூன்று வருடங்களைக் கடந்து விட்ட திவ்யனுக்கும், பிரஹாசினிக்கும் தங்களது திருமணத்திற்கு இடையில் இருக்கும் அந்த மூன்று மாத இடைவெளியைக் கடப்பது என்பதெல்லாம் அவர்களுக்குக் கை வந்த கலை ஆயிற்றே!
அதுவும் முன்பு போல் அல்லாமல் இப்போது ஒருவருக்கொருவர் செல்பேசியில் உரையாடிக் கொண்டு இருக்கிறார்களே? பிறகு என்ன கவலை?
தங்களது காதல் கை கூடுவதற்காக காத்திருப்பது ஒரு சுகம் என்றால் அது கை கூடிய பிறகுத் திருமண பந்தத்தில் நுழைவதற்காக காத்திருப்பது அதை விடச் சுகமாக இருக்கும் என்பதையும் இந்த மூன்று மாத காலப் பிரிவில் சுவாரசியமாகவே அனுபவித்துப் பார்க்க முடிவெடுத்து விட்டார்கள் திவ்யனும், பிரஹாசினியும்.
தாங்கள் கொண்ட காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எத்தனைத் தடைகள் வந்த போதிலும் கூடத் தங்கள் காதலின் மேல் நம்பிக்கை வைத்துக் காத்திருந்ததால் அந்தத் தடைகள் யாவற்றையும் தகர்த்து எறிந்து விட்டு அதில் வெற்றிப் பெற்று விட்டோம் என்பதை இருவருமே மனதார நம்பினர்.
அவர்களது அந்தக் காதலும், காத்திருப்பும் அவர்களின் காதல் காவியம் மென்மேலும் நீண்டு கொண்டே போகட்டும் என்று திவ்யனையும், பிரஹாசினியையும் வாழ்த்தி விடைபெறுவோமாக!
- முற்றும்
வாசக சகோக்களுக்கு எனது வணக்கங்கள்...
இந்தக் கதையின் முடிவை இப்படியாக வைப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்தக் காவியம் இப்படி முற்றுப் பெறுவதையே நான் விரும்பினேன்.
அதனால் தான், திவ்யன் மற்றும் பிரஹாசினியின் திருமணம் வரைக் கதையைக் கொண்டு செல்லவில்லை. இதுவே எனக்குப் பிடித்த முடிவாகும்.
தங்களது கருத்துகளை நான் கண்டிப்பாக வரவேற்கிறேன். அது என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்று நம்புகிறேன். இதுவரை இந்தக் கதையைப் பொறுமையாகப் படித்துக் கொண்டிருந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி சகோக்களே ❣️🙏
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page