All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

39. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 53
Topic starter  

கணவன், மனைவி மற்றும் அவர்களது அருகில் வாட்டசாட்டமான பையன் ஒருவனும், திருமணமான இளம் வயது பெண் ஒருவளும் நின்றிருப்பதைக் கண்டுப் புருவம் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருக்க, 

 

அவர்களோ,“வணக்கம்ங்க” என்று கரம் கூப்பவும், அவர்களை மதிக்கும் விதமாக தானும் கரம் கூப்பி,”வணக்கம்” என்றார் உமாராணி. 

 

அவரது முகத்தில் குழப்பத்தையும், கேள்விக்குறியையும் கண்ணுற்ற சோமசுந்தரியோ,”நாங்க யாருன்னு யோசிச்சுக் குழப்பிக்க வேண்டாம்மா. எங்களை உள்ளே வர அனுமதிச்சா நாங்க யாரு, எதுக்காக வந்துருக்கோம்ன்னுப் பொறுமையாக சொல்லுவோம்” என்று அவரிடம் கூறிப் புன்னகைத்தார். 

 

அவர்களைப் பார்த்தால் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களாகத் தெரியவில்லை. ஆதலால், அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வீட்டிற்குள் வர அனுமதித்தார் உமாராணி. 

 

அப்போது தான், கடைக்குக் கிளம்பிய விருச்சிகனும், வேலைக்குத் தயாராகிய நீரஜ்ஜூம் இவர்களைப் பார்த்ததும், உமாராணியைப் பார்க்க, 

 

அவரோ,”எனக்கும் இவங்க யாருன்னுத் தெரியலை. உள்ளே வந்து சொல்றோம்ன்னு சொன்னாங்க” என்றதும், 

 

திவ்யனையும், அவனது குடும்பத்தையும் பார்த்து,”வாங்க” என்று மரியாதை நிமித்தமாக வரவேற்றார் விருச்சிகன். 

 

அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்து உபசரித்தார் உமாராணி. 

 

“இப்போதாவது நீங்க யாருன்னு சொல்லுங்களேன்?” என்றான் நீரஜ். 

 

உடனே திவ்யன் பேச வாயெடுக்கும் முன்னர், தன்னறையில் குளித்து விட்டுத் தன்னுடைய ஒப்பனைகளை முடித்துக் கொண்டு ஹாலில் பேச்சுச் சத்தம் கேட்பதை உணர்ந்து அங்கே விரைந்து சென்றவளுக்கு, அவ்விடத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து மூச்சடைத்துப் போய் நின்றாள் பிரஹாசினி. 

 

அவளுக்கு அங்கு உட்கார்ந்து இருந்த பெரியவர்களைத் தெரியாது என்றாலும், அவர்களது மகன் மற்றும் மகளை நன்றாகவே தெரியுமே! அதனால், அவர்களை ஒருவித ஆச்சரியம் நிறைந்த பார்வையுடன் ஏறிட்டாள். 

 

அதைக் கண்டு கொண்ட நீரஜ்ஜோ, தனது தாய், தந்தையைக் கண்களால் அழைத்து தங்கையின் முக பாவனைகளைப் பார்க்கச் சொன்னான். 

 

அதேபோல், பிரஹாசினியைப் பார்த்த விருச்சிகனும், உமாராணியும் அவளது விழிகள் திவ்யனைக் காதலுடன் வலம் வருவதையும், அதற்கு அவனும் எதிர்வினை புரிவதையும் கவனித்துத் திடுக்கிட்டுப் போயினர். 

 

உடனே குரலைச் செருமிக் கொண்டுத் தன் மனைவி மற்றும் மகனை அமரச் சொல்லி விட்டு,”நீயும் வந்து உட்காரும்மா” என உமாராணியின் அருகில் அமரச் சொன்னார் விருச்சிகன். 

 

அப்போது குரலைச் செருமிக் கொண்டு,”நாங்க என்ன விஷயமாக வந்துருக்கோம்ன்னா…” என்ற மகுடபதியைத் தடுத்து, 

 

“எங்கப் பொண்ணு விஷயமாகத் தானே?”என்று வினவினார் விருச்சிகன். 

 

அதைக் கேட்டதும் முகம் வியர்த்து, உடல் நடுங்கத் தொடங்கியது பிரஹாசினிக்கு. 

 

அதை உணர்ந்து அவளது கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு அவளுக்குத் தைரியம் அளித்தார் உமாராணி. அவரை நன்றியுடன் பார்த்து வைத்தாள். 

 

‘எங்க பொண்ணு’ என்று உரிமையுடன் கூறிய விருச்சிகனைப் பார்த்துப் புன்னகைத்தார்கள் அனைவரும். 

 

அந்த வார்த்தைகளில் நெகிழ்ந்து போய்க் கண்களில் நீர் துளிர்க்கத் தனது பெரியப்பாவை நன்றி உணர்வுடன் பார்த்தாள் பிரஹாசினி. 

 

“ஆமாம்ங்க. அது வந்து…” என்ற தன் அன்னையைக் கையமர்த்திய திவ்யனோ, 

 

“நானே சொல்றேன்ம்மா” என்றவனைப் பிரஹாசினியின் வீட்டாரோ கூர்மையான பார்வையுடன் நோக்கினர். 

 

முதலில் தனது குடும்ப உறுப்பினர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டுப் பிறகு தன்னுடைய காதல் தொடங்கிய இடம், அது விருட்சமாக வளர்ந்த விதம் மற்றும் அதற்குப் பிரஹாசினியின் மறுமொழி என்று தங்களுக்கு இடையில் நடந்த அனைத்தையும் அனைவரின் முன்பாகவும் விவரமாகக் கூறி முடித்தான் திவ்யன். 

 

அதைக் கேட்டதும், தான் தான், இவர்களது காதலுக்கு முதல் அச்சாரம் போட்டு வைத்திருக்கிறோம் என்பதை அறிந்து தனது தமையனை வியப்பும், அதிர்ச்சியும் ஒரு சேரப் பார்த்தாள் ஆரவி. 

 

அதேபோல் பிரஹாசினியைத் தன்னிடம் வருமாறு அழைத்து, அவளது தலையில் கை வைத்து,”உன்னை நினைச்சு எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கும்மா!” என்று அவளிடம் நெகிழ்ச்சியுடன் உரைத்தார் விருச்சிகன். 

 

அதைக் கேட்டவளுக்கோ அப்போது தான் மனம் இலேசாகியதைப் போல உணர்ந்தாள். உடனே விழிகளை உயர்த்தித் தன் பெரியப்பாவைப் பார்த்தாள் பிரஹாசினி. 

 

இதுநாள்வரை தன்னுடைய குடும்பத்திற்குத் தான் துரோகம் செய்து விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தவளோ இப்போது தனது பெரியப்பாவின் வார்த்தைகள் அதற்கான பலனைக் கொடுத்து விட்டதைப் போன்று நிம்மதி அடைந்தாள்.

 

அதேபோல் தன்னுடைய பெரியம்மா மற்றும் நீரஜ்ஜைப் பார்க்கையில் அவர்களும் கூட அந்த மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களது முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளிலேயே புரிந்து கொண்டது பிரஹாசினிக்கு.

 

“இதை இவ்வளவு வருஷமாக உன் மனசிலேயே போட்டு மருகிட்டு இருந்திருக்கியேடி! எங்ககிட்ட ஒரு தடவையாவது சொல்லி இருக்கலாம்ல? போடி!” என்று அவளைக் கடிந்து விட்டு ஆறுதலாக அணைத்துக் கொண்டார் உமாராணி. 

 

அவர்களது அந்தப் பாசப்பிணைப்பைக் கண்டு மனம் உருகிப் போனார்கள் அங்கேயிருந்த மற்றவர்கள். 

 

நீரஜ்ஜூம் கூட,”நீ இதை என்கிட்டேயாவது சொல்லி இருக்கனும் பிரஹா!” என அவளிடம் கோபித்துக் கொண்டான். 

 

“சாரிண்ணா” என்று தமையனிடம் மன்னிப்புக் கேட்டாள் பிரஹாசினி. 

 

அதைக் கண்டுத் திவ்யனும், ஆரவியும் தாங்களும் இவ்வாறு தானே நடந்து கொள்வோம் என்று ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். 

 

ஆனால் அவரவர் இடத்தில் அமர்ந்ததும்,”இந்த விஷயத்தில் எங்களோட பொண்ணை நினைச்சு எங்களுக்குப் பெருமையாக இருக்கு தான்! ஆனால் உங்க பையனைக் கல்யாணம் செய்துக்கப் பிரஹாசினிக்கு இப்போ விருப்பமான்னுத் தெரிஞ்சிக்கனும்ல?” என்று மகுடபதி மற்றும் சோமசுந்தரியிடம் கூறி விட்டுப் பெண்ணவளைப் பார்த்தார் விருச்சிகன்.

 

தங்களது காதலுக்காக இந்த நிலை வரை வந்திருந்த திவ்யனைக் கண்டவளோ அவன் தன்னிடம் யாசித்து நிற்பதைப் பார்த்துக் கலங்கி இப்போதும் கூடத் தன் காதலை வெளிப்படுத்தவில்லை என்றால் தன்னாலேயே தன்னை மன்னிக்க முடியாது என்றுணர்ந்து,”இவரைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் தான் பெரியப்பா!” என்று போட்டுடைத்து விட்டாள் பிரஹாசினி. 

 

அதைக் கேட்ட மகிழ்ச்சியில் திளைத்துப் போனான் திவ்யன். 

 

ஆரவியோ,”தாங்க்ஸ் அண்ணி!” என்று சந்தோஷக் கூச்சலிட, அவர்களது பெற்றோரின் முகங்களும் மலர்ந்து விட்டது. 

 

“எங்களுக்கு மாப்பிள்ளையைப் பத்தி எதுவுமே தெரியாதே? அவர் என்ன வேலை பார்க்கிறார்ன்ற விவரம் எல்லாம் எங்களுக்கு வேணுமேங்க? ஏன்னா, இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கன்றதுக்காக எதைப் பத்தியும் விசாரிக்காமல் உடனே கல்யாணம் செய்து வைக்க முடியாது இல்லையா?” என்று கேட்டான் நீரஜ். 

 

“நான் அதை எல்லாத்தையும் சொல்றேன்ங்க” என்றவன் தனது படிப்பு, வேலையைப் பற்றிய தகவல்களை அவனிடம் பகிர்ந்து கொண்டு,”உங்களுக்கு வேணும்னா நீங்க என் ஆஃபிஸூக்கே வந்து என்னைப் பத்தி விசாரிச்சுக்கலாம். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும் கூறி விட்டான் திவ்யன். 

 

“என் அண்ணனை மட்டும் வேண்டாம்ன்னு சொல்லிடாதீங்க ப்ளீஸ்! அவர் பிரஹா அண்ணியோட பேர் சுருக்கத்தைக் கையில் பச்சைக் குத்தி வச்சிருக்கார்! இங்கே பாருங்க” எனத் தமையனின் கரத்தை அவர்களிடம் காட்டினாள் ஆரவி. 

 

அதைப் பார்த்து இந்தளவிற்கா தங்கள் பெண்ணின் மீது இவன் காதல் கொண்டுள்ளான்? என்றெண்ணி அயர்ந்து போய் விட்டனர் பிரஹாசினியின் வீட்டார்.

 

பிரஹாசினியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? திவ்யனின் கரத்திலிருந்ததைக் கண்டுத் திகைத்துப் போனவளின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. 

 

தனது கால்கள் நிலை கொள்ளாமல் தருமாறவும் அவளைத் தாங்கிக் கொண்ட உமாராணியோ, 

 

“என்னப்பா இதெல்லாம்?” என்று திவ்யனிடம் கேட்க, 

 

அவனோ,”ஆமாம் அத்தை. எனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்ன்னு இதில் காட்ட நினைச்சேன்!” என்று கூறிப் புன்னகைத்தான். 

 

உடனே அவனது பெற்றோரைப் பார்த்து,”இவ நாங்க பெத்தப் பொண்ணு இல்லை. ஆனால் எங்க சொந்தப் பொண்ணாகத் தான் இந்த வீட்டில் வளர்க்கிறோம்!” என்று தயக்கத்துடன் கூறிய விருச்சிகனிடம், 

 

“இந்த விஷயம் எங்களுக்கு முன்னாடியே தெரியும்ங்க. பிரஹாசினியோட ஃப்ரண்ட் வினோதா இதைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாள். அதனால் எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கோம்” என்று கூறினார் சோமசுந்தரி. 

 

அதில் ஆனந்த அதிர்ச்சி அடைந்தவர்களோ தாங்களே பிரஹாசினிக்கு வரன் தேடி இருந்தாலும் கூட இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளையும், குடும்பமும் அமைந்திருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்தனர் விருச்சிகன், உமாராணி மற்றும் நீரஜ். 

 

“என்னைப் பத்தி நல்லா விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்பறமாக உங்களோட பதிலைச் சொல்லுங்க. அது போதும். ஆனால் நான் இப்போ பிரஹாகிட்டே தனியாகப் பேச அனுமதி கொடுங்க ப்ளீஸ்!” என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டான் திவ்யன். 

 

அதில் தவித்துப் போனது என்னவோ பிரஹாசினி தான். அவளுக்கு அவனைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்குச் சங்கோஜமாக இருந்தது. 

 

ஆனால் இப்படியே காலம் முழுவதும் தயங்கிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா? அதனால், தன்னிடம் பார்வையால் வினவிய தமையனிடம் சம்மதமாகத் தலையசைத்தாள். 

 

“பிரஹாவுக்கும் அவர்கிட்ட பேச, கேட்க நிறைய இருக்கும் தானே? அனுப்பி வைங்க” என்று தாய், தந்தையிடம் உரைக்க, அதற்குச் சம்மதித்து அவர்களை வீட்டின் பால்கனிக்கு அனுப்பி வைத்தார்கள் விருச்சிகனும், உமாராணியும். 

 

அங்கே போன இருவருக்குமே உடல் உதறத் தொடங்கி விட்டது.

 

ஏனெனில் இப்படித் தனியாகப் பேசும் வாய்ப்பு எப்போதும் தங்களுக்குக் கிடைத்ததே இல்லை. எப்போதும் தங்களைச் சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் என்று அவ்விருவருமே யோசித்துப் பார்த்தனர்.

 

முதலில் தனது தயக்கத்தை உடைத்துப் பேச ஆரம்பித்தது என்னவோ திவ்யன் தான்! 

 

“என் மேல் உங்களுக்கு எந்த வருத்தமும், கோபமும் இல்லையே?” என்று மிருதுவான குரலில் அவளிடம் வினவினான். 

 

“அதெல்லாம் இல்லையே? ஏன் இப்படிக் கேட்கிறீங்க?” என்றவளிடம், 

 

“நான் உங்களை இத்தனை வருஷமாகத் தவிக்க விட்டுட்டேனே! அதனால் தான் கேட்டேன்!” என்று கூறியவனைக் காதல் பொங்க பார்த்தாள் பிரஹாசினி. 

 

“என்னாச்சுங்க?”

 

“ஒன்னும் இல்லை. நான் தான் உங்களுக்குப் பதிலே சொல்லாமல் உங்களை மூனு வருஷமாக அலைய வச்சிட்டேன்! அதுக்கு நீங்க என்னை மன்னிப்பீங்களா?” என்று அவனிடம் இறைஞ்ச, 

 

அவனோ,”அப்படி மன்னிச்சதால் தான் உங்களைப் பொண்ணுக் கேட்டு வந்திருக்கேன்!” என்று குறும்புடன் உரைத்தான் திவ்யன். 

 

“ஓஹோ” என்றவளது விழிகள் தனது கரத்தில் இருக்கும் பச்சையின் மீது அலைவதைக் கண்டு,“என்னம்மா?” என்றான் கனிவாக. 

 

“நான் எப்பவும் என்னோட கல்யாணத்தைப் பத்தி யோசிச்சதே இல்லை. என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவுமே எனக்கு நல்லபடியாக மாப்பிள்ளைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைச்சிடுவாங்கன்னு நம்பிக்கை இருந்துச்சு. அதனாலேயே எனக்குக் காதல் மேலேயும் பிடிப்பு வந்ததில்லை. ஆனால் நீங்க உங்க காதலால் அந்தப் பிடிப்பை எனக்குள்ளே வர வச்சுட்டீங்க! அதே மாதிரி, நான் உங்ககிட்ட பேசத் தயங்கியதுக்குக் காரணம் உங்களோட தங்கச்சிக்கு என்னைப் பிடிக்காதுன்றதும் தான்!” என்றவளை ஆதூரமாகப் பார்த்தவன், 

 

“அது அப்போ பிரஹா. இப்போ அவளால் தான் நாம இங்கே, இப்படி நின்னுப் பேசிட்டு இருக்கோம்” என்று தன் தங்கையின் தலை தீபாவளி அன்று அவளுடனான உரையாடலைக் கூறினான் திவ்யன். 

 

“அப்படியா? அவங்க கடைசி வரைக்கும் என்னை வெறுத்துடுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன்! இதைக் கேட்டதுக்கு அப்பறம் தான் எனக்கு இன்னும் நிம்மதியாக இருக்கு” என்று ஆசுவாசத்துடன் உரைத்தாள் பிரஹாசினி. 

 

“சரி. நாம இங்கே வந்து ரொம்ப நேரமாச்சு. கீழே போகலாமா?” என்று கேட்டவளிடம்,

 

“அதுக்கு முன்னாடி உன் நம்பர் சொல்லு. இதுக்கப்புறமும் உன் கூட ஃபோனில் கூடப் பேசாமல் என்னால் இருக்க முடியாது” என்றான் திவ்யன். 

 

அதில் நாணியவள், தனது செல்பேசி எண்ணை அவனிடம் சொல்லவும் அதை அவன் சேமித்துக் கொண்டதும், இருவரும் தங்கள் குடும்பத்திடம் சென்றனர். 

 

அவர்கள் இருவருடைய முகங்களும் தெளிவாக இருப்பதைக் கண்டு இரு குடும்பங்களும் திருப்தி அடைந்தார்கள்.

 

“அப்போ நாங்க கிளம்புறோம்ங்க. நீங்க நல்லா யோசிச்சு உங்க முடிவைச் சொல்லுங்க” என்று கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினர் திவ்யனும், அவனது குடும்பத்தாரும். 

 

அவர்கள் சென்றதும்,”நீ ஏன் இதையெல்லாம் எங்ககிட்ட முன்னாடியே சொல்லல பிரஹா” என்ற பெரியப்பாவைக் கிலியுடன் பார்த்தாள் அவரது தம்பி மகள். 

 

“அவருக்குப் பதில் சொல்லுடி” என்றார் உமாராணி.

 

“எதுக்கு அவளை இப்படி அதட்டிப் பேசிட்டு இருக்கீங்க? இதில் அவ எதுவும் தப்பு செய்த மாதிரி எனக்குத் தெரியலை. ஒருவேளை உங்களுக்கு அப்படித் தோனுதா?” எனத் தங்கைக்காகப் பரிந்து பேசினான் நீரஜ். 

 

“டேய்! நீ சும்மா இரு. அவ தப்புப் பண்ணிட்டான்னு நான் உங்கிட்ட சொன்னேனா? நான் அவ கிட்டே கேட்ட கேள்விக்கு அவ தான் பதில் சொல்லனும்!” என்று தீர்க்கமாக உரைத்தார் விருச்சிகன். 

 

உடனே,”நான் இதை உங்ககிட்ட வேணும்னே மறைக்கனும்னு நினைக்கலை பெரியப்பா. நீங்க என்மேல் வச்சிருக்கிற நம்பிக்கையைக் காப்பாத்தனும்னு தான் இதை உங்க யார் கிட்டேயும் சொல்லாமல் விட்டேன். அதே மாதிரி நான் அவருக்காக காத்திருக்கிற மாதிரி அவரும் எனக்காக காத்திருப்பாரான்னு எனக்கே தெரியாமல் இருந்துச்சு. ஏன்னா அவரோட தங்கச்சிக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது! அவரோட அம்மா, அப்பாவுக்கும் அதே அபிப்பிராயம் இருந்தால் அவர் அதையெல்லாம் மீறி என்னை எப்படிக் கல்யாணம் செய்துக்குவார்ன்னு ஒரு குழப்பமும் என் மனசுக்குள்ளே இருந்துச்சு. அதான்! உங்களை மீறியும் என்னால் எதுவும் செய்ய முடியலை. அதுக்கு நான் உங்க மேலே வச்சிருக்கிற பாசம் தான் காரணம்! வேறெந்த காரணமும் இல்லை பெரியப்பா. என்னை நம்புங்க ப்ளீஸ்!” என்று அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டவளை உச்சி முகர்ந்து, 

 

“நாங்க உன்னை நம்பாமல் வேற யாரை நம்பப் போறோம்மா. நீ இதை முதல்லயே எங்ககிட்ட சொல்லியிருந்தால் இந்த ஊரும், நம்ம உறவும் மெச்சுற மாதிரி உன்னோட கல்யாணத்தை நடத்தி வச்சிருப்போமேன்னு தான் ஆதங்கப்பட்டு இப்படிக் கேட்டேன்ம்மா” என்றவரிடம் மீண்டுமொரு முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் பிரஹாசினி.

 

“அதே மாதிரி, ரமணி அத்தையைப் பத்தியும், அவங்க பசங்களைப் பத்தியும் நீ கவலையேபடாதே. நீ இப்போ மேஜர். உனக்கு யாரைக் கல்யாணம் செய்துக்க விருப்பமோ அவரைக் கட்டிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதனால் நம்ம சொந்தக்காரங்களை எல்லாம் ஒரு விஷயமாகவே எடுத்துக்காதே” என்றவன், 

 

“நான் என் வேலைக்கு லீவ் சொல்லிட்டுத் திவ்யனோட வேலையைப் பத்தியும், ஆஃபீஸைப் பத்தியும் என் ஃப்ரண்ட்ஸ் கிட்டே சொல்லி அவங்களை விசாரிக்கச் சொல்றேன்” என்று அவர்களிடம் கூறி விட்டுப் போனான் நீரஜ். 

 

“நீ போய் ரூமில் இரு. நான் போய் ஸ்வீட் செஞ்சிக் கொண்டு வரேன்” என்று பிரஹாசினியை அனுப்பி வைக்க, 

 

“நானும் இன்னைக்குக் கடைக்கு மதியம் போய்க்கிறேன்” என்று கூறி விட்டு ஹால் சோஃபாவில் அமர்ந்து விட்டார் விருச்சிகன். 

 

தன் அறைக்குச் சென்ற பிரஹாசினியின் செல்பேசி குறுந்தகவல் வந்த சமிக்ஞை ஒலி எழுப்ப அதைப் பார்த்ததும் அவளுக்குள் வெட்கப் பூக்கள் பூத்து விட்டது. 

 

அதே சமயம், இங்கே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சோமசுந்தரியோ,”நான் கூட அவங்க பெரியப்பா, பெரியம்மா கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாங்கன்னு நினைச்சேன். ஆனால் நாம யாருன்னுத் தெரியிறதுக்கு முன்னாடியே அவங்க ரொம்ப நல்லவிதமாக நடந்துக்கிட்டாங்க!” என்று மகளிடம் பூரிப்புடன் சொன்னார். 

 

“ஆமாம்மா. நானும் அவங்களோட சுபாவத்தை நினைச்சு அண்ணனை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டுத் தான் இருந்தேன். ஆனால் அவங்களும் அண்ணாவை விரும்புறேன்னு சொல்லவும் தான் எனக்கு மூச்சே வந்துச்சு” என்றாள் ஆரவி. 

 

“அந்தப் பொண்ணுக்கும் விருப்பம் இருக்கப் போய்த் தானே அட்ரஸ் அனுப்புச்சுன்னு நீயே சொன்னியே? அப்பறம் இப்படிச் சொல்ற?” எனக் கேட்டார் அவளது தாய். 

 

“ஆமாம்மா. அது உண்மை தான். ஆனாலும் எனக்கு மனசுக்குள்ளே ஒரு ஓரத்தில் அப்படியும் ஒரு பயம் இருந்துச்சு. அதான் சொன்னேன். அது இப்போ இல்லை!” என அவரிடம் விளக்கம் அளிக்க, 

 

“ஓஹ் சரி” என்று ஆசுவாசம் அடைந்தார் சோமசுந்தரி. 

 

அவர்களுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தனர் மகுடபதியும், திவ்யனும். 

 

தந்தை உறக்கத்தில் இருக்க அந்தப் பயண நேரத்தைக் கூட வீணாக்காமல் தன்னவளிடம் குறுஞ்செய்தி மூலமாகப் பேசிக் கொண்டு இருந்தான் திவ்யன். 

 

அதற்கு அவளும் பதில் அனுப்பிக் கொண்டிருக்க, அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்தில் தங்களது வீட்டை அடைந்து விட்டதாகவும், தான் பிறகுப் பேசுவதாகவும் பிரஹாசினியிடம் கூறி விட்டான். 

 

தன்னுடைய மூன்று வருட தவ வாழ்வு இப்படி ஒரே நாளில் மாறி விட்டதை எண்ணிப் பிரம்மித்துப் போனாள் பிரஹாசினி. 

 

அதேபோல் தனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் தனது குடும்பத்தாரை நினைத்துப் பெருமை அடைந்தாள். 

 

இனி எதற்கும் வருந்தத் தேவையில்லை என்ற உறுதியே அவளைத் திடமானவளாக மாற்றியது. 

 

       - தொடரும்

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 3 weeks ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page