About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
“பாரிஜாதம் இந்த சுத்தி வளைச்சு பேசுறதை விட்டுட்டு கொஞ்சம் நேருக்கு நேரா பேசிக்குவோமா? உங்களுக்கு என் கதையில் பிரச்சனையா? என் எண்ணங்களில் பிரச்சனையா? இல்ல என்கிட்ட பிரச்சனையா?” சற்று அழுத்தமாகத் தான் பேச்சை ஆரம்பித்திருந்தான் பிரகலாதன். தங்கை சொன்ன கதைஉலக அரசியல் அவனை பாரிஜாதத்தை நம்பவிடாமல் செய்தது.
“எனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கே தெரியல ரோஜா. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் எனக்கு அந்த கேரக்டருக்கு நடந்த அநியாயம் தான் மண்டைக்குள்ள ஓடுது. அதைத் தாண்டி வேற எதையும் என்னால் யோசிக்க முடியல. நானே கட்டாயப்படுத்தி வேற எதையாவது யோசிச்சா கூட அது ரொம்ப நேரம் நிலைக்க மாட்டேங்கிது.
இதைச் சொன்னா உங்களுக்குக் கோபம் வரக் கூட வாய்ப்பிருக்கு. இந்தக் கதையைப் பொறுத்தவரை நான் நினைக்கிறது சரியா, நீங்க சொன்ன கருத்து சரியாங்கிற கேள்வி வண்டு மாதிரி என்னைக் குடைஞ்சிக்கிட்டே இருந்தது.
அந்த இம்சை தாங்க முடியாம, கிட்டத்தட்ட என்னைத் தெரிந்த பலர்கிட்ட இந்தக் கதையைச் சொல்லி நம்ம இரண்டு பேரில் யார் கருத்து சரின்னு கேட்டு இருக்கேன். யார் சொல்றதும் எனக்கு மனசு நிறையல. நீங்க என் கருத்தை ஒத்துக்கிட்டாவாச்சும் என் மனசு நிறையுமாங்கிற சந்தேகத்தில் தான் மறுபடி மறுபடி உங்ககிட்ட இதைப் பத்தியே பேசினேன்.” என்க, பிரகலாதனின் கோபம் குறைந்தது. அவள் நடிக்கவில்லை என்று உறுதியானதில் சற்றே ஆனந்தம். அவளுடைய பிரச்சனையின் வீரியத்தைப் புரிந்துகொள்வதற்காக பேச்சு கொடுத்தான்.
“சாதாரண கதை தானே. அதை ஏன் இந்தளவு மனசோட நெருக்கமா நினைக்கிறீங்க. வருத்தப்பட உலகத்தில் எத்தனையோ இருக்கும் போது, இல்லாத ஒருத்தனுக்காக ஏன் வருத்தப்படணும்.” மென்மையாகவே கேட்டான்.
“சொன்னா நம்புவீங்களா தெரியல. இந்த வாசகத்தை எனக்கு நானே பலமுறை சொல்லிப் பார்த்துட்டேன். எனக்கு இதெல்லாம் புரியாம இல்ல. ஆனா என்னால் என்னைக் கண்ட்ரோல் பண்ணிக்க முடியல.
உலகத்தில் வருத்தப்பட நிறைய இருக்குன்னு நீங்க சொல்றது சரிதான். ஆனா நான் ஒட்டுமொத்தமா உங்க கதைக்குள்ள தொலைஞ்சுட்டேன். தாரைச்செடிகள் நிறைஞ்சிருக்கும் குளத்துக்குள்ள இறங்கி துரதிஷ்ட வசமா நம்ம கால் அந்த தண்டுக்குள் சுத்திக்கிட்ட பிறகு, நாம மேல வர எவ்வளவு தான் முயற்சி பண்ணாலும் அந்த தண்டுகள் நம்மை அதுக்குள்ள இழுக்கும் கேள்விப்பட்டு இருப்பீங்க தானே. அப்படித்தான் என்னோட நிலையும் ஆகிப்போச்சு. நான் என்ன தான் உங்க கதையை விட்டு வெளியே வர நினைச்சாலும் அது மறுபடியும் மறுபடிவும் என்னை உள்ளே இழுக்கிது.
கதையைப் பத்தி, அந்த கதாபாத்திரத்தைப் பத்தி நினைக்கக் கூடாதுங்கிறதோட சேர்த்து உங்களை திரும்பத் திரும்ப தொந்தரவு பண்ணக்கூடாதுன்னும் எனக்கு நானே சொல்லிக்கிறேன். பல தரப்பட்ட கட்டுப்பாட்டை போட்டுக்கிறேன். ஆனால் என்னால் அந்த கட்டுப்பாட்டை காப்பாத்த முடியல.
கற்பனையா இருந்தாக் கூட எப்படி இப்படி நடக்கலாம். எப்படி ரைட்டர் இப்படி எழுதலாம் னு திரும்பத் திரும்ப அதையே யோசிக்க வைக்கிது மூளை. என்ன பண்றதுன்னு தெரியாம கஷ்டமா இருக்கு.” என்று பதில் அனுப்பி இருந்தாள் பாரிஜாதம்.
பாரிஜாதத்தின் பிரச்சனை என்ன என்று தெளிவாகத் தெரியாமல் போனாலும் அது நிச்சயமாக சாதாரண பிரச்சனை இல்லை என்கிற முடிவுக்கு வந்தான் பிரகலாதன். அதை அவளிடம் நேரடியாகச் சொல்ல தயக்கமாக இருந்தது அவனுக்கு. அதனால் முடிந்தவரை பேச்சு கொடுத்து பார்க்கலாம் என்கிற நினைப்பில், “என் கதைக்கு மட்டும் தான் இப்படி தோணுதா? இல்ல வேற கதைக்கும் வருத்தப்பட்டு இருக்கீங்களா?” சிரமப்பட்டு தங்கையைப் போலவே பேசினான்.
“வருத்தம் நிறைய கதைகளுக்கு வந்திருக்கு தான். ஆனா இந்தக் கதை அளவு வேற எந்தக் கதையும் எனக்கு மனசை பாதிக்கல. மேபி இதுக்கு அப்புறம் படிக்கும் கதைகள் அப்படி மனசைப் பாதிக்குமோ என்னவோ.” என்றாள்.
“கதை தான் உங்களைப் பாதிக்குதே. அப்புறம் எதுக்காக அதைப் படிச்சுக்கிட்டு வேற ஏதாவது செய்து பொழுதைப் போக்கலாமே.” அவன் என்னவோ சாதாரணமாகத் தான் கேட்டான்.
“அட நீங்க வேற, கதையைப் படிக்காம விட்டா என்னைத் தொரத்துற மத்த சொந்த சிந்தனைகளில் இருந்து நான் எப்படித் தப்பிக்கிறதாம். கதைகள் படிக்கிறது தான் எனக்கு ஆறுதல்.” என்றாள்.
“ஆறுதலுக்கு படிக்கிற கதைகளால் தான் ஆறுதலை இழந்துட்டு தவிக்கிறீங்க புரியுதா?” என்க, “கதை படிக்கிறப்ப வரும் கஷ்டத்தை விட கதைகள் படிக்காமல் இருக்கும் போது வரும் கஷ்டம் ரொம்ப அதிகம். தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசு மேல் னு சொல்லுவாங்க இல்லையா? எனக்கு அது பக்காவாப் பொருந்தும்.” என்க, பிரகலாதனுக்கு பாரியின் பிரச்சனை பற்றிய யூகம் பிடிபட்டது.
“காதலன் கேரக்டருக்காக நீங்க இந்தளவு வருத்தப்படுறீங்களே. காதல் மேல உங்களுக்கு அத்தனை ஈடுபாடா? காதலிச்சவங்க பிரிவதை உங்களால் ஏத்துக்க முடியலையா?” என்று அடுத்த கேள்விக்குத் தாவினான். காதல் தோல்வியில் மனது பாதிக்கப்பட்டு விட்டதோ என்று நினைத்தான்.
“உலகத்தில் கோடான கோடி பேர் காதலிக்கிறாங்க. அத்தனை பேரும் சேர்ந்தே ஆகனும் னு எப்படி எதிர்பார்க்க முடியும். எனக்கு என்னென்னா உண்மையான காதல் தோத்தாலும் பரவாயில்லை அசிங்கப்படக்கூடாது.” என்றாள். பிரகலாதனுக்கு பாரியின் இந்த வார்த்தைகள் பிடித்தது.
தங்கையைப் போல் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து, “எனக்கும் காதல் மேல நிறைய மரியாதை இருக்கு.” என்று உளறினான்.
“மரியாதை இருக்கிறவங்க தான் இப்படியான கதைகள் எழுதுவாங்களா? நீங்க உங்க கதையில் என்ன பண்ணி வைச்சிருக்கீங்கன்னு உங்களுக்குப் புரியுதா, புரியலையா?” கோபமாக அவள் செய்தி அனுப்ப, “என்னோட தப்பு என்னன்னு சொல்லுங்க. அடுத்தடுத்த கதைகளில் திருத்திக்கிறேன்.” என்று இறங்கி வந்தான்.
மனநிலையில் சமநிலையில் இல்லாதவர்களை கோபப்படுத்தாமல் முடிந்தவரை அவர்கள் மனதில் இருப்பதை பேசவிட்டாலே பாதி பிரச்சனை சரியாகிவிடும் என்பதால் இப்படிச் சொன்னான்.
“ஹீரோயின் தான் காதலிச்சவனை விட்டுட்டு ஹீரோவைக் கல்யாணம் பண்ணது சரிதான்னு காட்டுறதுக்காக நீங்க காட்டிய காரணங்கள் இருக்கே அப்பப்பா?” சற்றே காட்டமாக மின்னஞ்சல் வந்து குதித்தது பாரியிடம் இருந்து.
“அப்படி என்னம்மா பண்ணேன் நான்.” பாவம் போல் கேட்டான் பிரகலாதன். நிஜமாகவே அவனுக்குத் தெரியாது என்பது தான் அங்கே வேதனை.
“என்ன பண்ணல நீங்க. ஹீரோயின் ஒரு தியாகச் செம்மல் தன்னை மதிக்காத குடும்பமா இருந்தாக் கூட அவங்களுக்காக என்ன வேண்ணா செய்வா. யாரை வேண்ணா விட்டுக்கொடுப்பா. அவங்களோட பணத்தேவைக்காக தப்புன்னு தெரிஞ்சாலும் எந்தக் காரியத்தையும் செய்வா. அவ குடும்பத்து ஆள்கள் கழுவி கழுவி ஊத்தினாலும் பொறுத்துக்கிட்டு சிகரமா இருப்பா.
அதுவே அவ கஷ்டத்தைப் பார்த்து தாங்கிக்க முடியாம காதலன் உதவி செய்ய வந்தா சுயமரியாதை பொங்கி எழுந்து எனக்கு உதவி செய்ய நீ யாருன்னு கேட்பா.
என் உறவுகளுக்காக நான் என்னவும் செய்வேன். நீ எதுக்காக எனக்கு உதவிக்கு வரணும் னு கேட்டா அந்த இடத்தில் அவ அந்தக் காதலனை தன்னோட உறவா, தன் குடும்பத்து ஆள்கள் அளவுக்கு உயர்வா நினைக்கலன்னு தானே அர்த்தம்.” என்க, பதில் சொல்ல முடியவில்லை பிரகலாதனால்.
“அது மட்டுமா? ஹீரோயினை சுயமரியாதைக் காரியா, தன்னம்பிக்கை அதிகம் உள்ளவளா காட்டுறேன்னு என்ன பண்ணி வைச்சிருக்கீங்க நீங்க.” பாரி கேட்க, “இந்த ரோஜா இதில் என்ன பண்ணி வைச்சிருக்காளோ தெரியலையே.” என்ற நினைப்போடு மேற்கொண்டு படித்துப் பார்த்தான் பிரகலாதன்.
“ஹீரோயின், அவளோட சொந்தக் குடும்பத்து ஆள்கள் எத்தனை தப்பு செய்தாலும், எத்தனை முறை அவளைப் புரிஞ்சுக்காம பேசினாலும் பொறுத்துப் போவா, மன்னிச்சு மறந்து போவா.
ஆனா காதலனோ, கணவனோ தவறு செஞ்சா மன்னிக்கவோ மறக்கவோ முடியலன்னு காட்டுறது தான் சுயமரியாதையா?
இதுக்குப் பொண்ணுக்கு பிறந்த வீடு தான் பெருசு. புகுந்த வீடும், புருஷனும் ஒன்னுமே இல்லன்னு நேரடியா சொல்லிட்டு போயிடலாமே.” என்று காட்டமாக கேட்க, யாரும்மா நீ என்பது போல் நினைத்தான் பிரகலாதன்.
“நீங்கன்னு இல்ல, பலர் இப்படித்தான் பண்றாங்க. இப்ப வரும் பெரும்பாலான கதைகள் பெண்ணியம் பேசுறதா தான் இருக்கு. அது எனக்கு சந்தோஷம் தான்.
ஆனா எது நிஜமான பெண்ணியம் என்பதில் அவங்களுக்கு சரியான புரிதல் இருக்கா என்பதில் தான் எனக்கு பயங்கர ஆதங்கம்.
எதெல்லாம் தவறுன்னு காலங்காலமா பெண்கள் போராடினாங்களோ அது இந்த கதைஉலகத்தில் சரின்னு விவாவதிக்கப்படுவதில் என்ன நியாயம் இருக்குன்னு எனக்குப் புரியல.
ஒரு ஆண், பெண்ணைச் சந்தேகப்பட்டா அந்த நிமிஷமே அவன் அவளோட வாழும் தகுதியை இழந்துடுறான்னு நம்பும் நபர், ராமாயணத்தில் தன்னை விட்டுப் பிரிந்து பத்து மாதங்கள் தனியா இருந்த சீதையை அக்னிபிரவேசம் செய்யச் சொன்ன ராமர் இதிகாச நாயகனா போற்றப்படுவதற்கு தகுதியே இல்லாதவர், அவரும் தான் சீதையை விட்டு பிரிந்து இருந்தார், அவர் ஏன் தன்னோட கற்பை நிரூபிக்க தீக்குளிக்கலன்னு கேட்கும் அளவு அறிவு உள்ள ஆள், மனைவி மேல உண்மையான காதல் இருந்தா புருஷனுக்குச் சந்தேகம் வந்திருக்காதுன்னு சொல்லும் புத்திமான், இன்னொரு கதையில் ஒரு பொண்ணு தன்னோட புருஷனைச் சந்தேகப்படும் போது அப்படியே மாத்தி எழுதுறாங்க.” என்க, பிரகலாதனுக்கு ஆர்வம் வந்தது பாரிஜாதத்தின் பேச்சில்.
“சம்பந்தப்பட்ட பொண்ணு அதாவது புருஷனைச் சந்தேப்பட்ட பொண்ணு தான் பாவமாம். அவ அவனை முழுசா நம்புற அளவுக்கு அவன் நடந்துக்கலையாம். அவளுக்குத் தேவையான நம்பிக்கையைக் கொடுக்கலையாம்.
ஆரோக்கியமான சூழ்நிலையை அவன் உருவாக்கிக்கொடுக்காததால் தான் அவ அவனைச் சந்தேகப்பட்டாளாம். அப்படி இப்படின்னு நாலு வரிகளைப் போட்டு அவ சந்தேகப்பட்டதை தப்பே இல்லங்கிற மாதிரி காட்டுறாங்க.
சந்தேகப்படுவது தப்பில்லை, சந்தேகப்படுற மாதிரி சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தது தான் தப்புன்னா, ஆண் பெண்ணைச் சந்தேகப்பட்டதும் தப்பில்லைன்னு சொல்ல வேண்டியது தானே.” என்க, “அட” என்று வியந்தான் பிரகலாதன்.
“நீங்க சொல்ற விதத்தில் நான் இதுவரை யோசிச்சது இல்லை.” என்று சொல்லி அவளை மேலும் ஊக்குவித்தான். ஏனோ அவள் எண்ணங்கள் முழுவதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
“இது மட்டுமா? இன்னும் என்னென்ன கொடுமை நடக்கிது தெரியுமா? முன்னாடியெல்லாம் வேலை நடக்கும் இடத்தில் இருக்கும் பிரச்சனையை நினைச்சு வீட்டில் இருக்கும் ஆள் மேல் கோபப்படும் ஆம்பிளைங்களை தப்பு சொல்லிக்கிட்டு இருந்தோம். இப்ப அதையே பொண்ணுங்க பண்றாங்க. கேட்டா மூட் சுவிங். அந்த நேரம் பொண்ணுங்களோட மனசைப் புரிஞ்சுக்கிட்டு புருஷன் தான் விட்டுக்கொடுத்துப் போகணும் னு சொல்றாங்க.
கோபம், எரிச்சல் இயற்கை உணர்வு. யாருக்கு யார் மேல் வேண்ணா எப்ப வேண்ணா வரலாம். ஆணுக்கு வந்தா பெண் பொறுத்துப் போகனும். பெண்ணுக்கு வந்தா ஆண் பொறுத்துப் போகனும்.
அதை விட்டுட்டு பெண்ணுக்கு இயற்கையா நடக்கிது. தன்னையும் மீறி அப்படி நடந்துக்கிறாங்க. ஆண்கள் கொழுப்பெடுத்துப் போய் அப்படி செய்யுறாங்கன்னு சொல்றது எந்த வகையில் நியாயம் னு தெரியல.
பொண்ணுங்களை தன்னம்பிக்கை, தைரியம், சுயமரியாதை கொண்டவளா காட்டுறேன்னு அதிகமா வாய் பேச வைக்கிறது. எந்த இடத்தில் யார் கிட்ட பேசுறோம் என்கிற விவரம் இல்லாம சட்டுன்னு கை நீட்ட வைக்கிறது. குருட்டு தைரியத்தோட வேலைகளை பார்க்க வைக்கிறதுன்னு எல்லாம் தப்பு தப்பான உதாரணங்கள் தான் முன்வைக்கப்படுது.
அக்காவைப் பொண்ணு பார்த்துட்டு தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி வரும் கதைகளில், இது அக்காவுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கை தானேன்னு நினைச்சு நினைச்சு தானும் வாழாம புருஷனையும் வாழவிடாம பைத்தியக்காரத்தனமா நடந்துக்கும் ஹீரோயினை பாவம் மாதிரி காட்டுவாங்க பாருங்க, எனக்கு கையில் கிடைக்கும் எதையாவது தூக்கி அடிக்கலாமான்னு இருக்கும். நிறைய பொண்ணுங்க கிட்ட இருந்தாலும் தப்பான குணம் சரின்னு ஆகிடாதே.” என்க, பிரகலாதனுக்கு சிரிப்பு வந்தது.
“படத்தில் செம்மரம் கடத்துறவன், கொலை கொள்ளை பண்ணிட்டு அம்மா சென்ட்டிமெண்ட் பேசுறவன் எல்லாம் ஹீரோவான மாதிரி கதையுலகமும் ரொம்ப முன்னேறி இருக்கு.
முன்னாடியெல்லாம் எப்ப பார்த்தாலும் பாலியல் ஆசையில் இருக்கிறவனை வில்லன்னு சொல்லுவோம். இப்பெல்லாம் அவன் தான் ஹீரோ. நாற்பது பக்கம் கதை படிச்சா அதில் நாலு பெட்ரூம் சீன்.” பாரிஜாதத்தின் வார்த்தைகளைப் படித்த பின்னர், இதே வார்த்தைகளைச் சொல்லி தங்கை வருந்தியதும் தான் பயந்ததும் நினைவு வந்தது பிரகலாதனுக்கு.
“அறுசுவை உணவில் உவர்ப்பும் ஒரு சுவையா இருக்கிற மாதிரி, மனித வாழ்க்கையில் காமமும் ஒரு அங்கம். ஆனா அது மட்டும் தான் விஷயமேன்னு பலர் எழுதுறாங்க.”
“இன்னொரு டைப் எழுத்தாளர்கள் இருக்காங்க. ஒரு விஷயத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும் தான். அதைப் பெருசா தப்புன்னு சொல்லிட முடியாது.
ஆனா ஒரு விஷயத்தில் ஒரு கருத்தை தப்புன்னு முன்வைக்கும் நபர், இன்னொரு விஷயத்தில் அந்த கருத்து சரின்னு காட்டுறது சரிதானா?” என்க, பிரகலாதனுக்கு இந்த விஷயம் புரியவில்லை.
“உதாரணம் சொல்றேன் கேளுங்க. இப்ப ஒரு ரைட்டருக்கு காதலில் நம்பிக்கை இல்லைன்னு வைச்சுக்கோங்க. அவங்க என்ன பண்ணனும் காதல் எல்லாம் விஷயமே இல்லை. பெத்தவங்க பார்த்து வைக்கும் கல்யாணம் தான்நல்லது. இல்ல கல்யாணம் பண்ணிக்காமல் இருப்பது நல்லதுன்னு எழுதனும்.
ஆனால் அவங்க என்ன செய்வாங்க தெரியுமா? சுத்தி இருக்கும் எல்லோருடைய காதலும் கேவலமானது. ஹீரோ ஹீரோயின் காதல் மட்டும் புனிதத்தின் உச்சம் னு எழுதுவாங்க. இது பாரபட்சம் இல்லாம அநியாயம் இல்லாம வேற என்ன.” என்க, பதில் இல்லை பிரகலாதனிடம்.
“ஹீரோயினுக்கும் வேற ஒருத்தருக்கும் கல்யாணம் ஏற்பாடாகி இருக்கும். கடைசி நேரத்தில் ஏதோ ஒன்னு நடந்து ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்யாணம் நடந்திடும். இந்த இடத்தில் சம்பந்தப்பட்ட மாப்பிள்ளைக்கு ஹீரோ தான் வில்லன். ஆனா ரைட்டர் என்ன பண்ணிடுவாங்க அந்த மாப்பிள்ளையை வில்லனாக்கிடுவாங்க.” என்க, சிரிப்பு வந்துவிட்டது பிரகலாதனுக்கு.
எல்லாத்தையும் விட கொடுமை என்ன தெரியுமா? கெத்தா இருந்தா தான் ஹீரோன்னு ஒரு பிம்பத்தை உருவாக்கி வைச்சிருக்காங்க. தப்பே பண்ணாலும் அவன் ஹீரோயினைத் தவிர வேற யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்கக் கூடாதாம். அப்படி ஒருவேளை கேட்டுட்டா தலையில் இருக்கும் கீரிடம் இறங்கிடுமாம். ஹீரோ தப்பான கருத்து சொன்னாலும் கதையோட போக்கில் அந்தக் கருத்து தான் சரின்னு காட்டுவாங்க. அதெல்லாம் கொடூரத்தின் உச்சம்.
ஹீரோ, ஹீரோயினை யாராவது ஒன்சைடா லவ் பண்ணா அவ்ளோ தான். அது எவ்ளோ அழகான லவ்வா இருந்தாலும் அவங்க லவ்வை எவ்ளோ அசிங்கமா காட்ட முடியுமோ அத்தனை கேவலமா காட்டுவாங்க.” என்க, பிரகலாதனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
“அடுத்தவங்களுக்காக தன் சொந்த சந்தோஷத்தை விட்டுக்கொடுக்கும் தியாக மனப்பான்மை உள்ளவங்களை நாயகன், நாயகின்னு காட்டி கதை எழுதிய காலகட்டம் மறைஞ்சு போய், மத்தவங்களுக்காக தன் சொந்த சந்தோஷத்தை விட்டுக்கொடுக்கத் தேவையில்லைன்னு நினைக்கும் நாயகன், நாயகின்னு களம் மாறினப்ப அது ஒரு நல்ல சமூக மாற்றமா இருந்தது.
ஆனா இன்னைய காலகட்டத்தில் தான் சந்தோஷமாக இருக்க அடுத்தவங்களை என்ன வேண்ணா செய்யலாம் னு நினைக்கிறவங்களை நாயகன், நாயகியாக வைச்சு கதை எழுதறாங்க.
ஆன்ட்டி ஹீரோன்னு ஒரு பெயரை வைச்சிட்டா போதும் அவன் என்ன வேண்ணா செஞ்சுக்கலாம் னு காட்டுறாங்க சிலர்.
ஹீரோவுக்கும், ஆன்ட்டி ஹீரோவுக்கும் பெருசா வித்தியாசம் கிடையாது. ஹீரோங்கிறவன் தனக்காக யோசிக்கும் அளவு தன்னைச் சார்ந்த எல்லோருக்கும் சேர்த்து யோசிப்பான். குற்றம் செய்வது தப்புன்னு நினைக்கிறவன். அப்படியே செஞ்சாக் கூட அதை ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்கிறவன்.
இதுவே ஆன்ட்டி ஹீரோங்கிறவன் சின்னச் சின்ன குறைகள் இருக்கிறவன். அதாவது கதாநாயகனுக்குண்டான நேர்மறை குணங்களில் இருந்து கொஞ்சம் விடுபட்டு, சிந்தனையில் மாறுபாட்டோட இருக்கிறவன்.
தன்னைப் பத்தி மட்டும் அதிகமா யோசிக்கிறவன். விட்டுக்கொடுத்து போகத் தெரியாதவன். தன் கொள்கையே சரின்னு இருக்கிறவன். தன்னோட சந்தோஷத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனுஷனைத் தான் ஆன்ட்டி ஹீரோன்னு சொல்வாங்க.
ஆனா இங்க அப்படியா பண்றாங்க. பொண்டாட்டியை அடிச்சு சித்திரவதை பண்றவன், பொண்ணைக் கடத்திட்டு போய் அடைச்சு வைச்சு காதல் பாடம் எடுக்கிறவன். யார் மீதோ இருக்கும் கோபத்தை கைக்கு வாகா சிக்கின பொண்ணு மேல காட்டுறவன். ரேப் பண்றவன்னு எல்லோருக்கும் ஆன்ட்டி ஹீரோன்னு பெயர் கொடுக்கிறாங்க.
தெரிஞ்சே அடுத்தவங்களோட அழுகைக்குக் காரணமான எவனும் எவளும் ஹீரோ, ஹீரோயின் ஆக முடியாதுன்னு ஏன் பலருக்குப் புரிய மாட்டேங்கிதுன்னு தெரியல.” என்ற பாரியின் வார்த்தைகளில் இருப்பது கட்டுக்கடங்காத கோபம் என்று பிரகலாதனுக்கு நன்றாகவே புரிந்தது.
இம்மாதிரியான விஷயங்களில் கோபத்தை உடனுக்குடன் வெளிப்படுத்த முடியாமல் தன்னுள் அடக்கியே வைத்திருந்து, வேறு ஏதோ ஒரு விஷயத்தில் மொத்த கோபமும் தூண்டப்பட்டதால் அணை உடைத்த வெள்ளம் போல் மொத்தமாகப் பொங்கி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டான்.
தான் யார் என்பதைச் சொல்லி தன்னிடம் அவளை கவுன்சிலிங் அழைக்கலாமா என்று யோசித்தவன் அதை எப்படிச் செயலாற்றுவது என்கிற குழப்பத்தில் இருக்கும் போது தன்னால் சில விஷயங்களைப் பேசினாள் பாரிஜாதம்.
“ரொம்ப பேசுறேன் இல்ல. எனக்குப் புரியாம இல்ல. ஆனா என்னோட கண்ட்ரோலை மீறி இது எல்லாம் நடக்கிது. இனி குறைச்சுக்கிறேன். தெரிஞ்சோ தெரியாமலோ புரிஞ்சோ புரியாமலோ உங்களை கொஞ்சம் அதிகமாவே வருத்தப்படுத்திட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க. முடிந்தவரை இனி உங்களை கான்டேக்ட் பண்ணாம இருக்கேன்.” வருத்தமாய் மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள்.
“நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனையா?” கேட்டுவிட்டு பதில் வருமா வராதா என்னும் நினைப்போடு நகத்தை கடிக்க ஆரம்பித்தான் பிரகலாதன்.
“ஆமா ரோஜா, கொஞ்சம் பிரச்சனை தான். அதில் இருந்து தப்பிக்க தான் நான் கதைகள் பக்கம் முழுசா வந்தேன். நான் ஏன் பாரபட்சத்தைப் பார்த்து இந்தளவு கோபப்படுறேன்னு கேட்டீங்க தானே.
பெத்தெடுத்த அம்மா பாரபட்சம் பார்த்தா ஒரு பொண்ணோட வாழ்க்கை எந்தளவு சிதைஞ்சு போகும் என்பதற்கு என்னோட தற்போதைய நிலைமை தான் உதாரணம். அதனால் தானோ என்னவோ சின்ன பாரபட்சத்தைக் கூட என்னால் தாங்கிக்க முடியல.” என்று பதில் அனுப்பி இருந்தாள்.
மிகவும் தனிமையில் இருக்கிறாள் போல. கூடவே மிகவும் பலவீனமாகவும் இருக்கிறாள். அதனால் தான் கேட்கப்பட்ட சின்ன கேள்விக்கு தனிப்பட்ட பதிலை அதிகமாகக் கொடுக்கிறாள். இன்னும் கொஞ்சம் பேச்சுக்கொடுத்தால் அவளுக்கு என்ன நடந்தது, அவள் வீட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என அனைத்தையும் சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் இருக்கும் இவளைக் கண்டுகொள்ளாமல் அவள் வீட்டு மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான பெண்களை தன் வலையில் வீழ்த்துவதற்காக எத்தனை எத்தனை ஆண்கள் இணைதளத்தில் காத்திருக்கிறார்கள். அவர்கள் யாரிடமும் இவள் சிக்கிக்கொள்ளக் கூடாது கடவுளே என்னும் நினைப்போடு,
“கஷ்டம், கவலை எல்லோருக்கும் இருக்கும் தான் பாரிஜாதம். முடிந்தவரை சமாளிக்கப் பார்க்கணும். தனியா சமாளிக்க முடியலையா நம்பிக்கையான நபர்கிட்ட மனபாரம் எல்லாத்தையும் இறக்கி வைக்கணும். அதுக்கும் வழி இல்லையா மனநல மருத்துவர்களை அணுகலாம்.” சற்று தயங்கிக்கொண்டே யோசனை சொன்னான் பிரகலாதன்.
“எனக்கு கூட அந்த யோசனை இருக்கு ரோஜா. அவங்க ரெக்கமெண்ட் பண்ணா தூக்க மாத்திரை கிடைக்கும் தானே.” என்க இவனுக்குப் பக்கென்று இருந்தது.
“தூக்க மாத்திரை எதுக்கு?” என்க, “தூக்க மாத்திரை எதுக்குக் கேட்பாங்க, தூங்குறதுக்கு தான். நான் மூணு மணி நேரத்துக்கு மேல தூங்கி மூணு மாசத்துக்கு மேல ஆச்சு. ஒருவேளை நடந்த எல்லாத்தையும் மறந்து நான் நல்ல தூங்கி எழுந்தா இந்த மாதிரி கற்பனை கதாபாத்திரத்துக்கு எல்லாம் வருத்தப்படாம அழாம இருப்பேனோ என்னவோ.” அவள் என்னவோ சாதாரணமாகச் சொல்ல, கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு நினைத்ததை விட இவளுக்குப் பெரிய பிரச்சனையோ என்கிற பயம் வளர்ந்துகொண்டே இருந்தது.
“கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அப்படி என்ன பிரச்சனை.” என்று கேட்டுவிட, யாரிடம் தன் மனவலியை இறக்கி வைப்பது என்று துடித்துக்கொண்டிருந்தாளோ என்னவோ ஆதி முதல் அந்தமாய் அனைத்தையும் சொல்லி முடித்தாள் பாரி.
பிரகலாதனுக்கு அவள் நிலை கண்ணாடியைப் போல் தெளிவானது. கூடவே அவளுக்கான சிகிச்சை உடனடியாக கொடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் புரிந்தது. ஆனால் சிகிச்சைக்காக அவளை எப்படி அணுகுவது என்று தான் தெரியவில்லை.
முதலில் மின்னஞ்சலில் இருந்து வேறு எதற்காவது தங்கள் தொடர்பை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் முகநூல் பக்கத்தில் தொடர்பு அழைப்பு அனுப்புவதற்காக அவள் முழுப்பெயரைக் கேட்டான். அதன்பிறகே அவள் தன்னை தன் தங்கை என நினைத்து பேசுவது புரிந்தது. புலனத்தின் எண்ணைக் கேட்பது அநாகரிகம் என்று புரிய என்ன செய்வது என்று யோசித்தான்.
பின் முகநூலில் அவளின் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசலாம் என நினைத்திருக்க அடுத்த சில நாள்கள் பாரிஜாதத்திடம் இருந்து மின்னஞ்சலோ இல்லை முகநூல் அழைப்போ எதுவும் வரவில்லை.
அவளுக்கு என்னவாயிற்று பேசியவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவு கோழையைப் போல் தெரியவில்லை என்றாலும் மனது மிகவும் பலவீனப்பட்டு கிடக்கும் நேரத்தில் என்ன செய்கிறாளோ என்று அநேகம் பதறினான் பிரகலாதன்.
மூன்று நாள் கழித்து நான்காம் நாள் பாரிஜாதத்திடம் இருந்து அவளுடைய செல்போன் எண்ணைக் கொண்டு மின்னஞ்சல் வந்திருந்தது. அதைக் கண்டதும் வேறு எதுவும் பேசாமல் தன் புலனத்தின் கணக்கில் இருந்து அவளைத் தொடர்பு கொண்டான் பிரகலாதன்.
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Manjula Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page