About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
காலம் தாண்டிய பயணம் 12
பூவிழியை அணைத்துக்கொண்ட கரத்துக்குச் சொந்தக்காரனோ "ரசகுல்லா பண்ணி தரேன்னு சொல்லிட்டு, பண்ணித் தரவே இல்லைல நீ... அன்னைல இருந்து நான் ஸ்வீட் சாப்பிடுறதையே விட்டுட்டேன் தெரியுமா?" என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசிக்கொண்டிருந்தான்.
முதலில் புரியாமல் விழித்த பூவிழியோ நொடியில் அவனைக் கீழே தள்ளி விட்டவள் "யார் நீ? என்ன தைரியம் இருந்தால் என்னை அணைத்திருப்பாய் உன் சிரத்தைக் கொய்து பைரவனுக்கு காணிக்கை ஆக்குகிறேன் பார்" என்றவள் இடையில் இருந்த குருவாளை அவனை நோக்கி ஓங்க, அவள் கரமோ காற்றில் உறைந்திருந்தது.
கரத்தை அசைக்க முடியவில்லை அவளால்...
அவளை நெருங்கிய வான்மீகியோ "தாயே பொறுமை, அவன் பூவிழியான உன்னை அணைக்கவில்லை மகளே... அவனது தாயான உன்னையே அணைத்திருக்கிறான்" என்க, பூவிழியின் புருவங்கள் சுருங்க அவரையே பார்த்திருந்தாள்.
அவரோ "ஆம் மகளே உன் அடுத்த பிறவியில் உன் மகன் இவன், அவனது சிறுபராயத்தில் உன்னை இழந்து தவித்தவன், இங்கே உன்னைக் கண்டதும் உணர்வு பெருக்குடன் அணைத்துவிட்டான்" என்று விளக்கியவரோ அவளது கரத்தை மந்திரக் கட்டிலிருந்து விடுவிக்க, குருவாளை இறக்கிய பூவிழியோ கீழே விழுந்து கிடந்த மகிழை முறைத்தபடி தமையன் அருகில் சென்று நின்று கொண்டாள்.
மகிழின் பார்வை அப்போதும் அவளிடமே இருக்க, அதனை உணர்த்தவளோ திரும்பி முறைத்தாள்.
அதில் மகிழோ சட்டெனப் பார்வையை மாற்றிக்கொள்ள, அதனைப் பார்த்திருந்த இனியாவிற்கு இறுக்கம் கலைந்து ஒரு புன்னகை தோன்றியது.
அது மகிழின் கண்களில் இருந்தும் தப்பவில்லை...
கண்களாலேயே அவளை மிரட்டியவன் எழுந்து அவளருகே அமைதியாக நின்றுகொண்டான்.
அடுத்தது ஒவ்வொருவராய் வான்மீகியிடம் சந்தேகம் கேட்க, அவர் சொல்ல என்று நேரம் கடக்க, மாலை ஆனதும், மார்த்தாண்டனின் இடத்துக்குச் செல்ல, ஆண்கள் அனைவரும் தயாராக, இனியாவை அழைத்துச் செல்வது ஆபத்து எனக் கோயிலிலே விட்டுச் செல்வதாகவும் காவலுக்கு பூவிழி இருப்பதாகவும் திட்டம் இருந்தது.
வான்மீகி எதையோ எண்ணியவராக, மகிழையும் அங்கேயே இருக்கப்பணிக்க, 'ஏன்' என்ற கேள்வியுடன் அவரைப் பார்த்தான் அவன்...
"எதற்கும் ஒரு காரணம் இருக்கும் மகனே நீ இங்கேயே இருப்பது தான் உனக்கும் நல்லது உன்னவர்களுக்கும் நல்லது" என்றதுடன் அவர் பேச்சை முடித்துக் கொள்ள, மித்ரனோ மகிழை பார்த்துக் கண்களை மூடித்ததிறந்தான்.
அடுத்து அவர்கள் நால்வர் பயணமும் அந்தக் காட்டை நோக்கித் தொடங்கியது...
அடுத்து நேரம் யாருக்கும் காத்திராமல் நகர்ந்து இருள் நெருங்கி இருந்தது.
இப்போது அந்தப் பைரவன் கோயிலில் இனியாவும் அவளுக்குப் பாதுக்காப்பிற்காக மகிழும் தான் இருந்தனர்.
மக்களும் அந்த நேரத்தில் வெளியே வரமாட்டார்கள் என்பதால் மயான அமைதி நிலவ, அதுவே இனியாவுக்கு தனி பயத்தைக் கொடுத்தது.
அவள் கண்ணில் படும் தூரத்தில் சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த மகிழ், அவளது பயத்தை உணர்ந்து அருகில் சென்று சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்.
அடுத்து கடந்த சில வினாடிகள் மௌனமாகவே கடக்க, இனியா பேச்சை ஆரம்பித்தாள்.
"நிஜமாவே காணாம போனது அத்தை தானா?" என்று கேட்டாள்.
அவனோ "ம்ம்ம்ம், யாழினிமா தான். அப்பா கூடச் சேர்ந்து வாழலாம்னு வந்தவங்களத் தான் இங்க கூட்டிட்டு வந்துட்டான் அந்த மார்த்தாண்டன்" என்றான்.
இனியாவோ "என்னால நம்பவே முடியல, காலம் விட்டுக் காலம் வந்து இத்தனை நடந்திருக்கு... சின்ன வயசுல இருந்தே அத்தை ஓடிப்போட்டாங்க இவளும் அப்படியே போய்டுவானு ஆளாளுக்குப் பேசுவாங்க. அப்போ எல்லாம் இப்படிப்பட்டவங்க மத்தில இல்லாம அத்தை எங்கயோ சந்தோசமா இருகாங்க அதுவே போதும்னு நினைச்சி நான் நிம்மதியாத் தான் உணர்ந்தேன் ஆனா இப்போ அவங்க கஷ்டப்படுறாங்கனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு" என்றவளது கண்ணில் கண்ணீர்.
மகிழோ "பீல் பண்ணாத ஸ்பைசி, சீக்கிரமே அவங்கள இங்க இருந்து பத்திரமா கூட்டிட்டு போய்டலாம். அப்பா அவங்கள சந்தோசமா வெச்சிக்குவாங்க" என்றான் சமாதானமாக...
கண்களைத் துடைத்துக் கொண்டவளோ "ம்ம்ம்ம் நிச்சயமா மாமா நல்லா பாத்துக்குவாங்க, அத்தை ரொம்ப லக்கி, மாமா மாதிரி புருஷன் கிடைக்கிறது எல்லாம் வரம்… யாருன்னே தெரியாத என்னையே அவ்வளவு நல்லா பாத்துகிட்டாங்க" என்றாள் உணர்ந்து.
அவனுக்கோ இப்படி சொல்பவளை 'நானும் லக்கி' எனச் சொல்ல வைக்க வேண்டும் என்று உள்ளே ஒரு ஆர்வம் பெறுக, அவனது பார்வையும் காதல் பார்வையாய் மாறி இருந்தது.
அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் தான் அவள் இருக்கவில்லை...
ஏதோ ஞாபகம் வந்தவளாக "அது என்ன ஸ்பைசி? இனியான்னே கூப்பிடலாமே?" என்றாள் கேள்வியாக...
இவனோ இருந்த மனநிலைக்கு புன்னகையுடன் "இந்தக் கேள்வி இப்போ தான் வந்திச்சா? முன்னவே கேப்பனு நினைச்சேன்" என்றவன் "உன் பெயர் இனியா தான, சோ ஷோர்ட்டா ஸ்பைசி" என்றான் விசில் அடித்தபடி...
அவளோ "இனியாக்கும் ஸ்பைசிக்கும் என்ன சம்மந்தம்... அப்படி கூப்பிடுறதா இருந்தா, ஸ்வீட்னு தான கூப்பிட்டிருக்கணும்" என்றாள், தோழிகள் சிலர் அப்படி அழைப்பதை ஞாபகப்படுத்தி
மகிழோ "வாஸ்தவம் தான்... ஆனா எனக்கு ஸ்வீட் பிடிக்காதே! பிடிக்காததச் சொல்லிப் பிடிச்ச உன்ன எப்படிக் கூப்பிட முடியும் அதனால தான் ஸ்பைசி" என்றான் கண் சிமிட்டி...
அந்த விழிமொழி அவளை ஏதோ செய்ய, ஏதோ ஞாபகம் வந்தவளாக "நான் வந்த அன்னைக்கே ஸ்பைசினு சொன்னீங்களே! அதுக்கு முதலே என்னைத் தெரியுமா?" என்றவளுக்கு அன்றொரு நாள் அவன் கோபமாய் பேசும்போது ஏதேதோ உளறிய அவன் பேச்சுக்களும் விட்டு விட்டு ஞாபகம் வந்தது.
அதுவரை வைராக்கியமாய் எல்லாப் பிரச்சனையும் முடிந்தே தன் காதலை அவளிடம் உரைக்க வேண்டும் என்று எண்ணி இருந்த மகிழின் முடிவு அவளது ஒற்றைக் கேள்வியில் ஆட்டம் காணத் தொடங்கியது.
இரண்டு வருடமாக அவள்மீது காதல் கொண்டு தனியே போராடியவனுக்கு உடையவள் அருகில் அமர்ந்து வினவுகையில், அவளிடம் அனைத்தையும் கொட்டிவிடவே மனது தவியாய் தவித்தது.
இருக்கும் இடம் மறந்தான்... நிலை மறந்தான்...
அவள் ஒருத்தியே அவன் சிந்தையில்...
அவள் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்தவன், கண்களில் கேள்வியுடன் நகரப்போனவளை தடுத்து அவள் கரங்களைப் பிடித்துக்கொண்டு "என்ன, என் காதல உனக்குப் புரியுமா ஸ்பைசி, ரெண்டு வருசமா உனக்கே உனக்கா பூட்டி வச்சிருக்கேன். ரெண்டு வருசத்துக்கு முதல் ஒரு குட்டி ரோஜா பூ என் மனச பறிச்சிட்டு போய்ட்டா" என்றவன் கண்களில் தான் எத்தனை காதல்...
அவன் கண்களையே பார்த்திருந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது...
கண்கள்மூலம் காதலைக் கடத்த எண்ணினானோ அந்தக் கள்வன். விடாமல் அவன் பார்வை அவள் கண்களை ஊடுருவி இதயத்தை இம்சித்தது.
கண்களைத் தாழ்த்திக் கொண்டவளோ கரத்தை உருவப்பார்க்க, அது முடிந்தால் தானே!
தன் ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தியவனோ அவளைக் கண்டு காதல் கொண்ட அந்த நாளின் நினைவை அவளிடம் விளக்கத் தொடங்கினான்.
____________________________
வருடம் இரண்டாயிரத்து இருப்பத்திரெண்டு...
விஜயாவோ இனியாவிடம் அத்தனை பத்திரம் சொல்லித்தான் அவளைப் பேருந்தில் ஏற்றி விட்டிருந்தாள்.
அது இனியாவின் பள்ளியின் கடைசி வருடம் என்பதால் அன்று பள்ளிச் சுற்றுலா செல்வதாகத் திட்டமிடப்படிருந்த நாள்...
இனியாவின் வீட்டில் அவளைப் போக விட்டது பெரிய சரித்திரம் தான்.
விஜயாவின் தொடர் போராட்டத்தின் விளைவில் தான் இனியாவிற்கு செல்ல அனுமதியே கிடைத்திருந்தது.
அதிலும் ஆயிரம் கட்டுப்பாடுகள் கட்டளைகள்… பெண் பிள்ளைகள் மாத்திரம் படிக்கும் பள்ளி என்பதால் மட்டுமே தான் இந்த அனுமதியும்...
ஒருவாராய் பேருந்தில் ஏறி அமர்ந்த இனியாவிற்கு மனதெல்லாம் ஒரு சுதந்திர உணர்வு தான். அருகில் அமர்ந்திருந்த தோழியின் கரத்தைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் கரம் அத்தனை ஜில்லிட்டிருந்தது.
தோழியோ "என்னாச்சு இனியா? பயப்படாத நான் இருக்கேன்ல" என்றாள், தோழி புதுப்பயணதுக்கு பயப்படுகிறாளோ என்று நினைத்து.
ஆனால் அவள் உணர்வுகள் பயம் அல்லவே!! சுதந்திரத்தை அனுபவிக்கும் குழந்தையின் உணர்வு!!
ஒரு நாள் பயணம் தான் அதி காலையில் சென்று இரவுக்குள் வீடு திரும்பி விடுவர்.
இதோ அவர்கள் பயணம் ஆரம்பித்துச் சென்னைக்கும் வந்து சேர்ந்திருந்தனர்.
ஓவியக் கண்காட்சி ஒன்றை பார்வையிடவே அவர்கள் அங்கு வந்திருந்தது.
காணும் ஒவ்வொரு ஓவியமும் இனியாவின் கண்களுக்கு விருந்து என்றே சொல்ல வேண்டும்...
எப்போதும் வேலை வேலை என்றே நாளைக் கடத்தும் அவளுக்கு இன்று ஆசுவாசமாய் ஒரு பொழுது...
அப்படியே ஓவியங்களுடன் ஓவியமாய் லயித்திருந்தவளின் மீது ஒரு ஜோடி கண்கள் லயித்திருந்ததை அவள் அறியாது போனாள்.
அன்று மகிழின் தோழி ஷில்பாவின் ஓவியமும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் மகிழும் அசோக் ஷில்பாவுடன் அங்கே வந்திருந்தான்.
மாட்டேன் என்றவனை ஷில்பா வற்புறுத்தி அழைத்து வந்திருக்க, காதல் ஜோடிக்குத் தனிமை கொடுத்துத் தள்ளி வந்தவனின் கண்ணில் பட்டாள் இனியாள்.
பார்த்ததும் அவன் மனதில் அவள் உருவம் ஓவியமாய் பதிந்து போயிற்று.
பள்ளி சீருடையில் இல்லாமல் சாதாரண பாவாடை தாவணியில் இருந்ததால் அவள் பள்ளி மாணவி என்பதே அவனுக்குத் தெரியாமல் போனது.
அவள் செல்லும் இடம் எல்லாம் அவனது கால்களும் நகர, மந்திரித்து விடப்பட்டவன் போலத்தான் அந்தக் கண்காட்சி கூடத்தினுள் வளம் வந்தான்.
சற்று நேரத்தில் ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருந்த இனியாவை தேடி வந்த அவள் தோழியோ, அவள் காதில் எதையோ சொல்ல, அவளும் ஓவியத்தைப் பார்த்தபடியே விருப்பமே இல்லாமல் தோழியுடன் அங்கிருந்து நகர்ந்தாள்
அவளது சுருங்கிய முகம் அவனை ஏதோ செய்ய, கால்கள் தன்னால் அவள் பின்னே சென்றது.
நேரே அவர்கள் சென்ற இடத்தைப் பார்த்து அவன் தன்னைத் தானே நொந்து கொள்ளாத குறை தான்.
அவர்கள் வந்திருப்பதோ கழிவறைக்கு, தோழியின் அவசரம் உணர்ந்து அவளும் கூட வந்திருந்தாள்.
தோழிக்குக் காவலாக அவள் வெளியே நிற்க, இவனோ சற்றுத் தொலைவில் இருந்த மரத்தின் கீழ் அவளை நோட்டம் விட்டபடியே நின்றிருந்தான்.
தோழி வரும் வரை வெளியே நின்றிருந்த இனியாவின் காதில் ஏதோ மெல்லிய முனங்கும் ஓசை...
சத்தம்வந்த திசையை நோக்கி நடந்தவளோ என்னவென்று பார்க்க, அங்கே ஒரு சிறிய செடியின் பின்னே நாய்க் குட்டி ஒன்று வலியில் முனங்கிக் கொண்டிருந்தது.
பிறந்து இரண்டு மூன்று நாட்கள் தான் ஆகி இருக்கும் அளவுக்குக் குட்டியாய் இருந்த அதனைப் பார்த்தவளுக்கு பாவமாய் போய்விட, கையில் தூங்கிக் கொண்டவள் காயத்தை ஆராய, அவள் கெட்ட நேரம் அங்கிருந்த செடியின் மறைவில் இருந்ததனால், தாய் நாயை அவள் கண்டிருக்கவில்லை...
அதுவோ குறை உயிரில் கிடந்தாலும் குட்டியைத் தூக்கிய கோபத்தில் அவளைக் கடிக்கப் பாய, இதனை எதிர்பார்க்கதவளோ உண்மையில் பயந்தே தான் போனாள்.
அத்தனை நெருக்கத்தில், இரத்தக் காயத்துடன் அந்தத் தாய் நாயை ஆக்ரோசமாகப் பார்த்ததில் அவள் மூச்சே நின்று விடும் போலத்தான் இருந்தது.
அப்படியே நிலை தடுமாறி அவள் பின்னே சாய, பார்த்திருந்த மகிழ் நிலைமை உணர்ந்து அருகில் வருவதற்கு முன்னரே கீழே விழுந்தவளின் தலையில் கல் ஒன்று பலமாய் மோதியதில் காயமாகி இருந்தது.
அந்த நேரம் வெளியே வந்த தோழியோ "இனியா" என்ற சத்தத்துடன் அவளை நெருங்க, அதற்குள் மகிழ் அவளை மடியில் தாங்கி இருந்தான்.
"ஹேய் கேர்ள், என்று அவன் கன்னம் தட்ட, அவள் மயங்கி இருந்ததால் இவன் அழைப்பு அவளை அடைந்திருக்கவில்லை...
"அண்ணா இனியாக்கு என்னாச்சுணா" என்று பதறியபடி தோழி கேட்க, இவனோ "ஒன்னுமில்லமா, தலைல அடிபட்டிருக்கு பிளட் வேற அதிகமா வருது ஹாஸ்பிடல் கொண்டு போறது பெட்டர்" என்றவன் அவளைக் கையில் ஏந்திய பின்னரே தான் பைக்கில் வந்தோம் என்பதே நினைவுக்கு வந்தது.
அசோக்கிடம் கார் சாவி வாங்கலாம் என்ற எண்ணம் வர, இப்படியே அவளை உள்ளே தூக்கிச் செல்ல முடியாது என்பதால் அவளை அப்படியே அங்கே கிடத்தியவன் "கொஞ்சம் பார்த்துக்கோமா கார் சாவி எடுத்துட்டு வந்துடுறேன்" என்றவன் உள்ளே ஓடினானா பறந்தானா என்பது அவனுக்கே வெளிச்சம்...
எத்தனை வேகமாய் சென்றிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் அசோக்கை கண்டு பிடிக்க அவனுக்கு அடுத்த ஐந்து நிமிடம் எடுத்திருக்க, மீண்டும் வந்தபோது அந்த இடத்தில் இனியா இருக்கவே இல்லை...
அவள் விட்டுச் சென்ற அந்த நாய்க் குட்டியைத் தவிர, அதன் தாயோ குட்டியின் அருகே படுத்திருந்தது. அதற்கும் உடலில் காயம் என்பது பார்த்ததும் புரிந்தது.
எப்படி என்றும் அவனுக்கும் புரியவில்லை தான்… ஆனால் அது உயிர் பிழைப்பது கடினம் என்று அதன் நிலை உணர்த்த, இரண்டு நாயையும் மிருக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அசோக்கிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.
அதன் பின் அருகில் இருந்தவர்களிடம் அத்தனை விசாரித்தும் அவனுக்கு அவள் விபரம் எதுவும் தெரியவில்லை...
பள்ளியிலிருந்து கண்காட்சி பார்க்க வந்தாகவும், அடிபட்டது தெரிந்து அழைத்துச் சென்றிருப்பதாகவும் மாத்திரமே தகவல் வர, எதுவும் தெரியாமல் எங்கே தேடுவான்.
ஆனாலும் விட மனம் இல்லாமல் ஒவ்வொரு மருத்துவமனைக்குமாய் பறந்தான்.
அவள் நலமாக இருக்கிறாள் என்று தெரிந்தால் போதும் என்ற மனநிலை தான் அவனுக்கு, அவள் இரத்தம் வேறு அவள் சட்டையில் உறைந்திருக்க, கண்கள் கலங்கியது அவனுக்கு...
சற்று முன் பார்த்த பெண்ணுக்காக, தான் இப்படி அழுகிறோமா என்று அவனுக்கே ஆச்சரியம்...
எத்தனையோ கயத்தை பார்த்திருக்கும் மருத்துவ மாணவன் அவன், ஆனால் இன்று அவனவள் இரத்தம் உள்ளே ஏதோ செய்தது.
எங்குத் தேடியும் அவள் கிடைக்கவில்லை...
இதுதான் இடம் இது தான் பெயர் என்று அறிந்து தேடினாலே ஒரு மருத்துவமனையில் குறிப்பிட்ட நோயாளியைக் கண்டறிவது கடினம். இதில் எதுவுமே தெரியாமல் அவன் முகமும், அவள் நண்பி அழைத்த 'இனியா' என்ற பெயரையும் ஞாபகம் வைத்துக்கொண்டு கண்டு பிடிப்பது என்பது கடினம் தானே!!
தேடி ஓய்ந்து போனவன் இறுதியில் அசோக் இருக்கும் இடம் வர, நண்பனை அந்த நிலையில் கண்ட இருவருக்கும் கவலை தொற்றிக் கொண்டது.
அசோக்கோ "என்னாச்சு மகி, ஏன் இப்படி இருக்க, யாருக்கு என்னாச்சுடா?" என்று கேட்க, அதற்குப் பதில் சொல்லாதவனோ "நாய்க்குட்டி எப்படி இருக்குடா?" என்று எதிர் கேள்வி கேட்டான்.
"நான் என்ன கேட்குறேன், பதில் சொல்லாம நீ என்னடா திருப்பிக் கேட்குற?" என்ற நண்பனின் தோளில் சாய்ந்த மகிழோ "எதுவும் கேட்காத மச்சான், இங்க ஏதோ பண்ணுதுடா?" என்க, நண்பனின் குரலில் தெரிந்த இயலாமை அசோக்கை அடுத்து கேள்வி கேட்க விடவில்லை...
பெருமூச்சு விட்டவனோ "தாய் நாய காப்பாத்த முடியல, கொஞ்ச நாள் முன்ன தான் குட்டி போட்டிருக்கும் போல, இன்பெக்ஷன் ஆகி இருக்கு... குட்டிக்குப் பெரிசா பாதிப்பு இல்லை, காயத்துக்கு மருந்து கொடுத்துப் பால் கொடுத்திருக்காங்க, டூ த்ரீ டேய்ஸ்ல ரெகவர் ஆகிடும்" என்றான்.
அன்று தொடங்கிய தேடல் அவனவள்...
அவள் விட்டுச் சென்ற சின்னம் மட்டும் இன்றும் அவனுடன் அவன் பொம்மியாய்...
_________________
அவள் கரத்தைப் பற்றியபடியே அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவள் கண்களையே பார்க்க, அதில் ஒரு துளி கண்ணீர் உருண்டு ஓடியது.
அவளது இந்த உணர்வு அவளுக்கே புதிது... அவள் வாழ்வில் அவள் அறியாத பக்கம் அல்லவா அவை...
"பொம்மி தான் அந்தக் குட்டியா?" என்று கேட்க, அவனோ ஆமோதிப்பாய் கண்களை மூடித்திறந்தான்.
மேலும் அவனே "அன்னைக்கு உனக்குப் பட்ட அடி குணமாகக் கூடியதுனு ஒரு டாக்டரா என் மூளைக்குப் புரிஞ்சிருந்தாலும், என் மனசுக்குப் புரியல... உனக்கு என்ன ஆச்சோனு உள்ளுக்குள்ள ஏதோ பண்ணிட்டே இருந்திச்சு, நீ நல்லா இருக்க அப்படிங்கிற வார்த்தையாவது கிடைச்சிடாதானு இரண்டு வருசமா தவிச்ச எனக்குப் பதிலா, நீயே என் கண் முன்னாடி வந்து நின்னப்போ என் இதயம் துடிச்ச துடிப்பு எனக்குத் தான் தெரியும்" என்றவனின் கண்ணில் இன்றும் அன்று அவளைக் கண்ட உணர்வுகள் கொட்டிக்கிடந்தது.
காதலாய் அவளது விழிகளை நோக்கியவனுக்கு அதில் தெரிந்த தவிப்பு புரிய, "அன்னைக்கு அப்பறம் என்ன ஆச்சு? ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்களா?" என்றான் அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு...
அவளோ "எனக்குச் சரியா தெரியல, அப்பானா ஊர்ல கொஞ்சம் பயம் அதனால டீச்சர்ஸ் எல்லாம் கொஞ்சம் பயந்துட்டாங்க… அவரசமா என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிட்டாய்ங்க போற வழில ஏதோ ஒரு ஹாஸ்பிடல்ல காட்டி மருந்து எடுத்திருப்பாங்க போல, மயக்கம் தெளிஞ்சதும் கொஞ்சமா வலி தெரிஞ்சிச்சு... கொஞ்ச நாள் காயம் இருந்திச்சு அப்பறம் குணமாகிடுச்சு" என்றாள்.
அவனோ தலையசைத்து அவள் சொல்வதைக் கேட்டுகொண்டிருந்தான்.
அடுத்து என்ன பேசவென்று அவள் அமர்ந்திருக்க, அவனோ அவள் கரத்தில் அழுத்தம் ஒன்றைக் கொடுத்தவன் "எதையும் குழபிக்காத இதெல்லாம் உன்கிட்ட இப்போ சொல்லணும்னு நான் நினைக்கவே இல்லை... இப்போ இந்த நிமிஷம் நீ கேட்கவும் மறைக்கத் தோணல, சோ சொல்லிட்டேன். பொறுமையா யோசிக்கலாம், எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்... அப்பறம் நீ பொறுமையா லவ் பண்ணு, இப்போ நம்ம லவ் எனக்கே எனக்கு மட்டும் தான் சொந்தம்" என்றான் கண் சிமிட்டியபடி...
அவளிடம் எந்தப் பதிலும் இல்லை... பதில் சொல்லும் நிலையிலும் அவள் இல்லை...
அந்த நாள் இன்று வரை மறக்கவே முடியாமல் அவள் மனதில் பதிந்து போன வடுவாகத் தான் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது...
எத்தனை நாள் பாதி தூக்கத்தில் பயந்து எழுந்திருப்பாள். இன்று நினைத்தாலும் பயம் தான்... நாய்களிடமிருந்து அவள் பயந்து ஒதுங்கிப் போக இதுவும் காரணம் அல்லவா???
ஆனால் இன்றோ அந்த நாளின் இன்னொரு பக்கத்தை அவன் கூறிக் கேட்கையில் ஏதோ உள்ளுக்குள் மலர்வது போல் ஒரு எண்ணம்...
அது காதல் என்றெல்லாம் இல்லை... தன்னை ஒருவர் இத்தனை தேடி இருக்கிறாரா என்றொரு ஆர்ப்பரிப்பு அவ்வளவே!
ஒதுக்கம் ஒதுக்கம் மட்டுமே அவள் இதுநாள் வரை பார்த்து வளர்ந்தது...
யாழினியின் அன்பு கூட அவளுக்குச் சரியாக ஞாபகம் இல்லாத ஒன்று... விஜயா மட்டும் இல்லை என்றால் அவள் நிஜத்தில் பைத்தியம் தான் ஆகி இருப்பாள்.
ஆனால் இன்று அவளைச்சூழ அத்தனை நல்ல உறவுகள்... தன்னை நேசிக்க, தன்னை புரிந்து கொள்ள, தன்னை தாங்க என அத்தனை சொந்தமும் கூடி வந்த உணர்வு அவளுக்கு, அவர்களைப் பிரித்து வேறு ஆளாக எண்ண முடியவில்லை...
இவர்கள் இப்படியே அமர்ந்திருக்க, அவர்களுக்கான உணவுடன் வந்திருந்தாள் பூவிழி...
மகிழ் இனியாவின் அருகில் அவள் கரம்பற்றி அமர்ந்திருப்பதைப் பார்த்து அவள் முறைக்க, இரண்டு வருடக் காதலை தன்னவளிடம் சொல்லிய குதூகலத்துடன் தாயின் முறைப்பும் சேர்ந்து கொள்ள, மகிழ் உற்சாக மனநிலையில் தான் இருந்தான்.
அவனோ இன்னும் இனியாவை நெருங்கி அமர, இனியா அவனை அதிர்ச்சியுடன் தான் பார்த்து வைத்தாள்.
அதனை எல்லாம் கணக்கில் எடுக்காதவனோ "உங்களத் தான் அணைக்க விடமாடீங்க, என் வருங்கால மனைவியைக் கூடவா தொடக் கூடாது" என்று வினவ,
பூவிழியோ "உன்னைப் போன்ற ஒருவன் எனக்கு எப்படி மகனாக இருப்பான் என்ற கேள்விதான் மனதில் ஓடுகிறது. ஆனாலும் சுவாமி கூறியதை மறுக்கவும் முடியவில்லை... அதனால் ஒப்புக்கொள்கிறேன் இனிமேல் சரியாக நடக்கப் பழகு, முதல் இருந்து உனக்குக் கற்றுக்கொடுக்கிறேன். இப்போது அந்தப் பெண்ணை விட்டுச் சற்று தள்ளி அமர்ந்துகொள்" என்று கட்டளைபோல் சொல்ல, அவனும் புன்னகையுடன் தள்ளி அமர்ந்தான்.
அடுத்து பூவிழி அமைதியாக உணவைப் பரிமாற, மகிழோ "இந்த நேரம் எல்லாரும் வெளியே வராமட்டாங்கனு சொன்னாங்களே நீங்க மட்டும் எப்படிமா வெளியே வந்தீங்க?" என்றபடி உணவை எடுத்து வாயில் போட்டுகொண்டவனது கண்கள் விரிந்தது.
எத்தனை வருடம் இழந்த அவன் அன்னையின் கைப்பக்குவம், கண்கள் இலேசாகக் கலங்கத் தொடங்க, மற்றவர்கள் பார்க்கும் முன் மறைத்துக் கொண்டான்.
பூவிழியோ "இங்குள்ள இளம் பெண்களைப் பலி பூஜையென அவன் கவர்ந்து செல்ல, எம்மக்களிடையே பயம் பல்கி பெறுகியது, பதினெட்டு வயது முடிந்த பெண்களில் என்னைப் போல இன்னும் சிலரே இந்த ஊரில் உயிருடன் இருக்கின்றோம் அதுவும் அந்த மச்சம் இல்லாமல் பிறந்ததால் மட்டுமே! இப்படி உயிர் வதம் செய்யும் அவன்மீது தோன்றும் பயம் அவ்வளவு சாதாரணமாய் போய்விடுவதில்லையே! அதுவே அவன் வெற்றி... இன்றுவரை அந்தப் பயத்தை போக்க, எம்மால் முடியவில்லை... அவர்களது பயத்தை கலைக்க அவன் மரணம் ஒன்றால் தான் முடியும்" என்று நிறுத்தினாள்.
மீண்டும் அவளே "யான் இளவேந்தனின் மகள், பயம் என்பது அருகில் கூட நெருங்காது" என்று முடித்தவளின் குரலில் அத்தனை நிமிர்வு...
மகிழுக்கு அவள் நிமிர்வு பிரமிப்பையே கொடுத்தது.
உணவு பரிமாறி முடித்த பூவிழியோ, அவனுக்கு உடுண்டை போல ஒரு இனிப்புப் பண்டத்தை வைக்க, அவனோ என்னவென்று புரியாமல் நிமிர்ந்து பார்த்தான்.
"உணவருந்தி முடித்ததும் இனிப்பு வழங்குவது எங்கள் முறை" என்றாள் வேறெங்கோ பார்த்தபடி, அதிலேயே அவள் சொல்வது பொய் என அவனுக்குப் புரிய, யாருக்காக இனிப்பு உண்பதை தவிர்த்தானோ அவர் கையால் அந்த இனிப்பு கிடைத்த பின் கசக்கவா செய்யும். விரும்பியே வாய்க்குள்ளே போட்டுக்கொண்டான்.
அதனைப் பார்த்தும் பார்க்காதது போல் பூவிழி அவனை ஓரக்கண்ணால் பார்க்க, மகிழுக்கோ அவளை அணைத்துக்கொள்ளவே கைகள் பரபரத்தது.
ஆனால் அருகில் நெருங்கினால் தான் குருவாளை நீட்டி விடுவாளே என்று அடக்கி வாசித்தான்.
பெண்கள் தான் எத்தனை வயதிலும் தாய்மையை உணரக்கூடியவர்கள் ஆகிற்றே! இதில் பூவிழி மட்டும் விதி விளக்கா என்ன??
இவர்கள் இங்கே இப்படி இருக்க, அங்கே மார்த்தாண்டனைத் தேடிச் சென்ற நால்ரும் அவனிடம் அகப்பட்டு அவன் முன்னே கைதியாய் நின்றிருந்தனர்.
காதலைத் தேடும்...
இப்படிக்கு,
உங்கள் VSV-28
Latest Post: நேசம் 15 Our newest member: P.Paramu Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page