All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே ஏபிலாக்

 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 46
Topic starter  

அத்தியாயம் 30

எபிலாக்

 

இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்த படி முறைத்துக் கொண்டிருந்தாள் தன் பாட்டியை நான்கு வயது குட்டி அவிஷா. அவளைப் போலவே அவரும் இடுப்பில் கைக்குற்றி அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருக்க. 

 

"எதுக்குடி இப்போ என்னை இப்படி முறைச்சிக்கிட்டு நிக்கிற.?"என்றவரின் கேள்விக்கு. 

"ஏன் பாட்டி.? எங்க அம்மாவ கூப்பிட்டுக்கிட்டே இருக்கீங்க. ஒரு நாள் உங்களால வேலை பார்க்க முடியாதா.? எப்பவும், எங்க அம்மா தானே எல்லா வேலையும் செய்றாங்க. இன்னைக்கு ஒரு நாள் நீங்கச் செய்யுங்களேன். எங்க அம்மாவே தான் வேலை செய்யணுமா இந்த வீட்ல.?"

"ஏண்டி சின்ன மாமியா.? நான் என்ன வேலை செய்யாமலா இருக்கேன். இந்த வீட்டில. ஏன் உங்க அம்மாவைக் கூப்பிட்டா என்னடி."

 

"எங்க அம்மாவ இன்னைக்கு பூரா கூப்பிடாதீங்க. அவங்களுக்கும் எங்க அப்பாவுக்கும் இன்னைக்கு வெட்டிங் டே. நாங்க காலையிலேயே வெளியில போறோம். நைட்டு தான் வருவோம். அவங்களுக்கே உடம்பு சரியில்ல பாவம். சும்மா, சும்மா நீங்க அவங்கள கூப்பிட்டுக்கிட்டே இருக்காதீங்க. சொல்லிட்டேன்." என்று தன் குட்டி விரல் நீட்டி மிரட்டியவளை பார்த்து நாடியில் கைவைத்து.

"அம்மாடி அம்மா. எனக்கு மாமியார் இல்லைன்னு நீ வந்தியாடி. எந்த நேரத்தில தான் உங்க அம்மா உன்ன பெத்தாலோ."என்று அதிசயத்து சடவாகக் கூற. 

"ஆமா நான் தான் உங்களுக்கு மாமியா. உங்கள திட்டறதுக்கு தான், நான் பொறந்து வந்து இருக்கேன். அதுக்கு தான் எங்க அம்மா என்ன பெத்திருக்காங்க." என்று சின்னக் குரலில் சத்தமிட்டு கூற. அதுவரை பேப்பர் படித்தபடி இவர்களின் சம்பாஷனைகளை கேட்டுப் புன்முறுவல் பூத்திருந்த சரவணன். பேத்தி கூறிய கடைசி வாக்கியத்தில் வெடித்து சப்தமிட்டு சிரிக்க ஆரம்பித்தார்.

 

மகள் தன் தாயுடன் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்துவிட்ட சக்தி. அவளின் கடைசி வாக்கியத்தில் அவனுக்கும் சிரிப்பு வர வேகமாக ஓடி வந்து தன் மகளை அள்ளித் தூக்கிவன் வளமை போல அவளின் வாயின் மேல் மூக்கை வைத்து உரசியவன்,

"சின்னக் குட்டி. பாட்டியை அப்படி எல்லாம் பேசக் கூடாது." என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டே.

 

"போப்பா. இந்தப் பாட்டி எப்ப பாரு அம்மாவை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க. அதெல்லாம் நீங்கக் கேட்க மாட்டீங்களா.? பாவம் அம்மா. அவங்களுக்கே உடம்பு சரியில்லை." என்றதில் மற்றவைகளை விட்டுவிட்டு மனைவிக்கு என்ன உடம்புக்கு என யோசித்துக் கொண்டே தன் அறை நோக்கி வேகமாகச் சென்றான் மகளைக் கையில் தூக்கிக் கொண்டே.

 

அன்று அவர்களின் திருமண நாளாக இருக்க மனைவி, மகளுடன் வெளியே செல்வதற்காக விடியலில் எழுந்து கடைக்குச் சென்றவன் சில வேலைகளை முடித்துவிட்டு இப்போதுதான் வீட்டுக்குள் வந்தான்.

 

"வைஷு. என்னடி.? என்ன செய்து.? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க.?" என்று கட்டிலில் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்துக் கேட்டவன். அவளின் சோர்ந்த முகத்தைப் பார்த்து இன்னுமே அச்சம் கொண்டான்.

"என்னன்னு தெரியலங்க.? தல ரொம்ப சுத்துது. லோ பிபி ஆகிடுச்சோ என்னவோ.?"

"இரு கொஞ்சம் எலுமிச்சை சாறு உப்பு போட்டுக் கொண்டு வரேன்." என்றவன் மகளையும் தூக்கிக்கொண்டு வெளியேற அவன் செல்வதை பார்த்திருந்தவளின் கண்களில் அங்கு மாட்டி இருந்த காலண்டர் பட்டது. 

 

அதைப் பார்த்தபடி யோசித்தவன். விரல் விட்டு எண்ண இருபத்தி எட்டு நாட்கள் தள்ளி இருந்தது. அப்படி இருக்குமோ.? என்று நினைத்தவளுக்கு உடம்பு முழுவதும் புல்லரித்து நடுங்கியது. பலமுறை நம்பி ஏமாந்தவளுக்கு இதுவும் அதுபோல் ஒன்றோ என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்தது.

 

 

 எப்போதோ வாங்கி வைத்த கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனம் பீரோவில் இருக்க, கணவன் வருமுன் அதை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள் நடுங்கும் விரல்களை இறுகப் பிடித்துக் கொண்டு. 

சக்தி மகளுடன் அறைக்குள் வரும்போது அவள் இல்லாமல் அறை வெறுமையாக இருக்க. குளியலறையில் இருக்கிறாள் என இவன் நினைக்கும் போதே "ஓஹ்ஹ்ஹ்..!" என்று சப்தமிட்டு கதறி அழும் மனைவியின் அழுகை குரல் குளியல் அறையில் இருந்து கேட்க. பதறி பயந்தவன் 

"வைஷு..!" என்று அழைத்தபடி கதவை வேகமாக தட்டினான். அன்னையின் அழுகுரலும் தந்தையின் பதட்டமும் சின்ன குட்டிக்கும் பயத்தை தர 

"ஓஹ்.." என்று சப்தமிட்டு அழுதாள் அவளும்.

கணவனின் பதறிய குரலை விட மகளின் அழுகுரல் வைஷ்ணவியை நிலை கொள்ள செய்ய. மெதுவாக அழுகையை நிறுத்திவிட்டு கதவை திறந்து வெளி வந்தவளை இருக அணைத்துக் கொண்டார்கள் சக்தியும் அவர்களின் தேவதையும்.

இவர்களின் அழுகுரலிலும் பதட்டத்திலும் சரவணனும் பவித்ராவும் பயந்து இவர்களின் அறைக்குள் வேகமாக நுழைந்திருந்தார்கள் 

"என்ன ஆச்சு சக்தி..?" என்ற கேள்வியுடன். 

 

கணவன் மற்றும் மகளின் அணைப்பிலிருந்து வெளிவந்த வைஷ்ணவி புன்னகையில் முகம் விகாசிக்க தன் கையில் இருந்த சாதனத்தை கணவனின் முகத்திற்கு நேராக கை விரித்து நீட்டினாள். கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தை கண்டு அதிர்ந்தவன் கைகள் நடுங்க அதை எடுத்துப் பார்த்தவனுக்கு பளிச்சென்று இரு கோடுகள் கண் சிமிட்டி சிரித்தது. பார்த்தவனுக்கும் மகிழ்வில் நெஞ்சு முட்ட தங்களின் எத்தனை வருட ஏக்கம் இது என்பதில் சத்தமிட்டு மனைவியை இறுகக் கட்டிக் கொண்டு அழுதான் அவனும். 

இந்த இரட்டைக் கோடுகளை கண்ணுற எத்தனை வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது அவர்களுக்கு. 

 

தந்தையும் அழுவதை பார்த்த சின்ன குட்டி மிரண்டு இன்னும் சத்தத்தை கூட்டி அழுக. நிலைமையை சடுதியில் புரிந்து கொண்டார்கள் பவித்ராவும் சரவணனும்.. புரிந்தது மிகுந்த மகிழ்வை கொடுத்தது அவர்களுக்கு. அழும் பேத்தியை சமாதானம் செய்ய சரவணன் அவளை தூக்க தந்தைக்கும் தாய்க்கும் ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து பயந்தவள் அவரிடம் செல்லாமல் அன்னை தந்தையின் கால்களுக்கு இடையில் அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டு இன்னும் அழுதவளின் அழுகையே பெற்றோர்களை சமாதானம் செய்தது.. 

 

"ஒன்னும் இல்லடா சின்ன குட்டி. ஒன்னும் இல்ல.." என்று மகளை தூக்கி சமாதானம் செய்த சக்தி. மனைவியோடு சென்று மகளையும் மடியில் இருத்திக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான்.

 

"நான் போய் பால் பாயாசம் செய்றேன்..உங்களுடைய கல்யாண நாள் அதுவுமா சிறப்பான பரிசை கொடுத்திருக்கிறார் கடவுள்..பாயாசத்தை குடித்துவிட்டு மருத்துவரிடம் சென்று உறுதி செய்து விட்டு வந்துடுங்க.."என்ற பவித்ராவின் சொல்லுக்கு சரி என்பதாக சந்தோஷத்துடன் தலையசைத்தார்கள் சக்தியும் வைஷ்ணவியும். பவித்ராவை மிரட்ட சின்ன மாமனாரும் வந்துவிட்டார்.

 

தாத்தா கூறியது போல ராஜா குட்டியாக அவரே அவள் வயிற்றில் வந்து விட்டாரோ என்று நினைத்தபடி மனம் மகிழ்ச்சியில் துள்ள. தன் அடி வயிற்றை தடவியவளுக்கு "கண்டிப்பா உனக்கு ராஜா குட்டி வரும்.." என்ற தாத்தனின் சொல் தான் அசரீரியாக காதில் ஒலித்தது.

 

ராஜா குட்டி விரைவில் இவர்களின் கைசேர்வான் என்ற நம்பிக்கையில் நாமும் மகிழ்வுடன் இவர்களிடமிருந்து விடை பெறுவோம்...

 

             நிறைந்தது. 

 

கதையில் என்னோடு பயணித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.


   
ReplyQuote

You cannot copy content of this page