All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

2. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 2 months ago
Posts: 23
Topic starter  

மகனுடைய விருப்பத்தை ஆமோதித்துப் பேசிய கணவனைக் கண்டுத் துணுக்குற்றாலும்,

அவனுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து நீட்ட, 

அதை வாங்கிப் பருகியவனிடம்,”நீ சொன்னதோட அர்த்தம் உங்க அப்பாவுக்குப் புரிஞ்சிருச்சு. ஆனால், எனக்கு ஒன்னும் விளங்கலை. என்னன்னு தான் சுத்தி வளைக்காமல் சொல்லுடா” என்றார் சோமசுந்தரி. 

 

“அவருக்குமே என்ன விஷயம்ன்னுத் தெளிவாகத் தெரியாதும்மா” என்று கூறி விட்டுத் தந்தையைப் பார்த்தான் திவ்யன். 

 

அவரும்,”ஆமாம் சுந்தரி. உனக்குத் தெரியாமல் நாங்க எந்த விஷயமும் பேசி வைக்கலை” எனச் சத்தியம் செய்யாத குறையாக கூறினார் மகுடபதி. 

 

“அப்படின்னா சரி” என்றவரைப் பார்த்து மற்ற இருவரும் புன்னகைத்தனர். 

 

“நான் போய்க் குளிச்சிட்டு வர்றேன் அம்மா” எனக் குளியலறைக்குப் போய் விட்டான் திவ்யன். 

 

“இவன் ஏன் இப்படி சொல்லிட்டுப் போறான்ங்க? நான் இதைப் பத்தி ஆரு கிட்டே பேசுறேன்” என்று கூறித் தன் செல்பேசியை எடுக்கப் போக,

 

”அவன் சொல்லிட்டுப் போய் அஞ்சு நிமிஷம் கூட ஆகலை. அதுக்குள்ளே உன் பொண்ணுகிட்டே அதை ஒப்பிக்கனுமா? சும்மா இரும்மா. அவன் சொல்லும் போது தெரிஞ்சிக்கலாம்” என்று சொல்லிக் கையமர்த்தினார் அவரது கணவர். 

 

அதைக் கேட்டு, அரை மனதாகத் தான், மகனுக்கான காப்பியைக் கலக்கச் சென்றார் சோமசுந்தரி.

 

சற்று நேரத்தில், குளித்து விட்டு வந்தவனிடம்,”உங்கம்மா இப்போவே ஆருகிட்ட பேசப் போறேன்னுக் கிளம்பிட்டாங்க” எனத் தெரிவித்தார் மகுடபதி. 

 

“நான் அப்போவே நினைச்சேன் அப்பா. இது ரொம்ப முக்கியமானது. அதனால் பொறுமையாகத் தான் சொல்லனும். அவங்களை எப்படியாவது சமாளிங்க” என்று தந்தைக்கு வலியுறுத்தினான் திவ்யன். 

 

“என்னால் முடிஞ்சளவுக்குப் பண்றேன்” 

 

அப்போது, காப்பிக் கோப்பையைக் கொண்டு வந்து மகனிடம் தந்தார் சோமசுந்தரி. 

 

அதைக் குடித்தவன், அன்னையின் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிக்கும் விதமாக அறைக்குப் போய் விட்டான் திவ்யன். 

 

“அவன் நம்ம கிட்டே எதையோ மறைக்கிறான்ங்க! எனக்கு ஒரே பயமாக இருக்கு!” என்று பதட்டமாக கூறவும், 

 

அவரது கையில் மிருதுவானதொரு அழுத்தம் கொடுத்து,”அடடா! அப்படியெல்லாம் நினைச்சுக் கலங்காதே. நம்மப் பையனை நம்பும்மா” என மனைவிக்கு நம்பிக்கை அளித்தார்.

 

 மின் வாரியத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த போது உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக விருப்ப ஓய்வு பெற்ற சமயத்தில், பிறந்த வீட்டுப் பூர்வீக சொத்தில் மகுடபதிக்கும் அவரது பங்குப் பணம் கிடைத்தது. அதைச் செலவழித்து ஒரு வீட்டைக் கட்டி விட்டார். 

 

அவரது மனைவி சோமசுந்தரியோ, ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்த பெண் ஆவார். அதனாலேயே, அவருடைய குடும்ப விவரங்களைத் தவறாமல் தன்னுடைய அண்ணிகளிடம் அறிவித்து விடுவார். 

 

அவர்களது மகன் திவ்யன், இயந்திரப் பொறியாளர் படிப்பில் டிப்ளமோ முடித்து விட்டுப் பட்டாசு நிறுவனம் ஒன்றில் இயந்திர மேற்பார்வையாளர் வேலைக்குச் சேர்ந்து விட்டான். 

 

மகள் ஆரவியோ, முதுகலை இயற்பியல் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது நிறைய நல்ல குடும்பங்களில் இருந்து அவளைப் பெண் கேட்டு வரத் தொடங்கினர். 

 

அதில் அவளுக்குப் பொருத்தமான ஒரு வரனைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தார்கள் மகுடபதி மற்றும் சோமசுந்தரி. 

 

அதன் பிறகுத் திவ்யனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்து விடலாம் என்று எண்ணி இருந்த சமயம் சிறிது காலம் செல்லட்டும் என அதற்குத் தடை விதித்து விட்டான். 

 

தன்னுடைய திருமணத்திற்கு முன்னர், தமையனின் கரத்தில் பச்சைக் குத்தி இருப்பதைக் கண்டுபிடித்துப் பெற்றோரிடம் கூறி அதைப் பற்றி விசாரிக்கச் சொன்னாள் ஆரவி. 

 

பச்சைக் குத்துவது என்பது அவர்களது பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் ஆகும். அதை மேற்கொள்வதால் தோலில் ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டு விடும் என்பதால் அவர்களது குடும்பத்தில் யாருக்கும் அந்தச் செயலைச் செய்வதற்கு அனுமதி இல்லை. 

 

ஆனால், அந்தக் காரியத்தை துணிந்து செய்து விட்டிருந்த திவ்யனைக் கண்டு அதிர்ந்து போயிருந்தனர் அவனது குடும்பத்தார்.

 

அதிலும் அது யாருடையது என்பதைக் கண்டறிய முடியாத வகையில் பச்சைக் குத்தி இருந்ததாலும், அதை அவனிடம் அழுத்திக் கேட்டும் சொல்லாமல் இருப்பதாலும் அவன் மீது அதிருப்தி இருந்தது மூவருக்கும். 

 

தன் திருமணத்தின் போது கூட அதைப் பற்றி அண்ணனிடம் கேட்டுப் பார்த்து விட்டாள் ஆரவி. அப்போதும் கல்லுளிமங்கனாய் இருந்து விட்டான் திவ்யன்.

 

கடையிலிருந்து வந்த தன் கணவர் உணவுண்டு முடித்தப் பின்னர்,”நம்மப் பிரஹாசினியைக் கல்யாணப் பொண்ணுக்கு மேக்கப் போட்டு விடக் கேட்டிருக்காங்க. அதனால், அவங்களை நாளைக்குச் சாயந்தரம் பார்லருக்கு வரச் சொல்லி இருக்காள்ங்க” என்று கூறி மேலும் சில தகவல்களைத் தெரிவித்தார் உமாராணி. 

 

“தாராளமாகப் போயிட்டு வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் மட்டும் எங்கிட்ட சொல்லுங்க”என்று கூறி முடித்து விட்டார் விருச்சிகன். 

 

“சரிங்க” 

 

“பிரஹா கூட நீரஜ் ஊருக்குப் போற சமயத்தில் நீ நம்மக் கடைக்கு வா உமா. ஏன்னா, இது தீபாவளி சமயம். அதனால் இப்போ தான் வியாபாரம் சூடு பிடிக்கும். என்னால் ஒரு ஆளாக இரண்டு கடையோட வேலையையும் சமாளிக்க முடியாது” 

 

உமாராணி,“நானும் அதைத் தான் யோசிச்சேன்ங்க. அவங்க ரெண்டு பேரும் வீட்டில் இல்லாதப்போ நான் மட்டும் தனியாக இருந்து என்னப் பண்ணப் போறேன். நான் ஒரு கடையைப் பார்த்துக்கிறேன்” 

 

“சரிம்மா” என்றவர் களைப்பின் காரணமாக உறங்கச் சென்று விட்டார் விருச்சிகன்.

 

மறுநாள் காலையில், அவர் கடைக்குக் கிளம்புவதற்கு முன்பு,

 

நீரஜ், “ரமணி அத்தையோட பையன் சபரீஷ் நைட் எனக்குக் கால் பண்ணான்” எனத் தன் பெற்றோரிடம் கூறினான். 

 

“என்ன விஷயமாக உனக்குக் கூப்பிட்டான்?” என்று சந்தேகத்துடன் கேட்டார் அவனது தந்தை. 

 

“நம்மப் பிரஹாவைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்றானாம்” 

 

அதைச் சமையலறையில் தமையனுக்காகத் தோசை சுட்டுக் கொண்டிருந்த பிரஹாசினியும் கேட்க நேர்ந்தது.

 

உமாராணி,“அது தான் அவளுக்குச் சொந்தத்தில் மாப்பிள்ளைப் பார்க்க வேண்டாம்ன்னு நேத்தே பேசியாச்சே! அவன்கிட்ட அதைச் சொன்னியா?” எனத் தன்னை அதட்டியவரிடம், 

 

“சொல்லிட்டேன்ம்மா” என்றவனது தட்டில் தோசையை வைத்தாள் பிரஹாசினி. 

 

அவளைப் பற்றிய விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும் போது அவள் அங்கே இல்லாமல் இருப்பது நியாயமற்றது என்று எண்ணிய நீரஜ்,“எனக்குப் போதும்மா. நீ உட்காரு” எனத் தங்கையை அமரச் சொன்னான்.

 

தாங்கள் மூவரும் மட்டும் தான் பிரஹாசினிக்குத் தங்களது சொந்த பந்தத்தில் வரன் பார்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். 

 

அதில் அவளுக்கும் சம்மதமா என்பதை அவளிடம் கேட்பது தான் முறை. 

 

ஆகவே,”உனக்குச் சபரீஷைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கா பிரஹா?” என்றார் விருச்சிகன். 

 

“இல்லை பெரியப்பா” எனத் தன் மறுப்பை உரைத்து விடவும், 

 

“அவ பதிலைச் சொல்லிட்டா. அவ்வளவு தான் முடிஞ்சது” 

 

“ஆனால், அத்தை இங்கே வந்து பேசிப் பார்க்கிற எண்ணத்தில் இருக்காங்களாம் அப்பா” என்று தந்தையிடம் கூறினான் நீரஜ். 

 

விருச்சிகன்,“அப்படி ரமணி வந்தால் நான் அவ கிட்டே பேசிக்கிறேன்” என்றார். 

 

அப்போதே தங்களுக்கான மதிய உணவு அடங்கிய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பி விட்டார்கள் விருச்சிகன் மற்றும் நீரஜ். 

 

அதன் பின்னர், தங்களது உணவையும் சாப்பிட்டு விட்டு ஓய்வாக அமர்ந்தனர் உமாராணி மற்றும் பிரஹாசினி. 

 

“நல்லவேளை நீ அந்த சபரீஷைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கலை. நீ அப்படி எதுவும் சம்மதம் சொல்லிடுவியோன்னு பதறிட்டு இருந்தேன்” 

 

“ஏன் பெரியம்மா?” 

 

“அந்த ரமணி இருக்காளே! உங்க அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் ஏதோ தூரத்து உறவில் தங்கச்சி முறையாம். அதைப் பிடிச்சிக்கிட்டு, நீரஜ் பிறந்ததும் அவனுக்கு நான் தான் அத்தை… எனக்கு அடுத்துப் பொண்ணுப் பொறந்தா அவனுக்குத் தான் கட்டி வைப்பேன்னு என்னமா ஆட்டம் போட்டா தெரியுமா? நல்லவேளை, அவளுக்கு இரண்டாவதாகவும் பையன் பிறந்துட்டான்!” என்று கூறி அங்கலாய்த்தார் உமாராணி. 

 

“அது தான் அண்ணா தப்பிச்சிட்டாரே பெரியம்மா. அப்பறம் ஏன் ஃபீல் பண்றீங்க?” என்றாள் பிரஹாசினி. 

 

”அவன் தப்பிச்சிட்டான். ஆனால், நீ மாட்டிக்கிட்டியே?” 

 

“அத்தை வந்தால், பெரியப்பாவே பேசிக்கிறதா சொல்லிட்டாரே?” 

 

உமாராணி,“அவரும், அவரோட தம்பியும் ரொம்ப இரக்கக் குணம் இருக்கிறவங்க. நம்ம கிட்டே இப்படி சொல்லிட்டு, அவ வந்து பாசமாகப் பேசினா ரெண்டு பேரும் அப்படியே கரைஞ்சிடுவாங்க!” என்று அவளிடம் தன் கலக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். 

 

“அப்படியா பெரியம்மா? அப்போ அவங்க நேரில் வந்து பேசினால் பெரியப்பா ஒத்துக்குவாரா?” எனக் கம்மிய குரலில் கேட்கவும், 

 

அவளது குரலின் மாற்றத்தை உணர்ந்தவரோ,”நான் அவரை ஒத்துக்க விட்ருவேன்னு நீ நினைக்கிறியா? அது மட்டுமில்லாமல் நீ படிப்பை முடிச்சதுமே உன்னைப் பொண்ணுக் கேட்டு வந்து இருக்கலாம் தானே? இப்போ மட்டும் எதுக்கு வரனும்? அவன் ஏதோ தப்புத் தண்டா பண்ணி இருக்கான் போல. அதான், உன்னை அவனுக்குக் கட்டி வைக்க நினைக்கிறாள். நான் உனக்காகப் பேச இருக்கேன். நீ கவலைப்படாதே”என்று சொல்லி அவளைத் தேற்றினார் உமாராணி. 

 

“தாங்க்ஸ் பெரியம்மா” என்றாள் பிரஹாசினி. 

 

மதிய உணவைச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பத் தயாரானார்கள் இருவரும். 

 

அழகுக்கலைப் படித்திருப்பதால், மற்றவருக்கு அலங்காரம் செய்யும் தானும் தன்னை நேர்த்தியாக அலங்கரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. 

 

எனவே, தன்னுடைய புருவங்களை நன்றாகச் சீர்படுத்தி இருந்தாள். அதேபோல், தன் முகத்திற்கு ஏற்ப முகப்பூச்சுக்களை உபயோகப்படுத்திக் கொள்வாள். 

 

இப்போதும் கூட வெளியே கிளம்பிச் செல்வதால் கண்ணுக்கு மை, ஐ- லைனர் மற்றும் மஸ்காராவையும் இட்டுக் கொண்டாள் பிரஹாசினி. 

 

அதே சமயம் உமாராணியும் தயாராகி விட இருவரும் தங்களது அழகு நிலையத்தை அடைந்தனர்.

 

அவர்கள் அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளரும் வந்து விட்டிருக்க, அந்தப் பெண்ணை வரவேற்று நாற்காலியில் அமர வைத்து,”டீ, காஃபி ஏதாவது குடிக்கிறியாம்மா?” என அவளிடம் வினவினார் உமாராணி. 

 

“இல்லைம்மா, தேங்க்ஸ்”  

 

“ஓகே மேம். நான் வாட்ஸப்பில் அனுப்பியதை எல்லாம் பார்த்தீங்களா? அதில் ஏதாவது பிடிச்சு இருந்தா சொல்லுங்க” என்றாள் பிரஹாசினி. 

 

“அந்த டிசைன்ஸ் இரண்டு செலக்ட் செஞ்சு வச்சிருக்கேன். இங்கே இருக்கிறதையும் பார்த்துட்டு முடிவு பண்றேன்” என்கவும், 

 

அங்கேயிருந்த அலங்கார அட்டிகைகள் அடங்கிய பெட்டிகளை எடுத்து வந்து அவளிடம் கொடுத்து தேர்ந்தெடுக்கச் சொல்லி விட்டுத் தன் பெரியம்மாவிற்கு அருகில் சென்று அமர்ந்து விட்டாள்.

 

அந்தப் பெண் யாழினியும் பொறுமையாகத் தேர்வு செய்து தனக்கு ஏதுவான அட்டிகைகள், தோடு மற்றும் நெற்றிச்சுட்டியை எடுத்துக் கொடுத்தவுடன், 

 

அவற்றைத் தனியாக வைத்து விட்டு,”அப்படியே மெஹந்தி டிசைன் செலக்ட் பண்ணிடுங்க மேம்” என்றாள் பிரஹாசினி.

 

“நான் காட்டுற டிசைனைப் போட்டு விடுவீங்களா?” என்று கூறித், 

 

அதைத் தன் செல்பேசியில் தேடி எடுத்து அவளிடம் காண்பித்தாள் அந்தப் பெண் யாழினி.

 

“கண்டிப்பாகப் போட்டு விட்றேன் மேம்” என்றாள் பிரஹாசினி. 

 

“அப்போ ஓகே. இது எல்லாத்துக்கும் சேர்த்து எவ்வளவு பணம் ஆகும்ன்னு சொன்னா இப்போவே அட்வான்ஸ் தந்துடுவேன்” 

 

“இருபது நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் கணக்குப் போட்டுப் பார்த்துட்டுச் சொல்றேன்” என்றவள், 

 

தன்னுடைய பெரியம்மாவுடன் கலந்தாலோசித்து விட்டுப் பண விவரத்தைத் தெரிவித்தவளிடம், 

 

தவணைப் பணத்தை அவளிடம் நீட்ட,”இவங்க கிட்ட கொடுங்க” என உமாராணியைக் காட்டினாள் பிரஹாசினி. 

 

எனவே, அதை அவரிடம் ஒப்படைத்து விட்டுத் தன்னுடைய திருமணம் நிகழும் நாள் மற்றும் நேரத்தைச் சொல்லி விட்டுக் கிளம்பினாள் யாழினி. 

 

அதன் பின்னர், தரையில் இருந்த பொருட்களை எடுத்துத் தக்க இடத்தில் வைத்து விட்டுத் தாங்களும் வீடு திரும்பினார்கள் பிரஹாசினி மற்றும் உமாராணி. 

 

               - தொடரும்

 

கருத்து திரி : 

எழுந்திடும் காதல் காவியம் கருத்து திரி

This topic was modified 2 months ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page