About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
“நான் உங்களுக்கு எல்லா குறிப்பையும், எவ்வளவு காசு ஆகும்ன்றதையும் அனுப்பி விட்றேன். அதில் உங்களுக்குப் பிடிச்சதை சொல்லுங்க. அப்படி இல்லைன்னா, என்னோட பார்லருக்கு வாங்க. அங்கே இன்னும் நிறைய டிசைன்ஸ் இருக்கும், அதைப் பார்த்தும் செலக்ட் பண்ணலாம்“ என்றவளோ,
மறுமுனையில் இருக்கும் நபர் கூறுவதைப் பொறுமையுடன் கேட்டு முடித்தப் பின்னர்,
“ஓகே மேடம். நான் அட்ரஸ் அனுப்புறேன். நீங்க எனக்குக் கால் பண்ணிட்டு வாங்க” என்று கூறி விட்டு அழைப்பை வைத்தாள்.
“பிரஹா, நீ ஃபோன் பேசி முடிச்சிட்டியா?” என்ற குரல் கேட்டவுடன்,
“பேசி முடிச்சிட்டேன் பெரியம்மா. இதோ வர்றேன்” என்று அவரிடம் சென்றாள்.
கிரைண்டரில் இருந்த மாவைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டிருந்த உமாராணியோ,”மெஹந்திக்குக் கேட்டாங்களா?” என்றார்.
பிரஹாசினி,“அதுக்கும், கல்யாணப் பொண்ணுக்கு அலங்காரம் பண்ணி விட்றதுக்கும் கேட்டு இருக்காங்க பெரியம்மா”
“அப்படியா? இந்த ஊரா? இல்லை, வெளியூரா?”
“மதுரைக்குப் போகனும் பெரியம்மா” எனத் தயக்கத்துடன் கூறவும்,
“பக்கத்து ஊர் தானே? உன் ஃப்ரண்ட் வினோதா கூட அங்கே தானே இருக்கா?” என்று அவளிடம் கேட்டார் உமாராணி.
“ஆமா பெரியம்மா”
“அப்பறம் என்ன? அவ வீட்டில் தங்க முடியுமான்னுக் கேட்டுப் பாரு”
பிரஹாசினி,“சரிங்க பெரியம்மா”
“நீரஜ்ஜைக் கூடக் கூட்டிட்டுப் போ. உன் ஃப்ரண்ட் பஸ் ஸ்டாப்புக்கு வந்ததுக்கு அப்பறம் அவனைப் பஸ் ஏத்தி விட்ரு” என அவளுக்கு உத்தரவிட்டார் உமாராணி.
“ம்ம். அவங்க நம்மப் பார்லருக்கு வந்தாலும் வருவாங்க பெரியம்மா” என்று முணுமுணுத்தவளிடம்,
“எப்போ வர்றாங்களாம்?” என்க,
“கால் பண்ணிட்டு வர்றதாக சொல்லி இருக்காங்க” என்று கூறினாள் பிரஹாசினி.
“சரி. அவங்க வர்றப்போ சொல்லு. நானும் உன் கூட வர்றேன்” என்றவர்,
“இதைத் தட்டுப் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வை” என்று மாவு பாத்திரத்தை அவளிடம் கொடுத்து விட்டுத் தன் கைகளைக் கழுவச் சென்றார் அவளது பெரியம்மா.
அவர் சொன்ன வேலையை முடித்து, தன்னுடைய அறைக்கு வந்த பிரஹாசினியோ, அலமாரியில் இருந்த ஒப்பனைப் பொருட்கள் அடங்கிய பையை எடுத்து,
அதில் இருப்பவற்றை ஒருமுறை ஆராய்ந்து பார்த்து விட்டு அனைத்தும் இருக்கிறது என்று உறுதியான பிறகு தான், அதை எடுத்த இடத்தில் வைத்தாள்.
பிரஹாசினியின் முதல் பிறந்தநாளின் போது, குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது, அவர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கிக் கொண்டது.
அதில், தனது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியை இழந்து விட்டு, மருத்துவமனையில் குற்றுயிராக கிடந்தவளைக் காப்பாற்றி, இப்போது வரை தங்கள் வீட்டில் அடைக்கலம் தந்து கொண்டிருப்பது அவளது தந்தையின் மூத்த சகோதரரான விருச்சிகனும், அவரது மனைவி உமாராணியும் தான்!
அவர்களுக்கும் நீரஜ் என்று ஒரு மகன் இருக்கிறான். அவன் பிரஹாசினியை விட இரண்டு வயது பெரியவன். பிரபலமான மருந்துகள் விற்கும் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்க்கிறான்.
ஆனால், அவனும் கூட, பிரஹாசினியை, ‘எங்கள் வீட்டில் அண்டிப் பிழைக்கிறாய்!’ என ஒரு வார்த்தைக் கூட அவளது மனம் நோகும் படி கூறியதில்லை.
ஆனாலும், என்ன தான், தனது பெரியப்பா மற்றும் பெரியம்மாவாகவே இருந்தாலும் கூட, தனக்கு அடைக்கலம் கொடுத்தவர்களிடம், தனது தேவைக்கு மேலாக வேறெதையும் விருப்பப்பட்டுக் கேட்க மாட்டாள் பிரஹாசினி.
அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவர்களோ, அவளுக்கு அவசியமானவற்றைத் தாராளமாகவே செய்து கொடுப்பர். அவளுக்கும், தங்கள் மகனுக்கும் பாரபட்சம் பார்க்க மாட்டார்கள்.
பிரஹாசினிக்கு இயற்பியல் படிப்பில் நாட்டம் இருப்பதைப் புரிந்து கொண்டு, அதையே அவளைப் படிக்க வைத்தனர்.
அதேபோல், அழகுக்கலைப் படிப்பதில் வெகுவாக ஆர்வம் இருந்ததால், அதையும் படிக்க அனுமதி அளித்தார்கள்.
அதை முடித்தவுடன், அதற்கென்று சிறியதாக இடம் பார்த்துக் கொடுக்க, வெளியூரில் ஏதாவது முக அலங்காரம் செய்யும் வேலை வந்தாலும் கூட, விருச்சிகனும், உமாராணியும் அவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்து விடுவர்.
அழகுக்கலையைத் தவிர, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் அணியும் கைச்சங்கிலிகள், கழுத்தணிகள் இவற்றையும் நன்றாகச் செய்வாள் பிரஹாசினி.
அவற்றின் மூலமாகப், பிரஹாசினிக்குக் கணிசமாக ஒரு தொகை கிடைத்தது. அந்தப் பணத்தை அவளையே பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி விட்டார்கள் அவளது பெரியப்பா மற்றும் பெரியம்மா.
தன் செல்பேசியில் குறுந்தகவல் வந்திருப்பதைக் கண்டு அதை எடுத்துப் பார்த்தாள் பிரஹாசினி.
அதில், சிறிது நேரத்திற்கு முன்பு, தன்னிடம் பேசிய பெண் தான், அவளது பார்லருக்கு, அடுத்த நாள் மாலையில் வருவதாக தகவல் அனுப்பி இருந்தாள்.
அதைப் பெரியம்மாவிடம் சொல்லவும், அவரோ, ”உங்கப் பெரியப்பா வந்ததும் அவர்கிட்ட சொல்லு” என்று கூறி விட்டார்.
மாலையில் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்த நீரஜ்ஜிடம் விஷயத்தைக் கூறவும்,”எப்போ கிளம்பனும்னு முன்னாடியே சொல்லிரும்மா” என அவளிடம் அறிவுறுத்தினான்.
“சரிங்க அண்ணா” என்றவள், அவன் முகம் கழுவி வந்ததும், தேநீர் போட்டுக் கொடுத்து விட்டு அறைக்குப் போய் விட்டாள் பிரஹாசினி.
“இவளுக்குச் சொந்தத்தில் மாப்பிள்ளைப் பார்க்க வேண்டாம்டா. அந்நியத்திலேயே முடிப்போம்” என்று சொன்னார் உமாராணி.
நீரஜ்,“ஏம்மா?”
“அவ அப்பா, அம்மாவை இழந்துட்டு நின்னப்போ, சொந்தக்காரங்களில் ஒருத்தராவது நாங்க அவளைப் பார்த்துக்கிறோம்ன்னு வந்தாங்களா? அவளை வளர்க்கிறப் பொறுப்பை நாம எடுத்துக்கிட்டப் பிறகாவது ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போனாங்களா?” எனப் பொருமினார்.
“ம்ஹ்ம்” என்று அவரது மகனும் அதை ஆமோதிக்க,
உமாராணி,“இனிமேலும் அவளுக்கு யாரோட சகவாசமும் வேண்டாம். கல்யாணம் பண்ணிட்டுப் போய் நிம்மதியாக இருக்கட்டும்”
“ஆமாம்மா. அதையும் நாமளே அவளுக்கு நல்லபடியாக செஞ்சு அனுப்பி வச்சிடுவோம். அப்போ தான், சித்தி, சித்தப்பாவோட ஆத்மா சாந்தி அடையும்” என்று கூறி விட்டு அங்கேயிருந்து அகன்றான் நீரஜ்.
பிரஹாசினியின் பெற்றவர்களைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தவரோ, அவளுக்குச் சீக்கிரம் ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு வேலைகளைப் பார்க்கப் போய் விட்டார் உமாராணி.
அவரது கணவர் விருச்சிகனுக்குச் சொந்தமாக இரண்டு துணிக்கடைகள் உள்ளதால், தினமும் காலை மற்றும் மதியம் அவ்விரண்டு கடைகளுக்கும் சென்று வியாபாரம் மற்றும் வருமான விபரங்களைப் பார்க்கச் சென்று விடுவார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சொல்லவே தேவையில்லை. கடைகளில் கூட்டம் மொய்க்கும். அப்போதைய நேரங்களில், தந்தைக்கு உதவியாக கடைக்குச் செல்வான் நீரஜ்.
கடை வேலையை முடித்து விட்டு, விருச்சிகன் வீட்டிற்கு வரும் நேரத்தில், அவனும், பிரஹாசினியும் உறங்கி விடுவார்கள்.
அவருக்கு உணவு பரிமாறி விட்டு, அவரிடம் வீட்டில் நடப்பவற்றைத் தெரிவிப்பார் உமாராணி.
அதை நிதானமாக கேட்டுத் தன்னுடைய ஆலோசனைகளையும் மனைவியிடம் பகிர்ந்து கொண்ட பின்னரே உறங்கச் செல்வார் விருச்சிகன்.
அவர்களது அன்றைக்கான உரையாடலின் முக்கியமான அங்கம் பிரஹாசினியின் திருமணப் பேச்சு தான்.
ஆனால், இதுநாள் வரையில், தன்னை இத்தனை வருடங்களாக, வளர்த்து ஆளாக்கிய, பெரியப்பா மற்றும் பெரியம்மாவின் மனம் நோக கூடாது என்றும், தங்களுடைய வளர்ப்பில் தவறு நிகழ்ந்து விட்டதே! என்று அவர்கள் மருகி விடக் கூடாது என்ற காரணத்திற்காகவும், கடந்த மூன்று வருடங்களாக, ரகசியம் ஒன்றைத் தன் மனதிற்குள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள் பிரஹாசினி.
அதை வெளியே சொல்லும் தைரியமும் அவளுக்கு இல்லை. அதேபோல், இன்னொருவரை நினைத்துப் பார்க்கும் துணிவும் அவளிடம் இல்லை.
அதனாலேயே, தன்னுடைய திருமணப் பேச்சுக் காதில் விழும் போது எல்லாம் அவள் மனதிற்குள் ஊமையாக அழுது கொள்வாள். அதைத் தவிர, வேறெந்த மார்க்கமும் தனக்கு இல்லை என்று உணர்ந்து, காலப்போக்கில், அந்த ரணத்தை மறைத்துக் கொண்டு வாழத் தொடங்கி விட்டாள் பிரஹாசினி.
ஆனால், அவளது ரணங்களுக்கு மருந்திடப் போகிறவனோ, தன்னுடைய அலுவலக அறையில், தனது கையில், பச்சைக் குத்தியிருந்த அவளது பெயரின் சுருக்கத்தைப் பார்த்து,
“என்னோட தங்கச்சி கல்யாணம் முடியட்டும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ அதுவும் நல்லா நடந்து முடிஞ்சிருச்சு. இனிமேல் எனக்கு எந்தத் தடையும் இல்லை. உன்னைச் சீக்கிரம் பொண்ணுக் கேட்டு வர்றேன்” என்று சொல்லி அதை வருடி விட்டுக் கொண்டான்.
அவனது காதலுக்குத் தற்போது மூன்று வயதாகிறது. இனிமேலும் அவனால் காத்திருக்க முடியாது. அவள் மீதான காதல் அவனைக் காத்திருக்க வைக்கவும் விடாது.
இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவனிடத்தில் பிரஹாசினியின் செல்பேசி எண் கூட இல்லை.
இந்தக் காலகட்டத்தில், இதெல்லாம் சாத்தியமான ஒன்றா? என்றெல்லாம் சந்தேகம் வருவது நியாயம் தான்!
ஆனால், இந்த தலைமுறையிலும், இப்படியான காதல்களும் இருக்கத் தான் செய்கின்றன.
அந்த மாதிரியான ஒரு காதல் கதை தான் திவ்யனுடையது.
அவன் திவ்யன்! தன் பிரஹாசினியின் கடைக்கண் சம்மதத்திற்காக காத்திருக்கும் காதலன்!
அவளுக்கும் தன் மேல் நேசம் இருந்தாலும் கூட, அவளது சூழ்நிலை தடுக்கிறது என்பதை எப்போதோ தெரிந்து கொண்டவன், தன்னுடைய கடமைகளை முடித்துக் கொண்டு, தன் சொந்த காதல் காவியத்தை எழுத தயாராகி விட்டவனோ,
தாங்கள் இருவரது வாழ்வும் திவ்யபிரகாசமாக ஒளி வீச இப்போது இருந்தே அடித்தளம் போடும் வேலையைத் தொடங்கி விட்ட நிம்மதியில் அலுவலக வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றான் திவ்யன்.
அந்த இல்லத்திற்குள் நுழைந்ததும், அதனை ஒரு சுற்றுப் பார்வையால் அளந்து கொண்டிருக்க, அவனுடைய இந்தச் செயலைக் கண்ணுற்ற அவனது அன்னை சோமசுந்தரி,”என்னத் தேடிட்டு இருக்கிறடா?” என அவனிடம் வினவினார்.
“ஒன்னும் இல்லைம்மா. சும்மா நம்ம வீட்டோட கலைநயத்தைப் பார்த்துட்டு இருந்தேன்”
அதைக் கேட்டுப் புன்னகைத்தவர்,”இதெல்லாம் நீ பார்த்துக் கட்டச் சொன்னது தான? அப்போ ரசிக்கத் தான் தோனும்” என்றார்.
திவ்யன்,“மாடியில் ஒரு ரூம் எடுத்துக் கட்டனும்மா”
அவனை யோசனையாகப் பார்த்து விட்டு,”ஏன்டா? இதுவே நமக்குப் போதுமே?” எனக் கேட்கவும்,
“நமக்குப் போதும் தான்ம்மா. ஆனால், எதிர்காலத்துல கண்டிப்பாகத் தேவைப்படும்” என்றவனைப் புரியாமல் பார்த்தார் சோமசுந்தரி.
ஆனால், இவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த திவ்யனின் தந்தையான மகுடபதிக்குத் தங்கள் மகன் என்ன சொல்ல வருகிறான்? என்பது நன்றாகவே புரிந்து போயிற்று.
அதை இப்போது அவனிடம் கேட்க வேண்டாமென்று முடிவெடுத்தவரோ,”அவன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் சுந்தரி. நீ அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடு” என மனைவிக்கு அறிவுறுத்தினார்.
தனது மனதிலிருப்பதைப் புரிந்து கொண்ட தந்தையைப் பார்த்துக் குறுநகை புரிந்தவனோ,
அவரைப் போலவே, அன்னையும், தங்கையும் தனது ஆசைக்குச் செவி சாய்த்து, அதற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் விருப்பம் கொண்டான் திவ்யன்.
- தொடரும்
கருத்து திரி :
Latest Post: " உயிருள்ளவரை யான் உனதே!" Our newest member: Aruna Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page