வரமாய் வந்த உயிரே
அத்தியாயம் 1
2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதை இது.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த சக்திவேல் திடீரென முழிப்பு வரத் தூக்க கலக்கத்துடன் திரும்பித் தன் அருகில் பார்க்கக் காலியாக இருந்தது அது… கண்களைச் சுருக்கி குளியலறையின் வாசலைப் பார்க்க உள்ளே விளக்கு எரியும் நிழல் தெரிந்தது… சிறிது நேரம் படுத்திருந்தவன் குளியலறையின் கதவு வெகுநேரமாகியும் திறக்காமல் இருப்பதை கண்டவன் எழுந்து சென்று மெதுவாகக் கதவைத் தட்டினான் உள்ளே தண்ணீர் சத்தமும் கேட்கவில்லை. கதவைத் தட்டியதற்கான பதிலும் வரவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மறுபடியும் கதவைத் தட்டி
"வைஷு… உள்ள இருக்கியா? இல்லையா…?" என்றவனின் கேள்விக்கு
"ம்ம்..." என்ற பதில் மட்டுமே வந்தது.
"வைஷு… என்ன பண்ற இவ்வளவு நேரமா உள்ள…? கதவைத் திற." என்றதற்கு,
"வரேன்." என்ற கரகரப்புடன் கூடிய குரல் வெளிவர.
அவள் குரல் பேதத்தை உணர்ந்தவன் சற்று அமைதியாக இருக்க. பாத்ரூம் கதவைத் திறந்து வெளி வந்தாள் அவள்…
வெளிவந்தவளை கூர்ந்து பார்த்தவனுக்கு அவள் முகத்தில் அழுத தடம் நன்றாகவே தெரிந்தது.
எந்தக் கேள்வியும் கேட்காமல் அவள் அழுததற்கான காரணத்தை உணர்ந்தவனாகத் தோளோடு அவளை அணைத்து சென்று கட்டிலில் அமர்த்தித் தானும் அமர்ந்தான் அவளுடன் ஒரு வார்த்தையும் பேசாமல்.
கணவன் தன்னிடம் எதுவும் கேட்காமல் இருப்பதை கண்டவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க. அவனும் அந்நேரம் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனின் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்து கொண்டவளை கண்டவனுக்கு பெருமூச்சு தான்.
"எவ்வளவு நேரமா அழுதுட்டு இருக்க.?" எனக் கேட்டான் மென் குரலில்.
எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தவளின் நாடி பிடித்துத் தன்னை பார்க்க வைத்தவன்.
"உன்னைத் தான் டி கேட்கிறேன். எவ்வளவு நேரமா பாத்ரூம் உள்ளேயே அழுதுட்டு இருக்கே.?" என்றான் சற்று அழுத்தமாக.
"டைம் பாக்கல." என்றாள் மெதுவாக.
அலைபாயும் அவள் கண்களையே சிறிது நேரம் பார்த்தவன்
"பீரியட்ஸ் ஆயிட்டியா.?" என்றான் பரிவாக.
அவ்வளவுதான் அவன் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தவளின் அழுகை நிற்கவேயில்லை வெகுநேரத்திற்கு...
மனதில் ஏறிய பாரத்துடன் மார்பில் புதைந்தவளை இறுக அணைத்து அவள் தலையின் மேல் கன்னத்தை வைத்தவனும் விழி மூடி அமர்ந்து விட்டான் அப்படியே. நேரம், மணி மூன்று என அடித்துக் காட்டியது.
மார்பில் ஒண்டி இருந்தவளிடமிருந்து மெது மெதுவாக அழுகை சத்தம் குறைந்து அவ்வப்போது தேவுங்கும் கேவல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. குனிந்து அவளைப் பார்த்தவனுக்கு மனம் பாரமாகி போனது அழுதழுது அவன் மார்பிலேயே தூங்கி இருந்தாள். உடல் சோர்வும் மன உளைச்சலும் அவளை உறக்கத்திற்கு இழுத்துச் சென்று இருந்தது. அவள் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தமிட்டவன் அப்படியே அவளை அணைத்து பிடித்தவாரே கட்டிலில் சரிந்தான் அவளோடு. அவள் நன்றாக உறங்க இவனுக்குத் தான் தூக்கம் எட்டிச் சென்றது. ஏதேதோ நினைவுகள் மனதை அழுத்த அப்படியே கண் மூடிச் சாய்ந்திருந்தான் அவன். சக்திவேல்… அவன் மார்பில் துயில் கொண்டிருந்தவள் அவன் காதல் மனைவி வைஷ்ணவி.
இருவரும் காதலித்து திருமணம் புரியவில்லை. பெற்றோர்களால் பெண் பார்த்து முடிவான திருமணம் தான். திருமணத்திற்கு பின்பே காதலிக்க ஆரம்பித்து இருந்தார்கள் இருவரும்.
ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக் கொள்வதில் இருவரும் சளைத்தவர்கள் இல்லை.
சிந்தனையில் இருந்தவனை கலைத்தது அலைபேசியிலிருந்து வந்த அலாரம் சத்தம். அதன் சத்தத்தில் லேசாக அசைந்தவளின் தூக்கம் கெடாமல் அவளை ஒரு கைக்கொண்டு தட்டிக் கொடுத்தவன் மறுக்கையால் அலைபேசியை வேகமாக எட்டி எடுத்து அலாரத்தை அணைத்தான்.
அவளை நேராகப் படுக்க வைத்தவன் நெற்றியில் மென் முத்தம் கொடுத்துச் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பெருமூச்சு தான்…
இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்தவனாகக் குளியலறைக்கு சென்றவன் காலைக் கடன்களை முடித்துக் குளித்து வெளியே வரும்போதும் அவள் அப்படியே அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அவளின் வயிற்றுக்கு அணைவாக ஒரு தலையணையை வைத்தவன் அறையை விட்டு வெளியேறி லேசாகக் கதவைச் சாற்றிவிட்டு வீட்டின் வரவேற்பறையை பார்த்தவன் யாரும் அங்கு இல்லாமல் அமைதியாகக் காட்சியளிக்க அடுப்படியிலிருந்து கேட்ட சத்தத்தில் அங்குச் சென்று நின்றான்.
பாலை அடுப்பில் ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகில் நின்றிருந்த தாயைப் பார்த்தவன், "அம்மா." என அழைப்பதற்கும், அதற்குள் மகனைக் கண்டு விட்டவர், "என்ன சக்தி.?" எனக் கேட்பதற்கும் சரியாக இருந்தது.
"காபி கொடுங்கம்மா."
"எங்க வைஷ்ணவி.?" எனக் கேட்டவர் தன் போல் வரவேற்பறையில் மாட்டியிருந்த காலண்டரை பார்க்க. அவரின் பார்வையை உணராதவன். "அவளுக்கு உடம்பு சரியில்லம்மா. தூங்குறா." என்றான் மெதுவாக.
"ஹ்ம்ம்.! தெரிஞ்ச கதை தானே." என்று அழுத்தவரிடம்.
"அம்மா." என்றான் சத்தமாகச் சற்று கண்டிப்பான குரலில். அப்போதே அவரின் பார்வை கேலண்டரை தொட்டு மீண்டதை கவனித்தவன்.
"இப்படி செய்யாதீங்கம்மா. நல்லா இல்ல." என்றான் அமைதியான குரலில். பெருமூச்சு விட்டவர் அவனுக்கான காபியை கொடுத்துவிட்டு தனக்கும் தன் கணவருக்கும் எடுத்துக்கொண்டு தங்கள் அறையை நோக்கிச் சென்றார் வேறு எதுவும் அவனிடம் கேட்காமலும், கூறாமலும்.
செல்லும் தாயை பார்த்தவன் காஃபியை அருந்திவிட்டு தன் கடையை நோக்கிச் சென்றான் தன் இரு சக்கர வாகனத்தில்.
சக்திவேல் சொந்தமாகக் கடை வைத்திருந்தான் அரசியல் பேனர்களுக்கு படக் கம்பெனிகளுக்குத் தலைவர்கள், நடிகர், நடிகைகள் படத்தை வரைந்து கொடுப்பதில் வல்லவன். ஆரம்பத்தில் நன்றாக வருமானம் வந்தது போகப்போக ஃப்லக்ஸ் போர்டு, டிஜிட்டல் போஸ்டர்ஸ் என வர இவன் தொழில் கொஞ்சம் மந்தமானது ஆனாலும் இவனிடம் கொடுத்து வரைந்து வாங்குபவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்தார்கள். அதனுடன் அழகாக வரைந்த படங்களை இயற்கை காட்சிகளைப் பிரேம் செய்து விற்பனையும் செய்து வந்தான். அதிலும் நல்ல வருமானமே அவனுக்கு.
கடைக்கு வந்து அமர்ந்தவனுக்கும் ஏதேதோ சிந்தனை தான். இவனுக்கு முன்பே கடைக்கு வந்து காத்திருந்த கடையில் வேலை செய்யும் இருபது வயது ரஞ்சன்.
"அண்ணே என்ன ஒரே சிந்தனையா இருக்கீங்க. அண்ணி கூடச் சண்டையா.?"என்று வாயில் அடக்கிய சிரிப்புடன் கேட்டவனின் கேள்விக்கு,
"ச்ச்ச ஒன்னும் இல்லடா." என்றான் சலிப்பாக.
"என்ன இவ்வளவு சலிப்பு.? அண்ணி கூடச் சண்டையான்னு கேட்டதற்கு, நானாவது என் பொண்டாட்டி கிட்ட சண்டை போடுறதாவதுன்னு இந்நேரம் எங்கிட்ட சண்டைக்கு வந்து இருப்பீங்க. இப்போ என்ன ஆச்சு.? ஒன்னும் இல்லடான்னு ரொம்ப சலிச்சுக்கிறீங்க. தலைக்கு மேல ஆயிரத்து எட்டு வேலை இருக்கு நமக்கு.
தலைவர் படம் நூறாவது நாள் கொண்டாட்டத்திற்கு சூப்பரா வரைஞ்சு கொடுக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்துட்டு போய் இருக்காங்க இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா உங்களுக்கு.?" என்றான் ஏதோ இவன் தான் கடையில் முதலாளிபோல.
அப்படித்தான் சக்திவேல் நடத்துவான் அவனை. முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லை அங்கு. அண்ணன் தம்பி போன்ற பாசமே. அந்த உரிமையில் அண்ணன் சோகமாக இருப்பதை பார்த்தவனுக்கு அவனின் சோகம் எதுவாக இருக்கும் எனத் தெரிந்தே இருந்தது. அதை மாற்றவே அவன் கவனத்தை வேளையில் திசை திருப்ப எண்ணி இப்படி பேசி, தற்போது அவசியமாக முடிக்க வேண்டிய வேலையை ஞாபகம் செய்தான்.
அந்த ஞாபகம் சக்திவேலுக்கும் இருக்கத்தான் செய்தது இரெண்டாயிரத்து ஏழில். வெளியாகிப் பெரும் வெற்றி படமாக அமைந்த ரஜினி நடித்த சிவாஜி படத்தின் நூறாம் நாள் வெற்றி விழாவிற்கு அவரின் ரசிகர்கள் ஆர்டர் கொடுத்திருந்த பேனரை முடிக்க வேண்டிய கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் அதன் வேலை இன்னும் துவங்கவில்லை என்பதும். வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய அவசரத்தை உணர்ந்தவன் தன் குழப்பத்தையும் சோகத்தையும் தள்ளி வைத்துவிட்டு,
"ஆமாடா. வா, வா. எடு எல்லாத்தையும். ஆரம்பிக்கலாம்." என்று கூறியபடியே அவனோடு அனைத்தையும் எடுத்து வைத்து ஸ்கெட்ச் போட ஆரம்பித்தான்.
அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள் அடிவயிற்றில் இழுத்து பிடித்த வலியால் மெதுவாக உறக்கம் களைந்து எழுந்தவள் நேரம் பார்க்கப் பதினொன்று இருபது என்றது அது.
சிறிது நேரம் அப்படியே படுத்து இருந்தவள், கழிவறை நோக்கிச் சென்றாள். நடக்க முடியாமல் வயிறு இழுத்து பிடிக்க வலியைப் பொறுத்துக் கொண்டு சென்று வந்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.
அறையை விட்டு வெளி வந்தவள் டைனிங் டேபிளில் அமர்ந்து காய்களை நறுக்கி கொண்டிருந்த மாமியாரை பார்த்துவிட்டு மெதுவாக அவரின் அருகே சென்றவளை நிமிர்ந்து பார்த்தவரை பார்த்தவள்.
"வயிறு வலி அத்தை. எந்திரிக்க முடியல." என்றாள்.
"அதுதான் சொல்லிட்டு போனானே. இன்னைக்கு நேற்றா நடக்குது இது? பதிமூனு வருஷமா இதுதானே நடந்துட்டு இருக்கு. போ, போய்ச் சூடா காபி போட்டுக் குடி. கொஞ்சம் எதமா இருக்கும். குடிச்சிட்டு மாத்திரை இருந்தா போடு." என்று கூறியபடியே கை வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்தவளுக்கு என்ன பதில் கொடுப்பது எனத் தெரியாமல் சில நிமிடங்கள் நின்றவள் நகரும் நேரம்.
"என்ன ஆச்சு? அப்படியே நின்னுட்டு இருக்க. காபி போட முடியுமா? இல்ல நான் வந்து போட்டுத் தரவா…?"என்றபடி எழ முயன்றவரை பார்த்தவள்,
"இல்ல அத்தை நானே போட்டுக்கிறேன்..." என்றவள் தனக்கான காபியை கலந்து கொண்டு அவருக்கும் கொண்டு வந்து டேபிளில் வைத்தாள்.
அவள் வைத்த காபியை எடுத்து அருந்தியவர் பக்கத்தில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவியை சில நொடிகள் பார்த்திருந்தவர்
"இன்னும் ரெண்டு மாசத்துல பிறந்தநாள் வருது இல்ல உனக்கு.?" என்றவரின் கேள்விக்கு
"ஆமா அத்தை." என்றாள் அவளும். தற்போது ஏன் இந்தக் கேள்வியெனப் புரியாமல்.
"முப்பத்து ஏழு வயசு முடியுது இல்ல.?" என்றவரின் கேள்வியில் சங்கட முற்றவள் ஆம் என்பதாகத் தலையாட்டினாள் மெதுவாக.
"ஹ்ம்ம் உனக்கு முப்பத்து ஏழு அவனுக்கு நாற்பது." என்று பெருமூச்சு விட்டவாறு கூறியபடியே எழுந்து சென்றார் வெட்டி வைத்த காய்கறிகளை எடுத்துக்கொண்டு அடுப்படியை நோக்கி.
கேட்டிருந்தவளுக்கு சொல்ல முடியாத வேதனை மனதை அழுத்தியது.
ஏதேதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவளின் முன்பு தட்டை வைக்க அதில் சூடாக இரண்டு தோசைகளும் நல்லெண்ணெயில் குழப்பிய பொடியும் இருந்தது.
நிமிர்ந்து பார்த்தவளிடம்,
"வெறும் வைத்தோட மாத்திரையைப் போடாத. இந்தத் தோசையை சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுக் கொஞ்ச நேரம் படுத்து எந்திரி." என்று கூறியபடி விட்ட வேலைகளைத் தொடர சென்ற மாமியாரை பார்த்தவளுக்கு தன்னையும் மீறி லேசாகச் சிரிப்பும் வந்தது. அதே நேரம் கோபமும் வந்தது.
தட்டில் இருந்த சூடான தோசையும் நல்லெண்ணெயில் கலந்திருந்த பொடியும் பசியை தூண்டி விட அதற்கு மேல் எந்தச் சிந்தனைக்கும் வழி கொடுக்காமல் வேகமாக உண்டு முடித்தாள் வைஷ்ணவி. தன் அத்தை கூறியது போல ஒரு மாத்திரையை விழுங்கிக் கட்டிலில் படுத்தவளுக்குத் தன் கணவன் எப்பொழுது வருவானோ என்ற சிந்தனை தான்.
முடிக்க வேண்டிய வேலைகள் இருந்ததால் அன்று முழுவதும் வீட்டிற்கு வராமல் வேலை செய்துகொண்டிருந்தான் சக்தி. இது அவ்வப்போது நடக்கும் நிகழ்வு தான். அப்படியான நேரங்களில் கடையில் வேலை செய்யும் ரஞ்சன் வீட்டிற்கு சென்று உணவை வாங்கி வந்து விடுவான் கிடைக்கும் நேரத்தில் இருவரும் உண்டு கொள்வார்கள்.
இன்றும் அவ்வாறே வீட்டிலிருந்து உணவை வரவைத்து சாப்பிட்டு இருந்தான் சக்தி. மனைவியைப் பற்றிய சிந்தனை இருந்தாலும் வீட்டிலிருக்கும் தன் அன்னை அவளைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் இருந்தது அவனுக்கு.
ஆனால் அவனின் தாயைப் பற்றிய பெரும் புகாருடன் இவன் வரவுக்காகக் காத்திருந்தாள் இவனின் மனைவி.