About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
சில்லாஞ்சிருக்கியே - 4
இரண்டு நாட்கள் கடந்திருக்க யாஷ் தமிழின் வீட்டுக்கு குடிபெயர்ந்தும் வந்தாயிற்று. தேன்மொழி தமிழுடன் அவள் வீட்டில் தங்கியிருக்க இந்த இரண்டு நாட்கள் ஊர் மக்களின் பேச்சுக்களை காதில் வாங்காமல் தேநீர் கடையில் அவளின் வேலையை செவ்வனே செய்தாள். தன்னால் இயன்ற உதவியாக தமிழுக்கு இருக்கும் என்று எண்ணி. தமிழின் எண்ணம் சரியாக நடந்தேறியது.
அன்று மதியம் மணி 3 இருக்கும். மந்திரமூர்த்தி ராக்காயி தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்க யாஷும் அவ்விடம் வந்தான்.
“என்ன தம்பி? வீடெல்லாம் சௌரியமா இருக்கா? ஏதாவது வசதி குறைச்சலா இருந்தா சொல்லுங்க.. நம்ம புள்ள தான்” என்றவர் தேநீர் ஆற்றிக் கொண்டிருந்த தமிழை பார்த்தபடி கூறினார். மந்திரமூர்த்தி அருகே இருந்த பெரியவர் ஒருவரோ,
“ஏலே என்ன நீயு? ஆளு பார்க்க வெள்ளைக்காரன் போல இருக்காப்ல. அவர் கிட்ட போய் தமிழுல பேசிட்டு இருக்க டே.” என்க அதில் சிரித்த மந்திரமூர்த்தியோ,
“அண்ணாச்சி… இந்த தம்பி தமிழ்ல பெரிய பெரிய பட்டப்படிப்பெல்லாம் படிச்சுருக்காப்டி.. நம்மள விட அழகா தமிழ்ல புகுந்து விளையாடுவாப்ல” என்றவர் யாஷிடம் திரும்பி,
“என்ன தம்பி நான் சொல்றது?” என்றிட அதில் சிரித்தவன்,
“வீடு ரொம்ப வசதியா இருக்கு சார். ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றிட அவன் சரளமாக தமிழ் பேசுவதை அந்த பெரியவர் வாய்பிளந்து பார்த்தார்.
“அடியாத்தே.. ரொம்ப நல்ல தமிழ் தெரியுமோ” என்க யாஷோ,
“தமிழை தானே. ரொம்ப நல்லா தெரியுமே” என்றவனின் பார்வை கடையில் நின்றிருந்த தமிழை தொட்டு மீண்டது. அதனைக் கவனித்த தேன்மொழியோ,
“யக்கா.. தமிழக்கா..” என்றழைக்க,
“என்னட்டி?” என்றாள்.
“எனக்கென்னமோ அந்த இங்கிலீஸ்கார அண்ணா உன்னை ரூட்டு விடுறாப்டின்னு தோணுது” என்றிட அது தமிழுக்கும் தோன்றினாலும் அவனின் கலாச்சாரம் தெரிந்தவள் அவ்வாறெல்லாம் இருக்காது என்றும் நம்பினாள்.
“ஏட்டி.. என்ன உளருற நீயு? சும்மா என்னத்தயாச்சு கிளப்பிவிடாத” என்றவள் தன் பணியை கவனிக்கலானாள்.
“சார் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்” என்றிட மந்திரமூர்த்தியோ,
“சொல்லுங்க தம்பி” என்றார்.
“என்னோட வீடியோ ரெக்கார்டிங் இன்னைல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன். எங்க இருந்து ஆரம்பிக்குறதுன்னு தெரியல. கூட இந்த ஊரைப் பத்தி நல்லா தெரிஞ்ச யாராச்சும் வந்தா நல்லா இருக்கும்.” என்றிட அவரோ,
“அட இவ்ளோதானா தம்பி.. இங்க பக்கத்துல பண்பொழின்னு ஒரு ஊரு. அங்க மலை மேல திருமலைக்குமார சாமி கோவில் இருக்கு. இடம் சும்மா அம்சமா இருக்கும். அங்க இருந்து ஆரம்பிங்க. அந்த முருகன் எல்லாம் நல்லபடியா நடத்தி வைப்பாரு” என்றிட,
“அப்படியா.. சரிங்க சார். கூட யாராச்சும்..” என்று இழுத்தவன் தமிழை ஒரு கணம் பார்த்துவிட்டு மனதினுள்,
‘இவ நம்ம கூட வந்தா நல்லா இருக்கும். ஆனா வர மாட்டா எப்படியும். முருகர் நல்லபடியா நடத்தி வைப்பாருன்னு சொல்றாரே. இதை நடத்தி வைக்கட்டுமே பார்ப்போம்’ என்று நினைத்து ஒரு நொடி கூட ஆகவில்லை அதற்குள் மந்திரமூர்த்தியோ,
“நேத்ரன் வயலுக்கு போய்ட்டு தாமதமா தான் வருவான்.. வேற யாரை அனுப்பலாம்…” என்றவருக்கு அப்பொழுது தான் தமிழ் வாரந்தோறும் செவ்வாய் கிழமை அங்கு சென்று வருவது நினைவிற்கு வர,
“இன்னைக்கு செவ்வாய் கிழமை தானே..” என்றவர்,
“ஏ புள்ள தமிழு…” என்று அழைத்தார்.
“என்ன மாமா?” என்றாள்.
“நீ இன்னைக்கு நம்ம திருமலை கோவிலுக்கு போவ தானே. போகும் போது நம்ம தம்பியையும் சேர்த்து கூட்டிட்டு போய்ட்டு வந்துரு என்ன” என்றவர் அவளின் பதிலைக் கூட கேட்காமல்,
“அப்போ நான் வரேன் தம்பி” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்ய அவனோ,
‘ஓ மை காட் முருகா.. யூ ஆர் அமேசிங்’ என்று நினைத்து அகமகிழ்ந்தவன் அவளை பார்த்தான்.
“உனக்கு ஓகே தான?” என்று கேட்க அவளோ,
‘வேற வழி..’ என்று நினைத்துவிட்டு,
“ஷார்ப்பா நாலு மணிக்கு வந்துருக்கணும். இல்லைனா விட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்று கூற அவனோ,
“ஆஹான் சரிங்க மேடம்” என்றுவிட்டு செல்ல அவனின் மேடம் என்ற அழைப்பு அவளை சிரிக்க வைத்தது.
“என்னக்கா முருகர் ஏதோ பிளான் போடுறாரு போலயே” என்று தேன்மொழி கேட்க அதில் அதிர்ந்தவளின் கையோ தானாக தன் கழுத்தில் இருந்த “ஜோ” என்ற டாலரை கலக்கமாக பற்றிக் கொண்டது.
“சும்மா இருட்டி நீ.. எல்லாம் இந்த மூர்த்தி மாமாவை சொல்லணும். இப்படி அவன்கூட என்னை கோர்த்துவிட்டுட்டு போறாரு.” என்று நொந்துக் கொள்ள தேனோ,
“அவர் சரியான காரியவாதிக்கா. இதே அவருக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படி அசலூர்காரன் கூட அனுப்பி விடுவாரா..” என்று கேட்க அவளோ,
“அவர் கொஞ்சம் காசு விஷயத்துல பேராசைக்காரர் தான். ஆனா நீ சொல்ற அளவுக்கு மோசம் கிடையாது. என்மேல இருக்குற நம்பிக்கையா கூட இருக்கலாம் தானே” என்று கேட்க அதற்கு மேல் தேன்மொழி வாதாட விரும்பவில்லை.
நேரம் கடக்க யாஷோ அவள் கூறிய நேரத்திற்கு கால்மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டிருந்தான். வெள்ளை சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்தபடி கையில் கேமராவுடன் நின்றிருந்தவனை தூரத்தில் இருந்து பார்த்தபடி நேத்ரனின் டிவிஎஸ்50-யில் வந்துக் கொண்டிருந்தாள் தமிழ்ஜோதி. மஞ்சள் நிற சுடிதாரில் தலைமுடியை பின்னலிட்டிருந்தாள். அவளையும் வண்டியையும் பார்த்தவன்,
“இதுலையா போறோம்?” என்று கேட்க,
“ஏன் துறைக்கு பென்ஸ் கார் வேணுமாக்கும்?” என்று கண்களை சுருக்கி அவள் கேட்க,
“ச்ச ச்ச. இதுல கிடைக்குற பீல் அதுல வருமா என்ன” என்றவன் அவளின் தோள்தொட்டு வண்டியின் பின்னே ஏறி அமர்ந்தான்.
“ஹெலோ.. கொஞ்சம் கேப் விட்டு உட்காரணும் சொல்லிட்டேன். இந்த ஸ்பீட் பிரேக்கர்ல இடிக்குற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது” என்றிட அவனோ,
“இதுவரை எனக்கே அந்த ஐடியா தோணலை.” என்றவன் உதடுமடித்து சிரிக்க கண்ணாடியில் அவனைப் பார்த்து முறைத்தவள் வண்டியைக் கிளப்பினாள். அவனும் சற்று இடைவெளி விட்டு தான் அமர்ந்திருந்தான்.
செல்லும் வழியில் சுற்றிலும் தோன்றிய இயற்கை காட்சிகளும் அந்த மாலை நேர குளிர் காற்றும் அதோடு சேர்ந்து வீசிய சாரலையும் ரசித்தபடி வந்தவர்கள் அரைமணி நேரத்தில் கோவிலின் அடிவாரத்தை அடைந்தார்கள். மலையின் மேல் செல்ல வழிபாதை இருந்தாலும் எப்பொழுதும் படிகளில் ஏறி செல்லும் பழக்கமுடையவள் கீழேயே வண்டியை நிறுத்தினாள்.
“ஹே அங்க ரோடு இருக்கு தானே மேல போக.. ஏன் இங்கேயே நிறுதிட்ட” என்றவன் கேட்க,
“எனக்கு எப்போதும் படில ஏறி போய் தான் பழக்கம். உங்களால நடக்க முடியலைனா நீங்க வேணா வண்டியை எடுத்துட்டு மேல வாங்க” என்றிட அவனோ,
“என்னால முடியாதுன்னு நீ எப்படி முடிவு பண்ணலாம். விட்டா உன்னை தூக்கிட்டு கூட என்னால படியேற முடியும்.” என்றிட அவனை மேலும் கீழும் பார்த்தவள்,
“மனசுல சென்னை எக்ஸ்பிரஸ் ஷாருக்கான்னு நினைப்போ” என்றாள்.
“ச்ச ச்ச. அதை விட நான் ஸ்ட்ராங். என்ன மெக்சிமம் ஒரு 200 ஸ்டெப்ஸ் இருக்குமா?” என்றவன் காலரை தூக்கிவிட அவளோ,
“600 ஸ்டெப்ஸ்” எனவும் சிறு அதிர்வு அவன் முகத்தில் தெரிந்தாலும் அவளறியமல் சமாளித்தான். ஆனால் அதனை கவனித்துவிட்டவள் உதடுமடித்து சிரித்தபடி நகர்ந்தவள் பூக்கடையில் சென்று நின்றாள். முருகனுக்கு மாலை வாங்கியவள் முன்னே நடக்க உடன் வந்தவனை காணாமல் திரும்ப அவனோ கையில் மல்லிப்பூவுடன் ஓடி வந்தான்.
“ஹே கீப் திஸ்” என்றிட அவளோ,
“நான் கேட்டேனா உங்ககிட்ட” என்றாள் புருவம் இடுங்க.
“எல்லாரும் வச்சுருந்தாங்க. நீ வைக்கலையேன்னு தோணுச்சு. அண்ட் அல்சோ எனக்காக இவ்ளோ தூரம் வந்துருக்க” என்றிட அவன் தன்னை இவ்வளவு தூரம் கவனித்திருக்கிறான் என்று உள்மனம் ஒரு நிமிடம் சொல்லொண்ணா உணர்வினை உணர்ந்தது அவளறியாமல். முகத்தில் எந்த பாவனையும் காட்டிக்கொள்ள விரும்பாதவளோ,
“உங்களுக்காக வரலை ட்யூட்.. நான் எப்போதும் வருறது தான்.” என்றாள் புருவம் உயர்த்தி.
“ஹான் சரி. என்னை பெரிய மனசு பண்ணி கூட்டிட்டு வந்துருக்க தானே. அதுக்காக கிஃப்ட்டா வச்சுக்கோ” என்றிட அவளோ வாங்க தயங்கினாள்.
“இட்ஸ் ஜஸ்ட் அ பிளவர்… ரைட்? ஏன் இவ்ளோ திங்க் பண்ற” என்று கேட்டான். நடப்பதை கவனித்த பூக்கார பெண்மணியோ,
“எங்க ஊருல கட்டிக்க போறவங்க தான் பூ வாங்கி கொடுப்பாங்க சாரே.. அதான் அந்த பொண்ணு தயங்குது போல..” என்றிட அவனோ,
“ஓஹோ இதுல இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கோ” என்றவனுக்கு அப்பொழுது தான் தான் படித்த தமிழ் நாவல்களில் இது போன்ற காட்சியை படித்தது நினைவிற்கு வந்தது.
“பரவாயில்லா தாயி.. துறை தெரியாம வாங்கிட்டு வந்துட்டாரு.. பூவை வேணாம்னு சொல்ல கூடாது வாங்கி வச்சுக்கோ” என்றிட அவளும் தயக்கத்தோடு வாங்கி தலையில் சூடிக்கொண்டாள். அவன் சிரிக்க அவளோ,
“பூக்கடைல ஒரு ஆம்பள பூ வித்தா வாங்க தான செய்வோம். அப்படி நினைச்சுக்குறேன்” என்று கூற அவள் கூற்றில் சத்தமாக சிரித்தவன்,
“அதுசரி… பூ வச்ச அப்புறம் இன்னும் அழகா இருக்க” என்றவன் படிகளில் ஏற ஆரம்பித்தான்.
நேற்று தான் அவனை பார்த்திருக்கிறாள். அதுவும் வெளிநாட்டுக்காரன் வேறு. ஆனால் இதுவரை எந்த ஒரு ஆடவனுடன் தோன்றாத ஒன்று இவனோடு தோன்றுவதை அவளால் நன்கு புரிந்துக் கொள்ள முடிந்தது. அதற்கு அவன் அவளின்மேல் எடுத்துக் கொள்ளும் உரிமை தான் காரணமோ என்று மனம் பதில் கூறினாலும் இதே இடத்தில் வேறொரு ஆடவன் இவ்வாறு நடந்துக் கொண்டாள் அதற்கு அனுமதித்திருப்பாளா என்று மூளை கேள்வி எழுப்ப, மனதிற்கும் மூளைக்கும் நடுவில் பெண்டுலமாக அல்லாடினாள். கைகள் தானாக தன் கழுத்தில் இருந்த ஜோ என்ற டாலரை பற்றிக்கொள்ள,
‘இல்ல இவர் மேல கோபம் வராததுக்கு காரணம் அவரோட கலாச்சாரப்படி அவருக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. ஆனாலும் அவர் மோசமா ஒன்னும் நடந்துக்கல. ஒரு கண்ணியம் இருக்கு. ஆதனால தான் நான் பெருசா எடுத்துக்கல.’ என்று தனக்குத்தானே சாக்கு கூறிக் கொண்டிருந்தவளை யாஷின் குரல் தான் நிகழுக்கு அழைத்து வந்தது.
இருவரும் படிகளில் ஏற ஆரம்பித்தனர். வலப்புறத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அழகாக காட்சியளிக்க அதற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாய் கூட்டம் கூட்டமாய் மேகங்கள் மலை உச்சியில் படர்ந்து அலங்கரித்தபடி காட்சியளித்தன. மேலே ஏற ஏற அடித்த குளிர் காற்றில் இருவரது மேனியும் புல்லரித்து சிலிர்த்தது. எப்போதும் ரசிக்கும் காட்சி தான் ஆதலால் காற்றை மட்டும் ஆழ்ந்து சுவாசித்தபடி சாதாரணமாக தமிழ் வர, யாஷோ சுற்றி தெரிந்த காட்சிகளில் லயித்தபடி வந்தான். இடையிடையே கேமராவில் படம் பிடித்தபடி.
“வாவ்.. ரியலி அமேசிங். இதை ரசிக்க தான் வீக்லி ஒன்ஸ் இங்க வரியா நீ” என்றவன் கேட்க அவளோ,
“அதோட சேர்த்து அந்த முருகனையும் தரிசிக்க தான். ரொம்ப பவர்புள் தெரியுமா. நாம இங்க வந்து மனசுல நினைச்சா கூட அது நடக்க வாய்ப்பு இருக்கு. ஏன் சாதாரணமா ஒரு விஷயம் பத்தி இங்க வச்சு பேசிருப்போம். ஆனா அது எதேர்ச்சையா நடந்துரும். நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.” என்று கூற அவள் கூறுவதை சிரித்தபடி கேட்டு வந்தான் அவன். பிறகு எதையோ சிந்தித்தவள்,
“ஓ சாரி. நீங்க க்ரிஸ்டியனோ.. மறந்துட்டேன்” என்றிட அவனோ,
“இதுல என்ன இருக்கு. நான் பொதுவா நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு மட்டும் நம்புறவன். எனக்கு மதம் ஒரு பிரச்சனை இல்லை” என்க,
“ஓஹோ.. சரி தான்” என்றவள் திடீரென்று ஆவென அலறியவாறு அவ்வாறே படியில் காலைப் பிடித்தபடி அமர்ந்துவிட,
“ஹே என்னாச்சு?” என்று அவனும் பதறி கேட்டான்.
“கால் இடறி சுளுக்கிடுச்சுன்னு நினைக்குறேன்” என்றவளின் முகத்தில் அப்பட்டமான வேதனை தெரிந்தது. அவனுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் காலைப் பற்றி நீவி விடலாம் என்றால் அவள் ஏதும் தவறாக எண்ணுவாளோ என்று தோன்றியது.
“நான் ஏதாச்சும் செய்ய முடியுமா?” என்று அவன் கேட்க அவனை அமைதியாக ஏறிட்டு பார்த்தாள். அவன் முகத்தில் நிஜமான கவலை தெரிந்தது. 300 படிகள் ஏறி வந்துவிட்டார்கள். ஒன்று மேலே 300 படிகள் ஏற வேண்டும். அல்லது கீழே 300 படிகள் இறங்க வேண்டும். ஆனால் இந்த சுளுக்கை வைத்துக் கொண்டு அவளால் 300 படிகள் ஏறவோ இறங்கவோ முடியாது என்பது அவளுக்கே தெரியும்.
“நாம வேணா திரும்ப போயிடலாமா?” என்று அவன் கேட்க அவளோ,
“இல்ல. எல்லா செவ்வாய்கிழமையும் முருகனை பார்த்துடுவேன். பார்க்காம போனா மனசு கேட்காது” என்றிட அவனோ,
“ஹெல்த் தான் முதல்ல முக்கியம். பீரியட்ஸ் டைம்ல கோவில் வராம தான இருப்ப. அப்படி நினைச்சுக்கோ. வா போலாம்” என்றிட,
“மேல தேங்காய் கடைல ஒரு பாட்டி இருப்பாங்க. அவங்க சுளுக்கு தடவி விடுவாங்க. இங்க வர யாருக்காச்சு இப்படி ஆச்சுனா அந்த பாட்டி தான் தடவி விடுவாங்க. நான் மெதுவா நடந்து மேல வரேன். ஐ கேன்” என்றிட அவனும்,
“சரி வா” என்றபடி அவனது கையை நீட்டினான். அவளோ ஒரு கணம் யோசித்தாள். பின் வேறு வழியின்றி அவனது கையைப் பற்றிக் கொண்டு எழுந்தவள் ஒரு அடி எடுத்து வைக்க சுள்ளென வலியெடுக்கவும் தடுமாற அவனோ,
“வேற வழியில்லை. ஆபத்துக்கு பாவமில்ல. தூக்கிடுறேன். ஏதும் நினைச்சுக்காத” என்றபடி அவளை அலேக்காக ஆட்டுக்குட்டி போல தூக்கிக் கொண்டவன் படிகளில் ஏற ஆரம்பித்தான். இதனை எதிர்பாராமல் அதிர்ந்தவள்,
“என்ன பண்றீங்க? இறக்கி விடுங்க. நான் நடந்து வந்துருவேன்” என்று அவன் கைகளில் நெளிந்தபடி கூற அவனோ,
“இந்த காலை வச்சுக்கிட்டு உன்னால ஏற முடியாதுன்னு உனக்கே தெரியும். தென் வொய் ஆர் யூ க்ரியேட்டிங் திஸ் மச் ஸீன்?” என்று கேட்க,
“ஹெலோ யார் ஸீன் போட்டா. பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க.” என்று அவள் சீற,
“ஆஹான். ஊருக்கு தான் அட்வைஸா. நீ பாலோவ் பண்ணுறது கிடையாது என்ன?” என்க அதில் புரியாமல் பார்த்தவள்,
“என்ன உளருறீங்க?” என்றாள்.
“ஆமா. உன் கடைல ஒரு பொண்ணு இருப்பாளே. ஹான் தேன்மொழி. அவளுக்கு மட்டும் ஊர் ஆயிரம் பேசும். அதையெல்லாம் கண்டுக்கக் கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுன. இப்போ நீ என்ன செய்யுற?” என்றான்.
“அதுவும் இதுவும் ஒண்ணா உங்களுக்கு?” என்றிட ஒருகணம் நின்றவன் அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி,
“இங்க பாரு. உனக்கும் எனக்கும் தெரியும். இங்க என்ன நடந்துச்சுன்னும் நான் எதுக்கு உன்னை தூக்கிருக்கேன்னும். அப்புறம் ஏன் மத்தவங்களை நினைச்சு கவலைப்படுற. அப்படியேனாலும் இங்க ஆள்நடமாட்டமே இல்ல. என்னோட டச் உனக்கு அன்கம்போர்ட்டபிளா இருந்தா சொல்லு. நான் இறக்கிடுறேன்” என்று அவன் கேட்க எவ்வாறு கூறுவாள். அவள் இடையைக் கூட தீண்ட எண்ணாதவன் தோள்பட்டையில் கைவைத்து தான் தூக்கியிருக்கிறான். அவன் கேட்டதற்கு இல்லையென அவள் தலையசைக்க,
“அப்புறம் என்ன. கூல்” என்றவன் மீண்டும் படியில் ஏற ஆரம்பித்தான். எதிரில் சற்று தூரத்தில் யாரோ இறங்கி வர அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க எண்ணியவள் அவளை இறக்கினான். எதிரில் வந்தவர் கடந்து கீழே சென்றதும் மீண்டும் தூக்கிக் கொண்டவன் நடக்க ஆரம்பித்தான். அதில் பெண்ணவளின் மனமோ வெகுவாக கவரப்பட்டது என்பதே உண்மை.
‘நிஜமாவே ரொம்ப நல்லவர் தான் போல’ என்று அவள் மனதில் நினைக்க அவனோ,
“நீ சொன்னது உண்மை தான் போல” என்றான். அதில் அவள் அதிர்ந்து விழிக்க,
‘மனசுல நினைச்சது இவருக்கு எப்படி தெரிஞ்சுது?’ என்று நினைத்தவள்,
“என்னது உண்மை?” என்று கேட்டாள். அவனோ,
“இல்ல இங்க வச்சு சாதாரணமா பேசினா கூட அது நடக்கும்னு சொன்னியே. உண்மையோன்னு இப்போ தோணுது. சும்மா ஒரு பேச்சுக்கு உன்னை தூக்கிட்டு கூட என்னால நடக்க முடியும்னு சொன்னேன். அப்படியே நடந்துருச்சு” என்றிட அவன் கூற்றில் சிரித்தாள் பெண்ணவள்.
ஒருவழியாக மேலே வந்து சேர்ந்தனர் இருவரும். வந்ததும் தேங்காய் கடை பாட்டியை அழைத்து சுளுக்கு தடவியதும் தான் நடக்க ஆரம்பித்தாள் தமிழ். பின் கோவிலுக்குள் சென்று தரிசித்துவிட்டு கோவிலின் சுற்றுப்புறத்திற்கு வந்து நின்றார்கள். கேமராவை இயக்கியவன்,
“ஹாய் காய்ஸ். இது தான் திருமா… திருமலா..” என்று கோவிலின் பெயர் வாயில் நுழையாமல் தடுமாற அவளோ,
“இப்படி தடுமாறுனா என்னைக்கு பேசி முடிக்குறது” என்றவள் கேமராவை தன் புறம் திருப்பி,
“வணக்கம். இப்போ நாம தென்காசி மாவட்டத்துல பண்பொழிங்குற சின்ன ஊருல இருக்குற திருமலைக்குமாரசாமி கோவில்ல நிக்குறோம்..” என்று ஆரம்பித்தவள் மேலும் கோவில்பற்றியும் சுற்றுப்புறம் பற்றியும் பல தகவல்கள் கூறினாள். அவள் கூறும் விதமும் நேர்த்தியும் ஆடவனை வெகுவாக கவர புன்னகை தவழ ரசித்து பார்த்தான். கூறிமுடித்தவள்,
“இப்படி தான் பேசணும். நான் சொன்னதை ப்ராக்டீஸ் பண்ணி நீங்க பேசுங்க” என்றிட அதெல்லாம் அவன் செவியில் விழுந்ததா என்று தெரியவில்லை. என்ன நினைத்தானோ சற்றும் யோசிக்காமல் சட்டென,
“ஐ நீட் யூ” என்றான் யாஷ். தமிழ் தான் அதிர்ச்சியோடு நோக்கினாள் அவனை.
தொடரும்…
Latest Post: காலம் தாண்டிய பயணம் 03 Our newest member: drr Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page