About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
காண்போரின் கண்களை விரிவடையச் செய்யும் விதத்தில் அழகான வண்ண மாக்கோலம், பல வண்ணங்களில் கலவையான வாசனையைச் சுமந்து கொண்டிருக்கும் பூந்தோரணங்கள், வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த மேஜை சுமந்து கொண்டிருந்த பன்னீர் தெளிப்பான் ஜாடி, மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை சரசரக்க அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த பெண்கள், வட்டமேஜை மாநாடு போட்டு பேசிக்கொண்டிருந்த ஆண்கள், சுழலும் பம்பரம் போல ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித்திரியும் இளவட்டங்கள், கொலுசு சத்தத்தாலும், கொஞ்சும் கிளியைப் போன்ற சிரிப்பினாலும் இன்னிசை பாடி மனதை நிறைக்கும் குழந்தைகள் என அனைத்தும் சேர்ந்து அது திருமண வீடு என்பதை அடையாளப்படுத்தியது.
தாமரைக்கண்ணன் குறிஞ்சி, நரசிம்மன் செம்பருத்தி என்பதாய் மணமக்களின் பெயர்கள் பதிக்கப்பட்ட பதாகை, நடந்தது பெண் கொடுத்து, பெண் எடுத்து இரட்டை வைபவம் என்பதை உணர்த்தியது.
திருவெற்றியூர் முருகன் கோவிலில் வைத்து, எளிமையாக அதே சமயம் எந்த விதமான குறையும் இல்லாமல் நடந்து முடிந்த திருமணத்தை தொடர்ந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் சோழிங்கநல்லூரை அடுத்த கேளம்பாக்கம் நகரில், மணமகன்களில் ஒருவனான தாமரைக்கண்ணனின் குடும்பத்திற்குச் சொந்தமான பெரிய வீட்டில் வைத்து நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இளரோஜா நிற காஞ்சிப் பட்டில் பெயருக்கு ஏற்ப அழகான அப்சரஸாக முகம், அகம் நிறைந்த புன்னகையுடன் வீற்றிருந்தாள் முதலாம் மணப்பெண் செம்பருத்தி. அவளுக்கு அருகே நிர்மலமான முகத்துடன் அமர்ந்திருந்தான் அவள் கணவன் நரசிம்மன்.
அவர்களைத் தொடர்ந்து யாருக்கு வந்த விருந்தோ என்கிற பாவனையில், பச்சை வண்ண பட்டுப்புடவையில் கொலு இருக்கும் அம்மனைப் போல் வீற்றிருந்தாள் இரண்டாம் மணமகள் குறிஞ்சி. அவள் அருகே யாரின் வரவையோ எதிர்பார்த்து வாசலில் கண்களை பதித்திருந்தான் அவள் கணவன் தாமரைக்கண்ணன்.
“கண்ணா நீ யாரை எதிர்பார்க்கிறன்னு தெரியுது. கல்யாண நாள் அன்னைக்கு நிராசையடையாதே டா.” என மகனின் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைப்பது போல், நீ எதிர்பார்க்கும் அந்த நபர் நிச்சயம் வரப்போவதில்லை என்பதை சொல்லிச்சென்றார் அவன் அன்னை தாமரை.
“கல்யாணமே நிராசையாத் தான் நடந்திருக்கு. இதில் புதுசா என்ன நிராசையைப் பத்தி பேசுறாங்க இந்தம்மா.” வாய் கொள்ளாமல் சொல்லி விட்டாள் குறிஞ்சி.
“குறிஞ்சி அமைதியா இரு.” என்றொரு அதட்டல் வந்தது இவர்களிடம் இருந்து சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த நரசிம்மனிடம் இருந்து.
யாரையும் வந்து பார் என்று கேட்கும் ரகமான குறிஞ்சி அடங்குவது என்றால் அது அவள் தமையன் நரசிம்மனுக்கு மட்டுமே. இப்போதும் தமையனின் குரல் கேட்கவும் தன்னால் அமைதியானாள்.
மகாவிஷ்ணு, தாமரை தம்பதியினரின் மகன் தாமரைக்கண்ணன், மகள் செம்பருத்தி. மகனுக்கு மனைவியின் பெயர், மகளுக்கு மனைவியின் விருப்பமான பூவின் பெயரை வைக்கக்கூடிய அளவு அன்பானளரான மகாவிஷ்ணு அரசு அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். தாமரை சிறந்த இல்லத்தரசியாக இருந்தவர்.
தாமரைக்கண்ணன் இக்கால இளைஞர்களைப் போல பொறியியல் முடித்துவிட்டு மென்பொறியாளராக வேலை செய்து கொண்டிருக்கிறான். செம்பருத்தி தனியார் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
இந்தப்பக்கம் வெங்கடாச்சலம், மல்லிகா இருவருமே பணிநிறைவுக்காக காத்திருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். மூத்தமகன் நரசிம்மன் அரசு வங்கியில் பணியாற்றுகிறான். கணிதத்தில் இளங்கலை, முதுகலை படித்து முடித்த பின்னாலும் வேலைக்குச் செல்ல தோன்றாமல் வீட்டில் இருக்கிறாள் அவ்வீட்டின் கடைக்குட்டி குறிஞ்சி.
நரசிம்மன் பெண் கேட்டு மகாவிஷ்ணு வீடு வந்து சரியாக ஐம்பது நாள்களில் இந்த இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தாமரைக்கண்ணன், குறிஞ்சி தம்பதியருக்கு குறிஞ்சியின் தங்கை முறை உள்ள பெண் பால், பழம் கொடுக்க அடுத்ததாக நரசிம்மன், செம்பருத்தியின் முறை வந்தது.
“செம்பாவுக்கு தங்கச்சி முறை உள்ள யாரும் வாங்கம்மா.” மல்லிகா குரல் கொடுக்க அவ்விடத்தில் அசாத்திய அமைதி.
“எதுக்காக தங்கச்சி முறை உள்ள பொண்ணு. செம்பாவுக்கு தான் கூடப்பிறந்த தங்கச்சி ஒருத்தி இருக்காளே. எங்க அவளை, நான் காலையில் இருந்து பார்க்கவே இல்லை.” வந்த வேலையை சிறப்பாக ஆரம்பித்து வைத்தார் சொந்தத்தில் ஒரு பாட்டி.
“பாரி” கண்ணனின் இதயம் ஒருமுறை தங்கையின் பெயரை சொல்லிப் பார்த்தது. அதற்கு நேர்மாறாக அதுவரை விரிந்திருந்த செம்பருத்தியின் முகம், தங்கையின் பெயர் கேட்ட உடன் மின்னல் பட்ட மலராக நொடியில் வாடிப்போனது.
“தாமரை எங்க உன் கடைசிப் பொண்ணு பாரிஜாதம்.” மீண்டும் ஒருமுறை கனத்த குரலில் உரக்க கேட்டார் சொந்தக்கார பாட்டி.
எங்கே மற்றவர்களும் இதையே கேட்க ஆரம்பித்து விடுவார்களோ என்னும் பதற்றத்தில், “அவளுக்கு அம்மை வார்த்து இருக்கு. அதனால் தான் தனியா வேறொரு இடத்தில் வைச்சிருக்கோம்.” வாய்கூசாமல் பொய் சொன்னது சாட்சாத் பாரிஜாதத்தைப் பெற்றெடுத்த தாய் தாமரையே.
மகளின் நினைவில் மகாவிஷ்ணுவின் முகம் வாடிப்போக, அங்கிருந்து நகர்ந்து அறைக்குள் சென்றுவிட்டார். அவரைப் பார்த்த தாமரையின் கண்கள் கலங்கியது.
“அம்மை போட்டு இருந்தா இறங்குற வரை கல்யாணத்தை தள்ளி வைக்க முடியாதாமா? இது என்ன பல மாசத்துக்கு முன்னாடியே நிச்சயிக்கப்பட்ட கல்யாணமா? தீடீர் கல்யாணம் தானே. வீட்டில் இரண்டு கல்யாணம் நடக்கும் போது வீட்டுப் பொண்ணு கூட இருக்க வேண்டாமா? இது காலத்துக்கும் அந்தப் பொண்ணு மனசில் குறையாத் தானே இருக்கும்.” ஆரம்பித்து வைத்தார் சொந்தக்காரப் பெண் ஒருவர்.
“இது மட்டும் தான் குறையா என்ன?” வாய்விட்டு முணங்கினாள் குறிஞ்சி. கண்ணனின் முகம் சுருங்கிப் போனது.
“எனக்கென்னவோ இவங்க பொய் சொல்றாங்கன்னு தோணுது. நாலு நாள் முன்னாடி கூட நான் பாரியைப் பார்த்தேன். அதுக்குள்ளவா அவளுக்கு அம்மை போட்டு இருக்கும்.” என்றார் கண்ணனை தன் மகளுக்குக் கேட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கோபத்தில் இருந்தவர்.
“காத்து வாக்கில் ஒரு செய்தி வந்தது. எந்தளவு உண்மைன்னு தெரியல. இந்தக் கல்யாணத்தில் பாரிக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லையாம். கடந்த இருபது நாளுக்கும் மேலா பாரி வீட்டிலேயே இல்லையாம். கிட்டத்தட்ட உறவை முறிச்சிக்கிட்டு போன மாதிரியாம்.” என்றார் இன்னொருவர்.
செம்பருத்தியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இருளடைந்தது. அவள் கைகள் கழுத்தில் கிடந்த மாலையை இறுக்கமாகப் பிடிக்க அதன் அழுத்தத்தில் மலர்கள் உதிர ஆரம்பித்தது.
“பார்த்து, எல்லாப் பூவும் உதிர்ந்திட்டா அதை வேற சகுனத்தடையா பார்ப்பாங்க எங்கம்மா.” கரகரப்பான குரலில் அவளை நினைவுக்கு கொண்டு வந்தான் நரசிம்மன்.
அவளை இயல்பாக்கும் முயற்சி தான் என்றாலும், அதை இன்னும் கொஞ்சம் மென்மையாக, அரவணைப்பான வார்த்தைகளோடு சொல்லி இருக்கலாமே என்று நினைத்தது பெண்ணின் மனம்.
விட்டால் கல்யாண வீட்டை கலவர வீடாக மாற்றிவிடுவார்கள் என்று, “இன்னும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பாங்க பொண்ணு மாப்பிள்ளை. யாராவது வாங்கம்மா.” மல்லிகா உரக்கக் குரல் கொடுக்கவும், பால் பழம் கொடுப்பதற்காக முன்வந்தாள் தூரத்து சொந்தத்தில் தங்கை முறை உள்ள ஒருத்தி.
செம்பருத்தியின் மனம் தங்கை பாரிஜாதத்தை இந்த இடத்தில் அதிகம் எதிர்பார்த்தது. இதற்கு முன்னர் ஒருமுறை இதே சடங்கில் அவள் எத்தனை ஆனந்தமாகப் பங்குகொண்டாள் என்பதை நினைத்துப் பார்த்து தவித்தாள்.
அவள் முகத்தைக் கொண்டே அகம் கண்டுகொண்ட குறிஞ்சி, “இத்தனைக்குப் பிறகும் அவங்க வந்து இதையெல்லாம் செய்யணும் னு எதிர்பார்க்கிறீங்க பார்த்தீங்களா? நீங்க வேற லெவல் அண்ணி.” கேலி செய்தாள்.
“குறிஞ்சி, இது ஒன்னும் நம்ம வீடு இல்லை. உனக்கு எதிரில் இருக்கும் ஆள் உன்னோட எதிரியும் இல்ல. எங்க இருக்கோம், யார்கிட்ட பேசுறோம் னு பார்த்து பேசு.” கண்டித்தான் நரசிம்மன்.
“எல்லோரும் இப்படி தலையில் இடம் கொடுக்கப் போய் தானே இவங்க மத்தவங்களை காலடியில் போட்டு மிதிக்கிறாங்க.” மனதோடு சொல்லிக்கொண்டு அமைதியானாள் குறிஞ்சி.
சொந்தங்கள் மகாவிஷ்ணுவைத் தேட, கணவரின் அமைதியைக் கலைத்தால் கண்டிப்பாக திட்டு கிடைக்கும் என்று உறுதியாய் தெரிந்தாலும், வேறுவழியின்றி அவர் இருந்த அறைக்குள் நுழைந்தார் தாமரை.
தான் பெற்ற கடைசி மகளின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தவாறு மெத்தையில் அமர்ந்திருந்தார் தந்தையானவர். சில நாள்கள் முன்பு வரை எத்தனை சந்தோஷமாக இருந்தது தன் வீடு. யார் கண் பட்டு இப்படி ஆனதோ. குடும்பத்தை தவிர வேறு எதுவும் தெரியாத தன் கடைக்குட்டி பெண் இன்று தன்னந்தனியே என்ன செய்கிறாளோ என்கிற பலவித யோசனைகளுடன் இருந்தவரின் தோளில் கரம் வைத்து கவனம் கலைத்தார் தாமரை.
“என் பொண்ணு மொத்தமா என்னை விட்டுப் போயிட்டாளா தாமரை. இனி இந்த வீட்டுக்கு வரமாட்டாளா? என்னை அப்பான்னு கூப்பிட மாட்டாளா?” பல நாள்களாக மனைவியோடு பேசுவது இல்லை என்பதை மனதின் வலி மறக்கச் செய்திருக்க மனைவியிடம் கேட்டார் விஷ்ணு.
“அவ மனசுக்கு அவளுக்கு என்னைக்கும் நல்லதே நடக்கும். இங்க இருந்தாலும் எங்க இருந்தாலும் நல்லா இருப்பா.” என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் இப்படிச் சொன்னார் தாமரை.
அதன்பிறகு வந்திருந்த சொந்தங்களை சாப்பிட வைத்து, வழியனுப்பி வைப்பதில் நேரம் இறக்கை கட்டிப் பறந்தது வீட்டுப் பெரியவர்களுக்கு. மணமான நால்வருமே தங்களின் பிள்ளைகள் என்று ஆன பிறகு, திருமணத்திற்குப் பிந்தையை சடங்குகளை தனித்தனியாக செய்தால் ஒரு பெற்றோரால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போகும் சங்கடம் உண்டாகும். எனவே அதெல்லாம் வேண்டாம் என ஒரே வீட்டில் நால்வருக்குமான சடங்குகள் எந்தவித குறையும் இல்லாமல் நல்லபடியாக நடந்தது.
ஓய்வெடுக்க என்று தாமரைக்கண்ணன், நரசிம்மனை ஒரு அறைக்கும் குறிஞ்சி, செம்பருத்தி இருவரையும் இன்னொரு அறைக்கும் அனுப்பி வைத்தார் மல்லிகா.
அப்படி பெண்கள் இருவரும் வந்த அறை பாரிஜாதத்தின் அறை என்று உணர்த்தும் வண்ணம் அவளுடைய பெரிய அளவிலான புகைப்படம் சுவரில் இருந்தது. அதில் கள்ளமில்லாத புன்னகையுடன் இருந்தவளைப் பார்த்த குறிஞ்சிக்கு மனது வலித்தது நிஜம்.
ஒரு வகையில் அவளின் அந்த மாயாஜாலப் புன்னகை மொத்தமாகப் பிடுங்கப்பட்டதுக்கு தானே காரணம் என்கிற நிதர்சனம் குறிஞ்சியை இரண்டு பாறைகளுக்கு நடுவில் படுக்க வைத்து அமிழ்த்தியது போல் தவிக்க வைத்தது. அந்த பாரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தவளின் கண்களுக்கு செம்பருத்தி ஒரு அரக்கியைப் போலவே தெரிந்தாள்.
“ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து அந்தப் பொண்ணுகிட்ட இருந்து எதை பறிச்சிருக்கீங்கன்னு புரியுதா அண்ணி உங்களுக்கு. இனி வாழ்நாளில் அவங்களால் இப்படிச் சிரிக்க முடியும் னு நினைக்கிறீங்களா?” வார்த்தைகளால் நேரடியாக செம்பருத்தியின் இதயத்தில் கத்தியை இறக்கினாள்.
“ஏன் முடியாது. அவளுக்கு நாங்க எல்லோரும் இருக்கோம். அவளை அப்படியே விட்டுட மாட்டோம். அவ மனசுக்கு சந்தோஷமா இருப்பா.” வேகமாய் சொன்னாள் செம்பருத்தி.
“கொஞ்சம் கூட மனசாட்சி உருத்தல இல்ல உங்களுக்கு. ச்சே உங்களை என் அண்ணனுக்கு ஜோடியா என்னால் நினைச்சுக் கூடப் பார்க்க முடியல.” கோபமாய் சொன்னாள் குறிஞ்சி.
“எனக்கும் கூடத்தான் உன்னை மாதிரி நோயாளி என் அண்ணனுக்குப் பொண்டாட்டியா இருக்கிறது பிடிக்கல. ஆனா என்ன பண்றது. என் கல்யாணம் நடக்கணும் னா உன்னோட கல்யாணமும் நடந்தே ஆகனுமே. அதனால் தான் பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுமையா இருக்கேன்.
நான் மட்டும் இல்ல என்னோட அண்ணனும் இதுக்காகத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணி இருக்கான். அதை மறக்க வேண்டாம்.” எதிரே இருப்பவளுக்கு வலிக்கும் என்று தெரிந்தே, பேசினாள் செம்பருத்தி. அவள் நினைத்தது போலவே மனம் வலிக்க வேகமாக அண்ணனைத் தேடிச் சென்றாள் குறிஞ்சி.
செம்பருத்தியின் இயல்பே அது தான். இயல்பில் நல்லவள் தான் என்றாலும், அவளுக்குத் தீங்கு செய்யும் யாரையும் எதற்காகவும் மன்னிக்க அவளுக்கு மனது வராது.
தன்னிடம் வசைபாடு வாங்கிய குறிஞ்சி எங்கு செல்வாள், என்ன செய்வாள் என்பது புரிந்தது போல் தலையைப் பிடித்தபடி மெத்தையில் அமர்ந்தாள் செம்பருத்தி. அரும்பாடு பட்டு அவள் தேடிக்கொண்ட வாழ்க்கை கை சேர்ந்த ஆனந்தத்தை அவளால் அனுபவிக்க முடியவில்லை. அத்தனை தடங்கல் அவளுக்கு.
வேகமாக ஆண்கள் இருவரும் இருந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே வந்த குறிஞ்சி, தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நேரே கணவன் அருகே வந்தவள், “நான் யாரு, என் பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணீங்க. என்னைக் கட்டிக்கிட்ட உங்களுக்கே என்னோட நோய் பிரச்சனை இல்லன்னு ஆனதுக்குப் பின்னாடி உங்க தங்கச்சிக்கு என்ன. என்னைப் பத்தி பேசுற உரிமையை அவங்களுக்கு யார் கொடுத்தா?” கோபமாகக் கேட்டாள்.
“குறிஞ்சி நீ அவகிட்ட என்ன பேசின?“ தங்கையை அறிந்தவனாய் முந்திக்கொண்டு வந்தான் நரசிம்மன்.
“அந்த ரூமில் இருந்த பாரியோட போட்டோவைப் பார்த்ததும் ஒருமாதிரி ஆகிடுச்சு. இரண்டு வார்த்தை கேட்டேன். அதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா? பேச்சு கேட்டுக்க வேண்டிய இடத்தில் இருப்பவங்க அவங்க தானே. நான் பேசினா கேட்டுக்கக் கூடாதா? என்னை மாறி பேசுவாங்களா? அதுவும் எப்படி பேசுறாங்க. ஏதோ அவங்க அண்ணன் எனக்கு பாவப்பட்டு வாழ்க்கைப் பிச்சை போட்ட மாதிரி.
இவர் வந்து வாழ்க்கைப் பிச்சை போடணும் னு தான் நான் நாளும் பொழுதும் கோவில் கோவிலா காவடி எடுத்தேனா?” கோபமாகக் கேட்டாள் குறிஞ்சி.
“இங்க பார் குறிஞ்சி, நான் பல தடவை சொல்லிட்டேன். நடந்த நிகழ்வுகளும், எடுக்கப்பட்ட முடிவுகளும் செம்பருத்தி தன்னிச்சையா எடுத்தது கிடையாது. இரண்டு குடும்பமும் ஒன்னு சேர்ந்து பேசி எடுத்த முடிவு.
இதுக்கு குறை சொல்றதா இருந்தா நீ எல்லோரையும் தான் சொல்லணும். அதை விட்டுட்டு எப்ப பார் அவளை மட்டும் வம்பிழுத்துக்கிட்டு இருந்தா அவளும் தான் என்ன செய்வா.” மனைவிக்குப் பரிந்து வந்தான் நரசிம்மன்.
“பொண்டாட்டிக்கு பரிந்து பேசுற. நல்லது தான். குறைந்தபட்சம் உன் வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும். கூடப்பிறந்த தங்கச்சிக்கே இத்தனை பெரிய பாவத்தைப் பண்ணவங்க நாளைக்கு என்னை என்ன பண்ணுவாங்களோன்னு எனக்கு தான் பக்கு பக்குன்னு இருக்கு.” ஆழ்மன பயத்தை வெளியே சொல்லியே விட்டாள் அவள்.
“பார்த்து பேசு குறிஞ்சி.” அழுத்தமாய் குரலுயர்த்தினான் நரசிம்மன். அண்ணனின் சிம்மக்குரல் வெளியே வந்ததுமே இதற்கு மேல் பேசக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டவள் கணவனை முறைத்தவளாய் அமைதியாய் வெளியே சென்றுவிட்டாள்.
“அவளை மன்னிச்சிடுங்க கண்ணன். அவளை நாங்க சரியா வளர்க்கல. செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிட்டோம். அதுக்காக நீங்களும் செல்லம் கொடுக்கணும் னு நான் கேட்க மாட்டேன். அவ தப்பு பண்ணும் போது அவளைக் கண்டிங்க. ஆனால் அவ மனசு நோகுற மாதிரி எதையும் பண்ணிடாதீங்க. என் தங்கை பட்ட கஷ்டம் எல்லாம் போதும். இனிமேலாச்சும் அவ நல்லா இருக்கணும் என்பதற்காக தான் இத்தனையும்.” கண்கலங்கச் சொன்னான் நரசிம்மன்.
“இதே வார்த்தைகளை நானும் உங்ககிட்ட சொன்னதா நினைச்சுக்கோங்க சிம்மன். நம்ம நால்வருக்குள் நடந்த இந்தக் கல்யாணம் தன்னிச்சையானது கிடையாது. ஒருத்தரை தொட்டு இன்னொருத்தர் பிணைக்கப்பட்டு இருக்கோம்.
நால்வரில் யார் தப்புப் பண்ணாலும், அதில் பாதிக்கப்படப் போறது ஒருத்தரோட வாழ்க்கை இல்லை நாலு பேரோட வாழ்க்கை. இதை நல்லபடியா நகர்த்த நாம நாலு பேருமே பாடுபடணும்.” உணர்ந்து சொன்னான் கண்ணன். நரசிம்மனும் அதை ஏற்றுக்கொண்டான்.
நேரம் யாருக்கும் காத்திருக்காமல் கடந்து இரவும் வந்து சேர்ந்தது. அவ்வளவு நேரம் சந்தைக்கடை தோற்கும் அளவு சத்தமாக இருந்த வீடு இப்போது ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவு சாந்தமாகியது.
வீட்டில் மூன்று அறை மட்டுமே இருக்க, இரண்டு அறைகளில் இரண்டு புதுமண ஜோடிகளுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மகாவிஷ்ணு, தாமரை, மல்லிகா வெங்கடாச்சலம் நால்வரும் பக்கத்தில் காலியாக இருந்த வீட்டின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு அங்கே தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்து கொண்டனர்.
பத்து மணிக்கு நல்ல நேரம் வந்திருக்க பெண்கள் இருவரையும் அறைக்கு அனுப்பி வைத்தே கிளம்பினர் மூத்த பெண்மணிகள் இருவரும்.
செம்பருத்தி அறைக்குள் வரும் போதே உறங்கி இருந்தான் நரசிம்மன். எப்படியும் எதுவும் நடக்காது என்று தெரிந்தாலும், இது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றியது புது மணப்பெண்ணிற்கு. கொஞ்சல் பேச்சுக்கள் வேண்டாம் சிறிது ஆதரவான பேச்சுவார்த்தை கூட இருக்கக்கூடாதா என்று ஏங்கினாள்.
அடுத்த அறை போர்க்களமாக மாறி இருந்தது. குறிஞ்சி உள்ளே வந்ததும் அவளுக்காகவே காத்திருந்த கண்ணன் மனைவியைப் பார்த்து புன்னகைத்தவன் அவளிடம் ஒரு மாத்திரையை நீட்டினான்.
அது எதற்குண்டானது எனக் கண்டுகொண்டதும் அவளுக்கு கோபமான கோபம். “உங்க தங்கச்சி என்னை நோயாளின்னு சொன்னாங்க. நீங்க இந்த மாத்திரையைக் காட்டி அவங்க சொன்னது சரிதான்னு சொல்லாம சொல்றீங்களா?” ஆக்ரோஷமாகக் கேட்டாள்.
“நான் என்ன நினைச்சு இதைக் கொடுக்கிறேன்னு என்கிட்ட கேட்காம, என்னோட நினைப்புக்கு நீயா ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.” என்க, பதில் பேச முடியவில்லை குறிஞ்சியால்.
“இன்னைக்கு உனக்கு அலைச்சல் அதிகம், மனஉளைச்சலும் அதிகம். இதை எடுத்துக்கிறது நல்லதுன்னு தோணுச்சு.” மாத்திரையை நீட்டிக்கொண்டே நின்றான்.
“யார்கேட்டா உங்களோட கருணையை. உங்களை மாதிரி கருணைக் கொடையாளர்கள் இல்லாம எங்களை மாதிரி ஆள்களால் வாழ முடியாதா என்ன? நாங்களும் உங்களை மாதிரி சாதாரண மனிதர்கள் தான். இப்படி கருணையைக் காட்டி எங்களை பலவீனமாக்காதீங்க.” என்றாள் வேகமாக.
“நான் காண்பிக்கிற கருணை என்னோடது. அது தேவையில்லைன்னு சொல்ற உரிமை தான் உனக்கு இருக்கு. என்னை கருணை காட்டக்கூடாதுன்னு சொல்றதுக்கு உனக்கு உரிமை இல்லை.
அன்போட வடிவம் தான் கருணை. ஒருத்தர் நம்ம மேல் கருணை காட்டுறதை பலவீனமா நீ நினைச்சா அது உன்னோட அறிவீனம். கருணை தேவையில்லைன்னு சொல்றது நிமிர்வா இருக்கலாம். கருணை காட்டக்கூடாதுன்னு எதிர்பார்க்கிறது சர்வாதிகாரம்.” என்க, இத்தனை பேச்சு தேவையா என்பது போல் பார்த்தாள் குறிஞ்சி. ஆரம்பித்து வைத்தது தானே என்பதை மறந்து.
கண்ணன் இன்னும் மாத்திரையை நீட்டியபடியே இருக்க, அதை எடுத்து போட்டுக்கொண்டவள், “நீங்க என்னோட புருஷன் தான். அதுக்காக அவசரமா எதையும் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க. உங்களுக்காக எதிர்பார்த்தா கூட இன்னும் கொஞ்ச நாளில் நான் மனசை மாத்திக்க முயற்சி பண்ணுவேன். உங்க தங்கச்சி வாழ்க்கையைக் காப்பாத்துறேன்னு என்கிட்ட வந்தா என்மனசில் உங்களுக்கு என்னைக்கும் இடம் கிடைக்காது.” உறுதியாகச் சொன்னாள் குறிஞ்சி.
“அந்தக் கேடுகெட்ட வேலையை நான் செய்யவே மாட்டேன். நான் உன்கிட்ட வந்தா அது என் தங்கச்சிக்காகவோ, எனக்காகவோ இருக்காது, நமக்கானதா இருக்கும்.” என்க, நிம்மதிப் பெருமூச்சுடன் தன் இடத்தில் வந்து படுத்துக்கொண்டாள் குறிஞ்சி.
அடுத்த அறையில், உறங்கும் கணவனையே பார்த்தபடி அலங்காரம் அனைத்தையும் கலைத்த செம்பருத்தி அவன் அருகே வந்து படுத்துக்கொள்ள, அந்த அசைவில் விழித்தான் நரசிம்மன்.
உடல்நிலை சரியில்லாத தந்தைக்கு அலைச்சல் வேண்டாம் என ஒரு வாரமாக இரவு, பகல் பாராமல் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்ததன் பிரதிபலனாக காய்ச்சல் வந்திருக்க சற்றே அயர்ந்துவிட்டான். வேண்டுமென்றே நிராகரித்ததாய் மனைவி நினைத்திருப்பாளே என்னும் எண்ணம் தோன்ற தன்னால் பெருமூச்சு வந்தது நரசிம்மனிடம் இருந்து.
இது தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. அதில் முழு மனதுடன் இலயிக்க முயற்சிக்கிறான் தான். ஆனால் நொடியில் எல்லாம் சரியாகிவிடாதே. செம்பருத்தி தன் பொறுப்பு என்று ஆகிவிட்டது. அவளிடம் அவள் மனம் விரும்பும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டியது தன் பொறுப்பு என அனைத்தும் புரிகிறது தான். ஆனால் உடனடியா மாறமுடியவில்லையே. சிறிது சிறிதாக எல்லாம் மாறிவிடும் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
அதே நேரம் வெளியே வரவேற்பறையில் ஏதோ சத்தம் கேட்க, கணவன் மனைவி இருவருமே அதிர்ந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, தாமரைக்கண்ணன் அவசர அவசரமாக எங்கேயோ கிளம்பிக்கொண்டிருந்தான்.
“என்னாச்சு மாப்பிள்ளை” நரசிம்மன் பதறியபடி முன்னே வந்தான். தங்கை எதுவும் பேசி அவள் கணவன் கோபித்துக்கொண்டு செல்கிறானோ என்னும் பயம்.
அவனைப் பார்த்ததும் நெற்றியை நீவிவிட்ட கண்ணன், “நீங்க உள்ளே போங்க, ஒரு சின்ன வேலை. நான் போயிட்டு அரை மணி நேரத்தில் வந்திடுவேன்.” என்றுவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் விரைவாக வெளியேறினான்.
“என்ன குறிஞ்சி.” நரசிம்மன் கேட்க, “யாருக்குத் தெரியும். ஏதோ போன் வந்தது. அந்தப்பக்கம் யார் என்ன சொன்னாங்களோ இப்பவே வரேன்னு சொல்லிட்டுப் போயிட்டார் உங்க மாப்பிள்ளை.” அசிரத்தையாகச் சொன்னாள்.
“சரி மாப்பிள்ளை வரும் வரை நாங்களும் உனக்குத் துணையா இங்கேயே இருக்கோம்.” என்றவாறு வரவேற்பறையில் அமர்ந்துவிட்டான் நரசிம்மன். செம்பருத்தியின் முகம் மேலும் வாடியது. குறிஞ்சி அவளை நக்கலாகப் பார்க்க, முகத்தை திருப்பிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள் அவள்.
சொன்னதை விட கூட அரைமணி நேரம் கடந்து வாடகை வாகனத்தில் வந்து இறங்கிய தாமரைக்கண்ணன், வெளிவாசல் கதவைத் திறந்து, வீட்டின் கதவையும் திறக்கும் நேரம் நரசிம்மன் வரவேற்பறையில் அமர்ந்திருப்பதைக் கண்டு பெருமூச்சுவிட்டான்.
நரசிம்மன் எழுந்து நிற்க, அவனுக்குப் பதில் சொல்லாமல் வெளியே சென்ற தாமரைக்கண்ணன் வரும் போது மயக்க நிலையில் இருந்த பாரிஜாதத்தை கைகளில் ஏந்திக்கொண்டு வந்தான்.
ஒரு வேகத்தில் இருவரையும் நெருங்கப் பார்த்த நரசிம்மன் என்ன நினைத்தானோ நின்ற இடத்திலேயே பசை போட்டது போல் நின்று கொண்டான்.
அதைக் கவனித்தாலும் கவனிக்காதவன் போல் தங்கையை அவளின் அறையில் படுக்க வைத்த கண்ணன் அவள் கன்னத்தில் இருந்த விரல் அச்சைக் கண்டு கோபம் கொண்டான்.
எங்கள் வீட்டு செல்லப் பெண்ணை அடிக்க அவர்கள் யார். என்ன தவறு செய்திருந்தாலும் இன்னொரு வீட்டுப் பெண்ணை அடிக்க அவர்களுக்கு எப்படி மனது வந்தது. நாங்களே அவளை அடித்தது இல்லை என நினைத்தவனுக்கு, “அடிக்கல ஆனா மொத்தமா கொன்னு போட்டுட்டீங்களே.” என்று பதில் கொடுத்தது அவன் மனசாட்சி.
அரைமயக்கத்தில் கூட அவன் வாசனை திரவியத்தை உணர்ந்தவளாக, “ஐ ஹேட் யூ கண்ணா ண்ணா.” என்று முகம் சுருக்கினாள் பாரி.
“அந்தளவு எங்களை எல்லாம் வெறுத்திட்டியா டா?” வாய்விட்டு கேட்டவன் அவளுக்குப் போர்த்திவிட்டு நிமிர முறைப்புடன் நின்று கொண்டிருந்தாள் அவன் மனைவி குறிஞ்சி.
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Manjula Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page