About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 14 💖
பெங்களூரின் பிரதான சாலையில் ரஞ்சன் லாவகமாக மகிழுந்தை செலுத்திக் கொண்டிருந்தான். சனிக்கிழமை சற்றே பரபரப்பு குறைந்து காணப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம்தான். அவனுக்கு அருகே ஷோபனா அமர்ந்திருந்தாள்.
பின்புறம் சந்தனா, மனோகர் மற்றும் அஷ்வினும் அமர்ந்திருந்தனர். சிறுவர்கள் இருவரும் கையில் ஏதோ விளையாட்டுப் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
“மனோ அண்ணா அவுட்டே. இப்போ என் டர்ன்...” என எக்கி அவன் கையிலிருந்ததை வாங்கி அஷ்வின் கண்ணும் கருத்துமாக விளையாட, மற்றவன் அதை உன்னிப்பாய்க் கவனித்தான்.
சந்தனா அவர்களை மென்புன்னகையுடன் பார்த்தவள் பின் பார்வையை சாலையில் பதித்தாள். அத்தனை நேரம் ஊர்ந்து கொண்டிருந்த மகிழுந்து பிரதான சாலையைக் கடக்கவும், மெதுவாய் வேகமெடுத்தது.
ஷோபனாதான் வாரயிறுதி கடைக்குச் செல்லலாம் என சந்தனாவை அன்று அழைத்திருக்க, அவர்கள் திட்டமிட்டபடியே சனிக்கிழமையை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். ரஞ்சன் அவர்களது திட்டத்தில் இல்லவே இல்லை. பெண்களாகச் சென்று வரலாம் என யோசித்திருக்க, ரஞ்சனுக்கு அன்றைக்கிருந்த அலுலகலகக் கூட்டம் அடுத்த வாரம் தள்ளிச் சென்றிருந்தது. அதனாலே அவர்களைத் தனியே அனுப்ப மனதில்லாது உடன் இணைந்து கொண்டான்.
பெங்களூர் வந்து சில மாதங்கள் கடந்திருக்க, ஷோபனாவிற்கு புது துணிகள் எடுக்க வேண்டும் என்று எண்ணம். அதுவும் சிக்பேட்டைப் பகுதியில் துணிகள் நன்றாய் இருப்பதாக ஒரு காணொளியில் பார்த்து அதை குறித்து வைத்திருந்தாள். அதனாலே முதலில் சிக்பேட்டை செல்லலாம் என முடிவெடுத்திருந்தனர்.
மகிழுந்து பிரபல துணிக்கடை ஒன்றின் முன்னே ரஞ்சன் நிறுத்த, நால்வரும் இறங்கிக் கொண்டனர். அவன் மகிழுந்தை நிறுத்திவிட்டு வரச் செல்ல, இவர்கள் உள்ளே நுழைந்தனர்.
“மேடம் பர்ஸ்ட் ப்ளோர் ரீடெய்ல், செகண்ட் ப்ளோர் ஹோல் சேல். நீங்க என்னப் பார்க்கணும்?” கடை ஊழியர் வினவ, “ரீடெய்ல்தான் பார்க்கணும்...” ஷோபி பதிலளிக்க, முதல் தளத்தில் நுழைந்தனர்.
முதலில் புடவை எடுக்கலாம் என அந்தப் பகுதியை இவர்கள் ஆக்கிரமித்தனர். ரஞ்சன் வந்ததும் சிறுவர்கள் இருவரையும் அவன் கவனித்துக் கொள்ள, பெண்கள் தங்களது பிரதானப் பணியில் மும்மரமாகினர்.
“சந்தனா... இந்த ரெண்டு கலர்ல எது நல்லா இருக்கு பாருங்க?” ஷோபனா அருண நிறத்தில் ஒரு சேலையும் தும்பை நிறத்தில் ஒரு சேலையும் எடுத்துக் காண்பித்தாள்.
“ஹம்ம்... வொய்ட் வேணாம் ஷோபி. நீங்க நல்லா வொய்ட், சோ நல்லா இருக்காது. டார்க் ரெட் ஷேட் உங்களோட கலருக்கு செட்டாகும்...” என அருண நிறச் சேலையைத் தேர்ந்தெடுத்தாள்.
“டாக்டரம்மா... நல்லா செலக்ட் பண்றீங்களே...” என்றவள் அடுத்தடுத்து சந்தனாவின் ஆலோசனைபடியே எடுத்தாள். நான்கு சேலைகள் தனக்கென எடுத்தவள், “சந்தனா... இதுல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அது ஒன்னை செலக்ட் பண்ணுங்க...” என்றாள்.
சந்தனா அவளது முகத்தை யோசனையாகப் பாரக்க, “உங்களுக்குத்தான்... நான் ஒரு சேரி எடுத்துக் கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன். நீங்களா உங்களுக்குப் பிடிச்சதை செலக்ட் பண்ணுங்க...” என அவள் பார்வைக்குப் மற்றவள் பதிலளித்தாள்.
“நோ... அதெல்லாம் வேணாம் ஷோபி. ஆல்ரெடி என்கிட்ட நிறைய புது சேலை கட்டாமலே இருக்கு. நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க...” என்றாள் சந்தனா மறுப்பாய்.
“பரவாயில்லை... அதோட இந்த சேலையும் வச்சுக்கோங்க. உங்களுக்கு எப்போ தோணுதோ, அப்போ கட்டுங்க. பட் இட்ஸ் மை கிஃப்ட். நீங்க வேண்டாம்னு சொல்லக் கூடாது!” ஷோபனா அன்பு கட்டளையிட, சந்தனா சங்கடமாக அவளைப் பார்த்தாள். எப்படி மறுப்பதென அவளுக்குத் தெரியவில்லை.
“ரொம்ப யோசிக்காதீங்க டாக்டம்மா. எனக்காக ஒரு சேரி எடுத்துக்கோங்க...” என்று கேட்ட ஷோபனாவை மறுக்கும் எண்ணத்தை முயன்று விழுங்கிய சந்தனா அரைமனதாய் தலையை அசைத்தாள். ஆனாலும் எந்தப் புடவையையும் அவள் ஆர்வமாய்ப் பார்க்கவில்லை.
அவளை மென்மையாய் முறைத்த ஷோபி, “நீங்க செலக்ட் பண்ற மாதிரி தெரியலை. நானே உங்களுக்கு செட்டாகுற மாதிரி ஒன்னை செலக்ட் பண்றேன்...” என புடவைகளை அலசத் தொடங்கினாள். சந்தனா சற்று மாநிறம் உடையவள். அவளது நிறத்திற்கு ஏற்றவாறு புடவையைப் பார்த்தாள்.
பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்தும் ஷோபனா திருப்தியாகவில்லை. அனைத்துப் புடவைகளையும் கலைத்துப் போட்டாள்.
கடை சிப்பந்தியைப் பார்த்த சந்தனா, “ஷோபி... பாவம் அவங்க. இதுலயே எதாவது ஒன்னை எடுங்க. நீங்க எந்த சேரி எடுத்தாலும் கண்டிப்பா எனக்குப் பிடிக்கும். அதோட நிறத்துலயும் விலையிலயும் இல்ல. உங்களோட அன்புதான் அதுல தெரியும். சோ...” என நிறுத்தினாள்.
அவளைப் பார்த்த ஷோபனா, “நீங்க இப்படி பேசுவீங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் உங்களுக்கு பெஸ்டா எடுக்கணும்னு தோணுது. சோ, நீங்க அமைதியா இருங்க சந்தனா. ஸ்டாஃப் அவங்களோட வொர்க்கைப் பார்க்குறாங்க. அவ்வளோதான்...” என்ற ஷோபனா மூன்று புடவைகளை சலித்து எடுத்தாள்.
“இந்த மூனுல எதாவது ஒன்னே செலக்ட் பண்ணுங்க...” என அவள் கூற, சந்தனா எதை எடுப்பது எனத் தெரியாது தடுமாறினாள்.
“ஷோபி...நீங்களே ஒன்னை செலக்ட் பண்ணிடுங்களேன். எனக்கு எதை எடுக்கன்னுத் தெரியலை!” என்றாள்.
“ஹம்ம்... எனக்கும் இந்த மூனு சேரியும் பிடிச்சிருக்கு. உங்களுக்கு செட்டாகும்னு தோணுது. பேசாம மூனையும் எடுத்துக்குறீங்களா?” என உற்சாகத்துடன் கேட்டாள்.
“நோ... வேணாம் ஷோபி. ஒன்னு மட்டும் போதும்...” என அவள் மறுக்க, ரஞ்சன் அவர்கள் அருகில் வந்தான்.
“ஷோபி, ஜூஸ் எதுவும் வாங்கிட்டு வரவா உங்களுக்கு. பசங்களுக்கு எதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு கூட்டீட்டுப் போறேன்...” என அவன் வினவ, “எனக்கு வேணாம்ங்க. சந்தனாவுக்கு ப்ரஸ் ஜூஸ் ஒன்னு வாங்கிட்டு வாங்க...” என்றவள், “ஒரு நிமிஷம் ரஞ்சன். இந்த மூனு சேரில ஒன்னு செலக்ட் பண்ணுறீங்களா? டாக்டருக்குத்தான். மூனுமே எனக்குப் பிடிச்சிருக்கு. எதை எடுக்கன்னுத் தெரியலை...” என்றாள்.
சந்தனாவை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவன், “அந்த லைட் க்ரீன் கலர் சேரி ஓகேவா இருக்கும்...” என்றவன், “அவங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டுக்கோ ஷோபி...” என்றான்.
“நீங்க எதை செலக்ட் பண்ணாலும் அவங்க ஓகேதான் சொல்லுவாங்க...” என ஷோபனா செல்லக் கோபம்கொண்டு புடவையை எடுத்து தனியே வைத்தாள். ரஞ்சனுடன் சிறுவர்கள் வெளியே சென்று வந்தனர்.
ரஞ்சன் பொத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாற்றுடன் வந்தான். “பக்கத்துல எதுவும் ப்ரஸ் ஜூஸ் கிடைக்கலை ஷோபி...” என அவன் பொத்தலை நீட்ட, “பரவாயில்லை ரஞ்சன்...” என சந்தனா புன்னகைத்தாள். குழந்தைகளுக்கு எடுத்தப் பின்னர் ரஞ்சனுக்கு எடுத்து முடிய மதியமானது. அடுத்து மூவரும் அருகேயிருந்த உணவகத்தில் உண்டுவிட்டு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தனர்.
வீட்டிற்குத் தேவையானவற்றை தேடி எடுத்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள் இருவரும். ரஞ்சன் குழந்தைகள் பகுதிக்குள் அஷ்வினையும் மனோவையும் அழைத்துச் சென்றுவிட்டான். இவர்கள் பேசிக்கொண்டே என்னென்ன வேண்டுமென ஆராய, சந்தனாவிற்கு பரிட்சயமான குரல் கேட்டது.
யோசனையாய் அவள் திரும்பிப் பார்க்க, நான்கு வயது சிறுவன் அவளது சேலையைப் பிடித்திழுத்திருந்தான். அவனைக் கண்டதும் இவளது முகம் மலர்ந்தது.
“பிரகா...” என்றவள் கையிலிருந்த கூடையைக் கீழே வைத்துவிட்டு அவனைத் தூக்கி இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள். அவனைப் பார்த்து பத்து மாதங்களிருக்கும். கொஞ்சம் அவன் வளர்ந்துவிட்டதாய் ஒரு எண்ணம். சில மனக்கசப்புகளைத் தவிர்க்கவே அவள் குழந்தையைக் காணாச் செல்லவில்லை.
“சந்தும்மா...” என அவனும் இவளது கன்னத்தை எச்சில் செய்தான்.
“மிஸ் யூ சந்துமா... ஏன் நீங்க என்னைப் பார்க்க வரலை. பாட்டீ கூட உங்களை மிஸ் பண்றாங்க...” என்றவன் குரலில் இவளுக்கு உருகிவிட்டது.
“அச்சோ... தங்கத்தைப் பார்க்கலாம்னுதான் நினைச்சேன் டா. அம்மாவுக்கு கொஞ்சம் வேலை. அதான் வர முடியலை. இனிமே கண்டிப்பா வரேன்...” என்றாள் சிறுவனை சமாதானம் செய்யும்விதமாக. அவன் முகத்தைக் கோபத்தில் திருப்ப, இவளுக்கு முறுவல் பூத்தது.
“உங்கப்பா மாதிரியே பண்றடா நீ...” என சுகமாய் அலுத்தவள், “பிரகாவுக்கு கோபம் போக என்ன செய்யணும்? எத்தனை சாக்லேட் வாங்கித் தரணும்?” என வினவ, சில நொடிகள் யோசித்தவன், “நிறைய சாக்லேட் வேணுமா சந்துமா...” என்றான் கைகளை விரித்து. அதில் இவளுக்குப் புன்னகை பெரிதானது.
“வாங்கிக் கொடுத்துட்டா போச்சு...” என்றவள் அவனுக்கு ஒரு இன்னெட்டு நெகிழிப் பையை முழுவதுமாக எடுத்துக் கொடுத்தாள். சின்னவனுக்கு ஏகக் குஷியாகிப் போனது.
“பிரகா... என்ன பண்ணீட்டு இருக்க நீ?” தூரத்திலிருந்த குரல் மெதுவாய் அவர்கள் அருகில் வர, சந்தனா முகம் நீண்ட நாளைக்குப் பின்னர் மலர்ந்தது.
“யசோ, எப்படி இருக்க டி?” என இவள் கேட்க, அவர்கள் முன்னே வந்து நின்றவளின் முகம் கடுகடுத்தது.
“யார் எது கொடுத்தாலும் வாங்குவீயா நீ... முதல்ல அந்த சாக்லேட்டைத் தூக்கிப் போடு. இங்க வா என்கிட்ட...” என்றாள் அடிக்குரலில் மகனை மிரட்டி.
“சின்ன பையன்கிட்டே ஏன்டி இப்படி பேசுற நீ?” சந்தனா அந்தப் பெண்ணைக் கடிந்தாள். பிரகா எதுவும் பேசாது அவளிடமிருந்து கீழே இறங்கி தாயிடம் வந்தான்.
அவன் கையிலிருந்த இன்னெட்டைப் பறித்துக் கீழே போட்டவள், “கண்டவங்ககிட்டே வாங்குறது என்ன பழக்கம். அறிவுருக்கா இல்லையா உனக்கு? உங்கப்பா மாதிரியே இருக்காத நீயும்...” என்றவளின் வார்த்தைகளில் எதிலிருந்தவளின் முகத்தில் புன்னகை மெல்ல மங்கத் தொடங்கியது. வருத்தத்துடன் தன்னைக் கடந்து செல்பவளைப் பார்த்திருந்தாள். ஷோபனா நடக்கும் அனைத்தையும் கவனித்தாலும் எதுவும் பேசாதிருந்தாள்.
சில நொடிகள் அவர்களையே வெறித்த சந்தனா துன்ப பெருமூச்சோடு திரும்பினாள். ஷோபியின் பார்வை தன்னிடம் இருப்பதை உணர்ந்தவள், “அது... அவ என்னோட காலேஜ் ஃப்ரெண்ட். சின்ன மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங். அதான் இப்படி பிகேவ் பண்ணிட்டு போறா...” என்றாள்.
“ரொம்ப க்ளோஸ் ப்ரெண்டா சந்தனா?” அவள் வினவ, “ரொம்ப ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட். நான் அவளுக்கு நிறைய நன்றிகடன்பட்டிருக்கேன். பட், திருப்பி செய்ய வாய்ப்பு கிடைக்கலை...” குரல் வருத்தம் தோய்ந்து வந்தது.
“விடுங்க சந்தனா... சான்ஸ் கிடைக்கும்போது திரும்ப செஞ்சுடுங்க. பட், பப்ளிக் ப்ளேஸ்னு கூடப் பார்க்காம ரொம்ப ஹார்ஷா நடந்துகிட்டாங்க. அதுதான் ஒரு மாதிரி இருக்கு...”
“இல்ல இல்ல ஷோபி... அவ கொஞ்சம் கோபக்காரி. ஆனால், குணமானவ. அவளோட குணம் யாருக்கும் இருக்காது. நல்லவ...” என்றாள் தோழியை விட்டுக்கொடுக்காது. ஷோபனா ஆச்சர்யமாகப் பார்த்தாள். ஏனோ சற்றுமுன் வந்தப் பெண்ணின் பார்வை ஒரு நொடி கூட இவள் மீது அக்கறையாகப் படியவில்லை. ஆனால், சந்தனா பார்வை எதிரிலிருந்தவளை அன்பாய் வாஞ்சையாய் தடவிப் போனதை கவனித்தாளே.
சந்தனாவிடம் காலையிலிருந்த உற்சாகம் சுத்தமாய் வடிந்து போயிருந்தது. எதையும் வாங்கும் மனநிலை இல்லை. ஏற்கனவே எடுத்ததற்கு மட்டும் பணத்தைச் செலுத்திவிட்டு காத்திருந்தாள். ஷோபனாவும் சீக்கிரம் வாங்கி முடிய, வீட்டை அடைந்தனர்.
“தேங்க்ஸ் டாக்டரம்மா... எனக்காக கூட வந்ததுக்கு!” ஷோபி கூற, அவளை மென்மையாய் முறைத்துவிட்டு ஷோபனா விடை பெற்றாள்.
***
சந்தனா படிக்கும் பள்ளியின் வாயிலில் நின்றிருந்தான் மனோ. பார்வை உள்ளே நுழையும் ஒவ்வொரு பெண்ணையும் தொட்டு மீழ, அவனின் குட்டி வரவேயில்லை. எல்லோரும் உள்ளே நுழைந்து வாயிற்காவலாளி கதவை மூடிவிட, இவனது முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம் படர்ந்தது. தன் பள்ளியை நோக்கி நகர்ந்தான்.
தாமதமாய் வந்ததற்கு ஆசிரியர் அவனைத் திட்டிவிட்டே உள்ளே விட, அதெல்லாம் மனோவின் மனதில் சுத்தமாய் பதியவில்லை. காலையில் சந்தனாவை இனி பார்க்க முடியாது, அவள் வரமாட்டாள் என்று தாய் கூறிய வார்த்தைகளே காதில் எதிரொலித்த வண்ணமிருந்தன. மாலை பள்ளி முடிந்ததும், சந்தனா வந்திருப்பாள் என்ற ஆசையில் வீட்டிற்கு அவன் விரைவாய் செல்ல, அப்போதும் ஏமாந்திருந்தான். யாரிடம் அவளைப் பற்றிக் கேட்பது எனத் தெரியவில்லை.
மகனின் சோர்வான முகத்தைக் கண்ட உமாநாதன், “மனோ... என்னாச்சு? ஏன் டல்லா இருக்க?” என அவனது அருகில் அமர்ந்தார்.
“ஒன்னும் இல்லப்பா...” என சிரிக்க முயன்றான். ஆனாலும் சிரிப்பு உதடுகளை எட்டாது கழுத்தோடு நின்றுவிட்டது போல.
“பொய் சொல்லாத மனோ... மிஸ் எதுவும் திட்டிட்டாங்களா? எக்ஸாம்ல மார்க் கம்மியா வாங்கிட்டீயா?” என அவராய் யூகித்து வினவ, “அதெல்லாம் இல்லப்பா... அது, குட்டி வரலை. அவ இனிமே வரமாட்டான்னு அம்மா சொல்றாங்க. ஏன் பா அவ வரமாட்டா?” என சோகமாய்க் கேட்டான். உமாநாதன் இருக்கும்போதுதான் மகள் பூப்படைந்துவிட்டாள் என பூரணி நான்கு நாட்கள் விடுப்புக் கேட்டிருந்தார். சதாம்பிகா கூறியது போல இனிமேல் சந்தனா இங்கு வருவது சந்தேகம் என எண்ணியவர், மகனுக்கு எவ்வாறு புரிய வைப்பது என யோசித்தார்.
“மனோ, குட்டிக்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்ஷூ டா. அதான் அவ வரலை...” என்றார். வேறெப்படி மகனுக்குப் புரிய வைப்பதென அவருக்குத் தெரியவில்லை.
“என்னாச்சுப்பா குட்டிக்கு? அவ என்கிட்ட சொல்லவே இல்லையே. இப்போ எப்படி இருக்காப்பா?” இவனுக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“பதறாத மனோ... பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இல்ல. இப்போ அவ நல்லாகிட்டா...” என அவர் நகர, இவனுக்கு அன்றிரவு உறக்கம் பறிபோயிருந்தது. மறுநாள் காலை அரக்கப்பறக்க கிளம்பினான். சந்தனாவின் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்ற முடிவை இரவே எடுத்திருந்தான்.
“மனோ... ஸ்கூல் எயிட் தேர்ட்டி தானே? இவ்வளோ சீக்கிரம் எங்கடா கிளம்புற?” சதா மகனை அதட்டி அவனது பள்ளிப் பையில் மதிய உணவைத் திணித்தார்.
“வினோத் ஸ்கூல் க்ரவுண்டுக்கு வர சொன்னான் மா. காலைல மேட்ச் போடப் போறோம்...” எனப் பள்ளிப் பையைத் தூக்கினான்.
“இந்த ஒரு தோசையை சாப்ட்டுட்டுதான் நீ போகணும்...” என அவனை உண்ண வைத்தவரை முறைத்துப் பார்த்துக்கொண்டே அவன் சமையலறைக்குள் கையைக் கழுவச் செல்ல, பூரணி உள்ளேயிருந்தார்.
அவரைக் கண்டதும் மனம் கொஞ்சம் நிம்மதியடைய, “ஆன்ட்டி... குட்டி வரலையா?” என ஆர்வமாய் வினவினான்.
“இல்லப்பா... அவ வரலை!”
“ஏன் ஆன்ட்டி குட்டி வரலை. அவளுக்கு உடம்புக்கு முடியலைன்னு அப்பா சொன்னாரு. இப்போ எப்படி இருக்கா?” என படபடவென கேட்டான்.
சில நொடிகள் தயங்கியவர், “இப்போ நல்லா இருக்காப்பா...” என்றார்.
“எப்போ குட்டி இங்க வருவா ஆன்ட்டி?”
“அவ இனிமே வரமாட்டாப்பா...” அவர் பதிலில், “ஏன் ஆன்ட்டி... ஏன் வரமாட்டா. அவளைக் கூட்டீட்டு வாங்க ஆன்ட்டி. நான் அவளைப் பத்திரமா பார்த்துக்குறேன். அவ உடம்பு சரியானதும் வரட்டும் ஆன்ட்டி...” என்றான் பதற்றத்துடன். பூரணி தலையை மட்டும் அசைத்தார். இத்தனை நாட்கள் மகள் இவனுடனே விளையாடியதால் திடீரென அவளின் இன்மையை இவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
“ஆன்ட்டி... பாவம் குட்டி... தனியா அவளை வீட்ல விட்டுட்டு வந்துட்டீங்களா? அவளை யார் பார்த்துப்பா?” கவலையாய் மனோ வினவ, “குட்டி ஸ்கூலுக்குப் போய்டுவா பா...” என்றார் அவர். அதிலில் இவனது முகம் மலர்ந்தது.
“ஓகே ஆன்ட்டி...” என்றவன் சிட்டாய் பறந்திருந்தான். சந்தனா பள்ளிக்கு ஒன்பது மணிக்குத்தான் வருவாள். ஆனால் இவன் எட்டு முப்பதுக்கே வாயிலில் நிற்கத் தொடங்கினான். அதோ இதோவென அரைமணி நேரம் கடந்து சந்தனா பள்ளிக்கு வந்தாள்.
இரட்டை ஜடை பின்னலிட்டிருந்தவள் அதில் அரைமுழம் மல்லிப்பூவை சுற்றியிருந்தாள். முகத்தில் மஞ்சளைக் குழப்பி அப்பியிருந்தாள். எப்போதுமிருக்கும் அசட்டுத்தனம் இல்லாது பார்வையில் லேசாய் பயமோ, ஜாக்கிரதை உணர்வோ வெளிப்பட்டது. இவனுக்கு சந்தனா மிகவும் புதிதாய் தெரிந்தாள்.
அவள் அருகே வந்ததும், “குட்டி...” எனக் கத்தினான் மனோ. அவனை அந்நொடி அங்கே எதிர்பாராது திகைக்க சந்தனாவின் முகம் மலர்ந்தது. சில பல நாட்களுக்குப் பின்னர் அவனைக் கண்டதும் உதடுகளில் புன்னகை ஏறின.
“மனோ...” என்றவாறே அவனருகே வந்து நின்றாள்.
“குட்டி... உனக்கு என்னாச்சு? ஏன் நாலு நாளா நீ வரவே இல்ல? உடம்பு சரியாகிடுச்சா?” எனக் கேட்டு அவளது கழுத்தில் கையை வைக்கச் சென்றான். சந்தனா அப்படியே நகர்ந்துவிட்டாள்.
“அது... மனோ, நான் நல்லா இருக்கேன்...” என்றாள். அவன் தொட வந்ததும் பூரணி குரல்தான் செவியில் கேட்டது.
“குட்டி... நீ இனிமே சின்னப்புள்ளை இல்ல. பெரிய மனுஷியாகிட்ட. ஆம்பளை பசங்களைத் தொட்டுப் பேசக் கூடாது. அவங்களையும் தொட விடக் கூடாது. யாரும் கைகால் தவிர இங்க, அங்கன்னு தொட்டுப் பேசுனா உடனே அம்மாகிட்ட வந்து சொல்லிடணும். சரியா?” என பூரணி மகளுக்குப் போதித்து இருந்தார்.
“குட்டி...” என்றவன் அவளது கையைப் பிடிக்க, “கையை விடு மனோ...” என அவன் கையைத் தட்டிவிட்டிருந்தாள் சந்தனா.
“குட்டி... என் மேல கோவமா இருக்கீயா? இனிமே உன்னை ஜூஸ் குடிக்க சொல்ல மாட்டேன். எப்பவும் போல வீட்டுக்கு வா குட்டி...” என்றான் ஏக்கமாய்.
“இல்ல மனோ, இனிமே என்னை அங்க வரக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. என்னைக் கூட்டிட்டு வர மாட்டாங்க!” என்றாள் சோகமாய். அவளுக்குமே மனோவைப் பிரிவது அத்தனைக் கஷ்டமாய் இருந்து தொலைத்தது.
“குட்டி... ஏன், உடம்பு சரியானதும் நீ வா. நம்ப விளையாடலாம். நீ எனக்கு அசைண்மென்ட் எழுதித் தர வேணாம். நானே இனிமே எழுதிக்கிறேன். உன்னை நான் பார்த்துக்கிறேன். உனக்கு இங்கிலீஷ் சொல்லித் தரேன்” என்றான். இந்தப் பெண் வரமாட்டாள் என்றதும் வார்த்தைகள் வந்து விழுந்தன.
“இல்ல மனோ... அம்மாவிட மாட்டாங்க. நான் கேட்டா அடிப்பாங்க. அதனால வர மாட்டேன்!” என்றாள்.
“எல்லாரும் உள்ள வாங்க. கேட் பூட்டப் போறேன்!” பள்ளியின் வாயிற்காவலாளி கூற, “மனோ... நீ ஸ்கூலுக்குப் போ. உனக்கு டைமாச்சுல்ல. மிஸ் திட்டப் போறாங்க. நானும் உள்ள போகணும். கேட் பூட்டிடுவாங்க!” என்றாள் வாயிலைப் பார்த்துக் கொண்டே.
அவளது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன், “குட்டி... ம்ஹூம்... நீ வீட்டுக்கு வரேன்னு சொல்லு. அப்போதான் நான் ஸ்கூல் போவேன். இல்லைன்னா இங்கேயே நிப்பேன்...” என்றான் அடமாய்.
“மனோ... மேடம்க்குத் தெரிஞ்சா திட்டுவாங்க டா. ஒழுங்கா ஸ்கூலுக்குப் போ!” என்றாள் கோபமாய்.
“போ மாட்டேன். நீ டெய்லி என்னைப் பார்க்க வரேன்னு ப்ராமிஸ் பண்ணு. அப்போதான் போவேன்!” மனோ குரல் அத்தனை அடமாய் இருந்தது.
“ஏம்மா... உள்ள வரீயா? கேட்டைப் பூட்டவா?” வாயிற் காவலாளி இவளைப் பார்த்துக் கேட்க, அவன் கையை ஒரே உதறில் உதறிவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றாள். உள்ளே நுழைந்ததும் இவனைத் திரும்பிப் பார்க்க, மனோ கோபத்துடன் நின்றிருந்தான்.
“மனோ... ப்ளீஸ்டா, ஸ்கூலுக்கு கிளம்பு டா!” என்றாள் கலங்கிய குரலில். அவன் அசையவில்லை. வகுப்பிற்கு நேரமானதை உணர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
சந்தனா வகுப்பறையில் அமர்ந்திருந்தாலும் மனம் முழுவதும் மனோவிடம்தான். அவன் பள்ளிக்குச் சென்றுவிட்டானா? இல்லையா? அவன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று தெரிந்தால் சதா அவனைத் திட்டிவிடுவாரே. தன்னையும் கடிந்து கொள்வாரே. அவனை இந்த விஷயத்தில் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என மனம் அதிலே உழன்றது.
பதினோரு மணிக்கு இடைவேளை விட்டதும் குடுகுடுவென ஓடி வந்து அவள் வாயிலருகே பார்க்க, மனோ அங்கேயேதான் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் இவளுக்கு பயம் அதிகரித்தது. பூரணிக்குத் தெரிந்தால் தன்னையும் வெளுத்துவிடுவார் என்பதை மனம் கூற, கண்கள் மெதுவாய் கலங்கின. அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“ப்ரேக் முடிஞ்சது... எல்லாரும் க்ளாஸ்க்குப் போங்க!” என உடற்கல்வி ஆசிரியர் விரட்ட, இவள் வகுப்பறைக்குள் நுழைந்தாள். மதிய உணவு இடைவேளை விட, சந்தனா வாயிலருகே மீண்டும் வர, மனோ அங்குதான் நின்றிருந்தான். நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தது அடிபட்ட காலில் வலியைக் கொடுத்திருந்தது. அவன் குனிந்து காலை பிடிக்க, இவளுக்கு சரசரவென கண்ணீர் வழிந்தது.
வாயிற் காவலாளி கதவைத் திறந்துவிட்டார். மதிய உணவு வேளையில் சிலர் வீட்டிற்குச் சென்று உண்டு வருவார்கள். அதனால் ஒருமணிநேரம் கதவு திறந்திருக்கும். இவள் விறுவிறுவென அவனிடம் வந்துவிட்டாள்.
“ஐயோ... மனோ, கால் வலிக்குதா டா? ஏன் இப்படி பண்ற நீ?” எனக் கேட்டுத் தேம்பியவள், அவனது காலைக் குனிந்து தடவ, வெடுக்கென அவள் கையைத் தட்டிவிட்டான் அவன்.
“மனோ... கிளம்பு மனோ. மேடம்க்கும் சாருக்கும் தெரிஞ்சா உன்னைத் திட்டுவாங்க, அடிப்பாங்க டா!” என்றாள் அழுகையுடன்.
“நீ ப்ராமிஸ் பண்ணலைன்னா, நான் போக மாட்டேன்!” என் அவன் உறுதியாயிருக்க, சந்தனா அவன் கையை எடுத்து சத்தியம் செய்துவிட்டாள்.
“இனிமே ப்ராமிஸா டெய்லி உன்னைப் பார்க்க வரேன் மனோ!” என அவள் அழ, இவனது முகம் மலர்ந்தது.
“குட்டி... அழாத!” என அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான். கால் வலியில் முகம் சோர்ந்தது. எங்கேனும் அமர இடம் கிடைக்கிறதா என அவன் பார்க்க, பள்ளி சிறுவர்கள் அமரும் கல்மேஜை தென்பட, அங்கு சென்று அமர்ந்தான். இவள் அவனது பள்ளிப் பையைத் தூக்கித் கொண்டு சென்று அங்கே வைத்தாள்.
“மனோ... கால் ரொம்ப வலிக்குதா டா?” என அவள் அக்கறையாய்க் கேட்க, “அது... நின்னுட்டே இருந்தனால வலிக்குது குட்டி. உக்கார்ந்துட்டேன்ல, சரியாகிடும்!” என்றான் சமாதானமாக.
“குட்டி... நீ சாப்பிடலைல இன்னும். வா, சேர்ந்து சாப்பிடலாம்!” என தன் டப்பாவைத் திறந்து அவளுக்கு ஊட்டினான்.
“இல்ல மனோ... நீ சாப்பிடு!” என்றாள். பூரணி அவனுக்கு உணவு ஊட்டிவிடுவதை தவிரக்க கூறியிருந்தார்.
“நீ சாப்பிடலைன்னா எனக்கும் வேணாம்...” என்றவனை முறைத்தவள், ஒரு வாய் உண்ண, அவளுக்கு ஊட்டியவாறே தானும் உண்டு முடித்தான்.
“மனோ... லேட்டா போறீயே. மிஸ் உன்னை அடிக்க மாட்டாங்களா?” எனக் கவலையாய்க் கேட்டாள்.
“இப்போ போனா அடிப்பாங்க குட்டி. நான் க்ரவுண்டுக்குப் போகப் போறேன். நாளைக்கு மிஸ் கிட்டே காய்ச்சல்னு பொய் சொல்லிடுவேன். அவங்களுக்குத் தெரியாது!” என்றான் புத்திசாலிதனத்துடன்.
“சரி மனோ... கால் வலிக்கும். விளையாடப் போகாத நீ. அங்கப் போய் வேடிக்கை மட்டும் பாரு. நான் வரேன்!” என அவள் விடைபெற, தன் குட்டியை சம்மதிக்க வைத்த குஷியில் மனோ பையை எடுத்து மிதிவண்டியில் வைத்துப் பூட்டி சந்தோஷத்துடன் கிளம்பினான்.
தொடரும்...
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page