All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் - 1

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 1

விண்ணைத் தொடும் ஆசையோடு சிலு சிலுவென்று வளர்ந்து நின்ற தென்னை மரம். சுட்டெரிக்கும் ஆதவனின் வெப்ப கதிர்வீச்சினை கூட அதுவோ இதமாக தாங்கிக் கொண்டு தனக்கு கீழ் இருக்கும் நிலப்பரப்பிற்கு நிழல் கொடுக்கும் ஒன்றாக வளர்ந்திருந்தது. வளர்ச்சியில் மட்டுமல்லாது அதன் தன்மையிலும் உயர்ந்தே இருந்தது.

பல ஏக்கர் கொண்ட அந்தத் தென்னன் தோப்பில், தேங்காய்களை ஒரு சிலர் நார் உரித்துக் கொண்டிருக்க, இன்னும் ஒரு சிலர் அங்கிருந்த லாரியில் மார்க்கெட்டுக்கு கொண்டுச் செல்ல தேங்காய்களை மூட்டை மூட்டையாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

சில பெண்மணிகளோ மேலிருந்து கீழே வரும் தேங்காய் மட்டைகளை எடுத்து ஓரமாகப் போட்டு சுத்தம் செய்ய, இரண்டு கிழவிகள் மர நிழலில் அமர்ந்து அந்த தென்னை நாறுகளை வைத்து விளக்குமாறு செய்துக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் கண்டவாறு அந்த தோப்பின் உரிமையாளரான ஆதிரையன் இளநீர் அருந்திக்கொண்டு இருந்தான். இப்படி அந்த மரத்தில் உள்ள ஒவ்வொன்றும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக தான் இருந்தது.

"ஏலே சீக்கிரம் லோடு ஏத்துங்கலே பொழுது சாய்றதுக்குள்ள எல்லாம் மார்க்கெட் போய் சேரணும். இன்னும் எவ்வளவு ஏத்த வேண்டியது இருக்கு. கூட ரெண்டு மூணு நாளா கூட்டிட்டு வந்து இருக்க வேண்டியது தானே ?" என்று அந்த வண்டியின் உரிமையாளரிடம் இளநீரை குடித்து முடித்து ஆதிரையன் கேட்க,

"தம்பி இப்போயெல்லாம் யாரு இந்த லோடு வேலைக்கு வராங்க சொல்லுங்க. என்னால தூக்க முடியல இடுப்பு பிடிக்கும் முதுகு பிடிக்கும்ன்னு சொல்றாங்க. ஆளே கிடைக்க மாட்டேங்குது. என்ன பண்ண சொல்றீங்க தம்பி. இதோ இவங்க வேகமா ஏத்திடுவாங்க " என்றதும்,

"நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது இன்னைக்கு இந்த லோடு எல்லாம் ஏத்தி முடிச்சிட்டு நாளைக்கு காலங்காத்தால என்கிட்ட வந்து எவ்வளவு போச்சி அப்படிங்கிற கணக்கு என் கிட்ட வந்து ஒப்படைக்கணும். இதுல மட்டும் ஏதாவது நீ பண்ணனும் நெனச்ச அப்பறம் இந்த ஆதி யாருன்னு உனக்கு தெரிஞ்சிரும்லே  " என்று மீசையை முறுக்கிக் கொண்டு வார்த்தையாலே அவனை மிரட்ட, பவ்யமாக கரங்கள் இரண்டையும் தன் நெஞ்சின் குறுக்கே கட்டிக் கொண்டு தலையசைத்து நின்றான்.

"என்ன தம்பி இப்படி சொல்றீங்க ?நான் பல வருஷமா உங்ககிட்ட வேலை பார்க்குறேன் "

"யாரு இல்லைன்னு சொன்னா நீ பல வருஷமா வேலை பார்க்கிற தான். இருந்தாலும் இந்த ஆதி எவனையும் நம்ப மாட்டான்லே " என்க, அவனின் முன்னே இருந்தவனோ ஒரு நொடி இவனை எதிர்த்துப் பேசி இருக்கலாம் ஆனால் அவனால் அதனைச் செய்ய இயலாது.

காரணம் அவனே இவர்களின் குடும்பத்தில் கட்டுப்பாட்டில் தான் இருந்தான். அவன் மட்டும் அல்ல அந்த ஊரில் இருக்கும் பெரும்பாலோர் ஆதியின் குடும்பத்தாரின் கீழ் தான் வேலை செய்யும் நிலைமையில் இருக்கின்றனர்.

இவன் பேசிக் கொண்டிருக்கும் இந்த நொடிக்கு எல்லாம் புல்லட்டின் ஓசைக் கேட்க, சத்தம் வந்த திசையில் இருவரும் திரும்பினர்.

அங்கே புல்லட்டின் இருந்து இறங்கிய ஒருவன் தன் வேஷ்டியை தூக்கி மடித்து கட்டி கையில் அணிந்திருந்த காப்பை முஷ்டியோடு இறுக்கிக் கொண்டு ஆதிரையனை நோக்கித்தான் வந்தான்.

வந்த வேகத்தில் கை நரம்புகளை முறுக்கி அவனின் கன்னத்திலே ஒரு குத்து விட, சட்டென தடுமாறிய ஆதிரையனும் தன் கால்களை அழுத்தமாக ஊன்றி திரும்பி தன் நண்பனான உதயனை தான் கண்டாள்.

"ஏய் என்னடா பண்ணிட்டு இருக்கே ?"  என்றுக் கேட்கவே, மீண்டும் அவனோ தாக்க வர அவனின் கரங்களை இறுக்கமாக பற்றினான்.

மற்றொரு கரங்களை வைத்து தாக்க முயற்சிக்க, அவனின்  இரு கரங்களையும் பற்றிக் கொண்டான்.

"டேய் என்னடா உன் பிரச்சனை ? காரணமே இல்லாம இப்போ எதுக்குடா என்கிட்ட வந்து சண்டை போட்டுட்டு இருக்கே ?" என்க,

"காரணம் தானே சொல்றேன் " என்றதும், அவனின் கரங்களோ தானாகப் பிரிந்தது. அடுத்த நொடி அவனின் முகமெல்லாம் பஞ்சர் ஆக்கிவிட்டான்.

நண்பனின் அடிகளை தாங்க முடியாது ஆதிரையனும் எதிர்த்து தாக்க இருவருமே ஒரே பலம் கொண்டவர்கள் தான்.

"டேய் உதயா என்ன காரணம்னு தெரியாம எதுக்குடா என்னை அடிக்கிற ? " என அவன் கொடுத்த அடிகளையும் வாங்கிக் கொண்டு இவனும் மாறி அவனை அடித்தவாறேக் கேட்க,

"யுகனிகாவை பார்க்காதே, அவகிட்ட பேசாதே, அவளை தொந்தரவு பண்ணாதேன்னு உன்கிட்ட எத்தனை தடவை நான் சொல்லியிருக்கேன். ஆனா நீ திரும்ப திரும்ப எதுக்குடா அவளை டார்ச்சர் படுத்திட்டு இருக்கே " எனக் கேட்டவாறே அடித்து வெளுத்து வாங்கினான்.

இருவரின் உதட்டில் இருந்தும் உதிரமோ கசிந்தது. ஆங்காங்கு கீழே விழுந்து எழுந்ததில் காயமும் ஏற்ப்பட, ஒரு கட்டத்தில் இருவரும் தரையில் விழுந்து உருளும் நிலைக்கேச் சென்று விட்டனர். அங்கிருந்து அனைவரும் போராடி இவர்களைப் பிரித்து தடுக்க முயற்சிச் செய்தனர். நேரங்கள் கடந்து ஒரு வழியாக இருவரையும் அங்கிருந்த ஆட்கள் பிரித்து விட்டனர்.

"தம்பி என்னப்பா ரெண்டு பேருமே பெரிய வீட்டுப் பிள்ளைகளா இருந்துக்கிட்டு இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க ?"  என்றுக் கேட்கவே,

"நல்லா கேளுங்க அண்ணே இவனுக்கு பொம்பள சோக்கு கேட்குதாம்.  இங்க பாரு இதான் உனக்கு கடைசி தடவை சொல்லுறது. இதுக்கு அப்பறமும் நீ அவ பின்னாடி சுத்தின அப்பறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன். கொன்னுடுவேன் பார்த்துக்கோ " என்று விரல் நீட்டி மிரட்டினான்.

அவனின் விழிகளில் தெரிந்த அந்த ரௌத்திரம் இதில் அவன் உறுதியாக இருக்கிறான் என்பது ஆதிரையனுக்கு நன்றாகவேப் புரிந்தது.

"நான் என்னமோ பண்ணுறேன் உனக்கு என்னடா ? அவளே என் கிட்ட எதுவும் சொல்லலை. ஆமா அவளுக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம் ? " என்று விடமாட்டேன் என்பதுப் போல் ஆதி உதயனிடம் கேட்க,

"அவ என் ஃப்ரெண்ட். அவ இந்த ஊருக்கு வந்தததே என்னை நம்பி தான். அவளை பாதுகாக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. அவளுக்கு பிடிக்காத விஷயம் நீ அவளை பாலோ பண்றது ஒழுக்கமா விலகிரு சொல்லிட்டேன் "

"இருபத்தி ஒன்பது வருஷமா ஒண்ணா படிச்ச நட்புன்னு கூட நீ பார்க்காம அவளுக்காக என்கிட்ட சண்டை போடுற அந்த அளவுக்கு அவ உனக்கு முக்கியமா. சரிடா இப்போ சொல்றேன். நான் அவளை  தான் கல்யாணம் பண்ணுவேன்டா. நீ என்னடா பண்ணுவ பண்ணு அதையும் பார்த்துக்கலாம் " என்று ஆதியும் அவனிடம் வாதிடவே,

"அப்படி ஒன்னு கனவுல கூட நடக்கவே நடக்காது. என்ன மீறி உன் நிழல் கூட அவளை தொடாதுடா. இதுக்கப்புறம் நீ அவளை நெருங்கின என்னோட முதல் எதிரியே நீ தான். நமக்குள்ள ஒரு நட்பு உறவு இருக்குங்குற ஒரு எண்ணத்தால மட்டும் தான் இப்ப நான் அமைதியா போறேன். அதை நீ காப்பாத்திக்க முயற்சி பண்ணு. ஏதாவது பண்ணுன திரும்பவும் சொல்றேன் நான் கொலைக்காரன் ஆயிடுவேன் பார்த்துக்கோ ₹ என்று தன்னைப் பற்றி இருந்த ஆட்களை விடுவித்து தான் வந்த புல்லட்டை நோக்கிச் சென்றான்.

இத்தனை வருடங்கள் தன் நண்பனாக இருந்து இன்றிலிருந்து தன் எதிரியாக மாறிய உதயனை கண்டவாறு கசங்கிருந்த சட்டையை நீவி விட்டான் ஆதி. தன் மேனியில் இருந்த தூசியை தட்டி விட்டவனின் நினைப்போ உதயன் தனக்கு தூசி போல் என்று எண்ணியது. ஆனால் அவன் தூசி அல்ல யுகனிக்காவை நெருங்கினால் அவன் மின்சாரமாக மாறுவான் என்பதை ஆதிரையன் கணிக்கவில்லை.

"என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க அதான் சண்டை முடிஞ்சிடுச்சில்ல. போங்க போய் வேலையை பாருங்க சீக்கிரம் " என்றவனோ முன்னே இருந்த கயிற்றில் கட்டிலில் அமர்ந்தான்.

ஆதிரையன் உதயன் இருவருமே சிறு வயதிலிருந்து ஒன்றாகப் பள்ளி பருவம் வரை படித்தவர்கள். பின் கல்லூரி பருவம் வந்ததும் இருவரின் திசைகளும் மாறிவிட்டது. ஆனால் விடுமுறை நேரங்கள் எல்லாம் இருவரும் நட்பாகவே தான் பழகி வந்தனர். பக்கத்து ஊராக இருக்க, இரு குடும்பத்தாரும் சொந்தங்கள் இரு கிராமத்திலும் வசதி படைத்த வீடு என்றால் இவர்களின் வீடு தான். சம அளவு இருவரும் பலம் கொண்டதைப் போல் தான் வசதியும். தகுதியிலும் இருவரின் தந்தைகளும் சமமான அளவு கொண்டவர்கள்.

பக்கத்து ஊரின் ஹீரோ உதயன் என்றால் இந்த ஊரின் ஹீரோ ஆதிரையன். கடந்த சில நாட்களாகவே இருவருக்குள்ளும் சில மனஸ்தாபங்கள் வந்தது காரணம் யுகனிகா.

அந்த மனஸ்தாபமே இப்பொழுது இருவரும் மோதிக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. அவளுக்காக தன்னை வந்து உதயன் தாக்குவான் என்பதை ஆதி எதிர்பார்க்கவில்லை. இந்த தாக்குதலின் மூலம் அவன் ஒன்றை புரிந்துக் கொண்டான். அவளை இவன் பாதுகாப்பதில் தான் முன்னுரிமை கொடுக்கிறான் என்று.

இரு சூழப் போகும் நேரம் ஆதி தன் வீட்டுக்குச் செல்லும் முன்னே தோப்பில் நடந்த இந்த சண்டை அவனின் தந்தையின் செவிக்கு வந்து விட்டது.

வீட்டுக்குள் நுழைந்த நொடியே ஹாலில் வைத்து அவனின் தந்தை தென்னவன் அவனை தடுத்தார்.

அவர் தன்னை தடுத்து நிற்க வைத்ததிலே இன்று நடந்த பிரச்சனை அவருக்கு தெரிந்து விட்டது என்பதை ஆதி உணர்ந்து கொண்டான்.

அங்கிருந்த மிகப்பெரிய மரத் தூணின் மீது சாய்ந்தவாறு ஆதியின் தங்கை நிகழ்மதி நிற்க அதற்கு அருகில் மற்றொரு தூணை தவிப்போடு பற்றிக் கொண்டு அவனின் அன்னை மல்லிகா நின்று கொண்டிருந்தார்.

தென்னவனை மீறி பெண்கள் இருவரும் என்ன முயற்சி செய்தாலும் அவனை காப்பாற்ற முடியாது. அதனால அவர்கள் செய்வதறியாது அங்கு நின்றவாறு இருந்தனர். எப்படியும் இன்று ஆதிக்கு சிறப்பு பூஜை தென்னவன் மூலம் நடக்க இருக்கிறது என்பதை உணர்ந்து தடுக்க இயலாது இருந்தனர்.

"டேய் நில்லடா உனக்கும் உதயனுக்கும் தோப்பில் வச்சி என்னடா சண்டை. ஏதோ ஒரு பொண்ணுக்காக நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். என்னடா இது நம்ம குடும்ப மானத்தை வாங்க இப்படி பண்ணிக்கிட்டு இருக்கியா ? " என்றுக் கேட்கவே,

"அப்பா இது ஒரு சின்ன விஷயம் தேவையில்லாம அவன் தான் வந்து பெரிய பிரச்சனையா மாத்திக்கிட்டு இருக்கான். இதை  நான் பார்த்துக்குறேன். இதுனால உங்களுக்கு எந்த அவமானமும் வராது " என்கவே, அவரோ எங்கே அவன் சொல்வதைக் கேட்டார்.

தன் மகனை எவ்வளவு சாட முடியுமோ அந்த அளவுக்கு வார்த்தைகளால் சாடி முடித்தவர் மூச்சு வாங்க அந்த இருக்கையில் சாய்ந்து அமரவே, "சரிப்பா இனிமே ஒழுங்கா இருக்கிறேன் " என்று தந்தைக்கு மன ஆறுதல் கொடுக்க ஒரே வார்த்தையில் முடித்து விட்டான்.

அவரோ பக்கம் பக்கமாக பேசினால் இவன் ஒரு வார்த்தையில் முடித்துவிட்டு தன் அன்னையைக் கண்டான்.

"அம்மா ரொம்ப பசிக்குது "

"சாப்பாடு ரெடியா தான் இருக்கு " எனக் கூறி அவரோ அங்கிருந்து செல்ல,

"போடு நல்ல போடு நீ இப்படி போட்டு போட்டு தான் எதுக்கும் உதவாம்மா நல்ல வளர்ந்து கிடக்கிறான் மாடு மாதிரி " என்று மறுபடியும் பூஜையை ஆரம்பித்தார்

அதை கேட்ட நிகழ்மதியோ, "நீ இங்கே இருந்தா அப்பா கத்திக்கிட்டே தான் இருப்பாரு. வா " எனக் கூறி இழுத்துச் சென்று விட்டாள்.

கை கால்களை கழுவி விட்டு டைனிங் டேபிளில் வந்து அமர, தன் மகனின் உதட்டில் ரத்த கசிவும் ஆங்காங்கே சற்று வீக்கமும் இருப்பதைக் கண்டார் மல்லிகா.

"ஐயோ இப்படி போட்டு அடிச்சி இருக்கானே. எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற இடம் தான். ஆரம்பத்திலேயே எங்க கேட்டாரு நீயும் கேட்டாயாடா அவன் கூட பழகாத பழகாதேன்னு. இப்ப பாரு எல்லாத்தையும் மறந்து எப்படி போட்டு அடிச்சிருக்கான் " என்று தன் மகனின் மீது உள்ள அக்கறையில் மல்லிகா புலம்பிக் கொண்டு மகனின் காயங்களை தடவியவாறு இருந்தார்.

"அம்மா இதெல்லாம் ஒன்னும் இல்ல சரியா போயிரும் " என்க,

"நீ எப்ப பார்த்தாலும் உன் மகனுக்கு ஏன் சப்போர்ட் பண்ணி பேசிக்கிட்டு இருக்க ? உதயா மாமா வந்து அண்ணனை அடிச்சிருக்குன்னா இவன் ஏதாவது பண்ணி இருப்பான். உன் மகள் மேல தப்பு இல்லாமையா இருக்கும் " என்று திடீரென நிகழ்மதி அண்ணனுக்கு எதிராகப் பேசினாள். அவள் அப்படி பேசுவதற்கு முக்கியமான காரணம் உதயன்.

நிகழ்மதியின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவன் உதயன். அண்ணனும் உதயனும் இரு கண்கள். இருந்தாலும் நியாயம் யாரின் புறம் இருக்கிறதோ அவர்கள் புறம் தான் செல்வாள்.

"மாமாவா மாமா அவனுக்கும் நமக்கும் என்னடி சம்பந்தம் ? உங்க அத்தை காரி அங்க வாக்கப்பட்டு இருந்தா உடனே அவன் உனக்கு மாமன் ஆயிடுவானா " என்று மல்லிகா ஆரம்பிக்கவே, அதற்குள் தன் கரம் எடுத்து கும்பிட்டு அங்கிருந்து நழுவி விட்டாள்.

அவர் பேச ஆரம்பித்தால் தந்தையை விட பல மடங்கு பேசுவார். விடிந்து விடும் அதனாலே அங்கிருந்துச் சென்று விட்டாள் நிகழ்மதி.

மல்லிகாவிற்கு உதயனின் குடும்பத்தை பிடிக்கும் தான். இருந்தாலும் தன் குடும்பத்தாரோடு அவர்களை சொந்தமாக ஏனோ ஏற்க முடியாது. காரணம் தென்னவன் அவர்களின் குடும்பத்தாரின் மீது அன்பு வைத்திருந்தது மட்டுமே.

❤️ தொடரும் ❤️

 

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

கருத்து திரி

 

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d/

This topic was modified 1 month ago by VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்

   
ReplyQuote

You cannot copy content of this page