About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 4 💖
மெதுவாய் எரிந்தக் கண்களை கசக்கிவிட்டுக் கொண்டே எழுந்தமர்ந்தான் ரஞ்சன். அருகில் அமர்ந்தவாறு ஷோபனா பாதி உடலைப் படுத்தது போல மெத்தையில் சாய்த்திருந்தாள். அவளது கைகள் அஷ்வினைத் தட்டிக் கொண்டேயிருக்க, அரை உறக்கத்திலிருப்பதை உணர்ந்தான் ரஞ்சன். அவனது கைகள் நீண்டு மகனது உடல் சூட்டை ஆராய்ந்தன. அது குறைந்திருக்கவும் நிம்மதி பெருமூச்சு வெளிவந்தது.
எழுந்து மறுபுறம் சென்று ஷோபனாவை நன்றாய்ப் படுக்க வைத்தவன், காலைக் கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தான். மணி ஆறைத் தொட்டும் இன்னுமே அறை முழுதும் இருளாகக் காட்சியளிக்க, ஜன்னல் கதவைத் திறந்துவிட்டான்.
குபுகுபுவென உள்ளே நுழைந்த குளிர் காற்று சற்றே அவனது உடலை ஊசியாய் ஊடுருவிச் செல்ல, வெளியே எட்டிப் பார்த்தான். மழையில்லை எனினும் வானம் மங்கலாகக் காட்சியளித்தது. இன்னும் சூரியன் முழுதாய் வெப்பத்தை படரவிடவில்லை.
சாலைகளில் ஆங்காங்கே ஈரம் படர்ந்திருந்தது. வலதுபுறம் அடுக்குமாடிக் கட்டிடத்தோடு கூடிய சிறிய பூங்கா போல அங்காங்கே கல்மேஜைகளும் புல்வெளியும் அமைத்திருந்தனர். அங்கே வயதான முதியவர்களும் இளம் பிராய இளைஞர் இளைஞிகளும் நடை பயின்று கொண்டிருந்தனர்.
“மனோ... ஓடாத டா! மெதுவா நட!” என அதட்டலிட்டவாறு சந்தனா பூங்காவில் நடைபயின்று கொண்டிருந்தாள். மனோகர் முன்னும் பின்னும் ஓடியவாறு இருக்க, இவள் அவனது நடைக்கு ஈடு கொடுத்தாள்.
“மனோ!” என மீண்டுமொரு அதட்டல் இவளிடம். அவன் வயதையொத்த இளம்சிட்டை கண்டதும் சின்னவன் அவனுடன் சேர்ந்துவிட, இவள் ஆசுவாசப் பெருமூச்சுடன் கல்மேஜையில் அமர்ந்தாள். கொஞ்சம் நேரம் ஓடியதில் மூச்சுவாங்க, அமர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
அந்த வழியே சென்ற ஓரிருவர் இவளிடம் ஏதோ கேட்க, புன்னகையுடன் பதிலளித்தவண்ணம் இருந்தாள். நேற்றைக்கும் இன்றைக்கும் அவளிடம் நிறைய வேறுபாடுகள். சிறு பெண்ணாய் தெரிந்தாள் போல. ரஞ்சன் அவளைத்தான் பார்த்தான். பார்த்ததும், “டாக்டர்" என அவனது இதழ்கள் முணுமுணுத்தன. நேற்றைய அவளது புன்னகை ததும்பிய முகமும் பேச்சும் கண்முன்னே வந்து சென்றது.
தூரத்தே தெரிந்த பறவையொன்று சப்தமிடவும் அதில் கலைந்தவன் தலையை உலுக்கிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.
இந்த குளிருக்கு சூடாய் ஒரு தேநீரை உள்ளிறக்கினால் நன்றாய் இருக்குமென மனம் கூற, பாலை மிதமான சூட்டில் காய்ச்சி தேநீர் பொடியைக் கலந்து வடிகட்டவும், ஷோபனா எழுந்து வந்தாள்.
“என்னை எழுப்பி இருக்கலாம்ல ரஞ்சன்?” என சோபையாய் புன்னகைத்தவாறே கலைந்திருந்த முடியைத் தூக்கிக் கொண்டையிட்டாள்.
“நல்லா தூங்கீட்டிருந்த ஷோபி, அதான் எழுப்பலை. டீ குடி வா” அவளுக்குமொரு கோப்பையை நகர்த்தி வைத்தான். எந்த அலட்டலுமின்றி அவளும் எடுத்துப் பருகலானாள்.
அவனே இருவர் குடித்தக் கோப்பையைக் கழுவி வைக்க, “நீங்க போங்க... போய் ஆபிஸ் கிளம்புங்க. நான் ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்றேன்!” என்றவளிடம் தலையசைத்து அவன் நகர, இவள் இட்லியை சுட்டு எளிமையாய் சாம்பார் ஒன்றை வைத்தாள். மகனுக்கென கொஞ்சம் சாதம் வடித்து, ரசம் வைத்தாள்.
“எனி ஹெல்ப் ஷோபி?” அலுவலகம் தயாராகி வந்த ரஞ்சன் வினவினான்.
“இதோ, முடிஞ்சது பா!” என ரசத்தை மூடி வைத்து அடுப்புத் தீயை குறைத்துவைத்தாள்.
“சாப்பாடு எடுத்து வைக்கிறேன். வந்து சாப்டுங்க நீங்க...” என அவள் உணவு பாத்திரத்தில் கையை வைக்கச் செல்லும் முன்னே, “மம்மி...” என கண்ணைக் கசக்கிக் கொண்டே அஷ்வின் எழுந்து வந்து அவளை அணைத்தான். இவள் குனிந்து அவனைத் தூக்கி இடுப்பில் வைத்து, “குட் மார்னிங் அஷூ கண்ணா...” என்றாள் அவனின் தலையைக் கோதி.
“குட்மார்னிங் மம்மி... அஷூக்கு ஃபீவர் கோன்! போயே போச்சு” என்றான் சின்னவன் பற்கள் தெரிய புன்னகைத்து. அவனது கன்னத்தில் அழுந்த முத்துமிட்டாள் இவள். ஒருநாள் காய்ச்சலுக்கே மகன் மெலிந்து விட்டதாய் அவளுக்கொரு எண்ணம் பிறந்தது.
“ஒருநாள் பீவர்க்கே அஷூ மெலிஞ்சுட்டான் இல்ல ரஞ்சன்?” ஷோபனா கவலையாய்க் கேட்க, ரஞ்சன் தலையை அசைத்துப் புன்னகைத்துக் கொண்டான். எல்லா தாய்க்கும் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவனது உடல்எடை ஒரே நாளில் குறைந்து
விடுவது போலொரு பிரேமை என நினைத்தவனுக்குப் பெற்றவர்கள் நினைவில் மனம் கனிந்து போனது. நேரத்தைப் பார்த்தான், இன்னும் சிறிது நேரத்தில் அவர்களே அழைப்பார்கள் என எண்ணிவிட்டு, உணவை மேஜை மீது எடுத்து வைத்து உண்ணத் துவங்கினான்.
ஷோபனா மகனை இடுப்பில் வைத்தவாறே பாலைக் காய்ச்சி அவனுக்குச் சத்துமாவைக் கலந்து கொடுத்தாள்.
“ஹார்லிக்ஸ் பூஸ்ட்னு கண்டதை புள்ளைக்கு கொடுக்காத ஷோபனா. சத்துமாவை நானே அரைச்சேன். இதுல எல்லா சத்தும் இருக்கு. அவனே வேண்டாம்னு அடம்பிடிச்சாலும் நீ மறக்காம டெய்லி கொடுத்துடு!” அன்பைக் கூட அதட்டலாய் உரைத்த மாமியாரின் நினைவில் உதடுகள் மலர்ந்தன.
பசியில் இருந்ததால் அஷ்வின் மடமடவென பாலைக் குடித்து முடித்திருந்தான். ரஞ்சன் உண்டுவிட்டு எழ, “அதுக்குள்ளேயும் சாப்டீங்களா?” எனக் கேட்டவளின் குரலில் லேசான கவலை தேய்ந்திருந்தது.
“ப்ம்ச்... ஷோபி, ஐஞ்சு இட்லி சாப்டேன் டி. இதுக்கும் மேல வயித்துல இடமே இல்ல. நான் பட்னியா போற மாதிரி பார்க்காத நீ!” அவன் முறைப்புடன் எழுந்தான்.
“டாடி, நான் ஃபைவ் இட்லி சாப்பிடுவேன்!” அஷ்வின் துள்ளலாய்க் கூற, அந்த உற்சாகக் குரல் இவர்களையும் தொற்றிக் கொண்டது.
“யெஸ்... அஷூ கண்ணா குட் பாய்!” என்ற ரஞ்சனும் அவனுக்குப் பதிலளிக்க, ஷோபனாவின் கைபேசி இசைத்தது.
“ரஞ்சன், அத்தைதான்!” எப்போதும் காலை இதே நேரத்திற்கு அழைப்பதை வழக்கமாய் வைத்திருந்தார் பெரியவர்.
“என்ன டா, ஆஃபிஸ் கிளம்பிட்டீயா? பத்திரமா போ டா. கேண்டீன்ல சாப்ட்டு உடம்பை கெடுத்துக்காத டா. ஷோபனா மதிய டிபன் கட்டிக் கொடுக்குறா தானே?” என அவர் கேட்க, இவன் சிரிப்புடன் ஆமாம் என்பது போல தலையை அசைத்தான்.
ஷோபனாவால் மதிய உணவை சமைத்து தர இயலவில்லை. இப்போதைக்கு பணிமனையில் உண்டு கொள்வதாக அவளை சமாதானம் செய்திருந்தான் கணவன். அதை தாயிடம் தெரியப்படுத்தினால் அவர் வருந்துவார், மனைவியை ஏதும் சொல்லிவிடுவார் என பொய்யுரைத்தான். ஷோபனா அவனை நுரைத்துப் பொங்கிய அன்போடு பார்த்தாள். எங்கேயும் கணவன் தன்னை விட்டுத் தருவதில்லை என்பதில் அவளுக்கொரு அலாதி கர்வமே உண்டு. அவள்தான் அவன் வேண்டுமென விரும்பி வந்திருந்தாலும், ஒருபோதும் ரஞ்சன் அவளைக் குறைவாய் நடத்திவிடவில்லை. அவளுக்கான சுயமரியாதை, சுதந்திரம் என எதையும் குறைக்காது அதே நேரம் பொறுப்பாய் அன்பாய் பார்த்துக் கொள்வான். தனக்கும் மகனுக்கும் என்று வருகையில் தங்கள் மீதான பாசம் எப்போதும் முன்நிற்கும். நேற்றைய அவன் செயலில் சுணங்கியிருந்த மனம் இப்போது தெளிந்திருந்தது.
“சரி மா, சரிப்பா... பாய், ஆபிஸ் கிளம்புறேன்!” என ரஞ்சன் விடைபெற, அவனை அனுப்பிவிட்டு இவள் வந்தாள். அஷ்வின் தாத்தா, பாட்டியிடம் ஏதோ செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
இவள் முகம் திரையில் விழுந்ததும், “என்ன ஷோபனா புள்ளை இளைச்சுப் போய்ட்டான்!” எனக் கேட்டார் பெரியவர். ரஞ்சன் புன்னகைக்கான காரணம் இப்போது புரிந்தது.
“ஆமா அத்தை!” இவள் பதிலளித்தாள்.
“சத்துமாவைக் கொடுக்குறீயா இல்லையா?”
“பாட்டி, இப்போதான் குடிச்சேன்...” அஷ்வின் இடைபுக, அனைவரது முகத்திலும் புன்னகை.
“கண்ணுக்குள்ளே நிக்கிறான் என் பேரன். ரொம்ப மிஸ் பண்றேன் உங்களை!” அவர் கூறவும், இவள் முகம் மென்மையானது. தன்னிடம் அவ்வப்போது அரட்டி உருட்டி மாமியார் என்ற பதவியைத் தக்க வைத்திருந்தாலும், அஷ்வினுடன் இருக்கும்போது பெரியவர்கள் இருவரும் குழந்தைகள்தான். அவர்களது இருபத்து நான்கு மணி நேரமும் அவனைச் சுற்றித்தான் நகரும். அவன் கேட்கும் முன்னே தாத்தாவும் பாட்டியும் எதுவென்றாலும் வாங்கித் தந்துவிடுவார்கள். அதனாலே அஷ்வின் பெற்றவர்களைவிட அவர்களிடம் அதிகம் ஒட்டிக் கொள்வான்.
சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்த ரஞ்சனுக்கு பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைக்க, அவன் பெற்றவர்களைத் தனியே விடக் கூடாதென எண்ணி, அதை மறுக்கும் எண்ணத்திலிருந்தான்.
தங்கள் மகனின் வளர்ச்சி தங்களால் தடைபடக் கூடாதென பெற்றவர்கள் எண்ணினர். அவனது ஆறிலக்க சம்பளத்தை தாண்டி அவனுக்கான பதவி உயர்வு அவனது உழைப்பின் பலன் எனக் கருதி சமாதானம் செய்து ரஞ்சனை அனுப்பி வைத்தனர். அறை மனதாய்தான் மூவரும் கிளம்பினர். அஷ்வின் தாத்தா பாட்டியைவிட்டு வர மாட்டேன் என அழுது தேம்பிய போது பெரியவர்களுக்கு மனம் கனத்துப் போனதென்னவோ உண்மை.
இங்கே வந்தப்பின் நாள் தவறாது அழைத்துப் பேசி விடுவார்கள். ரஞ்சனின் தந்தைக்கு இன்னும் ஒரு வருடத்தில் பணி ஓய்வு கிடைத்துவிடும். அதற்குப் பின்னே அவர்களும் பெங்களூருக்கு இடம்பெயர எண்ணியிருந்தனர்.
“நாங்களும் உங்களை மிஸ் பண்றோம் அத்தை. உங்கப் பேரனோட பெட் டைம் ஸ்டோரியைக் கூட மிஸ் பண்றோம்!” என உணர்ந்து கூறினாள். சென்னையில் இருக்கும் போது மாமியார் அனைத்தையும் முன்னின்று செய்ய, இவள் அவருக்கு உதவுவாள். மற்றபடி பெரிதாய் வேலையெதுவும் இருக்காது. ஆனால், இப்போது ஒற்றை ஆளாய் அனைத்தையும் சமாளிக்க முடியாது திணறினாள். ரஞ்சன் உதவி செய்தும், அவளால் சரிவர செய்ய முடியவில்லை. இத்தனை நாட்கள் அவர்களின் நிழலிலே இளைப்பாறிவிட்டு திடீரென தனியாய் குடும்ப சுமையை சுமைக்க முடியாது வெகுவாய் சோர்ந்து போனாள். மேலும் சில பல நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் அஷ்வினுக்கு உணவை ஊட்டி, மருந்தைக் கொடுத்து உறங்க வைத்துவிட்டு சப்தமிடாது வீட்டு வேலைகளை கவனிக்கலானாள்.
***
மறுநாள் காலை பூரணி வெகுவிரைவாக எழுந்து சமைத்து முடித்திருந்தார். மகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்தார். அவள் குளித்து முடித்து புதி சீருடையை அணிந்து வர, அவளுக்கு ரெட்டை ஜடைப் போட்டு பின்னலிட்டார்.
அவளது பள்ளிப் பையை எடுத்து வைத்து, மதிய உணவை டப்பாவில் அடைத்தார். காலை உணவை இருவரும் உண்டு முடிய வேலை செய்யும் வீட்டிற்கு கிளம்பினர்.
சந்தனாவை வெளியே அமர வைத்தவர், “மண்ல விளையாடி ட்ரெஸ்ஸை அழுகாக்கிடாத குட்டி. இங்கேயே உட்காந்துருக்கணும்!” என்ற அதட்டலுடன் பூரணி செல்ல, அவரிடம் தலையை அசைத்தவள் பள்ளிப் பையை ஆசையாய் தொட்டுப் பார்த்தாள். அவளுக்குப் பிடித்த பென்டென்-இருந்தப் பையை அடம்பிடித்து வாங்கியிருந்தாள். உள்ளே திறந்து பார்க்க, புது எழுதுகோல், அழிப்பான், குறிப்பேடு என எல்லாம் இருந்தன. அதையெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்தவளின் பார்வை தாயை வருட, அவர் எப்போது வருவார், புதுப்பள்ளியில் எப்போது சேரலாம் என்ற சிந்தனைதான் மனம் முழுவதும். இடையே மேலிருந்த அறையிலிருந்து சத்தம் கேட்டாலும், அதை அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
உமாநாதன் அலுவலகம் கிளம்பியவர், இவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனார்.
சதாம்பிகாவிடம் நேற்றே பூரணி அனுமதி வாங்கி இருந்தார். ஒருவாரம் மட்டும் மகளைப் பள்ளிக்குத் தான் அழைத்துச் செய்வதாகவும், பின் வழி அவளுக்குப் பழகிவிடும் எனக் கேட்டிருக்க, அவர் சரி என்றுவிட்டார். இரண்டு தெரு தள்ளிதான் அரசுப் பள்ளி இருந்தது. நடந்து சென்றவாறே வழியை மகளுக்கு காண்பித்துவிட்டு, அவளது வகுப்பறைக்குச் சென்று ஆசிரியரிடம் கூறி விட்டுவிட்டு வந்தார்.
“குட்டி, ஸ்கூல் முடிஞ்சதும் எங்கேயும் போக கூடாது. அம்மா வர்ற வரைக்கும் கேட் பக்கத்துல உக்காந்திருக்கணும்!” என அறிவுறுத்திவிட்டு சென்றார்.
பன்னிரெண்டு மணிக்கு சதாம்பிகா வீட்டில் வேலையை முடித்தவர், நேரே பேருந்து நிலையம் அருகே இருக்கும் உணவகத்திற்குள் நுழைந்தார். மதிய வேளையில் காய்கறி நறுக்கிக் கொடுக்க ஆள் வேண்டுமென அவர்கள் கேட்டிருக்க, நேற்று விசாரித்த பூரணி இன்றிலிருந்து வேலைக்கு சேர்ந்திருந்தார். பனிரெண்டு மணியிலிருந்து மூன்று மணிவரை காய்கறி நறுக்குவது, பாத்திரம் துலக்குவது, இலையெடுப்பது என எந்த வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும். மூன்று மணிக்கு மேல் வேலை பார்ப்பவர்களுக்கு உணவு அங்கே வழங்கினர்.
பூரணி உணவை ஒருவாய் எடுத்து வைத்ததும் மகளின் நினைவுதான். கொஞ்சம்தான் துவரம் பருப்பு வீட்டிலிருக்க, அதை வைத்து சாம்பார் சாதம் செய்து அவளுக்குக் கொடுத்து விட்டிருந்தார். தொட்டுக் கொள்ள ஊறுகாய்தான் வைத்திருந்தார். இப்போது அவர் சாப்பிடும் உணவு ருசியாய் இருக்க, அவளுக்குக் கொடுக்க முடியவில்லை என்ற எண்ணத்தில் உணவு கஷ்டப்பட்டு உள்ளிறங்கியது. உண்டு முடித்தவர் அங்கு கூறிவிட்டு மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு மீண்டும் சதாவீட்டிற்கு சென்று வேலைகளை முடித்துவிட்டு இருப்பிடம் வந்தடைந்தனர் இருவரும்.
நாட்கள் அதன் போக்கில் நகர, இதுவே அவர்களுக்கு வழக்கமாகிப் போனது. பூரணி கஷ்டப்பட்டு தன்னை இந்த வாழ்க்கைக்குப் பொருத்தியிருந்தார். யாரிடமும் கையேந்தாமல் உழைத்து சாப்பிடுவது எவ்வளவோ மேல் என்ற எண்ணமும், பெற்றவர்களிடம் செல்லக் கூடாதென்ற வைராக்கியமும் வலு பெற்றிருந்தது. அதனாலே ஓடத் துவங்கியிருந்தார். வாங்கும் சம்பளத்தில் முடிந்தளவு செலவை குறுக்கியவர், மீதத்தை மகளுடைய படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும் சேமித்தார்.
பூரணி வேலைக்கு சேர்ந்து சில பல மாதங்களை நேரமுட்கள் விழுங்கியிருந்தன. சந்தனாவிற்கும் வார நாட்களில் பள்ளி, வாரயிறுதிகளில் விடுமுறை என நாளும் கிழமையும் நகர்ந்தன. பூரணி வேலை செய்யும் நேரத்தில் வெளியே அமர்ந்திருக்கும் சந்தனா வீட்டுப் பாடங்களை எழுதி முடித்துவிடுவாள். பல நேரம் அவள் தூங்கி வழிய, சில சமயம் செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறேன் என அதன் பின்னே சுற்றுவாள். அதுதான் அவளது பிரதான வாடிக்கை.
அன்றைக்கு வாரயிறுதி. சதாம்பிகா வீட்டில் காலையில் வேலையை முடித்திருந்தார் பூரணி. சதாம்பிகா கணவருடன் வெளியே செல்வதால் மாலை வரவேண்டாம் என்று கூறியிருக்க, இவர் மகளை அழைத்துக்கொண்டு வீடுவந்தார். உணவகம் ஞாயிறு விடுமுறை என்பதால் எங்கும் செல்லத் தேவையில்லை. ஓடி களைத்த உடல் கொஞ்சம் ஓய்வுக்கு கெஞ்சியதுதான். சாப்பிட்டுவிட்டு உறங்கலாம் என அவர் எண்ணியபடி உணவை எடுத்து வைக்க, மகள் முகத்தைத் தூக்கினாள்.
“அம்மா, நிதம் சாம்பாரு இல்லன்னா புளிக்குழம்பு. எனக்குப் பிடிக்கலை!” என்றாள் தட்டை தள்ளியபடி.
“குட்டி, வேற என்ன வைக்க சொல்ற?” என்று உதடுகள் கேட்டாலும் கைகள் தனக்கும் மகளுக்கும் உணவை தட்டிலிட்டன.
“எனக்கு கறிசோறு வேணும் மா. அப்பா இருக்கும்போது அடிக்கடி செஞ்சுத் தருவ. இப்போலாம் செஞ்சே தர்றது இல்ல!” குறைபடித்தாள் சின்னவள்.
“அடுத்த வாரம் கறிசோறு செஞ்சுத் தரேன். இப்போ இதை சாப்பிடு குட்டி!”
“போம்மா... எனக்கு சாப்பாடே வேணாம்!” தட்டை ஒரே தள்ளாக அவள் தட்டிவிட, சாப்பாடு தரையில் சிந்தியது. எழுந்து அவளருகே வந்தவர், “இதென்ன டி புதுசா அடம்புடிக்கிற பழக்கம். இருக்கதை சாப்பிடணும்னு சொல்லி இருக்கேனா இல்லையா?” எனக் கோபமாய்க் கேட்டு அவளது முதுகில் அடித்திருந்தார்.
இந்த சாப்பாட்டிற்குத்தான் அவர் ஓடிக் கொண்டிருக்க, இவள் அதைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என சினம் பரவியது அவருக்கு.
தாய் அடித்த அடியின் வீரியம் தாங்காது சந்தனா கத்தியழத் தொடங்க, மரிக்கொழுந்து பதறி வந்துவிட்டார்.
“என்ன அன்னபூரணி, எதுக்குப் புள்ளை அழுறா?” அவர் கேட்க, பூரணி அமைதியாய் இருந்தார்.
“என்ன டி, நீதான் அவளை அடிச்சியாக்கும். புள்ளை மேல கை நீட்டுறது என்னப் பழக்கம்?” என அதட்டியவாறே சந்தனாவை அணைத்துக் கொண்டார். அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.
“ம்ப்ச்... இருக்கதை சாப்டாம, கறிசோறு வேணும்னு கேக்குறா கா. நான், சரி அடுத்த வாரம் கறியெடுத்து சோறாக்குறேன்னு சொன்னாலும் கேக்காம, சாப்பாட்டை கீழே சிந்தி வச்சிருக்கா பாருங்க!” பூரணி கோபத்துடன் மொழிந்தார்.
“சின்னப் புள்ளை. அவளுக்கென்ன தெரியும், ஏதோ ஆசைப்பட்டு கேட்டிருக்கா. அதுக்குன்னு புள்ளையை கை நீட்டுவீயா?” என அதட்டியவர், “நீ வாடி, பெரியம்மா கறிச்சோறு தர்றேன்!” என அவளை அழைத்தார்.
“ஐயோ, அதெல்லாம் வேணாம் கா. வீட்ல என்ன இருக்கோ, அதை சாப்ட்டு பழகட்டும். ஒரு தடவை பழக்கப்படுத்திட்டீங்கன்னா, ஓயாம அடம்பிடிச்சு அழுவா கா” பூரணி கூற,
“அப்படிலாம் இல்ல பூரணி. ஒருநாள் அங்க சாப்டட்டும்” மரிக்கொழுந்து அவளை அழைத்துச் செல்ல, பூரணி மகளை முடிந்தளவு முறைத்தார்.
வீட்டிற்குச் சென்றதும் தாய் அடிப்பாள் என்ற பயத்திலே சந்தனாவுக்கு உணவு உள்ளிறங்கவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது. அரைகுறையாய் உண்டுவிட்டு வீட்டிற்குள் நுழைய, பூரணி கோபத்துடன் அவளைப் பார்த்தார்.
“கதவை மூடிட்டு உள்ள வா குட்டி!” என அழைக்கையிலே அவரது கோபம் புரிந்தவளுக்கு கண்களில் குளம் கட்டின.
“அம்மா, என்னை அடிக்காதம்மா. இனிமே கறிசோறு கேக்க மாட்டேன். நீ என்ன கொடுத்தாலும் சாப்பிட்றேன் மா. அடிக்க மட்டும் செய்யாத மா. வலிக்குது மா!” சந்தனா தேம்பியழ, பூரணிக்கும் விழிகள் பளபளத்தன.
“குட்டி, இனிமே வீட்ல என்ன இருக்கோ, அதான் சாப்பிடணும். யார் வீட்லயும் போய் சாப்பிடக் கூடாது. புரியுதா!” கண்டிப்பாய்க் கூறினாலும், மகளை இழுத்து மடியில் படுக்க வைத்தார் பூரணி. தேம்பிக் கொண்டே, “சரிம்மா...” என்றாள் சின்னவள்.
“அடுத்த வாரம் அம்மா கறிசோறு செஞ்சு தரேன்!” என அவளது முகத்தை முந்தியால் துடைத்தார்.
“நிஜமாவா மா?” இவள் ஆர்வமாய்க் கேட்க, “நிஜமா செஞ்சுத் தரேன் குட்டி...” என அவர் கூற, சந்தனா இப்போதே அடுத்த வார ஞாயிற்றுக் கிழமைக்குக் காத்திருக்கத் துவங்கினாள்.
தன்னை சோதிக்கவென்றே கடவுள் அந்த வாரத்தை மெதுவாய் செல்ல வைப்பதாக அவளுக்கொரு எண்ணம். அதோ இதோவென ஞாயிற்றுக் கிழமையும் விடிந்தது.
எழுந்ததும் தன் முகம் பார்த்த மகளிடம், “வேலையை முடிச்சிட்டு மதியம் வரும்போது கறியெடுத்துட்டு வருவோம் குட்டி. வந்ததும் அம்மா உனக்கு அரைமணி நேரத்துல கறிசோறு செஞ்சுத் தரேன்!” எனப் பூரணி கூறவும், சந்தனா உற்சாகத்துடன் கிளம்பினாள். நேற்று பள்ளியில் அவளும் அவளது நண்பர்களும் சேர்ந்து பட்டம் செய்திருக்க, அதை கையில் ஆட்டியபடியே நடந்தாள்.
பூரணி உள்ளே வேலை பார்க்க, இவள் கீழே பட்டத்தை வைத்து விளையாடினாள். கும்மியாய் இருந்த மணல் இப்போது தரையோடு அமிழ்ந்து குறைந்திருக்க, இவளுக்கு அதில் ஏக வருத்தம்.
“ஓய்...” மேலிருந்து யாரோ கத்துவதை உணர்ந்து சந்தனா நிமிர்ந்து பார்க்க, புதிதாய் ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
“உன் நேம் என்ன?” அவன் கேட்க, இவள் பதிலளிக்காது குனிந்து கொண்டாள்.
“ஏய், உன்னைத்தான் கூப்பிட்றேன். காது கேட்கலையா? உன் நேம் என்ன? எந்த ஸ்டார்டர்ட் படிக்கிற?” அவன் கத்த, இவள் அசையவே இல்லை. ஏற்கனவே மனோவிற்கு உதவி செய்ய சென்று அடிவாங்கிய ஞாபகம் மட்டுமல்ல, அந்த தழும்பும் நெற்றியிலிருக்க, தாய் கூறியது போல் எதையும் கண்டு கொள்ளாது அமைதியாய் இருந்துவிட்டாள்.
அந்த சிறுவன் மேலிருந்து எதையோ கீழே எறிய, இவள் மேலே பட்டது. அதை எடுத்துப் பார்த்தவள், அவனை முறைத்துவிட்டு திரும்பினாள். இதனிடையே பட்டத்தில் ஒரு பக்கக் குச்சி காகிதத்திலிருந்து அறுந்துவிழ, யாரும் பார்க்கிறார்களா என சுற்றி முற்றி கண்களை சுழற்றிவிட்டு, எச்சியைத் தொட்டு அதை ஒட்ட வைத்தாள்.
மேல இருக்கும் சிறுவன் அதைப் பார்த்துவிட்டான். “சீ கருமம்... பேட் கேர்ள்!” அவன் கத்தவும், இவளுக்கு ரோஷம் வந்துவிட்டது. நிமிர்ந்து அவனை முறைத்தவள், “போடா மொட்டை...” என்றாள். ஆம், மேலிருந்த சிறுவன் மொட்டையடித்திருக்க, இவள் அதைத் குறிப்பிட்டதும் அவனுக்கு மூக்கு மேல கோபம் பொங்கியது.
விறுவிறுவென கீழே இறங்கி வந்தவன், “யாரைப் பார்த்து மொட்டைன்னு சொல்ற?” என்று கேட்டு இவளது பட்டத்தைப் பிடிங்கிக்கொண்டு ஓடினான்.
“ஏய்... ம்மா, என் பட்டம்!” என இவளும் அவன் பின்னே ஓடத் துவங்கினாள்.
“முடிஞ்சா என்கிட்ட இருந்து வாங்கிப் பாரு நீ...” என்றவன் வீட்டிற்குள்ளே சென்று மாடியேற, இவளும் ஓடும் வேகத்தில் கவனிக்காது சென்றுவிட்டாள்.
அந்த சிறுவன் மனோ அறைக்குள் செல்ல, இவளும் உள்ளே நுழைந்து அவனைத் துரத்தினாள். மனோ கட்டிலில் அமர்ந்து இருவரையும் முறைத்துப் பார்த்தான்.
“தீனா, என்ன டா சத்தம்?” என சதாவின் குரல் கேட்டதும், சந்தனா அப்படியே நின்றுவிட்டாள். ஓடியதில் வேகமாகத் துடித்த இதயம் இன்னும் தன் இயக்கத்தைக் கூட்ட, சரசரவென அவளது கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கின. தீனா எனப்பட்டவன் அவள் தன்னைத் துரத்தவில்லை என்றுணர்ந்து நின்று பார்க்க, அவள் அழுது கொண்டிருந்தாள்.
“ஏய்... எதுக்கு அழற. பட்டத்தைக் கொடுத்துட்றேன்!” அவன் அவளருகே வந்தான்.
“தீனா...” சதாவின் குரல் அருகே கேட்கவும், அவள் கதவுக்குப் பின்னால் மறைந்தாள்.
“ப்ளீஸ்... ப்ளீஸ், மேடம் கிட்ட சொல்லிடாத!” எனக் கெஞ்சியவளுக்கு தாய் அடிப்பாளே, சதாம்பிகா திட்டுவாரே என நினைத்ததும் குபுக்கென கண்ணீர் முட்டியது. உள்ளே வரக்கூடாது என பூரணி கூறியது சில நிமிடங்கள் முன்னே மறந்துவிட்டிருந்தாள். என்ன செய்வதென அவளுக்குத் தெரியவில்லை. அந்நேர்த்தில் கடவுள் எதாவது மாயா ஜாலம் செய்து தன்னை மறைய வைக்கக் கூடாதா? என சிறுமியின் மனது அழுதது.
'கறிசோறு கூட வேணாம் சாமி. என்னை மாட்டி விட்றாத!' எனப் பயத்தில் கடவுளிடம் கோரிக்கை வைத்தாள்.
தீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. யார் மேடம், எதற்கு அழுகிறாள் எனப் பார்த்தான். அவனுக்கும் சந்தனாவிற்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். புரிந்து கொள்ள முடியாது விழித்து நின்றான்.
“தீனா...” திறந்திருந்த கதவுக்கு வெளியே சதா வந்துவிட்டார். உள்ளே நுழையாது இவர்களைப் பார்த்தார்.
“ஒன்னுமில்ல அத்த. பட்டம் விட்றேன்!” அவன் கூற, மனோ சந்தனாவை முறைத்துப் பார்த்தான். அவள் விழிகளில் நீருடன் அவனைப் பார்த்து, ‘மாட்டி விட்டுவிடாதே!’ என இறைஞ்ச, “மாம்...” என இவன் கத்தியதில் இரண்டெட்டு நகர்ந்த சதாம்பிகா மீண்டும் கதவருகே வந்து நின்றார். சந்தனாவின் இதயம் துடித்தடங்கியது.
தொடரும்...
Latest Post: தாழம்பூ - Comment Thread Our newest member: Mohana Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page