All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 11

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

நெஞ்சம் 11

 

இரவு நேரம் போல் தன் மகனின் வருகைக்காக தான் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவாறு காத்திருந்தார் தென்னவன்.

அன்று அவனின் கெட்ட நேரமோ என்னவோ சரக்கு அடித்து விட்டு தான் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் மனமோ எதற்காக தன்னை யுகனிகா ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள். தன் காதலை சிறிதளவாவது எண்ணி என்னை யோசித்துப் பார்க்கலாம் அல்லவா ? உதயனாவது தனக்கு உதவியாக இருப்பான் என நினைத்தால் அவனும் இப்பொழுது தனக்கு முற்றிலும் எதிரியாக மாறி விடவே, வெந்து நொந்துப் போய் தன் மற்ற நண்பர்களோடு மனதினை மாற்ற சரக்கு அடித்து விட்டான்.

தந்தை அழைப்பதாக வீட்டிலிருந்து தகவல் வரவே, முடிந்தளவு தன்னை சரிபடுத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். இருந்தும் அவனின் நடையில் சற்று தள்ளாட்டமும் நாற்றமுமே அவன் குடித்திருக்கிறான் என்பது நன்றாகவே தெரிந்தது.

தென்னவனுக்கு குடிப்பழக்கமும் மற்ற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் அவரின் தந்தைக்கு முன்னர் மதுப்பழக்கம் இருக்க அந்த பழக்கமே பேரனான ஆதிக்கும் தொற்றிக் கொண்டது.

இப்பொழுது வயதான காரணத்தினால் அவர் அதனை மறந்து ஆன்மிகமே கதியென இருந்து விடுகிறார் தான். ஆனால் திருமணம் முடிந்து இனி மேல் தான் தன் வாழ்க்கைக்கு உள்ளே அடி எடுத்து வைக்க போகும் இளமை வயது மகன் இவ்வாறு இருந்தால் எந்த தந்தையால் தான் ஏற்றுக் கொள்ள முடியும் ?

' இந்த மனுஷன் தான் வான்னு சொன்னா இவனும் உடனே வந்து தொலைஞ்சிடுறானே. குடிச்சி இருக்கானே எதுக்கு தான் வந்தானோ ? தோப்பு வீட்ல படுத்து தூங்குவானா அது கிடையாது ' என்று மகனுக்காக மனதில்  நாச்சி புலம்பியவாறு இருக்க,

"என்னப்பா ஏதோ பேசணும்னு சொன்னீங்களாமே, என்ன விஷயம்  ?" என நிதானமாக இருக்கிறேன் என அவரின் முன் விழிகளை உருட்டி வைத்து நேராக நின்றுக் கொண்டு கேட்டான்.

"ரெண்டு நாளைக்கு முன்னாடி உதயனுக்கும் உனக்கும் சண்டை வந்ததுக்கான காரணம் என்னடா ?" என தென்னவன் கேட்க, அந்த விதத்திலே அவருக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதைப் புரிந்துக் கொண்டான்.

"அதான் உங்களுக்கு தெரிஞ்சிருச்சுல தெரிஞ்சி தானே என்கிட்ட கேட்கிறீங்க. ஆமாப்பா நான் அந்த பொண்ண காதலிக்கிறேன். நம்ம வீட்டுக்கு மருமகளா எனக்கு பொண்டாட்டியா இந்த ஜென்மத்துல அவ மட்டும் தான்ப்பா வருவா "

"இப்படி பேச உனக்கு வெக்கமா இல்லையாடா? யாருன்னே தெரியாத என்ன ஜாதியோ பிழைக்க வந்த குடும்பத்தார்களை பிழைக்க விடணுமே தவிர இப்படி அவளை நீ கட்டாயப் படுத்த கூடாது. அந்த பொண்ணு உன்னால ரொம்ப வேதனைப்படுது அப்படிங்கிற தகவல் எனக்கு வந்தது. அந்த பொண்ணுக்கு உன்னை சுத்தமா பிடிக்கலையாம். அப்படி இருக்கும் போது நீ இப்படி போயி நம்ம குடும்ப மானத்தை வாங்க பார்த்துட்டு இருக்கியா. அந்த பொண்ணு சரின்னு சொன்னா விசாரிக்கலாம் ஆனா அவளே வேண்டான்னு சொல்லும் போது உனக்கு என்னடா நெஞ்சழுத்தம் "

"இல்லப்பா அவளுக்கு ஏதோ பிரச்சனை அவ பிரச்சனை என்னன்னு கேட்டு சரி பண்ணி நான் அவளை கல்யாணம் பண்ணனும் " என்று சிறுபிள்ளையாய் தந்தையின் முன் அடம் பிடித்து நிற்கவே, எழுந்து வந்தவரோ வேகமாய் அவனின் கன்னத்தில் தன் கைத்தடம் பட அறைந்தார். இது தன் மகனை அடிக்கும் முதல் அடி கிடையாது அடிக்கடி அவனுக்கு நல்வழிப்படுத்த இப்படி அடித்து இருக்கிறார். இம்முறையும் அதையே தான் செய்தார்.

"ஐயோ என்னங்க தோலுக்கு மேல வளர்ந்த பிள்ளையை போட்டு அடிக்கிறீங்க ?"  என்று நாச்சி இரண்டடி முன்னே வர கணவன் பார்த்த பார்வையில் அப்படியே அதே இடத்தில் நின்று விட்டார். அவரை மீறி தன்னால் மகனை நெருங்க முடியாது என்பது அந்த வீட்டில் எழுதி வைத்த சட்டம்.

"உன் மகன் பண்றது சரியா தெரியுதாடி உனக்கு. நம்ம வீட்ல வயசு பிள்ளை ஒன்னு இருக்கு. இங்க பாருடா நான் முடிவா சொல்லிட்டேன் உடனே அந்த புள்ளையை மறந்து இருக்கேனா இரு. இல்லையா அடுத்த முகூர்த்தத்தில எதையாவது ஒரு பெண்ணை பார்த்து நான் கட்டி வைப்பேன்.  கட்டிக்கணும் சொல்லிட்டேன் இதுக்கு மேலையும் நீ அந்த பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு அந்த பொண்ணையும் நிம்மதி இல்லாம இருக்க வச்சு, உதயனுக்கும் நீ பிரச்சினை கொடுத்தேன்னு நினைச்சுக்கோ, உனக்கு அப்பனா இருக்க மாட்டேன். என் பேச்சு மீறி நீ ஏதாவது செஞ்ச நீ என் பிள்ளையே இல்லைன்னு ஊர் முன்னாடி தலைமுழுகிடுவேன். உனக்கு இந்த குடும்பமும் நம்மளோட பாரம்பரியமான பழக்க வழக்கமோ மானமோ முக்கியமா இருந்துச்சுன்னா சொல்றத செய். இல்லையா எதுவுமே வேண்டாம் அப்படின்னு விருப்பப்படி இரு. ஆனா இந்த குடும்பத்துக்கு உனக்கும் அதுக்கப்புறம் எந்த சம்பந்தமும் இருக்காது " என்று இது தான் தன் முடிவினை உறுதியாக கூறி அங்கிருந்துச் சென்று விட்டார் தென்னவன்.

சில நாட்களாகவே மாறி மாறி அனைவருமே அவனை வார்த்தையால் வதைக்க அப்படியே ஓடிந்து அமர்ந்தவனோ தூணில் சாய்ந்தான். தன் மகனை இந்நிலையில் காணப் பெற்றவளால் முடியவில்லை. இருந்தாலும் தன் கணவன் கூறுவது சரி தானே இவன் ஏன் இப்படி செய்கிறான் ?

"ஏன்டா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க ? உங்க அப்பா பேச்சைக் கேட்டு ஒழுங்கா இரு. இந்த வயசுல உனக்கு ஆசை எல்லாம் வரத்தான் செய்யும். கல்யாணம் குடும்பம்னு வந்துட்டேன்னா மறந்து போயிடும் நான் வேணா பொண்ணு பார்க்கட்டா "

"என்னம்மா உன் புருஷனுக்கு பரிந்து பேசிகிட்டு வருகிறாயா நீ ? தயவு செய்து என்னை தனியா விடுங்க யாரும் என்கிட்ட எதுவுமே பேசாதீங்க போங்க எல்லாரும் " என தன் கரம் குவித்து போதையோடு புலம்பவே, தன் அன்னையை இழுத்துக் கொண்டு சென்றாள் நிகழ்மதி.

அதன்பின் வந்த நாட்கள் வாழ்க்கையே வெறுத்த உணர்வில் ஏனோ தானோ என்று சுற்றி வந்தான்.

உதயனை அழைத்த தென்னவன் தோப்பு வீட்டில் வைத்து தன் மகன் இனி அந்த பெண்ணின் மீது ஆசையோடு சுற்றி வரமாட்டான் என்று அவனிடம் கூறவே, அவனும் தன் மாமாவிடம் நன்றி கூறினான்.

"ஆமா அந்த பொண்ணு உனக்கு ரொம்ப நெருக்கப்பட்ட பொண்ணா ?" தென்னவன் கேட்க,

"ஆமா மாமா காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு நெருக்கமானவங்க. என்னை பொறுத்தவரை அவ எனக்கு ஒரு நல்ல தோழி. அவளுக்கு எல்லாம் நான் இருக்கணும்னு நினைக்கிறேன் "

"இப்ப மாமா கேட்குறேன்னு தப்பா நினைக்காதே அந்த பொண்ண நீ பத்திரமா பார்த்துக்க நினைக்கிறியே அதுக்கான காரணம் என்னப்பா ? உன்னால அந்த பொண்ணுக்கு எதுவும் ஆபத்து வந்ததா ?" என்க, ஒரு நொடி அதற்கு மௌனம் தான் சாதித்தான்.

"நீ மாமா கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சா சொல்ல வேண்டாம் . உன்னோட விருப்பம் தான் சரி நான் கிளம்புறேன். அந்த பொண்ணு கிட்ட சொல்லிடு " என்றதும்,

"மாமா ஒரு நிமிஷம் அந்த பொண்ணு அவளோட கடந்த காலம் " என்று ஒரு மணி நேரமாக அவளின் கடந்த காலம் பற்றி கூற,  அதைக் கேட்டு அந்த பெண்ணின் மீது பரிதாபம் தான் கொண்டான்.

வாழ்க்கையே இழந்து ஒரு புது வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க நினைத்து இங்கு வந்த பெண்ணை போய் தன் மகன் படுத்துகிறானே இனி அந்த பெண்ணின் பக்கமே தன் மகன் திரும்பாதவாறு தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவள் நிம்மதியாக ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமென ஒரு தந்தையாக நினைத்தார்.

"உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா கர்வமா இருக்குப்பா. சீக்கிரமே நீயும் ஒரு கல்யாணத்தை பண்ற வழிய பாரு. அதான் உன் அண்ணன் கல்யாணம் முடிஞ்சிடுச்சுல அப்புறம் உன்னோட கல்யாணம் தானே ?"

"அதுக்கு என்ன அவசரம் மாமா ?கொஞ்ச நாள் போகட்டும்ன்னு நினைக்கிறேன். ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்துக்கலாம். இன்னும் கொஞ்சம் அப்பாவோட தொழிலை டெவலப் பண்ணனும் நினைச்சுக்கிட்டு இருக்கேன் "

"உனக்கு இருக்குற இந்த புத்தி கூறு அறிவு எதுவுமே இந்த ஆதி பயலுக்கு இருக்கவே மாட்டேங்குதுடா. அவனை வச்சுட்டு நான் என்ன தான் பண்ண சொல்லு "

"அவன் கூட சண்டை போடாம கொஞ்சம் பக்குவமா பேசு. என்ன இருந்தாலும் சின்ன புள்ளையிலிருந்து ரெண்டு பேரும் ஒண்ணாவே வாழ்ந்திடீங்கடா. எதுக்கு இப்படி அடிபிடி சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க ? "

"மாமா எனக்கு என்ன ஆசையா அவன் கூட சண்டை போடணும்ன்னு. அவன் என் உயிர் நண்பன் மாமா. நமக்குள்ள உறவு இருக்கிறதுக்கு முன்னாடி எனக்கு விவரம் தெரிஞ்ச விஷயத்துல இருந்து அவன் என்னோட பிரெண்டு. நான் அவ்வளவு சொல்லியும் அவன் கேட்கல அப்படிங்கற ஒரு ஆதங்கத்தில தான் நான் அன்னைக்கு தோப்பில் வச்சி அவனை அடிச்சுட்டேன்.  இப்ப அவன் முன்னாடி வந்து நின்று இனிமே நான் சுத்த மாட்டேன் அவளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லட்டும் அடுத்த நிமிஷம் எங்களோட பழைய நட்பு தொடரும். அப்படி வந்து என்னைக்கு சொல்றானோ அன்னைக்கு வரைக்கும் நான் அவ கிட்ட பேச மாட்டேன் மாமா. அவன் முகத்தில் நான் முழிக்க மாட்டேன். இந்த விஷயத்துல நான் உறுதியா இருக்கேன் "

"சரி ரெண்டு பேரும் ஒத்து போகவில்லைன்னா தள்ளியே இருங்கடா நல்லது தான் " எனக் கூறிச் சென்று விட்டார்.

யாரிடமும் தன் கடந்த காலத்தைப் பற்றி கூறக்கூடாது என்று தன்னிடம் யுகனிகா கூறி இருக்க, ஆனால் பெரியவர் கேட்கும் போது தான் கூறாமல் இருந்தால் அது மரியாதையாக இருக்காது எண்ணி கூறினான். நிச்சயம் தென்னவனின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தான் உதயன். அவரிடம் தான் கூறிய இந்த விஷயம் அவரை மீறி யாரின் செவிக்கும் செல்லாது என நம்பினாள்.

வாரம் ஒரு முறை தன் பள்ளிக்குச் சென்று பள்ளி நிர்வாகத்தைப் பற்றி கேட்டு அறிந்துக் கொள்வான் உதயன். அன்று வெள்ளிக்கிழமை மாலை நேரம் என்பதால் தன் பள்ளிக்கு வந்திருந்தான். அப்பொழுது தான் பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் அனைவரும் சென்று விட ஆசிரியர் மட்டுமே இருந்தனர். அவரிடம் நிர்வாகம் பற்றி கேட்டுக் கொண்டிருந்தான்.

என்ன வசதிகள் எல்லாம் தேவைப்படுகிறது. வருமானம் பற்றி வருகின்ற நாட்களில் ஏதாவது விழா இருக்கிறதா இப்படி அனைத்தையும் கேட்டு முடித்து அவர்களை அனுப்பி வைக்க, ஆசிரியர்களோடுச் செல்லப் பார்த்தாள்.

"ஒரு நிமிஷம் யுகனிகா " என்றதும், அவளும் திரும்பி உதயனைக் கண்டு என்னவென்றுக் கேட்டாள்.

"இனி ஆதி உன் பின்னாடி வரமாட்டான் இந்த தடவை நான் உறுதியாக சொல்றேன் "

"போன தடவை நீங்க இப்படித்தான் சொன்னீங்க. ஆனா மறுபடியும் அவன் என் பின்னாடியே வந்து என்ன டார்ச்சர் படுத்தினான். உறுதியாக நீங்க எதை வச்சு சொல்றீங்க உங்களுடைய பிரெண்டு நீங்க சொல்லியே கேட்கல. நான் சொல்லியும் கேட்கல. வேற யார் சொல்லி கேட்பா. அவனுக்கு திமிரு ரொம்ப அவன் அவனோட பாயிண்ட்ஸ் ஆப் யூ ல நினைச்சு பார்க்க மத்தவங்கள பத்தி அவன் நினைக்கவே மாட்டேங்குறான் "

"நீ சொல்றது சரி தான் ஆனா சொல்றவங்க சொன்னா அவன் கேட்பான். அவங்க அப்பாக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருச்சு. அவங்க அப்பா அவனை கண்டிச்சி இருக்காரு அவனும் சரின்னு சொல்லி இருந்திருக்கான். அதனால இனி அவன் பக்கம் வரமாட்டான். அவன் அவங்க அப்பா என்ன சொன்னாலும் கேட்பான். கேட்கலைன்னா அவங்க அப்பா என்ன வேணாலும் பண்ணுவாரு "

"என்னமோ உதயன் நல்லது நடந்தா சர.  நான் ஊருக்கு கிளம்புறேன் நீங்க வரீங்களா, இல்ல நேரமாகுமா ?"

"நீ போ நான் ரைஸ்மில் கணக்கெல்லாம் பார்த்துட்டு வரதுக்கு ராத்திரி ஆயிரும் " என்றதும், சரி எனக் கூறி அங்கிருந்துச் சென்றால் யுகனிகா. அவளைப் பற்றிய கடந்த காலத்தை தான் கூறிவிட்டோம் என்பதை இப்பொழுது அவளிடம் மறைத்து விட்டான்.

பின்னாளில் அவளின் கடந்த காலமே பூகம்பமாக வெடிக்கும் என்பதை உதயன் அறியத் தவறினான்.

 

கருத்துக்களைப் பகிர,

 

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page