All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

16. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 3 months ago
Posts: 24
Topic starter  

அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரஹாசினியின் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு வெளியாகி இருந்தது. 

 

அதில் அவள் மதிக்கத்தக்க மதிப்பெண்களைத் தான் எடுத்திருந்தாள். 

 

அந்த மதிப்பெண்களைப் பார்த்ததும்,”ஹேய் பிரஹா! நல்ல மார்க்ஸ் தான் எடுத்திருக்கிற! சூப்பர்டா! காங்கிராட்ஸ்” என்று சந்தோஷமாக அவளது கரம் பற்றி குலுக்கினான் நீரஜ். 

 

“தாங்க்ஸ்ண்ணா” என்று புன்னகைத்தாள் பிரஹாசினி. 

 

“ஆமாம்மா. நீ எப்படி படிப்பன்னு எங்களுக்குத் தான் தெரியுமே? இப்பவும் எங்க நம்பிக்கையைக் குலைக்காத மாதிரி தான் மார்க் வாங்கி இருக்கிற! ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றார் விருச்சிகன். 

 

உடனே,“நன்றி பெரியப்பா” என்றவளிடம்,

 

“ஆமா பிரஹா. இவர் சொன்னதை தான், நானும் சொல்லனும்னு நினைச்சேன். எனக்கும் சந்தோஷமாக இருக்கு! வாழ்த்துகள்” எனத் தன் மகிழ்ச்சியையும் தெரிவித்தார் உமாராணி.

 

“நன்றி பெரியம்மா” என்று அவரிடமும் புன்னகையுடன் கூறினாள் பிரஹாசினி. 

 

அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தனர் இருவரும். 

 

“நான் போய் ஸ்வீட் வாங்கிட்டு வர்றேன்” என்ற நீரஜ்ஜிடம், 

 

“இவளுக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வா”என்று அவனுக்கு வலியுறுத்திக் கடைக்கு அனுப்பி வைத்து விட்டு, 

 

“சாயந்தரம் கோயிலுக்குப் போயிட்டு வந்துடலாம்” என்று பிரஹாசினியிடம் உரைத்தார் உமாராணி.

 

அதற்குப் பிறகு, அவர்களது உறவினர்கள் அனைவரும் கால் செய்து பிரஹாசினியின் மதிப்பெண்ணைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். 

 

சிறிது நேரம் கழித்து, இனிப்புப் பெட்டியுடன் வீட்டிற்கு வந்தான் நீரஜ். 

 

அதிலிருந்து இனிப்புத் துண்டை எடுத்து தங்கைக்கு ஊட்டி விட்ட பின், தாங்களும் அதையே பின்பற்றி அவளது வாயில் இனிப்பைத் திணித்தனர் விருச்சிகன் மற்றும் உமாராணி. 

 

அப்போது, நீரஜ்ஜின் செல்பேசிக்கு அழைப்பு வந்தது.

 

யாரென்று எடுத்துப் பார்த்தவன்,”சபரீஷ் கால் பண்றான்” என்றவுடன்,

 

“எடுத்துப் பேசுடா” என்று மகனிடம் கூறினார் விருச்சிகன்.

 

உடனே பச்சைப் பட்டனை அழுத்திக் காதில் வைத்து,”ஹலோ” என்றான். 

 

“ஹலோ நீரஜ்”

 

“சொல்லுடா சபரீஷ்” 

 

“பிரஹாவுக்கு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சா?” எனக் கேட்கவும், 

 

“இப்போ தான் வந்துச்சுடா” என்று பதிலளித்தான். 

 

“அப்படியா? எவ்வளவு மார்க்டா?” என்று வினவினான் சபரீஷ்.

 

உடனே தங்கையின் மதிப்பெண்ணைக் கூறினான் நீரஜ். 

 

“வாவ்! ரொம்ப நல்ல மார்க் ஆக இருக்கே! அம்மா கிட்ட சொல்லிட்றேன்” என்று சொல்லி அழைப்பை வைத்து விட, 

 

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரஹாசினியோ, அவன் எதற்காக தன்னுடைய மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்வதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று எண்ணிக் குழம்பிப் போய்த் தன் தமையனைப் பார்க்க, 

 

“அத்தைக் கேட்கச் சொல்லி இருப்பாங்கடா” என்றான் நீரஜ்.

 

“நீ ரமணிக்குக் ஃபோன் பண்ணி மார்க்கைச் சொல்லலையா உமா?” என்று வினவினார் விருச்சிகன். 

 

“அவளுக்கு ஃபோன் பண்ணி சொல்றதுக்குள்ளே தான் சபரீஷ் கால் செஞ்சிட்டான்” என்றார் அவரது மனைவி. 

 

“ஓஹோ சரிம்மா” என்றவர், 

 

“உனக்கு ஃபிஸிக்ஸ் எடுத்துப் படிக்கனும்னு தானே ஆசை?” எனப் பிரஹாசினியிடம் கேட்டார். 

 

“ஆமாம் பெரியப்பா” எனப் பதில் சொன்னாள். 

 

“நாங்க முன்னாடியே சொன்ன மாதிரி நீரஜ்ஜோட காலேஜிலேயே அப்ளை பண்ணலாம். அவன் கூடவே போயிட்டு வந்துரு” என்றவுடன், 

 

“சரிங்க பெரியப்பா” என்றாள். 

 

ஆனால், இவர்கள் எதிர்பாராத விதமாக, ஒன்றன் பின் ஒன்றாக விருச்சிகன் மற்றும் உமாராணிக்கு மட்டுமின்றி, 

 

தங்களது பிள்ளைகளின் மூலமாக நீரஜ்ஜிற்கும் கூட அழைப்பு விடுத்துப், 

 

பிரஹாசினி எந்தெந்த பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாள் என்று விசாரித்து, ஆளுக்கொரு அறிவுரைகளை அள்ளித் தெளிக்கத் தொடங்கினர்.

 

அதையெல்லாம் கேட்டுப் பொறுமையைக் கடைபிடிப்பதே விருச்சிகன் குடும்பத்திற்கு மிகவும் பிரயத்தனப்பட வேண்டியதாக இருந்தது. 

 

அதில் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டது பிரஹாசினி தான்.

 

அனைவரது ஆலோசனைகளையும் கேட்டுத் தலையே வெடிப்பதைப் போலானது அவளுக்கு.

 

அவர்களது அறிவுரைகளை வைத்துத் தான் தன்னுடைய கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தன் பெரியப்பா குடும்பத்தார் சொல்லி விடுவார்களோ! என்ற பயத்தில் வளைய வந்தாள் பிரஹாசினி. 

 

ஆனால், அதற்கு நேர்மாறாக,”இவங்க சொல்றதை எல்லாம் நீ செய்யனும்னு நாங்க உன்னைக் கண்டிப்பாக வற்புறுத்த மாட்டோம்! நீ உனக்குப் பிடிச்சப் படிப்பைப் படி! ஆனால், இந்த ஊரில் இருந்து படிக்க வேண்டாம்” என்று கூறிய தன் பெரியப்பாவைக் கேள்வியாகப் பார்க்க, 

 

“நீ நம்ம நீரஜ் கூடவே காலேஜூக்குப் போயிட்டு வந்தால் உனக்குப் பாதுகாப்புன்னு நினைச்சோம். ஆனால், இந்த ஊரில் இருந்து படிச்சா உன்னை நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் எங்கே பார்த்தாலும் எதையாவது பேசி சுணங்க வைப்பாங்க! அதனால், உன்னைப் பக்கத்து ஊரில் இருக்கிற காலேஜில் சேர்த்து ஹாஸ்டலில் தங்க வச்சுப் படிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்” என்று அவளிடம் விளக்கினார் உமாராணி. 

 

அதைக் கேட்டதும் இளையவர்கள் இருவரும் அவர்களை அதிர்ந்து போய்ப் பார்த்தனர். 

 

“என்னம்மா சொல்றீங்க?” என்றான் நீரஜ். 

 

“ஆமாம்டா. அவங்க கண்ணில் பட விடாமல், இவளைப் படிக்க வைக்கிறதுக்கு இதை விட்டா வேற வழியில்லை” என்று அவனிடம் கூறினார் அன்னை. 

 

“அதுக்காக இப்படி ஒரு முடிவை ஏன் எடுக்கனும்மா?” என்றவனிடம்,

 

இப்போது,”இந்த முடிவு தான் சரியாக இருக்கும். நாங்க ரெண்டு பேரும் நல்லா யோசிச்சு தான் இதை எடுத்து இருக்கோம்” என்றுரைத்தார் விருச்சிகன். 

 

“இல்லப்பா. அது…!” என்று மேலும் வாதாட யத்தனித்த மகனிடம், 

 

உமாராணி,“இதைப் பத்தி உன் தங்கச்சி கிட்டயே கேட்போம்” என்று இளையவளிடம் திரும்பி, 

 

“இதுக்கு நீ என்ன சொல்ற பிரஹா? உன் விஷயத்தில் நாங்க எடுத்த முடிவில் உனக்கு உடன்பாடு இல்லைன்னா கண்டிப்பாக சொல்லலாம்?” என்று கூறி விட்டு அவளைப் பார்த்தார். 

 

தன்னை விடுதியில் சேர்க்க எண்ணுகிறார்கள் என்பதைக் கேட்ட நிமிடத்தில் இருந்து தனக்குள் உருவாகி இருந்த பிரளயத்தை மறைத்துக் கொண்டுத் தன் வீட்டாரை ஒருமுறை மௌனமாகப் பார்த்த பிரஹாசினி,”அந்தக் காலேஜிலும், ஹாஸ்டலிலும் தங்கிப் படிக்கிறதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை பெரியம்மா”என்று அவருக்குப் பதிலளித்து விட்டுத் தன் அறைக்குப் போய் விட்டாள். 

 

“பார்த்தியா? அவளே சம்மதம் சொல்லிட்டா! அப்பறம் என்ன? அங்கே அப்ளிகேஷன் கொடுக்க ஆரம்பிச்சதும் போய் வாங்கிட்டு வந்துரு” என்று மகனுக்கு உத்தரவிட்டார் விருச்சிகன். 

 

ஆனால், அதில் ஏமாற்றமடைந்த நீரஜ்ஜோ, தங்கையிடம் சென்று,”பிரஹா! நான் உங்கிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்றவுடன்,

 

“சொல்லுங்கண்ணா” என்றாள் பிரஹாசினி.

 

“நீ இப்போ உண்மையிலேயே முழு மனசாகத் தான் ஓகே சொன்னியா?” என்று அவளிடம் கேட்டான் தமையன். 

 

அதில் சலனமில்லா முக பாவனையுடன்,”ஆமாம்ண்ணா” என்று பதிலளிக்க, 

 

“அப்படியா? ஆனால் அதைச் சொன்னவுடனேயே உன் முகம் ஏன் சுருங்கிப் போச்சு?” என்றவனை வருத்தமாகப் பார்த்தாள் பிரஹாசினி. 

 

“உன் மனசில் இருக்கிற எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லுடா?” என்று பரிவாக வினவினான் நீரஜ். 

 

“நான் எப்பவும் நம்ம குடும்பத்தை விட்டு எங்கேயும் தனியாகப் போக கூடாதுன்னு நினைப்பேன். ஆனால், நம்ம சொந்தக்காரங்க என்னவெல்லாம் பண்றாங்கன்னு உனக்கும் தெரியும் தான? அப்போ பெரியப்பாவும், பெரியம்மாவும் இந்த முடிவை எடுத்தது சரி தான்னு தோனுது. அதே மாதிரி, நானும் இப்படி போய்த் தங்கிப் படிச்சா தான் எதிர்காலத்தில் என்னாலேயும் எல்லாத்தையும் தனியாகச் சமாளிக்க முடியும்ன்ற தன்னம்பிக்கை வரும்? அதனால் தான் சம்மதிச்சேன்” என்று அவனுக்கு விளக்கினாள் தங்கை. 

 

“அப்போ உனக்கு முழுச் சம்மதம்ன்னு சொல்ற அப்படித் தானே?” 

 

“ஆமாம்ண்ணா” என்றவளிடம்,

 

“இவங்க தான் நம்மளை வளர்த்தாங்க. அதனால் இவங்களுக்கு விசுவாசமாக இருக்கனும்னு இந்த முடிவை எடுக்கலையே நீ?” எனக் கேட்டு அவளைக் கூர்மையாகப் பார்த்தான் நீரஜ். 

 

அதில் தடுமாறியவளோ,”அப்படி எல்லாம் இல்லண்ணா” என்று சமாளிப்பாக கூறினாள் பிரஹாசினி. 

 

“சரி. இதை நான் நம்புறேன். ஆனாலும் இன்னொரு தடவை நல்லா யோசிச்சுக்கோ” என்று அறிவுறுத்தியவன், அவளது தலையைப் பாசமாக கோதி விட்டுச் சென்றான் தமையன். 

 

உடனே அவளது கண்களில் உடைப்பெடுத்தக் கண்ணீர் கன்னத்தில் இறங்கத் தொடங்கி விட்டது. 

 

‘எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இப்போ வரைக்கும் என்னை ஒரு குறையும் இல்லாமல் வளர்த்த நீங்க சொல்லி நான் இதைக் கூடச் செய்யலைன்னா எப்படி? என் வாழ்க்கையில் நீங்க எடுக்கிற எல்லா முடிவுகளுக்கும் நான் எப்பவும் மறுப்பு சொல்லவே மாட்டேன்!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்,

 

தான் வெளியூரில் விடுதியில் படிக்கப் போகிறோம் என்பதை மனதில் நன்றாக உருப் போட்டுக் கொண்டு அதற்காகத் மனதளவிலும், உடலளவிலும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள் பிரஹாசினி. 

 

அவளது கல்லூரிப் படிப்பைப் பற்றிய தகவல்களை தங்கள் உறவினர்கள் யாரிடமும் அறிவிக்காமல் தங்களுக்குள்ளேயே ரகசியமாக வைத்துக் கொண்டனர் விருச்சிகன், உமாராணி மற்றும் நீரஜ். 

 

இப்படியாக, பக்கத்து ஊரில் இருந்த நல்ல கல்லூரி ஒன்றில் விண்ணப்பப் படிவத்தை வாங்கி வந்து அதில் தேவையானவற்றை நிரப்பி விட்டுக் காத்திருந்தனர் பிரஹாசினியின் வீட்டார். 

 

அப்போதும் கூடத் தங்களிடம் வந்து விசாரித்த வனஜா மற்றும் ரமணியிடம் என்னப் படிப்பு, எந்தக் கல்லூரி என்பதை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறிச் சமாளித்து வந்தவர்கள், 

 

தாங்கள் விரும்பி விண்ணப்பித்து இருந்த கல்லூரியிலேயே பிரஹாசினிக்கு இடம் கிடைத்து விட்டது. 

 

எனவே,”நான் பிரஹாவைக் கூட்டிட்டுப் போய் அட்மிஷன் போட்டுட்டு வர்றேன்” என்ற விருச்சிகனிடம், 

 

“நானும் வர்றேன்ங்க” என்றார் உமாராணி. 

 

“அப்போ நானும் வருவேன்” என்று அவர்களிடம் சொன்னான் நீரஜ். 

 

“சரி. எல்லாரும் போயிட்டு வருவோம்” என்றவர்கள், பிரஹாசினியைக்ஸ கல்லூரிக்கு அழைத்துச் சென்று அட்மிஷன் போட்டு விட்டு, அவள் அங்கே இருக்கும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான விவரங்களையும் கேட்டுச் சேர்த்து விட்ட பிறகு, 

 

பிரஹாசினி,“இந்தக் காலேஜைச் சுத்திப் பார்க்கனும்னு ஆசையாக இருக்கு. நான் போயிட்டுச் சீக்கிரம் வந்துடவா?” என்க, 

 

“போயிட்டு வாடா. மொபைலைப் பத்திரமாக வச்சுக்கோ. ஏதாவதுன்னா எங்களுக்குக் கால் பண்ணு” என்று அவளைத் தனியாக அனுப்பி வைத்தார்கள். 

 

ஓங்கி உயர்ந்த மரங்கள் யாவும் தன்னை வரவேற்கும் விதமாகத் தன் மேல் இலைகளைத் தூவுவதைப் போன்றதொரு எண்ணம் கொண்டவள், 

 

வரப் போகிற மூன்று ஆண்டுகள் இந்தக் கல்லூரியில் தான் படிக்கப் போவதால், ஒவ்வொரு இடத்தையும் நன்றாக சுற்றிப் பார்த்தாள் பிரஹாசினி. 

 

கூடவே, இந்த இடம் தனக்கு அளிக்கப் போகும் அனுபவங்களையும், மன அமைதியையும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவளது எதிர்கால திருமண வாழ்க்கைக்கு முதல் அச்சாரமே இங்கிருந்து தான் போடப் போவதை அவள் அரியவில்லை. 

 

சில மணித் துளிகளுக்குப் பின், தன் குடும்பத்தாருடன் சென்று இணைந்து கொள்ள, நால்வரும் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். 

 

              - தொடரும்

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 4 weeks ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page