About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 10 💖
சந்தனா கூறியது போல அரைமணி நேரத்தில் தயாராகினாள். இளமஞ்சள் நிறத்திலான பருத்திப் புடவை ஒன்றை உடுத்தியவள், பால்கனிக்குச் சென்று புதிதாய் பூத்திருந்த வெள்ளை ரோஜா ஒன்றை எடுத்து தலையில் வைத்துக்கொண்டாள்.
லட்சுமி அம்மா மனோவை தயார் செய்து தானும் கிளம்பியிருந்தார். மூவரும் சரியாய் கூறிய நேரத்திற்கு ரஞ்சன் வீட்டை அடைந்தனர்.
“வாங்க... உள்ள வாங்க சந்தனா. வாங்க அம்மா...” எனப் புன்னகையுடன் அவர்களை வரவேற்றாள் ஷோபனா. அஷ்வந்த் மனோ கையைப் பிடித்துக்கொண்டான். பெரியவர்களுக்கு புன்னகை பிறந்தது.
“உட்காருங்க லட்சுமிமா... ஜூஸ் எடுத்துட்டு வரேன்!” என்றவள் ஏற்கனவே பிழிந்து வைத்திருந்த ஆரஞ்சு பழச்சாற்றை மூன்று குவளையில் ஊற்றிக் கொடுத்தாள்.
“மனோ... சிந்தாம குடிக்கணும். மெதுவா!” என்ற சந்தனாவின் பார்வை மனோகரிடம்தான்.
“ப்ம்ச்... சந்தனா, சின்ன பையன் தானே? விடுங்க நீங்க!” ஷோபனா இவளை மென்மையாய் முறைத்தாள்.
சந்தனா பழச்சாற்றை அருந்தாது வீட்டைச் சுற்றி கண்களை சுழலவிட, “ரூம்க்குள்ள வந்து பாருங்க டாக்டர்...” என்ற ஷோபியின் குரலில் துள்ளலிலிருந்தது.
சந்தனா தன் பழச்சாற்றை மனோ குவளையில் ஊற்றியவள், ஷோபனாவுடன் சென்றாள்.
இவள் உள்ளே நுழைய, வலதுபுறம் இடதுபுறம் என அறை முழுவதும் ஷோபனாவும் ரஞ்சனும் நிறைந்து கிடந்தனர். அவர்களுள் அஷ்வினும் அடக்கம். ஆங்காங்கே ரஞ்சனின் தாய் தந்தையரும் ஷோபியின் பெற்றவர்களும் எட்டிப் பார்த்தனர்.
“சந்தனா... யூ ஆர் சோ ஸ்வீட். இங்க பாருங்க, நீங்க சொன்னது போல நான் போட்டோஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி ப்ரேம் போட்டு மாட்டிட்டேன்...” என்ற ஷோபனா, “இது நான் அவரை செகண்ட் டைம் பார்த்தது. இந்தப் போட்டோ மேரேஜ்ல அவருக்குத் தெரியாம எடுத்தேன். இதோ... இப்போதான் ப்ரபோஸ் பண்ணேன். பாருங்க ரிஜெக்ட் பண்ணும்போது கூட சிரிச்சிட்டே இருக்காரு அவரு. அப்புறம் மூனு வருஷம் அவருக்குத் தெரியாம ஃபாலோ பண்ணி எடுத்தது இந்த பிக்ஸ் எல்லாம். தென், மேரேஜ் ப்ரொபசல் அப்போ இது... அப்புறம் ஹனிமூன் போனப்போ எடுத்தது அந்த பிங்க் ட்ரெஸ் போட்டோ...” என ஒவ்வொரு புகைப்படமாக அவள் விவரித்துக்கொண்டே போக, சந்தனா அமைதியாய் சின்ன புன்னகையுடன் அவளை நோக்கினாள். பின்னர் ஒவ்வொரு புகைப்படமாக விழிகளைப் பதித்தாள்.
இருபத்து ஐந்து வயதில் கொஞ்சம் முதிர்ச்சி இல்லாது இருந்தான் ரஞ்சன். இப்போதிருக்கும் தோற்றத்திற்கும் அந்தப் புகைப்படத்திற்கும் இடையே ஏழெட்டு வேறுபாடுகள் இருந்தன. வயது முதிர்வு மட்டுமல்ல, முகம் இந்தப் பிராயத்திற்குரிய முதிர்ச்சியிலிருந்தது. ஆனாலும் அவன் வயதை இன்னதென கணிக்க முடியாதது போன்ற தோற்றம். உதடுகளில் புன்னகை உதிர, ஷோபனா, அஷ்வின் என அவர்களுடைய ஒவ்வொரு கட்ட வாழ்க்கையின் நகர்வை நிறைவாய்ப் பார்த்தாள். அத்தனை அழகாய் இருந்தது.
அதை வாய் வார்த்தையாக கூறவும் செய்தாள்.
“ரொம்ப அழகா இருக்கு ஷோபி. ஒரு மாதிரி குட்டியா ஃபீல் குட் லவ் மூவி பார்த்தது போல உங்களோட லைஃப்ல ஒவ்வொரு ஸ்டேஜூம் லவபிளா இருக்கு...” சந்தனா உணர்ந்து கூற,
அவளது முகத்தையே பார்த்திருந்த ஷோபனா, “தேங்க் யூ சோ மச் சந்தனா. போட்டோஸ் வெறும் இமேஜ் மட்டும் இல்ல, அது நம்பளோட ஃபீலிங்க்ஸ், மெமரீஸ். ஒவ்வொரு தடவை நம்ப அதைப் பார்க்கும் போது அழாகன நினைவு நம்ம மனசைவிட்டுப் போக டைம் எடுக்கும்னு நீங்க சொன்னது எவ்வளோ உண்மைன்னு இப்போ என்னால உணர முடியுது. டெய்லி இனிமே இந்த போட்டோஸ்ல தான் என்னோட டேய்ஸ் ஸ்டார்டாகி முடியும்...” மகிழ்ச்சி ததும்பிய குரலில் உரைத்தாள்.
“இன்னொரு கிஃப்ட் கூட நான் வாங்கி வச்சிருக்கேன். கஸ்டமைஸ்ட் கிஃப்ட் அது. பார்க்குறீங்களா?” என்றவள் கைபேசியை எடுத்து அதைக் காண்பித்தாள்.
“ஹேப்பி பெர்த் டே ரஞ்சன்!” என அழகாய் எழுதியிருக்க குட்டியாய் அவர்களுடைய வீட்டின் அமைப்பை நகலெடுத்து அதில் ரஞ்சன், அவனது தாய், தந்தை, மனைவி, மகன் என அனைவரும் வீற்றிருந்தனர். கண்ணைக் கவரும் வகையிலிருக்க, சந்தனாவின் இதழ்கள் விரிந்தன.
“சூப்பரா இருக்கே ஷோபி. உங்க ஹஸ்பண்ட்க்கு இன்னைக்கு நிறைய சர்ப்ரைஸ் போங்க...” என்றாள். ஷோபியின் முகம் மலர்ந்து போனது.
அழைப்புமணி ஒலிக்க, “அவர் வந்துட்டார்னு நினைக்கிறேன் சந்தனா. நீங்க இருங்க, நான் வந்துட்றேன்...” என்றவள் அகல, சந்தனா அமைதியாய் அந்தப் புகைப்படத்தையே பார்த்திருந்தாள். ரஞ்சன் ஷோபியின் ஒவ்வொரு நகர்விலும் அவர்களது காதல் இன்னுமின்னும் கூடியிருந்ததை அவளால் உளமார உணர முடிந்தது. அவர்களது முகத்திலிருக்கும் புன்னகையே அதற்கு சாட்சி. திருமணப் புகைப்படத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள்.
“ஹேப்பி பர்த்டே அங்கிள்...” மனோகர் குரலில் கலைந்தவள், அறையைவிட்டு வெளியே வந்தாள்.
இவளைப் பார்த்ததும், “வாங்க டாக்டர்...” என அவன் அழைக்க, இவள் சின்ன தலையாட்டலுடன் அதை ஏற்றிருந்தாள்.
“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரஞ்சன். இதே மாதிரி உங்கக் குடும்பத்தோட என்னைக்கும் சந்தோஷமா இருக்க, என்னோட வாழ்த்துக்கள்!” என்றவளின் குரலில் ரஞ்சனின் புருவங்கள் உயர்ந்து இறங்கின.
“காலைல இருந்து இப்போ வரைக்கும் ஒருத்தர் கூட தமிழ்ல விஷ் பண்ணலை. உங்களோட விஷ் ரொம்ப ஸ்பெஷலாகிடுச்சு டாக்டர். தேங்க் யூ...” என அவன் கூற, இவளது முகம் மலர்ந்தது.
“ஃபைவ் மினிட்ஸ்ல வந்துட்றேன்...” என அனைவரிடமும் பொதுப்படையாகக் கூறிவிட்டு அவன் அறைக்குள் நுழைய, ஷோபனாவும் அவன் பின்னே சென்றாள்.
சந்தனா கூடத்திலிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அஷ்வினும் மனோவும் அவளது அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தனர். லட்சுமி நீள்விருக்கையில் அமர்ந்திருந்தார்.
“இந்தப் பொண்ணு ஷோபனா ரொம்ப நல்ல பொண்ணா இருக்கால்ல சந்துமா?” என அவர் வினவ, இவளது தலை அதை ஆமோதித்தது. மேலும் அவர் பேச, இவள் பதிலளித்த வண்ணமிருந்தாள்.
அறைக்குள் நுழைந்த ரஞ்சனின் முகம் நொடியில் மலர்ந்து போனது. அறை முழுவதும் அவர்களது அன்பை நிரப்பியிருந்தாள் மனைவி. அதில் அவனுக்குமே அகமும் முகமும் நிறைந்து போனது. அவனது முகபாவனைகளை சிந்தாமல் சிதறாது உள்வாங்கினாள் ஷோபனா.
“ஷோபி... பென்டாஸ்டிக்...” என்றவன், “ஹே... இந்தப் பிக் எப்போ எடுத்தது டி?” திருமணத்திற்கு முன்பான புகைப்படம் ஒன்றைக் கைகாண்பித்தான்.
“சொல்ல மாட்டேன்...” இவள் சுவரில் சாய்ந்து நின்றாள்.
“ப்ம்ச்... ஷோபி...” என்றவன் அவளது கையைப் பிடித்திழுக்க, “நம்ப அப்புறம் பேசலாம். இப்போ எல்லாரும் வெயிட் பண்றாங்க. போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க...” என்றாள் அவள்.
“நீ பதில் சொல்லாம விட மாட்டேன் ஷோபி...” என்றவன் மனைவியை அணைத்துக்கொள்ள, மென்முறைப்புடன் அவனைப் பார்த்தவள், “ஃபர்ஸ்ட் டைம் உங்களைப் பார்த்தப்போ எடுத்தது...” என்றாள்.
அவன் முகத்தில் யோசனைப் படர, “அப்போ உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கு மட்டும்தான் உங்களைத் தெரியும். சோ, மறைஞ்சு நின்னு எடுத்தேன் அஷூப்பா...” என ஆசையாய்க் கூறியவளை ஆதுரமாய்ப் பார்த்தான் ரஞ்சன். அவள் குரல் முழுவதும் கணவனுக்கானதுதான். அந்த வார்த்தையில் கொட்டிக் கிடந்த அன்பை சுகமாய் சலுகையாய் இவனது மனம் உள்வாங்கியது.
“தேங்க்ஸ் ஷோபி. தேங்க்ஸ் ஃபார் கம்மிங் இன் மை லைஃப்!” என அவனது உதடுகள் அன்பாய் மனைவியின் நெற்றியில் பதிந்தன. அதில் ஷோபனாவின் முகம் கணவனின் நேசத்தில் கரைந்திருந்தது.
“நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் அஷூப்பா. நீங்க சொல்லக் கூடாது!” என்றவள் எக்கி அவனது நெற்றியில் முத்தமிட முயல, இவன் மனைவியைத் தூக்கினான்.
“தேங்க் யூ அஷூப்பா... தேங்க் யூ ரஞ்சன். இதே மாதிரி எப்பவும் உங்களை நான் காதலிச்சுட்டே இருக்கணும்!” என அவன் நெற்றியில் முத்தமிட்டவளின் குரல் நெகிழ்ந்திருந்தது. ரஞ்சன் கரங்கள் மனைவியை இன்னுமே இறுக்கிக் கொண்டன.
இந்தப் பெண் ஏன் தன் மீது இத்தனை அன்பு செலுத்துகிறாள் என ஒவ்வொரு முறையும் அவன் வியந்தது உண்டு. அவளது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அவன் மீதான அன்பும் காதலும் வெளிப்படும். இப்போது கூட அவன் பிறந்தநாளுக்கு அணிச்சல் செய்வற்காகத்தான் அவள் பகலில் சிறப்பு வகுப்பிற்குச் சென்றாள் என்றுணர்ந்து அவன் கடிந்தப்போது கூட மனைவி அதை அசட்டை செய்திருந்தாள்.
அவளுடைய அத்தனையிலும் தான்தான் நிறைந்திருக்கிறோம் என்ற நினைப்பே இவனை போதைக் கொள்ள செய்ததது. இந்த அன்பின் பிடியில் வாழ்நாள் முழுவதும் அடிமையாகக்
கிடக்க கூட அவனது மனம் ஒப்புக்கொள்ளும். அந்த அளவிற்கு மனைவி அவனை அன்பால் உருக்கியிருந்தாள்.
அவளது வார்த்தைகள் இவனை உருகச் செய்ய, “நான் கூட காலம் முழுக்க இந்த ஷோபியோட காதல்ல வாழ்ந்துடணும். அவளோட மொத்த அன்பும் காதலும் யாருக்கும் கொடுக்காம நானே வச்சுக்கணும் டி. உன் அளவுக்கு என்னால நேசிக்க முடியலை டி. பட், இருந்தாலும் என்னோட அன்பு மொத்தமும் இந்த ஜென்மத்துல என் பொண்டாட்டியைத் தவிர யாருக்கும் கிடையாது. ஐ லவ் யூ ஷோபி. லவ் யூ லாட்!” என அவளது முகம் முழுவதும் இதழ்களை ஒற்றியெடுத்தான் ரஞ்சன். அவன் வார்த்தைகள் எத்தனை இன்பத்தை வாரியிறைத்தன என ஷோபனாவால் வாய் வார்த்தையாக உரைக்க முடியாது. தான் மட்டுமே கொடுத்த நேசத்தை அவன் திரும்பக் கொடுக்கும் போது ஏதோ உலகையே வென்ற திருப்தி. அவளைப் பொறுத்தவரை ரஞ்சன்தான் அவளது உலகம். அஷ்வின் அதிலொரு பிரதான பகுதி. அவர்களைச் சுற்றித்தான் பெண்ணின் நாட்கள் இயங்கும்.
“போதும்... போங்க ரஞ்சன். உங்களோட ரொமான்ஸ் எல்லாம் நைட் வச்சுக்கலாம். இப்போ சமத்துப் பையனா ப்ரெஷாகிட்டு கேக் வெட்ட வருவீங்களாம்!” என்ற மனையியை ஆசைத் ததும்ப பார்த்திருந்திருந்தான்.
“என்ன அஷூப்பா. என்னவே பார்த்துட்டே இருந்தா எப்படி. போங்க...” என்றவள் குரல் முழுவதும் அவன் மீதான வாஞ்சைக் கொட்டிக் கிடந்தது. அதை உள்வாங்கியவன், சிறிய தலையாட்டலோடு நகர்ந்தான்.
பால்கனியில் நின்றிருந்தாள் சந்தனா.மருத்துவனையில் இருந்து அழைப்பு வரவே, அதை ஏற்றபடி இங்கே வந்து நின்றாள். அழைப்பைத் துண்டித்தும் அந்த இடத்தைவிட்டு அகல மனமில்லாமல் வானத்தையே வெறித்திருந்தாள். பார்வையை சுழலவிட்டவளின் விழிகள் ஒரு நொடி ரஞ்சன் மற்றும் ஷோபனாவில் படிந்தது. காற்றிற்கு லேசாய் கதவு திறந்திருக்க, இவளது பார்வை தன்னிச்சையாக அங்கே படிய, நொடியில் திரும்பிவிட்டாள்.
குனிந்து முன்னே வண்ண வண்ணமாய் பூத்திருந்த ரோஜாக்களைப் பார்த்தாள். சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஊதா என அழகாய் மொட்டவிழ்ந்திருந்தன.
வெள்ளை ரோஜாவை இவளது கரங்கள் தொட்டுத் தடவின. பின்னர் நிமிர்ந்து வானிலிருந்த நட்சத்திரங்களை இலக்கில்லாது பார்த்தாள். என்ன செய்து இக்கணத்தின் கனத்தைப் போக்குவதென அவளுக்குத் தெரியவில்லை. யாருமே இல்லாத இடத்திற்குச் சென்று இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த அழுகையைக் கொட்டித் தீர்த்துவிடலாம் என்றொரு உந்துதல். தன்னை எதுவும் பாதிக்கவில்லை என்றொரு இறுமாப்பில் இருந்தவளின் நம்பிக்கை ஒவ்வொரு நாளும் உதிர்ந்து கொண்டிருந்தது. தன்னுணர்வுகளைப் பகிரக் கூட குகேஷ் அருகில் இல்லையென மனம் வலித்து தொலைத்தது. அங்கே அவனுக்கு கேட்டுவிட்டது போல. அலைபேசி இசைக்க, எடுத்துப் பார்த்தாள்.
“குகா காலிங்...” என்ற பெயரைப் பார்த்ததும் இத்தனை நேரம் இறுக்கிக் கட்டியிருந்த கயிற்றொன்றின் நுழிலை மெதுவாய் அவிழத் துவங்கியது போல அவள் போட்டிருந்த வேலி உதிரத் தொடங்கியது. மெல்ல விழிகள் கலங்க, பார்வை மங்கலாகின. தொண்டைவரை அடைத்த உணர்வை சரிசெய்யும் எண்ணம் உத்தமமாய் அவளுக்கில்லை போல. உவர் நீர் கன்னத்தில் இறங்கின. ஸ்மரணையற்று சமைந்திருந்த மனதிற்கு அப்போதுதான் புறத்தூண்டல் உறைத்தது. அலைபேசி திரையையேப் பார்த்திருந்தாள். விழிகள் பளபளத்தன. அழைப்பு முழுவதும் முடிந்து மீண்டும் வர, கண்ணீரை துடைத்துவிட்டு அதை ஏற்று செவிக்கு ஈந்தாள். சத்தியமாய் அவனிடம் பேச முடியும் எனத் தோன்றவில்லை. அழுதுக் கதறிவிடுவோம் என இத்தனை நாட்கள் இறுமாந்திருந்த நெஞ்சம் பயந்து தொலைத்தது.
“சந்து, என்ன பண்ற?” மறுபுறம் அவன் வினவ, இவளிடம் பலத்த அமைதி.
“லைன்ல இருக்கீயா டி?” குகேஷ் ஒருமுறை அலைபேசியை சரி பார்த்தவாறு வினவினான்.
“ஹம்ம்... சொல்லு குகா. சும்மாதான் இங்க ஒரு பெர்த் டே பங்க்ஷன் அட்டென்ட் பண்ண வந்தேன்!” என்றாள் சின்ன குரலில்.
“வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு சந்தனா?” அவன் நொடியில் வினவ, இவளுக்கு மேலும் விழிகள் பொங்கின.
அடைத்த தொண்டையை சரிசெய்து உருண்டு திரண்டிருந்த உவர்நீரை உள்ளிழுத்தவள், “ஐ யம் ஒகே குகா...” என்றாள் வலிய வரவழைத்தக் குரலில்.
“நீ ஓகேவா இல்லையான்றதை நான் முடிவு பண்றேன். வீடியோ கால் வரேன்...” என்றான்.
“இல்ல வேணாம் குகா. நான் காலை எடுக்க மாட்டேன்...” இவளது குரல் லேசாய் இடறியது.
“நான் உன்னோட விருப்பத்தைக் கேட்கலை. அட்டென் பண்ணுன்னு சொன்னேன்...” என்றவன் காணொளி அழைப்பைவிடுத்தான்.
இவள் முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு அழைப்பை ஏற்றாள். “அழுதியா நீ?” ஒரு நொடியில் அவளது முகத்தை ஊன்றிப் பார்த்து வினவினான் குகேஷ். எதுவும் பேசாது உதட்டைக் கடித்தாள். கேவி வந்து அழுகையை அடக்கி புன்னகைக்க முயன்ற உதடுகளில் சர்வ நிச்சயமாய் உயிர்ப்பில்லை. ஏனோ குகேஷ் இந்நொடி தன்னருகே இருந்திருக்கக் கூடாதா என மனம் ஊமையாய்க் கண்ணீர் வடித்தது.
“சந்தனா...உன்கிட்டே தான் கேக்குறேன். எதுக்காக அழுத? என்னாச்சுன்னு சொல்லு முதல்ல?” அதட்டலாய் உரைத்தவனின் குரல் முழுவதும் இந்தப் பெண்ணிற்கானத் தவிப்புதான் கொட்டிக் கிடந்தது. அந்தக் குரலில் இவளுக்கு அழுகை வரப் பார்க்க, “குகா... நேர்ல பேசலாம். நீ வரும்போது சொல்றேன். ப்ளீஸ் இப்போ எதையும் கேட்காத...” என்றவளின் விரல்கள் திரையிலிருந்த சிவப்பு பொத்தானை அழுத்தின.
மீண்டும் விழிகள் கலங்க நிமிர்ந்து வானத்தை வெறித்தாள்.நெஞ்சு முழுவதும் அழுத்திய பாரத்தை யாரிடமும் இறக்கி வைக்க முடியாது என்ற நிதர்சனம் உணர்ந்ததில் வயிற்றிலிருந்து ஏதோ ஒரு உணர்வு அவளை உடைந்தழச் சொல்லி உந்த, இறுகிப் போய் நின்றாள். இதுதானே அவளுடைய வாழ்க்கை என அவளாய் அமைத்துக் கொண்ட பாதை. அதில் எது வந்தாலும் தான்தானே எதிர்கொள்ள வேண்டும் என மனம் தனக்குத்தானே சமாதான மொழிகளை உரைத்தது.
***
பூரணி சமையலறைக்குள் நுழைய, சந்தனா வெளியே அமர்ந்துவிட்டாள். அவளது பார்வை உயர்ந்து சாளரத்தை நோக்கியது. ஆள் அரவம் எதுவுமில்லை அங்கு. இவள் பையைத் திறந்து டப்பாவை வெளியே எடுத்து வைத்தாள்.
தீனா வந்ததும் அவனுக்கு இரண்டு பனியாரங்களைக் கொடுத்துவிட்டு, மனோவிற்கும் கொடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் மனம் அதையே சுற்றி வந்தது. இவள் வந்து சிறிது நேரம் கழித்தே தீனா எழுந்து வந்தான்.
“ப்ரஷ் பண்ணீட்டு காஃபியைக் குடி தீனா...” என்று சதா அதட்டலை அசட்டை செய்தவன், சந்தனாவைப் பார்க்க ஓடிவிட்டான்.
தீனா தன்னருகே அமர்ந்ததும் அவனை முறைத்தவள், “ஏன் இவ்வளோ நேரம் வரலை தீனா? நான் அப்போவே வந்துட்டேன்...” என்றாள்.
“குட்டி... நான் மனோவோட இன்னைக்கு தூங்கிட்டேன். அதான் வர முடியலை...” என சுவரில் சாய்ந்தான்.
“மனோ எங்க தீனா? அவனுக்கு வலி சரியாகிடுச்சா?” என இவள் கவலையாய்க் கேட்டாள்.
“மனோ தூங்குறான் குட்டி. பாவம் அவனுக்கு நைட்டெல்லாம் வலி. அழுதுட்டே இருந்தான். அப்புறம் மாமா அவனுக்கு மாத்திரை கொடுத்தாரு. அதை சாப்ட்டு அவன் தூங்கிட்டான்...” எனக் கூறவும் இவளுக்கு வருத்தமாகிப் போனது.
“தீனா... அம்மா பனியாரம் செஞ்சாங்க. உனக்கும் மனோவுக்கும் எடுத்துட்டு வந்தேன்...” என அவனுக்குக் கொடுத்தவள், “இந்த ரெண்டு பனியாரத்தை மனோகிட்டே கொடுத்துடு...” என்றாள்.
“சரி குட்டி...” என்றவன் பனியாரத்தை எடுத்து சுவைத்தான்.
“குட்டி பனியாரம் சூப்பரா இருக்கு. உங்கம்மா அடிக்கடி செய்வாங்களா?”
“ஆமா... அப்பாவுக்கும் எனக்கும் பனியாரம் ரொம்ப பிடிக்கும். அம்மா அடிக்கடி செஞ்சுத் தருவாங்க...” என்றாள் இவள் ஆசையாய்.
“எங்கம்மா பனியாரம் எல்லாம் சுட்டே தர மாட்டாங்க. அப்பா ஹோட்டல்ல வாங்கித் தருவாரு. ஆனால் அது டேஸ்டே இருக்காது...” இவன் பதிலளிக்கும் போதே மனோ ஊன்றுகோல் உதவியுடன் வெளியே வர, சந்தனா குடுகுடுவென ஓடிச்சென்று அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
“மனோ... இந்தா, என் தோள்ல கை போட்டு புடிச்சுக்கோ. உனக்கு வலிக்கப் போகுது!” என்றாள்.
“இல்ல குட்டி... எனக்கு வலிக்கலை!” என்றவன் அவளது உதவியுடன் நடந்துவந்து அமர்ந்தான்.
“ரொம்ப வலிக்குதா மனோ? உன் கால்ல இருக்க புண்ணு எப்போ சரியாகும்?” இவள் அவனது காலைப் பார்த்தவாறே வினவினாள்.
“தெரியலையே குட்டி. இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு
டாக்டர் அங்கிள் சொன்னாரு...” என அவன் பதிலளித்தான்.
“மனோ... பனியாரம் சாப்டு. நான் உனக்காக எடுத்துட்டு வந்தேன்...” என இவள் நீட்டவும், அவன் மலர்ந்த முகத்துடன் எடுத்து உண்ணத் தொடங்கினான்.
“மனோ, மேடம்கிட்டே சொல்லிடாத. அவங்களுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க...” இவள் கூற, “ப்ராமிஸா சொல்ல மாட்டேன் குட்டி...” என மனோ உறுதியளிக்க, சந்தனா புன்னகைத்தாள்.
“குட்டி... பனியாரம் ரெண்டுதான் எடுத்துட்டு வந்தீயா? டேஸ்டா இருந்துச்சா, தீர்ந்து போச்சு...” என தீனா சப்புக் கொட்டினான்.
“தீர்ந்துடுச்சே தீனா. நான் அம்மாகிட்டே சொல்லி நாளைக்கும் எடுத்துட்டு வரேன்!”
“நாளைக்கு நான் இங்க இருக்க மாட்டேனே. நைட்டே ஊருக்கு கிளம்பிப் போய்டுவேன்...” தீனா கூற,
“அப்போ இனிமே வரமாட்டீயா தீனா?” என அவள் கவலையாகக் கேட்டாள்.
“ஹம்ம்... தெரியலையே குட்டி. எக்ஸாம் லீவ் விடுவாங்க இல்ல. அப்போ வர்றேன் நான். நீ பனியாரம் அப்போ செஞ்சு எடுத்துட்டு வா...” அவன் கூற, இவள் தலையை அசைத்தாள்.
“சரி, நம்ப மூனு பேரும் ஒளிஞ்சு புடிச்சு விளையாடுவோமா?” சந்தனா வினவ, சரியென்று தீனா கண்ணை மூடித் திரும்பி நின்று நூறு எண்களை எண்ணத் தொடங்கினான். சந்தனா மனோவைக் கைத்தாங்கலாக் அழைத்துச் சென்று ஓரிடத்தில் ஒளிந்து கொண்டாள்.
“மனோ... புண்ணு வலிக்கிதா?” என அவனிடம் அடிக்கடி கேட்டும் கொண்டாள். சிலபல நிமிடங்களில் தீனா இவர்களைக் கண்டு பிடித்துவிட்டான். அவர்கள்
நின்றிருந்திருந்த இடத்தில் சேறும் சகதியுமாய் இருக்க, மனோ மற்றும் சந்தனாவின் கால் முழுவதும் சகதியாகின.
“மனோ... வா, காலைக் கழுவலாம்” என அவனை அழைத்துச் சென்றவள் தன் காலை கழுவிவிட்டு குனிந்து அவனது காலையும் கழுவினாள்.
“குட்டி... வேணாம். நானே கழுவுறேன்...” அவன் கூற, “இல்ல மனோ, உனக்கு கால் வலிக்கும். நீ நில்லு, நானே உனக்கு கழுவிவிட்றேன்...” என மனோவின் காலை சுத்தம் செய்தாள்.
“மனோ, என் கால்லயும் சகதியா இருக்கு. நீயே கழுவிவிடு...” என தீனா வந்து நிற்க, இவள் அவனை முறைத்தாள்.
“போ தீனா... நீயே கழுவிக்கோ. பாவம் மனோ, அவனுக்கு கால்ல அடிபட்டிருக்கில்ல. அதான் நான் பண்ணேன்...” என இவள் பதிலுரைத்தாள். அவன் ரோஷத்துடன் காலை கழுவிவிட்டு தனியே சென்று அமர்ந்துவிட்டான்.
“தீனா... வா, விளையாடலாம்” சந்தனா அவனை அழைக்க, முகத்தைத் திருப்பினான் அவன்.
“நான் உன்கூட விளையாட வரலை. உனக்கு மனோவை தானே பிடிக்கும். அவனுக்கு மட்டும்தான் காலை கழுவிவிடுவ...” என்றவனிடம் இவள் என்ன சொல்வதென தெரியாது விழித்து நின்றாள்.
“குட்டி... ஸ்கூலுக்கு டைமாச்சு பாரு. கிளம்பு...” என பூரணி குரல் கொடுக்க, இவள் புத்தகப்பையை எடுத்துத் தோளில் மாட்டினாள்.
“பாய் தீனா, சாயங்காலம் வரேன்...” என அவள் கூற, தீனா முகத்தைத் திருப்பினான்.
“குட்டி, பாய்...” என்ற மனோ, “சாயங்காலம் மறக்காம வா...” என அவளை அனுப்பிவைத்தான்.
மாலை பள்ளி முடிந்து மனோவின் வீட்டை நோக்கி நடந்த சந்தனாவின் முகம் யோசனையில் இருந்தது. எப்படி தீனாவை சமாதானம் செய்வது என சிந்தித்துக் கொண்டே அவள் வீட்டை அடைய, அவன் ஊருக்குச் செல்லத் தயாராகி நின்றான்.
சந்தனா அவனது முகத்தையே பார்த்திருக்க, அவளைப் பார்த்ததும் ஓடி வந்தான் தீனா.
“குட்டி... நான் ஊருக்குப் போறேன்...” என்றவன் அவளது கையில் சில இன்னெட்டுகளை திணித்தான்.
“பல்லு வலி சரியானதும் நீ இதை சாப்பிடு. நான் எக்ஸாம் லீவ்க்கு வரேன். அப்போ உனக்கு நிறைய சாக்லேட் வாங்கிட்டு வரேன்!” என அவன் காலையில் நடந்த சண்டையை சுத்தமாய் மறந்திருந்தான்.
“தீனா... எனக்கு சாக்லேட் இப்போ வேணாம். அடுத்த தடவை வரும்போது நீ வாங்கிட்டு வா. பல்லு வலிக்கும்...” என அவனிடமே இன்னெட்டுகளைத் திருப்பிக் கொடுத்தாள் இவள்.
“சரி குட்டி... நான் கிளம்புறேன்...” என அவன் உள்ளே சென்றுவிட, உமாநாதன் அவனை மகிழுந்தில் அழைத்துச் சென்றார்.
“பாய் மனோ, பாய் குட்டி... அத்தை வரேன்!” என அவன் சாளரம் வழியே கையை ஆட்டிக்கொண்டே சென்றான்.
“வா மனோ, உள்ள கூட்டீட்டுப் போறேன்...” சதா மகன் கையைப் பிடிக்க, “இல்ல மா, நான் குட்டியோட இருக்கேன்...” என வராண்டாவில் அமர்ந்துவிட்டான். சந்தனாவும் அவனருகில் அமர்ந்துவிட்டாள்.
அவள் பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்து வைத்து வீட்டுப் பாடங்களை செய்தாள்.
“மனோ... இங்கிலீஷ் எழுதித் தரீயா?” என அவனிடம் இவள் ஆங்கில புத்தகத்தை நீட்ட, அவனும் எழுதிக் கொடுத்தான்.
“மனோ... நான் செடிக்கு தண்ணீ ஊத்தவே இல்ல. கொஞ்சம் ஊத்தீட்டு வரேன்...” என்றவள் எழுந்து செடிக்கு தண்ணீர் ஊற்றினாள். ஆசையாய் வெள்ளை ரோஜாவைத் தொட்டுப் பார்த்தாள்.
அதைப் பார்த்த மனோ, “குட்டி... உனக்கு ரோஸ் வேணுமா? எடுத்துக்கோ...” என அவன் பறிக்க வர, “இல்ல... இல்ல. பாவம் மனோ, சாயங்கலாம் செடி எல்லாம் தூங்குமாம். நீ அதை தொந்தரவு பண்ணாத. அது செடியிலே இருக்கட்டும்...” என்றாள் பெரிய மனுஷியாய். பூரணிதான் மகளிடம் அவ்வாறு கூறியிருந்தார்.
“அப்படியா... சரி. உனக்கு ரோஸ்ன்னா ரொம்ப பிடிக்குமா?”
“ஆமா... ஆமா. வெள்ளை ரோஜா ரொம்ப அழகா இருக்குல்ல. நான் அம்மாகிட்டே கேட்டிருக்கேன். இதே மாதிரி எனக்கும் செடி வாங்கித் தரேன்னு சொல்லிருக்காங்க...” என்றாள் ஆர்வமாய்.
“இந்த ரோஸ் எங்க அப்பா வாங்கிக் கொடுத்தாரு. வெள்ளை ரோஸ் நான்தான். இந்த மாதிரிதான் பொறந்தப்போ வெள்ளையா இருந்தேன். அதனால இந்த வொய்ட் ரோஸ் நான்னு அம்மா சொல்லுவாங்க...” என அவன் கூற, அவனையும் ரோஜாவைம் மாறி மாறிப் பார்த்தாள் சின்னவள்.
“ஆமா... நீ வெள்ளையா இருக்க. ஆனால், நான் கருப்பா இருக்கேன்!” அவள் வருத்தப்பட, “குட்டி... நீ ப்ளாக் இல்ல. இங்க பாரு, இந்த பிங்க் கலர் ரோஸ் மாதிரி இருக்க நீ...” என்றான்.
“போ மனோ, பொய் சொல்லாத நீ. நான் கருப்பாதான் இருக்கேன்.
பாரு இங்க...” என அவன் முன்னே கையை நீட்டினாள்.
“குட்டி... உன்னோட உதடு என்ன கலர்ல இருக்கோ, அதுதான் உன் கலர். பாரு உன் உதடு ரோஸ் கலர்ல இருக்கு...” என அவன் கூற, இவள் கீழுதட்டை இழுத்துப் பார்த்தவள், “ஆமா மனோ... நான் ரோஸ் கலர்ல இருக்கேன்!” என பற்கள் தெரியப் புன்னகைத்தாள். அவனும் தலையை அசைத்தான்.
“அப்போ இந்த வெள்ளை ரோஜா நான். ரோஸ் கலர் ரோஜா நீயா?” என அவள் கேட்க, “ஆமா...” என அவன் தலையை அசைத்தான். மேலும் அவளது பள்ளியைப் பற்றி மனோ வினவ, சந்தனா பதிலளித்தாள். பூரணி வேலை முடித்துவிட்டு வர, சந்தனா அவனிடம் விடைபெற்று வீட்டை நோக்கி நகர்ந்தாள்.
மனோ கூறியவற்றை தாயிடம் வளவளத்துக் கொண்டே அவள் வர, பூரணி தலையை அசைத்து அனைத்தையும் கேட்டுக் கொண்டார்.
தொடரும்...
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page