All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 3

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

 

அத்தியாயம் 3

 

வீட்டுக்குள் நுழைந்த உத்தமன் ஹாலில் அமர்ந்திருந்த உதயனைக் கண்டு, "அடடா வாப்பா வா, எப்போ வந்தே " எனக் கேட்டவாறே அவரின் முன்னே வர,

"இப்ப தான்ப்பா. வீட்டுல காய்கறி தீர்ந்து போச்சு அதான் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன். நான் டவுனுக்கு தான் போறேன். கத்திரிக்காய் முட்டையை நானே போகும் போது மார்க்கெட்ல போட்டுறேன். நீங்க எதுக்கு மெனக்கெட்டு போய்க்கிட்டு இருக்கீங்க ?"

"உனக்கு எதுக்குப்பா சிரமம். மாட்டுக்கு வேற தவுடு வாங்க வேண்டியது இருக்கு. எப்படியும் நானும் அங்கிட்டு வரணும் "

"அப்படியா சரிப்பா. போகும்போது சொல்லுங்க நானும் கூட வரேன். தனியா எல்லாம் போக வேண்டாம். அங்கே மார்க்கெட்ல நமக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க நல்ல விலைக்கு எடுப்பாங்க "

"இதோ கொஞ்ச நேரத்துல கிளம்பணும்பா. காலையில சாப்பாடு சாப்பிட்டு முடிக்கணும். இல்லைன்னா தலை சுத்தல் வந்துரும். பொன்னி சாப்பாடு ரெடியா இருந்தா எடுத்து வையும்மா " என்று தன் சமையலறையில் இருந்த மனைவியிடம் கூறினார்.

பின் அவரும் அமர இருவரும் பேசிக் கொண்டிருக்க நேரங்கள் கடக்க ஆரம்பித்தது.

பொன்னி உதயன் கொண்டு வந்த அந்த பை நிறைய காய்கறிகளை கொண்டு வரவே, வேகமாய் எழுந்து அதனை வாங்கிக் கொண்டான்.

"தம்பி இப்போதைக்கு இருக்கிற காய் எல்லாம் இதுல வச்சுட்டேன் வேற ஏதாவது காய் வேணும்னா தகவல் சொல்லிவிடுப்பா நான் புடுங்கி வைக்கிறேன் " என்றதும்,

"சரிம்மா நான் அம்மாகிட்ட கொடுத்து வேற எதுவும் வேணுமான்னு கேட்கிறேன். எவ்வளவு ஆச்சும்மா ?" என்றான்.

"வேண்டான்னு சொன்னா நீ கேட்கவா போறே. அறநூறு ரூபாய் ஆச்சுப்பா " என அவனுக்கு மட்டும் சற்று குறைவாக விலையை கூறினார்.

அவனும் சரி எனக் கூறி அதற்காக பணத்தை அவரின் கரங்களில் கொடுக்க, அதனை வாங்கி தன்  கண்களில் ஒத்தி எடுத்து முந்தானையில் உடைந்து கொண்டார். அது அவரின் உழைப்பில் வந்த பணம் அல்லவா..!

"சரி அப்போ நான் கிளம்புறேன். இதை போய் குடுத்தா தான் மதியம் நம்ம வீட்டுல சாப்பாடு செய்வாங்க " என்றவனோ, அந்த பையை தூக்கிக் கொண்டு திரும்ப அதே நேரம் உள்ளே அறையில் இருந்து வெளியே வந்தாள் யுகனிகா.

"கிளம்பிட்டீங்களா ?" என்க, அவனும் ஆமென தலையசைத்தான்.

"சரிம்மா. நான் போயிட்டு வரேன் " என்றதும், தன் மகளுக்காக லஞ்ச் பேக்கை அவளிடம் கொடுக்க அவள் அதை வாங்கிக்கொண்டு வெளியேறினாள். இருவரும் ஒன்றாக தான் அந்த வீட்டை விட்டு வெளியேற, இப்பொழுது தனக்கு தனிமை நேரம் கிடைக்க, இவளிடம் பேசி விடலாம் என நினைத்தான். பெரியவர்கள் இருவரும் வீட்டுக்குள் இருக்க தன் ஸ்கூட்டியை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்குச் சென்றாள் யுகனிகா.

"ஒரு நிமிஷம் நில்லு யுகனி. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் " என்றதும்,

அவளும் நின்று திரும்பி அவனைக் காணவே, "இனிமே அவன் உன் பின்னாடி ஃபாலோ பண்ண மாட்டான். உன் கிட்ட பேச முயற்சி பண்ண மாட்டான். நான் நேத்து அவங்க கிட்ட தெளிவா பேசிட்டேன். நீ கவலைப்படாம வேலைக்கு போயிட்டு நிம்மதியா இரு " என்றான்.

"சாரி நான் உங்களை இந்த விஷயத்துல தொந்தரவு பண்றேன்னு தோணுது "

"என்ன நீ இப்படி சொல்லிட்ட நீங்க இங்க வந்ததே என்ன நம்பி தான். அப்படி இருக்கும் போது நான் உங்க மூணு பேரையும் பாதுகாக்காம இருந்தா தான் அது தப்பு. சரி ஸ்கூலுக்கு நேரமாச்சு நீ கிளம்பு " என்றதும், அவளும் தன் ஸ்கூட்டியை எடுக்க அதே நேரம் அவர்களின் வீட்டில் வாசலில் மினி வேன் ஹாரன் ஓசைக் கேட்டது.

இருவருமே வாசல் புறம் திரும்ப அங்கு டிரைவர் இருக்கையின் பக்கத்து இருக்கையில் இருந்து இறங்கி அவர்கள் வீட்டு கேட்டின் முன்னே நின்றான் ஆதிரையன்.

இனி அவன் உன் பின் வரவே மாட்டான். உன்னை பார்க்கவே மாட்டான் என்று சற்று முன் தான் உதயன் கூறி இருக்க, இப்பொழுது அவனே வந்து நிற்கவே, கரங்கள் முறுக்கிக் கொண்டு பல்லை கடித்தவாறு ஆதியைக் கண்டான் உதயன்.

"ஐயா ! பால் " என்று கேட்டினை  தட்டவே,

"அம்மாடி யுகனிகா அங்கே வெளியில பால்கேன் இருக்குமா. அதை எடுத்து அந்த தம்பி கிட்ட குடுத்துரு " என்க,

"சரிப்பா நான் கொடுத்துடுறேன் " என வீட்டை கண்டு குரல் கொடுத்தாள்.

அங்கிருந்த பால் கேனை எடுத்து அவனிடம் கொடுக்க யுகனிகா முயற்சிச் செய்ய அதனை தடுத்தான் உதயன்.

"எப்பவுமே இவன் தான் பால் வாங்க வருவானா இல்ல இன்னைக்கு தான் வர்றானா " என்றுக் கேட்கவே, அங்கு ஆதிக்கு பொறுமை இல்லாது மீண்டும் மீண்டும் கதவினை தட்டிக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு தெரியும் உள்ளே இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று அதனாலே அவன் பொறுமையின்றி தட்டினான்.

"இல்ல அவங்க பண்ணையில வேலை பார்க்கிற ஒருத்தர் தான் வருவாங்க. இன்னைக்கு தான் இவன் புதுசா வந்திருக்கான் " என்றதும்,

"சரி கொண்டா நானே இதை அவன் கிட்ட குடுத்துறேன் " எனக் கூறி அந்த கேனை வாங்கி வாசல் கேட்டை திறந்து அவனின் முன் வைத்தான்.

தான் யாருக்காக வந்தோமோ அவளோ ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டிருக்க, மெல்லிய காட்டன் புடவையில் மெய்சிலிர்க்க வைக்கும் அழகு தேவதையாக இருப்பவளை தான் தன் மீசையை முறுக்கியவாறுக் கண்டான்.

ஆதியின் பார்வையை உணர்ந்த உதயனோ அவனுக்கு முன்னே குறுக்கே நின்று, "இங்க எதுக்கு வந்தே, பால் வாங்க தான. பால் இருக்கு எடுத்துட்டு போ " என்க,

"அது எனக்கு தெரியும் நீ சொல்லணும்னு அவசியம் இல்ல "

"டேய் நேத்து தான உன்கிட்ட சொன்னேன் திரும்பவும் என்னடா பார்வை இந்த பக்கம். இனிமே வந்தேன்னு நினைச்சுக்கோ அப்பறம் நான் பொல்லாதவன் ஆயிருவேன். எப்பவுமே உன் வேலைக்காரன் தானே வருவான் இன்னைக்கு என்ன நீ வந்திருக்கே "

"அது என் விருப்பம் நான் வருவேன் இல்லை என் வேலைக்காரன் வருவான் உனக்கு என்ன ? ஆமா இந்த வீட்டுல உனக்கு என்ன வேலை " எதிர்த்துக் கேட்க, அதே நேரம் ஸ்கூட்டி ஹாரன் சத்தம் கேட்டு இருவருமே திரும்பினர்.

நீங்கள் இருவரும் அப்பறம் சண்டை போடுங்கள் நான் செல்கிறேன் என்பதுப் போல் தான் அவளோ எதிரே நின்றாள்.

"உதயன் கொஞ்சம் வழி விடுங்க நான் போயிடுறேன். எனக்கு நேரமாச்சு " என்றதும், அவனும் சற்று தள்ளி நின்று அருகில் இருந்த ஆதியையும் இழுத்து தள்ளி நிற்க வைத்தான். இவளோ ஆதியை முறைத்தவாறு அங்கிருந்து விழிகளை விட்டு மறைந்து விட்டாள்.

"என் பார்வையில இருந்து அவளை நீ மறைக்கணும்னு நினைச்சா அது உன்னால முடியாதுடா. என்னைக்கு அவ என் மனசுக்குள்ள புகுந்தாலோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். இந்த ஜென்மத்துல அவ தான் எனக்கு பொண்டாட்டின்னு அவளை ஒத்துக்க வைப்பேன் "

"முட்டாள் தனமா பேசிக்கிட்டு சுத்தாதே ஆதி. நடக்காத காரியம். உன் வாழ்க்கையை வீணாக்காதே போய் வேலையை பாரு. உனக்கு அவளை பத்தி என்னடா தெரியும் ?"

"எனக்கு தெரியாது தான் உனக்கு அவளை பத்தி தெரியும்ல. அப்ப சொல்லு. அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் ? எதுக்காக நீ அவளை இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்திருக்கே ?" எனக் கேட்ட அடுத்த நொடியே அவனின் சட்டையைப் பற்றினான்.

" அப்போ என்னவோ இருக்கு போல " அவனின் கரங்களில் மீது தன் கரத்தினை வைக்க,

பற்களை கடித்துக் கொண்டு, " அந்த உனக்கு சொல்லணும்னு அவசியம் இல்லை. நீ உன் வேலையை மட்டும் பாரு " கூறியவனோ அவன் மீது இருந்த கரங்களை விடுத்து தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

"அண்ணே வாங்கண்ணே நேரமாச்சு. எல்லார் வீட்டிலையும் பாலை வாங்கிட்டு போகணும் " என அந்த வண்டியில் இருந்த இன்னொருவன் ஆதியை அழைக்கவே அவனும் பால் வண்டியில் ஏறினான்.

ஆதி எவ்வளவு முயன்றும் அவனால் யுகனிகாவை பற்றி தெரிந்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு அவளின் கடந்த காலம் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் தன் காதலை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதுப் போல் ஏன் அவள் விலகிச் செல்கிறாள் ? தான் அவளை எவ்விதத்திலும் துன்புறுத்தவில்லையே பின் என்ன ?

ஆமா இவன் ஏன் இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறான் ?உதயனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் ? என நினைத்தவாறே சென்றான் ஆதி.

யுகனிகா ஆசிரியர் படிப்பினை படித்து விட்டு இப்பொழுது பக்கத்து ஊரில் இருக்கும் டவுனில் உதயனின் பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்க்கிறாள் அவளை அங்கு சேர்த்து விட்டது கூட உதயன் தான். அவளின் கடந்த கால வாழ்க்கை அவளுக்கு கசப்பினை தரவே அதிலிருந்து மீண்டு வர நினைத்தவளுக்கு விடிவெள்ளியாய் அவளுக்கு கிடைத்தவன் தான் உதயன்.

உதயனின் உதவியால் தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்திருந்தாள். இந்த ஊருக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கடந்து இருந்தது. இந்த ஊருக்கு அவள் வந்த நொடி பத்தொன்பது கல்லூரி படிப்பு பாதியில் நிறுத்தியிருந்தாள். அமைதியான அழகு மங்கை.

கையில் இருந்த பணத்தை வைத்து உதயனின் உதவியால் ஒரு இடத்தை வாங்கி அங்கு வீட்டையும் கட்டிக் கொண்டனர். அதில் சிறிது கடனாகி விடவே கூலி வேலை செய்து இரண்டு வருடம் அதனை அடைத்தனர். பின் மகளை படிக்க வைக்க நினைத்தார் உத்தமன். அவளோ முதலில் மறுத்து பின் ஒத்துக் கொள்ள ஆசிரியர் படிப்பு படித்தாள். இரண்டு வருடம் முடித்து இப்பொழுது ஒன்றரை வருடங்களாக உதயனின் பள்ளியில் வேலைப் பார்த்து வருகிறாள்.

அவளை படிக்க வையுங்கள் என்று கூறியது கூட உதயன் தான். அவன் அப்படி கூறியதற்கு முக்கிய காரணமும் உண்டு. யுகனிகாவை தான் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனின் மனதில் எப்பொழுதும் இருக்கும்.

உத்தமன் பொன்னி இருவருக்கும் ஒரே மகள் யுனிகா. இவர்கள் இருவருக்கும் தொழிலே விவசாயம் தான். தங்களுக்கென இருக்கும் இந்த மூன்று ஏக்கர் நிலங்களும் நான்கு மாடுகளும் தான் அவர்களின் வாழ்வாதாரம். அந்த நிலங்களில் காய்கறிகள் பயிரிடுவதும் மாட்டுக்கு தேவையான பசுமை தீவனங்களையும் உற்பத்தி செய்து கொள்கின்றனர்.

கூலி வேலைக்கு கூப்பிட்டால் அங்கே செல்வது இது தான் பொன்னி உத்தமன் இருவரின் வேலைகள்.

உதயன் ஆதிரையன் இருவரின் ஊரின் நடுவில் தான் இவள் வீடு இருந்தது. தங்கள் ஊரில் இருந்து வரும் பாலை தினமும் பண்ணையில் வேலைப் பார்க்கும் ஒருவன் வாங்கி பாத்பூத் டிப்போவுக்குக் கொண்டுச் சென்று விடுவான். அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மையானவர்களின் மாட்டுப்பால் எல்லாம் இவர்கள் வாங்கி டிப்போவுக்கு கொண்டு செல்வது தான் வழக்கம்.

அப்படி தான் தினமும் ஒருவன் வாங்குவதற்கு வருவான். இன்று ஆதி வர முக்கிய காரணம் நேற்று உதயன் தன்னிடம் சண்டை போட்டதால் மட்டுமே ! ஆனால் இப்பொழுது உதயனே இங்கு இருப்பான் என்பதை ஆதி எதிர்பார்க்கவில்லை.

யுகனிகா முதல் முறை தவிர பின் ஒரு தடவை கூட ஆதியிடம் பேசியதில்லை. ஆனால் ஆதியோ அவளைக் காணும் போதெல்லாம் குறுக்கே நின்று எதையாவது பேசி விடுவான். அதுவே அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

பள்ளிக்கு வந்த யுகனிகா ஸ்டாப் ரூம் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். அவளின் நினைவுகளோ ஆதியை தான் நினைத்தது. தன் பின்னே சுற்றாதே என்று அவளிடம் வாய் திறந்து சொல்ல அவனால் முடியவில்லை. தான் அப்படி கூறி வேணுமென்றே அவன் செய்தால் என்ன செய்ய முடியும் ? அவன் அப்படி செய்யக் கூடியவன் தான் என்று உதயன் கூறி இருந்தானே ?

காட்டுமிராண்டித்தனமாக ஒரு பெண்ணின் மனதினைப் புரிந்து கொள்ளாது இப்படி இருக்கிறானே  இவனிடம் இருந்து தான் ஒவ்வொரு நாளையும் எப்படி கடத்திச் செல்வது நினைத்தவளுக்கு அவளையும் அறியாது அவர்களின் சந்திப்புகள் தான் நினைவுக்கு வந்தது.

தொடரும்...

 

கருத்துக்களை பகிர,

 

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/

This topic was modified 1 month ago by VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்

   
ReplyQuote

You cannot copy content of this page