All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 6

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

நைட் லைஃப் - 6

மித்ரனை கண்டதும் ஆருத்ரா திகைப்பில் மூழ்கி இருந்தாலும் கண்டுக் கொள்ளாமல் அமர்ந்து இருந்தாள். யுகியும் சாதனாவும் என்ன செய்வது என்றே தெரியாமல் நின்றிருந்தார்கள். அதை விட யுகி ராகவ்வை பல்ப் எரியும் கண்களால் பார்த்துக் கொண்டு இருந்தாள். இதனை அவன் கவனித்தாலும் மித்திரனுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற குழப்பத்தில் பார்த்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்ச்சியில் மூழ்கி இருக்க மித்திரன் ஆருத்ரா தோழிகளை பார்த்து லேசாய் புன்னகைத்தான். இருவரும் தயக்கத்துடன் சிரித்து விட்டு அவர்கள் பேச இடமளித்து வேறு மேஜைக்கு சென்றார்கள். அடுத்ததாய் மித்திரன் ராகவ்வை பார்க்க அவனோ அவனை புரியாமல் பார்த்தான். 

 

“ஏன் டா அந்த ரெண்டு பொண்ணுங்க டீசன்ட்டா நாங்க பேசட்டும்ன்னு போனாங்கல நீயும் போயேன் டா..” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிட அவனை முறைத்துக் கொண்டே ஆருத்ரா தோழிகள் பக்கம் சென்றான். இருவரும் அவனை கேள்வியாக பார்க்க, “இங்க என்ன நடக்குது? உண்மையிலே அவங்க அவனோட ஒய்ஃப்- ஆ?” என்று கேட்க, இருவரும் லேசாய் சிரித்தார்கள். யுகி ஆர்வமாய், “இல்ல கல்யாணம் பண்ணிக்க போறவங்க.. இன்னும் மூணு மாசத்துல ரெண்டு பேருக்கும் கல்யாணம். நீங்க யாரு?” என்று அவனை பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமாய் கேட்டாள்.

 

“ராகவேந்திரன்” என்று மொட்டையாக பதிலளிக்க, “அண்ணாக்கு ப்ரெண்ட்டா?” என கேட்டாள். முகத்தை உர்ரென்று வைத்திருந்தவன், “அதலாம் இல்ல.. ஒண்ணா வேலை பாக்குறோம்” என்றான். ‘அட இம்புட்டு அழகான ஆபீசரா இருக்காரே.. இவர எப்படி கரக்ட் பண்றது? பேசியே கரக்ட் பண்ணுவோமா?’ என நினைத்தவள் ராகவ்விடம் பேச வாயெடுக்க அவளின் கையிலே அமைதியாய் கிள்ளினாள் சாதனா.

 

“மூடிட்டு அமைதியா இரு.. உன் புத்தி எனக்கு தெரியும்.. ஆளு வேற பாக்க பயங்கரமா இருக்காரு.. பொட்டுன்னு ஒன்னு வச்சிட போறாரு” என்று கிசுகிசுத்தாள். அதில் அமைதியானவள் ராகவ்வை கண்களாலே ரசிக்க துவங்கினாள். அவனோ மித்திரன் பேசுவதையே பார்த்துக் கொண்டு இருந்தான். 

 

ஆருத்ரா எதிரே அமர்ந்த மித்திரன், “சாரி ஆரு.. எனக்கு புரியுது நிச்சயம் அன்னிக்கு நான் வராம போனது தப்பு தான்.. கடைசி நேரத்துல ஒரு வேலை வந்துருச்சு அதான் வர முடியலை” என மன்னிப்பு கேட்டான். அவனின் நிலை என்ன என்று ஆருத்ராவிற்கு புரிந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் அவன் மீது கோவம் இருக்க செய்தது அவளுக்கு. வர முடியாது என்று ஆரம்பத்திலே கூறி இருந்தாள் அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். நிச்சயம் நடக்கும் வரையும் அவன் வருவான் என்று மிகவும் ஆவலாக காத்திருந்தாள். அவன் வர மாட்டான் என்று தெரிந்த நொடி அவளுக்கு பெரிய ஏமாற்றமாய் இருந்தது. 

 

என்ன தான் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையாக இருந்தாலும் வரன் அமைந்த உடனே இருவரும் தொலைபேசி மூலமாய் வருடக்கணக்காய் பழகியது போல் நெருக்கமானார்கள். இருவருக்குமே பார்த்த உடன் பிடித்து போனது. ஆரு வீட்டில் அவள் படிப்பு முடித்த கையேடு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றிருக்க மறுத்து பேச மனம் இல்லாதவள் அவளின் கனவுகளுக்கு ஏற்ற ஒருவரை காட்டினாள் மணந்துக் கொள்வேன் என்று கூறி சம்மதம் கூறி விட்டாள். உடனே அவளின் தாத்தா அவரின் நண்பனின் பேரனை கைகாட்டிட அவளும் சம்மதம் கூறினாள். மித்ரனுக்கும் அவளை பிடித்து போக உடனே பூ முடித்து விட்டு சென்றார்கள். 

 

அவன் வேலை பற்றி நன்கு அறிந்தவள் குறுஞ்செய்தியிலே இருவரும் நெருக்கமானார்கள். அவனிடத்தில் மட்டும் ஆருத்ராவிற்கு அவ்வளவு புரிதல் உண்டானது. அவளுக்கே ஆச்சரியம் தான். அதனாலே அவன் அழைப்பிற்காகவோ அல்லது குறுஞ்செய்திற்காகவோ அவ்வளவாய் காத்திருக்க மாட்டாள். அவள் எதிர்பார்த்த ஒன்று நிச்சயம் அன்று அவன் வர வேண்டும் என்று தான். அவனும் அவளுக்கு வாக்கு கொடுத்திருந்தான். அதனை அவன் காப்பாற்ற முடியாமல் போனது. அவனை மன்னிக்கும் எண்ணம் அவளுக்கு இருந்தாலும் சற்று வீம்பு செய்வோம் என்று அமைதியாகவே இருந்தாள். 

 

“சாரி ஆரு” என்றிட, அவனை ஏற்ற இறக்கத்துடன் பார்த்தவள், “என்ன வேலை விசயமா என்ன பாக்க வந்திங்க?” என்று அவனை அறிந்து கேட்டாள். அவனுக்கே சங்கட்டமாய் இருந்தது. “இதுக்கு எல்லாம் உங்கள சும்மா விடுவேன்னு நினைக்காதிங்க.. கண்டிப்பா தண்டனை கொடுப்பேன்.. கல்யாணத்துக்கு அப்பறம்” என்றிட தன்னிச்சையாக மித்திரன் இதழ்கள் விரிந்தது. அவளின் கன்னத்தை ஆசையாய் கில்லி கொஞ்சியவன், “இது தான் எனக்கு உன் கிட்ட புடிச்சது” என்க, அவனின் கையை தட்டி விட்டவள், “எல்லாரும் இருக்காங்க..” என்று கூறிக் கொண்டே இருக்க, ராகவ் வேகமாய் அவர்களிடம் வந்தான். அவனுக்கு பொறுமை என்பது கொஞ்சம் கூட இல்லை. 

 

ஆருத்ராவை பார்த்து, “சாரி” என்று கூறியவன் மித்ரனை முறைத்து, “வேலை நேரத்துல என்ன டா பண்ற? உனக்கு இங்க வேலை இருக்குன்னா என்ன எதுக்கு கூட்டிட்டு வந்த? நானாச்சும் வேலைய முடிச்சி இருப்பேன்ல..” என கடுப்பாக கூற, “இவன் வேற எந்நேரமும் எண்ணெய் சட்டியில கைய விட்டவன் மாதிரியே திரியுறான்..” என்று புலம்பியவன், “ராகவ் நான் சொன்ன ஆளு இவ தான்.. நம்ம கேஸ்ல இவளும் அவ ப்ரெண்ட் சாதனாவும் தான் ஹெல்ப் பண்ண போறாங்க” என்று சீரியசாக கூறிட ஆருத்ரா புரியாமல் இருவரையும் பார்த்தாள். அந்த நேரம் ஆல்வின்னும் இனியும் வர சாதனாவும் யுகியும் இவர்கள் மேஜைக்கு வந்தார்கள். 

 

ஆல்வின் மித்ரனையும், ராகவ்வை பார்த்து லேசாய் தலையசைக்க இருவரும் தலையசைத்தார்கள். என்ன நடக்கிறது என்று அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, ஆல்வின் தான் பேச்சை ஆரம்பித்தான். 

 

“ஹாய், மிஸ்.ஆருத்ரா, மிஸ்.சாதனா.. ஃப்ம்ல பேசுனதை கேட்டேன். உங்ககிட்ட ஃபாவர் கேக்க தான் வந்தேன்” என்க இருவரும் அவனை கேள்வியாக பார்த்தார்கள். 

 

“என்னோட கம்பெனிக்கு ஒரு வெல் செக்யூர்ட் ஃபயர் வால் கிரியேட் பண்ணனும்.. உங்களை என்னோட கம்பெனி நெட்வொர்க் செக்யூரிட்டி டீம்க்கு ஹையர் பண்ண நினைக்குறேன்” என்று கூறிட தோழிகள் இருவருக்கும் மகிழ்ச்சி. 

 

“உங்களால என்னோட சர்வர்ல என்ன பிராப்ளம்ன்னு கண்டுபிடிக்க முடியுமா?” என கேட்க, “பாத்தா தான் சார் சொல்ல முடியும்” என்றாள் சாதனா. 

 

“உங்களுக்கு ஓகேன்னா நாளைக்கே ரெண்டு பேரும் ஜாயின் பண்ணிக்கலாம்” என்றிட இருவரும் மனதிலே குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். வேக வேகமாய் இருவரும் தலையசைக்க ஆல்வின் மகிழ்ந்தான். “தென் வெல்கம் டூ ஸ்னப் அப்” என வரவேற்று கையை நீட்டிட இருவரும் கைகுலுக்கினார்கள். 

 

“ஓகே மத்ததை நாளைக்கு பேசலாம்” என்று கூறி அவன் அங்கிருந்து கிளம்ப இனி அவனை பாவமாய் பார்த்தாள். “சார் உங்க வேலை முடிஞ்சிது நான் இங்கயே இருக்கவா?” என கேக்க, “ஓகே கேரமல், நாளைக்கு உன் பிரெண்ட்ஸ்ச மறக்காம கூட்டிட்டு வந்துரு” என்று கூறி கிளம்பிட தோழிகள் மூவரும் இனியை கேலியாக பார்த்தார்கள். ஆருத்ரா இனியை பார்த்து கேலியாய் இரு புருவங்களை உயர்த்த அவளோ தலையில் அடித்துக் கொண்டாள். 

 

“டேய் வந்த விஷயத்தை சொல்றியா?” என ராகவ் சீரியசாக மாறிட, “ஏன் டி இவரு கஞ்சிய நாலு கிளாஸ் உள்ள தள்ளி இருப்பாரோ.. இம்புட்டு வெறப்பா இருக்காரு” என்று யுகி ஆரு காதில் கிசுகிசுக்க களுக்கென்று சிரித்தாள் ஆரு. 

 

“ஆரு, சாதனா உங்க கிட்ட முக்கியமா பேசணும்” என மித்திரன் தீவிரமாய் கூறிட உடனே விளையாட்டை விட்டு விட்டு கவனிக்க ஆரம்பித்தார்கள். 

 

“நாங்க ஹேண்டில் பண்ற கேஸ்க்கு ஹேக்கர்ஸ் வேணும்.. சோ அதான் உங்க கிட்ட ஹெல்ப் கேக்க வந்தோம்.” என்றான் மித்திரன். அதிலே ராகவ்விற்கு அவனின் திட்டம் என்ன என்று மொத்தமாய் புரிந்தது. 

 

“ஏன் அண்ணா வெளிய இருந்து எங்களை சூஸ் பண்ணிங்க டிபார்ட்மென்ட்லையே அரேஞ்ச் பண்ணுவாங்களே” என கேட்டாள் சாதனா. அவளை மெச்சும் பார்வை பார்த்தான் ராகவ். “இது கொஞ்சம் சீரியசான கேஸ் அதனால டிபார்ட்மென்ட்டையும் தாண்டி எங்களுக்கு ஹெல்ப் தேவைபடுது அதான்.” என்றான் மித்திரன். இருவரும் தீவிரமாய் யோசித்தார்கள். 

 

“பெருசா இல்ல.. இந்த ஹேக் எப்படி நடந்து இருக்குன்னு மட்டும் கண்டு புடிச்சி கொடுங்க.. ஏன்னா நாங்க விசாரிச்ச வரைக்கும் எல்லா சர்வர்ரும் பிரீஸ் ஆகி இருக்கு அவ்வளவு தான் சொல்றாங்க. சைபர் டீம்ல இருந்து கண்டு புடிக்க முடியலை. என்ன பட்டர்ன்ல நடந்து இருக்குன்னு கண்டு பிடிச்சி குடுக்க முடியுமா?” என கேட்டான் ராகவ். ஆருத்ராவும் சாதனாவும் தீவிரமாய் யோசித்தார்கள்.

 

“கண்டு புடிக்கலாம்.. ஆனா அவங்க சிஸ்டம் அண்ட் சர்வர் அச்செஸ் பண்ணா தான் முடியும்” என்றாள் ஆரு. 

 

“ஆரு முதல்ல ஸ்னப் அப்ல எப்படி ஹக் ஆகி இருக்குன்னு கண்டு புடிங்க.. அதுக்குள்ளே நாங்க மத்த கம்பெனில உங்களோட விசாரிக்க பெர்மிசன் வாங்கிடறோம்..” என மித்திரன் கூறிட இருவரும் சம்மதமாய் தலையசைத்தார்கள். 

 

“ஓகே நாங்க ஸ்னப் அப்ல என்ன ஆச்சுன்னு முதல்ல பாத்துட்டு சொல்றோம்” என ஆரு கூறிட ராகவ்வும் மித்ரனும் நிம்மதி மூச்சு விட்டார்கள். ஒரு தடையமும் இல்லாமல் இருந்த கேஸ்சில் எப்படி ஆரம்பிப்பதே என்று தெரியாமல் சுற்றிக் கொண்டு இருந்தார்கள். இப்பொழுது பிள்ளையார் சுழி போட்டதை நினைத்தே அவர்களுக்கு சற்று இளைபாராக இருந்தது. 

 

“ஓகே ஆரு நாங்க இப்போ கிளம்புறோம், சாரி..” என்று அசடு வழிந்தான். அவனுக்கே அவளிடம் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்று நெருடலாக இருந்தது. ராகவ் லேசான புன்னகை உடன் அனைவரிடமும் தலையசைக்க நான்கு பேரும் புன்னகைத்து கையசைத்தார்கள். யுகி தான் நம்பர் வாங்காமல் விட்டோமே என்று வருந்தினாள்.

 

“இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சிக்குறேன்” என்று ஆரு செல்லமாக மித்திரனை மிரட்ட, “வச்சிக்காத கட்டிக்க..” என்று கூறி கண்ணடித்து சென்றான். உதட்டை கடித்து வரும் வெட்கத்தினை அவள் தடுக்க பார்க்க வாசல்வரை சென்ற மித்ரன் மீண்டும் அவளிடம் வந்து அவன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த நிச்சய மோதிரத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவளின் மென்கரத்தினை பற்றியவன் மோதிரத்தை அணிவிக்க அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் ஆரு.

 

“சீக்கிரம் எனக்கு போட்டு விடு” என்றவன் அவனின் கையை நீட்டி நிற்க லேசான சிரிப்புடன் மோதிரத்தை போட்டு விட்டாள். அவளை சந்திக்கும் நொடி மோதிரத்தை போட்டு விடவேண்டும் என்று நினைத்தவன் ஆசை ஆசையாய் டெல்லியிலிருந்து வாங்கி வந்தான். ஆருத்ரா காதருகே குனிந்தவன், “நம்ம பாதி புருஷன் பொண்டாட்டி ஆகிட்டோம்.. அப்போ அதுக்கான வேலைய..” என்று அவன் முழுதாய் முடிக்கும் முன்னே வெட்கத்தில் அவனை தள்ளி விட்ட ஆருத்ரா கண்ணாலே அவனை மிரட்டினாள். “பாய் பொண்டாட்டி” என்று சத்தமாய் கூறியவன் அங்கு இருந்து கிளம்பினான். அவன் செயலில் ராகவ் முதற்கொண்டு எல்லாரும் சிரித்தார்கள். மித்திரன் இன்னும் மாறாமலே இருக்கிறான் என்று நினைத்தான் ராகவ். 

 

ஆருத்ராவிற்கு தான் கன்னம் சிவந்து விட்டது.. அவனின் வார்த்தைகளை நினைக்க நினைக்க முகமே சூடாவது போல் உணர்ந்தாள். 

 

ராகவ்வும் மித்திரனும் காரில் ஏறிட இம்முறை ராகவ் வண்டியை ஓட்டினான். இவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை மாறி தீவிர யோசனையில் மூழ்கினான் மித்திரன். “என்ன யோசிக்கிற?” என கேட்க,

 

“எனக்கு என்னமோ இந்த கேஸ் நம்ம எதிர்பார்க்காத விஷயம் கிட்ட கொண்டு போக போகுதுன்னு தோணுது. கண்டிப்பா இதுல பொது மக்கள் டார்கெட் இல்ல” என்று மித்திரன் கூறிட ராகவ்வும் யோசனையில் மூழ்கினான்.

 


   
ReplyQuote

You cannot copy content of this page