About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 9 💖
சந்தனாவிற்கும் ஷோபனாவிற்குமான நட்பு நாளுக்குள் நாள் நெருங்கிக்கொண்டே போனது. இருவரும் தங்களது அலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக்கொண்டனர்.
தினமும் பார்த்துப் பேசும்போது குடும்பம், மருத்துவமனை என இருவரது பேச்சும் தொட்டு நீளும். இங்கு வந்து கிடைத்த முதல் நட்பு என்பதால் சந்தனா ஷோபனாவிற்கு மனதிற்கு நெருக்கமாகிப் போனாள்.
அடுத்த வாரம் ரஞ்சனுக்குப் பிறந்தநாள் என ஷோபனா தோழியை அழைத்திருக்க, அவளும் வருவதாய் ஒப்புக் கொண்டிருந்தாள். கணவனுக்குத் தெரியாது அவனுக்கு எதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என சந்தனாவிடம்தான் என்ன வாங்கிக் கொடுக்கலாம் எனக் கேட்டாள். இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்து அவனுக்குப் பரிசு பொருளை வாங்கிவிட்டனர்.
“தேங்க் யூ சந்தனா... கண்டிப்பா இந்த கிஃப்ட் அவருக்கு ரொம்ப பிடிக்கும். உங்களோட ஐடியா சூப்பர்!” என ஷோபனா மகிழ்ச்சி ததும்பிய குரலில் உரைக்க, சந்தனா அவளை இளம் புன்னகையுடன் பார்த்தாள்.
“உங்க ஹஸ்பண்ட் மேல ரொம்ப அன்பா இருக்கீங்க நீங்க. இதே போல எப்பவும் சந்தோஷமா இருங்க...” என அவள் வாழ்த்த, ஷோபியின் முகம் மலர்ந்து போனது.
“அவர்தான் என் உலகமே. என்னமோ தெரியலை, ஒரு சிலரைப் பார்த்ததும் பிடிக்கும். பட், இவர் கூடப் பழகலை நான். பார்க்க கூட சந்தர்ப்பம் எதுவும் அமையலை. ரெண்டுமே இல்ல. பட் ஐ லவ்ட் ஹிம் அ லாட். ஏன்னுத் தெரியலை. எந்த நம்பிக்கையில மூனு வருஷம் அவருக்காக வெயிட் பண்ணேன்னு தெரியலை. அவரே அப்போ அப்போ கேட்பாரு சந்தனா. என்கிட்ட பதில் இல்ல. பட், அவரை மட்டும்தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரோட முகத்துல சிரிப்பை பார்க்குறதுக்காக என்ன வேணா பண்ணலாம்னு ஒரு எண்ணம். இதெல்லாம் ப்யூர்லி அவருக்காகத்தான் சந்தனா!” என்றவளின் பேச்சில் கணவன் மீதான காதல் நிரம்பி வழிந்தது. சந்தனாவிடம் பேச்சே இல்லை. அமைதியாய் அவளைப் பார்த்தாள்.
“என்ன டாக்டரம்மா அமைதியா இருக்கீங்க?”
“ஒன்னும் இல்ல. உங்களோட காதல் ரொம்ப அழகானது மட்டுமில்ல. ஆத்மார்த்தமானது கூட. என் கண்ணே பட்டுடும் போல. சுத்திப் போட்டுக்கோங்க!” என்றாள் உண்மையான குரலில். மற்றவள் புன்னகைக்க,
“சரி சந்தனா, நாளைக்குப் பார்க்கலாம். எனக்கு இன்னைக்குத்தான் பேக்கிங் க்ளாஸ்க்கு லாஸ்ட் டே. இதை முடிச்சிட்டா, நிம்மதியா இருக்கும்...” என ஷோபி விடை பெற, அவளையே சில நொடிகள் பார்த்த சந்தனா தனது மகிழுந்தை நோக்கி நகர்ந்தாள்.
ஒரு வாரம் கடந்திருந்தது. காலையிலே பெற்றவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து போயிருந்தான் ரஞ்சன். இந்த பிறந்த நாளில் மட்டும்தான் மகன் தங்களுடன் இல்லையென ரஞ்சனின் தாய் ஏக வருத்தத்தோடு பேச, இவன் அவர்களை சமாதானம் செய்து அழைப்பைத் துண்டித்தான்.
“ஹேப்பி பெர்த் டே டாடி...” என காலையிலே தந்தை முகத்தை எச்சில் செய்தான் அஷ்வின். அவனைத் தூக்கி தானும் முத்தமிட்டவன், மனைவியைத் தேடி சமையலறை நோக்கிச் செல்ல, அவள் இவனைக் கவனித்தும் கண்டு கொள்ளவில்லை. வேலையில் மும்மரமாக இருந்தாள்.
“ஷோபி...” ரஞ்சன் சென்று நிற்க, “எழுந்துட்டீங்களா? ரெண்டு நிமிஷம் காபி தரேன்...” என சில பல நிமிடங்களில் அவனுக்குக் குளம்பியைக் கொடுத்தாள். எதுவும் பேசாது புன்னகையுடன் எடுத்துக்கொண்டவனின் பார்வை மனைவியைக் குறுகுறுக்கச் செய்தது.
“என்ன வேணும் அஷூப்பா?” எனக் கணவனிடம் கேட்டவள், திரும்பவே இல்லை.
“மம்மி... டேடி பெர்த் டே டுடே. விஷ் ஹிம்...” சின்னவன் கத்த, ஷோபனா பாவமாய் ரஞ்சனைப் பார்த்தாள்.
“சாரி ரஞ்சன்...சாரி. சாரிங்க, நான் மறந்துட்டேன்!” எனப் பொய்யாய் அசடு வழிந்தவளின் மீது இவனது ரசனைப் பார்வை ஆசையாய் வருடியது. அந்தப் பார்வையில் திணறியவள், “நிஜமா மறந்துட்டேன் ரஞ்சன்...” என்றாள். இவனது முகம் மலர்ந்தது.
“பரவாயில்லை ஷோபி. மறந்துட்டாலும், காலைல சீக்கிரமே எழுந்து குளிச்சிட்டு இவ்வளோ குக் பண்ணி வச்சிருக்கீயே டி... நீ மறந்துட்டன்றதை நான் நம்பிட்டேன்!” நமுட்டுச் சிரிப்பு சிரித்தவனைப் பார்த்தவளின் முகம் சிவந்து போனது.
“போங்க... போங்க!” அவள் பொய்யாய் கோபம் கொள்ள,
“ஒரு வருஷமாவது என் பெர்த்டேவை மறந்த மாதிரி உண்மையா நடிப்பியா ஷோபி?” எனக் கேலியாய் கேட்டான். ஆனாலும் மனம் நிறைந்திருந்தது. ஒவ்வொரு வருடமும் இவன் பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்பே என்னென்ன செய்ய வேண்டும் எனப் பட்டியலிட்டு அது இதுவென அந்நாளை சிறப்பாய் மாற்றிவிடுவாள் மனைவி. அவளது மெனக்கெடல்கள் முழுவதும் அவன் மீதான அன்பே கொட்டிக் கிடக்கும்.
“இந்த ஜென்மத்துல நடக்க வாய்ப்பில்லை போங்க...” என அவள் சமையலைத் தொடர, ரஞ்சன் மகனைத் திரும்பிப் பார்த்தான். இவர்கள் இருவரையும்தான் அவன் பார்த்திருந்தான்.
“அஷூ... அப்பா போன்ல கேம் விளையாடலையா?” அவன் கேட்டதும் சின்னவன் துள்ளிக் குதித்து ஓட, ஷோபனா கணவனை முறைக்க, பின்னிருந்து மனைவியை அணைத்தான் ரஞ்சன்.
“இப்போ எதுக்கு அவன்கிட்டே ஃபோனைக் கொடுத்தீங்க?” அவள் கேட்க, “இதோ... இதுக்குத்தான்!” என அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவளது முறைப்பு மென்மையாய் மாறியது.
“தேங்க்ஸ் டி பொண்டாட்டி...” என மீண்டுமொரு முத்தத்தை அவளது மறுகன்னத்தில் இட்டான். ஒட்டியிருந்த கொஞ்ச முறைப்பும் ஷோபியிடமிருந்து விடை பெற, அவனது முகம் மலர்ந்து போனது. கணவனின் முகத்தை ஆசை ததும்ப பார்த்திருந்தாள் ஷோபனா.
“ஏன் ஷோபி இவ்வளோ செய்யணுமா?” சுகமாய் சலித்தபடி கேட்டான் ரஞ்சன். அவளிடம் பேச்சில்லை.
“உன்கிட்ட தான் டி கேக்குறேன்...” அவன் மனைவி கன்னத்தோடு இழையவும், அவளது கையிலிருந்த கரண்டி தடுமாறியது.
“ப்ம்ச்... என் புருஷனுக்காக நான் செய்றேன்!” என்றாள் காதலாய்.
“அதான் ஏன்... எதுக்கு என் மேல இவ்வளோ காதல், பாசம் எல்லாம்?” எனக் கேட்டவனைப் பக்கவாட்டாய்த் திரும்பிப் பார்த்தவள், “தெரியலையே...” என உதட்டைப் பிதுக்கினாள்.
“போடி...” என அவன் நகர, கையைப் பிடித்திழுத்தவள்,
“ஹேப்பி பெர்த்டே அஷூப்பா...” என்றாள் ஆசையாய். இவனது அகமும் முகமும் நிறைந்து போனது.
எதுவும் கூறாது அவளையே பார்த்தான் ரஞ்சன்.
“என்னையே பார்த்துட்டு இருக்காம போய் உங்கப் பையனை ஸ்கூலுக்கு கிளப்புங்க. நீங்களும் குளிச்சி முடிச்சு ரெடியாகுங்க. கோவிலுக்குப் போகணும்...” என்றாள். நேற்றே மாமியார் கோவிலுக்குப் போக வேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தார்.
“அம்மா சொன்னாங்களா?” அவன் சின்ன புன்னகையுடன் வினவ, “ஆமா... நேத்தே சொல்லிட்டாங்க. கோவிலுக்குப் போய் உங்க பேர்ல ஒரு பூஜை போட்றலாம், அத்தைக்காக!” என்றாள். சரியென்று தலையை அசைத்தவன், தானும் குளித்துவிட்டு மகனையும் பள்ளிக்குத் தயார் செய்தான்.
இருவரும் உணவு மேஜையில் அமர்ந்ததும், ரஞ்சனுக்கு லேசாய் தலையே சுற்றியது.
“என்னடி இவ்வளோ குக் பண்ணியிருக்க? எப்போ டி எழுந்த?” என ஆச்சர்யமாய்க் கேட்டான்.
அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “ஆராய்ச்சி பண்ணாம சாப்டுங்க மிஸ்டர் ரஞ்சன்...” என அவன் தட்டை நிரப்பினாள். மகனது தட்டும் கொஞ்சம் நிரம்பியது.
“இவ்வளோ சாப்ட்டா, ஆஃபிஸ் போய் தூங்கிடுவேன் டி. பரவாயில்லையா?” மனைவியை வம்பிழுத்தாலும் அவள் செய்தவற்றை ஆசையாய் உண்டான் ரஞ்சன். அப்படியே அவளையும் அருகே அமர்த்தி ஊட்டிவிட்டான். மறுக்காமல் மனைவியும் சாப்பிட்டாள். இடையிடையே அஷ்வின் வேறு ‘ஆ’ காண்பிக்க அவனது வாயிலும் உணவு ஊட்டப்பட்டது.
மூவரும் கிளம்பி அருகேயுள்ள கோவிலுக்குச் சென்றனர். ரஞ்சன் தாயின் அறிவுறுத்தலின்படி அவனது ராசி, நட்சத்திரம் கூறி பூஜை செய்ய சொன்னாள் ஷோபனா. சிறிது நேரம் கோவிலில் அமர்ந்தவர்கள், பின்னர் வீட்டிற்கு வந்தனர்.
ஷோபனா இறங்கிக் கொள்ள, ரஞ்சன் மகனைப் பள்ளியில் விட்டுட்டு அலுவலகம் நோக்கி நகர்ந்தான். கோவிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிடக் கூடாதென மதியத்திற்கு மட்டுமே இறைச்சி சமைத்து கணவனுக்கும் மகனுக்கும் டப்பாவில் அடைத்துக் கொடுத்துவிட்டாள்.
சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை கணவனுக்காக அணிச்சல் செய்ய வேண்டும் என எண்ணியவாறே வீட்டிற்குள் நுழைந்தாள். கொஞ்சம் வீடு அலங்கோலமாகக் கிடக்க, அவற்றை சுத்தம் செய்தவள், சற்று ஓய்வெடுத்துவிட்டு வேலையைத் தொடங்கினாள்.
இரண்டு மாதம் கண்ணும் கருத்துமாய்க் கற்றுக் கொண்டவை இந்த ஒரு நாளுக்காகத் தானே என பொறுமையாய் இரண்டு மணி நேரம் செலவழித்து அணிச்சலை செய்து முடித்திருந்தாள். முகம் முழுவதும் திருப்தி படர, அதை புகைப்படம் எடுத்து சந்தனாவிற்கு அனுப்பி வைத்தாள்.
சில நிமிடங்களிலே எதிர்ப்புறமிருந்து செய்தி வந்து விழுந்தது. “ரொம்ப நல்லா வந்திருக்கு ஷோபி. உங்களோட அன்புதான் இதுல அதிகமா இருக்கு. உங்க ஹஸ்பண்ட்க்கு ரொம்ப பிடிக்கும்...” என அவள் அனுப்பியிருக்க, இவளுக்கு முகம் மலர்ந்து போனது.
சந்தனாவிற்கு ஒரு நன்றியைத் தெரிவித்தவள், மறக்காது மாலை வந்துவிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியிருந்தாள்.
மதிய உணவை உண்டுவிட்டு அருமை என ரஞ்சன் மனைவிக்கு அழைத்துப் பாராட்டவும், அவளது உள்ளம் நிறைந்து போனது. அவளும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் உறங்கி எழுந்தாள். மாலையானதும் அஷ்வின் பள்ளி முடிந்து வந்துவிட்டான். அவனுக்கு புதிய உடை ஒன்றை மாற்றி அவனைத் தயார் செய்தவள், தானும் புதுப்புடவை ஒன்றை உடுத்தினாள்.
கட்டிலுக்கு அடியில் கணவனுக்குத் தெரியாது ஒளித்து வைத்திருந்த நெகிழிப்பையைத் திறந்தாள். வண்ண வண்ண புகைப்படச் சட்டங்கள் இருந்தன. அனைத்தும் அவளும் அவனும்தான். அஷ்வினும் அவர்களுள் அடக்கம்.
சிரிப்புடன் அதைத் தொட்டுத் தடவியவள், எடுத்து ஒவ்வொன்றாய் மாட்ட, அஷ்வின் அவளுக்கு உதவினான். தாயும் மகனும் சிரிப்புடன் அனைத்தையும் மாட்டினர். அவனை தொலைக்காட்சி முன்பு அமர்த்திவிட்டு விரிந்திருந்த கூந்தலை பின்னி பூ வைத்தாள். ரஞ்சனுக்கு ஷோபனாவைப் புடவையில் அத்தனைப் பிடிக்கும். அவன் வாய் மொழியாகப் பலமுறை கேட்டிருக்கிறாள். அதனாலே அவன் ஆசையாய் எடுத்துக் கொடுத்த அயிரை நிறப் புடவையை உடுத்தியிருந்தாள். அது அவளைப் பாந்தமாய் தழுவியிருந்தது.
தன்னை அலங்கரித்தவள் நேரம் பார்க்க, அது ஐந்தானது. அலைபேசியை எடுத்து சந்தனாவிற்கு அழைத்தாள்.
“சொல்லுங்க ஷோபி...” அவள் அழைப்பை ஏற்க, “எங்க இருக்கீங்க சந்தனா?” என இவள் வினவினாள்.
“இப்போதான் அப்பார்ட்மெண்ட் வந்தேன் ஷோபி. ஒரு ஹாஃப் அன் அவர். நாங்க வந்துட்றோம்...” எனக் கூறி அவள் அழைப்பைத் துண்டிக்க, ஷோபனா இரவு உணவை ஒரு
உணவகத்தில் முன்பதிவு செய்தாள். ஏழு மணிக்கு வந்து வீட்டில் கொடுக்குமாறு அவள் கூறியிருந்தாள். கூடவே சில இனிப்புகளையும் வரவழைத்தாள்.
முதன்முதலாக மாமியார் இல்லாது அவளாய் இத்தனையும் செய்திருக்கிறாள். ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் மறுபுறம் ஏதேனும் குறை இருந்துவிடக் கூடாது என மனம் அடித்துக் கொண்டது. எனவே ஒரு தடவைக்கு இரண்டு தடவை அனைத்தையும் சரி பார்த்து முடிக்க, மனம் திருப்தியடைந்தது.
***
காலையில் சந்தனா மகிழ்ச்சியுடன் கிளம்பினாள். மனோவுடன் விளையாட, தாய் அனுமதி கொடுத்ததும் அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை.
இருவரும் வந்ததும் தீனா அவளிடம் ஓடி வந்தான்.
“குட்டி... பல் வலி சரியாகிடுச்சா? உனக்கு சாக்லேட் வச்சிருக்கேன் நான்!” என அவன் இன்னெட்டை நீட்ட, பூரணி மகளைக் கேள்வியாகப் பார்த்தார்.
“இல்ல தீனா, பல்லு வலி சரியாகலை. அதனால எனக்கு சாக்லேட் வேணாம்...” என சின்னவள் பதிலுரைக்க, பெற்றவளின் மனம் கனத்துப் போனது. தனக்காகவென மகள் பொய்
உரைத்திருக்கிறாள் எனப் புரிந்தது. வருத்தமிருந்தாலும், ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேல் தனக்குத் தெரியாமல் மகள் இந்த வீட்டில் உள்ளவர்களிடம் எதையும் வாங்கி உண்ண மாட்டாள் என்ற நிம்மதி பிறந்தது.
அவளது கன்னத்தைத் தட்டியவர், “போய் விளையாடு குட்டி...” என்றார் வாஞ்சையாக.
“சரிம்மா...” எனத் துள்ளி குதித்தவள், புத்தகப் பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு தீனாவுடன் சென்றாள்.
“குட்டி இன்னைக்கு என்ன விளையாடலாம்?” என அவன் ஆர்வமாய் வினவ, “நேத்து விளையாண்ட மாதிரி ஒளிஞ்சு பிடிச்சு விளையாடலாமா?” அவள் கூறினாள்.
“சரி ஓகே, நீதான் ஃப்ர்ஸ்ட் கவுண்ட் பண்ணணும்...”
“போ... நீ கண்ணை மூடு. நான் ஒளியுறேன்...” என அவள் அடமாய் நிற்க,
“சரி, சா பூத்ரி போடலாம். யாரு ஜெய்க்குறாங்களோ அவங்க ஒளியணும். உனக்கு ஓகே வா?” தீனா கேட்க, இவள் சமாதான உடன்படிக்கைக்கு வந்தாள்.
“தீனா, மனோ எங்க? அவனையும் வர சொல்லு. விளையாடலாம்...” சின்னவள் வீட்டையே எட்டிப் பார்த்தாள். நிமிர்ந்து சாளரத்தையும் பார்த்தாள். அவன் எங்குமே தென்படவில்லை.
“மனோவை மாமா ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போய்ட்டாரு. அவன் வீட்ல இல்ல?” தீனா கூற, இவளுக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது.
“எப்போ வருவான் அவன்?” சந்தனா கேட்க, உதட்டைப் பிதுக்கினான் மற்றவன். காலையிலிருந்த உற்சாகம் அவளிடம் வடிந்திருந்தது. நேற்றைக்கு அவன் தனியாய் அமர்ந்திருந்த விதம் இவளுக்கு வருத்தமாய் இருக்க, இன்றைக்கு அவனையும் தங்களுடன் விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளலாம். அவன் சந்தோஷப்படுவான் என எண்ணி வந்தவள், ஏமாந்து போயிருந்தாள்.
தீனா அவள் முகத்தையே பார்த்திருக்க, ஆர்வமே இல்லாது அவனுடன் விளையாடிவிட்டு பள்ளிச் சென்றுவிட்டாள். மாலை அவள் வந்தப்போது கூட மனோ வீட்டில் இல்லை. கொஞ்சம் அவன் மீது கோபம்கொண்டாள் சின்னவள்.
தீனா மணல் வீடு கட்டி விளையாடுவோம் என அவளை அழைக்க, மற்றதை மறந்தவள் அவனுடன் அமர்ந்து வீடு கட்டத் தொடங்கினாள்.
“குட்டி... யாரு வீடு பெருசா கட்றான்னு பார்ப்போம்...” என தீனா பாதி மணலை வாரியிறைத்து வீடு கட்ட, இவளும் அவனுக்கு சளைக்காது வீட்டைக் கட்டினாள். இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும்
போது உமாநாதனும் மனோவும் வீட்டிற்கு வந்தனர். அவனுடைய காலிலிருந்தக் கட்டு மாற்றப்பட்டிருக்க, கையில் ஒரு ஊன்றுகோல் வைத்திருந்தான்.
மருத்துவரை சந்தித்து அவனது உடல் மற்றும் மனநலத்தை அறிந்திருந்தார் உமாநாதன். முன்னைவிட அவனது உடல்நலம் நன்றாய் தேறியிருந்தது. காலில் முறிந்திருந்த எலும்பு மெதுவாய் கூடத் தொடங்கியிருக்க, இவருக்கு மனம் முழுவதும் ஆசுவாசம் பிறந்தது. இன்னும் ஆறு மாதத்தில் அவன் காலில் சிறப்பு காலணியோடு யார் உதவியுமின்றி நடக்கலாம் என அவர் கூற, இவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மருத்துவரிடம் நன்றியுரைத்துவிட்டு இருவரும் வீடு சேர்ந்தனர்.
“மனோ, வந்துட்டியா நீ?” என தீனா அவனை நோக்கி ஓட, சந்தனா எழுந்து நின்றாள்.
காலையிலிருந்து அலைந்தது மனோவுக்கு உடல் சோர்வை உண்டு பண்ணியிருந்தது. அதுமட்டுமின்றி ஊடுகதிர் எடுப்பதற்காக காலை அங்குமிங்கும் அசைத்தது வலியை கொடுத்தியிருக்க, அழக்கூடாது என வைராக்கியமாய் இருந்துவிட்டான். காலை அசைக்க முடியவில்லை. ஊன்று கோல் உதவியுடன் அவன் நடக்க, உமாநாதன் மறுபுறம் மகனைத் தாங்கிக்கொண்டார். அவர்களது அரவம் கேட்டு வெளியே வந்த சதாம்பிகா, அருகே வந்தார்.
“என்னங்க, டாக்டர் என்ன சொன்னாரு?” என வினவியவர், மகனின் ஊன்று கோலைப் பார்த்தார்.
“உடைஞ்ச எலும்பு சேர ஆரம்பிச்சிடுச்சு. அதனால இனிமே ஸ்டிக் வச்சு மெதுவா நடக்கலாம்!” என அவர் கூற, சதாம்பிகாவின் முகம் மலர்ந்தது.
நடந்து கொண்டிருந்த மனோ லேசாய் கல்தடுக்கி கீழே விழச் செல்ல, உமாநாதன் தாங்கிப் பிடித்திருந்தார். இருந்தும் அவனின் காலில் அடிபட்டுவிட, கண்ணெல்லாம் கலங்கி கண்ணீர் வந்துவிட்டது.
“மனோ... என்னாச்சு டா, பார்த்து வா!” சதா பதறிப்போனார். கட்டிடாத கையை மகனின் தோளில் வைத்தார். சிறிய எலும்பு முறிவு எனினும், அவரது வயது காரணமாக சதாவின் எலும்பு கூட சற்றே நாட்கள் எடுத்தன. இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என மருத்துவர் உரைத்திருக்க, மனைவியை அலைய வைக்க வேண்டாம் என உமாநாதன் மகனுடன் மருத்துவமனைச் சென்று வந்தார்.
“மனோ... வலிக்கிதா. ஏன் டா அழற?” தீனா அவன் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைக்க, இவன் தலையை இடம் வலமாக அசைத்தான். ஆனாலும் கண்ணில் நீர் நிற்கவில்லை. சந்தனா அவனது முகத்தைதான் பார்த்தாள். அவன் அழுததும் இவளுக்கும் விழிகள் கலங்கின.
அவர்கள் உள்ளே நுழைய, இவள் அமைதியாய் வாசலில் அமர்ந்துவிட்டாள். கூடத்தில் என்ன நடக்கிறது என இவளது விழிகள் உள்ளே நோக்கின.
“மனோ... நீ மேல ரூம்ல இருக்க வேணாம். இனிமே எழுந்து டெய்லி நடக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதனால எப்பவும் போல கீழ இருக்க ரூம்லயே இருந்துக்கோ டா...” என உமாநாதன் கூற, மகன் தலையை மட்டும் அசைத்து வைத்தான்.
“பூரணி.... நாளைக்கு மனோ ரூம்ல இருக்க திங்க்ஸை எல்லாம் கீழே இருக்க ரூம்ல மாத்தி வச்சிடுங்க...” சதா பூரணியிடம் கூற, தலையை அசைத்தார் அவர்.
“ஐ, மனோ... அப்போ நம்ப ரெண்டு பேரும் இன்னைக்கு ஒன்னா தூங்கலாம்...” தீனா கூற, மனோ புன்னகைத்தான்.
பூரணி வேலையை முடித்துவிட்டு வர, சந்தனா மனோவின் முகத்தையே பார்த்திருந்தாள். அவன் இவளைக் கவனிக்கவில்லை. சற்றே அவளது நினைவு பின்னகர்ந்திருந்தது.
“குட்டி... பையை எடுத்துமாட்டு. போ...” என்றவர் காலணியைப் போட, இவள் அவனைப் பார்த்தவாறே பள்ளிப் பையைத் தூக்கித் தோளில் போட்டாள்.
இரண்டெட்டு நடந்த பூரணி, “குட்டி... எத்தனை தடவை சொல்லி இருக்கேன். மண்ணை இங்க வரைக்கும் வாரி வைக்காதன்னு. அந்தம்மா பார்த்தா திட்டுவாங்க...” என்றவர் விளக்குமாறை எடுத்து மண்ணை ஓரமாய் தள்ள, இவள் பார்வை மீண்டும் வீட்டினுள்ளே சென்றது.
அப்போது தீனாவும் அவளைப் பார்த்தான். “குட்டி... பாய், நாளைக்கு வீடு கட்டலாம்!” என அவன் கையை அசைக்க, மனோவின் பார்வையும் அவளிடம் திரும்பியது.
“குட்டி பாய்...” என அவனும் கையை அசைக்க, இவளது முகம் மலர்ந்து போனது.
“பாய் தீனா... பாய் மனோ...” என பற்கள் தெரிய புன்னகைத்தவள், தாயுடன் கிளம்பிச் சென்றாள்.
மறுநாள் காலை மணி ஆறாகியிருக்க, பூரணி வட்ட வட்டமாய் பனியாரங்களை சுட்டு அடுக்கிக்
கொண்டிருந்தார். மகள் இன்னும் எழாது சுகமாய் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்க, அவளை இத்தனை விரைவாய் எழுப்புகிறோம் என தினமும் அவருக்கு வருத்தம்தான். ஆனாலும் அவரது வேலை நேரம் அவ்வாறு இருக்க, வேறு வழியின்றி பெருமூச்சை வெளியிட்டவர், “குட்டி... மணி ஆறாச்சு பாரு... எழுந்திரி டி...” என்றார்.
சந்தனா மறுபுறம் திரும்பிப்படுத்தாள். உறக்கம் பாதி கலைந்திருந்தது. “குட்டி...” இவர் மீண்டும் அதட்டலிட, மகள் கண்ணைக் கசக்கிக்கொண்டே எழுந்தமர்ந்தாள்.
பனியார வாசனை மூக்கைப் துளைக்க, “ம்மா... பனியாரம் செய்றியா?” என குடுகுடுவென அவரிடம் ஓடி வந்தாள். அவள் முகத்திலிருந்த சிரிப்பிற்காகத்தானே பூரணியின் இந்த மெனக்கெடல்கள் எல்லாம். நேற்றைக்கு தீனா கொடுத்த இன்னெட்டை அவள் தனக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக வாங்கவில்லை, பொய் கூறினாள் எனத் தெரிந்ததும் மனம் கனத்தது. அதற்காகத்தான் காலையிலே அவளுக்கென்று பனியாரம் செய்தார்.
“ஆமா டி... போ, போய் குளிச்சிட்டு வந்து சாப்டு...” என அவர் கூற, “ஒன்னே ஒன்னு மா...” என ஆசையாய் ஒன்றை வாயில் எடுத்துப் போட்டாள். அதன் தித்திப்பு அடிநாக்கு வரை கரைய, “சூப்பரா இருக்கு மா...” என்றாள் சப்புக் கொட்டி.
“பல்லை விளக்காம என்னடி பழக்கம் இது...போ, போய் பல்லு விளக்கி குளிச்சிட்டு வா...” என பூரணி கூற, படுத்தப் படுக்கையை எடுத்து வைத்தவள், அவசரமாய் குளித்து முடித்துவிட்டு, வந்து ஆசையாய் பனியாரம் சாப்பிட்டாள்.
மகள் உண்பதை வாஞ்சையுடன் பார்த்திருந்தார் பூரணி. அவர் குளிக்கச் செல்ல, இவளுக்கு தீனாவிற்கும் மனோவிற்கும் பனியாரம் கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
பூரணி அவர்களிடமிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது என்று தானே கூறியிருக்கிறார். அவர்களுக்கு இவள் திண்பண்டம் கொடுக்கலாம் எனத் தோன்ற, தாய்க்குத் தெரியாது நான்கு பனியாரங்களை டப்பாவில் அடைத்தாள். அவர் குளித்துவிட்டு வர, இருவரும் கிளம்பினர்.
மனோவிற்கு பனியாரம் கொடுத்து அவனுடன் விளையாட வேண்டும் என்ற எண்ணம் சின்னவளுக்கு மனம் முழுவதும் இருந்தது. அவனுக்கு கால் வலி எப்படி இருக்கிறதென கேட்க வேண்டும் என்ற சிந்தனையோடு சதா வீட்டை நோக்கி நடையிட்டாள்.
தொடரும்...
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page