All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் - 2

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

 

அத்தியாயம் 2

தென்னவன் மல்லிகா தம்பதியரின் மகன் ஆதிரையன் மகள் நிகழ்மதி.

ஆதிரையன் இருபத்தி ஒன்பது வயது வாலிப இளைஞன்.  பெயருக்கென்று ஒரு டிகிரியை மட்டும் படித்தவன். சிறு வயதிலிருந்தே தன் நண்பர்களோடு கேளு கிண்டல் விளையாட்டு இதிலே அவனின் முழு கவனமும் இருந்திருக்க படிப்பு என்பது அவனுக்கு சுத்தமாக ஆகாத ஒன்றாகிப் போனது.

தென்னவனுக்கு விவசாயமே உயிர் மூச்சு. மகன் சரியாக படிக்காமல் போய்விட்டானே சரி விவசாயத்தையாவது பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தன்னோடு மகனை இணைத்துக் கொண்டார். முதலில் இந்த விவசாயத்தில் பிடிப்பில்லாமல் தான் சுற்றி வந்தான். பின் அவனுக்கே அதில் ஒரு ஆர்வம் வந்து விட்டது. அதற்காக புதுமையாக எதையாவது வித்தியாசமாக விவசாயம் செய்கிறேன் என்று செய்யாமல் இருக்கிறதை மட்டுமே நல்லபடியாக நடத்திக் கொண்டு வருகிறான்.

அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மையான நிலங்கள் இவர்களுக்கு சொந்தமானது. பருவத்திற்கு ஏற்றவாறு வேளாண்மை செய்து கொள்வார்கள் நெல் கரும்பு சோளம் இப்படி.

ஒரு புறம் விவசாயம் மறுபுறம் நிலத்தில் தோப்புகளாக வைத்திருந்தனர். தோப்பு என்றால் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் அல்ல முப்பது ஏக்கருக்கும் மேலாக இருந்தது. அதில் அனைத்து வகையான மரங்களுமே வளர்த்து பராமரிக்கப்பட்டனர். ஆதிரையன் சிறுவயதிலேயே அந்த தோப்பை தென்னவன் உருவாக்கி இருந்ததால் இப்பொழுது அவர்களுக்கு நல்ல பலன் கொடுத்துக் கொண்டிருந்தது.

மாதத்திற்கு லட்சக்கணக்கில் வருமானம் கொடுக்கும். இதில் வருட கணக்கு என்றால் சொல்லவா வேண்டும். அவர்களுக்கு இன்னொரு வருமானமும் உண்டு அது கால்நடைகள்.  ஊரின் எல்லைப் பகுதியில் மிகப் பெரிய பண்ணை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். குறைந்தது ஐம்பது மாடுகள் ஆவது அங்கு இருக்கவே அதற்கு தேவையான உணவுகளும் தன் நிலங்களிலேயே விளைவித்துக் கொள்வார்கள். அந்த கால்நடைகளை பார்த்துக் கொள்வதற்கு பத்து பேர் அந்த பண்ணையில் தங்கி வேலை செய்வார்கள். அதில் இருக்கும் வருமானமும் தென்னவனை செல்வப் செழிப்பில் நான் திகைக்க வைத்தது. அந்த செழிப்பு தான் ஆதிரையனை மிதப்பு கொள்ள வைத்தது.

தான் படிக்கவில்லை என்றால் என்ன ? தனக்காக தான் அவ்வளவு சொத்துக்களும் வருமானமும் வருகிறதே என்ற எண்ணம். அந்த எண்ணத்திலே அவன் பணத்தினை தண்ணியாகத்தான் செலவு செய்தான். தென்னவனுக்கு பிடிக்காத ஒரு விஷயம் இது ஒன்று தான்.

மகன் முழுமையாக கல்லூரி படிப்பை முடிப்பான் என்று பார்த்தால் மூன்று வருடம் படித்தாலே தவிர அதிலும் எத்தனை அரியரோ யாருக்கு தெரியும். சரி தன்னோடு தன் தொழிலையாவது பார்த்துக் கொள்வான் என்று நினைத்தால் அதிலும் தனக்கு தெரியாமல் அவன் சில கெடுபிடிகளை உருவாக்கி தான் அறியாது பணத்தினை எடுத்து செலவு செய்கிறான் என்பதை புரிந்துக் கொண்டும் தடுக்க இயலாது தடுமாறினார்.

ஆனால் தினம் தினம் அவனுக்கு அர்ச்சனை என்பது நடந்து கொண்டு தான் இருக்கும். ஆதிரையனோ அதனை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவான். அவனுக்கென்று அந்த ஊரில் ஒரு பட்டாளமே இருக்கிறது இளைஞர் அணியின் தலைவனே அவன் தான்.

தண்ணீர் போல் பணத்தை செலவு செய்வது அவனுக்கு மட்டும் அல்ல. அவனின் பட்டாளத்திற்கும் சேர்த்து தான். வாரத்தில் ஒரு நாள் தன் தோப்பு வீட்டில் நண்பர்களோடு சரக்கடிப்பது, நினைத்த நேரங்களில் எல்லாம் காரினை எடுத்துக்கொண்டு எங்கேயாவது வெளியூர் சென்று வருவது வாழ்க்கையை ரசித்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான் ஆதிரையன்.

தென்னவன் மனமோ, அவன் சந்தோஷமாக இருக்கட்டும் இல்லையென்று யார் கூறினார் ? பொறுப்பாகவும் இருக்க வேண்டும் அல்லவா ! அந்த எண்ணத்தோடு தான் தினமும் வசைப் பாடிக்கொண்டே இருப்பார்.

நிகழ்மதி கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறாள். அருகில் இருக்கும் டவுன் என்பதால் தினமும் இஸ்கூட்டியிலேச் சென்று வருவாள். சற்று கொலு கொலுத்த உடம்பு. அதுவோ அவளுக்கு பேரழகை கொடுத்தது. பப்ளி குட்டி என்று தான் அவளின் தோழிகள் சிறு வயதில் அவளை அழைப்பார்கள். அப்படித்தான் இருந்தால் அதீத உடல் பருமன் கொண்டவள் அல்ல போதுமான உடல் எடை கொண்டவள். கன்னங்கள் புசுபுசுவென்று பார்த்ததுமே கிள்ளி விடத்தான் துடிக்கும் . பாலாடை போன்ற அவளின் வெளீர் சர்மம் அவளைக் காணும் ஆண்கள் அனைவரையும் ஈர்த்து விடும்.

பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி அவளுக்கென்று ஏகப்பட்டவர் காதல் கொண்டு அவளிடம் வெளிப்படுத்த, அவளோ அதனை தூசியாக தட்டி விடுவாள். அவளின் மனதில் அப்பொழுதிலிருந்து இப்போது வரை ஏன் இந்த நொடி வரை மனதில் சிம்மாசனம் இட்டு அழியாது அமர்ந்த ஒருவன் உதயன் மட்டுமே !

தென்னவனின் உடன் பிறந்த தங்கை மல்லிகா. அவரை அருகில் இருக்கும் சின்னதுரை என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். இப்பொழுது அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மல்லிகாவை மணம் முடித்துக் கொடுத்த வீட்டில் மூத்த மருமகள் அஞ்சம்மாள் அவரின் மகன் தான் உதயன். ஆதிரையனும், உதயனும் ஒரே வயது கொண்டவர்கள். இரு குடும்பத்தையும் எப்பொழுதுமே உறவும் நட்பும் இணைத்துக்கொண்டு தான் இருந்தது இந்த நாள் வரை. ஆனால் இப்பொழுது உறவு மட்டுமே இருக்க நட்பு இருவருக்கும் விரிசலை கொடுத்து விட்டது.

இந்த வீட்டில் இன்னும் இருவர் இருக்கிறார்கள் அவர்கள் தென்னவனின் பெற்றோர் இப்பொழுது அவர்கள் இருவரும் ஆன்மீக சுற்றுலாச் சென்று இருக்கிறார்கள்.

அடர்ந்து பறந்த வானத்தில் தன் இளஞ்சிவப்பு நிறக் கதிர்களை வெளி வீசி தன் விழி திறந்து வெளிச்சத்தைக் கொடுத்தது ஆதவன்.

அந்த காலைப்பொழுது கிராமத்தில் உள்ள அனைவருமே வழக்கம் போல் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர். ஊரின் எல்லையில் தனியாக மூன்று ஏக்கர் நிலங்களோடு ஒரு வீடு சாலையோரம் இருந்தது. அந்த வீட்டில் இருந்து சாம்பிராணியின் வாசம் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று நறுமணத்தோடு வீசிக் கொண்டிருந்தது.

பொன்னி பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க, அந்த மணியோசை கேட்கும் சத்தத்தில் விழி திறந்தால் யுகனிகா.

அவளின் விழிகள் நேராக அங்கிருந்த ஜன்னலை தான் கண்டது. அந்த ஜன்னல் வழியே வெளிச்சம் நன்றாக தென்படவே விடிந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். தனது கூந்தலை கொண்டையாக சுருட்டி அவள் படுத்திருந்த பாயை மடக்கி அந்த அறையின் ஒரு ஓரத்தில் வைத்தாள்.

அந்த அறையின் ஜன்னலை திறக்கவே ஆதவனும் அவளுக்கு சிறப்பாக குட் மார்னிங் என்று கூறுவதுப் போல் அதன் வெப்ப கதிர்வீச்சை அவளின் கன்னங்களில் செலுத்தியது.

சட்டென கன்னங்கள் சூடேறியதும் முகத்தை ஒரு புறமாக திருப்ப , சாம்பிராணியின் வாசத்தை நுகர்ந்துக் கொண்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அந்த அறையில் இருந்த குளியலறைக்குள் நுழைந்தவளோ தன் காலை கடன்களை முடித்து விட்டு  அறையை விட்டு வெளியே வந்தாள்.

சரியாக அப்பொழுது தான் பூஜைகளை முடித்து விட்டு சமையல் அறையில் காலை உணவினை தயாரித்துக் கொண்டிருந்தார் பொன்னி.

"அம்மா " என்க,

"எழுந்திருச்சிட்டையா. இரு கொஞ்ச நேரம் காஃபி போட்டு தரேன் " என்றார்.

"அப்பா எங்கம்மா ?"

"அவரு வழக்கம் போல கத்திரிக்காய் பறிக்க போயிட்டாரும்மா. வெள்ளன பறிச்சிட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு போனா தானே நல்ல விலை இருக்கும் "

"ஐயோ ! ஆமால இன்னைக்கு கத்திரிக்காய் பறிக்கணும் சொன்னதை நான் மறந்து போயிட்டேன். சரிம்மா நான் போய் அப்பாவுக்கு உதவி பண்ணுறேன் "  என கூறியவாறு விலக முயற்சிக்க,

"அதெல்லாம் வேண்டாம்மா, ஏற்கனவே உங்க அப்பா ஒரு ரெண்டு ஆள கூப்பிட்டு தான் பறிச்சிக்கிட்டு இருக்காரு. அவரே அதெல்லாம் பார்த்துப்பாரு. நீ காஃபி குடிச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு " என்கவே, அதே நேரம் வீட்டின் பின்புறத்தில் ஒரு ஓரத்தில் கொட்டகையில் இருந்த மாடுகளோ கத்த ஆரம்பித்தது.

"இது ஒன்னு அதுக்குள்ள கத்த ஆரம்பிச்சுடும். என்ன அவசரமோ இத்தனைக்கும் காலையில் எழுந்து தண்ணி காட்டிட்டு தான் போயிருக்காரு  அதுக்குள்ள கத்துறத பாரேன் " என்று பொன்னி புலம்பவே, அன்னை கொடுத்த காஃபியை வாங்கிப் பருகினாள்.

"அம்மா எனக்கு இன்னும் நேரம் இருக்கு. அப்பா வரதுக்குள்ள நான் மாட்டுக்கு புல் எல்லாம் போட்டு தொழுவத்தை கிளீன் பண்ணி விடுறேன். அதுக்கப்புறம் வந்து குளிச்சி கிளம்பி போறேன். இங்க பக்கத்துல தானே சீக்கிரம்  போயிரலாம் " என்றதும், அவள் முடிவெடுத்து விட்டால் தாங்கள் என்ன கூறினாலும் கேட்க மாட்டாள் என்பதை பொன்னி அறிந்து வைத்திருந்தார்.

"சரிம்மா உன் விருப்பம் போல பண்ணு. நேரம் ஆயிடுச்சின்னா வந்துரு. உங்க அப்பா வந்து பார்த்துப்பாரு. இல்லன்னா வேலையை முடிச்சிட்டு நான் போய் பார்த்துக்குறேன் " என்க, சரி எனக் கூறி காஃபியை குடித்து முடித்து தொழுவத்துக்குச் சென்றாள்.

அங்கே மூன்று மாடுகளும் ஒரு கன்றுக்குட்டியும் இருந்தது. பால் கறக்கும் கறவை மாடு இரண்டு. நிறைமாதப் பசு ஒன்று.

அந்த இடத்தை சுத்தம் செய்து அதற்கான தீவனத்தையும் போட்டவளோ மணியைக் காண இப்பொழுது பள்ளிக்குச் செல்ல கிளம்பினால் சரியாக இருக்கும் என நினைத்து மீண்டும் ஒரு முறை தொழுவத்தை சுற்றிப் பார்த்து விட்டு முன்புறம் வந்தாள்.

அதே நேரம் புல்லட் ஓசைக் கேட்டது. அந்த சத்தம் கேட்ட நொடியே உதயன் வந்து விட்டான் என்பதை புரிந்துக் கொண்டவளோ பார்வையை வாசல் புறம் செலுத்த சுற்றி பென்சிங் போட்டு இருந்தது.

புல்லட்டிலிருந்து இறங்கிய உதயன் கையில் ஒரு பையோடு அந்த கேட்டினை உரிமையோடு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

அவனை வரவேற்கும் விதமாக வாசலில் நின்றிருந்த யுகனிகா மென் சிரிப்போடு தலையசைத்து வரவேற்றாள்.

அவளை நோக்கி வந்தவனும், " என்ன மேடம் இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பல போல " என்றுக் கேட்கவே,

"இதோ இனிமே தான் கிளம்பணும். வாங்க உள்ள " என்று வரவேற்க, அவளின் பின்னோடு அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

தன் மகள் யாரிடமும் பேசியவாறு வரவே சமையலறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த பொன்னி உதயன் வந்திருப்பதைக் கண்டதும் வேகமாய் தன் ஈரக் கரங்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு அந்த சின்ன ஹாலுக்கு வந்தார்.

"வாங்க தம்பி வாங்க, என்ன ஒரு வாரமா இந்த பக்கம் வரவே இல்ல. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா. இருங்க தம்பி நான் காஃபி போட்டு கொண்டு வரேன் " என்க,

"ஐயோ அதெல்லாம் வேண்டாம்மா. பரவாயில்ல இருக்கட்டும் வீட்டுக்கு காய்கறி எல்லாம் தீர்ந்துப் போச்சு காய்கறி வேணும்னு சொன்னாங்க. அதான் சரி வாங்கிட்டு போகலாம் அப்படின்னு வந்தேன். எங்க அப்பாவை காணும் ? "

"அவரு பின்னாடி கத்திரிக்காய் பறிச்சிட்டு இருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல பறிச்சு முடிச்சுட்டு வந்துருவாரு "

"அப்படியா சரி சரி நான் டவுனுக்கு தான் போறேன். கொண்டாங்க நான் வேணா கத்திரிக்கா மூட்டையை கொண்டு போறேன். எதுக்கு அப்பா ஒரு தடவை போய்க்கிட்டு ரெண்டு செலவு. நான் கொண்டு போயிடுறேன் " என்றதும்,

"உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம் " என்றார் பொன்னி.

"இதுல என்ன சிரமம் இருக்கு. அப்போ நான் உங்க வீட்டு பிள்ளை இல்லையா. என்ன யுகனிகா அம்மா இப்படி எல்லாம் பேசுறாங்க நீயாவது அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம்ல "

"சரி ஓகே நீங்க உங்க விருப்பம் போலவே செய்யுங்க. கொஞ்ச நேரத்துல அப்பா வந்துடுவாரு அப்பா கிட்டையும் நீங்க நேரா பேசிக்கோங்க. சரி எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன் " எனக் கூறி தன் அறை நோக்கிச் சென்றாள்.

"கொண்டாங்க தம்பி நேத்து சாயங்காலம் தான் எல்லா காயுமே பரிச்சி எடுத்து வைச்சேன் " என்க, அவனும் கொண்டு வந்த அந்த பையை பொன்னியிடம் கொடுத்தார்.

பொன்னி எப்பொழுதுமே வீட்டுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் இயற்கை முறையில் தன் தோட்டத்திலே பயிரிடுவது தான் அவரின் வழக்கம். தன் வீட்டுக்குப் போக மீதி இருப்பதை வீட்டு செலவுக்காக வித்து விடுவார். இவரிடம் மருந்தடிக்காது இயற்கையான காய்கறிகள் கிடைக்கவே அந்த ஊர்காரர்கள் அனைவரும் வந்து வாங்கிச் செல்வர்.

அப்படித்தான் அடிக்கடி தன் வீட்டில் காய்கறி தீர்ந்து விட்டதும் உதயனின் அன்னை அவனிடம் ஒரு பையை கொடுத்து விடுவார். அவனும் எந்த காய்கறிகள் இருக்கிறதோ அனைத்தையும் கொடுத்து விடுங்கள் என்று வந்து பொன்னியிடம் கொடுத்து விடுவான். எப்படியும் ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது வாங்க வந்து விடுவான்.

அன்றும் அதற்கு தான் வந்திருந்தான். அது போக யுகனிகாவிடம் பேச வேண்டி இருந்தது. அவளின் அன்னை வேறு இருக்க வேண்டாமென நினைத்தான். தன் கையில் இருந்த பையனை அவரிடம் கொடுத்ததும் அவரும் சமையல் அறைக்குச் சென்று விட ஹாலில் அமர்ந்தவாறு தன் கைபேசியை சிறிது நேரம் நோண்டிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது பின்னே இருந்த தோட்டத்தில் வேலையை முடித்துக் கொண்டு, வேலைக்கு வந்த ஆட்களையும் அனுப்பி விட்டு மூட்டையை வாசலில் வைத்து உள்ளே நுழைந்தார் உத்தமன்.

 

 

கருத்துகளை தெரிவிக்க

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/

This topic was modified 1 month ago 3 times by VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்

   
ReplyQuote

You cannot copy content of this page