About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அன்பு – 5 💖
“ஷூ லேஸ் ஒழுங்கா கட்டலை மனோ. கீழே விழுந்துடாத” சந்தனா அதட்டியபடியே மகனைப் பின் தொடர, அவன் அதை அசட்டை செய்தான். வேடிக்கைப் பார்த்துக்
கொண்டே நடந்தவன், எதிரில் வரும் நபர் மீது இடித்துவிட, அவர் தடுமாறி சுவரைப் பிடித்து நின்றான்.
“சாரி சார், சாரி சார்!” சந்தனா அவன் தோளைத் தொட்டுப் பிடித்துப் பின் பதறிப் போய் விலக, “இட்ஸ் ஓகே...” என சிந்தனையிலிருந்த ரஞ்சன் அவளைப் பார்த்ததும் புன்னகைத்தான். அவளும் சங்கடமாய் உதடுகளை விரித்தாள். அவளுக்குத் தன்னை அடையாளம் தெரியவில்லை என்றுணர்ந்தவன், “டாக்டர், நான் ரஞ்சன், நேத்து என் பையனுக்கு பீவர்னு உங்களைப் பார்க்க வந்தோம்” என்றான் நினைவுப்படுத்தும் விதமாக.
“யெஸ், ஞாபகம் வந்துடுச்சு சார், பையன் இப்போ எப்படி இருக்கான்?” எனக் கேட்டவளின் முகத்தில் ஸ்நேக பாவம் படர்ந்தது.
“நல்லா இருக்கான்ட டாக்டர் . பீவர் குறைஞ்சுடுச்சு!”
“நல்லது சார்...” என்றுவிட்டு குனிந்து மனோவின் காலணியின் கோப்பிழையை (shoe lase) சரி செய்துவிட்டாள்.
முன்னே இருந்த மின்தூக்கியின் தானியங்கி கதவு திறந்து கொள்ளவும், மூவரும் அதில் நுழைந்தனர்.
தரைதளப் பொத்தானை ரஞ்சன் அழுத்திவிட்டு கீழே செல்லக் காத்திருந்தான். அசாத்திய அமைதி நிலவ, “உங்கப் பையனா டாக்டர்?” என அவளைப் பார்த்து பார்த்துக் கேட்டவனுக்கு அவள் தலையசைப்பைக் கொடுக்க, எட்டி மனோகரின் கன்னத்தைக் கிள்ளினான். சின்னவன் வெடுக்கென இவன் கையைத் தட்டிவிட, “மனோ... என்ன பழக்கம் இது?” என மகனை முறைத்தவள், “சாரி சார்...” என சங்கடமாய் ரஞ்சனைப் பார்த்தாள்.
“இட்ஸ் ஓகே டாக்டர், சின்னப் பையன் தானே?” ரஞ்சன் ஒரு தோள் குலுக்கலில் அதைப் புறந்தள்ளினான்.
“குகேஷ் காலிங்!” சந்தனா கைபேசி இசைக்க, திரையை அழுத்திக் காதில் கொடுத்தவளின் முகம் கனிந்து போயிருந்தது.
“மம்மி... ஐ மிஸ் யூ!” மழலைக் குரலில் இன்னுமே இவளது முகம் முழுவதும் புன்னகைதான். ரஞ்சன் செவியையும் அது தவறாமல் எட்டியது போல. ஆனாலும் அசையாது கவனத்தை மட்டும் இங்கே வைத்தான்.
“என் செல்லத்தை நானும் ரொம்ப மிஸ் பண்றேன் டா!” இவள் கூற, “ம்மா... நானும் பப்பி, டாடியை மிஸ் பண்றேன். கொடுங்க நான் பேசணும்...” மனோ அலைபேசியை எட்டி அவளிடமிருந்து பறித்தான்.
“பப்பி... எப்போ என்னைப் பார்க்க வர்ற நீ? டாடி மேல நான் கோபமா இருக்கேன்...” இவன் பாவனையாய்க் கூற, சந்தனா மகனை வாஞ்சை மிகப் பார்த்திருந்தாள். குகேஷ் எனப்பட்டவனின் கைக்கு அலைபேசி இடம் பெயர, “டாடி, ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ, ஐ ஹேட் யூ டூ...” என்றான். இவளது உதடுகளில் முறுவல் பிறந்தது.
“போதும் டா... போனை கொடு!” என அவனிடமிருந்து கைபேசியைப் பறித்தவள், “ஒரு வழியா சார்க்கு என் நம்பருக்குப் போன் பண்ண மனசு வந்துடுச்சு போல?” என் புன்னகையுடன் கேட்டாள்.
மறுபுறம் பேச்சில்லை. அவன் முகத்தை உர்ரென்று வைத்திருப்பான் என நினைத்தவளின் வதனம் மெதுவாய் மலர்ந்தது.
“அதான் போன் பண்ணிட்டீயே. அப்புறம் என்ன மௌன விரதம்? பேசலாம்ல?” இவள் பேசும் போதே மின்தூக்கியின் கதவுகள் திறந்தன. மகனின் கையைப் பிடித்தவாறு அவள் வெளியேறிவிட, ரஞ்சன் அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு நகர்ந்தான். பேசுவது அவள் கணவன் என்றதும் அவளது முகம் மலர்ந்திருக்கக் கூடும் எனத் தலையை அசைத்தவாறு அவன் நகர்ந்திருக்க, சந்தனா பள்ளி வாகனம் வந்து நிற்கும் இடத்திற்கு வந்தாள்.
நேற்று வாகனத்தில் ஏதோ பழுதென ஓட்டுநர் புலனக் குழுவில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கவே, இவள் தெரிந்த ஒருவரை அழைத்து மகனை பள்ளியில் விடச் சொல்லிப் பணித்திருந்தாள். இன்று பழுது நீக்கப்பட்டதென காலையிலே வரிசையாய் செய்தி கைபேசித் திரையை நிறைத்தன.
“பாப்பா எப்படி இருக்கா?” இவள் கேட்க, “ஹம்ம்... நல்லா இருக்கா” என்றது மறுபுறம்.
“நீ எப்படி இருக்க?”
“இருக்கேன், இருக்கேன்!” சலிப்பாய் வந்தது அவனது குரல்.
“ஏன் இவ்வளோ சலிச்சுக்கிற குகா?” எனக் கேட்டவளின் குரலில் அவன் மீதான அன்பு கொட்டிக் கிடந்தது. அதை அமைதியாய் உள்வாங்கியவன், “தெரியலை சந்து, உங்களை ரொம்ப தேட்றேன். பார்க்கணும் போல இருக்கு!” என்றான் சோர்வாய்.
“என்னாச்சு, ஏன் வாய்ஸ் டல்லாகிடுச்சு. அங்க எதுவும் பிரச்சனையா?”
“இல்ல, இல்ல. பிரச்சனை எதுவுமில்லை. உங்க ஞாபகம் வந்துடுச்சு!” என்றதும் இவளிடம் மென்னகை விரவியது.
“கிளம்பி வர வேண்டியது தானே? அதான் வீக் ஆஃப் எல்லாத்தையும் பொக்கிஷமா சேர்த்து வச்சிருப்பீயே” கிண்டலாய் உரைத்தாள்.
“வரவா?”
“என்ன டா கேள்வி, முதல்ல கிளம்பி வா. பப்பியும் கூட்டீட்டு வா. என்னைப் பார்க்காம அவ ஏங்கிப் போய்ருப்பா. தாயையும் பிள்ளையும் பிரிச்ச பாவம் உனக்கு வர வேணாம்...” என்றாள்.
“நிஜமா வரவா?”
“டிக்கெட்டைப் புக் பண்ணிட்டு கால் பண்ணு குகா!” இவள் அழைப்பைத் துண்டித்து, எதிரே வந்த பள்ளி வாகனத்தில் மகனை ஏற்றி அனுப்பிவிட்டு மகிழுந்தை உயிர்பித்து மருத்துவமனையை அடைந்தாள்.
பத்து மணிக்கு மேல்தான் அவளுக்கு முன்பதிவுகள் இருந்தன. அதனால் தளர்வாக அமர்ந்து கோப்புகளைப் புரட்ட, “மேடம், அப்பாய்ன்மெண்ட் இல்லாம ஒருத்தவங்க உங்களைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க...” என செவிலியர் கூற, “யெஸ் வர சொல்லுங்க...” எனத் தலையை இவள் அசைத்ததும், ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டதும் இவளுக்குப் பளிச்சிட்டது. நேற்றைக்கு வந்தவர்தான்.
முகம் சோர்ந்து எங்கேனும் தனக்கான ஒரு வெளிச்சம் சிறு புள்ளியாய்த் தென்பட்டு விடாதா என்ற ஆசை அவரது கண்களில் கொட்டிக் கிடந்தது. “உட்காருங்க...” என இழுத்தவள் நினைவடுக்கைத் தட்டி அவரது பெயரை நினைவு கூர்ந்தாள்.
“உட்காருங்க செல்வி, எப்படி இருக்கீங்க?” எனப் புன்னகையுடன் கேட்டாள். அந்தப் பெண்மணி பதிலளிக்கவில்லை. அவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். கன்னத்தில் கைத்தடம் இருந்தது.
“உங்க ஹஸ்பண்ட் அடிச்சாரா உங்களை?” இவளுக்கு கோபம் வந்தது. என்ன மனிதன் இவனென மனம் வெதும்பியது. அவர் பதிலுரைக்காது வெறிக்கவும், பெருமூச்சை வெளிவிட்டவள் தனக்கென வீட்டிலிருந்து எடுத்து வந்த குளம்பியைக் குவளையில் நீட்டி அவர்புறம் நகர்த்தி வைத்தாள்.
“செல்வி, இதை முதல்ல குடிங்க. காலைல எதுவும் சாப்டலையா நீங்க?” எனக் கேட்க, அவர் குவளையைத் தொடவில்லை. அவரது கண்ணில் உவர்நீர் வடிந்தது.
“அழறது எல்லாத்துக்கும் தீர்வாகிடுமா சொல்லுங்க? நம்ம நினைச்சா உலகத்தையே மாத்தலாம். உங்களோட வாழ்க்கையை உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாத்த முடியாதா என்ன? எல்லாத்தையும் பேசிக்கலாம். முதல்ல எனக்காக இந்த டீயைக் குடிங்க...” என அவரது கையில அழுத்தம் கொடுத்தாள் சந்தனா. அந்தப் பெண்மணி கண்ணீரைத் துடைத்துவிட்டு தேநீரைப் பருகினார். அவர் ஆசுவாசம் செய்ய நேரம் கொடுத்தவள், “உங்களுக்கு என்னென்ன ஷேர் பண்ணணும்னு தோணுதோ, எல்லாத்தையும் என்கிட்ட சொல்லுங்க. ட்ரஸ்ட் மீ, என்னையும் உங்களையும் தவிர யார்கிட்டேயும் விஷயம் போகாது...” என்று அவரைப் பேச ஊக்கினாள்.
முதலில் தயங்கியவர் பின்னர் மெதுவாகப் பேச்சைத் துவங்கினார். நேற்று இவருக்குப் பேய் பிடித்திருக்கலாம் என்று உறவினர் ஒருவர் பேச்சைக் கேட்டு சாமியார் ஒருவரிடம் அழைத்துப் போக, அவர்தான் பேய் ஓட்டுவதாகக் கூறி அடித்திருக்கிறார் என செல்வி கூறியதும் சந்தனாவுக்கு கோபம் வந்ததுதான்.
இந்த நவீன யுகத்தில் இன்னுமே இப்படி மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்களே என ஆற்றாமை பொங்கியது. பெண்கள் எத்தனை துறைகளில் முன்னேறி சாதித்தாலும் இன்னும் இது போல குடும்ப வன்முறைகளில் சிக்கி வெளிவர முடியாது தவிக்கின்றனர்.
அவளிடம் சிகிச்சைக்கு வந்த பத்தில் எட்டு பேர் இதுபோல குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள்தான். ஒரு நச்சு உறவிலிருந்து வெளிவரவும் முடியாது அதிலே தங்கவும் முடியாது இருதலை கொள்ளி எறும்பாக தவித்தவர்கள் ஏராளம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சரிசமம்தான் இதில். தன் துணைவி சரியாய் அமையாது அல்லலுற்றோர் அநேகம். சிந்தனை அங்கிங்கு தாவினாலும், அதை இழுத்துப் பிடித்து முன்னே இருப்பவரிடம் குவித்தாள்.
செல்வி மடை திறந்த வெள்ளமென அனைத்தையும் கொட்ட, கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு மனம் கனத்துப் போனது. முதலில் அவரிடம் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும் என்ற நோக்கில் பேசியவள், அவரை வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினாள். இந்த உலகத்தில் தனக்கென ஒரு வேலையும் அதிலிருந்து வரும் பணம் தரும் சுதந்திரத்தை யாராலும் தந்துவிட முடியாது என்றாள். செல்விக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற முனைப்பிருந்தது. கணவனை எண்ணித் தயங்க, அவரது தயக்கத்தை உடைத்து சரியென தலையை அசைக்க வைத்தாள். எல்லா நேரமும் குடும்பத்தைச் சுற்றியே நகரும் சிந்தனையை, தன்னலத்திற்காக கொஞ்சம் செலவிடுங்கள் எனப் போதித்து அவரை அனுப்பி வைத்தவள் நேரத்தைப் பார்க்க, அது பத்து முப்பதை கடந்திருந்தது.
அடுத்ததாக முன்பதிவு செய்தவர் உள்ளே நுழைய, அவரிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு பேசத் தொடங்கினாள். அறுபது வயது முதியவர் அவர். சைசோப்ரீனியா என்னும் மனநோயால் பாதிக்கபட்டிருந்தார் அவர். சில மாதங்களுக்கு முன்புதான் சிகிச்சைக்கு வந்திருந்தார்.
மனைவி இறந்ததும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது அவருக்கு மனபிறழ்வு ஏற்பட்டிருந்தது. அவர் பேசும்போது மனைவி மீதான வாஞ்சைக் கொட்டிக் கிடந்தது. தான் பேச்சைக் கேட்கும் ஒரு செவிக்காகத்தான் ஏங்கிக் கிடந்தேன் என்பது போல தங்களது திருமண வாழ்வைப் பகிர்ந்தவரை இவள் அன்பாய் பார்த்தாள். அவரது பேச்சிலே தெரிந்தது, இருவரது உலகமும் தங்கள் இணையைச் சுற்றித்தான் நகர்ந்திருக்கின்றன என்று. திடீரென்று மனைவியின் இழப்பை ஈடுகட்ட முடியாது மனதும் உடலும் தளர்ந்து போய் அமர்ந்திருந்தார். கூறியதையே திரும்ப திரும்ப உரைப்பவரை அவதானித்தவளுக்கு அவர் நோயின் தீவிரம் புரிந்தது. அதை விட வீட்டாட்களின் ஒதுக்கலும் ஒரு காரணம் என உணர்ந்தாள்.
அதைப் பற்றி கேட்கவும், அவர் பேச்சைத் தொடர்ந்தார். மருமகள் பேரனை இவரிடம் பேசக் கூடாதெனவும், பார்க்கக் கூடாதெனவும் கூறியிருப்பதாய் சொல்லி வருத்தப்பட்டவரின் கண்கள் பளபளத்திருந்தன. அவரிடம் பேசி சமாதானம் செய்து, அவர் மகனைதான் அழைத்துப் பேசினாள். ஏனோ மருமகளைவிட மகனிடம் இவருக்குறிய மருந்து இருப்பதாய் ஓர் எண்ணம். இவர் தந்தையை சரியாய் கவனிக்கவில்லை என்பதாய் அவளுக்கொரு எண்ணம். மருந்து மாத்திரை மட்டுமே ஒரு நோயின் தீவிரத்தைக் குறைப்பதில்லை. அன்பும் அரவணைப்பும் முக்கியம் என்பது அவளது சித்தாந்தம்.
அவர் மகனிடம் பேசி புரிய வைத்து, அவரது மனநோய்க்காக மாத்திரையையும் பரிந்துரை செய்திருந்தாள். முதலில் வாரத்திற்கு ஒருமுறை இவளைப் பார்த்து செல்வார் பெரியவர். அவரது மனநிலையில் நல்ல மாற்றம் தென்பட, மாதத்திற்கு ஒருமுறை என மாற்றினாள் சந்தனா. அந்த மாதாந்திர பரிசோதனைக்காகத்தான் வந்திருந்தார் பெரியவர்.
இப்போதெல்லாம் ஞாபகம் மறதி வரவில்லை என்றும் பேரனுடன் நிறைய நேரம் செலவிடுவதாகவும் உற்சாகத்துடன் கூறுபவரை அமைதியாய் சின்ன சிரிப்புடன் பார்த்தாள். பின்னர் அவரது மருந்து மாத்திரையால் ஏதும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா எனக் கேட்டு, இல்லையென்பதை உறுதி செய்து, அதே மாத்திரைகளையே தொடர்ந்து சாப்பிட வலியுறுத்தி அனுப்பி வைத்தாள்.
***
“என்ன மனோ, எதுக்கு கூப்பிட்ட? சாப்பிட எதுவும் எடுத்துட்டு வரவா?” சதா வினவினார்.
“அத்தை, அதெல்லாம் ஒன்னும் வேணாம். நானும் அவனும் விளையாடப் போறோம். டிஸ்டர்ப் பண்ணாதீங்க!” தீனா இடைபுகுந்து உரைக்க, சதாம்பிகா மென்முறைப்புடன் நகர்ந்தார். சந்தனாவிற்கு உயிரே திரும்பி வந்தது போலிருந்தது. கண்ணீரை அழுந்தத் துடைத்தாள்.
“இந்தா உன் பட்டம், அழாத நீ!” தீனா அவள் கையில் பட்டத்தைத் திணிக்க, “எனக்கு ஒன்னும் வேணாம்...” என்றவள் பூனை நடைபோட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். சதா அவரது அறைக்குள் சென்று மறைந்ததும், குடுகுடுவென படிகளில் இறங்கி வெளியே வந்து பொத்தென அமர்ந்தவளின் இதயம் தாறுமாறாய்த் துடித்தது. இன்னும் கண்களில் உவர் நீர் மிச்சமிருந்தது.
எப்படியோ அவர்கள் கண்ணில் தப்பாமல் வந்துவிட்டாள். மனோ தான் வந்ததை அவனது தாயிடம் கூறிவிடுவானோ எனப் பயத்தில் மீண்டும் கண்கள் கலங்கின. அவளது பக்கத்தில் அரவம் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள். தீனா வந்தமர்ந்தான்.
“சாரி, உன் பட்டத்தை நீயே வச்சுக்கோ...” அவன் கையை நீட்ட, இவள் கோபத்தில் முகம் திருப்பினாள். அவள் தன்னால் தான் அழுகிறாள் என இவனுக்கு வருத்தமாகியது.
“உன் பேர் என்ன?” தீனா கேட்க, சந்தனா பதிலளிக்கவில்லை. தான் அணிந்திருந்த சட்டையைத் தூக்கி முகத்தைத் துடைத்தவள், வெளியே வேடிக்கைப் பார்த்தாள்.
“நம்ப ஃப்ரெண்ட்ஸ் ஆகிடலாமா? உனக்கு சாக்லேட் எடுத்துட்டு வந்தேன்!” அவனுடைய கரம் முன்னே நீள, சந்தனா திரும்பி பார்த்தாள். அடர்நீல வண்ணத்தில் உறையிட்டிருந்த இன்னட்டைப் பார்த்ததும் நாவில் எச்சில் ஊறியது. தாய்க்குத் தெரிந்தால் திட்டுவாள் என ஆசையை அடக்கிக்
கொண்டாள்.
“உனக்கு வேணாமா இந்த சாக்லெட்டு? டேஸ்டா இருக்கும். நட்ஸ், சாக்கோசிப்ஸ் எல்லாம் இருக்கும்!” ஆசையைத் தூண்டினான் அவன்.
“குட்டி, யார்கிட்ட பேசுற?” பூரணி வெளியே எட்டிப் பார்த்தார். தீனாவைக் காலையிலே கவனித்து, சொந்தக்காரப் பையனாக இருக்கக் கூடுமென எண்ணினார். அவர்தான் சந்தனாவின் தாய் என உணர்ந்தவன், “ஆன்ட்டி, குட்டிக்கு சாக்லேட் கொடுத்தேன். வாங்க மாட்றா, வாங்கிக்க சொல்லுங்க...” என சின்னவன் கூற, சந்தனா ஆசையாய் தாய் முகம் பார்த்தாள். பூரணிக்கு மறுக்கத் தோன்றவில்லை. தலையை மட்டும் அசைத்தார்.
அதில் சின்னவளின் முகம் பூவாய் மலர, தீனாவின் புறம் திரும்பி அவன் கையிலிருந்த இன்னட்டை வாங்கி ஆர்வமாய் பிரிக்க, பூரணி உள்ளே சென்றுவிட்டார்.
அவள் இன்னட்டை ரசித்து ருசித்து உண்ண, “நீ இந்த சாக்லேட் சாப்ட்டது இல்லையா?” என அவன் கேட்டான்.
“இல்லையே!” உதடு பிதுக்கினாள் சின்னவள்.
“ஏன்?”
“அம்மா வாங்கித் தர மாட்டாங்க. காசிருக்காது அவங்ககிட்டே. ரொட்டி மட்டும் எப்பவாது வாங்கித் தருவாங்க...”
“அப்பாகிட்ட கேக்க வேண்டியது தானே?”
“அப்பா செத்துப் போய்ட்டாரு...” என்றவளின் குரலில் தந்தை மீதான ஏக்கம் தொனித்தது.
“சரி, நானே இனிமே உனக்கு டெய்லி சாக்லேட் தரேன்!” என்றவனை இவள் விழிகள் விரித்துப் பார்த்தாள்.
“நிஜமா வாங்கித் தருவீயா?” சற்று முன்னே நாவில் கரைந்த இனிப்பின் சுவை அவளது ஆசையை மேலும் கூட்டியது.
“ப்ராமிஸா வாங்கித் தரேன் குட்டி. பட், என் கூட நீ விளையாட வரணும். நாம சேர்ந்து விளையாடலாம்!” என்றான். சில நொடிகள் யோசித்தவள், “சரி... உன் பேரென்ன?” என அவனிடம் வினவினாள்.
“தீனா, குட்டி என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிற நீ?”
“நான் அஞ்சாவது படிக்கிறேன்...” இவள் கெத்தாய் சொல்ல, “நான் ஏழாவது, செவன்த் ஸ்டாண்டர்ட். உன்னைவிட பெரியவன்!” என அவன் அலட்டிக் கொண்டான்.
“நம்ம மண்ல வீடு கட்டி விளையாடலாமா? யாரு பெரிய வீடு கட்றாங்கன்னு பார்ப்போமா?” சந்தனா கேட்க, இவன் வேகமாய் தலையை அசைத்தான்.
“நான்தான் பெரிய வீடா கட்டுவேன்...” தீனா ஓடிப்போய் மணலைக் குவிக்கத் தொடங்க, சந்தனா மறுபுறம் சென்று வீட்டைக் கட்டத் தொடங்கினாள்.
அவள் அழகாய் கட்ட, தீனா எட்டிப் பார்த்தான். அவளுடைய வீட்டைப் போலவே இவனும் கட்டத் தொடங்கினான். சந்தனா குச்சிகளையெல்லாம் தேடி எடுத்து வீட்டின் மேற்கூரை அமைக்க, இவனும் அதே போல செய்தான்.
ஜன்னலில் இவர்களையே முறைத்துப் பார்த்திருந்த மனோ, “தீனா... இங்க வாடா!” எனக் கத்தி அழைத்தான்.
தீனா நிமிர்ந்து பார்க்க, அவன் கையை அசைத்தான். “குட்டி, நீ வீடு கட்டிட்டே இரு. நான் போய்ட்டு வந்துட்றேன்...” என இவன் குடுகுடுவென இரண்டிரண்டு படிகளாகத் தாவி மேலே சென்றான்.
“என்ன மனோ, என்ன டா?” இவன் கேட்க, “ரெண்டு பேரும் இங்க வந்து விளையாடுங்க...” என்றான் மனோ.
“இல்ல டா... மண்ல வீடு கட்டி விளையாட்றோம் டா. இங்க விளையாட முடியாது டா...”
“இங்க நிறைய டாய்ஸ் இருக்குல்ல. அதை வச்சு விளையாடலாம் வாங்க!” மனோ கூற, “போடா... டாய்ஸ் போர். குட்டி வீட்டுக்குள்ள வர மாட்டா. நான் விளையாடப் போறேன்...” என அவன் ஓட, மனோவின் முறைப்பு மற்றவனைத் தொடர்ந்தது.
சந்தனா அதற்குள் வீட்டைக் கட்டி முடித்திருந்தாள்.
அதைப் பார்த்த தீனா, “குட்டி, எனக்கும் மரக்குச்சி வேணும். நீ எடுத்துத் தரீயா?” என வினவினான்.
“சரி... நான் குச்சிப் பொறக்கித் தரேன்!” என அவள் நகர்ந்து குச்சிகளைத் தேடி எடுக்க, சரியாய் மேலிருந்து அவள்புறம் ஒரு கனமான பொம்மையைத் தூக்கியெறிந்திருந்தான் மனோ. நொடியில் அதிலிருந்து தப்பித்த சந்தனா அவனை நிமிர்ந்து முறைத்துப் பார்க்க, அவனும் இவளை முறைத்தான்.
“தீனா, உன் ஃப்ரெண்ட் என் மேல பொம்மையைத் தூக்கிப் போட்றான்...” என்றாள் புதியவனிடம்.
“மனோவா... அவன் பாவம், உடம்பு சரியில்லை. அதான் அப்படி நடந்துக்குறான். அம்மா கூட சொல்லிவிட்டாங்க. அவனை நல்லா பார்த்துக்க...” சந்தனா கேட்டுக் கொண்டே குச்சிகளை அவனது வீட்டின் மேலே அழகாய் அடுக்கினாள்.
“தீனா, சாப்பிட்டு போய் விளையாடு, வா...” சதா குரல் கொடுக்க, “வரேன் அத்தை...” என இவன் பதிலளித்தான்.
“குட்டி, நான் போய் சாப்ட்டு வரேன்...” என நடந்தவன், “நீ சாப்டீயா குட்டி?” என வினவினான். இயல்பாய் அந்தக் கேள்வி வந்திருந்தது.
“அம்மா காலைலயே ஊட்டிவிட்டாங்க. சாப்ட்டுட்டேன், மதியம் கறிசோறு செஞ்சுத் தரேன்னு சொல்லி இருக்காங்க!” என்றாள் உற்சாகமாய்.
“கறிசோறா?” அவன் விழிக்க, “ஆமா... அதான் கறியை சோத்துல போட்டு செய்வாங்க இல்ல. காபி கலர்ல இருக்குமே!” அவள் விளக்கமளித்தாள்.
“ஓ... பிரியாணியா? சரி...” என அவன் உள்ளே சென்றான்.
“என்ன டா இது? கை காலெல்லாம் அழுக்காக்கி வச்சிருக்க. போ, போய் வாஷ் பண்ணீட்டு வா” என அதட்டிய சதாம்பிகா தட்டில் உணவை எடுத்துக்கொண்டு மாடியேறினார்.
தீனா தன்னை சுத்தம் செய்து வந்து உண்ணத் தொடங்கினான். பூரணி பிரியாணிதான் சமைத்திருந்தார். சந்தானவின் நினைவு அவனுக்கு. அவளுக்கும் கொடுக்கலாம் என யோசித்தான். அத்தை திட்டினால் என்ன செய்வது என யோசித்தவன், அவருக்கு தெரியாமல் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தான்.
“மா, நான் கீழே தீனாவோட சேர்ந்து சாப்ட்றேன்...” என்ற மகனைப் பார்த்த சதாவுக்கு கண்கள் கலங்கின. இத்தனை நாட்கள் யாரையும் அருகில் விடாதவன் தீனா வந்ததும் மெல்ல மனம் மாறுகிறான் என உணர்ந்ததும் அவருக்கு நிம்மதி பிறந்தது.
“வா மனோ, கீழ போகலாம்!” என்றவர் பூரணியை அழைத்து உணவை கீழே எடுத்துச் செல்லப் பணித்தார்.
காலில் அவனுக்கென்று செய்யப்பட்ட சிறப்புக் காலணியை அணிந்தவன், ஊன்றுகோலை எடுத்து மெதுவாய் நடந்தான். படிகளில் இறங்கும்போது சதா மகனைத் தாங்கிக் கொண்டார்.
மெதுவாய் மிக மெதுவாய் நடந்து வந்து உணவு மேஜையில் அமர்ந்தான். “மனோ... பிரியாணி சூப்பரா இருக்கு டா. சாப்ட்றா...” என்ற தீனா உணவில் கவனமானான். மனோ எதுவும் கூறாது அமைதியாய் உண்ண, சதா அருகிலிருந்து அவனுக்கு உணவைப் பரிமாறினார். அவன் போதும் என அலறும்வரை இவர் விடவில்லை.
தீனா உண்டு முடித்தவன் மெதுவாய் சமையலறைக்குள் நுழைந்தான். பூரணி இல்லை என்பதை உறுதி செய்தவன், சிறிய டப்பாவில் பிரியாணியை அடைத்து மெதுவாய் வெளியே எட்டிப் பார்த்தான். சதா அறைக்குள் சென்றதைப் பார்த்தவன் வெளியே வர, அவர் மீண்டும் வந்துவிட்டார்.
“கைல என்ன டா?” அவர் கேட்டதில் திருதிருவென விழித்தவன், “ஸ்ட்ரீட்ல ஒரு டாக் அழகா இருந்துச்சு. அதுக்குப் பசிக்குமேன்னு கொஞ்சம் பிரியாணி எடுத்துட்டுப் போறேன் அத்தை...” என்றான் சமாளிப்பாய்.
“தூரமா இருந்து வச்சிட்டு வந்துடு டா. கடிச்சுகிடிச்சு வச்சுடப் போகுது. உங்கம்மாவுக்கு யார் பதில் சொல்றது?” என்றவரிடம் தலையை அசைத்துவிட்டு வெளியே சென்றான்.
“மனோ, ரூம்க்கு கூட்டீட்டுப் போகவா?” மகன் தலையைக் கோதினார் சதா. அவரது கையைப் பிடித்தவன், “நோ மா... கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன். நீங்க போங்க...” என அவரை அனுப்பி வைத்துவிட்டு வாசலையே நோக்கினான்.
“தீனா... வா, வா. உன் வீடு அழகா இருக்கு பாரு...” சந்தனா இருவருடைய வீட்டையும் ஒரே போல அலங்கரித்து இருந்தாள்.
“சூப்பரா இருக்கு குட்டி ...” என்றவன், “உனக்காக பிரியாணி எடுத்துட்டு வந்திருக்கேன்...” என அவளிடம் டப்பாவை நீட்டினான்.
“ஐ! கறி சோறா?” எனக் கேட்டு அதனை வாங்கச் சென்றவள், சில நொடிகள் தயங்கிவிட்டு, “வேணாம் தீனா, அம்மா திட்டும்!” என்றாள் சோகமாய்.
“ஆன்ட்டி திட்ட மாட்டாங்க. அப்போ சாக்லெட் எல்லாம் வாங்கிக்க சொன்னாங்க இல்ல. இதையும் வாங்கிக்கதான் சொல்வாங்க!” என்றான்.
“மேடம்க்கு தெரிஞ்சாலும் திட்டுவாங்களே!” அவள் சோகமாக சொல்ல,
“அத்தைக்குத் தெரியுமே. அவங்க ஒன்னும் சொல்லலை!” என்றான்.
“நிஜமாவா?”
“ப்ராமிஸா?” என அவன் செய்த சத்தியத்தில் அனைத்தையும் கிடப்பில் போட்டவள் டப்பாவைத் திறக்க, “ஸ்பூன்ல சாப்டு...” எனக் கரண்டியை நீட்டினான் தீனா. அதை வாங்கி இரண்டு வாய் வைத்திருப்பாள். பாதி உணவு கீழே சிந்தியது.
“இது வேணாம் தீனா. நான் கைல சாப்ட்றேன்!” என்றவள் உண்ணத் தொடங்க, “ஹேண்ட் வாஷ் பண்ணலையா நீ?” என எதிரிலிருந்தவன் பேச்சை அவள் கேட்கத் தயாராய் இல்லை. நீண்ட நாட்கள் கழித்து சுவையான பிரியாணி அவளை மெய் மறக்கச் செய்திருந்தது.
பின்னே யாரோ வந்து நிற்பது போல தோன்ற, தீனா திரும்பி பார்த்தான். மனோ ஊன்று கோல் உதவியுடன் இவர்கள் அருகே வந்து நின்றான். சந்தனா அவனைக் கவனிக்கவில்லை.
“அம்மாகிட்டே சொல்லித் தர போறேன். அவங்களுக்குத் தெரியாம தானே பிரியாணி எடுத்துட்டு வந்த தீனா?” என்ற குரலில் வாயில் பாதி சோறும் கையில் பாதி சோறுமாய் நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் லேசாய் பயம் துளிர்க்கத் துவங்கியது.
“மனோ... குட்டி பாவம் டா. அத்தைகிட்ட சொல்லாத டா!” தீனா அவளுக்காக இறைஞ்சினான்.
“நான் கண்டிப்பா அம்மாகிட்டே சொல்லதான் போறேன்!” அவன் கூறியதும் சந்தனாவின் விழிகள் பளபளத்தன. தொண்டையில் உணவு இறங்கவில்லை. அவன் தன்னை மாட்டிவிட்டு விடுவானோ என்ற பயம் நெஞ்சை அடைத்தது. உணவு டப்பாவை கையில் வைத்தவாறு பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
தொடரும்...
Latest Post: தாழம்பூ - Comment Thread Our newest member: Mohana Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page