மௌனம் – 3
பூஜையை முடித்துக் கொண்டு வந்து கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்த அபிராமியின் மனம் முழுக்க மகன் மட்டுமே நிறைந்திருந்தான். அவனை எண்ணி அவனின் எதிர்காலத்தை எண்ணி அத்தனை கவலை அவருள் இருக்க.. மனம் சொல்லொன்னா துயரை சுமந்திருந்தது.
வார நாட்கள் என்பதால் பெரிதாகக் கூட்டம் இல்லாமல் அமைதியாக இருந்த கோவிலுக்குள் எந்த அவசரமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து விட்டார் அபிராமி. அதே நேரம் அங்கு வந்த நடுத்தர வயது பெண்களில் சிலர் அபிராமியை கவனித்து விட்டு வேகமாக அவரை நெருங்கினர்.
“அய்யய்யோ, அபிராமி மேடம் நீங்கதானா..! உங்களைப் போலவே இருக்கேன்னு தான் நினைச்சோம்.. நீங்களா இருப்பீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..” என அவர்கள் முகம் எங்கும் சந்தோஷம் பொங்க பேசிக்கொண்டே செல்ல.. இப்போது இருக்கும் மனநிலையில் இதையெல்லாம் எதிர்கொள்ள முடியாமல் லேசாகத் தடுமாறிய அபிராமி மெல்லிய புன்னகையோடு லேசாகத் தலையசைத்து அமர்ந்திருந்தார்.
“மேடம் நீங்க எப்படி இங்கே..? வழக்கமா இந்தக் கோவிலுக்கு வருவீங்களா..? விசேஷ நாளில் மட்டும் தானே வருவீங்க..! இன்னைக்கு எப்படி..?” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்க.. “எப்போவாவது வருவேன்..” என்றார் சங்கடமாக மெல்லிய குரலில் அபிராமி.
“ஓஹோ.. மேடம் ஒரே ஒரு போட்டோ உங்க கூட..” என்று ஆளாளுக்கு அவர்களின் அலைபேசியை எடுத்தனர். அதில் மறுக்கவும் முடியாமல் அவர்களோடு ஒன்றவும் முடியாமல் இருந்த அபிராமி சிறு தலையசைப்போடு அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் போதே வேகமாக அங்கே வந்து சேர்ந்தார் கணபதி.
அபிராமியின் கார் ஓட்டுநர் தான் கணபதி. கோவிலுக்குள் வரவில்லை என்றாலும் சற்று தள்ளி நின்றே தன் பார்வை வட்டத்திற்குள் அபிராமி இருக்குமாறு பார்த்துக் கொள்வது கணபதியின் வழக்கம். இது விநாயக் அவருக்கிட்டுள்ள முக்கியமான பணிகளில் ஒன்று.
இப்போதும் அப்படியே கவனித்துக் கொண்டிருந்தவர் திடீரெனப் பெண்கள் எல்லாம் அபிராமியை வந்து சூழ்ந்து கொண்டதில் கொஞ்சம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து காத்திருந்து விட்டே அங்குச் சென்றார்.
தன்னைச் சுற்றி வளைத்திருந்த பெண்களிடமிருந்து எப்படி விலகி செல்வது எனப் புரியாமல் அபிராமி தவித்துக் கொண்டிருக்கவும், அங்கு வந்து சேர்ந்த கணபதி “மேடம் நேரமாச்சு கிளம்பலாமா..?” என இயல்பாகக் கேட்டபடியே அவர் அருகில் இருந்த பூஜை கூடையை எடுத்துக் கொள்ள.. ‘சரி’ என்ற தலையசைப்போடு அபிராமியும் எழுந்து நின்றார்.
“மேடம் நீங்க ஏன் இப்போ எல்லாம் நடிக்கறதே இல்லை..? எங்களுக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும்னு தெரியுமா..? நீங்க திரும்ப நடிங்க மேடம்..” என்று ஒவ்வொருவரும் பேசிக் கொண்டே வர, சரி என்பது போல் மெல்லிய புன்னகையோடு அனைவருக்கும் தலையசைத்துக் கொண்டே கணபதி ஏற்படுத்திக் கொடுத்த வழியில் தன்னால் முடிந்த அளவு வேகமாகச் சென்ற அபிராமி, கணபதி அவருக்காகக் கதவை திறந்து பிடிக்கவும் உள்ளே ஏறி அமர்ந்து விட்டார்.
எதற்காகக் கோவிலுக்கு வந்தோம் என்பதைக் கூட மறந்துவிட்டு அபிராமியின் பின்னே சென்ற பெண்கள் அவரையே கண்கள் மின்னும் ஆர்வத்தோடு முகம் எங்கும் புன்னகை மலர்ந்திருக்க ஆவெனப் பார்த்திருந்தனர்.
அவர்களின் இத்தனை வருடத்திற்குப் பின்பும் தன் மீதான அன்பில் நெகிழ்ந்த அபிராமி, “சரி கிளம்புறேன்..” எனவும், “ஐயோ நீங்க பேசுறது கூடப் பாடறது மாதிரியே இருக்கு மேடம்..” என்று அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணி சொல்ல.. அதுக்கும் புன்னகைத்துக் கொண்டார் அபிராமி.
இதற்கு மேல் இங்கு நின்றால் கிளம்ப முடியாமல் போகும் என உணர்ந்து சட்டென கணபதி காரை எடுத்திருந்தார். கார் சற்று தள்ளிச் செல்லவும் அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்ட அபிராமி, “தேங்க்யூ கணபதி..” என்று கூற, “இது என் கடமை மேடம்..” என்றார் அவர்.
அதற்கு வேறு எதுவும் பேசாமல் அபிராமி விழி மூடி இருக்கையில் சாய்ந்து கொள்ள.. கார் வீட்டை நோக்கி பயணித்தது. இதுவே வேறு ஒரு நாளாக இருந்திருந்தால் அவர்களோடு கொஞ்சம் கலந்து பேச முயன்று இருப்பார் அபிராமி. ஆனால் இன்று மனம் முழுக்க வேதனை நிரம்பி இருக்க.. அவரால் அப்படி ஒன்றை செய்யவே முடியவில்லை.
அபிராமி சென்ற தலைமுறையினர் கொண்டாடும் ஒரு திரை நாயகி. திரைத்துறையில் அவருக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உண்டு. ஒரு காலத்தில் மிகப்பெரிய நடிகர்கள் கூட அபிராமியின் கால்ஷீட் வாங்க காத்திருந்ததெல்லாம் உண்டு.
ஒல்லியான நடிகைகளையே பார்த்துச் சலித்திருந்த தமிழ் சினிமாவுக்கு லேசாகப் பூசினாற் போன்ற உடல்வாகோடு அறிமுகமானவர் தான் அபிராமி. அபிராமியினுடையது மிக பெரிய பாரம்பரியமான கர்நாடக சங்கீத குடும்பம். அவரின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி என அத்தனை பேரும் மேடைகளில் கச்சேரி பாடுவார்கள்.
மார்கழி நேர கச்சேரிகளுக்கு இவர்கள் வீட்டினரின் தேதியை வாங்கி விடத் திருவிழா கூட்டம் போல் அபிராமியின் வீட்டின் முன் காத்திருப்பர். அந்தக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்த அபிராமியும் முறைப்படி சங்கீதம் பயின்றவர் தான்.
அப்படித் தன் பதினேழாவது வயதில் அவர் ஒரு கச்சேரி செய்து கொண்டிருக்கும் போது தான் பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவரின் பார்வையில் விழுந்தார் அபிராமி. அப்போது அவர் எழுதிக் கொண்டிருக்கும் படத்தின் நாயகியை கண்முன் கண்டது போல் இயக்குனருக்குத் தோன்ற.. அன்றே தன் அடுத்தப் படத்தின் நாயகி அபிராமி தான் என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தவர், அதன் பின் அபிராமி வீட்டினரை தொடர்பு கொண்டு பேச, அவர்களோ முடியவே முடியாது என மறுத்து விட்டனர்.
ஆனால் தன் முயற்சியில் கொஞ்சமும் தளராத விக்கிரமாதித்தன் போல் அவர் தொடர்ந்து சில மாதங்கள் படையெடுத்ததன் விளைவாக அபிராமி நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் அபிராமி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தோடு மட்டுமே அவரை அணுகியவருக்கு, பின் அருகில் இருந்து அபிராமியை பார்த்து, பேச, பழக என்று கிடைத்த வாய்ப்பில், அந்தக் கதாபாத்திரத்திற்கு இவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவே முடியாது என்ற முடிவுக்கே வந்து விட்டிருந்தார் இயக்குனர்.
அதன் பலனாகத் தான் ஆறு மாதங்கள் தொடர்ந்து போராடி அபிராமியின் சம்மதத்தைப் பெற்றிருந்தார் இயக்குனர்.
ஒரு கட்டத்தில் அபிராமி நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை எடுக்கவே கூடாது என்ற முடிவுக்குக் கூட இயக்குனர் வந்து விட்டிருக்க.. அதுவே அபிராமியை யோசிக்க வைத்தது. அப்போதும் தயங்கிய தன் வீட்டினரை அபிராமியே பேசி சம்மதிக்க வைத்திருந்தார்.
மகனின் ஆசைக்காக இந்த ஒரு படம் என்று எண்ணியே சம்மதித்திருந்தவர்களுக்கும் மகள் மிகப்பெரிய நடிகையாக அந்தத் துறையில் கோலோச்ச போவது அப்போது தெரியவில்லை. அபிராமியின் முதல் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.
பதின்ம வயதுக்கே உரிய இளமை ததும்பும் அழகு, கவி பேசும் கண்கள், உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும் முகம், எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் அத்தனை அழகாக நடித்துக் கொடுத்துவிடும் அவரின் திறமை, கொஞ்சமும் தலைகணம் இல்லா பாங்கு என்று எல்லாம் சேர்ந்து அபிராமியை புகழின் உச்சிக்கு கூடிய சீக்கிரமே கொண்டு சென்று நிறுத்தி இருந்தது.
அபிராமி வீட்டினரின் கச்சேரியை புக் செய்ய வரும் கூட்டித்தினருக்குப் போட்டியாக அவரைப் படங்களுக்குப் புக் செய்ய வரும் கூட்டமும் வீட்டின் முன் நிற்க தொடங்கியது. இப்படிப் பணம், பெயர், புகழ் என ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தன் திருமணத்திற்குப் பிறகு நடிப்பை முற்றிலும் நிறுத்திக் கொண்டார்.
அதன் பின்னான சில நிகழ்வுகளுக்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அபிராமி நடிக்க வரவும், நடந்த பல விரும்பத்தகாத சம்பவங்களால் முற்றிலும் இந்தத் துறையில் இருந்து ஒதுங்கி விலகி நின்று கொண்டார் அபிராமி.
இப்போது வரையும் சில படங்களை அவருக்கென எழுதி எடுத்துக்கொண்டு சென்று எப்படியாவது அவர் சம்மதித்து விட மாட்டாரா என முயன்று கொண்டிருக்கும் இயக்குனர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அக்கா அண்ணி வேடங்களில் நடிக்கக் கூடப் பலர் அவரை அணுகியிருந்தனர். அனைவருக்கும் தைரியமான, கொஞ்சம் பேரிளம் பெண் கதாபாத்திரத்தில் நாயகியை முன் வைத்து உருவான நிறையப் படங்களுக்கு ஒரே தேர்வாக அபிராமி மட்டுமே இருந்தார். ஆனால் அவரின் ஒரே பதில் ‘இனி நான் நடிக்கப் போவதில்லை’ என்பதாக மட்டுமே இருந்தது.
படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டிருந்தாலும் கச்சேரிகளில் பாடுவதை அபிராமி இன்று வரை நிறுத்தவில்லை. ஆனால் அவரின் குடும்பத்தினர் போலத் தொடர்ந்து செய்வதும் கிடையாது. வருடத்திற்கு இரண்டு கச்சேரிகள் அவ்வளவே..! அதுவும் கூடக் கோவில் விசேஷங்களிலும் திருவிழாக்களிலும் மட்டுமே..!!
சில பெரிய மனிதர்கள் அவர்கள் நடத்தும் விழா விசேஷங்களில் அபிராமியை அழைத்து வந்து பாட வைத்து விட, எவ்வளவோ முயன்றும் அது இன்று வரை நடக்கவில்லை.
அபிராமியின் நடிப்பு, பாடல் என்று அவருக்காகவே அவரைப் பிடித்துப் பின் தொடர்ந்த ரசிகர்கள் இன்று வரைக்குமே அவருக்கு உண்டு.
*********
அதே அம்மன் கோவில் ரகோத்தமன் தன் மனைவி புஷ்பாவுடன் உள்ளே நுழைய.. “அடடே வாங்கோ.. என்ன இன்னைக்குப் பெரியவா எல்லாம் ஒண்ணா சேர்ந்து வரேள்..” என்று ஆரவாரமாக வரவேற்றார் அர்ச்சகர்.
அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்த ரகோத்தமன் “சிறப்புப் பூஜைக்குக் கொடுத்திருந்தோம் சாமி..” எனவும், “அடடா அது நீங்க தானா..! நேரம் ஆகுதே பூஜைக்குக் கொடுத்தவாளை இன்னும் காணோமேன்னு நினைச்சேன், வாங்கோ எல்லாம் தயாரா தான் இருக்கு.. பூஜையைத் தொடங்கிடலாமா..?” என்றார் அர்ச்சகர்.
அதில் தன் மனைவியின் பக்கம் திரும்பி ரகோத்தமன் பார்க்கவும், அவரும் சம்மதமாகத் தலையசைத்தார். இதற்காகவே காத்திருந்த இன்னொரு அர்ச்சகரும் உடன் இணைந்து கொள்ள.. அடுத்த ஒருமணி நேரம் பூஜை மிகப் பிரமாண்டமாக நடந்தது.
இறுதியாக புஷ்பாவிடம் இருந்த அர்ச்சனை கூடையை வந்து வாங்கியவர், “யார் பெயருக்கு..?” எனவும், “வினய்..” என ரகோத்தமன் தொடங்கவும், அவரை மறுப்பாகப் பார்த்த புஷ்பா “விநாயக்.. விநாயக் மஹாதேவ்.. சிம்மராசி, உத்திர நட்சத்திரம்..” என்று சொல்லி முடித்திருந்தார்.
அதில் வியப்பாக அவர்களைப் பார்த்த அர்ச்சகர் எதுவும் பேசாமல் உள்ளே சென்று பூஜையை முடித்து ஆரத்தி தட்டுடன் அவர்கள் முன் வந்து நின்றார். அது வரையும் அம்பாளையே விழிகளில் நிறைத்துக் கொண்டிருந்த புஷ்பா ஆரத்தியை தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ளவும், “பூஜை எல்லாம் நல்லா ஷேமமா நடந்தது.. உங்களுக்குத் திருப்தி தானே..!” என்றார்.
அதற்கு ஆமெனத் தலையசைத்த ரகோத்தமன் ஐநூறு ரூபாய் தாளை எடுத்துத் தட்டில் போட்டார். அதைக் கண்டு முகம் மலர்ந்தவராகத் திரும்பிய அர்ச்சகர், “இன்னைக்கு என்ன விசேஷம்..? இதோட இந்தப் பெயருக்கு இது மூணாவது அர்ச்சனை..” என்றார்.
அதில் முகம் மலர்ந்தவராக புஷ்பா எதையோ சொல்ல வரவும், “வேற யார் வந்தா..?” என்றிருந்தார் அந்தப் பகுதி முழுக்கப் பார்வையைச் சுழற்றியவாறே ரகோத்தமன்.
“அபிராமி அம்மா வந்தாங்கோ..” என்று சொல்லிக் கொண்டிருந்த அர்ச்சகரை அதற்குள் அந்தக் கோவில் தர்மகர்த்தா ஏதோ வேலையாக அழைக்கவும், “இதோ வரேன்..” என்று விட்டு நகர்ந்தார் அர்ச்சகர்.
********
ஏதோ ஒரு தைரியத்தில் சட்டென விநாயக்கை இங்கே கண்டதும் கல்லூரி பேரூந்தில் இருந்து இறங்கி வந்து விட்டிருந்தாலும், ‘அவன் என்ன சொல்லுவானோ..? திட்டுவானோ..! கோபப்படுவானோ..!!’ என்றெல்லாம் பயந்துக் கொண்டிருந்தவள், விநாயக்கின் இந்தப் புன்னகை முகம் கண்டு திகைத்து விழித்தாள்.
“ஒய் மான் குட்டி, இங்கே என்ன செய்யறே..?” என்று அவன் கேட்கவும், விநாயக்கின் இந்த அழைப்பில் பட்டென அவளின் கண்கள் பனித்தது. அவள் கண்கள் கலங்குவதைக் கண்டு சட்டென உண்டான பதட்டத்தோடு அவளை நெருங்கியவன், “ஹே என்னடா..?” என அவள் தலையை ஆதரவாக வருட.. அடுத்த நொடி அவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது.
“மானு என்னம்மா..?” என அவளின் அழுகையைக் கண்டு உண்டான பதட்டத்தோடு அவன் அழைக்கவும், சட்டென விழிகளைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள், “ஒண்ணுமில்லை.. நந்து மட்டும் தான் என்னை இப்படிக் கூப்பிடுவா.. நீங்களும் இப்படி கூப்பிடவும் சட்டுன்னு உடைஞ்சுட்டேன்..” என்று சிறு திணறலோடு சொல்லியவாறே புன்னகைத்தாள் மானஸா.
அதில் ஒரு நொடி முகம் இறுகினாலும் “இதுக்கெல்லாமா அழுவாங்க..?” என்று செல்லமாகக் கடிந்துக் கொண்டவன், “ஆமா இன்னைக்கு உனக்குக் காலேஜ் இல்லையா..?” என்றான் பேச்சை மாற்றும் விதமாக விநாயக்.
அதற்கு அவள் சட்டெனப் பதில் சொல்லாமல் தயக்கத்தோடு அவனைப் பார்க்கவும், “காலேஜ் தான் போயிட்டு இருந்தோம் அண்ணா.. இல்லை சார்..” என்று சிறு தடுமாற்றத்தோடே தொடங்கி, “இங்கே நீங்க நிற்கறதை பார்த்ததும், யோசிக்காம என்னையும் இழுத்துட்டு காலேஜ் பஸ்ஸில் இருந்து இறங்கிட்டா..” என்றாள் மானஸாவின் தோழி ப்ரீத்தி.
அதில் அவளைக் கேள்வியாக விநாயக் பார்க்கவும், அவன் முறைப்பதாக நினைத்து பதட்டமான மானஸா, “இல்.. லை.. இ.. இதை.. கொடு.. க்கத்தான்..” என்று அந்தப் பரிசை காண்பித்துத் துண்டு துண்டாக அவள் பேசவும், “ம்ப்ச், இப்போ எதுக்கு இந்தப் பதட்டம்.. என்கிட்டே தானே பேசறே..? ரிலாக்ஸ்..” என்றான் விநாயக்.
அவன் இத்தனை நாளில் கவனித்த வரை மானஸாவுக்குப் பதட்டமாகும் போது மட்டும் லேசாகத் திக்கும். முடிந்தவரை அது வெளிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென எண்ணியிருந்தவனுக்கு இன்று அவள் தன்னிடமே அப்படிப் பேசியது வருத்தத்தைக் கொடுத்தது.
இதில் அடுத்து எதுவும் பேசாமல் அவள் பார்வையைத் தழைத்துக் கொள்ளவும், “சரி என்னை இங்கே பார்க்கலைனா என்ன செஞ்சு இருப்பே..?” என அவளிடம் பேச்சை வளர்க்க முயன்றான் விநாயக்.
“ஈவ்னிங் ஸ்டேஷன்..” எனத் தொடங்கியவள், விநாயக் வியப்பாகப் புருவத்தை உயர்த்தவும், “அந்தத் தெருமுனையில் இருக்க ஜூஸ் கடையில் நின்னுட்டு இருந்து இருப்பேன்..” எனக் கையசைத்து அவள் பேசிய விதத்தில் அவனுக்குப் புன்னகை உண்டானது.
“ஓ.. மேடமுக்கு அவ்வளவு தைரியம் வந்தாச்சா..?” என்றான் சிரித்துக் கொண்டே விநாயக். “நீ.. நீங்க இருக்கும் போது எ.. எனக்கு என்ன பயம்..?” என அவளும் சிரித்துக் கொண்டே சொல்ல.. மெச்சுதலாக இதழ் வளைத்தான் விநாயக்.
பின் நேரமாவதை உணர்ந்து “காலேஜுக்கு நேரமாகலையா..?” என அவன் கேட்கவும், ஆமென அவசரமாகத் தலையசைத்த மானஸா அங்கிருந்த பரிசை எடுத்து அவனிடம் நீட்டி “ஹாப்பிப் பர்த்டே அண்ணா..” என்று மெலிதாகப் புன்னகைத்தாள்.
அந்தக் கள்ளம் கபடமில்லா புன்னகையைக் கண்டு மனம் நெகிழ்ந்தவன், “தேங்க்ஸ்டா மானுக்குட்டி..” எனவும், மெலிதாகத் தலையசைத்தாள் மானஸா.
அங்கிருந்த ஒரு கேப் ஓட்டுனரை அழைத்து இருவரையும் அதில் ஏற்றி விட்டவன், “இரண்டு பேரையும் பத்திரமா காலேஜில் கொண்டு போய் விட்டுடுங்க..” என்று விட்டு, மானஸாவின் பக்கம் திரும்பி “காலேஜில் இறங்கினதும் எனக்கு ஒரு கால் செய் மானும்மா..” என்றான்.
அதற்கு வேகமாக அவள் தலையசைக்கவும், கார் கதவை மூடியவன் சிறு தலையசைப்போடு நிற்க.. கார் அங்கிருந்து நகரத் தொடங்கியதும், மெல்ல கையை உயர்த்தித் தயக்கத்தோடே அசைத்தாள் மானஸா.
அதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் தானும் பதிலுக்குக் கையசைத்தவன், கார் அடுத்தத் திருப்பத்தில் சென்று மறையும் வரை, அப்படியே பார்த்துக் கொண்டு நின்றவன், முகத்தில் உறைந்த அதே புன்னகையோடு விநாயக் திரும்பவும், அவனை நம்ப முடியா திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் டிரைவர் முருகன்.
அவரின் பார்வையைக் கண்டதும் உயர்த்தி இருந்த கையைத் தானாக இறக்கிக் கொண்ட விநாயக், “கிளம்பலாமா..?” என்று விறைப்பாகக் கேட்டவாறே சென்று ஜீப்பில் ஏறினான். அதில் பெரும் தலையசைப்போடு முருகனும் பின்னேயே சென்று வண்டியில் ஏறி இருந்தார்.
காவல்நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் கைகள் சற்று முன் மானஸா கொடுத்து சென்றிருந்த பரிசை மெல்ல வருடியது. இரண்டு வருடத்திற்கு முன்பு வரை யாராவது அந்தக் குடும்பத்து நபரோடு இவன் இத்தனை இனிமையாகப் பழகுவான் எனச் சொல்லி இருந்தால் அப்படிச் சொன்னவர்களை ஒருவழியாக்கி இருப்பான் விநாயக்.
ஆனால் இன்று எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளோடு பேசி சிரித்து அவளையும் சிரிக்க வைக்க முயல்கிறான். அவளோடு இருக்கும் நேரங்களை ரசிக்கிறான். ‘நானா இப்படி மாறிப் போனேன்..?’ என அவனே பலமுறை தனக்குள் கேட்டு பார்த்தும் பயன் தான் எதுவுமில்லை.
அதிலும் இயல்பாக யாரையும் எதிர் கொள்ள முடியாமல் விழிகள் படபடக்க அவள் நிற்கும் போதும், சரியாகப் பேச முடியாமல் திணறும் போதும், அந்த நொடியே அதை போக்கி இதற்குக் காரணமானவர்களைச் சும்மா விடக் கூடாது என உள்ளம் கொதிக்கும்.
இப்போதும் அப்படியே..! ‘அந்தக் கிழவியை..!’ என விநாயக் பல்லை கடிக்கவும், காவல் நிலையத்திற்குள் அவன் ஜீப் சென்று நிற்கவும் சரியாக இருந்தது.
அதில் சட்டென முகப் பாவனையை மாற்றிக் கொண்ட விநாயக், அதே மிடுக்கோடு இறங்கி உள்ளே சென்றான்.
**********
கண் முன் இருந்த கோப்பில் பார்வையைப் பதித்திருந்த விநாயக் கதவு லேசாகத் தட்டப்படும் சத்தத்தில் பார்வையை உயர்த்தி “எஸ்..” என்றான். அதே நேரம் கையில் ஒரு மெல்லிய கோப்போடு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த யது நந்தினியை கண்டவனின் முகம் இறுகியது.
அதுவரை இயல்பாக இருந்த முகத்தில் தன்னைக் கண்டதும் கடுமை பரவியதை அவளும் உணர்ந்தே இருந்தாள். நந்தினியை அங்குக் கண்டதும் வெறுப்போடு அவளைப் பார்த்தவனின் பார்வை நந்தினியின் முகத்திலேயே கூர்மையாகப் பதிந்திருக்க.. தன்னை அவன் உட்கார கூடச் சொல்லாததை எல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் “ஒருகம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்றாள் நந்தினி.
அவள் அந்த வார்த்தையை உச்சரித்ததும், விநாயக்கின் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் பரவியது.
அவன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இப்படி தான் “ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்று தன் முன் வந்து நின்றவளை ஆராய்ச்சியாகப் பார்த்த விநாயக் “என்ன கம்ப்ளைன்ட்..? யார் மேலே..?” என்றான்.
அதில் மெல்ல புன்னகைத்துக் கொண்டே, “விளக்கமா நானே சொல்லட்டுமா..? இல்லை எழுதி கொண்டு வந்ததைக் கொடுக்கட்டுமா..?” என நந்தினி கேட்கவும், வார்த்தைகளில் பதில் சொல்லாமல் அவள் எழுதிக் கொண்டு வந்ததைக் கேட்டு கையை நீட்டினான் விநாயக்.
அவன் நீட்டிய கையை ஒரு நொடி பார்த்தவளின் விழிகளில் குறும்பு கூத்தாட, சட்டென விநாயக்கின் கைகளைப் பிடித்து லேசாகக் குலுக்கியவள் “ஹலோ நான் யது நந்தினி, உங்க பேர் என்ன..?” என்றாள்.
அதில் அவளை முறைத்தவாறே வேகமாகத் தன் கையை நந்தினியிடம் இருந்து விடுவித்துக் கொண்டு நகர்ந்து நின்றவன், “என்ன கம்பிளைன்ட்..?” என்று குரலில் இறுக்கத்தைக் கொண்டு வந்து கேட்டிருக்க.. தன் கையிலிருந்த புத்தகத்தின் இடையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள் நந்தினி.
அவள் தனியே வந்திருப்பது, கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் அவனுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தாலும் தன் வேலைக்கு மதிப்பளித்து அவளிடம் முடிந்தவரை இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தவன் அவளின் புகார் கடிதத்தைப் படித்து முடித்த நொடி ருத்ர மூர்த்தியாக மாறிப் போனான்.
வணக்கம் ஏசிபி சார்..
எனக்கு ஒருத்தரை ரொம்பப் பிடிச்சுருக்கு, அவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.. ஆனா அவர் என்னைக் கண்டுக்கவே மாட்டேன்றார், இது இந்தக் குட்டி இதயத்தில் எவ்வளவு வலியை கொடுக்குது தெரியுமா..? என் மனசில் ஆசையை வளர்த்துட்டு இப்போ இப்படி ஒதுக்கி வைக்கறது சரியான்னு நீங்களே விசாரிச்சு சொல்லுங்க..
இப்படிக்கு உங்களையே நினைச்சு உங்களுக்காக வாழ்ந்துட்டு இருக்கும்
உங்கள் யது நந்தினி
என எழுதி இருந்ததைப் படித்த நொடி அவனுள் அவ்வளவு ஆத்திரம் கனன்றது.
அந்தக் காகிதத்தைச் சுக்கல் நூறாகக் கிழித்து அவளின் முகத்திலேயே வீசியவன், “அறிவில்ல உனக்கு..? படிச்சவ தானே நீ..? எதில் விளையாடறதுன்னு இல்லையா.. இங்கே உன் விளையாட்டைப் பார்க்க தான் நாங்க உட்கார்ந்து இருக்கோமா..?” என்று காய்ந்து விட்டான் விநாயக்.
நிச்சயம் கோபப்படுவான் என்று தெரியும் தான். ஆனால் இவ்வளவு கடினமான வார்த்தைகளில் திட்டுவான் என எதிர்பார்க்காத நந்தினி, சிறுத்திகைப்போடு அப்படியே நின்ற விட, அவள் விழிகள் தானாகக் கலங்கியது.
இதுவரை அவளை இப்படி எல்லாம் யாரும் திட்டியதோ கடுமையாகப் பேசியதோ கிடையாது. ஆரம்பத்திலிருந்தே அவள் இவனிடமிருந்து மட்டுமே கோபத்தையும் ஒதுக்கத்தையும் வெறுப்பையும் எதிர்கொள்கிறாள். ஆனாலும் இந்த மனதிற்கு அவனைத் தானே பிடித்துத் தொலைக்கிறது..! என்ன செய்ய..?
வேறு எங்கும் சென்று அவனைத் தனியே சந்திக்கவோ பேசவோ இதுவரை விநாயக் சந்தர்ப்பமே கொடுக்காமல் போனதால் தான், அந்த வயதிற்கேயான விளையாட்டு தனத்தோடு இப்படிக் காவல் நிலையத்திற்கே அவனைச் சந்திக்க வந்திருந்தாள் யது நந்தினி.
இது சரியென அவளும் சொல்லவில்லை. ஆனால் இப்படியாவது தன் மனதிலிருப்பதை மீண்டும் அவனுக்குத் தெளிவாக ஒருமுறை புரிய வைத்துவிட, நினைத்தே வந்திருந்தவளுக்கு அவனின் வார்த்தைகளும் அந்தக் குரலில் இருந்த வெறுப்பும் விழிகளைக் கலங்கச் செய்ய.. இதழ் கடித்து அழுகை வெடித்துக் கொண்டு வெளியில் வராமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் நந்தினி.
ஒருவேளை அதன் பின்னான நாட்களில் தொழிலில் பொறுப்பை ஏற்க முயன்றதற்கு பின் வேதவல்லியின் கடுமைகளை எல்லாம் எதிர்க் கொண்டிருந்தவளுக்கு வந்திருந்த பக்குவம் அப்போதிருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்துக் கொண்டிருக்க மாட்டாளோ என்னவோ..?
அதெல்லாம் இன்று நினைவு வர, முகத்தில் மேலும் கடுமை ஏற, அவளை முறைப்போடு பார்த்தவன் “கெட் அவுட்..” என்றான் பல்லை கடித்தபடியே விநாயக்.
தன் கையில் இருந்த கோப்பை அவன் முன் வைத்து ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்த நந்தினி, விநாயக்கின் இந்த அதட்டலில் திகைத்து அவனைப் பார்க்க.. “உன்னை வெளியே போன்னு சொன்னேன்..” என்றான் கொஞ்சமும் கோபம் குறையாத குரலில் விநாயக்.
இதில் செய்வதறியாது அப்படியே நந்தினி அசையாமல் நின்று விட, அவளின் அந்த நிலை கூட அவனைக் கோபப்படுத்தியது. அதில் அவள் தன் முன் வைத்திருந்த கோப்பை எடுத்து கதவை நோக்கி வீசியிருந்தவன் “உன்னை வெளியே போகச் சொன்னேன், கெட் லாஸ்ட் டேமிட்..” எனக் குரலை உயர்த்தி அவன் கர்ஜிக்க.. சட்டென உண்டான அவமான உணர்வோடு வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் நந்தினி.
அந்த அறைக்கு எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றபடி அலைபேசியில் யாரோடோ பேசிக் கொண்டிருந்த ரகோத்தமன் தன் அருகில் வந்து நின்றவளின் மேல் பார்வையைப் பதித்த நொடி “நான் அப்புறம் கூப்பிடறேன்..” என அழைப்பை துண்டித்து விட்டு, “நந்து என்னடா..?” என அவளின் கலங்கிய விழிகளையும் பதட்டமான உடல் மொழியையும் கண்டு ஆறுதலாக அவளின் தோளைப் பற்றினார்.
‘ஒண்ணுமில்லை’ என்பது போல் வேகமாகத் தலையசைத்தவள், அதற்கு நேர்மாறாக இதழ் மடித்துத் தன் கண்ணீரை கட்டுப்படுத்த போராடுவது அவருக்குப் புரிந்தது.
இதுவே உள்ளே என்ன நடந்திருக்கும் என ஓரளவு அவருக்குப் புரிய வைக்கப் போதுமானதாக இருக்க.. வருத்தத்தோடு திரும்பி விநாயக்கின் அறை கதவை பார்த்தார் ரகோத்தமன். தன்னைக் கண்டால் கோபப்படுவான் என்று தான் நந்தினி அவரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
ஆனால் அவளைக் கூட இப்படி அவன் விரட்டி அடித்து இருப்பது வருத்தத்தைக் கொடுக்க.. நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவருக்கு அவன் மேல் கோபம் கூட வரவில்லை. வருத்தமே மேலோங்கியது.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா