All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 6 / 6
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் - 41
 
சாரதாவை பார்க்க வந்திருந்தான் தாரக். முன்பை விட குமரேசனின் உடல்நிலை இப்போது ஓரளவு சரியாகி இருந்தது. அதற்காக முழுவதும் சரியாகி விட்டார் என சொல்லிவிட முடியாது, இனி அப்படி ஆகவும் வாய்ப்பில்லை என மருத்துவர்கள் எப்போதோ திட்டவட்டமாக சொல்லிவிட்டிருந்தனர்.
 
 
அதற்கு வயதும் ஒரு காரணம் என்றால் அன்று நடந்த கொடூரத்தின் மிச்சம் இன்னும் அவர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததும் மற்றொரு காரணம். இதில் வாழ்நாள் முழுக்க இப்படியே மருந்துகளோடும் உடல் உபாதைகளோடும் அவர் போராடிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
 
 
இடையில் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டிருந்த உடல்நிலை குறைவுகள் இப்போது ஓரளவு சரியாகி மீண்டும் வீட்டிற்குள் சக்கர நாற்காலியில் வலம் வரும் அளவுக்கு தேறி இருந்தார் குமரேசன்.
 
 
அவரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு தோட்டத்தில் சாரதாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் தாரக். பெரும் தயக்கத்திற்கு பிறகு “அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கு..?” என கேட்டிருந்தார் சாரதா.
 
 
“ஹ்ம்ம் நல்லா இருக்கா சாரதாம்மா.. அங்கே ஆரம்பகட்ட தடுமாற்றம் இருக்க தான் செய்யும், ஆனா சீக்கிரம் பழகிக்குவா..” என்றிருந்தான் தாரக். “அவ கிளம்பறதுக்கு முன்னே ஒருமுறை நேரில் பார்த்து பேசணும்னு நினைச்சேன், ஆனா முடியாம போச்சு..” என்றார் சிறு பெருமூச்சோடு சாரதா.
 
 
“உங்களுக்கு வேணும்னா போனில் பேசிக்கோங்க சாரதாம்மா..” என அவன் சொல்ல “இல்லை தீபன் தம்பி அந்த அளவுக்கு நாங்க நெருக்கம் இல்லை, அதோட அந்த பொண்ணுக்கும் எங்க மேலே கோபம் இருக்க தானே செய்யும்.. நேரில் பார்த்து சில விஷயங்களை பேசலாம்னு இருந்தேன், ஆனா முடியாமலே போச்சு..” என்று வறண்ட குரலில் கூறினார் சாரதா.
 
 
அதில் அங்கே ஒரு சிறு அமைதி நிலவ.. பின் தன் குரலை செறுமிக் கொண்டு “நியாயமா பார்த்தா அவளுக்கு மன்னிக்க முடியாத அளவுக்கான துரோகத்தை செஞ்சது நான் தான், நீங்க என்ன செஞ்சீங்க..?” என்றான் தாரக்.
 
 
இதற்கு சாரதா பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருக்க.. அவரை திரும்பி பார்த்தவன், “எனக்காக தானே நீங்க இதெல்லாம் செஞ்சீங்க.. விடுங்க சாரதாம்மா உங்க மேலே அவளுக்கு கோபம் எல்லாம் இருக்காது.. என்கிட்டேயே அவ கோபத்தை காண்பிக்கலை, உங்ககிட்டேயா காண்பிக்க போறா..? அதுக்காக எல்லாத்தையும் மறந்துட்டா.. மன்னிச்சிட்டான்னு இல்லை, இவ சத்தியமா அந்த நாகராஜன் மாதிரி இல்லை.. ரொம்ப நல்ல பொண்ணு சாரதாம்மா, நல்லா வாழட்டும்..” என உணர்ந்து புரிந்த குரலில் கூறினான் தாரக்.
 
 
‘அப்போ உன் வாழ்க்கை..?’ என எண்ணியவராக சாரதா அசையாமல் அவனை பார்த்திருக்க.. அவரிடம் இருந்து பதில் வராததில் கேள்வியாக திரும்பி அவரை பார்த்தான் தாரக்.
 
 
அதில் சுதாரித்தவராக  “நீ சொல்றதை எல்லாம் கேட்கும் போது நம்ம தனா ஞாபகம் தான் வருது.. அப்படியே இரண்டு பேருக்கும் ஒரே குணம் இல்லை..!” என வெகு நாட்களாக தன் மனதில் இருந்ததை சாரதா சொல்லவும், ஆம் என தலையசைத்துக் கொண்டவன் வேறு எதுவும் பேசவில்லை.
 
 
அதன் பிறகு மேலும் இரண்டு மணி நேரம் அங்கிருந்து விட்டு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் சரி பார்த்து விட்டே கிளம்பினான் தாரக். சிந்துவோடு அமெரிக்கா சென்றிருந்தவன், ஒரு மாதம் அங்கிருந்து அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு இரண்டு நாட்கள் முன்பு தான் இந்தியா திரும்பியிருந்தான்.
 
 
அங்கிருந்த போதும் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாலும் நேரில் அவன் பார்க்க வேண்டியது என பல வேலைகள் மலையளவு குவிந்து இருந்தது. அதில் கவனத்தை திருப்பியவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு முயன்று நேரத்தை ஒதுக்கி சாரதாவையும் குமரேசனையும் சந்திக்க வந்திருந்தான்.
 
 
**
 
 
அதேநேரம் தன் அப்பார்ட்மெண்டில் காபி கோப்பையோடு ஜன்னலுக்கு அருகில் நின்றிருந்தாள் சிந்து. அவளுக்கு நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது.
 
 
ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் நாகராஜனின் அனுமதி வேண்டி அவர் என்ன சொல்வாரோ என பயந்து எதிர்பார்த்து ஏமாந்து வாழ்ந்தே பழகி இருந்தவளுக்கு இன்று முழுக்க அத்தனையும் அவள் விருப்பமென எல்லாம் தலைகீழாக மாறி இருப்பதை யோசித்தப்படியே எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
யாரின் துணையும் இல்லாமல் இதோ இந்த அப்பார்ட்மெண்டில் அவளே ராஜா அவளே மந்திரி எனும் நிலையிலான ஒரு வாழ்க்கை. அவளுக்கு பிடித்த படிப்பு, அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கை முறை, இதெல்லாம் நிஜம் தானா என இந்த நொடி கூட அவளால் நம்ப முடியவில்லை.
 
 
இங்கே வந்த பின் நான்கைந்து முறை ‘ஒருவேளை கனவாக இருக்குமோ..?’ என தன்னையே கிள்ளி கூட பார்த்துக் கொண்டாள் சிந்து. அந்த அளவுக்கு எல்லாம் திடீரென நல்லபடியாக நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியா மனநிலையில் தான் இப்போதும் இருந்தாள் சிந்து.
 
 
இன்று தனியே அனைத்தையும் செய்து கொள்ள பழகிக் கொண்டிருந்தவளுக்கு முதல் நாள் இந்த மண்ணில் கால் வைத்தது தான் நினைவுக்கு வந்தது. அத்தனை பயம், பதட்டம், மனமெங்கும் நிறைந்திருக்க.. தாரக்கிடம் அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள கூட முடியா மனநிலையோடு அவன் பின்னே சென்றதை மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. 
 
 
ஏர்போர்ட்டிலிருந்து இறங்கிய உடன் அவளுக்கென ஏற்பாடு செய்திருந்த அப்பார்ட்மெண்டுக்கு தான் அழைத்து வந்திருந்தான் தாரக். மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை தாரக் அழுத்த.. ‘இது யார் வீடு..? எங்கு வந்திருக்கிறோம்..?’ என புரியாமல் அவனை குழப்பமாக பார்த்தபடியே நின்றிருந்தாள் சிந்து.
 
 
அதே நேரம் கதவை திறந்து கொண்டு வந்து நின்ற ஸ்வேதா “ஹாய் தீபன் வெல்கம்..” என்று மலர்ந்து புன்னகைக்க.. “ஹாய் ஸ்வே, ஹவ் ஆர் யூ..?”  என்றான் தாரக். “ஹ்ம்ம், நலம் நலமறிய ஆவல்..” என அவள் கூறவும் “எனக்கு என்ன நல்லா இருக்கேன்..” என்றவன் “கீ..” என கையை நீட்ட.. “ஹப்பா என்ன அவசரம் உள்ள வாங்க..?” என அழைத்தாள் ஸ்வேதா.
 
 
“வரலாம், வராம எங்கே போயிட போறோம்..? இல்லை போயிட தான் நீ விட்டுடுவியா..! முதலில் கீ, ரொம்ப டயர்டா இருக்கு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்..” என அவன் கையை நீட்டிக் கொண்டே சொல்லவும், மறுப்பேதும் சொல்லாமல் உள்ளே சென்று சாவியை கொண்டு வந்து அவன் கையில் வைத்தாள் ஸ்வேதா.
 
 
அதை வாங்கிக் கொண்டவன், சிந்துவின் பக்கம் திரும்பி “இது ஸ்வேதா, என் ஃப்ரெண்டோட சிஸ்டர்..” என அறிமுகம் செய்து வைத்து விட்டு ஸ்வேதாவின் பக்கம் திரும்பியவன் “இது செந்தூரிகா..” எனவும் “ஹாய் செந்தூரிகா..” என்றாள் ஸ்வேதா.
 
 
சிந்துவும் மெல்லிய புன்னகையோடு “ஹாய்..” என்றாள். “நாம அப்பறம் நிறைய பேசலாம்..” என்று சட்டென நட்பு கரத்தை ஸ்வேதா நீட்ட.. அவளை போல் உடனே பேசிவிட முடியாமல் சிந்து தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
 
 
“ஏன் என் கூட எல்லாம் மேடம் பேச மாட்டீங்களா..?” என தாரக் வம்பிழுக்கும் குரலில் பேச.. “நான் பேச ரெடி தான், ஆனா சார் தான் ரொம்ப பிஸி.. நானா கூப்பிட்டா எடுக்கவே மாட்டீங்க..” என்றாள் அவளும் கேலி குரலில்.
 
 
“இதுக்கு என் லிஸ்டில் நீ இல்லைன்னு நேராவே சொல்லி இருக்கலாம்..” என்று அவன் சோக முகம் காண்பிக்க.. “போதும் உங்க ஆக்டிங், சக்கரத்தை காலில் கட்டிட்டு சுத்தும் ஆள்.. இங்கே எப்படி ஒரு மாசம் இருக்க போறீங்கன்னு நானும் பார்க்க தானே போறேன்..” என்றவளை கண்டு புன்னகைத்தவன்,  “பார், பார் நல்லா பார்.. பக்கத்தில் இருந்து பார்..” என்று விட்டு முன்னே செல்ல.. இருவரையும் திரும்பிப் பார்த்தப்படியே தாரக்கை பின் தொடர்ந்தாள் சிந்து.
 
 
ஸ்வேதாவின் அடுத்த போஷனின் கதவை திறந்தவன், சிந்துவின் பக்கம் திரும்பி “கம்..” என்று சொல்லவும், வீட்டிற்குள் பார்வையை சுழற்றியபடியே அவன் பின்னே சென்றாள் சிந்து.
 
 
அது ஒரு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அப்பார்ட்மெண்ட். பார்க்கவே கச்சிதமாக அத்தனை அழகாக இருந்தது. அதை கண்களால் சிந்து அளவெடுத்துக் கொண்டிருக்க.. “இனி இதுதான் உன் வீடு, பொறுமையா எங்கே என்ன இருக்குன்னு எல்லாம் சொல்றேன்.. இப்போ நீ ரெஸ்ட் எடுக்கணும்னா எடுத்துக்கோ..” என்றான் தாரக்.
 
 
“இல்லை பரவாயில்லை..” என்றவளுக்கு திகைப்பே முன் நின்றது. பேச்சு கூட சரியாக வரவில்லை. இங்கு தங்கி படிக்கப் போகிறோம் என தெரிந்தே வந்திருந்தாலும் அருகில் ஏதாவது ஹாஸ்டல் போல் எதிலாவது ஏற்பாடு செய்திருப்பான் என்றே நினைத்துக் கொண்டிருந்தாள் சிந்து. இங்கே இப்படி தனி வீடு எடுத்து தங்க வைப்பான் என அவள் ஒருநாளும் நினைத்திருக்கவில்லை.
 
 
அதிலும் அந்த வீடு இருந்த இடம் அதிலிருந்த வசதிகள் என அனைத்தையும் பார்க்க பார்க்க மலைப்பாக இருந்தது. நிச்சயம் நிறைய செலவாகி இருக்கும் என புரிய.. ‘ஏன் இதெல்லாம்..?’ எனக்கேட்க நினைத்தாலும் அவளால் அது முடியவில்லை.
 
 
ஏனெனில் சிந்து இதைப் பற்றி கேட்டாலும் பெரிதாக பயன் எதுவும் இருக்காது. “செலவை பற்றி நீ கவலைப்படாதே, எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை..” என்ற ஒரே பதில் தான் அவனிடம் இருந்து வரும் என்பதால் அமைதியாகவே இருந்து கொண்டாள் சிந்து.
 
 
“உனக்கு எந்த ரூம் பிடிச்சுருக்கு பார்..” என தாரக் சொல்லவும், அந்த குரலில் நினைவு கலைந்தவள் திரும்பி அவனை பார்க்க.. அவனும் அவளின் பதிலுக்காக சிந்துவின் முகத்தையே பார்த்தபடி நின்று இருந்தான். அதில் அவசரமாக அவளுக்கு பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்த சிந்து “நான் இதையே எடுத்துக்கறேன்..” எனவும் ‘சரி’ என்று விட்டு மற்றொரு அறைக்குள் சென்றான் தாரக்.
 
 
பயண கலைப்பு தீர இருவரும் இரண்டு மணி நேரம் உறங்கி எழுந்தனர். முதலில் கண்விழித்த சிந்து குளித்து வேறு உடைக்கு மாறி வரவேற்பறைக்கு வந்து அங்கு இருந்தவற்றையெல்லாம் மெல்ல பார்த்துக் கொண்டிருக்க.. தாரக்கும் குளித்து முடித்து வெளியில் வந்தான்.
 
 
“ரெஸ்ட் எடுக்கலையா நீ..?” என அவன் கேட்கவும், அந்த குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவளை கண்டு “எதுக்கு இவ்வளவு பதட்டம்..? இங்கே வேற யாரு வந்துட போறா..?” என்றான் தாரக். “இல்லை, புது இடம் அதான் கொஞ்சம் பதட்டம் ஆகிடுச்சு..” என சிந்து கூறவும் “சரி ரெஸ்ட் எடுத்தியா இல்லையா..?” என்றான் தாரக்..
 
 
“தூங்கினேன், நானும் இப்போ தான் எழுந்து வந்தேன்..” என்றவளை கண்டு தலையசைத்தவன் “சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்..” என கூறவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. தாரக் சென்று கதவைத் திறக்க.. ஸ்வேதா இவர்களுக்கான உணவோடு நின்றிருந்தாள்.
 
 
அவள் கையில் இருந்ததை பார்த்து “ஸ்வே எதுக்கு இதெல்லாம்..?” என்றான் தாரக். “வேற எதுக்கு சாப்பிட தான்..? இவ்வளவு பெரிய பிசினஸ்மேனுக்கு இது கூட தெரியலையா..” என்றவாறே உள்ளே வந்தவள், நேராக உணவு மேஜையில் சென்று அதை வைக்க.. “நான் பார்த்துக்க மாட்டேனா இதெல்லாம்..?” என்றான் தாரக்.
 
 
“இல்லைன்னு யார் சொன்னா..? அதை எல்லாம் நாளையிலிருந்து பார்த்துக்கோங்க.. இப்போ இதை சாப்பிடுங்க..” என்றவள், திரும்பி சிந்துவின் பக்கம் பார்த்து “வாங்க சாப்பிடலாம்..” என உரிமையோடு அழைத்தாள்.
 
 
“மேடம் உத்தரவு..” என்றவாறே தாரக் சாப்பிட அமைதியாக அமர்ந்து விட, இத்தனை இயல்பாக அவன் யாரோடும் பேசி பழகி பார்த்திராத சிந்துவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
 
அதை வியப்பாக உணர்ந்தவாறே சிந்துவும் வந்து அமர, இருவருக்கும் சாப்பிட எடுத்து வைத்தாள் ஸ்வேதா. “இதையெல்லாம் நீ செய்யணும்னு இல்லை ஸ்வே..” என அவன் இயல்பாக கூறவும், “ஆனாலும் செய்வேன்..” என பிடிவாதமாக கூறியவள், அனைத்தையும் இருவருக்கும் அவளே பரிமாறினாள்.
 
 
“நீ சாப்பிட்டியா ஸ்வே..?” என்றவனுக்கு “அதெல்லாம் எப்பவோ ஆச்சு..” என பதில் அளித்தாள் ஸ்வேதா. அதன் பிறகு தாரக் சாப்பிட தொடங்க, சிந்து எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருக்க.. ஸ்வேதா வளவளவென பேசிக் கொண்டிருக்க.. அவளுக்கு பதிலளித்தப்படியே சாப்பிட்டு முடித்தான் தாரக்.
 
 
“அப்புறம் தீபன் நீங்க அனுப்பி விட்ட லிஸ்ட்டில் இருந்த எல்லாம் வாங்கிட்டேன், ஒருமுறை செக் செஞ்சுடுங்க.. அதுக்கு பிறகு ஏதாவது தேவைப்பட்டா நாம போய் வாங்கிட்டு வந்துடலாம்..” என்றாள் ஸ்வேதா.
 
 
“ம்ஹூம் ஸ்வேகிட்ட கொடுத்த வேலையை திரும்ப செய்யற மாதிரி இருக்க வாய்ப்பே இல்லை..” என்று உறுதியான குரலில் தாரக் சொல்லவும், பணிவாக குனிந்து நன்றி என்றாள் ஸ்வேதா.
 
 
அதன் பிறகும் சிறிது நேரம் அங்கிருந்து பேசிக் கொண்டிருந்து விட்டே கிளம்பினாள் ஸ்வேதா. சிந்து தன் அறைக்குள் சென்று உடைகளை அடுக்கிக் கொண்டிருக்க.. அவளை அழைத்து அங்கு இருந்த பொருட்களை எல்லாம் எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக் கொடுத்தவன், சமையல் செய்வதற்காக ஸ்வேதா வாங்கி வைத்திருந்த பொருட்களையும் காண்பித்தான்.
 
 
இதையெல்லாம் சிந்தும் மலைப்பாக பார்த்தபடி நின்றிருக்க.. “நீ கட்டாயம் சமைச்சு தான் சாப்பிடணும்னு எதுவுமில்லை.. ஒருவேளை உனக்கு தேவைப்படலாம்னு தான் வாங்கி வைக்க சொன்னேன், இங்கே வெளியில் சாப்பிடுவதை விட இது பெட்டர்.. அப்படி உனக்கு சமைக்கத் தெரியாதுனா எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சமைச்சு கொடுக்க சொல்றேன்.. இங்கே வேலைக்கு ஆள் வைக்கறது எல்லாம் சரி வராது..” என்றான் தாரக்.
 
 
“இல்லையில்லை அதெல்லாம் வேண்டாம் நானே செஞ்சுக்குவேன்..” என அவசரமாக சிந்து சொல்லவும், “உன்னை கஷ்டப்படுத்திக்க வேண்டிய அவசியமில்லை..” என மீண்டும் கூறினான் தாரக். “இதில் கஷ்டம் எல்லாம் எதுவுமில்லை எனக்கு சமைக்க வரும்..” என்றிருந்தாள் சிந்து.
 
 
அடுத்த இரண்டு நாட்கள் அவளை கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் உடன் நின்று செய்து முடித்த தாரக், அவசர தேவைக்கு அருகில் என்னென்ன இருக்கிறது, எப்படி கல்லூரிக்கு சென்று வர வேண்டும்  என்று அனைத்தையும்  சொல்லிக் கொடுத்தான்.
 
 
அவளுக்கு கல்லூரி தொடங்க இன்னும் 15 நாட்கள் இருந்தது. அதில் அவசரப்படாமல் அனைத்தையும் செய்து முடித்து தயாரானவள், மனதிற்குள்ளான சிறு படபடப்போடும் எதிர்பார்ப்போடும் கல்லூரி செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
 
 
மறுநாள் கல்லூரி திறக்க இருந்தது. அன்று அதே நினைவோடு அவள் எழுந்து வெளியில் வர, தாரக் சமையல் அறையில் ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது. வேகமாக அங்கு சென்ற சிந்து “இங்கே என்ன செய்றீங்க..?” எனவும் திரும்பி பார்த்து “பிரேக் பாஸ்ட்..” என்றான்.
 
 
“ஐயோ நீங்க ஏன் இதெல்லாம்..? நான் செஞ்சு கொடுத்திருப்பேனே..!” என வேகமாக அவள் சொல்லவும், “ஏன் நான் செஞ்சு கொடுத்தா சாப்பிட மாட்டியா..?” என்றான் தாரக். “அதெல்லாம் இல்லை, ஆனா உங்களுக்கு சமைக்க தெரியுமா..?” என்று கேட்க வந்தவள் அப்படியே பாதியில் நிறுத்தி அவனை பார்க்கவும், இரண்டு நாட்களாக அவளின் சமையலை சாப்பிட்டு இருந்தவன் “உன்னளவுக்கு இல்லைனாலும் ஓரளவு சமைப்பேன்..” என்றிருந்தான் தாரக்.
 
இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் சிந்து நின்றிருக்க.. “இன்னைக்கு நான் சமைச்சதா இருக்கட்டும், நீ போய் ரெஸ்ட் எடு.. இல்லை வேற வேலை ஏதாவது இருந்தா பார்..” என்றான் தாரக்.
 
 
‘வேண்டாம் நான் செய்யறேன்’ என உரிமையோடு சென்று தாரக்கின் கையில் இருந்து கரண்டியை வாங்கிக் கொள்ள அவளால் முடியவில்லை. அதற்கு மேல் மறுத்துப் பேசவும் முடியாமல் அமைதியான தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்த சிந்து, உணவு மேஜையிலேயே சென்று அமர்ந்து கொண்டாள்.
 
 
அங்கிருந்து பார்க்கும் போது தாரக் என்ன செய்கிறான் என எதுவும் தெரியவில்லை. அவனின் முதுகு மட்டுமே தெரிய.. கன்னத்தில் கை வைத்தபடி அவனையே சிந்து பார்த்திருக்க.. திரும்பி இரண்டு முறை அவளை பார்த்தவன் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
 
 
தோசை தக்காளி சட்னியோடு அடுத்த சில நிமிடங்களில் அவள் முன் தட்டைக் கொண்டு வந்து வைத்தான் தாரக். அந்த மொறுமொறு தோசையும் எண்ணெய் கசிய சுருண்டு வந்திருந்த தக்காளி சட்னியையும் பார்க்கும் போதே எடுத்து சாப்பிட வேண்டும் என தோன்றியது.
 
 
சிந்து அப்படியே தட்டைப் பார்த்துக் கொண்டிருக்க.. “பயப்படாம சாப்பிடலாம் உயிருக்கு நான் உத்தரவாதம்..” என்றான் தாரக். “இல்லை அதுக்காக பார்க்கலை..” என அவசரமாக சிந்து சொல்லவும், “நான் சாதாரணமா பேசறதுக்கு எல்லாம் நீ இவ்வளவு பதற வேண்டாம் செந்தூரிகா.. சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு..” என்றவன் சமையலறைக்குள் மீண்டும் சென்று விட, ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டவளை அதன் ருசி நொடியில் அந்த தட்டை காலி செய்ய வைத்திருந்தது.
 
 
இரண்டு ஆப் பாயில் போட்டுக் கொண்டு வந்து அவள் முன் வைத்திருந்தவன், தட்டு அதற்குள் காலியாக இருப்பதைக் கண்டு “இரு தோசை கொண்டு வரேன்..” என உள்ளே செல்ல முயல.. “இல்லை வேண்டாம் இதுவே போதும், இத்தனை எல்லாம் என்னால் சாப்பிட முடியாது..” என்றாள் சிந்து.
 
 
“இனி நீ சாப்பிட்டு தான் ஆகணும் செந்தூரிகா.. இங்கே தனியா இருக்க போறே உன்னை நீ தான் பார்த்துக்கணும்.. இங்கே நீ படிக்க வந்திருக்க, அது சரியா நடந்து முடியணும்னா நீ ஆரோக்கியமா இருக்கணும் புரியுதா..?” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கூறினான் தாரக்.
 
 
அதில் அவள் அமைதியாக தலையசைக்க.. மீண்டும் இரண்டு தோசைகளைக் கொண்டு வந்து அவள் தட்டில் வைத்தான் தாரக். அதை மறுக்க மனமில்லாமல் சாப்பிட்டு முடித்தவள், “இந்த தக்காளி சட்னி மாஸ்டர் பீஸ்..  இது வரைக்கும் இப்படி ஒரு டேஸ்ட்டில் நான் இதை சாப்பிட்டதே இல்லை..” என்று தன்னை மறந்து சிந்து கையை ருசி பார்த்துக் கொண்டே சொல்லிவிட, “தனாவும் இதையே தான் சொல்லுவா.. என் சமையலில் அவளுக்கு ரொம்ப பிடிச்சது இந்த தக்காளி சட்னி..” என்று முகம் மலர கூறினான் தாரக்.
 
 
ஆனால் சொல்லிவிட்ட பின்பே தன் தவறு புரிய, சட்டென சிந்துவின் முகத்தை தாரக் கவனிக்க.. அவளோ சிறு புன்னகையோடு அதைக் கேட்டிருந்தாள். எங்கே பழைய நினைவுகளை அவளுக்கு கிளறி விட்டு விட்டோமோ..! என்று எண்ணி பதட்டமான தாரக், அப்படி எதுவும் அவளின் முகத்தில் தெரியாததில் நிம்மதியானான்.
 
 
தாரக்கின் முகத்தை கவனித்திருந்த சிந்துவுக்கும் அவன் மனநிலை நன்றாகவே புரிந்தது. ஆனால் இதைப்பற்றி வேறு எதுவும் பேசி இப்போது இருக்கும் மனநிலையையும் சூழ்நிலையையும் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் அமைதியாகவே இருந்து விட்டாள் சிந்து.
 
 
அவளுக்கு கல்லூரி தொடங்கி இருக்க.. முதல் மூன்று நாட்கள் சிந்துவை தானே அழைத்துச் சென்று அழைத்து வந்து அவளுக்கு அனைத்தையும் பழக்கப்படுத்தினான் தாரக். முன்பே அவன் அனைத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தாலும் இப்படி சென்று வரும் போது இன்னும் நன்றாகவே அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
 
 
அதோடு அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலரோடு ஸ்வேதாவின் மூலம் அறிமுகமும் ஏற்பட்டிருக்க.. கொஞ்சம் பதட்டம் நீங்கி மெல்ல மெல்ல இந்த சூழ்நிலைக்கு பழகிக் கொள்ளத் தொடங்கினாள் சிந்து.
 
 
மறுநாள் ஸ்வேதாவை வரவழைத்து எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் அவளிடம் கேட்கும்படி கூறினான் தாரக். ஸ்வேதாவும் இந்த ஒரு வாரத்தில் நட்போடு நன்றாகவே சிந்துவுடன் பழகி இருக்க அவளும் மறுக்கவில்லை.
 
 
 ஸ்வேதா இங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறாள். மூன்று வருடமாக அவள் அமெரிக்காவில் இருப்பதோடு அவளுக்கு இந்தப் பகுதியில் அனைத்தும் நன்றாகவே தெரிந்திருந்தது. இதெல்லாம் புதிதாக வந்த சிந்துவுக்கு உதவியாக இருக்கும் என நினைத்தே ஸ்வேதாவுக்கு அருகிலேயே வீடு பார்த்திருந்தான் தாரக்.
 
 
இதையெல்லாம் விளக்கமாக கூறியவன், எப்போது என்ன தேவை என்றாலும் தயங்காமல் தன்னை அழைக்குமாறும் கூறிவிட்டே அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
 
 
இதையெல்லாம் யோசித்தபடி நின்றிருந்தவள், கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்து தயாராக சென்றாள்.
 
 
**
 
 
இங்கே அவ்வளவு பெரிய வீட்டில் தனியே குட்டி போட்ட பூனை போல் இங்குமங்கும் உலாத்திக் கொண்டிருந்தார் நாகராஜன். தன்னை சேர்ந்தவர்கள் என்று யாரும் இல்லாமல் திடீரென தனித்து விடப்பட்டது போல் இருக்க.. அதில் உண்டான கோபத்தை தன் நடையில் காண்பித்துக் கொண்டிருந்தார் நாகராஜ்.
 
 
அவர் எவ்வளவு முயன்று பார்த்தும் இப்போது வரை முத்துவுக்கும் அவனுடன் சென்றவர்களுக்கும் என்னவானது என்று அறிந்து கொள்ளவே முடியவில்லை.
 
 
தனக்குத் தெரிந்த எல்லா வகை ஆட்களை வைத்தும் முயற்சித்துப் பார்த்து விட்டார். ஆனாலும் யாராலும் முத்துவைப் பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு தாரக் தனக்குத் தெரிந்த மேலிடத்தின் மூலம் அழுத்தம் கொடுத்திருந்தான்.
 
 
அன்று தன் வீட்டிற்கு வந்த இன்ஸ்பெக்டருக்கும் அவருடன் வந்த காவலாளிகளுக்கும் மட்டுமே அன்று இரவு அங்கு நடந்தது தெரியும். மற்ற அனைவருக்கும் இதைப் பற்றி எதுவுமே தெரிய வராமல் பார்த்துக் கொண்டவன், நிஜமாகவே முகமூடி கொள்ளையர்கள் தான் பிடிபட்டனர் என்று மற்றவர்களை நம்ப வைத்து இருந்தான்.
 
 
இதில் அவரால் எதையுமே கண்டறிய முடியவில்லை. அதேபோல் சிவாவும் அவன் உடன் இருந்தவர்களும் எப்படி மாயமானார்கள் என்றும் அவருக்கு புரியவில்லை. இதைப்பற்றி யோசித்து யோசித்து குழம்பியவருக்கு தன்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே பெரும் கோபமாக மாறியது.
 
 
தாரக்கிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே அவரை ஆத்திரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. வழக்கமாக அவர் அதை காண்பிக்கும் யாருமே இன்று அருகில் இல்லாததில் தன் கோபத்தை யாரிடம் கொட்டுவது என தெரியாமல் மது பாட்டில்களை தான் முழுதாக தனக்குள் சரித்துக் கொண்டிருந்தார் நாகராஜன்.
 
 
ஆனால் அதுவுமே அவரை அமைதிப்படுத்தவில்லை. இதில் தன் முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போன கோபத்தோடு ஏதாவது செய்தே தீர வேண்டும் என முடிவெடுத்தவராக அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க.. இவரின் தேடலுக்கு சொந்தக்காரனான சிவாவும் அவனுடன் இருந்தவர்களும் அங்கு கொத்தடிமைகளாக சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.
 
 
மனிதர்களை கொத்தடிமைகளாக விலை கொடுத்து வாங்கி ஒருவேளை சாப்பாடு மட்டும் கொடுத்து 20 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
 
 
கை கால் உடைந்தவர்கள் என்று கூட பாராமல் இந்த நிலையிலும் தொடர்ந்து அவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான் சுரேஷ். வலி ஒரு பக்கம், நேரத்திற்கு பசிக்கு உணவு கிடைக்காத கோபம் ஒரு பக்கம், மருந்து மாத்திரை கொடுக்காமல் வலியோடு துடிக்க வைத்துக் கொண்டிருந்தது ஒரு பக்கம் என சிவா உயிரோடு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
 

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் - 42
 
ஸ்வேதாவுக்கும் சிந்துவுக்கும் இடையில் நல்ல நட்பு உருவாகி இருந்தது. இருவருக்குமே நேர் எதிர் குணம் சிந்து அமைதியான அதிகம் பேசாத குணம் உடையவள் என்றால் அதற்கு நேர் மாறாக பார்த்தவுடன் அனைவரோடும் பழகி கலகலப்பாக பேசக்கூடியவள் ஸ்வேதா.
 
 
தாரக் அறிமுகப்படுத்தியதற்காக பேசி பழகினாலும் பெரும்பாலும் சிந்து அமைதியாக ஒதுங்கிக் கொள்ளவே முயல.. அதற்கு ஸ்வேதா வாய்ப்பளித்தால் தானே..! நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து சிந்துவோடு பேசி அவளையும் இயல்பாக்கி தன்னோடு நட்பு பாராட்ட செய்திருந்தாள் ஸ்வேதா.
இவளின் இந்த குணம் அறிந்ததால் தான் அவளுக்கு பக்கத்து வீட்டையே சிந்துவுக்கு தாரக் ஏற்பாடு செய்திருந்தானோ என்னவோ..? ஆனால் பெரும்பாலும் தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வே சிந்துவுக்கு ஸ்வேதாவின் நட்பின் காரணமாக ஏற்படவில்லை.
 
 
அவள் ஆசைப்பட்ட படிப்பில் சேர்த்து விட்டோம், மற்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டோம், இதோடு தன் கடமை முடிந்தது என்று எண்ணி விடவில்லை தாரக். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினமும் ஒருமுறை அவளை அழைத்து நலம் விசாரித்து அவளுக்கு எதுவும் தேவையா என கேட்டு அறிந்துக் கொள்வான்.
 
 
பெரும்பாலும் அவள் கல்லூரி செல்லும் நேரத்தை கணக்கிட்டு அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அழைத்து பேசுபவன், ‘தூரத்தில் இருந்தாலும் நீ யாரும் இல்லாமல் அங்கே தனித்து விடப்படவில்லை, உனக்கு எப்போதும் நான் இருக்கிறேன்..’ என உணர்த்தி கொண்டே இருந்தான்.
 
 
இது ஓரளவு சிந்துவுக்கு மனதில் தைரியத்தை கொடுத்தது என்னவோ உண்மை. முகம் தெரியாத நாட்டில் இருப்பவளுக்கு ஒரு வகையில் இது தேவையாகவும் இருந்தது.
 
 
இப்படியே அலைபேசி வழியாக தாரக்கும், நேரில் ஸ்வேதாவும் அவளுக்கு உறுதுணையாக இருக்க.. கிட்டத்தட்ட மூன்று மாதம் கடந்திருந்தது. சிந்து அங்கு நன்றாகவே பொருந்திக் கொண்டாள் எனலாம்.
சிறுவயதிலிருந்தே கல்லூரி பள்ளி என விடுதியில் தங்கி படித்து இருந்தவளுக்கு இங்குள்ள வாழ்க்கை முறையில் பொருந்தி போகத்தான் கொஞ்சம் நேரம் எடுத்தது. மற்றபடி தன் வேலைகளை தானே பார்த்துக் கொண்டு படிக்க தொடங்கியவளுக்கு, அனைத்தும் வெகு சீக்கிரமே பழக்கமாகிவிட்டது.
 
 
இங்கிருந்து சென்ற பின் தினமும் அழைத்துக் கொண்டிருந்த தாரக், ஒரு மாதத்திற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மூன்று நாட்களுக்கு ஒரு முறை, என அழைப்பதை குறைத்துக் கொண்டே வந்து இப்போது வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைத்து பேசுவான்.
 
 
அதுவும் வார இறுதி நாட்களில் அழைத்து அவளை நலம் விசாரித்து வேறு எதுவும் தேவையா என கேட்டு அங்கு எல்லாம் எப்படி செல்கிறது என அறிந்து கொண்டு அழைப்பை துண்டித்து விடுவான். அதற்கு மேல் எதுவும் இருக்காது. தாரக்கின் வேலையை பற்றி அறிந்திருந்தவளுக்கு அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று புரிந்தது.
 
 
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க.. மெல்ல சிந்துவுக்கு அங்கு நட்பு வட்டம் உருவாக தொடங்கியது. அவள் விரும்பி படிக்க ஆசைப்பட்ட துறை என்பதால் ஆர்வமாகவே ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து கற்றுக் கொள்ள தொடங்கினாள் சிந்து.
 
 
***
 
 
 நாகராஜனுக்கு வீட்டிற்கு செல்லவும் விருப்பமில்லை. யாரும் இல்லா வீட்டில் எவ்வளவு நேரம் தான் தனிமையில் இருப்பார்..? இப்போதும் அவருக்கென வேலையாட்கள் அவரிட்ட கட்டளையை உடனே நிறைவேற்ற அடியாள் போல் பலர் காத்திருக்கிறார்கள் தான்.
 
 
ஆனால் முத்துவின் இடத்தில் வைத்து அவரால் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப முடியவில்லை. அவனிடமிருந்த ஒரு நேர்மை மற்றவர்களிடம் இல்லாதது போல் அவருள் ஒரு எண்ணம்.
 
 
அதில் அனைவரையும் சந்தேகக் கண்ணோடே பார்த்து கொண்டிருந்தார் நாகராஜன். இதற்கு காரணம் ஒருவகையில் விஷ்வா எனலாம். அவனை இப்படி ஒரு கோணத்தில் அவர் வைத்துப் பார்த்ததோ.. யோசித்ததோ கூட கிடையாது. அவனே தன் மேல் இத்தனை கொலை வெறியோடு இருந்திருக்கிறான் என்று அறிந்த நொடி முதல் அவரால் கண் முன் இருக்கும் யாரையும் சந்தேகிக்காமல் இருக்கவே முடியவில்லை.
 
 
இது வேறு நாகராஜனுக்கு ஒருவித மன உளைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தது. தோட்டம் தொழில் என அனைத்தையும் இத்தனை காலமாக அருண் தான் பார்த்துக் கொண்டிருந்தான். சும்மா பெயருக்கு தான் அவனை அதிகாரம் செய்து கொண்டிருப்பார் நாகராஜன்.
 
 
இப்போது அவனும் இல்லாமல் போனதில் அனைத்தையும் அவரே பார்க்க வேண்டிய நிலை. இதில் சுஜாதாவின் கை பக்குவம் இல்லாமல் வேலையால் சமைத்து வைக்கும் உணவு வேறு உள்ளே செல்லவில்லை. இதெல்லாம் சேர்ந்து அவரை ஒருவித மன அழுத்தத்தில் தள்ளி இருந்தது.
 
 
அன்று சுஜாதாவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டை விட்டுச் சென்ற போது கூட ‘எவ்வளவு நாள் இவனால் வெளியில் இருந்து விட முடியும்..? சீக்கிரம் தன்னை தேடி வந்து விடுவான்..’ என்றே நினைத்திருந்தவரின் நினைப்பை பொய்யாக்கி இருந்தான் அருண்.
 
 
கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்து இருந்த நிலையில் அருண் தன்னைத் தேடி வராததோடு சுஜாதாவும் ஒரு முறையும் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதும் சேர்ந்து அவரை பெரும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தது.
 
 
‘திமிர், திமிர்.. நான் இல்லாம இவங்க எல்லாம் வாழ்ந்துட்டாங்களா..? இன்னைக்கு இவங்களுக்கு நான் வேண்டாதவனா போயிட்டேனோ..! அப்படி ஒன்னும் யார் தயவிலும் நான் இல்லை.. இத்தனை நாள் என் தயவில் தான் இவங்க எல்லாம் இருந்தாங்க..
 
 
இப்போவும் நான் தனிக்காட்டு ராஜா தான், என்னைக்கு இருந்தாலும் என்கிட்ட இருக்க சொத்துக்காகவாவது என்னை தேடி வந்து தானே ஆகணும்.. அப்போ இருக்கு உங்களுக்கு எல்லாம்..’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவராக தோப்பில் கயிற்று கட்டில் போட்டு படுத்திருந்தார் நாகராஜன்.
 
 
முழுதாக இரண்டு பாட்டில் மது உள்ளே சென்று இருந்தது. ஆனால் அது கூட அவருள் கணன்று கொண்டிருந்த ஆத்திரத்தை தணிக்க முடியாமல் தோற்றுப் போக.. மற்றொரு பாட்டிலை கையில் எடுத்தவருக்கு அதை குடிக்க கூட அத்தனை வெறுப்பாக வந்தது.
 
 
முன்பெல்லாம் தினமும் மாலை நேரத்தில், தன் அறையில் முத்துவுடன் முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டு குடிப்பது அவரின் வழக்கம். அப்போதெல்லாம் முத்து காண்பிக்கும் பணிவும் அவர் சொல்வதை அப்படியே நிறைவேற்ற அவன் முனைவதும் நாகராஜனுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். அதெல்லாம் இல்லாமல் இன்று தனிமையில் குடிப்பது கூட வெறுப்பாக இருந்தது.
 
 
ஆரம்பத்தில் முத்து இல்லை என்றால் என்ன..? என இப்போது அவரிடம் வேலையில் இருக்கும் ஆட்களோடு குடிக்க கூட முயன்றார் நாகராஜன். ஆனால் அவர்கள் மேல் முழு நம்பிக்கை இல்லாததில் முழுதாக போதையாக விரும்பாமல் லேசாக குடித்துக்கொண்டு மனதில் இருக்கும் எதையும் பேசி பகிர்ந்து கொள்ளவும் முடியாத நிலையில் ஒரு மாதிரி வினோத நிமிடங்களாகவே அது கழிந்ததில் வெறுத்துப் போனவர், அதன் பின் யாரையும் உடன் சேர்த்துக் கொள்வதில்லை.
 
 
இப்போதும் அப்படியே வேலை முடியும் வரை அவர்களை உடன் வைத்திருந்தவர், அதன் பின் அனைவரையும் அங்கிருந்து விரட்டி விட்டிருந்தார்.
 
 
நள்ளிரவு வரை குடித்துவிட்டு முழு போதையில் தன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் கண்டபடி திட்டி தீர்த்துக் கொண்டிருந்தவர், இதற்கெல்லாம் காரணம் ஒருவனே என சொல்லி அவனையும் பல வண்ண வார்த்தைகளில் அர்ச்சித்து முடித்து அப்படியே போதையில் மயங்கி போனார்.
 
 
காலையில் லேசாக போதை தெளிந்து புரண்டு படுக்க முயன்றவருக்கு ஏதோ தடையாக இருக்க.. வழக்கம் போல் காது கூசும் வார்த்தைகளை சத்தமாக சொல்லியபடியே திரும்பியவர், அப்போதே தன் இரு கரங்களும் இரும்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.
 
 
இதில் திடுக்கிட்டு போய் விழிகளை நன்றாக திறந்தவர், எழுந்து அமர்ந்து பார்க்க.. கைகள் மட்டுமல்லாமல் கால்களும் அருகில் இருந்த தூணோடு சேர்த்து கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
 
 
அந்தத் தூணில் இருந்து நான்கு ஐந்து அடிக்கு மட்டுமே சுற்றி வரக்கூடிய அளவில் கையும் காலும் கணமான இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருப்பது தெரிய “ எவன்டா அது..? தைரியம் இருந்தா நேரில் வாங்கடா..” என சத்தமிட்டார் சுற்றிலும் பார்வையை சுழற்றியவாறே நாகராஜன்.
 
 
அவர் கத்தியது மட்டுமே அவருக்கு மீண்டும் எதிரொலிக்க.. அறையின் மூலையில் ஒளிர்ந்து கொண்டிருந்த குண்டு பல்பின் வெளிச்சத்தில் அந்த இருட்டு அறையை  ஆராய முயன்றார் நாகராஜன்.
 
 
ஆனால் அங்கு அவர் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் எதுவுமே இல்லை. ஒரு ஜன்னல் கூட கிடையாது, வெறும் சின்ன இரும்பு கதவு ஒன்றோடான பத்துக்கு பத்து அளவில் உருவாக்கப்பட்டிருந்த இருட்டு அறையில் நடுநாயகமாக ஒரு பெரிய இரும்பு தூண், முடிந்தால் என்னை அசைத்து பார் என்பது போல் இருக்க.. கொஞ்சம் தள்ளி ஒரு வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தது.
 
 
கதவுகளோ தடுப்புகளோ எதுவும் இல்லாமல் அறையின் மூலையில் இருந்த அதை பார்த்தபடியே திரும்பியவர், தன் கை கால்களில் இருந்த சங்கிலி அளவை வைத்துப் பார்க்கும் போது அதுவரை அவரால் தங்கு தடையின்றி சென்றுவர முடியும் எனப் புரிந்தது. அதை தவிர அங்கு பார்க்கவோ புரிந்து கொள்ளவோ எதுவுமே இல்லை.
 
 
எவ்வளவு முயன்றும் எப்படி இங்கு வந்தோம் என நாகராஜனுக்கு புரியவே இல்லை. இறுதியாக தோப்பில் மது அருந்தி கொண்டிருந்தது மட்டுமே அவர் நினைவில் இருக்க.. அதன் பின் நடந்ததெல்லாம் சுத்தமாக ஞாபகத்திற்கு வரவில்லை.
 
 
“* யாருடா நீ..? இப்படி கோழை மாதிரி ஒளிஞ்சு நின்னு விளையாடறே..? தைரியமா இருந்தா கண் முன்னே வாடா..” என அவர் சத்தமிட்டு கொண்டிருக்க.. அதற்கும் எந்த ஒரு பிரதிபலிப்பும் எங்கிருந்தும் வரவில்லை. தனியே கத்தி கத்தி ஓய்ந்து போய் நாகராஜனே அமைதியாக வேண்டி இருந்தது.
 
 
தனிமையில் அப்படி எத்தனை மணி நேரம் கத்திக் கொண்டிருந்தார் என அவருக்கே தெரியாது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் கத்த சக்தியின்றி நா வறண்டு போய் தானே அமைதியாகி போனார் நாகராஜன்.
 
 
ஒரு பக்கம் பசி மயக்கம் மற்றொரு பக்கம் எங்கே இருக்கிறோம் என தெரிய பதட்டம், நேற்று அளவுக்கு அதிகமாக குடித்திருந்தது வேறு நெஞ்செரிச்சலை தர, குடிக்க கூட தண்ணீர் இல்லா நிலையும் எங்கோ வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமும் நேரமாக ஆக நாகராஜனுக்குள் பயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.
 
 
“ஏய் யாருடா நீங்க..? என்னடா வேணும் உங்களுக்கு..?” என பலவீனமான குரலில் அவர் முனங்கி கொண்டிருக்க.. எதற்குமே எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதோடு இங்கு வேறு யாரும் இருப்பது போலும் அவருக்குத் தெரியவில்லை.
 
 
அதில் சோர்ந்து போய் அப்படியே விழிமூடி படுத்துக் கொண்டார் நாகராஜன். இதற்கு மேல் கத்தவோ கோபப்படவோ அவர் உடலில் துளியும் சக்தி இல்லை.
 
 
பல மணி நேரங்களுக்குப் பிறகு ஏதோ சத்தம் கேட்க சுருண்டு படுத்திருந்தவர் மெல்ல சோர்வாக விழிகளை திறந்து பார்க்க.. அந்த சின்ன கதவின் அடியில் சின்ன திறவு போல் இருக்க அதன் வழியே ட்ரே போல் ஒன்று நகர்ந்து இந்த பக்கம் வந்தது.
 
 
அதை அவர் என்னவென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. மீண்டும் அந்த கதவுக்கு அடியில் இருந்த திறவு மூடிக்கொண்டது. சட்டென உடலில் இருந்த மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி அந்த கதவை நெருங்க நாகராஜன் முயல.. ஆனால் அவர் கை கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலி அதற்கு அனுமதிக்கவில்லை.
 
 
அதே நேரம் அதன் வழியே வந்த டிரேவில் இரண்டு துண்டு பிரட்டும் ஒரு சின்ன பாட்டில் தண்ணீரும் இருந்தது. இவ்வளவு நேரம் பசியிலும் நா வறண்டு போயும் இருந்தவருக்கு இதை கண்டதும் கோபம் தான் வந்தது. ஏதோ நாயைக் கட்டி வைத்து உணவு கொடுப்பது போல் இருக்க.. மீண்டும் பல வண்ணங்களில் திட்டிக் கொண்டே அதை எட்டி உதைத்தவர் “யாருக்குடா வேணும் உன் பிச்சை சாப்பாடு..? நான் யார் தெரியுமா..? தைரியம் இருந்தா என் முன்னே வாடா, ஒரு கை பார்த்துக்கலாம்.. கோழை மாதிரி கட்டி வெச்சு விளையாடறே..” என்று அவர் பெருங்குரல் எடுத்து கத்தியும் எதற்கும் பதில் வரவில்லை.
 
 
இதில் மேலும் அரை மணி நேரம் கத்தி பார்த்துவிட்டு மறுபடியும் சுருண்டு படுத்துக் கொண்டார் நாகராஜன். சில மணி நேரங்கள் கடந்த பின் அவருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தண்ணீராவது உடனே வேண்டும் என்பது போல் இருக்க.. அதை எடுத்து குடிப்பதா வேண்டாமா என்ற மனப்போராட்டத்திலேயே மேலும் சில நிமிடங்கள் அவருக்கு கழிந்தது.
 
 
இதற்கு மேலும் தன்னால் சமாளிக்க முடியாது எனப் புரிய.. தண்ணீரைக் குடிக்க நினைத்து அதை எடுக்க முயன்றவருக்கு உடலில் உள்ள சக்திகள் மொத்தமும் வடிந்தது போல் இருந்தது. அவரால் எழுந்து அமரக்கூட முடியவில்லை.
 
 
இரண்டு முறை முயன்று பார்த்துவிட்டு தன் முயற்சியை கைவிட்டவர், விழிமூடி அப்படியே படுத்திருந்தார். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை என்றால் உயிரே போய்விடும் எனப் புரிந்து, மெதுவாக தன் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி எழுந்து அமர முயன்று தள்ளாடி சரிந்து, பிறகு முயன்று மீண்டும் சரிந்து, என நான்காவது முயற்சியில் ஓரளவு எழுந்து விட்டார் நாகராஜன்.
 
 
ஆனால் இப்போது அடுத்த பிரச்சனையாக கோவத்தில் அவர் தூக்கி வீசிய தண்ணீர் கதவுக்கு பக்கத்தில் சென்று விழுந்திருந்தது. இப்போது இவர் கை கால்களில் கட்டி இருந்த சங்கிலி அவ்வளவு தூரம் செல்ல அவரை அனுமதிக்கவில்லை. வாய்ப்பே இல்லை என தெரிந்தும் பலமுறை தூணோடு சேர்த்து இழுத்து செல்ல முயன்று தோற்றவர், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்.
 
 
வழக்கமாக இது போலான நேரங்களில் கையில் கிடைக்கும் அருகில் இருக்கும் எதையாவது எடுத்து வீசியே பழகியவருக்கு அப்படி எதுவும் கூட அருகில் இல்லாதது இன்னும் வெறியேற்றியது.
 
 
வாய்க்கு வந்தபடி எல்லாம் கத்திவிட்டு மீண்டும் மடங்கி அமர்ந்து அப்படியே சுருண்டு கொண்டார் நாகராஜன். பசி, தாகம், கோபம், இயலாமை, வெறுப்பு, தனிமை, ஆத்திரம் என எல்லாம் சேர்ந்து அவரை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் தன் கோபத்தை காண்பிக்க கூட யாரும் இல்லா நிலையில் யாரிடம் இதையெல்லாம் வெளிப்படுத்துவார் பாவம்.
 
 
ஆரம்பத்தில் சத்தமாக திட்டி கத்தி என்னென்னவோ முயன்று பார்த்தும் எதுவும் பலிக்காமல் போனதில் இனி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தன் தாகத்தையும் பசியையும் தான் அதிகரிக்கும் என புரிந்தோ புரியாமலோ தனக்குள்ளேயே சத்தம் இல்லாமல் கண்ணுக்குத் தெரியாத எதிரியை முணகலாக திட்டிக் கொண்டிருந்தார் நாகராஜன்.
 
 
சரியாக 24 மணி நேரத்திற்கு பிறகு அதே போல் கதவின் கீழ் இருந்த சின்ன திறவின் வழியே மீண்டும் ஒரு உணவு தட்டு அவரை நோக்கி வந்தது. அதேபோல் இரண்டு பிரெட் துண்டுகளும் ஒரு சின்ன தண்ணீர் பாட்டில் மட்டுமே அதில் இருக்க.. இந்த முறை அதை வேண்டாம் என தூக்கி வீசும் நிலையில் அவர் இல்லை.
 
 
அவசரமாக அதை எடுத்து தண்ணீரை முதலில் குடித்து முடித்தவர் அதே அவசரத்தோடு அந்த பிரட்டையும் இரண்டு கரங்களில் பிடித்து வேகமாக சாப்பிட்டு முடித்தார்.
 
 
அதற்குப் பிறகும் நாகராஜனுக்கு பசியும் தாகமும் கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் எதுவுமே இல்லாமல் இருந்ததற்கு இது கொஞ்சம் பரவாயில்லை என்றே அந்த நொடி அவருக்கு தோன்றியது. தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என அவர் ஒரு நாளும் நினைத்ததில்லை.
 
 
இப்போதும் அவர் மனதில் அந்த ஆத்திரம் கணன்று கொண்டு தான் இருந்தது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் மட்டும் யார் எனத் தெரிந்தால் அவனை கண்டம் துண்டமாக வெட்டி போடும் அளவுக்கு வெறி எழுந்தது.
 
 
ஆனால் யார் என தெரிய வேண்டுமே..! அதற்கு முன் அவர் இங்கிருந்து தப்பிக்க வேண்டுமே..!! அதுவரை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது இங்கே கிடைக்கும் உணவை வீணாக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசித்தவராக சுருண்டு படுத்திருந்தார் நாகராஜன்.
 
 
**
 
 
கல்லூரி முடிந்து வெளியில் வந்தாள் சிந்து. சுற்றிலும் சந்தோஷமும் கொண்டாட்டமுமாக அவள் வயதை ஒத்த ஆண்கள் பெண்கள் பேசி சிரித்து ஒருவரை ஒருவர் வம்பு இழுத்து என்று ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்க.. அதையெல்லாம் கொஞ்சமும் கவனிக்காமல் தளர்வான நடையோடு கேட்டை நோக்கி மெல்ல நடந்து கொண்டிருந்தாள் சிந்து.
 
 
சுற்றி இருக்கும் அவர்களிடம் இருக்கும் துள்ளல் அவளிடம் கொஞ்சமும் இல்லை. தன் கையில் இருந்த அலைபேசியை மீண்டும் ஒருமுறை திறந்து பார்த்தவளுக்கு அதில் ஒரு அழைப்பும் மெசேஜும் வராததை கண்டு வெறுமையாக இருந்தது.
 
 
சுஜாதா அருண் என யாரும் அவளை தினமும் அழைப்பதில்லை. இந்த மூன்று மாதங்களில் மொத்தம் இரண்டு முறை தான் அருண் அழைத்து பேசியிருப்பான்.  அப்போது சுஜாதாவும் அவனிடமிருந்து அலைபேசியை வாங்கி பேசி இருக்கிறார் அவ்வளவு தான்.
 
 
‘இவ்வளவு தூரத்தில் தனியே இருக்கும் தன்னைப் பற்றி யோசிக்க கூட அவர்களுக்கு நேரமில்லையோ..!’ என்ற எண்ணமே அவளுள் ஏதோ செய்தது. அங்கு அவர்களின் நிலை என்ன என்று இப்போதும் சிந்துவுக்கு தெரியாததில் தன்னை மறந்தே விட்டார்களோ என்று கூட நினைத்தாள்.
 
 
தாரக்கும் இப்போதெல்லாம் அதிகம் அழைப்பதில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலோ கேட்க வேண்டும் என்றாலோ மட்டுமே அழைத்து பேசுவதோடு சரி. தானாக இதுவரை சிந்துவும் அழைத்ததில்லை என்பதால் இருவரும் பேசி இருபது நாட்களுக்கு மேலாகி இருந்தது.
 
 
யாருக்குமே தான் வேண்டாதவளாகிப் போனோமோ என்ற எண்ணம் அவள் மனம் முழுதும் நிறைந்திருக்க.. மெல்ல நடை போட்டுக் கொண்டிருந்தவளின் கால்கள் சட்டென அப்படியே நின்றது. தன் வீட்டினரிடம் எதிர்பார்ப்பது சரி, ஆனால் தாரக்கிடம் என்ன உரிமையில் இதையெல்லாம் எதிர்பார்க்கிறோம்..?
 
 
நடந்த தவறை சரி செய்ய முயன்று தனக்காக இத்தனையும் செய்பவனிடம் இதற்கு மேல் எதையும் எதிர்பார்ப்பது தவறு என அவளுக்கு நன்றாகவே புரிந்தது. இங்கிருக்கும் தனிமை தன் மேல் அக்கறை கொண்டவன் என்ற முறையில் அவனாவது அழைத்துப் பேசலாம் என நினைத்ததோ என்னவோ..!
 
 
ஆனால் இதெல்லாம் தவறு என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவளின் வழியை மறைப்பது போல் வந்து நின்றான் ரிச்சர்ட்.
 
 
அதில் சிறு திகைப்போடு தன் நடையை நிறுத்தி அவள் பார்க்க.. “காபி..?” என்றான் அவனுக்கே உரிய உடல் மொழியோடும் புன்னகையோடும் ரிச்சர்ட். அவனை பார்க்கும் யாருக்கும் ரிச்சர்டின் முகத்தில் இருக்கும் புன்னகை தானாக ஒட்டிக்கொள்ளும். அதேபோல் சிந்துவின் முகத்திலும் லேசாக புன்னகை மலர, அவனைப் பார்த்தவள், லேசான மறுப்போடு ஏதோ சொல்ல வர.. “நீ எனக்கு ப்ராமிஸ் செஞ்சிருக்கே செண்டு..” என்றான் ரிச்சர்ட்.
 
 
அவன் தன் பெயரை இப்படி உச்சரிக்கும் போதெல்லாம் அவளையும் மீறி சிந்துவின் இதழ்கள் தானாக மலரும். இப்போதும் அப்படியே சிறு புன்னகையோடு அவனை பார்த்தவள், “எஸ், ஆனா இன்னைக்கு வேண்டாமே..” என அவள் சிறு கெஞ்சுதலோடு கேட்கவும், “நேத்தும் நீ இதையே தான் சொன்னே..” என்றான் முகம் மாற அதே புன்னகையோடு ரிச்சர்ட்.
 
 
“ஆமா, ஆனா நான் இன்னைக்கு கொஞ்சம் டயர்டா இருக்கேன், நிஜமா நாளைக்கு போகலாம் ரிச்சி..” என அவள் வாக்கு கொடுக்க.. இன்று பிராக்டிகல் கிளாசில் வேலை அதிகம் இருந்ததை உணர்ந்தவனாக ‘சரி’ என தலையசைத்த ரிச்சர்ட் “நாளைக்கு கண்டிப்பா வரணும்..” எனவும், சிந்துவின் தலை வேகமாக மேலும் கீழும் அசைந்தது.
 
 
“ஓகே யூ கேரியான்..” என்று அவளின் வழியை விட்டு நகர்ந்தவன் “ஒகே பாய்..” என்று விட்டு அங்கிருந்து செல்ல முயன்றவளை “நான் உன்னை டிராப் செய்யட்டுமா..?” என்ற ரிச்சர்டின் கேள்வி தடுத்து நிறுத்தி இருந்தது. இதில் திரும்பி பார்த்தவள் “இல்லை வேண்டாம்..” எனவும் “நீ டயர்டா இருக்கே செண்டு..” என்றான் ரிச்சர்ட்.
 
 
ஆம் என தலையசைத்தவள், பின் “எனக்கு ஒரு பிரெண்ட்டை மீட் செய்யணும், எனக்காக வெயிட் செஞ்சுட்டு இருப்பா நான் கிளம்பறேன்..” என்று விட்டு செல்ல.. அவள்  செல்லும் திசையை அதே முகம் வாடா புன்னகையோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ரிச்சர்ட்.
 
 
முதல் நாள் சிந்துவை இங்கு பார்த்ததிலிருந்து அவனுக்கு அவளை பிடித்துப் போயிருந்தது. அழகு மட்டுமல்ல அவளிடம் ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. இதுவரை அவன் பார்த்து பழகியிருந்த பெண்களிலிருந்து முற்றிலும் வேறாக தெரிந்தாள் சிந்து.
 
 
அதில் அவள் ஒதுங்கி சென்றாலும் பரவாயில்லை என தானாகவே மீண்டும் மீண்டும் சென்று பேசி அவளோடு ஒரு நட்புறவை வளர்க்க முயன்று கொண்டிருந்தான் ரிச்சர்ட். ஆரம்பத்தில் பலமுறை தோல்வியுற்றாலும் இப்போது லேசாக அவனிடம் பேசத் தொடங்கி இருக்கிறாள் சிந்து.
 
 
இதுவே அவனைப் பொறுத்தவரை நல்ல ஒரு முன்னேற்றமாகத் தான் ரிச்சர்ட்க்கு தோன்றியது. விரைவில் சிந்துவோடு நன்றாக பழகி அவளை தன்னவளக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் காரை நோக்கி ரிச்சர்ட் நகர.. சிந்துவும் தன்னையே சுற்று சுற்றி வந்து கொண்டிருக்கும் ரிச்சர்ட் பற்றி நினைத்தபடியே தான் தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
 
 

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
MNM - 41 & 42
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 

This post was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் - 43
 
நள்ளிரவை நெருங்கும் நேரம் தன் மடிக்கணினியின் முன் அமர்ந்திருந்தாள் சிந்து. அவளுக்கு முதல்முறையாக கொஞ்சம் பெரிய ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டிருக்க.. அதை நல்லபடியாக செய்து முடிக்க வேண்டுமே என்ற பதட்டத்தோடும் பரபரப்போடும் இருந்தவளுக்கு, அவள் மனதில் நினைத்தது போல் எதுவுமே சரியாக அமையவில்லை.
 
 
காலை முதல் அவளும் எத்தனையோ விஷயங்களை முயன்று பார்த்து விட்டாள். ஆனால் எதுவுமே சரியாக வரவில்லை. இதில் மனம் சோர்ந்து போக கணினித்திரையையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
 
 
எப்போதுமே நன்கு படிக்கும் சிந்துவுக்கு இங்கு முதல் முறையாக கொடுத்திருக்கும் பெரிய ப்ராஜெக்ட்டை எங்கே சரியாக செய்யாமல் போய்விடுமோ என்ற பதட்டம் மேலும் கவலையை தர, செய்வதறியாது தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டிருந்தாள் சிந்து.
 
 
‘இங்கே தன் திறமையை நிரூபிக்க கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பைத் தவற விட்டு விடுவோமோ..!’ என்ற எண்ணத்தில் கண்கலங்க அமர்ந்திருந்தவளுக்கு ‘இதை சரியாக செய்யாமல் போய் பெயரும் கெட்டு விடுமோ..!’ என்ற பயமும் உண்டானது.
 
 
ஏனெனில் தாரக் சொல்லும் போது கூட தெரியவில்லை. ஆனால் நேரில் சென்று படிக்க தொடங்கிய பிறகே இந்த கல்லூரியும் அங்கே படிக்க வரும் ஆட்களும் எப்படிப்பட்டவர்கள் என புரிந்தது.
 
 
இதில் அப்படியே சிந்து மேஜை மேல் தலை கவிழ்ந்து கொள்ள.. அதே நேரம் அவளின் அலைபேசி ஒலித்தது. இந்த நேரத்தில் யார் என்பது போல விழிகளை உயர்த்திப் பார்த்தவள், அழைப்பது தாரக் என உணர்ந்து சட்டென அதை ஏற்றிருந்தாள்.
 
 
முழுதாக இரண்டு ரிங் செல்வதற்குள் அதை அவள் ஏற்றிருக்கவும், நெற்றி சுருங்க “இன்னும் தூங்கலையா நீ..?” என்றிருந்தான் தாரக். அந்த நொடி அவளிருந்த மனநிலையில் அவன் குரல் செவிகளில் வந்து மோத.. மேலும் அவளுக்கு அழுகை தான் வந்தது.
 
 
அதில் திக்கி திணறி அதை கட்டுப்படுத்தியவாறே “இல்.. இல்லை..” என அவள் நலிந்த குரலில் சொல்லி முடிப்பதற்குள் “செந்தூரிகா ஏதாவது பிரச்சனையா..?” என கேட்டிருந்தான் தாரக்.
 
 
அவ்வளவு தான் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவளுக்கு வெடித்துக் கொண்டு கிளம்பியது. இதை கேட்டு அந்த பக்கம் இருந்த தாரக் பதறி விட்டான். “செந்தூரிகா.. என்னாச்சு..? ஏதாவது பிரச்சனையா..? என்னன்னு சொல்லு..” என அவன் படபடக்க.. அதற்குள் வேகமாக தன் முகத்தை துடைத்துக் கொண்டே “இல்லை ஒண்ணுமில்லை..” என்றாள் மெல்லிய குரலில்.
 
 
“ஒண்ணுமில்லாம தான் அழறியா நீ..?” என அவன் அதட்ட.. “இல்லை..” என்று தொடங்கி தன் பிரச்சனையை சுருக்கமாக சிந்து சொல்லி முடிக்கவும், அந்தப் பக்கம் கேட்டுக் கொண்டிருந்தவன், அதுவரை என்னவோ ஏதோ என அவளோடு பேசிக் கொண்டே அடுத்த பிளைட் எப்போது என தன் மடிகணினியில் தேடிக் கொண்டிருந்ததை நிறுத்தி இழுத்து பிடித்திருந்த மூச்சை ‘ஊப்ப்ப்’ என வெளியிட்டவாறே.. “இவ்வளவு தானா..?” என்றான் ஓய்ந்துப் போன குரலில் தாரக்.
 
 
“இல்லை, நான் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்னு நினைக்கறேன்.. எனக்கு எதுவும் சரியா வரலை, தேவையில்லாம ஆசைப்பட்டு உங்க பணத்தையும் வேஸ்ட் செஞ்சுட்டு இருக்கேன்..” என அவள் சிறு குழந்தை போல் லேசாக தேம்ப.. பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் தாரக்.
 
 
அவனின் ஆறுதல் வார்த்தையை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு தாரக்கின் இந்த அமைதி குழப்பத்தை கொடுக்க.. “நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்களா..? என்றாள் மெல்லிய குரலில் சிந்து. “எப்படி..?” என ஒன்றுமறியாதது போல் தாரக் கேட்க.. “நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு..!” என்றாள் சிந்து.
 
 
லேசாக அந்த பக்கம் புன்னகைத்தவன் “நீ அழுது முடிச்சிட்டியா..?” எனவும் “ஹ்ம்ம்..” என முனகினாள் சிந்து. “அப்போ போய் முகத்தை தொடைச்சுட்டு தண்ணி குடிச்சுட்டு வா..” என தாரக் சொல்லவும், ஏன் எதற்கு என கேட்காமல் அப்படியே செய்தாள் சிந்து.
 
 
“இப்போ எங்கே இருக்கே நீ..?” என்று அவன் கேட்கவும், “வீட்டில்..” என்றாள் சிந்து. அதில் இப்போது முன்பை விட சற்று பெரிதாக சிரித்தவன், “நான் அதைக் கேட்கலை, உன் லேப்டாப் முன்னே இருக்கியான்னு கேட்டேன்..” எனவும், ஆம் என தலையசைத்தாள் சிந்து. அது அந்த பக்கம் இருப்பவனுக்கு தெரியாமல் போக.. “என்ன பதிலையே காணோம்..” என்றான் தாரக்.
 
 
அப்போதே தன் தவறு புரிந்து “நான் தலையசைத்தேன்..” என்று நாக்கை கடித்துக் கொண்டே சிந்து சொல்லவும், “அச்சோ சமத்து..” என்றான் கேலியாக தாரக். இதில் தலையில் லேசாக தட்டிக் கொண்டவள் வேறு எதுவும் பேசாமல் இருக்க.. “ஹ்ம்ம், இப்போ சொல்லு.. என்ன உன் பிரச்சனை..?” என்றான் தாரக்.
 
 
அவள் யோசித்து வைத்திருந்த அத்தனையையும் கடகடவென சிந்து சொல்லி முடிக்கவும் “ரிலாக்ஸ், ரிலாக்ஸ்.. முதலில் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ, எதுக்கு இவ்வளவு டென்ஷன் அண்ட் பிரஷர்..? மைண்ட் ஃபுல்லா இத்தனை பிரஷர் இருந்தா எப்படி சரியா யோசிக்க முடியும்..?” என்றான் தாரக்.
 
 
அதில் “நான் சரியா செஞ்சு முடிக்கணுமேன்னு..” என சிந்து சொல்லவும் “ஆசைப்பட்டு தானே படிக்க போனே..?” என்றான் தாரக். “ஆமா..” என சிந்து சொல்லவும் “அப்போ பிரஷரோட யோசிக்காம, ஆசையா விருப்பப்பட்டு செய்.. எல்லாமே செய்ய முடியும்..” என அவன் கூறவும், “இது என் ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட்..” என்றாள் மெல்லிய குரலில் சிந்து.
 
 
“ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் பெஸ்ட்டா இருக்கணும்னு நினைக்கறது தப்பு இல்லை செந்தூரிகா.. இதை வைத்து உனக்கு அங்கே ஒரு தனியிடமும் மரியாதையும் கிடைக்கணும்னு நினைக்கறதிலும் தப்பில்லை.. ஆனா அதுக்காக இவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுக்கறது கொஞ்சமும் சரியில்லை.. சாதாரண வேலையை கூட நாம டென்ஷனா செஞ்சா தப்பா தான் போய் முடியும்..” என்றவனுக்கு அவள் அமைதியையே பதிலாக கொடுத்தாள்.
 
 
“என்ன டாபிக்..?” என்றான் தாரக். அவள் சொல்லவும், “அதுக்கு எப்படி யோசிக்கணும்னு தெரியலையா..?” என அவன் கேட்க.. “அதெல்லாம் இல்லை, ஒரு நாலைந்து ஐடியா என்கிட்டேயே இருக்கு.. இதில் எதை எடுத்தா சரியா இருக்கும்னு ஒரு குழப்பம்.. எதை ட்ரை  செஞ்சாலும் அது சரியா வராத மாதிரியே ஒரு எண்ணம்..” என்று அவள் சொல்லிக் கொண்டே செல்ல.. “இப்போ உன் பிரச்சனை என்னன்னு புரியுது..” என்றான் தாரக்.
 
 
‘எங்கே நீ இதற்கு சரிப்பட்டு வர மாட்டே என சொல்லி விடுவானோ..!’ என சிந்து நினைத்துக் கொண்டிருக்க.. “ஓவர் திங்கிங் தான் உன் பிரச்சனை..” என்றவன் “முதலில் அமைதியா உட்கார், நல்லா மூச்சை ஆழ இழுத்து வெளியே விடு..” என அவன் சொல்ல.. அதே போல் சிந்துவும் செய்தாள்.
 
 
“மூன்று முறை செய்..” என்றான் தாரக். அவளும் அப்படியே செய்தாள். “இப்போ கண்ணை மூடிட்டு எதை பத்தியும் யோசிக்காம அமைதியா ஒரு நிமிஷம் உட்கார்..” என அவன் சொல்ல.. அதையும் செய்தாள் சிந்து.
 
 
அமைதியாக ஒரு நிமிடம் செல்ல.. “இப்போ உன் மனசில் என்ன டிசைன் தோணுது..?” என தாரக் கேட்க.. அவள் முதலில் யோசித்து வைத்த ஒன்றையே சொல்ல.. “அப்போ அதையே ப்ரோசீட் செய்..” என்று எளிதாக முடித்துக் கொண்டான் தாரக்.
 
 
இப்போது சரியாக வருமா வராதா என்ற குழப்பம் எல்லாம் அவளுக்கு இல்லை. இதை எடுத்து சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க.. “சரி..” என மெல்லிய குரலில் கூறினாள் சிந்து.
 
 
“ஓகே, ஆல் தி பெஸ்ட் பெஸ்ட்.. பெஸ்ட்டா செலக்ட் ஆகும் ப்ராஜெக்ட் உன்னோடதா தான் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. உனக்கும் அந்த நம்பிக்கை இருக்கணும், நிதானமா செஞ்சு முடிஞ்சுட்டு ரிசல்ட் என்னன்னு சொல்லு..” என்று விட்டு தாரக் அழைப்பை துண்டித்திருக்க.. சில நொடிகள் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள் சிந்து.
 
 
இவ்வளவு தூரத்தில் இருந்தும் தன் மன உணர்வை புரிந்தது போல் தாரக் அழைத்து பேசியது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இங்கே அவள் வந்த இத்தனை மாதங்களில் ஒருநாள் கூட தாரக் இந்த நேரத்தில் அழைத்ததே இல்லை.
 
 
‘இன்று மட்டும் எப்படி..?’ என்று யோசித்தவளுக்கு அதற்கான விடை மட்டும் கிடைக்கவே இல்லை. பின் மெதுவாக தன் வேலையில் அவள் கவனம் செலுத்த.. கொஞ்சம் கொஞ்சமாக அது அவளை உள்ளிழுத்துக் கொண்டது.
 
 
இப்போது எந்த தடுமாற்றமும் தயக்கமும் இல்லாமல் அவள் யோசித்து வைத்திருந்த டிசைனை கொண்டு வர முயற்சி கொண்டிருந்தவளுக்கு அதை செயல்படுத்த தொடங்கிய பின் இன்னும் நிறைய யோசனைகள் தோன்றியதில் அதையும் சேர்த்துக் கொண்டாள் சிந்து.
 
 
ஒருவழியாக அடுத்த மூன்று நாட்களில் அவள் எதிர்பார்த்ததை விட வெகு அழகான டிசைன் சிந்துவின் கைகளில் இருந்தது. அதை கண்களில் நீர் தளும்ப சில நொடிகள் பார்த்தவள், “என் கனவு.. என் கனவு நிஜமாகி இருக்கு..” என சந்தோஷத்தோடு முணுமுணுத்துக் கொண்டாள் சிந்து.
 
 
******
 
 
அன்று வார விடுமுறை நாள் என்பதால் சிந்து ஓய்வாக வீட்டில் இருந்தாள். சென்ற வாரம் முழுக்க தொடர்ந்து ப்ராஜெக்ட் சம்பந்தமான வேலைகளில் இருந்ததால், ஓய்வே இல்லாமல் போனதில் உண்டான சோர்வில் தாமதமாகவே எழுந்து குளித்துவிட்டு வந்து அமர்ந்திருந்தவள், ‘என்ன சமைப்பது..?’ என யோசித்துக் கொண்டிருக்க.. வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
 
 
ஸ்வேதாவாக தான் இருக்கும் என அறிந்தே சென்று கதவைத் திறந்தவளின் எண்ணத்தை கொஞ்சமும் பொய்யாக்காமல் அங்கு ஸ்வேதா தான் நின்று கொண்டிருந்தாள். கையில் மூன்று கேசரோல் அடங்கிய ஒரு ட்ரே இருந்தது.
 
 
“நீங்களா தான் இருக்கும்னு நினைச்சேன்..” என புன்னகையோடு சிந்து வழி விடவும், “என்னை தவிர இங்கே வேற யார் வரப் போறா..?” என்றவாறே உள்ளே நுழைந்தாள் ஸ்வேதா.
 
 
“நல்லா ரெஸ்ட் எடுத்தியா..? ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் முடிஞ்சுதா..?” என ஸ்வேதா கேட்கவும், “ஹ்ம்ம், ஒரு வழியா முடிஞ்சது..” என்றபடியே இருவருக்கும் சாப்பிட தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள் சிந்து.
 
 
ஆரம்பத்தில் ஸ்வேதா உடன் தயக்கத்தோடே பழகி இருந்தாலும் இப்போது இருவருக்குள்ளும் நல்ல ஒரு நட்பு உருவாகி இருந்தது. இங்கு அவளுக்கு தெரிந்த ஒரே நபர் என்பதோடு அவளின் தேவையறிந்து உடனே உதவி செய்ய ஸ்வேதா ஓடி வருவதும் அதற்கு ஒரு காரணமாக இருக்க.. பழகத் தொடங்கி சில நாட்களிலேயே ஸ்வேதாவை அவளுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.
 
 
பெரும்பாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் அமர்ந்து ஏதாவது வளவளத்து கொண்டு இருப்பார்கள். வார இறுதி நாட்களில் வெளியில் செல்வது தேவையானவற்றை வாங்கி வருவது என எல்லாம் நடக்கும்.
 
 
இன்றும் அவள் சொல்லாமலே சிந்துவின் சோர்வை உணர்ந்து தானே சமைத்துக் கொண்டு வந்திருந்த ஸ்வேதாவை எண்ணி மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டவள் அமைதியாக சாப்பிட.. “மதியம் எனக்கு என்ன செஞ்சு தரப் போறே..?” என்றாள் ஸ்வேதா.
 
 
அதில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிந்து அப்படியே தன் கையை வாய் அருகில் கொண்டு சென்று நிறுத்தி ஸ்வேதாவை பாவமாக பார்க்க.. ‘இதற்கெல்லாம் உன்னை விட்டுட மாட்டேன்..’ என்பது போல் ஸ்வேதாவும் பார்த்து வைத்தாள்.
 
 
“நானே பாவம், ரொம்ப டயர்டா இருக்கேன்.. உங்களுக்கு தான் தெரியுமில்லை, இன்னைக்கு முழுக்க நீங்களே சமைச்சிடுவீங்களாம்.. நாளைக்கு நான் சமைப்பேனாம்..” என சிந்து பேரம் பேச.. “இந்த கதையே இல்லை, மதியம் நீ வைக்கும் பூண்டு குழம்பு தான் எனக்கு வேணும், தொட்டுக்க உன் விருப்பத்துக்கு ஏதாவது ஒரு கூட்டு செய்.. அப்புறம் பொரியல் வறுவல்னு நீ ஏதாவது சேர்த்து செய்ய ஆசைப்பட்டாலும் சரி.. நான் வேண்டாம்னு சொல்லிட்ட மாட்டேன், ஆனா மறக்காம அப்பளம் வேணும்..” என அவள் பட்டியலிட்டுக் கொண்டே செல்ல.. மலைப்பாக ஸ்வேதாவை பார்த்தாள் சிந்து.
அந்த மருண்ட பார்வையில் கலகலத்து சிரித்த ஸ்வேதா “இப்படி எல்லாம் நான் லிஸ்ட் போட கூடாதுனா ஒழுங்கா போய் சமைச்சுடு..” என போலியாக மிரட்ட.. சரி என்பதாக சிந்துவின் தலை வேகமாக அசைந்தது.
 
 
“பூண்டு குழம்பும் அப்பளமும் போதும்..” என்று ஸ்வேதா சொல்ல, நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவளாக ஸ்வேதாவை பார்த்து சிந்து “இன்னைக்கு ஏனோ ரொம்ப டயர்டா இருக்கு, நாளைக்கு நீங்க கேட்கும் எல்லாமே செஞ்சு தரேன், இன்னைக்கு சிம்பிளா சமைச்சுக்குவோமா..?” என்றாள்.
 
 
“அட இப்படி பாவமா முகத்தை வெச்சுக்காதே.. நான் தான் ஓகேன்னு சொல்லிட்டேனே..!” என ஸ்வேதா அந்த பேச்சை முடித்துக் கொள்ள.. சாப்பிட்டு விட்டு இருவரும் சோபாவில் அமர்ந்து அந்த வார நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
 
 
இது எப்போதும் உள்ள வழக்கம் தான். ஸ்வேதா தன் வேலையில் உள்ள பிரச்சனைகளை அங்கு நடந்தவற்றை பற்றி பேசுவாள். சிந்து கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வாள். இன்றும் அப்படியே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
 
 
“ஆமா சிந்து நான் கேட்கணும்னு நினைச்சேன் தீபனை உனக்கு எப்படி தெரியும்..? நீங்க சொந்தமா..!” என்றாள் ஸ்வேதா. அன்று முதல் முறை இங்கு வந்த போது கூட ஸ்வேதாவை தன் நண்பனின் தங்கை என அறிமுகம் செய்தவன், சிந்துவை வெறும் பேரை சொல்லித்தான் அறிமுகப்படுத்தி இருந்தான். அவள் யார்..? என்ன உறவு..? என்று எதையும் சொல்லவில்லை. அப்போதே சிந்துவும் அதை கவனித்திருந்தாள்.
 
 
அவனாலும் என்னவென சொல்ல முடியும் என்று புரிந்து அமைதியாக இருந்தவளுக்கு இப்போதும் அதே தயக்கம் தான் எழுந்தது. தாரக் சொல்ல விரும்பாத ஒன்றை அவள் எப்படி வெளிப்படுத்த முடியும்..? அதில் சிந்து அமைதியாக இருக்க.. தலையை ஒரு பக்கமாக சாய்த்து சிந்துவின் முகத்தைப் பார்த்த ஸ்வேதா “என்ன ஏதாவது ரகசியமா..?” என்றாள்.
 
 
“ரகசியம் எல்லாம் எதுவுமில்லை, ஆனா சொல்லணும்னா அவங்களே சொல்லி இருப்பாங்களே..!” என்று சிந்து தயங்க.. “அதுவும் சரிதான், தீபன் சொல்லாத ஒண்ணை நீ சொல்லி நாளைக்கு உங்களுக்குள்ளே பிரச்சினையாக்கிட வேண்டாம்.. அப்படியே விடு..” என்று உடனே ஒத்துக்கொண்டாள் ஸ்வேதா.
 
 
அவளிடம் சிந்துவுக்கு பிடித்த குணங்களில் இதுவும் ஒன்று. ஸ்வேதா நன்கு படித்து இங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள். கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவில் தான் இருக்கிறாள். அவள் குணத்துக்கு நிறைய நண்பர்களும் உண்டு.
 
 
ஆனால் அவர்களை எல்லாம் விடுத்து சிந்து தனியே இருந்துவிடக் கூடாது என தனி கவனம் எடுத்து அவளைப் பார்த்துக் கொள்வாள் ஸ்வேதா. சிந்துவுடன் பேசிக்கொண்டே தொலைக்காட்சியின் பக்கம் கவனத்தை திரும்பிய ஸ்வேதா, அங்கு ஓடிக்கொண்டிருந்த காதல் பாடலைக் கண்டு “ஹ்ம்ம், காலேஜ் டேஸ்னா இப்படி இருக்கணும்.. உனக்கு இப்படி எதுவும் இல்லையா..?” என்றாள்.
 
 
அதைக் கேட்டு திகைத்த சிந்து “என்ன எனக்கா..?” எனவும் “ஆமா இதுக்கு ஏன் இவ்வளவு ஷாக்..? உன்னை தான் கேட்டேன்..” என்ற ஸ்வேதா “இன்ட்ரஸ்டிங்கா ஏதாவது இருந்தா சொல்லு, கேட்போம்..” என்று திரும்பி சிந்துவின் முகம் பார்த்து அமர்ந்தாள்.
 
 
அதில் சங்கடமாக நெளிந்த சிந்து “எனக்கு அப்படியெல்லாம் எதுவுமே இல்லை..” எனவும் “சுத்த போர் தெரியுமா நீ..” என சலிப்பாக முகத்தை சுழித்தாள் ஸ்வேதா.
 
 
“சரி நான் தான் போர், நீங்க இன்ட்ரஸ்டிங்கா ஏதாவது சொல்லுங்களேன் கேட்போம்..” என சிந்து சொல்லவும், அவளை ஒரு நொடி கண்கள் மின்ன பார்த்த ஸ்வேதா “இன்ட்ரஸ்டிங்கா தானே.. இருக்கு சொல்லுட்டுமா..?” என ஒரு மாதிரி ராகம் போட்டு இழுத்தாள் ஸ்வேதா.
 
 
அதில் ஆர்வமாக ஸ்வேதாவின் முகத்தை சிந்து பார்க்க.. “சொல்லுவேன், ஆனா நீ என்னை தப்பா எடுத்துக்க கூடாது..” என்று முன் ஜாக்கிரதையாக கூறினாள் ஸ்வேதா. ‘இதில் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு..?’ என புரியாமல் சிந்து அவளை பார்க்கவும், தலையை சாய்த்து ஒரு மர்மமான புன்னகையை சிந்திய ஸ்வேதா “தீபன்..” என்றாள்.
 
 
அதில் நம்ப முடியாமல் ஸ்வேதாவை சிந்து பார்க்க.. சட்டென எதுவும் பேசாமல் சில நொடிகள் எடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஸ்வேதா “எனக்கு தீபனை ரொம்ப பிடிக்கும், இப்போ இல்லை.. பத்து வருஷத்துக்கு முன்னே இருந்தே பிடிக்கும்..” என்று கனவு மிதக்கும் விழிகளோடு கூறினாள்.
 
 
இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என புரியாமல் சிந்து அமர்ந்திருக்க.. திடீரென நினைவு வந்தவளாக சிந்துவின் முகத்தை பார்த்த ஸ்வேதா “ஆமா, இதுக்கு முன்னே தீபன் என்னை பத்தி உன்கிட்ட பேசி இருக்காரா..?” என்றாள் ஸ்வேதா.
 
 
அதற்கு சிந்து இல்லை என தலையசைக்க.. “அதானே..! அப்போவே நினைச்சேன், தீபன் எப்போவுமே இப்படித்தான்.. அவங்க சொல்ல நினைக்கறதை மட்டுமே தான் சொல்லுவாங்க..” என்று ஒரு வித ரசனையான குரலில் கூறினாள் ஸ்வேதா.
 
 
சிந்துவும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க.. மௌனமாக கழிந்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு, “எனக்கு தீபனை ரொம்ப பிடிக்கும் சிந்து, பார்த்த முதல் நாளே இங்கே வந்து உட்கார்ந்துட்டார்..” என தன் இதயத்தை தொட்டு காண்பித்தாள் ஸ்வேதா.
 
 
அதில் மெல்ல விழிகளை உயர்த்தி பார்த்தாள் சிந்து.  அவளாகவே பேசட்டும் என வேறு எதுவும் கேட்காமல் சிந்து அமைதியாக பார்த்திருக்க.. “எங்க அண்ணாவோட ஃபிரண்டா தான் தாரக் எனக்கு அறிமுகமானார்.. ஸ்மார்ட்டா அவ்வளவு ஜென்ட்டில் பிஹேவியரோட கண்ணு முன்னே ஒருத்தர் வந்து நின்னா எல்லா டீன் ஏஜ் பொண்ணுங்களுக்குள்ளேயும் பறக்கும் அதே பட்டாம்பூச்சி தான் எனக்குள்ளேயும் பறந்தது.. அப்போ நான் ப்ளஸ்டூ தான் படிச்சுட்டு இருந்தேன்..
 
 
அப்போ எல்லாம் அடிக்கடி எங்க அண்ணாவை பார்க்க தீபன் வீட்டுக்கு வருவார்.. அவருக்கே தெரியாம மறைஞ்சு இருந்து சைட் அடிப்பேன், அப்போவே என் மனசை அவர்கிட்ட சொல்லணும்னு எத்தனையோ முறை யோசிச்சு இருக்கேன்.. ஆனா வழக்கமா அவரை பார்க்கும் போது வம்பு இழுத்து பேச இயல்பா வந்த எனக்கு இதை சொல்ல மட்டும் தைரியம் வரவே இல்லை..
 
 
என் வயசை காரணம் சொல்லியோ இல்லை வேற ஏதோ காரணத்தை சொல்லியோ மறுத்துட்டா என்ன செய்யறதுன்னு எனக்குள்ளே ஒரு பயம்.. அதில் இன்னைக்கு நாளைக்குன்னு நான் தள்ளி போட்டுட்டே போனேன்.. திடீர்னு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு தெரிய வந்தது..
 
 
அதுக்கு பிறகு எங்க வீட்டுக்கு வருவதை மொத்தமா நிறுத்தினார், அவரை பார்க்கவே முடியாம போச்சு.. நானும் ஏதேதோ வழியில் அவரை பார்க்க முயற்சி செஞ்சேன், என்னால் பார்க்கவே முடியலை.. அப்புறம் தான் என்ன விஷயம்னு எங்க அண்ணன்கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. அவங்க வீட்டில் ஏதோ பிரச்சனையினும் அவர் இப்போ அவங்க வீட்டில் இல்லைன்னும் தெரிய வந்தது..
 
 
அவரை நினைச்சு அந்த நேரத்தில் என்னால் வருத்தப்பட தான் முடிஞ்சது.. நானும் அடுத்து காலேஜ் சேர்ந்துட்டேன், இங்கே லீவுக்கு வரும் போதெல்லாம் எங்க அண்ணன் மூலமா எப்படியாவது தீபனை மீட் செஞ்சு பேசணும், எதுவா இருந்தாலும் கவலைப்படாதீங்க உங்களுக்கு நான் இருக்கேன்னு சொல்லணும்னு எல்லாம் நான் நினைச்சுட்டு இருந்தேன்..
 
 
ஆனா நான் வீட்டுக்கு வந்த போது நானே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு விஷயம் எனக்கு தெரிய வந்தது..” என சொல்லி அவள் இடைவேளை விட, ‘என்ன..?’ என்பது போல் ஸ்வேதாவை பார்த்திருந்தாள் சிந்து.
 
 
லேசாக குரலை செறுமி கொண்டு “தீபனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு எங்க அண்ணன் சொன்னார், என்னால் இதை நம்பவே முடியலை.. எப்படி இது..? ஏன்னு எனக்குள்ள ஆயிரம் கேள்விகள், இந்த அதிர்ச்சி போதாதுன்னு அவரோடது காதல் திருமணம்னு வேற தெரிய வந்தது.. அவ்வளவு தான் உடைஞ்சு போயிட்டேன்..
 
 
அவரை பார்த்ததும் எனக்குள் உண்டான உணர்வுகளோ ஆசைகளோ அவருக்கு என்னை பார்க்கும் போது வரவே இல்லைன்னு தெரிய வந்த போது எவ்வளவு வலிச்சது தெரியுமா..? நைட்டில் தூக்கம் இல்லாம தினமும் அழுவேன், ஆனா நான் ஹாஸ்டலில் இருந்ததினால் எங்க வீட்டில் யாருக்கும் என் பிரச்சனை தெரிய வராமலே போச்சு.. 
 
 
இனி அவ்வளவு தான் இது நடக்காது, இது இல்லைன்னு தெரிஞ்சு என்னை நானே மனதளவில் தேற்றி வெளியே வர போராடிட்டு இருந்த நேரத்தில் தான் தீபன் மனைவி இறந்துட்டாங்கன்னு தெரிய வந்தது..” என்றவள், தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தி சிறு இடைவெளி எடுத்தாள்.
 
 
சிந்துவுக்கு தன் அக்காவின் நினைவு வந்ததில் அங்கு கனமான ஒரு அமைதி நிலவ.. யாரும் அதை உடைக்க முயலவில்லை. அங்கே அருகில் இருந்த தண்ணீரை மட்டும் ஸ்வேதாவை நோக்கி நகர்த்தினாள் சிந்து. அதை எடுத்து ஒரு வாய் குடித்த ஸ்வேதா, “எனக்கு என்னவோ இது எனக்கான இரண்டாவது வாய்ப்பா தான் தெரிஞ்சது..
 
 
அதில் இருந்தெல்லாம் நானே வெளியே வரணும்னு நினைக்கும் போது அதுக்கான அவசியம் இல்லைன்னு ஏதோ ஒண்ணு எனக்கு உணர்த்துவது போல இருந்தது.. அந்த நொடியில் இருந்து இதோ இந்த நொடி வரைக்கும் என் தீபனுக்காக தான் நான் காத்திருக்கேன்..” என முடித்தாள் ஸ்வேதா.
 
 
இதற்கு என்ன சொல்வது..? என்ன பேசுவது..? என புரியாமல் சிந்து அப்படியே அமர்ந்திருக்க.. அவளை லேசான தயக்கத்தோடு நிமிர்ந்து பார்த்த ஸ்வேதா “உனக்கு நான் ரொம்ப சுயநலம் பிடித்தவளா தெரியுறேனா சிந்து..? ஒரு பொண்ணோட இழப்பில் கூட எனக்கான ஆதாயத்தை தேடுவது போல தோணுதா..!” என்றாள்.
 
 
இதற்கு மட்டும் அமைதியாக இருக்க முடியாமல் சிந்து ‘இல்லை’ என தலையசைக்க.. அவளின் கையை இறுக பிடித்துக் கொண்ட ஸ்வேதா “ஒரு பொண்ணா உனக்கு என் மனசு புரியுதா சிந்து..?” என கேட்கும் போதே, அவள் விழிகள் லேசாக கலங்கியது.
 
 
அதுவே எந்த அளவுக்கு அவள் தாரக்கை விரும்புகிறாள் என சிந்துவுக்கு புரிய வைக்க போதுமானதாக இருக்க.. ‘ஆம்’ என மெல்ல தலையசைத்தாள் சிந்து.
 
 
“இதுக்கு நடுவில் வீட்டில் படிச்சு முடிச்சதும் எனக்கு கல்யாணம் அது இதுன்னு பேச்சை ஆரம்பிச்சாங்க.. இதுதான் என் மனசுல இருக்குன்னு என்னால் எப்படி சொல்ல முடியும்..? இதுவரைக்கும் தீபன்கிட்ட நான் எதுவும் பேசாத போது அவர் பற்றி என்னால் வீட்டிலேயும் சொல்ல முடியலை.. அதற்கான நேரமும் எனக்கு தேவைப்பட்டது, அதனால் மேலே படிக்கறேன்னு இரண்டு வருஷம், வேலைக்கு போகணும்னு இரண்டு வருஷம்.. செட்டில் ஆகணும்னு இரண்டு வருஷம்னு இப்படியே இதோ இன்னைக்கு வரைக்கும் ஓட்டிட்டேன்..” என சோகமாக புன்னகைத்தாள் ஸ்வேதா.
 
 
தன் கரத்தில் பதிந்திருந்த ஸ்வேதாவின் கரத்தை ஆதரவாக சிந்து தட்டிக் கொடுக்க.. “தீபனை திரும்ப ஒரு மூணு வருஷத்துக்கு முன்னே தான் பார்த்தேன்.. ஆனா நான் பார்த்து பழகின தீபனா அவர் கொஞ்சமும் இல்லை.. அடியோடு ஆளே மாறி போயிருந்தார்..
 
 
காதல் ஒரு மனுஷனை இவ்வளவு மாற்றுமா..? ஒரு பொண்ணோட இழப்பு இந்த அளவுக்கு தலைகீழா ஒருத்தர் வாழ்க்கையை மாற்றுமான்னு எனக்கு புரியலை.. இப்படிப்பட்ட ஒருவருடைய காதல் கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்னு தான் எனக்கு அப்போவும் தோணுச்சு..
 
 
சரிக்கு சரி என் கூட பேசி வம்பு இழுத்த தீபன் காணாம போய் ஒரு வார்த்தை பதிலை அவர் வாயில் இருந்து வாங்கறதுக்குள்ளே குட்டி கரணம் எல்லாம் அடிக்க வேண்டி வந்தது.. ஆனா விக்ரமாதித்தன் முதுகில் தொங்கின வேதாளம் போல தொடர்ந்து என் முயற்சியை கைவிடாம செய்ததின் பலன் இதோ இப்போ இந்த மூணு மாசமா மத்தவங்ககிட்ட எப்படியோ..! என்கிட்ட மட்டும் சரிக்கு சரி வம்பு பேசக்கூடிய தீபனை நான் மீட்டு எடுத்து இருக்கேன்..
 
 
கூடிய சீக்கிரம் என் காதலை சொல்லி அதை அவர் புரிந்து ஏற்றுக்குவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கு, நிச்சயம் என்னால் அதை செய்ய முடியும், எவ்வளவோ நீ செஞ்சுட்டோம் இதை செய்ய மாட்டோமா..?” என சட்டென தன் வருத்தங்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு மலர்ந்து சிரித்தாள் ஸ்வேதா.
 
 
 

This post was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் - 44
 
அன்று காலை சிந்து எழுந்து வரவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. ஸ்வேதா அலுவலக நண்பர்களோடு மூன்று நாள் பயணமாக சுற்றுலா சென்றிருந்தாள்.
 
 
இன்று காலை வந்ததும் நேராக டிபனுக்கு இங்கே வந்துவிடுவதாக நேற்று மாலையே அழைத்து கூறியிருந்தவளின், பேச்சிலும் இதையெல்லாம் செய்துவை என அவள் அதிகாரத்தோடு கூறி இருந்ததிலும் உண்டான புன்னகையோடு சென்று சிந்து கதவை திறக்க.. அங்கு தாரக் நின்றிருந்தான்.
 
 
அவனை இப்படி எதிர்பாராமல் திடீரென கண்டதில் சிந்துவின் முகம் தானாக மலர்ந்தது. முகமெங்கும் புன்னகையோடு “வா.. வாங்க..” என சிந்து அவனை வரவேற்க.. பதிலுக்கு புன்னகையோடு தலையசைத்தவன் “இப்போ தான் எழுந்தியா செந்தூரிகா..? உன் தூக்கத்தை டிஸ்டர்ப் செய்துட்டேனா..?” என்றபடியே உள்ளே நுழைந்தான்.
 
 
“இல்லை, நான் இப்போ தான் எழுந்தேன், நீங்க என்னை டிஸ்டர்ப் செய்யலை..” என்ற சிந்து, அவன் அமர சோபாவில் இருந்த புத்தகத்தை எடுத்து அருகில் இருந்த மேஜை மேல் வைக்க.. தளர்வாக காலை நீட்டி சரிந்து அமர்ந்தான் தாரக்.
 
 
“என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்திருக்காங்க..? ஏதாவது பிரச்சனையா..! நேற்று பேசின அருண் அண்ணா ஒரு வார்த்தை கூட சொல்லலையே..!” என்று மனம் பரபரக்க.. அவனையே பார்த்தவள், தாரக்கின் சோர்வு புரிந்து வேகமாக ஒரு காபி போட்டு கொண்டு வர, சமையலறைக்குள் நுழைந்தாள் சிந்து.
 
 
வழக்கத்தை விட அவளின் கைகள் வேகமாக இயங்க, உடலில் லேசான ஒரு துள்ளல் வந்து ஒட்டிக் கொண்டது. ‘இது ஏன்..?’ என அவளுக்கே புரியவில்லை. ஆனால் மனம் ஏதோ ஒரு வகையில் தாரக்கின் வரவில் சந்தோஷத்தை உணர்ந்தது. அது அவள் செயல்களிலும் பிரதிபலிக்க.. அவசரமாக காபியை போட்டு எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள் சிந்து.
 
 
விழிமூடி அமர்ந்திருந்தவனை கண்டு ஒரு நொடி தயங்கி நின்றவள், ‘அழைப்பதா..? வேண்டாமா..!’ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே விழிகளை திறந்து அவளைப் பார்த்து இருந்தவன் “தேங்க்யூ..” என காபியை வாங்கிக் கொண்டான்.
 
 
சரியாக நிமிர்ந்து அமர்ந்து அதை குடிக்க தொடங்கும் முன் அவளை பார்த்தவன் “உனக்கு..?” எனவும் “இதோ கொண்டு வரேன்..” என்று விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள் சிந்து.
 
 
அவளுக்கான காபியோடு வந்தவள், தாரக் அருகில் இருந்த ஒற்றை சோபாவில் அமர.. “உனக்கு இன்னைக்கு காலேஜ் இருக்கில்லை..?” என்றான் தாரக். “ஆமா கிளம்பணும், ஆனா இன்னும் டைம் இருக்கு..” என சிந்து சொல்லவும், ‘சரி’ என்பதாக தலையசைத்துக் கொண்டவன், அமைதியாக காபியை குடித்து முடித்தவனின் முகத்தில் இருந்தே தாரக்கின் சோர்வு நன்றாக சிந்துவுக்கு புரிந்தது.
 
 
“காலையில் சாப்பிட என்ன செய்யட்டும்..?” என்று சிந்து தொடங்கவும், “பெருசா எதுவும் வேண்டாம், சிம்பிளா உன்னால் என்ன முடியுமோ அதை செய்.. நீயும் காலேஜ் போகணும் இல்லை..” என்றான் தாரக்.
 
 
“அதெல்லாம் பிரச்சனை இல்லை, இன்னும் நிறைய நேரம் இருக்கு, நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் தான் எழுந்தேன்.. ஸ்வேதாவுக்கு பூரியும் பிரான் கிரேவியும் செய்ய நினைச்சேன்.. உங்களுக்கும் அது ஓகேவா..? இல்லை வேற எதுவும்..” என இழுத்தாள் சிந்து.
 
 
“வேற எதுவும் வேண்டாம், இதுவே போதும்..” என்றவன், “ஆமா ஸ்வேதாவுக்காக நீ ஏன்..? அதுவும் காலேஜ் போக வேண்டிய நாளில் இதெல்லாம் செய்யணும்..?” என்று நெற்றியை சுருக்கி தாரக் அவளை பார்க்க.. “ஸ்வேதா ஆபீஸ் பிரண்ட்ஸ் கூட வீக்கெண்ட் ட்ரிப் போய் இருக்காங்க.. இன்னைக்கு தான் வராங்க, அதனால் தான் நான் செய்யலாம்னு.. அவங்களும் எனக்கு இது போல நிறைய செய்வாங்க, எக்ஸாம் டைம் எல்லாம் என்னை சமைக்க விட்டதே இல்லை..” என்று அவசரமாக கூறியிருந்தாள் சிந்து.
 
 
அவன் ஸ்வேதாவை தப்பாக நினைத்து விடக்கூடாது என அவள் பேசுவது புரிய, அமைதியாக தலையசைத்து கொண்டவன், வேறு எதுவும் கேட்கவில்லை. மீண்டும் இருவருக்கும் இடையில் ஒரு அமைதி வந்து நிலவ.. ‘என்ன திடீர்னு வந்து இருக்கீங்கன்னு கேட்கலாமா..? வேண்டாமா..! ஒருவேளை கேட்டால் தப்பா எடுத்துக்குவாரோ..!’ என்றெல்லாம் தனக்குள்ளேயே யோசித்தபடி அமர்ந்திருந்தாள் சிந்து.
 
 
அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன், “எனி இஷ்யூ..?” எனவும் ‘ஒண்ணுமில்லை’ என சிந்து வேகமாக தலையசைக்க.. “ஓகே, நான் ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்..” என்று விட்டு இதற்கு முன் அவன் தங்கியிருந்த அறைக்குள் தாரக் செல்ல.. சிந்துவும் சமையலறைக்குள் நுழைந்தாள்.
 
 
ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு குளித்து முடித்து தாரக் வெளியில் வரவும் காலை உணவை தயார் செய்து உணவு மேஜையில் வைத்துக் கொண்டிருந்தாள் சிந்து. அதற்கு இடையில் அவளும் குளித்து கல்லூரிக்கும் தயாராகி இருப்பது தெரிந்தது.
 
 
மேஜையில் நிறைய இருப்பதை கண்டு, அவளை கண்டனமாக பார்த்தவன், “காலேஜ் டேஸில் இது போல உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே செந்தூரிகா..” எனவும் “இதில் என்ன கஷ்டம் இருக்கு..” என்றாள் சிந்து.
 
 
அதில் வார்த்தைகளின்றி அவளை அவன் லேசாக முறைக்கவும், என்ன சொல்ல வருகிறான் எனப் புரிந்து “எப்படியும் சாப்பிட நான் ஏதாவது செஞ்சு தானே ஆகணும், கொஞ்சம் அவங்களுக்கும் சேர்த்து செய்வதில் என்ன இருக்கு..?” என்றாள் சிந்து.
 
 
“இல்லை, நான் அதை சொல்லலை.. இங்கே நீங்க இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கிறதில் எந்த தப்பும் இல்லை.. ஆனா காலேஜ் போகும் போது அந்த நேரத்துக்கு ஏற்றது போல சிம்பிளா ஏதாவது செய்ய முயற்சி செய்.. இதை தான் நான் ஸ்வேதாவுக்கும் சொல்லுவேன்..
 
 
வீக் எண்டில் ஒருத்தருக்கு ஒருத்தர் விருந்து கூட வெச்சுக்கோங்க, யார் வேண்டாம்னு சொன்னா..? வீக் டேஸில் உங்களை நீங்களே பிரஷராக்கிக்காதீங்க..” என்றவன், தானே தட்டை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட என்ன இருக்கு என பார்த்தான்.
 
 
அவனிடம் சொன்னது மட்டுமல்லாமல் கல் தோசை போல் சின்னதாக மெத்தென செய்து கேசரோலில், அதோடு தொட்டுக் கொள்ள முட்டை சட்னியும் வைத்திருந்தாள் சிந்து. அதைப் பார்த்து விட்டு தாரக் நிமிர்ந்து அர்த்தமுடன் சிந்துவை பார்க்கவும், தன் பார்வையை தழைத்துக் கொண்டவள் அவனுக்கு தண்ணீர் எடுத்து வைக்க.. “நீயும் உட்கார்ந்து சாப்பிடு..” என்றான் தாரக்.
 
 
“இதோ ஸ்வேதா எப்போ வராங்கன்னு கேட்டுட்டு வரேன்..” என தன் அலைபேசியை எடுத்து ஸ்வேதாவுக்கு சிந்து அழைக்க.. முதல்முறை அது முழுதாக சென்று நின்றது. பின் அழைப்பதா வேண்டாமா என்ற யோசனையோடு சிந்து மீண்டும் அழைக்கவும், உடனே அதை ஏற்றிருந்தாள் ஸ்வேதா.
 
 
தூக்க கலக்கத்தோடு ஸ்வேதாவின் குரல் “ஹலோ..” என ஒலிக்கவும், “ஸ்வேதா..” என்று தயக்கத்தோடு அழைத்தாள் சிந்து. அவளின் குரலிலேயே அலைபேசி திரையில் அழைப்பது யார் என பார்த்திருந்த ஸ்வேதா “ஹே சிந்து, குட் மார்னிங்..” எனவும் “குட் மார்னிங் ஸ்வேதா.. நீங்க எத்தனை மணிக்கு வருவீங்க..? எங்கே இருக்கீங்க..?” என்றாள் சிந்து.
 
 
“நான்.. நான் வர மதியம் ஆகிடும்னு நினைக்கறேன் சிந்து..” என ஸ்வேதா சொல்லவும், “என்ன காலையில் வரலையா நீங்க..? ஆனா நேற்று..” என்று ஏதோ சொல்ல தொடங்கியவளை இடையிட்டு இருந்த ஸ்வேதா “ஆமா, இங்கே நைட்  பிளானே மாறி போச்சு.. என் கூட வந்தவர்கள் பஃப், பார்ட்டி அது இதுன்னு ஒரே அமர்க்களம்.. ரூமுக்கு தூங்க வரும் போதே மூணு மணியாகிடுச்சு.. இன்னும் நான் எழுந்திருக்கவே இல்லை, இங்கே இருந்து பத்து மணிக்கு மேலே தான் கிளம்பலாம்னு பிளான்..” என்றாள் ஸ்வேதா.
 
 
“ஓ..” என்றவளின் குரலில் ஸ்ருதி இறங்கி இருந்தது. அதை கண்டு கொண்ட ஸ்வேதா “என்னாச்சு..?” எனவும், “இல்லை உங்களுக்காக பூரியும் பிரான் கிரேவியும் செஞ்சு வெச்சேன்..” என சிந்து இழுக்கவும், “அதை அப்படியே நைட் டின்னருக்கு எடுத்துக்கறேன்..” என ஸ்வேதா புன்னகைக்க.. “இது ஏன்..? அப்போ பிரெஷாவே செஞ்சுக்கலாம்..” என்றாள் சிந்து.
 
 
“உன் மனசு யாருக்கு வரும் சிந்து..? ஆனாலும் செஞ்சதை வேஸ்ட் செய்யக்கூடாது, இதையும் எடுத்து வை நான் சாப்பிடுவேன்..” என ஸ்வேதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் குரலில் இருந்த உறக்கத்தை கண்டு கொண்ட சிந்து “சரி நீங்க தூங்குங்க..” எனவும் அதற்காகவே காத்திருந்தவள் போல் அழைப்பை துண்டித்து இருந்தாள் ஸ்வேதா.
 
 
அடுத்ததாக தாரக் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல நினைத்திருந்த சிந்து, அலைபேசியை காதிலிருந்து எடுத்துப் பார்க்க.. இவ்வளவு நேரமும் அவள் பேசுவதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த தாரக், “இப்போவாவது சாப்பிட வரியா..?”  என்றான். 
 
 
அதில் அமைதியாகச் சென்று அமர்ந்து கொண்ட சிந்து, இருவருக்கும் எடுத்து பரிமாற முயல.. தாரக்கே அதை செய்தான். இருவரும் அமைதியாக சாப்பிட, அதன் ருசியில் வழக்கத்தை விட இரண்டு பூரிகள் அதிகம் எடுத்துக் கொண்டவன் “பொதுவா நான் எண்ணெய் அதிகம் இருக்கும் எதையும் சாப்பிட மாட்டேன்.. அதுவும் காலையில் சாப்பிடவே மாட்டேன்.. ஆனா இன்னைக்கு இந்த ருசி எதையும் யோசிக்காம சாப்பிட வைக்குது..” என்றவன், “இங்கே இவ்வளவு நல்ல பிரான் கூட கிடைக்குதா..? டேஸ்ட் அப்படியே நம்ம ஊர் சமையல் போலவே இருக்கு..” என சொல்லிக் கொண்டிருக்க.. அவனை நிமிர்ந்து பார்த்து லேசாக புன்னகைத்தவள் “ஸ்வேதா தான் இங்கே ஒரு இந்தியன் ஸ்டோர் காட்டினாங்க.. அங்கே நம்ம ஊர் மசாலா எல்லாம் கிடைக்கும்..” என்றாள் சிந்து.
 
 
“ஓ..” என்று அதற்கு தலையசைத்துக் கொண்டவன், சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ள.. சிந்துவும் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு எழுந்தாள். “உங்களுக்கு டீ வேணுமா..?” என கேட்டவளை மறுப்பாக பார்த்தவன், “முதலில் நீ காலேஜ் போக கிளம்பு..” என்று கூறவும், “இதோ கிளம்பிட்டேன்..” என்று தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் சிந்து.
 
 
தாரக்கும் ஷூ அணிந்து கொள்வதை கண்டு “நீங்க ரெஸ்ட் எடுக்கலையா..?” என்றாள் சிந்து. “ரெஸ்ட் எடுக்க நான் இங்கே வரலை, முக்கியமான ஒரு வேலை இருக்கு..” என்றவன் அவளோடு சேர்ந்து கிளம்ப.. வேறு எதுவும் பேசாமல் உடன் சென்றாள் சிந்து.
 
 
அவளை கல்லூரியில் விட்டு அவன் தன் வேலையை பார்க்கச் சென்று விட, அன்று முழுக்க ஒரு இன்பமான மனநிலையோடு அவளுக்கு கழிந்தது.
 
 
அவளின் உடன் மொழியிலும் முக பொலிவிலும் தோழிகள் கூட “என்ன மேடம் இன்னைக்கு ரொம்ப நல்ல மூட்டில் இருக்கீங்க போல..!” என்று கேட்டு விட்டு இருந்தனர். மதியம் சாப்பிட சென்ற போது ரிச்சர்ட்டும் வந்து அவள் முன் அமர்ந்து “என்திங் ஸ்பெஷல்..?” என்று அவளின் முகத்தையே உன்னிப்பாக பார்க்க.. “எதுவும் இல்லையே..!” என்றாள் புரியாமல் அவனைப் பார்த்தபடியே சிந்து.
 
 
“ஆனா உன்னை பார்த்தா அப்படி தெரியலையே செண்டு..” என அவன் சொல்லவும் “என்ன தெரியலை..?” என்றவளை யோசனையாக பார்த்தவன், “உன் முகத்தில் என்னவோ புதுசா இருக்கு..” என்றான் அவளையே கண்கள் மின்ன பார்த்தப்படியே ரிச்சர்ட்.
 
 
“அப்படியா..!” என வேகமாக தன் துப்பட்டாவினால் முகத்தை துடைத்தவாறே “என்ன இருக்கு..?” என சிந்து கேட்கவும், “புதுசா ஒரு குட்டி ஸ்மைல், உன் முகத்தில் ஓட்டி இருக்கு..” என்றான் அவனுக்கே உரிய விதத்தில் ரிச்சர்ட். அதில் மலர்ந்து சிரித்து விட்டாள் சிந்து.
 
 
இதெல்லாம் அவளுக்கு இதமான ஒரு மனநிலையை கொடுத்திருக்க.. ‘என்ன இன்னைக்கு புதுசா..?’ என்று யோசித்தவளுக்கு, இதற்கான காரணம் தாரக்கின் வருகை என்று நன்றாகவே புரிந்தது. ஆனால் ‘ஏன் இது இப்படி தோன்றுகிறது..?’ என்று தான் அவளுக்கு புரியவில்லை.
 
 
அதை தொடர்ந்து இதைப் பற்றியே யோசித்தவளுக்கு சட்டென அந்த நினைவு வந்தது. அவள் கல்லூரியில் தங்கி படிக்கும் போது பெரும்பாலும் யாரும் அவளைப் பார்க்க விடுதிக்கு வருவதில்லை. இவளாக விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தால் தான் உண்டு.
 
 
ஆனால் எப்போதாவது ஒருமுறை சுஜாதா அவளை பார்க்க வருவார். அந்த நேரங்களில் இப்படி தான் உடலும் மனமும் துள்ள.. அன்று முழுக்க ஒரு வித சந்தோஷ மனநிலையில் சுற்றிக் கொண்டிருப்பாள் சிந்து. அது திடீரென நினைவு வரவும், அவளுக்கு ஏதோ புரிவது போல இருந்தது.
 
 
இங்கு தனிமையில் இருப்பவளுக்கு தாரக்கின் வருகை சுஜாதாவை நினைவு படுத்தியதோ..! ‘அப்போ என் அம்மா இடத்தில் வெச்சு அவங்களை நான் பார்க்கிறேனா..?’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள் சிந்து. அவளுக்கு அதற்கான பதில் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் அப்படித்தான் இருக்கும் என அவளாகவே நினைத்துக் கொள்ள.. அதை அப்படியே நம்பினாள் சிந்து.
 
 
இதே எண்ணத்தோடு கல்லூரி முடிந்து வெளியில் வந்தவளின் பார்வையில் அங்கிருந்த மரத்தடியில் தாரக் நின்றிருப்பது தெரிந்தது. அவனை அங்கு கண்டவுடன், பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் தன்னை சார்ந்தவர்களை எதிர்பாராமல் கண்டவுடன் ஏற்படும் குதுகலம் அவளுள்ளும் நிகழ.. முகமெங்கும் புன்னகை விரிய.. ஒரு துள்ளல் நடையோடு அவனை நோக்கி சென்றாள் சிந்து.
 
 
இத்தனை நாள் இதே பாதையில் அவள் சென்றதற்கும் இன்று செல்வதற்கும் உள்ள வித்தியாசம் அவளுக்கே தெளிவாக புரிந்தது. அதில் உண்டான குறுகுறுப்போடு தாரக்கை சிந்து நெருங்கவும் தான், அவனுக்கு அந்தப் பக்கம் ஸ்வேதா நின்று அவனோடு பேசிக் கொண்டிருப்பது சிந்துவுக்குத் தெரிந்தது.
 
 
இதைக் கண்ட நொடி அவளுள் ஏதோ ஒன்று உடைய.. காற்று போன பலூன் போல் அவளுள் இருந்த சந்தோஷமும் துள்ளலும் சட்டென வடிந்து காணாமல் போனது. சில நொடிகள் அசைவற்று அப்படியே நின்று விட்டவள், இயல்பாக தாரக்கின் கை பிடித்து ஸ்வேதா பேசிக் கொண்டிருப்பதையே லேசான வலியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
இந்த நொடி அவள் இதயத்தில் ஏதோ ஒரு ஊசி குத்துவது போல் இருந்தது. அதை ஒதுக்கி புறம் தள்ள முடியாமல் அந்த வலி அவள் உடல் முழுக்க பரவுவது போல் இருக்க.. அசையாமல் அங்கேயே நின்று விட்டாள் சிந்து. அதே நேரம் பேசிக் கொண்டே திரும்பிய தாரக் சிந்துவைப் பார்த்திருக்க.. அவன் முகத்தில் லேசான மென்னகை.
 
 
வரவேற்பாக ஒரு தலையசைப்போடு அவளை பார்த்து தாரக் புன்னகைக்கவும், அதற்கு மேல் அங்கேயே நிற்க முடியாமல் வரவழைத்துக் கொண்ட புன்னகையை முகத்தில் ஒட்ட வைத்தபடி அவனைப் பார்த்து தலையசைத்து சிந்துவும் மெல்ல தாரக்கை நோக்கி நடந்தாள்.
 
 
தாரக் தலையசைப்பதைக் கண்டு மெல்ல எட்டிப் பார்த்திருந்த ஸ்வேதாவும் சிந்துவை கண்டு உற்சாகத்தோடு கையசைத்து சிரித்து வைக்க.. அமைதியாக இருக்க முடியாமல் சிந்துவும் தன் மன உணர்வுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவர்களை நெருங்கினாள்.
 
 
அதுவரை கூட காத்திருக்க பொறுமை இல்லாத ஸ்வேதா வேகமாக ஓடி வந்து சிந்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “தீபன் வந்திருக்கறார்னு சொல்லவே இல்லை.. தெரிஞ்சுருந்தா நான் காலையிலேயே ஓடி வந்து இருப்பேன்..” என்று உரிமையாக கோபப்பட்டாள்.
 
 
அதில் வரவழைத்துக் கொண்ட இயல்போடு “நான் சொல்றதுக்குள்ளே நீங்க தான் கட் செஞ்சுட்டீங்க..” என்றாள் சிந்து. “அப்போ நான் தான் தப்புன்னு சொல்றே அப்படித்தானே..!” என கேட்கவும், “ஆமா இல்லையா பின்னே..?” என்ற பதில் தாரக்கிடமிருந்து வந்தது.
 
 
அதில் இருவரும் சிறு திகைப்போடு திரும்பி பார்க்க.. “டிபனுக்கு இந்த மெனு எல்லாம் வேணும்னு சொன்னே நீ, காலையில் வர மாட்டேன்னு நைட் ஒரு மெசேஜ் போட்டு இருக்கலாம் இல்லை..” என்றான் தாரக்.
 
 
“ஆமா இல்லை, இது எனக்கு தோணவே இல்லை..” என ஸ்வேதா சொல்லவும் “இனியாவது நான் சொன்னது போல இரண்டு பேரும் வீக் டேஸில் இப்படி எல்லாம் எதுவும் செய்யாம இருங்க போதும்..” என்று விட்டு அவன் முன்னே செல்ல.. சிந்துவின் கைகளை கோர்த்தபடி அவளையும் இழுத்துக் கொண்டு தாரக்கின் பின்னே சென்றாள் ஸ்வேதா.
 
 
‘ஏதோ வேலை இருக்குன்னு சொன்னாங்க, இங்கே ஸ்வேதா கூட நின்னுட்டு இருக்காங்க.. அப்போ ஸ்வேதாவை பார்க்க தான் வந்தாங்களா..? இல்லை ஸ்வேதா திரும்ப வந்ததில் அவங்க பிளானை கேன்சல் செஞ்சுட்டாங்களா..!’ என்றெல்லாம் அவளுக்குள் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது.
 
 
சற்றுமுன் இருவரும் புன்னகை முகமாக கைபிடித்து பேசிக் கொண்டிருந்த காட்சியே மீண்டும் மீண்டும் அவள் மனக்கண்ணில் தோன்றிக் கொண்டிருக்க.. ‘ஸ்வேதா தன் மனசில் இருக்கும் காதலை சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தாங்களே..! இன்னைக்கு நேரம் கிடைச்சதும் சொல்லிட்டாங்களோ..!! அவங்களும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்களோ..!! அதான் இரண்டு பேர் முகத்திலும் அவ்வளவு சந்தோஷமா..!’ என்றெல்லாம் அவளுக்கு தோன்றியது.
 
 
இதில் அவள் தனக்குள் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க.. திரும்பி சிந்துவை பார்த்திருந்த ஸ்வேதா “ஓய் என்ன கனவா..? யார் கூட டூயட் பாடிட்டு இருக்கே..?” என்று கிசுகிசுத்தாள். “ஹாங், அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்று மெல்ல முணுமுணுத்தாள் சிந்து.
 
 
“நீ இல்லைன்னு சொன்னா நான் அப்படியே நம்பிடுவேனா..?” என ஸ்வேதா வம்பு செய்து கொண்டே வர, முன்னே சென்று கொண்டிருந்த தாரக் தன் நடையை நிறுத்தி இவர்களை கேள்வியாக திரும்பிப் பார்த்தான்.
 
 
அதில் சங்கடமாக உணர்ந்தவள், “கொஞ்ச நேரம் சும்மா இருங்க..” என மெல்லிய குரலில் சொல்லவும், “அப்படியெல்லாம் சும்மா இருக்க மாட்டேன், இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்று முகம் மலர புன்னகையோடு அவள் சொன்ன விதத்தை கண்டவளுக்கு, முதல்முறையாக உள்ளுக்குள் ஏதோ ஒரு பய பந்து உருண்டது.
 
 
மூவரும் அருகில் உள்ள காபி ஷாப்பினுள் நுழைய.. இவர்கள் இருவருக்கும் தேவையானதை கேட்டு அறிந்துக்கொண்டு ஆர்டர் செய்ய சென்றான் தாரக். ஸ்வேதா தன் அலைபேசியில் யாரோடோ பேசிக்கொண்டிருக்க.. தாரக் சென்ற திசையையே மனதில் உண்டான பல குழப்பத்தோடும் கலக்கத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
“ஓய், என்ன லவ்வா..?” என்று லேசாக இடித்தபடியே வந்து அமர்ந்து ஸ்வேதா கேட்கவும் “என்ன லவ்வா..?” என்று திகைப்போடு திரும்பி அவளைப் பார்த்தாள் சிந்து. தானாக அவள் பார்வை தாரக்கின் மீது படிந்து விலக.. சிந்துவை இடித்து தன்னை பார்க்க செய்த ஸ்வேதா ‘ஆம்’ என தலையசைத்து ஸ்வேதா விழியசைவில் எதையோ சுட்டி காண்பிக்க.. அந்த பக்கம் பார்வையைத் திருப்பிய சிந்து, அப்போதே இவர்களுக்கு சற்று தள்ளி நேரெதிரே ரிச்சர்ட் அமர்ந்திருப்பதை கண்டாள்.
 
 
இவள் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல் தன் வழக்கமான புன்னகையோடு ரிச்சர்ட் கையசைக்க.. தன் இயல்பாக பதில் புன்னகையோடு அவனைப் பார்த்து சிந்துவும் கையசைத்து புன்னகைத்தாள்.
 
 
“ஹே சிந்து, என் கெஸ் சரியா இருந்தா இது தான் அந்த ரிச்சர்ட் கரெக்டா..?” என்று ஆர்வமாக ஸ்வேதா கேட்கவும், திடீரென அவள் குரலில் இருந்த துள்ளல் ஏன் என புரியாமல் ஸ்வேதாவை பார்த்தபடியே ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
 
 
“எப்படி இத்தனை நாள் இதை நான் மிஸ் செஞ்சேன் சிந்து பேபி..? ஓஹோ உங்களுக்குள்ளே இப்படி ஒரு ட்ராக் ஓடுதா..?” என்றாள் எதையோ பெரிதாக கண்டுபிடித்து விட்ட சந்தோஷத்துடன் கண் சிமிட்டி ஸ்வேதா.
 
 
அதில் உண்டான திகைப்போடு ‘இல்லை’ என அவசரமாக சிந்து மறுத்து எதுவோ பேச முயல்வதற்குள், அங்கே தாரக் அனைவருக்குமான காபியோடு வந்துவிட.. அவன் முன் இதை பற்றி பேச விரும்பாத சிந்து அமைதியாகி போனாள்.
 
 
ஆனால் அப்படி எல்லாம் அமைதியாக நினைக்காத ஸ்வேதா, அவள் நினைப்பது தான் சரி என்றெண்ணி பெரிதாக எதையோ கண்டுபிடித்து விட்ட எண்ணத்தோடு சிந்துவை ரகசியமாக வம்பிழுத்துக் கொண்டே இருந்தாள்.
 
 
இதில் சிந்து சங்கடமாக நெளிய.. இருவரையும் யோசனையாக நெற்றியை சுருக்கி பார்த்தான் தாரக். அதே நேரம் அங்கு வந்த ரிச்சர்ட், “ஸி யூ டுமாரோ செண்டு..  பை..” என்று புன்னகையோடு கையசைத்து செல்ல.. “ஓஹோ..” என ராகம் போட்டு இழுத்தாள் ஸ்வேதா.
 
 
அதில் பார்வையால் அவளை அடக்க முயன்றப்படியே சிந்து பதிலுக்கு அவனுக்கு கையசைத்து விடைக் கொடுக்க.. மூவரின் செயல்களையும் நிதானமாக கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் தாரக்.
 
 

This post was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
MNM - 43 & 44
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 

This post was modified 4 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் - 45
 
அடுத்த இரண்டு நாட்கள் இங்கே இருந்துவிட்டு கனடா கிளம்பி விட்டான் தாரக். அங்கே ஏதோ ஒரு வேலையாக செல்ல இருந்தவன், அதற்கு முன் இங்கே ஒருவரை சந்திக்கவும், சிந்துவுக்கு வேறு எதுவும் தேவையா என்று கவனிக்கவும் வந்ததாக சொல்லி சென்று விட.. சிந்துவுக்கு தான் மனம் ஒரு நிலையில் இல்லை.
 
 
அன்று கல்லூரியில் அவர்கள் சந்தித்ததற்கு மறுநாள் தாரக் மற்றும் ஸ்வேதா இருவரும் தனியே வெளியே சென்றனர்.  அவளிடம் காணப்பட்ட துள்ளலும் பரபரப்புமே ஸ்வேதா இன்று தன் மனதை தாரக்கிடம் சொல்லப் போவதை சிந்துவுக்கு உணர்த்தியிருந்தது.
 
 
ஒரு நல்ல தோழியாக ஸ்வேதாவின் சந்தோஷம் இவளுக்கும் தொற்றிக் கொள்வதற்கு பதில் ஏதோ ஒரு அழுத்தம் அவளுள் பரவுவதை உணர்ந்தாள் சிந்து.
 
 
அதற்கு ஏற்றார் போல் அன்று வீடு திரும்பிய பிறகு ஸ்வேதா இவளிடம் எதையுமே பகிர்ந்து கொள்ளவில்லை. எப்போதும் வளவளவென்று பேசிக்கொண்டும் அனைத்தையும் சொல்லிக் கொண்டும் இருப்பவள், பெரிதாக எதுவுமே நடக்காது போல் அமைதியாகத் தன் வேலையை பார்க்க தொடங்கி விட, இது வேறு சிந்துவிற்கு குழப்பத்தையும் பயத்தையும் கொடுத்தது.
 
 
இதில் தாரக்கை கவனிக்க சிந்து முயற்சித்தாலும் அதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. எப்போதுமே அவன் முகத்தில் இருந்து எதையுமே கண்டுகொள்ள முடியாது, அவனாக சொல்ல நினைத்தால் மட்டுமே தாரக்கின் மனதில் இருப்பதை எதிரில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
 
 
இதில் எங்கே அவன் முகத்தைப் பார்த்தும் நடவடிக்கைகளை வைத்தும் என்ன நடந்தது என இவளால் தெரிந்து கொள்ள முடியும்..? அதில் எவ்வளவு முயற்சித்தும் பலன் இல்லாமல் போனதில் மனதளவில் மிகவும் சோர்ந்து போனாள் சிந்து.
 
 
கல்லூரியில் ரிச்சர்ட் கூட அவளை கவனித்து என்னவென்று விசாரித்தான். ஒண்ணுமில்லை என அவள் மறுத்தாலும் அவன் நம்பாமல் பார்க்க.. “நிஜமாவே ஒண்ணுமில்லை ரிச்சி.. ஏதோ ஒரு யோசனை அவ்வளவு தான்..” என்றாள் சிந்து.
 
 
அப்போதைக்கு சரி என்று விலகிச் சென்று விட்டாலும் அன்று தார்க்குடன் இவளை பார்த்ததற்கு மறுநாளில் இருந்தே சிந்து இப்படி இருக்கிறாள். அன்று முழுக்க அவள் முகம் இருந்த விதத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் அவனுக்கு தெளிவாக புரிந்தது.
 
 
இதை பற்றி என்ன யோசித்தாலும் அவன் மனம் சென்று நிற்கும் புள்ளி என்னவோ தார்க்காக தான் இருந்தான். இத்தனைக்கும் அவன் யார் என்ன என்று எதுவுமே இவனுக்கு தெரியாது. ஆனாலும் அவனை பற்றி யோசித்தாலே எதுவோ ஒரு பயபந்து அவனுள் உருண்டது.
 
 
 
அன்று தாரக்குடன் சிந்துவை பார்த்ததிலிருந்து அவனுள் ஏதோ ஒரு நெருடல் உண்டாகி இருந்தது. ஸ்வேதா வேண்டுமானால் சிந்து தாரக்கை பார்த்த விதத்தை கவனிக்காமல் போயிருக்கலாம். ஆனால் ரிச்சர்ட் அதை தெளிவாக கவனித்து இருந்தான். அதில் விரைவாக சிந்துவிடம் தன் காதலை அவளிடம் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வெகு அழுத்தமாக வேரூன்றியது.
 
 
அதுவும் அவளின் பார்வை வட்டத்தில் எதிரிலேயே ரிச்சர்ட் அமர்ந்திருந்தது கூட சிந்துவின் கவனத்தில் பதியவில்லை. அந்த அளவுக்கு அவள் கவனம் முழுக்க ஒருவன் மேலேயே இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்குமென அவனுக்கு புரியாமல் இல்லை.
 
 
**
 
 
அன்று சுஜாதா மகளை அழைத்து பேசினார். பல நாட்களுக்குப் பிறகு அவரோடு பேசியதில் உண்டான சந்தோஷமும் உடனே அவரை பார்க்க வேண்டும் என மனமெங்கும் எழுந்த தவிப்பும் சேர்ந்து சிந்துவை மேலும் சோர்ந்து போக செய்திருந்தது.
 
 
அதில் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு அவரோடு பேசி முடித்தவள், அப்படியே கல்லூரி வளாகத்தில் இருந்த மரத்தடியில் அந்த மர பெஞ்சில் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
 
 
‘அவள் மனம் என்ன நினைக்கிறது..? எதற்கு இப்படி வாடிப் போகிறது..? எதை எதிர்பார்க்கிறது..?’ என்று கூட அவளுக்கு புரியவில்லை. முன்பை விட சுதந்திரமாக நினைத்ததை செய்யும் அளவுக்கு வசதியும் பிடித்ததை கற்றுக் கொள்ளும் சூழ்நிலையும் என எல்லாம் அமைந்தும் சிந்துவுக்கு துளியும் சந்தோஷம் இல்லா நாட்களாக தான் இவை இருந்தன.
 
 
ஏதோ ஒரு வெற்றிடம் அவள் மனம் முழுக்க பரவி இருக்க.. அது என்னவென்றும் புரியாமல் அதை எப்படி சரி செய்வது என்றும் தெரியாமல் தனக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
எப்போதுமே அவளுக்கு நிறைய நண்பர்கள் என யாரும் இருந்ததில்லை. நெருக்கமான நண்பர்கள் என்றும் எவரையும் அவள் வைத்துக் கொண்டதில்லை. நாகராஜனுக்கு பயந்தே பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து எப்போதும் தள்ளி நிற்பாள் சிந்து.
 
 
காரணம் அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. சட்டென எதையாவது செய்து அனைவரையும் நோகடித்து விடுவார் என்ற பயமும், தன்னால் மற்றவர்கள் காயப்பட்டு விடக்கூடாதே என்ற எண்ணமுமே அவளை எப்போதும் ஜாக்கிரதையாக பேசி பழக வைத்திருந்தது.
 
 
அதோடு எப்போதும் அமைதியாகவே இருப்பவள் என்பதால் அவள் ஒரு தனிமை விரும்பி என அனைவரும் நினைத்துக் கொண்டனர். அதுவும் சிந்துவுக்கு வசதியாக போக அப்படியே வளர்ந்து விட்டாள். இதில் தன் மனதில் உள்ளதை யாரோடும் பகிர்ந்து கொள்ள அவளுக்கு வாய்ப்பும் நேரமும் இல்லாமலே போயிருந்தது.
 
 
இப்போதும் அப்படியே.. இங்கு அவளுக்கென யாரும் இல்லை அவளை சார்ந்தவர்கள் என நினைப்பவர்கள் தொலை தூரத்தில் இருக்க.. நெருங்கி பழகும் ஸ்வேதாவை இப்போது எந்த நிலையில் வைத்து பார்க்க வேண்டுமென கூட  அவளுக்கு தெரியவில்லை.
 
 
இதற்கிடையில் தாரக்..! ‘அவங்களை எங்கே எப்படி வெச்சு பார்க்கறதுன்னு எனக்கு தெரியலை..? ஏன் இப்படி நானே என்னை போட்டு இவ்வளவு குழப்பிக்கறேன்னும் எனக்கு புரியலை..! எதனால் இதெல்லாம் நடக்குது..? நான் ஏன் இப்படி இருக்கேன்..?’ என அவளுள் தொடர்ந்து கேள்விகள் எழுந்து கொண்டே இருக்க.. எதற்குமே சிந்துவிற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை.
 
 
இப்படியே யோசனையான முகத்தோடு சிந்து ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்திருப்பதை கவனித்த ரிச்சர்ட், அவள் அருகில் வந்து அமைதியாக அமர்ந்தான். யாரோ தன் அருகில் வந்து அமர்வதை உணர்ந்து பார்வையைத் திருப்பியவள், அங்கு ரிச்சர்ட் தன் வழக்கமான புன்னகையோடு தலையசைப்பதை கண்டு பதிலுக்கு அதே போல் புன்னகைத்தாள்.
 
 
“ஆர் யூ ஓகே செண்டு..?” என உயிர்ப்பில்லா அவள் புன்னகையை கண்டு உண்டான கவலையோடு அக்கறை குரலில் ரிச்சர்ட் கேட்கவும், தாரக் வழக்கமாக அடிக்கடி அவளிடம் இதே கேள்வியை கேட்பது தான் இப்போது சிந்துவின் நினைவுக்கு வந்தது.
 
 
அது பதிலின்றி அவனையே சிந்துப் பார்த்திருக்க.. “ஹே.. ஹாய்.. ஹலோ..” என அவள் முன் கையசைத்தான் ரிச்சர்ட். அதில் சட்டென தலையை உலுக்கி கொண்டு “ஹ்ம்ம், ஐ அம் ஓகே..” என்று மட்டும் சிந்து சொல்ல.. அதில் அவனுக்கு துளியும் நம்பிக்கை இல்லை.
 
 
ஆனால் வேறு எதுவும் பேசி சிந்துவை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவன் இருந்துவிட, இரண்டு முறை திரும்பி அவனை கேள்வியாக பார்த்தாள் சிந்து.
 
 
“நாம டீம் ப்ராஜெக்ட்டில் இருக்கோம் செண்டு, ஞாபகம் இருக்கா..?” என்றான் ரிச்சர்ட். அப்போதே இங்கே அவள் எதற்காக வந்து காத்திருந்தாள் என்பது சிந்துவின் நினைவுக்கு வர, “ஹே ரிச்சி, ஐ அம் வெரி சாரி..” என உணர்ந்து மன்னிப்பு கேட்டாள் சிந்து.
 
 
“அதெல்லாம் வேண்டாம் அவங்க எல்லாம் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் செஞ்சாச்சு, நாம போய் ஜாயின் செஞ்சுப்போமா..!” என அவளை ரிச்சர்ட் அழைக்க.. சரி என அவனோடு கிளம்பினாள் சிந்து.
 
 
கல்லூரி வளாகத்தின் உள்ளே பூங்கா போல் இருந்த அமைப்பில் இவர்களின் ப்ராஜெக்ட் குழுவில் இருந்த ஆறு பேரும் அமர்ந்து தங்கள் கருத்துக்களை பரிமாறி அடுத்து செய்ய வேண்டிய ப்ராஜெக்ட் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.
 
 
அன்று சிந்து செய்திருந்த முதல் ப்ராஜெக்ட் அவளுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்திருந்தது. முதலிடம் பிடித்தவர்கள் மிக மிக நன்றாக செய்தவர்கள், இண்டாமிடம் பிடித்தவர்கள் நன்றாக செய்தவர்கள் மூன்றாம் பிரிவினர் இன்னும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் என்று மொத்தம் மூன்று பிரிவாக அந்த ப்ராஜெக்ட்களை தேர்வு செய்திருந்தனர். மிக மிக நன்றாக செய்தவர்கள் பிரிவில் சிந்து தேர்வாகி இருந்தாள்.
 
 
அதேபோல் அவளோடு சேர்ந்து மேலும் ஐந்து பேர் தேர்வாகி இருக்க.. அந்த ஆறு பேருக்கும் சேர்த்து மற்றொரு ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இது தனிப்பட்ட ப்ராஜெக்ட் இல்லை, குழுவாக சேர்ந்து செய்ய வேண்டியது. இதற்கான நேரமும் மிகக் குறைவாக இருந்ததால் முதலில் பேசி பிராஜெக்ட் பற்றி தெளிவாக திட்டமிட்டு ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்துக் கொண்டு செய்து முடிக்க நினைத்தனர்.
 
 
அதன் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைக்கு தான் இங்கு அனைவரும் கூடி இருந்தனர். அடுத்த மூன்று மணி நேரத்தில் எல்லாம் சரியாக திட்டமிடப்பட்டு அவரவருக்கான வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அதை ரிச்சர்ட் தனித்தனியே அவரவருக்கான வேலைகளாகப் பிரித்து அனைவருக்கும் மெயில் செய்து விட்டான்.
 
 
ஒரு வாரத்தில் மொத்த ப்ராஜெக்ட்டும் முடிந்திருக்க வேண்டும். அதற்கு இரண்டு நாட்களில் அவரவருக்கான வேலையை முடித்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் எனப் புரிந்து ஒவ்வொருவரும் வேகமாக திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
 
 
என்னவோ மூன்று நாட்களாகவே ஸ்வேதா சுத்தமாக சரியில்லை. என்ன விஷயமென கேட்கவோ, பார்க்கவோ, பேசவோ கூட அவள் சிந்துவை அனுமதிக்கவில்லை. இதில் கவலையானாலும் இப்போதைக்கு ஸ்வேதாவுக்கு தேவையான அவகாசத்தை கொடுத்து தள்ளி நிற்க முடிவு செய்திருந்த சிந்து தானாக சென்று ஸ்வேதாவை தொந்தரவு செய்யவில்லை.
 
 
அதோடு சிந்துவுக்கும் ப்ராஜெக்ட் வேலைகள் நிறைய இருக்க.. அதில் மூழ்கிப் போனாள். காலையிலிருந்து அது சம்பந்தப்பட்ட வேலைகளில் பிஸியாக இருந்தவள், அப்போது ரிச்சர்ட் அழைத்திருக்க.. அதை ஏற்றுப் பேசிக் கொண்டிருந்தாள்.
 
 
ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட சில சந்தேகங்கள் இருப்பதாக கூறி முன்பு திட்டமிட்டதை இப்போது இப்படி மாற்றி செய்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் சிந்து கேட்டுக் கொண்டிருக்க.. அவனும் அதற்கான பதிலை சொல்லியபடியே “எனக்கும் இதுபோல சில சேஞ்சஸ் தோணுது செண்டு, அதை நானும் ட்ரை செய்யலாம்னு தான் இருக்கேன்..” என்றான்.
 
 
“இது தப்பு இல்லையா..? நாம முதலில் திட்டமிட்ட மாதிரி தானே செய்யணும்..? நம்ம டீம் பர்மிஷன் வாங்கணுமோ..!” என சிந்து கேட்க “அவசியமில்லைன்னு தான் நினைக்கறேன்.. ப்ராஜெக்ட் பெஸ்ட்டா இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை, எதுக்கும் ஒருமுறை பேசிடுவோம்..” என்றவன் அவள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு காபி ஷாப் பெயரைச் சொல்லி “அங்கே இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடு, நான் எல்லாரையும் வர சொல்றேன்.. நாம திரும்ப ஒருமுறை பேசி முடிவு செஞ்சுக்கலாம்..” என்றான் ரிச்சர்ட்.
 
 
சிந்துவுக்கும் இது சரி என பட, அதற்கு உடனே ஒத்துக் கொண்டவள், அடுத்த இருபது நிமிடத்தில் அங்கு சென்று தன் மடிக்கணினையோடு அமர்ந்து விட்டாள்.
 
 
இன்னும் வேறு யாரும் வந்திருக்கவில்லை என்பதால் தன் வேலைகளை பார்த்தபடி சிந்து அமர்ந்திருக்க.. அவள் மடிக்கணினியோடு இணைத்திருந்த வாட்ஸ் அப்பில் தாரக்கிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகான அவனின் அழைப்பு. இங்கிருந்து கனடா சென்ற பிறகு முதல் முறையாக அழைக்கிறான்.
 
 
அதில் உண்டான திகைப்பில் திரையையே இமைக்காமல் நம்ப முடியா மனநிலையோடு சிந்து பார்த்துக் கொண்டிருக்க.. அதற்குள் அழைப்பு முழுதாக சென்று துண்டிக்கப்பட்டு இருந்தது. அதிலேயே உணர்வு வர பெற்றவள், சட்டென மீண்டும் தாரக்கிற்கு அழைக்க எண்ணி வேகமாக தொடுத்திரையை அழுத்த ஆடியோ கால் போவதற்கு பதில் வீடியோ கால் சென்றிருந்தது.
 
 
பதட்டத்தில் சிந்து தான் வீடியோ கால் பட்டனை மாற்றி அழுத்தி விட்டிருந்தாள். முழுதாக அழைப்பு சென்று நின்றும் அவள் ஏற்கவில்லை என்றதும் உண்டான யோசனையோடு தாரக் அங்கு தன் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருக்க.. அவளிடம் இருந்து வீடியோ கால் வந்தது.
 
 
இது அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இதுவரை இருவரும் வீடியோ காலில் எல்லாம் பேசிக் கொண்டதில்லை. ‘முதல்முறையாக அவள் இப்படி அழைக்கவும் என்ன..?’ என புரிய மனநிலையோடு அதை ஏற்றிருந்தான் தாரக்.
 
 
அவன் அழைப்பை ஏற்கும் வரை படபடக்கும் மனதோடு அமர்ந்திருந்தவள், திடீரென மடிகணினியை முழுதாக நிறைத்துக் கொண்டு தொடுத்திரையில் தாரக்கின் முகம் தெரியவும் உண்டான சிறு அதிர்வோடு அவனைப் பார்த்தாள். அவளின் திகைப்பான முகத்தைக் கண்டவன் “செந்தூரிகா ஆர் யூ ஓகே..” என வழக்கமாக அவன் கேட்கும் அதே கேள்வியை கேட்க.. ‘ஆம்’ என வேகமாக தலையசைத்தவள் ஏன் என புரியாமல் அவனைப் பார்த்தாள்.
 
 
“எப்போவும் நீ வீடியோ கால் எல்லாம் செய்ய மாட்டே.. இன்னைக்கு புதுசா இருக்கே, அதான் கேட்டேன்..” என்றான் அவளின் பார்வை புரிந்து தாரக். அப்போதே அவள் வீடியோ காலில் அழைத்து இருப்பது சிந்துவுக்கு புரிந்தது. அவ்வளவு நேரமும் அவன் முகத்தை பார்த்ததில் உண்டான உணர்வில் இமைக்காமல் அமர்ந்திருந்தவள், மறுப்பாக தலையசைத்தபடியே சிந்து மன்னிப்பு கேட்க முயல்வதற்குள் அவள் அமர்ந்திருந்த இடத்தை கவனித்திருந்தவன், “வீட்டில் இல்லையா நீ..? வெளியே இருக்கியா, ஸ்வேதாவும் வந்து இருக்காளா..!” என்றான்.
 
 
அதுவரை அவளுள் குறுகுறுத்து கொண்டிருந்த ஏதோ ஒன்று சட்டென உடைந்தது. இத்தனை நாட்களுக்குப் பிறகான அவன் அழைப்பு. அதுவும் நேருக்கு நேர் பார்த்து பேசுவது போல் காணொளியில் அவன் முகத்தையே சிந்து லேசாக மனம் படபடக்க பார்த்துக் கொண்டிருக்க.. அவன் இப்படி கேட்டதில் அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
 
 
அதில் பார்வையை சிந்து தழைத்துக் கொண்டு அமைதியாக இருக்க.. “என்னாச்சு முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..? சரியா சாப்பிடறது இல்லையா நீ, கண்ணெல்லாம் கூட சிவந்து இருக்கு.. தூங்கறியா இல்லையா..?” என அவன் அக்கறையாக கேட்டுக் கொண்டே செல்ல.. அனைத்திற்கும் சேர்த்து பொதுவாக தலையசைத்து வைத்தாள் சிந்து.
 
 
இதை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியாமல் அவன் பார்க்க.. “ஒரு குரூப் ப்ராஜெக்ட் அதுக்காக கொஞ்சம் வேலை அதிகம்..?” என்று துண்டு துண்டாக அவன் கேள்விக்கான பதிலை முயன்று வரவழைத்துக் கொண்ட இயல்பான குரலில் கூறினாள் சிந்து.
 
 
“ஓ, மறுபடியும் ப்ராஜெக்ட்டை நினைச்சு தான் டென்ஷனா இருக்கியா என்ன..? அன்னைக்கு நீ ரிலாக்ஸா செஞ்ச ப்ராஜெக்ட் தி பெஸ்ட்டா செலக்ட் ஆகி இருந்தது ஞாபகம் இருக்கா..! அதே போல இப்போவும் செய், எல்லாம் சரியா வரும்..” என அவன் கூறவும், சரி என மெல்லிய குரலில் சொன்னாள் சிந்து.
 
 
அடுத்து அவன் ஏதோ பேச வரவும், பின்னே இருந்து “ஹே செண்டு, நீ வந்து ரொம்ப நேரமாச்சா.. சாரி நான் லேட்டா வந்துட்டேன்..” என சிந்துவின் தோளை இந்த பக்கம் தட்டி அந்த பக்கம் எட்டி பார்த்து புன்னகைத்தான் ரிச்சர்ட்.
 
 
அதில் அவனை திரும்பிப் பார்த்து சிரித்தவள், “அதெல்லாம் இல்லை ரிச்சி, நானும் இப்போ தான் வந்தேன்..” என சொல்லவும், அவள் முன் இருந்த காபி கோப்பையை பார்த்தவன் “முழுசா ஒரு கேப்பச்சினோவை குடிச்சு முடிச்சுருக்கே.. இதிலிருந்தே நீ எவ்வளவு நேரமா வெயிட் செய்யறேன்னு தெரியுது..” என்றவன், அவளெதிரில் அமர்ந்தவாறே “சாரி செண்டு வர வழியில் டிராபிக், அதோட ஒரு சின்ன ஆக்சிடென்ட்..” எனவும் பதறிப் போனாள் சிந்து.
 
 
“ரிச்சி உனக்கு எதுவுமாகலையே..!” என்று அவள் பதட்டத்தோடு கேட்கவும், “நான் நல்லா இருக்கேன் செண்டு, நீ கவலைப்படாதே..! ஆக்சிடென்ட்ன்னு தான் சொன்னேன், ஆனா எனக்குன்னு சொல்லலையே..” என அவன் வழக்கம் போல் புன்னகைக்க.. அதில் முகம் மலர்ந்தவளாக “நீ இருக்கியே..!” என சிரித்தாள் சிந்து.
 
 
இதையெல்லாம் திரையின் வழியே பார்த்துக் கொண்டிருந்த தாரக்கின் முகத்தில் லேசான மாறுதல். சிந்துவின் கவனம் முழுக்க இங்கு இல்லை என புரிந்து வேறு எதுவும் பேசாமலும் அவர்களுக்கு இடையே செல்ல விரும்பாமலும் அழைப்பை அவன் துண்டித்து விட்டிருந்தான் தாரக்.
 
 
ரிச்சியுடன் பேசி முடித்த பிறகே நினைவு வந்தவளாக திகைப்போடு திரையைத் திரும்பிப் பார்த்த சிந்து, அங்கு அழைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு வேகமாக மீண்டும் அவனுக்கு முயற்சிக்க.. இந்த முறை “ஐ அம் பிஸி, யூ கேரி ஆன்..” என்று அவனிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
அதையே சில நொடிகள் வெறுமையான விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. அதன் பின் ரிச்சர்ட் உடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளின் உள் மனம் ‘ஒருவேளை ஸ்வேதா தன்னோடு வரவில்லை என அறிந்தே தாரக் அழைப்பை துண்டித்து விட்டிருப்பானோ..!’ என நினைத்தது.
 
 
இது சரி இல்லை, இப்படி யோசிக்காதே என அவளுக்கு அவளே பலமுறை சொல்லிக் கொண்டாலும் தன் மனதிற்கே கடிவாளம் போட அவளால் முடியவில்லை. அதில் அசையாமல் சிந்து அப்படியே சில நொடிகள் அமர்ந்திருக்க.. அவளையை கேள்வியாக பார்த்த ரிச்சர்ட் டேபிளை லேசாக தட்டி “செண்டு என்னாச்சு..?” என்றான்.
 
 
அதில் தன் நினைவு கலைந்தவளாக “நத்திங் ரிச்சி, நாம இந்த ப்ராஜெக்ட் பத்தி பேசுவோமா..!” என வேலையில் கவனத்தை திருப்ப முயன்றாள் சிந்து.
 
 
**
 
 
ஒரு மாதம் கடந்திருந்தது..
 
 
இரவு 11 மணியை நெருங்கும் வேளையில் தளர்வான நடையுடன் சோர்வாக அந்த ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் சிந்து. உடலும் மனமும் அவளுக்கு அவ்வளவு சோர்ந்து போயிருந்தது.
 
 
தனக்கென யாரும் இல்லாத ஒரு வெறுமை அவளை சூழ்ந்து இருக்க.. தனியே நாட்களை வெகு சிரமப்பட்டு கடத்திக் கொண்டிருந்தாள் சிந்து. எப்போதும் அவள் இப்படி எல்லாம் உணர்ந்ததே இல்லை. இது அவளுக்கு புதிதாகவும் புதிராகவும் இருந்தது.
 
 
‘இது என்ன புதிதாக...?’ என அவள் எவ்வளவு யோசித்தும் எதற்குமே அவளுக்கு விடை கிடைக்கவில்லை. எதை பற்றியாவது யோசித்து தெளிவான முடிவுக்கு வர நினைத்தால் மனம் மேலும் குழம்பி தான் போகிறது. அதில் இப்போதெல்லாம் பெரிதாக யோசிப்பதையே கூட நிறுத்திவிட்டாள் சிந்து.
 
 
அன்று எதற்கு அழைத்தான் என எதுவும் சொல்லாமல் அழைப்பை துண்டித்ததோடு சரி, அதன் பிறகு தாரக்கிடமிருந்து சிந்துவிற்கு அழைப்பு எதுவும் வரவில்லை. அவளாக அழைத்தாலும் அவன் ஏற்பதில்லை.
 
 
‘வேலை இருக்கிறது, மீட்டிங்கில் இருந்தேன்..’ என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு பிறகு ஒரு குறுஞ்செய்தி வரும். அதற்கு இவள் பதில் கொடுத்தாலும் அதன் பின் எந்த பேச்சுகளும் இருக்காது.
 
 
‘தாரக் தன்னை தவிர்க்கிறானோ..!’ என்ற எண்ணம் அவளுள் மிக ஆழமாக வேரூன்ற தொடங்கியது. இதுதான் நிஜம் என்று இந்த நொடி வரை ஊர்ஜிதம் ஆகவில்லை தான். ஆனால் இப்படி இருக்குமோ என்ற எண்ணமே அவளை மனதளவில் பெரிதும் தவிக்க வைத்தது.
 
 
இதற்கிடையில் ஸ்வேதா வேறு வழக்கத்திற்கு மாறான அமைதியில் தன்னை அதிகம் முடக்கிக் கொண்டாள். அதோடு அவளுக்கு இப்போது வேலையும் அதிகமாக இருந்தது. இருவரும் சந்தித்துக் கொள்ளும் நேரங்களும் பெரும்பாலும் குறைந்து போய் இருந்தது.
 
 
ஸ்வேதா வீட்டில் இருக்கும் நேரங்களில் சிந்து ஏதாவது முக்கிய வேலையாக வெளியில் சென்று இருப்பாள். அதே போல் சிந்து வீட்டில் இருக்கும் போது ஸ்வேதாவுக்கு வேறு ஏதாவது வேலை இருக்கும். இப்படியே இருவரும் சந்தித்து இயல்பாக பேசி நேரத்தை செலவழித்து ஐந்து வாரங்களுக்கு மேல் ஆகி இருந்தது.
 
 
இதில் தன் மன உணர்வுகளையோ.. தன் மனதில் இருப்பதையோ யாரிடமும் பேசவோ பகிர்ந்து கொள்ளவோ முடியா சோர்வோடு அவளின் வேலை பளுவும் சேர்ந்து கொண்டதில் அளவுக்கு அதிகமாகவே தளர்ந்து போனாள் சிந்து.
 
 
அன்று குழுவாக இவர்கள் செய்திருந்த ப்ராஜெக்ட் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பலனாக அதில் பங்கேற்ற ஆறு பேருக்கும் தனித்தனியாக புகழ்பெற்ற பேஷன் நிறுவனங்களின் ஷோக்களில் இன்டர்ன்ஷிப் போல் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
 
 
இவர்கள் யாரும் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் ப்ராஜெக்டை இவர்களிடம் ஒப்படைக்கும் போதே, சிந்துவின் ட்யூட்டர் மட்டும் ‘இதை சிறப்பா செஞ்சு முடிச்சிட்டீங்கனா உங்களுக்கு மிக பெரிய ஆச்சரியம் ஒண்ணு காத்திருக்கு..’ என்று கூறியிருந்தார்.
 
 
அப்போது கூட இப்படி இருக்கும் என யாருமே எதிர்பார்த்து இருக்கவில்லை. ப்ராஜெக்ட்டை நல்லபடியாக செய்து முடித்து அது சிறப்பாக வந்தால் ஏதாவது பரிசு கொடுப்பார்கள், இல்லை சர்டிபிகேட் போல் ஏதாவது கிடைக்கும் என்று தான் நினைத்திருந்தார்கள். இது அவர்களே எதிர்பார்க்காத மிகப்பெரிய வாய்ப்பு.
 
 
இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்தத் துறையில் மேலும் பல பெரிய புள்ளிகளுடன் தொடர்பு கிடைக்கும். அதன் மூலம் இந்த துறையில் அழுத்தமாக காலூன்றி நின்று விட முடியும். இத்தனை சந்தோஷமான விஷயத்தை கூட இன்னும் தன்னை சார்ந்த யாரிடமும் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை.
 
 
இப்படி ஒரு வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதை அறிந்த நொடி அவளுள் அவ்வளவு சந்தோஷம் உண்டாகியது. தானாக தேடிச் சென்றால் கூட இத்தனை பெரிய நிறுவனங்களில் இதெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
 
 
இதை பற்றி தெரிய வந்தவுடன், இந்த சந்தோஷத்தை முதலில் அவள் பகிர்ந்து கொள்ள நினைத்தது தாரக்கிடம் தான். உடனே அவனுக்கு அழைத்தும் விட்டாள் சிந்து. ஆனால் வழக்கம் போல் அவன் அழைப்பை ஏற்கவில்லை. அதில் மனம் சோர்ந்து போக “உங்ககிட்ட பேசணும்..” என்று வாட்ஸ் அப்பில் அவனுக்கு டைப் செய்தவள், பின் அதை அழித்துவிட்டு ‘எனக்கு இன்டர்ன்ஷிப் கிடைத்திருக்கிறது’ என்று மட்டும் அனுப்பினாள்.
 
 
அதைப் பார்த்து விட்டு உடனே அழைப்பான், இல்லை எங்கு கிடைத்திருக்கிறது என்ன வகையான இன்டர்ன்ஷிப் என்பது போல் எதையாவது விசாரிப்பான்.. அதை வைத்து அனைத்தையும் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து அவள் அனுப்பிய குறுஞ்செய்திக்கு ‘வாழ்த்துக்கள்’ என்று மட்டும் ஒற்றை சொல்லில் அவனிடமிருந்து பதில் வந்தது.
 
 
‘அவ்வளவுதானா..!’ என்று உள்ளம் சோர்ந்து போக.. “இல்லையில்லை, அப்போ ஏதோ வேலை பிஸியில் இருந்து இருப்பாங்க.. அப்பறமா கூப்பிட்டு பேசுவாங்க..” என்று மனம் ஒரு ஓரத்தில் எதிர்பார்க்க தான் செய்தது. ஆனால் அவளின் எதிர்பார்ப்பு மொத்தமும் வீணாகி போனது. அன்று மட்டுமல்ல, அதன் பின்பும் தாரக் அழைக்கவே இல்லை.
 
 
வேலையினால் ஏற்படும் சோர்வை விட, தாரக்கின் விலகல் தான் அவளை அதிகம் பாதித்தது. காரணமே இல்லாமல் அவன் தள்ளிச் செல்வது போல் இருக்க.. ஏன் என்ற கேள்வியும் ஸ்வேதா தான் காரணமோ என்ற எண்ணமும் அவளை நிம்மதியாக இருக்க விடாமல் அலைக்கழித்தது.
 
 
இத்தனை நாள் தாரக் தனக்காக பார்த்து பார்த்து செய்ததெல்லாம் கடமைக்காகவா..? அதில் அன்போ அக்கறையோ கொஞ்சமும் இல்லையோ..! என யோசிக்கும் போதே உள்ளத்தில் ஊசி குத்துவது போல் வலித்தது. அவனிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாள் என்று சிந்துவுக்கே தெளிவாகப் புரியவில்லை.
 
 
தன்னைப் பற்றி யோசிக்கும் ஒருவனாக தாரக்கை பார்க்கிறாளா..! இல்லை தன் நலனின் அக்கறை கொண்ட ஒருவனாக நினைக்கிறாளா..! அதுவும் இல்லை என்றால் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கவும் நினைக்கவும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறாளா..! என அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
 
 
ஆனால் இந்த நொடி தனக்காக தன்னை பற்றி யோசிக்க அவளுக்கென அப்படி யாரும் இருப்பது போல் தெரியவில்லை. இதில் உண்டான சோர்வு தான் சிந்துவை அளவுக்கு அதிகமாகவே மனதளவில் பாதித்தது.
 
 
‘யாருக்காக இதையெல்லாம் செய்கிறோம்..? யாருக்காக ஓடுகிறோம்..? எதை நோக்கி தன் வாழ்க்கை செல்கிறது..?’ என்று அவளுக்கு புரியவே இல்லை.
 
 
இதோ இப்போதும் அடுத்த இரண்டு நாளில் வர இருக்கும் பேஷன் ஷோவுக்கான இன்டர்ன்ஷிப் வேலைகளை சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
மனதின் சோர்வு நடையில் தெரிய.. மெல்ல வந்து கொண்டிருந்தவள் செல்ல வேண்டிய ட்ரெயின் சிந்து அங்கு வருவதற்குள் சென்று விட்டிருக்க.. அடுத்த ட்ரெயின் வர மேலும் பத்து நிமிடங்களாவது காத்திருக்க வேண்டி இருக்கும். சிந்து சாதாரணமான மனநிலையில் இருந்தால், அவளுக்கு இருக்கும் சோர்வில் இது மிகப் பெரிய வருத்தத்தை அவளுக்கு கொடுத்திருக்கும்.
 
 
ஆனால் இப்போது அப்படியெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை. அவசரமாக வீட்டிற்குச் சென்று என்ன செய்யப் போகிறோம்..? எனக்காக அங்கு யார் காத்திருக்க போகிறார்கள்..? இதோ இவ்வளவு நேரமாகியும் ஏன் இன்னும் வரலை..? எங்கே இருக்கே..? எப்போ வருவே..? ஏன் இவ்வளவு நேரம்..? எனக் கேட்கக் கூட யாமில்லா ஓரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை கசப்பாக உணர்ந்தாள் சிந்து.
 
 
உடலில் உண்டான சோர்வில் நடை தள்ளாட அங்கிருந்த மேடையில் சென்று அமர்ந்தாள் சிந்து. விழிகளில் உயிர்ப்பே இல்லமால் அவள் எங்கோ வெறித்துக் கொண்டிருக்க.. அவளின் அலைபேசி ஒலித்தது.
 
 
அதில் பார்வையை திருப்பியவள் அங்கு ஒளிர்ந்த ‘தாரக்’ என்ற பெயரை நம்ப முடியாமல் பார்த்தாள்.
 
 
 
 

This post was modified 4 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் – 46
 
அலைபேசி திரையில் ஒளிர்ந்த பெயரை இது நிஜம் தானா என்பது போல் இமைக்காமல் பார்த்திருந்தாள் சிந்து. அவளால் தாரக் அழைப்பதை நம்பவே முடியவில்லை.
 
 
‘ஒருவேளை இது தன் மனதின் எதிர்பார்ப்போ..! தேவையில்லாமல் மனதை குழப்பிக் கொள்கிறேனோ..!!’ என்றெல்லாம் அவள் யோசித்துக் கொண்டிருக்க.. முழு அழைப்பும் சென்று நிற்கும் தருவாயில், ‘ஒருவேளை இது உண்மையா இருந்துட்டா..!’ என தோன்றியதில், அவளின் விரல்கள் தானாக அதை ஏற்று இருந்தது.
 
 
அந்த பக்கமிருந்து அவளின் செவியில் வந்து மோதிய தாரக்கின் “ஹலோ..” என்ற குரல் அவளுள் நிறைந்து அப்படி ஒரு உணர்வை கொடுக்க.. இந்த நொடி இது எதுவும் கனவோ கற்பனையோ இல்லை, நிஜமென சிந்துவுக்கு தெளிவாக புரிந்தது.
 
 
அவளிடமிருந்து பதில் வரவில்லை என்றதும் நான்கைந்து முறை தாரக் ‘ஹலோ’ என அழைத்து விட்டிருந்தான். அதன் பின்பும் அவளிடமிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.
 
 
மாறாக கண்ணீர் மட்டுமே கட்டுபாடின்றி வழிந்தது. வானமழைக்கு காத்திருக்கும் வயல் போல் இத்தனை நாள் அவன் குரல் கேட்க வரண்டு போய் காத்திருந்தவளுக்கு மீண்டும் மீண்டும் தன் செவியில் வந்து மோதிய அந்த குரல் மட்டுமே போதுமென தோன்றியது.
 
 
பதிலுக்கு அவனுடன் பேச வேண்டுமென்றோ ஏன் எதற்கு இத்தனை நாள் அழைக்கவில்லை என்றோ அவள் மனதில் இவ்வளவு நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த கேள்வியையும் கேட்க தோன்றாமல், கண்ணீரோடு அவள் அமர்ந்திருக்க.. தன் இத்தனை அழைப்புக்கும் அவளிடமிருந்து பதில் வராததில் அந்த பக்கம் பதட்டமானான் தாரக்.
 
 
“செந்தூரிகா.. ஆர் யூ தேர்.. என்னாச்சு அன்சர் மீ..” என அவன் படபடக்க.. தனக்கான அவனின் பதட்டம் அந்த நிலையிலும் அவளுக்கு சரியாக சென்று சேர.. “ஹ்ம்ம்..” என்றிருந்தாள் மெல்லிய குரலில் சிந்து.
 
 
நள்ளிரவை நெருங்கும் நேரம், தன் அழைப்புக்கு அவளிடமிருந்து பதில் வராமல் போனதோடு பின்னணியில் கேட்ட சில கலவையான சத்தங்களும் சேர்ந்து அவனை ரொம்பவே பயப்பட செய்திருந்தது. அவளுக்கு ஏதேனும் பிரச்சனையோ என்று படபடத்துக் கொண்டிருந்தவனுக்கு சிந்துவின் இந்த ஒற்றை முனகல் அத்தனை நிம்மதியை தந்தது.
 
 
அதில் ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றியவன், “ஓ காட், கொஞ்ச நேரத்தில் பயந்தே போயிட்டேன்.. ஆர் யூ ஆல் ரைட்..? நீ ஒகே தானே..!” என்று பதட்டம் தணிந்து கேட்கவும், “இல்லை.. இல்லவே இல்லை..” என்றிருந்தாள் சட்டென சிந்து.
 
 
தன் இத்தனை நாள் காத்திருப்பை உணர்த்தும் வகையில் அவள் சொல்லி இருக்க.. அவளிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத தாரக் திகைத்து நின்றான். வழக்கம் போல் தன் கேள்விக்கு ஆம் என்பாள் என்று எதிர்பார்த்திருந்த தாரக் செய்வதறியாது திகைத்தான்.
 
 
ஆனால் நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவன், “என்னாச்சு செந்தூரிகா..? எதுவா இருந்தாலும் சொல்லு.. என்ன பிரச்சனை உனக்கு..?” என்று அவள் எதுவும் ஆபத்தில் சிக்கி இருக்கிறாளோ என்றறிய தாரக் படபடக்க.. “நீங்க.. நீங்க தான் என் பிரச்சனை..” என்றிருந்தாள் நொடியும் தாமதிக்காமல் சிந்து.
 
 
அதில் மேலும் அதிர்ந்து “என்.. என்ன நானா..?” என்று தாரக் கேட்கவும், “ஆமா நீங்க தான், என் எல்லா பிரச்னைக்கும் நீங்க தான் காரணம்..” என்றிருந்தாள் சிந்து. அவளின் குற்றசாட்டு ஏன் என புரியாமல் குழம்பியவன், “நா.. நான் என்ன செஞ்சேன்..?” என்றான்.
 
 
அதற்கு அவளிடமிருந்து பதிலே வரவில்லை. சிந்துவின் இந்த அமைதி புரியாமல் நெற்றியை சுருக்கியவன், “சொல்லு செந்தூரிகா, நான் என்ன செஞ்சேன்.. இல்லை நான் என்ன செய்யணும்..” என்று கேட்டு முடித்த நொடி, “எனக்கு உங்களை பார்க்கணும்.. உடனே பார்க்கணும், எனக்கு நீங்க வேணும்..” என்று விட்டிருந்தாள் சிந்து.
 
 
இப்படி அவள் சொல்லுவாள் என துளியும் எதிர்பார்க்காத தாரக், திகைப்பின் உச்சத்தில் இருந்தான். சிந்துவோ ஒரு வேகத்தில் சொல்லி விட்ட பிறகே அவள் பேசியதன் பொருள் புரிய.. அடுத்து எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாலும் தாரக் என்ன சொல்ல போகிறான் என்பதை கேட்க, மனம் படபடக்க காத்திருந்தாள்.
 
 
இருவருமே அமைதியாகிப் போனதில் அங்கே மூச்சுவிடும் சத்தம் கூட கேட்கவில்லை. சில நிமிடங்கள் இப்படியே ஆழ்ந்த அமைதியில் செல்ல.. இத்தனை நாள் பேசாமல் தவிர்த்தவனின் இன்றைய அழைப்பும், அந்த அக்கறையான குரலில் ஒலித்த கேள்வியும் சேர்ந்தே யோசிக்காமல் அவளை அப்படி பேச வைத்திருந்தது.
 
 
ஆனால் இப்போது தாரக்கின் இந்த அமைதி அவளை கவலைக்குள்ளாக்க.. ‘எங்கே என்னை தப்பா நினைச்சுடுவாங்களோ..!’ என தோன்ற.. “நா..” என சிந்து எதையோ சொல்ல தொடங்கவும், சட்டென அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் தாரக்.
 
 
இதில் திகைத்து சிந்து அலைபேசி திரையை பார்க்க.. அதுவோ தன் உயிர்ப்பை தொலைத்திருந்தது. இதில் கொஞ்சம் இடைவெளி எடுத்திருந்த கண்ணீர் மீண்டும் உடைபெடுக்க.. தன்னுள் மிச்சமிருந்த தைரியத்தையும் நம்பிக்கையையும் ஒன்று திரட்டி அவனுக்கு அழைக்க சிந்து முயல.. அலைபேசியோ அணைத்து வைக்கபட்டிருந்தது.
 
 
இது உணர்த்திய பொருளில் காதில் இருந்து அலைபேசியை எடுக்காமல் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தவளின் கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்தது.
 
 
***********
 
 
ஒரு வருடம் சென்றிருந்தது..
 
 
இதற்கிடையே சிந்துவின் படிப்பும் முடிந்திருந்தது. அன்று அலைபேசியை அணைத்த பின் தாரக் அவளுக்கு அழைக்கவே இல்லை. ஆனால் அவளுக்கு செய்ய வேண்டிய எதையும் நிறுத்தவும் இல்லை.
மாதம் தவறாமல் அவளுக்கு வர வேண்டிய எல்லாம் சரியாக வந்து சேர்ந்து விடும். அவளின் தேவைகளை எப்படி தான் அறிவானோ..? அவள் சொல்லாமலே எல்லாம் சரியாக நடக்கும்.
 
 
இத்தனை அக்கறை உள்ளவன் நேரில் வந்து பார்க்கவில்லை என்றாலும் ஒரு வார்த்தை பேசலாமே..! என அவளுக்கு தோன்றாமல் இல்லை.
 
 
ஆனால் அவன் விலகி செல்வதன் நோக்கம் புரிந்திருந்ததால் அவளாகவும் அவனுக்கு அழைக்கவில்லை. எத்தனையோ முறை தாரக்கை அழைக்க அலைபேசியை எடுத்து அவன் பெயரை அழுத்த இருந்த கடைசி நொடியில் வேண்டாமென முடிவெடுத்து நிறுத்தி இருக்கிறாள்.
 
 
அதே போல் ஆயிரத்துக்கும் மேலான முறை வாட்ஸ்அப்பில் அவனுக்கு குறுஞ்செய்தியை டைப் செய்து விட்டு அனுப்ப மனமில்லாமல் அதை அழித்து விட்டு அழுகையோடு சுருண்டு கிடந்திருக்கிறாள்.
 
 
இதையெல்லாம் கடந்து இன்று வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு சென்று விட்டாளா என்றால் நிச்சயம் இல்லை என்பாள் சிந்து. ஆனால் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு சென்றது மட்டும் உண்மை. இங்கு அவளுக்கு நல்ல பெயரும் இருந்தது.
 
 
பெரிய நிறுவனக்களில் இருந்தெல்லாம் அழைப்பும் வந்திருந்தது. ஆனால் அதையெல்லாம் மறுத்து விட்டு இதோ இந்தியாவுக்கு திரும்ப அனைத்தையும் தயார் செய்துக் கொண்டிருக்கிறாள் சிந்து. இதெல்லாம் யாருக்காக என்றால்.. துளியும் யோசிக்காது அவனுக்காக என்பாள் சிந்து.
 
 
ஆனால் இதெல்லாம் அவனுக்கு தெரியுமா..! புரியுமா..? என்று கூட அவளுக்கு தெரியவில்லை. கடந்து போன இந்த ஒரு வருடத்தில் எத்தனை வலிகளை, எவ்வளவு இடையூறுகளை அவள் தாண்டி வந்திருக்கிறாள் என சிந்து மட்டுமே அரிவாள்.
 
 
முன்பாவது அருகில் ஸ்வேதா இருந்தாள். இப்போது அவளும் இல்லாமல் அனைத்தையும் தனியே கவனித்து கடந்து வருவது அத்தனை எளிதாக இல்லை. ஆனால் அதையும் வைராக்கியத்தோடு செய்து முடித்திருந்தாள் சிந்து.
 
 
எந்த நிலையிலும் யாரிடமும் உதவிக் கேட்டு சென்று நிற்கவில்லை. யாரையும் தன்னை நெருங்கவிட்டதில்லை. இதையெல்லாம் யோசிக்கும் போதே ரிச்சர்ட்டின் முகம் அவள் அனுமதி இல்லாமலே சிந்துவின் நினைவுக்கு வந்தது.
 
 
அவன் தன்னிடம் காதலை சொன்ன நாளும் நினைவில் வர, கசப்பான ஒரு புன்னகை அவள் இதழ்களில் நெளிந்தது.
 
 
‘ரிச்சர்ட் அவளை பொறுத்தவரை மிக நல்ல நண்பன். நல்ல குணங்கள் கொண்ட மிக சிறந்த மனிதன். பல நேரங்களில் அவன் மட்டும் இங்கே இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருப்பேனோ..!’ என சிந்து நினைக்காத நாளில்லை.
 
 
அந்த அளவிற்கு அவளின் கடினமான காலங்களில் எல்லாம் உடன் நின்று இருக்கிறான் ரிச்சர்ட். ஆறுதலை அன்பான வார்த்தைகளிலோ அரவணைத்தோ தான் சொல்ல வேண்டுமென்பதில்லை. அவள் எதுவோ ஒன்றை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறாள் என தெரிந்தாலே போதும், அமைதியாக அருகில் வந்து அமர்ந்துக் கொள்வான் ரிச்சர்ட்.
 
 
‘என்ன பிரச்சனை..? என்னால் ஏதாவது ஒரு வகையில் உனக்கு உதவ முடியுமா..?’ என ஒருமுறை கேட்டு பார்ப்பான். அவள் இல்லையென மறுத்து விட்டால் அதன் பின் தொந்தரவே செய்யாமல் ‘உனக்கு நானிருக்கிறேன்..!’ என்பதை உணர்த்துவது போல் அவளாக எல்லாம் சரியாகி எழுந்து செல்லும் வரை அமைதியாக அமர்ந்திருப்பான் ரிச்சர்ட்.
 
 
இப்படி தான் இன்னொருவனும் மறைந்திருந்து எல்லா வகையிலும் உதவி செய்து உனக்கு நானிருக்கிறேன் என உணர்த்திக் கொண்டே இருக்கிறான் என மனம் செல்ல.. “ச்சே.. எங்கே சுத்தினாலும் இந்த மனசு கடைசியா அங்கே தான் போய் நிற்குது..” என சலித்துக் கொண்டவள், மடித்து பெட்டியில் வைக்க எடுத்த கையில் இருந்த துணியை தூக்கி எறிந்தாள்.
 
 
எவ்வளவு தான் தள்ளி நிற்க வேண்டுமென நினைத்தாலும் ஏதோ ஒன்று ஏதாவது ஒரு வகையில் அவனை நினைவுப்படுத்தி விடுகிறது. அதில் உண்டான சோர்வோடு அப்படியே மடங்கி அமர்ந்தாள் சிந்து.
 
 
அதே நேரம் ரிச்சர்ட்டிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. “செண்டு.. நீ கிளம்பிட்டியா..?” என அவன் கேட்டதும் மணியை பார்த்தவள், “இன்னும் அரைமணி நேரத்தில் ரெடி ஆகிடுவேன் ரிச்சி..” என்றாள்.
 
 
“ஒகே, நான் இருபது நிமிஷத்தில் அங்கே இருப்பேன்..” என்றவனை தயக்கத்தோடு இடையிட்டவள், “நானே போயிடுவேன் ரிச்சி.. உனக்கு ஏன் சிரமம்..?” எனவும், “ஓப்ஹோ செண்டு, நாம இதை பற்றி நிறைய பேசிட்டோம்.. இனி நோ ஆர்க்யூமெண்ட்ஸ்.. நான் வரேன் நீ தயாரா இரு, அது போதும்..” என முடித்து கொண்டிருந்தான் ரிச்சர்ட்.
 
 
அவன் புன்னகையுடன் கூடிய குரலில் சொல்லவும், சிந்துவின் முகத்திலும் மென்னகை மலர்ந்தது. எப்போதும் ரிச்சர்ட் பற்றி நினைக்கும் போது தோன்றும் ‘என்ன மனிதன் இவன்..?’ என்ற எண்ணம் தான் இன்றும் அவளுக்கு தோன்றியது.
 
 
ஒரு வருடம் முன்பு காதலை அவன் தன்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் அப்போதிருந்த மனநிலையில் ரிச்சர்ட் மனதில் உள்ளதை முதலிலேயே கண்டுக் கொள்ள முடியாதவளுக்கு, ஆரம்பத்தில் திகைப்பு தான் வந்தது.
 
 
இதற்கு முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூட தெரியவில்லை. அவளின் நிலையை புரிந்தது போல் “அவசரமில்லை செண்டு, நீ பொறுமையா யோசிச்சு சொல்லு.. ஆனா பாசிட்டிவ்வா மட்டும் சொல்லு..” என்று தன் வழக்கமான புன்னகையோடு கூறினான் ரிச்சர்ட்.
 
 
அப்போதும் முகம் தெளியாமல் அமர்ந்திருந்த சிந்துவை சில நொடிகள் பார்த்து விட்டு ரிச்சர்ட் அங்கிருந்து நகர முயல.. “ரிச்சி ஒரு நிமிஷம்..” என அவனை தடுத்து நிறுத்தினாள் சிந்து.
 
 
அதில் கேள்வியாக அவளை திரும்பி ரிச்சார்ட் பார்க்க.. “சாரி ரிச்சி..” என மெலிதாக முணுகினாள் சிந்து. எதற்கு ஏன் என கேட்காமல் அவன் அமைதியாக பார்த்திருக்க.. தயக்கத்தோடு பார்வையை உயர்த்தி அவனை பார்த்தவள், “உனக்கு இப்படி ஒரு எண்ணம் வர நான் எந்த வகையிலாவது காரணமா இருந்ந்திருந்தா சாரி..” என்றாள்.
 
 
“இது என் கேள்விக்கான பதில் இல்லை..” என்றவனுக்கு ‘என்ன பதில் சொல்வது..? எப்படி மறுப்பது..?’ என புரியா தடுமாற்றத்தோடு கைகளை பிசைந்துக் கொண்டிருந்த சிந்துவுக்கு, அன்று தார்க்கிற்கும் திடீரென இவள் அப்படி சொல்லியதில் இப்படி தான் இருந்திருக்குமோ..! என்ற எண்ணமும் தோன்றியது.
 
 
இதில் ஏதோ யோசனையோடு அவள் அமர்ந்திருப்பதை கண்ட ரிச்சர்ட், “செண்டு.. என் மனசில் இருக்கறதை நான் சொன்னேன்.. உன் மனசில் இருக்கறதை நீ சொல்லு.. இதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்.. நீ எஸ் சொல்லி தான் ஆகணும்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன்..” என்றான்.
 
 
அந்த நொடி அவனின் அந்த வார்த்தைகள் அவளுக்கு அத்தனை நிம்மதியை தந்தது எனலாம். அதில் தன் தயக்கங்களை எல்லாம் உதறி, “சாரி ரிச்சி, எனக்கு.. எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சு இருக்கு..” என ஒருவழியாக சொல்லி விட்டிருந்தாள் சிந்து.
 
 
இது அவனுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் ஓரளவு முன்பே இதை எதிர்பார்த்து இருந்தவனுக்கு தார்க்கின் முகம் மன கண்ணில் வந்தது. அதில் முகம் மாறாமல் அவளை பார்த்து “ஓ சாரி செண்டு, இது தெரியாம நான் உன்னை தொந்தரவு செஞ்சுட்டேன்..” என்றான் ரிச்சர்ட்.
 
 
அதில் வருந்தியவள், “நான் தான் சாரி சொல்லணும் ரிச்சி.. உனக்கு இப்படி ஒரு எண்ணம் வரும்படி நான் எப்போவாவது நடந்திருந்தா..” என்றவளை முடிக்க விடாது, “அதெல்லாம் நீ எதுவும் செய்யலை.. நான் தான் உன்னை பார்த்ததும் விழுந்துட்டேன்..” என புன்னகைக்கவும், அவளின் முகம் மேலும் வருத்தத்தை தத்தெடுத்தது.
 
 
அதை கண்ட ரிச்சர்ட் “இதில் உன் தப்பு எதுவுமில்லை.. திரும்ப இதையே  பேசி உன்னை நான் சங்கடப்படுத்த விரும்பலை.. ப்ரீயா விடு..” என அத்தனை அழகாக அந்த நிமிடத்தை கையாண்டு இருந்தான்.
 
 
அதோடு இவள் இப்படி தன் காதலை மறுத்து விட்டாளே என்ற ஒதுக்கமெல்லாம் கொஞ்சமும் இல்லாமல் மறு நாளில் இருந்தே வெகு இயல்பாக அவளோடு பேசி பழகிக் கொண்டிருந்தான் ரிச்சர்ட். ஆரம்பத்தில் அது போல் இயல்பாக பழக முடியாமல் சிந்து தான் திணறிப் போனாள்.
 
 
ஆனால் அதையெல்லாம் சரி செய்து அவளை பேசியே இயல்பாக்கி இன்று வரை எந்த கோபமும் இல்லாமல் தன் நட்பை தொடந்துக் கொண்டிருக்கிறான் ரிச்சர்ட்.
 
 
இதையெல்லாம் யோசித்தவாறே சிந்து அனைத்தையும் எடுத்து வைத்து தயாராகவும், ரிச்சர்ட் வரவும் சரியாக இருக்க.. அவனோடு விமான நிலையம் நோக்கி கிளம்பினாள் சிந்து.
 
 
இங்கிருந்து கிளம்பி செல்பவளுக்கு ரிச்சர்ட் நினைவு பரிசை கொடுக்க.. அவனை கண்டனமாக பார்த்து “எதுக்கு ரிச்சி இது..?” என்றாள் சிந்து. “எதுக்குனா என்ன சொல்ல..? ஹ்ம்ம்..” என யோசிப்பது போல் பாவனை செய்தவன், “இங்கே இருந்து போனதும் ஹப்பா தொல்லை விட்டதுன்னு என்னை நீ மறந்துடக் கூடாது இல்லை, அதுக்காக தான்.. இதை பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் ஞாபகம் வரணும்..” என்றான் ரிச்சர்ட்.
 
 
“என்ன ரிச்சி இப்படி பேசறே..? உன்னை என்னால் மறந்துட முடியுமா..? இதெல்லாம் இருந்தா தான் உன் ஞாபகம் எனக்கு வருமா என்ன..? என் வாழ்க்கையில் நான் சந்திச்ச நல்ல பிரெண்ட் நீ.. அதோட இது வரைக்கும் எனக்கு ஆண் நண்பர்கள்னு யாரும் இருந்ததில்லை.. நீ தான் முதல்.. இது மட்டுமில்லை எனக்கு எப்போ எல்லாம் தேவையோ அப்போ எல்லாம் நீ கூட இருந்திருக்கே.. உன்னை நான் எப்போவும் மறந்துட மாட்டேன்..” என்று குரல் நெகிழ பேசினாள் சிந்து.
 
 
அது அவனுக்குள்ளும் ஏதோ செய்ய.. குரலை செறுமிக் கொண்டவன், “கிப்ட் பிடிச்சு இருக்கா பார் செண்டு..” என பேச்சை மாற்றினான் ரிச்சர்ட். அதில் அவன் கொடுத்த பரிசை பிரித்து பார்த்தவளின் விழிகள் விரிந்தது. நம்ப முடியாமல் அதையே சில நொடிகள் பார்த்தவள், நெகிழ்ச்சியோடு விழிகள் கலங்க ரிச்சர்ட்டை திரும்பி பார்த்தாள்.
 
 
“பிடிச்சு இருக்கா..” என அவன் கேட்கவும், “இதை பிடிக்கலைன்னு யாராவது சொல்ல முடியுமா..?” என்றவள், மீண்டும் தன் கையில் இருந்த பரிசை உயர்த்தி பார்த்தாள். ஸ்னோ க்ளோப் தீமில் கண்ணாடி குடுவைக்குள் இவர்களின் கல்லூரியும், அதில் வழக்கமாக சிந்து அமரும் இருக்கையில் அவளை போலவே ஒரு குட்டி பொம்மை அமர்ந்திருப்பதும் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்தது.
 
 
இமைக்க மறந்து அதை பார்த்திருந்தவளின் விழிகள் அத்தனை ரசனையோடு அங்குள்ள ஒவ்வொன்றையும் உள்வாங்கியது. சின்ன சின்ன விஷயங்கள் கூட அவ்வளவு அழகாக தவற விடாமல் கொண்டு வரப்பட்டிருந்தது அவளுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.
 
 
அவளின் உடையின் நிறம் அதிலுள்ள டிசைன் என எல்லாம் துளியும் மாறாமல் வந்திருந்தது. “எப்படி ரிச்சி இது..?” என மனம் மகிழ்ச்சியில் தளும்ப கேட்டாள் சிந்து. அதற்கு ஒரு புன்னகையை மட்டும் அவன் பதிலாக கொடுக்க.. விமான நிலையமும் வந்து விட்டிருந்தது.
 
 
அவனிடம் விடை பெற்றுக் கொண்டு சிந்து கீழிறங்க முயல.. “டேக் கேர் செண்டு.. உனக்கு எப்போவும் இங்கே ஒரு பிரெண்ட் இருக்கேன்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ..” என்றிருந்தான் ரிச்சர்ட்.
 
 
அவனிடம் விடைபெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு, ஏதேதோ எண்ணங்கள் வந்து மனதை அழுத்தியது. முதல்முறை தார்க்குடன் இங்கே வந்து இறங்கிய நினைவு மேலெழுந்து அழுத்தியது. எத்தனை தயக்கத்துடன், அவனை மட்டுமே நம்பி, இங்கு வந்து இறங்கினாள்.
 
 
அதன் பின்னான அவளின் வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள்..? என யோசித்தவாறே இரண்டு வருடங்களுக்கு பின் மீண்டும் இந்தியா செல்ல விமானத்திற்காக காத்திருக்க தொடங்கினாள் சிந்து.
 
 
இரண்டு வருடங்களும் இங்கேயே இருக்க வேண்டுமென அவள் நினைக்கவே இல்லை. சென்ற வருடம் கூட இன்டர்ன்ஷிப் முடிந்ததும் ஊர் திரும்ப வேண்டுமென்றே நினைத்திருந்தாள் சிந்து. ஆனால் அதன் பின் எல்லாம் மாறி போனதில் எதிலும் ஈடுபாடே இல்லாமல் போயிருந்தது.
 
 
தன் மன போராட்டத்தை சமாளிக்க.. தாரக் நினைவுகளை விரட்ட அவளுக்கு தெரிந்த ஒரே வழியான தன் படிப்பில் முழு கவனத்தை திருப்பியதன் பலன் அவளுக்கு படிப்பு முடியும் தருவாயில் நன்றாகவே தெரிந்தது.
 
 
அவளுடன் படித்தவர்கள் எல்லாம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேற முயல.. அதையெல்லாம் விடுத்து இங்கிருந்து கிளம்பும் முடிவை தைரியமாக எடுத்திருந்தாள் சிந்து. இப்போது வரை யாருக்கும் அவள் திரும்ப வருவதை பற்றி தெரியாது.
 
 
தாரக்குடன் பேசுவதே இல்லை அதனால் சொல்லவில்லை எனலாம். ஆனால் அவள் சுஜாதாவிற்கு கூட எதையும் சொல்லி இருக்கவில்லை. இத்தனை மாதங்கள் கழித்து ஊர் திரும்பும் சந்தோஷமோ உற்சாகமோ துளியும் அவளிடம் இல்லை.
 
 
இங்கிருந்து செல்லும் முடிவை எடுத்து விட்டாளே தவிர, எங்கே செல்வது..? எங்கே தங்குவது..? தனக்கென யார் இருக்கிறார்கள்..? என அவளுள் பல குழப்பங்கள். அதில் உண்டான கலவையான உணர்வுகளோடு பயணித்துக் கொண்டிருந்தவளின் கைகள் மீண்டும் அலைபேசியை எடுத்து அதில் இருந்த தாரக் பெயரை மெல்ல வருடியது.
 
 
இந்த நொடி கூட ‘இந்த கோபம் வைராக்கியம் என அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அவனுக்கு அழைப்போமா..!’ என மனம் பரபரத்தது. ஆனால் அந்த அழைப்பை அவன் ஏற்காமல் போனால்..! அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டால் என்றெல்லாம் தோன்றியதில் அதை முயன்று பார்க்கும் தைரியம் கொஞ்சமும் அவளுக்கு வரவில்லை.
 
 
இத்தனை நாட்களாகியும் அவன் பேசாமல் தன்னை புறகணித்ததையே கடந்து வர முடியாமல் போராடிக் கொண்டிருப்பவளுக்கு, மீண்டும் அது போல் ஏதாவது நடந்து விட்டால் அதை தாங்கிக் கொள்ளவே முடியாது என தெளிவாக புரிந்தது.
 
 
அதிலேயே இத்தனை நாளில் வளர்த்துக் கொண்டிருந்த தன்னம்பிக்கையுடன், சுயமாக தனக்கென ஒரு இடத்தை தேடிக் கொண்டு விட வேண்டும் என்ற எண்ணத்துடன் விமானத்தில் இருந்து இறங்கியவள் மெல்ல நடை தடுமாற வெளியில் வந்தாள்.
 
 
அவளை கடந்து செல்லும் அத்தனை பேரிடமும் தன்னை சார்ந்தவர்களை காணும் அவசரம் அப்பட்டமாக தெரிந்தது. சந்தோஷ பரபரப்போடு தன்னை சேர்ந்தவர்களை பார்க்கும் ஆவலில் ஓட்டமும் நடையுமாக சென்றவர்களை வருத்தம் தோய்ந்த விழிகளோடு பார்த்தவாறே மெல்ல வந்துக் கொண்டிருந்தவளின் பார்வை எதேச்சையாக எதிரில் பதிய, அங்கு நின்றிருந்தவனை கண்ட அதிர்வில் அப்படியே நின்று விட்டாள் சிந்து.
 
 
அவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. தான் காண்பது நிஜம் தானா என கண்களை நன்றாக மூடி திறந்து மீண்டும் சிந்து பார்க்க.. அவள் காண்பது கனவல்ல என்று உணர்த்தும் விதமாக அங்கு நின்றிருந்தான் தாரக்.
 
 
அவனை இங்கே எதிர்பாராமல் கண்டத்தில் உண்டான ஆர்வத்தில் மற்றதெல்லாம் மறந்து வேகமாக அவனை நோக்கி ஓடிய சிந்து தாவி சென்று அவனை அணைத்து கொண்டாள்.
 
 
 
 

This post was modified 4 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
PRE FINAL
 
MNM - 45 & 46
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 

This post was modified 2 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் – 47
 
தனக்குள் உண்டான கலவையான உணர்வுகளோடு மெல்ல நடந்து வந்துக் கொண்டிருந்த சிந்து, கொஞ்சமும் எதிர்பாராமல் எதிரில் தாரக் நிற்பதை கண்ட நொடி, மற்றதெல்லாம் மறந்து வேகமாக ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டிருந்தாள்.
 
 
இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை தாரக். தன்னை இங்கே எதிர்பாராமல் கண்டதும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவாள் என யூகித்து இருந்தவனுக்கு அவளின் இந்த செயல் பெரும் திகைப்பை கொடுத்தது. அதில் அசைவற்று தாரக் நின்று விட, சிந்துவின் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.
 
 
அதை உணர்ந்த நொடி மனம் கலங்க பார்வையை தழைத்து அவளை பார்த்தவனின் கரங்கள் மெல்ல அவளை பதிலுக்கு அணைக்க உயர்ந்தது. பின் தயங்கி அப்படியே நிறுத்தியவன், விரல்களை அழுந்த மூடி தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள முயன்றான் தாரக்.
 
 
விரைவில் அவளாக தேறி விடுவாள் என அவன் நினைத்திருந்ததை பொய்யாக்கி விட்டு தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்தாள் சிந்து. அவளின் ஒரு வருட தவிப்பை இந்த ஒற்றை அணைப்பில் தீர்த்து விட நினைத்தாளோ என்னவோ..!
 
 
அதற்கு மாறாக அவளின் கைகள் அவனை இறுக்கி கொண்டே சென்றது. இதில் செய்வதறியாது தாரக் விழிக்க.. தாமதமாகவே தாரக்கின் கரம் திரும்ப தன்னை அணைக்காததை உணர்ந்தாள் சிந்து. அதில் கேள்வியாக விழிகளை உயர்த்தி அவனை பார்த்தாள் சிந்து.
 
 
அதுவரை அவளையே வேதனையான விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்த தாரக், அவள் தன்னை பார்ப்பதற்குள் முகத்தை வெறுமையாக மாற்றிக் கொண்டிருந்தான்.
 
 
அவள் பார்வை தன் மேல் பதியவும், “கிளம்பலாமா..?” என்றான் தாரக். அவளை போல் எந்த வித தவிப்பும் தேடலும் இல்லாமல் அவன் நின்றிருந்ததும், விலகலான குரலில் பேசியதும் சேர்ந்து அவளின் நெற்றியை சுருங்க வைத்தது.
 
 
அவள் கண்டுக் கொண்டாள் என புரிந்து தாரக் தன் முகத்தை திருப்பிக் கொள்ள.. இப்போது அவன் ஒதுக்கம் சிந்துவுக்கு நன்றாகவே புரிந்தது. இதில் தானாக அவனிடமிருந்து சிந்து விலகி நிற்க.. அதற்காகவே காத்திருந்தது போல் அவளின் பெட்டியின் அருகில் சென்ற தாரக் அதை தள்ளிக் கொண்டு முன்னே செல்ல.. யோசனையாக தார்க்கை பார்த்தவாறே அவனின் பின் சென்றாள் சிந்து.
 
 
கார் நிற்குமிடம் சென்று அதில் பொருட்களை வைத்து முடித்து ஓட்டுநர் இருக்கை பக்கம் உள்ள கதவை திறந்து தாரக் ஏறி அமரும் வரை அவனை மட்டுமே பார்வையால் அளந்துக் கொண்ருந்தாள் சிந்து. இவ்வளவு நேரத்தில் தாரக் நிமிர்ந்தும் ஒருமுறை கூட அவள் முகத்தை பார்க்கவில்லை.
 
 
சிந்து தொடர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை அவனும் உணர்ந்தே இருந்தான். ஆனாலும் நிமிரவே கூடாது என்பது போல் அவனின் செயல்கள் இருக்க, வேண்டுமென்றே தன்னை அவன் தவிர்ப்பது புரிய.. சிந்துவின் முகம் இறுகியது.
 
 
அதேநேரம் அவள் இன்னும் காரில் ஏறாமல் இருப்பதை கண்டு தாரக் லேசாக குனிந்து அவளை பார்க்கவும், முகத்தில் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் ஏறி அமர்ந்தாள் சிந்து.
 
 
வழி முழுக்க இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. சிந்துவும் அவன் பக்கம் திரும்பாமலே அமர்ந்திருக்க.. அடுத்த அரைமணி நேரத்தில் கார் ஒரு இடத்தில் சென்று நின்றது. அந்த இடத்தை புரியாமல் விழிகளை சுருக்கி அவள் பார்க்க.. இறங்கு என்பது போல் சைகை செய்து விட்டு இறங்கினான் தாரக்.
 
 
சிந்துவும் அவன் சொன்னதை செய்ய.. அவளின் பொருட்களை எடுத்துக் கொண்டு தாரக், வா என்ற தலையசைப்போடு முன்னே செல்ல.. அந்த இடத்தை விழிகளால் அலசியவாறே பின் தொடர்ந்தாள் சிந்து.
 
 
நேராக மின் தூக்கியின் முன் சென்று நின்றவன், சிந்துவும் அங்கே வரவும், மின் தூக்கியின் உள்ளே நுழைந்தான். மூன்றாம் தளத்தில் சென்று இறங்கியவன், அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை தன்னிடம் உள்ள சாவியால் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் தாரக்.
 
 
அவனையே கூர்மையாக பார்த்தப்படியே சிந்துவும் உள்ளே வர, மூன்று படுக்கையறை கொண்ட அந்த வீட்டை மேலோட்டமாக சுற்றி காண்பித்தவன், “உனக்கு இந்த வீடு பிடிச்சு இருக்..” என கேட்க வந்து அப்படியே நிறுத்தி “உனக்கு இந்த வீடு ஓகேவா..?” என்றான்.
 
 
அதற்கு பதில் சொல்லாமல் சிந்து நிதானமாக கைகளை கட்டிக் கொண்டு அவனை பார்க்க.. அவளுக்கு பிடிக்கவில்லையோ என்றெண்ணி, “உனக்கு இது எல்லா வகையிலும் சரியா இருக்கும்னு நினைச்சேன்..” என்றான் தாரக்.
 
 
“இப்போ எதுக்கு இந்த வீடு..?” என்றாள் சிந்து. “உனக்கு தான், முதலில் தனி வீடு பார்க்க தான் நினைச்சேன்.. ஆனா அது சேஃப் இல்லைன்னு தான் இப்படி பார்த்தேன்.. இங்கே எப்போவும் செக்யூர்ட்டி இருப்பாங்க.. அதோட அக்கம் பக்கத்திலும் ஆட்கள் இருக்காங்க, உனக்கு அவசரத்துக்கு உதவியா இருக்கும்னு தான்..” என்றான் தாரக்.
 
 
“நான் அதை கேட்கலை..” என முறைத்துக் கொண்டு சிந்து சொல்லவும், இப்போது எதுவும் சொல்ல முடியாமல் லேசாக தயங்கி பார்வையை திருப்பிக் கொண்டான் தாரக்.
 
 
“இதுக்கு என்ன அர்த்தம்..? நீ என் வாழ்க்கையிலோ வீட்டிலேயோ வேண்டாம்னா..!” என சிந்து கேட்கவும், “ம்ப்ச் செந்தூரிகா..” என அவன் சலிப்போடு முகத்தை திருப்பவும், “என்னை பார்க்க கூட பிடிக்கலையா உங்களுக்கு..?’ என்றாள் சிந்து.
 
 
“நீயா ஏதாவது நினைச்சுட்டு உளறாதே..!” என்றான் தாரக். “அப்போ இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்..? நீங்க தான் சொல்லுங்களேன்..” என்றாள் அவன் முகம் பார்த்து சிந்து.
 
 
இதற்கு சட்டென பதில் சொல்ல முடியாமல் திணறிய தாரக், “உன் நல்லதுக்கு தான் செந்தூரிகா..” எனவும், “இது தான் எனக்கு நல்லதுன்னு நீங்களே முடிவு செஞ்சுட்டீங்களா..?” என்றாள் சிந்து.
 
 
அதில் அவளை பொறுமையற்று பார்த்தவன், “உனக்கு என்ன பிரச்சனை செந்தூரிகா..? நாம இதெல்லாம் முன்னேயே பேசி முடிவு எடுத்தது தானே..!” என்றான் தாரக்.
 
 
“ஏன் முடிவுகள் மாறுறதே இல்லையா..? இல்லை உங்க முடிவை நீங்க இதுவரை மாத்திகிட்டதே இல்லையா..!” என்றவளுக்கு இல்லையென சொல்ல அவனால் முடியவில்லை. அதில் தாரக் அமைதியாக இருக்க.. சிந்துவும் நிதானமாக அவனையே பார்த்திருந்தாள்.
 
 
சில நிமிடங்கள் கடந்தும் அவன் பேசுவது போல தெரியவில்லை. அதில் உண்டான பெருமூச்சோடு நிமிர்ந்தவள், “ஒகே, நீங்க பதில் சொல்ல விரும்பலைன்னு தெரியுது.. எனக்கும் இங்கே இருக்க விருப்பமில்லை.. நான் கிளம்பறேன்..” என தன் பொருட்களை எடுத்து கொண்டு நகர்ந்தாள் சிந்து.
 
 
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தாரக் திகைத்து “எங்கே போறே..?” எனவும், “எங்கேயோ போறேன்.. அது எதுக்கு உங்களுக்கு..?” என்றாள் சிந்து. அவளிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத தாரக், சிறு அதிர்வோடு அவளை பார்த்தான்.
 
 
அதேநேரம் அவள் கதவை நெருங்கவும், “செந்தூரிகா.. நான் சொல்றதை கேளு..” என்றான் தாரக். “எப்போவும் கேட்பேன்.. இப்போவும் கேட்பேன்.. ஆனா இப்படி இல்லை..” என்றவளை அவன் ஆயாசமாக பார்த்தான்.
 
 
அவளும் சலிக்காமல் அந்த பார்வையை எதிர்க் கொள்ள.. “இப்போ என்ன செய்யணும்னு சொல்றே..?” என்றான் தாரக். “நான் எதையும் செய்ய சொல்லி உங்களை வற்புறுத்தலை.. ஆனா இப்படி எதுவும் செஞ்சு என் மனசை நோகடிக்காதீங்கன்னு தான் சொல்றேன்..” என விழிகளால் அந்த வீட்டை காண்பித்தாள் சிந்து.
 
 
“இது.. இது உன்னை கஷ்டப்படுத்த இல்லை.. உன் நல்லதுக்காக தான்..” என்றவனை கோபமாக பார்த்தவள், “எனக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியாதா..?” எனவும், “சில நேரங்களில் தெரியாம போகவும் வாய்ப்பிருக்கு..” என்றான் தாரக்.
 
 
“அது உங்க நினைப்பு..” என்றவளை மறுப்பாக பார்த்தவன், “நீ இன்னைக்கு பற்றி மட்டும் யோசிக்கறே.. நான் உன் எதிர்கால வாழ்க்கையை பற்றியும் யோசிக்கறேன்..” என்றான் தாரக்.
 
 
“எ.. தி.. ர்.. கா.. ல.. ம்..” என ஒவ்வொரு எழுத்தாக சொல்லி பார்த்தவள், “அது இருக்கானே தெரியலையே..!” என்றாள். “செந்தூரிகா ஏன் இப்படி எல்லாம் பேசறே..? உன் நல்ல மனசுக்கு கண்டிப்பா நல்ல எதிர்காலம் அமையும்..” என்றான் தாரக்.
 
 
“அந்த நல்ல எதிர்காலம் எனக்கு பிடிச்ச எதிர்காலமா இருக்கணும் இல்லையா..?” எனவும், “சில நேரங்களில் போக போக பிடிச்சுடும்..” என்றான் தாரக்.
 
 
அதில் பொறுமை இழந்தவளாக அவனை பார்த்து “இப்போ ஏன் இந்த தேவையில்லாத பேச்சு.. எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை, நான் கிளம்பறேன்..” என்றாள் சிந்து.
 
 
“உனக்கு எப்படி சொன்னா புரியும் செந்தூரிகா..?” என்று சோர்ந்து போன குரலில் கேட்டான் தாரக். “நீங்க இப்போவரை எப்படியும் சொல்லவே இல்லை..” என்றாள் சிந்து.
 
 
அவளின் இந்த நேரடி பதிலில் லேசாக திகைத்த தாரக், “வார்த்தைகளில் சொன்னா தானா..?” எனவும், “ஓஹோ அது தான் வார்த்தைகளில் சொல்லாம உங்க செயலில் காட்டிட்டீங்களா..?” என்றாள் சிந்து.
 
 
இதற்கு பதில் சொல்ல முடியாமல் தாரக் இரு கைகளாலும் தலையை தாங்கி பிடித்தப்படி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் தாரக். அவனையே சில நொடிகள் பார்த்த சிந்து, “நீங்க இவ்வளவு எல்லாம் என்னால் கஷ்டப்பட வேண்டாம்.. என்னை நான் பார்த்துக்கறேன்.. பை..” என்றாள்.
 
 
அதில் திகைத்து நிமிர்ந்தவன், “செந்தூரிகா.. சொன்னா கேளு, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதே..” எனவும், “யோசிக்காம அவசரப்பட்டு முடிவெடுக்கறது நீங்க தான், நான் இல்லை..” என்றாள் சிந்து.
 
 
இன்று அவள் ஒரு முடிவோடு பேசுவது புரிய.. “இப்போ என்ன தான் வேணும் உனக்கு..?” என்றான் தாரக். “எனக்கு வேண்டியதை கேட்டா கிடைக்குமா..?” என சிந்து நிறுத்தி நிதானமாக கேட்க.. அவளை தளர்வாக பார்த்தான் தாரக்.
 
 
பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக நிமிர்ந்து “நீ இங்கே நிரந்தரமா இருக்க போறதில்லை, உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையற வரை தான்..” என்றவனை இப்போது கோபமாக பார்த்தாள் சிந்து.
 
 
“எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையற வரைக்கும் நான் ஏன் இங்கே இருக்கணும்..? எனக்கு பிடிச்ச இடத்தில் இருந்துட்டு போறேனே..” எனவும், “ஏன் இப்படி அடம் பிடிக்கறே செந்தூரிகா..?” என்றான் தாரக்.
 
 
“இதில் அடம் எங்கே இருக்கு..? நீங்க தான் தேவையில்லாம அடம் செய்யறீங்க..” என்றாள் சிந்து. “இது அடம் இல்லை, அக்கறை.. உன் மேலே இருக்க அக்கறை.. உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையற வரை நான் தானே உன்னை பார்த்துக்கணும்..” என்றான் தாரக்.
 
 
“அப்படின்னு யார் சொன்னது.. என்னால் என்னை பார்த்துக்க முடியும், அதுக்கான தன்னம்பிக்கையை தைரியத்தை நீங்க கொடுத்து இருக்கீங்க.. அதுவே போதும் எனக்கு.. இனி நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பலை..” என்றாள் சிந்து.
 
 
“நான் உன்னை பாரம்னு எப்போ சொன்னேன்..?” என்று தாரக் கேட்கவும், “அப்போ பாரம் இல்லைனா ஏன் எனக்கு தனியா வீடு பார்த்தீங்க..?” என்றாள் சிந்து.
 
 
சுற்றி சுற்றி பேச்சு ஒரே இடத்தில் வந்து நிற்பதை உணர்ந்து “ஊப்ப்ப்..” என நீண்ட ஒரு பெருமூச்சை வெளியேற்றிய தாரக், “இப்போ என்ன தான் செய்யணும் சொல்லு..” எனவும், “ஒண்ணு நான் எங்கே இருந்து போனேனோ அங்கேயே திரும்ப வரேன்.. இல்லைனா என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன்..” என்று முடிவான குரலில் கூறி இருந்தாள் சிந்து.
 
 
அடுத்த சில நிமிடங்களில் தன் வீட்டை நோக்கி தாரக் காரில் சென்றுக் கொண்டிருக்க.. அவனருகில் அமர்ந்திருந்தாள் சிந்து. தாரக் அறியா வெற்றி புன்னகை ஒன்று அவளிதழ்களில் லேசாக நெளிந்தது.
 
 
அவன் மனமோ இந்த இடைப்பட்ட காலத்தில் அவளிடம் வந்திருக்கும் மாற்றங்களை தான் அசைப்போட்டுக் கொண்டிருந்தது. முன்பெல்லாம் இவனிடம் பேசவே தயங்குபவள், திக்கி திணறி பேசுபவள், அதன் பின் பழைய விஷயங்கள் எல்லாம் தெரிந்து, தெளிந்து கொஞ்சமாக மாறி ஓரளவு இயல்பாக பேச தொடங்கி இருந்தாள்.
 
 
அங்கே சென்ற பின் அது இன்னும் கொஞ்சம் முன்னேறி சொல்ல நினைப்பதை தயக்கமில்லாமல் பேசும் அளவுக்கு முன்னேறி இருந்தாள். ஆனால் இப்போது அவளிடம் காணப்படும் நிமிர்வும் தைரியமும் பேச்சில் இருக்கும் தெளிவும் அவனை ஆச்சர்யப்படுத்தியது.
 
 
இது அவனுக்கு கோபத்தை கொடுப்பதற்கு பதில் சந்தோஷத்தையே கொடுத்தது. இப்படி தான் எதற்கும் பயப்படாமல் அவள் தனக்கு சரியென தோன்றுவதை செய்யவும் பேசவும் வேண்டுமென அவன் எதிர்பார்த்தான். இப்போது அதையே அவனிடம் சிந்து செய்வதை எண்ணி லேசான புன்னகை தோன்றியது.
 
 
அதேநேரம் ஸ்வேதா இறுதியாக பேசி சென்றது தான் சிந்துவின் நினைவுக்கு வந்தது.
 
 
பல நாட்களுக்கு பின், திடீரென ஒரு நாள் வந்து கதவை தட்டினாள் ஸ்வேதா. சிந்து சென்று கதவை திறக்கவும் அவளை முறைத்துக் கொண்டு நின்றவள், “நீயாவது என்கிட்டே சொல்லி இருக்கலாம் இல்லை..” என உரிமையாக கோபப்பட்டவாறே வீட்டிற்குள் வந்தாள் ஸ்வேதா.
 
 
அதில் அவளை புரியாமல் பார்த்த சிந்து “என்ன சொல்லணும்..?” எனவும், “ஹாங், உனக்கும் தீபனுக்கும் என்ன சம்பந்தம்னு தான்..” என நக்கலாக சொல்லிய ஸ்வேதா சோபாவில் காலை மடித்து அமர.. பெரும் அதிர்வோடு அவளை பார்த்தாள் சிந்து.
 
 
“என்ன அங்கேயே நிற்கறே..? இப்படி வந்து உட்கார், இன்னும் எவ்வளவு நாள் என்கிட்டே மறைக்கலாம்னு நினைச்சே..?” என்று ஸ்வேதா கேட்கவும், குற்ற உணர்வோடு அவளை பார்த்த சிந்து “நிஜமா உங்ககிட்ட மறைக்கணும்னு நான் நினைக்கலை..” என்றப்படியே ஸ்வேதாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
 
 
“அப்பறம் ஏன் சொல்லலை..?” என்ற ஸ்வேதாவை தயக்கமாக பார்த்தவள், “அவங்களே சொல்லாதப்போ நான் எப்படி சொல்லறது..?” எனவும், “ஹ்ம்ம் அதுவும் சரிதான்..” என்றாள் எதையோ நினைத்து தலையசைத்தவாறே ஸ்வேதா.
 
 
அதன் பின் சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவ.. “இப்போ எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது..? அவங்க சொன்னாங்களா..!” என சிந்து கேட்கவும், “ஆமா.. உங்க அவங்க அப்படியே சொல்லிட்டாலும்.. இதை நானா கண்டு பிடிச்சேன்..” என்றாள் ஸ்வேதா.
 
 
‘எப்படி..?’ என்பது போல் சிந்து அவளை பார்த்திருக்க.. “ஹ்ம்ம்ம்ம்ம்..” என்ற நீண்ட பெருமூச்சோடு அவளை பார்த்த ஸ்வேதா, ‘அன்னைக்கு தீபன் இங்கே வந்தப்போ நாங்க இரண்டு பேரும் வெளியே போனோம் இல்லை.. அன்னைக்கு என் மனசில் இருக்கறதை அவர்கிட்ட சொல்லிட்டேன்..” என்றாள்.
 
 
அதற்கு அவன் பதில் என்னவாக இருக்குமென தெரிந்துக் கொள்ள நினைத்த சிந்து அவளின் முகத்தை பார்த்திருக்க.. அதை உணர்ந்தது போல் தன் கட்டை விரலை கீழ் நோக்கி காண்பித்து “மொத்தமா ஊத்திகிச்சு..” என்றாள் ஸ்வேதா.
 
 
அதில் ஏன் என்ற கேள்வி எழுவதற்கு பதில் ஏதோ ஒரு நிம்மதி உணர்வு அவளுள் பரவுவதை போல் சிந்துவுக்கு இருந்தது. அப்படியே அடுத்து அவள் பேச போவதை கேட்க சிந்து காத்திருக்க.. “உன்னை என் தங்கச்சியா தான் பார்த்தேன்னு சொல்லாட்டார்..” என்றாள் ஸ்வேதா.
 
 
இப்படி ஒரு பதிலை துளியும் எதிர்பார்க்காத சிந்து திகைத்து பார்க்க.. “உனக்கே ஷாக்கா தானே இருக்கு.. எனக்கும் அப்படி தான் இருந்தது.. அதுக்கு பிறகு என்ன பேச..? இனியும் தேவையில்லாம யோசிச்சு மனசை குழப்பிக்காம உன் வாழ்க்கையை பாருன்னு சொல்லிட்டு போயிட்டார்.. அதுக்கு பிறகு எனக்கு ரொம்பவே ஒரு மாதிரியா இருந்தது.. ஆனா அடுத்த நாளில் இருந்து அவர் எதுவுமே நடக்காதது போல என் மேலே அதே அக்கறையோடு பழகினது வேற ரொம்ப ஒரு மாதிரியா இருந்தது, அதில் இருந்து வெளியே வர தான் எனக்கு கொஞ்ச நாள் தேவைப்பட்டது..” என்று முடித்தாள் ஸ்வேதா.
 
 
“இதில் நான் எங்கே இருந்து வந்தேன்..?” என சிந்து கேட்கவும், “நீயா வரலை, நானா தேடி தெரிஞ்சுகிட்டேன்..” என்றவள், சிறு இடைவெளி எடுத்து “ஏன் இன்னும் தீபன் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கார்னு கேட்டேன்.. அதில் விருப்பமில்லைன்னு சொன்னார்.. இப்படியே வாழ்க்கை முழுக்க இருக்க போறதா சொன்னார்.. ஆனா எனக்கு அது சரியா தோணலை..” என்றாள் ஸ்வேதா.
 
 
“ஏன் யாரும் அப்படி இருக்கறது இல்லையா என்ன..?’ என்று சிந்து கேட்கவும், “இருக்காங்க தான், அவங்க விருப்பம் தான் அது நான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா ஏனோ தீபன் இப்படி இருக்கறது எனக்கு வருத்தமா இருந்தது.. அதனால் ஒரு இரண்டு மூணு முறை நாங்க பேசும் போதெல்லாம் அவர்கிட்ட கொஞ்சம் இதை வற்புறுத்தினேன்.. அப்போ தான் எனக்கு எதையோ தீபன் மறைக்கறது போல இருந்தது..” என்றாள் ஸ்வேதா.
 
 
அவள் சொல்ல வருவது புரியாமல் சிந்து ஸ்வேதாவின் முகம் பார்க்க.. “அன்னைக்கு நேரில் இதை பற்றி பேசும் போதும் தீபனின் முகத்தில் ஏதோ ஒரு வலியை பார்த்தேன்.. அடுத்து போனில் பேசும் போதும் அந்த குரல் வழக்கத்துக்கு மாறா இருப்பது போல் இருந்தது.. அதனால் எங்க அண்ணன்கிட்ட விசாரிச்சேன்.. ஆனா அவருக்கும் எதுவும் தெரியலை.. அவங்க முன்னே மாதிரி அடிக்கடி நேரில் பார்த்து பேசி பழகறது இல்லை.. அதனால் தீபன் வாழ்க்கையில் இப்போ நடக்கற எதுவும் அவருக்கும் தெரியலை.. சரின்னு விசாரிக்க சொன்னேன், அப்போ தான் அவருக்கும் உனக்கும் கல்யாணம் நடந்தது தெரிய வந்தது..” என்றாள் ஸ்வேதா.
 
 
இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் சிந்து அமர்ந்திருக்க.. “எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன் பார்.. கண்ணு முன்னே நீ இருந்தும் உனக்காக அவர் இத்தனை செய்யறதை பார்த்தும் நான் புரிஞ்சுக்காம இருந்திருக்கேனா என்னை என்ன சொல்ல..?” என்று தலையில் தட்டிக் கொண்டாள் ஸ்வேதா.
 
 
அப்போதும் சிந்து எதுவும் பேசவில்லை. “ம்ப்ச், உன்கிடேயே வந்து தீபனை லவ்வறேன்னு எல்லாம் சொல்லி வெச்சு இருக்கேன் பார்.. அப்போ நீ என்னை பத்தி என்ன நினைச்சு இருப்பே..” என்று அவள் சோக கீதம் பாட.. “அப்படியெல்லாம் எதுவுமில்லை..” என்றாள் வேகமாக சிந்து.
 
 
“என்ன இல்லை, கண்டிப்பா நினைச்சு இருப்பே.. தப்பா நினைக்கலைனா கூட சரியான லூசுன்னு நினைச்சு இருப்பே தானே..!” என்றாள் ஸ்வேதா. “ஐயோ நான் அப்படி எதுவும் நினைக்கலை..” என்றாள் சிந்து.
 
 
“நினைக்கலைனா சந்தோஷம் தான்.. ஆனா கொஞ்சம் யோசிச்சு இருந்தா கூட ஈஸியா தெரியக் கூடிய ஒண்ணை எப்படி கவனிக்காம இருந்திருக்கேன் பாரேன்.. இல்லைனா எங்கேயோ இருந்த என்னை இங்கே வம்படியா கொண்டு வந்து இரண்டு வீடு எடுத்து குடி இருக்க சொன்னதும் இல்லாம, உன்னை பக்கத்தில் இருந்து கவனமா பார்த்துக்கணும்.. தேவையான உதவியை எல்லாம் செய்யணும்னு அத்தனை கண்டிஷன்..” என்றவளை இடைமறித்து “என்ன அவர் சொல்லி தான் இங்கே வந்தீங்களா..?” என்றாள் சிந்து.
 
 
“பின்னே இல்லைனா நான் ஏன் இங்கே வர போறேன்.. ஜாலியா ஆபிஸ் பக்கத்திலேயே இருந்தேன் தெரியுமா..! சரி இந்த நாட்டுக்கு புதுசா வர பொண்ணுக்கு உதவி செய்னு அவர் சொன்னதால் வந்தேன்.. ஆனா யாரோ ஒரு பொண்ணுக்கு இவர் ஏன் இதெல்லாம் செய்யணும்னு யோசிச்சு இருந்தாலோ.. இல்லை அவர் எப்படி உன் கூட இங்கே அவ்வளவு இயல்பா தங்கறார்னு யோசிச்சு இருந்தாலோ கூட கண்டு பிடிச்சு இருக்கலாம்.. எங்க அம்மா அடிக்கடி சொல்றது போல நான் கொஞ்சம் தத்தி தான் போல.. பெரிய விஷயத்தை எல்லாம் தெளிவா யோசிச்சுட்டு, சின்ன விஷயத்தை டீலில் விட்டுடறேன்..
 
 
ஆனா ஏன் இதை நீங்க மறைக்க நினைச்சீங்கன்னு இப்போ வரை எனக்கு புரியலை.. ஒருவேளை நீ படிச்சு முடிக்க தான்னா, சீக்கிரம் இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுங்க..” என்றிருந்தாள் ஸ்வேதா.
 
 
இல்லையென மறுத்து எதையும் பேச விரும்பாமல் சரியென சிந்து தலையசைத்து வைக்க.. “அப்பறம் சொல்ல மறந்துட்டேன் பார், நான் அடுத்த வாரம் வீட்டை காலி செய்யறேன்.. வேலை விஷயமா ஆஸ்திரேலியா போறேன்..” என்றாள் ஸ்வேதா.
 
 
“நீங்க.. அவரை மறக்க முடியாம.. இப்படி..?” என்று எப்படி கேட்பது என தெரியாமல் சிந்து தடுமாற.. “ஹே.. அதெல்லாம் இல்லை, நான் அவ்வளவு வீக் இல்லை, இது ரொம்ப நாளா நான் காத்திருந்த ஒரு ப்ரமோஷன்..” என்றவள் சிந்து நம்பாமல் பார்க்கவும், “நிஜமாவே சிந்து.. நான் இப்போ ரொம்ப நல்லா இருக்கேன்.. ஆரம்பத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாவே அப்சட் ஆனதென்னவோ உண்மை தான்.. அதிலிருந்து வெளியே வரவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது..
 
 
ஆனா இதில் தப்பு முழுக்க என் மேலே தானே..! அப்போவே என் மனசில் இருக்கறதை நான் தீபன்கிட்ட சொல்லி இருந்தா அவரும் என்னை எப்படி பார்க்கறார்னு தெரிஞ்சு இருக்கும்.. தேவையில்லாம மனசுக்குள்ள ஆசையை வளர்த்துட்டு காத்திருக்காம இருந்திருப்பேன்.. ஆரம்பத்தில் தீபனுக்கு கல்யாணம் முடிஞ்சது தெரிஞ்சப்பவும் நான் இப்படி தான் அப்சட் ஆனேன்.. ஆனா சில மாசங்களில் அதிலிருந்து வெளியே வர முடிஞ்சது இல்லை.. இப்போவும் அப்படி தான்.. அதனால் என்னை நினைச்சு வருத்தப்படாம கூடிய சீக்கிரம் உன் வாழ்க்கையை சரி செய்ய பார்..” என்று விட்டு சென்றிருந்தாள் ஸ்வேதா.
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் - 48
 
சிந்து இங்கே வந்து ஒரு வாரமாகி இருந்தது. தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக் கொள்ளும் முயற்சியில் இறங்கி இருந்தாள் சிந்து.
 
 
தாரக் அவன் அதிகாரத்தையும் பணத்தையும் பயன்படுத்தி அவளுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்க முன் வர, அதை முற்றிலும் மறுத்துவிட்டாள் சிந்து.
 
 
அவளின் சொந்த முயற்சியில் அமைந்ததாக இனி எல்லாம் இருக்க வேண்டும் என சிந்து சொல்லிவிட, அதற்கு மேல் தாரக்கும் வற்புறுத்தவில்லை. ஆனால் அவள் வெளியில் சென்று வர சிந்துவுக்கென ஒரு காரை முன்பே வாங்கி வைத்திருந்தான் தாரக்.
 
 
அதை மட்டும் அவளை பயன்படுத்திக் கொள்ள அவன் சொல்லிவிட, சிந்து அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனால் இந்த இடைப்பட்ட ஒரு வருடத்தில் அவள் அங்கு டிரைவிங் கற்றுக் கொண்டதை கூட, அவன் அறிந்து வைத்திருந்தது அவளுக்கு வியப்பை தந்தது.
 
 
தன் கண் முன் வரவில்லையே தவிர, தாரக் அவளை அப்படியே விட்டு விடவில்லை.. தொடர்ந்து தன் கண்காணிப்பில் தான் வைத்திருந்து இருக்கிறான் என்று முன்பே அவளுக்கு இருந்த சந்தேகம் இன்று ஊர்ஜிதம் ஆகி இருந்தது.
 
 
இல்லையெனில் அவள் இந்தியா வரும் தகவல் அவனுக்கு எப்படி தெரியும்..? சரியாக அந்த நேரத்திற்கு எப்படி தாரக் விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தான். அதோடு மட்டுமல்லாமல் அவளுக்கென வீடு கார் என அத்தனையும் அவன் முன்னேற்பாடாக செய்து வைத்திருந்ததை எல்லாம் எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள் சிந்து.
 
 
வழக்கம் போல் வெறுமையான வீடே அவளை வரவேற்றது. அவள் அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவி செய்ய உமா இருந்தார் தான். ஆனால் தாரக்..?
 
 
அவனை நேருக்கு நேர் சந்தித்து ஒரு வாரமாகி இருந்தது. அவளை இங்கு அழைத்து வந்ததற்கு மறுநாள் நேரில் பார்த்து பேசியதோடு சரி. அதன் பின் சிந்துவின் கண்ணிலேயே அவன் படவில்லை. தாரக் வேண்டுமென்றே ஓடி ஒளிகிறான் என சிந்துவுக்கு தெளிவாக புரிந்தது.
 
 
அதில் உண்டான பெருமூச்சோடு சோபாவில் அமர்ந்தாள் சிந்து. அவளின் சோர்வை புரிந்தது போல் அருகில் வந்த உமா “மேடம் குடிக்க ஏதாவது கொண்டு வரட்டுங்களா..?” என பணிவான குரலில் கேட்க, மெல்ல விழிகளை திறந்து அவரைப் பார்த்து “தண்ணி மட்டும் போதும் க்கா..” என்றாள்.
 
 
சரி என அவர் உள்ளே சென்று விட, அடுத்து என்ன செய்வதென தெரியா ஒரு மனநிலையோடு மீண்டும் விழிமூடியவளின் மனம் ஏதோ ஒரு வகையில் இங்கு இருப்பதையே நிம்மதியாக உணர்ந்தது.
அவளுக்கு திரும்ப இங்கு வந்த நாள் முதலே ஒரு பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பான கரங்களுக்குள் வந்து சேர்ந்து விட்ட உணர்வுவந்து விட்டிருந்தது. கடந்த ஒரு வருடமாக எல்லா வசதிகளும் உள்ள ஒரு இடத்திலேயே தங்கி இருந்தாலும், ஏதோ ஒரு பதட்டம், இனம் புரியா ஒரு தவிப்பு, பெயர் சொல்ல முடியா தனிமை, அவளை ஒரு வித சஞ்சலத்திலேயே வைத்திருந்தது.
 
 
அவளுக்கே இது பெரும் ஆச்சர்யத்தை பலமுறை கொடுத்திருக்கிறது. ‘வலியை கொடுத்தவனே எப்படி அதற்கு மருந்தாகவும் இருக்க முடியும்..?’ என்பது அவளுக்கே புரியாத ஒன்று தான். ஆனால் தன் வாழ்க்கையிலேயே அப்படி ஒன்று நடந்து கொண்டிருப்பதை எப்படி இல்லையென அவளால் ஒதுக்கி தள்ளி விட முடியும்..?
 
 
இந்த வீட்டில் அவள் இருந்தவரை தாரக்கை பற்றி இப்படி ஒரு எண்ணம் துளியும் சிந்துவின் மனதில் துளியும் இல்லை. அதேபோல் கோபமோ வெறுப்போ கூட அவளுக்கு அப்போது இல்லை. அதற்கு நாகராஜன் இடமிருந்து தன்னை அவன் மீட்டுக் கொண்டு வந்தது மட்டுமே காரணமல்ல.. அதன் பின்னாலான பல நிகழ்வுகள் இதற்கு காரணமாக அமைந்திருந்தது.
 
 
இந்த வீட்டிற்குள் அவள் வந்ததிலிருந்து உணர்ந்தது ஒருவகை கதகதப்பையும் பாதுகாப்பு உணர்வையும் மட்டும் தான். தன் சொந்த வீட்டில் கூட கிடைக்காத ஒரு உணர்வை இங்கு அவள் உணர்ந்திருக்கிறாள்.
 
 
கடல் கடந்து வேறு நாட்டில் இருக்கிறோம் என்று புத்திக்கு புரிந்தாலும், மனம் எந்த நொடியிலும் அவளுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் நாகராஜன் மூலம் ஆபத்து வரலாம் என நினைத்துக் கொண்டே தான் இருந்தது. மீண்டும் இங்கே திரும்ப வந்தவுடன் அதே உணர்வு அவளுள் வேகமாக பரவுவதை உணர்ந்தாள் சிந்து.
 
 
இங்கிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், அத்தனை கவனமாக தன் சுற்று புறத்தை பார்வையால் அலசுவாள் சிந்து. அந்த அளவு வெளியே பதட்டத்தை உணருபவளுக்கு இந்த வீட்டிற்குள் நுழைந்ததும் தோன்றும் கதகதப்பு அத்தனை நிம்மதியை தரும்.
 
 
இப்போதைக்கு இதுவே போதும் என்பது போலான மன நிலையில் தான் இப்போது இருந்தாள் சிந்து. முதலில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இப்போது அவளுள் மேலோங்கி நின்றது.
 
 
***
 
 
அந்த பத்துக்கு பத்து அறைக்குள் சுருண்டு கிடந்த நாகராஜன் கடந்த ஒரு வருடத்தில் எலும்பும் தோலுமாக மாறிப் போயிருந்தார். ஆரம்பத்தில் இருந்த திமிர், கோபம், வெறுப்பு என எல்லாம் இப்போது வடிந்து காணாமல் போயிருந்தது.
 
 
ஆரம்ப நாட்களில் இந்த உணவை எடுத்துக்கொண்டு உடல் சோர்ந்து போகாமல் பார்த்துக் கொண்டால், கிடைக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இங்கிருந்து தப்பித்து விட முடியும் என்ற அவரின் நம்பிக்கை முற்றிலும் பொய்த்துப் போயிருந்தது.
 
 
இத்தனை மாதங்களில் அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பே கிடைக்கவே இல்லை. எங்காவது ஏதாவது ஒரு சமயம், ஒரு ஏமாந்த தருணம் தனக்கென அமையும் என அவர் எதிர்பார்த்து இருந்ததெல்லாம் கானல் நீராகி போய் இருந்தது. இனி இங்கிருந்து தப்பிக்கவே வழியில்லை என புரிந்து தானே அடங்கி போயிருந்தார் நாகராஜன்.
 
 
அவருக்கு தப்பிக்க வாய்ப்பு அமைவது ஒரு புறம் இருக்கட்டும். மனித முகம் என கூட இத்தனை நாளில் எவரையும் அவர் கண்டதில்லை. இந்த நான்கு சுவர் மட்டுமே அவர் உலகம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரும் உணவும் தண்ணீரும் கூட மனிதர்கள் தான் கொண்டு வந்து கொடுக்கிறார்களா இல்லை ஏதாவது மிஷின் செய்கிறதா என்ற சந்தேகம் கூட அவருக்கு வந்து விட்டிருந்தது.
 
 
அந்த அளவுக்கு நேரம் தவறாமல் சொல்லி வைத்தது போல் அந்த ட்ரே மட்டும் வந்து கொண்டிருப்பதை இவர் எந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியும்..? அதை அனுப்பும் கை கூட இதுவரை அவரின் கண்ணுக்கு தெரிந்ததில்லை.
 
 
எப்படியாவது தன்னைத் தவிர இங்கு வேறு யாரோ ஒருவர் இருக்கிறார் என இன்று கண்டு கொண்டு விடலாம் என்ற எண்ணத்தோடு எத்தனையோ முறை அந்த நேரத்தை கணக்கிட்டு கதவையே நாகராஜன் பார்த்துக் கொண்டிருப்பார்.
 
 
ஆனால் நொடியில் ட்ரே மட்டும் நகர்ந்து வருவதை கண்டு ஏமாந்து இருக்கிறார். இதில் மனிதன் நடமாட்டமே இங்கு இல்லை என்று முடிவுக்கு அவர் எப்போதோ வந்து விட்டிருந்தார்.
 
 
அதோடு சில நாட்கள் உயிர் போகும் அளவிற்கு தொடர்ந்து கத்தி பார்த்தும் கூட எங்கிருந்தும் எந்த உதவியும் அவருக்கு கிடைத்தது இல்லை. அப்படியே நாட்கள் செல்ல.. அவர் உடலில் இருந்த மொத்த ஆணவமும் வடிந்து இப்போது உயிர் மட்டுமே அங்கு மிச்சம் இருந்தது.
 
 
இதற்கிடையில் நாகராஜன் திடீரென காணாமல் போனதற்கு மறுநாள் அவரிடம் வேலையில் இப்போது இருந்தவர்களில் அதிக வருஷமாக உடன் இருந்த கந்தன் என்பவனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது.
 
 
“நான் காசிக்கு கொஞ்ச நாள் போகப்போறேன்.. எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை, என்னவோ மனசு வெறுமையா இருக்கு, எனக்குன்னு யாரும் இல்லாதது போல தோணுது.. சில மாசம் கோயில் குளம்னு போய் வந்தா மனசு மாறும்னு என்று நினைக்கறேன்.. எனக்காக காத்திருக்காம நீங்க உங்க வேலைகளை பாருங்க..” என சுருக்கமாக போதை குரலில் அவர் சொல்ல வந்ததை மட்டும் சொல்லி அனுப்பி இருந்த செய்தியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்த கந்தனுக்கு அவரின் இந்த முடிவு வியப்பை தந்தது.
 
 
அவரறிந்த வரையில் இப்படி எல்லாம் யோசிக்க கூடியவர் இல்லை நாகராஜன். ‘யார் எப்படி போனால் எனக்கு என்ன..?’ என்று வாழக்கூடியவர். ‘அவர் குடும்பத்தை பிரிந்து மனம் வருந்தி இப்படி ஒரு முடிவை எடுப்பாரா..!’ என கந்தனுக்கு கொஞ்சமும் புரியவில்லை.
 
 
ஆனால் அவரின் உடனிருந்த மற்றவர்கள் எல்லாம் இதற்கு வாய்ப்பு இருக்கு என்றே கூறினர். அதற்கு காரணம் இறுதி சில நாட்களாக அவரின் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றம். எல்லோரிடமும் அவர் காட்டிய வெறுப்பு, இதையெல்லாம் அவர்கள் எடுத்துச் சொல்லவும் கந்தனும் ‘ஒருவேளை இருக்குமோ..!’ என நினைத்தார்.
 
 
அதில் ஆரம்பத்தில் இதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் நாகராஜன் திரும்ப வருவதற்காக காத்திருந்தவர், இரண்டு மூன்று மாதங்கள் கடந்த பிறகும் அவர் வராமல் போகவும், நாகராஜனுக்கு தொடர்புக் கொள்ள முயன்றார்.
 
 
ஆனால் அதுவும் அணைத்து வைக்கபட்டிருப்பதாக வர.. கொஞ்சம் பயந்து போனார் கந்தன். உடனே அருணை தேடிச்சென்று அவர் விவரம் சொல்லவும், அதுவரை இதைப் பற்றி எதையும் அறியாமல் தன் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இருந்த அருண் “ஓ அப்படியா..?” என்று மட்டும் கேட்டுக் கொண்டான்.
 
 
“என்ன தம்பி இவ்வளவு சாதாரணமா கேட்கறீங்க..? ஐயா இத்தனை நாளாகியும் திரும்பி வரலை.. அதோட அவர் போனும் சுவிட்ச் ஆஃப்னு வருது.. ஒரு மாசமாவா ஃபோன் ஆஃப் செஞ்சு இருக்கும்..? இப்படி இருந்தா எப்படி அவரை நாம தொடர்பு கொள் முடியும்..? அவர் எப்போ வருவாருன்னு ஏதாவது உங்களுக்கு தெரியுமா..?” என அவர் கேட்டுக் கொண்டே செல்ல.. “இதை எல்லாம் என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்..?” என்றான் அருண்.
 
 
அதில் அவனை கவலையாக பார்த்த கந்தன், “நாம போலீசுக்கு போகலாம் தம்பி..?” எனவும், “இங்கே பாருங்க அண்ணே, எனக்கு உங்க மேலே நிறைய மரியாதை இருக்கு.. உங்ககிட்ட கோபமா பேச வைக்காதீங்க, நீங்க சொல்லும் மனுஷனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவரைக் காணோம்னு உங்களுக்கு கவலையா இருந்தா நீங்க போலீஸ்க்கு போங்க, நான் உங்களை தடுக்க மாட்டேன், என்னை கூப்பிடாதீங்க..” என்று விட்டிருந்தான் அருண்.
 
 
இதையெல்லாம் சுஜாதாவும் சற்று தள்ளி நின்று கேட்டுக் கொண்டு தான் இருந்தார். அவரின் பக்கம் வருத்தத்தோடு திரும்பிப் பார்த்த கந்தனுக்கு சட்டென சுஜாதாவிடம் உதவி கேட்க முடியவில்லை. ஏனெனில் வருடக் கணக்காக அவர்கள் வீட்டிலேயே வேலை செய்திருந்தாலும், நாகராஜனின் அடியாட்களிடம் சுஜாதா எப்போதுமே பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை.
 
 
அதில் தள்ளி நின்றே பழகி இருந்தவருக்கு இப்போதும் அவரிடம் பேச முடியவில்லை. அதில் செய்வதறியாது அங்கிருந்து வந்து விட்டிருந்தாலும் மேலும் ஒரு மாதம் சென்ற பிறகும் இதே நிலை தொடரவும், வேறு வழியில்லாமல் தானே காவல் நிலையத்திற்குச் சென்று விட்டிருந்தார் கந்தன்.
 
 
ஆனால் அவர்களோ கந்தனிடம் இருந்த வாய்ஸ் மெசேஜையே முக்கிய சாட்சியாக எடுத்துக் கொண்டு, “அதான் அவரே தெளிவா சொல்லி இருக்காரே.. அப்புறம் அவரை ஏன் தேடறீங்க..?” என்றிருந்தனர். “இல்லை சார், எனக்கு என்னவோ மனசுக்கு கொஞ்சம் உறுத்தலா இருக்கு..” என்று கந்தன் சொல்ல.. “உன் உறுத்தலுக்கு எல்லாம் நாங்க கேஸ் எடுக்க முடியாது..” என்று எரிச்சலோடு சொல்லி இருந்தார் இன்ஸ்பெக்டர்.
 
 
நாகராஜனால் பலமுறை அவமானப்பட்டிருந்த கோபம் இன்ஸ்பெக்டரினுள் இன்னும் மிச்சம் இருந்தது. அதோடு கடந்த சில மாதங்களாக இங்கு பிரச்சனைகள் எதுவும் நடக்காதது வேறு அவருக்கு நிம்மதியை தந்ததில், நாகராஜன் திரும்பி வராமல் இருப்பதே இந்த ஊருக்கு நல்லது என அவர் மனம் நினைத்தது.
 
 
ஆனால் மேலும் ஆறு மாதம் சென்று பிறகும் நாகராஜன் திரும்ப வராததோடு எந்த ஒரு தகவலும் இல்லாமல் போனதில் நாகராஜனின் வீட்டிலும் தோப்பிலும் வேலை செய்பவர்கள் எல்லாம் வருமானமின்றி தவித்தனர்.
 
 
இப்போதாவது உதவுவார்கள் என கந்தன் மீண்டும் காவல்துறையை தேடிச் செல்ல.. ஆரம்பத்தில் தட்டி கழித்தாலும் பின் அருணை வரவழைத்து  பொறுப்பை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார் இன்ஸ்பெக்டர்.
 
 
முதலில் இதை ஏற்க மறுத்த அருண் பின் மற்றவர்களின் நலன் இதில் அடங்கி இருப்பதை உணர்ந்து நாகராஜன் வரும்வரை பார்த்துக் கொள்வதாக கூறினான். அதற்குமே இன்ஸ்பெக்டர் தான் ஒருவாறு பேசி அவனை சம்மதிக்க வைக்க வேண்டி இருந்தது.
 
 
“இல்லை சார், எனக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.. நாளைக்கு வேற ஏதாவது பிரச்சனை வரும், எங்களுக்குள்ளே இப்போ நல்ல உறவோ பேச்சுவார்த்தையோ கூட இல்லாத போது நான் இதை செய்யறது சரியா வராது..” என்றிருந்தான் அருண்.
 
 
“தம்பி அதெல்லாம் அவர் இங்கே இருக்கும் போது, அவர் இப்போ இங்கே இல்லை.. காசிக்கு போறேன்னு அவர் சொல்லி இருக்கார், எனக்கு தெரிஞ்சு இது போல மனம் வெறுத்து காசிக்கு போற யாரும் திரும்ப வந்ததே இல்லை.. 
 
 
இத்தனை மாசமாகியும் அவர் திரும்ப வரலைனா, அவரும் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க தான் வாய்ப்பு அதிகம்.. அவரை நம்பி இத்தனை பேர் வேலை செய்றாங்க, அவங்களுக்கான வருமானம் குடும்பம்னு எல்லாம் இருக்கே.. அவர் வர வரைக்கும் நீங்க இதெல்லாம் பார்த்துக்கோங்க.. அப்படியே அவர் வந்து பிரச்சனை செய்தாலும் நாங்க இருக்கோம்..” என்று உறுதியளித்திருந்தார் இன்ஸ்பெக்டர். அதன் பின்பே அருண் இங்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.
 
 
ஆனால் அதற்கு முன்பு தாரக்கை அழைத்து அருண் பேசி இருக்க.. “எனக்கும் இன்ஸ்பெக்டர் சொல்றது தான் சரின்னு தோணுது, நீ பொறுப்பை எடுத்துக்கோ..” என்றிருந்தான் தாரக்.
 
 
“இல்லை மாமா, உங்களுக்கு நடந்த எல்லாம் தெரியும் தானே.. திரும்ப எதுவும் பிரச்சனையாக வேண்டாம்னு யோசிக்கறேன்..” என்றான் அருண். “நான் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசறேன், உங்க அப்பா திரும்ப வந்தா..” என்று அந்த இரு கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுத்து நிறுத்தியவன், “இன்ஸ்பெக்டர் பார்த்துக்குவார்..” என முடித்திருந்தான் தாரக்.
 
 
இதெல்லாம் இன்னும் சிந்துவுக்கு தெரியாது. முதலில் அவ்வளவு தூரத்தில் இருப்பவளை தேவையில்லாத எதையும் சொல்லி வருத்தப்பட செய்ய வேண்டாம் என நினைத்து இவர்கள் வெளியேறியதை பற்றி சொல்லாமல் மறைத்தவர்கள், அதன் பின் அதன் தொடர்ச்சியாக நடந்த எதையுமே சொல்லவில்லை.
 
 
*
 
 
நள்ளிரவில் வீடு திரும்பியிருந்தான் தாரக். இன்று மட்டும் இல்லை இந்த ஒரு வாரமாகவே இப்படித்தான் விடிவதற்கு முன்பே இங்கிருந்து கிளம்புபவன், நள்ளிரவில் தான் திரும்ப வீட்டிற்கு வருகிறான்.
 
 
அதை சிந்துவும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் எதுவும் இதைப் பற்றி பேச வேண்டாம் என நினைத்து அமைதி காத்தவளுக்கு, இன்று ஏனோ அந்த பொறுமை காணாமல் போயிருந்தது.
 
 
அதில் தாரக் பால்கனியில் நிற்பதை கவனித்து அவன் அறையின் கதவை சென்று தட்டினாள் சிந்து. இந்த நேரத்தில் இங்கு வேறு யார் வரப் போகிறார்கள் எனப் புரிந்தே தாரக் வேறு வழியின்றி அவளை உள்ளே வருமாறு அழைக்க.. கைகளை கட்டிக்கொண்டு அவன் முன் வந்து நின்று தீர்க்கமாக பார்த்தாள் சிந்து. 
 
 
அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் முகத்தை திருப்பி எங்கோ பார்த்தபடி நின்றவன், “என்ன விஷயம் செந்தூரிகா..? இன்னும் தூங்கலையா நீ..?” என இயல்பாக பேச்சை தொடங்க.. “என்கிட்ட இருந்து ஏன் இப்படி ஓடி ஒளியறீங்க..? நீ இங்கே இருக்கறது எனக்கு பிடிக்கலைன்னு சொல்லாம சொல்றீங்களா..?” என்றாள் சிந்து.
 
 
அதில் புரியாதது போல் முகத்தை வைத்துக்கொண்டு “ஓடி ஒளியறேனா..? நானா..! நான் ஏன் ஓடணும் ஒளியணும்..?” என்றான் தாரக். “போதும், நாம பூடகமா பேசினது எல்லாம் போதும்.. இப்போ கொஞ்சம் நேரடியா பேசிப்போமா..?” என்றாள் சிந்து.
 
 
இப்படி அவள் வந்து கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே இத்தனை நாள் ஓடிக் கொண்டிருந்தவன், பதிலின்றி அமைதியாக இருக்க, “எத்தனை நாள் இன்னும் இப்படியே பேசாம இருக்கலாம்னு நினைக்கறீங்க..?” என்றாள் சிந்து.
 
 
இதில் நெற்றியை நீவியபடியே அவளைப் பார்த்தவன், “இதைப் பற்றி நாம பேச வேண்டாம் செந்தூரிகா, இப்படியே விட்டுடுவோம்.. இது சரியில்லை..” என்றான். “ஏன் இது சரியில்லை..? எதுக்காக பேசக்கூடாது..?” என்று அப்போதும் சிந்து விடாமல் கேட்கவும், “ஏன்னா நான் உனக்கு சரியானவன் இல்லை..” என்று தன் பொறுமையெல்லாம் பறந்து போன குரலில் கத்தினான் தாரக்.
 
 
அதில் ஒரு நொடி திகைத்து அவனைப் பார்த்த சிந்து, “அதாவது நான் உங்களுக்கு தகுதியானவ இல்லைன்னு சொல்ல வரீங்களா..?” என்று கேட்க, வேகமாக அதை மறுப்பது போல் திரும்பி அவளைப் பார்த்து தலையசைத்தவன் “என்ன பேசறே நீ..? நான் தான் உனக்கு தகுதியானவன் இல்லை, புரியுதா உனக்கு..? அதனால் தான் இந்த பேச்சே வேண்டாம்னு சொல்றேன்..” என்றான் தாரக்.
 
 
ஓரளவு அவன் மனதில் இருப்பது என்னவென்று சிந்துவுக்கு புரிந்தது. நீண்ட ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவளாக, அடுத்து வரப்போகும் அனைத்திற்கும் தயாரானாள் சிந்து.
 
 
“இல்லை புரியலை, எந்த வகையில்னு கொஞ்சம் சொல்றீங்களா..?” என சிந்து கேட்கவும், தாரக் பதிலின்று அமைதியாக எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான். “உங்ககிட்ட தான் கேட்கறேன் எந்த வகையில்னு கொஞ்சம் சொல்லுங்களேன், நானும் தெரிஞ்சுக்கறேன்..” என்று மீண்டும் கேட்டாள் சிந்து.
 
 
“ஏன் உனக்கு தெரியாதா..?” என்று கோபமாக தொடங்கியவன், பின் சட்டென குரலை தழைத்துக் கொண்டு “நான் உனக்கு செஞ்சது மிகப்பெரிய பாவம்.. நியாயமா உன்கிட்ட நான் நடந்து கொண்ட விதத்துக்கு நீ என் மேலே கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கணும்.. ஆனா நீ வாழ்க்கை கொடுக்கறேன்னு சொல்லிட்டு இருக்க கொஞ்சமாவது யோசி..” என்றான் தாரக்.
 
 
அதில் உடனே எதுவும் பேச முடியாமல் சிந்து அமைதியாக.. “இப்போவாவது உனக்கு புரியுதா..? ப்ளீஸ் இந்த பேச்சு இனிமேல் வேண்டாம், உனக்குன்னு நிச்சயம் நல்ல ஒரு வாழ்க்கை அமையும்.. நான் அமைத்துக் கொடுப்பேன் புரிஞ்சுக்கோ..” என்றான் தாரக்.
 
 
***
 
 
மறுநாள் காலை தன் மனதில் உள்ளதை சிந்துவிடம் வெளிப்படையாக பேசி விட்டதாலோ என்னவோ வழக்கம் போல் விடிவதற்கு முன்பே கிளம்பாமல் வீட்டில் இருந்தான் தாரக். சிந்துவும் அன்று வெளியில் எங்கும் செல்லவில்லை.
 
 
ஸ்வேதாவிடம் இருந்து அப்போது தாரத்திற்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று பேசியவன் “அப்படியா..! சரி ஓகே நான் வீட்டில் தான் இருக்கேன்.. வா..” என்றான். சிந்துவிடமும் அவள் வரும் தகவலை தாரக் சொல்ல.. அவளும் ஆர்வத்தோடு ஸ்வேதாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
 
 
இதற்கிடையில் ஸ்வேதாவுக்கு பிடித்த பலகாரமாக உமாவிடம் சொல்லி சிந்து தயார் செய்து வைத்திருக்க.. அடுத்த ஒரு மணி நேரத்தில் தன் வழக்கமான அதே ஆரவாரத்தோடு உள்ளே நுழைந்தாள் ஸ்வேதா.
 
 
அவளை இருவரும் சந்தோஷமாக வரவேற்க.. “நானா வந்தா தான் உண்டு இல்லை, உங்களுக்கு என் ஞாபகமே வராது அப்படி தானே..!” என்று குறைப்பட்டு கொண்டவளை தாரக் மறுப்பாக பார்க்க.. “என்ன இப்படி சொல்றீங்க..?” என சிந்து ஏதோ பேச தொடங்குவதற்குள் “நீ பேசாதே..!” என்று முறைத்தாள் ஸ்வேதா.
 
 
அதில் என்னவென ஸ்வேதாவை சிந்து பார்க்கவும், “நீ இந்தியா வந்ததை பற்றி ஒரு வார்த்தை என்கிட்ட சொன்னியா..?” என்று முறைத்தாள் ஸ்வேதா. “நான்.. அது.. யார்கிட்டயும் சொல்லலை..” என்று சிந்து எப்படி இதை சொல்லி புரிய வைப்பது எனத் தெரியாமல் தடுமாறவும், “உங்க ஆத்துக்காரருக்கு மட்டும் தான் சொன்னீங்களோ..!” என கேலி செய்தாள் ஸ்வேதா.
 
 
இதில் சிந்து சங்கடமாக நெளிய.. “ஸ்வே..” என கண்டிப்பது போல் அழைத்தான் தாரக். “ஓகே நான் லிமிட் க்ராஸ் செய்யறேன்னு புரியுது..” என தன் கரம் கொண்டு வாயை ஜிப் போடுவது போல் செய்து கொண்டவள், “சரி நான் வந்த விஷயத்துக்கு வரேன்..” எனவும், இருவரும் அவள் முகத்தை கேள்வியாக பார்த்தனர்.
 
 
தன் கைப்பையில் இருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து அவர்களின் முன் நீட்டியவள், “எனக்கு கல்யாணம்..” எனவும், இருவரும் அவளை நம்பாமல் பார்க்க.. “ஓய்.. என்ன இரண்டு பேரும் அப்படி பார்க்கறீங்க..? இவளுக்கெல்லாம் கல்யாணமானா..! பிச்சிடுவேன் பிச்சு..” என்று போலியாக மிரட்டினாள் ஸ்வேதா.
 
 
அதில் இருவரும் சிரித்து விட, அப்படியே தன் வழக்கம் போல் கலகலத்து ஸ்வேதா பேசிக் கொண்டிருக்க.. உமா சமைத்ததை கொண்டு வந்து ஸ்வேதாவுக்கு சாப்பிட கொடுத்தாள் சிந்து.
 
 
தட்டில் இருந்த கறி தோசையை பார்த்து குஷியான ஸ்வேதா “அவ்வ்வ், சிந்து பேபி நீ இன்னும் என்னை மறக்கவே இல்லை..” என அன்போடு அவளை அணைத்து கொண்டாள்.
 
 
“நீ கொஞ்சம் கூட மாறலை ஸ்வே, அப்படியே இருக்கே.. சாப்பாட்டை பார்த்ததும் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது..” என்று கேலி செய்தான் தாரக். “என்னை ரொம்ப புகழாதீங்க தீபன்..” என போலியாக வெட்கப்பட்டபடியே ஸ்வேதா சாப்பிட்டு முடிக்கவும், தாரக்கிற்கு அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருக்க.. அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் தாரக்.
 
 
“ஹ்ம்ம் உன் மனசில் என்ன ஓடுது..? கேளு..” என்று சிந்துவின் முகம் பார்த்து திரும்பி அமர்ந்தாள் ஸ்வேதா. “எனக்கா என் மனசில் எதுவும் இல்லையே..!” என்றாள் சிந்து.
 
 
“சும்மா சொல்லாதே, எனக்கு தெரியும்.. என்னடா போன வருஷம் வரைக்கும் தீபன் மேலே லவ்வுன்னு சொல்லிட்டு இருந்தா, இப்போ பொசுக்குன்னு கல்யாணம்னு வந்து நிற்கிறாளேன்னு தானே யோசிக்கறே..” என்று தன்னைத்தானே அவள் கேலி செய்து கொள்ள.. “ச்சேச்சே.. அப்படியெல்லாம் இல்லை..” என்று வேகமாக மறுத்தாள் சிந்து.
 
 
“இப்போவும் சொல்றேன், எனக்கு தீபனை பிடிச்சு இருந்தது உண்மை.. இதுவே அவர் வேற ஏதாவது காரணம் சொல்லி என்னை மறுத்திருந்தா நிச்சயமா தொடர்ந்து முயற்சி செஞ்சுருப்பேன்.. விடாம விரட்டி இருப்பேன்.. ஆனா தங்கச்சின்னு சொல்லிட்ட பிறகு என்ன செய்ய முடியும்..?
 
 
அதான் மனசை மாத்திக்கிட்டேன், கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.. அதுவும் குத்து கல்லாட்டம் நீ இருக்கும் போது நான் காத்திருந்து என்ன பயன் சொல்லு..?” என்று கண்ணடித்து சிரித்தவள், “ஜோக்ஸ் அப்பார்ட் நடந்து முடிஞ்சதையே பிடிச்சுட்டு இருந்தா வாழ்க்கையில் அடுத்தடுத்து போக முடியாது செல்லம்.. மறதியும் சிறந்த மருந்து தான், நாம வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போக இது கண்டிப்பா உதவும்..” என்றாள் ஸ்வேதா.
 
 
அது தனக்காகவே சொல்லப்பட்டது போலிருக்க.. அமைதியாக ஆம் என தலையசைத்துக் கொண்டாள் சிந்து. “உனக்கு தெரியுமா இது காதல் திருமணம் தான்..” என ஸ்வேதா கிசுகிசுப்பாக கேட்கவும், ஆச்சரியத்தோடு அவளை பார்த்தாள் சிந்து.
 
 
“ராகேஷ் என் கூட ஒரே ஆபிஸில் வேலை பார்க்கறவர் தான்.. திடீர்னு பிடிச்சுருக்குன்னு வந்து சொன்னாங்க, எனக்கும் ஒய் நாட்னு தோணுச்சு.. இப்போ வரைக்கும் இது ராகேஷ் பக்கம் இருந்து காதல் கல்யாணம், எனக்கு அப்படி இல்லை.. ஆனா கூடிய சீக்கிரம் அவரை காதலிச்சிடுவேன்..” என்று நம்பிக்கையோடு கூறியவளை, சிந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க.. “என்ன அப்படி பார்க்கறே..? அரேஞ்ச்ட் மேரேஜ் எல்லாம் இப்படித்தானே நடக்குது..? அவங்க எல்லாம் பிடிச்சு காதலிச்சு வாழ ஆரம்பிக்கலையா என்ன..? அப்படித்தான் இதுவும்..” என்றாள் ஸ்வேதா.
 
 
அதை அழுத்தமாக உள்வாங்கிக் கொண்ட சிந்து, யோசித்தபடியே அமர்ந்திருக்க.. மேலும் சில நிமிடங்கள் அங்கு இருந்து இருவரோடும் பேசிவிட்டு கிளம்பினாள் ஸ்வேதா.


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் - 49
 
தாரக் மற்றும் சிந்து ஸ்வேதாவின் திருமணத்திற்கு வந்திருந்தனர். ஈசிஆரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஸ்வேதாவின் திருமணம் நடந்து கொண்டிருந்தது.
 
 
அதில் பங்கேற்ற இருவரின் மனநிலையும் வெவ்வேறு விதமாக இருந்தது. ‘இப்படி அனைத்தையும் மறந்து விட்டு தன்னால் சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியுமா..?’ என்று சிந்தும், ‘எப்படியாவது இப்படி ஒரு வாழ்க்கையை அவளுக்கு அமைத்துக் கொடுத்து விட வேண்டும்..’ என்று தாரக்கும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
 
 
ஸ்வேதா அத்தனை சந்தோஷமாக திருமண சடங்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். முகமெல்லாம் மலர்ந்து புன்னகையோடு அவள் அமர்ந்திருந்த விதமே ஸ்வேதாவை மேலும் அழகாக காண்பித்தது.
 
 
இதை சிந்து முகத்தில் உறைந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க.. தன் அருகில் அமர்ந்திருப்பவளை வெறுமையாக திரும்பிப் பார்த்தான் தாரக். அன்றைய நாளுக்குப் பிறகு இருவரும் இதைப்பற்றி மட்டுமல்ல வேறு எதைப் பற்றியும் அதிகம் பேசிக் கொள்ளவே இல்லை.
 
 
அவரவர் வேலைகளில் மட்டுமே இருவரும் கவனத்தை செலுத்தி தேவைக்கு மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். இத்தனை வருடங்கள் கழித்து நடக்கும் தன் ஒரே மகளின் திருமணத்தை ஸ்வேதாவின் பெற்றோர் கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்தனர்.
 
 
மணமக்களின் நட்பு வட்டம், அவர்களோடு வேலை பார்ப்பவர்கள் என்று இளமைப்பட்டளம் குவிந்திருக்க.. கொண்டாட்டத்திற்கு கேட்கவும் வேண்டுமா..? டிஜே பாடலை அலற விட்டுக் கொண்டிருக்க.. ஆட்டம் பாட்டம் என்று அந்த இடமே கலைகட்டிக் கொண்டிருந்தது.
 
 
முன்பு போல் எந்த தயக்கமும் இல்லாமல் இன்றைய மணமக்களின் பிரதிநிதிகளாக மாறி ஸ்வேதாவும் ராகேஷும் ஜோடியாக ஆடி அங்கு கூடி இருந்த கூட்டத்தை ஆரவாரிக்க செய்து கொண்டிருந்தனர்.
 
 
ஸ்வேதா வந்து அவளை ஆட அழைத்தும் நாசுக்காக மறுத்து விட்டாள் சிந்து. அதில் அவளின் கவனம் தாரக் பக்கம் திரும்ப.. அதை தன் பார்வையிலேயே நிராகரித்தவனை முறைத்தவள் “சுத்த போர் நீங்க இரண்டு பேரும்..” என்று விட்டுச் சென்றிருந்தாள்.
 
 
“உனக்கு ஆடணும்னா போ..” என தாரக் மெல்லிய குரலில் சொல்லவும் ‘வேண்டாம்’ என மறுப்பாக தலையசைத்தாள் சிந்து. சில நிமிடங்கள் கழித்து உணவு பரிமாறப்பட, தன் குடும்பத்தாருக்கு சிந்துவை அறிமுகம் செய்து வைக்க நினைத்த ஸ்வேதா வந்து அவளை தன்னோடு அழைத்துச் சென்றாள்.
 
 
தாரக் ஸ்வேதாவின் அண்ணனோடு நின்று சாப்பிட்டுக் கொண்டு இருக்க.. வழக்கம் போல வளவளத்துக் கொண்டே சிந்துவை எங்கும் நகர விடாமல் தன்னோடு நிறுத்திக் கொண்டாள் ஸ்வேதா.
சிந்து சாப்பிட்டு முடித்து தாரக் எங்கே என பார்க்க, அவளின் கண்ணிலேயே அவன் படவில்லை.
 
 
மெல்ல நடந்தபடியே பார்வையை சுழற்சியவளுக்கு அங்கே அவன் இருப்பது போலவும் தெரியவில்லை. இதில் கவலையானவள் மெல்ல தாரக்கை தேடிக் கொண்டு நகர்ந்து வெளியில் வர, தூரத்தில் கடற்கரையோரத்தில் அவன் தனியே நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
அதில் அங்கே சென்ற சிந்து “இங்கே என்ன செஞ்சுட்டு இருக்கீங்க..?” எனவும் திரும்பி அவளைப் பார்த்தவன் “நீ ஏன் இங்கே வந்தே..?” என்றான். “நீங்க ஏன் வந்தீங்க..?” என சிந்து திரும்ப கேட்கவும், “சும்மா ஒரு வாக்..” என அவன் சமாளிக்க முயன்றாலும் முகத்தில் அத்தனை வேதனை தெரிந்தது.
 
 
அதைக் கூர்மையாக கவனித்தபடியே சிந்து நின்றிருக்க.. “என்ன..?” என்றான் தாரக். “ஒண்ணுமில்லை..” என்று அவளும் அவனைப் போலவே முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல.. “நீ போ செந்தூரிகாக, நான் வரேன்..” என்றான் தாரக்.
 
 
“நீங்க வரும் போது வாங்க, அதுக்கு நான் ஏன் போகணும்..? நானும் ஒரு சின்ன வாக் அப்படியே உங்க கூட வரனே..” என சிந்து சொல்ல.. அவளை செய்வதறியாவது பார்த்தான் தாரக். எந்த அளவு அவன் விலகிப் போக நினைக்கிறானோ, அந்த அளவுக்கு அவள் நெருங்கி வர முயல்கிறாள். இதை அவனால் கையாளவே முடியவில்லை.
 
 
“ஸ்வேதா ரொம்ப அழகா இருந்தாங்க இல்லை.. அவங்க முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பார்த்தீங்களா..? எப்போவும் அவங்க இப்படியே இருக்கணும்..” என்று சிந்து உணர்ந்து மெல்லிய குரலில் சொல்லவும், தன் நடையை நிறுத்தி அவளை திரும்பி பார்த்தான் தாரக்.
 
 
அதில் சிந்துவும் தன் நடையை நிறுத்தி என்னவென்பது போல் அவனை பார்க்க.. “நீயும் இப்படி சந்தோஷமா வாழணும்னு தான் நான் ஆசைப்படறேன் செந்தூரிகா..” என்றான் தாரக். “ஏன் எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன..?” என்றாள் சிந்து.
 
 
அவளின் பதிலில் லேசாக முகம் மலர்ந்தவன் “அப்போ உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடலாமா..?” எனவும் “ஆல்ரெடி நான் பார்த்துட்டேன்..” என்றாள் அவனின் முகத்தையே தீர்க்கமாக பார்த்தப்படி சிந்து. இப்போது தாரக்கின் முகத்தில் வந்த மலர்ச்சி காணாமல் போயிருந்தது. “திரும்பவும் முதலில் இருந்தா..?” என மெல்லிய குரலில் முணுமுணுத்தவன், ஏதோ சொல்ல வர, “ஒரு நிமிஷம் நான் பேசிடறேன்..” என அவனை இடையிட்டிருந்தாள் சிந்து.
 
 
இப்போது என்ன என்பது போல் அவன் பார்த்து நிற்க.. “ஏன் என்னை வேண்டான்னு சொல்றீங்க..? என்னை உங்களுக்கு பிடிக்கலையா..?” என அவள் கேட்கவும், நேரடியாக அதற்கு பதில் சொல்லாமல் தவிர்த்தவன் “இதுக்கான பதிலை நான் அன்னைக்கே சொல்லிட்டேன், உனக்கும் அது சரின்னு தோணினதால் தானே நீ இத்தனை நாள் அமைதியா இருந்தே..?” என்றான் தாரக்.
 
 
“நான் அன்னைக்கு அமைதியா இருந்ததுக்கு காரணம் அது இல்லை, நீங்க ஒரு முடிவோட பேசிட்டு இருக்கீங்க.. அதை மாத்த நினைச்சாலும் அப்போதைக்கு முடியாதுன்னு புரிஞ்சு தான் அமைதியா இருந்தேன்..” என்றாள் சிந்து.
 
 
“நான் ஒரு முடிவோட பேசலை, உண்மையை தான் பேசினேன்,, நான் உனக்கு சரியானவன் இல்லை செந்தூரிகா.. முதலில் நீ அதை புரிஞ்சுக்கோ..” என்றான் தாரக்.
 
 
“நீங்க முதலில் இப்படி ஸ்கூலில் கூப்பிடறதை போல செந்தூரிகா,, செந்தூரிகான்னு கூப்பிடறதை நிறுத்துங்க..” என்று எரிச்சலோடு அவள் சொல்லவும், இதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியானான் தாரக்.
 
 
“இங்கே பாருங்க, நான் உங்களை வற்புறுத்த விரும்பலை.. ஆனா நீங்க சொல்லும் காரணம் தான் எனக்கு ஏத்துக்கற மாதிரி இல்லை.. சரியான ஒரு காரணம் சொல்லுங்க, நான் இனி இதை பத்தி பேசவே மாட்டேன்..” என்றாள் சிந்து.
 
 
‘நிஜமா..?’ என்பது போல் சிந்துவின் முகத்தை அவன் பார்க்கவும் ‘ஆம்’ என விழியசைத்தாள் சிந்து. “நான் உனக்கு செஞ்சதை எல்லாம் மறந்துட்டியா..? எந்த தப்பும் செய்யாத அப்பாவியான உன்னை நான்..” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறி நிறுத்த.. சிந்துவின் முகமும் ஒரு நொடி மாறியது.
 
 
பின் “ஆமா மிகப்பெரிய தப்பு தான், நான் இல்லைன்னு சொல்லலை.. சொல்லவும் மாட்டேன், அதிலேயும் அந்த நேரத்தில் நீங்க என்கிட்ட நடந்துகிட்ட முறை அது ரொம்பவே..” என்றவள் தாரக்கின் முகம் அவமானத்தில் கன்றுவதைக் கண்டு பேச்சை அப்படியே நிறுத்தினாள்.
 
 
அவள் தனக்காக பார்த்து பேச்சை நிறுத்துவதை புரிந்து கொண்டவன் “பார், உன்னால் நான் செஞ்சதை முழுசா கூட சொல்ல முடியலை.. என்னாலேயும் இதை பத்தி தொடர்ந்து பேச முடியலை.. அந்த அளவுக்கு நான் ஒரு மாபெரும் பாவத்தை செஞ்சுருக்கேன், அதை தெரியாம செஞ்சேன்னு எல்லாம் சொல்ல முடியாது, தெரிஞ்சு நான் செஞ்ச தவறு அது.. அதுக்கான தண்டனை நீ எனக்கு கொடுக்காம இருக்கறதே பெரிய விஷயம்.. இதுக்கு மேலே இதை பத்தி வேற எதுவும் பேச வேண்டாம், புரிஞ்சுக்கோ செந்..” என்று தொடங்கியவன், மீண்டும் அவள் முழு பெயரை சொன்னால் கோபப்படுவாள் எனப் புரிந்து அமைதியானான்.
 
 
அதை சிந்துவும் கவனித்து இருந்தாள். “நீங்க செஞ்சது தவறு தான், நான் இல்லைன்னு சொல்ல விரும்பலை.. ஆனா உங்க தவறுலேயும் ஒரு நன்மை இருக்கு..” என்று சிந்து சொல்லவும், ‘அது எப்படி சாத்தியம்..?’ என்பது போல் அவளை பார்த்தான் தாரக்
 
 
“எல்லா தவறும் நன்மையில் முடியாது, ஆனா உங்க தவறு நன்மையில் முடிஞ்சுருக்கு.. சில தவறுகள் நம்மை முழுசா உடைச்சு போடும், ஒரு சில தவறுகள் நம்மை முழுமையா மாற்றும்.. உங்க தவறு என்னை இன்னைக்கு முழுமையா மாற்றி இருக்கு..” என்றாள் சிந்து.
 
 
இதற்கு பதில் சொல்ல முடியாமல் அவன் நிற்க.. “உங்களால் தான் இன்னைக்கு எனக்கு பிடிச்ச மாதிரியான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. எனக்கு பிடிச்சதை எல்லாம் என்னால் செய்ய முடியாது.. இதுக்கு முன்னே இப்படியான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்ததே கிடையாது.. இப்படி ஒரு மாற்றம் என் வாழ்க்கையில் வரும்னு கூட நான் எதிர்பார்த்ததில்லை.. ஆனா இன்னைக்கு இதெல்லாம் நடந்திருக்கு, அதுக்காக எல்லாம் நீங்க செஞ்சது சரின்னு நான் வாதிட மாட்டேன்.. ஆனா செஞ்ச தப்பை உணர்ந்து திருத்திக்க நீங்க முயற்சி செஞ்சுருக்கீங்க.. அதில் பாதிக்கப்பட்ட என்னை முழுமையா எல்லா வகையிலும் மீட்டுக் கொண்டு வர நீங்க கூட நின்னு உதவி இருக்கீங்க..” என்றாள் சிந்து.
 
 
அதில் ஒரு வருத்தத்தோடான புன்னகை அவன் இதழ்களில் நெளிந்தது, “நீ பேசறதை எல்லாம் பார்த்தா எனக்கு ஆச்சரியமா இருக்கு.. இதுக்கு ஒரு பேர் இருக்கு தெரியுமா..? கடத்தி கொண்டு போய் ஒரு பொண்ணை அடைச்சு வெச்சுருந்தவன் மேலேயே அந்த பெண்ணுக்கு காதல் வந்தா அதுக்கு என்ன சொல்லுவாங்க தெரியுமா..?” என்றவனை அடுத்து பேச விடாமல் “ஸ்டாக் ஃஹோம் சின்ட்ரோம்..” என முடித்திருந்தாள் சிந்து.
 
 
“எக்ஸாக்ட்லி, உனக்கு இப்போ வந்திருக்கறது அது தான்.. உனக்கு பிடிச்ச சில விஷயங்களை நான் செஞ்சதால் நான் உனக்கு ரொம்ப நல்லவனா தெரியறேன்.. என் கூட இருந்தா உனக்கு பிடிச்ச மாதிரி வாழலாம்னு உன் மனசில் பதிஞ்சுருக்கு..” என்றான் தாரக்.
 
 
அதற்கு இல்லை என மறுப்பாக தலையசைத்த சிந்து “இதெல்லாம் நான் உங்க கூட இருக்கும் போது நடந்திருந்தா நீங்க சொல்றது சரி, ஆனா நான் உங்களை விட்டு விலகிப் போன பிறகு தான் எனக்கு உங்க மேலே இப்போ நான் சொல்லிட்டு இருக்க உணர்வுகள் வர ஆரம்பிச்சது.. இது எப்படி ஸ்டாக் ஃஹோம் சின்ட்ரோமாகும்..” என்று நிதானமாக கேட்டாள் சிந்து.
 
 
இதற்கு உடனே பதில் சொல்ல முடியாமல் திணறியவன் “மே பி இந்த காரணங்கள் உன் மனசில் ஆழ பதிஞ்சு இ’ருந்ததால் கூட இப்படி நடந்திருக்கலாம் இல்லையா..?” எனவும் “இப்போவும் நீங்க சந்தேகமா தான் சொல்றீங்க.. ஒருவேளை அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.. ஆனா நான் சொல்றது அப்படியில்லை.. எனக்கு கொஞ்சம் கொஞ்சமா உங்க மேலே தோன்றி இருக்க இந்த உணர்வை நீங்க சொல்ற எந்த வகையிலும் சேர்க்க முடியாது..” என்றாள் தெளிவான குரலில் சிந்து.
 
 
அதில் நீண்ட ஒரு பெருமூச்சை வெளியிட்ட தாரக் “இதெல்லாம் கொஞ்ச நாளில் காணாமல் போயிடும்.. இதோ ஸ்வேதா எல்லாம் மறந்து சந்தோஷமா இல்லையா..! அதே போல நீயும்..” என்றவன் அவளின் முறைப்பை உணர்ந்து அப்படியே நிறுத்தி பேச்சை மாற்றும் விதமாக “உனக்கு பிடிச்ச வாழ்க்கையை  உனக்கு பிடிச்ச மாதிரி நான் அமைச்சு தரேன்..” என்றான்.
 
 
“என் வாழ்க்கையை முடிவு செய்ய நீங்க யாரு..? எனக்கு என்ன பிடிக்குதுன்னு நான் தான் முடிவு செய்யணும்.. எனக்கு பிடிச்ச மாதிரி என் வாழ்க்கையை அமைச்சு தரேன்னு சொன்னீங்க இல்லை, இதோ இது தான் எனக்கு பிடிச்ச வாழ்க்கை.. அமைச்சு கொடுங்க..” என்றாள் திரும்ப திரும்ப அவன் இதையே பேசுவதை கண்டு கோபமாக சிந்து.
 
 
இப்படி அவள் சொல்லுவாள் என்று நினைக்காத தாரக் லேசாக தடுமாறி “நா.. நான் குடும்பமா வாழ தகுதி இல்லாதவன் செந்தூரிகா..” என்று தொடங்கவும் அவள் தாரக்கை முறைக்க.. “பார் நீ எதிர்பார்க்கறது போல கூட என்னால் உன்கிட்ட பேச முடியலை.. உன்னை கூப்பிட முடியலை, நான் இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்..” என்றான் தாரக்.
 
 
“நான் கூட ஒரு காலத்தில் சந்தோஷமா வாழவும் எதற்கும் ஆசைப்படவும் தகுதியே இல்லாதவன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்.. இன்னைக்கு இது மாறலையா..? அதேபோல உங்க வாழ்க்கையும் நிச்சயம் மாறும்..” என்று அவள் நம்பிக்கையோடு சொல்லவும், “இதெல்லாம் பேச வேணும்னா நல்லா இருக்கலாம், ஆனா நிஜத்திற்கு ஒத்து வராது..” என்றான் தாரக்.
 
 
“அது எப்படி முயற்சி செஞ்சு பார்க்காமலே சரியா வராதுன்னு உங்களால் சொல்ல முடியும்..?” என்று இப்போது சிறிது கோபம் எட்டிப் பார்க்கும் குரலில் கேட்டாள் சிந்து. “முயற்சி செஞ்சு பார்க்க இது விளையாட்டு இல்லை, வாழ்க்கை.. இன்னொரு இழப்பை தாங்கும் சக்தி எனக்கு இல்லை.. எனக்கு பிடிச்சவங்க யாரும் என் கூட இருக்கவே மாட்டாங்க, இது என் தலையில் எழுதி இருக்கு.. எனக்கு குடும்பமா வாழும் அதிர்ஷ்டம் இல்லை..” என்றவனை சிந்து இடையிட்டு ஏதோ சொல்ல வர, “போதும், நீ பேசினதெல்லாம் போதும்.. நான் பேசி முடிச்சுடுறேன்.. நான் ஒரு மிகப்பெரிய தவறு செஞ்சுட்டேன், அதை சரி செய்ய தான் இப்போ முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. அந்த முயற்சியோட அடுத்த கட்டமா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும்னு நினைக்கறேன்.. அதுவரைக்கும் உனக்கு பாதுகாவலனா உன் கூடவே இருப்பேன்..” என்று சொல்லி முடித்தான் தாரக்.
 
 
“போதும், நீங்க பாதுகாப்பா பாதுகாவலனா இருந்து என் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தின வரைக்கும் போதும்.. இப்போ சொந்தக் காலில் நிற்கவும், என்னை பார்த்துக்கவும் என்னால் முடியும்.. நான் கேட்கறதெல்லாம் நீங்க என் முன்னே நின்னு என்னை பாதுகாக்கும் அரணா இருக்க வேண்டாம்.. என் கையை பிடிச்சுட்டு கூட நில்லுங்க போதும், நாம சேர்ந்து வாழ்ந்து பார்ப்போமே..
 
 
எனக்கு நடந்த தவறை சரி செய்ய நீங்க முயற்சி செய்யறீங்க அதே போல உங்களுக்கு நடந்த தவறை சரி செய்ய நான் முயற்சி செய்யக் கூடாதா..?” என அவள் கேட்கவும், “அப்போ இது பரிதாபத்தில் வந்த காதலா..?” என்றான் தாரக்.
 
 
“நிச்சயமா இல்லை, எனக்கு உங்க மேலே பரிதாபம் எல்லாம் இல்லை.. நீங்க எனக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க பார்க்கறீங்க இல்லை.. அது எதுக்காக..? நான் என்ன தவறு செஞ்சேன்.. தேவையில்லாம தண்டிக்கப்பட்ட எனக்கு இந்த உலகத்தில் வாழ எல்லா உரிமையும் இருக்குன்னு நீங்க நினைக்கறதால் தானே..!
 
 
அதே போல உங்களுக்கும் இந்த உலகத்தில் சந்தோஷமா வாழற எல்லா உரிமையும் இருக்கு.. நீங்க என்ன தவறு செஞ்சீங்க..? அவ்வளவு மோசமா தண்டிக்கப்பட.. முதலில் அதை நீங்க புரிஞ்சுக்கோங்க, இதுக்கு முன்னே நடந்ததை எல்லாம் மறந்துடுங்க.. இனி புதுசா தொடங்குவோம்..” என்றாள் சிந்து.
 
 
“ம்ப்ச், உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னு தெரியலை..” என்று நெற்றியை நீவி விட்டபடியே அவன் திரும்பி நிற்கவும், “நீங்க எப்படியும் சொல்லி புரிய வைக்க வேண்டாம், நீங்க புரிஞ்சுகிட்டா போதும்..” என்றாள் சிந்து.
 
 
அதில் வலியோடு எங்கோ பார்வையை பதித்தப்படி “நாம சேர்ந்து வாழ முடியாது.. அது சரியாவும் வராது..” என்றான் தாரக். “நீங்க என்கிட்ட இருந்து விலகி போக நினைக்கறது என் நன்மைக்காக இல்லை.. உங்க குற்ற உணர்வுக்காக, உங்க மனசில் அது ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்திட்டே இருக்கு.. அதை வாழ்நாள் முழுக்க சுமக்கணுமான்னு நினைக்கறீங்க.. அதனால் தான் இது வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க சரியா..?” என்றாள் சிந்து.
 
 
கிட்டதட்ட அவனுக்கும் அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவளை பார்க்கும் போது அவளுக்கு செய்த பாதகம் தான் அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போதே தினமும் எந்த தவறும் செய்யாத அவளை வருத்தி விட்டோமே என்ற எண்ணம் அவனை நிம்மதி இழக்க செய்து கொண்டிருக்க.. இதில் அவளை தன் வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டால் அது மேலும் அதிகமாகும் என்று பயந்தான் தாரக்.
 
 
அவன் அமைதியே அவளுக்கான பதிலை சொல்லிவிட, ஒரு கசந்த புன்னகை அவள் இதழ்களில் வழிந்தது. அவன் வருத்தமும் வலியும் அவளுக்கு சரியாக புரிய.. “இங்கே பாருங்க இந்த உலகத்தில் தப்பு செய்யாத மனுஷன்னு யாருமே இல்லை.. ஆனா செஞ்ச தப்பை திருத்திக்க நினைக்கறவன் தான் மனுஷன்.. அப்படி நினைக்காதவங்க எல்லாம் பிறப்பால் மனிதர்களா இருந்தாலும் அவங்களை மிருகம்னு தான் சொல்லணும்..
 
 
இந்த நிமிஷம் வரைக்கும் எங்க அப்பாவோ விஷ்வாவோ அவங்க செஞ்ச தப்பை உணர்ந்தாங்களானு கூட எனக்கு தெரியாது.. அவங்க நினைக்கறது மட்டும் தான் சரின்னு நினைச்சுட்டு இருக்காங்க.. ஏதோ ஒரு கோபத்தில் வேகத்தில் ஒரு தப்பை செஞ்சுட்டு அதை சரி செய்ய நீங்களாவது முயற்சி எடுத்து இருக்கீங்க.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க மனுஷன்.. ரொம்ப நல்ல மனுஷன்..” என்றாள் சிந்து.
 
 
அதில் அவளை திரும்பிப் பார்த்தவனின் முகம் கலங்கி இருந்தது. இதற்கு மேலும் தள்ளி நிற்க முடியாமல் இரண்டடி முன்னே வைத்து அவனை நெருங்கி தாரக்கின் கைகளை சிந்து கோர்த்துக் கொள்ள.. இணைந்திருந்த அந்த கைகளை வேதனையோடு பார்த்தவன், “இது சரியா வருமான்னு எனக்கு தெரியலை..” என்றான்.
 
 
“நிச்சயமா சரியா தான் வரும், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. இப்போ கூட நீங்க சொன்னதை எல்லாம் தவிர வேற ஏதாவது ஒரே ஒரு காரணம் சொல்லுங்க.. நான் உங்களை வற்புறுத்த மாட்டேன், என்னை பார்த்து என் கண்ணை பார்த்து உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலை.. என்னை தொந்தரவு செய்யாதேன்னு சொல்லுங்க.. இந்த நொடியே உங்களை விட்டு நான் விலகிப் போயிடறேன்..” என்றாள் சிந்து.
 
 
ஆனால் மனம் அறிந்து அப்படி சொல்ல அவனால் முடியவில்லை. அதில் தாரக் அமைதியாக இருக்க.. மெல்ல புன்னகைத்துக் கொண்டாள் சிந்து.
 
 
*****
 
 
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கற்பகாம்பாள் கோவிலில் வைத்து சிந்துவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான் தாரக். அவளின் முழு சம்மதத்தோடே இங்கு வரை அழைத்து வந்திருந்தாலும் இறுதி நொடியில் நிறுத்தி அவள் முகம் பார்க்க.. விழியசைவில் தன் சம்மதத்தை சிந்து சொன்ன பிறகே அதை அவளுக்கு கட்டினான் தாரக். யாரையும் அழைக்காமல் மிக எளிதாக தன் திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
திருமணம் மட்டுமே எளிதாக நடந்திருக்க.. கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு மிக பிரம்மாண்டமாகவே ஏற்பாடு செய்திருந்தான் தாரக். அதையெல்லாம் முடித்துக் கொண்டு அங்கிருந்து நேராக சர்பதிவாளர் அலுவலகம் சென்றவர்கள் தங்கள் திருமணத்தையும் பதிவு செய்திருந்தனர்.
 
 
எல்லா ஏற்பாடுகளையும் முன்பே தாரக் முடித்து வைத்திருந்ததால் இவர்கள் சென்றவுடன் அனைத்தும் எளிதாகவே நடந்து முடிந்தது. இதையெல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சிந்து.
 
 
தார்க்குடன் சேர்ந்து புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டுமென நினைத்து விட்டாளே தவிர, மனதின் ஓரத்தில் தன் கழுத்தில் இப்போது மாங்கல்யம் இல்லையே.. புது வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்ற யோசனை அவளுள் ஓடிக் கொண்டு தான் இருந்தது. அதை அவனிடம் சொல்ல லேசான ஒரு தயக்கம் எழுந்து அவளை அமைதியாக்கி இருந்தது.
 
 
இந்த வாழ்க்கை தான் வேண்டும் என அத்தனை வாதம் செய்தவளால், தனக்கு மாங்கல்யம் வேண்டும் என கேட்க அத்தனை எளிதாக முடியவில்லை. ஆனால் அவள் மன உணர்வுகளை புரிந்து கொண்டது போல் அனைத்தையும் அவன் செய்திருந்ததை கண்டு வெகுவாக நெகிழ்ந்து போனாள் சிந்து.
 
 
இது தான் இந்த குணம் தான் முதன் முதலில் அவனிடம் அவளைக் கவர்ந்த ஒன்று. ஒருவருக்கு உதவி செய்வது வேறு, அவரின் தேவை அறிந்து உதவுவது என்பது வேறு. இதில் தாரக் இரண்டாம் ரகம்.
 
 
தானம் என்ற பெயரில் நான் கொடுப்பதை நீ வாங்கிக்கொள் என சொல்பவர்களுக்கு இடையே வாங்குபவர்களின் தேவை அறிந்து கொடுப்பவன் தாரக். சிந்துவுக்குமே அவன் அதைத்தான் செய்திருந்தான்.
 
 
‘உன் வாழ்க்கையை மேம்படுத்துகிறேன், நான் சொல்வதை மட்டும் செய் என சொல்லாமல் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நீ ஆசைப்பட்டதை செய் என்றதோடு, அதை சிறந்த முறையில் முடித்தும் கொடுத்திருந்தான். இதெல்லாம் தான் ஒவ்வொரு அடியாக அவனை நோக்கி சிந்துவை எடுத்து வைக்க செய்திருந்தது.
 
 
‘உன் மகளை நீயே வைத்துக் கொள்’ என நாகராஜனிடம் சிந்துவை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்த போது இவளே மீண்டும் மனையாளாக தன் வாழ்க்கையோடு இணைவாள் என அவன் ஒரு நொடி கூட நினைத்திருக்கவில்லை.
 
 
அதேபோல் உயிருக்கு பயந்து நாகராஜனிடமிருந்து மீண்டு தாரக்குடன் இங்கு வந்த போது இவனோடு சேர்ந்து வாழ ஆசைப்படுவோம் என்றோ.. மீண்டும் அவன் கைகளால் மாங்கல்யம் தன் முழு சம்மதத்தோடு தன் கழுத்தில் ஏறும் என்றோ அவளுமே ஒரு நாளும் நினைத்திருக்கவில்லை.
 
 
ஆனால் இதெல்லாம் நடந்து இதோ தாரக்கின் கைகோர்த்தபடி முழு உரிமையோடு அவன் மனைவியாக உமா ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைக்க.. வலது காலை எடுத்து வைத்து அவன் வீட்டிற்குள் நுழைந்தாள் சிந்து.
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
 
 
நேசம் - 50
 
 
சமீபமாக தான் நாகராஜன் பற்றி சிந்துவுக்கு தெரிய வந்திருந்தது. இதற்கு மேலும் சொல்லாமல் இருப்பது சரியில்லை என தாரக் தான் அனைத்தையும் கூறியிருந்தான்.
 
 
முதலில் சுஜாதாவும் அருணும் வீட்டை விட்டு சென்றதை எண்ணி திகைத்தவளுக்கு, அவர்கள் எதையும் தன்னிடம் சொல்லாமல் மறைத்த வருத்தமும் சேர்ந்துக் கொள்ள.. எதுவும் பேசாமல் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் சிந்து.
 
 
“அவங்க உன்னை நினைச்சு கவலைப்பட்டு தான் உன்கிட்ட சொல்லலை..” என்றவனை அவள் நம்பாமல் பார்க்க.. “வேணும்னா நீயே பேசி தெரிஞ்சுக்கோ..” என அருணுக்கு அழைத்து விட்டிருந்தான் தாரக்.
 
 
அதன் பின் சுஜாதாவும் அருணும் மெல்ல பேசி அவளுக்கு அனைத்தையும் புரிய வைத்திருக்க.. ஒரளவு சமாதானமாகி இருந்தாள் சிந்து. இதற்கிடையில் நாகராஜனை பற்றி கேட்கவோ தெரிந்துக் கொள்ளவோ கூட அவள் முயலவில்லை.
 
 
திருமணம் முடிந்து எல்லாம் இயல்பாக போவது போல் தோன்றினாலும் ஏதோ ஒரு வெற்றிடம் அவர்களுக்குள் இருந்தது. முன்பே இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்.. இப்போது ஒரே அறையில் இருக்கிறார்கள் அவ்வளவு தான்.
 
 
அவளிடம் எந்த ஒதுக்கமும் காண்பிக்காமல் இயல்பாக பேசி பழகிக் கொண்டு தான் இருந்தான் தாரக். ஆனால் அதைக் கடந்து மனைவி என்ற முறையில் அவளை பார்க்கவோ நெருங்கவோ ஒரு அடியையும் அவன் எடுத்து வைக்க முயலவே இல்லை.
 
 
ஆரம்பத்தில் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சிந்து, எல்லாம் நாளாக ஆக சரியாகி போகும் என்று நினைத்து கொண்டிருக்க.. நாட்கள் தான் கடந்து போனதே தவிர அவனிடம் எந்த மாற்றமும் வரவில்லை. அதற்காக அவளை தள்ளி வைக்கிறான் முகம் திருப்புகிறான் என்றெல்லாம் சொல்லிவிடவும் முடியாது. எப்போதும் போல் சிந்துவின் தேவைகளை அவள் சொல்லும் முன்பாகவே செய்து முடித்து விடுவான்.
 
 
ஒவ்வொரு விஷயத்திலும் அவளின் நலனில் அக்கறை கொண்டே செயல்படுவான். ஆனால் இது மட்டும் ஒரு திருமண வாழ்க்கைக்கு போதாதே..! ‘வேறு என்ன தான் இங்கு பிரச்சனை..?’ என்ற உறுத்தல் அவளுள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
 
 
இதில் தாரக் தானாக முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என நினைக்காமல் தானே ஏன் தொடங்கக் கூடாது என்று நினைத்தவள், அன்று வார இறுதி என்பதால் ஃபேமிலி லான்ஞ்ச் ஏரியாவின் சோபாவில் தன் மடிக்கணினியோடு அமர்ந்திருந்த தாரக்கை நெருங்கி “உங்களுக்கு இன்னைக்கு வேலை எதுவும் இருக்கா..?” என்றாள் சிந்து.
 
 
எப்போதும் இப்படி எல்லாம் கேட்காதவளை கேள்வியாக திரும்பி பார்த்தவன், “அப்படி எதுவும் அவசர வேலை இல்லை, என்ன விஷயம்..?” எனவும் “வெளியே எங்கேயாவது நாம போகலாமா..? இன்னைக்கு எனக்கும் வேலை எதுவுமில்லை..” என்றாள் சிந்து.
 
 
“ஓகே எங்கே போகணும்..?” என்று தாரக் கேட்கவும், “தெரியலை நீங்களே சொல்லுங்களேன்..” என்றாள் சிந்து. அதில் யோசனையாக விழிகளை சுருக்கியவன், பின் “எனக்கும் தெரியலை, வெளியே போகணும்னு நீதானே சொன்னே..! இடத்தையும் நீயே சொல்லு..” எனவும் அவள் முகத்தில் ஒரு ஏமாற்றம் பரவியது.
 
 
அதில் ஒரு நொடி அமைதியாக இருந்தவள், பின் “வேண்டாம், நாம எங்கேயும் போக வேண்டாம்.. நீங்க உங்க வேலை கண்டினியூ செய்ங்க..” என்று விட்டு அறைக்குள் சென்று விட, அவள் சென்ற திசையையே புரியாமல் பார்த்த தாரக் எழுந்து சிந்துவின் பின்னே சென்றான்.
 
 
பால்கனியில் எதையோ யோசித்தபடி எங்கோ தூரமாக பார்வையை பாதித்தவாறு நின்றிருந்தவளை நெருங்கியவன் “என்னாச்சு..? என்ன பிரச்சனை..? ஏன் வேண்டாம்னு சொன்னே..?” என்று கேட்டுக் கொண்டே இருக்க.. எதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை.
 
 
“ம்ப்ச், இங்கே பாரு.. என்னன்னு சொல்லு, அப்போ தானே எனக்கு புரியும்..” என அவன் கேட்கவும், முயன்று தன் முழு பெயரை சொல்லாமல் தவிர்த்து ஒவ்வொரு முறையும் அவன் பேசுவது புரிய.. திரும்பி வருத்தத்தோடு அவனைப் பார்த்தாள் சிந்து.
 
 
“விருப்பம் இல்லாத வாழ்க்கை, விருப்பமில்லாத விஷயம்னு உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேனோ..!” என்றவளை அவன் புரியாமல் பார்க்க.. “உங்களுக்கு விருப்பம் இல்லாம நீங்க எதையும் செய்ய வேண்டாம், ஃப்ரீயா விடுங்க..” என்றாள் சிந்து.
 
 
“ஹே இல்லை, எனக்கு இதில் கஷ்டமெல்லாம் எதுவுமில்லை.. நான் விருப்பம் இல்லாம செய்யறேன்னு நீயா எப்படி நினைச்சே..?” என்றான் தாரக். “வேற எப்படி நினைக்க சொல்றீங்க..? நமக்கு கல்யாணமாகி எத்தனை நாளாகுது..? நீங்களா இதுவரை என்னை எங்கேயும் வெளியே கூட்டிட்டு போனதில்லை.. சரி, நானா போகலாம்னு சொன்னாலும் எங்கே போகணும்னு என்னையே கேட்கறீங்க.. வெறும் கடமைக்காக எல்லாம் செய்யற மாதிரி இருக்கு.. இதில்..” என்றவள் ‘காதல் எங்கே இருக்கு..?’ என கேட்க முடியாமல் அப்படியே பேச்சை நிறுத்தி விட, அவள் சொல்ல வந்தது அவனுக்கும் தெளிவாக புரிந்தது.
 
 
சிந்துவின் நிலையும் தெளிவாக புரிய.. “உன்னை அவாய்ட் செய்யணும்னு எல்லாம் நான் நினைச்சது இல்லை..” என்றவன் மீண்டும் அவள் பெயரை உச்சரிக்காமல் நிறுத்த, “தெரியும் நானும் நீங்க அவாய்ட் செய்யறீங்கன்னு சொல்லலை..” என்றாள் சிந்து.
 
 
“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை, இதுவரைக்கும் இப்படி யாரையும் எங்கேயும் நான் கூட்டிட்டு போனதில்லை.. அதனால் எங்கே போகணும்னு தெரியலை.. அதை தான் சொன்னேன், விருப்பம் இல்லைன்னு சொல்லலை..” என்று அவளுக்கு புரிய வைத்து விட முயன்றான் தாரக்.
 
 
“நான் மட்டும் வாரத்துக்கு ஒருத்தர் கூட வெளியே போயிட்டு இருக்கேனா..!” என அவள் முகத்தை திருப்ப.. “ஹேய்..” என தான் சொல்ல வந்ததை எங்கே தவறாக புரிந்து கொண்டாளோ என்ற பதட்டத்தோடு “நான் அப்படி எதுவும் சொல்லலையே..!” எனவும், அவன் குரலில் இருந்த பயத்தை உணர்ந்தவளின் இதழ்கள் மெல்ல புன்னகையில் நெளிந்தது.
 
 
ஆனால் அவள் திரும்பி நின்றிருக்க.. அது அவனுக்குத் தெரியவில்லை. சிந்துவின் இந்த அமைதியை தன் மேலான கோபம் என்று புரிந்து கொண்ட தாரக் “நிஜமா எனக்கு என்ன செய்யணும்னு தெரியலை, என்னை அறியாமலே ஏதாவது உன்னை ஹர்ட் செஞ்சுருந்தா ஐ அம் சாரி.. நாம எங்கேயாவது போகலாம், இரு நான் ஏதாவது ஒரு பிளான் செய்யறேன் வெயிட்..” என்று விட்டு தன் அலைபேசியை எடுக்க.. திரும்பி நிதானமாக அவனை பார்த்தவள், “அதெல்லாம் வேண்டாம், திடீர் பிளான் தானே.. சும்மா ஒரு லாங் டிரைவ் ஓகேவா உங்களுக்கு..?” என தலையை சாய்த்து கேட்க.. உடனே சம்மதித்து இருந்தான் தாரக்.
 
 
மாலை நான்கரை மணி அளவில் இருவரும் காரில் கிளம்ப.. மெலிதாக சிந்து தனக்கு பிடித்த பாடலை ஒலிக்க விட்டபடியே அந்த பயணத்தை ரசிக்கத் தொடங்கினாள். இது தான் திட்டம் என்றில்லாமல் மனம் போன போக்கில் சீரான வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
 
 
ஒரு கட்டத்தில் இளைஞர்கள் அதிகம் தென்பட, “இங்கே என்ன ஸ்பெஷல்..?” என்றாள் பார்வையை வெளியே வைத்தபடியே சிந்து. “இது முட்டுக்காடு.. பக்கத்தில் போட் ஹவுஸ் இருக்கு, வீக் எண்ட் இல்லையா அதான் நிறைய பேர் வந்திருக்காங்க..” என்றான் தாரக்.
 
 
“ஓ போட் ஹவுஸா, இங்கே இருந்து பார்க்க முடியுமா..?” என ஆவலாக அவள் பார்வையாலேயே தேட, “உனக்கு பார்க்கணுமா..! இல்லை போகணுமா..?” என்றான் தாரக். “நாம போக முடியுமா..?” என்று கேட்கும் போதே அவள் முகத்தில் அத்தனை ஆர்வம் எட்டிப் பார்த்தது.
 
 
“ஓ போகலாமே..” என்றவன், அவள் விழிகள் மின்னுவதை கண்டு “நீ இதுக்கு முன்னே போர்ட்டில் போனதில்லையா..?” எனவும், “நான் எங்கேயுமே போனதில்லை..” என்று சிரித்தாள் சிந்து. அவள் என்னவோ இயல்பாக அதை சொல்லிவிட்டாள், ஆனால் அவனுக்குத்தான் என்னவோ போலானது.
 
 
காரை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே செல்ல.. ஒரு ஜோடி இவர்கள் எதிரில் வந்து கொண்டிருந்தனர். அந்தப் பெண் எதற்கோ கோபப்பட்டு அவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க.. அவன் தன் காதலியிடம் கெஞ்சிக் கொண்டே நடந்து வந்தான்.
 
 
திடீரென என்ன நினைத்தாளோ அந்தப் பெண் கோபத்தில் தன் காதலனை பிடித்து தள்ளி விட, கொஞ்சம் விட்டிருந்தால் அவன் இவர்களை தள்ளி விட்டிருப்பான். இதை சரியாக கணித்தது போல் தாரக் சட்டென சிந்துவை தன் தோளோடு அணைத்து பிடித்தபடி நகர்ந்துவிட்டான்.
 
 
நொடியில் நடந்து விட்ட நிகழ்வு தான். யாரும் திட்டமிட்டு எல்லாம் எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் இருவரும் கீழே விழுந்து இருப்பர். அதில் அந்தப் பெண்ணுமே கொஞ்சம் பயந்து போய் இருவரையும் பார்த்து மன்னிப்பு கேட்க.. அவளுடன் வந்தவனும் அத்தனை முறை மன்னிப்பு கேட்டிருந்தான்.
 
 
இருவரும் தெரிந்தே செய்யவில்லை என புரிந்து இருந்தால் அதை பெரிது படுத்தாமல் அமைதியாகவே தாரக் அங்கிருந்து சிந்துவுடன் நகர, அவளுக்கு தான் மனம் லேசாக ஓரத்தில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. முதல் முறையாக இத்தனை உரிமையாக அவளை தோளோடு சேர்த்து அணைத்து பிடித்து இருந்தான் தாரக்.
 
 
இந்த இடைப்பட்ட காலத்தில் கையைப் பிடித்துக் கொள்வது எல்லாம் அவர்களுக்குள் வெகு இயல்பான ஒன்றாக மாறிப் போயிருந்தது. ஆனால் அதைத் தாண்டி தாரக் இப்படி எல்லாம் உரிமையாக நடந்துக் கொண்டதே இல்லை. அதில் உண்டான சிறு படபடப்போடே சிந்து அவனோடு சென்றாள்.
 
 
அங்கிருந்து நகர்ந்தவுடன் தாரக் தன் கையை விலக்கி கொள்ள.. ஏமாற்றமாக உணர்ந்தாள் சிந்து. மணி ஆரைத் தொட்டிருக்க.. லேசாக இருட்ட தொடங்கி இருந்த நேரம், வார இறுதி என்பதால் படகு சவாரிக்கு நல்ல கூட்டம் இருந்தது. அங்கு வரிசையில் நின்று தாரக், டிக்கெட் வாங்கிக் கொண்டு வர.. அடுத்த ரவுண்டில் தான் அவர்களுக்கு இடம் கிடைத்திருந்தது.
 
 
“எப்படியும் அரை மணி நேரமாகும், நாம அந்த பக்கம் போய் நிற்போம்..” என்று தாரக் அழைக்க.. சரி என திரும்பியவள் வழியில் அங்கு வந்திருந்த ஒரு காதல் ஜோடி பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாள். “போட்டிங் முடிந்ததும், இங்கே பக்கத்து ரிசார்ட்டில் கேண்டில் லைட் டின்னருக்கு புக் செஞ்சுருக்கேன்.. உனக்கு ஓகே தானே..!” என்று அவன் கேட்க, “அவ்வ்வ்..” என்று கன்னத்தில் கை வைத்து ஆச்சரியப்பட்டாள் அந்த பெண்.
 
 
இதைப் பார்த்தபடியே சிந்து நகர்ந்து வர, அவள் முகத்தை கவனித்திருந்த தாரக் “நாமும் கேண்டில் லைட் டின்னர் சாப்பிடலாமா..?” என கேட்க ஆச்சரியமாக விழிகளை விரித்தவள், உடனே சரி என்றிருந்தாள். ‘உனக்கும் அப்படி சாப்பிடணுமா..?’ என கேட்காமல் ‘நாம சாப்பிடலாமா..?’ என்று தாரக் கேட்டதே அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
 
 
இங்கு காத்திருக்கும் நேரத்திற்குள் அங்கே சென்று டின்னருக்கு புக் செய்துவிட்டு திரும்ப இருவரும் வர, இவர்களின் முறையும் வந்து விட்டிருந்தது. வரிசையில் நின்று ஒவ்வொரு ஜோடியாக சென்று கொண்டிருக்க.. சவாரி முடித்து விட்டு இறங்கி வருபவர்கள் ஒரு பக்கமாக வந்து கொண்டிருந்தனர்.
அதில் வேண்டுமென்றே மூன்று இளைஞர்கள் சிந்துவை இடிப்பது போல் வந்தனர். அவர்கள் மது போதையில் இருப்பது அவர்களின் நடையின் தள்ளாட்டத்திலேயே தெரிந்து விட, நொடியில் சிந்துவின் இடையில் கை கொடுத்து அவளை அப்படியே தூக்கி தன் மற்றொரு பக்கம் நிறுத்திக் கொண்டு இருந்தான் தாரக்.
 
 
இதை எதிர்பார்க்காதவர்கள் சிந்துவின் மேல் இடிக்க முழு வேகத்தில் வந்திருந்ததால் கீழே விழுந்திருக்க.. அங்கிருந்த மற்றவர்களுக்கெல்லாம் அவர்கள் அதீத போதையில் சரியாக நடக்க முடியாமல் தள்ளாடி விழுந்தது போல் தான் தெரிந்தது. 
 
 
ஆனால் நடந்ததை உணர்ந்திருந்த சிந்து படபடக்கும் மனதோடு விழிகளை உயர்த்தி தாரக்கை பார்த்தாள். அந்தப் பார்வையை உணர்ந்தவன், சட்டென தன் கைகளை விலக்கிக் கொண்டு “சாரி.. நான் வேணும்னு எதுவும்.. அவங்க உன்னை இடிக்க வந்தாங்க.. அதான்..” என்று லேசான தடுமாற்றத்தோடு பேசினான் தாரக்.
 
 
அதில் சிந்துவுக்கு முகம் வாடி விட்டது. “நான் உங்களை எதுவும் சொல்லலையே..!” என்று மட்டும் மெலிதாக முனகினாள் சிந்து. அதன் பின் இருவரும் படகில் ஏறி மெல்ல சுற்றி வந்து கொண்டிருக்க.. அந்த அழகை ரசிக்கும் மனநிலை இப்போது அவளுக்கு கொஞ்சமும் இல்லை.
 
 
அடிக்கடி தாரக் முகத்தையே சிந்து பார்த்துக் கொண்டிருக்க.. இவ்வளவு நேரம் இயல்பாக இருந்தவளுக்கு திடீரென என்ன ஆனது என்பது போல் பார்த்தவன் மனதில் சற்று முன் நடந்த நிகழ்வே வந்து நிற்க.. ‘என்னை தப்பா நினைச்சுட்டாளோ..!’ என்று யோசித்தான் தாரக்.
 
 
அதேநேரம் “உங்களுக்கு என்னை தொட கூட பிடிக்கலையா..?” என்றாள் சிந்து. அதில் பெடல் செய்து கொண்டிருந்த தாரக்கின் கால்கள் அப்படியே நின்றது. “என்.. என்ன..?” என்று அவன் அடுத்து பேச முடியாமல் தடுமாற.. “இல்லை உங்களுக்கு என்ன பிரச்சனை..? என்கிட்ட இருந்து ஏன் விலகி போறீங்க..?” என்றவளை அவன் மறுப்பாக பார்த்து “அப்படி எல்லாம் எதுவும் இல்லை..” எனவும் “பொய் சொல்லாதீங்க, நமக்கு கல்யாணமாகி இத்தனை நாள் ஆகுது.. ஆனாலும் இன்னைக்கு இயல்பா நடந்து ஒரு விஷயத்துக்கு, அதுவும் என்னை காப்பாத்த நீங்க செஞ்ச விஷயத்துக்கு ஏன் மன்னிப்பு கேட்கணும்..?” என்றாள் சிந்து.
 
 
“அது.. அது உனக்கு பிடிக்காதோன்னு தான்..” என அவன் இழுக்க.. “எனக்கு பிடிக்காதுன்னு நான் சொன்னேனா..! இல்லை நீங்க தான் என்கிட்ட பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டீங்களா..! நீங்களா ஒண்ணை நினைச்சுட்டு ஏன் என்னையும் என் மனசையும் காயப்படுத்துறீங்க..?” என்றாள் சிந்து.
 
 
இப்போது தன் தயக்கத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு அவள் கரங்களை இறுக பிடித்துக் கொண்டவன் “இங்கே பாரு உன்னை காயப்படுத்தணும்னு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை.. நீ வருத்தப்பட கூடாதுன்னு தான் நான் யோசிக்கிறேன்..” என்றான்.
 
 
“எனக்கு தெரியுது, அதனால் தான் சொல்றேன்.. இதனால் எல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன், நீங்க விலகி போறது தான் எனக்கு வருத்தத்தை கொடுக்குது..” என்றாள் சிந்து. “சாரி, இனி ரொம்ப கவனமா இருக்கேன்.. நீ வருத்தப்படும்படி எதுவும் நடக்காம பார்த்துக்கறேன்..” என்றான் தாரக்.
 
 
பின் படகு சவாரி முடிந்து இருவரும் அருகில் இருந்த ரிசார்ட்டிற்கு டின்னர் சென்றனர். பறந்த மண்வெளியில் கடல் அலைகளுக்கு அருகில் வெள்ளை திரை சீலைகளைக் கொண்டு அழகான அலங்கார தடுப்புகளும் வளைவுகளும் கொண்டு ஒவ்வொரு ஜோடிக்கும் தனிமை ஏற்படுத்திக் கொடுத்திருந்த அந்த கேண்டில் லைட் டின்னர் அவ்வளவு அழகாக இருந்தது.
 
 
மெல்லிய கடல் அலைகளின் ஓசையும், கண்ணை உறுத்தாத லேசான வெளிச்சமும், ஜில்லென வீசிய இரவு காற்றும் இருவரின் மனநிலையையும் இதமாக மாற்றி இருக்க.. மெல்ல பேசிக்கொண்டே அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. எங்கிருந்து தான் தொடங்கியதோ சட்டென மழை பிடித்துக் கொண்டது.
 
 
லேசான தூறல் போல எல்லாம் இல்லை, எடுத்ததும் வேகமாக மழை வலுக்க தொடங்க.. அங்கிருந்தவர்கள் எல்லாம் அவசரமாக மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஓடிக்கொண்டிருக்க.. தாரக்கும் சிந்துவை அழைத்துக் கொண்டு ரிசார்ட் பக்கம் சென்றான்.
 
 
அதற்குள் இருவரும் முழுதாக நனைந்து விட்டிருந்தனர். “அச்சோ இது என்ன இப்படி ஆகிடுச்சு..?” என அவள் இருந்த நிலையை கண்டு தாரக் வருத்தப்பட.. “கடைசியா எப்போ இப்படி நனைஞ்சேன்னு கூட ஞாபகம் இல்லை, ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு..” என்றாள் புன்னகையோடு சிந்து.
 
 
மெல்ல வெளியே எட்டிப் பார்த்தவன், “இப்போதைக்கு மழை விடும் போல தெரியலை, கார் வேற போட் ஹவுஸ் பக்கத்தில் நிற்குது. இங்கே இருந்து அங்கே போக எப்படியும் பத்து நிமிஷத்துக்கு மேலே ஆகும்..” என்றவன் யோசனையோடு நின்றிருக்க.. ‘இப்போ என்ன செய்வது..?’ என்பது போல் அவன் முகத்தைப் பார்த்தாள் சிந்து.
 
 
“உனக்கு ஓகேனா நாம இங்கே நைட் ஸ்டே செஞ்சுடலாமா..?” என்று தாரக் கேட்கவும், திகைப்பாக அவனைப் பார்த்தவள் “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லிவிட, சரி என்றவன் அங்கிருந்த ஊழியரை அழைத்து அவர்களுக்கு ஒரு அறைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினான்.
 
 
அந்த ஊழியரும் அருகில் இருந்த மற்றொரு உள்வழியில் தாரக்கை ரிசார்ட் ஆபீஸ்க்கு அழைத்துச் செல்ல முயல.. சிந்துவை அங்கேயே நிற்க வைத்து விட்டு செல்ல தாரக் தயங்கினான். “நிறைய தூரம் இல்லை சார், இதோ இப்படி போய் அந்த லெப்ட் திரும்பினா அங்கே தான் ரிசார்ட் ஆபீஸ்..” என்று ஊழியர் கூறவும், அவனோடு சென்ற தாரக், அடுத்த சில நிமிடங்களில் அவர்களுக்கான அறை சாவியோடு திரும்பி வந்தான்.
 
 
அறைக்குள் சென்றதும் “இங்கே ஹீட்டர் இல்லை போல..” என்று பார்வையாலேயே அந்த இடம் முழுக்க அலசி விட்டு தாரக் கூறவும், “பரவாயில்லை விடுங்க, சீக்கிரம் ட்ரையாகிடும்..” என தன் சேலையை அவள் உதறிக் கொள்ள.. அந்த மெல்லிய சேலை அவள் உடலோடு ஒட்டி சிந்துவின் அழகையெல்லாம் மொத்தமாக வெளிச்சம் போட்டு காண்பித்தது.
 
 
இதில் ஒரு நொடி தடுமாறியவன், தன் பார்வையை திருப்பிக் கொண்டே அங்கிருந்த டவளை எடுத்து “தலையை துடைச்சுக்கோ..” என்று அவளிடம் நீட்டினான் தாரக். அதை வாங்கியவாறே சிந்து “நீங்க துடைச்சுக்கலையா..?” எனவும், தன் ஈரத் தலையை லேசாக உதறிக் கொண்டே “எனக்கு பரவாயில்லை, நீ துடைச்சுக்கோ..” என்றான்.
 
 
அதில் சிந்து தன் தலையை துடைப்பதில் கவனமாக.. அவன் அனுமதி இல்லாமலே தாரக்கின் விழிகள் அவள் மேல் மீண்டும் மீண்டும் பதிந்து கொண்டிருந்தது. ‘என்ன செஞ்சுட்டு இருக்கேன் நான்..?’ என்று தனக்குள்ளேயே முனங்கி கொண்டவன், மெல்ல அங்கிருந்து நகர்ந்து “இப்படியே ஈரமான ட்ரெஸ்ஸில் இருக்காதே.. இங்கே பாத்ரோப் இருக்கான்னு பார்க்கறேன் இரு..” என்று கப்போர்ட்டை திறக்க.. அங்கு இருவருக்குமான பாத்ரோப் இருந்தது.
 
 
அதை எடுத்து அவளிடம் கொடுத்தவன் “முதலில் இதை மாத்திக்கோ.. இல்லைனா உடம்புக்கு முடியாம போகும்..” எனவும் சிறு தயக்கத்தோடு அதை வாங்கிக் கொண்டவளுக்கும், இந்த ஈர உடை கொஞ்சம் அதிகமாகவே குளிரை கொடுத்திருக்க.. அருகில் இருந்த குளியலறைக்குள் நுழைந்தாள் சிந்து.
 
 
அதற்குள் தாரக் தன் சட்டையை கழட்டி ஈரத்தை உதறிக் கொண்டிருக்க.. குளியலறையில் இருந்து வெளியில் வந்த சிந்து, அவனை எதிர்பாராமல் இப்படி கண்டு அப்படியே அசையாமல் நின்றாள்.
 
 
அதேநேரம் அவளை திரும்பி பார்த்து இருந்தவன், முட்டியை தொடாமல் தொட்டுக் கொண்டு இருந்த உடையின் உபயத்தால் தெரிந்த அவளின் வழவழப்பான கால்களும், இதுவரை அதை அணிந்து பழக்கமில்லாததால் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக அவள் அணிந்திருந்த பாத்ரோபின் நெகிழ்வில் தெரிந்த அபாயகரமான கழுத்து வளைவும், அவன் தொண்டை குழியை ஏற்றி இறக்கியது.
 
 
அதில் முயன்று பார்வையை அவன் திருப்ப முயல.. அந்த கழுத்தில் அவன் அணிவித்திருந்த மாங்கல்யம் தாரக்கின் விழிகளில் விழுந்தது. அது அவளை நோக்கி தானாக அவனை நகர செய்திருக்க.. ஆரம்பத்தில் தாரக்கை இப்படி கண்டதில் திகைத்து நின்றவள், பின் வேகமாக பார்வையை திருப்பி கொண்டாள்.
 
 
ஆனால் தாரக் தன்னையே பார்ப்பதை நிமிர்ந்து பார்க்காமலே உணர்ந்தவள் படபடக்கும் மனதோடு நின்றிருக்க.. அதே நேரம் அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சிந்துவை நெருங்கினான் தாரக்.
 
 
கை கால் எல்லாம் லேசாக நடுங்க.. சிந்து நிற்க முடியாமல் தடுமாற.. அதற்குள் அவளை நெருங்கி இருந்தவன், உரிமையோடு சிந்துவின் இடையில் கை கொடுத்து அவளை தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொள்ள.. சிந்துவுக்கு இதயம் வெளியில் வந்து துடித்தது.
 
 
மெல்ல தன் மற்றொரு கரம் கொண்டு அவளின் முக வடிவை அளந்தவன், சிந்துவின் இதழை நெருங்க இருந்த இறுதி நொடியில் அவன் மோன நிலை கலைய.. சட்டென அவளிடமிருந்து விலகினான் தாரக்.
 
 
எதையோ எதிர் பார்த்து விழிமூடி நின்றிருந்த சிந்து திடீரென்ற தாரக்கின் இந்த விலகல் ஏன் என புரியாமல் அவன் கைகளை பிடித்தாள்.
 
 
அதில் வேதனையோடு அவளை திரும்பி பார்த்தவன், சிந்துவின் கண்களில் தெரிந்த ஏன் என்ற கேள்வியில் அழுந்த தன் விழியை ஒருமுறை மூடி திறந்து, “இது.. இது உனக்கு தேவையில்லாத பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.. உன்னை மனசளவில் காயப்படுத்திடுவேனோன்னு..” என்றவனின் குரலில் இருந்த வலியே அவனின் மனதை அவளுக்கு தெளிவாக புரிய வைக்க போதுமானதாக இருந்தது.
 
 
“அப்படி இல்லைன்னு உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கறது..?” என்று தொடங்கி, பின் சட்டென அவனை இழுத்து “வார்த்தைகளில் புரிய வைக்க எனக்கு தெரியலை..” என்றவள், தாரக்கின் இதழ்களில் தன் முத்திரையை பதிக்க.. விழிமூடி அதை ஏற்றவன், தன்னை மறந்து “தூரிகா..” என முனக.. அந்த விளிப்பில் அவனிடமிருந்து விலகி தாரக்கின் முகம் பார்த்தவளின் விழிகள் ஆனந்தத்தில் கலங்கியது.
 
 
ஆனால் அவளின் அந்த நொடி நேர விலகலை கூட அனுமதிக்காதவன், அடுத்த நொடி அவளின் செயலை தனதாக்கிக் கொண்டிருந்தான்.
 
 
*****
 
 
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு…
 
 
தன் சட்டையின் கைப்பகுதியின் பட்டனை போட்டபடியே “தூரிகா.. ரெடியா, கிளம்புவோமா..?” என கேட்டப்படியே அறைக்குள் நுழைந்தான் தாரக். அங்கு அலங்கார மேஜை முன் அமர்ந்து ஒப்பனைகளை செய்து முடித்திருந்த சிந்து அங்கிருந்த நகை பெட்டியை எடுத்தவாறே “இதோ இரண்டு நிமிஷம்..” என்று அதை அணிந்து கொள்ள முயல.. அவள் கரத்தில் இருந்து அந்த ஆரத்தை வாங்கிய தாரக் சிந்துவுக்கு தானே போட்டு விட்டான்.
 
 
அடுத்து அதே போல் அருகில் இருந்த வளையல்களையும் எடுத்து அவனே போட்டு விட, அமைதியாக அவனின் அத்தனை செயல்களுக்கும் அனுமதித்து புன்னகையோடு அமர்ந்திருந்தாள் சிந்து. எதிரில் தெரிந்த கண்ணாடி வழியே அவளை பார்த்தபடியே அனைத்தையும் செய்து முடித்தவன், பின்னே இருந்தவாறே சிந்துவின் கழுத்து வளைவில் தன் முகத்தை பதித்து தன் கரத்தை அழகாக மேடிட்டு இருந்த அவளின் வயிற்றின் மேல் பதிக்க.. சிந்துவும் அவன் கரத்தோடு சேர்த்து தன் வயிற்றை அணைவாக பிடித்துக் கொண்டாள்.
 
 
இருவரும் இந்த உலகையே மறந்தது போல் இந்த நொடியை மட்டுமே ரசித்தபடி இருக்க.. கரடியை போல் அவன் அலை பேசி அழைத்தது. சின்ன சலிப்போடு தன் அலைபேசியை அவன் எடுத்துப் பார்க்கவும், ராம் தான் அழைத்திருந்தான்.
 
 
“சார் எல்லாம் ரெடி, நீங்க எப்போ வருவீங்க..?” என அவன் பணிவோடு கேட்கவும், “ஹ்ம்ம்..” என்றவாறே தன் வாட்ச்சை பார்த்தவன் “இன்னும் அரைமணி நேரத்தில் அங்கே இருப்போம்..” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு சிந்துவைப் பார்க்க.. அவளும் விழியாலே சரி என்றிருந்தாள்.
 
 
அதன் பின் மெல்ல சிந்து எழுந்து கொள்ள அவளுக்கு கை கொடுத்து உதவியவன், குனிந்து சிந்துவின் சேலை மடிப்பை சரி செய்து விட, தன் மேடிட்ட வயிறை கடந்து தலையை சரித்து அவனை பார்த்து புன்னகைத்தாள் சிந்து.
 
 
சிந்துவுக்கு இப்போது ஒன்பதாவது மாதம். இன்று அவளுக்கு வளைகாப்பு. அதற்காகத்தான் கிளம்பி கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இன்று மேலும் இரண்டு விசேஷங்களும் உண்டு.
 
 
அவளை மெதுவாக காரில் ஏறி அமர உதவியன், மற்றொரு பக்கம் வந்து அமர்ந்து காரை எடுத்தான். அடுத்த சில நிமிடங்களில் கார் சென்று நின்ற இடம் தாரக் தனாவோடு சேர்ந்து வாழ்ந்த வீடு. முன்பு போல் பெரும் வேதனையோடும் வலியோடும் இறங்கிச் செல்லாமல், சிறு மென்னகையோடு தாரக் இறங்கி சிந்துவின் கையை பிடித்தபடி உள்ளே நுழைந்தான்.
 
 
தனா வாழ்ந்த இடம் இப்போது அவளின் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு கொண்டிருந்தது. அன்று நடந்த கலவரங்களுக்கான சாட்சிகள் அப்படியே இருப்பதால் தான் அந்த நினைவுகள் தாரக்கை ஒவ்வொரு முறையும் மனதளவில் கொன்று கொண்டிருக்கிறது எனப் புரிந்து, அதை அழகான நினைவுகளாக மாற்றிக் கொடுத்திருந்தாள் சிந்து.
 
 
அந்த வீட்டின் அமைப்பை பெரிதாக மாற்றாமல், அங்கு இருந்த பொருட்களை எல்லாம் மாற்றி வைத்து தனாவின் பெரிய உருவப்படத்தை நேர் எதிரே மாட்டியிருந்தவள், அவளின் உடமைகளை அதற்கு கீழ் கண்ணாடி கதவுகளாலான கப்போர்ட் செய்து அதற்குள் வைத்து விட்டிருந்தாள்.
 
 
தனா காதல் திருமணம் செய்து கொண்டு வெளியேறிய பிறகு இதையெல்லாம் எரித்து விட சொல்லி நாகராஜ் தூக்கி வீசி இருந்த பொருட்கள். சுசீலாவுக்கு தன் மகளின் பொருட்களை அப்படி செய்ய மனம் வரவில்லை. சுஜாதாவும் சிந்துவும் அவரோடு இணைந்து இதையெல்லாம் நாகராஜனுக்குத் தெரியாமல் எடுத்து வைத்திருந்தனர். இப்போது அதையெல்லாம் இங்கே கொண்டு வந்திருந்தாள் சிந்து.
 
 
தன் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தவளின் நினைவுகளை பாதுகாக்க இப்படியெல்லாம் செய்ய முடியும் என்று கூட யோசிக்காத தாரக்கிற்கு சிந்துவின் இந்த செயல்கள் அத்தனை நெகிழ்வை கொடுத்தது. அதன் பின் ஒவ்வொரு முறை இங்கு வரும் போதும் அவன் மனம் அத்தனை நிம்மதியையும் அமைதியையும் மட்டுமே உணரும்.
 
 
அதேபோல் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்குவதற்கு முன் இங்கு வந்து விட்டுச் செல்வது அவர்களின் முக்கிய வழக்கமாக இருந்தது. அதேபோல் இன்றும் வந்திருந்தவர்கள், சின்ன தாமரை மொட்டுகளாலான மாலை அணிந்திருந்த அவள் படத்தின் முன் கைகூப்பி நின்று வணங்கி விட்டு வெளியேற.. மெல்ல மேலே பார்த்தாள் சிந்து.
 
 
அவளின் மனம் அறிந்து கை தாங்கலாக சிந்துவை மேல் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான் தாரக். அங்கே குமரேசன் மற்றும் சாரதாவின் புகைப்படம் பெரிது படுத்தப்பட்டு ஜோடியாக ரோஜா மாலையோடு இருந்தது.  சென்ற வருடம் ஒருநாள் இரவு உறக்கத்திலேயே குமரேசனின் உயிர் பிரிந்திருக்க.. அந்த செய்தி அறிந்த சில மணி நேரங்களிலேயே சாரதாவின் உயிரும் பிரிந்து இருந்தது.
 
 
ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்தவர்கள், அதே போல் மண்ணுலகை விட்டும் சென்றிருந்தனர். அவர்களுக்கு ஒரு மகனாக முன் நின்று அத்தனை கடமைகளையும் செய்திருந்தான் தாரக். அவர்களையும் மனமார வணங்கி விட்டு இருவரும் வெளியில் வந்தனர்.
 
 
அடுத்து இருவரும் சென்றது ‘தனா எலிகன்ஸ்’ என்ற பெயரில் சிந்து புதிதாக தொடங்கியிருக்கும் பொட்டிக் திறப்பு விழாவிற்கு தான். அங்கு அனைவரும் காத்திருக்க.. சுஜாதாவின் கைகளில் கத்திரிக்கோலை கொடுத்து திறப்பு விழாவை செய்து முடித்திருந்தாள் சிந்து.
 
 
தன் வாழ்நாள் முழுக்க கிடைக்காத மரியாதையும் அங்கீகாரமும் தன் பிள்ளைகள் மூலம் கிடைப்பதில் உண்டான நெகிழ்வோடு கண் கலங்க அங்கிருந்த சிகப்பு ரிப்பனை வெட்டினார் சுஜாதா. அதன் பின் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்த சிந்துவின் கைகளில் மெழுகுவர்த்தியை கொடுத்து குத்து விளக்கை ஏற்ற செய்திருந்தான் தாரக்.
 
 
இது அவள் கனவு.. முழுதாக அவளின் முயற்சியில் தன் கனவுக்கு உயிர் கொடுத்திருந்தாள் சிந்து. தாரக் முன்பே அவளுக்கென ஒரு தொழிலை தொடங்கி கொடுக்க முன் வந்து இருந்தாலும், அதை முற்றிலும் மறுத்து விட்டு தானே தன் கனவை அடையும் இலக்கை நோக்கி சரியான திட்டமிடலுடன் சென்று அதை சாதித்தும் காட்டி இருந்தாள் சிந்து.
 
 
இதில் நிஜமாகவே தாரக்கிற்கு உள்ளுக்குள் பெருமை தான். தன் சொந்த காலில் அவள் நிற்பதோடு அதை வெற்றிகரமாகவும் சாதித்து காண்பித்து இருப்பவளை எண்ணி அவனுக்கு உள்ளுக்குள் அத்தனை சந்தோஷம். சிந்துவின் ஒவ்வொரு முயற்சியிலும் அவளுக்கு எப்போதுமே கை கொடுப்பான் தாரக். 
 
 
இதோ இப்போதும் தன் ஒட்டு மொத்த சேமிப்பையும் அவள் முதலீடு செய்து தொடங்கி இருக்கும் தொழிலை நிச்சயம் வெற்றி பாதையில் கொண்டு செல்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அருண் தன் தங்கையை மனதார வாழ்த்த.. சந்தோஷ பூரிப்போடு நன்றி தெரிவித்தவள் அங்கிருந்த அனைவரையும் வரவேற்று உபசரிக்க தொடங்க.. “சரி நேரமாகுது இங்கே இருந்து கிளம்புவோமா..?” என்றான் தாரக்.
 
 
அதில் அனைவரும் உடனே கிளம்பினர். பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டலில் சிந்துவுக்கு வளைகாப்புக்கு ஏற்பாடாகி இருக்க.. அங்கு சென்று இறங்கியவர்கள் அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் கவனத்தை திருப்பினர்.
 
 
முதலில் அருணுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இது ஒரு காதல் திருமணம். முன்பு அருண் வேலை பார்த்த இடத்தில் உடன் வேலை செய்த அகல்யாவை அவனுக்கு பிடித்து போக.. இருவரும் காதலிக்க தொடங்கியிருந்தனர்.
 
 
அப்போது அகல்யாவுக்கு அருணின் வசதி பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அவனும் தன்னை போல் ஒருவன் என்று நினைத்தே பழகி இருந்தவள், அதன் பின் அவனின் வசதி குடும்பப் பின்னணி எல்லாம் அறிந்து விலகி போக நினைத்தாலும், அதற்கு அனுமதிக்காமல் விரட்டி விரட்டி காதலித்து இதோ திருமணம் வரை கொண்டு வந்து விட்டிருந்தான் அருண். 
 
 
அந்த வீட்டின் பெண்ணாக அருணின் தங்கையாக முன் நின்று இருவருக்குமான சடங்குகளை செய்து முடித்த சிந்துவும் மாப்பிள்ளையாக தாரக்கும், அருண் - அகல்யா மோதிரம் மாற்றி முடிக்கவும் தங்கள் வாழ்த்தை தெரிவிக்க.. தாரக்கை மனம் நெகிழ அணைத்து கொண்டான் அருண்.
 
 
இருவரும் எந்த வார்த்தைகளும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒற்றை அணைப்பே அருண் சொல்ல வேண்டிய அனைத்தையும் தாரக்கிற்கு சொல்லி விட்டிருந்தது. அதில் அவனும் அமைதியாக நிற்க.. சில நொடிகளுக்குப் பிறகே தாரக்கிடமிருந்து விலகியவன், சிந்துவை பார்த்து “உன் கடமையை நீ முடிச்சிட்டே.. இப்போ என் கடமை வா..” என்றான்.
 
 
நிச்சயதார்த்தம் நடந்த மேடைக்கு பக்கத்திலேயே மற்றொரு மேடை போடப்பட்டு தயாராக இருந்தது. அதில் நடு நாயகமாக ராஜ அலங்காரத்தோடு இருந்த இருக்கையில் சிந்துவை அழைத்துச் சென்று அமர வைத்தவன், அவளுக்கான வளைகாப்பு ஏற்பாடுகளை தொடங்க.. வந்திருந்த பெண்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து நலங்கு வைத்து சிந்துவிற்கு கண்ணாடி வளையல் அணிவித்து வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றனர்.
 
 
இறுதியாக மேடை ஏறிய தாரக், தாய்மையின் பூரிப்பில் மலர்ந்து இருந்த சிந்துவின் முகத்தை ரசனையோடு விழிகளால் வருடியவாறே அவளின் இரு கைகளிலும் வைர வளையலை அணிவித்தான்.
 
 
அதை சிந்து ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க.. மெல்ல மற்றவர் அறியாமல் சிந்துவை பார்த்து கண்சிமிட்டினான் தாரக்.
 
 
எல்லா கொண்டாட்டமும் முடிந்து இவர்கள் வீடு திரும்ப மாலையாகி இருந்தது. இலகுவான உடையில் தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் காலை மெல்ல அழுத்தி விட்டுக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
“போதும்.. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே செய்வீங்க..” என தன் காலை சிந்து இழுத்து கொள்ள.. அவள் அருகில் வந்து அவன் அமரவும், தாரக்கின் தோளில் சாய்ந்து கொண்டாள் சிந்து.
 
 
“நீ மட்டும் என்னை தேடி வரலைனா நான் என்னவாகி இருப்பேன் தூரிகா..?” என கடந்த மூன்று வருடங்களாக அவன் மனதில் தோன்றிக் கொண்டிருக்கும் கேள்வியை அவன் கேட்கவும், அவன் மேல் சாய்ந்தவாறே விழியை மட்டும் உயர்த்தி தாரக்கை பார்த்த சிந்து “நான் வரலைனா என்ன நீங்க வந்து இருப்பீங்க..” என்றாள்.
 
 
தன் வாழ்க்கை மீண்டும் மலராது என்று நினைத்திருந்த இருவருக்குள்ளும் நேசம் மீண்டும் துளிர்த்து எழுந்து அவர்கள் வாழ்வை மகிழ செய்திருந்தது.
 
 
                                                                                               நிறைந்தது 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 458
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
PRE FINAL
 
MNM - 47, 48, 49 & 50
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 6 / 6

You cannot copy content of this page