All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 5 / 5
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 425
Topic starter  
 
 
நேசம் - 32
 
அந்த அவசர சிகிச்சை பிரிவின் எதிரில் கண்ணீரோடு அமர்ந்திருந்த சாரதாவின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தான் தாரக்.
 
 
சுயநினைவின்றி கிடந்தவரை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டிருந்தாலும் இன்னும் அவரின் உடல்நிலை குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததில் உண்டான பதட்டத்தோடு இருவரும் அமர்ந்திருந்தனர். 
 
 
இதெல்லாம் அன்றைய கொடூர நாளுக்கு பின்னான நிகழ்வுகளே..! அன்று நடந்திருந்த அராஜகத்தில் குமரேசனின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரின் உயிரை காப்பாற்றி விட்டிருந்தாலும் இன்றுவரை அதன் பக்க விளைவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 
 
 
அடிக்கடி அவரின் உடல் நிலை பாதிக்கப்படுவதும், இப்படி மருத்துவமனையில் வைத்து போராடி அவரை மீட்டுக் கொண்டு வருவதும் தொடர்ந்து கொண்டே இருக்க.. ஒவ்வொரு முறையும் அந்த நேரங்களில் சாரதாவின் தவிப்பையும் உள்ளிருக்கும் குமரேசனின் போராட்டத்தையும் கண் முன்னே காணும் போதெல்லாம் குற்ற உணர்வில் துடித்துப் போவான் தாரக். 
 
 
ஏதோ ஒரு வகையில் இதற்கெல்லாம் அவனும் காரணமாகி போன குற்ற உணர்வு அவனை கொல்லும். அன்று ஒருவேளை அங்கு அவனிருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்காமல் தடுத்திருக்கலாம்..! இல்லையெனில் அந்த ஜீவமரண போராட்டத்தில் தன் உயிராவது போயிருக்கலாம்..!! என்றே அவனுக்குத் தோன்றும். 
 
 
இதில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் குமரேசன் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் வருத்தத்தை தர, கண்ணீரோடு அமர்ந்திருக்கும் சாரதாவின் கைகளை ஆதரவாக தட்டிக் கொடுத்தவாறே “கவலைப்படாதீங்க ஐயாவுக்கு எதுவுமாகாது..” என்று நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
எதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கண்கள் கலங்க அந்த அவசர சிகிச்சை பிரிவின் கதவையே எப்போது திறக்கும் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் சாரதா. வயதான காலத்தில் இவர்களுக்கு ஏன் இத்தனை கஷ்டம் என மனம் வலித்தது. 
 
 
அவர்களின் நீண்ட நெடிய காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவது போல் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த மருத்துவர், அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூற.. அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை அப்போதே வெளியிட்டார் சாரதா. 
 
 
தாரக்கிற்கு அவரின் நிலை நன்றாக புரிந்தது. வயதான காலத்தில் பிள்ளைகளின் துணையும் இல்லாமல் வேறு உறவுகளும் இல்லாமல் கணவன் மட்டுமே உறவென்று வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, அவரை இந்த நிலையில் காணும் ஒவ்வொரு நொடியும் எப்படி இருக்கும் என நன்றாகவே புரிந்தது. 
 
 
இதையெல்லாம் பார்க்கும் போது தான் என்ன செய்தாவது அந்த நாகராஜனையும் இதே போல் துடிதுடிக்க செய்ய வேண்டும் என்ற வெறி எழுகிறது. ஆனால் மனம் அமைதியான பிறகு அவன் செய்வதையே நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றும் தோன்றாமல் இல்லை. 
 
 
இப்படியே நன்மைக்கும் தீமைக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான் தாரக். அதில் உண்டான மன போராட்டத்தில் விழிமூடி இருக்கையில் தாரக் அப்படியே சாய்ந்தமர, அவனை கவலையாக திரும்பிப் பார்த்த சாரதா வேறு எதுவும் பேசி தொல்லை செய்யவில்லை. 
 
 
இரண்டு நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டவன் போல் மெல்ல விழிகளை திறந்தவன் “இப்போ வந்துடறேன் சாரதாம்மா..” என்று விட்டு எழுந்து சென்றான். முதல் தளத்தில் உள்ள கேண்டினுக்கு சென்று அவருக்கு சூடாக காபி வாங்கிக்கொண்டு திரும்பினான். 
 
 
“முதலில் இதை குடிங்க, கொஞ்சம் தெம்பா இருக்கும்..” என அவரிடம் தாரக் காபியை நீட்டவும், மறுப்பாக அவனைப் பார்த்தார் சாரதா. “சாரதாம்மா சொன்னா கேளுங்க, ஐயாவுக்கு இப்போ ஆபத்து எதுவுமில்லைன்னு டாக்டரே வந்து சொல்லியாச்சு இல்லை, இன்னும் என்ன..? கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சுடுவார்.. நாம அப்போ அவரை போய் பார்க்கலாம்..” என்று சமாதானமாக பேசியபடியே மீண்டும் அவரிடம் காபியை தாரக் கொடுக்க முயன்றான்.
 
 
அப்போதும் மறுப்பாக தலையசைத்தவர், “நான் ஒருமுறை அவரை பார்த்து பேசிடறேன் தீபன் தம்பி, அப்போ தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.. அதுவரைக்கும் எனக்கு எதுவும் வேண்டாம்..” என்றார் சாரதா.
 
 
“அதெல்லாம் பார்த்து பேசலாம் சாரதாம்மா, ஆனா இப்போ நீங்க எப்படி இருக்கீங்க தெரியுமா..? பக்கத்து பெட்டில் அட்மிட் செய்யற மாதிரி இருக்கீங்க.. முதலில் காபியை குடிங்க, இல்லை ஐயா கண்விழிக்கும் போது நீங்க மயங்கிடுவீங்க.. அப்புறம் அவருக்கு யார் பதில் சொல்றது..? உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அவருக்கு எப்படி இருக்கும்னு யோசிங்க..” என்று சொல்லவும் தயக்கத்தோடு காபியை வாங்கிக் கொண்டார் சாரதா. 
 
 
ஆனாலும் அவர் குடிக்காமல் இருப்பதைக் கண்ட தாரக் “நிஜமாவே ஐயாவுக்கு எதுவுமில்லை சாரதாம்மா, சீக்கிரம் கண் விழிச்சுடுவார் கவலைப்படாதீங்க.. இங்கே நிறைய நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க, தைரியமா இருங்க.. ஐயா ஹாஸ்பிடலில் இருக்கும் போது பக்கத்தில் இருந்து நான் தான் பார்த்துக்குவேன்னு நீங்க அடம் வேற செய்யறீங்க.. அதுக்கு நீங்க முதலில் தெம்பா இருக்கணும் இல்லை, குடிங்க..” என்று லேசான மிரட்டலோடு தாரக் சொல்லவும், மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக அந்த காபியை குடித்தார் சாரதா. 
 
 
அதன் பிறகே அவர் முகத்தில் கொஞ்சமாக தெளிவு வந்தது. அதை கண்டு நிம்மதியானவன், “கீழே கெஸ்ட் ரூம் புக் செஞ்சு இருக்கேன், நீங்க வேணும்னா அங்கே போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்ததுக்கறீங்களா..? நான் இங்கே பார்த்துக்கறேன்..” என்றான் தாரக். 
 
 
“ஐயோ அதெல்லாம் வேண்டாம் தம்பி, அவர் கண்ணு விழிக்கும் வரைக்கும் என்னால் நிம்மதியா இருக்கவே முடியாது.. நான் இங்கேயே இருக்கேன், நீங்க வேணும்னா போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க..” என்றவர், அதன் பிறகே நினைவு வந்தவராக “ஏதாவது முக்கியமான வேலையா இருந்தீங்களா தம்பி, உங்களை தொந்தரவு செஞ்சுட்டேனா..?” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் கேட்டார். 
 
 
“என்ன சாரதம்மா இது..? நீங்க வேற நான் வேறயா..! இதெல்லாம் எனக்கு தொல்லையா..?” என்றவன் அடுத்து பேச வார்த்தை வராமல் அப்படியே அமைதியானான்.
 
 
மீண்டும் அன்றைக்கு எங்களால் தானே இதெல்லாம் என ஆரம்பித்து எதையாவது தாரக் பேச போய் அந்த நினைவுகள் மேலெழுந்து வந்தால் சாரதா உடைந்தே போவார் என்றறிந்தே அதை தவிர்த்தான் தாரக்.  
 
 
அதே நேரம் இங்கு தாரக் வெளியேறியதை உறுதி செய்து கொண்டிருந்த முத்து, தன் ஆட்களோடு வீட்டிற்குள் புகுந்து சிந்துவை கொல்ல திட்டமிட்டான்.
 
 
இங்கு வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பான் என்றறிந்திருந்த முத்து அதை வைத்து ஒரு திட்டத்தோடு வந்திருக்க.. உள்ளே வேறு சில ஆட்களும் இருப்பது தெரிந்தது. “என்ன முத்துண்ணே, வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பான்னு சொன்னீங்க..? வேற யாரோ உள்ளே இருக்காங்களே..!” என்றான் உடன் வந்திருந்த குரு.
 
 
“இருந்தா என்னடா..? நாம பத்து பேர் இருக்கோம், அவங்களை சமாளிக்க முடியாதா..! கையில் பொருள் எல்லாம் வேற இருக்கில்லை..” என்று சிடுசிடுத்தான் முத்து. 
 
 
“அதுக்கு இல்லண்ணே..” என்று இன்னொருவன் இழுக்கவும், “எதுக்கும் இல்லை, வந்த வேலையை ஒழுங்கா முடிக்க பாருங்க.. இன்னைக்கு மட்டும் இதை முடிக்கலைனா நாம நாகராஜன் அண்ணே முகத்திலேயே முழிக்க முடியாது, புரியுதா..” என்று எரிச்சலோடு கத்தினான் முத்து. 
 
 
அதில் வேறு எதுவும் பேசாமல் மற்றவர்கள் அமைதியாகிவிட, கொஞ்சம் இருள் கவிழ தொடங்கிய பின் தாக்குதலை நடத்தினால் சரியாக இருக்கும் என்று எண்ணி காத்திருக்க தொடங்கினான் முத்து. 
 
 
இதற்கிடையில் முத்துவை தொடர்பு கொள்ள முடியாமல் போனதில் அங்குள்ள தன் ஆட்களின் மூலம் முத்துவோடு சென்றிருந்த குருவை தொடர்பு கொண்டார் நாகராஜன். 
 
 
“ஐயா..” என பவ்யமாக குரு அழைப்பை ஏற்று பேசத் தொடங்க “எங்கேடா போய் தொலைஞ்சான் அந்த முத்து..? நேத்திலிருந்து போனை காணோம்..” என்று நாகராஜன் சிடுசிடுக்க.. “ஐயா முத்து அண்ணே போன் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு.. அதனால் தான் லைன் கிடைக்கலைன்னு நினைக்கறேன்.. இதோ இங்கே தான் இருக்கார் கொடுக்கறேன்..” என்று மறைவாக நின்றிருந்த முத்துவிடம் கொண்டு சென்று குரு அலைபேசியை கொடுத்தான்.
 
 
நாகராஜன் அழைப்பில் இருப்பதை அறிந்து அதை வாங்கியிருந்த முத்து “அண்ணே..” என பணிவான குரலிலேயே அழைக்கவும், அவன் குரல் கேட்பதற்காகவே காத்திருந்தது போல் “ஏன்டா போன் உடைஞ்சதுனா வேற போனை யார்கிட்டயாவது வாங்கி பேசுறதுக்கு என்ன..? இல்லைனா போன விஷயம் என்னாச்சுன்னு எனக்கு எப்படி தெரியும்..?” என்று கோபப்பட்டார் நாகராஜன். 
 
 
அதில் இரு நொடிகள் அமைதியாக இருந்த முத்து “இல்லை ண்ணே, வேலையை முடிச்சுட்டு தான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.. திரும்பத் திரும்ப உங்களுக்கு நம்பிக்கையை மட்டும் கொடுத்துட்டு இருக்கிறது எனக்கே என்னமோ மாதிரி இருக்கு.. நீங்க கொடுத்த வேலையை முடிச்சுட்டேன்னு சொல்லணும், அதுதான் இப்போ என் நோக்கம்.. அதனால் தான் நான் உங்களுக்கு கூப்பிடவே இல்லை..” என்றான்.
 
 
அவனின் இந்த பதில் கொந்தளித்துக் கொண்டிருந்த நாகராஜனை கொஞ்சம் அமைதியாக்கியிருந்தது. பல வருடங்களாக முத்துவை அறிந்திருந்தவர் என்பதால் அவனின் விசுவாசத்தை பற்றியும் நன்றாகவே அவருக்குத் தெரியும். 
 
 
அதில் தனக்காக தான் இவ்வளவும் யோசித்து செய்கிறான் எனப் புரிந்து அமைதியான நாகராஜன், “சரி என்ன திட்டத்தோட கிளம்பி போயிருக்கே..?” என்று கேட்கவும், “இல்லை ண்ணே, இப்போ நான் எதையும் சொல்ல விரும்பலை.. செஞ்சு முடிச்சுட்டு வந்து இப்படி செஞ்சேன்னு விலாவாரியா சொல்றேன்..” என்றான் முத்து. 
 
 
அவன் குரலில் இருந்த நம்பிக்கை அவருக்கு இந்த முறை முத்துவின் குறி தப்பாது என்ற எண்ணத்தை கொடுக்க.. “சரி என்னமோ சொல்றே பார்ப்போம்..” என்று அப்போதும் தன் மிடுக்கு குறையாமலேயே பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார் நாகராஜன்.
 
 
அப்போதே தோப்பில் இருந்து வந்திருந்த அருண் குத்தகை பணம் சம்பந்தமாக பேசுவதற்காக நாகராஜனின் அறைக்குச் செல்ல.. உள்ளே முத்துவோடு அவர் பேசிக் கொண்டிருந்த அத்தனையும் அவனுக்கு கேட்டது. இதைக் கேட்டு திகைத்தவன், உடனடியாக அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்குள் சென்று வேகமாக கதவடைத்துக்கொண்டான். 
 
 
அவசரமாக அவன் தாரக்கை அழைக்க முயல, முதன்முறை இணைப்பு கிடைக்கவே இல்லை. மீண்டும் அவன் விடாமல் முயற்சிக்கவும் இந்த முறை அழைப்புச் செல்ல.. தாரக்கும் உடனே அதை ஏற்றிருந்தான். 
 
 
“சொல்லு அருண்..” என்று அவன் தொடங்கவும், “மாமா எங்கே இருக்கீங்க..? அங்கே சேஃப் தானே..!” என்று பதட்டத்தோடு ஒலித்த அருணின் குரலில் நெற்றியை சுருக்கியவன், “என்னாச்சு..?” எனவும் “முத்து அங்கே வந்திருக்கான், ஏதோ பெருசா பிளான் செய்யறான்னு நினைக்கறேன்.. அப்பாகிட்ட இப்போ தான் பேசிட்டு இருந்தான், முழுசா என்ன விவரம்னு எனக்கு தெரியலை.. எதுக்கும் நீங்க சேஃபா இருங்க, சிந்துவை பத்திரமா பார்த்துக்கோங்க.. என்னால் இப்போ உடனே கிளம்பி வரவும் முடியாது, உங்களுக்கு நிலைமை புரியுதா..?” என்று அவன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தந்தி போல் வேகமாக சொல்லி முடித்தான் அருண். 
 
 
இதில் அருணின் குரலில் இருந்த பதட்டம் தாரக்கிற்கும் தொற்றிக்கொள்ள.. சட்டென எழுந்து நின்றவனை சாரதா புரியாமல் பார்த்தார். அலைபேசியை அணைத்து சட்டை பையில் போட்டுக் கொண்டே “சாரதாம்மா ஒரு அர்ஜென்ட் வேலை, நான் போயாகணும்.. ராமை இங்கே வர சொல்றேன், நான் திரும்ப வர வரைக்கும் உங்களுக்கு துணைக்கு அவன் இருப்பான்.. அவன் இங்கிருந்து போக மாட்டான், நான் கண்டிப்பா சீக்கிரம் வந்துடறேன்..” என்றவனின் உடல் மொழியே அவனின் பதட்டத்தை புரிய வைக்க போதுமானதாக இருக்க.. சரி என்று மட்டும் தலையசைத்தார் சாரதா. 
 
 
அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக அங்கிருந்து கிளம்பி இருந்தவன், புயல் வேகத்தில் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்க.. அதே நேரம் முத்து தன் ஆட்களோடு தாரக்கின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்திருந்தான்.  
 
 
வாட்ச்மேன் சாப்பிட சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தவர்களை, ஒரு நொடி திகைத்துப் பார்த்தாலும் உடனடியாக செயலில் இறங்கினர் அங்கு இருந்த பாதுகாவலர்கள்.
 
 
இதைக் கண்டு பதறிப் போன வாட்ச்மேன் காவல்துறைக்கு அழைத்திருக்க.. உமாவோ பதட்டத்தோடு செய்வதறியாமல் திகைத்து நின்றார். அதில் வாயிற்கதவை உள்பக்கம் தாழிட்டுக்கொள்ள சொல்லி அவருக்கு கட்டளையிட்ட பாதுகாவலர்களின் தலைவன் முழு வேகத்தில் செயல்பட்டான். 
 
 
கையில் ஆயுதங்களோடு வந்தவர்களை எதிர்ப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தாலும் இதற்காகவே பயிற்சி பெற்றிருந்தவர்கள் என்பதால் அதை திறமையாகவே செய்து கொண்டிருந்தனர்.
 
 
இந்த சத்தம் கேட்டு கீழே வந்த சிந்து “என்னாச்சு என்ன இங்கே சத்தம்..?” எனவும், “நீங்க இங்கே ஏன் வந்தீங்க மேடம்..? மேலே போங்க, இங்கே வராதீங்க மேடம்..” என்று அவளை பாதுகாக்க முயன்றார் உமா. 
 
 
அதில் மேலும் குழம்பிய சிந்து பிரெஞ்சு விண்டோவில் எட்டிப் பார்க்க முயல.. அவளை தடுத்து “நீங்க உள்ளே போங்க மேடம், எதுவும் பிரச்சனையாகிட போகுது..” என்றார் உமா. 
 
 
இப்போதே நடக்கும் விபரீதம் சிந்துவுக்கு புரிய, ‘இது தனக்கான தாக்குதல்’ என உணர்ந்தவள் “ஐயையோ இங்கேயும் வந்துட்டாங்களா..?” என பதற, “நீங்க பயப்பட வேண்டாம், வெளியே பாதுகாப்புக்கு ஆளுங்க இருக்காங்க.. அவங்க இதையெல்லாம் பார்த்துப்பாங்க, நீங்க தயவு செஞ்சு ரூமுக்குள்ளே போய் கதவை மூடிக்கோங்க.. இப்போதைக்கு அது போதும்..” என்றார், தன் பயத்தை வெளி காண்பித்துக் கொள்ளாமல் சிந்துவை தைரியப்படுத்தும் முயற்சியில் உமா. 
 
 
ஆனால் அந்த முயற்சி எவ்வளவு தூரம் பலனளித்தது என தெரியவில்லை. சிந்து அப்படியே அசையாமல் மிரட்சியோடு நின்றிருக்க.. “மேடம் ப்ளீஸ் நீங்க இங்கே இருக்கறது தான் பிரச்சனை, உள்ளே போயிடுங்க.. எதுவா இருந்தாலும் சார் பார்த்துப்பார்..” என உமா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே அலறல்களும் பொருட்கள் உடையும் சத்தமும் பலமாக கேட்டது. 
 
 
இதில் சிந்துவின் உடல் வெளிப்படையாக நடுங்கத் தொடங்க.. அவளை அணைவாக பிடித்துக் கொண்ட உமா “வாங்க மேடம், நாம உள்ளே போயிடலாம்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எப்படியோ மாடி சுவர் ஏறி குதித்து பால்கனி வழியே உள்ளே வந்து விட்டிருந்தான் முத்து. 
 
 
அவன் கையில் அருவாளோடு வந்து நின்றதை கண்டு சிந்து விழிகள் விரிய திகைத்து நிற்க.. “இதோ இந்த நொடிக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன், உன் உயிர் என் கையில் தான் போகணும்னு இருக்கு போல.. என்ன இருந்தாலும் நாகராஜன் அண்ணே பொண்ணு, அதோட நான் தூக்கி வளர்த்த பொண்ணாச்சேனு தான் உன்னை என் கையால் முடிக்க வேண்டாம்னு நினைச்சு அவனுங்ககிட்ட பொறுப்பை கொடுத்தேன்.. ஆனா அது எவ்வளவு தப்புன்னு நல்லா புரிய வெச்சுட்டே.. 
 
 
நான் அண்ணனுக்காக எதுவும் செய்வேன், அவர் ரத்தத்தை வெட்டி சாய்க்க மாட்டேனா என்ன..? அது தான் அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கும்னா தாராளமா செய்வேன், இதை நான் என்னைக்கோ செஞ்சுருக்கணும்.. தப்பு செஞ்சுட்டேன், சின்ன சறுக்கல்.. அதனால் என்ன இப்போ அதை பெருசா சரி செஞ்சுடலாம்.. 
 
 
உன்னை முடிச்சுட்டேன்னு அண்ணேகிட்ட சொன்னா போதும் இந்த உலகத்திலேயே அந்த நிமிஷம் சந்தோஷமா இருக்க மனுஷன் அவரா தான் இருப்பார்.. அந்த சந்தோஷத்தை அவருக்கு கொடுத்தே ஆகணும், இது தான் என் இப்போதைய ஒரே லட்சியம்..” என்று பேசியபடியே ஒவ்வொரு அடியாக எடுத்து முன்னே வைத்து அவளை நெருங்கினான் முத்து. 
 
 
அவன் ஒவ்வொரு அடி முன்னே வைக்கவும், சிந்து ஒவ்வொரு அடியாக பின்னே வைத்து நகர்ந்தாள். உமாவும் மிரண்டு போய் சிந்துவை தன் கை வளைவில் வைத்தபடியே அவளை எப்படியாவது காப்பாற்றி விட முயன்றார்.
 
 
அவர்களின் அந்த முயற்சியை ஒரு கோணல் சிரிப்போடு பார்த்தபடியே முன்னே வந்த முத்து, “இனியும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்னு நினைக்கறியா..?” என்று கேட்டு ஒரு மாதிரியாக சிரித்தான். 
 
 
பின்னே நகர்ந்து கொண்டிருந்த சிந்து சுவரில் மோதி அதற்கு மேல் நகர முடியாமல் அப்படியே நிற்கவும், அவளுக்கு இதுதான் தன் இறுதி நொடி என தெளிவாக புரிந்து போனது. அதில் ‘தன்னோடு சேர்ந்து ஒரு பாவமும் செய்யாத உமாவும் ஏன் பலியாக வேண்டும்..?’ என்று மட்டும் தோன்ற.. அவர் எதிர்பாரா நேரத்தில் உமாவை பிடித்து வேகமாக தன்னிடம் இருந்து தள்ளி விட்டிருந்தாள் சிந்து. 
 
 
இதில் நிலைகுலைந்து தரையில் சரிந்த உமா அதிர்வோடு சிந்துவை பார்க்கவும், அவருக்கு எதிர் திசையில் வேகமாக ஓடியவளை முத்து அதே வேகத்தில் துரத்தி, அங்கிருந்து சுவரின் ஓரம் அவளை எந்த பக்கமும் நகர முடியா வகையில் இரு கைகளையும் வைத்து தடுத்திருந்தான் முத்து.
 
 
“உனக்கு என் உயிர் தானே வேணும், தாராளமா எடுத்துக்கோ.. என்னை தவிர யாரையும் காயப்படுத்தாதே, இங்கே இருக்க யாரும் எந்த தப்பும் செய்யலை..” என்று கையெடுத்து கும்பிட்டாள் சிந்து. 
 
 
உமாவை தள்ளிவிட்டு அவள் தப்பிக்க முயல்வதாக எண்ணியே வேகமாக அறிவாளை ஓங்கிக் கொண்டு அவளை நெருங்கிய முத்து, சிந்துவின் இந்த சரணாகதியில் ஒரு நொடி அப்படியே உயர்த்திய அருவாளை நிறுத்தி அவளை பார்த்தான். 
 
 
‘என்னை எதுவும் செஞ்சுடாதீங்க..’ என்று அழவோ.. தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சவோ இல்லை, மரணத்தை எதிர்ப்பின்றி ஏற்க தயாராகும் அவளின் இந்த நிலை அவனை அந்த நிலையிலும் வியக்க வைத்தது. “என்ன இருந்தாலும் நாகராஜ் அண்ணே ரத்தமாச்சே..! அதான் வீரம் பிறப்பிலேயே உடம்பில் ஊறி இருக்கு..!” என்று அதையுமே பெருமையாக பேசினான் முத்து.
 
 
ஆனால் அதற்கெல்லாம் எதிர்வினையாற்றும் நிலையில் இல்லாத சிந்து, தன்னை கொன்று விட்டு சந்தோஷமாக செல் என்பது போல் கைகூப்பி அவன் முன் தலை குனிந்து நிற்க.. அவளின் அந்த நிலை அவனை நினைத்ததை உடனே செய்யவிடாமல் தடுத்தது.
 
 
அவன் உள்ளே வந்த வேகத்திற்கு அப்போதே வெட்டி வீழ்த்தி இருந்தால் இந்த தயக்கம் துளியும் அவனிடமிருந்து இருந்திருக்காது.  
ஆனால் இத்தனை வருடங்களாக பீதியில் உறைந்த முகமும் கண்ணீர் வழியும் விழிகளும், தங்களை விட்டு விடுமாறு கெஞ்சும் குரல்களையும் கேட்டபடியே, உயிர்களை ரத்த வெறியோடு வேட்டையாடிக் கொண்டிருந்த ஒருவனுக்கு மரண பயம் துளியும் தெரியாத அந்த விழிகளும் முகமும் தன்னை கொன்று விட்டுப் போ என்ற ஒப்புதலும் ஏதோ ஒரு தயக்கத்தை கொடுத்தது. 
 
 
இப்படி ஒரு கொலையை இதற்கு முன் அவன் செய்ததில்லை என்பதனால் வந்த தயக்கமோ, என்னவோ..? ஆனால் உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்களுக்கு எங்கிருந்து எதிர்ப்பு வரப்போகிறது. 
 
 
தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவளுள் அந்த நொடி மிச்சம் இருந்தது. சற்று முன் வெளியில் இருந்து கேட்ட சத்தங்கள் எல்லாம் அவளுள் உண்டாக்கி இருந்த பயம், தனக்காக யாரின் உயிரும் போகக்கூடாது.. அதற்கு பதில் தன் உயிர் போனால் பரவாயில்லை என்ற எண்ணத்தை கொடுத்திருக்க.. துளியும் யோசிக்காமல் அதற்கு தயாராகி விட்டிருந்தாள் சிந்து. 
 
 
அதற்குள் தன் தயக்கத்தை எல்லாம் உதறி எதற்காக இங்கு வந்தானோ அதை செயல்படுத்த முயன்ற முத்து ஓங்கிய அருவாளை சிந்துவின் கழுத்தில் இறக்க இருந்த நொடி, அவன் வலது தோள்பட்டையில் ஒரு குண்டு இறங்கி இருந்தது.
 
 
அதில் அவன் அலறி சரிய, விழிமூடி நின்றிருந்த சிந்து தன் முகத்தில் தெரித்திருந்த ரத்த துளியிலும் முத்துவின் அலறலிலும் கண்களை திறந்து பார்த்தாள்.
 
 
அவளுக்கு நேர் எதிரே வெளி வாயிற்கதவுக்கு அருகில் தாரக் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். மனதில் உண்டாகியிருந்த பயத்திலும் தன் முன் ரத்த வெள்ளத்தில் ஒருவன் சரிந்து கிடப்பதை கண்டதிலும் சிந்துவிற்கு மயக்கம் வந்து விட, அப்படியே அவள் தள்ளாடி பின்னே சரிந்தாள். அதை கண்டு வேகமாக வந்து அவளை தாங்கி பிடித்திருந்தான் தாரக்.
 
 
அதற்குள் உமாவும் எழுந்து ஓடி வந்து விட, சிந்துவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தான் தாரக். வேகமாக உமா கொண்டு வந்திருந்த தண்ணீரை வாங்கி அவள் முகத்தில் தெளித்தவன், “செந்தூரிகா.. ரிலாக்ஸ் யூ ஆர் சேஃப், ரிலாக்ஸ் உனக்கு எதுவுமாகலை.. இங்கே எந்த பிரச்சனையும் இல்லை, எல்லாமே முடிஞ்சு போச்சு.. யூ ஆர் சேஃப்..” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். 
 
 
ஆனால் அவளிடம் துளியும் அசைவில்லை. அதில் செய்வதறியாது திகைத்தவன், உடனே மருத்துவரை அழைக்க நினைக்க.. “அதிர்ச்சியில் தான் சார் மயங்கி இருக்காங்க, வேற எதுவுமில்லை பயப்படாதீங்க..” என்றார் உமா.
 
 
அதற்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்தவன், மீண்டும் மீண்டும் அவளை தண்ணீர் தெளித்து கன்னத்தில் லேசாக தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.
 
 
அதற்குள் வாட்ச்மேன் அளித்திருந்த தகவலோடு, வரும் வழியில் தன் காவல்துறை நண்பனின் மூலம் தாரக்கும் புகாரளித்திருந்ததால் கொஞ்சம் வேகமாகவே காவலர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.
 
 
அங்கிருந்த சூழ்நிலையை கண்டு தங்கள் மேல் அதிகாரிக்கு அவர்கள் தகவல் தெரிவிக்க.. அவர்கள் கொடுத்த கட்டளையின்படி காவலர்கள் செயல்படத் தொடங்கி இருந்த அதே நேரம் சிந்துவிடம் லேசாக அசைவு தெரிந்தது. 
 
 
அதில் அவன் பரபரப்பாக அவளை பார்க்க.. மெல்ல விழிகளை திறந்த சிந்து தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்ததும் பதறி எழுந்தாள். அதைக் கண்டு “ஹேய் ரிலாக்ஸ், பிராப்ளம் எதுவுமில்லை.. எல்லாம் சால்வ்ட்..” என்றான் தாரக். 
 
 
ஆனால் அவனின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் சம்பந்தம் இல்லாத குரலில் “ஏன் அவரை சுட்டிங்க..?” என்றாள் சிந்து. 
 
 தொடரும்..
 
 இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 கவி சந்திரா


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 425
Topic starter  
 
 
நேசம் - 33
 
இவ்வளவு எழுப்பியும் அவளிடம் கொஞ்சமும் அசைவில்லாததை கண்டு உண்டான பதட்டத்தோடு தாரக் அமர்ந்திருக்கும் போதே கண்விழித்தவளை, அவளின் மயக்கத்திற்கான காரணம் உணர்ந்து தாரக் அமைதிப்படுத்த முயன்று பேசிக்கொண்டு இருக்க.. அதற்கு நேர் மாறான குரலில் “ஏன் அவரை சுட்டிங்க..?” என்றாள் சிந்து. 
 
 
அதில் புரியாமல் அவளைப் பார்த்தவாறே, “அவன் உன்னை வெட்ட வந்தான்..” எனவும் “அதனால் என்ன..? அதுக்காக அவரை சுடுவீங்களா..! என்னை தானே வெட்ட வந்தார், வெட்டிட்டு போகட்டுமே..!” என்றாள் சிந்து. 
 
 
அவள் பேசுவது அவனுக்கு குழப்பத்தை கொடுக்க.. “உனக்கு தலையில் எங்காவது அடிபட்டு இருக்கா..?” என்று அக்கறையோடு சிந்துவிடம் அவன் விசாரிக்க.. “என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கா உங்களுக்கு..? நான் நிஜமாகவே கேட்டுட்டு இருக்கேன்..” என்றாள் சிந்து.
 
 
அதில் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “நான் சுடலைனா அவன் உன்னை கொன்னு இருப்பான்..” என்று எரிச்சலோடு சொல்லவும், “கொல்லட்டுமே..! கொன்னுட்டு போகட்டுமே..!! இதுக்காக தானே இத்தனை அமர்க்களமும் நடக்குது, என்னை கொன்னுட்டா எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க இல்லை.. என் ஒரு ஆளுக்காக எத்தனை பேர் இன்னும் கஷ்டப்படணும்..? எனக்காக இன்னும் எத்தனை உயிர் போகணும்..? அப்படி என் உயிரை காப்பாத்த யாரும் உயிரை விடறதில் எனக்கு விருப்பமில்லை..” என்றாள் சிந்து. 
 
 
அதில் அவளை தாரக் விழிகளை சுருக்கி பார்க்கவும், “அவர் இப்.. இப்போ எப்படி இருக்கார்..?” என்றாள் கவலையோடு சிந்து. “அவன் உயிருக்கெல்லாம் எந்த ஆபத்தும் இல்லை..” என்று வெறுப்போடு கூறினான் தாரக்.
 
 
“நிஜமாவா..!” என்று நம்பாமல் சிந்து அவனை பார்க்கவும் “உன்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை, அவன் உயிரை எடுக்கறது என் நோக்கமும் இல்லை.. உன் உயிரை காப்பாத்தறது மட்டும் தான்..” என்றவனின் குரல் இறுகி இருந்தது. 
 
 
அதில் அமைதியானவள் “போதும் இதையெல்லாம் முடிச்சுக்கலாமே..!” எனவும், அவளை புரியாமல் பார்த்தான் தாரக். “எனக்கு ஓடி ஒளிஞ்சு ரொம்ப டயர்டா ஆகிடுச்சு, அவங்களுக்கு வேண்டியது நான்.. என் உயிர்.. அவ்வளவு தானே, நானே போயிடறேன்..” என சிந்து சொல்லி முடிக்கவும், “என்ன பேசிட்டு இருக்கேன்னு புரியுதா உனக்கு..?” என்றான் எரிச்சலோடு தாரக்.
 
 
“நல்லா புரிஞ்சு தான் பேசுறேன், என் உயிரை காப்பாத்த இன்னும் எத்தனை உயிர் போக போகுது.. இதெல்லாம் வேண்டாம், அவங்களுக்கு வேண்டியது நான் மட்டும் தானே.. என்னை கொன்னுட்டா அமைதியாகிடுவாங்களா..?” என்றாள் சிந்து. 
 
 
“சோ நீ தியாகியாகலாம்னு முடிவு செஞ்சுட்டே..!” என்றான் தாரக். “இல்லை, எனக்காக யாரும் தியாகியாக வேண்டாம்னு சொல்றேன்..” என்றவளை இரு நொடிகள் அமைதியாக பார்த்தவன் “ஒரு உயிர் போறது உனக்கு அவ்வளவு ஈஸியா போச்சா..?” என்றான். 
 
 
“இல்லை தான், ஆனா எல்லாருக்கும் அது தானே வேணும்..! அதை கொடுத்துட்டா இத்தனை பிரச்சனையும் அமர்க்களமும் இருக்காதே..! ஒவ்வொரு நாளும் இப்படி பதட்டத்திலும் பயத்திலும் போறதுக்கு ஒரே நாளில் எல்லாம் முடிஞ்சுடும் இல்லையா..!!” என சொல்லிக் கொண்டிருந்தவள், திடீரென தன் பேச்சை நிறுத்தி தாரக்கை ஒரு நொடி பார்த்து “ஏன் உங்களுக்கும் அதானே வேணும்..? ஆரம்பத்தில் நீங்களும் அப்படித்தானே இருந்தீங்க..!” என்றாள்.
 
 
“இல்லை ஒரு உயிர் போறது எவ்வளவு வலியை கொடுக்கும்னு என்னை விட அதிகம் யாருக்கும் தெரியாது.. அப்புறம் எப்படி நானே இன்னொரு உயிர் போகணும்னு நினைப்பேன்..? என்னைக்கும் அப்படி நான் நினைக்க மாட்டேன், அவ்வளவு ஏன் எங்களுக்கு இவ்வளவு கொடுமையை செஞ்ச உங்க அப்பாவை கூட நான் அப்படி நினைச்சதில்லை.. வாழ்க்கை முழுக்க அவர் குற்ற உணர்விலும் மன நிம்மதி இல்லாமலும் துடிக்கணும்னு மட்டும் தான் யோசிச்சேன்..” என்றான் உறுதியான குரலில் தாரக்.
 
 
அதில் அமைதியானவளுக்கும் அன்று தன்னைக் காப்பாற்ற தாரக் வந்தது நினைவில் இருந்தது. தன் உயிர் போக வேண்டும் என தாரக் நினைத்திருந்தால் நிச்சயம் வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என புரிய.. பதிலேதும் பேசாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள் சிந்து. 
 
 
அவளையே சில நொடிகள் அமைதியாக பார்த்திருந்தவன், “இதெல்லாம் எங்கே எப்படி தொடங்குச்சுன்னு உனக்கு தெரிஞ்சா தான் என்ன நடக்குதுன்னு உனக்கு புரியும்.. இன்னொரு முறை இப்படி பேசிட்டு இருக்காதே.. நீயே எல்லாம் தெரிஞ்சுக்க தானே நினைச்சே, நாளைக்கு எல்லாம் சொல்றேன் வெளியில் போகணும் தயாரா இரு..” என்று விட்டு எழுந்து சென்றான் தாரக்.
 
 
அவன் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த சிந்து அமைதியாக விழிமூடி சரிந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு அடி வயிறு வலிக்க தொடங்கியது. 
 
 
இரண்டு மாதமாகவே இப்படி தான் விட்டு விட்டு வயிறு வலித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் லேசாக இருந்த வலி போகப் போக அதிகமாகிக் கொண்டே செல்வது போல் அவளுக்கு தோன்றியது. அதில் விழிமூடி இதழை அழுத்தமாக மடித்து வலியை பொறுத்துக் கொள்ள முயன்றாள் சிந்து.
 
 
அதேநேரம் வெளியில் வந்த தாரக்கை நெருங்கி “சிவேஷ் சார்கிட்ட பேசிட்டேன், உங்ககிட்ட கேட்டுட்டு நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி கேஸ் எழுதிக்க சொன்னார்.. என்ன செக்ஷனில் இவங்களை உள்ளே போடணும் சார்..?” என்றார் கொஞ்சம் பவ்யமான குரலிலேயே இன்ஸ்பெக்டர். 
 
 
அதில் போலீஸ் வாகனம் பக்கம் தாரக் பார்வையை திருப்பவும், அடி வாங்கி எழுந்து கொள்ள முடியா நிலையில் சுருண்டு கிடந்தவர்களை எல்லாம் தூக்கி உள்ளே போட்டு இருப்பது தெரிந்தது. இன்னொரு பக்கம் முத்துவை ஆம்புலன்ஸில் ஏற்றுக் கொண்டிருந்தனர். 
 
 
இதையெல்லாம் வெறுமையாக பார்த்த தாரக் “சமீபமா நார்த் சைட்டில் இருந்து சில முகமூடி கொள்ளைக்காரர்கள் அடிக்கடி வந்து போறதா ஒரு தகவல் பரவி இருக்கில்லை..” எனவும் “ஆமாம் சார், அவங்க கை வைக்கும் இடம் எல்லாம் கொஞ்சம் பெரிய இடமா தான் இருக்கு.. வெறும் கொள்ளை மட்டுமில்லை, கொலையும் சர்வசாதாரணமாக செய்யறாங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“அதில் ஒரு கும்பல் தான் இவங்கன்னு கேஸ் போட்டுடுங்க..” என்று அலட்டிக் கொள்ளா குரலில் தாரக் சொல்லிவிட, சிறுத்திகைப்போடு அவனைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். 
 
 
இதுவரை அவர்கள் மேல் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் பட்டியல் மிகப்பெரியது. அதோடு இதை செய்து கொண்டிருப்பவர்கள் ஒரே குழு இல்லை என்ற சந்தேகமும் பரவலாக அனைவருக்கும் எழுந்திருந்தது. 
வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கூட சில நேரங்களில் தாக்குதல் நடந்திருக்கும். இதுவே பல குழுக்கள் இணைந்து செய்யும் ஒரு செயலாகவோ, இல்லை பல குழுக்கள் தனித்தனியாக செயல்படும் ஒரு முறையாகவோ இருக்கலாம் என்று யோசித்து, காவல்துறையில் பொதுவாக அவர்களை வடக்கு முகமூடி கொள்ளைக்காரர்கள் என்று அடையாளப்படுத்தி இருந்தனர். 
 
 
இந்த வழக்கில் பிடிபடுபவர்களால் அவ்வளவு எளிதாக வெளியில் வர முடியாது. அத்தனை கொலை வழக்குகளும் கொள்ளை வழக்குகளும் அவர்கள் மேல் உள்ளது. 
 
 
இதில் உண்டான திகைப்போடே இன்ஸ்பெக்டர் தாரக்கை பார்க்க.. அவரின் பார்வையை உணர்ந்தாலும் தாரக் கண்டு கொள்ளாதது போல் நின்றிருந்தான். காவல் வாகனத்தில் இருந்தவர்களை ஒருமுறை திரும்பி பார்த்த இன்ஸ்பெக்டர் “ஆர் யூ ஷுயர்..?” என்றார். 
 
 
அதற்கு வார்த்தைகளில் இல்லாமல் விழி அசைவில் மட்டும் தாரக் ‘ஆம்’ என சொல்ல.. இதற்கு மேல் பேச எதுவுமில்லை என்று உணர்ந்தவராக அங்கிருந்து நகர்ந்தார் இன்ஸ்பெக்டர். ஓரளவு தாரக்கின் செல்வாக்கை பற்றி முன்பே அறிந்திருந்தவர் என்பதோடு இன்று நேரடியாக உயர் அதிகாரியிடம் இருந்து வந்த கட்டளையும் சேர்ந்து அமைதியாக தாரக் சொன்னதை அப்படியே செய்ய வைத்தது.
 
 
******
 
 
மறுநாள் காலை சோர்வாக இருந்தாள் சிந்து. நேற்றைய பாதிப்பு இன்னும் அவளுள் மிச்சமிருப்பதை உணர்ந்தவனாக எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தான் தாரக்.
 
 
நேற்று வெளியில் செல்ல வேண்டும் என தாரக் சொல்லி இருந்ததால் சிந்துவும் தயாராகவே காத்திருக்க.. அமைதியாகவே அவர்களின் கார் பயணம் அமைந்தது. தாரக்கின் முகம் எப்போதும் போல் இறுக்கத்தோடு இருக்க.. அவன் விழிகளிலோ பெருமளவு ஏதோ ஒரு தவிப்பு. 
 
 
அதை கவனித்தாலும் பெரிதாக யோசிக்கும் நிலையில் இல்லாத சிந்து சோர்வாக விழிமூடி சாய்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு தாரக்கின் கார் தனாவோடு அவன் வாழ்ந்த வீட்டின் முன்னே சென்று நின்றது.
 
 
அதில் விழிகளை உயர்த்தியவள், எங்கு வந்திருக்கிறோம் என புரியாமல் சோர்வோடு கண்களை சுருக்கி சுற்றும் மற்றும் பார்க்க.. “இறங்கு..” என்பது போல் சைகையில் சொல்லிவிட்டு தாரக் முன்னே செல்ல.. எதுவும் புரியாக் குழப்பத்தோடு அக்கம் பக்கம் பார்த்தபடியே அவனை பின் தொடர்ந்தாள் சிந்து.
 
 
எந்த தயக்கமும் இல்லாமல் வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன், தன்னிடம் உள்ள சாவியை எடுத்து கீழ் வீட்டின் கதவை திறக்கவும் இது யாருடைய வீடு என்பது போல் அவனை சிந்து கேள்வியாக பார்த்திருந்தாள். 
 
 
தன் மன உணர்வுகளோடு போராடியவாறே உள்ளே நுழைந்தவனை கடந்து எதிரில் இந்த சுவரில் சிந்துவின் பார்வை பதிய, அங்கு தாரக் தனா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டிருந்த புகைப்படம் மாட்டப்பட்டிருப்பது தெரிந்தது. 
 
 
சுஜாதாவிடம் இருந்து அவள் கண்டெடுத்திருந்த அதே புகைப்படம். தாரக்கின் பின்னே உள்ளே செல்ல முயன்றவர்களின் கால்கள் அப்படியே நின்றது. இமைக்காமல் சில நொடிகள் இதைக் கண்டவள் அப்படியே காலை திரும்ப பின் இழுத்துக் கொண்டாள். 
 
 
சில நொடிகள் அந்தப் புகைப்படத்தின் முன் சென்று நின்றிருந்தவனின் விரல்கள் வலியோடு அதிலிருந்த தனாவின் முகத்தை வருடியது. இதை கண்டதும் சிந்துவுக்கு கண்களில் இருந்து கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிய தொடங்கியது.
 
 
அவள் தெரிந்து கொள்ள நினைத்தது தான். ஆனால் இப்போது அதைப்பற்றி அறிந்து கொள்ள போகிறோம் என்று எண்ணமே அவளுள் பெரும் பயத்தை விதைத்திருக்க.. மனம் படபடவென வேகமாக அடித்துக் கொள்ள தொடங்கியது. 
 
 
அந்த அழுத்தமும் பதட்டமும் அவளுள் பெரும் தடுமாற்றத்தை உண்டாக்கி இருக்க.. அருகில் உள்ள சுவரை பிடித்துக் கொண்டாள் சிந்து. அதே நேரம் திரும்பி வேதனையான விழிகளோடு அவளைப் பார்த்திருந்தவன், “உள்ளே வா, உன் எல்லா கேள்விகளுக்கும் குழப்பத்துக்கும் இங்கே பதில் கிடைக்கும்..” என்றான். 
 
 
அவளுக்கும் ஓரளவு அதெல்லாம் புரிந்தே இருந்தாலும், அதை எதிர்கொள்ள முடியா பயம் தான் முன்னிலை வகித்தது. உள்ளேச் செல்ல தன் காலை கூட அசைக்காமல் அப்படியே சிந்து நின்றிருக்க.. “நீ தானே தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டே..? உள்ளே வா..” என்றான் மீண்டும் மெல்லிய குரலில் தாரக்.
 
 
இதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் இரும்பென கனத்த தன் காலை எடுத்து உள்ளே சிந்து வைக்க.. அதே நேரம் அவள் பார்வையில் சுவற்றின் ஓரம் தெறித்து காய்ந்திருந்த ரத்தத் துளிகள் பட்டது.
 
 
அதில் அசையாமல் விழி விரிய அப்படியே நின்று விட்டவளினுள், பெரும் நடுக்கம் உண்டானது. ‘தன்னால் இதை தாங்கிக் கொள்ள முடியுமா..?’ என்ற கேள்வி இப்போது சிந்துவுக்கு பெருமளவில் எழ.. கண்ணீர் திரையிட்ட விழிகளோடு திரும்பி தாரக்கை பார்த்தாள் சிந்து.
 
 
அதே நேரம் அவனும் சிந்துவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே வர அவளுள் உண்டான தயக்கத்திலிருந்து இந்த நொடி அவள் உடல் வெளிப்படையாக நடுங்கியது வரை அவனுக்கு தெளிவாகவே புரிந்தது. அதீத வலியும் வேதனையும் அவன் முகத்தில் படர்ந்திருக்க.. ‘என்ன பேசுவது..? யார் எங்கிருந்து எதை தொடங்குவது..!’ என புரியா நிலையில் இருவரும் சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படி நின்றனர். 
 
 
பின் மெல்ல தன் இத்தனை வருட பழக்கத்தில் உண்டான முயற்சியோடு ஓரளவு தன்னை முயன்று மீட்டுக் கொண்டிருந்த தாரக் மெல்லிய குரலில் அனைத்தையும் சொல்லத் தொடங்கினான். அதைக் கேட்க கேட்க சிந்துவிற்கு நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடியது.
 
 
தன் அருகில் இருந்த சுவரை பிடித்துக் கொண்டு தன்னை சமாளித்துக் கொள்ள முயன்றவளால் தனா தன் இறுதி நொடியில் அனுபவித்த துன்பங்களை கேட்ட பிறகு அது முற்றிலும் முடியாமல் போக.. அப்படியே உடைந்து மடங்கி தரையில் அமர்ந்து வெடித்து கதறி அழ தொடங்கினாள் சிந்து. 
 
 
அவளின் நிலையை கண்டு வருந்தியவனாக “செந்தூரிகா, வேண்டாம் அழாதே..!” என்று அவளை மெல்லிய குரலில் தேற்ற முயன்றாலும் தாரக்கின் குரலிலும் அந்த வருத்தத்தின் சுவடு நிறையவே பதிந்திருந்தது.
 
 
ஆனால் இப்படி ஒருவன் தன்னருகில் தனக்காக நின்று பேசிக் கொண்டிருப்பதை கூட உணரும் நிலையில் சிந்து துளியும் இல்லை. அத்தனை அவள் மனம் நடந்தவற்றையெல்லாம் கேட்டு பாதித்திருந்தது. அதோடு அன்று தனக்கு நடக்கவிருந்த கொடுமையும் நினைவுக்கு வந்ததில் உடலும் மனமும் அவளுக்கு உதறி எடுக்கத் தொடங்க.. மூச்சு விடக் கூட சிரமமானது. 
 
 
அதில் வாயைத் திறந்து ஆழ்ந்து சுவாசிக்க போராடி அதற்கும் முடியாமல் போக கண்கள் மேலே சொருகி அவள் நிலை ஒரு மாதிரி மாறிக் கொண்டிருப்பதை அப்போதே உணர்ந்தவன், “ஹே என்னாச்சு..? செந்தூரிகா..” என வேகமாக அவளை நெருங்கி தன் கைகளில் தாங்கி பிடித்தான் தாரக். 
 
 
அப்போதும் அவள் தன் நிலை உணராமல் மூச்சு விட போராடிக் கொண்டிருக்க.. “ஓ ஷிட்..” என்று அவளைக் கண்டு பதறியவனாக சிந்துவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு காரை நோக்கி ஓடினான் தாரக்.
 
 
 தொடரும்..
 
 இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
 கவி சந்திரா 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 425
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 32 & 33(a)
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 

This post was modified 3 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 425
Topic starter  
 
 
நேசம் - 33 (b)
 
சிந்துவின் நிலையைக் கண்டு உண்டான பதட்டத்தோடு வெகு தூரம் அவளை அழைத்துச் செல்ல விரும்பாமல் அருகில் இருந்த சின்ன மருத்துவமனையிலேயே அவளை அனுமதித்திருந்தான் தாரக்.
 
 
அங்கு அப்போது வேலையில் இருந்த பெண் மருத்துவர், சிந்துவை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதித்துக் கொண்டிருக்க.. வெளியே பதட்டத்தோடு காத்திருந்தான் தாரக்.
 
 
திடீரென அவளுக்கு என்ன ஆனது என்றே அவனுக்கு புரியவில்லை. ‘அவள் மார்பை பிடித்துக் கொண்டு துடித்ததில் நெஞ்சு எதுவும் வலிக்கிறதா..? இல்லை மூச்சு விட சிரமமாக இருக்கிறதா..? அதுவும் இல்லையென்றால் வலிப்பு போல் எதுவும் வந்துவிட்டதா..!’ என புரியா குழப்பம் இந்த நொடி வரை அவனுக்கு இருந்தது. 
 
 
காரில் அவளை அழைத்து வரும் போதுமே சிந்துவின் நிலையைக் கண்டு உண்டான பயத்தோடே பயணித்து இருந்தவன், இதற்கு மேலும் நேரம் கடத்த விரும்பாமல் முதலுதவிக்கென இங்கு அழைத்து வந்து விட்டிருந்தான்.
 
 
சிந்துவை பரிசோதித்து விட்டு வெளியில் வந்து மருத்துவர் சொல்லப் போகும் வார்த்தைக்காக அவன் காத்திருக்க.. கொஞ்சம் அதிகமாகவே அவன் பொறுமையை சோதித்து விட்டே வெளியில் வந்தார் மருத்துவர். 
 
 
“எதனால் அவங்களுக்கு இப்படி வந்ததுன்னு சொல்ல முடியுமா..? திடீர்னு என்னாச்சு..?” என அவர் கேட்கவும், “இல்லை, கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டாங்க.. ஒரு ஃபேமிலி இஷ்யூ பத்தி தெரிய வந்ததில் அழுதுட்டே இருக்கும் போது திடீர்னு இப்படி..” என்றான் தாரக். 
 
 
“அவங்களைப் பார்த்ததுமே நினைச்சேன், ஏதோ எதிர்பாராத அதிர்வு பயம் எல்லாம் சேர்ந்து தான் அவங்களுக்கு பேனிக் அட்டாக் வந்து இருக்கு.. நல்லவேளை சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க, இனி பயப்பட எதுவுமில்லை.. அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும், இதுக்கு முன்னே இந்த மாதிரி வந்திருக்கா..?” என்றவருக்கு பதிலளிக்க முடியாமல் விழித்தான் தாரக்.
 
 
“அவங்களை பத்தி எதுவும் உங்களுக்கு தெரியாதா..?” என்றவர் தாரக்கின் முகத்திலிருந்து என்ன கண்டாரோ..? வேறு எதுவும் கேட்காமல் “ஒருவேளை இதுதான் அவங்களுக்கு முதல்முறையா இருந்தாலும் அதுக்காக இப்படியே விட்டுட கூடாது.. தெரபி செக்ஷன் ஒண்ணு அவங்களுக்கு அரேஞ்ச் செஞ்சுடுங்க.. ஆரம்பத்திலேயே இதை சரி செஞ்சுடறது தான் நல்லது..” என்றார்.
 
 
“அவ்வளவு சிவியரா இருக்கா..? ஓகே நான் உடனே அது என்னன்னு பார்க்கறேன்..” என்றான் தாரக்.
 
 
“ஓகே, அவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க, இப்போ ஐவி போட்டு இருக்கேன்.. ஒரு இரண்டு மணி நேரம் அவங்க இங்கே இருக்க வேண்டி இருக்கும்..” என்று விட்டு மருத்துவர் உள்ளே செல்ல.. அதில் உண்டான நிம்மதி பெறுமூச்சோடு அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றான் தாரக். 
 
 
இப்போதைக்கு சிந்துவுக்கு ஆபத்தில்லை என்பதே அவனுக்கு பெரும் நிம்மதியை தந்தது. விரைவில் சிந்துவை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழு பரிசோதனை செய்து விட வேண்டும் என மனதினோரம் குறித்துக் கொண்டவன், அவள் கண் விழிக்க காத்திருக்க.. மருத்துவர் சொன்ன நேரத்தையும் கடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகே கண் விழித்தாள் சிந்து.
 
 
முதலில் அவள் இருக்குமிடம் புரியாமல் திருதிருக்க.. தாரக் தான் அமைதிப்படுத்தி நிலைமையை புரிய வைத்து, அதன் பின் மிகவும் சோர்வாக காணப்பட்டவளை கை தாங்கலாக வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் தாரக்.  
 
 
அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு உமாவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளக் கூறியவன், சோர்வோடு தன் அறைக்குள் சென்று படுக்கையில் சரிந்தான். 
 
 
இன்று அரை நாள் முடிவதற்குள் பல நாட்களைக் கடந்து வந்தது போல் அவனுக்கு இருந்தது. ‘அவளால் இதை தாங்கிக் கொள்ள முடியாது என தெரிந்தே சொல்லி இருக்கக் கூடாதோ..!’ என்ற குற்ற உணர்வு அவனுள் உறுத்திக் கொண்டே இருந்தது. 
 
 
‘இன்றைய சிந்துவின் நிலைக்கு காரணம் தானே..!’ என்று எண்ணத்தில் உண்டான கலக்கமும் அவள் அனுபவித்த வலிகளைக் கண்டதில் உண்டான மன வருத்தமுமாக படுத்திருந்தான் தாரக்.
 
*****
 
யுவன் சொன்னது போல் தாரக் கோடீஸ்வரர் வீட்டில் பிறந்தவன் தான். ஒரே பிள்ளையாக எந்த குறையும் தெரியாமல் வளர்ந்திருந்தவனுக்கு கல்லூரி முடித்த நேரத்தில் அவன் அன்னை கங்காவுக்கு கேன்சர் இருப்பதாக தெரிய வந்த செய்தி பேரிடியாக இருந்தது.
 
 
அதன் பின்னான நாட்கள் நரகத்தின் உச்சம் என்பான் தாரக். ஒவ்வொரு முறையும் கங்காவோடு அவன் மருத்துவமனைக்குச் சென்று வரும் போதெல்லாம் அவரின் வலிகளை அருகில் இருந்து பார்த்ததில், அவரை விட அதிகம் துடித்திருக்கிறான் தாரக்.
 
 
ஆறு மாதம் அத்தனை வலிகளையும் அனுபவித்துவிட்டு கங்கா தன் மண்ணுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சென்று விட, மனதளவில் வெகுவாக தளர்ந்து போனான் தாரக். ஆனால் இத்தனை நாள் அவர் அனுபவித்த வலிகளுக்கு ஒரு விடுதலை கிடைத்ததே என்று தோன்றினாலும் அவரின் இழப்பு அவனை பெரிதும் பாதித்தது.
 
 
ஒற்றைப் பிள்ளையாய் தாயின் மொத்த அன்பையும் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வளர்ந்திருந்தவனுக்கு அவர் இல்லாமல் வாழ்வது பெரும் சிரமமாக இருந்தது. கங்காவின் நினைவிலேயே அறைக்குள் சுருண்டு கிடந்தவனை சந்திரகாந்தின் இரண்டாம் திருமண செய்தி கொஞ்சம் திடுக்கிட செய்தது என்னவோ உண்மை தான். 
 
 
ஆனால் அவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையென ஒன்று உள்ளது. அதனால் அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்வதில் தவறு என்ன என்ற அளவுக்கான புரிதல் தாரக்கிற்கு உண்டு. 
 
 
அப்படிப்பட்டவனையும் கோபம் கொள்ள செய்து இருந்தது சந்திரகாந்தியின் செயல். ஏனெனில் கங்கா இருந்து ஒரு மாதம் முடிவதற்குள் அவர் திருமணம் செய்து கொண்டு வந்திருந்தது ஒன்று என்றால், மற்றொன்று தாரக்கை விட ஒரு வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தது.
 
 
இதெல்லாம் கங்காவின் மரணம் எப்போதென எதிர்பார்த்து அவர் காத்திருந்தது போலான மனநிலையை தாரக்கிற்கு கொடுத்திருக்க.. ஆனாலும் எதிலும் தலையிட்டுக் கொள்ளாமல் யாரோடும் எந்த பிரச்சனையும் செய்யாமல் தானுண்டு தன் வேலை உண்டு என ஒதுங்கிக் கொண்டான் தாரக். 
 
 
ஆனால் அதற்கும் அனுமதிக்காமல் சித்தி என்ற பெயரில் வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள். தன் அன்னை ராணியாக வலம் வந்த இந்த வீட்டில் அவரின் பொருட்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பது போல் அனைத்தையும் ஸ்டோர் ரூமில் போட்டு பூட்ட முயற்சிகள் நடந்து கொண்டிருக்க.. முதல்முறையாக தன் எதிர்ப்பை தெரிவித்தான் தாரக்.
ஆனால் புது மனைவியின் மீதான மயக்கத்தில் இருந்த சந்திரகாந்த்திற்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. ‘அவளின் பொருட்கள் இங்கே கண் முன் இருந்தால் தான் கங்கா நம் நினைவில் இருக்கப் போகிறாளா என்ன..? சின்ன சின்ன விஷயங்களை பெரிதுப்படுத்தி வீட்டில் பிரச்சனை செய்ய வேண்டாம்..’ என்று மகனைத்தான் கண்டித்தார்.
 
 
ஆனாலும் அதற்கு அனுமதிக்காமல் பிரச்சனை செய்து கங்காவின் பொருட்கள் அனைத்தையும் தன் அறையின் பக்கத்து அறைக்கு மாற்றிக் கொண்டு விட்டிருந்தான் தாரக். இதில் தான் தோற்று விட்டது போல் உணர்ந்த அவன் சித்தி அதன் பின் தொடர்ந்து தாரக்கை சீண்டிக்கொண்டே இருந்தார்.
 
 
அதேநேரம் தாரக் அலுவலகப் பொறுப்பை ஏற்பதாக இருந்தது. அதற்கான வேலைகளை சந்திரகாந்த் பார்த்துக் கொண்டிருக்க.. தொழிலுக்குள் தாரக் நுழைவது பிடிக்காத சித்தி மீண்டும் வேறு வகையில் பிரச்சனையை தொடங்கினார். 
 
 
தாரக் தனக்கு சரியான மரியாதை கொடுப்பதில்லை, தன்னைச் சித்தி என அழைப்பதில்லை என்றெல்லாம் ஒரு பெரும் புகார் பட்டியலை சந்திரகாந்த்திடம் வாசித்தவர், அவன் தன்னை மரியாதையான இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்றாலோ தொடர்ந்து தனக்கான இடம் இந்த வீட்டில் கிடைக்க வேண்டும் என்றாலோ தன் அண்ணன் மகளை தாரக்கிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.. அப்போதுதான் எங்கள் இருவருக்கு இடையே இருக்கும் உறவு வலுவடையும் என்றெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரகாந்தியிடம் அவர் சொல்லிக்கொண்டே இருந்ததில் அவருக்கும் ஒரு கட்டத்தில் இதுவும் சரி என்றே தோன்றியது.
 
 
தாரக் தொழிலில் பொறுப்பெடுக்க போகும் நேரத்தில் திருமணத்தையும் செய்து வைத்து விட்டால், குடும்ப பொறுப்பையும் சேர்ந்து மகன் சுமக்க சரியாக இருக்கும் என நினைத்தவர், தாரக்கிடம் இதைப் பற்றி பெரிதாக எதுவும் பேசாமல் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். 
 
 
ஏனெனில் சிறுவயதிலிருந்தே இதுதான் அவர் வழக்கம். அவரின் முடிவில் பெரிதாக தாரக்கிற்கு எந்த மறுப்போ விருப்பமின்மையோ எப்போதுமே இருந்ததில்லை. அதேபோல் அவருமே தன் மகனுக்கு அனைத்திலும் சிறந்ததை மட்டுமே தேர்ந்தெடுப்பார்.
 
 
கங்காவுக்கும் தன் கணவன் மேல் பெரும் நம்பிக்கை உண்டு என்பதால் எப்போதும் எந்த விஷயத்திலும் தலையிட்டுக் கொள்வதில்லை. மகனை அன்பும் பாசமுமாக வளர்ப்பதில் மட்டுமே அவர் கவனம் இருக்க.. இதில் எப்போதுமே தானாக முடிவெடுத்து பழகியிருந்த சந்திரகாந்த் இப்போதும் அதே போல் செய்ய.. முதன்முறையாக தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பெரும் பிரச்சனை ஒன்று வெடித்தது. 
 
 
தன்னிடம் கேட்காமல் இவ்வளவு அவசரமாக திருமண ஏற்பாட்டை அவர் செய்தது ஒரு பக்கம் தாரக்கின் கோபத்திற்கு காரணம் என்றால் மற்றொரு பக்கம் அவர் அவனுக்கென பார்த்திருக்கும் பெண்ணின் வயது பதினெட்டு தான் ஆகி இருந்தது.
 
 
இப்போதே பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருக்கும் பெண்ணை கல்லூரிக்கு அனுப்பாமல் இத்தனை அவசரமாக எதற்கு திருமணம் செய்து கொடுக்க நினைக்க வேண்டும்..? இதன் பின் நிச்சயம் பெரிதாக ஏதோ திட்டம் இருப்பது சின்ன குழந்தைக்கு கூட புரியும், இதைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கோபம்.. எப்போதுமே பெண் கல்வி பெண் முன்னேற்றம் என்று தன் தொழிற்சாலையிலும் அலுவலகத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்திரகாந்த் இன்று இப்படி கண்மூடித்தனமாக நடந்து கொண்டதில் உண்டான ஆதங்கம் என எல்லாம் சேர்ந்து சாதாரணமாகவே தன் மறுப்பை கொஞ்சம் அழுத்தமாகவே தாரக் தெரிவிக்க ஆரம்பிக்க.. சந்திரகாந்தினால் இந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
 
 
எப்போதுமே தன் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத தாரக், இப்படி கண்மூடித்தனமாக மறுப்பதற்கு காரணம் தன் இரண்டாம் மனைவி சொல்வது போல் தாரக் அவளை வெறுப்பதால் தான் என்று எண்ணிய சந்திரகாந்த் தொடர்ந்து மகனை வற்புறுத்தினார்.
 
 
அந்த வற்புறுத்தல் கூட கிட்டத்தட்ட கட்டளை போல் இதை நீ செய்தால் மட்டுமே என் மகனாக இங்கு நீடிக்க முடியும்.. கம்பெனியில் உனக்கான இடம் கொடுக்கப்படும், இல்லையென்றால் எதுவும் உனக்கு இல்லை என்கிற ரீதியில் இருக்க.. இது தாரக்கின் ஆத்திரத்தை மேலும் தூண்டி விட்டிருந்ததில் மொத்தமாக அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு வெளியில் வந்து இருந்தான் தாரக்.
 
 
அப்போதும் கூட இதெல்லாம் ஆரம்ப கட்ட வீம்பு திரும்ப தாரக் சீக்கிரமாக வீட்டிற்கு வந்து விடுவான் என்று நினைத்திருந்த சந்திரகாந்த், அதற்கு நேர் மாறாக அவன் வரவே கூடாது என்று நினைத்த சந்திரகாந்தின் இரண்டாம் மனைவி, தன் திட்டம் பலித்து விட்ட சந்தோஷத்தோடு வளைய வந்து கொண்டிருந்தாள். 
 
 
ஆனால் நாட்கள் போகப்போகத்தான் சந்திரகாந்திற்கு மகன் திரும்பி வராத வருத்தம் புரிய தொடங்கியது. அவன் அருகில் இருந்த போது தெரியாத அருமை மகன் விலகிச் சென்ற பிறகு புரிந்ததில் அதிகம் தாரக்கை தேட தொடங்கினார் சந்திரகாந்த். 
 
 
இது திட்டம் போட்டு தாரக்கை வெளியே அனுப்பிய சந்திரகாந்தின் இரண்டாம் மனைவிக்கு தொல்லையாக இருக்க.. அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பி மீண்டும் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றார். 
 
 
முன்பெல்லாம் அவரின் இந்த அதீத அன்பும் அக்கறையும் தன் மேலான காதலாக தெரிந்த சந்திரகாந்திற்கு இப்போது எல்லாம் அது தொந்தரவாக தெரிந்தது. அதோடு அவர்களின் செயல்கள் எல்லாம் கொஞ்சம் அதீத நாடகத் தன்மையோடு இருப்பது போல் தெரிந்ததில், அதன் பிறகே கூர்ந்து அனைவரையும் கவனிக்கத் தொடங்கினார் சந்திரகாந்த். 
 
 
வழக்கமாக எல்லோரும் சொல்வது போல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற கூற்றின்படி அவர் கண்ணை மறைத்துக் கொண்டிருந்த திரைகள் எல்லாம் விலகி தன் இரண்டாம் மனைவியும் அவரைச் சுற்றி இருக்கும் கூட்டத்தின் உண்மை முகமும் புரியத் தொடங்கிய உடனேயே சுதாரித்துக் கொண்ட சந்திரகாந்த், அவர்களுக்கு கொஞ்சமும் சந்தேகம் வராத வகையில் யாரும் எதிலும் தலையிடாதவாறு அனைத்து சொத்துக்களும், தொழில் வீடு என எல்லாம் தன் ஒரே மகனுக்கு மட்டுமே சென்று சேர வேண்டும் என பத்திரப்பதிவு செய்து அதை தன் வக்கீலிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்.
 
 
அவர் மரணம் எந்த வகையில் எப்போது நிகழும் என யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்கு முன்பே தாரக்கை அவர் கண்டுபிடித்து விட்டாலோ இல்லை தாரக் அவரைத் தேடி வந்துவிட்டாலோ இதை அவன் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும் இல்லையெனில் தனக்குப் பின் தாரக்கை எப்படியாவது தேடி கண்டுபிடித்து இதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே வேண்டுகோளாக இருந்தது. 
 
 
தனாவோடான தாரக்கின் திருமணத்திற்கு பிறகான ஒரு நாளில் எதிர்பாராமல் அவனை வழியில் கண்ட வழக்கறிஞர், தனியே சந்தித்து பேச விருப்பம் தெரிவிக்க.. அவன் அதற்கு சம்மதிக்கவே இல்லை. அதோடு சந்திரகாந்திடம் தன்னை பார்த்ததாக கூட சொல்லக்கூடாது என்ற வாக்குறுதியையும் வாங்கிக் கொண்டிருந்தவன், அப்படி தன் பேச்சை மீறி இவர் ஏதாவது செய்ததாக தெரிய வந்தால் இந்த ஊரை விட்டே சென்று விடுவேன் என திட்ட வட்டமாக கூறிவிட்டே வந்திருந்தான் தாரக்.
 
 
தாரக் கேட்டுக்கொண்டபடி வழக்கறிஞர் சந்திரகாந்தியிடம் எதையும் மறைக்கவில்லை. மாறாக அனைத்தையும் கூறியவர் கங்கா இறந்த பிறகு தாரக் முகத்தில் இல்லாத நிம்மதியும் அமைதியும் சந்தோஷமும் இப்போது அவனிடம் இருப்பதை கண்டதாக சொல்லவும், அதைக் கெடுக்க வேண்டாம் என முடிவு செய்த சந்திரகாந்த், தாரக்கிற்கே தெரியாமல் அவனை இரண்டு முறை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு சென்றிருந்தார்.
 
 
இந்நிலையில் தான் டிரைவரின் மூலம் அவர் தன் மகனைக் காண செல்வதாக தெரிந்து கொண்ட இரண்டாம் மனைவியும், அவரின் குடும்பத்தாரும் திட்டமிட்டே சந்திரகாந்தின் உணவில் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்திருந்தனர்.
 
 
அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அங்கிருந்த வேலையாள் ஒருவரின் மூலம் விவரமறிந்த வழக்கறிஞர் தான், தன் காவல்துறை நண்பரோடு சேர்ந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து சந்திரகாந்தை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.
 
 
அதன் பிறகு அவர் தாரக்கை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் அவன் வேலையில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வேலை முடிந்த பிறகே தெரியாத புது எண்ணில் இருந்து தொடர்ந்து வந்திருந்த அழைப்பை கவனித்து ஏற்றிருந்த தாரக், அதன் பின்னே விவரம் அறிந்து தன் தந்தையை காண சென்ற போது அவர் சுய நினைவிலேயே இல்லை. 
 
 
மருத்துவர்கள் தொடர்ந்து போராடியும் உள்ளே பல நாட்களாகச் சென்றிருந்த விஷத்தின் தாக்கம் அவரை கோமாவிற்கு அழைத்துச் சென்று விட்டிருந்தது. சரியாக உயிர் பிரிவதற்கு ஐந்து நிமிடம் முன் அவருக்கு நினைவு திரும்ப.. தன் மகனை பார்க்க விரும்பியவரின் முன் சென்று நின்ற தாரக்கை விழிகள் கலங்க சில நொடிகள் பார்த்தவர், தாரக்கின் கைகளைப் பிடித்து கொண்டு “என்னை மன்னிச்சுடு கண்ணா, எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிச்சுடு.. புத்தி கெட்டு போய் இந்த வயசில் தப்பு செஞ்சுட்டேன், நான் செஞ்சா எல்லாம் சரியா தான் இருக்கும்னு கண்மூடித்தனமா இருந்துட்டேன்.. இந்த வயதில் நம்மை தேடி வருவது உண்மையான காதலா இருக்காதுன்னு எனக்கு புரியவே பல காலம் ஆகிடுச்சு.. அதுக்கு பிறகு தான் மீள முடியா ஒரு சூழலில் மாட்டிக்கிட்டேன்னு புரிஞ்சது.. 
 
 
எனக்கு ஒரு மகன் இருக்கான், எப்படியாவது என்னை வந்து இதில் இருந்து மீட்டுடுவான்னு ரொம்ப ஆவலா காத்திருந்தேன்.. ஆனா அதுக்கான சந்தர்ப்பத்தை அவனுக்கு நானே கொடுக்கலைன்னு மறந்துட்டேன், நீ வெளியே போக நானும் காரணமா இருந்தது, எவ்வளவு பெரிய தப்புன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது..” என்றவரை மறுப்பான வார்த்தைகள் சொல்லி தாரக் தேற்ற முயல.. ஆனால் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் “இல்லை நான் பேசிடறேன், நான் பேசி முடிச்சுடறேன்.. எனக்கு நிறைய நேரம் இல்லை..” என்றவர்,
 
 
“உனக்கு சேர வேண்டியதெல்லாம் உனக்கு மட்டுமே சேர வேண்டியதெல்லாம் உன்னை வந்து சேரும், அதுக்கான ஏற்பாடுகளை நான் செஞ்சுட்டேன்.. எனக்காக இந்த அப்பாவுக்காக உன் மேலே உயிரையே வெச்சுருந்த உங்க அம்மாவுக்காக.. நீ அதை எல்லாம் மறுக்காம ஏத்துக்கணும், நம்ம சாம்ராஜ்யம் சரியாம நீ தான் பார்த்துக்கணும்.. இதை மட்டும் மறுக்காம செய் ப்ளீஸ்.. எனக்கு வாக்கு கொடு..” என அவர் உயிரை விழிகளில் தேக்கி கேட்கவும், ‘இல்லை’ என மறுத்து சொல்ல அவனால் அந்த நொடி முடியவில்லை. 
அதில் தலையை மட்டும் சரி என்பதாக அசைக்க.. இது ஒன்றே தனக்கு போதும் என்பது போல் தாரக்கின் கைகளை அழுத்தி பிடித்தபடியே தன் உயிரை விட்டிருந்தார் சந்திரகாந்த்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 425
Topic starter  
 
 
நேசம் - 34 (a)
 
சிந்துவை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க விட்டவன், அடுத்த நாள் வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான். அன்று அந்த மருத்துவர் சொல்லியிருந்தப்படி முதலில் அவளுக்கு தெரபிக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தான்.
 
 
அவ்வளவு எளிதில் மருத்துவமனைக்கு வர சிந்து ஒத்துக் கொள்ளவே இல்லை. “அன்னைக்கு கொஞ்சம் பதட்டத்தில் அப்படியாகிடுச்சு, இப்போ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் நல்லா தான் இருக்கேன்..” என சிந்து எத்தனை சமாதானம் சொல்லியும் அதை ஏற்றுக் கொள்ள தாரக் தயாராகவே இல்லை. 
 
 
“அதை டாக்டர் சொல்லட்டும்..” என அவன் ஒரே பிடியாக நிற்க, “நிஜமாவே நான் நல்லா தான் இருக்கேன், எனக்கு எதுவுமில்லை.. அது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் அவ்வளவு தான், ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்..” என சிந்து மீண்டும் சமாதானம் சொல்ல முயன்றாள். 
 
 
“அடிக்கடி உனக்கு வயிறு வேற வலிக்குதுன்னு உமா சொன்னாங்க.. அதையும் நீ மறைக்கறே, இதெல்லாம் எதுக்கு..? அன்னைக்கு சொன்னியே அப்படி தியாகியாக இதெல்லாம் ஒரு முயற்சியா..?” என்றான் தாரக். 
 
 
“அப்படி எல்லாம் இல்லை, ஆனா டாக்டரை பார்க்கும் அளவுக்கு இது அவ்வளவு பெரிய விஷயமுமில்லை..” என மெல்லிய குரலில் சிந்து இழுத்து நிறுத்த.. “இதைவிட பெருசா எதுவும் பிரச்சனையாகும் முன்னே டாக்டரை பார்க்கறது தான் சரி.. வேற எதுவும் பேசாம கிளம்பு..” என்று அவள் மறுக்க முடியாத குரலில் பேசி சிந்துவை அழைத்து வந்து விட்டிருந்தான் தாரக். 
 
 
இப்போது காக்ன்டிவ் பிஹேவியர் தெரப்பிக்கு சிந்துவை அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தவனுக்கு அடுத்தடுத்து அவளுக்காக செய்ய வேண்டிய பல திட்டங்கள் மனதில் இருந்தன. அதன் முதல் படியாக தெரபி முடியவும், முழு உடல் பரிசோதனைக்கு கையோடு சிந்துவை அழைத்துச் சென்றிருந்தான். 
 
 
ஆனால் அவள் உடல் நிலையை மனதில் வைத்து தாரக் எடுத்திருந்த இந்த முயற்சியே இருவருக்கும் பெரும் அதிர்வைத் தரும் என அவர்கள் அப்போது கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. 
 
 
அன்று நாள் முழுக்க இருவரும் மருத்துவமனையில் இருந்து அவளை பரிசோதனை செய்ததில் கிடைத்த ஆய்வறிக்கையின் முடிவு அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காததாக இருந்தது. 
 
 
இதை கேட்டு அதிர்ந்த தாரக், இரண்டு நாளில் திரும்ப வருவதாக சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான். சிந்துக்குமே இது எதிர்பாராத அதிர்ச்சி தான். ஆனால் அவளுக்கு இப்போது எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்று கூட தெரியவில்லை.
 
 
மறுநாள் காலை அப்படியே வெறுமையான மனதோடு சிந்து படுக்கையில் சரிந்து அமர்ந்திருக்க.. அறையின் கதவை லேசாக தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் தாரக். 
 
 
நேற்று மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவளுக்கும் யோசிக்க அவகாசம் தேவை என்பதை உணர்ந்து அப்போதைக்கு அமைதியாகவே சென்று இருந்தவன், இப்போது அவள் முன் வந்து நிற்க.. மரியாதைக்காக அவனை கண்டதும் எழுந்து நிற்க முயன்றாள் சிந்து. 
 
 
“வேண்டாம் நீ ரெஸ்ட் எடு..” என அவளை தடுத்த தாரக், அங்கிருந்த இருக்கையை எடுத்து படுக்கைக்கு அருகில் போட்டு அமர்ந்தான். “நல்லா யோசிச்சுட்டியா..? என்ன முடிவு செஞ்சுருக்க..? எப்போ அப்பாயின்மென்ட் வாங்கலாம்..?” என்று அவன் பேச்சை தொடங்கவும், “அப்பாயின்மென்ட்டா எதுக்கு..?” என்றாள் சிந்து.  
 
 
“எதுக்குனா என்ன அர்த்தம்..? டாக்டர் சொன்னதை எல்லாம் நீயும் கேட்டே தானே..!” என பேச்சை தொடங்கியவனுக்கு அதன் பிறகே அந்த சந்தேகம் உண்டாக “ஹே, உனக்கு அவங்க பேசினது எதுவும் புரியலையா..?” என்று கேள்வியாக நிறுத்தினான் தாரக்.
 
 
அதற்கு மறுப்பாக தலையசைத்தவள், “புரிஞ்சது..” என கூறவும், “அப்புறம் ஏன்னு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்..? நாம டாக்டரை போய் பாக்கணும் இல்லை, நேரம் கட்டத்தறது சரியில்லை..” என்றான் தாரக்.
 
 
“ம்ப்ச்.. நான் எங்கேயும் வரலை..” என உணர்வே இல்லாத குரலில் சிந்து கூறவும், அவனை குழப்பமாக பார்த்தான் தாரக். “எங்கேயும் வரலைனா என்ன அர்த்தம்..? உன் மனசில் என்ன இருக்குன்னு நிஜமாவே எனக்கு புரியலை..” என்றான். 
 
 
“எனக்கும் நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு புரியலை.. இப்போ எதுக்கு அப்பாயிண்ட்மெண்ட்..? ஏன் டாக்டர்கிட்ட போகணும்..?” என அவள் திரும்ப கேட்கவும், அவளை சில நொடிகள் கூர்மையாக பார்த்தவன், “நேத்து டாக்டர் சொன்னதை கேட்ட தானே..! உடனே அபார்ட் செய்யலைனா உன் உயிருக்கே ஆபத்து, அதுக்கு தான் இந்த அப்பாயின்மென்ட், இப்போ புரிஞ்சுதா..? ரெடியா இரு, ஈவினிங் ஹாஸ்பிடல் போவோம்..” என்றான் பொறுமையை இழுத்து பிடித்த குரலில் தாரக். 
 
 
“இல்லை வேண்டாம் அப்படியே இருக்கட்டும்..” என்று சிந்து மீண்டும் சொல்ல.. “உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா..? இதெல்லாம் தேவையில்லாத அடம், அப்படியே இருந்தா என்னாகும்னு உனக்கு புரியுதா..?” என மீண்டும் தாரக் கேட்க, “நல்லாவே புரியுது, ஆனா பரவாயில்லை இப்படியே இருக்கட்டும்..” என்று மறுபடியும் அதே போல் வெற்று குரலில் பேசினாள் சிந்து.
 
 
நேற்று மருத்துவமனையில் சிந்துவை பரிசோதித்த பெண் மருத்துவர், அவளுக்கு எக்டோபிக் ப்ரெக்னன்ஸி ஏற்பட்டுள்ளதாகவும் இத்தனை நாள் இதை எப்படி தெரிந்துக் கொள்ளாமல் போனீங்க..?’ என்றும் அவர் கேட்ட பிறகே தாரக்கிற்கு நடந்த பிரச்சனைகளில் அவளின் உடல்நலத்தையும் சிந்து கருவுற்று இருப்பதையும் மறந்திருப்பது புரிந்தது.
 
 
இதில் உண்டான குற்ற உணர்வில் அவன் பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருக்க.. “ஏற்கனவே ஐந்து மாசம் ஆகிடுச்சு, இதுவரை நீங்க ஸ்கேன் செய்யாததே முதல் தப்பு.. அப்போவே செஞ்சுருந்தா இதை முன்பே கண்டுப் பிடிச்சு இருக்கலாம், ஆனா இனியும் தாமதிக்காம இருக்கறது தான் நல்லது.. தாயை காப்பாற்ற நினைச்சா உடனே குழந்தையை நாம கலைச்சு தான் ஆகணும், இல்லைனா இரண்டு உயிருக்குமே ஆபத்து.. இப்போவும் கொஞ்சம் ரிஸ்க் தான்.. ஐந்து மாசமாகிடுச்சு புரிஞ்சுக்கோங்க..” என்றிருந்தார் மருத்துவர்.
 
 
அதில் இரண்டு நாட்கள் அவரிடம் அவகாசம் வாங்கிக் கொண்டு வந்திருந்தவன், இப்போது சிந்துவை அதற்கு சம்மதிக்க வைக்க தான் முயன்றுக் கொண்டிருந்தான்.
 
 
ஆனால் அவளோ வேண்டவே வேண்டாமென சொல்லிக் கொண்டிருக்க.. “செந்தூரிகா.. நீ ஏன் இப்படி பேசிட்டு இருக்கே..?” என்றான் சற்றே கோபம் எட்டி பார்க்கும் குரலில் தாரக்.
 
 
அதில் சில் நொடிகள் அமைதியாக இருந்தவள், பின் ஒரு முடிவுக்கு வந்தது போல் நீண்ட பெருமூச்சை இழுத்து வெளியில் விட்டப்படி, “நான் பிராயச்சித்தம் செய்ய நினைக்கறேன்..” என்றவளை அவன் புரியாமல் பார்க்க.. “உங்க குடும்பம் உங்களை விட்டு போகவும் நீங்க தனியாளா நிற்கவும் எங்க அப்பா தானே காரணம்..” என்றவளின் வார்த்தைகளை முடிக்க கூட விடாமல் “அதுக்கு..?” என்றான் கோபம் தெறிக்கும் குரலில் தாரக்.
 
 
அவனின் அந்த குரலில் சட்டென அமைதியானவள், தாரக் பதிலுக்காக தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு “இந்த குழந்தை.. உங்களுக்கு.. உங்க கூட..” என பார்வையை தழைத்துக் கொண்டே மனதில் இருப்பதை சரியாக சொல்ல வராமல் தடுமாற.. “ஹ்ம்ம், சொல்லி முடி..” என்றான் கைகளை கட்டிக் கொண்டு நிதானமாக அவளின் முகம் பார்த்து தாரக்.
 
 
அவனின் இந்த நிதானமே சிந்துவை அடுத்து பேச முடியாமல் அமைதியாக்க.. “இது உன் உயிருக்கே ஆபத்துன்னு தெரியுமா..?’ என்றான் தாரக்.
 
 
அதற்கு அவள் பதிலேதும் சொல்லாமல் இருக்க.. “சொல்லு தெரியுமா..? தெரியாதா..!” என்று முகம் இறுக அவன் கேட்கவும், ஆமென்பதாக அசைந்தது அவளின் தலை. 
 
 
“தெரிஞ்சும் ஏன் இப்படி..?” என்றவனை இடையிட்டு இருந்தவள், “நான் உயிரோட இருந்து மட்டும் என்ன செய்ய போறேன்..? யாருக்கும் வேண்டாதவளா காலம் முழுக்க இப்படி ஓடிட்டே இருக்கறதை விட யாரோ ஒருத்தருக்காவது உபயோகமா இருந்துட்டு போறேனே..!” என்றாள் சிந்து.
 
 
அவளின் அந்த வார்த்தை அவனை அதிகம் பாதித்தது. “யாருக்கும் வேண்டாதவன்னு நீயே எப்படி முடிவு செய்யலாம்..? உங்க அண்ணன் அருண் உன்னை காப்பாற்ற எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தான்னு உனக்கு தெரியுமா..? நீ எங்கேயாவது நல்லா இருந்துட மாட்டியான்னு உங்க அம்மா அங்கே எவ்வளவு துடிக்கறாங்கன்னு உனக்கு தெரியுமா..? ஏன் நானே உன்னை காப்பாற்ற அன்னைக்கு அவ்வளவு தூரம் வரலையா..? இதெல்லாம் எதுக்கு உன் உயிர் போகவா..?” என்றான் தாரக்.
 
 
அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியானவளின் மன கண்ணில் சுஜாதாவின் முகம் வந்து நின்றது. “செந்தூரிகா இங்கே பார்.. நமக்கு பிடிக்காதவங்க நம்மை பிடிக்காதவங்கன்னு இந்த உலகத்தில் நாலு பேர் இருக்க தான் செய்வாங்க.. அதுக்காக எல்லாம் நாம உயிரோட இருக்க கூடாதுன்னு முடிவுக்கு வந்துடறது சரியில்லை.. வாழ்ந்து காட்டணும், நம்மை அழிக்க நினைக்கறவங்க முன்னே இன்னும் தைரியமா நல்லா வாழ்ந்து காட்டணும்..” என்றவன்,
 
 
சிறு தயக்கத்தோடு அவளை பார்த்து, “திரும்ப இதையெல்லாம் ஞாபகப்படுத்தறேன்னு நினைக்காதே..! ஆனா உன் மன உறுதிக்கு இதை நான் சொல்லியே ஆகணும்.. உன்னை உன் விருப்பமில்லாம நான் கூட்டிட்டு வந்து வெச்சுருந்த நேரத்தில் ஆரம்ப நாட்களில் நீ அழுது பயந்து நடுங்கி நடப்பது புரியாம தத்தளித்தாலும், அதுக்கு பிறகான நாட்களில் உனக்குள்ளே ஒரு இறுக்கம் உண்டாகி, என்ன வேணும்னாலும் நடக்கட்டும், இனி நான் அழுவதால் மாற போவது எதுவுமில்லைன்னு உறுதியா இறுகி போய் நின்னே பார் அது தான் ஒரிஜினல் செந்தூரிகா..
 
 
உனக்கே உன் மன வலிமையை பற்றி தெரியலை.. உங்க அப்பாவுக்கு பயந்து உன் அண்ணனுக்கு பயந்துன்னு நீ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பழகிட்டே.. நிஜத்தில் இது இல்லை நீ.. உன் மன உறுதியை நான் பலமுறை பார்த்திருக்கேன்.. அவ்வளவு ஏன் என்னை கொல்ல வந்தவன் கொன்னுட்டு போகட்டும்னு சொன்னியே அதை சொல்ல எவ்வளவு தைரியம் வேணும் தெரியுமா..? அப்படிப்பட்ட நீ இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் இப்படி ஒரு முடிவை எடுக்க கூடாது..” என்றான் பொறுமையான குரலில் தாரக்.
 
 
அவன் பேச பேச அதுவரை பெரும் முயற்சியோடு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்தது. அதை கண்டு அருகில் இருந்த டிஷ்யூவை எடுத்து அவளிடம் நீட்டினான் தாரக்.
 
 
மெல்ல அதை வாங்கிக் கொண்டவள், தொடர்ந்து அழுதுக் கொண்டே இருக்கவும், எப்படி அவளை தேற்றுவது என புரியாமல் பார்த்தான் தாரக்.
 
 
“என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லையே..! எந்த அர்த்தமும் இல்லாம வாழறதை விட இந்த குழந்தை..” என்றவள், தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீரோடு நிறுத்த.. “என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்குன்னு நீ நினைக்கறே..? உங்க அக்கா என்னை விட்டு போன பிறகு நான் இப்படி ஒரு முடிவுக்கு வர எவ்வளவு நேரமாகி இருக்க போகுது..? ஆனா அது இல்லை வாழ்க்கை.. ஒரு உயிரின் மதிப்பு உனக்கு புரியலை..” என்றான் தாரக்.
 
 
“அப்போ இது மட்டும் உயிர் இல்லையா..?” என சட்டென தன் வயிற்றை காண்பித்து சிந்து கேட்கவும், அதில் ஒரு நொடி அமைதியானவன், “அதுவும் ஒரு உயிர் தான், ஆனா அந்த உயிர் இன்னும் இந்த உலகத்துக்கு வரலை.. அதோட இந்த உயிரை எதிர்பார்த்து இங்கே யாரும் காத்திருக்கவும் இல்லை.. ஆனா உனக்கு அப்படி இல்லை, உனக்கு புரியும்னு நினைக்கறேன்..” என்றவன், பின் சிறு இடைவெளி விட்டு,
 
“ஆரம்பத்தில் இருந்தே உங்க அப்பாவை பழி வாங்க ஒரு வழியா மட்டுமே நான் அதை பார்க்க.. உனக்கு தேவையில்லாத சொந்தமில்லாத ஒண்ணாவே நீயும் அதை பார்த்ததால் தானோ என்னவோ தானாவே அதுவும் நம்மை விட்டு போக நினைச்சு இருக்கலாம்.. சில நேரங்களில் நாம எதிர் பார்க்காத ஒரு விஷயம் கூட நம்ம வாழ்க்கையை அழகாக்கும்.. இதுவும் அப்படி ஒரு தொடக்கம்னு நினைச்சுக்கோ..” என்றவனை அவள் புரியாமல் பார்க்க.. கையோடு எடுத்து வந்திருந்த ஒரு கோப்பை அவளிடம் நீட்டினான் தாரக்.
 
 
 
தொடரும்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 425
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
MNM - 33(b) & 34(a)
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
 
 
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 5 / 5

You cannot copy content of this page