நேசம் - 32
அந்த அவசர சிகிச்சை பிரிவின் எதிரில் கண்ணீரோடு அமர்ந்திருந்த சாரதாவின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தான் தாரக்.
சுயநினைவின்றி கிடந்தவரை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டிருந்தாலும் இன்னும் அவரின் உடல்நிலை குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததில் உண்டான பதட்டத்தோடு இருவரும் அமர்ந்திருந்தனர்.
இதெல்லாம் அன்றைய கொடூர நாளுக்கு பின்னான நிகழ்வுகளே..! அன்று நடந்திருந்த அராஜகத்தில் குமரேசனின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரின் உயிரை காப்பாற்றி விட்டிருந்தாலும் இன்றுவரை அதன் பக்க விளைவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அடிக்கடி அவரின் உடல் நிலை பாதிக்கப்படுவதும், இப்படி மருத்துவமனையில் வைத்து போராடி அவரை மீட்டுக் கொண்டு வருவதும் தொடர்ந்து கொண்டே இருக்க.. ஒவ்வொரு முறையும் அந்த நேரங்களில் சாரதாவின் தவிப்பையும் உள்ளிருக்கும் குமரேசனின் போராட்டத்தையும் கண் முன்னே காணும் போதெல்லாம் குற்ற உணர்வில் துடித்துப் போவான் தாரக்.
ஏதோ ஒரு வகையில் இதற்கெல்லாம் அவனும் காரணமாகி போன குற்ற உணர்வு அவனை கொல்லும். அன்று ஒருவேளை அங்கு அவனிருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்காமல் தடுத்திருக்கலாம்..! இல்லையெனில் அந்த ஜீவமரண போராட்டத்தில் தன் உயிராவது போயிருக்கலாம்..!! என்றே அவனுக்குத் தோன்றும்.
இதில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் குமரேசன் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் வருத்தத்தை தர, கண்ணீரோடு அமர்ந்திருக்கும் சாரதாவின் கைகளை ஆதரவாக தட்டிக் கொடுத்தவாறே “கவலைப்படாதீங்க ஐயாவுக்கு எதுவுமாகாது..” என்று நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தான் தாரக்.
எதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கண்கள் கலங்க அந்த அவசர சிகிச்சை பிரிவின் கதவையே எப்போது திறக்கும் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் சாரதா. வயதான காலத்தில் இவர்களுக்கு ஏன் இத்தனை கஷ்டம் என மனம் வலித்தது.
அவர்களின் நீண்ட நெடிய காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவது போல் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த மருத்துவர், அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூற.. அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை அப்போதே வெளியிட்டார் சாரதா.
தாரக்கிற்கு அவரின் நிலை நன்றாக புரிந்தது. வயதான காலத்தில் பிள்ளைகளின் துணையும் இல்லாமல் வேறு உறவுகளும் இல்லாமல் கணவன் மட்டுமே உறவென்று வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, அவரை இந்த நிலையில் காணும் ஒவ்வொரு நொடியும் எப்படி இருக்கும் என நன்றாகவே புரிந்தது.
இதையெல்லாம் பார்க்கும் போது தான் என்ன செய்தாவது அந்த நாகராஜனையும் இதே போல் துடிதுடிக்க செய்ய வேண்டும் என்ற வெறி எழுகிறது. ஆனால் மனம் அமைதியான பிறகு அவன் செய்வதையே நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றும் தோன்றாமல் இல்லை.
இப்படியே நன்மைக்கும் தீமைக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான் தாரக். அதில் உண்டான மன போராட்டத்தில் விழிமூடி இருக்கையில் தாரக் அப்படியே சாய்ந்தமர, அவனை கவலையாக திரும்பிப் பார்த்த சாரதா வேறு எதுவும் பேசி தொல்லை செய்யவில்லை.
இரண்டு நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டவன் போல் மெல்ல விழிகளை திறந்தவன் “இப்போ வந்துடறேன் சாரதாம்மா..” என்று விட்டு எழுந்து சென்றான். முதல் தளத்தில் உள்ள கேண்டினுக்கு சென்று அவருக்கு சூடாக காபி வாங்கிக்கொண்டு திரும்பினான்.
“முதலில் இதை குடிங்க, கொஞ்சம் தெம்பா இருக்கும்..” என அவரிடம் தாரக் காபியை நீட்டவும், மறுப்பாக அவனைப் பார்த்தார் சாரதா. “சாரதாம்மா சொன்னா கேளுங்க, ஐயாவுக்கு இப்போ ஆபத்து எதுவுமில்லைன்னு டாக்டரே வந்து சொல்லியாச்சு இல்லை, இன்னும் என்ன..? கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சுடுவார்.. நாம அப்போ அவரை போய் பார்க்கலாம்..” என்று சமாதானமாக பேசியபடியே மீண்டும் அவரிடம் காபியை தாரக் கொடுக்க முயன்றான்.
அப்போதும் மறுப்பாக தலையசைத்தவர், “நான் ஒருமுறை அவரை பார்த்து பேசிடறேன் தீபன் தம்பி, அப்போ தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.. அதுவரைக்கும் எனக்கு எதுவும் வேண்டாம்..” என்றார் சாரதா.
“அதெல்லாம் பார்த்து பேசலாம் சாரதாம்மா, ஆனா இப்போ நீங்க எப்படி இருக்கீங்க தெரியுமா..? பக்கத்து பெட்டில் அட்மிட் செய்யற மாதிரி இருக்கீங்க.. முதலில் காபியை குடிங்க, இல்லை ஐயா கண்விழிக்கும் போது நீங்க மயங்கிடுவீங்க.. அப்புறம் அவருக்கு யார் பதில் சொல்றது..? உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அவருக்கு எப்படி இருக்கும்னு யோசிங்க..” என்று சொல்லவும் தயக்கத்தோடு காபியை வாங்கிக் கொண்டார் சாரதா.
ஆனாலும் அவர் குடிக்காமல் இருப்பதைக் கண்ட தாரக் “நிஜமாவே ஐயாவுக்கு எதுவுமில்லை சாரதாம்மா, சீக்கிரம் கண் விழிச்சுடுவார் கவலைப்படாதீங்க.. இங்கே நிறைய நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க, தைரியமா இருங்க.. ஐயா ஹாஸ்பிடலில் இருக்கும் போது பக்கத்தில் இருந்து நான் தான் பார்த்துக்குவேன்னு நீங்க அடம் வேற செய்யறீங்க.. அதுக்கு நீங்க முதலில் தெம்பா இருக்கணும் இல்லை, குடிங்க..” என்று லேசான மிரட்டலோடு தாரக் சொல்லவும், மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக அந்த காபியை குடித்தார் சாரதா.
அதன் பிறகே அவர் முகத்தில் கொஞ்சமாக தெளிவு வந்தது. அதை கண்டு நிம்மதியானவன், “கீழே கெஸ்ட் ரூம் புக் செஞ்சு இருக்கேன், நீங்க வேணும்னா அங்கே போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்ததுக்கறீங்களா..? நான் இங்கே பார்த்துக்கறேன்..” என்றான் தாரக்.
“ஐயோ அதெல்லாம் வேண்டாம் தம்பி, அவர் கண்ணு விழிக்கும் வரைக்கும் என்னால் நிம்மதியா இருக்கவே முடியாது.. நான் இங்கேயே இருக்கேன், நீங்க வேணும்னா போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க..” என்றவர், அதன் பிறகே நினைவு வந்தவராக “ஏதாவது முக்கியமான வேலையா இருந்தீங்களா தம்பி, உங்களை தொந்தரவு செஞ்சுட்டேனா..?” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் கேட்டார்.
“என்ன சாரதம்மா இது..? நீங்க வேற நான் வேறயா..! இதெல்லாம் எனக்கு தொல்லையா..?” என்றவன் அடுத்து பேச வார்த்தை வராமல் அப்படியே அமைதியானான்.
மீண்டும் அன்றைக்கு எங்களால் தானே இதெல்லாம் என ஆரம்பித்து எதையாவது தாரக் பேச போய் அந்த நினைவுகள் மேலெழுந்து வந்தால் சாரதா உடைந்தே போவார் என்றறிந்தே அதை தவிர்த்தான் தாரக்.
அதே நேரம் இங்கு தாரக் வெளியேறியதை உறுதி செய்து கொண்டிருந்த முத்து, தன் ஆட்களோடு வீட்டிற்குள் புகுந்து சிந்துவை கொல்ல திட்டமிட்டான்.
இங்கு வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பான் என்றறிந்திருந்த முத்து அதை வைத்து ஒரு திட்டத்தோடு வந்திருக்க.. உள்ளே வேறு சில ஆட்களும் இருப்பது தெரிந்தது. “என்ன முத்துண்ணே, வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பான்னு சொன்னீங்க..? வேற யாரோ உள்ளே இருக்காங்களே..!” என்றான் உடன் வந்திருந்த குரு.
“இருந்தா என்னடா..? நாம பத்து பேர் இருக்கோம், அவங்களை சமாளிக்க முடியாதா..! கையில் பொருள் எல்லாம் வேற இருக்கில்லை..” என்று சிடுசிடுத்தான் முத்து.
“அதுக்கு இல்லண்ணே..” என்று இன்னொருவன் இழுக்கவும், “எதுக்கும் இல்லை, வந்த வேலையை ஒழுங்கா முடிக்க பாருங்க.. இன்னைக்கு மட்டும் இதை முடிக்கலைனா நாம நாகராஜன் அண்ணே முகத்திலேயே முழிக்க முடியாது, புரியுதா..” என்று எரிச்சலோடு கத்தினான் முத்து.
அதில் வேறு எதுவும் பேசாமல் மற்றவர்கள் அமைதியாகிவிட, கொஞ்சம் இருள் கவிழ தொடங்கிய பின் தாக்குதலை நடத்தினால் சரியாக இருக்கும் என்று எண்ணி காத்திருக்க தொடங்கினான் முத்து.
இதற்கிடையில் முத்துவை தொடர்பு கொள்ள முடியாமல் போனதில் அங்குள்ள தன் ஆட்களின் மூலம் முத்துவோடு சென்றிருந்த குருவை தொடர்பு கொண்டார் நாகராஜன்.
“ஐயா..” என பவ்யமாக குரு அழைப்பை ஏற்று பேசத் தொடங்க “எங்கேடா போய் தொலைஞ்சான் அந்த முத்து..? நேத்திலிருந்து போனை காணோம்..” என்று நாகராஜன் சிடுசிடுக்க.. “ஐயா முத்து அண்ணே போன் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு.. அதனால் தான் லைன் கிடைக்கலைன்னு நினைக்கறேன்.. இதோ இங்கே தான் இருக்கார் கொடுக்கறேன்..” என்று மறைவாக நின்றிருந்த முத்துவிடம் கொண்டு சென்று குரு அலைபேசியை கொடுத்தான்.
நாகராஜன் அழைப்பில் இருப்பதை அறிந்து அதை வாங்கியிருந்த முத்து “அண்ணே..” என பணிவான குரலிலேயே அழைக்கவும், அவன் குரல் கேட்பதற்காகவே காத்திருந்தது போல் “ஏன்டா போன் உடைஞ்சதுனா வேற போனை யார்கிட்டயாவது வாங்கி பேசுறதுக்கு என்ன..? இல்லைனா போன விஷயம் என்னாச்சுன்னு எனக்கு எப்படி தெரியும்..?” என்று கோபப்பட்டார் நாகராஜன்.
அதில் இரு நொடிகள் அமைதியாக இருந்த முத்து “இல்லை ண்ணே, வேலையை முடிச்சுட்டு தான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.. திரும்பத் திரும்ப உங்களுக்கு நம்பிக்கையை மட்டும் கொடுத்துட்டு இருக்கிறது எனக்கே என்னமோ மாதிரி இருக்கு.. நீங்க கொடுத்த வேலையை முடிச்சுட்டேன்னு சொல்லணும், அதுதான் இப்போ என் நோக்கம்.. அதனால் தான் நான் உங்களுக்கு கூப்பிடவே இல்லை..” என்றான்.
அவனின் இந்த பதில் கொந்தளித்துக் கொண்டிருந்த நாகராஜனை கொஞ்சம் அமைதியாக்கியிருந்தது. பல வருடங்களாக முத்துவை அறிந்திருந்தவர் என்பதால் அவனின் விசுவாசத்தை பற்றியும் நன்றாகவே அவருக்குத் தெரியும்.
அதில் தனக்காக தான் இவ்வளவும் யோசித்து செய்கிறான் எனப் புரிந்து அமைதியான நாகராஜன், “சரி என்ன திட்டத்தோட கிளம்பி போயிருக்கே..?” என்று கேட்கவும், “இல்லை ண்ணே, இப்போ நான் எதையும் சொல்ல விரும்பலை.. செஞ்சு முடிச்சுட்டு வந்து இப்படி செஞ்சேன்னு விலாவாரியா சொல்றேன்..” என்றான் முத்து.
அவன் குரலில் இருந்த நம்பிக்கை அவருக்கு இந்த முறை முத்துவின் குறி தப்பாது என்ற எண்ணத்தை கொடுக்க.. “சரி என்னமோ சொல்றே பார்ப்போம்..” என்று அப்போதும் தன் மிடுக்கு குறையாமலேயே பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார் நாகராஜன்.
அப்போதே தோப்பில் இருந்து வந்திருந்த அருண் குத்தகை பணம் சம்பந்தமாக பேசுவதற்காக நாகராஜனின் அறைக்குச் செல்ல.. உள்ளே முத்துவோடு அவர் பேசிக் கொண்டிருந்த அத்தனையும் அவனுக்கு கேட்டது. இதைக் கேட்டு திகைத்தவன், உடனடியாக அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்குள் சென்று வேகமாக கதவடைத்துக்கொண்டான்.
அவசரமாக அவன் தாரக்கை அழைக்க முயல, முதன்முறை இணைப்பு கிடைக்கவே இல்லை. மீண்டும் அவன் விடாமல் முயற்சிக்கவும் இந்த முறை அழைப்புச் செல்ல.. தாரக்கும் உடனே அதை ஏற்றிருந்தான்.
“சொல்லு அருண்..” என்று அவன் தொடங்கவும், “மாமா எங்கே இருக்கீங்க..? அங்கே சேஃப் தானே..!” என்று பதட்டத்தோடு ஒலித்த அருணின் குரலில் நெற்றியை சுருக்கியவன், “என்னாச்சு..?” எனவும் “முத்து அங்கே வந்திருக்கான், ஏதோ பெருசா பிளான் செய்யறான்னு நினைக்கறேன்.. அப்பாகிட்ட இப்போ தான் பேசிட்டு இருந்தான், முழுசா என்ன விவரம்னு எனக்கு தெரியலை.. எதுக்கும் நீங்க சேஃபா இருங்க, சிந்துவை பத்திரமா பார்த்துக்கோங்க.. என்னால் இப்போ உடனே கிளம்பி வரவும் முடியாது, உங்களுக்கு நிலைமை புரியுதா..?” என்று அவன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தந்தி போல் வேகமாக சொல்லி முடித்தான் அருண்.
இதில் அருணின் குரலில் இருந்த பதட்டம் தாரக்கிற்கும் தொற்றிக்கொள்ள.. சட்டென எழுந்து நின்றவனை சாரதா புரியாமல் பார்த்தார். அலைபேசியை அணைத்து சட்டை பையில் போட்டுக் கொண்டே “சாரதாம்மா ஒரு அர்ஜென்ட் வேலை, நான் போயாகணும்.. ராமை இங்கே வர சொல்றேன், நான் திரும்ப வர வரைக்கும் உங்களுக்கு துணைக்கு அவன் இருப்பான்.. அவன் இங்கிருந்து போக மாட்டான், நான் கண்டிப்பா சீக்கிரம் வந்துடறேன்..” என்றவனின் உடல் மொழியே அவனின் பதட்டத்தை புரிய வைக்க போதுமானதாக இருக்க.. சரி என்று மட்டும் தலையசைத்தார் சாரதா.
அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக அங்கிருந்து கிளம்பி இருந்தவன், புயல் வேகத்தில் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்க.. அதே நேரம் முத்து தன் ஆட்களோடு தாரக்கின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்திருந்தான்.
வாட்ச்மேன் சாப்பிட சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தவர்களை, ஒரு நொடி திகைத்துப் பார்த்தாலும் உடனடியாக செயலில் இறங்கினர் அங்கு இருந்த பாதுகாவலர்கள்.
இதைக் கண்டு பதறிப் போன வாட்ச்மேன் காவல்துறைக்கு அழைத்திருக்க.. உமாவோ பதட்டத்தோடு செய்வதறியாமல் திகைத்து நின்றார். அதில் வாயிற்கதவை உள்பக்கம் தாழிட்டுக்கொள்ள சொல்லி அவருக்கு கட்டளையிட்ட பாதுகாவலர்களின் தலைவன் முழு வேகத்தில் செயல்பட்டான்.
கையில் ஆயுதங்களோடு வந்தவர்களை எதிர்ப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தாலும் இதற்காகவே பயிற்சி பெற்றிருந்தவர்கள் என்பதால் அதை திறமையாகவே செய்து கொண்டிருந்தனர்.
இந்த சத்தம் கேட்டு கீழே வந்த சிந்து “என்னாச்சு என்ன இங்கே சத்தம்..?” எனவும், “நீங்க இங்கே ஏன் வந்தீங்க மேடம்..? மேலே போங்க, இங்கே வராதீங்க மேடம்..” என்று அவளை பாதுகாக்க முயன்றார் உமா.
அதில் மேலும் குழம்பிய சிந்து பிரெஞ்சு விண்டோவில் எட்டிப் பார்க்க முயல.. அவளை தடுத்து “நீங்க உள்ளே போங்க மேடம், எதுவும் பிரச்சனையாகிட போகுது..” என்றார் உமா.
இப்போதே நடக்கும் விபரீதம் சிந்துவுக்கு புரிய, ‘இது தனக்கான தாக்குதல்’ என உணர்ந்தவள் “ஐயையோ இங்கேயும் வந்துட்டாங்களா..?” என பதற, “நீங்க பயப்பட வேண்டாம், வெளியே பாதுகாப்புக்கு ஆளுங்க இருக்காங்க.. அவங்க இதையெல்லாம் பார்த்துப்பாங்க, நீங்க தயவு செஞ்சு ரூமுக்குள்ளே போய் கதவை மூடிக்கோங்க.. இப்போதைக்கு அது போதும்..” என்றார், தன் பயத்தை வெளி காண்பித்துக் கொள்ளாமல் சிந்துவை தைரியப்படுத்தும் முயற்சியில் உமா.
ஆனால் அந்த முயற்சி எவ்வளவு தூரம் பலனளித்தது என தெரியவில்லை. சிந்து அப்படியே அசையாமல் மிரட்சியோடு நின்றிருக்க.. “மேடம் ப்ளீஸ் நீங்க இங்கே இருக்கறது தான் பிரச்சனை, உள்ளே போயிடுங்க.. எதுவா இருந்தாலும் சார் பார்த்துப்பார்..” என உமா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே அலறல்களும் பொருட்கள் உடையும் சத்தமும் பலமாக கேட்டது.
இதில் சிந்துவின் உடல் வெளிப்படையாக நடுங்கத் தொடங்க.. அவளை அணைவாக பிடித்துக் கொண்ட உமா “வாங்க மேடம், நாம உள்ளே போயிடலாம்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எப்படியோ மாடி சுவர் ஏறி குதித்து பால்கனி வழியே உள்ளே வந்து விட்டிருந்தான் முத்து.
அவன் கையில் அருவாளோடு வந்து நின்றதை கண்டு சிந்து விழிகள் விரிய திகைத்து நிற்க.. “இதோ இந்த நொடிக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன், உன் உயிர் என் கையில் தான் போகணும்னு இருக்கு போல.. என்ன இருந்தாலும் நாகராஜன் அண்ணே பொண்ணு, அதோட நான் தூக்கி வளர்த்த பொண்ணாச்சேனு தான் உன்னை என் கையால் முடிக்க வேண்டாம்னு நினைச்சு அவனுங்ககிட்ட பொறுப்பை கொடுத்தேன்.. ஆனா அது எவ்வளவு தப்புன்னு நல்லா புரிய வெச்சுட்டே..
நான் அண்ணனுக்காக எதுவும் செய்வேன், அவர் ரத்தத்தை வெட்டி சாய்க்க மாட்டேனா என்ன..? அது தான் அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கும்னா தாராளமா செய்வேன், இதை நான் என்னைக்கோ செஞ்சுருக்கணும்.. தப்பு செஞ்சுட்டேன், சின்ன சறுக்கல்.. அதனால் என்ன இப்போ அதை பெருசா சரி செஞ்சுடலாம்..
உன்னை முடிச்சுட்டேன்னு அண்ணேகிட்ட சொன்னா போதும் இந்த உலகத்திலேயே அந்த நிமிஷம் சந்தோஷமா இருக்க மனுஷன் அவரா தான் இருப்பார்.. அந்த சந்தோஷத்தை அவருக்கு கொடுத்தே ஆகணும், இது தான் என் இப்போதைய ஒரே லட்சியம்..” என்று பேசியபடியே ஒவ்வொரு அடியாக எடுத்து முன்னே வைத்து அவளை நெருங்கினான் முத்து.
அவன் ஒவ்வொரு அடி முன்னே வைக்கவும், சிந்து ஒவ்வொரு அடியாக பின்னே வைத்து நகர்ந்தாள். உமாவும் மிரண்டு போய் சிந்துவை தன் கை வளைவில் வைத்தபடியே அவளை எப்படியாவது காப்பாற்றி விட முயன்றார்.
அவர்களின் அந்த முயற்சியை ஒரு கோணல் சிரிப்போடு பார்த்தபடியே முன்னே வந்த முத்து, “இனியும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்னு நினைக்கறியா..?” என்று கேட்டு ஒரு மாதிரியாக சிரித்தான்.
பின்னே நகர்ந்து கொண்டிருந்த சிந்து சுவரில் மோதி அதற்கு மேல் நகர முடியாமல் அப்படியே நிற்கவும், அவளுக்கு இதுதான் தன் இறுதி நொடி என தெளிவாக புரிந்து போனது. அதில் ‘தன்னோடு சேர்ந்து ஒரு பாவமும் செய்யாத உமாவும் ஏன் பலியாக வேண்டும்..?’ என்று மட்டும் தோன்ற.. அவர் எதிர்பாரா நேரத்தில் உமாவை பிடித்து வேகமாக தன்னிடம் இருந்து தள்ளி விட்டிருந்தாள் சிந்து.
இதில் நிலைகுலைந்து தரையில் சரிந்த உமா அதிர்வோடு சிந்துவை பார்க்கவும், அவருக்கு எதிர் திசையில் வேகமாக ஓடியவளை முத்து அதே வேகத்தில் துரத்தி, அங்கிருந்து சுவரின் ஓரம் அவளை எந்த பக்கமும் நகர முடியா வகையில் இரு கைகளையும் வைத்து தடுத்திருந்தான் முத்து.
“உனக்கு என் உயிர் தானே வேணும், தாராளமா எடுத்துக்கோ.. என்னை தவிர யாரையும் காயப்படுத்தாதே, இங்கே இருக்க யாரும் எந்த தப்பும் செய்யலை..” என்று கையெடுத்து கும்பிட்டாள் சிந்து.
உமாவை தள்ளிவிட்டு அவள் தப்பிக்க முயல்வதாக எண்ணியே வேகமாக அறிவாளை ஓங்கிக் கொண்டு அவளை நெருங்கிய முத்து, சிந்துவின் இந்த சரணாகதியில் ஒரு நொடி அப்படியே உயர்த்திய அருவாளை நிறுத்தி அவளை பார்த்தான்.
‘என்னை எதுவும் செஞ்சுடாதீங்க..’ என்று அழவோ.. தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சவோ இல்லை, மரணத்தை எதிர்ப்பின்றி ஏற்க தயாராகும் அவளின் இந்த நிலை அவனை அந்த நிலையிலும் வியக்க வைத்தது. “என்ன இருந்தாலும் நாகராஜ் அண்ணே ரத்தமாச்சே..! அதான் வீரம் பிறப்பிலேயே உடம்பில் ஊறி இருக்கு..!” என்று அதையுமே பெருமையாக பேசினான் முத்து.
ஆனால் அதற்கெல்லாம் எதிர்வினையாற்றும் நிலையில் இல்லாத சிந்து, தன்னை கொன்று விட்டு சந்தோஷமாக செல் என்பது போல் கைகூப்பி அவன் முன் தலை குனிந்து நிற்க.. அவளின் அந்த நிலை அவனை நினைத்ததை உடனே செய்யவிடாமல் தடுத்தது.
அவன் உள்ளே வந்த வேகத்திற்கு அப்போதே வெட்டி வீழ்த்தி இருந்தால் இந்த தயக்கம் துளியும் அவனிடமிருந்து இருந்திருக்காது.
ஆனால் இத்தனை வருடங்களாக பீதியில் உறைந்த முகமும் கண்ணீர் வழியும் விழிகளும், தங்களை விட்டு விடுமாறு கெஞ்சும் குரல்களையும் கேட்டபடியே, உயிர்களை ரத்த வெறியோடு வேட்டையாடிக் கொண்டிருந்த ஒருவனுக்கு மரண பயம் துளியும் தெரியாத அந்த விழிகளும் முகமும் தன்னை கொன்று விட்டுப் போ என்ற ஒப்புதலும் ஏதோ ஒரு தயக்கத்தை கொடுத்தது.
இப்படி ஒரு கொலையை இதற்கு முன் அவன் செய்ததில்லை என்பதனால் வந்த தயக்கமோ, என்னவோ..? ஆனால் உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்களுக்கு எங்கிருந்து எதிர்ப்பு வரப்போகிறது.
தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவளுள் அந்த நொடி மிச்சம் இருந்தது. சற்று முன் வெளியில் இருந்து கேட்ட சத்தங்கள் எல்லாம் அவளுள் உண்டாக்கி இருந்த பயம், தனக்காக யாரின் உயிரும் போகக்கூடாது.. அதற்கு பதில் தன் உயிர் போனால் பரவாயில்லை என்ற எண்ணத்தை கொடுத்திருக்க.. துளியும் யோசிக்காமல் அதற்கு தயாராகி விட்டிருந்தாள் சிந்து.
அதற்குள் தன் தயக்கத்தை எல்லாம் உதறி எதற்காக இங்கு வந்தானோ அதை செயல்படுத்த முயன்ற முத்து ஓங்கிய அருவாளை சிந்துவின் கழுத்தில் இறக்க இருந்த நொடி, அவன் வலது தோள்பட்டையில் ஒரு குண்டு இறங்கி இருந்தது.
அதில் அவன் அலறி சரிய, விழிமூடி நின்றிருந்த சிந்து தன் முகத்தில் தெரித்திருந்த ரத்த துளியிலும் முத்துவின் அலறலிலும் கண்களை திறந்து பார்த்தாள்.
அவளுக்கு நேர் எதிரே வெளி வாயிற்கதவுக்கு அருகில் தாரக் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். மனதில் உண்டாகியிருந்த பயத்திலும் தன் முன் ரத்த வெள்ளத்தில் ஒருவன் சரிந்து கிடப்பதை கண்டதிலும் சிந்துவிற்கு மயக்கம் வந்து விட, அப்படியே அவள் தள்ளாடி பின்னே சரிந்தாள். அதை கண்டு வேகமாக வந்து அவளை தாங்கி பிடித்திருந்தான் தாரக்.
அதற்குள் உமாவும் எழுந்து ஓடி வந்து விட, சிந்துவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தான் தாரக். வேகமாக உமா கொண்டு வந்திருந்த தண்ணீரை வாங்கி அவள் முகத்தில் தெளித்தவன், “செந்தூரிகா.. ரிலாக்ஸ் யூ ஆர் சேஃப், ரிலாக்ஸ் உனக்கு எதுவுமாகலை.. இங்கே எந்த பிரச்சனையும் இல்லை, எல்லாமே முடிஞ்சு போச்சு.. யூ ஆர் சேஃப்..” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளிடம் துளியும் அசைவில்லை. அதில் செய்வதறியாது திகைத்தவன், உடனே மருத்துவரை அழைக்க நினைக்க.. “அதிர்ச்சியில் தான் சார் மயங்கி இருக்காங்க, வேற எதுவுமில்லை பயப்படாதீங்க..” என்றார் உமா.
அதற்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்தவன், மீண்டும் மீண்டும் அவளை தண்ணீர் தெளித்து கன்னத்தில் லேசாக தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.
அதற்குள் வாட்ச்மேன் அளித்திருந்த தகவலோடு, வரும் வழியில் தன் காவல்துறை நண்பனின் மூலம் தாரக்கும் புகாரளித்திருந்ததால் கொஞ்சம் வேகமாகவே காவலர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.
அங்கிருந்த சூழ்நிலையை கண்டு தங்கள் மேல் அதிகாரிக்கு அவர்கள் தகவல் தெரிவிக்க.. அவர்கள் கொடுத்த கட்டளையின்படி காவலர்கள் செயல்படத் தொடங்கி இருந்த அதே நேரம் சிந்துவிடம் லேசாக அசைவு தெரிந்தது.
அதில் அவன் பரபரப்பாக அவளை பார்க்க.. மெல்ல விழிகளை திறந்த சிந்து தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்ததும் பதறி எழுந்தாள். அதைக் கண்டு “ஹேய் ரிலாக்ஸ், பிராப்ளம் எதுவுமில்லை.. எல்லாம் சால்வ்ட்..” என்றான் தாரக்.
ஆனால் அவனின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் சம்பந்தம் இல்லாத குரலில் “ஏன் அவரை சுட்டிங்க..?” என்றாள் சிந்து.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா