நேசம் - 31
குட்டி போட்ட பூனை போல அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக ஆத்திரத்தோடு நடந்து கொண்டிருந்தார் நாகராஜன். மனம் எதையெதையோ யோசித்துக் கொண்டிருக்க.. சட்டென நினைவு வந்தவராக நின்றவர், தன் அலைபேசியை எடுத்து வேகமாக யுவனுக்கு அழைத்தார்.
முதன்முறை அழைப்பு முழுதாக சென்று நின்றது. அதில் உண்டான எரிச்சலோடு விடாமல் நாகராஜன் தொடர்ந்து அழைக்கவும் அந்தப் பக்கம் அதை ஏற்றிருந்தான் யுவன். “சொல்லுங்க அங்கிள், கொஞ்சம் வேலையா இருந்தேன்.. என்ன விஷயம்..?” என அவன் சாதாரணமாக தொடங்கவும், “அந்த பையனை பத்தி உனக்கு தெரிஞ்சதை எல்லாம் சொல்லு..” என்று மொட்டையாக கேட்டார் நாகராஜன்.
அதில் புரியாமல் குழம்பியவன் “யாரு..?” எனவும், திரும்பத் திரும்ப அவனை பற்றி பேச வேண்டி இருப்பதில் உண்டான எரிச்சலோடு “அதான் பிசினஸில் உன்கிட்ட பிரச்சனை செஞ்சானே..!” என்றார் நாகராஜ்.
யுவனுக்கும் சட்டென நினைவு வந்துவிட, “ஓ தாரக் பத்தி கேட்கறீங்களா..? அவனைப் பத்தி என்ன தெரியணும் உங்களுக்கு..?” என்றான்.
“அவனே ஒன்னும் இல்லாத வெறும் பைய, அடுத்த வேலை சோத்துக்கே வழியில்லாமல் தெருவில் சுத்திட்டு இருந்த பிச்சைக்கார பைய.. திடீர்னு அவனுக்கு இவ்வளவு சொத்து, பணம், வசதி எல்லாம் எங்கே இருந்து வந்தது..?” என்றார் நாகராஜன்.
அதில் அவர் சொல்ல வருவது புரியாமல் குழம்பிய யுவன் “என்ன அங்கிள் சொல்றீங்க..? எனக்கு எதுவும் புரியலையே..! தாரக் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இல்லையே, அவன் பிறந்ததிலிருந்தே கோடீஸ்வரன் தான்.. எனக்கு சின்ன வயசில் இருந்தே அவனை தெரியுமே..! அதோடு இப்போ நடக்கும் தொழில் போட்டி எனக்கும் அவனுக்கும் மட்டுமில்லை.. எங்க அப்பாவுக்கும் அவங்க அப்பாவுக்கும் கூட நடந்தது..” என அவன் சொல்லிக் கொண்டே செல்ல.. குழப்பமாக நெற்றியை சுருக்கினார் நாகராஜன்.
அவரறிந்தவரை தனாவை தேடிக் கொண்டிருந்த போது நாகராஜனின் ஆட்கள் சொன்ன விஷயங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் சாதாரண ஒரு வாடகை வீட்டில் மாத வருமானத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அதுவும் பெரிதான வருமானமெல்லாம் இல்லாத ஏதோ ஒரு சின்ன வேலையில் தான் தாரக் அப்போது இருந்தான். இதெல்லாம் நன்றாக நாகராஜனுக்கு இப்போதும் நினைவிருக்கிறது. ஆனால் இவன் வேறு மாதிரி சொல்லவும் யோசனையானவர் “உனக்கு நல்லா தெரியுமா..?” என்று அவன் சொல்லுவதை துளியும் நம்பாத குரலில் கேட்க லேசாக புன்னகைத்தான் யுவன்.
“நிஜமாவே எனக்கு அவனை சின்ன வயசில் இருந்தே நல்லா தெரியும் அங்கிள்.. அப்போவே எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது, எப்போவுமே எங்க அம்மா அவனைத்தான் எனக்கு உதாரணமாக சொல்லி பேசுவாங்க.. அவன் அப்படி இருக்கான், அவன் இப்படி இருக்கான், நீ ஏன் அது மாதிரி இல்லை.. உனக்கு கொஞ்சமும் பொறுப்பில்லை, வசதியான வீட்டில் பிறந்துட்டா இப்படி பொறுப்பில்லாம இருக்கணும்னு என்ன அவசியம்..? தாரக்கை பார்த்து கத்துக்கோன்னு அடிக்கடி எங்க அம்மா சொல்லுவாங்க..
அதனாலேயே எனக்கு அவனை பிடிக்காம போச்சு.. எனக்கு தெரிஞ்ச வரை சின்ன வயசில் இருந்தே அவன் எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்ட்.. இப்போ வரை அதில் எதுவுமே மாறலை..” என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டெனு நிறுத்தி “இல்லையில்லை, ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கு..” என்றான்.
அதில் “என்ன..?” என்று லேசான ஆர்வத்தோடு நாகராஜன் கேட்கவும் “ஆரம்பத்தில் அவன் இவ்வளவு முசுடு இல்லை.. அதிகம் யார் கூடவும் பேச மாட்டான், அளந்து தான் பேசுவானாலும் ரொம்ப மென்மையா யாரையும் காயப்படுத்திட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கும் அவன் பேச்சு செயல் எல்லாம்.. இப்போ அதெல்லாம் எங்கே போச்சுன்னு தெரியலை.. ஒருவேளை பிசினஸில் அப்படி இருந்தா செட் ஆகாதுன்னு நினைச்சிட்டானோ என்னவோ..!
ஆனா நான் பார்த்து வளர்ந்த அந்த தாரக் இவன் இல்லை, யார் எவ்வளவு காயப்பட்டாலும் பரவாயில்லை.. அவங்களுக்கு வலிச்சாலும் பரவாயில்லைன்னு அதிரடியா எல்லாம் செய்யற இந்த தாரக் எனக்குமே புதுசு தான்.. ஒரு அஞ்சு ஆறு வருஷமா தான் அவன் இப்படி இருக்கான்னு நினைக்கறேன், இது தான் எனக்கு இப்போ பிரச்சனையா இருக்கு.. என்னால் அவனை சமாளிக்கவே முடியலை, இதில் எங்க அப்பா வேற..!” என்று சலித்துக் கொண்டவன்,
“அவன் சாஃப்ட் நேச்சர் எங்க அம்மாக்கு பிடிச்சது போல, அவனுடைய இந்த ரஃப் அண்ட் டஃப் நேச்சர், பிசினஸை அவன் ஹேண்டில் செய்யற விதம் எல்லாம் எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. கடைசியில் அவன் இப்படி இருந்தாலும் சரி அப்படி இருந்தாலும் சரி எனக்கு தான் அது டார்ச்சராகியிருக்கு..” என யுவன் பேசிக்கொண்டே சென்றான்.
“நான் உன்கிட்ட விவரம் கேட்டா, நீ அவனுக்கு விளம்பரம் ஓட்டறியா..? உனக்கு அவன் பெருமையை பேச அவ்வளவு பிடிக்கும்னா போய் தெருத்தெருவா அவன் பெருமையை போஸ்டர் அடிச்சு ஓட்டு..” என்று சிடுசிடுத்து விட்டு அழைப்பை துண்டித்து இருந்தார் நாகராஜன்.
அதில் ‘அவர் தானே தாரக் பத்தி கேட்டார்..! இப்போது என்ன..?’ என்பது போல் தன் காதில் இருந்த அலைபேசியை எடுத்து புரியாமல் பார்த்தான் யுவன்.
அதேநேரம் மூன்று நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியிருந்த அருண், நேராக சென்று நாகராஜனை சந்தித்தான். பக்கத்து ஊருக்கு அவர் அனுப்பி இருந்த வேலை சரியாக முடிந்த செய்தி நேற்று முன்தினமே அவருக்கு வந்து சேர்ந்து இருந்ததில், அமைதியாகவே அருணை ஏறிட்டவர் “ஒரு வேலையை சொன்னபடி செய்து முடிச்சா மட்டும் போதாது, எல்லா நெளிவு சுளிவையும் கத்துக்கணும் போ..” என்றார்.
அருணும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகவே அங்கிருந்து நகர்ந்தான். தன் அறைக்குச் சென்று படுக்கையில் சோர்வாக சரிந்தவனுக்கு மூன்று நாட்களாக ஓய்வில்லாமல் அலைந்ததின் களைப்பு மிச்சம் இருந்தது.
அன்று சிந்துவை இவர்கள் அடைத்து வைத்திருந்த போது அருண் இங்கு திரும்ப வந்ததை விரும்பாதது போல் நாகராஜன் நடந்து கொண்டதும், உடனே அவனை அங்கிருந்து கிளப்ப முயன்றதும் சந்தேகத்தை கொடுத்திருந்தது.
அதிலேயே சிந்து அறையில் இருக்கிறாளா என யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சென்று ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்பி இருந்தான் அருண்.
ஊருக்கு வந்ததிலிருந்து எங்கேயும் செல்லாதவள், இன்று திடீரென வெளியில் சென்று இருக்க வாய்ப்பில்லை. அதேநேரம் சுஜாதாவும் வீட்டில் இல்லை என அவரை பற்றி விசாரித்த போது, வேலையாட்கள் அவர் கோவிலுக்கு சென்று இருப்பதாக கூறினர்.
சிந்து அவரோடு செல்லவில்லை என்றும் உறுதியாக, ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்தி பார்த்தவனுக்கு இங்கு என்ன நடக்கப் போகிறது என தெளிவாகவே புரிந்தது.
அதற்கேற்றார் போல் முத்துவும் கொஞ்சம் பரபரப்பாக இருந்ததோடு சிவாவை அழைத்து ஏதோ அடிக்கடி ரகசியம் பேசுவதையும் கவனித்திருந்தவன், மற்றவர்களுக்கு ஊருக்கு போவது போல் போக்கு காண்பித்து விட்டு யாரும் அறியாமல் தோப்பிற்குள் பதுங்கிக் கொண்டான் அருண்.
இதையெல்லாம் பார்த்தவனின் மனம் நர்த்தனாவுக்கு நடந்ததை பற்றி தெரிய வந்த நாளுக்குச் சென்றது. எதிர்ப்பாரா ஒரு நேரத்தில் தான் நாகராஜனும் முத்துவும் பேசுவதை யாருமறியாமல் கேட்டிருந்தான் அருண். அவன் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம் அது.
தன் உடன்பிறந்த சகோதரியாக நினைத்திருந்தவளின் மரணம், அதுவும் இத்தனை கோரமான மரணம் பற்றி அறிய நேர்ந்த நொடி முற்றிலும் உடைந்தே போனான் அருண். யாரிடமும் இதை சொல்லி ஆறுதல் தேட கூட முடியாத நிலை. தனக்குள்ளேயே வைத்து மருகிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு கொடூர செயலை செய்த குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் நாகராஜன் அதை பெருமையாக கருதுவது தான் அதிக வலியை கொடுத்தது.
இதைப் பற்றி சுஜாதாவுக்கு தெரியுமோ இல்லையோ என்ற பயம். அவருக்குத் தெரிய வந்தால் என்னாகுமோ என்ற பதட்டம். இனி இப்படி ஒரு செயல் இந்த வீட்டில் மீண்டும் நடந்து விடக்கூடாதே என்ற பரிதவிப்பு என்றெல்லாம் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இனி ஒரு நிகழ்வு இப்படி தன் வீட்டில் நடந்து விடவே கூடாது என்ற எண்ணம் தான் முதலில் தோன்றியது.
தன்னால் முடிந்தவரை இப்படி ஒரு இழப்பு இனிமேல் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என நினைத்தவன், அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து எடுத்த முடிவு தான் நாகராஜனிடமிருந்து தள்ளி இருப்பதை விட, அவர் அருகிலேயே இருந்து அவரின் செயல்களை கண்காணிப்பது என்பது.
அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரோடு இருக்கவும் நெருங்கவும் முயன்றான் அருண். திடீரென அவரோடு நெருக்கம் காண்பித்தால் நாகராஜனுக்கு சந்தேகம் வரும் என்றே கொஞ்சம் கொஞ்சமாக அதை செய்து அவர்களோடு இணைந்து கொண்டான் அருண்.
அதன் பின் பெரும்பாலும் சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்பவன், பெரிய உயிர் போகும் அளவுக்கான விஷயங்களில் எல்லாம் தன்னால் முடிந்தளவுக்கு எதையாவது செய்து சம்பந்தப்பட்டவர்களை தப்பிக்க வைத்து விடுவான்.
இன்று வரை அதை செய்தது அருண் தான் எனக் கூட இவர்கள் யாருக்கும் சந்தேகம் வந்ததே இல்லை. இயல்பாக நடப்பது போல் ஏதோ ஒன்றை செய்து தன் மனம் விரும்பாத ஒன்றை அங்கே நடக்க விடாமல் அழகாக தவிர்த்து விடுவான் அருண்.
பெரும்பாலும் அருணிடம் ஒப்படைக்கும் பொறுப்புகள் எல்லாம் ஏதோ ஒரு தடையால் சரியாக நடந்து முடியவில்லை என்ற எண்ணம் மட்டுமே நாகராஜன் மனதில் பதிந்திருக்க.. அதற்கே சொல்லும் வேலையை சரியாக செய்யவில்லை என எப்போதும் மகனை திட்டிக் கொண்டிருப்பார் நாகராஜன்.
இதெல்லாம் அவரின் சட்டவிரோதமான செயல்களில் மட்டும் தான். தொழிலைப் பொறுத்தவரை அவர் நினைப்பதற்கு மேலாக அனைத்தையும் சரியாக செய்து முடிப்பானான் அருண். இப்போதும் அப்படியே பக்கத்து ஊரில் அவர் பேசி முடிக்க வேண்டிய தொழில் முறை ஒப்பந்தத்தை பெரிய அளவிலேயே முடித்தும் கொடுத்திருந்தான்.
அதனாலேயே இரண்டு நாட்கள் கழித்து அருண் வந்ததை கூட நாகராஜன் பெரிது படுத்தவில்லை. இதையெல்லாம் யோசித்தபடியே குளித்து முடித்து வெளியில் வந்தவன் சாப்பிட சென்று அமர்ந்தும் சுஜாதா அவன் கண்ணில் தென்படவே இல்லை.
எப்போதும் சமையலறையிலேயே அதிகம் இருப்பவரை, அங்கு காணாததில் வேலை செய்பவர்களிடம் அருண் விசாரிக்க.. சுஜாதாவுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிய வந்தது.
அதில் அவரைக் காண சென்றவன் சோர்வாக சுருண்டு கிடந்த சுஜாதாவைக் கண்டு கவலையாகி “என்னாச்சு ம்மா..?” எனவும் விழிகளை பெரும் சிரமத்திற்கு பிறகு திறந்து பார்த்தவர் ‘ஒண்ணுமில்லை’ என்பதாக தலையசைக்க.. அவரை வருத்தமாக பார்த்தான் அருண்.
சுஜாதாவுக்கு தன் மேல் நிறைய கோபமும் வருத்தமும் உண்டு என அவனுக்கு நன்றாக தெரியும். இன்னொரு நாகராஜனாக தயாராகி நிற்பதாகவே நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார். அவனுக்கும் அனைத்தையும் சொல்லிவிட மனம் துடித்தது தான். ஆனால் இது இவர்கள் இருவருக்கே வினையாகி போகும் என புரிந்து அமைதி காத்தான் அருண்.
இதில் எதுவும் பேசாமல் அங்கேயே அருண் நின்றிருக்க.. அவனை சில நொடிகள் வெறுமையாக பார்த்த சுஜாதா, “விஷ்.. விஷ்வா இரண்டு நாளா வீட்டுக்கு வரலை.. கொஞ்சம் என்னன்னு பார்க்கறியா..?” என்றார் மெல்லிய குரலில்.
அதில் வலி நிறைந்த ஒரு பார்வை அவரைப் பார்த்தவன், தன் கையால் வளர்த்த பிள்ளை இப்படி தன் குடும்பத்திற்கு எதிராகவே சதி செய்கிறான் எனத் தெரிந்தால் சுஜாதா தாங்க மாட்டார் என புரிந்து, அதை அவரிடம் சொல்லாமல் மறைத்து, “அவன் என்ன சின்ன குழந்தையா காணாமல் போக..? ஏதாவது வேலையா போயிருப்பான், வந்துடுவான்.. கவலைப்படாம இருங்க..” என ஆறுதலாக கூறினான்.
“அவன் அப்படியெல்லாம் எங்கேயும் போக மாட்டான், அவனுக்குன்னு யார் இருக்காங்க..? அவனுக்கு யாரை தெரியும்..? எங்கே போவான்..? அவன் இந்த மாதிரி எல்லாம் செஞ்சதில்லை, அவனுக்கு ஏதோ பிரச்சனையோன்னு மனசு கிடந்து தவிக்குது, கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்..” என்றார்.
இவரிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என உணர்ந்தவனாக “சரி என்னன்னு பார்க்கறேன், காலேஜ் ஃபிரண்ட்ஸ் யாரையாவது பார்க்க போயிருக்கான்.. வேலை சம்பந்தமா ஏதாவது இருக்கலாம்..” என அவர் நம்பும்படி எதையோ சொல்லி வைக்க.. அவரும் “அப்படியும் இருக்குமோ..! ஆனா என் என்கிட்ட சொல்லாம ஏன் போனான்..? அப்படி எல்லாம் போக மாட்டானே..!” என்றார்.
“ஏதாவது அவசர வேலை இருந்திருக்கும், நீங்க இப்படி எல்லாரையும் பார்த்து கவலைப்பட்டுட்டு இருந்தா போதுமா..! உங்களை பத்தியும் கொஞ்சம் கவலைப்படுங்க, டாக்டர்கிட்ட போனீங்களா..?” என்றான்.
“எனக்கு ஒண்ணுமில்லை, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்..” என அவர் சொல்லும்போதே குரல் அத்தனை மெலிந்து ஒலித்தது. இப்போதே வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மனம் நினைத்தாலும், தேவையில்லாத சந்தேகம் நாகராஜனுக்கு வந்தால் அது பெரும் பிரச்சனையை உண்டாக்கி விடும் எனப் புரிந்து, சுஜாதாவும் என்ன ஏது என யோசித்துக் குழம்பி உடம்பை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என நினைத்தவனாக அவர் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயத்தை பேச எண்ணினான் அருண்.
“உங்க பொண்ணு எந்த பிரச்சனையும் இல்லாம அவ புருஷன் வீட்டில் பாதுகாப்பா இருக்கா போலே..! இப்போ தான் அப்பாவுக்கு தகவல் வந்தது..” என்று கூறியவனை அவர் நிம்மதியோடு பார்க்க.. சட்டென குரலை மாற்றிக் கொண்டவனாக “இவ்வளவு அக்கறை இருக்கிறவன் எதுக்கு கூட்டிட்டு வந்து இங்கே விடணும்..? அவ திரும்ப இங்கே வராத வரைக்கும் நல்லது..” என தன் மனதில் இருப்பதையே நாகராஜனின் இன்னொரு பிம்பமாக மாறி பேசிவிட்டு அவன் வெளியேற.. அவன் சென்ற திசையை கலவரமாக பார்த்தார் சுஜாதா.
‘அப்படியே அவங்க அப்பாவை போலவே இருக்கான்.. நல்லவேளை சிந்து இங்கே இருந்து தப்பிச்சிட்டா, இனி திரும்ப இங்கே வராம இருக்கணும்..! கடவுளே என் பொண்ணை காப்பாத்துப்பா..” என மனதார வேண்டிக் கொண்டார் சுஜாதா.
*****
அன்று காலை முதலே தாரக்கிற்கு வேலை சரியாக இருந்தது. சாப்பிட கூட நேரம் இல்லாமல் அலுவலக அறையில் அமர்ந்தவாறு வேலையை செய்து முடித்து வெளியில் வந்தவன் சிட் அவுட்டின் கதவை திறந்து நின்றான்.
அவ்வளவு நேரம் வேலையில் மூழ்கியிருந்தவனுக்கு குளிர்ந்த காற்று வந்து முகத்தில் மோதியது அத்தனை இதமாக இருந்தது. அதில் அந்த நொடியை விழிமூடி ரசித்தபடி தாரக் நின்றிருக்க.. மெல்ல தயக்கத்தோடு அவன் பின்னே வந்து நின்றாள் சிந்து.
அவள் வந்ததை உணர்ந்து என்ன என்பது போல் திரும்பி பார்த்தான் தாரக். “உங்க.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என லேசான தடுமாற்றத்தோடு சிந்து சொல்லவும் “ஹ்ம்ம் சொல்லு..” என்றான்.
அதில் அக்கம் பக்கம் பார்வையை சுழற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவள் “நீங்க.. நீங்க தப்பா எடுத்துக்கலைனா, எனக்கு தனா அக்கா பத்தி சொல்றீங்களா..?” என அவள் கேட்டு முடித்த நொடி அதுவரை இலகுவாக இருந்த அவன் உடல் மொழியில் ஒரு விறைப்புத் தன்மை வந்து அமர்ந்து கொண்டது.
முகம் இறுக அவளை ஒரு நொடி பார்த்தவன் எதுவும் சொல்லாமல் திரும்பிக் கொள்ள.. “ப்ளீஸ் எனக்கு சொல்லுங்களேன்..” என கெஞ்சலாக சிந்து கேட்கவும், விழியை மட்டும் திருப்பி அவளை பார்த்தவன் “இப்போ எதுக்கு அதெல்லாம்..?” என்றான்.
“எனக்கு தெரிஞ்சுக்கணும், எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது.. இப்போ வரைக்கும் எதுவுமே முழுசா தெரியாது, நீங்க எல்லாம் பேசுறதில் இருந்து தான் கொஞ்சம் கொஞ்சம் புரியுது.. அதுவே எனக்கு ரொம்ப பயத்தை கொடுக்குது, ப்ளீஸ் எனக்கு எல்லாம் சொல்லுங்களேன்..” என்று கேட்டு முடிப்பதற்குள் அவள் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்திருந்தது.
“திரும்ப அதையெல்லாம் எனக்கு ஞாபகப்படுத்தாதே..” என்றான் தாரக். அதில் அவரை இருநொடிகள் அமைதியாக பார்த்து, “இதையெல்லாம் உங்களால் மறந்துட முடியும்னு உங்களுக்கு தோணுதா..? இல்லை இத்தனை நாள் மறந்துட்டு தான் இருக்கீங்களா..?” என்றாள்.
அவளின் அந்த கூர்மையான பார்வையும் அதைவிட கூர்மையாக வந்த கேள்வியும் ஒரு நொடி அவனை அமைதியாக்க.. பின், “இந்த வலி எல்லாம் உனக்கு வேண்டாம், இதைப் பற்றி தெரிஞ்சுகிட்ட யாராலேயும் ஒரு நொடி கூட நிம்மதியா இருக்க முடியலை.. அப்படியே விட்டுடு வேண்டாம்..” என்றான் தாரக்.
அதில் அங்கு பெரும் அமைதி நிலவ, மீண்டும் மறுப்பான தலையசைப்போடு அவனைப் பார்த்தவள், “இந்த திரைக்குப் பின்னே என்ன மர்மம் இருக்கு..? எவ்வளவு பெரிய பூதம் மறைஞ்சு இருக்குன்ற பதட்டமே எனக்கு பெரும் பயத்தை கொடுக்குது..
தினமும் அது கொடுக்கும் படபடப்பையும் அழுத்தத்தையும் என்னால் தாங்கிக்கவே முடியலை.. எவ்வளவு பெரிய வலியா இருந்தாலும் சரி அதை நான் ஏத்துக்க தயாரா இருக்கேன், அது என் இந்த பதட்டத்தையும் பயத்தையும் கொஞ்சமாவது குறைக்குமே.. ப்ளீஸ் எனக்கு சொல்லிடுங்களேன்..” என்று அவள் கெஞ்சுதலாக கேட்கும் போதே, சிந்துவின் குரல் உடைந்தது.
அதில் சரியென்ற தலையசைப்போடு அவளைப் பார்த்தவன், தன் அலுவலக அறையை நோக்கி கையை காண்பித்தான். அங்கு போய் பேசுவோம் என்பது போல் அவன் சைகை செய்ய.. அதை புரிந்து கொண்டவளாக சிந்துவும் தாரக்கின் பின்னே அறைக்குள் நுழைந்தாள்.
அவளை அமருமாறு சொன்னவன், எப்படி எங்கிருந்து இதைத் தொடங்குவது எனத் தெரியாத தடுமாற்றத்தோடு முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருக்க.. இதைப்பற்றி பேசுவது தாரக்கிற்கு பெரும் சங்கடத்தையும் வலியையும் கொடுப்பதை புரிந்து கொண்டவளாக சிந்து அவனுக்கான நேரத்தை கொடுத்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஒருவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டவனாக தாரக், சிந்துவின் பக்கம் திரும்பவும் அவனின் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. முதலில் அதை தவிர்க்க நினைத்தவன், பின் மேசை மேலிருந்த தன் அலைபேசியை சென்று எடுத்துப் பார்க்க.. சாரதா தான் அழைத்திருந்தார்.
தேவையில்லாமல் அவர் எப்போதும் அழைக்க மாட்டார் என்று புரிந்து உடனே அதை எடுத்திருந்தான் தாரக்.
“தீபன் தம்பி கொஞ்சம் அவசரமா வாங்களேன்..” என சாரதாவின் குரல் பதட்டமாக ஒலிக்க.. “என்னாச்சு..? ஐயாவுக்கு எதுவும் பிரச்சனையா..!” என்றான் அவரின் பதட்டம் தொற்றிக் கொண்ட குரலில் தாரக்.
“ஆமா என்னாச்சுனே தெரியலை, கண்ணையே திறக்கலை.. நான் ரொம்ப நேரமா எழுப்பறேன்..” என அவர் சொல்லிக் கொண்டே இருக்க.. “இதோ நான் வந்துட்டு இருக்கேன், எனக்கு முன்னே ஆம்புலன்ஸ் வந்துடும்.. நீங்க கவலைப்படாம இருங்க..” என்று விட்டு வேகமாக செயல்பட்டான் தாரக்.
அவனின் பதட்டமான பேச்சிலேயே எழுந்து நின்று விட்டிருந்த சிந்துவை வேகமாக கதவை நெருங்கிய பிறகே திரும்பிப் பார்த்திருந்த தாரக், “நான் அவசரமா போயாகணும்.. நாம இன்னொன்னு நாள் பேசலாம்..” எனவும் ‘சரி’ என்பதாக தலையசைத்தவள், அடுத்த நொடி வாயிலை நோக்கி விரைந்த தாரக்கின் பின்னே வேகமாக ஓடினாள்.
“எதுவும் அவசரமா..? ஹெல்ப் ஏதாவது தேவையா நான் வரட்டுமா..?” என்று கேட்டபடியே வந்தவளை காரை நெருங்கி இருந்த தாரக் வெறுமையாக திரும்பி பார்த்தான். பின் வேண்டாம் என்பது போல் மட்டும் தலையசைத்துவிட்டு அவன் காரில் ஏறி கிளம்பி விட, தாரக் சென்ற திசையை பார்த்துக்கொண்டு நின்ற சிந்துவுக்கு அடுத்து என்ன என்று எதுவுமே புரியவில்லை.
தாரக் பேசிய இரண்டு மூன்று வார்த்தைகளில் இருந்தே இது அந்த வீட்டில் இருந்த வயதானவரை பற்றியது என ஓரளவு சிந்துவுக்கு புரிந்திருந்தது. ஆனால் இப்போது வரை அவர்கள் யார் என்ன என்று எந்த விஷயமும் அவளுக்கு தெரியாது.
தனக்கு நேர்ந்த அத்தனை கொடுமைக்கும் நேரடி சாட்சியாக இருந்தவர்கள் என்ற கோபம் எல்லாம் அவளுக்கு இந்த நொடி தோன்றவே இல்லை. ஏதோ ஒரு அவசரம் என்று மட்டும் தான் புரிந்தது. அதில் அப்படியே வாசலில் நின்றிருந்தவள், ஏதேச்சையாக பார்வையை திருப்ப.. அப்போதே கருப்பு உடை அணிந்த இரண்டு பேர் அங்கு இருப்பது அவளுக்குத் தெரிந்தது.
அவர்களை யோசனையாக விழிகளை சுருக்கி பார்த்தபடியே சிந்து உள்ளே செல்ல.. அதேநேரம் இருபதாவது முறையாக முத்துவுக்கு அலைபேசியில் முயன்று பார்த்துவிட்டு அது இப்போதும் அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலில் “எங்கே தான்டா போய் தொலைஞ்சே..? ஒன்றரை நாளா ஆளையும் காணும் போனையும் காணோம்..” என எரிச்சலான நாகராஜன் தன் அலைபேசியை சுவரில் தூக்கி அடித்து உடைத்திருந்தார்.
.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா