All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 3 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 392
Topic starter  
 
 
நேசம் – 16
 
தன்னோடு பேசிக் கொண்டிருந்தவன் திடீரென பாதியில் பேச்சை நிறுத்தவும், கேள்வியாக திரும்பி அவனை பார்த்திருந்த தாரக், விஷ்வா அதிர்வோடு அசையாமல் நின்றிருப்பதை கண்டு அவன் பார்வையை பின்தொடர.. அங்கு இவர்களை பார்த்தபடியே சிந்து மயங்கி சரிவது தெரிந்தது. 
 
 
அதில் பதட்டமான இருவரும் வேகமாக ஓடி சென்று அவளைத் தூக்க.. “அய்யய்யோ என்னாச்சு..?” என்று பதறினான் விஷ்வா. “முதலில் இவளை பிடி..” என்று தாரக் சொல்ல.. “குழந்தை.. குழந்தைக்கு எதுவுமில்லையே..!” என தவிப்பதோடு கேட்டாவாறே இப்படியும் அப்படியுமாக விஷ்வா சுற்றி வருவதைக் கண்ட தாரக், அவனே சிந்துவை தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான். 
 
 
மெல்ல அவளின் கன்னத்தில் தட்டி தாரக் சிந்துவை எழுப்ப முயன்று கொண்டிருக்க.. “மாமா.. குழந்தைக்கு, குழந்தைக்கு எதுவும் ஆகி இருக்காது இல்லை..” என்று விஷ்வா பயத்தோடு கேட்கவும், அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் பதிலேதும் சொல்லாமல் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து சிந்துவின் முகத்தில் தெளித்து அவளை எழுப்ப முயன்றான்.
 
 
ஆனால் சிந்துவிடம் துளியும் அசைவில்லை. அதற்குள் தாரக் சிந்துவை தூக்கிச் செல்வதை பார்த்திருந்த பாபு வீட்டிற்குள் சென்று விஷயத்தை சொல்லி இருக்க.. சாரதா பதட்டத்தோடு அறைக்குள் நுழைந்தார். “என்னாச்சு தீபன் தம்பி..?” எனவும் “மயங்கி விழுந்துட்டா.. அதான் தூக்கிட்டு வந்து படுக்க வெச்சேன்..” என்றான் தாரக். 
 
 
“சரியா சாப்பிடறதே இல்லை தம்பி, சொன்னா கேட்டா தானே..! ரொம்ப பலவீனமா இருந்தா, நான் சொல்லிக்கிட்டே இருந்தேன் ஒரு குழந்தையை தாங்கும் அளவுக்கு உடம்பில் பலமே இல்லைன்னு..” என்றவர் “பயப்படற மாதிரி எதுவும் இல்லையே..!” என மெல்லிய குரலில் கேட்கவும், அவர் பக்கம் திரும்பி வெறுமையாக பார்த்தவன் “இருக்காதுன்னு நினைக்கறேன்..” என்றான்.
 
 
“நான் இன்னைக்கு இங்கே வந்தே இருக்க கூடாது மாமா.. என்னால் தான் இப்போ இப்படி ஆகிடுச்சு, நம்ம பிளான் எல்லாம்..” என்று விஷ்வா ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனை தடுப்பது போல் கை காண்பித்த தாரக் அலைபேசியை எடுத்து வேகமாக மருத்துவருக்கு அழைக்க முயன்றான். 
 
 
சிந்து கருவுற்றிருப்பது தெரிந்தவுடன் வீட்டிற்கே வந்து அவளை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவரை ஏற்பாடு செய்திருந்தான் தாரக். இப்போதும் அவரையே அழைக்க அவன் முயல.. அதேநேரம் மெல்ல சிந்துவின் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தார் சாரதா. அதில் லேசாக அவளிடம் அசைவு தெரிந்தது. 
 
 
அதைக் கண்டு “தீபன் தம்பி..” என சாரதா அழைக்கவும், அவளின் பக்கம் பார்வையை திருப்பியவன் அலைபேசியை அணைத்துவிட்டு சிந்துவின் முன் வந்து குனிய.. பெரும் சிரமத்துக்கு இடையே மெல்ல விழிகளை திறந்தவள் தன் முன் இருந்த தாரக்கை வெறுமையாக பார்த்தாள். 
 
 
சிந்துவிடம் அசைவு தெரிந்த உடனேயே அவள் அருகில் நின்று கொண்டிருந்த விஷ்வா மெல்ல பின்வாங்கி பால்கனி கதவுக்கு அருகே சென்று நின்றுவிட.. “ஆர் யூ ஓகே..?” என்றான் தாரக். அதற்கு பதிலேதும் சொல்லாமல் சிந்து விழிகளை மூடிக்கொள்ள.. அதற்குள் கொஞ்சம் தண்ணியை எடுத்து “ஹேய் பொண்ணே இந்தா இதை குடி..” என்றிருந்தார் சாரதா. 
 
 
அதில் விழிகளை மெல்ல திறந்தவள், அவரிடம் இருந்து அதை வாங்க முயல.. கைகளை கூட வேகமாக நகர்த்த முடியாமல் மெல்ல அவள் அசைப்பதைக் கண்ட சாரதா தானே அவளுக்கு அதை புகட்டினார். 
 
 
அவளிடம் இருந்த அதீத களைப்பை கண்டு “எதுக்கும் டாக்டரை வர சொல்லிடேன் தம்பி..”.என்றார் சாரதா. சரி என்று மீண்டும் தாரக் அலைபேசியை எடுக்க.. சாரதாவின் கைகளை லேசாக பிடித்து அழுத்தி சிந்து வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள். 
 
 
“ஏன் எதுக்கு வேண்டாம்..? இப்படியே இருந்து என்ன சாதிக்கலாம்னு நினைக்கறே..?” என்று எரிச்சலோடு சாரதா சத்தமிடவும் அவருக்கு அவளின் மயக்கத்திற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் தாரக்கிற்கு தெரியும் என்பதால் “சாரதாம்மா பயப்படற மாதிரி எதுவுமில்லை, கொஞ்சம் குடிக்க ஏதாவது கொடுங்க ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. சாயந்திரம் வரைக்கும் இப்படியே இருந்தா டாக்டரை வர வெச்சுக்கலாம்.. இப்போ ரெஸ்டே போதும்னு தான் எனக்கு தோணுது..” என்றிருந்தான். 
 
 
“அப்படியா தம்பி..! சரி நான் வாணிகிட்ட சொல்லி பால் கொண்டு வர சொல்றேன்..” என அவர் எழுந்து செல்ல.. அங்கேயே நின்றிருந்த தாரக் சிந்துவை ஒருமுறை திரும்பி பார்க்கவும், அவளோ யாரையும் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்பது போல் விழிகளை மூடிக்கொண்டாள்.
 
 
இதில் தாரக்கும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியில் வர, அவனின் பின்னேயே விஷ்வாவும் வெளியேறியிருந்தான். இருவரும் அங்கிருந்து சென்றதை உணர்ந்த பிறகே மெல்ல விழிகளை திறந்து அவர்கள் சென்ற திசையை உயிர்ப்பில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. 
 
 
இந்த நொடியை அவளால் எந்த வார்த்தைகளிலும் விவரிக்க முடியாது, அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள் சிந்து. உயிரோடு இருக்கும் போதே அவள் இதயத்தை பிடுங்கி வெளியில் எறிந்தது போல் இருந்தது அவள் மனநிலை. 
 
 
கடந்த சில மாதங்களாகவே அவள் வாழ்வில் சிந்து கனவிலும் எதிர்பார்க்காத ஏதேதோ நடந்து கொண்டிருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலையோ இப்படி ஒரு அதிர்வோ தன் வாழ்வில் வரும் என அவள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
 
 
அதில் தாங்க முடியா வலியோடு சிந்து விழிகளை மூடிக்கொள்ள.. சூடான கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது. 
 
 
எதுவும் நடக்காதது போல் இயல்பாகச் சென்ற தாரக்கின் பின்னே பதட்டத்தோடு சென்ற விஷ்வா “அக்கா என்னை பார்த்து இருப்பா இல்லை..?” என்றான். “பார்த்ததால் தானே இந்த மயக்கம்..?” என தாரக் கேலியோடு கேட்கவும், “ஆமா நான் இன்னைக்கு வந்திருக்கக் கூடாது, வழக்கம் போல வெளியிலேயே நாம சந்திச்சுருக்கலாம்.. இல்லை போனில் பேசி இருக்கலாம்..” என்று விஷ்வா வருந்தி கொண்டிருக்க.. “இப்போ என்ன ஆகிப்போச்சு எதுக்கு இவ்வளவு பயப்படறே..?” என்றான் தாரக். 
 
 
“இல்லை, பயமெல்லாம் இல்லை..” என சமாளிப்பாக விஷ்வா சொல்லவும், “என்னைக்கு இருந்தாலும் தெரிய தானே போகுது.. அது இன்னைக்குன்னு நினைச்சுக்கோ, அவ்வளவுதான்..” என்று தாரக் சாதாரணமாக சொல்ல.. “அப்படி இல்லை மாமா, என்னைக்கு இருந்தாலும் தெரியும் தான்.. ஆனா அது இன்னைக்கா இருந்தது தான் பிரச்சனை..” என்றான் விஷ்வா. 
 
 
“ஏன் என்ன பிரச்சனை..? உங்க அக்கா உன்னை வெறுத்துடுவான்னு நினைக்கறியா..?” என்று சிறு கேலியோடு தாரக் கேட்கவும், “அதை பத்தி எல்லாம் யோசிக்கவோ கவலைப்படவோ இனி என்ன இருக்கு மாமா.. இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தானே நான் இதில் இறங்கினேன், என் கவலை அதை பத்தி இல்லை.. இதனால் குழந்தைக்கு ஏதாவது..” என்று விஷ்வா இழுக்க.. “அதெல்லாம் ஒண்ணுமில்லை, அவ நல்லா தான் இருக்கா..” என்றான் தாரக். 
 
 
“நாம இவ்வளவு தூரம் இத்தனை வருஷமா திட்டம் போட்டு காத்திருந்து செஞ்சது எல்லாம் நேரம் கை கூடி வர நேரத்தில் பானையை நானே கீழே போட்டு உடைச்ச மாதிரி ஆகிட கூடாதே மாமா.. அது தான் எனக்கு கொஞ்சம் பயத்தை கொடுக்குது..” என்றான் விஷ்வா. 
 
 
இப்போதே அவனின் பதட்டத்திற்கான காரணம் புரிய.. அத்தனை முறை குழந்தைக்கு எதுவும் இல்லையே என்று விஷ்வா கேட்டதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவன், “டோன்ட் ஓர்ரி, நாம நினைச்சது நடக்கும், நடத்துறோம்.. புரியுதா..!” என அவன் தோளை தட்டி கொடுத்தான் தாரக். 
 
 
விஷ்வாவும் சரி என்ற தலையசைப்போடு அங்கிருந்து கிளம்பி விட, மற்ற வேலைகளில் கவனத்தை திருப்பினாலும் தாரக் மனதில் அடுத்தடுத்து நிகழ வேண்டியது எல்லாம் பட்டியலாக ஓடிக்கொண்டே இருந்தது.
 
*****
 
அதன் பின்னான நாட்களில் சிந்துவிடம் நிறைய மாற்றங்கள். தன் வேலைகளை யார் உதவியும் வேண்டாம் என மறுத்து தானே செய்து கொள்ள தொடங்கினாள். முன்பு அடிக்கடி வந்து உதவி செய்த வாணியை இப்போது அருகில் கூட வர விடுவதில்லை சிந்து. 
 
 
விஷ்வா இங்கே வந்து சென்றதை பற்றியோ அவனுக்கும் தாரக்கிற்கும் இடையேயான உறவை பற்றியோ இது வரை யாரிடமும் சிந்து எதுவும் கேட்கவே இல்லை. தாரக்கே அவள் இதை பற்றி பேசாததை கண்டு ஆச்சர்யமானான்.
 
 
அவள் பேச்சை நிறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டிருந்தாலும், இப்போதெல்லாம் தலையசைப்பு கூட அவளிடம் இருந்து வருவதில்லை. யாரோ யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் இருந்தது அவளின் நடவடிக்கைகள்.
 
 
இரண்டு மூன்று முறை அவளிடம் பேசிப் பார்த்த சாரதாவிற்குமே ஒரு கட்டத்தில் கோபமே வந்து விட்டது. அவள் தன்னிடமே திமிர் காட்டுவதாக நினைத்தவர், அதன் பின் சிந்துவின் அறை பக்கமே போவதில்லை. இது சிந்துவுக்கு ஒரு வகையில் நிம்மதியாக கூட இருந்தது. யாரையும் பார்க்கவோ யாரிடமும் பேசவோ அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை.
 
 
விஷ்வா இங்கே இத்தனை உரிமையாக பேசிக் கொண்டிருந்ததையும் தாரக் அவனோடு நெருக்கமாக இருந்ததையும் பார்க்கும் போதே அவர்களுக்குள் பல காலமாக பழக்கம் இருப்பது அவளுக்கு புரிந்தது.
 
 
அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக யோசித்துப் பார்க்கும் போது இதெல்லாம் திட்டமிட்டு அழகாக காய் நகர்த்தப்பட்டு நடந்து முடிந்திருப்பது புரிந்தது. இப்போது வரை இதெல்லாம் ஏன் எதற்கு என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை என்றாலும் அதன் மூல காரணமாக இருப்பது யார் என புரிந்தது அவளுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 
 
 
இனி யாரை நம்ப முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டு இருந்தவள், நாட்களை அதன் போக்கு நகர்த்திக் கொண்டிருக்க.. அவள் வயிற்றில் இருந்த குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கியது. 
 
 
மாதம் ஒருமுறை மருத்துவர் ஷாலினி வந்து சிந்துவை பரிசோதித்து அவளுக்கான மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு செல்வார். அதை தொடர்ந்து எடுத்துக் கொண்டதில் இப்போது கொஞ்சம் சிந்துவின் உடல்நிலை தேறி கூட இருந்தது. 
 
 
முன்பு போல் அடிக்கடி வாந்தி மயக்கம் வருவதில்லை. அதற்காக முற்றிலும் நின்று விட்டது என்றும் சொல்ல முடியாது. அவ்வப்போது உள்ளே செல்லும் அனைத்தும் வெளியே வந்து அவளை ஒரு வழியாக்கிவிடும். அந்த நேரங்களில் எல்லாம் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடுபவள், துணைக்க கூட யாரும் இல்லாமல் அவளே தட்டு தடுமாறி சுவரை பிடித்தபடியே வந்து படுக்கையை சேர்வதற்குள் பெரும் சிரமத்தை அனுபவித்து விடுவாள். 
 
 
அந்த நேரங்களில் மட்டும் தன் அன்னையை எண்ணி அவள் கண்கள் கலங்கும். ஆனால் இந்த சூழ்நிலையில் அவரின் ஆதரவும் தனக்கு கிடைக்குமோ என்ற சந்தேகம் சிந்துவினுள் ஆழ வேரூன்றி விட்டிருந்தது. யாரையும் எதற்காகவும் எந்த விதத்திலும் இனி நம்ப அவள் தயாராக இல்லை.
 
 
தன் கூடவே தன் கை அணைப்பில் சொந்தத் தம்பியாக எண்ணி அத்தனை அன்பை வாறி கொடுத்து வளர்த்திருந்தவனின் இந்த துரோகம் சிந்துவை அடியோடு அசைத்துப் பார்த்திருந்தது. தாரக் அவளை தாலி கட்டி தூக்கி வந்து இத்தனை கொடுமைகள் செய்த போது கூட ஏற்படாத ஒரு வலி விஷ்வாவின் இந்த இன்னொரு முகத்தை பார்த்த நொடி அவளுக்கு உண்டாகி இருந்ததது.
 
 
தாரக் யாரோ ஒருவன் அவனிடமிருந்து எதையும் அவளால் எதிர்பார்க்க முடியாது. ஆனால் விஷ்வா அப்படி இல்லையே..! அவனே இதில் உடன் இருந்து செயல்பட்டு இருக்கிறான் என்பதை எண்ணும் போதே ஆரம்ப நாட்களில் எல்லாம் நெஞ்சே வெடித்து விடுவது போல் சிந்துவுக்கு வலித்தது. 
 
 
‘அவள் இங்கே அனுபவித்த அத்தனைக்கும் காரணம் அவள் அன்போடு உடன் இருந்து வளர்த்த தம்பியா என்ற அதிர்வும் அப்பாவியாய் தன்னையே சுற்றி சுற்றி வந்து அன்பை வாறி வழங்கிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு கொடூர முகம் யாரும் அறியாமல் இருக்கிறதா..?’ என்ற அதிர்ச்சியும் சிந்துவை இன்று வரை மீள விடாமல் அழுத்திக் கொண்டே இருந்தது. 
 
 
இந்த அதீத மன அழுத்தமே அவளை பேசா மடந்தையாக்கி இருந்தது. ஆனால் தாரக் எப்போதும் போல் இதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை கொள்வதில்லை. நேரத்திற்கு அவளுக்கு எல்லாம் சரியாக செல்கிறதா என்று மட்டும் கண்காணிக்க சாரதாவிடம் சொல்லி இருந்தான். 
 
 
அதேபோல் மருத்துவர் வந்து பார்த்து செல்லும் போது மட்டும் உடன் இருந்து அவரிடம் அவளின் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து கொள்வான். இன்றும் இன்னும் சில நிமிடங்களில் மருத்துவர் வருவதாக இருந்தது. அதற்காகவே தயாராகி அவருக்காக காத்திருந்தாள் சிந்து. 
 
 
எப்போதும் போல் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு உள்ளே நுழைந்த டாக்டர் ஷாலினியை அதே வெறுமையான முகத்தோடு சிந்து வரவேற்க.. அவருடன் உள்ளே நுழைந்தான் தாரக். 
 
 
எப்போதும் மருத்துவரை தனியே இங்கே வர அனுமதித்ததில்லை தாரக். இப்போதும் அப்படியே தாரக் உடன் வருவதை கண்டவள், ‘எங்கே நான் அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேனோன்னு இன்னும் பயப்படறார் போல..! இனி சொல்லி மட்டும் என் வாழ்க்கையில் என்ன மாறப் போகுது..?’ என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ள.. ஷாலினி தன் போக்கில் வந்த வேலையை பார்க்கத் தொடங்கினார்.
 
 
அவளை பரிசோதித்து விட்டு “ஹ்ம்ம், முன்பை விட இப்போ நல்ல மாற்றம் தெரியுது, நான் கொடுத்த மருந்து சரியா சாப்பிடறீங்கன்னு நினைக்கறேன்.. வாந்தி மயக்கம் எல்லாம் கண்ட்ரோலில் இருக்கா..?” என்ற ஷாலினியை பார்த்து ஒரு தலையசைப்பை மட்டும் சிந்து கொடுத்தாள்.  
 
 
அடுத்தடுத்து அவர் கேட்கும் அனைத்திற்குமே இப்படியே பதில் அளித்துக் கொண்டிருந்தாள் சிந்து. இது இன்று மட்டுமல்ல எப்போதுமே வழக்கம் தான் என்பதால் ஆரம்பத்தில் வினோதமாக தெரிந்த ஷாலினிக்கும் இப்போதெல்லாம் இது பழகி விட்டிருந்ததில் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாதவர், தன் வேலையை மட்டும் கவனித்து கொண்டிருந்தார். 
 
 
அடுத்த பதினைந்து நிமிடம் தாரக்கின் பக்கம் திரும்பியவர், “எந்த பிரச்சனையும் இல்லை சார், உங்க வைஃப் ஹெல்த்தியா நல்லா இருக்காங்க.. பேபியும் அப்படித்தான், நான் சொன்ன மாதிரி இந்த மன்த் என்டில் ஒரு ஸ்கேன் மட்டும் செஞ்சு பார்த்துடுவோம்.. தொடர்ந்து இந்த மருந்துகளை எடுத்துக்க சொல்லுங்க..” என்று அவர் எழுதிக் கொடுக்க.. “ஓகே டாக்டர்..” என்று கேட்டுக் கொண்டவன், “டாக்டர் ஒரு டவுட்.. இப்போ போர் மந்த்ஸ் ஆகிடுச்சு இல்லையா.. இவங்க இனி ட்ராவல் செய்யலாமா..?” என்றான்.
 
 
“டிராவல் ரொம்ப தூரம் இருக்குமா..?” என்று ஷாலினி கேட்கவும் “இல்லை டாக்டர், பிளைட்டில் போற மாதிரி தான் இருக்கும்.. அதுக்கு பிறகு காரில் ஒரு ஹாஃப் ஆன் ஹவர் டிராவல் ஓகே தானே..!” என்றான் தாரக். “அது ஒன்னும் பிரச்சனை இல்லை சார், போகலாம்..” என்று ஷாலினி சொல்லவும், அவரை வழி அனுப்பி வைக்க தயாரானான் தாரக். 
 
 
தாரக் சார்பில் டிரைவரோடு கார் சென்று ஷாலினியை அழைத்து வந்து அதேபோல் வேலை முடிந்தவுடன் அழைத்துச் சென்று விட்டு விடும். இப்போதும் அப்படியே ஷாலினி கிளம்ப.. அவருக்கு கொடுக்க வேண்டிய பீஸ்ஸை கொடுத்தவன், “என் வைஃப் அவங்க அப்பா அம்மாவை பார்க்கணும் ரொம்ப ஆசை படறாங்க, அவங்களால் இங்கே வந்து இவளை பார்க்க முடியாத சிச்சுவேஷன்.. அதான் ட்ராவல் செய்யலாமான்னு கேட்டேன்..” என்று தானாகவே கூறினான் தாரக். 
 
 
“ஓ.. அதான் அவங்க கோபத்துக்கு காரணமா..! நான் கூட யோசிப்பேன் ஏன் எப்போவும் ரொம்ப சைலன்ட்டா இருக்காங்கன்னு, இதுதான் ரீசனா..? இருக்கும் தானே சார், மாசமா இருக்க எல்லா பொண்ணுக்கும் அப்பா அம்மா கூட இருந்து பார்த்துக்கணும்னு ஆசை இருக்கும் தானே..!” என்று ஷாலினி சொல்ல.. “ஆமா டாக்டர் அதான் இத்தனை நாள் அவளோட ஹெல்த்தை காரணமா சொல்லி ட்ராவலை தள்ளி போட்டுட்டே இருந்தேன்.. இப்போ டிராவல் செய்யலாம்னு நீங்க சொல்லிட்டீங்க இல்லை, இனி அவ ஆசையை நிறைவேத்திட வேண்டியதுதான்..” என்றான் தாரக்.
 
 
“மாசமா இருக்க பொண்ணுங்க ஆசைய உடனுக்குடன் நிறைவேத்திடுங்க சார், அதுதான் அவங்களுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.. இல்லை போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷனில் உங்களை வெச்சு செஞ்சுடுவாங்க..” என்று கேலியாக சொல்லிவிட்டு ஷாலினி கிளம்பி விட, அதுவரை புன்னகை முகமாக நின்றிருந்தவன், தீவிரமான முகத்தோடு திரும்பி சிந்துவின் அறைக்குள் நுழைந்தான் தாரக். 
 
 
அப்போதே விழிமூடி ஓய்வாக சாய்ந்திருந்தவள், திரும்ப தாரக் உள்ளே நுழையவும் அவனை புரியாமல் பார்த்தாள் சிந்து. வழக்கமாக ஷாலினி வரும் நேரங்களில் மட்டுமே இங்கே வருபவன், அவரோடு சேர்ந்து வெளியில் சென்று விடுவதோடு சரி, திரும்ப அறைக்குள் வருவதில்லை. 
 
 
இன்று அவன் வந்திருக்கவும், அடுத்து என்ன வரப்போகிறதோ என்பது போல் சிந்து அவனை பார்த்துக் கொண்டிருக்க.. ‘எழுந்திரு..’ என்பது போல் விரலசைத்தான் தாரக். 
 
 
அதில் ஏன் எதற்கு என ஒரு வார்த்தையும் கேட்காமல் சிந்து எழுந்து நிற்க.. அவளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு வெளிவாயிலை நோக்கி நடந்தான் தாரக். 
 
 
இதையெல்லாம் சமையலறையில் இருந்த வாணி புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. சாரதாவிற்கு அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என தெரிந்திருந்ததால் அவர் இறுக்கமான முகத்தோடு நின்றிருந்தார்.
 
 
இங்கு சிந்து தான் குழம்பி போய் வழக்கம் போல் தாரக்கின் செயல்கள் புரியாமல் அவன் பின்னே சென்று கொண்டிருந்தாள். ஆனால் இந்த வீட்டிற்குள் இதே போல் அவளை இழுத்து வந்த போது அவளிடம் இருந்த எதிர்ப்போ மறுப்போ இப்போது சிந்துவிடம் துளியும் இல்லை.
 
 
அவன் இழுத்த இழுப்பிற்கு கீ கொடுத்த பொம்மை போல் சென்று கொண்டு இருந்தவள் கார் கதவை திறந்து ஏறு என்பது போல் தாரக் விழியசைவில் கட்டளையிடவும், மறுபேச்சு பேசாமல் ஏறி அமர்ந்தாள். அன்று இதே காரில் அவளை பின்னுருக்கையில் தள்ளி தாரக் கதவடைத்தது சிந்துவின் மனக்கண்ணில் வந்து போனது.
 
 
அதில் அவளையும் அறியாமல் சிந்துவின் உடல் ஒரு நொடி பயத்தில் குலுங்க.. மறுபக்கம் வந்து ஏறி அமர்ந்த தாரக் காரை எடுத்திருந்தான். அன்று போல் அசுர வேகத்தில் பாயாமல் கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ‘எங்கே செல்கிறோம் ஏன் எதற்கு..?’ என எதுவுமே கேட்க அவளுக்கு தோன்றவில்லை. அவனும் இப்படி ஒருத்தி அருகில் இருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாதது போல் சாலையில் மட்டுமே கவனமாக இருந்தான். 
 
 
விமான நிலையத்தில் சென்று காரை நிறுத்தியவன், அவளை ஒரு பார்வை திரும்பிப் பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்க.. அதுவே அடுத்து அவள் செய்ய வேண்டியதை சிந்துவுக்கு உணர்த்தி இருக்க தானும் இறங்கி நின்றாள். 
 
 
அங்கே இவர்களுக்காகவே காத்திருந்தவன், தாரக்கிடம் இரண்டு பயண சீட்டுகளை நீட்ட.. அதை வாங்கிக் கொண்டவன், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னே செல்ல.. மீண்டும் கீ கொடுத்த பொம்மையாக அவன் பின்னே சென்றாள் சிந்து. 
 
 
இதுவே முன்பு போல் இருந்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்கவோ இல்லை அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்கவோ முயன்றிருப்பாள். ஆனால் இப்போது அதற்கு எல்லாம் அவள் மனம் ஆசைப்படவில்லை.
ஏதோ இனி தன் வாழ்வில் எதுவுமே இல்லை என வாழ்க்கையையே வெறுத்தது போலான மனநிலையோடு அவன் பின்னே சென்றவள், விமானத்தில் அருகருகில் அமர்ந்திருந்த போதும், அடுத்து அதே போல் விமானத்திலிருந்து இறக்கி வெளியில் வந்து மற்றொரு காரில் அவளை ஏற சொன்ன போதும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருப்பதை முதல் முறையாக கேள்வியாக பார்த்தான் தாரக்.
 
 
இத்தனை மாதத்தில் முதல் முறையாக வெளியில் வருபவளிடம் இருந்து வேறு சில செயல்களை அவன் எதிர்பார்த்து இருந்தானோ..! என்னமோ..? அதெல்லாம் இல்லாமல் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு சிந்து நடந்து கொண்டிருப்பதை கூர்மையாக கவனித்தாலும் அவனும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
 
 
எங்கோ பார்வையை பதித்தபடி காரில் அமர்ந்திருந்தவளுக்கு கண்ணில் பட்ட காட்சிகள் எதுவும் கருத்தில் பதியவே இல்லை. ஒரு வளைவில் கார் திரும்பி பெரிய கேட்டினுள் நுழையவும், அப்போதே சுற்றுப்புறம் புரிய.. பார்வையை வேகமாக சுழற்றியவளுக்கு அவளின் வீட்டினுள் கார் நுழைவது தெரிந்தது. 
 
 
வீட்டிற்கும் கேட்டிற்கும் இடையே இருந்த பறந்து விரிந்த மணற்பரப்பில் கார் மிதமான வேகத்தில் சென்று நிற்க.. சிறு பதட்டம் தன்னையும் அறியாமல் சிந்துவின் உடலில் வந்து ஒட்டிக்கொண்டது. 
அதில் வேகமாக பார்வையை சுழற்றி தன் கண் முன் காணும் காட்சிகள் நிஜம்தானா என உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றவளின் பார்வை தாரக்கின் பக்கம் முதல்முறையாக திரும்ப.. அவனும் அவளை திரும்பி பார்த்து லேசாக புன்னகைத்தான். 
 
 
ஆனால் அந்தப் புன்னகை அவளுள் பெரும் குளிரை பரப்பியது. அத்தனை கொடூரமான புன்னகை அவன் இதழில் வந்து போக.. முன்பை விட இந்த நொடி தாரக்கை பார்க்கும் போது அவளுள் பெரிதாக ஒரு பயம் பரவியது.
 
 
சுற்றிலும் அங்கங்கே நின்றிருந்த ஆட்கள் எல்லாம் புதிதாக வந்து நிற்கும் காரை கேள்வியாக பார்த்தபடியே அதை நெருங்க.. அவளை இறங்கு என்பது போல் விழியசைவில் சொல்லிவிட்டு கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான் தாரக்.
 
 
காரில் இருந்து இறங்கிய தாரக்கை கண்டு பதட்டமான நாகராஜனின் ஆட்கள், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தடுமாறிய ஒரு நொடியில் இன்னும் இறங்காமல் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தவளை லேசாக குனிந்து பார்த்த தாரக் “உன்னை இறங்குன்னு சொன்னேன்..” என்றான் அழுத்தமான குரலில். 
 
 
இவ்வளவு நேரமும் அவன் சொன்னதை எல்லாம் மறுக்காமல் செய்து கொண்டிருந்தவளுக்கு, இதை செய்ய மட்டும் கொஞ்சமும் தைரியம் வரவில்லை. கால்கள் தடதடக்க.. மனம் அதைவிட வேகமாக பந்தய குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்ததில், அசையாமல் கைகளை பிசைந்தபடியே சிந்து கலவரமான முகத்தோடு அமர்ந்திருந்தாள். 
 
 
“அண்ணே.. அண்ணே.. இங்கே வாங்களேன்.. கொஞ்சம் வெளியே வந்து பாருங்களேன்..” என்று நாகராஜனின் ஆட்கள் குரல் கொடுத்திருக்க.. “ஏன்டா இப்படி கத்தறீங்க..? அப்படி என்ன நடந்துச்சு ஊரில் இல்லாத அதிசயத்தை கண்ட மாதிரி சத்தம் போடறீங்க..” என்று எகத்தாளமாக கேட்டபடியே வந்தவர், தன் முன் காரில் சாய்ந்து நின்றிருந்தவனை கண்டு விழிகள் சிவக்க முறைத்துக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் காரினுள் குனிந்து “இப்போ நீயா இறங்கறியா..? இல்லை நான் வந்து தூக்கிட்டு போகணுமா..!” என்று பல்லை கடித்தபடி கேட்டிருந்தான் தாரக். 
 
 
அதில் கண்டிப்பாக சொன்னதை செய்வான் என்று புரிய.. இப்போது இருக்கும் சூழ்நிலையை மேலும் கடினமாக்கிக் கொள்ள விரும்பாத சிந்து, அவளுள் மீதம் இருந்த தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி மெல்ல காரில் இருந்து இறங்கி நின்றாள். 
 
 
இருவரையும் இப்படி ஜோடியாக இங்கே கண்ட நாகராஜன் எரிமலைக்கு நிகரான கொந்தளிப்போடு அவர்களை கண்கள் சிவக்க முறைத்தார். 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 392
Topic starter  

ஹாய் டியர்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 

MNM - 16

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/267/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா 


This post was modified 1 week ago 3 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 392
Topic starter  
 
 
நேசம் – 17
 
தன்முன் வந்து நின்றிருந்தவனை அதிர்வோடு பார்த்த நாகராஜன், ஆத்திரமாக முறைக்க.. அவர் மணக்கண்ணில் காவல் நிலையத்தில் நரகமாக கழிந்த மூன்று நாட்கள் நினைவுக்கு வந்தது. 
 
 
தனக்குப் பிடிக்காதவர்களை இழுத்து வந்து வீட்டிற்கு பின்புறம் இதற்கென தனியே இருக்கும் இடத்தில் யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்து சித்திரவதை செய்வது நாகராஜனின் நெடுநாள் வழக்கம். அதை அவருக்கே செய்தது போல் இருந்தது அந்த மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் அவர் இருந்த நிலை.
 
 
நாகராஜனையும் அவரின் ஆட்களையும் கைது செய்து அழைத்துச் சென்ற காவலர்கள், காவல் நிலையத்தின் பின்னே இருந்த இருட்டறையில் அவர்களை அடைத்து வைத்திருந்தனர்.
 
 
அன்று உள்ளே இழுத்துச் சென்று இவர்களை அடைத்து வைத்ததோடு சரி, அதன் பின் யாரும் இவர்களை விசாரிக்கவோ, அடித்து துன்புறுத்தவோ எதற்குமே அந்த மூன்று நாட்களில் இவர்கள் இருந்த அறைக்கு வரவே இல்லை.
 
 
முதலில் என்ன நடக்கிறது என புரியவில்லை என்றாலும், பின் இவர்களை திட்டமிட்டு இங்கே அழைத்து வந்து அடைத்து வைத்திருப்பது நாகராஜனுக்கு நன்றாகவே புரிந்தது. 
 
 
தங்களை காவலர்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் போது கூட, முறைப்படி இது தன்னை சார்ந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும் உடனே வழக்கறிஞர் வந்து தன்னை ஜாமினில் எடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த நாகராஜன் தன்னை தேடி யாரும் வராததில் யோசனையானார். 
 
 
ஏனெனில் முறையாக இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என அப்போது அவருக்குத் தெரியவில்லை. அதோடு இவர்களின் அலைபேசிகளும் வாங்கி அணைத்து வைக்கப்பட்டிருக்க.. திடீரென கிளம்பி சென்றவர்கள் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பாததில் கவலையானார் சுஜாதா.
 
 
எப்போதும் பொறுப்பான குடும்ப தலைவனாக எங்கே செல்கிறோம் எப்போது வருவோம் என்பதை எல்லாம் தெரிவிக்கும் பழக்கம் நாகராஜனுக்கு இல்லை என்றாலும் அவரை சுஜாதாவால் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும். இந்த முறை அதுவும் முடியாமல் போனதோடு அவர்களும் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாமல் இருக்க.. சுஜாதாவின் மனதில் பயமேகங்கள் சூழ்ந்தது.   
 
 
தன் கணவன் மற்றும் மகனின் நிலையை எண்ணி பயந்தவர், அவர்களின் வழக்கறிஞரிடம் சென்று விவரத்தை சொல்ல.. அவருமே தன்னாலான முறையில் எல்லாம் முயன்று பார்த்தும், நாகராஜன் குழுவினர் இருக்கும் இடத்தை யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை. 
 
 
நான்காம் நாள் காலை சரியான உணவோ உறக்கமோ இல்லாமல் கிட்டத்தட்ட முழு மயக்கத்திற்கு அனைவரும் சென்றிருந்த நிலையில், அவர்களை ஒரு வேனில் அழைத்துச் சென்று ஏதோ ஒரு ஆள் அரவமற்ற இடத்தில் இறக்கிவிட்டு அந்தக் காவலர்கள் சென்று விட்டனர். 
 
 
விடிந்த பிறகே அந்த வழியாக சென்றவர்களிடம் உதவி கேட்டு தன்னை சார்ந்தவர்களை வரவழைத்து நாகராஜன் தன் குழுவினரோடு வீடு திரும்பு இருந்தார். 
 
 
இதெல்லாம் நடந்து ஒரு மாதமாகி இருந்தாலும் அந்த நிகழ்வின் தாக்கம் இப்போதும் ரணமாய் அவர் மனதில் இருக்க.. அதற்கு காரணமானவனை பழிவாங்க வேண்டும் என்ற வெறியும் அதே அளவு அவருள் வேரூன்றி இருந்தது. 
 
 
ஆனால் அவர் தேடிச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் அவனே தன் முன் வந்து நிற்பதை கண்டதும் எரிமலையானார் நாகராஜன்.
 
 
“ஏய்.. உனக்கு என்னடா இங்கே வேலை..? எவ்வளவு தைரியம் இருந்தா இங்கே வந்து இருப்பே..!” என்று ஆத்திரத்தோடு கத்தியபடியே அவர் அங்கிருந்து வேகமாக இறங்கி வர.. “என்னை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டியாமே..! அதான் நானே பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..” என்றான் கொஞ்சமும் அவரின் கோபத்தை எல்லாம் கணக்கில் எடுக்காத நக்கல் குரலில் தாரக். 
 
 
“என்னடா நக்கலா..? இதை எல்லாம் உன் இடத்தில் வெச்சுக்கோ, இப்போ நீ வந்திருக்கறது என் இடம்.. உன்னை கண்டம் துண்டமா வெட்டி நாய்க்கு போட்டுடுவேன்..” என்றவர் “என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..? அந்த அருவாளை எடுத்துட்டு வாங்கடா..” என கத்தினார். 
 
 
அதற்கு ஒரு இதழ்பிரியா சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்த தாரக், “பயந்துட்டேன்..” என்றான். அவனின் அந்த உடல் மொழியும் பேச்சும் நாகராஜனை யோசனையாக்க.. “உன் இடத்தில் இத்தனை பேர் அருவாளோட இருப்பாங்கன்னு தெரிஞ்சும் கொஞ்சமும் யோசிக்காம தனியா வந்திருக்கேனா எந்த பிளானும் இல்லாமலா வந்திருப்பேன்..?” என்றான் நிறுத்தி நிதானமான குரலில் தாரக். 
 
 
அன்றும் இப்படியே அவன் எந்த பதட்டமும் இல்லாமல் அவர்களை எதிர்கொண்டது நாகராஜனின் நினைவுக்கு வர, “என்னடா பெரிய பிளான்..? மிஞ்சிப்போனா போலீஸ்கிட்ட சொல்லி இருப்பே.. வர சொல்றா எவனா இருந்தாலும் பார்த்துக்கலாம், எதுவும் செய்யாம மூணு நாள் என்னை இருட்டறையில் உட்கார வெச்ச இல்லை, அதுக்கு உன்னை வெட்டி கூறு போட்டுட்டு மொத்தமா ஜெயிலுக்கு போக கூட நான் தயாரா இருக்கேன், வர சொல்றா பார்த்துக்கலாம்..” என்று நாகராஜன் தன் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு திரும்ப.. இதையெல்லாம் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சிந்து அவர் பார்வையில் விழுந்தாள். 
 
 
அவளைப் பார்த்ததும் நாகராஜனின் ஆத்திரம் மேலும் உச்சத்திற்கு சென்றது. “ஓ***ளி நா** உன்னை பெத்து வளர்த்ததுக்கு நல்ல மரியாதை செஞ்சுட்டே.. அப்படி என்னடி..” என்று காது கூசும் அளவுக்கான கேவலமான வார்த்தைகளால் அவர் சிந்துவை அர்ச்சித்துக் கொண்டிருக்க.. இத்தனை பேர் முன்பு பெற்ற மகள் என்றும் பாராமல் நாகராஜன் இவ்வளவு மோசமாக பேசுவதில் உண்டான அவமானத்தோடு விழிமூடி இதழ் கடித்து நின்றிருந்தவள் கண்ணீரோடு பார்வையை உயர்த்தவும் நாகராஜனின் பின்னே வீட்டு வாயிலில் பதட்டத்தோடு வந்து நின்ற சுஜாதாவின் அருகில் பவ்யமாக ஒன்றுமறியாத பாவணையோடு நின்ற விஷ்வா தெரிந்தான். 
 
 
தோட்டத்திலிருந்த சுஜாதாவிற்கு இப்போதே சிந்து வந்திருப்பதை பற்றி செய்தி தெரிய வந்திருந்தது. அதில் கோபத்தில் இருக்கும் நாகராஜன் அவளை ஏதும் செய்து விடக்கூடாதே என்ற பதட்டத்தோடு அடித்துப் பிடித்து ஓடி வந்தவரை, கை தாங்கலாக பிடித்தபடி விஷ்வா அழைத்து வந்த காட்சி சிந்துவின் கவனத்தில் பதிய.. அவனையே இரு நொடிகள் வெறுமையாக பார்த்தவள், பின் தன் பார்வையை தழைத்துக் கொண்டாள். 
 
 
அதற்குள் நாகராஜனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவரின் ஆட்கள் பொருட்களோடு வந்து சூழ்ந்து கொள்ள.. கொடூரமாக தாரக்கை பார்த்து புன்னகைத்தவர், “இந்த வீட்டில் இருந்து உன்னால் ஒரு அடி வெளியே எடுத்து வைக்க முடியாதுடா..” என்றார். 
 
 
“அதையும் பார்த்திடலாம் மாமனாரே..!” என தாரக் நக்கலாக சொல்லவும், “அடச்சீ.. வாயை மூடு, யாருடா உனக்கு மாமனார்..” என்றார் எரிச்சலோடு நாகராஜன். “ஏன் நீங்க தான்..? இதில் உங்களுக்கு சந்தேகம் வேறயா..! எனக்காகவே ஆசையா அருமையா ஒரு பெண்ணை பெத்து கொடுத்து இருக்கீங்களே.. அப்போ நீங்க எனக்கு மாமனார் தானே..!” என்று அவரின் இத்தனை ஆத்திரத்திற்கும் கொஞ்சமும் பதட்டமில்லாமல் கேலியாகவே பேசிக் கொண்டிருந்தான் தாரக். 
 
 
இது கொஞ்சம் கொஞ்சமாக நாகராஜனை தூண்டி விட்டுக் கொண்டே இருக்க.. “அந்த அருவாளை கொடுடா..” என முத்துவிடம் திரும்பி கத்தியவர், தாரக்கை நோக்கி பாய இருந்த நொடி, அவரை பிடித்து தடுத்து நிறுத்தி “ப்பா, வேண்டாம் திரும்ப இந்த பிரச்சனையிலும் மாட்டிக்காதீங்க..” என்றான் அருண். 
 
 
“இதுக்கு மேலே என்னடா பிரச்சனை வரணும்..? இவனால் நான் என் வாழ்க்கையில் பார்க்காத அளவுக்கு எல்லா அவமானங்களையும் அசிங்கங்களையும் பார்த்தாச்சு.. என் வீட்டை தேடி வந்து நான் ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நிறுத்தி என் கண்ணு முன்னேயே என் பொண்ணை தூக்கி போனதில் தொடங்கி போன மாசம் நடந்த பிரச்சனை வரை பார்த்தாச்சு.. இதை எல்லாம் விட புதுசா வேற என்ன அசிங்கம் வந்துடும்..? எதையுமே செய்யாம போலீஸ் ஸ்டேஷனில் மூணு நாள் சோறு தண்ணி இல்லாம உட்கார வெச்சான் இல்லை.. அதுக்கு இவனை வெட்டிட்டு போய் உட்கார்ந்துக்கறேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று எகிறினார். 
 
 
“அச்சச்சோ, நீங்க அப்படி செஞ்சுட்டா பிறக்க போற உங்க பேர குழந்தைக்கு அப்பா இல்லாம போயிடுமே மாமனாரே..!” என அவன் நக்கலாக சொல்ல.. அதுவரை கோபத்தில் மகனிடம் பொங்கிக் கொண்டிருந்த நாகராஜன், பேச்சை நிறுத்தி நெற்றி சுருங்க தாரக்கை பார்த்தார். 
 
 
“ஆமா மாமனாரே.. நீங்க தாத்தாவாக போறீங்க.. அந்த சந்தோஷஷஷஷஷஷஷஷஷமான விஷயத்தை சொல்லிட்டு போக தான் வந்தேன்..” என்றவன் வேண்டுமென்றே அந்த வார்த்தையில் அதீத அழுத்தத்தை கொடுத்து ஏகத்திற்கும் நக்கல் தெறிக்கும் குரலில் கூறினான் தாரக்.
 
 
அதுவரை நாகராஜன் எந்த நேரத்தில் யாரை என்ன செய்து விடுவாரோ என்ற பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா, இந்த வார்த்தைகளை கேட்ட அடுத்த நொடி முகம் மலர்ந்து மகளைப் பார்த்த அடுத்த கணமே அவரின் முகத்தில் பெரும் கலவரம் ஒன்று உருவானது.
 
 
“இங்கே பிரச்சனை செய்யவே வந்து இருக்கீங்களா..?” என்று இப்போது கோபத்தோடு அருண் தாரக்கை பார்த்து கேட்டிருக்க.. “இது என்னடா வம்பா போச்சு.. உங்க வீட்டுக்கு வாரிசு வர போகுதுன்னு ஆசையா சொல்ல வந்தா பிரச்சனை செய்ய வந்து இருக்கேன்னு சொல்றீங்க..!” என்றான் தாரக். 
 
 
“உங்களுக்கு குழந்தை பிறந்தா எங்களுக்கு என்ன..? அதான் யாரும் வேணாம்னு முடிவு செஞ்சு கல்யாணம் முடிச்சுட்டு போயிட்டீங்க இல்லை.. இப்போ குழந்தை வந்தா மட்டும் எல்லாம் மாறிடுமா..! முதலில் இங்கிருந்து கிளம்புங்க..” என்று கோபத்தோடு சொல்லி இருந்தான் அருண். 
 
 
“எங்க வீட்டு பொண்ணு எங்கே..? எங்க வீட்டு பொண்ணை காணோம்.. எங்க பொண்ணை நாங்க பார்க்கணும்னு எல்லாம் நீங்க தானே தேடி அலைஞ்சீங்க..! இதோ இப்போ உங்க வீட்டு பொண்ணை கூட்டிட்டு வந்து உங்க கண்ணு முன்னே நிறுத்தி இருக்கேன்.. ஆனா இங்கிருந்து போன்னு சொன்னா என்ன அர்த்தம்..? அப்போ உங்க வீட்டு பொண்ணு உங்களுக்கு வேண்டாமா..!” என்று தாரக் இழுத்து நிறுத்தி ஒரு மாதிரி கேலி குரலில் கேட்டான். 
 
 
“உங்க சங்காத்தமே வேண்டாம், முதலில் இங்கே இருந்து கிளம்புங்க, தேவையில்லாம இங்கே வந்து பிரச்சனை செய்யாதீங்க..” என்றான் அருண். அதற்கு தாரக் ஏதோ பதில் சொல்ல முயல்வதற்குள் “என்னடா அவனை அவ்வளவு ஈஸியா கிளம்ப சொல்றே..! அப்படியெல்லாம் அவனை சாதாரணமாக விட்டுட முடியாது, தானா வந்து சிக்கி இருக்கான்.. இன்னைக்கு அவன் கைமா தான்..” என்றார் நாகராஜன்.
 
 
“விளையாடாதீங்க மாமனாரே..! வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு விருந்து வைக்க ஆட்டை வெட்டி தான் பார்த்திருக்கேன்.. நீங்க என்ன மாப்பிள்ளையை வெட்டறேன்னு சொல்றீங்க..” என்று அப்போதும் தாரக் கேலி செய்து கொண்டே இருக்க.. “யாருடா மாப்பிள்ளை.. அவ திமிர் எடுத்து உன் கூட ஓடி வந்தா நீ எனக்கு மாப்பிள்ளை ஆகிடுவியா..?” என்று அதற்கும் ஏறினார் நாகராஜன். 
 
 
“அப்போ இல்லையா..! அடடா இது தெரியாம உன் பொண்ணு கூட நாலஞ்சு மாசம் வாழ்ந்துட்டேனே..!! இப்போ என்ன செய்யலாம்..?” என்று அப்போதும் தாரக் கேலி செய்ய.. “டேய் யாருகிட்ட வம்பு செய்யற..?” என நாகராஜனின் ஆட்கள் பொருட்களோடு தாரக்கை சுற்றி வளைத்தனர்.  
 
 
“அய்யய்யோ.. இது என்ன உங்க பொண்ணை பார்க்கணும்னு நீங்களும்.. உங்களை பார்க்கணும்னு உங்க பொண்ணும் ரொம்பபபப ஆசைப்பட்டீங்கன்னு பாசமா கூட்டிட்டு வந்தா.. இங்கே என் உயிருக்கே உத்தரவாதம் இருக்காது போலேயே..! இது சரி இல்லை, இதெல்லாம் கொஞ்சம் கூட சரிப்பட்டு வராது.. 
 
 
நானும் பார்க்கறேன், கல்யாணமான நாளிலிருந்து எங்கே போனாலும் என்னை தேடி விரட்டிட்டு ஆளுங்களோட வந்து எனக்கு உயிர் பயத்தை காட்டிட்டு இருக்கீங்க.. இது சரிப்பட்டு வராது, நீங்களே உங்க பொண்ணை வெச்சுக்கோங்க..” என்றிருந்தான் தாரக். 
 
 
இதில் அவ்வளவு நேரம் கத்திக் கொண்டும் துள்ளிக் கொண்டும் இருந்த நாகராஜனும் அவர் ஆட்களும் திகைப்போடு அப்படியே நின்று அவனை பார்க்க.. “நான் எங்க வீட்டுக்கு ஒரே பையன்.. உங்க வீட்டுக்கு பொண்ணை ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சதுக்கு எல்லாம் என்னால் சாக முடியாது.. உங்க பொண்ணே எனக்கு வேண்டாம்ப்பா..! நீங்களே பத்திரமா வெச்சுக்கோங்க.. நான் கிளம்பறேன்..” என்று தோள்களை குலுக்கியவாறே சாதாரணமாக சொல்லி இருந்தான் தாரக். 
 
 
அந்த நொடி சிந்துவுக்கு பெரும் அதிர்ச்சி எல்லாம் ஏற்பட்டிருக்கவில்லை. இங்கே அவளை அழைத்து வந்த போதே பெரிதாக ஏதோ வரப் போகிறது என அவள் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்க.. அது என்னவென்று அறிய எண்ணி காத்திருந்தவள் தாரக் இந்த வார்த்தைகளை உச்சரித்த நொடி விஷ்வாவை மட்டுமே பார்க்க.. அவன் விழிகளில் கொடூரமாக ஒரு சின்ன மின்னல் வந்து போனது.
 
 
அதை சிந்து கவனித்துக் கொண்டு இருக்கும் போதே, விஷ்வாவும் அவளை பார்த்திருந்தான். அடுத்த நொடி அவன் பார்வையை தழைத்துக் கொள்ள.. சிந்துவின் பார்வை முழுக்க அவன் மேல் மட்டுமே இருந்தது.
 
 
“என்ன விளையாடறீங்களா..?” என்று அருண் கோபமாக கத்த.. “இல்லையே.. நான் ரொம்ப சீரியஸா பேசறேன், எனக்கு உயிர் முக்கியம் பாஸ்.. உயிரை விட காதல் ஒன்னும் பெருசு இல்லை.. என் வீடு வரைக்கும் வெரட்டி தேடி வந்து வெட்ட பார்த்திருக்கீங்க.. நாளைக்கு எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன செய்ய..? எனக்கு பயமா இருக்குப்பா.. உங்க பொண்ணும் வேண்டாம்.. நீங்களும் வேண்டாம்.. என்னை நிம்மதியா வாழ விடுங்க போதும்..” என்று அப்பாவி போல் அவன் பேசிக் கொண்டே செல்ல.. “டேய்.. டேய்.. நடிக்காதடா..! இதுக்கெல்லாம் பயப்படறவனா நீ..? இப்போ என்ன திட்டத்தோட இங்கே வந்து இருக்கே..? எதுக்காக அவளை இங்கே விட்டுட்டு போக நினைக்கறே..” என்று கத்தினார் நாகராஜன். 
 
 
“ஐயையோ.. இப்படி எல்லாம் கத்தாதிங்க மாமனாரே.. எனக்கு பயமா இருக்கு..” என தாரக் காதை பொத்திக்கொள்ள.. “பாருடா.. பாருடா இவன் எப்படி நடிக்கறான் பாரு.. என்னை வெறுப்பேத்தறதுக்குனே வந்து இருக்கான்..” என்று அருணிடம் தொடங்கியவர் “ஏய், எதுக்குடி இங்கே வந்தீங்க..?” என்று அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டு சிந்துவின் பக்கம் திரும்பினார் நாகராஜன். 
 
 
அவள் என்னவென சொல்வாள்..! இங்கு நடப்பதை பற்றி அவளுக்கு என்ன தெரியும்..? அதில் சிந்து பதிலேதும் சொல்லாமல் நின்றிருக்க.. “உனக்கும் குளிர் விட்டு போச்சில்லை.. இவன் கூட சேர்ந்து திமிர் அதிகமாகிப்போச்சு..” என மிரட்டியவர், “மரியாதையா சொல்றேன் இங்கே இருந்து கிளம்பிடுங்க.. இல்லை..” என மேலும் ஏதோ அவர் சொல்ல வருவதற்குள் “முடியாது.. முடியாது.. உங்க பொண்ணை நீங்களே வெச்சுக்கோங்க.. அவ என்னை காதலிச்சதும் கல்யாணம் செஞ்சுக்கிட்டதும் தான் உங்களுக்கு பிரச்சனைனா நான் என் காதலை ரத்து செஞ்சுடறேன்.. வேணும்னா நீங்க இந்த கல்யாணத்தை ரத்து செஞ்சுக்கோங்க..” என்று விட்டு தாரக் காரில் ஏறி அமர்ந்தான். 
 
 
இவன் என்ன சொல்கிறான் எனப் புரியாமல் அனைவரும் திகைத்து நிற்கும் போதே காரை ரிவேர்ஸ் எடுத்திருந்தான் தாரக். இதில் சிந்து செய்வதறியாது அவனை பார்க்க.. அதே நேரம் தாரக்கும் அவளை ஒரு பார்வை பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தான். 
 
 
நடப்பது என்னவென்று புரியாமல் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அவர்களையும் அறியாமல் கார் வெளியேற வழி விட்டனர். அதில் கார் வெளி கேட்டை நெருங்க.. அதே நேரம் முழு போதையில் உண்டான தள்ளாட்டத்தோடு இடையில் வந்து நின்றான் சபரி. 
 
 
அதில் அவன் மேல் மோதி விடக் கூடாது என்று தாரக் காரை நிறுத்த.. விழிகளை சுருக்கி உள்ளே அமர்ந்திருப்பவனை தலை சாய்த்து பார்த்தவன், “ஹேய்.. நீ தானே அது..!” என்றான் குழறலான குரலில் சபரி. அதில் அவன் சொல்ல வருவது புரியாமல் தாரக் யாரோ ஒரு குடிகாரன் உளறுகிறான் என்பது போல் பார்த்திருந்தான்.
 
 
“அன்னைக்கு நீ தானே என்கிட்ட வந்து நாகராஜன் அண்ணே வீடு எங்கே இருக்குதுன்னு கேட்டே..? நான் இவனுங்ககிட்ட சொல்றேன், ஆனா இவனுங்க நம்ப மாட்டேங்கறாங்க.. அது நீதானே..!” என்றான் கொஞ்சமாக காரின் மேல் சரிந்து படித்தபடியே தேய்த்து கொண்டு முன் இருக்கைக்கு அருகில் வந்து நின்றான் சபரி.
 
 
அதில் விழிகளை சுருக்கி தாரக் யோசனையாக சபரியை பார்த்தான். “ஒருநாள் இவனுங்க தான் உன் போட்டோ எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுத்து உன்னை தெரியுமான்னு கேட்டானுங்க.. நான் இன்னும் கூட அதை வெச்சுருக்கேன்.. அந்த போட்டோ பார்க்கறியா..?” என்று தன் கையில் இருந்த பாட்டிலை கீழே வைத்துவிட்டு அவசரமாக தன் பாக்கெட்டில் தேடி எட்டாக மடித்து வைத்திருந்த அவன் போட்டோவை எடுத்து காண்பித்தான் சபரி.
 
 
“இது.. இது நீதானே..! நான் சொன்னேன், எனக்கு தெரியும்டா.. நான் பார்த்து இருக்கேன்.. எட்டு வருஷம் முன்னே என்கிட்ட தான் உங்க வீட்டுக்கு வழி கேட்டான்னு நான் தான் சொன்னேன்.. எவனும் காது கொடுத்து கூட கேட்கலை, திரும்ப வந்து இவனை தெரியுமான்னு என்கிட்டயே கேட்கறானுங்க, பைத்தியக்கார பயலுங்க..” என்றான் சபரி. 
 
 
இப்போதே அவன் குடித்துவிட்டு உளறவில்லை, தன்னை பற்றி தான் பேசுகிறான் என தாரக்கிற்கு புரிய.. “ஆமா அது நான் தான், பரவாயில்லையே உங்களுக்கு ஞாபகம் இருக்கே..” என்றான் தாரக்.
“பார்த்தியா.. நான் சரியா சொன்னேன், ஆமா அன்னைக்கு நீ இவ்வளவு பெரிய காரில் எல்லாம் வரலையே.. அழுக்கு டிரஸோட அறக்க பறக்க ஓடி தானே வந்தே..! இப்போ எப்படி இவ்வளவு பெரிய கார்.. வசதி எல்லாம் வந்தது..?” என்றான் சபரி.
 
 
“ஹாங், அது சீக்ரெட்.. உனக்கு வேணும்னா சொல்லு அப்புறமா சொல்றேன்..” என தாரக் மெல்லிய குரலில் கிசுகிசுக்க.. “வேணாம்பா எனக்கு பெரிய ஆசை எல்லாம் இல்லை.. டெய்லி எனக்கு ஒரு ஃபுல் இருந்தா போதும், என் வாழ்க்கை சொர்க்கம்..” என்றான் சபரி. 
 
 
“உன்னை மாதிரி எல்லாரும் இருந்துட்டா வாழ்க்கையில் யாருக்குமே பிரச்சனை இருக்காது..” என்ற தாரக் தன்னிடம் இருந்த நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து சபரியிடம் நீட்டினான். 
 
 
அதை இரு கைகளிலும் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டவன், “ஐயா மகாராசா நீ பாரி வள்ளல்யா.. நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும்..” என்று இருக்கையையும் தூக்கி வாழ்த்த.. “உங்க ஆசிர்வாதம்..” என தலையை சாய்த்து சொல்லியவன், “நான் கிளம்பட்டுமா..?” என்றான். 
 
 
“மகராசனா போய்ட்டு வாங்க சாமி.. எப்போ வேணும்னாலும் வாங்க.. நான் இருக்கேன், இந்த ஊரில் உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க நான் செய்றேன்..” என்று மார்தட்டி சபரி சொல்ல.. “ஞாபகம் வெச்சுக்கறேன்..” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினான் தாரக். அவன் சென்ற திசையை சபரி பார்த்துக் கொண்டு நிற்க.. வேகமாக வந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்து இருந்தார் நாகராஜன். 
 
 
அதில் புரியாமல் அவரைப் பார்த்த சபரி “என்னாச்சு ண்ணே..?” எனவும் “யார்ரா அவன்..? உனக்கு அவனை எப்படி தெரியும்..?” என்று கோபமாக நாகராஜன் கேட்க.. “ஐயோ இதை தான் ண்ணே நான் அன்னையிலிருந்து சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க தான் கேட்கலை..” என்றான் சபரி.
 
 
“அப்படியா..! சரி எங்கே இப்போ சொல்லு கேட்போம்..” என்று நாகராஜன் சொல்லவும், “எட்டு வருஷம் முன்னே ஒரு நாள் ராத்திரி நம்ம தோப்பில் நான் படுத்து இருக்கும் போது உங்க வீட்டுக்கு எப்படி போகணும்னு கேட்டுட்டு வந்தார் ண்ணே.. நான் தான் வழி சொல்லி அனுப்பிவிட்டேன், அப்போவும் பாவம் பதறி அடிச்சு ஓடும் போது கீழே கூட விழுந்தார்.. நான் வந்து தூக்கி விடலாம்னு நினைக்கும் போதே எழுந்து ஓடினார்.. ஏதோ அவசரம் போலன்னு நினைச்சேன்.. ஆனா அந்த முகம் அது என்னை என்னவோ செஞ்சது.. இப்போவும் நடு ராத்திரி கண்ணு கலங்க பதட்டமா வந்து நின்ன அந்த கோலத்தை என்னால் மறக்க முடியாது.. அது அன்னைக்கு முழுக்க என் மனசை என்னவோ செஞ்சுது, அதான் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..” என்றான் குழறலாக என்றாலும் எதையும் மறக்காமல் தெளிவாக சபரி.
 
 
இதில் நெற்றியை சுருக்கிய நாகராஜன், “எட்டு வருஷம் முன்னே எதுக்காக என்னை தேடி வந்தான்..? என்ன விஷயமா இருக்கும்னு உனக்கு ஏதாவது தெரியுமா..? அதுவும் நடு ராத்திரி நேரம் வந்திருக்கான்..!” என்று நாகராஜன் கேட்க.. தெரியவில்லை என்பது போல் தலையசைத்தான் சபரி. 
 
 
“அன்னைக்கு நடந்த வேற ஏதாவது உனக்கு ஞாபகம் இருக்காடா..?” என்று கேட்டு சபரியிடம் இருந்து வேறு எதுவும் தகவல் கிடைக்குமா என அறிய முயன்றார் நாகராஜன். 
 
 
“வேற.. வேற..!” என யோசித்தவன், “ஹாங்.. மறுநாள் தான் நம்ம சின்னவர் சம்சாரம் கிணத்தில் விழுந்து செத்துட்டாங்க ண்ணே.. இத்தனை வருஷமா நான் இவரை மறக்காம இருக்க அதுவும் ஒரு காரணம்.. வருஷா வருஷம் நான் தானே ண்ணே வீட்டில் சடங்குக்கு தேவையான எல்லாம் செய்வேன்.. அதான் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கு..” என்று சபரி சொல்லிய நொடி தீயை மிதித்தது போல் திகைத்து நின்றார் நாகராஜன். 
 
 
“நல்ல தெரியுமா..? அவனா இவன்..!” என்று பதட்டத்தோடு நாகராஜன் கேட்கவும் “ஆமாங்க ண்ணே, எனக்கு நல்லா தெரியும்.. இப்போ நீங்க கூட பார்த்தீங்களே அந்த தம்பியும் ஆமான்னு தானே சொல்லிட்டு போச்சு..” என்று சபரி அடித்துக் கூற, நாகராஜனின் பார்வை முத்துவின் பக்கம் அவசரமாக திரும்பியது. 
 
 
அதில் சபரி சொல்வதை எல்லாம் கேட்டு தீவிர யோசனைக்கு சென்றிருந்த முத்துவின் முகமும் இப்போது கலவரமாக மாற.. பயத்தோடு நாகராஜனை பார்த்தான் முத்து. 
 
 
இருவரும் இப்படி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை அருண் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. விஷ்வாவோ அவர்களை பழி வெறியோடு கொடூரமாக பார்த்துக் கொண்டிருந்தான். 
 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 392
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
MNM - 17
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page