All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

கையில் மிதக்கும் கன...
 
Notifications
Clear all

கையில் மிதக்கும் கனவா நீ..! (இரண்டாம் பாகம்) - Story Thread

Page 1 / 2
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 1
 
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்                
குறைகள் களைய இதுவே தருணம்
 
 
என்ற சீர்காழியின் கம்பீர குரல் அந்த இளம்காலை வேலைக்கு மேலும் இனிமை சேர்க்க அந்தப் பாடலின் ஒலியில் உறக்கம் கலைந்தான் சஞ்சய்.
 
 
கண்ணை மூடிக் கொண்டே உருண்டு நேராகப் படுத்தவன், கண்ணைத் திறந்து “குட் மார்னிங் டி மை செல்ல பொண்டாட்டி...” என்றவாறே தன் இதழை குவித்து அவளுக்கான பரிசை பறக்கவிட்டான்.
 
 
ஆனால் அதற்கு அந்தப் பக்கமிருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் இருக்கவே, இடுப்பில் கை வைத்து தன்னையே முறைத்துக் கொண்டிருந்த நீருவை பாவமான முகத்தோடு பார்த்தவன், “இன்னும் கோபம் போகலையா குல்பி..” என்றான்.
 
 
ஆனால் அதற்குமே அந்தப் பக்கமிருந்து எந்த எதிர்வினையோ பதிலோ இல்லாது போகவே ஒரு நெடிய பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தவன், “எப்போ தான் எல்லாம் சரி ஆகும் குல்பி... ஐ மிஸ் யூ பேட்லி...” என்று படுக்கைக்கு எதிரில் மாட்டபட்டிருந்த நீருவின் ஆளுயர 3டி புகைப்படத்தைப் பார்த்து கூறியவன், அப்படியே உள்ளங்கையில் தலையைக் கவிழ்த்து அமர்ந்துவிட்டான்.
 
 
இன்றோடு நீரு அவனை விட்டு போய் முப்பத்தைந்து நாட்கள் ஆகிறது. விட்டால் மணி துளிகள் முதல் நொடி வரையும் கூடக் கணக்குச் சொல்லுவான். அந்த அளவு அவளின் பிரிவு சஞ்சய்யை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
 
 
இதே அறையில் சொர்கமாகக் கழிந்த பல காலை வேலைகளின் நினைவுகள் வேறு மனதில் உலா வர துவங்கி இருந்தது. எத்தனையோ நாட்கள் இது போலக் காலை நேரத்தில் தன்னை எழுப்ப முயலுபவளையும் சேர்த்து இழுத்து தனக்குள் அடக்கி கொண்டு அவன் செய்யும் அழும்பு...
 
 
அவள் எதிர்பாராத தருணங்களில் இடையைப் பற்றி இழுத்து அமர்த்திக் கொண்டு மடியில் படுத்து உறக்கத்தைத் தொடருபவனை எழுப்ப அவள் படும் அவஸ்தைகளை ரசித்துக் கொண்டே கண் மூடி உறங்குவது போல விழி மூடி கிடப்பது...
 
 
பல முறை காலை நேர பரபர வேலைகளுக்கு இடையில் வந்து எழுப்பியும் எழுந்து கொள்ளாமல் உறங்கி கொண்டிருப்பவனின் மேல் தண்ணீரை கொட்டுவது போல வருபவளை அவள் கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் பற்றி அப்படியே தூக்கி கொண்டு குளியலறைக்குள் நுழைந்து விடுவது... எனக் கடந்து போன இந்த இரண்டு வருடத்தில் எத்தனையோ விஷயங்கள் மனதில் வலம் வந்ததில் தாங்க முடியாத வேதனை மனமெங்கும் பரவியது.
 
 
“என்னைப் புரிஞ்சுக்க மாட்டியா குல்பி... ஏன் டி இப்படிச் செய்யற, நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் ரொம்ப வலிக்குது டி...” என்று மெல்லிய குரலில் புலம்பியவனுக்கு இன்றும் நீரு இருக்கும் இடம் நன்றாகத் தெரியும். ஒரு நொடி போதும் அவளைத் தூக்கி வர.. ஆனால் கிளம்பும் போது இறுதியாக நீரு சொல்லி சென்ற “இங்கே தானே இருக்கான்னு என்னைப் பார்க்க வந்தே இந்த உலகத்துலேயே இல்லாம போயிடுவேன்...” என்ற ஒற்றை வரி அன்று மட்டுமல்ல இன்றும் கூட அவனின் இதயத்தை வாள் கொண்டு அறுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
 
 
‘அப்படி என்ன தான் கோபம் இருந்தாலும் எப்படி இப்படி ஒரு வார்த்தையை அவளால் பேச முடிந்தது என்று கோபமாக இப்போதும் மனம் முரண்டிய போதும் அதே வார்த்தை தான் லக்ஷ்மணன் ரேகையாக அவனைத் தடுத்துக் கொண்டிருப்பதும் கூட...!!
 
 
அப்படியே இரு கைகளில் தலையைத் தாங்கி அமர்ந்து விட்டவனின் மோனநிலையைக் கலைப்பது போல ஒலித்தது அவனின் அலைபேசி. அழைப்பது ஆனந்த் என்றவுடன் உடனே எடுத்து காதுக்குக் கொடுத்திருந்தான். அந்தப் பக்கமிருந்து சொல்லப்பட்ட செய்தியில் உடனே எழுந்தவன், “ஹாப் ஆன் ஹவர்ல அங்கே இருப்பேன் ஆனந்த்.. கெட் ரெடி..” என்றுரைத்து அலைபேசியை விட்டெறிந்தவனிடம் அவனின் அதே மிடுக்கு வந்து தானாக அமர்ந்திருந்தது.
 
 
அவ்வளவு தான் இவ்வளவு நேரம் வேதனையில் உழன்ற நீருவின் காதல் கணவன் இல்லை இவன், இப்போது இருப்பவன் முழுக்க முழுக்கப் போலீஸ் அதிகாரி. வேகமாகத் தயாராகிச் சமையலறைக்குள் நுழைந்தவன், நேரமின்மை காரணமாக ஒரு புறம் பாலை வைத்துக் காய்ச்சி கொண்டே, மற்றொரு புறம் இரவு செய்திருந்த சப்பாத்தியை எடுத்து சூடு செய்ய முயன்றான்.
 
 
தோசை கல்லை வைத்தவனின் மனம் அவன் அனுமதி இல்லாமலே எங்கெங்கோ பயணித்தது. இடைப்பட்ட இரண்டு வருடங்களில் நன்றாகவே சமைக்கக் கற்றிருந்தாள் நீரு. அதிலும் ஆசையோடு வெகுவாகத் தேடி தேடி அவள் சமைக்கக் கற்றுக் கொண்டது எல்லாம் சஞ்சய்க்காக மட்டுமே.
 
 
அவனுமே சிறு வயதிலேயே தாயை இழந்து இருந்ததின் வலியை சஞ்சய் சொல்லாமலே உணர்ந்துக் கொண்டவள், தன்னைத் தாயை போலக் கவனித்துக் கொள்பவனுக்குத் தாயாக மாற முடிவு செய்திருந்தாள். அதன் முதல்படியே இது.
 
 
நிஜமாகவே அவளின் கை மனமோ இல்லை அவள் அதில் கலந்த அன்பும் காதலும் தனி மனம் சேர்த்ததோ சமையல் வெகு ருசியாகவே இருந்தது. எத்தனையோ நாட்கள் நீரு இங்கே நின்று தோசை வார்க்கும் போது பின்னால் இருந்து அவளை அணைத்து அன்பு தொல்லை கொடுப்பவன் அப்படிச் சூடாகத் தோசை வார்க்க வார்க்க அவளையே ஊட்ட சொல்லி வாங்கிக் கொள்வான்.
 
 
மனதிற்கினியவளை கை வளைவில் நிறுத்திக் கொண்டு பின்னால் இருந்து அவள் தோளில் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டு சூடாகத் தோசையை நீருவின் விரலோடு சேர்த்துச் சுவைப்பது சஞ்சய்க்கு மிகவும் பிடித்த ஒன்று. அவளும் அவனின் விருப்பம் அறிந்து அதை ஒரு நாளும் மறுக்காமல் கொடுப்பாள்.
 
 
பல நாட்கள் வெளியில் அவசரமாகக் கிளம்பும் போது சாப்பிட்டுப் போகச் சொன்னால் ‘நேரமில்லை வந்து சாப்பிடுகிறேன்’ என ஓட முயல்பவனைத் தடுக்கும் ஒரே வார்த்தை “தோசை ஊட்டி விடறேன்... இரண்டே இரண்டு தோசை பிளீஸ்...” என்ற கொஞ்சல் மட்டுமே.
 
 
அதன் பின் அந்தப் பத்து நிமிடங்கள் இருவருக்குமே சொர்கமாகக் கழியும். இரண்டு என்பது நான்கானதும் கூடத் தெரியாமல் சாப்பிட்டு இருப்பவனுக்கு ஊட்டி முடித்து அணிந்திருக்கும் உடையின் உதவியோடு வாயை துடைத்து விட்டு ‘போய் வா’ எனக் கை அசைக்கும் பெண்ணவளின் நேசத்திற்கு மனம் ஏங்கியது... விழிகளை இறுக மூடி தன்னைக் கட்டுபடுத்தியவன், சூடுசெய்து கொண்டிருந்த உணவை அப்படியே அணைத்து விட்டு பாலை மட்டும் எடுத்து அருந்த தொடங்கினான்.
 
 
“ஐ மிஸ் யூ பேட்லி குல்பி... சீக்கிரம் வந்துடு டி, இந்த வீட்டோட ஒவ்வொரு மூலையும் நாம சேர்ந்து இருந்த ஒவ்வொரு இடத்தையும் தான் எனக்கு ஞாபகபடுத்துது... வந்துடு டி.. இல்ல என் கட்டுப்பாடு எல்லாம் போய் நானே உன்னைத் தூக்கி வந்துடுவேன்...” என்று வாய்விட்டே கூற, மூளையோ ‘அவளா தானே போனா..!? அவளாவே வரட்டும்..?!’ என்றது.
 
 
ஒரு நீண்ட பெருமூச்சோடு வேகமாக அங்கிருந்து வெளியேறியவனுக்கு அதற்கு மேல் அங்கிருந்தால் மூச்சு முட்டும் நிலை. பல நாட்கள் இதற்காகவே வீட்டில் இருப்பதைக் குறைத்து கொள்வான். உறங்குவதற்காக மட்டுமே வீட்டிற்கு வருபவனுக்கு அந்த இரவுகள் மேலும் கொடுமையானதாகவே அமையும்.
 
 
*********
 
 
அலைபேசியில் ஒலித்த அலாரம் உறக்கத்தைக் கலைத்ததில் எழுந்தமர்ந்த நீரு படுக்கையிலிருந்து இறங்க முயன்றவள், அப்படியே தடுமாறி மீண்டும் படுக்கையிலேயே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
 
 
“ஹே.. தாரா பார்த்து...” என்று வேகமாக வந்து தாங்கிய வித்யாவை சோர்வாகப் பார்த்தவள், “பிளீஸ் வித்தி வேண்டாம்... என் மேலே இவ்வளவு அக்கறை காட்டாதே, எனக்கு அது நிலைக்காது.. என் மேலே அன்பும் பாசமும் வெச்ச யாருமே என் கூடத் தொடர்ந்து இருக்கறதே இல்லை... நீயாவது கடைசி வர இருக்கணும் வித்தி... அதனால தான் சொல்லுறேன்...” என்றாள்.
 
 
“லூசு மாதிரி உளறாதே... கண்டதையும் நீயே கற்பனை செஞ்சுகிட்டு நீயும் கஷ்டப்பட்டு எல்லாரையும் கஷ்டபடுத்தாதே..” என்று கடிந்து கொண்டவாறே, வெட் டிஷ்யு கொண்டு வந்து முகத்தைத் துடைத்துவிட்டாள்.
 
 
அதில் வேதனையோடு நீரு நிமிர்ந்து வித்தியை பார்க்கவும், அதைக் கண்டு கொண்டது போலக் காண்பித்துக் கொள்ளாமல் “உன்னை யாரு இப்போ இவ்வளவு வேகமா எழுந்துக்கச் சொன்னது... இந்த நிலைமையில் பொறுமையா எழுந்துக்கணும்னு தெரியாதா உனக்கு...” என்றவள், கலைந்திருந்த முடியை தூக்கி மேலே கிளிப் போட்டு விட்டாள்.
 
 
“சூடா ஏதாவது குடிக்கக் கொண்டு வரவா...?!” என்றவளுக்கு நீருவிடமிருந்து எந்தப் பதிலும் வாராமல் போக அவளின் தோளை பற்றி அசைக்க.. அதுவரை சற்று முன் வித்தி கடிந்து கொண்ட அதே வார்த்தைகளைச் சில நாட்கள் முன் கூறி கடிந்து கொண்டதோடு அப்படியே தூக்கி சென்று பல் துலக்கி விட்டு முகம் கழுவி மீண்டும் தூக்கி சென்று சமையலறையில் அமர வைத்து சூடாகப் பால் கொடுத்தவனின் நினைவில் தன்னை மறந்து அமர்ந்திருந்தவள், சுயம் பெற்று விழி முழுக்க நிறைந்திருந்த கண்ணீரை வித்தி அறியாமல் மறைத்து வேண்டாமென்ற தலையசைப்போடு அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
 
 
இப்போது இருவருமே ஒரே கல்லூரியில் தான் பேராசிரியர்களாக உள்ளனர். பெண்கள் விடுதியில் தங்காமல் நீரு தான் தனியே வீடு எடுத்து தங்கி இருந்தாள். அவளின் உடல்நிலைக்கும் மனநிலைக்கும் தனிமை ரொம்பவே தேவைப்பட்டது.
 
 
அவள் மட்டுமே தங்கி இருந்த வீட்டில் அடுத்த ஒரு வாரத்தில் தான் தங்கி இருக்கும் விடுதியில் ஏதேதோ பிரச்சனை என்று காரணம் சொல்லி இங்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தாள் வித்யா. என்னதான் அவள் காரணம் சொன்ன போதும் தனக்காகவே வந்திருக்கிறாள் என்று நீருவுக்கு நன்றாகவே தெரியும்.
 
 
இருந்தும் இதுவரை இதைப் பற்றி இருவரும் வெளிப்படையாக எதையுமே பேசிக் கொள்ளவில்லை. நீரு தயாராகி வருவதற்குள் அவளுக்கான காலை உணவையும் கூடவே சத்து மாவு கரைசலையும் தயார் செய்து கொண்டிருந்தவளுக்கு ராம் எதற்காகத் தன்னைச் சந்தித்து அவளுடன் தங்குமாறு சொன்னார் என்பது தினம் தினம் அவளின் நடவடிக்கையின் மூலம் தெளிவானாலும், இது அனைத்துமே சஞ்சய்யின் ஏற்பாடாகத் தான் இருக்கும் என்பதும் தெளிவாகப் புரிந்தது.
 
 
இருவருக்குமே ஒருவர் மேல் மற்றவருக்கு இருக்கும் நேசம் பற்றியும் அவர்கள் வாழ்ந்த இனிமையான வாழ்க்கை பற்றியும் அறிந்திருந்தவள் எது எங்குப் பிழையாகி போனது, என்ன ப்ரச்சனையானது என்று புரியாமல் இவர்களின் பிரிவை அறிந்து திகைத்தாள்.
 
 
அத்தனை எளிதாக நீருவை விட்டுவிடுபவன் இல்லை சஞ்சய் என்று அவளுக்கு இன்றளவும் பெரிய நம்பிக்கை உண்டு. அப்படிபட்டவன் இன்று வரை தேடி வராமல் இருப்பதன் காரணம்தான் என்ன என்று அவளுக்குப் புரியவில்லை.
 
 
சஞ்சய் இவளை தேடி தான் வரவில்லையே தவிர நிழலாக அவளுக்கு மற்றவர் மூலம் எல்லாம் செய்கிறான் என்று நன்றாகவே புரிந்து இருந்தது. இதே நினைவுகளில் வித்தி அனைத்தையும் தயார் செய்து முடிக்கவும், நீரு தயாராகி வரவும் சரியாக இருந்தது.
 
 
அவள் மறுக்க மறுக்கக் கொஞ்சமாகச் சாப்பிட வைத்து, பால் குடிக்கச் செய்து அப்போது போட வேண்டிய மருந்துகளையும் மாத்திரைகளையும் எடுத்து கொடுத்து போட வைத்தவள், சத்துமாவையும் சிறிய பிளாஸ்கில் ஊற்றி மதிய உணவு பையில் வைத்தாள்.
 
 
“உன்னை நான் ரொம்பக் கஷ்டபடுத்தறேன் இல்லை வித்தி.. எந்த வேலைக்கும் உதவியா இல்லாததோடு ஏதோ சிறு பிள்ளைக்குச் செய்யறது போல எனக்கு இதெல்லாம்...” என்று பார்த்து பார்த்துத் தன்னைக் கவனித்துக் கொள்பவளை கண்டு வருத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தவளை வித்தி தடை செய்வதற்கு முன் குமட்டி கொண்டு வாந்தி வந்து தடை செய்திருந்தது.
 
 
இவ்வளவு நேரம் வித்தி கெஞ்சி கொஞ்சி உள்ளே அனுப்பியது அனைத்தும் வெளியே வந்துவிட்டிருக்க... சோர்ந்து போய் அமர்ந்துவிட்டாள் நீரு. மீண்டும் ஒரு முட்டையை ஆம்லேட் போட்டு எடுத்து வந்து நீருவின் முன் வித்தி நீட்ட, கண்கள் கலங்கிவிட்டது நீருவுக்கு.
 
 
இப்போது நீருவுக்கு நான்கு மாதம்.. இந்த நேர உபாதைகளைச் சமாளிக்க எல்லாப் பெண்களைப் போலவே நீருவுக்கும் தாயின் நினைவு அதிகம் வந்தாலும் அதற்கு வாய்ப்பில்லை என்றான பிறகு அடுத்துச் சாத்தியமாகும் கணவனின் அருகாமையை எண்ணி வெகுவாகத் தவித்தாள்.
 
 
ஆனால் அதுவும் இப்போது கிடைக்க முடியாத நிலை, இங்கே தினம் தினம் தான் இவ்வளவு அவதி பட்டுக் கொண்டிருக்கையில் தன் நினைவே இல்லாமல் சஞ்சய் இருப்பது போல் ஒரு எண்ணம் தோன்றி நீருவின் மனதை வெகுவாக அலைகழித்தது.
 
 
அவனை வர கூடாது என்று சொல்லி வந்ததை எல்லாம் வசதியாக மறந்து போய் இருந்தாள். ‘எப்போ போவான்னு காத்திருந்தான் போல, அதான் தொல்லை விட்டதுன்னு ஜாலியா இருக்கான்...’ என்று மேலும் மேலும் கோபத்தை வளர்த்துக் கொண்டவள், தேடி வந்திருந்தால் மட்டும் அவனை ஏற்றுக் கொண்டு வாழ சம்மதித்து இருப்பாளா என்றாள் நிச்சயமாக இல்லை என்பது தான் உண்மை.
 
 
வித்யாவின் வற்புறுத்தலால் அதைச் சாப்பிட்டு முடித்து இவர்கள் கிளம்பவும், வழக்கமாகக் கல்லூரிக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோ வரவும் சரியாக இருந்தது. இருவரும் அதில் ஏறியவுடன், இவளின் உடல்நிலையையும் தேவையில்லாத அலைச்சலையும் காரணம் காண்பித்து ராம் தினசரி போக்குவரத்துக்கு இந்த ஆட்டோவை ஏற்பாடு செய்து கொடுத்தது நீருவுக்கு நினைவு வந்தது.
 
 
முதலில் வேண்டாம் என மறுத்தவளும் பின் அதன் செலவை தானே பார்த்துக் கொள்வதாகக் கூறி ஏற்றுக் கொண்டாள். அதையெல்லாம் மனதில் ஓட்டி பார்த்தவளுக்கு ராமுக்கு தன் மேல் இருக்கும் அக்கறை கூட இவனுக்கு இல்லையே என்றெண்ணி சஞ்சயின் கிரைம் ரேட்டை மேலும் மேலும் ஏற்றி கொண்டிருந்தாள்.
 
 
ஊருக்கெல்லாம் கிரைம் ரேட்டை பொறுத்துத் தண்டனை அளிப்பவனுக்கு அவனின் மனையாள் என்ன தண்டனை கொடுக்கக் காத்திருக்கிறாளோ...!!
 
 
தன் தினசரி வழக்கமாக நீரு இருந்த வீதிக்கு எதிர்புறம் இருந்த மரங்கள் அடர்ந்த வீதியில் மறைவாக நின்று கொண்டு தன் மனையாளின் காலை தரிசனத்தைத் திவ்யமாகச் செய்து முடித்திருந்தான் சஞ்சய்.
 
 
இந்த முப்பத்தைந்து நாட்களில் நீரு இன்னும் ஒரு முறையும் ஒரு நாளும் சஞ்சய்யை கண்ணால் பார்க்கவில்லை. அதற்கு எதிர்மாறாகச் சஞ்சய் நீருவை ஒரு நாளும் பார்க்காமல் இருந்தது இல்லை. அவளின் விருப்பபடி நீருவின் எதிரில் சென்று நிற்கவில்லையே தவிர, அவளுக்கு நிழலாகத் தான் இருக்கிறான்.
 
 
******************
 
 
மதியத்துக்கு மேல் காவல் நிலையத்தில் பிசியாக இருந்த சஞ்சயின் முன் வந்து நின்றார் ஏட்டு பெருமாள். அவரின் தயக்கமே எதையோ சொல்ல வந்து இருக்கிறார் என்பதைப் புரிய வைக்க... “என்ன விஷயம் பெருமாள்...” என்றான்.
 
 
“சார்... அது வந்து, நம்ம வீட்டுகிட்ட ஒரு பொண்ணு சார்... காலேஜ்ல அசிஸ்டன்ட் ப்ரொபசரா இருக்கு... அங்கே பிஜி படிக்கற ஒரு பையன் லவ் அது இதுன்னு ரொம்பத் தொல்லை செய்யறானாம் சார்... இதுவும் எவ்வளவோ சொல்லி பார்த்துடுச்சாம், வயசுலயும் மூணு வருஷம் சின்னவன், அதையும் கூடச் சொல்லிடுச்சாம் சார்... அதுக்குத் தனுஷ், சச்சின்னு என்ன என்னவோ உளறரானாம்... எத்தனை முறை சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்றானாம் சார்... அந்தப் பொண்ணு பாவம் சார், அப்பா இல்லாத பொண்ணு.. அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி இருக்காங்க, இப்போ தான் சம்பாதிக்க ஆரம்பிச்சு இருக்கு... இப்போ போய் இப்படி...” என்று வருந்தினார்.
 
 
“சொல்லியும் கேக்கலைனா கன்னத்து ஜவ்வு பிச்சிக்கறது போல நாலு அறைய சொல்லுங்க லவ்வு எல்லாம் தலை தெறிக்க ஓடிடும்...” என்றவனைத் தயக்கமாகப் பார்த்தவர்,
 
 
“சார்... அவன் கொஞ்சம் ஒரு மாதிரியாம்.. அந்த ஏரியா கவுன்சிலர் பையன் வேறயாம் சார்... அவன் பின்னாடி எப்பவும் ஒரு கும்பல் இருக்குமாம்... சாதாரண ஸ்டுடண்ட்டா இருந்தா நானே போய் இரண்டு மிரட்டு மிரட்டி இருப்பேன் சார்... இப்போ...” என்று இழுத்தவரை இடைவெட்டி சஞ்சய், “இப்போ என்னைப் போய் மிரட்ட சொல்றீங்களா..?” என்று கேட்டதும், எங்கே கோபப்பட்டு விட்டானோ என்று பதறி “அது... சார்...” என்று முகம் பார்த்தவர், விளையாட்டாகக் கேட்டது புரிய, “ஆமா சார்...” என்றார் வாயெல்லாம் பல்லாக.
 
 
“ஹா ஹா... அதுக்கென்ன மிரட்டிடுவோம்... ஆமா எந்தக் காலேஜ்...?!” என்றவன் அவர் சொன்ன பதிலில் குறும்பு கூத்தாடும் குரலில் “ஒஒஒ... அப்போ உடனே போய்டுவோம்...” என்றான்.
 
 
அதில் சந்தோஷித்து அவர் நகர்ந்ததும், அதுவரை ஒரு கேஸ் பற்றிய விவரங்களை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த், “சார் இந்தக் கேஸ்...” என்று தொடங்கவும், “அது இருக்கட்டும் ஆனந்த்... கிளம்புங்க இப்போ நாம காலேஜ் போறோம்...” என்றான்.
 
 
இதில் திகைத்த ஆனந்த் “நானுமா சார்...” என்றான் திகைப்போடு. “ஆமா ஆனந்த்.. இதென்ன கொஞ்சமும் பொறுப்பில்லாத கேள்வி... வாங்க வாங்க...” என்று நகர முயல, “சார்... இந்த தனபால் கேஸ்...” என்று அதன் அவசரம் உணர்ந்து ஆனந்த் இழுக்கவும், “அந்த தனபாலுக்கு அப்பறமா வந்து பால் ஊத்திக்கலாம் கிளம்புங்க...” என்று நடையில் ஒரு துள்ளலோடு வெளியேறியவனைக் குழப்பத்தோடு பார்த்தவாறே பின் தொடர்ந்தான் ஆனந்த்.
 
 
அவனுக்கு நன்றாகத் தெரியும் இந்தக் கேசுக்கு எல்லாம் சஞ்சய் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று. அதிலும் ஏட்டு கூறியது போலக் கவுன்சிலருக்கு எல்லாம் பயந்து நடப்பவனும் சஞ்சய் இல்லை, யாராக இருந்தாலும் இங்கு வரவழைத்தே பேசக் கூடியவன் தான் என்றாலும் இப்போது சஞ்சய் கிளம்புவதற்கான காரணம் என்னவென்று ஊருக்கே தெரியுமே...!! ஆனால் இதில் சம்பந்தமில்லாமல் தான் ஏன் எதற்கு என்று தான் ஆனந்துக்குப் புரியவில்லை.
 
 
‘சரி, சார் எதையோ பிளான் செஞ்சிட்டாரு...’ என்று எண்ணியவாறே சென்று உடன் அமரவும், ஜீப் கல்லூரியை நோக்கி வேகமெடுத்தது. அது மதிய உணவு நேரத்துக்குப் பிறகான பாட நேரம், நேராகச் சென்று கேண்டீனுக்கு எதிரில் நின்று கொண்டான் சஞ்சய்.
 
 
முதலில் அந்தப் பெண்ணைப் பார்ப்பதாகத் தான் திட்டம் என்பதால் “சார்... அவங்க டிபார்ட்மென்ட் அந்தப் பக்கம் இருக்கு சார்...” என்ற ஆனந்தை திரும்பி கூடப் பார்க்காமல், “அவங்களைப் பார்க்க நாம இவ்வளவு தூரம் வந்திருக்கோம், நம்மளை பார்க்க அவங்க இங்கே கூட வர மாட்டாங்களா என்ன ஆனந்த்...?” என்றதும், “வருவாங்க சார்... ஒரு கால் செஞ்சு இங்கே இருக்கோம்னு சொல்லிடறேன் சார்...” என்று அலைபேசியை எடுத்தவனை “அட இருங்க ஆனந்த்... என்ன அவசரம், ஏதாவது கிளாசில் இருக்கப் போறாங்க...” என்றான்.
 
 
‘ம்ஹும்... ஒகே...’ என மனதில் எண்ணியபடி வெளியில் தலையை ஆட்டியவன், எதிரில் ஆள் அரவமற்று இருந்த கேண்டீன்... சுற்றிலும் இருந்த மரம்... அங்குப் பெருக்கி சுத்தம் செய்யும் பெண்மணி... ஆபிசில் யாருக்கோ கொடுக்க டீ வாங்க வந்த பியூன்... என எல்லாத்தையும் ஒரு சுற்று வேடிக்கை பார்த்து முடித்திருந்தான்.
 
 
அரைமணி நேரம் தான் சென்றதே தவிர, சஞ்சய் யாரையும் அழைப்பது போலவே தெரியவில்லை. அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் அடுத்தச் சுற்று வேடிக்கைக்குத் தயாராக... “என்ன தீவிர யோசனை ஆனந்த்...?” என்றிருந்தான் சஞ்சய்.
 
 
“ஹ்ம்ம்.. எள்ளு தான் எண்ணெய்க்கு காயுதுனா... எலி புழுக்கையும் எதுக்குச் சேர்ந்து காயுதுன்னு யோசிக்கறேன் சார்...” என்று படு தீவிர குரலில் ஆனந்த் பதிலளிக்க... “நல்லா கண்ணைத் திறந்து பாருங்க ஆனந்த் உங்களுக்கான எள்ளும் கிடைச்சாலும் கிடைக்கும்...” என்று சஞ்சய் விளையாட்டாகச் சொல்லி முடித்த நொடி அவன் நின்றிருந்த இடத்திற்கு எதிரிலிருந்த காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள் நீரு.
 
 
அவன் மனையாளுக்கு எந்த நேரத்தில் எங்கு வகுப்பு என்று அவனுக்குத் தெரியாதா என்ன...?! ஏனோ இன்று அவள் மனம் தன்னை அதிகம் தேடி தவிப்பதாகத் தோன்றவே நேரடி தரிசனம் கொடுக்க முடிவு செய்து விட்டான் அவன்.
 
 
தன் போக்கில் கையில் இருந்த புத்தகத்தை அணைத்து பிடித்தவாறு எங்கோ பார்வையைப் பதித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தவளோடு இடையில் வந்து இணைந்து கொண்டாள் வித்யா. இருவரும் ஏதோ பேசியவாறே வரவும் சில அடி தொலைவில் இருக்கும் போது தான் சஞ்சய்யை கவனித்தாள் நீரு.
 
 
அப்படியே ஷாக் அடித்தது போல நின்றுவிட்டவளை திரும்பி பார்த்த வித்தி, அவள் பார்வை சென்ற திசையைத் திரும்பி பார்த்து திகைத்தாள். ‘ஹீரோ சார்... இப்போவாவது வந்தீங்களே..!! இவ உங்களை ரொம்பத் தேடறா சார்... ஆனா வெளியே சொல்லவோ ஒத்துக்கவோ மனசு வராது... அவ்வளவு ஈகோ... ஆனா இனி நீங்க பார்த்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும்...’ என மனதிற்குள் குதுகலித்தவள், வெளியே அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டிருந்தாள்.
 
 
காலையிலிருந்து இன்று முழுக்க சஞ்சய்யின் நினைவு அதிகம் எழுந்து மனதை சோர்வாக்கியதில் அவனைக் காண வேண்டும் என்ற ஆசை காண முடியாத தவிப்பு அவனுக்குத் தன் நினைவே இல்லையா என்ற கோபம் இப்போதைய நிலையினால் வரும் ஹார்மோன் ப்ரச்சனைகள் என்று யாரை பற்றி நினைக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டு இருக்கிறாளோ அவனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தவள், நியாயமாக நேரில் வந்து நிற்பவனைக் கண்டு சந்தோஷிப்பதற்குப் பதிலாக ‘இவன் ஏன் இங்கே வந்தான்...?!’ என்ற ஆத்திரத்தோடு வேகமாக சஞ்சய்யை நெருங்கினாள்.
 
 
ஆனால் அதே நேரம் நீரு அவளின் வகுப்பிலிருந்து வெளியே வரும் போதே பார்த்து விட்டவன், ஆனந்தின் மூலம் அந்தப் பேராசிரியைக்கு அழைப்பு விடுத்திருக்க... நீரு நெருங்கும் முன் வேகமாக அவள் வந்து அங்குச் சேர்ந்திருந்தாள்.
 
 
“சாரி சார்... வந்து ரொம்ப நேரம் ஆச்சா...?!” என்று வந்து நின்ற பெண்ணைக் கண்டு புன்னகைத்தவன், “அதனால் என்ன பரவாயில்லை.. வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டுட்டே உட்கார்ந்து பேசுவோம்...” என நீருவின் பக்கமாகக் கூடத் திரும்பாமல், கேண்டீனை நோக்கி நடக்கத் துவங்க, இங்கு சஞ்சய் தேடி வந்தது தன்னை இல்லை என்று எண்ணி மகிழ வேண்டியவளோ ரயில் எஞ்சின் போல மூச்சு வாங்க முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
 
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN (2) - 1

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 2
 
 
இங்கு வந்தும் தன்னைத் திரும்பி கூடப் பார்க்காமல் செல்பவனைக் கண்ணாலேயே எரித்துச் சாம்பலாக்கும் முயற்சியில் நீரு நின்றிருக்க... அவனோ தான் அணிந்திருந்த குளிர் கண்ணாடியின் உதவியோடு திவ்யமாக அவளை வகுப்பறையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து சைட் அடித்து விட்டே நகர்ந்தான்.
 
 
மூவரும் கேண்டீன் உள்ளே நுழையவும், டோக்கன் வாங்க செல்ல முயன்ற கங்காவை, “எங்கே போறீங்க... நீங்களே களைப்பா தான் இருக்கீங்க, வாங்க நாம உட்காருவோம்... ஆனந்த் நமக்கு டோக்கன் வாங்கிடுங்களேன்...” என்றதும் ஆனந்த் அதிர்வோடு திரும்பி சஞ்சய்யை பார்க்க... “என்ன ஆச்சு ஆனந்த்...?!” என்று எதுவுமே புரியாத பாவனையில் அப்பாவி முகத்தோடு கேட்கவும், அவனோ ஒன்றுமில்லை என்பது போலத் தலையசைத்து “டீயா காபியா சார்...” என்றான்.
 
 
“எனக்கு டீ... உங்களுக்கு...!?” என கங்காவிடம் கேட்ட சஞ்சய் அவள் பதிலளித்ததும், அவளை அழைத்துக் கொண்டு நகர, இவை அனைத்தையும் வாயிலில் வைத்தே பேசியதில் நீருவுக்குத் தெளிவாகக் கேட்க அது அவளின் கொதிநிலையை ஏகத்துக்கும் ஏற்றியது.
 
 
அவனோ வெகு சாவகாசமாகச் சென்று கங்காவோடு ஒரு ஓரமான இருக்கையாகப் பார்த்து அமர்ந்து கொண்டான். ஏதோ அவளைப் பற்றித் தெரிந்து கொண்டு அவளோடு பேசுவதற்காக மட்டுமே இந்தப் பிறவி எடுத்தது போல, இருந்தது இன்றைய சஞ்சய்யின் நடவடிக்கைகள் எல்லாம்.
 
 
வேகமாகக் கேன்டினுக்குள் நீரு நுழையவும், “ஹே... எங்கே போற...?! கிளாஸ் இல்லையா உனக்கு...?” என்று தடுத்த வித்யாவை திரும்பி முறைத்தவள், “எனக்குத் தலை வலிக்குது... நான் காபி குடிக்கப் போறேன்...” என்றுவிட்டு செல்ல...
 
 
அவசரமாக மற்றொரு தோழியை அழைத்து நீருவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவளுடைய வகுப்பை இன்று பார்த்துக் கொள்ளச் சொல்லி கேட்டுக் கொண்ட வித்தி, தனக்கு எந்த வகுப்பும் இல்லை என்பதால் நீருவின் பின்னோடு சென்றாள்.
 
 
நீருவை சோதிப்பது போலவோ இல்லை வேண்டுமென்றே சோதிக்க எண்ணியோ சஞ்சய் தேர்ந்தெடுத்து அமர்ந்திருந்த இடத்தின் அருகில் வேறு எந்த மேசையும் காலியாக இல்லாமல் போக... சற்றுத் தொலைவில் தான் நீரு அமர வேண்டி இருந்தது.
 
 
இவள் அவர்களைப் பார்க்குமாறு நேராகச் சென்று அமர்ந்து கொள்ள... வித்யா தான் இருவருக்குமாகச் சேர்த்து காபியோடு வந்து சேர்ந்தாள். ஆனால் அதைத் தொட்டும் பார்க்காமல், நீரு அந்தப் பக்கமே முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, “ஹே தலைவலின்னு தானே சொன்ன...? இப்போ என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க...?!” என்று எதுவுமே தெரியாத பாவனையில் வித்யா கேள்வி எழுப்பவும்,
 
 
“ஆமா... காபி குடிக்கத் தான் வந்தேன்...” என்று பல்லை கடித்துக் கொண்டு அழுத்தி சொன்னவள், வித்யாவை முறைத்துக் கொண்டே காபியை பருக தொடங்கினாள்.
 
 
அவளின் அத்தனை செயல்களையும் அதே குளிர் கண்ணாடியின் உதவியோடு கண்டும் காணாமல் அமர்ந்து இருந்தவன், அவளுக்குத் தன் மேலான பொஸசிவ்னஸின் அளவை பற்றி நன்றாகவே தெரியும் என்பதால் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
 
 
நீரு வகுப்பிலிருந்து வெளியே வரும் போதே அவளின் சோர்ந்த முகத்தைக் கண்டு இருந்தவன், அவளுக்காகவே தான் கேண்டீன் வந்தது. தான் உள்ளே வந்தால் தன் பின்னேயே கட்டாயம் வருவாள் என்பதும் உண்மை காரணத்தைக் கூறி வித்யாவிடம் சிக்கிக் கொள்ளவோ ஒத்துக் கொள்ளவோ மனமில்லாமல் வீம்புக்காகவாவது ஏதாவது குடிக்கவோ சாப்பிடவோ செய்வாள் என்பதும் அவனுக்குத் தெரியாதா என்ன..?!!
 
 
அடுத்தப் பத்து நிமிடத்தில் தனக்கு வேண்டிய தகவல்களை எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டவன், பயப்பட வேண்டாம் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி விடைபெற்றான். ஆனால் கிளம்பும் போதும் கூடக் கவனமாகத் தன் பார்வையை நீருவின் பக்கம் திருப்பாமலே செல்ல... அவளோ கொலைவெறிக்கு மாறி “பொறுக்கி... பொறுக்கி...” என வசை மழை பொழிந்து கொண்டு இருந்தாள்.
 
 
இப்போது சஞ்சய் மேல் இருந்த கோபமோ எதற்காக இந்தப் பிரிவை தேர்ந்தெடுத்தோம் என்பதோ எல்லாம் சுத்தமாக மறந்து போய் அவளுக்கு நினைவில் இருந்தது எல்லாம் அவன் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமே...!!
 
 
இதுவே சஞ்சய் அவளைக் கண்டு அருகில் வந்து பேச முயன்று இருந்தால் இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு தான் சென்று இருப்பாள். ஆனால் அதையே அவன் செய்த போது நீருவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
 
ஏதோ அவனிடம் கோபம் கொள்வதும் முகம் திருப்பிக் கொள்வதும் தன் தனிப்பட்ட உரிமை என்றும் அந்த உரிமை எல்லாம் அவனுக்குக் கிடையாது என்பது போலவும் இருந்தது அவள் எண்ணம். ஆனால் அதைக் கூட அவள் இந்த நிமிடம் உணரவில்லை என்பதே நிஜம்.
 
 
நேராக ஜீப்பில் ஏறி வெளியேற முயன்ற சஞ்சய்யை, “சார் அந்தப் பையன்கிட்ட பேச வேண்டாமா..?!” என்று ஆனந்த்தின் குரல் தடுக்க... “ம்ம்... பேசணும் தான்...” என்றான்.
 
 
“இன்னும் கொஞ்ச நேரத்துல காலேஜ் விட்டுடுவாங்க சார்...” என்று ஆனந்த் எடுத்து கொடுக்க... “என்ன இப்படிக் கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாம பேசறீங்க ஆனந்த்... நமக்கு தனபால் கேஸ் பெண்டிங்க்ல இருக்கு... இன்னைக்குப் போய் அதை முடிச்சிட்டு, நாளைக்குப் பொறுமையா வந்து அந்தப் பையன்கிட்ட பேசிக்கலாம் ஆனந்த்...” என்று வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பது போன்ற பாவானையில் பேசியவனைக் கண்டு அதிர்ந்ததை விட “எது நாளைக்கும் வரணுமா...?” என்று தான் அதிகமாக அதிர்ந்தான் ஆனந்த்.
 
 
“அப்கோர்ஸ் ஆனந்த்... அந்தப் பையனை மிரட்டி வைக்கணும் இல்ல... பாவம் அந்தப் பொண்ணு ரொம்பப் பயந்து போய் இருக்கு...” என்றவாறே வண்டியை ஓட்டியவனைப் பாவமாகத் திரும்பி பார்த்தான் ஆனந்த்.
 
 
சஞ்சய்யை பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியுமென்பதால் அவனின் மனைவியின் மேலான அன்பும் புரிய, அதோடு அமைதியாகிவிட்டான். அதன் பின் பல நாட்களாகத் தலைமறைவாகி தண்ணிக் காட்டி கொண்டிருந்த தனபாலை பிடித்து அவனுக்குச் சஞ்சய் காட்டு காட்டு என்று காட்டியதில் அவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் எல்லாம் காணாமல் போய் இருக்க.. போலீஸ் அதிகாரி மட்டுமே அங்குக் குடிவந்து இருந்தான்.
 
 
இரவு வீடு திரும்பியவனுக்கு மனம் பாரமாகக் கனக்க தொடங்கியது. தினமும் அவளுக்குத் தெரியாமல் எடுக்கும் நீருவின் புகைப்படங்களை அலைபேசியில் பார்த்தவாறே படுத்துவிட்டவனுக்கு லேசாக மேடிட துவங்கி இருந்த அவளின் வயிறு ஏக்கத்தைக் கூட்டுவதாக இருந்தது.
 
 
அதை மென்மையாக வருடி விடவும், வயிற்றுக்குள் முகம் புதைத்து முத்தமிடவும் மனம் பரபரக்க துவங்கவும், “ஏன் டி ஏன்...?! இப்படி நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டபடுத்தற...? இன்னைக்கு என்னைப் பார்த்ததும் உன் கண்ணுல வந்துதே ஒரு உயிர்ப்பு அது இத்தனை நாளா நான் உன் கண்ணுல பார்க்காதது... இவ்வளவு காதலும் அன்பும் வெச்சு இருக்கறவ ஏன் டி இப்படிச் செய்யறே... உன் கோவமும் வீம்பும் தேவை இல்லாததுன்னு இன்னுமா உனக்குப் புரியலை... எப்படி இருக்கத் தெரியுமா, சாப்பிடறீயா இல்லையா குல்பி... வாமிட் அதிகமா இருக்க டா, இங்கேயே நீ ரொம்பக் கஷ்டபடுவியே அங்கே எப்படி டி சமாளிக்கற... இங்கே இருந்து இருந்தா நான் பார்த்துக்குவேனே குல்பி, திரும்பி வந்துடேன் டி...” என்று ஏதோ நேரில் இருப்பவளிடம் பேசுவது போலக் கைபேசியில் இருப்பவளிடம் பேசி கொண்டு இருந்தான்.
 
 
அதேநேரம் அவனின் தந்தை அழைக்கவும், சஞ்சய் எடுத்தவுடன், “தாரு மா எப்படி இருக்கா தம்பி... உடம்புக்கு இப்போ பரவாயில்லையா...?” என்ற கேள்வி தான் முதலில் வந்தது.
 
 
“ஹ்ம்ம்... நல்லா இருக்கா பா... நீங்க எப்படி இருக்கீங்க...? உங்க பையனும் இதே வீட்டுல தான் இருக்கேன்... நியாபகம் இருக்கா...?” என்றவனை இடைமறித்து இடக்காக ஒலித்தது சபாவின் குரல்.
“உனக்கு என்ன டா, அதெல்லாம் நல்லா தான் இருப்பே... அது தான் உன்னை ராஜா மாதிரி பார்த்துக்க என் மருமக இருக்கறாளே...” என்று அவர் கூறியதும் இந்தப் பக்கம் வருத்தமாகப் புன்னகைத்துக் கொண்டவன், வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் அவரிடம் வம்பு இழுப்பது போலவே பேசி சமாளித்து வைத்து இருந்தான்.
 
 
அவர் நீருவிடம் பேச வேண்டுமென்றதற்கு வழக்கம் போலவே அவள் உறங்க சென்றுவிட்டதாகக் கூறி சமாளித்து இருந்தவன், அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்மையை அவரிடம் சொல்லாமல் மறைத்து இருந்தான்.
 
 
அவரும் இந்த நிலையில் இருக்கும் பெண்ணின் உறக்கம் கெடக் கூடாது என்பதால் காலையில் பேசி கொள்வதாகச் சொல்லிவிடுவார். அதே போலப் பகலில் சஞ்சய் எங்கு என்ன வேலையில் இருப்பானோ என்று நேராக நீருக்கு அவர் அழைக்கும் போதெல்லாம் அவளும் பிரிவை பற்றிக் காண்பித்துக் கொள்ளாமலே காலேஜில் இருப்பதாகக் கூறி சமாளித்து வைத்து விடுவாள்.
 
 
இதுவரை இதைப் பற்றி இருவரும் பேசக் கொள்ளவில்லை என்றாலும் ஒரே முடிவை எடுத்துச் செயல்படுத்திக் கொண்டிருந்தனர். இப்படியே இன்னும் எவ்வளவு நாள் சமாளிக்க முடியும் என்பது எல்லாம் இருவர் மனதிலுமே இல்லை போலும் ஒருவேளை விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்றே இருவரும் நம்பினார்களோ என்னவோ...!! ஆனால் யார் சரி செய்வது என்பது தான் இங்கு மிகப் பெரிய கேள்வியாக இருந்தது.
 
 
அடுத்த நாள் கல்லூரி தொடங்கும் நேரத்துக்கு முன்பாகவே அங்குச் சென்று அந்தப் பையனை பார்த்து எச்சரித்து இருந்தான் சஞ்சய். பெருமாள் கூறியது போலவே ரொம்பவே திமிராகத் தான் இருந்தது அவனின் நடவடிக்கைகள். எனவே சற்று கடுமையாகவே எச்சரித்தவனை அவனின் தந்தையும் அவர் பதிவியும் இருக்கும் திமிரில் முறைக்க முயல, சஞ்சய்யை பற்றி நன்கு அறிந்த அவன் நண்பன் அதைத் தடுத்து நிறுத்தினான்.
 
 
நீருவை அவள் உள்ளே நுழையும் போதே பார்த்திருந்த சஞ்சய் மீண்டும் அவள் கண்ணில் படாமலேயே கிளம்பி இருந்தான். நேற்றே அவள் அதிகம் தேடியதாலேயே அவள் முன் வந்து நின்றிருந்தான். இல்லை எனில் கண்ணில் பட்டு இருக்கவே மாட்டான்.
 
 
ஆனால் இதை எதையும் அறியாத நீருவோ, சஞ்சய் வந்ததையும் அந்த மாணவர்களிடம் எதுவோ தனியே பேசிவிட்டு சென்றதையும் பற்றிப் பெண்கள் குழு குழுவாக நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ‘நேற்று இதுவரை வந்தும் தன்னைப் பார்க்கவோ பேசவோ இல்லாததோடு இன்று வந்தும் தன் கண்ணிலும் படவில்லை என்று ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டு வாய்குள்ளேயே அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.
 
 
திரும்ப காவல்நிலையம் செல்லும் வழியில் “அவன் சரியில்லை ஆனந்த்... சும்மா வாயில் சொன்னா எல்லாம் கேக்கும் ரகம் போலத் தெரியலை... எதுக்கும் அவன் மேலே ஒரு கண்ணு வைங்க...” என்று கட்டளையிட்டான் சஞ்சய். ஆனந்துக்குமே அதே எண்ணம் தான் என்பதால் சரியென்ற தலையசைப்போடு நிறுத்திக் கொண்டான்.
 
 
ஒரு வாரம் சென்று இருக்க.. சஞ்சய்யை அவனின் அலைபேசி இசைத்துத் துயில் எழுப்பியது. உறக்கம் கலையாத கண்களோடு அதை எடுத்தவன், அந்தப் பக்கம் ஒலித்த கமிஷனர் ராகவனின் குரலில் சட்டென எழுந்து அமர்ந்தான்.
 
 
“என்ன சஞ்சய் இன்னும் தூக்கமா...?” என்று காலை பத்து மணியை நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் தூக்க கலக்கத்தோடு பேசுபவனைக் கண்டு யோசனையாக விசாரித்தார்.
 
 
“எஸ் சார்... நேத்து ஒரு கேஸ், முடியவே நேரமாகிடுச்சு... காலையில் ஆறு மணிக்கு தான் வீட்டுக்கு வந்தேன்...” என்றவன், தேவையில்லாமல் அழைக்கக் கூடியவர் இல்லையென்பதால் “என்ன விஷயம் சார்...” என்று சரியாகப் பாயிண்டிற்கு வந்தான்.
 
 
“ஒரு கேஸ் சஞ்சய்... கொஞ்சம் கான்படென்ஷியல்...” என்று அவர் தொடங்கியதும் “எந்தப் பெரிய தலைக்கு என்ன பிரச்சனை சார்...” என்று கேட்டு உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினான் சஞ்சய்.
 
 
“மினிஸ்டர் ரகுபதியோட பையனை காணோமாம்... மூணு நாளா கால் எதுவும் செய்யலையாம், இவங்க செஞ்சாலும் எடுக்கலையாம்... பிரண்ட் ப்ரத்டே பார்ட்டி இருக்குன்னு சொல்லி வெள்ளிக்கிழமை காலை பாண்டிக்கு கிளம்பி போய் இருக்கான்... கூட இன்னும் இரண்டு பேரும் போய் இருக்காங்க... யாரையுமே ரீச் செய்ய முடியலையாம்...” என்றார்.
 
 
“யாருக்கு சார் ப்ர்த்டே...?”
 
 
“அதுவும் பெரிய கை தான் சஞ்சய்... கொண்டல்ராவ் பையன்...”
 
 
“எந்த கொண்டல்ராவ் சார்.. அந்த பெங்களூரு பார்ட்டியா...”
 
 
“ஆமா... அவரே தான், அவர் பையனையும் சேர்த்து தான் காணோமாம்...”
 
 
‘ஓ... அப்போ அந்த மூணாவது தறுதலை யாரோட வாரிசு சார்...”
 
 
“ஹா ஹா... அவன் தி கிரேட் ஆக்டர் பிரவீன் ராஜ் பையன்...”
 
 
“ஹ்ம்ம்.. ஓகே, இப்போ எங்கே போய் என்ன தகிடுதத்தம் செஞ்சு இருக்கானுங்களோ...” என்றவன், “வெள்ளிக்கிழமை காலை காணாம போனவங்களைப் பத்தி திங்கக்கிழமை காலை சொல்றாங்களா... நல்ல சுறுசுறுப்பு தான்...” என்றும் கேலி பேச...
 
 
“ஹா ஹா... அவனுங்க இப்படித் தான் அப்பப்போ பார்ட்டி அது இதுன்னு போய் இரண்டு மூணு நாள் ஜாலியா இருப்பாங்களாம்... அது போலப் போதையில மட்டையாகி இருப்பாங்கன்னு நினைச்சு சும்மா இருந்து இருக்காங்க சஞ்சய்.. ஆனா போன் செஞ்சாலும் எடுக்கலை திரும்பவும் மூணு நாளா போனும் வரலைன்னதும் தான் பயந்து போய் நம்மளை கூப்பிட்டாங்க... அதுவும் பெரிய இடத்து சிபாரிசோட, ஆனா அபிஷியலா கம்ப்ளைன்ட் எதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க... விஷயமும் வெளியே வர கூடாதாம்... இவனுங்களோட முடியலையா...” என்று அலுத்து கொண்டவரும் தன்னைப் போல் நேர்மையானவர் என்பதால் அவரின் மனதை சஞ்சய்யால் நன்கு புரிந்து கொள்ள முடியாது.
 
 
“ம்ம் புரியுது சார்... இப்போ என்ன அந்த தறுதலைங்களைத் தேடணுமா...? அவனுங்களைப் பத்தி இன்னும் டீடெயில் வேணுமே சார்...” என்றதும் மூவரின் குடும்பத்தாரின் எண்களைக் கொடுத்தார் ராகவன்.
 
 
அதன் பின் வேகமாகத் தயாராகிக் காவல்நிலையம் வந்தவன், ஆனந்தை தன்னோடு இணைத்துக் கொண்டு இந்தக் கேஸ் சம்பந்தமான வழக்குகளைப் பற்றி அறிய முதலில் மந்திரியின் வீட்டிற்கு அழைத்தான்.
 
 
அந்தப் பக்கம் எடுத்ததும் பேசுவது போலீஸ் என்று அறிந்து, “கம்ப்ளைன்ட் கொடுத்து ஒரு மணி நேரம் ஆகுது இன்னும் என் புள்ளைய கண்டு பிடிக்காம இப்போ தான் டீடெய்யிலே கேக்கறீங்களா...?!” என்று எகிற தொடங்கினார் ரகுபதி.
 
 
“நீங்க இன்னும் கம்ப்ளைன்ட்டே கொடுக்கலை... இப்போ தான் விஷயமே என் கவனத்துக்கு வந்து இருக்கு.. இப்போ நீங்க தான் டிலே செஞ்சுட்டு இருக்கீங்க... உங்க மனைவிகிட்ட கொஞ்சம் போனை கொடுக்கறீங்களா...?!” என்று குரலில் சற்று அழுத்தத்தைக் கூட்டி பேசினான் சஞ்சய்.
 
 
பதவியில் அமர்ந்த பிறகு எல்லோரும் அதிகம் பணிவு காண்பித்தே பேசி பழகி விட்டதால் சஞ்சய்யின் இந்த எதிர் பேச்சு அவரைச் சீண்டி விட்டு இருக்க... அதிலும் தன் மனைவியிடம் போனை கொடுக்கச் சொல்லி தன்னிடமே சொல்லவும் தன்னை ஒரு பொருட்டாகக் கூட இவன் மதிக்கவில்லை என்று கோபம் கொண்டவர், “அது என்ன வீட்டு பொம்பளைங்ககிட்ட பேசறது... எதுவா இருந்தாலும் என்கிட்டே கேளு...” என்றார்.
 
 
“ஓ... அப்படியா, சரி சொல்லுங்க... உங்க பையன் வீட்டிலிருந்து எத்தனை மணிக்கு வெளியே கிளம்பினான்...?! அவன் மட்டும் தனியா போனானா இல்லை கூட யாராவது இருந்தாங்களா...?! கிளம்பும் முன்னே அவனுக்கு ஏதாவது போன் வந்ததா...?! அவன் காரிலேயே கிளம்பினானா இல்லை பிரண்ட்ஸ் எல்லாம் ஒரே வண்டியில் கிளம்பினாங்களா...?! அன்னைக்கு என்ன கலர் சட்டை போட்டு இருந்தான்...?!” என்று சஞ்சய் இடைவிடாது இதழோரம் தெறித்த நக்கல் புன்னகையோடு அடுக்கி கொண்டே போனான்.
 
 
இதில் முதல் கேள்விக்கே முழிக்கத் தொடங்கி இருந்தவர், அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட கேள்விகளில் “ஹே... நிறுத்து நிறுத்து... நான் என் பொஞ்சாதிகிட்டே தரேன், நீ அவளையே கேட்டுக்கோ...” என்றிருந்தார். சில நொடிகளில் பேசி கைமாறி இருக்க...
 
 
“ஹலோ...” என அழுகையோடு கூடிய ஒரு வயதான பெண்ணின் குரல் கேட்டது. “இங்கே பாருங்க மா... உங்க நிலைமை எனக்கு நல்லாவே புரியுது... ஆனா இப்போ நீங்க சொல்லறதை வெச்சு தான் நாங்க மூவ் பண்ணனும்... நீங்க தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் உங்க பையனை கண்டுபிடிக்கறதுல தான் லேட் ஆகும்...” என இதுவரை பேசிய குரலில் இல்லாமல் அமைதியான குரலில் புரிய வைக்க... அது சரியாக வேலை செய்தது.
 
 
அடுத்தச் சில நிமிடங்களைச் செலவு செய்து தனக்கு வேண்டிய தகவல் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டவன் அழைப்பை துண்டிக்க முயல, “எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுத்துடுங்க தம்பி... அவன் எனக்கு ஒரே பிள்ளை, பத்து வருஷமா தவம் இருந்து பெத்த பிள்ளை...” என்று அழுகையோடு கெஞ்சினார் அவர்.
 
 
“ம்ம்ம்... என்னால் முடிஞ்ச எல்லாம் செய்யறேன் மா கவலைபடாதீங்க....” என்றுவிட்டு வைத்தவன், சில நொடிகள் கண் மூடி சாய்ந்து கிடைத்த தகவல் அனைத்தையும் மனதிற்குள் ஓட்டி பார்த்தான்.
 
 
சட்டெனக் கண்ணைத் திறந்தவன், “ரைட் ஆனந்த்... நான் கேட்ட மூணு பேரு டீடெயில் ரெடியா...?!” எனவும், “எஸ் சார்... மினிஸ்டர் ரகுபதி பையன் பேரு சுரேந்தர், கொண்டால் ராவ் பையன் பேரு ஜலபதிராவ், ஆக்டர் பிரவீன் ராஜ் பையன் பேரு ரூபன்... இவனுங்க எல்லாருக்குமே ஒரே வயசு தான் சார்... ஸ்கூல்ல இருந்தே பிரண்ட்ஸ்... ஊரில் இருக்க எல்லாக் கேடி தனமும் செய்யக் கூடியவனுங்க, சுரேந்தர் எந்த வேலைவெட்டியும் இன்னும் செய்யலை... ஜலபதி அவங்க அப்பா கம்பெனிய ஆறு மாசமா பார்த்துக்கறான்... ரூபன் அடுத்த மாசம் அவங்க ப்ரோடக்ஷன்லேயே ஹீரோவா அறிமுகமாகறான்.
 
 
“ம்ம்ம்...” எனக் கண்ணை மூடி அனைத்தையும் உள்வாங்கியவன், “இவனுங்க பாண்டில போகப் போறதா சொன்ன ஹோட்டலுக்கும் போகலையாம், அவங்க யார் பேரிலும் அங்கே ரூம் புக் ஆகவும் இல்லையாம்.. இவங்க பேமிலி காண்டாக்ட் செஞ்சு இருக்காங்க... சோ, அங்கே இருக்க வேற இது போலப் பசங்க அதிகம் போற ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் முழுக்க ஒரு ரவுண்ட் வாங்க ஆனந்த்.. வேற எங்கேயாவது ரூம் போட்டு இருக்காங்களான்னு தெரிஞ்சிடும்...” என்றான் சஞ்சய்.
 
 
“ஒகே சார்...” என்ற ஆனந்த் உடனே அதைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட, சைபர் கிரைம் ஆட்களிடம் அவர்கள் மூவரின் எண்களும் பகிர்ந்து அது இப்போது எங்கு ஆக்டிவ்வாக உள்ளது என்று விசாரிக்கச் சொல்ல... மூன்று எண்களுமே வெள்ளிக்கிழமை மதியமே ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதும் இப்போது வரை எதுவும் திரும்ப ஆன் ஆகாததும் தெரிய வந்தது.
 
 
இது சற்று யோசைனையைத் தர, எங்கே எப்போ ஆப் ஆச்சுன்னு சொல்ல முடியுமா எனக் கேட்டு தெரிந்து கொண்டவன், இவர்களை அடைய வேறு வழிகள் என்ன என்பதை யோசித்து முடிக்கவும் சஞ்சய் கேட்ட அத்தனை தகவலோடும் ஆனந்த் வரவும் சரியாக இருந்தது.
 
 
“சார் நீங்க சந்தேகப்பட்டது போலவே தான் **** ரிசார்ட்ல அவனுங்க மூணு பேர் பெயரிலேயும் தனித்தனி காட்டேஜ் புக் ஆகி இருக்கு சார்...”
 
 
“ஓ... அப்போ துரைங்க எல்லாம் அங்கே தான் லிவிங்க்ஸ்டன்னா...?!”
 
 
“இல்ல சார்... வெள்ளிக்கிழமை காலையில் இருந்து திங்கக்கிழமை வரை புக் செஞ்சு இருக்காங்க சார்... ஆனா செக் இன் செய்ய வரவே இல்லையாம்...”
 
 
“ஓ...”
 
 
“எஸ்... சார்...”
 
 
“வீட்டில் இருக்கறவங்ககிட்ட சொன்னது ஒரு இடம்... புக் செஞ்சு இருக்கறதோ வேற இடம்... ஏதோ தகிடு தத்தம் செஞ்சு இருக்கானுங்க... அதே போல ஏன் இங்கே புக் செஞ்சிட்டு வேற இடத்தில் தங்கி இருக்கக் கூடாது...?”
 
 
“அதையும் விசாரிச்சிட்டேன் சார்... வேற பெரிய ஹோட்டல் எங்கேயும் தங்கலை... அங்கே இருக்க இன்பார்மர்க்கு இவங்க போட்டோ அனுப்பிச் சின்ன ஹோட்டல்ஸ் அப்பறம் வேற சில இடங்களிலும் விசாரிக்கச் சொல்லி இருக்கேன் சார்... இவங்க கம்ப்ளைன்ட் கொடுக்காததினால போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விசாரிக்க முடியலை சார்..”
 
 
“குட்... அப்படியே அவனுங்களைப் பற்றியும் புல்லா விசாரிங்க ஆனந்த்... ஏதோ தப்பா இருக்கு...”
 
 
“அதையும் விசாரிச்சிட்டேன் சார்... ஊருல இருக்க அத்தனை மொள்ளமாரி தனமும் செஞ்சு இருக்கானுங்க... ஸ்கூல் படிக்கும் போதே டீச்சர் மேலே கையை வெச்சு பெரிய பிரெச்சனை ஆகி இருக்கு சார்... இவனுங்க இருபது நாள் சஸ்பென்ட் ஆகி இருக்கானுங்க... வழக்கம் போல உள்ளே பணமும் பதவியும் விளையாடி அதை ஒன்னும் இல்லாம செஞ்சு இருக்கு, அந்த டீச்சர் அவமானம் தாங்காம தற்கொலை செஞ்சுகிட்டு இருக்காங்க... அடுத்து அவனுங்க வளர வளர எல்லாமும் சேர்ந்தே வளர்ந்து இருக்கு...” என்று நீண்ட பட்டியலை ஆனந்த் வாசித்து முடித்தான்.
 
 
“ஹ்ம்ம்... இதை நான் எதிர்பார்த்தேன், அப்போ இவனுங்க பாண்டியே போகலை, அங்கே தேடுறது வேஸ்ட்... சிட்டில இருந்து வெளியே போற எல்லா டோல்ஸ்லேயும் செக் செய்ங்க இவனுங்க கார் நம்பர், போட்டோ கொடுத்து விசாரிச்சு சொல்லுங்க...”
 
 
“ஓகே சார்...” என்று ஆனந்த் நகர்ந்ததும், இது அவர்களாகவே போதையிலோ இல்லை வேறு நடவடிக்கைக்காகவோ மற்றவர் அறியாமல் பதுங்கி இருப்பது போல சஞ்சய்க்கு தெரியவில்லை.
 
 
கடத்தலாகவோ கூட இருக்கலாம் என்றே தோன்றியது. அவன் எதிர்ப்பார்த்தது போலவே ஆனந்த் அவர்களோ அவர்களின் வாகனங்களோ எங்கும் செல்லவில்லை என்ற தகவலையே கொண்டு வந்தான்.
 
 
“இதை நான் எதிர்பார்த்தேன் ஆனந்த்... அவனுங்க தானா போகலை ஏதோ இடையில் நடந்து இருக்கு, அவனுங்க போட்ட மொத்த பிளானும் அதனால மாறி இருக்கு... ஒருவேளை கடத்தபட்டு இருக்கலாம்... ஆனா அது பணத்துக்காக இருந்தா இதுக்குள்ளே அதைக் கேட்டு போன் வந்து இருக்கணும்... மூணு நாள் ஆகியும் வரலைனா கடத்தப்பட்டது பணத்துக்காக இல்லை... வேற ஏதோ காரணத்துக்காக இனி நாம தேட வேண்டியது ஆட்களை இல்லை... அவனுங்க பாடியை தான்...” என்றிருந்தான் சஞ்சய்.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN (2) - 2

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 3
 
 
சஞ்சய் விசாரித்துத் தெரிந்து கொண்ட வரையில் அவர்களின் மூன்று குடும்பத்துக்கும் சொந்தமாக இருக்கும் அனைத்து ஒதுக்குபுறமான சொகுசு பங்களாக்களும் தோப்பு வீடுகளும் கடற்கரை மாளிகைகளும் அலசப்பட்டன.
 
 
அவை அவர்களின் தகப்பன்களாலேயே பல்வேறு திரைமறைவு வேலைகளுக்கு என்று பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிய, அங்கெல்லாம் உள்ளே சென்று விசாரணை செய்ய இவர்களே விடமாட்டார்கள் என்பதால் கடைசியாக அவர்களின் அலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்ட இடத்தின் அருகில் இருக்கும் இவர்களுக்குச் சொந்தமான இடத்தைப் பற்றித் தேடுகையில் கிடைத்தது ப்ரவீன்ராஜுக்கு சொந்தமான கடற்கரை பங்களா.
 
 
உடனே அங்குத் தேடுதல் வேட்டையைத் தொடங்க சஞ்சய் முயல, அதற்கு அவரிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. அது அவர்களின் பர்சனல் இடம் என்றெல்லாம் கூறி அவர் தடுமாறுவதிலேயே எந்த மாதிரியான பர்சனல் வேலைகளுக்கு இது பயன்பட்டு இருக்கும் என்று புரிய...
 
 
வேறு வழி இல்லாமல் தங்களின் அத்தனை சந்தேகத்தையும் அவருக்குச் சஞ்சய் கோடிட்டு காட்ட... ஆடி போய் விட்டார் அவர். அதுவரை வழக்கம் போலப் பிள்ளைகள் எங்கோ ஜாலியாக இருக்கிறார்கள் என்றே பெரியதாக அலட்டி கொள்ளாமல் இருந்தவர் உடனே சோதனையிட சம்மதித்தார்.
 
 
அவர் மட்டுமல்லாமல் பசுபதியும் கொண்டல்ராவுமே கூட அப்படித் தான் எண்ணிக் கொண்டு இருந்தனர். ஆனால் அதையும் மீறி பசுபதி இதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த காரணமே அவர் மனைவி தான்.
 
 
எவ்வளவு மது மயக்கத்தில் இருந்தாலும் சுரேந்தர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தன் தாயை அழைத்து பேசாமல் இருக்க மாட்டான். அப்படியே அழைக்கத் தவறினாலும் அடுத்த நாள் காலையில் தவறாமல் அழைப்பு வந்து விடும்.
 
 
அப்படிபட்டவன் மூன்று நாட்களாக அழைக்கவில்லை என்றதும் அவர் பயந்து அழுது புலம்ப, மனைவியின் உடல்நலனை கருத்தில் கொண்டே முடிந்த வரை தன் ஆட்களை வைத்து தேடி பார்த்து கிடைக்காததினாலேயே இவர்களிடம் வந்திருந்தார்.
 
 
அவருமே கூட, இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்கவில்லை. மூன்று நாட்களாகத் தெளியாத அளவு போதை மயக்கத்தில் இருப்பார்கள் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தார்.
 
 
இந்தத் தகவல் மூன்று பெரிய மனிதர்களையும் ஆட்டம் காண செய்து இருந்தது. தங்கள் பிள்ளைகள் எந்த ஆபத்தும் இல்லாமல் திரும்பக் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தவர்கள், அமைதியாக ஒத்துழைக்கத் தொடங்கினார்கள்.
 
 
முதலில் ப்ரவீன்ராஜ் மாளிகைக்கு விரைந்தான் சஞ்சய். அங்கு ஆதாரமாகப் பயன்படுத்தத் கூட ஒரு சிசிடிவி கேமராவும் வாட்ச்மேனும் இல்லை. இங்கு அவர்கள் செய்யும் சில வேலைகளுக்கு அது தொந்தரவு என்பது தெளிவாகப் புரிய, இதழோர இகழ்ச்சியான சுழிப்போடு உள்ளே நுழைந்தான்.
 
 
மூவரின் கார்களுமே அங்குத் தான் நிறுத்தப்பட்டு இருந்தது. கீழ் தளத்தில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் அமைதியாகக் காட்சி அளிக்க... மேலே ஏறி சென்றவனை வரவேற்றது, அங்கிருந்த பெரிய ஹால் முழுவதும் விரிக்கப்பட்டு இருந்த தரையில் உபயோகிக்கும் மெத்தையும் அதில் கடை பரப்பபட்டு இருந்த தட்டுக்கள் கண்ணாடி கிளாஸ்கள் அவற்றிற்கு அருகில் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த உயர்ரக மது பாட்டில்கள் இப்படிப் பல...
 
 
அவையே மூவரும் இங்கே கூத்தடித்து இருப்பதைச் சாட்சியாக்க... அதிலும் எல்லாக் கிளாஸ்களுமே பாதிக் குடித்து விட்டு வைக்கப் பட்டு இருக்க... அருகில் இருந்த தட்டுகளில் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த உணவு வகைகள் எல்லாம் காய்ந்து போய் இருந்தது. மெல்ல பார்வையைச் சுழற்றி வேறு எதுவும் முக்கியமாகக் கண்ணில் படுகிறதா எனக் கவனித்தவாறே உள்ளே சென்றவனை அனைத்து அறைகளும் ஆள் இன்றிக் காலியாகவே வரவேற்றன.
 
 
“சார்... இங்கே யாருமே இல்ல சார்...” என்று ஆனந்த் ஒரு இடம் விடாமல் அலசி ஆராய்ந்து விட்டு வந்து சொல்லவும், “இங்கே தான் இருந்து இருக்கானுங்க சார்.. அப்பறம் எங்கே போய் இருப்பானுங்க...”
 
 
“ம்ம்ம்... இதையெல்லாம் பார்க்கும் போது அவங்க இங்கிருந்து போகணுன்னு பிளான் செஞ்சு போகலை ஆனந்த்...” என்று அங்கிருந்தவற்றைக் காண்பித்துச் சொல்லியவன், “ஒண்ணு ஏதோ அவசரமாகவோ, இல்லை அவர்கள் அனுமதி இல்லாமலோ இங்கிருந்து போய் இருக்கணும்... பிகாஸ் எல்லார் வண்டியும் வெளியே இருக்கு...”
 
 
“ஆமா சார்..”
 
 
“வீட்டை புல்லா ஒரு ரவுண்ட் அடிச்சிடுங்க ஆனந்த்...” என்றதும் சரியென்ற தலையசைப்போடு ஆனந்த் நகர, சஞ்சய் கண்ணில்பட்ட ஒவ்வொன்றிலும் ஏதாவது க்ளு கிடைக்கிறதா என்று நுண்ணியமாகப் பார்க்க தொடங்கினான்.
 
 
வீடு முழுவதையும் அலசி முடித்து வந்து நின்ற ஆனந்த், “எதுவும் கிடைக்கலை சார்...” என்றான்.
 
 
“ஓகே... மொத்தம் இங்கே எத்தனை வீடு ஆனந்த்...?”
 
 
“மொத்தம் அஞ்சு சார், அதில் இரண்டு வீட்டில் மட்டும் தான் வாட்ச்மேன் இருக்காங்க, அதுவும் வீட்டுக்கு உள்ளே தான் அவங்களுக்கு ஷேட் இருக்கு... உள்ளே இருந்து இங்கே நடக்கற எதையும் பார்க்க முடியாது... கடைசி வீடு இடிச்சு கட்டறாங்க போல... ஆனா இன்னைக்கு வேலை நடக்கலைன்னு நினைக்கறேன், அங்கே போய் விசாரிக்கக் கூட யாரும் இல்லை சார்...” என்று சஞ்சய் எதையெல்லாம் கேட்பான் என அறிந்து சரியாகத் தெரிந்து வைத்து பதிலளித்து இருந்தான்.
 
 
அவனுக்கு ஒரு புன்னகையோடான தலையசைப்பை தந்தவன், “பெருசா இங்கே எந்த க்ளுவும் கிடைக்கலை ஆனந்த்... மறுபடியும் ஆரம்பிச்ச இடத்திலேயே தான் நிக்கறோம்... இவனுங்க பண்ணி இருக்க மொள்ள மாறி தனத்துக்கு எங்கே எங்கே இருந்து எல்லாம் எதிரிங்க முளைக்கப் போறானுங்களோ... பார்ப்போம்... சமீபமா பெரிய இடம் எங்கேயாவது மூணு பேரும் கை வெச்சு இருக்கானுங்களான்னு கொஞ்சம் பாருங்க...” என்றுவிட்டு சஞ்சய் கிளம்ப, சம்மதமாகத் தலையசைத்தபடியே உடன் சென்றான் ஆனந்த்.
 
 
இவர்களின் ஜீப் வெளியே செல்ல முயல, வேகமாக அந்த வழியே வந்த ஆட்டோ ஒன்று கடைசி நேரத்தில் இவர்களைக் கண்டு சடன் பிரேக் இட்டு நின்றது. ‘ஹே... பார்த்து வர மாட்டீயா...?!” என்று ஆனந்த் எகிற, “சாரி சார்... தப்பு என் மேலே தான், வழக்கமா ஆள் இல்லாத பளபள கார் ஷோ ரூம் மாறி காலியா இருக்கும் சார் இந்த ரோடு... அதே நெனப்புல ஸ்பீடா உள்ளாற வந்துட்டேன் சார்...” என்று பதட்டத்தில் பேசியவனைக் கண்டு புன்னகையோடு கீழே இறங்கினான் சஞ்சய்.
 
 
‘இங்கே யார் வீட்டுக்கு சவாரி...?”
 
 
“இன்னா சார்... இங்கே இருக்கறவங்க எல்லாம் நம்மோ வண்டில ஏறுவாங்களா...?”
 
 
“அப்போ.. அடிக்கடி இங்கே வரது போலவே பேசின...?”
 
 
“ஆமா சார்... வாரத்துக்கு மூணு நாளாவது வருவேன்... அந்த மூணாவது வுட்டுல இருக்க வாட்ச்மேன் எங்க அப்பாரு தான், அவருக்குச் சோறு கொண்டாந்து தருவேன்... நான் சவாரி பூட்டா என் பொஞ்சாதி வரும்...”
 
 
“ஓ...” என்று சஞ்சய் யோசனையாக இழுக்கவும்,
 
 
“இன்னா சார்... ஏதாவது திருட்டு பூட்ச்சா... பின்னே இம்மாம் பெரிய வூட்ட கட்டி வுட்டுட்டு எட்டி பார்க்காமே இருந்தா வேற இன்னா செய்வானுங்க...” என்றவனுக்குப் பதிலேதும் தராமல்,
 
 
“அந்தக் கடைசி வீட்டுல ஏன் வேலை நடக்கலை...”
 
 
“அது... அந்த வூட்டு ஐயாக்கு ரெண்டு பொஞ்சாதி சார்... அவரு போய்ச் சேர்ந்ததும் மொத சம்சரத்து புள்ள நல்லா இருந்த வூட்ட இடிச்சிட்டுப் பெருசா கட்ட ஆரம்பிச்சாரா... ரெண்டாவது சம்சாரத்து புள்ள இதுல எனக்கும் பங்கு இருக்குன்னு கேஸ் போட்டு கட்ட விடாம செஞ்சிட்டாரு... அதான் அப்படியே நிக்குது, எம்மாம் அழகா இருக்கும் தெரியுமா சார் அந்த வூடு... அத்த போய் இடிச்சிட்டானுங்க, ஒண்டு குடுத்துனத்துல வாடகை குடுத்து இருந்து பார்த்தா அப்போ தெரியும்...”
 
 
“ஓ... எவ்வளவு நாளா அங்கே வேலை நடக்கலை...?”
 
 
“அது இருக்கும் சார்... ஒரு மூணு நாலு மாசம்...” என்றவனிடமிருந்து இன்னும் சில தகவலகளை அவன் அறியாமல் பேச்சு வாக்கில் வாங்கிக் கொண்டவன், அவனை அனுப்பி விட்டு ஜீப்பில் ஏறி அமர்ந்ததும், அது தானாக அந்த வீட்டை நோக்கி பயணித்தது.
 
 
அதில் சஞ்சய் மெச்சுதலாக ஒரு பார்வை திரும்பி ஓட்டுனர் ராஜேந்திரனை பார்க்க... அவர் அழகாக வெட்க புன்னகையைச் சிந்தினார். இந்த இரண்டு வருடங்களில் அவனோடு இருக்கும் அனைவரையும் வார்த்தைகளால் சொல்லாமலேயே அவனின் அடுத்த அடி என்னவாக இருக்கும் எனப் புரிந்து செயல்பட வைத்து இருந்தான்.
 
 
அந்த வீடு மிகப் பெரிய மாளிகையாகக் கட்ட முயன்று பாதியில் கைவிடபட்ட நிலையில் இருந்தது. கூர்மையான விழிகளோடு சுற்றுப் புரத்தை அலசி கொண்டே சஞ்சய் உள்ளே நுழைய, ஆனந்த் அவனைப் பின் தொடர்ந்து சென்றான்.
 
 
உள்ளே ஆங்காங்கே கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் போடப்பட்டு இருக்க... ஆள் அரவமற்று இருந்தது இடம். எங்கும் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
 
 
“எவ்வளவு பொருளை எப்படிப் போட்டு வெச்சு இருக்காங்க பாருங்க சார்...”
 
 
“இதைத் தான் இப்போ அந்த ஆட்டோ தம்பி சொன்னாரு, இருக்கறவனுக்கு அருமை தெரியாதுனு...” என்று புன்னகைத்தவன், வெளியே செல்ல திரும்ப இருந்த வேளையில் சற்றுத் தொலைவில் கொஞ்சம் ஈரமாக இருப்பது தெரிய, அங்குச் சென்றான்.
 
 
‘என்ன சார்...?”
 
 
“பல நாளா ஆளே இல்லாத இடத்தில் எப்படி ஈரம் ஆனந்த்...?”
 
 
“எங்காவது லீக் ஆகி இருக்கும் சார்...” என்றவனின் பார்வை சஞ்சய் மேல் நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அங்குப் பார்க்க... அங்கும் லேசாக ஈரம் தெரிந்தது.
 
 
“எங்கே என்ன லீக்னு பார்த்துட்டா போச்சு...” என்றவாறே சஞ்சய் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மேலே ஏறி செல்ல... அங்கும் கீழே இருந்தது போலவே அதற்கு நேர் மேலாக ஈரம் கசிந்து இருந்தது.
 
 
“என்னங்க டா நடக்குது இங்கே...?!” என்றவாறே அதற்கும் மேல் இருந்த தளத்துக்குச் செல்ல... அங்கே தரையில் பாதி இடம் முழுக்க ஈரமாக இருக்க... அந்த ஈரத்துக்கு நடுவில் ஒருவன் சட்டை எதுவுமில்லாமல் ஒரு சின்ன ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து படுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
இருவரும் வேகமாக அவனை நெருங்கி பார்க்க... இவர்கள் தேடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவனான சுரேந்தர் தான் அவன். ஆனந்த் அவசரமாக அவனை நெருங்கி சோதிக்க முயல, “அவன் எப்போவோ போய்ச் சேர்ந்துட்டான்...” என்றான் சஞ்சய்.
 
 
“ஆமா சார்... ஆனா இது என்ன தண்ணினு தான்...” என்று ஆனந்த் முடிப்பதற்குள், “ஐஸ் பார் ஆனந்த்... பாடி விறைப்பா இருக்கே தெரியலை, அது மேலே இருந்து இருக்கு பாடி... மே பி டூ ஆர் த்ரி பார் இருந்து இருக்கும்...” என்று யோசனையோடு சொன்னவன் அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக அளந்தான்.
 
 
“என்ன சார் இது புது மெதட்.. வழக்கமா வெளியே தெரியாம புதைப்பாங்க... இல்ல துண்டு துண்டா வெட்டுவாங்க... ஆனா இது என்ன...?! இவனுக்கு எங்கேயும் அடியோ வெட்டோ எதுவுமே இல்லை சார், மே பி பாய்சன்..”
 
 
“ஹா ஹா... அப்படியா தோணுது உங்களுக்கு, உயிரோட வெச்சு கொன்னு இருக்கான் ஆனந்த்.. நீங்க சொன்ன எல்லாத்தையும் விடக் கொடுமையா உயிரோட ஐஸ்ல வெச்சு சித்ரவதை செஞ்சு இருக்கான்... அவன் கண்ணு திறந்தே இருக்கு பாருங்க, அதுல தெரியற அந்தப் பயமும் மிரட்சியும் சொல்லுது பாருங்க... இந்த ஐஸ் அவன் உடம்பு கெட்டு போகாம இருக்க வெச்சது இல்லை... துடிதுடிச்சு சாக வெச்சது...” என்றவன்,
 
 
“இவ்வளவு கொடூரமா கொல்லற அளவு என்ன செஞ்சு தொலைச்சானுங்களோ...?!” என்றான்.
 
 
“உயிரோட இருந்தான்னா இவன் ஏன் சார் எழுந்து ஓடலை... கை கால் கூடக் கட்டி இல்லையே...?”
 
 
“அதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி ஆனந்த்... எழுந்து ஓட முடியாத அளவு ஏதோ செஞ்சு இருக்கான்... அது என்னன்னு தான் அட்டாப்ஸில பார்க்கணும்... இவனுக்கே இப்படினா மத்தவனுங்க எல்லாம் எங்கே எப்படி இருக்கானுங்களோ...?!” என்றவாறே ஜன்னல் அருகில் சென்றவன், வீட்டின் பின் பக்கம் இருந்த இடத்தில் ஒரு இடம் மட்டும் சற்று புதிய மணலாகத் தெரிய...
 
 
“டீமுக்கு இன்பார்ம் செஞ்சிட்டீங்களா ஆனந்த்...?!”
 
 
“அப்போவே சார்.. ஆன் தி வே சார்...”
 
 
“ம்ம்ம்... அடுத்தப் பாடி, அனேகமா பின்னாடி இருக்கலாம்...” என்றவாறு அங்கு விரைய... கூடவே ஓடினான் ஆனந்த்.
 
 
அங்கு ஒரு இடத்தில் மட்டும் புதிதாகத் தோண்டி மூடப்பட்டது போல இருக்க... அங்குச் சுற்றி தரையில் வேறு எதுவும் ஆதாரம் தென்படுகிறதா என்று இருவரும் அலசிக் கொண்டு இருக்கையிலேயே வந்து சேர்ந்து இருந்தது அவர்கள் டீம்...
 
 
இரண்டு பேர் சுரேந்தரின் உடலை வண்டியில் ஏற்றி விட்டு அந்த இடத்தை ஆய்வு செய்து கொண்டிருக்க மற்ற இரண்டு பேர் சஞ்சய் சுட்டி காட்டிய இடத்தில் தோண்ட துவங்கி இருந்தனர்.
 
 
ரொம்ப ஆழம் எல்லாம் தோண்ட வேண்டிய அவசியமே இல்லாமல் சில அடியிலேயே ஜலபதியின் உடல் தென்பட்டது. அதே போல உடல் விறைத்துக் கண்கள் திறந்த நிலையில் சட்டை இல்லாமல் ஷார்ட்ஸ்ஸோடு இருக்கவே... இவனையும் அதே போலவே உயிரோடு புதைத்து இருப்பது புரிந்தது.
 
 
உடல் மண்ணுக்குள் இருந்ததால் லேசாக அழுக துவங்கி இருக்க... திறந்து இருந்த கண் முழுவதும் மண் அடைத்து பார்க்கவே விகாரமாக இருந்தது முகம். “இவன் ஏன் சார் கண்ணு மூடலை, எழுந்து தான் போக முடியலை... மண்ணு விழும் போது கண்ணை மூடி இருக்கலாம் இல்லை சார்...” என்று ஆனந்த் அந்த முகத்தைப் பார்க்க முடியாமல் புலம்ப...
 
 
“அதையும் செய்ய முடியலையோ என்னவோ ஆனந்த்... இல்லைனா இவன் இப்படி இருக்க வாய்ப்பில்லை... உயிரோட மண்ணுக்குள்ளே இருந்து மூச்சு முட்டி சாகறதை விடக் கொடூரமானது இது.. கண்ணுல தூசு விழுந்தாலே நமக்கு எப்படி இருக்கும்...?!” என்றவன்,
 
 
“இரண்டு பாடியையும் கொண்டு போய்க் காஸ் ஆப் டெத் என்னன்னு பார்க்க சொல்லுங்க... நாம அடுத்தப் பாடியை தேடுவோம், அவன் எங்கே எப்படி சிக்கி இருக்கானோ...!!” என்று சஞ்சய் கேலியாகச் சொல்ல... அதே தான் நடந்தது.
 
 
சற்றுத் தொலைவில் இருந்த மரங்கள் அடர்ந்த இடத்தில் இருந்த கடைசி மரத்தில் ஆடை இல்லாமல் தொங்கிக் கொண்டிருந்தான் ரூபன்.
 
 
தற்செயலாக மரத்தின் மீது பார்வையைப் பதித்தவனுக்கு முதலில் அது என்ன என்று புரியவில்லை, சற்று உற்று நோக்க... அப்படியே நம்பமுடியாமல் அதிர்வில் சில நொடிகள் உறைந்து நின்றுவிட்டான் சஞ்சய்.
 
 
சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டு வேகமாக ஆனந்த்துக்குச் சைகையில் தன்னைத் தொடருமாறு சொல்லிவிட்டு ஓடியவன், அங்குச் சென்று கண்ட காட்சியில் பரிதாபமும் அருவருப்பும் சேர்ந்தே வந்தது.
 
 
அங்கு இருந்த மரத்தின் கிளையில் ஆடையில்லாமல் தொங்கி கொண்டிருந்த ரூபனின் உடலை பெரிய சிகப்பு எறும்புகள் இந்த மூன்று நாளில் அறித்துப் பெரும் பகுதியை சிதைத்து இருந்தது.
 
 
அதே போல அசைவற்றுக் கண்கள் திறந்த நிலையிலேயே இவனும் இருந்தாலும் இவனைக் கொன்று இருந்ததில் ஒரு கொடூரம் தெரிந்தது. அதுவும் திறந்து இருந்த இமையையும் விழிகளையும் எறும்புகள் பதம் பார்த்து இருந்ததில் கண் கொண்டு பார்க்க முடியாத நிலையில் இருந்தது அந்த உடல்.
 
 
ஆனந்த் இதை எதிர்பார்க்காமல் வாந்தியே எடுத்துவிட்டான். “சார்... சார்... எப்படி...?” என்பதற்கு மேலாக அவனின் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. “உடம்பு முழுக்கத் தேன் தடவி வெச்சு இருக்காங்க... அதான்...” என்றவனாலும் அதற்கு மேல் அந்த உடலை பார்க்க முடியவில்லை.
 
 
அதற்குள் அங்கு வந்திருந்த டீம் உடலை கீழே இறக்கி கனமான துணி கொண்டு அதில் கிடத்தியே எடுத்து சென்றனர். அவ்வளவு சிதைந்து இருந்தது அந்த உடல்.
 
 
அதற்குள் மூவரின் தந்தைகளுக்கும் தகவல் தரப்பட்டு இருக்க... வேகமாக வந்து சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளின் உடல்களையும் அது இருந்த நிலையையும் கண்டு நிலைகுலைந்து போயினர்.
 
 
அவர்களின் ஆத்திரம் ஆக்ரோஷம் எதுவும் சஞ்சயிடம் எடுப்படவில்லை. உடனே இதைச் செய்தவனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு கொந்தளிக்கத் தொடங்கியவர்களை மருந்துக்குக் கூட சஞ்சய் மதிக்கவில்லை.
 
 
“உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க... எனக்கும் அரஸ்ட் செய்ய ஈஸியா இருக்கும்... ஏன்னா நீங்க தானே உங்க பசங்க செஞ்ச எல்லாக் கேவலத்தையும் மூடி மறைச்சீங்க, என்னை விட அவங்க எதிரிங்க யார் யாருன்னு உங்களுக்குத் தான் நல்லா தெரிஞ்சு இருக்கும்...” என்று காட்டமாகவே பதிலளித்து விட்டு கிளம்பி இருந்தான்.
 
 
மூன்று உடல்களும் எடுத்து செல்லபட்டவுடன், உடற்கூறு செய்யும் மருத்துவரை அழைத்தவன், தன் சந்தேகம் பற்றிக் கூறி உடற்கூறு முடிந்த உடன் தனக்கு அழைக்குமாறு சொல்லி விட்டு வைத்தான்.
 
 
வழியெங்கும் தீவிர ஆலோசனையில் இருந்தவனை ஆனந்த் எப்போதுமே சஞ்சய் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் அடிபணிபவன் இல்லை என்றாலும் இன்று அவன் கோபத்தில் ஏதோ வித்தியாசமாகத் தெரிய, தயக்கமாகத் திரும்பி பார்த்துக் கொண்டே வர,
 
 
“என்ன கேக்கணுமோ கேளுங்க ஆனந்த்...”
 
 
“என்ன சார்... அவங்ககிட்ட அப்படிப் பேசிட்டீங்க...”
 
 
“பின்னே என்ன செத்தது எல்லாம் தியாகிங்களா... விட்டா பிடிச்சு என்கிட்ட கொடுன்னு சொல்லுவாங்க, என்னமோ அவங்க பசங்க எந்தத் தப்பும் செய்யாம தண்டிக்கப்பட்டது போல, விதவிதமா சிதைச்சு இருக்கறதுலேயே தெரியலை... பெருசா என்னமோ செஞ்சு இருக்கானுங்க... நாம இப்படிப் பேசினா தான் இனி இதைப் பத்தி பேச என்கிட்டே வரமாட்டனுங்க.. விட்டா அதிகாரம் செய்வாங்க... இன்னும் அவங்க லீகலா கம்ப்ளைன்ட் கூடக் கொடுக்கலை... கமிஷ்னர் சார் வார்த்தைக்காக இதில் இறங்கினேன்...” என்று கோபத்தோடு கூறியவன்,
 
 
“நாளைக்குள்ளே எனக்கு இவனுங்க ஹிஸ்டரி ஜாகர்பி எல்லாம் ஒட்டு மொத்தமா வேணும் ஆனந்த்...” என்று விட்டு கண்மூடி யோசனையில் ஆழ்ந்தான் சஞ்சய்.
 
 
***************
 
 
மாலை வீடு திரும்பி இருந்தவனுக்கு அலைந்து திரிந்த எரிச்சலோடு ‘ஹே, பொறுக்கி... எப்போ போனே எப்போ வரே... இப்போ தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா...?!’ எனச் செல்ல கோபத்தோடு வரவேற்கும் நீருவின் நினைவும் வந்து யாருமற்று வெறிசோடி இருந்த வீடும் சலிப்பை தர, சாப்பிட கூடத் தோன்றாமல் படுக்கையில் கண் மூடி சரிந்து விட்டான்.
 
 
சற்று நேரத்துக்கு எல்லாம் கண் மூடி மனதை அமைதி படுத்த முயன்றுக் கொண்டிருந்தவனின் தவத்தைக் கலைத்தது அவனின் அலைபேசியின் இசை. இப்போது யாரிடமும் பேசும் மனம் இல்லை என்றாலும் அழைப்பது ராம் என்பதால் அதை ஏற்று இருந்தான்.
 
 
“சொல்லு மச்சி...” என்று ஸ்ருதி இறங்கி ஒலித்த சஞ்சய்யின் குரலே அவன் மனநிலையை ராமுக்கு புரிய வைக்கப் போதுமானதாக இருக்க... மேலும் அதை அதிகரிப்பது போலப் பேசாமல், அவன் மனநிலையை மாற்றுவது போல “என்ன டா சொல்ல சொல்றே...?! ஹ்ம்ம் நாங்க எல்லாம் யாருன்னாவது ஞாபகம் இருக்கா...?” என்று கோபப்படத் தொடங்கவும், “ஹே.. என்ன டா...” என்று தொடங்கிய சஞ்சய்யை முடிக்கவிடாமல்,
 
 
“உன் விளக்கம் விளக்கெண்ணை எதுவும் எனக்கு வேணாம்... அடுத்தச் சண்டே சின்னுவுக்குப் பர்ஸ்ட் பர்த் டே அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன்...”
 
 
“ஹே... அதுக்குள்ளே க்யூட்டி பைக்கு ஒரு வயசு ஆகிடுச்சா...” என்று சந்தோஷ குரலில் சஞ்சய் கேட்கவும், இதை அனைத்தையும் அந்தப் பக்கம் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டு இருந்த ராணி, “என்ன செய்யறது... நீங்க இந்தப் பக்கம் இரண்டு மாசமா வரலைன்னதும் மாசம் அப்படியே நகராம நிக்காதே... என் பொண்ணுக்கு இப்படி ஒரு தாய் மாமன் என்ன செய்ய...” என்று சலித்துக் கொண்டாள்.
 
 
“ராணி மா... நீயும் கியூட்டி பையும் எப்படி இருக்கீங்க...?” என்று தவறு செய்து விட்டவன் போல முகத்தை வைத்துக் கொண்டே பணிவான குரலில் சஞ்சய் கேட்க...
 
 
“வேணா... அண்ணான போய்ட்டீங்கன்னு பார்க்கறேன், நிம்மதியா திட்ட கூட முடியலை.. இல்லைனா..” என்று ராணி கடுப்பான குரலில் சொல்லவும், “வேணும்னா தம்பின்னு நினைச்சு நல்லா நாலு வார்த்தை திட்டிடு மா... உரிமையா திட்டவும் கோபப்படவும் கூட ஒருத்தருமில்லை, பேச்சு துணைக்குக் கூட யாருமில்லாம நாலு சுவரை வெறிச்சிட்டு உட்கார்ந்து இருக்கேன்... நீயாவது பேசு...” என்றவனின் குரலில் அத்தனை வலி தெரிந்தது.
 
 
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு தன் செல்ல குட்டியை பார்க்க கை நிறையப் பொம்மையும் பொருட்களுமாக வந்திருந்த நீரு ஸ்பீக்கரில் ஒலித்த குரலிலும் அந்த வார்த்தையிலும் அதில் இருத்த வலியிலும் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.
 
 
நீருவின் வரவை அறியாமல் அந்தப் பக்கம் பார்த்து அமர்ந்து இருந்த இருவரும், மேலும் பேசி கொண்டு இருந்தனர். சஞ்சய்யின் வார்த்தைகளைக் கேட்டு தவறு செய்து விட்டவளை போல ராணி ராமின் முகத்தைப் பார்க்க...
 
 
அவளைக் கண்களாலேயே அமைதி படுத்தியவன், “ஹே... போதும் டா உன் தங்கச்சிகிட்ட இருந்து திட்டு வாங்காம தப்பிக்க நீ போட்ட செண்டிமெண்ட் ஆக்டிங்...” என்று வேண்டுமென்றே அதைப் புரிந்தது போலக் காண்பித்துக் கொள்ளாமல் இயல்பாகப் பேச... சஞ்சய்யும் வேறு பேச்சுக்குத் தாவினான்.
 
 
“அடுத்தச் சண்டே பார்ட்டி... இப்போ இருக்க மனநிலையில் இது தேவையான்னு கூட யோசிச்சேன்... ஆனா எதுக்காகவும் பாப்பாவோட சின்னச் சின்ன விஷயமும் மிஸ் ஆகக் கூடாதுன்னு தோணுச்சு, அதான் அரேஞ் செஞ்சிட்டேன்...” என்றதும், “அதுவும் சரி தான் மச்சி...” என்று ஆமோதித்தான் சஞ்சய்.
 
 
“பார்ட்டி இங்கே இல்லை... சும்மா வந்து தலையைக் காண்பிச்சிட்டு ஓடிடலாம்னு நினைக்காதே, வெள்ளிகிழமை நாம எல்லாம் கொடைக்கானல் கிளம்பறோம்... பார்ட்டி முடிஞ்சு செவ்வாய்க்கிழமை தான் திரும்ப வரோம்... நாலு நாள் முன்னேயே சொல்லிட்டேன், எல்லா வேலையையும் முடிச்சுட்டு எந்தச் சாக்கும் சொல்லாம் வந்து சேரு...” என்று ராம் சொன்னதும் அந்தப் பக்கம் சற்று நேரம் அமைதி நிலவியது.
 
 
“அஞ்சு நாள் எல்லாம் கஷ்டம்...” என்று பேச தொடங்கிய சஞ்சய்யை இடையிட்ட ராம், “வர முடியுமா முடியாதா...?!” என்று ஒரே வார்த்தையில் கேட்டு இருக்க...
 
 
“மச்சி.. நான்..” என்று மீண்டும் இவன் தொடங்க, “எனக்கு வேண்டியது எஸ் ஆர் நோ ஒரே வார்த்தையில் பதில்...” என்று சற்று கோபமாகவே வந்திருந்தது ராமின் கேள்வி.
 
 
“உன் தங்கச்சிக்கு க்யூட்டி பைனா அவ்வளவு இஷ்டம் டா... நான் வந்தா அவ வர மாட்டா மச்சான்.. அவ அங்கே தனியா கஷ்டப்படறா டா, இந்த அஞ்சு நாள் உங்க கூட எல்லாம் ஜாலியா இருக்கட்டுமே... இந்த மாமாவோட ஆசி என் மருமகளுக்கு எப்போவுமே உண்டு..” என்றவன் குரலில் விரக்தியும் வேதனையும் கலந்து ஒலிக்க, மற்றவர் பதில் பேசும் முன் அலைபேசியை அணைத்து இருந்தான் சஞ்சய்.
 
 
இந்த மொத்த பேச்சு வார்த்தையையும் கேட்டுக் கண்களில் இருந்து நீர் வழிய அப்படியே சிலையென நின்றுவிட்டாள் நீரு.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN (2) - 3

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 1 week ago by Kavi Chandra
This post was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 4
 
 
சஞ்சய்யோடு பேசி முடித்துத் திரும்பிய ராணி அப்போதே அங்கு நிற்கும் நீருவை கண்டாள். “நீரு... வா வா, இப்போ தான் இங்கே வர வழி தெரிஞ்சுதா...” என ஆசையாக ஓடி சென்று கை பிடித்து அழைத்து வந்து அமர வைக்க... நீருவின் அதிர்ந்த முகமும் கலங்கிய கண்களும் ராமுக்கு அவள் சற்று முன் சஞ்சய்யோடு பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்பதைத் தெளிவாகப் புரிய வைத்தது.
 
 
சிறிது நேரத்துக்கு பிறகு குழந்தையைத் தூக்கி கொஞ்சி கொண்டிருந்த நீருவை, “எப்படி மா இருக்கே..?” என்ற ராமின் கேள்வி கலைக்க... “நானா வந்தா தான் இந்த அக்கறை எல்லாம் இல்லண்ணா... இதில் இந்த மேடம் இப்போ தான் வழி தெரிஞ்சுதான்னு என்னைக் கேக்கறாங்க, உங்களுக்கு அந்த வழி இப்போ வரை தெரியலையே... என்ன செய்ய எனக்கு இப்படி ஒரு அண்ணன் என் பிள்ளைக்கு இப்படி ஒரு தாய்மாமன்...” என்று ராணி சொன்ன அதே வார்த்தைகளை அது உங்களுக்கும் பொருந்தும் என்பது போலச் சொல்லி போலியாக முகத்தைத் திருப்பிக் கொண்டவளை கண்டு சஞ்சய்யை குறை கூறியதை கூட இவளால் தாங்க முடியவில்லை இதில் அவன் மேல் கோபமாம் என்று தனக்குள்ளேயே புன்னகைத்தவன், நீருவின் அருகில் வந்து அமர்ந்தான்.
 
 
“அக்கறை எல்லாம் அப்போவும் இப்போவும் எப்போவும் ஒரே மாதிரியே தான் இருக்கு, இருக்கும்... அதுவும் ஒரே தங்கை இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது அவ நினைவு எப்படி இல்லாம போகும், ஆனா எங்கே வந்து பார்க்கறது... எப்படி வந்து பார்க்கறது... என் பிரண்ட் மட்டும் தான் இப்போ வேண்டாதவனா ஆகிட்டானா, இல்லை அவனோடு சேர்ந்த நாங்களுமா...?! இது எதுவும் புரியாதா எதுக்கும் பதில் தெரியாத நிலையில் நாங்க என்ன செய்ய முடியும் நீயே சொல்லு மா... ஒருவேளை உன்னைத் தேடி நாங்க வந்து அது உனக்குப் பிடிக்காம போய் அது உன் உடல் நலத்தைப் பாதிச்சுதுனா, அதுக்கு நாங்களே காரணமா இருக்கக் கூடாதுன்னு தான் கவனமா இருந்தோம்...” என்று அவனின் தனிப்பட்ட குணமான அமைதியான குரலில் நீருவின் தலையை ஆதரவாக வருடியவாறே விளக்கமளித்தான்.
 
 
ராமின் இந்த விளக்கத்தில் ஒரு அடிபட்ட பார்வை அவனைத் திரும்பி பார்த்தவள், “உங்களுக்குக் கூட என் மனசோ நான் சொல்ல வராதோ புரியலை இல்லை... உங்க பிரண்ட்டை போலவே ஏதோ வில்லியை பார்க்கறா மாதிரியே பாருங்க... அவர் என்னமோ அவர் வந்தா நான் வரமாட்டேன்னு பாப்பா பர்த்டேக்கு கூட வரலைன்னு சொல்றாரு, நான் எப்போ அப்படிச் சொன்னேன்... என்னையும் என் மனசையும் யாரும் புரிஞ்சுக்காதீங்க என்ன இருந்தாலும் நீங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு நான் யாரோ தானே...” என்று கண் கலங்கியவளை ராணி வந்து அணைத்துப் பிடித்துக் கொள்ள, அவளின் அழுகை அதிகரித்தது.
 
 
நீருவை இப்படிக் கண் கலங்கியோ தன்னைப் பற்றிப் புலம்பியோ யாரும் பார்த்தது இல்லை. இவளின் இன்றைய ஹார்மோன் ப்ரச்சனைகளே இப்படி நீருவை பலவீனமாக்கி கொண்டு இருக்கிறது என்று அவ்விருவருக்கும் மட்டுமின்றி, வெளி வாயிலில் நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்க்கும் நன்றாகவே புரிந்தது.
 
 
ராமுடன் பேசி விட்டு வைத்திருந்தவனுக்கு, குழந்தையின் நினைவும் அதிகம் தாக்க... அவளோடு சற்று நேரம் இருந்தால் மனம் சமன்படும் என்று எண்ணி உடனே கிளம்பி வந்து இருந்தான். அவன் உள்ளே காலடி எடுத்து வைக்க நினைத்த போது தான் நீரு இறுதியாகப் பேசியதை எல்லாம் கேட்க நேர்ந்தது.
 
 
அவளின் உடல்நிலை மட்டும் மனநிலையைக் கருத்தில் கொண்டே அதிகம் நீருவை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருந்தவனுக்கு அதுவே அவளின் மனநிலையை அதிகம் பாதிப்பதும் ஹார்மோன்கள் தற்போது செய்யும் கோளாறின் காரணமாக எதை எதையோ யோசித்துக் குழப்பிக் கொண்டு தன்னையே அவள் வருத்தி கொள்வதும் தெளிவாகப் புரிந்தது.
 
 
‘இப்போ இந்த ஹார்மோன் ப்ரச்சனையால் தான் தப்பான முடிவை எடுத்து இருக்கேன்னு தெரியும் குல்பி... இல்லைனா இந்த விஷயத்துக்கு நீ இப்படி எல்லாம் செய்யக் கூடிய ஆளே இல்லை... அதனால தான் பாப்பா பிறந்துட்டா எல்லாம் சரி ஆகிடும்னு தான் மேலும் மேலும் உன்னைத் தொல்லை செய்யாம நான் விலகி நிக்கறேன், ஆனா அதுவே உன்னை இப்படிக் கஷ்டபடுத்தும்னா இனி இந்த மாமனோட அதிரடி ஆட்டத்தைத் தாங்க தயாராகிக்கோ செல்லம்...’ என்று மனதோடு தன் மனையாளிடம் பேசிக் கொண்டான் சஞ்சய்.
 
 
அதே நேரம் உள்ளே நீருவிடம் ராணி பேசிக் கொண்டிருந்தாள். “நீ யாரோனா..?! அப்போ நானும் இங்கே அப்படித் தானே...? ஆனா இவங்க யாரும் நம்மளை அப்படிப் பார்க்கவோ நடத்தவோ மாட்டாங்க, அது உனக்கும் தெரியும்... இப்போ நீ ஏதோ கோபத்திலும் குழப்பத்திலும் இருக்கே... ” என்று புன்னகையோடு பேச, அமைதியாகி போனாள் நீரு.
 
 
“நீ வேற வீட்டுக்கு போன தகவலை எங்களுக்குச் சொல்லவும் இல்லை, எங்களை அங்கே கூப்பிடவும் இல்லை, அப்போ நாங்க தானே உன் மேலே கோபப்படணும்... அப்போ நீ தான் எங்களைப் பிரிச்சு பார்த்து இருக்கேன்னு நான் சொல்லவா, அண்ணன் அண்ணியா எங்களை நீ நினைக்கலைன்னு கூடச் சொல்லலாமே...” என்று கோபமாக இல்லாமல் சற்று புன்னகையோடு ராணி பேசவும் அமைதியாகி போனாள் நீரு.
 
 
மெல்ல தலைகுனிந்தவாறே “சொன்னா என் பக்கமிருந்து நான் என்ன சொல்ல வரேன்னு யோசிக்காம எங்கே எனக்கே அட்வைஸ் செய்வீங்களோன்னு தான் சொல்லலை... அப்போ நான் இருந்த கோபத்துக்கும் மனநிலைக்கும் வேற எதுவும் எனக்கு யோசிக்க முடியலை, உங்களை எதிர்த்து பேசவும் எனக்கு விருப்பமில்லை... நிச்சயம் ஆத்ரேய் எனக்காக விட்டு குடுப்பாங்கன்னு நினைச்சேன்... சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்னு கூட நினைச்சேன், ஆனா...” என்றவள் அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறினாள்.
 
 
இதற்கு மேலும் இதைப் பற்றிப் பேசி நீருவை அழவிட மனமில்லாமல், “யாரும் யாருக்கும் அட்வைஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை... நீங்க ஒன்னும் குழந்தைகளும் இல்லை, இரண்டு பேருமே அடுத்தவங்களுக்குப் புத்தி சொல்ற இடத்தில் இருக்கீங்க... ஒருத்தர் இளைய சமுதாயத்தை வழிநடத்தற பேராசிரியை... இன்னொருத்தரோ சட்டம் ஒழுங்கை ஊருக்கே எடுத்து சொல்லும் காவல்துரையாளர் இதுல நாங்க சொல்லி நீங்க கேட்கற நிலையிலா இருக்கீங்க... எதுவா இருந்தாலும் உங்க வாழ்க்கை உங்க முடிவு தான் மா... ஆனா எப்போதும் எதுவும் நம்ம உறவுக்கு இடையில் வரவே வராது, அவனுக்கு நான் எப்படி பிரண்டோ அதே போல உனக்கு அண்ணன்... இது இரண்டுமே மாறாது...” என்று உன் விஷயத்தில் நான் தலையிடவே மாட்டேன் என உறுதியளித்து அவளின் மனகலக்கத்தைத் துடைத்து இயல்புக்கு மாற்றினான்.
 
 
“ஆமாமா... மாறாது தான், அதான் பார்த்தேனே... என் செல்ல குட்டி பர்த்டே பத்தி எனக்குச் சொல்லலை என்னைக் கூப்பிடலை, உங்க உயிர் நண்பருக்கும் மட்டும் அழைப்பு போகுது.. அவர் ஏதோ போனா போகுதுன்னு எனக்கு விட்டு கொடுக்கறாராம்...” என்று உரிமையாகக் கோபித்துக் கொண்டவளை கண்டு சத்தம் போட்டு சிரித்தாள் ராணி.
 
 
“என்ன என் கோபம் உனக்குச் சிரிப்பா இருக்கா...?! என்ன இருந்தாலும் நீ உன் அண்ணன் பக்கம் தானே இருப்ப...?!” என்று செல்ல சண்டைக்குத் தயாராக... “அடியேய் அண்ணி... கொஞ்சம் அடங்கு, நாளைக்கு உன்னை நேரில் வந்து கூப்பிட இருந்தோம்... நீயே எஸ்கேப் ஆக நினைச்சாலும் உன்னை அப்படி எல்லாம் விடற ஐடியா எங்களுக்கு இல்லை... நாங்க நாளைக்கு வந்ததும் மேடம் என்ன கேட்டு இருப்பீங்கன்னு நான் சொல்லட்டா... உங்க பிரண்டுக்கு சொல்லியாச்சான்னு தான் முதல் கேள்வி வரும்... இதுல இந்த அம்மா எங்க அண்ணா மேலே கோபமா இருக்காங்களாம், இதை நாங்க நம்பணுமாம்... போவீயா, இந்த உன் நடிப்பை எல்லாம் என் அப்பாவி அண்ணன்கிட்ட காட்டு அவர் ஏமாறுவாறு நாங்க இல்லை...” என்று கேலியில் இறங்கினாள் ராணி.
 
 
தன்னை ராணி சரியாகப் புரிந்து வைத்து இருக்கிறாள் என்று அறிந்து கோபம் போல “யாரு அப்பாவி... அவன் அடப்பாவி...” என்று முகத்தை நீரு திருப்பிக் கொள்ள... இப்போது ராமும் தன் மனையாளோடு சேர்ந்து சிரிக்கத் தொடங்கி இருந்தான்.
 
 
அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த சஞ்சய் இப்போ உள்ளே போய் அவளின் சந்தோஷத்தை கலைக்க விரும்பாமல், அப்படியே கிளம்பி சென்றுவிட்டான். வெகு நாட்களுக்குப் பிறகு மனக்கவலை இல்லாமல் சிரித்துச் சந்தோஷமாக இருந்தாள் நீரு.
 
 
**********
 
 
அடுத்த நாள் காலையில் முதலில் ராமை சந்திக்கச் சென்ற சஞ்சய்யை, “வாங்க ஆபிசர்... நேத்து போல அப்படியே திரும்பி போகாம இன்னைக்காவது உள்ளே வந்தீங்களே...” என்று சிறு கிண்டலோடு ராம் வரவேற்க...
 
 
“அடேயப்பா... கலக்டெர் சாருக்கு அவர் உடன்பிறப்பை தாண்டியும் கண் நல்லா தெரியுதே...” என்று வியந்தவாறு சஞ்சய் வம்பு செய்ய... “பின்னே போலீஸ் மட்டும் தான் சுத்தி நடக்கறதை கவனிக்கணுமா என்ன...? நாங்களும் செய்வோம்...” என்றான் ராம்.
 
 
ராணியை விசாரித்துக் குட்டி தேவதையோடு கொஞ்சி என்று நேரம் சென்றது. சரியாகக் கிளம்புவதற்கு முன், “எப்படி இருக்கா மச்சான் உன் தங்கச்சி...?” என்ற சஞ்சய்யை ஒரு பொருள் விளங்கா பார்வை பார்த்து, “என் தங்கச்சிக்கு என்ன ரொம்ப நல்லா இருக்கான் மச்சான்... ஆனா உன் மனைவி தான் கொஞ்சம் கூட நல்லா இல்லை...” என்றான்.
 
 
அதில் சட்டென அவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத் தனம் எல்லாம் விடை பெற்று சென்று இருக்க... “இனி நான் பார்த்துக்கறேன் மச்சி...” என்று சற்று அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவனைக் கண்டு தன் இரு கட்டை விரல்களையும் உயர்த்திக் காண்பித்துத் தலையசைத்து ஆமோதித்தான் ராம்.
ராணியின் வற்புறுத்தலின் பேரில் காலை உணவை அங்கேயே முடித்துக் கொண்டு கிளம்ப முயன்றவன், அந்தப் பெரிய ஹாலின் நடுவில் மாட்டப்பட்டு இருந்த ஆராவமுதனின் மாலையிட்ட புகைப்படத்தின் முன் சென்று நின்றவன், “சாரி அங்கிள்..” என்று அவரிடம் வழக்கம் போல மனதிற்குள் மனமார உணர்ந்து மன்னிப்பு கேட்க, ராம் ஆதரவாகச் சஞ்சய்யின் தோளில் கை வைத்தான். அதில் வார்த்தைகளற்ற மௌனத்தோடு ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு மனம் கனக்க அங்கிருந்து கிளம்பினான் சஞ்சய்.
 
 
********
 
 
காவல்நிலையம் சென்றவனை நேற்று சஞ்சய் கேட்ட அத்தனை தகவல்களோடும் எதிர் கொண்டான் ஆனந்த்.
 
 
“சார், அவனுங்க மொத்தம் மூணு பேர் இல்லை... நாலு பேர் சார்...”
 
 
“வாட்ட்ட்ட்ட்...”
 
 
“எஸ் சார்..”
 
 
“இவன் யாரோட பையன்...?”
 
 
“இல்ல சார், இவன் சாதாரணக் கிராமத்து பையன் சார்... பெரிய இடத்து வாரிசு எல்லாம் இல்லை, ஆனா இவனுங்க கூடத் தான் ஸ்கூல்ல இருந்து இருக்கான்...”
 
 
“அப்போ நாலாவது பாடியை வேற நாம தேடணுமா..?!” என்று சஞ்சய் கேட்ட அதே நேரம் உடற்கூறு ஆய்வு முடிந்து அதைப் பற்றிய எழுத்துப் பூர்வமான தகவல்கள் கையெழுத்தாகி வர மாலை ஆகிவிடும் என்பதால் சஞ்சய் கேட்டிருந்த தகவலை மட்டும் மருத்துவர் ரேஷ்மி தனிப்பட்ட முறையில் இவனை அழைத்துத் தெரிவித்து இருந்தார்.
 
 
சஞ்சய் எதிர்பார்த்தது போலவே அவர்களின் உடலில் சில இரசாயன கலவைகள் இருப்பது தெரிய வந்தது. அவையே உயிரோடு இருந்த போதும் அவர்களை எல்லாம் அசையவிடாமல் செய்து இருந்தது. அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவன், யோசனையில் ஆழ்ந்து இருக்க... ஆத்திரத்தின் உச்சத்தில் சஞ்சய்யை அழைத்திருந்தார் ரகுபதி.
 
 
“யாருன்னு கண்டுப்பிடிச்சிட்டீங்களா..? அவன் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும், எனக்கு இருந்த ஒத்த புள்ளையை இப்படிச் செஞ்சவனை என் கையாலேயே அணுஅணுவா சித்ரவதை செஞ்சு நான் கொல்லணும்... உனக்கு எவ்வளவு வேணும்னு சொல்லு, இல்ல பிரமோஷன் வேணுமா... எதுவா இருந்தாலும் சொல்லு நான் செய்யறேன்... பதிலுக்கு அவனை இரண்டு நாளுல பிடிச்சு என்கிட்ட கொடு...” என்று இடைவிடாது கத்திக் கொண்டிருந்தார்.
 
 
“நீங்க எனக்கு எதுவும் செய்ய வேணாம்... குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டியது என் கடமை... உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருந்தா சொல்லுங்க... அப்படியே கண்டுபிடிச்சாலும் நான் சட்டப்படி கோர்ட்டுக்கு தான் கூட்டி போவேன், நீங்க சொல்றது போல எல்லாம் செய்ய முடியாது...” என்று சஞ்சய்யும் சற்று அழுத்தமாகப் பதில் அளித்தான்.
 
 
“ஓஹோ அப்படியா... நீ பணம் வேணாம்னு சொல்லலாம் ஆனா உன்னை மாதிரியே எல்லாரும் தேடி வர மகாலட்சுமியை வேணாம்னு சொல்ல மாட்டாங்க... சரி நீ கண்டுப்பிடி, அவனை எப்படி என் கஸ்டடிக்கு யார் மூலமா கொண்டு வரணுமோ அதை நான் பார்த்துக்கறேன்...” என்றுவிட்டு ரகுபதி வைக்க... ஒரு மர்ம புன்னகையைச் சிந்தினான் சஞ்சய்.
 
 
அடுத்து சொல்லி வைத்தது போலப் பிரவீன்ராஜிடம் இருந்து அழைப்பு வந்தது. “யாரு...? யாருன்னு தெரிஞ்சுதா ஆபிசர்... எனக்கு அவன் வேணும், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை... என் பையன் முகத்தைக் கூடக் கடைசியில் சரியா பார்க்க முடியலை... ஐயோ எவ்வளவு அழகா இருப்பான், அவன் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தி வந்தாங்க தெரியுமா...?! இப்போ இப்படி... எனக்கு அவன் வேணும்... இப்போவே...!! ஆமா எங்கே அந்த இன்னொருத்தன், வழக்கம் போல இவனுங்களை மட்டும் சிக்கவெச்சுட்டு அவன் எஸ் ஆகிட்டானா...?! இவனுங்க பணம் வேணும் அதை யூஸ் செஞ்சு எல்லாம் செஞ்சுக்கணும் ஆனா பிரச்சனைன்னு வந்தா மட்டும் இவனுங்களைக் கோர்த்து விட்டுட்டு போயிட வேண்டியது... இப்போவும் இவனுங்களை மட்டும் தான் கொன்னு இருக்கானுங்க, அவன் எங்கே...?! எனக்கு அவன் மேலே தான் சந்தேகமா இருக்கு, பிடிச்சு கவனிக்க வேண்டிய விதத்துல கவனிங்க உண்மையை எல்லாம் கக்குவான்...” என்று பொரிந்து கொண்டிருந்தார்.
 
 
“உங்க சந்தேகத்தைச் சொல்லி இருக்கீங்க... என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன்...” என்றதோடு சஞ்சய் முடித்துக் கொண்டான்.
 
 
“ஆனந்த் யாரு இந்த நாலாவது ஆளு...?”
 
 
“அவன் பேரு குமரன் சார்..”
 
 
“அந்தப் பொறுக்கி இப்போ எங்கே இருக்கான்...?”
 
 
“விசாரிச்சவரை அவனை நல்லவன்னு தான் சொல்றாங்க சார்...”
 
 
“ஓ... நல்லவனுக்கு இவனுங்களோட என்ன வேலை...?”
 
 
“அது தான் தெரியலை சார்... காலேஜ், கூடப் படிச்சவங்கன்னு ஒரு ரவுண்ட் விசாரிச்சவரை அவன் ரொம்ப நல்ல பையன்னு தான் சொல்றாங்க சார், அவங்களுக்கே புரியாத ஒண்ணு இவனுங்களோட ஏன் இருந்தான்னு தான்..”
 
 
“ம்ம்... இன்ட்ரஸ்டிங்... அவன் பேர் என்ன சொன்னீங்க...?”
 
 
“குமரன் சார்..”
 
 
“எங்கே இருக்கான்...”
 
 
“தெரியலை சார்... அவன் வீடு பூட்டி இருக்கு, நம்பரும் ரீச் செய்ய முடியலை சார்... நேத்துல இருந்து டிரை செய்யறேன்... சுவிட்ச் ஆப்ல இருக்கு...”
 
 
“எப்போல இருந்து ஆப்ல இருக்கு..?”
 
 
“வெள்ளிக்கிழமை மத்தியானத்துல இருந்து சார்...”
 
 
“அவ்வளவு கிளோசா இருந்து இருக்கானுங்க... அவன் பிரண்ட்டுங்க விஷயம் தான் இப்போ ஹாட் நியூஸ், அதைக் கேள்விப்பட்டும் அவன் வரலைனா சம்திங் ஃபிஷி... தொடர்ந்து டிரை செய்யுங்க...”
 
 
“சரிங்க சார்...”
 
 
“இவன் இப்போ எங்கே இருக்கான்...? என்ன செய்யறான்..?”
 
 
“இங்கே சாலிகிராமத்துல தான் வீடு எடுத்து தங்கி இருக்கான் சார்... ஜெ ஆர் கெமிக்கல்ஸ்ல வேலை செய்யறான் சார்...”
 
 
இதைக் கேட்டதும் ஒரு உற்சாகமான விசிலை அடித்த சஞ்சய், சில மனகணக்குகளைப் போட்டு விட்டு “அவனுக்கு விடாம டிரை செய்யுங்க ஆனந்த்... எப்போ எடுத்தாலும் உடனே இங்கே வந்து என்னைப் பார்க்க சொல்லுங்க...” என்று விட்டு அவனைப் பற்றி விசாரிக்க, குமரன் படித்த கல்லூரிக்கும் தற்போது வேலை செய்யும் இடத்திற்கும் நேரில் சென்றான்.
 
 
***********
 
 
மறுநாள் காவல்நிலையம் வந்த சஞ்சய்யை காண காத்திருந்தான் குமரன். அமைதியான படித்தகலையுடன் நெற்றியில் திருநீறு இட்டு நீட்டாக உடை அணிந்து அமர்ந்து இருந்தவனைக் கண்களால் அளந்தவாறே தன் இருக்கையில் வந்தமர்ந்தான் சஞ்சய்.
 
 
“வணக்கம் சார்... என் பேரு குமரன்... என்னை வர சொல்லி இருந்தீங்கலாம்...” என்று பணிவான குரலில் கேட்டவனை ஒரு தலையசைப்போடு எதிர் கொண்டவன்,
 
 
“ம்ம், உட்காருங்க... ஒரு சின்ன என்கொயரி..”
 
 
“சொல்லுங்க சார்...” என்று சஞ்சய்யை எந்தப் பதட்டமும் இல்லாமல் எதிர் கொண்டான் குமரன்.
 
 
“அஞ்சு நாளா உங்க போனுக்கு என்ன ஆச்சு...?”
 
 
“கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு சார்...”
 
 
“ஒ.. அதான் போன் எடுக்கலையா... உங்க வீடும் பூட்டி இருந்ததே..?”
 
 
“ஆமா சார், ஊருக்கு போய் இருந்தேன்... காலையில் தான் வந்தேன்...”
 
 
“ஓஹோ... எப்போ ஊருக்கு போனீங்க...?”
 
 
“வெள்ளிகிழமை மத்தியானம் சார்...”
 
 
“அன்னைக்கு உங்க பிரண்டுக்கு பர்த்டே இல்லை... அன்னைக்குப் போய்க் கிளம்பி போய் இருக்கீங்க...”
 
 
“ரூப் பத்தி சொல்றீங்களா சார்... ஆமா, அன்னைக்குப் பாண்டிக்கு இன்வைட் செஞ்சு இருந்தான்... ஆனா அன்னைக்குத் தான் அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது, இவனுங்களுக்குச் சொல்லிட்டு ஓடிட்டேன் சார்...”
 
 
“ஒ.. அம்மா இப்போ ஒகே வா..?”
 
 
“ம்ம்.. இப்போ நல்லா இருக்காங்க சார்.. சுகர் அதிகமாகி மயங்கி கீழே விழுந்துட்டாங்க... அதைக் கேள்விப்பட்டு அந்தப் பதட்டத்துல பஸ் பிடிக்க ஓடும் போது தான் போன் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு... மூணு நாளா ஹாஸ்பிட்டல இருந்து சண்டே ஈவ்னிங் தான் வீட்டுக்கு வந்தாங்க சார்..”
 
 
“ம்ம்ம்... அதான் கூட இருந்து கவனிச்சிட்டு கிளம்பி வந்தீங்களா...?”
 
 
“அதுவும் தான் சார்... மண்டே எனக்குக் கல்யாணம் ஆச்சு சார்..”
 
 
“ஓ... புது மாப்பிள்ளையா நீங்க... அப்போ மாமியார் வீட்டுக்கு போக ரெடியா இருக்கீங்கன்னு சொல்லுங்க...”
 
 
“சார்...?!!”
 
 
“அதான் உங்க மனைவி வீட்டுக்கு விருந்துக்குப் போகணும் இல்லை...?”
 
 
“இல்ல சார்... அவளுக்கு என்னைத் தவிர வேற யாரும் இல்லை...”
 
 
“ஓ.. என்ன திடீர் கல்யாணம்... யாருக்கும் சொல்லாம யாரையும் அழைக்காம..?”
 
 
“சார், இதெல்லாம் எதுக்குக் கேக்கறீங்கன்னு..”
 
 
“சும்மா தான்..”
 
 
“இல்ல சார் அம்மா சொல்லிட்டே தான் இருந்தாங்க.. இப்போ இந்த உடம்பு முடியாம போகவும் ஒரே பிடிவாதமா நின்னு முடிச்சிட்டாங்க, பொண்ணும் ரெடியா இருக்கவே, குலதெய்வ கோவில்ல வெச்சு முக்கியமானவங்க வரை சொல்லி முடிச்சிட்டாங்க...”
 
 
“ஓஹோ... அப்போ நிரஞ்சனா கூட இருந்த லவ்...”
 
 
“சார் எதுக்கு இதெல்லாம் கேக்கறீங்க... சனாவை உங்களுக்கு எப்படித் தெரியும்...?” என்றவனிடம் இதுவரை இல்லாத ஒரு பதட்டம் வந்து இருந்தது.
 
 
“நீங்க இரண்டு பேரும் தானே லவ் செஞ்சீங்க... அப்பறம் ஏன் அவங்க திடீர்னு காணாம போனாங்க... அப்பறம் அவங்களை நீங்க தேடவே இல்லையா...?!” என்று சஞ்சய் சரமாரியாகக் கேள்விகளை அடுக்கி கொண்டே செல்ல...
 
 
தனக்குத் தெரியாத பல கேள்விகளையும் தகவல்களையும் முன் வைத்துக் கேள்வி கேட்கும் சஞ்சய்யை ஆவெனப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த்.
 
 
“சார்... என்ன விஷயம், எதுக்கு இந்த என்கொய்ரி...? ”
 
 
“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை குமரன், நிரஞ்சனா எங்கே, ஏன் படிப்பை முடிக்காம திடீர்னு போனாங்க...?”
 
 
“சார் நான் சனாவை தான் கல்யாணம் செஞ்சு இருக்கேன்... அப்போ ஏதோ அவங்க பேமிலி பிராப்ளம், அதான் ஊரை விட்டு எல்லாரும் சொல்லாம போய்ட்டாங்க...”
 
 
“ஒ... திரும்ப எப்போ எங்கே அவங்களைப் பார்த்தீங்க...?”
 
 
“என்ன சார்... அவளைப் பத்தியே ஏன் கேக்கறீங்க.. ஏதாவது ப்ரச்சனையா...?”
 
 
“அப்படி இல்ல, எங்கே இருக்காங்கன்னு தெரியாம போனவங்களை மறுபடி எப்படிக் கண்டுபிடிச்சீங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆர்வம் தான்...” என்று சஞ்சய் புன்னகைக்க...
 
 
“இப்போ சமீபமா தான் சார்... ஆறுமாசம் முன்னே வேலை விஷயமா கொல்கத்தா போய் இருந்தேன்... அப்போ அங்கே தான் பார்த்தேன், அவங்க அப்பா அம்மா எல்லாம் இரண்டு வாருஷம் முன்னே ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டு இவ மட்டும் தனியா இருந்தா... அப்போவே என்னோடவே கூட்டிட்டு வந்துட்டேன், இவ்வளவு நாள் எங்க அம்மா கூடத் தான் இருந்தா... இன்னைக்குத் தான் என்னோட கூட்டிட்டு வந்தேன்... இப்போ சொல்லுங்க சார், எதுக்கு இதெல்லாம்...”
 
 
“அப்படித் தனியா இருந்தப்பவும் ஏன் உங்களைத் தேடி வரலை..?”
 
 
“சொல்லாம கொள்ளாம போனதுனால திரும்ப வர தயங்கி இருந்து இருக்கா சார்.. இப்போ சொல்லுங்க சார், எதுக்கு இதெல்லாம்...”
 
 
“இவ்வளவு நேரம் எப்படிச் சமத்தா நான் கேட்டதுக்கு எல்லாம் சரியா பதில் சொன்னீங்களோ அதே போல இதுக்கும் சொல்லுங்க பார்ப்போம்... ஏன் உங்க பிரண்ட்ஸ் மூணு பேரையும் கொலை செஞ்சீங்க?” என்ற சஞ்சய்யை திகைத்துப் போய்ப் பார்த்திருந்தான் குமரன்.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN (2) - 4

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 5
 
 
சஞ்சயின் வார்த்தைகளைக் கேட்டு அப்பட்டமாக அதிர்ந்தவன், “சார்ர்ர்ர்... என்ன சொல்றீங்க, என்ன என்ன ஆச்சு என் பிரண்ட்ஸ்க்கு...?! சும்மா சொல்றீங்களா அவனுங்களுக்கு ஒண்ணுமில்லையே...?” என்று பதறினான்.
 
 
“அவங்களுக்கு நடந்தது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா...?”
 
 
“இல்லை சார் எனக்கு நிஜமாவே எதுவும் தெரியலை.. நிஜமாவே இப்போ அவங்களுக்கு எதுவும்...” என எப்படிக் கேட்டபது என்று புரியாமல் தடுமாறியவன், அப்போதே சஞ்சய் கேட்டதின் பொருள் புரிய... “சார்.. நீங்க என்னைச் சந்தேகபடறீங்களா... நான்... நான்... அவங்களை எதுவும் செஞ்சு இருப்பேன்னு... இல்லை சார், அவனுங்களுக்கு என்ன நடந்ததுன்னு கூட எனக்குப் புரியலை சார்...” என்றான்.
 
 
“மூணு நாளா டாக் ஆப் தி டவுன் அவனுங்க தான்..."
 
 
“சார் போன வெள்ளிகிழமைல இருந்தே நான் நானா இல்லை சார்... மொத அம்மாக்கு உடம்பு முடியலை, போற வழியில போன் உடைஞ்சுது... அங்கே போய் அம்மாவையும் அவ்வளவு நேரம் எல்லாத்தையும் தனியா சமாளிச்சு பயந்து போய் இருந்த சனாவையும் கவனிச்சு... இரண்டு நாள் அதுலேயே போய்டுச்சு... அப்பறமா திடீர்னு கல்யாண ஏற்பாடு, அதுல கூட நின்னு உதவி செய்யக் கூட அங்கே யாருமில்லை சார், நானே எல்லாம் பார்க்கணும்... அவசரமா எல்லாம் ரெடி செஞ்சு முடிச்சு.. அம்மா கூட இரண்டு நாள் இருந்துட்டு தூரத்துச் சொந்தம் ஒரு பாட்டி இருக்காங்க அவங்களைக் கூட்டி வந்து அம்மாக்கு துணைக்கு விட்டுட்டு சனாவை கூட்டிட்டுக் காலையில் தான் சென்னையே வந்தேன்... இங்கே வந்து வீட்டில் இருக்கப் பழைய போன் எடுத்துச் சிம் போட்டதும் சார் தான் பேசினாரு.. உங்களை வந்து பார்க்க மட்டும் தான் சொன்னாரு, வேறு எதுவும் சொல்லலை... இந்த அலைச்சலில் டிவியோ பேப்பரோ நான் பார்க்கலை சார்.. போனும் கையில் இல்லாததால எனக்கு எதுவுமே தெரியலை சார்... அவனுங்களுக்கு என்ன நடந்தது சார்...” என்றவனுக்கு, சஞ்சய் அனைத்தையும் சுருக்கமாக ஒரே வரியில் கூற... அப்படியே தலையைக் கையில் தாங்கி கண் மூடி அமர்ந்துவிட்டான்.
 
 
சிறிது நேரத்திற்குப் பின் நிமிர்ந்தவனின் கண்கள் கலங்கி சிவந்து இருக்க... “யார் ஏன்னு ஏதாவது தெரிஞ்சுதா சார்...?” என்றான்.
 
 
“இன்னும் இல்லை... விசாரிச்சுட்டு இருக்கோம்... கூடிய சீக்கிரம் சிக்கிடுவான்... உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா குமரன்...?”
 
 
“எனக்கா... எனக்கு எப்படிச் சார்...?”
 
 
“விசாரிச்ச வரையில் நீங்க நாலு பேரும் தான் ரொம்பக் கிளோஸ்னு சொல்றாங்க... அதுல மூணு பேரு இப்போ இல்லைனா...?!!” என்று சஞ்சய் இழுக்கவும்,
 
 
“என்னைச் சந்தேகபடறீங்களா சார்...? நான் சொன்னது எல்லாம் நிஜம் சார், இந்த நாலஞ்சு நாளா நான் ஊரில் தான் இருந்தேனான்னு நீங்க வேணா விசாரிச்சுக்கோங்க சார்...”
 
 
“யாருகிட்ட விசாரிக்கச் சொல்றீங்க...!! மயக்கத்துல இருந்த உங்க அம்மாகிட்டேயா..?! உங்க காதல் மனைவிக்கிட்டேயா..?! இல்ல ரிஜிஸ்டர்ல மட்டும் வந்தேன்னு காட்டிட்டு லீவ் போட்டு இருந்த உங்க ஊர் டாக்டர்கிட்டேயா...?!” என்றவன், ஒரு சிறு இடைவெளிவிட்டு,
 
 
“ஆனா நான் கேக்க வந்தது அது இல்லை... அவங்க மூணு பேரும் இல்லனா அடுத்து உங்ககிட்ட தானே விசாரிக்க முடியும்... கொஞ்சம் யோசிச்சு பாருங்க, அவங்க எப்போவாவது யாரை பத்தியாவது உங்ககிட்ட பேசி இருக்காங்களா... இல்லை வேற ஏதாவது யோசிங்க...”
 
 
“அப்படி எதுவும் அவங்க என்கிட்ட சொல்லலை சார்.. இந்தக் கடைசி ஆறு மாசமா நான் அவங்களை அதிகம் பார்க்கலை சார்...”
 
 
“அதாவது உங்க சனாவை திரும்பப் பார்த்த பிறகு ரைட்...”
 
 
“சார்... இதுக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல சார்... நானா தான்...”
 
 
“ரிலாக்ஸ்... நானும் சம்பந்தம் இருக்குன்னு சொல்லலையே, அவங்க திரும்ப வந்த பிறகு உங்களுக்குப் பிரண்ட்ஸ்ஸோட இருக்க நேரம் கிடைக்கலை... அவங்களோடவே பேசி இருப்பீங்கன்னு தான் சொன்னேன்...”
 
 
“ஆ.. ஆமா... ஆமா சார்...”
 
 
“ம்ம்ம்... இவனுங்க பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப மோசம்னு சொல்றாங்களே...?”
 
 
“ஆமா சார்..”
 
 
“நீங்க எப்படி...”
 
 
“சார்... நான் அப்படி இல்லை சார், யார்கிட்ட வேணாலும் கேட்டு பாருங்க சார்...”
 
 
“ம்ம்.. கேட்டுப் பார்த்துட்டேன்... அதான் எனக்கு இடிக்குது, எல்லாருமே உங்களை நல்ல பிள்ளைன்னு சொல்றாங்க.. யாருமே அவங்களை நல்ல பிள்ளைன்னு சொல்லலை, அப்படிப்பட்ட அவனுங்க கூட நீங்க எப்படி..?”
 
 
“அவங்க என் ப்ரண்ட்ஸ் சார்...”
 
 
“அதைத் தான் நானும் சொல்றேன்... உன் நண்பன் யார் என்று சொல் உன்னைப் பற்றி நான் சொல்றேன்னு சொல்லுவாங்க... இங்கே உங்க நண்பர்களைப் பற்றிச் சொன்னா உங்களையும் சேர்த்து தானே தப்பா நினைப்பாங்க.. அப்படிபட்டவங்களோட அவங்களைப் பற்றி நல்லா தெரிஞ்சும் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நீங்க உங்க பேரும் கெட்டுப் போகக் கூடிய எல்லா வாய்ப்பும் இருந்தும் எப்படி இப்படி ஒரு நட்போட கூட இருந்தீங்க...?”
 
 
“சார் நான் அவனுங்களைப் போல வசதியோ அதிகாரமோ இருக்கக் குடும்பத்து பையன் இல்லை சார்... எங்ககிட்ட இருந்த சின்ன நிலத்துல விவசாயம் செஞ்சு தான் அப்பா எங்களைப் பார்த்தினாரு, திடீர்னு ஒரு நாள் தூங்கினவரு மறுநாள் எழுந்துக்கல... அடுத்து என்னன்னு தெரியாம நின்னோம், அப்போ எங்க அம்மாவோட தம்பி என்னைப் படிக்க வைக்கற பொறுப்பை எடுத்துகிட்டு இங்கே என்னைக் கூட்டி வந்தாரு...
 
 
அவரு கவர்மெண்ட்ல வேலை செஞ்சாரு, பசங்களும் இல்லை... நல்லா பார்த்துகிட்டாரு படிக்க வெச்சாரு... அவர் பதவியைப் பயன்படுத்தி அவ்வளவு பெரிய ஸ்கூல்ல சீட் வாங்கி எல்லாம் செஞ்சாரு... ஆனா அங்கே படிச்சவங்க எல்லாம் ரொம்ப ரொம்பப் பெரிய இடத்து பசங்க... அப்போ தான் கிராமத்துல இருந்து வந்த என்னை ஏதோ ஜந்து போலப் பார்த்தாங்க...
 
 
எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கபடுத்துவாங்க... என் கூட டீம் ஒர்க், குரூப் ப்ராஜெக்ட்னு எது வந்தாலும் சேர்த்துக்க மாட்டாங்க... டீச்சர்கிட்ட போய்ப் பேசி மாத்திக்குவாங்க, எப்போவும் தனியாவே இருப்பேன்... அப்போ தான் என்னை இவங்க மூணு பேரும் அவங்க கூடச் சேர்த்துக்கிட்டாங்க... இவங்க கூட நான் இருக்க ஆரம்பிச்சதும் யாரும் என்னை ஒரு வார்த்தை சொல்லவும் இவங்க விட்டதில்லை..
 
 
எனக்காக எல்லாம் செய்வாங்க... ஆமா சார் அவங்க செய்யற நிறைய விஷயங்கள் எனக்குப் பிடிக்காது தான் உடன்பாடு இல்லை தான் ஆனா என்னை எங்கேயும் அதைச் செய்யச் சொல்லி அவங்க வற்புறுத்தினது இல்லை... காலேஜ் லாஸ்ட் இயர் நான் படிக்கும் போது என் தாய் மாமா இறந்துட்டாரு... அத்தை அவங்க அண்ணன் வீட்டுக்கு போய்ட்டாங்க...
 
 
அப்போ லாஸ்ட் செமஸ்டர் பீஸ் கட்ட நிலத்தை அடகு வைக்க நானும் அம்மாவும் முயற்சி செஞ்சிட்டு இருந்தோம், எனக்குத் தெரியாமலேயே பீஸ் கட்டிட்டு வந்து நின்னது என் பிரண்ட்ஸ் தான் சார்... அப்படிபட்டவங்க கூட நான் இருக்கறதுல என்ன சார் தப்பு...”
 
 
“ம்ம்ம்... உங்களுக்காக இவ்வளவு செஞ்சவங்களை அப்பறம் ஏன் கொன்னீங்க குமரன்...?”
 
 
“சார், என்ன சார்... மறுபடியும் அதையே கேக்கறீங்க... நான் ஏன் சார் அவங்களைக் கொல்ல போறேன்... இன்னும் சொல்ல போனா இந்த நியூஸ் கேட்ட பிறகு நிம்மதியா என்னால வாய் விட்டு கூட அழ முடியலை சார்... என் துக்கத்தை மறைச்சுட்டு தான் இங்கே உட்கார்ந்து உங்களுக்குப் பதில் சொல்லிட்டு இருக்கேன்...”
 
 
“சரி, இதுக்குப் பதில் சொல்லுங்க... மூணு பேருமே ரொம்ப அழகா திட்டம் போட்டுக் கொஞ்சம் கொடூரமா கொலை செய்யப்பட்டு இருக்காங்க... யோசிச்சு பார்த்தா ஏதாவது பொண்ணு விஷயமா தான் இருக்கும்னு புரியுது... அப்படி உங்க உயிர் தோழன்களால மோசமா பாதிக்கப்பட்டவங்க யாரையாவது உங்களுக்குத் தெரியுமா...?!”
 
 
“இல்ல சார்.. அவங்க நிறையப் பேர்கிட்ட தப்பா தான் நடந்து இருக்கானுங்க... அதுல யாருன்னு நான் எப்படிச் சார் சொல்ல முடியும், அதிலும் இந்த மாதிரி சமயங்களில் எல்லாம் நான் அவனுங்களோட இருக்க மாட்டேன் சார்.. கொஞ்சம் அவங்க மது அதிகம் எடுக்கத் தொடங்கினாலே நான் விலகிடுவேன், எனக்காகவே சில நேரங்களில் மதுவை தாமதமா தொடுவாங்க...”
 
 
“நீங்களே சொல்றீங்க அவங்க நிறையப் பெண்கள்கிட்ட தப்பா நடந்து இருக்காங்கன்னு, ஒரு நல்ல நண்பனா அவங்களை நீங்க ஏன் எடுத்து சொல்லி மாற்ற முயற்சிக்கலை.. ஒரு நல்ல நண்பன் எப்போவும் கண்ணை மூடி தன் நண்பன் செய்யும் தவறை ஆதரிக்கறவன் இல்லை, அவங்களையும் நல்வழிபடுத்தறவன் தான், நாம மட்டும் நல்லவனா இருந்தா போதும்னு நினைக்கறவன் இல்லை...”
 
 
“நான் சொல்லாம இருந்து இருப்பேனா சார் நினைக்கறீங்க... அவங்க நாங்க உன்னை எதையாவது செய்யச் சொல்லி கட்டாயபடுத்தறோமா, நீயும் அதே போல இருந்துக்கோன்னு சொல்லிட்டாங்க சார்...”
 
 
“அப்போ நீங்களாவது விலகி இருக்கலாமே...?”
 
 
“நான் ஏன் சார் விலகணும்... மத்தவங்களுக்கு அவங்க எப்படி இருந்தாலும் எனக்கு அவங்க நல்ல நண்பர்கள் தானே சார்...”
 
 
“ஹ்ம்ம்... அதுவும் சரி தான், நீங்க கெமிக்கல் லைன்ல இருக்கீங்க இல்லையா...”
 
 
“ஆமா சார்..”
 
 
“உங்க பிரண்ட்ஸ் டெத்ல கூடக் கெமிக்கல் ஒரு மேஜர் பார்ட் பிளே செஞ்சு இருக்கு...”
 
 
“சார் அதுக்காக என் மேலே சந்தேகப்படறீங்களா...!! என் கம்பெனில மட்டும் மொத்தம் நானூறு பேர் வேலை செய்யறாங்க... சென்னைல மட்டும் எத்தனை கெமிக்கல் கம்பெனி இருக்கும் சார்.. இந்தியா புல்லா எத்தனை இருக்கும் சார்...” என்றவனின் குரலில் அத்தனை பணிவு இருந்தது.
 
 
“ஹா ஹா... அது சரி தான்..” என்று சஞ்சய் ஒரு மார்க்கமாகச் சிரிக்கத் துவங்கவும், குமரனின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. தயக்கத்தோடு பார்த்து அவன் அதைக் கட் செய்யவும், மீண்டும் அடிக்கத் துவங்கியது.
 
 
“ஏன் கட் செய்யறீங்க எடுங்க...”
 
 
“பரவாயில்லை சார்... நான் அப்பறம்...”
 
 
“உங்க மனைவி அங்கே பயந்துட்டு இருப்பாங்க எடுங்க...” என்று சஞ்சய் கூறியதும் அழைப்பது தன் மனைவி தான் என்று எப்படித் தெரிந்தது என்ற யோசனையோடே அதை எடுத்தவன்,
 
 
“இல்ல மா.. சீக்கிரம் வந்துடுவேன், ஒன்னும் பிரச்சனை இல்லை...”
 
 
“....”
 
 
“இல்லை, நான் வந்து சொல்றேன்...”
 
 
“....”
 
 
“அதெல்லாம் ஒண்ணுமில்லை...” என்று சுருக்கமாகத் தயங்கி தயங்கி பேசியவனையே சஞ்சய் கூர்மையான விழிகளோடு அளந்து கொண்டிருந்தான்.
 
 
அவன் பேசி விட்டு வைத்தவுடன், “அது எப்படிக் குமரன் அவ்வளவு கான்பிடன்ட்டா சொல்றீங்க வீட்டுக்கு வந்துடுவேன்னு...?” என்ற சஞ்சயின் கேள்விக்கு,
 
 
“நான் தான் எதுவுமே செய்யலையே சார்... எனக்கு ஏன் சார் பயம்...”
 
 
“ம்ம்ம்... அதுவும் சரிதான், மூணு பேரையும் ஒரே மாதிரி கொலை செஞ்சது போலத் தெரிஞ்சாலும், இதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கு... ஒவ்வொருத்தரோட தண்டனையின் அளவும் படிபடியா வேறுபடுது, ஆனா நின்னு நிதானமா அவங்க இறப்பை அவங்க கொஞ்சம் கொஞ்சமா உணரும்படியான தண்டனை...
 
 
நம்ம உயிர் உடனே போயிட்டா பரவாயில்லைன்னு ஒவ்வொரு நிமிஷமும் துடிக்க வெச்சு கொன்னு இருக்கான், அந்த அளவு அவனுக்குத் தண்டனை தரணும்னா கொன்னவன் மனதளவில் அவ்வளவு காயப்பட்டு இருக்கான், அவனுக்கு வேண்டிய அவனுக்கு முக்கியமான யாருக்கோ இவங்க மிகப் பெரிய கொடுமையைச் செஞ்சு இருக்காங்க... அதான் பட்டுன்னு உயிர் போகாம, அவங்க கண்ணாலேயே அவங்க மரணத்தைப் பார்க்க வெச்சு இருக்கான்...
 
 
இப்படித் தான் டா ஒவ்வொருத்தருக்கும் நீங்க தொடும் போது வலிச்சு இருக்கும்னு அவங்களுக்குக் காட்டி இருக்கான்... அவ்வளவு பெரிய இடத்துல இருக்க மூணு பேர் மேலேயும் இவ்வளவு ஈஸியா கை வெச்சு இருக்கானா அவங்க நம்பிக்கைக்கு உரியவனா தான் இருப்பான்... சோ இது போல உங்களுக்கு அவங்களோட தொடர்பு உடைய யாரையாவது தெரியுமா குமரன்...?!”
 
 
“இல்ல சார்.. தெரியலை...” இவ்வளவு நேரம் சஞ்சய் மூச்சை பிடித்துக் கொண்டு பேசியதற்கு ரொம்பவே சிம்பிளாக குமாரனிடமிருந்து பதில் வந்தது.
 
 
“உங்க வொய்ப் நிரஞ்சனா...” என்று சஞ்சய் துவங்கியதும் “சார் அவ எதுக்கு சார் இதுல... பிளீஸ் சார் அவளே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா இயல்புக்கு திரும்பி இருக்கா...” என்று பதறினான்.
 
 
“இயல்புக்கு திரும்பறாங்கனா... என்ன மீன்ஸ்ல சொல்றீங்க குமரன், அவங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்ததா...?!”
 
 
“இல்ல.. இல்ல சார்.. அவளுக்கு எதுவும் இல்லை... அவங்க அப்பா அம்மா இழப்புல இருந்து மீள முடியாம தனியா தனக்குள்ளேயே சுருண்டு கிடந்தவளை இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வெளியே கொண்டு வரேன் அதைத் தான் சொன்னேன்...”
 
 
“ஓ... ஒகே, இப்போ நீங்க போகலாம், வெளியூர் எங்கேயும் போகாதீங்க.. புதுசா கல்யாணம் ஆகி இருக்கு... ஆனா வேற வழியில்லை, அப்படியே ஏதாவது அவசரம்னா எங்களுக்குத் தகவல் கொடுத்துட்டு போங்க...” என்றதும் சம்மதமாகத் தலையசைத்து எழுந்து வாசல் வரை சென்றான்.
 
 
“கமல் நடிச்ச பாபநாசம் படம் பார்த்து இருக்கீங்களா குமரன்...?”என்ற சஞ்சய்யின் கேள்வி அவனின் நடையைத் தடுத்து நிறுத்தியது.
 
 
“இல்ல சார்...” என்று அங்கேயே நின்று திரும்பி குமரன் பதிலளிக்க... “ஓ... அப்போ அவர் நடிச்ச உன்னைப் போல் ஒருவன் பார்த்து இருக்கீங்களா...?” என்றான் வெகு சாதாரணக் குரலில்.
 
 
“இல்ல சார்... நான் படம் எல்லாம் பார்க்கறது இல்லை சார்...”
 
 
“ஓ... ஒகே ஒகே கேரி ஆன்....” என்றுவிட, குமரன் அங்கிருந்து வெளியேறினான்.
 
 
அவன் வெளியேறுவதை உறுதி செய்து கொண்டே “சார் நீங்க பேசறதை பார்த்தா இவன் தான் அதைச் செஞ்சானா சார்...?”
 
 
“ம்ம்... அப்படித் தான் 99.9% எவிடென்ஸ் சொல்லுது...”
 
 
“அப்பறம் ஏன் சார்... போக விட்டீங்க...?!”
 
 
“அந்தப் பேலன்ஸ் ௦௦.01% சந்தேகத்தை மனசுல வெச்சு தான்... யூ நோ ஆனந்த் சட்டம் என்ன சொல்லுதுனா நூறு குற்றவாளி தப்பிக்கலாம் ஆனா ஒரே ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்படக் கூடாது... அதான் விட்டுட்டேன்...”
 
 
“சார்... யாரு நீங்க..!! 99.9% சந்தேகம் இருந்தும் அவனை வெளியே விடறீங்க அப்படிதானே, இதை நான் நம்பணும்... வெறும் ௦௦.01% சந்தேகம் வந்தாலே அவனை நீங்க சிறப்பா கவனிக்கறதுல மீதி இருக்க 99.9% விஷயத்தையும் அவனா காலில் விழுந்து சொல்லுவான்... இதுல நீங்க சட்டத்தை மனசில் வெச்சு... ஹ்ம்ம்...” என்று ஆனந்த் இழுத்து நிறுத்தவும்,
 
 
“ம்ப்ச்... கொஞ்சம் நல்லவன்னு பெயரேடுக்க விடுதா இந்தச் சமூகம்...” எனப் போலியாகச் சலித்துக் கொண்டு சோக முகம் காட்டவும் அவனைப் பார்த்து சிரித்த ஆனந்த், இப்போவே நீங்க நெம்ப நல்லவருஊஊஊ தானே சார்...” என்றான்.
 
 
சஞ்சய்யும் அவனோடு சிரிப்பில் இணைந்து கொள்ள, “பிளீஸ் சார் சொல்லுங்களேன்... அவன் தான் இதைச் செஞ்சதா...? இவ்வளவு கிளோஸானவங்களை ஏன் கொன்னான்...? அவனை ஏன் வெளிய விட்டீங்க...?” என்று ஆனந்த் அடுக்கி கொண்டே போகவும்,
 
 
“ஹா ஹா விட்டா ஏன்.. ஏன்... ஏன்னு பாட்டே பாடிடுவீங்க போல... இவன் தான் கொன்னு இருக்கான் ஆனந்த்... வெல் பிளான்ட் மர்டர்... இவன் காதலிக்கற பொண்ணு மேலேயே கை வெச்சு இருக்கானுங்க, அது இவனுக்கு இப்போ தான் தெரிய வந்து இருக்கு... என் கணக்கு சரினா லாஸ்ட் செமஸ்டர் எக்ஸாமுக்கு முன்னே ஸ்டடி ஹாலிடேஸ் விடும் போது கடைசி நாள் இவங்களுக்கு ஒரு பார்ட்டி போலக் காலேஜில் நடந்து இருக்கு...
 
 
அதுல தான் எல்லாரும் இந்தப் பொண்ணைக் கடைசியா பார்த்து இருக்கானுங்க, அப்பறம் எக்ஸாம் எழுத கூட இந்தப் பொண்ணு வரலையாம்... அன்னைக்குப் பார்ட்டி முடியறதுக்கு ஒரு மணி நேரம் முன்னேயே சீக்கிரமா குமரன் ஊருக்குப் போகப் பஸ் டிக்கெட் புக் செஞ்சு இருந்ததாலே கிளம்பிட்டான்... அப்போவே இவனுங்க மூணு பேரும் ட்ரக்ஸ் எடுத்து இருக்கானுங்க, ஒரு ப்ரொபசர் பார்த்து கண்டிச்சு இருக்காரு... அவரையே கிண்டல் செஞ்சு கலாய்ச்சு இருக்கானுங்க...
 
 
அப்பறம் எல்லாம் முடியும் போது கிளம்பி இருக்கானுங்க, மே பி வழியிலே அந்தப் பொண்ணைப் பார்த்து இருக்கலாம்... வீட்டில் விடக் கூட்டிட்டு போகும் போது மனசும் மூடும் மாறுச்சா...?! இல்லை அந்தப் பிளான்ல தான் தூக்கினாங்களான்னு அவனுங்களே திரும்ப வந்து சொன்னாதான் உண்டு, கடைசியா அந்தப் பொண்ணை அவங்க வீட்டு வாசலில் வீசிட்டு, பதறி போய் வெளியே ஓடி வந்த அவங்க அப்பாவையும் மிரட்டிட்டு போய் இருக்கானுங்க...
 
 
பொண்ணையும் அவ உயிரையும் காப்பாத்த வேற வழி தெரியாத பெரிய இடத்துல மோத கூடிய தைரியம் இல்லாதவர் அன்னைக்கு நைட்டோட நைட்டா ஊரை காலி செஞ்சுகிட்டு கிளம்பிட்டாரு, அதுக்குப் பிறகு எக்ஸாம் டைமுக்கு இங்கே வந்த குமரன் அவளைக் காணாம தேடி போக அக்கம் பக்கத்தில் தெரியலை, நாங்களே பார்க்கலைன்னு தான் தகவல் கிடைச்சு இருக்கு...
 
 
ரொம்பப் பயந்து தவித்து குமரன் ஊரெல்லாம் தேடி அலைய கூடவே உதவறது போல அவனுங்களும் சுத்தி இருக்கானுங்க... ஆறு மாசத்துக்கு மேலே தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததுனால குமரன் அமைதியாகிட்டாலும் அவளை மறக்க முடியாம தான் இருந்து இருக்கான்...”
 
 
“இப்போ தான் ஆறு மாசம் முன்னே அந்தப் பொண்ணைப் பார்த்தானா சார்...?”
 
 
“இல்லை அவன் ஒரு வருஷம் முன்னேயே அவளைக் கொல்கத்தாவுல எதிர்பாரமா சந்திச்சு இருக்கான்.. ஆனா அவ இவன்கிட்ட பேசவோ இவனை சந்திக்கவோ விரும்பலை போல, ஒருவேளை இவனோட பிரண்ட்ஸ்னு கோபமோ, இல்லை எல்லாக் காதலியையும் போல அவனுங்க கூடப் பழகி இவன் பேரை கெடுத்துக்க வேண்டாம்னு சொல்லியும் கேக்காம பழகி இன்னைக்குத் தன் நிலைக்கு இவனும் ஒரு காரணம்னு கோபமோ அது நமக்குத் தெரியலை... ஆனா கிட்ட சேர்க்காம நல்லா அலைய விட்டு இருக்கா...”
 
 
“எப்படிச் சார் இவ்வளவு உறுதியா சொல்றீங்க...?”
 
 
“சார், தொடர்ந்து ஆறு மாசமா கொல்கத்தாக்கு ஒவ்வொரு மாசமும் போயிட்டு வந்து இருக்காரு... சனி ஞாயிறு இரண்டு நாள் எல்லாம் மாச கடைசியும் அங்கே இருந்து இருக்காரு... அந்த ஆறாவது மாசம் தான் இவனுக்கு உண்மை தெரிய வந்து இருக்கு... எப்படிச் சொல்றேன்னா வழக்கம் போல அப் அண்ட் டவுன் பிளைட் டிக்கெட் போட்டு போனவரு... பத்து நாளா திரும்பி வரலை, பத்தாவது நாலு அந்தப் பொண்ணையும் கூட்டிகிட்டு தான் வந்து இருக்காரு...
 
 
நேரா பொண்ணைக் கொண்டு போய் அவங்க அம்மாகிட்ட விட்டுட்டு, தெளிவா திட்டம் போட்டு ஒண்ணு ஒண்ணா செஞ்சு இருக்கான்... பல வருஷமா கூட இருக்கறவன் அவனுங்களைப் பத்தி அணுஅணுவா தெரியும் இல்லையா... கூடவே இருந்து சந்தேகமே வராம காய் நகர்த்திக் கச்சிதமா முடிச்சிட்டான்... இதில் மெயின் கல்பிரிட் ரூபனா தான் இருப்பான் போல அவனுக்கான தண்டனை தான் பயங்கரம்...
 
 
அதே போல ஜலபதிக்கும் கொஞ்சம் அப்படித் தான் இருந்தாலும் இதில் பாடி டேமேஜ் ஆகாதது சுரேந்தருக்கு தான், ஒருவேளை அவன் இதெல்லாம் வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்.. இல்லை வேற ஏதாவது செஞ்சு இருக்கலாம், ஆனா உள்ளே போய் இருந்த சரக்கும் கூட இருந்த நல்லவனுங்களும் சேர்ந்து அவனையும் உதவ முடியாம செஞ்சு இருக்கணும்...
 
 
எத்தனை வருஷ பழக்கம் அழகா இவனுங்க இடம் எங்கே எல்லாம் இருக்கு எது நமக்குச் செட் ஆகும்னு தெரிஞ்சு அழகா பாண்டிக்கு போக இருந்த அவங்க பிளானை கூடவே இருந்து மாத்தி வெளியே விஷயம் போகாம அவனுங்க போனை ஆப் செஞ்சு இருக்கான்... உயிரும் உணர்வும் இருக்க உடல் மட்டும் அசைவில்லாமல் செஞ்சு அவனுங்களுக்குச் செம்ம தண்டனை கொடுத்து இருக்கான்...
 
 
நாம கேட்டா சாட்சியா கொடுக்கப் பஸ் டிக்கெட்டும் அதை ஆன்லைனில் புக் செஞ்ச எவிடன்சும் கூட வெச்சு இருக்கான்.. ஆனா அவன் அதில் போகலை, சாவகாசமா எல்லா வேலையும் முடிச்சிட்டு லேட் நைட் கிடைச்ச லாரியோ வண்டியோ எதையோ பிடிச்சு மாறி மாறி போய் விடிகாலையில் இறங்கி இருக்கான்...
 
 
மதியம் பஸ் ஏறி இருந்தா நைட் தான் போய் இறங்கி இருப்பான்... அதையே காலையில் அங்கிருப்பவங்க முன்னே நைட் வந்ததா காட்டிகிட்டாலும் நடுவில் இருக்க அந்த இரவை மிகச் சரியா பயன்படுத்திகிட்டு இருக்கான்... குமரனோட மனைவி தனக்காகக் கணவன் செஞ்ச சம்ஹாரத்துக்குத் துணையா தானே இருப்பாங்க, மயக்கத்துல இருக்க அவங்க அம்மா எப்படியும் சாட்சி சொல்ல போறது இல்லை...” என்று நீண்ட ஒரு விளக்கம் சஞ்சய் கொடுக்கவும் ஆனந்துக்கு அனைத்து கேள்விகளும் ஒரு புள்ளியில் சேர்ந்து அழகாகப் பதில் கிடைப்பது புரிந்தது.
 
 
“ஆனா அவங்க அம்மாவுக்கு எப்படிச் சார் சரியா உடம்பு முடியாம போச்சு.. அவங்களும் ஒருவேளை இதில் உடந்தையா...?!!”
 
 
“நோ.. நோ.. அவங்க ஒரு அப்புராணி கிராமத்து பெரிய மனுஷி, இதையெல்லாம் சொன்னா பயந்து மொதல்ல காட்டி கொடுத்துடுவாங்க... அதனால் சொல்லாம தான் செஞ்சு இருப்பானுங்க, அதான் கூடவே அந்தப் பொண்ணு இருந்ததே... இரண்டு நாள் அவங்களை மருந்து எடுக்கவிடாம செஞ்சு இருந்தா போதாது மயங்கி விழ... அப்பறம் ஒரு ஐவி போட்டு சரி பண்ணிக்கலாம் இல்லை...”
 
 
“அடேங்கப்பா செம்ம மாஸ்டர் பிளான் சார்... ஆனா எல்லாம் தெரிஞ்சும் ஏன் சார் விட்டீங்க..?”
 
 
“ஆமா செத்தவனுங்க எல்லாம் தியாகிங்க பாரு... போய்ச் சேர வேண்டியவனுங்க தான்... ஏன் களை எடுக்க நாம செய்யலை என்கௌன்ட்டர்.. அப்படித் தான் இதுவும், இதுல எனக்குப் பிடிச்சதே இவ்வளவும் தெரிஞ்ச பிறகும் அந்தப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சு இருக்கான் பாருயா... இவன் மனுஷன், அவ்வளவு காதலிச்சு இருக்கான்... நல்லா வாழ்ந்துட்டு தான் போகட்டுமே...”
 
 
“அப்போ அவனுங்க அப்பாங்க எல்லாம் கேட்டா என்ன சார் சொல்லுவீங்க...?”
 
 
“ம்ம், தீவிர தேடுதல் வேட்டை நடக்குதுன்னு சொல்லு... அப்படியே பிடிச்சாலும் கோர்ட்டில் தான் ஒப்படைப்போம்னும் சேர்த்து சொல்லு...” என்று சற்று நக்கலோடு சஞ்சய் கூறவும்,
 
 
“நடக்கவே போறது இல்லைன்னு தெரிஞ்சும் அதுலேயும் கூட அவனுங்களை வெறுப்பு ஏத்தி பார்க்காறீங்களே சார்...” என்றான் ஆனந்த் சிரிப்பினோடே.
 
 
“ஹா ஹா... அது என்னமோ இவனுங்களைப் பார்த்தாலே அப்படியே இரிடேட் ஆகுது ஆனந்த்...” என்று சூரி போலக் கையை ஆட்டி பேசிய சஞ்சய் சத்தம் போட்டுச் சிரித்தான்.
 
 
“சார் எப்படி இதையெல்லாம் அரைநாளில் கண்டுபிடிச்சீங்க..?” என்று நிஜமாகவே ஆச்சர்யபட்டு விழி விரித்தான் ஆனந்த்.
 
 
“நாம என்ன கற்காலத்திலா இருக்கோம்... எல்லாத்துக்கும் நேரில் போய் நிக்கணும்னு சொல்ல, இப்போ உலகமே கைக்குள்ளே வந்தாச்சு.. அதெல்லாம் சின்ன லீட் கிடைச்சிட்டா போதும் ஆனந்த்...”
“சார் செம்ம ஆளு சார் நீங்க... ஒருவேளை நாம கண்டுபிடிக்கலைன்னு அவங்க ஆளுங்களை வெச்சு ஏதாவது செஞ்சா, இல்லை இவனைத் தூக்கிட்டா...?”
 
 
“இன்னும் இரண்டு நாளில் இவன் இங்கே இருக்க மாட்டான் ஆனந்த்... பொண்டாட்டியோட எங்கேயாவது எஸ் ஆகிடுவான்...” என்றான்.
 
 
“வேற யாரையாவது வெச்சுக் கண்டுபிடிக்கச் சொன்னா... ஒருவேளை மாட்டிக்குவான் இல்லை சார்...”
 
 
“இன்டெர் போலே வந்தாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது ஆனந்த்... எல்லா எவிடன்சும் ஹோகயா..” என்று அவனுக்காக தான் செய்து முடித்திருந்த மிக பெரிய செயலை இலகுவாக சொல்லி புன்னகைத்தான் சஞ்சய்.
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN (2) - 5

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 4 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 6
 
 
அன்று மாலை தன்னவளை காண கல்லூரிக்கு சென்றவனின் எண்ணப்படி அவனின் நாயகியே எதிரில் வந்து கொண்டிருந்தாள். சில அடி தூரத்திலேயே நீருவை கண்டு விட்டவன், பார்த்தது போலக் கொஞ்சமும் காண்பித்துக் கொள்ளாமல் சீன் போட நினைத்து ஏதோ முக்கிய வேலையாக வந்து இருப்பது போன்ற பாவனையோடு பார்வையைச் சுழற்ற... அவசரமாக அவன் அருகில் ஓடி வந்து நின்றிருந்தாள் கங்கா.
 
 
“சார்.. நானே உங்களுக்குப் போன் பண்ண நினைச்சேன், நீங்களே வந்துட்டீங்க சார்...” என்று பதட்டமான குரலில் சற்றே மூச்சு வாங்க கூறியவளை யோசைனையோடு பார்த்தவன், சட்டெனக் கிடைத்த வழியைப் பற்றிக் கொண்டு அவளுக்காகத் தான் வந்ததாகக் கூறி விவரம் கேட்டான்.
 
 
கங்கா பேச துவங்கும் முன்னே நீருவை ஓர பார்வையில் கவனித்தவன், “வாங்க கங்கா நாம உட்கார்ந்து பேசலாம்...” என்று அவளோடு இணைந்து கேண்டீனை நோக்கி நடக்க... இருவரையும் பார்வையாலேயே எரித்துப் பஸ்பமாக்கும் முயற்சியில் இறங்கி இருந்தாள் நீரு.
 
 
“அந்தப் பொண்ணுக்கு என்ன ப்ரச்சனை..?” என்ற நீருவை வித்தி முறைத்தவாறே நிற்க... “என்னன்னு விசாரிச்சியா இல்லையா வித்தி..?” என்றாள்.
 
 
“நீ என்ன லூசா...?! அவங்க வேற டிபார்ட்மென்ட், புதுசா இப்போ தான் சேர்ந்து இருக்காங்க போல... நாம பேசினது கூட இல்லை... திடீர்னு போய் உனக்கு என்ன ப்ரச்சனைன்னு எப்படிக் கேக்க முடியும், அப்படியே அவங்களுக்கு என்ன ப்ரெச்சனை இருந்தாலும் நமக்கு என்ன...? நம்ம ப்ரேச்சனையே நமக்குத் தலைக்கு மேலே இருக்கு...” என்று வேண்டுமென்றே நீரு எதற்காகக் கேட்கிறாள் என்று புரியாதது போலவே பதில் அளித்தாள்.
 
 
இதில் வித்யாவை திரும்பி முறைத்த நீரு கேண்டீன் பக்கம் நகரத் துவங்கவும், “தாரா... இப்போ என்ன உனக்கு மறுபடியும் தலைவலிக்குதா..?! நாம வீட்டுக்கு தானே போறோம், வா உனக்கு நான் சூப்பர் காபி போட்டு தரேன்...” என்றாள் வித்யா.
 
 
“நீ போடற கன்றாவி காபிக்கு இந்தக் கேண்டீன் காபியே தேவலை...” என்று வீராப்பாகக் கூறி விட்டு நீரு முன்னே செல்ல... வேகமாக ஓடி சென்று அவள் வழியை மறைத்தவள், “என்ன சொன்ன... கன்றாவி காபியா...!! காலையிலே தானே டி சொன்னே, என் ஆத்ரேய் அளவுக்குப் போடலைனாலும் கூட இந்தக் காபிக்காகவே உனக்கு என்ன வேணா செய்யலாம்னு...” என்று காலையில் சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தன்னை அறியாமல் உளறிவிட்ட நீரு அதற்கு மேல் எதுவும் பேசாமல் நாக்கை கடித்துக் கொண்டு மழுப்பியதை வேண்டுமென்றே வித்யா நினைவுபடுத்தினாள்.
 
 
கோபத்தோடு அவளைத் தன் பாதையில் இருந்து விளக்கி விட்டு நீரு வீம்பாக நடக்க, ஒரு புன்னகையோடே நீருவை பின் தொடர்ந்தாள் வித்யா.
 
 
இவர்கள் உள்ளே செல்வதற்குள் சஞ்சய் மற்றும் கங்கா காபியோடு அமர்ந்து பேச துவங்கி இருந்தனர். அன்று போல் இல்லாமல் சஞ்சய்க்கு முன்னே இருந்த மேசையே யாருமற்று இருக்க... தங் தங் என்று சென்று நீரு அதில் அமர... வித்யாவும் அவளோடு இணைந்துக் கொண்டாள்.
 
 
இன்று நடந்ததைப் பற்றி சஞ்சயிடம் கங்கா கூற தொடங்கினாள். “மதியம் அந்தப் பையன் வந்து என்ன ஆளு வெச்சு மிரட்டறீயா...? இதுகெல்லாம் நான் பயப்படுவேன்னு நினைச்சு இருந்தேனா அதை எச்சி தொட்டு அழிச்சிடு, நீ என்னைத் தான் காதலிக்கணும் என்னைத் தான் கல்யாணம் செஞ்சிக்கணும்னு மிரட்டினான்... நான் அவன் வயசை சொல்லி புரிய வைக்க முயற்சி செஞ்சேன் சார்... அப்போ..” என்று விட்டு அவள் தயங்க...
 
 
“ம்ம்ம்.. கன்டென்யூ...” என்று சஞ்சய் ஊக்கவும், “அது... அது...” என்று தடுமாறியவள் “என் வயசை பார்த்து தப்பா நினைச்சிடாதே... வேணும்னா ஒரு...” என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் தயங்க... “ஒகே ஒகே லீவ் இட்...” என்று அதில் இருந்த பொருளை புரிந்து கொண்டு சஞ்சய் கூறி இருந்தான்.
 
 
பின் அவன் இது போல எல்லாம் பேசி உங்களைப் பயம் காட்டவே முயற்சி செய்யறான்... இதுக்கெல்லாம் நீங்க பயப்பட வேண்டாம், கண்டுக்காம விடுங்க... அவனை நாங்க பார்த்துக்கறோம்... என்றெல்லாம் பேசி ஒருவாறு கங்காவை இயல்பாக்கி விட்டு நிமிர்ந்தவன் அப்போதே தங்கள் எதிரில் அமர்ந்து இருப்பவர்களைப் பார்ப்பது போல ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு அந்த மேஜையை நோக்கி எழுந்து சென்றான்.
 
 
“ஹே.. வித்யா நீங்க எங்கே இங்கே...?” என்று ஆச்சர்யத்தோடு சென்று அவள் அருகில் நிற்க... “ஹலோ ஹீரோ சார்... நான் இங்கே தான் வேலை செய்யறேன், உங்களுக்குத் தெரியாது இல்லை..” என்று அவளும் அப்பாவி முகபாவத்தோடு சஞ்சய்க்கு பதிலளித்தாள்.
 
 
“ஓ ரியலி... எனக்கு இது தெரியவே தெரியாது பாருங்களேன்...” என்றவனும் வித்யாவுக்கு அந்தப் பக்கம் அமர்ந்து இருந்தவளின் பக்கம் தன் பார்வையைச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியவாறே தன் தேசிய விருதுக்கான நடிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான்.
 
 
அப்போதே அவர்கள் எதுவுமே சாப்பிடாமல் அமர்ந்து இருப்பதைக் கண்டு, “இன்னும் எதுவும் வாங்கலையா வித்யா...! நான் காபி ஏதாவது வாங்கித் தரவா..?” என்றான்.
 
 
“வேண்டாம் ஹீரோ சார்... இதோ இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு போய்டுவேன், அங்கே போய் என் கையாள சூப்பர் காபி போட்டுக் குடிச்சுப்பேன்... என் பிரண்ட் கூடச் சொல்லுவா அவ ஹஸ்பண்ட் அளவுக்கு இல்லைனாலும் ரொம்ப நல்லா இருக்கு என் கை மணம்னு...” என்றவளை நீரு முறைத்துக் கொண்டிருக்க...
 
 
“ஓ.. புருஷனை புகழற பிரண்ட்ஸ் எல்லாம் கூட உங்களுக்கு இருக்காங்களா பேஷ் பேஷ்...” என்று வேண்டுமென்றே இழுத்து சஞ்சய் கேட்கவும், வித்யா பொங்கி வந்த புன்னகையை மறைக்க... முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
 
 
நீருவோ தன் அருகில் இருந்த இருவரையும் நகத்தைக் கடித்தவாறே முறைத்துக் கொண்டு இருக்க... “அதை விடச் சாப்பிட நல்லதா ஏதாவது வாங்கித் தரவா...?!” என்ற சஞ்சயின் குரலில் சட்டென நீரு நிமிர்ந்து அவனைப் பார்க்க.. சஞ்சய்யோ கடமையே கண்ணாக வித்யாவை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
 
 
“வேணாம் ஹீரோ சார்... நான் டயட்ல இருக்கேன்...” என்றவளை போலி மெச்சுதலோடு பார்த்து “வாவ் டயட்டா சூப்பர், சூப்பர்... ஒகே அப்பறம் பார்க்கலாம்...” என்றவன், கங்காவிடமும் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டான்.
 
 
தானே அவனைத் தள்ளி நிறுத்தினோம் என்பது எல்லாம் மறந்து சஞ்சய்யின் இந்தப் பாரா முகம் அழுகையை வர வழைக்க.. அதை வெளி வர விடாமல் தடுப்பதற்காகவே இன்னும் வேகவேகமாக நகத்தைக் கடிக்கத் துவங்கினாள் நீரு.
 
 
“அதை விடச் சாப்பிட நல்லதா ஏதாவது வாங்கித் தரவா...?!” என்ற அதே கேள்வியை இப்போது வித்யா நீருவை பார்த்து கேட்டு இருக்க... அவன் மேல் இருந்த அத்தனை கோபமும் இவள் மேல் திரும்ப வசைபாடி தீர்த்துவிட்டாள் நீரு.
 
 
இது எதற்குமே எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டு ஒரு நல்ல தோழியாக உடன் இருந்து ஒருவழியாக அவளை வீடு கொண்டு வந்து சேர்த்து இருந்தாள் வித்யா.
 
 
ஆனால் வீட்டிற்கு வந்த பிறகும் கூட நீருவுக்குக் கோபம் கொஞ்சமும் மட்டுப்படவில்லை. சஞ்சய் மட்டும் இப்போது அவள் முன் வந்தால் நரசிம்ம மூர்த்தியாக மாறி அவனின் குடலை ஊருவி மாலையாகப் போட்டுக் கொண்டு இருப்பாள்.
 
 
குளித்து உடை மாற்றிப் படுக்கையில் சாய்ந்தவள் தான் அவனை விதவிதமாக வசை பாடி கொண்டு அமர்ந்திருந்தாள். இரவு உணவை கூட வித்யா எவ்வளவு கெஞ்சியும் அவள் மறுத்துவிடவே நீருவின் இன்றைய நிலையில் அவள் இப்படி இரவு சாப்பாடை தவிர்ப்பது சரியில்லை என்பதால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள் வித்யா.
 
 
அதே நேரம் ஆபத்பாண்டவனாக சஞ்சய்யிடமிருந்து ‘தான் வெளியில் நிற்பதாகவும், ஓசை இல்லாமலும் நீருவுக்குத் தெரியாமலும் வந்து கதவை திறக்குமாறும்’ வித்யாவுக்கு மெசேஜ் வந்து இருந்தது.
 
 
அதைக் கண்டு சற்று நிம்மதியுற்றவள் மெதுவாகச் சென்று கதவை திறக்க உள்ளே நுழைந்தான் சஞ்சய். அவனைக் கண்டதும் நீருவை பற்றிச் சொல்ல அவசரமாக வித்யா முயற்சிக்க... தன் வாயில் ஒற்றை விரலை வைத்து பேசாதே என்பது போலச் சைகையிலேயே காண்பித்தவன், நீரு இன்னும் உறங்கவில்லை என்றால் அவளுக்கு இவர்களின் பேச்சுக் கேட்டுவிடக் கூடும் என்பதால் அவளை மெசேஜ் செய்யுமாறு கூறினான்.
 
 
உடனே தன் அலைபேசியைச் சைலன்ட்டில் போட்டவள், இன்று முழுவதும் நீரு நடந்து கொண்டதை அவனுக்குத் தெரிவிக்க... இதை எதிர்பார்த்தே தான் வந்ததாகக் கூறியவன் இனி அவளைத் தான் பார்த்து கொள்வதாகவும் இவளை சென்று தூங்குமாறும் கூறினான்.
 
 
வித்யாவும் ஒரு புன்னகையோடான தலையசைப்போடு சென்று தன் அறையில் நுழைந்து கொண்டாள். இரவு ஒன்பது மணி தான் ஆகிறது என்பதால் நீரு தூங்கி இருக்கும் வாய்ப்புக் குறைவு என்று புரிய, ஹாலில் இருந்த சோபாவில் இருளிலேயே சிறிது நேரம் படுத்து விட்டான் சஞ்சய்.
 
 
பத்தரை மணியளவில் நீருவின் அறை கதவை சஞ்சய் லேசாகத் திறந்து பார்க்க.. நீரு அங்குக் கண் மூடி படுத்து இருப்பது தெரிந்தது. அவளிடம் தெரிந்த லேசான அசைவே இன்னும் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
 
 
நீரு இன்னும் சாப்பிடவில்லை என்பதை வித்யா கூறி இருக்கவே அதுவே அவளின் இந்தச் சரியான உறக்கமின்மைக்குக் காரணம் என உணர்ந்தவன், சமயலறைக்குச் சென்று ஒரு கிண்ணம் நிறையப் பழங்களை வெட்டி கொண்டு வந்தான்.
 
 
சஞ்சய் சத்தமில்லாமல் சென்று அவள் அருகில் அமர்ந்து, மெல்ல நீருவின் தலையை வருடி கொடுக்கவும், கிட்டத்தட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகான அவளின் ஸ்பரிசம் அவனைச் சற்றே உணர்ச்சிவசப்படச் செய்திருந்தது.
 
 
அதேநேரம் நீரு அரைக் கண் திறந்து இன்னும் தூக்கம் விலகாத விழிகளோடு சஞ்சய்யை பார்த்து இருந்தாள். சட்டெனக் கைகளை விலக்கி கொள்ளாமல் சஞ்சய்யும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க... அவனைக் கண்டதும் கோபமாக ஏதோ சொல்ல முயன்றவள் அப்போதே தான் இருக்கும் அறையைப் பார்வையைச் சுழற்றி பார்த்தவாறே ‘ஹ்க்கும்.. இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை... நேரில் பார்க்காத மாதிரி போ, கனவுல மட்டும் வந்து கொஞ்சு பொறுக்கி...” என்று தனக்கு வழக்கமாக வரும் கனவு என்றெண்ணி பாதித் தூக்கத்தில் பேசினாள்.
 
 
அவளின் நிலையையும் எதிர்பார்ப்பையும் உணர்ந்தவன், எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த பழத்தை ஸ்பூன் கொண்டு அவளுக்கு ஊட்ட முயல, அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் மீண்டும் சஞ்சய் அந்தப் பக்கமும் கொண்டு சென்று ஊட்ட முயன்றான்.
 
 
“இப்போ மட்டும் எங்கே இருந்து வந்தது இந்தத் திடீர் அக்கறை... அதான் நான் வேணாம்னு முடிவு செஞ்சுட்ட இல்லை போ...” என்றாள் சிறு கோபத்தோடான குரலில். “யாரு நானா முடிவு செஞ்சேன்...?!” என்றவனை முறைத்தவள், “அப்போ ஏன் என்னைப் பார்த்தும் பார்க்காதது போலப் பேசாம போனே...?!” எனும் போதே சிறு அழுகை அந்தக் குரலில் தெரிந்தது.
 
 
“நீ தானே உன்னைப் பார்க்கவோ பேசவோ கூடாதுன்னு சொன்னே..?” என்று சஞ்சய் திருப்பிக் கேட்கவும், சில நொடிகள் அமைதியானவள், “அதுக்காக அதை அப்படியே பாலோ செஞ்சு என்னை அப்படியே விட்டுடுவீயா டா பொறுக்கி...?!” என்றிருந்தாள் ஏக்கமான குரலில்.
 
 
“அப்போ அதை எல்லாம் பாலோ செய்ய வேணாமா குல்பி..?” என்று வம்புக்கு இழுத்தவனை முறைத்தவள், “பாலோ செய்யாம இருந்து தான் பாரேன்...” என்றாள் சட்டென மாறிய கோப குரலில். அவனுக்கு வேண்டியதும் அதுதானே, நீருவின் அழுகையைத் தான் அவனால் பார்க்க முடியாதே..!!
 
 
“இப்போ என்ன தான் டி சொல்ல வர.. பாலோ செய்யணுமா..?! வேணாமா...?!!” என்றவனுக்கு என்ன பதிலளிப்பது எனப் புரியாமல் தூக்க கலக்கத்தோடு விழித்தவள், “அது என் மூடை பொறுத்தது...” என்றாள்.
 
 
“மேடம் எப்போ என்ன மூடில் இருப்பீங்கன்னு நான் எப்படித் தெரிஞ்சிக்கறதாம்...?!”
 
 
“அது கூடத் தெரியலைனா நீயெல்லாம் என்ன டா புருஷன்... போடா பொறுக்கி...” என்று திரும்பி கொண்டாள் நீரு.
 
 
ஒரு புன்னைகையோடே அவளைப் பார்த்தவன் இத்தனை பேச்சு வார்த்தைக்கும் நடுவே மொத்த பழங்களையும் ஊட்டி முடித்து அருகில் இருந்த நீரை அவளுக்குப் புகட்ட... அதையும் குடித்து முடித்தவளுக்கு அந்த வேலைக்கான மாத்திரையையும் எடுத்து கொடுத்து போட வைத்தான்.
 
 
அடுத்துக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு எழுந்தவனை எங்கே அப்படியே போய் விடுவானோ என்பது போலக் கைகளை இறுக பற்றிக் கொண்டு ‘உன்னை விடவே மாட்டேன் என்பது போலத் திரும்பி நீரு படுத்துக் கொள்ள... சஞ்சய்க்கும் அப்போதைக்கு அங்கிருந்து போகும் எண்ணம் இல்லை என்பதால் அவளருகில் சென்று படுத்துக் கொண்டான்.
 
 
இதற்காகவே காத்திருந்தது போல சஞ்சயின் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அவனை இடையோடு சேர்த்து அணைத்தவாறு உறக்கத்தைத் தொடர முயன்றாள் நீரு. அவளின் முதுகை ஆதரவாகச் சஞ்சய் வருடி கொடுக்கவும் நொடியில் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றுவிட்டாள்.
 
 
அவள் அவனைக் கண்டதும் திட்டாமல் கனவு என்றெண்ணி பேசியதிலேயே சஞ்சய்க்கு மனம் வலிக்கத் தொடங்கியிருந்தது. ‘ஏன் டி... இவ்வளவு காதலையும் ஆசையையும் மனசில் வெச்சுகிட்டு இப்படி உன்னை நீயே கஷ்டபடுத்திட்டு என்னையும் வேதனைபடுத்தற... என் கூட நீ கனவுல வாழவேண்டிய அவசியம் என்ன வந்தது... இப்போ உன் உடல்நிலை மட்டுமில்ல மனநிலையும் ரொம்பவே முக்கியம் குல்பி, எதுக்கு டி உனக்கு இந்த வீண் பிடிவாதம்... போதும் உனக்காகன்னு பார்த்து நான் தள்ளி நின்னது எல்லாம் போதும், அது உனக்கு நிம்மதியை தரதுக்குப் பதிலா வலியை தான் கொடுக்குது... இனி எதுக்காகவும் தள்ளி நிக்க நான் தயாரா இல்லை...’ என்று மனதோடு பேசி உறுதி எடுத்துக் கொண்டான்.
 
 
இங்கு வந்த பிறகு இவ்வளவு நிம்மதியாக நீரு தூங்குவது இன்று தான். நீருவை தன் கையணைப்பில் வைத்திருந்தவனுக்கும் அது பல நாட்களுக்குப் பிறகு நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்தது.
 
 
காலையில் கண் விழித்தவளுக்கு அத்தனை புத்துணர்ச்சியாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள், எதுவும் வித்தியாசமாகத் தென்படாததால் இப்போதும் அனைத்துமே கனவு என்றே நினைத்தாள். விரைவாகக் குளித்துத் தயாராகி ஒரு சிறு புன்னகையோடு மெல்லிய குரலில் பாடலை ஹம் செய்தவாறே வெளிவந்தவளை தங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த வித்யா வித்தியாசமாகப் பார்த்தாள்.
 
 
இத்தனை நாளில் வித்யா இப்படி ஒரு நீருவை இங்கு வந்த நாள் முதல் அவள் பார்த்தது இல்லை. இருந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் அவளுக்குக் காலை உணவை வித்யா எடுத்து வைக்கவும், தட்டில் இருந்தவற்றைக் கண்டு வியந்தாலும் எதுவும் பேசாமல் சாப்பிட தொடங்கியவள் அதில் தெரிந்த கைமணத்தில் விழிகளை விரித்தாள்.
 
 
இடியாப்பம் தக்காளி குழம்பு மாங்காய் வைத்து அறைத்திருந்த துவையல் என அனைத்தும் அவளின் சுவைக்கு ஏற்ப பார்த்து பார்த்துச் சமைக்கப் பட்டு இருந்தது. அனைத்திலும் தன்னவனின் அக்கறையும் சுவையும் தெரிந்தாலும் அதை வாய் விட்டு கேட்க முடியாமல் தயங்கி வித்யாவை பார்க்க... அவளோ மும்முரமாகச் சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவள்.
 
 
வேறு வழியில்லாமல், “என்ன வித்தி... புது ருசியா இருக்கு சமையல்...?” என்று கேட்டு நீரு நிறுத்த... “நல்லா இருக்கு இல்ல... உனக்கு எதுவும் பிடிக்க மாட்டேனுதேன்னு தான் யூ டியூப் பார்த்து மசக்கை வாந்தி வராம இருக்க இதெல்லாம் செஞ்சேன்...” என்றவள் மீண்டும் சாப்பிட தொடங்கிவிட.. நீருவுக்கு அப்படியே முகம் வாடி விட்டது.
 
 
இருந்தும் தன்னைச் சுற்றியே தன்னவனின் அருகாமையும் வாசமும் இருப்பது போலத் தோன்றவே வாய்ப்பே இல்லை என்று தெரிந்த பிறகும் முடிந்தவரை பார்வையைச் சுழற்றி தேடியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 
 
என்ன இது பைத்தியகாரத்தனமான எண்ணம்... அவன் எப்படி இங்கு வருவான், இவை எல்லாம் நேற்றைய கனவின் தாக்கத்தால் வந்த வினை... அது தான் மனம் அவனை அதிகமாகத் தேடுது போல...’ என்று நினைத்து கொண்டவள், வித்யா கிளம்பி தயாராக நின்றிருப்பதைக் கண்டு அவளோடு சேர்ந்து கிளம்பினாள்.
 
 
முதலில் நீருவை வெளியில் அனுப்பியவள், சமயலறையில் மறைவாக நின்றிருந்தவனிடம் முன்பே மற்றொரு சாவியைக் கொடுத்து வைத்திருந்ததால் நீரு பார்க்காதவாறு விழி மூடி திறந்து சைகை செய்தவாறே வெளியேற... அவனும் தன் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து விடையளித்தான்.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 7
 
 
அன்று ராம் குடும்பத்தோடு சேர்ந்து நீருவும் கொடைக்கானல் செல்வதாக இருந்தது. அதனால் முதல் நாள் இரவே ராம் வீட்டுக்கு வந்து சேர்ந்து இருந்தாள் நீரு. ராமும் ராணியும் முறைப்படி சென்று நீருவை அழைத்த போதே வித்யாவையும் சேர்த்தே அழைத்து இருந்தனர்.
 
 
ஆனால் அவளுக்கு ராமை தெரியும் என்றாலும் அவ்வளவு பழக்கம் இல்லை என்பதால் வித்யா நீருவோடு வர மறுத்து விட்டாள். பார்ட்டி இங்கேயே இருந்து இருந்தால் கூட மாலை மட்டும் சென்று கலந்து கொண்டு விட்டு வந்து இருப்பாள், ஆனால் ஐந்து நாட்கள் அவர்களோடு தங்கி இருக்க வேண்டும் என்பதால் அவ்வளவு பழக்கம் இல்லாத இடத்தில் இவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க விரும்பாமல் வித்யா மறுத்துவிட்டாள்.
 
 
தனியாக ஐந்து நாட்கள் இருக்க வேண்டி இருப்பதால் வித்யாவுக்கு ஆயிரம் புத்திமதிகள் சொல்லிய நீருவுக்கு அதைவிட அதிகமாகப் பத்திரமும் அவளின் நலனை முன் நிறுத்தி அறிவுரையும் வழங்கி அழைத்துச் சென்று ராமின் வீட்டில் ஒப்படைத்து விட்டு வந்திருந்தாள் வித்யா.
 
 
நீருவின் உடல்நிலையை முன் நிறுத்தி இங்கிருந்து விமானத்தில் மதுரை வரை சென்று விட்டு அங்கிருந்து காரில் கொடைக்கானல் செல்வதாகத் தான் ஏற்பாடு.
 
 
ராம் இதை ஒரு மன மாற்றத்திற்கான விழாவாக நெருக்கமானவர்களை மட்டுமே அழைத்து ஏற்பாடு செய்திருந்தான். அதனால் இப்போது இங்கிருந்து இவர்கள் மட்டுமே கிளம்புவதாக இருந்தனர்.
 
 
காலை முதல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் நொடிக்கு ஒரு முறை நீருவின் பார்வை வாசலை தொட்டு மீண்டு கொண்டிருந்தது. அதை ராமும் அவன் மனைவியும் கவனித்துக் கொண்டு இருந்தாலும் கொஞ்சமும் வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை.
 
 
கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க அவளிடம் ஒரு அலைபுறுதல் தோன்றி கையைப் பிசைவதும் வாசலை தவிப்போடு பார்ப்பதும் என இருக்க... ராமும் ராணியும் கண்களாலேயே பேசி கொண்டு பொங்கி வந்த புன்னகையைக் கட்டுபடுத்திக் கொண்டு வேலைகளைக் கவனித்தனர்.
 
 
நீருவால் சஞ்சய்யை பற்றியும் அவனின் வருகையைப் பற்றியும் எதுவும் கேட்கவும் முடியவில்லை. கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. அவர்களாகவே ஏதாவது பேசுவார்கள் என்று இவள் எதிர்பார்த்திருக்க... அவர்களோ வாயையே திறக்கவில்லை.
 
 
இதோ நால்வரும் கிளம்பி விமான நிலையமும் வந்து இறங்கியாயிற்று. ஆனால் சஞ்சய் இன்னும் வந்து சேரவில்லை. நீருவின் நிலையைக் கண்டு இறக்கம் கொண்ட ராணி தான் இதற்கு மேல் அவளைச் சோதிக்க வேண்டாம் என்ற முடிவோடு “அண்ணா நேரா கெஸ்ட்ஹவுஸ் வந்துடறதா சொல்லிட்டாங்க... இப்போ பார்த்துட்டு இருக்கக் கேஸ்ல ஏதோ கொஞ்சம் வேலை இருக்காம்...” என்று கூறினாள்.
 
 
அதில் அளவுக்கு அதிகமாகவே ஏமாற்றத்தை உணர்ந்த நீருவுக்கு முகம் வாடி போயிற்று. அவனிடம் கோபமாக இருந்த போதும் பேசவில்லை என்றாலும் சஞ்சய்யின் அருகாமையில் தன் பார்வை வட்டத்திற்குள் அவன் இருக்க... ஐந்து நாட்கள் சஞ்சய்யோடு இருக்கப் போகும் நாட்களை எண்ணி அவள் உள்ளுக்குள் மகிழ்ந்து காத்திருந்தது எல்லாம் வீண் எனத் தெரிந்து அழுகை பொங்கியது.
 
 
ஆனாலும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ள விரும்பாதவள், “யார் வந்தா எனக்கு என்ன..? வரலைனா எனக்கு என்ன..? இதெல்லாம் உங்க அண்ணன் வழக்கமா செய்யறது தானே..!” என்று சஞ்சய் பற்றிய பேச்சில் விருப்பம் இல்லாததைப் போல முகத்தைச் சுழித்தவளை கண்டு ‘அது சரி’ என்பது போலத் தலையசைத்தாள் ராணி.
 
 
வெளியில் அமைதியாக இருப்பதைப் போலக் காண்பித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் அவளின் கண் கண்ட கணவனுக்கு அர்ச்சனையைத் திவ்யமாக நடத்தி கொண்டிருந்தாள் நீரு. அதிலும் இரண்டு நாட்கள் முன் கனவில் சஞ்சய் வந்து அவளுக்குச் செய்த பணிவிடைகள் அதன் பின்னான அவனுக்கேயான கவனிப்பை உணர்ந்தது எல்லாம் சேர்ந்து நீருவை அதிகம் சஞ்சய்யை மனதளவில் தேட செய்திருந்தது.
 
 
கொடைக்கானல் வந்து இறங்கின பிறகும் ஓரளவு நீருவின் மனநிலை புரிந்து அவளைத் தனியே விடாமல் ராணி உடன் இருப்பதும் குழந்தையைக் கவனிக்கச் சொல்லி அவளைப் பிசியாக வைத்திருப்பதுமாகவே பார்த்து கொண்டாள்.
 
 
முதல் நாள் ராமின் வீட்டுக்கு நீரு வந்து இறங்கியதில் இருந்து அவ்வபோது ராணிக்கு அழைத்துத் தன் மனையாளின் நலனை அவள் அறியாமல் இவன் அறிந்து கொண்டே தான் இருந்தான் சஞ்சய்.
 
 
அன்று அப்படியே சோம்பலாகக் கழிய, மறுநாள் காலை தன் உடல் சோர்வின் காரணமாகவோ இல்லை மனதின் சோர்வின் காரணமாகவோ சற்று தாமதமாகவே எழுந்தாள் நீரு. அங்கு இருந்த சீதோஷ்ணநிலையும் அவளுக்குத் துணை செய்ய.. வெகு நேரத்திற்குப் பிறகு உறங்கி இருந்தாலும் நல்ல சுகமான தூக்கம் அவளைத் தன் வசபடுத்தி இருந்தது.
 
 
ஒரு மென் புன்னகையோடு கண் விழித்தவள், குளித்துத் தயாராகி வெளியில் வரவும்... அவளைச் சந்தோஷ புன்னகையோடு எதிர் கொண்ட ராணி, “வா நீரு... நல்லா தூங்குனீயா, உன்னைப் பார்க்க யார் வந்து இருக்காங்கன்னு பாரு... சர்ப்ரைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...” என்று கைகளை விரித்துக் கூறியவாறே அழைத்துச் சென்றாள்.
 
 
ராணியின் வார்த்தைகள் உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கி இருக்க... வெளியில் அது தெரியாமல் முகமூடி போட்டு கொண்டவள் ராணியைப் பின் தொடர்ந்து வரவேற்பறைக்குச் சென்றாள்.
 
 
அங்கு ராமோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சபாபதியை கண்டு அப்படியே நின்றுவிட்டவளுக்கு உள்ளுக்குள் அதுவரை பொங்கி பெருகி கொண்டிருந்த ஆர்வம் மொத்தமும் வடிந்து போனது. மிகப் பெரிய ஏமாற்றம் மனதை ஆக்ரமிக்கத் துவங்கியதில் முகம் வாடி கண்கள் கலங்கிவிடும் நிலைக்குத் தள்ளபட்டவள்,
 
 
தன்னைப் புன்னகையோடு திரும்பி பார்த்த சபா, “தாரு மா... எப்படி டா இருக்கே...?” என்று கையை நீட்டி அழைக்கவும் தான் உணர்வு வரப் பெற்று, “மாமாஆஆஆ...” எனச் சென்று உண்மையான சந்தோஷத்தோடு அவரை அணைத்துக் கொண்டாள்.
 
 
நிஜமாகவே சபாவை இங்கு எதிர்பாராமல் கண்டது அவளுக்குச் சந்தோஷத்தை தான் கொடுத்து இருந்தது. ஆனால் அவள் எதிர்பார்த்து இருந்தவனின் வரவு நிகழாமல் போன ஏமாற்றமே நீருவை சில நொடிகள் துவண்டு போகச் செய்திருந்தது.
 
 
நீருவின் நலனை வெகுவாக விசாரித்தவர், அவளைப் பார்க்கவே வந்ததாகக் கூறவும், அப்படியே அவர் அன்பில் நெகிழ்ந்து போய்ச் சபாவின் தோளில் தலை சாய்த்து கொண்டவளின் கண்கள் கலங்கி போனது.
 
 
இப்போதெல்லாம் சிறு விஷயத்திற்குக் கூட வெகுவாக உணர்ச்சிவசபடுகிறாள் நீரு. அவளின் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றமே காரணம் என புரிந்தாலும் அவளின் தனிமை தவிப்பு சஞ்சய்யை விட்டு தள்ளி இருப்பது ஆனால் மனதளவில் அவனை வெகுவாகத் தேடுவது அதை யாரிடம் வெளிபடுத்திக் கொள்ளவும் முடியாமல் தனக்குள்ளேயே வைத்து மருகுவது என்று பல்வேறு உணர்வுகளின் தாக்கங்கள் அவளின் மனதை ரொம்பவே பலஹீனப்படுத்தி இருந்தது.
 
 
இந்த நேரத்தில் தாயின் அன்பை தேடி அவளின் மனம் அவ்வபோது தவிக்கும் முன்பெல்லாம் அதைப் புரிந்து சஞ்சய் அவளை அரவணைத்து கொள்வான். ஆனால் இப்போது அதற்கும் வழி இல்லாமல் போகவும், அதைத் தீர்ப்பது போல இருந்தது இவரின் வருகையும் பரிவும் இரு குடும்பங்களுக்கும் சேர்த்து இப்போது இருக்கும் ஒரே பெரியவர் சபா தானே.
 
 
அன்று மதியம் வரை சபாவோடே கழிந்தது நீருவின் நேரம். அவர் எப்போதுமே நகைசுவை உணர்வோடு பேச கூடியவர், இப்போது நீரு இருக்கும் மனநிலையில் அவரின் பேச்சு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. அதிலும் தன் உடல் நிலையைக் கூடப் பார்க்காமல் இவளுக்காக இவ்வளவு தூரம் வந்து இருப்பவரின் அன்பு அவளை நெகிழ செய்து இருந்தது.
 
 
மாலை மங்க தொடங்கிய பிறகும் சஞ்சய் வந்து சேர்ந்து இருக்கவில்லை. காலையில் இரண்டு முறை ராமிடம் விசாரித்த சபாவும் அதன் பிறகு அதைப் பற்றி எதுவும் பேசி இருக்கவில்லை என்பதால் எந்த விவரமும் நீருவுக்குத் தெரிந்து இருக்கவில்லை.
 
 
நேராகச் சென்று யாரிடமும் சஞ்சய்யை பற்றி விசாரிக்க மனம் இல்லாதவள் மற்றவர்கள் பேச்சின் மூலம் கிடைக்கும் தகவல்களை மட்டும் கவனமாகச் செவிமடுத்து கொள்வாள். இப்போது அப்படியும் எதுவும் தெரியாமல் போகவும், ‘தன்னைப் போல அவனுக்கும் என்னைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு இருந்து இருந்தால் ஓடி வந்து இருப்பான்... அவனுக்குத் தான் அப்படி எதுவும் இல்லையே...!! இல்லையென்றால் இந்த நிலையில் என் உடல் உபாதைகளைப் பற்றிக் கூட யோசிக்காமல் இப்படி என்னை விட்டு பிரிந்து இருப்பானா...?! அவனுக்கு நான் முக்கியமே இல்லை, அதனால் தானே என்னை இரண்டு முறை நேரில் பார்த்தும் ஒரு வார்த்தையும் பேசாமல் கூடச் சென்றான்...’ என்றெல்லாம் யோசித்து இன்னும் அதிகமாக மனதை குழப்பிக் கொண்டு இருந்தாள்.
 
 
அதே நேரம் அவளின் அலைபேசி தன் இருப்பைத் தெரிவிக்கவும், அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் ஒரு காலத்தில் கொஞ்சம் மனம் சுணங்கினாலும் ஏதோ எதிரில் இருந்து பார்த்தது போல் உடனே அழைத்து அவளின் மனநிலையை மாற்றி நீருவை இயல்புக்குக் கொண்டு வந்து வம்பிழுத்து என்று செய்வதோடு ஓயாமல் ஒரு நாளைக்குப் பல முறை அலைபேசியில் அழைத்து இதன் மூலம் காதல் பயிர் வளர்த்தவனின் நியாபகத்தில் துள்ளி கொண்டு சென்று பார்த்தவள் அழைப்பு வித்யாவிடமிருந்து என்றறிந்து முகம் வாட அதை எடுத்து இருந்தாள்.
 
 
பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு, நீருவின் உடல் நலனை பற்றியும் இங்கு என்ன எப்படிப் பொழுது போகிறது என்பது பற்றியும் வித்யா கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு வார்த்தை இரண்டு வார்த்தைகளில் மட்டுமே பதில் வந்து கொண்டிருந்தது நீருவிடமிருந்து.
 
 
“தாரா ஆர் யூ ஒகே...? உடம்புக்கு எதுவும் செய்யுதா...?” என்ற வித்யாவின் கவலை குரல் நீருவை கலைக்க... “ஹே... அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஐ ம் ஆல்ரைட்...” என்று பதிலளித்தாள்.
 
 
“ஓ... அப்போ அண்ணா வந்து இருக்காங்களா...? அவங்களோட பிசியா இருக்கீயா, நான் உன்னைத் தொல்லை செய்துட்டனா...?!” என்று நீருவின் மனநிலை புரியாமல் வான்டட்டா வந்து வண்டியில் ஏறி இருந்தாள் வித்யா.
 
 
இத்தனை நேரம் யாரிடமும் வெளிபடுத்த முடியாமல் தனக்குள்ளேயே வைத்து மருகி கொண்டிருந்தவள் இந்த ஒற்றை வார்த்தையில் அப்படியே பொங்கி, “உங்க நொண்ணன் தானே...” என்று தொடங்கி வித்யாவின் காதிலிருந்து ரத்தம் வரும் அளவு சஞ்சய்யை வறுத்து எடுத்து விட்டே அலைபேசியை அணைத்தாள்.
 
 
“ஒய் குல்பி...” என்று ஜன்னலோரம் கோபத்தில் மூச்சு வாங்க நின்றிருந்தவளின் வெகு அருகில் குரல் கேட்கவும், ஆவலோடு முகத்தைத் திருப்பியவள், அங்கு வெள்ளை சட்டையும் லைட் ப்ளூ நிற ஜீன்ஸும் அணிந்து தன் வழக்கமான கருப்பு நிற குளிர் கண்ணாடியோடு சுவரில் சாய்ந்து கைகளைக் கட்டி கொண்டு வெகு அழகாக நின்றிருந்தவனையே விழிகள் விரிய நம்படியாமல் இமைக்காமல் கண்டவள், பின் கோபத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
 
 
தேவி ஸ்ரீ தேவி
உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லி விடம்மா...
பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி
கிடைத்திட வரம் கொடும்மா...
 
 
என்று விசிலில் அப்படியே நின்றவாறு சஞ்சய் பாடவும், இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று தோன்றினாலும் பல நாட்களுக்குப் பிறகான அவனின் இந்த அருகாமையையும் சீண்டலையும் வெகுவாக உள்ளுக்குள் ரசிக்கத் தொடங்கினாள் நீரு.
 
 
திடீரென எந்தச் சத்தமும் இல்லாமல் அமைதியாகி போக, மெல்ல பார்வையைத் திருப்பியவள் சஞ்சய் நின்றிருந்த இடம் காலியாக இருப்பதைக் கண்டு குழப்பத்தோடு திரும்பி அறை முழுவதையும் பார்வையால் அலச, அங்கு அவளைத் தவிர வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே சுத்தமாக இல்லை.
 
 
அவனையே நினைத்துக் கொண்டு இருப்பதால் இப்படி எல்லாம் தோன்றுகிறது போலும் என்றெண்ணியவள், கண்கள் பனிக்கத் தொலைதூர வானத்தில் பார்வையைப் பதித்தவாறு நின்றுவிட்டாள்.
 
 
அப்போது குளியலறையில் இருந்து...
 
 
உன்னை நினைச்சு நினைச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சுபறந்து போனா அழகா...
 
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ...
 
 
என்று மீண்டும் விசிலில் ஒலிக்கத் துவங்கவும், ஓடி சென்று அங்குக் கதவை திறந்து பார்க்க துடித்த மனதை வெகு பிரதாயனபட்டு அடக்கி கொண்டவள், எப்படியும் அதுவும் யாருமற்றே காட்சி அளிக்கும் என்று எண்ணி தன் இரு கைகளையும் கொண்டு காதை மூடி கொண்டு தலையை ஜன்னலில் சாய்த்து விழி மூடி நின்றுக் கொண்டாள்.
 
 
அப்போது சிறிது நேரத்தில் அவளைத் தேடி வந்த ராணி எவ்வளவு நேரம் அறைக்குள்ளேயே இருப்பாள் என்று கடிந்து கொண்டு நீருவை வெளியில் அழைத்துச் சென்றாள்.
 
 
அங்கு வீட்டிற்கு முன் இருந்த திறந்த வெளியில் மூங்கிலாளான ஆறு கூடை நாற்காலி சுற்றிலும் போடப்பட்டு நடுவில் அதே மூங்கிலால் செய்யப்பட்ட டீபாயின் மேல் குழந்தையை அமர வைத்து விளையாடியவாறு ராம் மற்றும் சபா அமர்ந்து இருந்தனர்.
 
 
அவர்களோடு சென்று இவர்களும் அமர்ந்து கொள்ள... “நல்லா தூங்கினீயா மா...?” என்று சபா புன்னகைக்க அவருக்குப் பதிலளித்தவாறு பிள்ளையோடு கொஞ்ச தொடங்கிவிட்டாள் நீரு.
 
 
அப்போது நீருவின் முன்னே ஒரு டீ டிரே நீட்டபடவும், ஒரு புன்னகையோடு முகத்தை நிமிர்த்த, அங்கு மாயகண்ணனின் புன்னகையோடு நின்றிருந்தது சஞ்சய் தான். அவனையே தன் கண்களை நம்பமுடியாமல் பார்த்தவள், இமைக்கக் கூட மறந்து இதுவும் கனவாகி போகுமோ இமைத்தாலும் கூட மீண்டும் மறைந்து போவானோ என்று சஞ்சய்யின் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்.
 
 
“அம்மா மருமகளே... என் பையனை அப்பறமா சைட் அடிச்சுக்கோ, இப்போ டீ கப்பை எடுத்துட்டீனா நாங்களும் எடுத்துப்போம் இல்லை... இந்தக் கிளைமேட்டுக்கு வேற டீ சீக்கிரம் ஆறிடும் பாரு...” என்று புன்னகையோடு வம்பிழுக்கும் குரலில் சபா கூறவுமே சுற்றுபுறம் உறைக்க... தன் பார்வையை விலக்கியவள் அனைவரும் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு, இது கனவில்லை என்று புரிய, மெல்ல தலை குனிந்தவாறே ஒரு கப்பை எடுத்து கொண்டாள்.
 
 
அடுத்து அனைவருக்கும் கொடுத்து முடித்தவன், “என் பொண்டாட்டி என்னைச் சைட் அடிக்கறா... உங்களுக்கு என்ன பொறாமை...” என்றவாறே சபாவின் பக்கத்தில் சென்று அமர, “எனக்கு என்ன ராசா பொறாமை... என் கவலை எல்லாம் டீ ஆறிடுமேன்னு தான்...” என்றதும் அனைவரும் சிரிக்கத் தொடங்கினர்.
 
 
அப்படியே பேச்சு நீடு கொண்டே சென்றதில் அந்த நேரம் அனைவருக்கும் வெகு இனிமையாகக் கழிந்தது. இதில் ஒட்டவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது நீரு மட்டும் தான்.
 
 
அதிலும் சஞ்சய்யின் இந்த வெகு இயல்பான பேச்சும் சிரிப்பும், தன் கோபம் ஒதுக்கம் எல்லாம் அவனை ஒன்றும் செய்யவோ பாதிக்கவோ இல்லை என்பது போல அவன் அமர்ந்து இருந்த விதமும் எல்லாம் அவளை மன வேதனை கொள்ளச் செய்ததில் குழந்தையின் மேல் மட்டுமே கவனத்தைச் செலுத்தி அந்தப் பேச்சுகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது போல நடிக்கத் தொடங்கினாள்.
 
 
ஆனால் அதுவும் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அவளின் அனுமதி இல்லாமலே நீருவின் பார்வை அவ்வபோது சஞ்சயின் மீது பாய்ந்து மீண்டு கொண்டிருந்தது. ஆனால் அவனிடமிருந்து அப்படி ஒரு ஆர்வ பார்வை கூடத் தன் பக்கம் வரவில்லை என்று புரிய, அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் வேகமாக எழுந்து உள்ளே செல்ல முயன்றாள்.
 
 
வேகமாக எழுந்து கொள்ள முயன்றதில் அணிந்து இருந்த சேலை தடுக்கி விழ போனவள், அப்போதே தன் கைகளில் இருந்த குழந்தை சாய்வதைக் கண்டு அதைப் பிடிக்க எண்ணியதில் முழுவதாக நிலை தடுமாறிப் பின்னால் சரிய போனாள். அப்படி மட்டும் சரிந்து இருந்தால் அங்கிருந்த மரத்தில் நீருவின் வயிறு மோதி கொண்டு இருக்கும்... சரியான நேரத்தில் சஞ்சய்யின் கைகள் அவளைத் தாங்கி பிடித்து இருந்தது.
 
 
இது எல்லாமே சில நொடிகளில் நடந்து முடிந்து இருக்க... கடைசி நேரத்தில் மரத்தில் மோத போவதை உணர்ந்து இரு கரங்களால் வயிற்றைத் தாங்கி பிடித்துத் தடுக்க முனைந்தவளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லாத வகையில் ராமின் குழந்தை கைகளில் இருந்தது.
 
 
அதையும் மீறி அப்படி அவள் செய்ய நினைத்தால் குழந்தைக்கு அடிபட்டு இருக்கும்... இது எல்லாம் நொடியில் வந்து போகக் கண்களை இறுக மூடி கொண்டவள், பாதுகாப்பான கரங்களில் தாம் இருப்பதை உணர்ந்த பிறகே விழிகளைத் திறந்தாள்.
 
 
தன்னோடு சேர்த்து அணைத்து நீருவை தாங்கி பிடித்து இருந்தவனின் வலது கையில் சமத்தாக அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது குழந்தை. எப்போது எப்படி அது அவன் கைக்குச் சென்றது என்று கூட நீருவுக்குத் தெரியவில்லை. அதற்குள் நீருவை பதட்டத்தோடு நெருங்கி இருந்த ராமும் ராணியும் கவலை குரலில் அவளின் நலனை விசாரித்தனர்.
 
 
தனக்கு ஒன்றுமில்லை என்றவளை முறைத்த ராணி, “எதுக்கு நீ இப்போ இவ்வளவு அவசரமா எழுந்த...? ஏதாவது வேணும்னா என்கிட்டே சொல்ல வேண்டியது தானே...!” என்று கடிந்து கொள்ளவும், “இந்த மாதிரி நேரத்துல ரொம்பக் கவனமா இருக்கணும் மா... கொஞ்ச நேரத்துல எல்லார் மனசும் பதறி போச்சு...” என்றார் சபா.
 
 
அதில் குற்ற உணர்வோடு தலை குனிந்தவள், “இல்ல மாமா... சாரி, இங்கே கொஞ்சம் குளிரா இருந்தது.. அதான் ரூமுக்கு போகலாம்னு...” என்று தயங்கி இழுக்கவும், அடுத்த நொடி சஞ்சய்யின் கரங்களில் இருந்தாள் நீரு.
 
 
நீரு சொல்லி முடித்த உடன், “வா உன்னை நான் கூட்டிட்டு போறேன்...” என்று ராணி சொன்னது எல்லாம் வீண் என்பது போல் தன் கைகளில் ஏந்தி இருந்தான் சஞ்சய். மற்றவர்கள் முன் அப்படி இருக்க விரும்பாமல், மெல்ல நீரு நெளியவும், அவனின் பிடி மேலும் இறுகியது.
 
 
அதுவே அவனைப் பற்றி நன்கு அறிந்தவளுக்கு அவனின் மனதை புரிய வைக்கப் போதுமானதாக இருக்க... அமைதியாக இருந்து கொண்டாள். விறுவிறுவென அவளை அறைக்குள் அழைத்துச் சென்று படுக்கையில் இறக்கியவனை முறைத்தவள், “ஹவ் டேர் யூ...” என்று கோபமாகப் பேச துவங்கவும் திரும்பி பார்த்து,
 
 
“யூ வானா சீ, ஹவ் டேர் ஐ ம்...” என்று அதே போன்ற குரலில் திரும்பக் கெட்டவனைக் கண்டு, பயத்தில் அவள் தான் பின்னுக்குச் சாய வேண்டி இருந்தது.
 
 
அதன் பின் தன் போக்கில் அவள் சாய்ந்து படுப்பதற்குத் தேவையான வகையில் தலையணையை உயர்த்தி வைத்து அருகில் புத்தகம் அலைபேசி எல்லாம் கொண்டு வந்து வைத்து கொண்டிருந்தவனைப் பார்க்க பார்க்க... அவ்வளவு ஆத்திரம் நீருவுக்கு வந்தது.
 
 
‘ரொம்பத் தான் அக்கறை...’ என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டவள், கதவை நோக்கி செல்பவனைக் கண்டு, “உன்னை என்கிட்டே இருந்து தள்ளி தானே இருக்கச் சொன்னேன்...? ஏன் என்னைத் தூக்கினே...?” என்றாள். அதில் நீருவை திரும்பி பார்த்தவன், “அன்னைக்கே நானும் சொன்னேன் தானே... உனக்கோ நம்ம குழந்தைக்கோ ஏதாவது ஆபத்துன்னு வந்தா அதுக்குப் பிறகு என் அருகாமையை உன்னால் தவிர்க்க முடியாதுன்னு.. இனி நீ என் கைக்குள்ளே வந்தாச்சு... காட் இட்...” என்றுவிட்டு நிற்காமல் வெளியேறிவிட்டான்.
 
 
தான் பிரிந்து சென்ற அன்று அவன் உதிர்த்த அதே வார்த்தைகள் தான்..! ஆனால் அப்போது அந்த அளவுக்கு அவசியம் வராது... அப்படி எல்லாம் தன்னைத் தனிமையில் விட்டுட மாட்டான், நிச்சயம் தனக்காக விட்டுக் கொடுத்துவிடுவான் என்றெண்ணி இருந்தவளுக்கு இன்று வரை கிடைத்தது ஏமாற்றம் தான்... இதோ இப்போதும் தான் நினைத்து இருந்தது எதுவும் நிறைவேறாமல் ஆனால் அவன் சொன்னது போல நடந்து இருப்பதை எண்ணி கண்கள் கலங்கியது.
 
 
எதிலோ தோற்று விட்டது போல ஒரு எண்ணம் எழுந்து துக்கத்தை அதிகமாக்க... கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அதுவேறு மனதை வலிக்கச் செய்ய, எவ்வளவு பெரிய ப்ரச்சனையாக இருந்த போதும் தன் கவலை வெளியில் தெரியாமல் முகம் மாறாமல் நின்று சமாளிக்கத் தெரிந்த தன்னை இப்படித் தொட்டதற்கெல்லாம் அழ செய்து பலகீனமாக்கிவிட்டான் என்று அதற்கும் சேர்த்து சஞ்சய்யையே திட்டி கொண்டு இருந்தாள்.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN (2) - 6 & 7

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 3 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 8           
 
                                              
நீரு ஓய்வெடுப்பதாகச் சஞ்சு சொல்லவும், சபா அதை உண்மையென எண்ணி வேறு விஷயங்களைப் பேச தொடங்கிவிட்டார். இவர்களுக்கு என்று சமையல்காரம்மா நிர்மலா சமைத்துக் கொண்டு இருக்க... சஞ்சு தன் மனையாளின் வாய் ருசிகேற்ப சற்றுப் புளிப்பு தூக்கலாக வைத்துப் புதினா சட்னி அரைக்கத் துவங்கினான்.
 
 
அதைக் கண்டு பதறி நிர்மலாம்மா தடுக்க முயன்றதை எல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவனே செய்து முடித்தான். இடையில் சமையல் அறைக்கு விஜயம் செய்த ராணியிடம் அவர் குறைபட்டு கொள்ளவும், “எங்க அண்ணாவுக்கு அவர் சரிபாதி மேலே அம்புட்டு லவ் நிம்மிமா... அவளும் இவர் கை ருசி இல்லைனா சரியாவே சாப்பிட மாட்டா, நீங்களே பார்த்தீங்க தானே நேத்துல இருந்து... இப்போ ஒரு கைப்பிடி அதிகம் சாப்பிடுவா விடுங்க...” என்று ராணி விளக்கவும் தான் அமைதியானார்.
 
 
மற்றவர்களுக்குச் சப்பாத்தி, பலவகைக் காய்கள் போட்டு செய்த குருமா, இடியாப்பம் வடகறி என்று அணிவகுத்து இருந்தாலும் நீருவுக்குத் தனியாக இட்லியும் புதினா சட்னியும் காத்திருந்தது.
 
 
நீருவை சாப்பிட அழைத்து வர சென்ற ராணி ‘அவளுக்கு இப்போ பசி இல்லையாம்...’ எனத் திரும்பி வர, தந்தை அறியாமல் மற்றவர்களுக்குக் கண்ணைக் காண்பித்து விட்டு எழுந்த சஞ்சய், இந்தக் கிளைமேட்ல சீக்கிரம் பசி எடுக்கலை போல... நான் பார்த்துக்கறேன்... நீங்க எல்லாம் காத்திருக்க வேண்டாம், சாப்பிடுங்க... நான் அவளோட சாப்பிட்டுக்கறேன்...” என்றவாறே நீருவின் அறைக்குச் சென்றான்.
 
 
அங்கு வெளியில் தெரிந்த இருளையும் புகை மூட்டத்தையும் மூடி இருந்த கண்ணாடி ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்தவாறு நீரு நின்றிருந்தாள். “பசிக்கலையா...?!” என்றவாறே அருகில் வந்து நின்ற சஞ்சய்யை ஒரு உணர்வில்லா பார்வை பார்த்து விட்டு திரும்பி கொண்டாள்.
 
 
“பழசெல்லாம் மறந்துடுச்சு போல... நான் கேட்டதுக்குப் பதில் வரலைனா..” என்றபடியே நீருவை நோக்கி சஞ்சய் முன்னேற... அதில் இப்போதும் சிறு மிரட்சியோடு இரண்டடி பின்னுக்கு நகர்ந்தாள் நீரு.
 
 
அவளையே ஒரு கூர்மையான பார்வை பார்த்தபடி சஞ்சய் சிறு இடைவெளிவிட்டு நின்று விட, அந்தப் பார்வையைக் கண்டு கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள நினைத்தவளுக்குச் சஞ்சய்யின் அதிரடியும் கோப முகமும் நினைவு வந்து ஒரு தயக்கத்தைக் கொடுக்க... மெல்ல திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
 
 
இன்னும் அதே கூர்மையான பார்வையோடு அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பவனைக் கண்டு, பதில் அளிக்காமல் இருந்து வம்பை இழுத்து விட்டுக் கொள்ள விரும்பாமல் “என்ன புதுசா அக்கறை... இத்தனை நாள் நீயா என்னைப் பார்த்துகிட்டே...!” என்றாள் மெல்லிய முணுமுணுப்போடு.
 
 
“அக்கறையும் புதுசு இல்லை... என் முன்னே நிக்கறவளும் எனக்குப் புதுசு இல்லை...” என்று ஒரு மாதிரியான குரலில் கூறியவனின் கண்கள் சொன்ன செய்தியில் பதில் இல்லாமல் நீரு தான் தன் பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டியதாகப் போனது.
 
 
வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் முதுகை துளைக்கும் சஞ்சய்யின் பார்வை நீருவுக்குத் திரும்பி பார்க்காமலே தெரிந்தது. சற்று நேரம் பொறுத்து பார்த்தவள், கோபமாக அவன் பக்கம் திரும்பி ஏதோ கேட்க வர, அப்போதும் அதே மாதிரி பார்வையில் தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்தவனைக் கண்டு “எ.. ன்.. ன...?” என்றாள் காற்றாகி போன குரலில்.
 
 
ஒன்றுமில்லை என்பது போலத் தலையசைத்தாலும், “ரொம்ப நாள் ஆச்சு டி... ம்ஹும், மாச கணக்காச்சு... ஒரே ஒரு..” என்றவாறே தன் இதழை குவித்துச் சைகை செய்தவாறு நீருவை சஞ்சய் நெருங்கினான்.
 
 
இதில் விழி விரிய திகைத்தவள், எச்சில் கூட்டி விழுங்கியவாறு இரண்டடி பின்னால் சென்றாள். இரண்டு ஊர் கடந்து சென்றாலே தேடி வருபவன், இந்த இரண்டடியை கடக்க மாட்டானா என்ன...?!! அவனும் இரண்டடி முன்னே வைக்க... பயத்தில் அப்படியே நகர்ந்தவள், பின்னால் இருந்த சுவரில் மோதி விழித்துக் கொண்டிருந்தாள்.
 
 
ஒரு வித ரசனையான பார்வையோடு நீருவை அளந்தவாறே நெருங்கியவன், அவளின் இந்த நிலை கண்டு கண்களில் மின்னலோடு ஒரு கள்ள புன்னகையும் சேர்ந்து கொள்ள மேலும் நெருங்கி நின்றான்.
 
 
சஞ்சய் நெருங்கி வந்தால் அவன் மேல் அவள் கொண்டுள்ள நேசம் அவனைத் தடுக்கவோ தவிர்க்கவோ செய்யாமல் அவனின் செய்கைக்கு உடன்பட்டு நிற்க செய்யும் என்று நன்கு அறிந்து இருந்தவளுக்கு இப்போது என்ன செய்து சஞ்சய்யை விளக்கி நிறுத்துவது என்று புரியாத ஒரு நிலை தான்.
 
 
மனம் படபடக்கச் சஞ்சய்யை நீரு பார்க்கவும், அவன் அவளின் முகம் நோக்கி குனியவும் சரியாக இருந்தது. அதற்கு மேல் அவனைத் தடுக்கும் வழி தெரியாமல் தன் விழிகளை மூடிக் கொண்டாள் நீரு.
அதே நேரம் அவளின் காதோரம் “வித் யுவர் பர்மிஷன்...” என்ற சஞ்சய்யின் கரகரப்பான குரல் கேட்டது. ஜன்னலை பற்றி இருந்த வலது கையில் இறுக்கத்தைக் கூட்டி மேலும் இறுக பற்றிக் கொண்டாளே தவிர விழிகளை அவள் திறக்கவே இல்லை.
 
 
அவனின் ஆழ்ந்த இதழ் தீண்டலை எதிர்பார்த்து காத்திருந்தவள், வயிற்றுப் பகுதியில் ஒற்றை விரல் கொண்டு சேலை விளக்கபடுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழிகளைத் திறந்தாள்.
 
 
ஒட்டி உரசும் நெருக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தவன் தான் அவ்வேலையைச் செய்து கொண்டிருந்தான். அதைக் கண்டு “ஹே.. என்ன பண்றே..?” என்று பதறி நீரு விலக முயல, அதற்கு வாய்ப்பே இல்லாமல் முன்னே அவனும் பின்னே சுவரும் இருந்தது.
 
 
“இப்போ தானே சொன்னேன்...!!” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவனைக் கண்டு, “என்ன... சொன்னே... நீ.. நீ... ஏதோ... ஒண்ணே... ஒண்ணு...” என்று படபடவெனப் பேச எண்ணினாலும் மனம் தான் படபடத்ததே தவிர, வார்த்தை அத்தனை கோர்வையாக வரவில்லை.
 
 
இது ஒரு தொல்லை அவனோடு கொஞ்சி குலாவி கொண்டு இருக்கும் போது அவனையே ஏய்க்கும் வார்த்தைகளும் மிரட்டல் பேச்சும் வம்பு செய்யும் வழக்காடலும் சரளமாக வரும்...! அதுவே அவனிடமிருந்து தள்ளி இருந்தால் சாதாரணப் பேச்சுக்கு கூடத் தந்தி அடிக்க வேண்டி இருக்கிறது என்று மனதுக்குள் நொந்து கொண்டவளுக்கு எங்கே தெரிய போகிறது அது அவனாகக் கொடுக்கும் இடம் என்று...!!
 
 
“என்ன சொன்னேன்...?!” என்று புரியாதது போல அவளையே திருப்பிக் கேள்வி கேட்க... “ஒண்ணே ஒண்ணுன்னு தானே சொன்னே...?!” என்றாள் கோபமும் பரிதாபமுமாக.
 
 
“எஸ்...” என்று முகத்தில் அப்பாவி தனத்தோடு அவளை சஞ்சய் பார்க்கவும், “ஆனா நீ... நீ இப்போ என்ன செய்யற...?!” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு விட்டால் அழுதுவிடுவேன் என்பது போன்ற குரலில்.
 
 
“நான் அதைத் தானே செய்யறேன்...” என்று மீண்டும் சஞ்சய் அப்பாவி முகம் காட்டவும், “என்னத்தைச் செய்யறே பொறுக்கி... ஒன்னும் தெரியாத பேபி போலக் கேள்வி வேற கேக்கறே பொறுக்கி... பொறுக்கி... கிஸ் செய்ய எதுக்கு டா ஹிப்கிட்ட கை போகுது... அதெல்லாம் முடியாது போ...” என்று அதுவரை படபடப்பிலும் தடுமாற்றத்திலும் தவித்துக் கொண்டு இருந்தவள், அவனின் நெருக்கம் கொடுத்த உணர்வில் உள்ளுக்குள் புதைத்து வைத்திருந்த அவன் மீதான அத்தனை உரிமையையும் மீட்டெடுத்து பழைய நீருவாக மாறி பேசினாள்.
 
 
இதற்காகத் தானே அவன் இத்தனை நேரம் வம்பிழுத்து பேச வைத்தது. சஞ்சய் யார் என்று தெரிவதற்கு முன்பே அவ்வளவு பேசியவள், அவனைப் பற்றி அறிந்த பிறகும் மரியாதை என்பது துளியும் இல்லாமல் பேசியவள், மணமான பிறகு இன்னும் உரிமை எடுத்து வாயடித்தவள், இப்போது என்னவோ பேசவே தெரியாதது போலவும் மூன்றாம் மனிதனிடம் பேசுவது போலவும் பேசினால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியாகப் போக சஞ்சய் என்ன வெறும் போலீஸா...!! அவளின் பொறுக்கி ஆயிற்றே...!!!
 
 
“நான் உனக்குக் கிஸ் செய்யறதை தடுக்கற உரிமையே உனக்கு இல்லை... இதுல என் பேபிக்கு செய்யறதை தடுக்க நினைக்கறே ம்ம்ம்...?!” என்று கேலி குரலில் கேட்டவனைப் பார்த்து விழித்தவள், “எ... ன்... ன... து...?!!” என்றாள் தான் புரிந்து கொண்டது சரி தானா...?! என அறிந்து கொள்ளும் விதமாக.
 
 
“நீரு பேபி... உன் வயித்துக்குள்ளே இருக்க என் குட்டி பேபிக்குக் கிஸ் செய்யணும்னா கை அங்கே போய்த் தானே ஆகணும்...?!” என்று வேண்டுமென்றே குரலில் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு வந்து கேட்டான் சஞ்சய்.
 
 
அதைக் கேட்டு திடுக்கிட்டு திருதிருத்தவள், “பாப்... பாப்பாக்கா...” என்றாள் காற்றாகி போன குரலில். “ம்ம்ம்... நீ வேற என்ன..?” என்று தொடங்கியவன், “ஓ... நீ உனக்குன்னு நினைச்சியா...!” என்று ஒன்றும் தெரியாத பாவனையில் கேட்டவன், இன்னும் சற்று நெருங்கி நீருவின் செவி அருகில் குனிந்து “உனக்கும் வேணும்னா கூச்சபடாம கேளு குல்பி... மாமன் இந்த விஷயத்தில் வள்ளல் தான்...” என்றான் வம்பிழுக்கும் குரலில்.
 
 
அதில் பொங்கி வந்த கோபத்தோடு “யாருக்கு வேணும்... ச்சீ போ பொறுக்கி...” என்றவாறே அவனைத் தன்னிடமிருந்து இரண்டடி தள்ளி விட்டவள், திரும்பி செல்ல முயல, அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல் நீருவின் கரங்களை இறுக பற்றி இருந்தான் சஞ்சய்.
 
 
நீரு விடுபட்டுக் கொள்ள முயலும் போதே அவளின் முன் மண்டியிட்டவன், மெல்ல அவளின் சேலையை ஒதுக்கி அவளின் மணி வயிற்றின் உள்ளே இருக்கும் தங்கள் மகவுக்கு இதழ் பதித்து இருந்தான்.
 
 
கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகான தன் பிள்ளையை இதழால் உணரும் தருணத்தை விழி மூடி சஞ்சய் அனுபவித்துக் கொண்டிருக்க... அதே நிலையில் தான் நீருவும் நின்றிருந்தாள்.
 
 
ஒன்று என்று தொடங்கிய முத்த பவனி அவளின் மணி வயிறு முழுவதும் பயணித்துக் கொண்டு இருந்தது. ஒன்றே ஒன்று தான் என்று அனுமதித்தவளும் அதைத் தடுக்கும் நிலையில் இல்லை..! சஞ்சயின் கூந்தலில் கரம் நுழைத்து தன் வயிற்ரோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.
 
 
எந்த அன்பை அரவணைப்பை இழந்து விட்டோம் என்று இத்தனை நாட்களாக ஏங்கி தவித்தாளோ அதைத் தன் ஒற்றை இதழோற்றளில் மீட்டெடுத்து இருந்தான் அவளின் மணாளன்.
 
 
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ வெளியில் கதவு தட்டப்படும் சத்தத்தில் தான் சுற்றுப் புறம் உணர்ந்தாள் நீரு. தொடர்ந்து கதவு தட்டப்படவும், சஞ்சய்யை தன்னிடமிருந்து முயன்று பிரிக்க நீரு முயலவும்’, அவளின் முயற்சியினால் விளைந்த எரிச்சலோடு “இப்போ என்ன தான் டி உன் பிரச்சனை...” என்றான் சஞ்சய்.
 
 
“யாரோ... யாரோ... கதவு தட்டறாங்க...” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பதிலளித்தவளை கண்டு எழுந்தவன், “எனக்குன்னு எங்கே இருந்து தான் வருவானுங்களோ வில்லனுங்க...?” என்ற முணுமுணுப்போடு கதவை நோக்கி நகர முயல, சஞ்சயின் சட்டையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவள் கலைந்து இருந்த அவனின் தலையைச் சரி செய்து விட்டாள்.
 
 
அதில் விளைந்த மந்தகாச புன்னகையோடு சென்று கதவை திறந்தவன், அந்தப் பக்கம் நின்றிருந்த ராமை கண்டு என்னவென்று கேட்க வாயை திறக்கும் முன், “நான் வில்லனும் இல்லை... கரடியும் இல்லை மச்சி... உன் தங்கச்சி தான் என்னைப் போட்டு தொல்லை செஞ்சு அனுப்பி விட்டா... எதுவா இருந்தாலும் அவகிட்ட டீல் செஞ்சுக்க... இதை மட்டும் வாங்கிக்க...” என்றவாறே சிறு டிராலியில் இருவருக்குமான இரவு உணவை வைத்துக் கொண்டு அவனின் முன் நின்றிருந்தான் ராம்.
 
 
அவனைக் கண்டு புன்னகைத்த சஞ்சய் ஏதோ பேசும் முன், “எதுவா இருந்தாலும் நாம காலையில் பேசிக்கலாம் மச்சி...” என்று விட்டால் போதும் என்பது போல அங்கிருந்து ஓடிவிட்டான்.
 
 
சஞ்சய் நண்பனின் அக்கறையினால் விளைந்த புன்னகையோடு அனைத்தையும் உள்ளே கொண்டு செல்லவும், நீரு அவனை எதிர் கொள்ள முடியாமல் தயக்கத்தோடு திரும்பி நின்றுக் கொண்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கும் நீருவின் நிலை தெளிவாகப் புரிய... மேலும் சீண்டி வம்பிழுக்க விரும்பாமல் “நீரு சாப்பிட வா...” என்றழைத்து இருந்தான்.
 
 
“எனக்கு வேண்டாம்...” என்று திரும்பாமலே பதிலளித்தவளை நிமிர்ந்து பார்த்தவன், “உனக்கு வேண்டாமா இருக்கலாம்... ஆனா என் பிள்ளைக்கு வேணுமாம்... இப்போ நீயா சாப்பிடறீயா... இல்ல நான் ஊட்டவா...!!?” என்றான் கறாரான குரலில்.
 
 
சஞ்சய்யை அறிந்த நாளில் இருந்து அவனின் இந்தக் குரல் சொன்னதைச் செய்து முடிப்பேன் என்ற குரல் எனப் புரியவும், இன்னும் வினையை இழுத்துக் கொள்ள விரும்பாமல் அமைதியாக வந்து சாப்பிட அமர்ந்தாள்.
 
 
அவள் முன் சாப்பிட ஏதுவாகச் சிறு மேசையை நகர்த்தி வைத்தவன், ஹாட்பேக்கில் இருந்த இட்லியையும் புதினா சட்னியையும் வைக்க அதைக் கண்டதும் முகத்தைச் சுழித்தாள் நீரு.
 
 
“எனக்கு இது வேணாம்...” என்றவளை ஏன் என்பது போலப் பார்த்தவன், “முதலில் சாப்பிட்டு பாரு நீரு... பிடிக்கலைனா விட்டுடலாம்...” என்றான் பொறுமையான குரலில். தான் மறுப்பதைச் சாப்பிட சொல்லி வற்புறுத்துகிறான் என்ற எரிச்சலை விட, அவன் வார்த்தைக்கு வார்த்தை அழைக்கும் நீரு தான் எரிச்சலை தந்தது.
 
 
‘ஏன் சாருக்கு குல்பி எல்லாம் மறந்து போச்சாமா...!!?’ என மனதிற்குள் நொடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவளின் வாயின் அருகே இட்லி துண்டு நீட்டபடவும், அந்த நிலையிலும் மறுக்கத் தோன்றாமல் வாங்கிக் கொண்டாள்.
 
 
தட்டில் வைக்கும் போதே இரண்டு இட்லி போதுமென்று சொல்லி இருந்தவள், இப்போது அவளையும் அறியாமல் நான்காகச் சாப்பிட்டு இருந்தாள்.
 
 
அடுத்து அனைத்தையும் எடுத்து ஓரம் வைத்து நீருவுக்குப் படுக்கையைச் சஞ்சய் சரி செய்யத் துவங்கவும், “நீ சாப்பிடலை..?” என்றாள் மெல்லிய குரலில். “ம்ஹும்.. வேணாம்...” என்று அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் தன் வேலையிலேயே கவனாக இருந்தாவாறே கூறியவனை முறைத்தவள், “இதைத் தானே நானும் சொன்னே..” என்றாள் சண்டைக்குத் தயாரான குரலில்.
 
 
“அதை நீ சொல்ல முடியாதபடி உன் வயித்தில் நம்ம ஜூனியர் இருக்காங்களே... எனக்கு என்ன அப்படியா...?!” என்று கண் சிமிட்டி புன்னகைத்தவனை உர் என்ற முகத்தோடு பார்த்தவள், “வெச்சு இருக்கணும்... அப்படி ஒரு ஆப்ஷன் வெச்சு இருக்கணும்... இங்கே நான் மட்டும் எல்லாக் கஷ்டமும் படணுமாம், இவரு மட்டும் ஜாலியா இருப்பாராம்...” என்றாள்.
 
 
“அப்படி இருந்து இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் தெரியுமா... இன்னைக்குத் தொட்டாப்போ நான் உணர்ந்த அந்த ஸ்பரிசம்... ஓ.. நோ, அதை எப்படி டிஸ்க்ரைப் செய்யறதுனே தெரியலை... அப்போ எல்லாம் தொடும் போது நாம தான் உள்ளே இருக்கவங்களைத் தொடறோம்னு நினைச்சுக்கணும், ஆனா இப்போ அதை நம்மால பீல் செய்ய முடியுது... வயிறும் லேசா பெருசாகி, ஒரு உருவம் வந்து... நாம தொடும் போது உள்ளே இருந்து வர அந்த அசைவை உணருவது இருக்கே... ப்பா... சான்சே இல்லை... எத்தனை நாள் இதையெல்லாம் மிஸ் செஞ்சு இருக்கேன் இல்லை...” என்று உணர்ந்து உள்வாங்கிச் சந்தோஷித்து என்று பேசிக் கொண்டு இருந்தவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவள், இறுதியாக அவன் வருத்தத்தோடு கரகரப்பாக முடிக்கவும், வேதனையுற்றாள்.
 
 
ஏதோ தவறு செய்து விட்ட குற்ற உணர்வு மனதை குறுகுறுக்கச் செய்ய.. ‘ஒரு தந்தையாக அவனின் நியாயமான உரிமையை அவனுக்கு அளிக்காமல் மறுத்துவிட்டோமோ...!’ என்று வருந்தினாள் நீரு.
ஆனால் சஞ்சய்யோ அதைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் படுக்கையைத் தயார் செய்து விட்டு நீருவை பார்த்து “வா வந்து படு...” என்றான். அவனையே தயக்கமாகப் பார்த்தவாறே வந்து படுத்தவள், ஏதோ சொல்ல வருவதும் தயங்குவதுமாக இருக்க... அதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சஞ்சய்யும் படுக்கத் தயாரானான்.
 
 
அப்போதே அதைக் கண்டு திடுக்கிட்டவள், தாழிடப்பட்டிருந்த கதவையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு, “நீ... நீயும் இங்கேயா தூங்க போறே...?” என்றாள்.
 
 
“வேற...” என இயல்பு போலக் கேட்டவன், தான் கொண்டு வந்திருந்த சூட்கேசில் இருந்து இரவு உடையை எடுத்து மாற்ற துவங்கவும் தான் அவன் பொருட்கள் இந்த அறையில் இருப்பதையே கண்டாள் நீரு.
 
 
“ஹே... இது என்ன...? நீயும் இந்த ரூம்ல தான் தங்க போறீயா...?! நோ...” என்றாள் சிறு திடுக்கிடலான குரலில். அவனோ பொறுமையாக உடை மாற்றி முடித்து விட்டு வந்து, “புருஷனும் பொண்டாட்டியும் வேற வேற ரூம்லையா தங்குவாங்க... அப்பா வேற வந்து இருக்காங்க, புரிஞ்சு நடந்துக்கோ... தேவை இல்லாம சீன் கிரியேட் செய்யாதே...” என்று விட்டு படுக்கையின் மற்றொரு பக்கம் படுத்து விட்டான்.
 
 
சஞ்சய் சொல்வதும் சரியாகவே பட்டாலும் அவர் முன்பு தங்கள் பிரிவை காண்பித்துக் கொள்வது அவரின் உடல்நலனை பாதிக்கும் என்றே இன்று வரை மறைத்து வந்தது எல்லாம் வீணாகப் போகும் என்று தெரிந்தாலும் இப்படி வெகு இயல்பாகச் சஞ்சய்யோடு ஒரே அறையில் தங்குவதை அப்படியே நீருவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
 
தான் அவனிடம் கோபப்பட்டுப் பிரிந்து சென்ற காரணம் இன்று வரை அப்படியே இருக்க... அது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போன்ற சஞ்சய்யின் நடவடிக்கையும் இயல்பாக நீருவிடம் பேசி பழகுவதும் அவளின் கோபத்திற்கும் கோரிக்கைக்கும் அவனிடம் மதிப்பில்லை என்பது போலவே அவளுக்குத் தோன்றியது.
 
 
அதிலும் கோபமும் அழுகையும் போட்டி போட திரும்பி சஞ்சய்யை பார்க்க.. அவனோ பக்கத்தில் ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதது போலக் கண்ணை மூடி தூங்க தயாராகிக் கொண்டு இருந்தான்.
 
 
அதில் எழுந்த ஆத்திரத்தோடு ஏதோ பேச முயன்றவளின் பார்வையில் அங்கு இன்னும் சாப்பிடாமல் இருந்த உணவு படவும், அதுவரை யோசித்துக் கொண்டிருந்த மற்றது எல்லாம் மறந்து ‘இன்னும் சாப்பிடவே இல்லையே அதுக்குள்ளே தூங்க போறாங்களே...!’ என்ற கவலை முன்னுக்கு வந்து நின்றது.
 
 
“ம்க்கும்...” என்று மெல்ல கணைத்து பார்த்தவளுக்குக் கொஞ்சமும் அவனிடமிருந்து அதற்கு எதிர்வினை இல்லாமல் போனது. மீண்டும் அதையே முயன்றவளுக்குப் பலன் என்னவோ பூஜ்யம் தான்.
 
 
“சாப்பிடலையா...?” என்றாள் சஞ்சய்யை பார்த்து மெல்லிய குரலில். அதற்கும் அவன் கண்களையும் திறக்கவில்லை, பதிலளிக்கவும் இல்லை. மீண்டும் சற்று சஞ்சய்யின் பக்கமாகக் குனிந்து “சாப்பிடலையா...?” என்றாள் இந்த முறை இன்னும் கொஞ்சம் சத்தமாக.
 
 
“எனக்கு வேண்டாம்... தூக்கம் வருது, நேத்து நைட் புல்லா தூங்கலை.... என்னைத் தூங்க விடு...” என்று கண்களைத் திறக்காமலே சஞ்சய் பதிலளிக்கவும், மாலை அவன் வந்ததில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை என்றறிந்திருந்தவள், “தூங்கு யாரு வேண்டாம்னு சொன்னா... சாப்பிட்டு தூங்கு..” என்றாள் மிரட்டும் குரலில் அதிகாரமாக.
 
 
இப்போது விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தவன், “என்ன இந்தத் திடீர் அக்கறை... நைட்ல சாப்பிடாம தூங்கறது எல்லாம் இப்போ எனக்குப் பழகி போச்சு...” என்று உணர்வுகளற்ற குரலில் கூறிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டான் சஞ்சய்.
 
 
நீரு தான் அவன் வார்த்தைகளில் அப்படியே திகைத்து அமர்ந்து விட்டாள். ‘தினம் இப்படித் தான் தூங்குகிறானா..?!’ என்று என்னும் போதே மனம் கனக்க துவங்கியது. வேதனை சுமந்த விழிகளோடு சஞ்சய்யின் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தவளுக்கு அவனின் அத்தனை துன்பத்துக்கும் தான் தான் காரணமோ என்று தோன்றியது.
 
 
‘ஒருவேளை தன்னை மணந்ததனாலேயே அவனுக்கு இந்தத் துன்பமோ...! வேறு யாரையாவது மணந்து இருந்தால் இப்படியான பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லாமல் அவன் வாழ்க்கை சந்தோஷமாக இருந்து இருக்குமோ...!!’ என்று எண்ணம் செல்லும் போதே சஞ்சய்யை வேறு ஒருத்தியுடனோ வேறு ஒரு வாழ்க்கையிலோ வைத்துக் கற்பனை செய்து கூட நீருவால் பார்க்க முடியவில்லை.
 
 
‘நானா அவனைத் தேடி போனேன்... அவனா தானே வந்தான்... அப்போ படட்டும்...’ என்று மீண்டும் மனம் வேதாளமாக மாறி மரத்தில் ஏறி இருந்தது. இப்படியே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்து இருந்தவள், சஞ்சய் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டதை அறிந்து அவனையே பார்த்தவாறு அருகில் நெருங்கி படுத்து கொண்டாள்.
 
 
“ஏன் ஆத்ரேய்.. இவ்வளவு நாள் என்னைத் தனியா விட்டீங்க... நான் உங்களை ரொம்ப மிஸ் செஞ்சேன், உங்களுக்கு என் நியாபகமே வரலையா...” என மெல்லிய வெளியே கேட்காத குரலில் பேசியவள், “பாப்பா பத்தி நீ பேசினது எனக்கு ரொம்ப வலிக்குது தெரியுமா... நான் தப்பு பண்ணிட்டேனா...? ஆனா நான்... நான்... நம்ம நல்லதுக்குத் தான் ஆத்ரேய்...” என்றவளுக்கு அதற்கு மேல் பேச வார்த்தையே வரவில்லை.
 
 
மெதுவாக எழுந்து சஞ்சயின் முகத்தருகே குனிந்து பார்த்தவள், அவன் நல்ல தூக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அவனின் வலது கரத்தை எடுத்து தன் வயிற்றின் மீது அணைவாக வைத்து கொண்டாள்.
 
 
அடுத்த நொடி தன் தந்தையின் தொடுகையை உணர்ந்தது போல உள்ளே இருந்து ஒரு அசைவு தெரிந்தது. அதில் அதுவரை உறங்குவது போல விழி மூடிக் கொண்டிருந்தவனின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறந்தது. அதைக் கண்ட நீருவின் விழிகள் கலங்கி போனது.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN (2) - 8

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 6 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Page 1 / 2

You cannot copy content of this page