All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

கையில் மிதக்கும் கன...
 
Notifications
Clear all

கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread

Page 3 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 10 months ago
Posts: 329
Topic starter  
கனவு – 17
 
 
மறுநாள் காலை நேத்ராவுக்கு முன்பே தயாராகிக் காத்திருந்த சஞ்சய், நேற்று முழுவதும் அலைந்து திரிந்து சேகரித்த தகவல்களோடு அவன் கண்டுப்பிடித்த தகவல்களையும் சேர்த்து மனதிற்குள் ஒன்றோடு ஒன்றை இணைத்து இந்த வழக்குச் செல்லும் பாதையைச் சரி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
 
 
சரியான நேரத்திற்குத் தயாராகி வந்தவளை அழைத்துக் கொண்டு கிளம்பியவனிடம் ஆழ்ந்த அமைதியே நிலைத்து இருந்தது. நேத்ராவும் அதிகம் அவனிடம் பேசி பழக்கமில்லாதவள் என்பதோடு நேற்றைய சம்பவமும் அவளைக் குழப்பத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தியிருக்கவே, சஞ்சயின் இந்த அமைதி அவளுக்கு ஆறுதலாகவே இருந்தது.
 
 
அவரவர் நினைவுகளில் மூழ்கி இருவரும் பயணம் செய்ய... பள்ளியை நெருங்க நெருங்க நீருவின் மனதில் பள்ளியை பற்றி சஞ்சய் சொன்னதும் தன்னை எச்சரித்ததும் நினைவு வந்து அதை அன்று தன்னைக் கட்டுக்குள் வைக்கச் சொன்னதாக எண்ணியது எத்தனை பெரிய தவறு என்று புரிந்து மனம் வருந்த தொடங்கியது.
 
 
அதே நேரம் நிஜத்தில் பள்ளியில் அப்படி எதுவும் நடக்காமல் இருந்தால் என்ற எண்ணமும் சேர்ந்தே எழுந்து அவளைக் குழப்பியது. ஒருவேளை அந்தப் பையனின் பெற்றோர் பிள்ளையை இழந்த துக்கத்தில் பேசியதை தான் தவறாகப் புரிந்துக் கொள்கிறோமோ என்றும் தோன்றியது.
 
 
இது இப்போது வந்த குழப்பம் இல்லை... நேற்று முதலே இந்த எண்ணம் அவளை இப்படியும் அப்படியுமாக யோசிக்கச் செய்து அலைக்கழித்துக் கொண்டு தான் இருக்கிறது...! நேற்று நடந்த சம்பவத்தைத் தவிர அந்தப் பள்ளியில் தவறாக எதுவும் நடந்தது போல இத்தனை மாதங்களில் அவள் எதையும் கேள்விப்பட்டதோ பார்த்ததோ இல்லை எனும் போது இப்படி ஏதோ துக்கத்திலும் கோபத்திலும் பேசிய வார்த்தைகளை வைத்துக் கொண்டு அதை உண்மை என்று எண்ணி சந்தேகிக்கிறோமோ என்றும் தோன்றியது.
 
 
‘காரணம் அந்தப் பையனின் தந்தை சொன்னது போலவோ இல்லை சஞ்சய் கூறியது போலவோ அங்கு எந்த டார்கெட்டும் இருப்பது போல் அவளுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவளுமே பத்தாம் வகுப்பு ஆசிரியை தான்... அவளுக்கு இது போல எதையும் யாருமே விதிக்கவில்லையே...!!’ என்றும் யோசித்தவள் நேற்று முதலே இப்படித்தான் மாற்றி மாற்றிச் சிந்தித்துக் கொண்டு இருக்கிறாள்.
 
 
ஆனால் அவளுக்கு இதில் தெரியாதது என்னவென்றால் இது போன்ற டார்கெட் எல்லாம் சீனியர் ஆசிரியர்களுக்கு நேரிடையாகவும் மற்றவர்களுக்கு அந்தச் சீனியர்களின் மூலம் மறைமுகமாகவும் கொடுக்கப்படுவது.
 
 
அதே போல இப்படிப்பட்ட சம்பங்கள் நிஜமாகவே நடந்திருந்தால் மற்ற ஆசிரியர்கள் அதைப் பற்றிப் பேசாமலா இருந்து இருப்பார்கள் என்றும் யோசித்தவளுக்கு அப்படி அவர்கள் பேசாததற்கு ஒவ்வொரு தளத்திலும் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவும் அவர்கள் இட்டிருந்த ஒப்பந்த கையெழுத்துமே காரணம் என்று பாவம் அவளுக்குத் தெரியவில்லை.
 
 
இப்படியே யோசித்துக் குழம்புவதை விட எதற்கும் இதைப் பற்றிச் சஞ்சய்யிடம் பேசுவோமா என்று அவள் யோசித்து முடிவு செய்யும் சமயம் அதற்குள் பள்ளி வந்துவிட்டிருந்தது.
 
 
வண்டியை சஞ்சய் நிறுத்தவும் இறங்கிய நீரு யோசனையோடு இரண்டடி எடுத்து வைப்பதற்குள் சஞ்சய் வேகமாகக் கிளம்பி சென்றிருந்தான். ‘அவனிடம் நின்று பேசுவோமா...?! வேண்டாமா...?!’ என ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவன் சென்றிருக்க... செல்பவனையே திரும்பி கண்களில் ஏக்கமும் முகத்தில் குழப்பமுமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் நீரு.
 
 
இன்று இப்போது பேச தவறியதை எண்ணி இன்னும் சற்று நேரத்தில் வருந்த போகிறோம் என்று பாவம் அவளுக்கு அப்போது தெரியவில்லை. மெல்ல யோசனையான மனநிலையுடனே உள்ளே நுழைந்தவளுக்கு நேற்று இதே இடத்தில் கண்ட காட்சி மன கண்ணில் தோன்றி அவளை இம்சித்தது.
 
 
தன்னைச் சார்ந்தவர்களின் இழப்பு என்பது எப்படிப்பட்டது என்று அவளுக்குத் தான் அனுபவ பூர்வமாகத் தெரியுமே...! இதே மனநிலையோடே இரண்டு வகுப்புகளை மிகுந்த சிரமப்பட்டுக் கடத்தியவள், பிள்ளைகளின் தேர்வு நேரத்தில் இப்படிக் கவனத்தைச் சிதறவிடுவது சரியில்லை என்று தோன்ற முகம் கழுவி வர எண்ணி வெளியில் வந்தாள்.
 
 
முகத்தில் குளிர்ந்த நீரை அடித்துச் சற்றுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், தாளாளரின் அலுவலக அறைக்கு அருகில் இருந்த சற்று ஒதுக்கமான இடத்தில் ஒரு மாணவி தலை குனிந்து நின்றிருப்பதைக் கண்டு ‘வகுப்பு நேரத்தில் இங்கு என்ன செய்கிறாள்...?!’ என்ற யோசனையோடு பார்க்கும் போதே அந்தப் பெண் அழுதுக் கொண்டு நிற்பது நீருவுக்குத் தெரிந்தது.
 
 
பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்குத் தளாளரிடம் எந்த வேலையும் இருக்க வாய்ப்பில்லை... ஆசிரியர்களுக்கே அவரிடம் எந்த வேலையும் கிடையாது... இவர்கள் தேவைகள் அனைத்தையும் கவனிப்பது தலைமை ஆசிரியர் தான்... அவரோடு இவர்கள் எல்லை முடிவடைந்து விடும்.
 
 
தினமும் வரதராஜன் பள்ளிக்கு வந்தாலும் அவரின் பேச்சு வார்த்தைகள் எல்லாம் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மற்றும் நிர்வாகக் குழுவோடு தான். ‘அப்படி இருக்கையில் மாணவிக்கு அவரிடம் என்ன வேலை இருக்க முடியும் ஏன் இங்குக் காத்திருக்கிறாள்..? ஒருவேளை ஏதேனும் உடல்நல கோளாறா...?! இல்லை வேறு ஏதேனும் ப்ரச்சனையா...?!’ என்று என்னும் போதே அதற்குக் கூட அவள் இங்கு வர வேண்டிய அவசியம் இல்லையே என்றே தோன்றியது.
 
 
சரியாக அதே நேரம் தாளாளரின் அறையில் இருந்து வெளியில் வந்த உதவி தலைமை ஆசிரியர் கோகிலா அந்த மாணவியை உள்ளே அழைத்துச் செல்வது தெரிந்தது. அவரும் அங்கு இருக்கிறார் என்றால் என்ன ப்ரச்சனையாக இருக்கக் கூடும் என்ற இப்போது புதிதாக முளைவிட்டிருந்த சந்தேகப் பார்வையோடும் தன் எண்ணம் தவறாக இருக்குமோ என்று அறிந்துக் கொள்ளும் யோசனையோடும் மற்ற அலுவலகங்களில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாகக் கட்டப்பட்டிருந்த அறையை நோக்கி சென்றாள் நீரு.
 
 
நீரு அந்த அறையை நெருங்கும் போது அந்த மாணவியின் அழுகை சத்தம் மட்டுமே அங்கிருந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது. நீருவின் நல்ல நேரமோ இல்லை கேட்ட நேரமோ அந்த மாணவி பயத்திலும் பதட்டத்திலும் உள்ளே நுழையும் போது கை தவறி கீழே போட்டிருந்த பேனாவின் உபயத்தால் கதவு சரியாக மூடப்படாமல் அந்தப் பேனா தடுத்திருக்க... அந்த இடைவெளியில் உள்ளே பேசுவது வெளியே தெளிவாகக் கேட்டது.
 
 
“சா... ர்.. சா... ரி சா... ர்...” என அழுகைக்கு இடையே திக்கி திணறி பேச, “எதுக்கு...?” என அதற்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத குரலில் வரதராஜன் பதிலளித்தார்.
 
 
“இல்... ல சா... ர்... தெரி... யாம செஞ்... சிட்... டேன்... இனி... இப்... படி செ... ய்ய மாட்... டேன்... இந்த... ஒரு... முறை... மன்னிச்... சிடுங்க... சார்...” என மீண்டும் அழுகையோடான மன்றாடும் குரலில் கேட்டாள் மாணவி சரண்யா.
 
 
“அப்படி என்ன செஞ்ச...?”
 
 
“.....”
 
 
“ம்ம்ம்... சொல்லு...”
 
 
“கா... பி... கா... பி... அடிச்... சேன்... இனி... செ... ய்ய மாட்... டேன் சா... ர்...”
 
 
“இனி இல்லை... இப்போ நடந்ததைப் பத்தி பேசு...”
 
 
“சா... ரி... சா...”
 
 
‘சாரி... சொன்னா எல்லாம் முடிஞ்சிடுமா...?! நீ செஞ்சது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா...?”
 
 
“த... ப்பு... த... ப்பு... தான்... சார்...”
 
 
“அப்போ இத்தனை நாள் இப்படித் தான் மார்க் எடுத்தீயா...?!” என்று கோபமாக இடையிட்டது கோகிலாவின் குரல்.
 
 
“இல்... ல மே... ம்...”
 
 
“பேசாதே... உன்னை நல்லா படிக்கற பொண்ணுன்னு நினைச்சேன்... இப்போ இல்லை தெரியுது...”
 
 
“மே... ம்... நீங்க... தானே...!”
 
 
“வாயை மூடு... செய்யற தப்பெல்லாம் செஞ்சிட்டு மேம் நோம்னு..” என்று கோகிலா அதட்டவும்,
“நீ செஞ்சது தப்புன்னு உனக்குத் தெரியாதா...?”
 
 
தெரி... யும்... சா... ர்...”
 
 
“அப்போ ஏன் இப்படிச் செஞ்ச..? அதுவும் ஒரு மாதத்தில் பரீட்சையை வெச்சுகிட்டு என்ன வேலை இதெல்லாம்...?!” என்று வரதராஜன் குரலை உயர்த்தவும்... பயத்தில் பதறியவள்,
 
 
“சார்... நேத்து அம்மாக்குக் கொஞ்சம் உடம்பு முடியலை... நைட் எல்லாம் ஆஸ்பிட்டலில் இருந்தோம், அந்தப் பதட்டத்துல படிச்சதெல்லாம் மறந்து போச்சு...”
 
 
“அதுக்காகக் காபி அடிக்கணுமா...?! தெரிஞ்ச வரை எழுதி இருக்கலாமே...”
 
 
“இல்ல... சார்... மேம் தான்...”
 
 
“போதும் வாயை மூடு... செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாதது போல ஆக்டிங்...” என்று இடையில் புகுந்து கோகிலா திட்ட துவங்கினார்.
 
 
அதில் அழுகையோடு தன் மேல் உள்ள தவறை எடுத்து கூறி மன்னிப்பு கேட்க முயன்றவளுக்குப் பயத்தில் இன்னும் அழுகை அதிகரித்தது.
 
 
“இப்போ என்ன செய்யலாம் நீயே சொல்லு...?”
 
 
“சார்... தெரியாம...”
 
 
“தெரிஞ்சு செஞ்சாலும் சரி... தெரியாம செஞ்சாலும் சரி... தப்புத் தப்பு தான், அதுக்கான தண்டனையை அனுபவித்துத் தான் ஆகணும்...”
 
 
“சார்... ப்ளீஸ் சார்..”
 
 
“சாரி சொல்லியோ ப்ளீஸ் சொல்லியோ எந்தப் பிரோயஜனமும் இல்லை... இன்னும் ஒரு மாதத்தில் பப்ளிக் எக்ஸாமை வெச்சுகிட்டு இப்படிச் செய்யற நீ பரீட்சையிலும் இப்படிச் செய்ய மாட்டேன்னு என்ன நிச்சயம்... அப்போ வர பிளையிங் ஸ்குவார்ட்கிட்ட நீ மாட்டினா உன் கேரியர் ஸ்பாயில் ஆகும்... ஐந்து வருஷத்துக்கு நீ எக்ஸாம் எழுதவே முடியாது...”
 
 
“அச்சோ... சார்... சார்... ப்ளீஸ் சார்...”
 
 
“உன் கேரியர் மட்டும் இல்லை... இதில் இந்த ஸ்கூலோட பெயரும் மரியாதையும் கூட இருக்கு, அதுக்கு ஒரு பிரச்சனை வர நான் எப்போவும் விடமாட்டேன்...”
 
 
“சா... சார்...”
 
 
“உனக்கு டிசி கொடுத்து அனுப்பினா தான் சரி வரும்... அப்போ தான் மற்றவங்களுக்கும் பயம் வரும்... உன் பேரன்ட்ஸ் நம்பர் கொடு....”
 
 
“சார்... சார்... வேணா சார், ப்ளீஸ் சார்... எங்க அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டுக் கடன் வாங்கி என்னைப் படிக்க வைக்கறார் சார்... அவங்க கனவே என்னை எப்படியாவது நல்ல நிலைமைக்குக் கொண்டு வரணும்னு தான் சார்... ப்ளீஸ் சார்... என் வாழ்க்கையே பாழாகிடும் சார்..”
 
 
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்... இதெல்லாம் தப்பு செய்யறதுக்கு முன்னே யோசிச்சு இருக்கணும்...” என்று அத்தனை அசால்ட்டாகப் பேசியவரை எப்படிப் பேசி சம்மதிக்க வைப்பது என்று புரியாமல் தவித்தாள் சரண்யா.
 
 
“உன்னைப் பார்த்தாலும் பாவமா தான் இருக்கு...” என்று யோசிப்பது போலப் பேசியவரை, கண்களில் ஒரு நம்பிக்கையையும் எதிர்ப்பார்ப்பையும் தேக்கி கெஞ்சலோடு சரண்யா பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
“இதுவரை உன் மேலே எந்தக் கம்ப்ளைன்ட்டும் வந்ததில்லை... அதுக்காகக் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா தான் இருக்கு... ஆனா நான் ஏன் உனக்கு உதவணும், அதில் எனக்கு என்ன லாபம்...?”
 
 
“நீங்க... நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன் சார்.. இனி எந்தத் தப்பும் செய்ய மாட்டேன் சார்...” என்று அவசரமாக எப்படியாவது இதில் இருந்து தப்பிக்க நினைத்துக் கை கூப்பளோடு மன்றாடினாள் சரண்யா.
 
 
“ம்ம்ம்.. சரி, நான் உன்னைத் தண்டிக்காம விடணும்னா அப்போ நீ எனக்கு எல்லா வகையிலும் அட்ஜஸ்ட் செய்...” என்றவரின் கண்கள் தன் மேனியில் ஊர்ந்து சொன்ன செய்தியில் அப்பட்டமாக அதிர்ந்து திகைத்து நின்றுவிட்டாள் சரண்யா.
 
 
அவசரமாக மறுக்க எண்ணியவளுக்கு வார்த்தை கூட வெளியே வராமல் போக, வேகமாகத் தலையசைத்து தன் மறுப்பைத் தெரிவித்தவள், அங்கிருந்த கோகிலா ஒரு பெண்ணாகத் தன் உதவிக்கு வர மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்போடு இதில் தன்னைச் சிக்க வைத்ததே அவர் தான் என்பதைக் கூட மறந்து அவரைப் பார்க்க.. இதை நீ செய்து தான் ஆக வேண்டும் என்ற பாவனையில் நின்றிருந்தார் அவர்.
 
 
ஒருவாறாக நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சரண்யா தன் பயத்தையும் உதறலையும் மீறி பேச முயலவும், அதற்கு வாய்ப்பே அளிக்காமல் “இப்போ நீ பேசினது எல்லாம்... அதாவது நீயா உன் வாய் மொழியா கொடுத்த அத்தனை வாக்கு மூலமும் இதில் பதிவாகி இருக்கு...” என்று வரதராஜன் கை நீட்டிய இடத்தில் சமர்த்தாக அதற்குரிய இடத்தில் அமர்ந்து இருந்தது அவரின் அலைபேசி.
 
 
அதிர்வோடு விழிவிரிய சரண்யா அதைப் பார்த்துக் கொண்டிருக்க... “நாளைக்கு நாங்க சும்மா பழி சுமத்தறோம்னு நீ மாத்தி பேசிட கூடாது இல்லை... இதில் நீ பேசினதை மட்டும் கட் செஞ்சு அதையே சாட்சியா வெச்சு உன்னை இந்த ஸ்கூலை விட்டே இந்த நிமிஷம் என்னால் தூக்க முடியும்...” என்று இதுவரை பேசியது போல் இல்லாமல் கடினமான குரலில் மிரட்டியவரை பார்த்தவளுக்கு, அப்போதே உள்ளே வந்த பிறகு நடந்தது என்னவென்றே தெரியாததைப் போல் அனைத்தையும் தன் வாயாலேயே பேச வைத்தது ஏன் எனப் புரிந்தது.
 
 
இவை அனைத்தையும் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த நீருவுக்குத் தன் காதில் விழுந்ததைச் சுத்தமாக நம்பமுடியவில்லை... ஆரம்பத்தில் தவறு செய்த மாணவியைக் கண்டிப்பதாக நினைத்தே அங்கிருந்து செல்ல முயன்றவள், வரதராஜின் பேச்சில் இருந்த முரண்பாட்டைக் கவனித்து அப்படியே நின்றாள்.
 
 
சரண்யா இங்கு வெளியில் நிற்கும் போது கோகிலா உள்ளே போய்ப் பேசிவிட்டு வந்ததைப் பார்த்திருந்தவள் என்பதால் அவருக்கு இவள் எதற்காக இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள் என்றும் நிச்சயம் தெரிந்து இருக்கும், அப்படி இருக்கையில் இவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்றே நின்று கவனிக்கத் தொடங்கினாள்.
 
 
கண்ணாடி கதவின் உபயத்தால் உள்ளே நடப்பவற்றையும் அவளால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவளின் சந்தேகம் சரியே என்பது போல வரதராஜன் உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தவள், தன் இரு கைகளையும் கொண்டு வாயை பொத்தியப்படி அருகில் இருந்த சுவரில் சாய்ந்து மறைந்து நின்றுக் கொண்டள்.
 
 
அவளால் இன்னும் அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து கொஞ்சமும் வெளியே வர முடியவில்லை... தனக்கே இப்படி இருக்கிறது என்றால் அச்சிறுப் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்று நீரு நினைக்கும் போதே உள்ளிருந்து வரதராஜன் அவள் பேசியதை படமெடுத்து இருப்பதாக மிரட்டுவதும், கோகிலா இதற்கு ஒத்துக் கொள்வதைத் தவிர உனக்கு வேறு வழியே இல்லை என்று பேசி சம்மதிக்க வைக்க முயல்வதும் கேட்டது.
 
 
‘இப்போது என்ன செய்வது...?! எப்படி அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவது...?!’ என்று அவசரமாக யோசித்தவளை, “ஏன் வெளியே நின்னு கஷ்டப்படறீங்க நேத்ரா... உள்ளே வாங்க இன்னும் தெளிவா கேக்கலாம்...” என்ற வரதராஜனின் சிறு கேலியோடான குரல் கலைத்தது.
 
 
அதில் விழி விரிய அதிர்ந்தவள், வாயை மூடி இருந்த கரத்தை கொஞ்சமும் விளக்கி கொள்ளாமல் ‘தன் காதில் விழுந்தது நிஜம் தானா...?!’ என்று தெரிந்து கொள்ள மெல்ல தலையைத் திருப்பி எட்டி பார்க்க... தனக்கு இடது பக்கம் இருக்கும் மானிட்டரில் தெரிந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தவாறே பேசிக் கொண்டு இருந்த வரதராஜன் நீரு எட்டிப் பார்க்கவும் அதையும் அதில் பார்த்து விட்டு திரும்பி அவளைப் பார்த்து கேலியான புன்னகையைச் சிந்தினான்.
 
 
சரியாக அதே நேரம் சஞ்சய் தன் அலுவலகத்தில் நேற்று முழுவதும் அலைந்து திரிந்து சேகரித்த தகவல்களை வைத்து மதனின் இறப்பை பற்றியும் அதற்கு முன் நடந்த கொலை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்துக் கொண்டு இருந்தான்.
 
 
அவன் பாணியில் ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்கக் கண்டுபிடிக்க ஓரளவு சஞ்சய் எதிர்பாத்திருந்ததைப் போலவே மிகப் பெரிய பூதம் ஒன்று வெளியில் வந்தது.
 
 
கிட்டத்தட்ட இந்த வழக்குச் செல்லும் பாதை இப்படித் தான் இருக்கும் என்று அவன் முன்பே சரியாக அனுமானித்து இருந்தாலும், சட்டத்திற்கு மட்டுமல்லாமல் அவனுக்குமே தேவை சரியான சாட்சியமும் தெளிவான விடையும்.
 
 
இப்போது அவன் எதிர்ப்பார்த்திருந்த அத்தனையும் சஞ்சயின் கையில் இருந்தது. ஒரு வழியாக மதனின் தற்கொலைக்கு மட்டுமல்லாமல் அவன் மனைவி மற்றும் ரவி இருவரின் கொலைக்கும் காரணமானவனையும் கண்டுப்பிடித்த திருப்தியோடு இருக்கையில் பின்னுக்குச் சாய்ந்து இலகுவாக அமர்ந்தவனின் பார்வை தன் மேசை மேல் இருந்த மதனின் படத்தில் விழுந்ததில் அவன் தன் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டதின் காரணம் நினைவு வந்தது.
 
 
எப்போதும் அதிகாரத்தாலும் பணத்தாலும் அனைவரையும் மிரட்டியே பழக்கப்பட்டிருந்த மதுசூதனன், சஞ்சய் இங்கு வந்த புதிதிலேயே அவனின் குணம் பற்றியும் அதிரடி பற்றியும் தெரிய வரவும்... பெரிய அளவில் அவனுக்குப் பக்கபலமாக இருந்த மோஹித்தும் அப்போது இல்லாமல் போய்விடவே சற்று அடக்கி வாசிப்பது போல நடித்துச் சஞ்சயிடம் நற்பெயர் எடுக்க முயன்று கொண்டிருந்தான்.
 
 
அதற்கு அவன் பயந்து விட்டான் என்றெல்லாம் அர்த்தமில்லை, இப்போதைக்கு எதிலும் சிக்கிக் கொள்ள அவன் தயாராக இல்லை... அதைச் சஞ்சையுமே உணர்ந்து தான் இருந்தான். அவனைப் பற்றித் தெரிய வந்த நொடியில் இருந்தே மொத்த விவரங்களையும் சேகரித்து அறிந்து இருந்தவன் இந்த அமைதியையும் அப்படியே நம்பிவிடாமல் அவன் மேல் ஒரு கண் பதித்தே இருந்தான்.
 
 
சரியாக மதன் வெளியில் வந்த ஐந்தாம் நாள், பல தவறுகளுக்குத் துணை போவதாக அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்த இன்ஸ்பெக்டர் மதுசூதனனுக்குச் சஞ்சய் ஒரு ஸ்கெட்ச் போட்டிருந்தான்.
அதன்படி அன்று ஞாயிறு மாலை வீட்டில் தானுண்டு தன் மது உண்டு என்று சந்தோஷமாகக் குடியமர்ந்து இருந்த மதுசூதனனை அழைத்தான் சஞ்சய். அவசரமாகக் கிளம்பி வர சொல்லி பணித்தவன், அவனது எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பிடித்ததாகக் கூறி ஒரு வேனையும் இரண்டு ஆட்களையும் மதுசூதனனிடம் ஒப்படைத்தான்... புத்தம் புது அச்சடிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத்திருந்த பணக் கட்டுகளை இவர்கள் கடத்தி செல்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கைது செய்திருப்பதாகத் தெரிவித்தான்.
 
 
இன்று இவர்களை நீதிமன்றத்திலோ நீதிபதி முன்போ ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்க முடியாமல் போனதாகவும் இன்னும் ஒரு பத்து மணி நேரம் இவை அனைத்தையும் பத்திரமாகப் பார்த்து கொள்ளுமாறும் கூறியவன், “இதில் எத்தனை கோடி இருக்குன்னு கூட இவனுங்களுக்குத் தெரியலை... யார் கொடுத்து அனுப்பியது...? யாருக்கு போகுதுன்னும் தெரியலை...! ரொம்பக் கவனமா பார்த்துக்கோங்க... நாளைக்கு இவங்களைக் கஸ்டடியில் எடுத்து கவனிக்கும் முறையில் கவனித்தால் எல்லாம் வெளியே வந்துடும்... நானுமே இங்கேயே இருக்கத் தான் நினைக்கறேன், ஆனா அந்த ***** கேஸ் முடியற நிலையில் இருக்கு... இப்போ கேப் விட்டா சாட்சியைக் கலைக்கவோ வேற ஏதாவது செய்யவோ வாய்ப்பு இருக்கு... நாங்க அங்கே இருந்தாகணும்... வேற வழியில்லை, நீங்க தான் கொஞ்சம் கவனம் எடுத்து பார்த்துக்கணும்...” என்றான்.
 
 
சஞ்சயிடம் நல்ல பெயர் வாங்கவும், இத்தனை பெரிய வழக்கில் முக்கியப் பங்கு எடுத்தோம் என்ற பெயர் வாங்கவும் ஆசைப்பட்ட மதுசூதனன் சந்தோஷமாகச் சம்மதித்து “நீங்க கவலையே படாதீங்க சார்... நான் பார்த்துக்கறேன், நீங்க உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க...” என்றார் கெத்தாக மீசையைத் தடவியவாறே.
 
 
தான் விரித்த வலையில் வசமாக வந்து சிக்கிக் கொண்டவனைக் கண்டு உள்ளுக்குள் சிரித்த சஞ்சய், ஆயிரம் முறை பணமும் அவர்களும் பத்திரம் என்று கூறிவிட்டே கிளம்பி சென்றான்.
 
 
ஞாயிறு மாலை என்பதால் இரண்டு கான்ஸ்டேபிள்களும் ஒரு ஏட்டும் மட்டுமே இருந்தனர். அதிலும் கான்ஸ்டேபிள்கள் இருவரும் லோக்கல் ரவுண்ட்ஸ் சென்றிருக்க... ஏட்டு மட்டுமே அந்தச் சமயம் அங்கிருந்தார்.
 
 
மறுநாள் காலை வெகு சீக்கிரமே மீடியாவோடு வந்த சஞ்சய், மதுசூதனனின் வேலையைப் பாராட்டிக் கொண்டே சென்று வேனை திறக்க... அதுவோ காலியாக இருத்தது.
 
 
“பணம் எங்கே மத்சூதணன்...? உள்ளே எங்காவது எடுத்து வெச்சு இருக்கீங்களா...?!” என்ற சஞ்சயின் கேள்விக்கு,
 
 
“நோ... நோ சார்... இங்கே தான்...” என்றவருக்கு வேன் காலியாக இருப்பதை கண்டு அடுத்த வார்த்தை வராமல் தந்தி அடித்தது.
 
 
“அப்போ எங்கே...? அவனுங்களாவது இருக்காங்களா...?! இல்லை அதுவும் இல்லையா...?!”
 
 
“இருக்காங்க சார்...” என்று அவசரமாகச் சொன்னவன், வேகமாகச் சென்று அவர்களை அழைத்து வந்தான்... ஆனால் அவன் அழைத்து வந்த ஆட்களைப் பார்த்த சஞ்சய், “மதுசூதனன் யார் இவங்க...?! நான் நேத்து பிடிச்சு கொடுத்தவங்க எங்கே...?!” என்றான்.
 
 
“சார்... இவங்க... இவங்க... தான் அவங்க...” என்று திகைப்போடு அலறினான் மதுசூதனன்.
 
 
“விளையாடாதீங்க மதுசூதனன்... உங்களைப் பற்றி நல்லா தெரிஞ்சும் இந்தப் பொறுப்பை நான் உங்ககிட்ட கொடுத்து இருக்கக் கூடாது...” என்று கோபப்படும் போது அதை இல்லை என்று மறுக்கவோ வாதாடவோ முடியாத அளவுக்கு மதுசூதனனின் குணம் அங்கு ஏக பிரசித்தம்.
 
 
“பணத்தோட அவங்களைத் தப்பிக்க விட்டுட்டீங்களா...? இல்லை பணத்தில் நீங்க விளையாடிட்டீங்களா...?”
 
 
“சார்... இவங்க தான் சார் நீங்க நேற்று பிடிச்சு கொடுத்தவங்க... நான் எதுவும் செய்யலை சார்...” என இத்தனை மீடியா முன்பு சிக்கலில் மாட்டிக் கொண்டு முழித்தவாறே மதுசூதனன் வாதாட...
 
 
“ஓ... அப்போ இவங்க யாரு...?” என்று சஞ்சய் தன் அலைபேசியில் நேற்று வேனை பிடித்த போது எடுத்து இருந்த புகைப்படத்தைக் காண்பிக்க... அதில் இந்த வேன் முன்பு தடி தடியான் இருவர் கைகளைக் கட்டிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றிருந்தனர். அதைப் பார்த்த பிறகு இதுவரை அங்கிருந்தவர்கள் சந்தேகமாகப் பார்த்ததெல்லாம் போய் மதுசூதனனே குற்றவாளி என்று ஊர்ஜிதமாக நம்பினர்.
 
 
மதுசூதனனுக்கு எதுவுமே புரியவில்லை... குழப்பமும் சந்தேகமுமாகச் சஞ்சய்யை பார்த்து ஏதோ கேட்க வர, அதற்குள் “பணம் எங்கே மதுசூதனன்...?” என்று சஞ்சய் கேட்டிருந்தான்.
 
 
“சார்... நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது...”
 
 
“சாவி உங்ககிட்ட தான் இருந்தது...”
 
 
“ஆமா சார்... ஆனா வண்டி பக்கத்திலேயே நான் போகலை...” என்று அவன் பதட்டத்தோடு புரிய வைக்க முயல, அதே நேரம் சஞ்சயின் எண்ணுக்கு ஒரு காணொளி வந்து சேர்ந்தது.
 
 
அதைப் பிரித்துப் பார்த்தவன் மதுசூதனனை முறைத்துக் கொண்டு “அப்போ இதுக்கு என்ன அர்த்தம்...?!” எனக் கேட்டிருந்தான்.
 
 
அதைக் கண்டவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியே...!! நடு இரவில் அக்கம் பக்கம் பார்த்தவாறே பதுங்கி பதுங்கி வேனை திறந்து அதில் இருந்து சில கட்டுகளை எடுத்து மதுசூதனன் தன் பேண்ட் பாக்கெட்டில் வைப்பது தெள்ள தெளிவாக அந்த இருளிலும் படமாகி இருந்தது.
 
 
அதன் பின் சஞ்சயின் கண் அசைவில் இரு காவலர்கள் உள்ளே சென்று சோதனையிட்டதில் பணக்கட்டுகள் மதுசூதனனின் மேசை இழுப்பறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது... இதற்கு மேல் அவன் சூடம் ஏற்றி சத்தியம் செய்தாலும் அதை நம்ப அங்கு யாரும் தயாராக இல்லை... அப்போதே மதுசூதனன் பணம் கையாடல்... பணத்தோடு சேர்த்து குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டது போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான்.
 
 
அடுத்த நாளே அவமானம் தாங்காமல் சிறையில் மதுசூதனன் தூக்கிட்டுக் கொண்டதாகச் செய்தி வந்ததைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை...!
 
 
இப்போது மதனின் வழக்கை ஆராய்ந்தவனுக்கு ஒரு விஷயம் தெளிவாகியது... இதெல்லாம் செய்யும் போது மதன் சஞ்சய்யை பின் தொடர்ந்து இருக்கிறான்... அதனாலேயே தன் வழக்கை பற்றி எடுத்து சொல்லி புரிய வைத்து நம்ப வைப்பதை விடச் சஞ்சய்யையே வழக்குக்குள் இழுத்து விட்டால் நிச்சயம் அத்தோடு அதை விடாமல் தீவிர விசாரணையில் இறங்கி உண்மையை வெளிக் கொண்டு வருவான் என்று திட்டமிட்டே அவன் வீட்டில் வந்து தற்கொலை செய்துக் கொண்டு இருக்கிறான்.
 
 
“ஸ்மார்ட் மூவ்...” என்று தன்னையும் அறியாமல் மதனை வாய்விட்டு பாரட்டியவன், ஆனந்தோடு சேர்ந்து வெளியே வழக்கு சம்பந்தமான விசாரணைக்காகக் கிளம்பினான்.
 
 
இங்கு அதே நேரம் நீரு திகைத்து விழித்து உள்ளே செல்ல முயலாமல் நிற்கும் போதே, வரதராஜன் நீருவிடம் பேசும் போதே மேசைக்குக் கீழ் இருந்த ஒரு ரகசிய அழைப்பு மணியை அழுத்தி இருக்க... வரதராஜனின் இருக்கைக்குப் பின்னால் இருந்த புத்தக அலமாரி திறந்து கொண்டு அதில் இருந்து உயரத்திலும் அகலத்திலும் வகைத் தொகை இல்லாமல் வளர்ந்து இருந்த இருவர் வெளிப்பட்டு நீருவை நோக்கி வந்தனர்.
 
 
அவர்களை நீரு பயத்தோடு மருண்டு பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவளின் முகத்தில் எதையோ தெளித்ததில் உடனடியாக மயங்கி சரிந்தவளை ஒருவன் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு செல்ல... அதே போலச் சரண்யாவை மற்றொருவன் தூக்கி கொண்டு மீண்டும் அலமாரிக்குப் பின் மறைந்தனர்.
 
 
மீண்டும் புத்தக அலமாரியாக மாறி காட்சி அளித்த அறையாக வரதராஜனின் அறை இயல்புக்கு திரும்பி இருந்தது. இங்கே இப்படி ஒரு சம்பவம் நடைப்பெற்றதை போலக் கூடக் காண்பித்துக் கொள்ளாமல் வெகுசகஜமாக வரதராஜனும் கோகிலாவும் உரையாடிக் கொண்டு இருந்தனர்.
 
 
எவ்வளவு நேரத்திற்குப் பிறகு நீருவுக்கு நினைவு திரும்பியதோ தெரியவில்லை..?! அந்த இருள் சூழ்ந்த இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டுச் சுருண்டு கிடந்த நேத்ரா தன் அருகில் அதே நிலையில் கிடந்த பெண்ணைக் கண்ட நொடி சஞ்சையை நினைவு கூர்ந்தாள்.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 10 months ago
Posts: 329
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 17

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 4 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 10 months ago
Posts: 329
Topic starter  
கனவு – 18
 
 
நேத்ரா இருள் சூழ்ந்த அந்த அறைக்குத் தூக்கி செல்லப்பட்ட அடுத்த அரைமணி நேரத்தில் வரதராஜனின் முன் அமர்ந்திருந்தான் சஞ்சய்.
 
 
திடீரென வந்து தன்னைப் பார்க்க வேண்டும் என்றவனுக்கு யோசனையோடே அனுமதி அளித்திருந்த வரதராஜன், ஒரு புன்னகையோடு தன்னையே பார்த்தவாறே அமர்ந்திருப்பவனைக் கண்டு தானே மெல்ல பேச்சை துவங்கினார்.
 
 
“சொல்லுங்க ஆபிசர்.. என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க...?”
 
 
“சும்மா தான்...” என வெகு சாதாரணக் குரலில் பதிலளித்த சஞ்சய்யை கண்டு புன்னகைத்தவர்,
 
 
“ஹா ஹா... சும்மா வர அளவு நீங்களும் சரி நானும் சரி வெட்டி இல்லையே...”
 
 
“ம்ம்ம்... கரெக்ட் தான், உங்களைப் பத்தி எனக்குத் தெரியாது, ஆனா நான் ரொம்பபபபப பிஸி...” என்றவன், ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு “ஒரு கேஸ் விஷயமா உங்ககிட்ட சில தகவல் தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்...” என்றான்.
 
 
“எது அந்த மதன் கேஸ் சம்பந்தமாவா...?!” எனத் தன் கண்ணாடியை கழற்றி துடைத்தவாறு இதை நான் எதிர்ப்பார்த்தேன் என்பது போன்ற சாதாரணக் குரலில் கூறினான் வரதராஜன்.
 
 
“மதன்ன்னன்... மதன்... கேஸ்ல நீங்க எங்க வரீங்க வரதராஜன்...?!”
 
 
“என்ன ஆபிசர், மதன் வொய்ப்பும் அவ கூடத் தொடர்பு வெச்சு இருந்தவனும் இங்கே நம்ம ஸ்கூல்ல தானே வேலை செஞ்சாங்க... கருமம் அதுங்க அடிச்ச கூத்துல நம்ம ஸ்கூல் பேர் தேவை இல்லாம அடிப்பட்டது...”
 
 
“ஆனா... அந்தக் கேஸ் தான் அப்போவே முடிஞ்சு தண்டனையும் கொடுத்தாச்சு இல்ல வரதராஜன்...”
“இப்போ தான் அவன் வெளியே வந்து உங்க வீட்டு வாசல்ல செத்து தொலைச்சு இருக்கானே...” என்ற வரதராஜனை வியப்பாக நிமிர்ந்து பார்த்தவன்,
 
 
“அவன் செத்தது வரை தெரிஞ்சு வெச்சு இருக்கீங்களே...?!” என்று ஆச்சர்யப்பட...
 
 
“அதான் எல்லா நியூஸ் பேப்பரிலும் முதல் பக்கத்திலேயே போட்டாங்களே... காவல் அதிகாரி வீட்டு வாசலில் பரோலில் வெளியே வந்த கைதி தற்கொலைன்னு...” என்று சற்றும் சலிக்காமல் பதில் அளித்தார் வரதராஜன்.
 
 
“ம்ம்... ஆனா நான் அது விஷயமா வரலை வரதராஜன்... அந்தக் கேஸ் முடிஞ்சிடுச்சு... இது வேற...”
 
 
“முடிஞ்சிடுச்சாஆஆஆ... எப்படி...?”
 
 
“அது கான்பிடன்ஷியல்...! இப்போ நாம நம்ம வேலையைப் பார்ப்போமா...?”
 
 
“ம்ம்ம்... உங்க வொய்ப் ஏன் இன்னைக்கு ஸ்கூல்க்கு வரலை ஆபிசர்...?!”
 
 
“என்னது வரலையா...?!” என்று ஆச்சர்யமாகக் கேட்டவாறு நெற்றி சுருங்க யோசனையில் ஆழ்ந்தவனுக்கு,
 
 
“ஆமா... வரலை...” என்று திட்டவட்டமாகப் பதிலைத்தார் வரதராஜன்.
 
 
“உங்க ஸ்கூல் ஏன் இவ்வளவு பெஸ்ட்டா இருக்குன்னு இப்போ தான் புரியுது வரதாராஜன்... ஒவ்வொரு வொர்க்கர் மேலேயும் இவ்வளவு கவனம் எடுக்கறீங்களே... எல்லாரையும் உங்க கண் பார்வையில் வெச்சுக்கறீங்க...” என்றான் மெச்சுதலான குரலில்.
 
 
“ஹீ.. ஹீ... அது வந்து... இப்போ தான் ஹெட் மாஸ்டர் இதைப் பத்தி பேசிட்டு போனாரு... அதான்... நேத்தும் பாதியில் போய்ட்டாங்களாம், ஒருவேளை உடம்பு சரியில்லையோன்னு தான் கேட்டேன்...” என்று சமாளிப்பாகப் பேசினார்.
 
 
“மே பி... நேத்தும் உடம்பு சரியில்லைன்னு சொன்னா, அதான் நான் இறக்கி விட்டு போன பிறகு திரும்பி போயிட்டா போல...” என அதை ரொம்பவே சாதாரணமாக எடுத்துக் கொண்டான் சஞ்சய்.
 
 
“ஓ... அப்படியும் இருக்கும், சொல்லுங்க ஆபிசர்... என்ன விஷயமா வந்தீங்க... அந்தப் பையன் மனோ தற்கொலை சம்பந்தமாவா...?” என கேட்டவரை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சஞ்சய். இவன் அமைதியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை பதட்டப்படுத்தி பேச வைத்துக் கொண்டிருந்தான்.
 
 
“நோ... அவன் எந்த லெட்டரும் எழுதி வைக்கலை, பெற்றவங்க ஏதோ ஆற்றாமையில் புலம்பினாலும் அது தற்கொலை தான்... அவங்க வீட்டுகுள்ளே வந்து யார் என்ன செய்திருக்க முடியும்... சொல்லுங்க...”
 
 
“ஹீ ஹீ... ஆமா...”
 
 
“நான் வந்தது ஷாலினி கேஸ் விஷயமா...” என்று சஞ்சய் சொன்னது தான் தாமதம். அதுவரை இருந்த ஒரு இலகுத்தன்மை வரதாராஜனிடம் காணாமல் போயிருக்க...
 
 
“ஷா.. ஷாலினியா...?! எந்த ஷா... ஷாலினி...” எனக் கேட்டிருந்தார் ஒரு திணறலோடு.
 
 
“உங்க ஸ்கூல் ஸ்டுடண்ட் தான் வரதராஜன்... மிஸ்ஸிங் கேஸ்...” என்றவனின் பார்வை கூர்மையாக வரதராஜின் முகத்தைத் துளைத்தது.
 
 
இவ்வளவு நேரமும் சஞ்சய் இதற்காகத் தான் வந்திருக்கக் கூடும் என்று இப்போது நடந்து முடிந்து இருக்கும் விஷயங்களை நினைத்து அதே  எண்ணத்தோடு மிக இலகுவாகத் தயார் நிலையில் இருந்த பதிலோடு எதிர் கொண்டவருக்கு சஞ்சய் இந்தக் கேஸ் சம்பந்தமாக வந்திருப்பான் என்பது அவர் கொஞ்சமும் எதிர்ப்பாராதது.
 
 
அதனாலேயே சட்டெனச் சமாளிக்க முடியாத திணறலோடு பேசியவர், சில நொடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “ஓ.. அந்தப் பொண்ணா...?! இப்போ ஞாபகம் வந்துடுச்சு... இன்னுமா அவ கிடைக்கலை, ஆனா அவ அன்னைக்கு ஸ்கூலுக்கே வரலையே... எங்கே போனாளோ, என்ன ஆனாளோ... இப்போ தான் எட்டாவது படிக்கறதுல இருந்து எல்லாம் லவ் செஞ்சிட்டு திரியுதுங்களே...”
“அவங்க அப்பா தான் தினப்படி வழக்கமா கொண்டு வந்து வாசலில் விட்டுட்டு போய் இருக்காரு.. அப்பறம் அவ என்ன ஆகி இருப்பா...?!” எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கொள்வதைப் போலத் தாடையைத் தேய்த்தவாறு யோசித்தான் சஞ்சய்.
 
 
“ஆனா அவ ஸ்கூல் உள்ளேயே அன்னைக்கு வரலை... மெயின் கேட்ல இருக்க சிசிடிவி கேமரா முதல் டெய்லி அட்டடென்ஸ் வரை எல்லாத்தையும் அப்போ கேஸ் டீல் செஞ்ச போலீஸ்க்கு கொடுத்தோம்.. அவங்களும் நல்லா பார்த்துட்டு அந்தப் பொண்ணைப் பத்தி எந்த ஒரு தடயமும் கிடைக்கலைன்னு சொல்லிட்டாங்க...” என நிஜ வருத்தம் தொனிக்கும் குரலில் கூறினார்.
 
 
“ஓ... அப்போ இப்போ செக் செஞ்சா என் வொய்ப் பத்தியும் இதே போல எந்த ஒரு தகவலும் தடயமும் கிடைக்காது இல்லை வரதராஜன்...?!” என்றவனின் குரலில் இருந்த பாவம் என்ன என்பதைக் கணிக்க முடியாத வகையில் இருந்தது அவன் குரல்.
 
 
“என்... ன.. என்... ன... ஆபிசர்...?” என்று வெகுவாகத் திணறி போன குரலில் கேட்டவரை, கண்டு புன்னகைத்தவன்,
 
 
“இல்லை என்னைப் போலத் தானே அவங்க அப்பாவும் வாசலில் இறக்கி விட்டுட்டு போனாரு.. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணும் என் வொய்ப் போலவே உள்ளே வரலை தானே அதைச் சொன்னேன்..” என்றான்.
 
 
“ஆங்... ஆமா.. ஆமா அப்படித் தான்...” என்றவர் அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் சஞ்சய்யை ஒரு ஒட்ட வைத்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க...
 
 
“ஒன் செக்... இப்போ எனக்குப் பயமா இருக்கு... என் வொய்ப்க்கு ஒரு போன் செஞ்சு எப்படி இருக்கான்னு கேட்டுக்கறேன்...” என்றவன் நீருவுக்குத் தொடர்ந்து முயற்சித்தும் அலைபேசி அணைத்து வைக்கப் பட்டிருக்கும் தகவலே வந்தது.
 
 
சஞ்சய்யின் முகத்தையே கேள்வியாகப் பார்த்தப்படி அமர்ந்திருந்த வரதராஜனை நோக்கி, “ஸ்விட்ச் ஆப்னு வருது... மேடம் தூக்கத்தை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்னு சில நேரங்களில் இப்படிச் செய்வாங்க... போகும் போது ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு தான் போகணும்...” என்று இலகுவாகச் சொல்லவும் அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை சஞ்சய் அறியாமல் வெளிவிட்டார் வரதராஜன்.
அதே நேரம் அந்த இருள் சூழ்ந்த அறைக்குள் மயக்கம் தெளிந்து கண் விழித்து இருந்த நீருவுக்கு அவளின் கை கால்களைக் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. அந்த அளவு இறுக கட்டியிருந்தார்கள்.
 
 
வாயும் கட்டப்பட்டு இருக்க... குரல் எழுப்பவும் முடியாமல் அசையவும் முடியாமல் நரக வேதனையாக இருந்தது. தன் அருகில் அதே நிலையில் இன்னும் மயக்கம் தெளியாமல் கிடந்த சரண்யாவை காண, காண அவ்வளவு வேதனையாக இருந்தது.
 
 
‘என்ன வயது இருக்கும் இந்தப் பெண்ணுக்கு மிஞ்சி போனாள் ஒரு பதினேழு இருக்குமா...?! இந்த வயதில் பார்க்கவும் கேட்கவும் கூடிய விஷயங்களா இதெல்லாம்...?! பட்டாம்பூச்சியாய் எந்தக் கவலையுமின்றித் துள்ளி திரியும் வயதல்லவா இது...?! இங்கு வந்து இப்படி அவர்களின் சதி வலையில் சிக்கி கொண்டாளே...!!’ என்று எண்ணியவளுக்கு எப்படியாவது அவளைத் தப்பிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் மனமெங்கும் எழுந்தது.
 
 
மெல்ல அத்தனை நேரத்தில் அந்த இருளுக்குப் பழக்கப்பட்டு இருந்த கண்களைக் கொண்டு சுற்றுப் புறத்தை ஆராயத் தொடங்கினாள். அது நிச்சயம் ஒரு அறையோடு கூடிய இடம் மட்டும் இல்லை என்பது புரிய, மெதுவாகத் தலையைச் சாய்த்து பார்த்தவளுக்கு, இவர்கள் இருந்த அறையின் கதவு மூடி இருந்தாலும் சுவரில் ஒரு பக்கம் இருந்த கண்ணாடி தடுப்பின் வழியே மேலும் சில அறைகள் இருப்பதும், இருபக்கமும் வழிகள் பிரிந்து செல்வதும் நன்றாகவே தெரிந்தது.
 
 
ஓரளவு அந்தத் தடியர்கள் புத்தக அலமாரியை திறந்து கொண்டு வெளியே வரும் போதே பார்த்திருந்ததால் அவர்கள் தங்களை எங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்த போதும், இங்கிருந்து வெளியே செல்வது அத்தனை எளிதல்ல என்பதும் சேர்ந்தே தெளிவாகியது.
 
 
எப்படி இவளை காப்பாற்றுவது என்று யோசனையில் இருந்தவளுக்கு மெல்லிய குரலில் யாரோ பேசிக் கொள்ளும் சத்தம் கேட்கவே.. ஊன்றி கவனிக்கத் தொடங்கியவள் அதன் கூடவே காலடி சத்தமும் கேட்கவும், அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களைச் சமீபிப்பதும் புரிய, முதலில் படுத்திருந்த நிலையிலேயே கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
 
 
அறைக்குள் நுழைந்தது மூன்று பேர், இவர்களை நெருங்கி “இன்னும் தெளியலை டா...” என்று ஒருவன் சொல்ல, மற்றொருவன் நீருவின் முகத்தையும் சரண்யாவின் முகத்தையும் பற்றி இப்படியும் அப்படியுமாகப் பார்த்து விட்டு, “இந்தக் குட்டிக்குச் சீக்கிரம் தெளிஞ்சிடும்னு நினைக்கறேன்... மறுபடியும் ஸ்பிரே அடி...” என்றான் நீருவை காண்பித்து.
 
 
“ம்ம்ம்... இன்னும் அடுத்து எங்கே கொண்டு போறதுன்னு சார் எதுவும் சொல்லலையே...” என்று மூன்றாமவன் யோசனையோடு கேட்க, “வேலையா இருப்பாருன்னு நினைக்கறேன், குட்டியை பார்த்தே இல்ல... சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு ஓடிவந்துடுவாரு... ம்ம்ம், கொடுத்து வெச்ச மவராசன்... சும்மா அப்படி வாழறாரு...” என்று பெருமூச்சு விட்டான்.
 
 
அதில் அனைவரும் பலமாகச் சிரித்தபடியே அறையில் இருந்து வெளியேற, அவர்கள் பேசியதை கேட்டவளுக்கு ஒரு வித பயம் மனதை கவ்வி பிடிக்க... சஞ்சய் தன்னை எச்சரிக்கை செய்ததும், தான் அதை அலட்சியம் செய்ததும் நினைவுக்கு வந்தது.
 
 
அவன் பேச்சை கேட்காதது... நேற்று நடந்ததைப் பற்றி அவனிடம் சொல்லாதது... தன் மன குழப்பத்தைப் பற்றிப் பேசாதது என்று எல்லாம் சேர்ந்து இன்றைய நிலையைப் புரிய வைக்கவும், ‘பொறுக்கி... பொறுக்கி... அதான் எல்லாம் முதலிலேயே தெரிஞ்சு இருக்கே, தெளிவா சொன்னா தான் என்ன...? அவன் சொல்லி இருந்தா கொஞ்சம் கவனமா இருந்து இருக்கலாம்... இப்போ பார் எவ்வளவு பெரிய சிக்கல், அவனா வந்து காப்பாத்துவான்... தொல்லைவிட்டதுன்னு அந்த ஜூனியர் பொறுக்கி கூடச் சேர்ந்து ஊரை சுத்திக்கிட்டு இருப்பான்...’ என மனதிற்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
 
 
சரியாக அதே நேரம் வேறு ஒரு இடத்தில் இருந்த இதே போன்ற மற்றொரு இருள் அறையில் தூணோடு சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்து இருந்தான் ராம்.
 
 
பல நாட்களாக மழிக்கப்படாத தாடியும், அவன் அணிந்திருந்த உடையில் இருந்த அழுக்குமே அவன் இங்கு அடைக்கப்பட்டு வெகு நாட்கள் கடந்து விட்டு இருப்பதைச் சொல்லாமல் சொல்லியது.
 
 
ரொம்பவே சிறிய அறை அது. அதில் பகலில் வெளிச்சம் வருவதற்காகச் சிறு மூங்கில் துவாரம் மட்டுமே இருந்தது. அதன் மூலம் ஒன்றும் வெளிச்சம் வந்து அறையை நிறைத்து விடப் போவதில்லை தான். ஆனால் இரவு எது பகல் எதுன்னு தெரிவதற்காகவே அந்தத் துவாரம். எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவனின் நினைவு முழுவதும் நிறைந்து இருப்பவளே இப்போதும் நீங்காது நிறைந்து இருந்தாள்.
 
 
அவளின் திருமணச் செய்தி பற்றி அறிந்த அன்று இனி அவளின் வாழ்வில் எந்த விதத்திலும் தலையிடக் கூடாது என்று திட்டவட்டமாக முடிவெடுத்து இருந்தவன், அதன் பின் அவனாக அவளைத் தொடர்புக் கொள்ள முயலவே இல்லை...
 
 
ஆனால் அவளின் நினைவை அவனால் மறக்கவோ விளக்கவோ கொஞ்சமும் முடியவில்லை என்பது தான் நிஜம்... யாரிடமும் இதைப் பற்றிப் பேசவோ பகிரவோ முடியாமல் தனக்குள்ளேயே வைத்து தினம் தினம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தான் ராம்.
 
 
ஆனால் அவள் அவனிடம் பேச முயன்றதும் அதை அவனால் விளக்கவோ ஒதுக்கவோ கொஞ்சமும் முடியாதே... அவளின் நலம்விரும்பியாக என்றும் போல் அன்றும் அவளுக்குப் பல விஷயங்களை விளக்கி புரிய வைத்தவன், அலைபேசியை அணைத்த அடுத்த நொடி அவனின் பின்னந்தலையில் எதுவோ கனமாகத் தாக்கியது.
 
 
அப்போது மயங்கியவன், அதன் பின் கண் விழித்த போது இதோ இதே நிலையில் இங்குக் கட்டப்பட்டு இருந்தான். முதலில் ஒன்றும் புரியாமல் தவித்தவன், அதன் பின்னான நாட்களில் இது ரொம்பவே திட்டமிட்டு நடத்தப்பட்டு இருப்பதும் செய்தவர்கள் ரொம்பவே கை தேர்ந்தவர்கள் என்பதும் புரிய தன் எதிர்ப்பை காணப்பிக்கவில்லை ராம்.
 
 
ஆனால் இங்கிருந்து வெளியேற சரியான சந்தர்ப்பத்திற்காக எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான். ராம் இங்கு வந்த நாள் முதலாக இப்படியே தான் இருக்கிறான். யார்..? எதற்காக...? ஏன்...? என இப்போது வரை அவனுக்குப் புரியவில்லை.
 
 
இந்த இருட்டு அறையைத் தவிர வேறு எதுவும் தெரியாது அவனுக்கு. மாலை மங்கி இருள் கவிழ தொடங்கிய பிறகு ஒருவன் தினமும் அறைக்குள் வந்து அன்றைய நாளுக்கான ஒரு வேலை சாப்பாடும், தண்ணீரும், இயற்கை உபாதைகளுக்கான சந்தர்ப்பத்தையும் வழங்குவான்.
 
 
அவன் முகத்தையே வரி வடிவமாகத் தான் ராமால் பார்க்க முடியும்... ஒரு வார்த்தையும் பேச மாட்டான்.. ராம் பேசினாலும் பதில் இருக்காது. ஆரம்பத்தில் முயன்று பார்த்து விட்டு ராமும் அமைதியாகி போனான்.
 
 
அந்தக் கதவு திறக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பிக்கவும் ராமால் முடியாது... கதவு திறந்த நொடி முதல் மூன்று பேர் வாயில் நின்று இருப்பார்... அவர்களைக் கடந்து செல்வது என்பதோ இந்த இருளில் எங்கிருக்கிறோம் என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் தப்பிக்க முயல்வதும் வீண்... அழகாகத் திட்டமிட்டே இந்த நேரத்தை அவர்கள் தேர்ந்தெடுத்து இருந்தனர்.
 
 
ஆசை ஆசையாய் விரும்பியவளும் கைவிட்டு போன பிறகு ராமுக்கு தனக்கு என்ன இருக்கிறது இந்த உலகில் என்ற மனோபாவமே... ஆனால் தவறான முடிவு எடுக்கவும் அவன் தயாராக இல்லை... இப்போது இங்கு அடைப்பட்டுக் கிடப்பவனின் மனமெங்கும் ஒரு பற்றில்லா தன்மையே நிறைந்து இருந்தது.
 
 
‘இத்தனை நாள் எது வந்தால் என்னக்கென்ன...?!’ என்ற மனநிலையிலேயே இருந்தவனுக்கு இன்று காலை முதல் உள்ளத்தில் ஏதோ ஒரு வகைத் தவிப்பு. ஏனோ அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.
 
 
அவனின் நேசத்துக்குறியவளுக்கு ஏதோ ஆபத்து என்று மனம் அடித்துக் கொள்ள... நிலைக் கொள்ளாமல் தவித்தான் ராம். கைகள் கட்டப்பட்டு இருக்கும் இந்த நிலையில் அவனால் அவளுக்கு எந்த வகையிலும் உதவ முடியாதே...!! முகம் கசங்க இந்தத் தவிப்பை தாங்க முடியாமல் கண்களை மூடியவன், அவளுக்காகப் பிராத்திக்கத் தொடங்கினான்.
 
 
“அப்போ ஷாலினி...” என விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய சஞ்சய்யை கண்டு “இதைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச அத்தனை விவரமும் அப்போவே சொல்லிட்டேன்... நீங்க வேணும்னா செக் செஞ்சிக்கோங்க...” என்றிருந்தான் வரதராஜன்.
 
 
“எல்லாமே சொல்லிட்டீங்களா...?! அப்படியா..?!” என்று யோசிப்பது போலப் பாவனைச் செய்தவன், “எங்கே உங்க அசிஸ்டெண்ட் கோகிலா...?” என்றான்.
 
 
“அவங்க என்னோட அசிஸ்டெண்ட் இல்லை... எச்எம் அசிஸ்டெண்ட்...” என்று கடுப்போடு வரதராஜன் பதில் அளிக்க... “எச்எம்க்கு அசிஸ்டெண்ட்டா...?! இல்லை எச்சை அசிஸ்டெண்ட்டா...?!” என்றவனைக் கண்டு ஆத்திரமானவன்,
 
 
“மைண்ட் யுவர் வர்ட்ஸ் ஆபிசர்...”
 
 
“ஆஹான்... சரிங்க வரதராஜன் மைண்ட் பண்ணிக்கறேன்...” எனப் போலி பணிவு காட்டியவன், “ஆங்... சொல்ல மறந்துட்டேன்... உங்க எச்சை... ச்சே... கோகிலா நம்ம கஸ்ட்டடிக்கு வந்து அரைமணி நேரம் ஆகுது...”
 
 
“வாட்... என்ன விளையாட்டு இதெல்லாம், எதுக்காக அவங்களைக் கஸ்டடி எடுத்தீங்க... உங்களால் கண்டுப்பிடிக்க முடியாத கேசை எல்லாம் எங்கே தலையில் கட்டுவீங்களோ... மதன் போல நாளைக்கு ஷாலினி அப்பா வந்து உங்க வீட்டில் சாகக் கூடாதுன்னு பயம் இருந்தா உங்க ஆளுங்க யாரையாவது பிடிச்சு உள்ளே போடுங்க... எந்த ஆதாரமும் இல்லாம எங்கே ஸ்கூல் ஸ்டாப்பை எப்படி நீங்க கஸ்டடி எடுக்கலாம்...” என்று கோபத்தில் ஏகத்துக்கும் கொந்தளிக்கத் தொடங்கினார் வரதராஜன்.
 
 
அதற்கு ஒரு துளியும் சம்பந்தமே இல்லாமல் வெகு கூலாக அவரைப் பார்த்தவன், “நீங்க கேட்ட ஆதாரம் கிடைக்காததினால் இத்தனை நாள் செய்ய முடியாததை இன்னைக்கு அது கிடைச்சதனால் செஞ்சு இருக்கேன்...” என்றான்.
 
 
அதில் திகைத்தவன், “என்ன... என்ன... ஆதாரம்...?” என்றான் திணறலோடு, நிச்சயம் அப்படி எதுவும் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் மனதின் ஓரம் இன்னமும் ஒட்டிக் கொண்டு இருந்தது.
 
 
இன்னைக்குக் காலையில் வரைக்கும் இருந்த ஆதாரம் சுமார் தான் வரதராஜன்... ஆனா, இப்போ கொஞ்சம் முன்னே கிடைச்ச ஆதாரம் தான் எச்... ஹா ஹா... நீங்க நினைக்கறது போல எதுவும் இல்லை.... எச்டி குவாலிட்டில சும்மா சூப்பரா இருக்கு...” என்றவன்... எழுந்து வரதராசனை நெருங்க, பதட்டத்தில் எழுந்து நின்றவன், “எ.. ன்.. ன...” என்றான் குரல் குழற.
 
 
“இல்லை... செம்ம அழகா இருக்கு இந்தப் புக் செல்ப்... இம்போர்ட்டடா...?” என்று அதன் அருகில் செல்ல முயன்றவனைத் தடுத்த வரதராஜன், “அது கொஞ்சம் பர்சனல்... முக்கியமான பேப்பர் எல்லாம் இருக்கு...” என்றான்.
 
 
“ஓ... அப்போ அது எதுக்கு நமுக்கு... சரி வாங்க நாம போகலாம்...” என்று திரும்ப நடக்க முயல, “எங்... கே...?” என்றவனுக்குத் தன்னையும் அறியாமல் ஒரு பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.
 
 
“வேற எங்கே உங்க மாமியார் வீட்டுக்கு தான்...” என்றவன்,
 
 
“இனி தினம் தினம் உங்களுக்கு விருந்து தான்... போலாமா...?!” என முன்னால் நடந்தபடியே பின்னால் திரும்பி பார்க்க... வரதராஜன் அசையாமல் நின்று இருப்பது தெரிந்தது.
 
 
சஞ்சய் அவனைக் கேள்வியாகப் பார்க்கும் போதே “உங்க இஷ்டத்துக்கு வந்து நீங்க கூப்பிட்டதும் வரதுக்கு நான் ஒண்ணும் சாதாரண ஆள் இல்லை... வரதராஜன்ன்ன்ன்... என்ன கேஸ்...? வாரண்ட் இருக்கா...? நான் என் லாயர்கிட்ட பேசணும்...?” என்று என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற தோரணையோடு பேசிய வரதராஜன் அருகில் இருந்த போனை எடுக்கவும், “ஜாமர் வெச்சு அரைமணிநேரம் ஆகுது...” என்ற பதில் சஞ்சயிடம் இருந்து வந்தது.
 
 
“என்ன... என்ன இதெல்லாம்...?! என்ன கேஸ்...?”
 
 
“கேஸ்...!! ம்ம்ம், ஷாலினியை கடத்தி கொன்னது ஐபிசி செக்ஷன் 361 டூ 364... மனோவை வீடு புகுந்துக் கொள்ள ஆள் அனுப்பினது ஐபிசி செக்ஷன் 307... சரண்யாவை கடத்தினது... மைனர் பெண்ணைத் தவறா பயன்படுத்தப் பார்த்தது இதுக்கெல்லாம் போக்சோ... எல்லாத்துக்கும் மேலா என் செல்ல பொண்டாட்டியை கடத்தி அடைச்சு வெச்சதுக்கு ஐபிசி... ம்ஹும்... அதுக்கு ஐபிசி செக்ஷன் இல்லை... இல்லை... இந்த ஏசிபி செக்ஷன்படி வரும் வெய்ட் கரோ ஜி...” என்றவன், தான் சொல்ல சொல்ல வரதராஜனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வெளிறி போனதை கவனித்துக் கொண்டே பேசி முடித்தான்.
 
 
“என்... ன... என்... ன... இதெ... ல்லா...ம் ஏதேதோ... உள... றறீ... ங்க...?!” என்று கோபத்தோடு கேட்க நினைத்தவனின் குரலோ வெகுவாக உள்ளடங்கித் தந்தி அடிக்கத் தொடங்கியது.
 
 
“இதோ நீங்க கேட்ட அரஸ்ட் வாரண்ட்... அப்பறம் வேற என்ன கேட்டீங்க...” என்று யோசிப்பது போலப் பாவனைச் செய்தவன், “ஆங்...” என்றவாறே வரதாரஜனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு “இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசினே, மூஞ்சி பேந்துடும்... மூடிகிட்டு கிளம்பு...” என்றான்.
 
 
“இதெல்லாம் அபாண்டம்... சமூதாயத்துல பெரிய இடத்தில் இருக்க என் மேல வீண் பழி சுமத்தற... தேவை இல்லாம கை நீட்டற... இருடா உன்னை மானநஷ்ட வழக்கு போட்டு தெருவுக்குக் கொண்டு வரலைனா நான் வரதராஜன் இல்லை...” என்று அந்த மூக்கில் இருந்து ரத்தம் வடியும் நிலையிலும் அடங்காது பேசினான்.
 
 
அதே நேரம், அந்த அறைக்குள் காக்கி உடையில் நால்வர் நுழையவும்... “அபாண்டமாவா நாங்களா...?! ஷாலினி கையில் அவ கடைசியா ஸ்கூலுக்கு வந்த அன்னைக்கு மொபைல் இருந்தது உங்களுக்குத் தெரியுமா வரதராஜன்...” என்றதும் அவன் கண்களில் அப்பட்டமாக அதிர்வு தெரிந்தது.
“ஆயிஷா ஆதாரத்தை அவங்க போனில் மட்டும் இல்லாம ஒரு பென்டிரைவ்லையும் சேவ் செஞ்சது உங்களுக்குத் தெரியுமா வரதராஜன்...” என்ற சஞ்சயின் அடுத்தக் கேள்விக்குக் கண்கள் அப்படியே பயத்தில் நிலை குத்தி நின்றது.
 
 
“மனோவை கொலை செஞ்சு முடிச்சதும் நீங்க அனுப்பின பூபதி கொஞ்சம் கூட மூளையே இல்லாம அவங்க வீட்டு வாசலில் இருந்தே உங்களுக்குப் போன் செஞ்சதும்... வேலையை முடிச்சிட்டேன்னு சொன்னதாவது  உங்களுக்குத் தெரியுமா வரதராஜன்...” என்றதில் தன் சக்தி எல்லாம் வடிந்து இருக்கையில் சரிந்தான் வரதராஜன்.
 
 
“இது... இது... எல்லாம்...” என்று அப்போதும் எப்படியாவது சமாளிக்க நினைத்து பேச முயன்றவரை, “வெய்ட்... நான் இன்னும் முடிக்கலை...” என்று சொல்லியவாறே அதுவரை அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவன்,
 
 
“இதுக்கெல்லாம் மேலே நீ தப்பிக்கவே முடியாத அளவுக்குச் சுயவாக்கு மூலம் நீ கொடுத்தது ஒண்ணு இருக்கு பார்க்கறீயா...?!” என்ற சஞ்சய்யை புரியாமல் பார்த்தவனுக்குப் பயத்தில் முகம் வெளிறி வேர்க்க தொடங்கியது.
 
 
“இத்தனை ஏசி போட்டும் உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்குது வரதராஜன்... சுகர் இருக்கா...?!” என்றவனின் குரலில் மருந்துக்கும் அக்கறை இல்லை மாறாக டன்டன்னாகக் கேலி தான் இருந்தது.
சஞ்சயின் கேலியை புறம் தள்ளி, “என்... ன... வாக்... வாக்கு... மூலம்...?” என்றவனுக்கு, “ஆங், அதை மறந்துட்டேன் பாருங்க...” என்றவாறே தன் கைபேசியை எடுத்தவன், “ஆமா உங்களுக்கு ஏன் இவ்வளவு குழறுது...? பிபி எதுவும் இருக்கா...?” என்றான்.
 
 
வரதராஜனுக்கு இருந்த பதட்டத்தில் சஞ்சய்யின் பேச்சை கவனிக்கவோ பதிலளிக்கவோ முடியாத இல்லை இயலாத ஒரு நிலையிலேயே நின்றிருக்க... சஞ்சய் தன் கைபேசியை உயிர்பித்து ஒரு காணொளியை காண்பித்தான்.
 
 
அதைப் பார்த்ததும் வரதராஜனின் கண்கள் தெறித்து விழும் அளவுக்கு ஆனது. அதில் சற்று நேரத்திற்கு முன் இதே அறையில் நடந்த அத்தனையும் பதிவாகி இருந்தது.
 
 
இது எப்படி என்று வரதராஜனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. சரண்யாவோ நேத்ராவோ அதன் பிறகு இந்த அறையில் இருந்து வெளியில் போகவில்லை... அவள் யாருக்கும் தகவலும் கொடுக்கவில்லை என்பது நிச்சயம்... பிறகு இது எப்படி...?! என்று யோசித்தவருக்கு, நேத்ராவை இங்கிருந்து தூக்கி சென்ற பிறகு அவள் வந்தது இருந்தது என அத்தனை தடையத்தையும் அழித்ததை நினைவு கொண்டு வந்த போதும் அவள் திகைத்து மருண்டு விழித்துக் கொண்டிருந்தாளே தவிர வேறு எதுவும் செய்திருக்கவில்லை என்பது தெளிவாகியது.
 
 
அதே போல அவளின் பொருட்களை அப்புறப்படுத்திய போதும் அதில் அலைபேசி இருந்ததைப் பார்த்து தகவல் கூறியவர்களுக்கு அதை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று வரதராஜன் தெளிவாகக் கூறியிருந்தார்.
 
 
இது எப்படிச் சாத்தியம் என்று ஒரு பக்கம் மனம் யோசித்தாலும் மற்றொரு பக்கம் இப்படி முழு ஆதாரத்தோடு சிக்கிக் கொண்டோமே என்றும் மனம் வேகமாக அதில் இருந்து தப்பிக்கும் மார்கத்தைக் கணக்கிட்டது.
 
 
ஆனால் அதற்கெல்லாம் எந்த ஒரு சந்தர்ப்பமும் தராமல் சஞ்சயின் கண் அசைவின் பேரில் அங்கிருந்த காவலர்கள் வரதராஜனை அவர் திமிர திமிர இழுத்துக் கொண்டு சென்றனர்.
 
 
அனைவரும் சென்ற பின்னும் ஆனந்த் மட்டும் தயங்கி நிற்கவும், “நீங்களும் போங்க ஆனந்த்..” என்றவனைத் தயக்கத்தோடு பார்த்தவன், “உள்ளே எத்தனை பேர் இருப்பாங்களோ சார்...?!” என்றான்.
 
 
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்... நீங்க கிளம்புங்க, இது அபிசியல் இல்லை.. என் பர்சனல்...” என்றவனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாது ஆனந்த் சென்று விட,
 
 
அந்தப் புத்தக அலமாரியை திறந்துக் கொண்டு சென்றான் சஞ்சய். அது ஒரு பாதாள அறை போலப் படிக்கட்டுகள் கீழ் நோக்கி சென்றது. கதவு திறந்த சத்தம் அங்கிருந்த அடியாட்களுக்குக் கேட்டாலும் வரதராஜன் தான் வருவதாக நினைத்து அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் முன் புறம் இருந்தவர்கள் எழுந்து நின்றனர்.
 
 
ஆனால் வந்தது சஞ்சய் என்பதைப் படி இறங்கும் இடத்தில் இருந்த ஒருவன் முதலில் பார்த்து விட்டு சஞ்சய்யை தாக்க முயல, தன் வலது கையை மடக்கி முட்டியை கொண்டு அவன் கழுத்தில் சஞ்சய் இறக்கிய ஒரு குத்து அவனை அப்படியே சரிய செய்திருந்தது.
 
 
தங்கள் ஆள் கீழே வந்து விழுந்ததைக் கண்டு உஷாரானவர்கள், தங்கள் கையில் இருந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்க பாய்ந்து செல்ல... இதற்கெல்லாம் தயாராகவே வந்திருந்த சஞ்சய் அவர்களை ஆனாயாசமாக எதிர்க் கொண்டு அடித்துச் சாய்த்தான்.
 
 
மொத்தம் பத்து பேருக்கும் மேல் அங்கிருந்தனர். ஒவ்வொருவரும் மலையளவு இருந்தனர்... இதற்காகவே வளர்க்கப்பட்டு வருகின்றனர் போலும்...! சஞ்சய் நினைத்தது போல் அது ஒரு அறையாக இல்லாமல் மிகப் பெரிய இடமாக இருந்தது.
 
 
பள்ளிக்கு கீழே இப்படி ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்... வரதராஜனின் அத்தனை திரைமறைவு செயல்களுக்கும் இந்த இடமே பயன்படுத்தப்பட்டு வந்தது. வெளி உலகின் கண்ணுக்கு மறைவாக நடக்கப் பள்ளி என்ற பெயர் வெகுவாகப் பயன்பட்டது.
 
 
ஒவ்வொருவராக அடித்துத் துவைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருந்தவன், மிகுத்த கவனத்தோடே தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான். சுற்றும் முற்றும் பாத்தவாறே முன்னேறியவன் பின்னால் அரவம் உணர்ந்து சட்டெனக் குனியவும் நாற்காலி கொண்டு சஞ்சயின் தலையில் அடிக்க வந்தவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
 
 
விழுந்தவனின் உடல் பாதி நாற்காலியில் சரிந்து இருக்க... அப்படியே அவன் முகத்தைத் தன் ஷூ காலால் மிதித்து நசுக்கியவன், அருகில் இருந்த கப்போர்டை அவன் மேல் சட்டெனத் தள்ளி விட்டுவிட்டு நகர்ந்துக் கொண்டான்.
 
 
அதில் அவன் அலறிய அலறல், உள் அறையில் நேத்ரா நகர முயன்றதை எதிர்ப்பாராமல் அந்தப் பக்கம் வந்த ஒருவன் பார்த்து அவளை அங்கிருந்த மேசையோடு சேர்த்து கட்டி போட நினைத்து கட்டுகளை அவிழ்த்து கொண்டிருக்க அவன் செவிகளை எட்டியது.
 
 
உடனே வேகமாகத் தன்னிடம் இருந்த கத்தியை கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவன், தங்கள் ஆட்கள் அங்கங்கு ஒவ்வொரு கோணத்தில் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிர்ந்து சுற்றுபுறத்தை அலசிக் கொண்டே சென்றவன், சஞ்சய் கண்மண் தெரியாமல் அடித்து வீழ்த்துவதையும் எத்தனை பேர் வந்தாலும் அடித்துச் சாய்ப்பவர்கள் இங்கு அடிவாங்கிச் சரிவதையும் கண்டு தயங்கி தயங்கி சஞ்சய்யை பின் தொடர்ந்தான்.
 
 
சஞ்சய் அங்குத் துப்பாக்கியோடு நிற்கும் ஒருவனை ஒரே அடியில் அவன் கையைச் செயல் இழக்க செய்வதையும் அடுத்த அடியில் அவன் கழுத்தை அப்படியே திருப்பி வாய் கோண கீழே விழ செய்வதையும் கண்டு திகைத்தான்.
 
 
ஏனெனில் அங்கு அடி வாங்கி விழுபவன் தான் இவர்களுக்கு எல்லாம் தலைவன் போன்றவன், அவனையே இவ்வளவு எளிதாகச் சாய்த்து இருப்பவனைக் கண்டு ஒரு வித பயம் எழ, அவன் அடித்த விதமே வர்மக்கலையைக் கற்று தேர்ந்தவன் என்பதைப் புரிய வைக்க... தங்கள் ஆட்கள் என்று ஒருவரையும் காணாமல் அரண்டுப் போனான்.
 
 
வந்திருப்பவனை எதிர்ப்பதும் அடிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல என்று புரிய, தன் இருப்பைக் காட்டாது மறைந்துக் கொண்டவன் சஞ்சய் அறியாமல் தாக்க அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
 
 
சஞ்சய் அங்கிருந்து நகர்ந்து மெல்ல முன்னேறி ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே சென்றான். இங்கே நேத்ரா தன்னைப் பிணைத்து இருந்த கயிறு அவிழ்ந்து கிடக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது தப்பிக்க நினைத்தவள், இப்போதைக்கு அது முடியவில்லை என்றாலும் அங்கேயே எங்கேயாவது ஒளிந்துக் கொள்ள எண்ணி, இன்னும் மயக்கம் தெளியாமல் கிடந்த சரண்யாவை உலுக்கி எழுப்ப முயன்றாள்.
 
 
ஆனால் அவளின் முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை... இன்னுமே அசைவற்றே கிடந்தவளை சத்தம் போட்டும் எழுப்ப முடியாத நிலை நீருவுக்கு... அவளின் சத்தம் கேட்டு யாரேனும் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தோடு தன் முயற்சியைத் தொடர்ந்துக் கொண்டிருந்தாள் நீரு.
 
 
அதே நேரம் வாசலில் அரவம் உணரவும், ஒரு பய பந்து உருண்டு வந்து கழுத்தில் அடைக்க... தான் எழுந்து நின்று அவளை எழுப்பிக் கொண்டிருப்பதைக் கண்டால் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்தோடு மெல்ல குனிந்து நின்று எழுப்பிக் கொண்டிருந்த நிலையிலேயே மெதுவாகத் தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தாள்.
 
 
அங்கு நேத்ராவை கண்டுவிட்ட நிம்மதியோடு கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் சஞ்சய். அந்த நொடி அவள் எப்படி உணர்ந்தாள் என்பதைச் சொல்ல வார்த்தையே இல்லை... அவ்வளவு நேரம் இருந்த பயம் படபடப்புப் பதட்டம் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போனதை போல் ஒரு நிம்மதியுணர்வு மனதில் எழ அப்படியே மண்டியிட்டு மடங்கி அமர்ந்தாள் நீரு.
 
 
சஞ்சய் உள்ளே நுழைந்தவுடன் கண்டது அவளையும் அவளின் நலனையும் தான். அவளை முழுவதுமாக அளவிட்டவன், ஒரு நிம்மதி பெருமூச்சோடு நின்றிருந்த போது தான் நீரு அவனைக் கண்டது.
 
 
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நின்றிருக்க... தக்க சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவன், ஒரு இரும்பு கம்பியால் சஞ்சயின் தலையைப் பின்னால் இருந்து தாக்க முயன்ற கடைசி நொடி சஞ்சய் அசைந்து விட அடி பலமாக வலது முழங்கையில் பட்டது.
 
 
அதில் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவன், “கொஞ்சமாவது உனக்கு டீ டிகாஷன் இருக்கா மேன்...” என அசால்ட்டாகக் கேட்கவும், “ஙே” என விழித்துக் கொண்டு இருந்தான் அவன். அடி தவறிப் போனதால் எங்கே தன்னை அடி வெளுக்க போகிறானோ என்று பயந்துக் கொண்டிருந்தவன், இப்படி பேசுபவனை கண்டு பேய் முழிமுழித்தான்.
 
 
“ரோஜா படம் பார்த்து இருக்கீயா மேன் நீ...?” என்று அவனை முறைத்துக் கொண்டு அடுத்து சஞ்சய் கேட்கவும், ஏற்கனவே தான் அடித்த அடி தவறிவிட்டதில் வெளியே அவனின் ருத்ர தாண்டவத்தால் தன் கூட்டாளிகள் சுருண்டு கிடப்பதை கண்டு தன் நிலையை எண்ணி மிரண்டு நின்று இருந்தவன், இங்கு வெளிப்படும் அவனின் வேறு முகத்தைப் புரியாமல் பார்த்து விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.
 
 
“சொல்லு மேன்... படம் பார்த்தீயா, இல்லையா...?!” என்று மீண்டும் அழுத்தி கேட்டதில் இவன் தன்னிடம் இருந்து என்ன பதிலை எதிர்ப்பார்க்கிறான் எனத் தெரியாமல் ஆம் இல்லை என அவன் தலையை எல்லாப் பக்கமும் ஆட்ட...
 
 
“ஓ... இல்லையா, அதான் உனக்கு இப்போ நடக்கற சீன் புரியலை... கடத்தப்பட்டு மீண்டு வந்த கணவனும் மனைவியும் திரும்பச் சந்திக்கற போது அப்படியே கண்ணாலேயே பேசி, கொஞ்ச நேரம் ஒருத்தரை ஒருத்தர் பார்வையாலேயே தழுவி, அப்படியே உருகி ஒரே ஓட்டமா ஓடி வந்து கட்டிப்பிடிச்சிப்பாங்க... எல்லாம் இங்கே சரியா நடந்தாச்சு... அந்தக் கடைசி ஸ்டெப் நடக்க இருந்த நேரத்தில் கரெக்ட்டா நந்தி மாதிரி நீ வந்துட்டே... இப்போ அவளுக்கு மறுபடியும் அந்தப் பீல் வருமான்னு தெரியலையே...” என்று தன்னை ஏதோ வேற்று கிரக ஜந்துவை போல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனைக் கண்டு சொல்லியவன் திரும்பி நீருவை பார்த்து,
 
 
“நாம முதலில் இருந்து ஸ்டார்ட் செய்வோமா குல்பி... நான் அங்கே போயிட்டு மறுபடியும் வரேன்... நீ அப்போ தான் என்னைப் பார்க்கற மாதிரி பாரு... அப்படியே ஓடிவந்து உனக்கு என்னென்ன தோணுதோ எல்லாம் செய்...” என்று ஏற்ற இரக்கத்தோடு சீரியசான குரலில் கூறிக் கொண்டு இருந்தான் சஞ்சய்.
 
 
அதில் இத்தனை நேரம் இருந்த மனநிலை என்ன...?! எங்கு வந்து என்ன பேசிக் கொண்டு இருக்கிறான்...!! என அவனை இமைக்காமல் சோர்ந்து போன மனநிலையோடு பார்த்துக் கொண்டு இருந்தவளுக்குக் கண்களில் இருந்து கண்ணீரும் இதழ்களில் தன்னை அறியாமல் ஒரு புன்னகையும் வந்தது.
 
 
அவளின் நிலையை அணுஅணுவாக உள்வாங்கிக் கொண்டு இருந்தவன், சற்று அந்த மனநிலையில் இருந்து அவள் வெளிவந்துவிட்டாள் எனப் புரியவும், இரு கைகளையும் விரித்து ‘வா’ என்பது போல் கண் அசைக்க... வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போலப் பாய்ந்து ஓடி வந்து அவன் கரங்களுக்குள் அடைக்கலமாகியவள், அவன் மார்பில் “பொறுக்கி” எனச் சலுகையாகக் குத்தியபடியே சாய்ந்துக் கொண்டாள்.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 10 months ago
Posts: 329
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 18

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 23 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 10 months ago
Posts: 329
Topic starter  
கனவு – 19
 
 
வீடு வந்து சேர்ந்து பிறகும் அந்தச் சில மணி நேரம் அனுபவித்த பயத்தில் சஞ்சய்யின் மார்பில் சாய்ந்து நின்றிருந்தவளை அவனும் இறுக அணைத்து அவளின் உச்சந்தலையில் தன் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டு நின்றிருந்தவனின் மனம் அந்தச் சில மணி நேரம் பட்டப்பாடு அவனுக்கு மட்டுமே தெரியும்.
 
 
“எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா...?! மயக்கம் தெளிஞ்ச அந்தக் கொஞ்ச நேரத்துல அந்தச் சின்னப் பொண்ணை எப்படிக் காப்பாத்த போறோம்னு புரியாம தவித்துப் போயிட்டேன்...” என்று சொல்லிக் கொண்டு இருந்தவளின் குரலில் அந்தப் படபடப்பும் பயமும் இன்னும் மிச்சம் இருந்தது.
 
 
அதைப் பற்றிப் பேசும் போதே அங்கிருந்து தன்னை வலது கைவளைவில் வைத்து அணைத்து பிடித்தப்படியே அந்த மீதம் இருந்த ஒரு குண்டனை சட்டை காலரை பற்றி இடது கையால் இழுத்துக் கொண்டு சஞ்சய் வெளியே வந்த காட்சியும், அவன் உள்ளே நகர முயன்ற போதே நீரு, அவனைப் பார்த்து மறுப்பாகத் தலையசைத்தவாறே சரண்யாவை நோக்கி கை காட்டவும்... கண் அசைவில் அதற்குச் சஞ்சய் வெளிப்பக்கம் பார் எனப் பதிலளித்த நொடி ஒரு மருத்துவக் குழு உள்ளே நுழைவதும் தெரிந்தது.
 
 
அவர்கள் பின்னேயே சில காவலர்கள் வருவதும் தெரிய, இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நினைவோடு அமைதியாகிவிட்டதும் நினைவு வந்தது.
 
 
அவளின் அந்த நேர மனநிலை புரிய, மெல்ல அவளின் தலையை வருடி ஆறுதல்ப்படுத்த முயன்றவனின் மனதில் ‘அப்போது கூட இவளை பற்றிக் கொஞ்சமும் கவலைபடவில்லையா இவள்...!!?’ என்ற எண்ணம் எழுந்தது.
 
 
“உன்னைப் பற்றி நீ யோசிக்கவே இல்லையா நீரு...?” என மனம் தாளாமல் கேட்டவன் அந்த நேரம் இங்கே உள்ளுக்குள் எவ்வளவு துடித்தான் என அவனுக்குத் தானே தெரியும்...!
 
 
“இல்ல... எனக்குப் பிரச்சனைகள் ஒன்றும் புதுசில்லையே... இந்த வகையான பிரச்சனை தான் புதுசு... ஆனா அவ அப்படி இல்லையே, பாவம்... சின்னப் பொண்ணு, அவளை எப்படியாவது காப்பாத்தணும்னு தான் தோணுச்சு...” என்றாள்.
 
 
நீருவின் இந்த வார்த்தைகள் சஞ்சய்யை அசைத்துப் பார்த்தது, “அப்போ கூட உனக்கு என் நினைவு வரலையா நீரு...?! நான் வருவேன்னோ காப்பாத்துவேன்னோ உனக்குத் தோணலையா...?! சுத்தமா உனக்கு என் மேலே நம்பிக்கையே இல்லையா...?!” என்றான் வலி மிகுந்த குரலில்.
 
 
அந்த வலி அவளையும் சரியாகச் சென்று அடைந்ததோ என்னவோ..! சஞ்சயின் மார்பில் இருந்து மெல்ல தலை நிமிர்த்தி அவன் முகத்தைப் பார்த்தவள், ‘உனக்குத் தான் என்ன பிரச்சனைனும் தெரியாது... நான் அங்கே மாட்டிகிட்டேன்னும் தெரியாதே, அப்பறம் எப்படி நீ வந்து காப்பாத்துவேன்னு எனக்குத் தோணும்...” என்றவள்,
 
 
அப்போதே நிகழ்காலம் புரிய, கண்களில் ஒரு சிறு அதிர்வோடு நிமிர்ந்து சஞ்சய்யை பார்த்து ‘ஆமா நீ... நீ எப்படி அங்கே வந்தே...? அதுவும் அவ்வளவு சீக்கிரம்...!!” என்றாள்.
 
 
அவளின் பாவனையிலும் கேள்வியிலும் தோன்றிய ஒரு சிறு புன்முறுவலோடு அவளைப் பார்த்தவன், “அப்படி எப்படி உன்னை விட்டுடுவேன்னு நினைச்சே நீரு... நீ என் பொண்டாட்டி மட்டும் இல்ல டி, என் உயிரே நீ தான் டி...” என்றவன் உனக்கு எதாவாதுனா என்னால் தாங்க முடியாது எனப் புரிய வைக்கும் விதமாக அவளைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்ள முயன்றான்.
 
 
அவன் சொல்ல வருவது அவனின் மனையாளுக்கும் புரிந்ததோ என்னவோ...! சலுகையாகச் சாய்ந்துக் கொண்டவள், “நீ தான் ஸ்கூல்ல இருந்து மாறச் சொன்னீயே தவிர, என்ன ப்ரச்சனைனும் சொல்லல.. எனக்குப் புரிய வைக்கவும் இல்ல... அப்போ உனக்கு முன்னமே ஏதோ தெரிஞ்சு இருக்குனு தானே அர்த்தம்... அதான் உன் மேலே கோபமா வந்துது...” என்றாள் சின்னக் குழந்தை புகார் வாசிக்கும் குரலில்.
 
 
“யாரு நானு புரிய வைக்கலையா...?!! இல்ல நீங்க புரிஞ்சுக்கலையா மேடம்...?!!” என்று அவளின் குற்றசாட்டால் எழுந்த சிறு சிரிப்போடு எதிர் கேள்வி கேட்டவனுக்குப் பதில் அளிக்காமல் உதட்டை ஒரு பக்கமாகச் சுழித்து முகத்தைத் திருப்பிக் கொண்டவளுக்குமே தவறு தன் மேல் தான் என்று நன்றாகவே தெரிந்தது.
 
 
“அதுக்காக அப்படியே விட்டுடுவீயா...?! நேத்து எவ்வளவு மனக் குழப்பத்தில் இருந்தேன் தெரியுமா...?! நீ மட்டும் என்னனு கேட்டு இருந்தா இன்னைக்கு இந்த ப்ரச்சனையே இல்லை... இதுக்கெல்லாம் காரணம் நீதான்...” என்றவள் அப்போதும் அவன் மேலேயே குற்றத்தை சுமத்தினாள்.
 
 
“நான் ஒண்ணும் அப்படியே விடலையே... உனக்கு ஒரு ப்ரச்சனைனா அது எனக்கு வந்தது போலத் தான்...” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு அமைதியானவளுக்கு அப்போதே தான் முதலில் கேட்ட கேள்விக்கு அவன் இன்னுமும் பதில் அளிக்கவில்லை என்பது நினைவு வர, “நீ எப்படிச் சரியா அங்கே வந்தே...?!” என்றாள் அழுத்தமான குரலில்.
 
 
அதற்குப் பதில் ஏதும் அளிக்காமல் உரிமையாக நீருவின் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த அவளின் பள்ளி ஐடி கார்டை எடுத்து அதன் முனையில் ஒரு சிறு போட்டு போலச் சமர்த்தாக அமர்ந்திருந்த கேமராவை காண்பித்தான் சஞ்சய்.
 
 
அதைக் கண்டு அதிர்ந்தவள், “அடபாவி என்னைக் கண்காணிக்கறீயா...?!” என்றாள் அதிவோடு. “இது உன்னைக் கண்காணிக்க இல்லை.. உனக்கு ஆபத்து உண்டாக்குபவர்களைக் கண்காணிக்க...” என்றான் எந்தக் குற்றவுணர்வும் இல்லாத தெளிவான குரலில்.
 
 
“இதை எப்போ வெச்சே...?”
 
 
“நேத்து நைட்...”
 
 
“அப்போ... அப்போ... நேத்து நான் நார்மலா இல்லைன்னு உனக்குத் தெரிஞ்சு இருக்கு...”
 
 
“ம்ம்ம்...”
 
 
“அப்போ ஏன் என்கிட்ட கேக்கலை...?!”
 
 
“கேட்டா மட்டும் சொல்லிடுவியா...?!”
 
 
“.....”
 
 
“அதான் கேக்கலை...”
 
 
“எப்படித் தெரியும்...?”
 
 
“வித்யா...”
 
 
“அவ தான் ஸ்பையா...?!”
 
 
“ஸ்பை எல்லாம் இல்ல... எனக்கு உன் சேப்டி மட்டும் தான் முக்கியம்... நீ நான் சொன்னா கேக்கலை, அதான்...” என்று விளக்கியவனைக் கண்டவளுக்கு அப்போதே நேற்று மதியம் தன்னை அழைத்து ஏன் வீட்டில் இருக்கே எனச் சஞ்சய் கேட்டது நினைவு வந்தது. நேற்றைய மனநிலையில் தான் சொல்லாமலே எப்படிக் கேட்கிறான் என யோசிக்க அவளுக்கு அப்போது தோன்றவில்லை.
 
 
“அந்தப் பையன்... அந்தப் பையன்... மரணத்துக்கும் இவன் தான் காரணமா...?!!” என ஓரளவு விடை தெரிந்த கேள்வியையே மீண்டும் கேட்டாள்.
 
 
“ம்ம்ம்...”
 
 
“இப்போ இந்த எவிடன்ஸ் வெச்சு அவனை வெளியே வராம உள்ள தள்ள முடியும் தானே...?”
 
 
“இது இல்லாமலே அது முடியற அளவு நம்மகிட்ட சாட்சி இருக்கு... இப்போ இது அதை உடனடியா செய்ய வெச்சு இருக்கு...” என்றவன், எப்படி இந்தக் காணொளியை தன் அலைபேசியில் பார்த்த அடுத்த நொடி அதை வைத்து அவனைக் கைது செய்ய அனுமதி பெற்றான் என்பதை விளக்கினான்.
 
 
சஞ்சயிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க ஓரிரு நாள் ஆகி இருக்கும்... ஆனால் இன்று அவன் பேசிய காணொளியே அதை எளிதாக்கி கொடுத்து இருந்தது.
 
 
நீருவுக்குப் பிரச்சனை என்று தெரிந்த பிறகும் உடனே ஓடி சென்று காப்பாற்ற முடியாமல் அவன் கடமை தடுக்க... கைது செய்வதற்கான ஆதாரம் இல்லாமல் அங்குச் செல்வதுவும் அவனிடம் வாதாடுவதும் நேர விரயம் என்றே சில நிமிடங்கள் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று அணைத்து ஏற்பாடுகளோடும் சென்றிருந்தான்...
 
 
ஒரு காவல்துறை அதிகாரியாக அதைத் துரிதமாகச் செய்துக் கொண்டு இருந்தாலும் ஒரு கணவனாக உள்ளுக்குள் ஒவ்வொரு நொடி கடக்கும் போதும் அவன் எவ்வளவு துடித்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
 
 
“அந்தப் பையனுக்கு என்ன ஆச்சு...?”
 
 
“இதே கேள்வியோட தான் அங்கே ஒரு கும்பலே பிரஸ் மீட் ஏற்பாடு செஞ்சு வெச்சு காத்து இருக்காங்க... நான் தான் என் பொண்டாட்டி எப்போவாவது தான் இப்படி ஒரு சான்ஸ் தருவா... அதை இப்போ விட்டேன்னா மறுபடி எப்போ வருமோ தெரியாது... இல்லை ஒருவேளை வராமலே போனா நானே ஆளை வெச்சு அவளைக் கடத்தி சான்ஸ் ஏற்படுத்திகிட்டா தான் உண்டு, அதை மிஸ் செய்ய எனக்கு விருப்பம் இல்லை... சீக்கிரம் வந்துடறேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன்...” என வெகு சீரியசான குரலில் சொல்லிக் கொண்டு இருந்தவனை ஆரம்பத்தில் புரியாமலே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்குப் பிறகு அவன் தாங்கள் இருக்கும் நிலையைப் பற்றிப் பேசுகிறான் என்பது புரிய, சட்டென அவனைத் தள்ளிவிட்டு ஒதுங்கி நின்றவள், “பொறுக்கி...” என முணுமுணுத்தவாறே முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
 
 
அதில் பொங்கி வழிந்த குறும்பு புன்னகையோடு மீண்டும் அவளை இழுத்து இறுக அணைத்து விடுவித்தவன், “சியூ பேபி... உன் அத்தனை கேள்விக்கும் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே இருந்து பதில் சொல்றேன்...” எனத் தொலைகாட்சியைச் சுட்டி காண்பித்துவிட்டு வெளியேறினான்.
 
 
ஷாலினி காணாமல் போன அன்று...
 
 
அந்த வாரத்தில் வரவிருந்த ஆண்டு விஷாவுக்காக அவள் நடன நிகழ்சியில் பங்கேற்பதாக இருந்தது. அதற்குரிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து மாணவ மாணவிகளைத் தயார் செய்துக் கொண்டு இருந்தது ஆயிஷா. இரண்டு நாட்களாக எத்தனையோ பாடல்களைத் தேர்வு செய்தும் ஷாலினிக்கு மனதில் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்தது.
 
 
எனவே பியூஷன் போல எதாவது செய்ய யோசித்தவள், ஆயிஷாவிடம் அதைப் பற்றிப் பேசி இருந்தாள். இருவருமே அதற்கான பாடலை கலந்து ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். அப்போது தான் ஒரு கொரியன் பாடலை கேட்டவளுக்கு இதற்குப் பரதம் ஆடினால் வித்தியாசமாக இருப்பதோடு நன்றாகவும் இருக்கும் எனத் தோன்றவே அந்தப் பாடலை தன் அலைபேசியில் பதிந்து கொண்டு வந்து இருந்தாள்.
 
 
முதல் வகுப்புகள் முடிந்து இருந்த நேரம், ஆயிஷாவை தேடி வந்தவள், அந்தப் பாடலையும் அதற்குத் தான் வடிவமைத்து இருந்த நடனத்தையும் ஓரளவு இப்படித் தான் வரும் என்பதைப் போல ஆயிஷாவிடம் ஆடி காண்பிக்க... ஆயிஷவிற்கும் அது ரொம்பவே பிடித்து இருந்தது.
 
 
இதையே பயிற்சி செய்யுமாறு அவளிடம் கூறியவள், மதியத்திற்கு மேல் தான் வந்து பார்ப்பதாகவும் இப்போது வகுப்பு இருப்பதாகவும் கூறியதோடு, பள்ளிக்கு அலைபேசி கொண்டு வரக் கூடாது என்றும் கண்டித்தவள், அது என்ன காரணமாக இருந்தாலும் கொண்டு வந்தது தவறே என்றும் கூறியவள், மற்றவர் பார்ப்பதற்குள் அதை அணைத்து அவளின் பேக்கில் வைக்குமாறு சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அந்தப் பாடலை உடனடியாக மியூசிக் பிளேயரில் மாற்றியும் கொடுத்துவிட்டு சென்று விடவே ஷாலினி அதன் பிறகு தன் பயிற்சியைத் தொடர்ந்துக் கொண்டு இருந்தாள்.
 
 
மற்ற மாணவர்கள் எல்லாம் ஐந்து நாட்கள் முன்னதாகவே தங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டு இருந்ததால் எங்கே தன் நடனம் சரியாக அமையாமல் போய்விடுமோ என்று மனதில் எழுந்த பயத்தின் காரணமாகப் பள்ளிக்கு வந்த உடனேயே அவளின் வகுப்பு ஆசிரியையிடம் சிறப்பு அனுமதி வாங்கிக் கொண்டு முதல் வகுப்பில் இருந்தே பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள் ஷாலினி.
 
 
மற்றவர்களுக்கெல்லாம் மதியம் உணவு நேரம் முடிந்த பின்பே பயிற்சி. அவள் பயிற்சி செய்துக் கொண்டிருந்த அறை மேல் தளத்தில் அதற்கென்று தனியாக இருந்த அறை. வெகு நேரம் ஆடி களைத்தவள், ரெஸ்ட் ரூம் செல்ல எண்ணி வெளியில் வர, அப்போதே மாலையும் சற்று நேரம் இருந்து பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
 
 
வீட்டிற்குத் தாமதமாக வருவதாகத் தகவல் சொல்ல நினைத்து தன் அலைபேசியை உயிர்ப்பித்தவள், அங்கிருந்து வெளியே வரவும் யாருமற்று வெறிசோடி போய் இருந்த தளமும் அங்கு வீசிய காற்றும் என இருந்த சூழல் மனதை குதுகலிக்கச் செய்ய... அந்த வயதிற்கே உரிய ஆசையில் சில புகைப்படங்களை அங்கு எடுக்கத் தொடங்கியவாறே நடந்தாள் ஷாலினி.
 
 
சில புகைப்படங்கள் என்பது பலவாக மாறி இருக்க... சற்றுக் குறும்பு தனம் தலைதூக்க... எதற்கு அலைபேசியை எடுத்தோமோ அதை விட்டு விட்டு காணொளியை உயிர்ப்பித்தவள், மேன் VS வைல்ட்டில் வருவது போல ஒரு புதிய இடத்தை அறிமுகப்படுத்துவது போல விளையாட்டாகப் பேசியவாறே கீழ் இறங்கி செல்லும் படியை நெருங்க... யாரோ படியில் ஏறி வரும் சத்தமும் பேசும் சத்தமும் கேட்க... ஷாலினியின் நடை தயக்கத்தோடு நின்றது.
 
 
அதே நேரம் பேசும் சத்தம் வெகு அருகில் கேட்க தொடங்கவும், அந்தக் குரல் தலைமை ஆசிரியர் குரல் என்பது புரியவும், சட்டெனத் தன் கையில் வைத்திருக்கும் அலைபேசி நினைவு வந்து அருகில் இருந்த மறைவில் ஒளிந்துக் கொண்டாள் ஷாலினி.
 
 
மனம் படபடக்கப் பயத்தோடு நின்றிருந்தவளுக்குக் கையில் இருந்த அலைபேசியில் காணொளியை எடுத்துக் கொண்டிருந்ததோ அதை இன்னும் அப்படியே வைத்திருப்பதோ கொஞ்சமும் நினைவு வரவில்லை.ஆனால் அது அப்படி இல்லாமல் தன் கடமையைச் செவ்வன செய்துக் கொண்டிருந்தது.
 
 
மேலே ஏறி வந்தது மூவர், வரதராஜன், தலைமை ஆசிரியர் கண்ணன், மற்றும் ஹென்றி. பேசிக் கொண்டே வந்தவர்கள் ஷாலினி அங்கு இருப்பது தெரியாமல் அவள் மறைந்திருந்த சுவருக்கு அருகில் நின்றுக் கொண்டு தங்கள் பேச்சை தொடர, எதிர்ப்பாராமல் அதைக் கேட்க நேர்ந்த ஷாலினிக்குக் கண்கள் தெறித்து வெளி வந்து விடும் போலானது.
 
 
விஷயம் இது தான்... பள்ளியில் வருடந்தோறும் போடும் தடுப்பூசி சம்பந்தமாக இருந்த பேச்சில் இந்த முறை ஹென்றி கண்டுப்பிடித்துள்ள புது மருந்தையும் சேர்த்து இரண்டாகப் பிள்ளைகளுக்குப் போடுவதென்று பேசி முடிவெடுக்கப்பட்டு இருந்தது.
 
 
இதில் அந்தப் புதிய மருந்து இன்னும் பரிசோதனைக்கு உட்படுத்தபடாததும், அதைச் சிறு பிள்ளைகள் மேல் பரிசோதிக்க வேண்டி இருப்பதால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து வரும் என்று கருதி அரசாங்கம் மறுத்துவிட்டு இருந்ததும் தெரிய வந்தது.
 
 
அதை இங்குப் பிள்ளைகளின் மேல் பரிசோதிக்க ஒரு மிகப் பெரிய தொகையை வாங்கிக் கொண்டு வரதராஜன் சம்மதித்து இருப்பதும் மட்டுமின்றி அடுத்த வாரம் ஊசி போடுவது தொடர்பாகப் பேசிக் கொண்டு இருந்தவர்கள், “இதில் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கு மிஸ்டர் வரதராஜன்... நினைவு இருக்கு இல்ல, அதே பக்க விளைவு எதுவும் இல்லைனா இது போல ஒரு மருந்து இதுவரை வந்தது இல்லை... இதுக்குப் பயங்கர வரவேற்பு இருக்கும்... என் மிகப் பெரிய கனவு நினைவாகும்...” என்ற ஹென்றியின் வார்த்தையில் அவரை ஒரு புன்னகையுடன் பார்த்தனர் மற்ற இருவரும்.
 
 
“நாம தான் இது சம்பந்தமா பேசிட்டோமே மிஸ்டர் ஹென்றி... நோ பிராப்ளம், நீங்க அடுத்த வாரம் நாம ஏற்கனவே முடிவு செய்தது போலவே செய்யுங்க...”
 
 
“ம்ம்... பேசினோம் தான், இதில் இறப்பு விகிதம் கொத்து கொத்தா விழவும் வாய்ப்பு இருக்கு... அப்பறம் முதலிலேயே சொல்லி இருந்தா தடுத்து இருந்து இருப்பேன்னு நீங்க சொல்லக் கூடாது இல்லையா...? அதான்...” என்ற ஹென்றியின் வார்த்தையில் பலமாகச் சிரித்த வரதராஜன்,
 
 
“இழப்பு அவ்வளவு இருக்கும்னா அதுக்கு ஏத்தது போல அமௌன்ட் அதிகமா கேப்பேன் அவ்வளவு தான்... இதெல்லாம் ஒரு ப்ரச்சனையே இல்ல, அப்படியே கேள்வி எழுந்தாலும் இன்னைக்கு எந்தப் பசங்க ஸ்கூலுக்குக் காலையில் தினமும் சாப்பிட்டுட்டு வராங்க சொல்லுங்க... நாங்க தடுப்பூசி போட போறோம்னு சொல்லியும் கொஞ்சமும் பொறுப்பு இல்லாம சாப்பிடாம அனுப்பி இருக்கீங்கன்னு பெத்தவங்க மேலேயே பழியைப் போட்டுக் கோபமா கேள்விக் கேட்டு நம்மகிட்ட காசு வாங்கற பத்திரிகையில் பொறுப்பிலாத பெற்றோர்னு முதல் பக்கத்தில் செய்தியை வர வெச்சிட்டு நாம ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்... பிரச்சனை நம்ம பக்கம் வரவே வராது...” என்றான் திமிரும் ஏளனமுமாக.
 
 
அதில் மூவரும் சேர்ந்து சிரிக்கவும், கேட்டுக் கொண்டிருந்த ஷாலினிக்கு அழுகை அதிர்ச்சி பயம் பதட்டம் என எல்லா உணர்வுகளும் ஒன்று சேர்ந்து அழுத்தியதில் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிய தொடங்கியது. சிறு பெண் தானே அவளுக்குப் பயமே பிரதானமாக இருக்க... பல பேரின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் என்ன செய்வது அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்றெல்லாம் அந்த நேரம் அவளுக்கு யோசிக்கக் கூடத் தோன்றவில்லை.
 
 
இவ்வளவு பெரிய விஷயத்தை இங்கு வந்து பேசுகிறார்கள் என்றால் இங்கு இப்போது யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் தானே இருக்கும், எப்படியாவது அவர்கள் கண்ணில் படாமல் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு இருந்தது.
 
 
அதற்கேற்றார் போல் அவர்கள் கொஞ்சம் உள்பக்கமாக நகரத் தொடங்கவும் கிடைத்த சிறு இடைவெளியை பயன்படுத்தி வெளியேற முயன்றவள் அப்போதே தன் கையில் இருந்த அலைபேசியைக் கண்டு அதிர்ந்தாள். முன்பே தன்னை இங்குப் பார்த்துவிட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என்று பயந்துக் கொண்டு இருந்தவள், இன்னும் கையில் அலைபேசியோடு பார்த்தால் என்ன செய்வார்களோ என்று எழுந்த பயத்தில் நகரத் தொடங்கிய நொடியே அலைபேசியைக் கீழ் நோக்கி விசிறியடித்தாள்.
 
 
ஷாலினியை பொறுத்தவரை தன்னைக் கண்டால் தண்டனை கிடைக்கும் என்று நினைத்தாலே தவிர, தனக்கே ஆபத்து என்று கூட அவளுக்கு நினைக்கத் தோன்றவில்லை. அவளின் வயதும் அனுபவமும் அவ்வளவு தான்.
 
 
எப்படியோ அவர்கள் கண்ணில் படாமல் படி வரை சென்றவளுக்கு ஆபத்து கோகிலா உருவில் மேலேறி வந்து கொண்டு இருந்தது. அதில் அவளோ திகைத்து நிற்க... “ஹே... கிளாஸ் நேரத்தில் நீ இங்கே என்ன செய்யற...?!” என்றவாறே ஷாலினியை நெருங்கினாள் கோகிலா.
 
 
கோகிலாவின் அதட்டல் குரலில் அந்தப் பக்கமாக நடந்துக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்க... கை கால்கள் எல்லாம் ஷாலினிக்கு நடுங்க தொடங்கியது. ஆரம்பத்தில் சாதாரணமாகவே திரும்பி பார்த்த வரதராஜனுக்குக் கோகிலாவின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் கண்களில் பயமும் கலக்கமுமாகத் தங்களையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தவளை கண்டு லேசாக எழுந்த சந்தேகத்தோடு கூர்மையாகப் பார்க்க தொடங்கினார்.
 
 
அதில் அவளிடம் எதுவோ சரியில்லை என்று புரிய, “கோகிலா அந்தப் பொண்ணை என் ரூமுக்கு கூட்டிட்டு போங்க... நான் வரேன்...” என்றவர், அவர்கள் நகர்ந்ததும், ஹென்றியை அழைத்துச் சென்று ஷாலினி அவ்வளவு நேரம் பயிற்சி செய்துக் கொண்டிருந்த அறையைக் காண்பித்து இங்கேயே அவர்கள் தடுப்பூசி போடும் பணியைச் செய்ய அனைத்து வசதிகளும் செய்து தருவதாகக் கூறி, இன்னும் கொஞ்சம் பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு ஹென்றியை வழியனுப்பி வைத்துவிட்டு தன் அறைக்கு வந்தார்.
 
 
அந்தப் பத்து நிமிட இடைவெளிக்குள் கோகிலாவிடம் மானாவாரியாகத் திட்டுகளைப் பெற்றுக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள் ஷாலினி.
 
 
“உன் பேர் என்ன..?”
 
 
“ஷா... ஷாலினி...”
 
 
“அங்கே என்ன செஞ்சிட்டு இருந்தே...?”
 
 
“டான்ஸ்... டான்ஸ்... ப்ராக்டிஸ்...”
 
 
“ஓ... சரி, அடுத்த வாரம் நம்ம ஸ்கூல்ல வாக்சின் போடறோம்...” என்றதும் பேயறைந்ததைப் போல மாறிய அவளின் முகமே அனைத்தையும் அவள் கேட்டுவிட்டாள் என்பதை வரதராஜனுக்குப் புரிய வைக்க... ஒரு கோணல் சிரிப்போடு தன் மேசை கீழ் இருக்கும் மணியை அழுத்தினார். அதன் பிறகு யாருமே ஷாலினியை பார்க்கவில்லை.
 
 
மதியத்திற்கு மேல் அனைவருக்கும் பயிற்சிகள் தொடங்கிய பிறகும் ஷாலினி வந்து கலந்துக் கொள்ளவில்லை என்பதால் அவளைத் தேடிய ஆயிஷா பலமுறை ஆள் அனுப்பியும் அவள் எங்கும் இல்லை என்ற பதிலே வந்தது.
 
 
வெகு நேரம் காத்திருந்த ஆயிஷாவும் அதன் பின் மற்ற மாணவர்களைக் கவனிப்பதில் இதை மறந்தே போனார். மறுநாள் ஷாலினியின் பெற்றோர் வந்து மகளைக் காணோம் எனத் தேடும் வரை.
 
 
தன் வகுப்பில் கவனமாக இருந்த ஆயிஷாவிற்கு அனைவரும் கூடி நின்று பேசி கொண்டதிலேயே மிகத் தாமதமாக இதைப் பற்றித் தெரிய வந்தது. விஷயம் அறிந்து பதறி போய் விசாரித்தவளுக்கு, நேற்று அவள் பள்ளிக்கு வரவில்லையென்ற பதிலே கிடைத்தது.
 
 
இதில் அதிர்ந்த ஆயிஷா தான் நேற்று அவளைப் பார்த்துப் பேசியதாகக் கூறி ஏதோ தவறு நமக்குத் தெரியாமல் நடந்து இருக்கு எனப் புரிய வைக்க முயல, அதற்கு யாருமே அவளுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அனைவருமே சொல்லி வைத்தது போல் ஒரே விஷயத்தையே சொல்லிக் கொண்டிருந்தனர். அது நேற்று ஷாலினி பள்ளிக்கு வரவில்லை என்பதே...!!
 
 
மறுபடியும் மறுபடியும் ஷாலினியின் வகுப்பாசிரியையோடு பேச முயன்றவளுக்கு, “என் கிளாஸ் பொண்ணு வந்தாளா இல்லையான்னு எனக்குத் தெரியாதா...?! நான் அவளுக்கு அட்டென்டன்ஸ்ஸும் போடலை... ப்ராக்டிஸ் போகப் பர்மிஷனும் கொடுக்கலை... அப்பறம் எப்படி நீங்க பார்த்தீங்க... ஸ்கூலுக்குள்ள அவள் வந்ததுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை... என் வேலை எதுன்னு எனக்குத் தெரியும், புதுசா நேத்து வந்துட்டு எனக்குப் பாடம் எடுக்காதே...” என எட்டு வருடங்களாக இங்குப் பணியில் இருக்கும் தன் கெத்தை காண்பித்தார்.
 
 
சொல்ல வருவதையே காது கொடுத்து கேட்க தயாராக இல்லாதவரிடம் இனி பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவள் தன் பக்கத்தை எடுத்து சொல்ல தலைமை ஆசிரியரிடம் சென்றாள். அங்குமே இதே பதிலையே அவர் சற்று வேறு மாதிரி ஆயிஷா ஏற்றுக் கொள்ளும் வகையில் கூற மொத்தமாகக் குழம்பி போனாள். அவர்கள் இவளை நம்ப வைத்தது ஒன்று தான், ‘அது ஷாலினி நேற்று பள்ளிக்கே வரவில்லை... அவளை ஆயிஷா பார்த்தது அதற்கு முந்தின நாள்..’ என்பதே...!!
 
 
இந்தக் குழப்பத்திலேயே ஆயிஷா இருந்த நேரத்தில் தான் அவளின் உயிர் தோழனான ரவி அந்தப் பள்ளியில் சேர்ந்தது. எப்போதும் புன்னகை தவழும் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளைக் கண்டு அவன் கேள்வி கேட்க, முதலில் எதுவுமில்லை என்று உண்மையைக் கூறாமலே மறுத்தாள்.
 
 
ஆனால் அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் அதை அப்படியே விட்டுவிடாமல் அந்த வார இறுதியில் குடும்பத்தோடு ஆயிஷாவின் வீட்டுக்கு சென்று இருந்த போது மதனிடம் ரவி கேட்க... அவன் அனைத்தையும் கூறிவிட்டான்.
 
 
“என்னன்னே புரியலை ரவி... இவ ஒண்ணு சொல்றா அவங்க ஒண்ணு சொல்றாங்க... ஆனா இவ ஏன் பொய் சொல்ல போறா சொல்லு...” என்று மதன் கேட்கவும், ரவிக்குமே அப்படிதான் இருந்தது என்பதால் எதைப் பற்றியும் சரியான ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தனர்.
 
 
மதன் பேசியதை கேட்டவனுக்குக் குழப்பமாகத் தான் இருந்ததே தவிர உடனே பள்ளியின் மேல் சந்தேகம் எல்லாம் எழவில்லை. அந்தப் பள்ளிக்கு வெளியில் இருக்கும் நற்பெயர் அப்படிப்பட்டது, இங்கு இருப்பவர்கள் யாரும் பயத்தின் காரணமாகக் குறை கூறவோ குற்றம் சுமத்தவோ முன்வராத போது அப்படித் தானே இருக்கும்...!!
 
 
எனவே ஆயிஷாவின் மனநிலையை ஒரு நண்பனாக மாற்ற எண்ணி வகுப்புக்கு இடையில் கிடைக்கும் நேரமெல்லாம் அவளோடு இருந்து வேறு ஏதாவது பேசி தேவை இல்லாமல் யோசித்து ஆயிஷா தன்னைக் குழப்பிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டான் ரவி.
 
 
அப்படிதான் அன்று, இருவரும் இரண்டாம் தளத்தில் படிக்குச் செல்லும் வழியில் நின்று பேசி கொண்டு இருந்தனர். கீழே மைதானத்தில் விளையாட்டு வகுப்பு நடந்துக் கொண்டிருக்க... பூ பந்து விளையாடி கொண்டு இருந்தனர் மாணவர்கள்.
 
 
அதில் ஒருவன் தூக்கி அடித்த பந்து இவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஜன்னலின் மேல் இருக்கும் தடுப்பில் போய் விழுந்தது. மாணவர்களின் கூச்சலில் சந்தோஷத்தில் ஆயிஷாவின் முகத்திலும் ஒரு புன்னகை கீற்று தோன்றியது.
 
 
அப்போது மேலேறி வந்த அதை அடித்த மாணவன், ஜன்னலில் மேல் ஏறி எடுக்க ஆயிஷாவிடம் அனுமதி கேட்க, அவளும் சம்மதித்தாள். சட்டென ஏறி அதை எடுத்துக் கொண்டு திரும்ப முயன்றவனின் கண்களில் அந்த ஓரத்தில் இருந்த அலைபேசி விழவும், சற்று எம்பி அதை எடுத்தான்.
 
 
“மிஸ்.. இது மேலே இருந்தது...” என்று கூறி நீட்டியவனிடம் இருந்து அதைப் பெற்றுக் கொண்டவள், ரவியோடு பேசிக் கொண்டே அதை இப்படியும் அப்படியுமாகப் பார்த்தவள், ‘யாரோடதுனு தெரியலை அலுவலகத்தில் ஒப்படைக்கணும்...’ என்று எண்ணிக் கொண்டு நகர இருந்த நேரத்தில் அந்த அலைபேசியின் நிறம் மாடல் எல்லாம் அன்று ஷாலினி கொண்டு வந்ததைப் போலவே இருக்க...
“ரவி... அன்னைக்கு ஷாலினி இதே போல ஒரு போன் வெச்சிருந்தா...” என்றாள் படபடப்போடு.
 
 
“ஈஸிட்... அது தானான்னு பாரு...”
 
 
ஆயிஷா எவ்வளவு முயன்றும் அது உயிர்த்தெழாமல் போகவே, இத்தனை நாள் ஆகிருச்சு இல்ல... சார்ஜ் இருக்காது, வீட்டுக்குப் போய்ச் சார்ஜ் போட்டு பாரு... அது தானான்னு தெரிஞ்சிடும்...” என்றான்.
 
 
அதற்குச் சம்மதித்தவள், அதே போலச் செய்ய, உயிர்த்தெழுந்த அந்த அலைபேசி தனக்குள் பல உண்மைகளை மறைத்து வைத்து உறங்கி கொண்டு இருந்தது வெளிவந்தது.
 
 
அதில் ஷாலினியையும் அவள் எடுத்திருந்த புகைப்படம் காணொளி என ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு அதில் இருந்த நேரமும் தேதியும் தான் இத்தனை நாளாகப் பேசிய அனைத்துக்கும் சான்று கிடைத்து விட்டது என்றே தோன்ற... அடுத்து அவள் பார்த்தது மொத்தமாக அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
 
உடனே மதன் ஊரில் இல்லாததால் ரவியை அழைத்துத் தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னவள், பகிர்ந்துக் கொண்ட விஷயங்களும் அவள் காண்பித்த ஆதாரங்களும் ரவியைத் திகைக்கச் செய்தது.
ஒரு சிறு பெண்ணுக்கு நடந்த அநியாயத்தை அப்படியே விட மனம் இல்லாமால் இருவரும் இதில் அடுத்துத் தாங்கள் என்ன செய்ய முடியும் எனப் பார்க்க தொடங்கினர்.
 
 
ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் அதிகம் தலையிட்ட ஆயிஷாவின் மீது வரதராஜின் உத்தரவின் பேரில் ஒரு கண்ணைப் பதித்து இருந்தவர்களுக்குச் சமீபத்திய அவர்களின் நடவடிக்கை சந்தேகத்தைத் தர, விஷயம் வரதராஜின் காதுக்குச் சென்றது.
 
 
உடனே அவர்களின் தினப்படி நடவடிக்கைகள் முதல் அலைபேசி உரையாடல் வரை கண்காணிக்கப்பட்டதில் அவர்களுக்கு உண்மை தெரிய வந்திருப்பது உறுதியாக, தெரியவந்த உண்மை வெளிவராமல் இருக்க இருவரையும் தீர்த்து கட்டும்படி உத்தரவு வந்தது.
 
 
இருவரையும் சேர்த்து முடிப்பதே திட்டம், ஒருவர் முடிந்து அடுத்தவர் என்று திட்டமிட்டால் மற்றவர் உஷாராக வாய்ப்பு இருக்கிறது என்பதனால் தொடர்ந்து ஆட்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். பள்ளியை தவிர இருவரும் வெளியில் எங்கும் தனியாகச் சந்திக்கவே இல்லை... பள்ளிக்குள் வைத்து இப்போதைக்கு வேண்டாம் என்பது வரதராஜனின் உத்தரவு.
 
 
வேறு வேறு நேரத்தில் பள்ளிக்கு வருபவர்கள் திரும்பச் செல்வதும் அப்படியே இருக்க... சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். இதற்கிடையில் ஊரில் இருந்து திரும்பிய மதனுக்கு அனைத்தையும் ஆயிஷா ஆதாரங்களோடு விளக்கினாள்.
 
 
ஒரு வழக்கறிஞனான தானே இதை எப்படிப் பார்க்க வேண்டுமோ அப்படிப் பார்த்துக் கொள்வதாகக் கூறியவனுக்கு, அந்தச் சிறு பெண்ணின் குறும்பும் குழந்தை தனமுமான முகமும் மன கண்ணில் தோன்றி இம்சித்தது. இவர்களைச் சும்மா விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்தவன், நாளை ஞாயிறு என்பதால் திங்களன்று இதை வெளிக் கொண்டு வர முடிவெடுத்து ரவியை இன்று மாலை வீட்டிற்கு வருமாறு பணித்தான்.
 
 
இதைப் பற்றி ஆயிஷா ரவியிடம் பள்ளியில் கூறி இன்று மாலை வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தாள். அன்று மாலை ரவி மனைவியின் உடல்நிலையைக் காரணம் காண்பித்து அலைபேசியில் வரவில்லை என்று பேசியதும் பின் வந்ததும் என அனைத்தும் இவர்களைக் கண்காணித்தவர்களுக்குத் தெரிய வர இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்ப்படுத்திக் கொண்டார்கள்.
 
 
ஆனால் இதில் ஆயிஷா மதனிடம் கூறியதை பற்றி ரவியிடம் நேரில் கூறியது இவர்களுக்குத் தெரிய வராமல் போனதே அவன் உயிர் பிழைக்க வாய்ப்பானது.
 
 
வீட்டிற்குள் நுழைந்த மதன் முதலில் கண்டது இவர்களின் இறந்த உடல்களைத் தான்... அதிலேயே ஸ்தம்பித்துப் போய் இருந்தவனுக்கு வேறு எதுவும் அந்த நேரம் நினைவில் இல்லை... விஷயம் தெரிந்த உடனே அவளை இதில் இருந்து உதுங்கி இருக்கச் செய்திருந்தாள் இன்று அவளுக்கு இந்த நிலை இல்லை என்று எண்ணியே நானே உன்னைக் கொன்னுட்டேன் என புலம்பிக் கொண்டிருந்தான். அதன் பிறகு நடந்தது என்ன என்று புரிந்தாலும் அதை நிரூபிக்கத் தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதாலேயே அமைதியாகி போனான்.
 
 
வரதராஜனும் ஆயிஷவிடமிருந்துக் கொண்டு வந்த ஆதாரங்களை என்ன என்று கூடத் தொட்டுப் பார்க்காமல் தூக்கி கடலில் வீச சொல்லி இருந்தான். இதில் யாரும் அறியாமல் ஆயிஷா செய்திருந்த ஒரு காரியமே இந்த வழக்கின் முக்கியத் திருப்புமுனையாக இருந்தது...!
 
 
ஷாலினியின் அலைபேசியில் இருந்த ஆதாரத்தை மட்டும் அல்ல, தாங்கள் கண்டுப்பிடித்தையும் ஆரம்பத்தில் இருந்து தான் சொல்ல முயன்ற போது தங்களுக்குக் கிடைத்த பதில், அடுத்து என்ன செய்ய இருக்கிறார்கள் என்று அனைத்தையும் ஒரு காணொளியாகத் தயார் செய்து அதைப் பென்டிரைவில் காப்பிச் செய்து வைத்து இருந்தாள்.
 
 
ஒருவேளை ஆயிஷாவின் உள்ளுணர்வு ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்று எச்சரித்து இருக்குமோ என்னவோ...!! அனைத்தையும் பதிவு செய்ததோடு அதைச் சமையல் அறையில் வழக்கமாகத் தான் பணத்தை ஒளித்து வைக்கும் இடத்தில் வைத்திருந்ததனால் அது மற்றவர் கண்களுக்குத் தெரியாமலே போனது.
 
 
இவை அனைத்தும் இப்போது வெளியில் வர காரணம் மதன். அவனே வெளியில் வந்த பிறகு தன் மனைவியின் நினைவில் அந்த வீட்டில் அவள் அதிகம் உபயோகித்த ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்துக் கொண்டிருந்த போதே இது கிடைத்தது.
 
 
இந்த ஆதாரத்தையும் ஒரு கடிதத்தையும் சேர்த்து சஞ்சய் வீட்டில் வந்து மதன் இறந்ததற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சஞ்சயின் கைக்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து இருந்தான் மதன்.
 
 
வணக்கம் ஏசிபி சார்,
இந்த இரண்டு நாளுக்குள்ளே நீங்க கேசை கண்டுப்பிடித்து இருப்பீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்... நீங்க கண்டுபிடித்ததற்கான எல்லா ஆதாரம் இதில் உங்களுக்கு இருக்கு...
 
 
தேவை இல்லாமல் உங்களை இதில் நுழைத்து விட்டதாக நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்... உங்களிடம் இந்த ஆதாரத்தைக் கொடுக்கும் முன்னே உங்களைப் பின் தொடர்ந்து வந்ததற்கு என்னை மன்னிச்சுடுங்க... என் பயமே உங்களைப் பின் தொடர்ந்து அதை ஊர்ஜித படுத்திக் கொள்ளச் செய்தது...
 
 
நீங்க என்னைக் கண்டுபிடித்து விடக் கூடாதுன்னே புர்கா அணிந்து பின் தொடர்ந்தேன்... அப்போதே உங்க மனைவி அந்தப் பள்ளியில் வேலை செய்வது தெரிய வந்தது... சார் தயவு செய்து அவங்களை அந்த வேலையை விடச் சொல்லுங்க சார்... அது பள்ளிக் கூடம் இல்லை, சுடுகாடு... என்று தொடர்ந்த கடிதத்தில் அடுத்து அவன் இங்கு வந்து சஞ்சய்யை சந்தித்ததற்கான காரணமும் இருந்தது.
 
 
அதில் எழுதி இருந்த விஷயம் இது தான். படித்து நல்ல நிலையில் இருந்தவன் என்பதோடு சிறையில் எந்த வம்பு தும்புக்குச் செல்லாமல் இருந்த மதனிடம் சிறை அதிகாரிக்குக் கொஞ்சம் பிடித்தம் இருந்தது. வழக்கில் எந்த உதவி வேணுமானாலும் செய்யத் தயார் என அவர் கேட்டும் மேல் முறையீடு செய்யச் சொல்லியும் இனி வெளியே போய் என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணமே மதனை அமைதி காக்க வைத்தது.
 
 
அவரிடம் மதன் கேட்ட ஒரே உதவி செய்தித்தாள் படிக்கக் கேட்டது தான். அதை அவரும் மறுக்காது செய்தார். அதன் மூலமாகத் தான் சஞ்சய்யை பற்றி மதன் அறிய நேர்ந்ததும் அவனின் அதிரடியை பற்றித் தெரிந்து கொண்டதும்...!! சஞ்சயை காண்பதற்காகவே வெளியில் வந்தவன் தான் மதன்.
 
 
இத்தனை மாதம் இல்லாமல் அவன் வெளியில் வர முயற்சிப்பதற்கு அதிகாரியும் துணை செய்ய எந்தச் சிக்கலும் இல்லாமல் விரைவாகவே வெளியில் வந்தவன், தன் வாழ்வில் நடந்ததைப் பற்றிச் சஞ்சயிடம் விளக்கி புரிய வைத்து இருக்கலாம் தான். ஆனால் அது எத்தனை தூரம் சாத்தியப்படும் எவ்வளவு நம்ப வைக்க முடியும் எனப் புரியாமல் மதன் எடுத்த முடிவு தான் சஞ்சய்யை தானாக இந்த வழக்கை பற்றிச் சித்திக்க வைத்து ஆராய உள்ளே கொண்டு வருவது... அதற்கு அவன் வீட்டில் சென்று இவன் இறந்தால் யார் என்ன என்று ஆராயத் தொடங்குவான் இல்லையா, தானாகச் சொல்வதை விட ஒவ்வொன்றாகத் தெரிய வரும் போது அதில் மேலும் உள்ள பல கோணங்களை ஆராயத் தோன்றி அனைத்து உண்மைகளையும் வெளிக் கொண்டு வருவான் என்பதே மதனின் நம்பிக்கை. (அதைச் சஞ்சய்யும் காப்பாற்றிவிட்டான்...)
 
 
இவற்றை எல்லாம் பத்திரிகை மற்றும் தொலைகாட்சியாளர்களிடம் தகுந்த ஆதாரத்தோடு விளக்கியவன், ரவி மனைவி இறந்ததும் தற்கொலை இல்லை... ஏன்னா இந்த வழக்கை பற்றி எல்லாமே அவங்களுக்கு ரவி மூலமா தெரிஞ்சு இருக்கு, அதான் மதன் சந்தேகப்பட்டு ரவியைக் கொன்னுட்டதா காவலர் போய்ச் சொன்ன போது கேள்வி கேட்டுச் சண்டை போட்டு இருக்காங்க... இதை நான் சும்மா விட மாட்டேன்னு சொன்னவங்க, அடுத்தச் சில நிமிடத்தில் தூக்கு போட்டுக்கிட்டாங்கன்னு கேஸ் முடிஞ்சு இருக்கு... இது மட்டுமல்ல மனோவின் மரணத்துக்கும் வரதராஜன் தான் காரணம் என்பதையும் விளக்கி இன்று சரண்யாவிற்கு நடந்ததையும் விவரித்து அதன் ஆதாரத்தோடு அவள் காப்பாற்றப்பட்டு விட்டதையும் தெரிவித்தான்.
 
 
இவை அனைத்தையும் வீட்டில் இருந்து தொலைகாட்சி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த நீரு, இத்தனை மாதமாக விடை தெரியாது இருந்த கேள்விக்கு இரண்டே நாளில் சஞ்சய் விடை கண்டதை விழி விரிய பார்த்தவாறே அமர்ந்து இருந்தாள்.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 10 months ago
Posts: 329
Topic starter  
கனவு – 20
 
 
வீடு திரும்பிய சஞ்சய்யை கண்களில் எதிர்ப்பார்ப்பும் ஆவலும் பொங்க எதிர் கொண்டாள் நீரு. அவளைக் கேள்வியாகப் பார்த்தவாறே உள்ளே வந்தவன் குளித்து உடை மாற்றி டீ போட்டுக் கொண்டு வந்து அமரும் வரை அவன் இருக்கும் இடத்திலேயே சுற்றி சுற்றி வந்துக் கொண்டு இருந்தவளின் பார்வை அவனையே தொடர்ந்துக் கொண்டிருந்தது.
 
 
இதைக் கண்டும் காணாமல் அமர்ந்து இருந்தவன், தன் போக்கில் தொலைக் காட்சியில் பார்வையைப் பதித்தவாறே இருக்க... அவனைப் பார்ப்பதும் யோசனையில் ஆழ்வதுமாகவே இருந்தாள் நீரு.
 
 
இப்படியே இரவு உணவு நேரம் வரை இருந்தவளின் பார்வையை உணர்ந்திருந்தாலும் சஞ்சய் எதையும் வெளிக்காட்டி கொள்ளவே இல்லை... சாப்பிட்ட பின்னும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்துவிட்டவனை அறையின் வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவள் கைகளைப் பிசைந்தவாறே நெருங்குவதும் பின் ஏதோ தயக்கத்தோடு திரும்பிச் செல்வதுமாகவே இருந்தாள்.
 
 
மூன்று நான்கு முறை இப்படியே அவள் நடை பழகிக் கொண்டிருக்கவும் திரும்பி அவளைப் பார்த்தவாறு அமர்ந்து, “என்ன குல்பி, மாமன் மேலே பயங்கர லவ் வந்துடுச்சு போல... எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தவிக்கறீயா என்ன...?! வார்த்தையில் தான் சொல்லணும்னு இல்ல... சும்மா கண்ணை மட்டும் காட்டு போதும், எப்படிச் சிட்டா பறந்து வரேன்னு பாரு...” என்று வம்பிழுக்கும் குரலில் கூறி கண்சிமிட்டியவனைக் கண்டு, “ச்சீ போ...” என முகத்தைச் சுழித்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள் நீரு.
 
 
மீண்டும் அடுத்த ஐந்து நிமிடத்தில் அதே போலக் கைகளைப் பிசைந்துக் கொண்டு வந்து நின்றவளை திரும்பி பார்க்காமலேயே கைகளைப் பற்றி இழுத்து தன் அருகில் அமர வைத்தவன், “என்கிட்டே உனக்கு என்ன டி தயக்கம்... என்ன சொல்லணுமோ சொல்லு...” என்றான் குறும்பை கைவிட்ட குரலில்.
ஒரு தயக்கத்தோடே சஞ்சய்யை நிமிர்ந்து பார்த்தவள், “நீ... எனக்கு... எனக்கு... ஒரு ஹெல்ப் செய்வியா...!?” எனக் கேட்போமா வேண்டாமா என்று இன்னமும் முடிவுக்கு வராத குரலிலேயே கேட்டாள் நீரு.
 
 
“ஹெல்ப்ப்ப்ப்ப்...?!! நான் உனக்கானவன் குல்பி, இதைச் செய்னு தான் சொல்லணுமே தவிர, செய்வியான்னு கேக்க கூடாது...” என்றவன், அவள் முகம் அப்போதும் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு, “என்ன விஷயம் பேபி...?’ என்றான் அவளின் வலது கரத்தை எடுத்து ஆறுதலாகத் தன் கரங்களுக்குள் வைத்துத் தடவிக் கொடுத்தவாறே.
 
 
“நீ... நீ... பழைய கேஸ் எல்லாம் சால்வ் செய்யற இல்ல... எனக்கு... எனக்கும் ஒரு கேஸ்... செய்வியா...?! பிளீஸ்...!!” என்று எங்கு மறுத்துவிடுவானோ என்ற பயம் குரலிலும் செய்துக் கொடேன் என்ற ஆவல் கண்களிலும் தெரிய கேட்டவளை கண்டவன், “என்ன கேஸ்...?” என்றான்.
 
 
நீருவின் அப்பா ரங்கராஜனும் அம்மா திலகாவும் வேறு வேறு பிரிவை சேர்ந்தவர்கள். ஒரே பகுதியில் வசித்த போது விரும்பி, திலகாவின் வீட்டில் முறை பையனோடு திருமணம் பேசவும், வேறு வழியில்லாமல் இரு வீட்டினரும் சம்மதிக்க ஒரு சதவீகிதம் கூட வாய்ப்பில்லை என்பதனால் வீட்டில் இருந்து வெளியேறி மணந்துக் கொண்டவர்கள்.
 
 
ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்டவர்கள் தான் என்றாலும் முதல் மகன் ஆகாஷ் பிறந்த பிறகு ஒரளவு சீரான வாழ்க்கை வாழ தொடங்கினார்கள். ஆனால் அதற்கும் அடுத்த மூன்று வருடங்களில் பிரச்சனையாக வந்து சேர்ந்தான் திலகாவின் முறை பையன் இன்ஸ்பெக்டர் மதிவாணன்.
 
 
ரங்கராஜன் வேலை மதிவாணனின் உபயத்தால் போய்விட, வேறு வேலை தேடி ரங்கா எங்குச் சென்றாலும் அங்கு அவருக்கு முன் மதிவாணனின் அதிகாரம் தன் கடமையைச் செவ்வன செய்திருந்தது.
 
 
இனி அடுத்து என்ன என்ற கேள்வியோடு நின்றவர்களுக்குக் கை கொடுத்தார் ரங்கராஜனின் நண்பன் சபாபதி. எதிர்ப்பாராமல் வழியில் ரங்காவை கண்டவர், அவரின் நிலை அறிந்து தன்னோடு ஊருக்கு அழைத்துச் சென்று தான் வேலை செய்யும் பொன்மகள் சிட் பண்ட் நிறுவனத்திலேயே வேலையும் வாங்கிக் கொடுத்துத் தனக்குப் பக்கத்து வீட்டிலேயே குடியும் வைத்தார்.
 
 
அது ஒரு சிற்றூர். கொஞ்சம் குடும்பங்களே உள்ள ஊர், என்பதோடு அருகருகில் இருந்த எட்டு சிற்றூர்களுக்குச் சேர்த்து ஒரே கடன் கொடுப்பது நகைகளை அடமானம் வைத்துப் பணம் தருவது, சிறுக சிறுக சேர்த்த சேமிப்பை பல்வேறு திட்டங்களில் பிரித்து வைப்பு நிதியாகப் பாதுகாப்பது என்று இரண்டு வருடங்களாக மக்களிடையே நம்பிக்கையைப் பெற்று இருந்த நிறுவனம் அது.
 
 
அதில் பணிபுரிந்த நண்பர்கள் இருவரும் தங்கள் பழைய நட்பை புதுபித்துக் கொண்டதோடு அவர்களின் மனைவிகளுக்கும் அதைப் பரிச்சயம் செய்திருந்தனர்.
 
 
இப்படியே நாட்கள் அழகாகச் செல்ல, அடுத்த வருடமே சபாபதி தன் நிலத்திலேயே விவசாயம் செய்துக் கொள்வதாகக் கூறி வேலையை விட்டு நின்றார். முன்பே அதில் விவசாயம் நடந்துக் கொண்டு தான் இருந்தது என்றாலும் இப்போது மனைவியின் வழியில் அவருக்கு வந்த சொத்தையும் விற்று அருகில் இருந்த நிலத்தையும் வாங்கி இருந்தவர், உடன் இருந்து செய்தால் தான் சரி வரும் என்றே இந்த முடிவுக்கு வந்தார்.
 
 
அடுத்த இரண்டு வருடங்களில் நேத்ரா பிறந்த நேரம், ரங்காவுக்குப் பதவி உயர்வு கிடைக்கவும் அவளை அந்த வீட்டின் அதிர்ஷ்ட தேவதையாகவே பார்த்தனர் அனைவரும். அதன் பின் எந்தத் தொய்வும் இல்லாத ஏறுமுகத்திலேயே வாழ்க்கை சென்றது.
 
 
நேத்ராவுக்கு நான்கு வயதாகும் போது ரங்கா அந்த நிறுவனத்தின் மேனேஜராக ஆகி இருந்தார். அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு சிறு நிலத்தை வாங்கி அதில் தற்சமயம் குடி இருப்பதற்கு ஏற்றது போல் சிறு வீட்டையும் கட்டி முடித்து இருந்தார்.
 
 
மொத்த நிலத்தையும் வளைத்து வீடு கட்ட இப்போது வசதி இல்லை என்பதால் இவர்கள் தங்குவதற்கு ஏற்றது போலக் கட்டிக் கொண்டவர்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற இடத்திலும் கட்ட நினைத்திருந்தனர்.
 
 
வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றுக் கொண்டிருந்த நாட்கள் அவை. பெற்றவர்களுக்கு மட்டுமல்ல அவளை விட ஐந்து வயது பெரியவனான ஆகாஷுக்குமே நீரு என்றால் உயிர். மூவரின் அன்பில் தினம் தினம் ராணியாக உணர்ந்துக் கொண்டிருந்தவளுக்கு அதே அளவு அன்பும் அரவணைப்பும் பாசமும் சபாபதி குடும்பத்தில் இருந்தும் கிடைத்தது.
 
 
ஒரே மாற்றாக சபாபதியின் மனைவி ஜோதியின் அம்மா பார்வதியிடம் இருந்து தவிர, அவருக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது. எதாவது குத்தி காண்பித்துப் பேசுவதும் முகத்தில் அடித்தது போலத் திலகாவையும் நீருவையும் திட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு எங்கே தங்கள் சொத்துக்காக இவர்கள் வந்து ஒட்டிக் கொண்டார்களோ என்ற எண்ணமே இருந்தது.
 
 
இவர்கள் கலப்புத் திருமணம் செய்தவர்கள் என்பதே அந்தக் கிராமத்து மனுஷிக்கு இவர்களைப் பிடிக்காமல் போக முக்கியக் காரணமாக இருந்தது. இதையும் விட நீரு அவர்களை அழைக்கும் மாமா, அத்தை என்ற அழைப்பும் அவருக்குத் தன் பேரன் கிருஷ்ணாவின் வாழ்க்கை குறித்த பயத்தை உண்டு செய்ததே அவரின் அத்தனை நடவடிக்கைக்கும் காரணம்.
 
 
அவருக்கு அவரின் மகன் வழி பேத்தியை பேரனுக்குத் திருமணம் செய்ய ரொம்பவே ஆசை... அப்போதே அத்தனை சொத்தும் வெளியில் போகாது என்ற எண்ணம் வேறு இருந்தது. ஆனால் அவர்கள் அப்போது சிறு பிள்ளைகள் என்பதை அவர் மறந்தே போனார்.
 
 
ஆனால் அதற்கு மாறாகச் சபாபதி ஜோதி கொடுத்த பாசமே இவர்களை அமைதியாகப் பொறுத்துப் போகச் செய்தது. பார்வதியம்மாள் ஊரிலிருந்து வரும் நாட்களில் நீரு அந்தப் பக்கம் கூடச் செல்ல மாட்டாள். அவர்களின் இந்தக் குணம் பிடிக்காததினால் ஆகாஷ் எப்போதுமே அங்குச் செல்வதை விரும்ப மாட்டான்.
 
 
சிறு வயதிலேயே தெளிவான சிந்தனையோடும் புத்தி கூர்மையோடும் இருந்த ஆகாஷ் நீருவை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்வான். அவனுக்கு பார்வதியம்மாள் நடவடிக்கைகளை யாரும் தட்டி கேட்காததும் கண்டிக்காததும் அறவே பிடிக்கவில்லை. அதனால் சபாபதி மற்றும் ஜோதியின் மேல் அவனுக்கு மிகுந்த கோபம் உண்டு.
 
 
ஆகாஷும் கிருஷ்ணனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் படிப்பில் போட்டி நடக்கும், ஒரு முறை இவன் வென்றால் மறுமுறை அவன் வெல்வான். அப்படி ஆகாஷ் வெல்லும் சமயங்களில் அவனின் உயிரான நீருவை அழ வைத்து தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்வான் கிருஷ்ணா. இதனால் அவனைக் கண்டாலே நீருவுக்கும் பிடிக்காது.
 
 
பார்வதியம்மாள் போலவே நடந்துக் கொள்ளும் கிருஷ்ணாவை அண்ணன் தங்கை இருவருக்குமே எப்போதும் பிடிக்காது. இப்படியே நாட்கள் சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் தான் நீருவின் ஐந்தாவது வயதில் திலகா மஞ்சள்காமாலை தாக்கி அதை முன்பே கண்டுக் கொள்ளாமல் விட்டதினால் நோய் முற்றி இறந்து போனார்.
 
 
அதில் அந்தக் குடும்பமே நிலைக்குலைந்து போனது. தாயை தேடி அழும் நீருவை சமாளிப்பதே தந்தைக்கும் தனயனுக்கும் பெரிய விஷயமாகப் போனது. ஆனால் தங்கள் துக்கத்தையும் மறைத்துக் கொண்டு சிறியவளின் துயரை துடைப்பதே முக்கியம் என்று செயல்பட்டனர் இருவரும்.
 
 
திலகாவை நினைவுப்படுத்தும் எதையும் நீருவின் முன் கொண்டு வராமல் பார்த்துக் கொண்டனர். நீருவின் நலனே முக்கியமாகப் பட்டதில் ஆகாஷுக்கு கிருஷ்ணனுடனான போட்டி எல்லாம் கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதில் பார்வதியம்மாளின் துர்போதனைகளைக் கேட்டே வளர்ந்தவன் என்பதால் தன் அருகில் நிற்க கூட அவர்களுக்குத் தகுதி இல்லை என்ற எண்ணத்தில் இருந்த கிருஷ்ணனின் மனம் படிப்பிலும் ஆகாஷ் தனக்கு அடுத்த இடத்துக்கு வந்துவிட்டதில் சற்று மட்டுப்பட்டது.
 
 
இப்படியாக ஒரு வருடம் சென்று இருந்த போது தான், ரங்கா வேலை செய்துக் கொண்டிருந்த நிறுவனம் நஷ்டம் அடைந்ததாகக் கூறி இழுத்து மூடப்பட்டது. ஆனால் அதில் மேனேஜர் பொறுப்பில் இருக்கும் ரங்காவுக்கு அதன் வரவு செலவு பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பினார்.
 
 
இதில் பணம் போட்டவர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள். எத்தனை பேரின் உழைப்பு எத்தனை பேரின் கனவு என்று தெரிந்தும் அவர்கள் ஏமாற்றப்படுவதை விரும்பாதவர், அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைச் சரியாகத் திரும்பத் தரவில்லை என்றால் நிர்வாகம் ஏமாற்றியதை தக்க ஆதாரத்தோடு நிருபிப்பதாகக் கூறி எச்சரித்தார்.
 
 
அன்று இரவே நிறுவனத்தின் நஷ்டத்துக்கும் நிறுவனம் மூடப்பட்டதுக்கும் ரங்கா அங்குக் கையாடல் செய்ததே காரணம் என்று கூறி, அவரைக் கைது செய்யக் காவலர் படை ரங்காவின் வீட்டிற்குள் நுழைந்தது. முற்றிலும் இதை எதிர்ப்பாராமல் திகைத்த ரங்கா பேசக் கூட வாய்ப்பளிக்காமல் அவரை அப்படியே சட்டையைப் பிடித்துத் தரதரவென வீதியில் கோணல் சிரிப்போடு இழுத்துச் சென்றான் அப்போதே ஒரு மாதத்துக்கு முன்பு அந்தப் பகுதிக்கு மாற்றலாகி வந்த இன்ஸ்பெக்டர் மதிவாணன்.
 
 
மாலை வீடு திரும்பிய பிறகே பிள்ளைகளுக்குச் சமைத்து ரங்கா அவர்களை அமர வைத்துப் பரிமாறிக் கொண்டு இருந்த போதே திடுதிப்பென்று உள்ளே நுழைந்தவர்களின் காலில் பட்டு உணவெல்லாம் வீணாக... பசியோடும் பயத்தோடும் துணைக்கு வேறு யாரும் வராத நிலையில் தந்தையின் பின் அவரை விட்டுவிடுமாறு கதறியவாறே பசியில் அழும் தங்கையை அந்த வயதிலும் முதுகில் தூக்கி கொண்டு சென்றான் ஆகாஷ்.
 
 
காவல் நிலையம் வரை அப்படியே இழுத்துச் செல்லப்பட்ட ரங்காவை வழி நெடுங்கிலும் இருந்த ஒட்டு மொத்த மக்களும் தங்கள் பணத்தைக் கையாடல் செய்ததற்காகத் தூற்றி கொண்டும் சாபம் கொடுத்து கொண்டும் இருந்தனர்.
 
 
சிறையில் தள்ளப்பட்ட ரங்காவுக்குத் தன் பக்க நியாயத்தைச் சொல்ல மட்டுமல்ல வாயை திறக்க கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. வெளியேவே தடுத்து நிறுத்தப்பட்ட ஆகாஷும் நீருவும் அழுது கதறி கெஞ்சியும் ரங்காவை பார்க்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
 
அவர்கள் ரங்காவின் பிள்ளைகள் என்ற வெறுப்பே மதிவாணனை பொல்லாதவனாக மாற்ற போதுமானதாக இருந்தது. இங்கு இவர்களின் கதறல் சத்தம் கேட்டு உள்ளே ரங்கா கதறியதை கண்டு கொரூரமாகத் திருப்தி பட்டுக் கொண்டான் சிறு வயதில் இருந்து திலகாவை விரும்பிய மதிவாணன்.
இரவு முழுவதும் பசியிலும் தந்தையைப் பற்றிச் சொல்லி அண்ணன் கதறுவது புரிந்தும் புரியாமலும் அழுது அழுது அவன் மேலேயே தூங்கி போனாள் ஆறு வயது நீரு. இரவு ஊர் அடங்கிய பிறகு ஏகாம்பரத்துக்கு அழைத்த மணிவாணன் இந்த வழக்கை இன்னும் எப்படி எல்லாம் ரங்காவின் மேல் போடலாம் அவரை எப்படி வெளியேவே வர முடியாது செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்ததைச் சிறையின் உள்ளே இருளில் அமர்ந்திருந்த ரங்கா தெளிவாகவே கேட்டார்.
 
 
இப்போதே செய்யாத தவறுக்கு வீதியெல்லாம் இழுத்து வரப்பட்ட அவமானத்தில் கூனி குறுகி போய் இருந்தவர் மேலும் அவர்களின் திட்டம் தெரிய வரவும் அதிர்ந்து போய்விட்டார். தன் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுமைக்கும் அவர்களைத் துரத்தும் அவப்பெயரை அவர்களுக்கு வர விடக் கூடாது என்று முடிவு செய்தவர், தன் சட்டையைக் கொண்டு அங்கிருந்த கம்பியில் தூக்கிட்டுக் கொண்டார்.
 
 
அதே சிறையில் இருந்த மற்றொரு கைதியின் உறக்கம் கலைந்த பிறகான அலறலை கேட்டே அந்தக் காவல் நிலையம் அன்று கண்விழித்தது. அதன் பிறகு பரபரப்பான காவலர்கள் ரங்காவை இறக்கி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல... என்ன நடக்கிறது, ஏன் எங்குத் தன் தந்தையைத் தூக்கி செல்கிறார்கள் என்று புரியாமல் அந்தப் பதினொரு வயது பாலகன் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க யாரும் முன்வரவில்லை. அவன் தந்தை இறந்த செய்தி கூட அவ்விருவருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
 
 
அவரைக் கொண்டு சென்ற வாகனத்தின் பின்னே நீருவை தூக்கிக் கொண்டு ஓடியவனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாமல் கீழே விழுந்தவன், எழுந்து நின்று அழும் தங்கையைச் சமாதனப்படுத்த முடியாமலும் அவளின் பசியைப் போக்க வழி தெரியாமலும் தவித்துத் தன் தந்தையை ஏற்றி சென்ற வாகனத்தில் வந்தவர்களின் உடையை வைத்து ஓரளவு புரிந்துக் கொண்டு அந்த ஊரில் இருந்த ஒரே அரசாங்க மருத்துவமனைக்குக் காலில் செருப்பு கூட இல்லாமல் அவ்வளவு தூரம் நடந்தே தங்கையைத் தூக்கிக் கொண்டு வந்து சேர மதியம் ஒரு மணியைக் கடந்து இருந்தது.
 
 
அங்கு நேற்றிலிருந்து கண்ட காவலர்களை அடையாளம் கண்டு அவன் சென்று நின்ற இடம் பிணவறையின் வாசல். புரிந்தும் புரியாமலும் ஒரு பயம் மனதை அழுத்த கலவரமான முகத்தோடு ஆகாஷ் காத்திருக்கும் போதே அவனை நெருங்கிய மருத்துவர் சடலத்தை ஒப்படைக்கப் பெரியவர்களின் கையெழுத்து வேண்டுமெனக் கூற...
 
 
தந்தை இறந்ததை எண்ணி அழுவதா இல்லை தங்களுக்கென்று கையெழுத்து போட்டு தந்தையின் சடலத்தை வாங்க கூட யாருமில்லை என்று எண்ணி அழுவதா எனத் தெரியாமல் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தவனின் அழுகை எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல இருந்தது அங்கிருந்த காவலர்கள் மற்றும் மருத்துவர்களின் நடவடிக்கை.
 
 
“இங்கே பாரு பொழுது சாயறதுக்குள்ளே யாரையாவது கூட்டிகிட்டு வந்தா உன் அப்பன் பொணத்தைத் தருவோம்... இல்ல அநாதை பொணம்னு தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்போம்...” என்றவர்களின் வார்த்தையில் தன்னை மீட்டெடுத்துக் கொண்ட அந்தப் பாலகன் எங்குச் செல்வது யாரை அழைப்பது எனக் கண்ணீர் வழிய அப்படியே திக் பிரமையோடு நின்று யோசித்தவனுக்கு நினைவுக்கு வந்த ஒரே பெயர் சபாபதி.
 
 
அவரைத் தவிர வேறு யாரையும் இவர்களுக்கு அவ்வளவாகப் பரிச்சயம் கூடக் கிடையாதே...! இருந்த ஒரே ஒரு நம்பிக்கையை நோக்கி உயிரை கையில் பிடித்துக் கொண்டு உயிரான தங்கையைத் தோளில் சுமந்துக் கொண்டு மீண்டும் ஊரை நோக்கி வேற்று காலோடு ஓடினான் ஆகாஷ்.
 
 
ஆனால் அங்கு அவனை வரவேற்றது சபாபதியின் பூட்டியிருந்த வீடே. இதில் முற்றிலும் அதிர்ந்து செயல் இழந்து போய் நின்றவனுக்கு அடுத்து என்ன என்ற கேள்வி கூடத் தோன்ற முடியாத அளவு மனம் உறைந்து போய் இருந்தது. பதட்டத்தோடும் பயத்தோடும் அக்கம் பக்கம் உள்ளவர்களை ஆகாஷ் விசாரித்தும் பதிலளிக்க யாரும் அங்குத் தயாராக இல்லை.
 
 
அவர்களுக்கும் ரங்காவின் இறப்பு செய்தி எட்டி இருந்தது தான். ஆனால் அதற்காக எல்லாம் கவலைப்பட யாரும் அங்கு தயாராக இல்லை... தங்கள் பணத்தை ஏமாற்ற நினைத்தவனுக்குச் சரியான தண்டனை என்றே நினைத்தனர்.
 
 
அந்தப் பாலகனையோ அவன் கதறலையோ அவனின் கையில் இருந்த குழந்தையின் நிலையையோ பற்றி யோசிக்கக் கூட அங்கு யாருக்கும் மனமில்லை. நேரம் வேறு கடந்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தவன், இனியும் இங்கு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றுணர்ந்து கிளம்ப... இரண்டு வீடு தள்ளி அமர்ந்திருந்த பாட்டி, “அவுங்க நேத்தே அவசர அவசரமா வீட்டை பூட்டிகிட்டு போய்ட்டாங்க...” என்றார் நீட்டி முழக்கி ஆகாஷின் காதில் விழுமாறு.
 
 
அதில் நடையைச் சற்று நிறுத்தியவன் காதில், “பின்னே இங்கேயே இருந்து அவன் கூடப் பழகின பாவத்துக்கு இவரும் உள்ளே போறதா...?!”
 
 
“அதானே... அவன் கொழுபெடுத்துத் திருடுவான்... உதவி செஞ்சவருக்கும் சேர்த்து இல்ல கெட்ட பேரு...”
 
 
“இந்த ஊருக்குள்ளே கூட்டிகிட்டு வந்ததே அவர் தானே அதான் இவனால நம்ம பேரும் சேர்ந்து அடிப்படும்னு குடும்பத்தோட கிளம்பிட்டாரு...”
 
 
“இப்போ இல்ல புரியுது, இவ்வளவு சீக்கிரம் எப்படி வீடுகட்டினான்னு...” என வித விதமான பேச்சுக்கள் கேட்கவும், ஒரு வித விரக்தியான மனநிலைக்கு அதற்குள்ளேயே வந்திருந்தவன், அமைதியாகத் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
 
 
மீண்டும் அதே போல ஓட்டமும் நடையுமாக மருத்துவமனை வந்து சேர்ந்தவனின் எந்தக் கெஞ்சலும் கதறலும் அங்கிருந்தவர்களைக் கொஞ்சமும் உருக்கவில்லை. தாயும் இல்லாமல் இன்று தந்தையையும் இழந்துவிட்டு அந்தச் சடலத்தைப் பெறவும் வழி இல்லாமல், காலையில் இறந்த தகப்பனின் முகத்தைக் கூட இப்போது வரை காண முடியாமல் தவிக்கும் அந்த இரு குழந்தைகளின் நிலை கல் நெஞ்சையும் கரைக்கும்... ஆனால் அங்கிருந்தவர்கள் யாருக்கும் அது எந்தப் பாதிப்பையும் செய்யவில்லை எனும் போதே புரிந்தது அவர்களுக்கெல்லாம் நெஞ்சமென்ற ஒன்றே இல்லை என்பது...!!
 
 
உதவ வேண்டியவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, இந்தப் பாலகனின் கதறல் கேட்டு உதவிக்கு வந்தார் அந்த ஊரின் இடுகாட்டில் வேலை செய்பவர். போட வேண்டிய இடத்தி எல்லாம் கை நாடிட்டு ரங்காவின் சடலத்தைப் பெற்றுக் கொண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்றவர் அவரின் செலவில் அத்தனை சடங்குகளோடும் முறைப்படி ஆகாஷின் கரங்களால் இறுதி காரியம் செய்வித்தார்.
 
 
எத்தனையோ நாட்களில் வருமானம் எதுவும் வராமல் ஒரு வேலை சாப்பாட்டிற்கும் வழில்லாமல் சுருண்டு இருக்கும் நேரங்களில் எல்லாம் தேடி வந்து உதவி செய்திருந்த ரங்காவின் குணம் அறிந்தவரால் இப்போதும் காதில் விழுந்த எந்தச் செய்தியையும் நம்ப முடியவில்லை.
 
 
இந்த நம்பிக்கை மற்றவர்களுக்கு இல்லாமல் போனது தான் சோகம். ‘நீங்க கேட்காமலே என்னை தேடி வந்து செஞ்ச உதவியை என்னால் என்னைக்குமே மறக்க முடியாதுண்ணே... என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்க பிள்ளைகளைப் பார்த்துப்பேன்..’ என எரியும் சடலத்தின் முன் நின்று மானசீகமாக அவர் எடுத்த உறுதிக்கு ஆகாஷ் வேலை வைக்கவே இல்லை.
 
 
இரவெல்லாம் அழுதவாறே எரியும் சடலத்தைப் பார்த்தப்படியே படுத்திருந்த பிள்ளைகள் இருந்த இடம் விடியும் போது காலியாக இருந்தது. அவரும் முடிந்தவரை சுற்று வட்டாரத்தில் ஊருக்குள் எல்லாம் தேடி பார்த்தும் எங்குப் போனார்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை.
 
 
விடிவதற்கு முன்பே எழுந்து தன் தங்கையைத் தூக்கி கொண்டு கிடைத்த வண்டியில் எல்லாம் கெஞ்சி கேட்டு ஏறி கொஞ்சம் தூரம் பயணம் செய்து மீண்டும் அதே போல மற்றொரு வண்டியில் ஏறி என்று அன்று மாலை ஆகாஷ் தன் தங்கையோடு வந்து சேர்ந்த இடம் பாண்டிச்சேரி.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 10 months ago
Posts: 329
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 19 & 20

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 


   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page