About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
வணக்கம் தோழமைகளே.
என்னுடைய தாழம் பூ நாவல் இனி தளத்தில் ...பாய்மரக் கப்பலின் இரண்டாவது பாகமான தாழம் பூவும் உங்களை கவரும் என்று நம்புகிறேன். கதையை வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
தாழம் பூ
பனியும் , காற்றும் பதவிசாய் விலாவி வீசியது போல் இருந்தது அந்த அதிகாலை நேரம். நல்ல பளீர் வெளிச்சம் பரவாமல் அழுக்காய் விடிந்திருந்தது.
இரவில் வானம் லேசாய் அழுதிருக்கும் போலவே. வராண்டா முழுக்க ஈரமாய் மலர்ந்திருக்க, ஈசி சேரில் அமர்ந்தபடி பெருத்த யோசனையில் இருந்தாள் வானதி.
இறுக பின்னிய சடையைப் போல், பிரிக்க முடியாமல் முடியிடப்பட்டு இருந்தது சிந்தனை.
" ஆப்னி கீ உத்லேன்..?" மெல்லிய குரலில் கேட்டபடி அருகில் வந்து நின்ற மம்தாவை நிமிர்ந்து பார்த்தபோது முகம் முழுக்க புன்னகை பூவாகி இருந்தது.
" ரெம்ப நேரமாச்சு." என்றவள், காலை குறுக்கிக் கொண்டு முழங்காலை கட்டிக் கொண்டாள். அந்த அதிகாலை சுகமான ரசமாய் அவளுள் விரவத் தொடங்கி இருந்தது.
வெளுப்பு தட்டத் தொடங்கிய ஆகாயத்தை இமைக்காமல் பார்க்கத் தொடங்கி இருந்தாள். இயற்கை மீது சலனமில்லா பிரியம் பூத்து புன்னகைத்தது.
" என்னம்மா, ஆகாயத்தை இப்படி பார்க்கிறீங்க..? இன்னைக்கு இது புது வானமா..?" மம்தா எதிரில் இருந்து ஸ்டூலில் அமர்ந்து கொண்டு மெலிதாக புன்னகைக்க, கால்களை இன்னுமே இறுக கட்டிக் கொண்டாள் குழந்தை போல.
" எனக்கு கருமையில இருந்து ஆகாயம் மெல்ல மெல்ல வெண்மையா நிறப் பிரிகை செய்றதை பார்க்க ரெம்பவே பிடிக்கும் மம்தா. எனக்கும் நாற்பத்தஞ்சு வயசாயிடுச்சு இன்னும் கூட வானம் பிரிச்சு துப்பிய கருப்பு எங்க போச்சுன்னு கண்டுபிடிக்க முடியல. இது மட்டுமில்லை, பூ ஒண்ணு மலர்வதை பார்க்கணும். மொட்டுல இருந்து எப்படி முகம் மாறி அது வடிவாகுதுன்னு பார்க்கணும்…" அவள் சொல்லி முடித்தபோது மம்தா கண்களை முகம் முழுக்க விரித்து சிரிக்க ஆரம்பித்து இருந்தாள்.
" மாய், நீங்க பெரிய கலா ரசிகை… அதான் உங்க பொண்ணும் அப்படியே இருக்கா."
" என்னை ரசிச்சது போதும். இன்னைக்கு நம்ம மிஷனரிக்கு ஜெர்மனியில இருந்து டிரஸ்டி எல்லாம் வர்றாங்க தெரியும் தானே..?" அன்றாடத்தில் புகுந்ததால் மற்றேனய ரசனைகளை அடுத்த நாள் இரவுக்கு அள்ளி கட்டி வைத்து விட்டு இருந்தாள்.
" நியாபகம் இருக்கு மாய். அவங்களுக்கு ஸ்பெசலா டிபன் தயார் செய்யணுமா..?"
" தேவையில்லை. நம்முடைய வாழ்வியல் சூழலை பார்க்கத் தான் இங்கே வர்றாங்க. எதுக்கு மிகைப்படுத்தி அவங்களை நம்ப வைக்க..? எப்பவும் செய்றதே செய்ங்க. ஆனால் சுவை குன்றாமல் செய்ங்க."
தலையாட்டி விட்டு மம்தா நகர, எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டாள். இறுதியாய் வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். சுத்தமாய் பிரசவம் முடிந்திருந்து. வெள்ளை மேகங்கள் நீந்தி நீந்தி திசை தேடிக் கொண்டிருந்தன. பறவைகள் சொல்லி வைத்தது போல், கிசுகிசுத்தபடி ஒரே திசையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தன.
குளியலறையில் இருபது நிமிடத்தை நீரோடு சேர்த்து விரயம் செய்து முடித்து, கண்ணாடி முன் வந்து நின்றாள். கருநீலத்தில் வெண்பூக்கள் தூவிய டிஷ்யூ காட்டனில் வெகு கம்பீரமாய் இருந்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரை பார்த்து இருந்தது தலைமுடியில்.
முன்பிருந்த பொலிவு கேசத்திலும் இல்லை, தேகத்திலும் இல்லை. இதயம் வேண்டுமானால் நின்ற இடத்தில் நிற்கும், எலும்பிற்கும் தோலுக்கும் அந்த இத்யாதி வேலைகள் தெரியாது. ஆனால் நாற்பதில் நரைதான் அழகு… அதை கரும் மை' திரையிட்டு மறைக்கும் அளவிற்கு முதுமை பற்றிய பதட்டம் வந்திருக்க வில்லை இன்னும்.
புடவை மடிப்பை நீவி சரிசெய்து கொண்டிருந்த நிமிசம் அலைபேசி பிரத்யேகமாய்ச் சிணுங்க, அந்தச் சத்தம் அங்கமெல்லாம் தட்டி எழுப்பும் அலாரம் போல் உள்ளத்தை உரச, வேகமாய் வந்து கையில் எடுத்தாள்.
இணைப்பு சென்னையை அவள் கன்னத்தில் உரசி உயிரூட்ட வைத்தது.
" வானு…" ஒரு வார்த்தை தான். அதில் இருந்தது இரண்டு எழுத்துகள்தான். அதற்கே காதுவழி ரத்தம் பாய்ந்து அவள் உடம்பு முழுக்க இன்னொரு உயிரை ஊடாட வைத்தது.
" சொல்லுங்க நந்தா." என்றாள் உணர்வை கட்டி நிறுத்தியபடி.
" நைட் தூங்கலயா..? "
அட..! ஐந்தாம் தலைமுறை அலைகற்றை (5G) வரவில்லை என்ற மனக்குறை எதற்கு..? மனசோடு மனசு மோதும் வேகத்திற்கு 15ம் தலைமுறை அலைகற்றையின் வேகம் இருந்தது.
" உங்களுக்கு எப்படி தெரியும் நந்தா..?" என்றாள் சிறு பெண்ணின் உத்வேகத்தோடு.
" ரெம்ப நேரம் ஆன் லைன்ல காட்டுச்சு. கால் பண்ணலாம்னு கூட நினைச்சேன். எதுவும் வேலையா இருப்பியோனு யோசிச்சிட்டே…"
" நீங்களும் தூங்கல. அதானே."
அவன் வாக்கியத்தை அவள் முடித்தபோது, இருவருக்கும் அப்படியொரு சிரிப்பு. உணர்வுகளை உணர்கின்ற தருணத்தை விட உன்னதமான தருணம் உலகில் எது..?
" வேலைலாம் இல்ல நந்தா. இன்னைக்கு மிஷனரியில இருந்து வர்றாங்க இன்ஸ்பெக்சன் செய்ய. அதைப் பத்தி யோசனை." என்றாள் பொய்யாக.
மறுமுனையில் அவள் கூற்றில் உண்மை கண்டறியும் சோதனையில் இருந்தான் நந்தா.
" சரி, தொண்டை ஏன் கரகர' னு இருக்கு..?" ஆரம்பித்து விட்டான். இனி அவனை சமாளிப்பதிற்குள் அவள் பாடு, வம்பாடு.
" மழையா இருக்கு நந்தா இங்கே."
" உனக்கு மழையில அலையற வேலை இல்லயே."
" கிளைமெட் சேன்ஞ் ஆனால் இதெல்லாம் வரும் இல்லயா? நான் என்ன பதினாறு வயசுப் பொண்ணா..?" என்றாள் வேண்டுமென்றே அவனைச் சீண்ட,
" எனக்கு எப்பவும் அப்படித்தான். சரி இந்த முறை சந்தியா வரும்போது நானும்…" வழக்கமான விசயத்தை ஆரம்பிக்க மெல்ல அவள் முகம் இறுகியது.
" நான் வச்சிடட்டுமா..? நிறைய வேலை இருக்கு. "
" எனக்கு நிறைய வேதனை இருக்கு. ஆனால் அதை கேட்கவே மாட்டேங்கற உன் மேல கோபம் இருக்கு. உன் ஆதங்கத்துல அர்த்தம் இருக்கு, அதே மாதிரி என் தவிப்பில நியாயமும் இருக்கு."
" நந்தா…" என்றாள் தவிப்பாக.
" நீ போட்ட லஷ்மண ரேகையை தாண்டறது அவ்வளவு பெரிய விசயமில்லை. உன் வார்த்தைக்கு நான் தர்ற மரியாதையை, என் உணர்வுக்கு நீ எப்போ தரப்போறே..? இல்ல, நம்ம ரெண்டு பேருடைய சந்திப்பு ஒரு இழப்பில தான் நிகழணும்னு நினைக்கிறியா..?"
" நந்தா…" வீறிட்டு விட்டாள். உடலும் மனசும் ஒருசேர நடுங்கியது. அந்த காலை நேரத்தில் அந்த வார்த்தை அவள் இதயத்தை என்னவோ செய்தது. மெல்ல எட்டிப் பார்த்த விசும்பலை உதடு கடித்து அடக்கினாள். அழுவது தெரிந்தால் இன்னும் கோபப்படுவான்.
மெல்ல நிலைப் பட்டான். சினம் காட்டத் தெரியாதவனின் சினம், வீரியமாய் காரியம் ஆற்றும் தான்.
" யாழி எங்கே..? என்கிட்டே பேசி எத்தனையோ நாள் ஆகுது." என்றான் இறுக்கம் குறையாமல்.
" கேம்பஸ் போய் இருக்கா ஷில்லாங் வரைக்கும். வந்ததும் பேசச் சொல்றேன்." குரல் அடங்கி இருந்தது. அந்த தர்க்கமில்லாத வெறுமை குரல் அவனுள் தாக்கத்தையும் ஏக்கத்தையும் உண்டாக்கியது.
" இப்போ என்ன சொல்லிட்டேன் வானு..? எதுக்கு அழறே..?"
" நான் அழல. ஆனால் ரெம்ப கஷ்டமா இருக்கு நந்தா அந்த வார்த்தை. சுமக்கவே முடியல. இனியும் இழக்க என்கிட்ட என்ன இருக்கு.?" என்று முடித்த போது குரல் வெடித்து இருந்தது.
" நான் நாளைக்கு அங்கே இருப்பேன். இப்படி கண்ணீர் விட்டா எனக்கு தாங்காது. எனக்கே ரெண்டு நாளா…" என்றவன் நிறுத்திவிட்டான். இப்போது அவள் இதயம் இடம்மாறி, தடம்மாறி பரிதவிக்க ஆரம்பித்து இருந்தது.
" ரெண்டு நாளா என்ன நந்தா..? உடம்புக்கு எதுவும் பண்ணுதா..?"
" அதெல்லாம் இல்ல. லேசா மார்வலி. கேஸ் ப்ராபளமா இருக்கும். அம்மா பூண்டு தட்டி பால் காய்ச்சி தந்தாங்க." அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் இணைப்பைத் துண்டித்து விட்டு வீடியோ காலில் வந்திருக்க, அவசரமாய் இணைத்தான்.
அடடா! அந்த கண்களில் தான் எத்தனை பரிதவிப்பு. அந்த முகத்தில் தான் எத்தனை பரிமளிப்பு. 6 இன்ச் தொடுதிரையில் அலைகழிந்து கொண்டு இருந்தாள் அவனை துளைக்கும் கண்களால்.
மொபைலை தாங்கியில் பொருத்திவிட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு அவளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தான். சின்ன சிரிப்பு ஒரிரு முடி நரைக்க தொடங்கி இருந்த மீசையில் முளைத்து மறைந்து நின்றது.
‘’ நல்லா பார்த்துட்டே இல்லே..? சொல்லு பார்க்கலாம், அந்த ஸ்கேன் ரிப்போர்ட், இ.சி.ஜி ரிப்போர்ட், அப்பறம் அந்த ப்ளட் டெஸ்ட் கூட முடிச்சிட்டேன்னு உன் கண்ணு சொல்லுதே..!’’ சட்டையின் கை முனையை மெல்ல சுருட்டிக் கொண்டு முஷ்டியை மடக்கி காட்டிய மேனரிசம் எப்போதும் போல இப்போதும் அவளை உள்ளக் கிடக்கையில் அழுத்தியது.
‘’ போதும் கேலி..! அத்தையை கூப்பிடுங்க. நான் உங்களைப் பத்தி பேசணும்.’’
‘’ அடேங்கப்பா..!’’
‘’ கேலி என்ன நந்தா இப்போ வேண்டி கிடக்கு..? என்ன பண்ணுது நிஜமா..!’’
அவள் கேட்டுக் கொண்டே இருக்க, மெல்ல விரல் நீட்டி அவள் தலையை மென்மையாக வருடித் தந்தான். வீடியோ காலில் தன் கண்ணீரை கட்டுபடுத்த இயலாமல் தவித்தாள்.
‘’ பயப்பட ஒண்ணுமில்ல வானு..! பேங்கில போஸ்டிங் வந்ததுல இருந்து நிறைய ஓர்க் டென்சன். ஒரு இடத்தில நிம்மதியா இருக்க முடியல. தபு மெடிக்கல்ல இருக்கா. நித்தமும் ஆயிரம் கம்ப்ளைண்டோட வந்து நிக்கிறா. குடும்பம் வளர வளர, கவலைகளும் வளர்ந்துட்டே தானே இருக்கு.’’
‘’ அதுக்குன்னு உங்களை கவனிச்சுக்காம இருப்பீங்களா நந்தா..? உங்களுக்கு ஏதாவதுனா, அதை தாங்கிக்கிற சக்தியாவது எங்களுக்கு இருக்கா..?’’
‘’ ஏன் வானு, இத்தனை சொன்னாலும், ஒரு வார்த்தை, நான் உங்களை வந்து பார்க்கிறேன்னு சொல்ல தோணல இல்லையா..? நான் உனக்காக இருக்கணும்கிற உன்னோட சிந்தனை ரெம்ப சுயநலமானதுனு உனக்கு தோணும் போது என்னைத் தேடி நீயே வருவே..!
யாழியை பார்க்கணும்கிற என் எண்ணத்தின் நேர்மை உனக்கு புரியலயா..? அம்மாக்கு எழுபது வயசுக்கு மேலே ஆகுது. பலநேரம் உன்னையும் யாழினியையும் பார்க்காமல் தனக்கு எதுவும் ஆகிடுமோங்கிற அவங்களுடைய கண்ணீர்க்கு என்னால் நியாயமே பண்ண முடியல வானு. இந்த அழுத்தமெல்லாம் சேர்ந்துதான் என்னை கவலையில் ஆழ்த்துது. ’’
‘’ நந்தா…’’
‘’ நான் வைக்கிறேன். உனக்கு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னே இல்லே..! யாழியை என்கிட்ட பேசச் சொல்லு..! ‘’ இணைபில் இருந்து வெளியேறினான். குமைந்து போனாள் அந்த செயலில்.
தன்னுடைய இயலாமையை அதிருப்தியாக கூட வெளிப்படுத்த விரும்பாத அவன் மனதை இன்னும் எத்தனை நாள்கள் காயப்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறோம், என்ற எண்ணமே அவளை சின்னா பின்னமாக்கினாலும், அதைப்பற்றி சிந்திக்க இப்போது நேரமில்லை என்பதால், இறங்கி கீழே வந்தாள்.
கீழ்தளத்தில் இருந்து ஒட்டி பிரிந்து உள்ளே நகர்ந்த சின்ன நடைபாதையில் இரைந்து கிடந்த பூக்களை மிதிக்காமல் நடந்து வந்தால், சின்ன மரகேட்டை திறந்து கொண்டு காரிடரில் நடந்தாள்.
விதைக்காமல் விளைந்திருந்தது அமைதி. கொல்கத்தா மிசினரி ஹாஸ்பிடல் என்று வங்கத்திலும், அதற்கு நேர் கீழே ஆங்கிலத்திலும், வெள்ளை எழுத்துக்கள் மின்னின.
நெடிய ஹாலில் ஒருபக்கம் மரியோடு மைந்தன் இருக்கும் முகப்பு படமும், மற்றொரு பக்கம் மிசினரியின் வரலாற்றோடு, புன்னகை முகமாய் இருந்த மதர் சுப்பீரியர்களின் படமும் சுவற்றில் அமைதியாக வீற்றிருந்தது.
அவற்றின் நடுநாயகமாக இருந்த மதர் கேப்ரியலாவின் சாந்தம் தவழ்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள். இந்த வாழ்க்கையும், இந்த பாதுகாப்பும், இந்த நிம்மதியும் அவர் இல்லாது போயிருந்தால், சொல்லாது எங்கோ போயிருக்கும். எல்லா நிலைகளிலும் பாதுகாப்பையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் தருகின்ற இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் மனமார.
‘’ மாய், ரெடியாகி வந்தாச்சா..? நான் டிபன் எடுத்து வைக்கட்டும..?’’ மம்தா பக்கத்தில் வந்து நின்று நினைவை டேக் டைவர்சன் போட வைத்தாள்.
‘’ நான் முதல்ல ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு மதரை பார்த்துட்டு வந்திடறேன். நீ மத்த ஸ்டாப்புகளுக்கு முதல்ல சாப்பாட்டை அனுப்பி வச்சிடு. கிச்சனை துப்புரவாக வைக்கணும். அதிகாரிகள் வந்து கேட்டால், எந்தக் குறையா இருந்தாலும் தயங்காமச் சொல்லணும். அது என் மீதான குறையா இருந்தாலும். அதுதான் நம்முடைய ஹாஸ்பிடலுக்கு நல்லது.’’ சொல்லிவிட்டு கம்பீரமாக நடந்தவளை புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு மெல்ல மம்தா சமையலறையை நோக்கி நகர, மதர் கேத்ரீனாவின் அறை வாசலில் நின்றாள் வானதி.
அவள் ஒலி அனுப்பி அனுமதி கேட்க, உள்ளிருந்து அழைப்பு வந்தது.
‘’ குட் மார்னிங் மை சைல்டு…’’
‘’ குட் மார்னிங் மதர்..! எனக்கு எதுவும் தகவல் இருக்கா..?’’
’’ மிசினரி டிரஸ்டில் இருந்து அதிகாரிகள் இன்னும் சில மணி நேரத்தில் இங்கே இருப்பாங்க. நம்முடைய மருத்துவமனையோடு சேர்த்து இந்தியா முழுக்க, முப்பத்தி இரண்டு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து இவர்கள் சமர்பிக்கும் அறிக்கையை வைத்துத்தான் வருங்காலத்தில் நமக்கான நிதியை டிரஸ்ட் விடுவிக்கும். அதனால, நம்முடைய தேவையை அவங்களுக்கு புரிய வைக்கவேண்டிய சாமார்த்தியம் உன்னை சேர்ந்தது.’’
‘’ புரியுது மதர் சுப்பீரியர்..! அது ரொம்பவே எளிதான விசயம். உண்மை பேசினா போதும். மிகைப்படுத்தலும், பேராசையும் இல்லாத உண்மைக்கு நேர்மையான அங்கீகாரம் கிடைக்கும். ’’
‘’ வானதியிடம் பொறுப்பை தந்த பிறகு நமக்கு எந்தக் கவலையும் தேவையில்லைனு’ மதர் கேப்ரியலா சொன்ன வார்த்தைகள் இன்னும் காதருகில் தான் இருக்கு வானதி. ஆனாலும் நினைவூட்ட வேண்டியது என் கடமை.’’ என்றார் புன்னகையோடு.
தலையசைத்து விட்டு வெளியேற திரும்பியவளை மதரின் குரல் மறுபடியும் தடை போட, நின்று திரும்பி பார்த்தாள்.
‘’ இன்னொரு தகவல் கூட இருக்கு வானதிக்காக.’’
இந்தமுறை வானதியின் முகத்தில் தான் வியப்பு குழுமி இருக்க, என்ன என்பதுபோல் அமைதியாக நின்றாள்.
’’ ஷில்லாங்கில் இருந்து கேம்பஸ் முடிச்சிட்டு, யாழினி அப்படியே உன் தோழி சந்தியாவை சந்திக்க சென்னை கிளம்பறதா எனக்கு தகவல் அனுப்பி இருக்கா. உன்கிட்ட விசயத்தை சொன்னால் நீ அனுமதிக்க மாட்டேன்னு தெரியும்கிறதால, என்கிட்ட மட்டும் தகவல் சொல்லிட்டு கிளம்பி இருக்கா. அவளைப் பொறுத்தவரை நீயும் நானும் வேறில்லை தானே..? ’’ கேத்தரின் அர்த்தமாய் புன்னகைக்க, வானதியின் பூமி தரை தட்டி நசுங்கி இருந்தது.
அறையை விட்டு வேகமாய் வெளியில் வந்தவள் இமைகள் இரண்டும் பட்டாம் பூச்சியாய் சிறகாட்ட, பதட்டத்தில் கைகளை அழுத்திக் கொண்டாள்.
‘ எத்தனை அழுத்தம்..! எத்தனை பிடிவாதம்..! இத்தனை நாள் கட்டுக்குள் நின்ற காற்று கரை கடந்து கொண்டு இருக்கிறது, அவளின் கண் பார்வையைத் தாண்டி.. இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது. சந்திக்க போவது சந்தியாவை அல்ல, நந்தாவை..! அவரின் குடும்பத்தை.இவளின் கோபத்தை அந்த குடும்பம் தாங்குமா..?
ஆயிரம் கேள்விகள் மனதில் முளைத்து முளைத்து சரிய, தன் வசம் இழந்த உணர்வுகளை கட்டி நிறுத்த வழியற்று அப்படியே நாற்காலியில் சரிந்தாள்.
"பாதை கொஞ்சம் மாறிப் போனால்
பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால்
வாசம் விட்டு போகுமா
ராஜா நீ தான்
நான் எடுத்த முத்துப் பிள்ளை
தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே மானே இள மானே…"
3
இரவு போட்ட தார்சாலை இன்னும் பளபளப்பை இழந்திருக்க வில்லை. கருமையின் பிசுபிசுப்பு அழகாய் ஒட்டி உறவாடிக் கொண்டு வாகனங்களோடு.
கே.கே. நகர் உள்ளே தரங்கிணி நகர். கருப்பு வட்டத்தில் வெள்ளை மசியில் ஆறு என்ற இலக்கம் இட்டிருக்க, வாசலில் அகண்ட கேட் கைவிரித்து இருந்தது.
கார் ஷெட்டை விஸ்தீனம் செய்து இருந்தார்கள். உள்ளே காருக்கு போட்டியாய் ஸ்கூட்டியும், பல்சரும் நின்றது. ஒரு பக்கம் நிழல் மரங்கள் ஒதுங்கி நிற்க, போன் சாய்கள் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியது.
ஹாலில் கிடந்த ஷோபாவில் கால்நீட்டி கைகளை தலைக்குத் தந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தான் நந்தா. உள்ளே மிருதுளாவும், பிள்ளைகளும் பெரும் ஆர்பாட்டத்தில் இருந்தார்கள், விடிந்து விட்டதிற்கு அடையாளமாய்.
" எனக்கு இன்னைக்கு பிராக்டிகல் இருக்கு. மெட்டீரியல் வாங்கணும். கே.ஆர் மால் போகணும்." தபு முகத்தை டிஷ்யூவால் ஒற்றியபடியே சொன்னாள்.
" உங்கப்பாக்கு இன்னைக்கு ஆஃப் தான். படுத்துதான் இருக்காரு. எழுப்பிட்டு போ." மிருதுளா இட்லியை லாவகமாய் அவி தட்டில் இருந்து பிரித்துக் கொண்டே சொன்னாள்.
" அப்பா வேண்டாம் மா. நீ வா…"
"எனக்கு இன்னைக்கு ட்யூட்டி இருக்கு. அவருக்கென்ன சும்மாதானே இருக்காரு கூட்டிட்டு போ." கையும், வாயும் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்க, பின்னால் வந்து நின்ற சாதுர்யன் நெகு நெகுவென வளர்ந்து பதின்ம வயது நந்தாவை உரித்து உள்ளடக்கி இருந்தான்.
" இப்போ எதுக்கு இவ அடி போடறானு தெரியலயா மம்மி, கார் சாவி வேணும். மேடம் தனியா ஆவர்தனம் செய்துக்குவாங்க." என்ற தம்பியை திரும்பி முறைத்து விட்டு, அம்மாவிடமே பார்வையை மீட்டாள்.
" அப்பா அநியாயத்துக்கு இளமையா இருக்காருமா. அவர் உன் அண்ணவானு கேட்டு எல்லாரும் கண்ணு வைக்கிறாங்க. மத்தவங்க கண்ணை விட்டு அப்பாவை காப்பாத்தறதே பெரிய வேலையா இருக்கு." மகள் சிணுங்க, மிருதுளாவின் முகத்தில் பூரிப்பு ததும்பினாலும் காட்டிக் கொள்ள நாணமுற்றோ, பின் ஏனோ தன் வேலையில் மும்முரமாக்கி கொண்டு திரும்பி நிற்க,
" அதுசரி, ஏற்கனவே ரெண்டு இப்போ மூணாவது வேறயாக்கும்." நகைச்சுவையாய் எண்ணி சாதுர்யன் சொன்ன வார்த்தைகள் எதற்கோ உள்ளே வந்த நந்தாவின் காதுகளை மிகச்சரியாக சென்று சேர, அப்படியே நின்று விட்டான்.
மிருதுளா கூட இந்த இதமற்ற வார்த்தைகளை எதிர்பார்த்து இருக்கவில்லை, அதிலும் அந்த சமயத்தில் மிகச் சரியாய் நந்தாவையும் அங்கே எதிர்பார்த்து இருக்க வில்லை.
"துர்யன்…" மிருதுளாவின் குரல் ஒங்கி ஒலிக்க, அந்த அதட்டலில் பதட்டம் கொண்டு திரும்பி பார்த்தவன் முகத்தில் ஈயாடவில்லை.
" சாரி பா." என்றான் தலை கவிழ்ந்து. நந்தா எதுவுமே பேசவில்லை. மூவரையும் நிமிர்ந்து பார்க்காமல் சுவற்றை வெறித்துக் கொண்டே சில வினாடிகள் நின்றவன், எதுவும் பேசாமல் திரும்ப சென்று விட்டான்.
குமைந்து போனாள் மிருதுளா. கோபம் முழுக்க மகன் முகத்தில் திரும்ப, அவளின் மனதை படித்தவனாய், எப்போதோ சிட்டாய் மறைந்து இருந்தான் துர்யன்.
ஆனாலும் வலித்தது. நந்தாவின் மெளனமும், அமைதியும் அதன் பின் இருந்த வேதனையும் அவள் இதயத்தை என்னவே செய்தது. இந்த நொடியே அவன் முகம் பார்த்து, அதை தன் மார்பில் பொதித்து தலை கோதி விட உயிர் துடித்தது.
மகளை அனுப்பிவிட்டு தண்ணீரை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள். நந்தா பால்கனியில் தலைகீழாய் தொங்கிய பூச்செடிக்கு நீரை ஸ்ப்ரே செய்து கொண்டு இருந்தான். முகத்தில் இறுக்கமில்லை, ஆனால் மிதமிஞ்சிய வருத்தமிருந்தது.
‘’நந்தா… இந்தாங்க.’’ நீட்டிய பாட்டிலை வாங்கி நீரை தொண்டையில் சரித்துக் கொண்டான் மறுவார்த்தை பேசாமல்.
‘’ அவன் சின்னப் பையன். விளையாட்டா ஏதோ சொல்லிட்டான்.’’
‘’நான் எதுவும் சொல்லல மிருதுளா. என் வாழ்க்கையும், தனிப்பட்ட உணர்வும் மற்றவர்களுக்கு விளையாட்டு தானே..? நீ பேங்க்குக்கு கிளம்பிட்டியா..? நான் டிராப் பண்ணிட்டு வந்திடறேன்.’’ இத்தனை பாரமாய் வார்த்தைகளை வீச முடியுமா..? கேட்பவர்களின் இதயத்தை வலிக்க வலிக்க நார் உரிக்க..?
‘’நான் கேப் புக் பண்ணிக்கிறேன் நந்தா..! நீங்க ஆஃப்ல இருக்கீங்க. எதுக்கு சிரமப்படறீங்க..?’’
துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான். மெல்ல மனைவியை திரும்பிப் பார்த்துச் சொன்னான்,
‘’ நான் ஆஃப்ல இருக்கிறது வேலைக்கு தான். கடமைக்கு இல்லை. அஞ்சு நிமிசத்துல வந்துடறேன்.’’
போய்விட்டான். ஏனோ இப்போதெல்லாம் அவனின் அதீத மெளனம் கூட வலிக்க வலிக்க உயிரை துளைக்கிறது. இருபது வருடங்களாய் அவனுக்குள் அனல் மூட்டிக் கொண்டிருக்கும் வானதி என்ற நெருப்பு, அவளை உணர்வுகளால் தழுவி தழுவி தன்னைத் தானே உயிர்பிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவனின் தனிமை ஏனோ இப்போதெல்லாம் வெகுவாய் மிருதுளாவை உரசுகிறது.
இல்லாமல் போயே அவர்கள் வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டு இருக்கிறாள். அவள் பாய்ச்சி விட்டுப் போன நங்கூரத்தின் வீரியத்தில் இருந்து மொத்த குடும்பமும் துளிகூட நகர முடியாமல் கட்டுண்டு கிடக்கிறது.
அவள் திரும்பி வரவே இல்லை இதுவரைக்கும். ஆனால் அவள் நினைவும், தொடர்பும் இந்த வீட்டில் அத்தனை பேரிடமும் இருந்தது. விக்கியின் திருமணம், வீணாவின் திருமணம், அவர்கள் குழந்தைகள் என்று அத்தனை நிகழ்விலும் எங்கிருந்தோ அவள் தன்னை புகுத்திக் கொண்டுதான் இருந்தாள்.
தவறாமல் பரிசுகள் வந்தது. இந்த கலர் நல்லாயில்ல, இந்த ஆரம் செட் ஆகல உனக்கு, கல்கத்தாவில் இருந்து ஜர்தோசி ஓர்க் பண்ணினது வாங்கி அனுப்பறேன். தபுமா’வுக்கு ‘ அத்தைக்கு ஷால் அனுப்பி இருக்கேன்..’ இப்படி அவளிடம் இருந்து அக்கறையும் அன்பும் வந்துகொண்டே இருக்கும்.
இங்கிருந்தும் அன்பும், நம்பிக்கையும், அக்கறையும், பரிசுகளும் சந்தியாவின் மூலமாய் சென்று கொண்டே இருக்கும். அதை வானதி மறுத்ததே இல்லை. ஆனால் உரிமைகளை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தாள். நந்தாவை உணர்வுகளால் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். இந்த நிமிசம் வரைக்கும் அவளின் குரலை மீறுகின்ற சக்தி அவனுக்கு இல்லவே இல்லை.
தபு’விற்கு வானதியிடம் இருந்த பிடிப்பும், நன்மதிப்பும் சாதுர்யனுக்கு இல்லை. அவள் அருகாமையை அனுபவிக்காததால் இருக்கும் என்றாலும், வீடியோ காலில் வரும்போது, ஹாய் சித்தி’ என்று அவன் சொல்லும் போது வானதிக்கு வலிக்கும்.
தபஸ்வியும், விக்னேஷின் பிள்ளைகளும் நதிமா' என்று உணர்வு பொங்க அழைக்கும் போது, இவன் மட்டும் சித்தி’ என்று அவள் மாற்றாந்தாய் என்பதை மறைமுகமாய் சுட்டிக் கொண்டே இருப்பான்.
‘’வானதி, எப்படி என்னை வந்து பார்க்கப் போறே..? என் காலம் முடியறதுக்குள்ளே, உன்னை கண்ணால காணுகிற பாக்கியத்தை தர மாட்டியா..? என் பேத்தியை பார்க்காமயே போயிடுவேனா..?’’ கல்பனாவின் கண்ணீரும் வானதியை இதுவரைக்கும் கரைத்ததில்லை. ஏனோ தன்னை கட்டுபடுத்தி வைத்திருந்தாள். அது புரியாதது போல் இருந்தது, புரிந்தது போலவும் இருந்தது.
குளித்து முடித்துவிட்டு டிராக் பேண்டும், டீ ஷர்ட்டுமாய் கீழே இறங்கி வந்தான். மிருதுளா தயாராகிக் கொண்டு இருந்தாள். அவள் திரும்பி வந்தபிறகு, அவள் இருப்பை உறுதி செய்து, மீண்டும் அத்தனை சான்றுகளையும் சமர்பித்து, இழந்த வேலையை வாங்குவதிற்குள் மூன்று வருடங்கள் கடந்து போய் இருந்தது.
மிருதுளா மீண்டும் பணிக்கு செல்ல பிரியப்பட்ட போது நந்தா தடையேதும் சொல்லவில்லை. இதோ இன்று அதே நாட்டுடமையாக்கப் பட்ட வங்கியில் ஒரு கிளையின் மேலதிகாரியாக நந்தா இருக்க, மற்ற கிளைகளில் சந்தியாவும், மிருதுளாவும் பணியில் இருந்தார்கள்.
காலம் நிறைய வளமையை காட்டி இருந்தது. அப்பாவின் காலத்திற்கு பிறகு காலுன்ற தவித்த குடும்பம் இன்று அழகாய் கிளை பரப்பி கோலோச்சிக் கொண்டு இருந்தது. விக்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தான். காதல் திருமணம், திருவான்மியூரில் சொந்த வீடு என்று எந்தக் குறையும் இல்லாமல் இருந்தான்.
படிப்பை முடித்த வீணா, நெட் தேர்வில் மூன்றாவது அட்டம்ட்டில் தேர்வாகி, அரசு கல்லூரியில் பேராசிரியையாக, அதற்கு தகுந்த வாழ்க்கையும் அமைய, அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் நிறைவும் நிம்மதியுமாகவே சுழலத் தொடங்கி இருந்தார்கள்.
ஆனால், நந்தா மட்டுமே எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவனாக இருந்தான். புன்னகையும், சந்தோசமும், நிறைவும், கடமையும், அவனை அழுத்தி அழுத்தி குடும்ப சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்க வைத்தாலும், அவன் மனம் மட்டும் அந்த ரயிலடியிலேயே தேங்கி கிடந்தது.
அவளிடம் பேசினான், அவளை வீடியோ காலில் பார்த்துக் கொண்டும் தான் இருந்தான். கட்டளை இட்டான், கட்டுப்பட்டான். அவள் கண்ணீரையும் ஆனந்தத்தையும் பகிர்ந்து கொள்ள இவனைத் தேடித்தான் ஒலிக்கற்றையில் ஓடி வந்தாள். ஆனாலும் ஏனோ மனம் தள்ளாடியது.
ஸ்பரிசத்துக்கு இருவருமே அடிமைகள் இல்லை. அறைக்குள்ளேயே அவர்கள் அந்தரங்கங்களை தேடியதும் இல்லை. ஆனால் அவளின் உணர்வு பிரவாகத்தை அவன் மட்டுமே முழுக்க உணர்ந்திருக்கிறான்.
இயல்பான நாளில் எல்லாமுமாய் இருப்பது என்பது வேறு. இக்கட்டான அந்த நாள்களில், அவள் இந்த குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்திருக்கிறாள்..! இன்னுமே இல்லாமலும் இங்கே இணைந்தே இருக்கிறாள்.
அந்த நாளில் அவள் காட்டிய பாசமும், ஸ்பரிசமும், அக்கறையும், அன்பும் கிணற்று படிகளில் படிந்த பாசியாய் அவனுள் பிரிக்க முடியாமல் அப்பிக் கொண்டது. எல்லோர்க்கும் யாரோ இருந்தார்கள். அவளுக்கு தான் மட்டும் தானே,' என்ற நினைப்பே அவனை குற்றவுணர்வில் கொதிக்க வைத்தது.
உணர்வுகள் உரசி, உரசி, தீ வைக்கும் பொழுதுகளில் தன்னை மறக்க அவன் நாடியது ரயிலடியை… அவள் நிழல் இறுதியாய் அவனிடம் இருந்து பிரிந்து போன இடத்தில் வந்து மணிக்கணக்காய் அமர்ந்து கொள்வான். கரைக்க, கரைக்க, கரைந்து போகாத நினைவுகளை, கல்லைப் போல மென்று தின்றபடி அமர்ந்து இருப்பான்.
அந்த நிமிசம், அவள் அருகாமையும், ஸ்பரிசமும், கண்ணீரும், மென் பட்டில் பொதிந்த பக்த மீரா சிலையும், தரையில் கிடக்கும் நிழலும், ஆழ்ந்த மூச்சும், அவளின் அருகிருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கும். மகளை மனசு நாடும். அம்மாவின் வார்த்தைக்கு கட்டுபட்டு மட்டுமே, தன்னிடம் பாராமுகமாய் பேசும் யாழியை மனசு நாடிக் கொண்டே இருக்கும்.
நினைவுகளை வெளித்தள்ள இயலாமல் தவிக்கும் துளையற்ற, இருதலைக் கொள்ளி எறும்பாய் தன்னை உணர்வான். அடிக்கடி வந்து அடித்து அடித்து நொறுக்கும் சில வார்த்தைகளும் இப்படித்தான் மெல்ல முடியாத சவ்வு போல், அவனை வெதும்ப வைத்துக் கொண்டே இருக்கும்.
‘’ நந்தா’’ கண்களை மூடி தலைக்கு கையை அணைகட்டி அமர்ந்து இருந்தவன், நினைவுகளை நிறுத்திவிட்டு நிஜத்துக்கு வந்திருந்தான்.
‘’ கிளம்பலாம் மிருது’’ கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
மிருதுளாவை அண்ணா நகர் கிளையில் இறக்கி விட்டுவிட்டு, சாந்தோம் வந்து பேங்கை விட்டு தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு, சந்தியாவிற்கு அழைத்திருந்தான்.
‘’ என்ன நந்தா பீக் ஹவர்ல கூப்பிடறே..? அவசரமா.? ‘’
‘’ இல்ல சந்தியா. ஃப்ரீயா இருந்தா பர்மிசன் போட்டுட்டு வாயேன். கொஞ்சம் காபி ஷாப் வரைக்கும்.’’
‘’காலையில பதினொரு மணிக்கே, ஃப்ரீயா உட்கார்ந்து ஈ ஓட்டிட்டு இருக்க, இது திருவான்மியூர் ப்ரான்ச் இல்லே. அங்கே மேனேஜரா இருக்கிறது அசமஞ்சம் நந்தகோபாலன். இது சாந்தோம் ப்ரான்ச். இங்கே அசிஸ்டெண்ட் மேனேஜர் சந்தியா சிவராமனாக்கும்.’’
‘’ரொம்ப பீத்தாதடி தங்கமே. லோன் டிபார்ட்மெண்ட் ஹெட்டா இருந்தப்போ, நீ வாரி வாரி அனாமத்தா தந்த கடனெல்லாம் வசூலிக்க முடியாம நிலுவையில இருக்குன்னு தானே உன்னை, டீ ப்ரோமோசன் பண்ணி ப்ரான்ச் மாத்தினது, முன்னால் மேனேஜரே..!’’ அவன் சிரிக்காமல் சொன்னபோது சந்தியாவின் முகத்தில் அசடு வழிந்தது.
‘’போதும். உன்னை நான் கேவலமா பேசறதும், என்னை நீ கேவலமா பேசறதும் புதுசா என்ன..? நீதான் உள்ளே வாயேன். ஏன் தயங்கி தயங்கி வெளியே நிக்கிறே..?’’
‘’ப்ச்..! வேண்டாம் சந்தியா. நான் கேசுவல்'ல இருக்கேன். மிருதுவை டிராப் பண்ண வந்தேன். உள்ளே வந்தா தேவையிலாத மரியாதைகள் கிடைக்கும். அதையெல்லாம் ரசிக்கிற மனநிலையில் இல்லை நான். எனக்கு கொஞ்சம் உன்கூட பேசணும்.’’ அவன் இணைப்பைத் துண்டித்து விட்டு காத்திருந்த நிமிசம், பேங்க் கதவை திறந்துகொண்டு சந்தியா வருவது தெரிந்தது.
காரை பூட்டிக் கொண்டு இறங்கியவன் கூலரை பொருத்திக் கொண்டு இங்கிருந்து கையசைத்து காபி ஷாப்பிற்கு அவளை வரச் சொல்லி சைகை செய்துவிட்டு முன்னே சாலையை கடந்தான்.
அருகில் வந்ததும் எப்போதும் போல் கள்ளமில்லாமல் சிரித்தாள்.
‘’ சொல்லுங்க பாஸ், என்ன விசயம்..?’’ நாகரீக நாற்காலியை நந்தாவுக்கு எதிரில் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். நிறைய மாறி இருந்தாள் தோற்றத்தில். பாப் கட் கூட அவள் முகத்திற்கு வெகுவாய் பொருந்தி இருந்தது.
‘’ ஸ்பெசலா எதுவும் இல்ல.’’
‘’ அட கிறுக்கு பயலே. அப்புறம் எதுக்கு பெர்மிசன் போட்டுட்டு வரச் சொன்னே..?’’
‘’ சொல்லத் தெரியல. மனசு ஏனோ பாரமா இருக்கு.’’
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அமைதியாக. ஒரு தவிப்பின் மிச்சத்தை மெல்ல முடியாமல் மிடறு கூட்டிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.
‘’சரி சொல்லு, இப்போ எதுக்கு லீவு போட்டு இருக்கீங்க சார்..? ஏதாவது முக்கிய வேலையா நந்தா..? எனக்கு தெரியாதது, என்ன அது..?’’
‘’ வேலையெல்லாம் இல்ல சந்தியா. லாஸ்ட் வீக் கொஞ்சம் ஹெல்த் இஷ்யூவா இருந்தது. ஒர்க் லோடினால் இருக்குமானு எனக்கே சின்ன குழப்பம். அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன்.’’
பலுடாவை ஸ்பூனால் கலக்கிக் கொண்டு இருந்தவள், துணுக்குற்று போய் நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் பயம் கவ்வியது.
‘’நந்தா…’’ எதிரில் அமர்ந்திருந்தவனின் வலக்கையை பற்றினாள். அதில் மெல்லிய நடுக்கம் தெரிய, வியந்துபோய் நிமிர்ந்து பார்த்தான்.
‘’அட.! எதுக்கு இத்தனை பதட்டம்..? கூல்டா. ‘’
‘’இல்ல நந்தா. உனக்கும் எனக்குமான பந்தம் விசித்திரமானது. நீ மட்டுமில்லே எனக்கு உயிர் நட்பு, உன் வாழ்க்கையில இருக்கிற இரண்டு பெண்களுமே எனக்கு உயிர். உங்கள்ல யாருக்கு எது நடந்தாலும், எனக்கு அது என் உயிரை உருகிட்டு போன வலியை கொடுக்கும்.
சரி சொல்லு, என்ன பண்ணுது உடம்புக்கு..? மிருதுவுக்குத் தெரியுமா..? அம்மாக்கு..? வானதிக்கு விசயம் தெரியுமா..?’’
‘’அப்படியே அப்போலாவில அட்மிசனும் வாங்கிட்டு, பரேல் கிரவுண்டுல இடம் புக் பண்ணிட்டு, ஐஸ் பாக்சுக்கும் சொல்லிடு.’’
‘’டேய்..! அடங்க மாட்டே என்கிட்டே. இரு உன் இரண்டு பொண்டாட்டிகளுக்குக்கும் தகவலைச் சொல்றேன்.’’ போனை கையில் எடுத்தவளை அயர்ச்சியாக பார்த்தான்.
’’பேச சந்தர்ப்பம் தரவே மாட்டியா சந்தியா..?’’
‘’ சரி சொல்லு.’’
‘’ சொல்லத் தெரியல மனநிலையை. உணர்வுகளை சமாதானம் செய்ற மாதிரி, மனசாட்சியை சமாதானம் செய்ய முடியல. வானதியை பார்க்கணும், யாழியை கட்டிபிடிச்சு முத்தம் தரணும். இரண்டு பேர் கையையும் பிடிச்சிட்டு இந்த ஊரையே சுத்தி வரணும். இந்த ஏக்கம் கவலையா மாறி, பயமா என்னை ஆட்கொள்ள ஆரம்பிச்சிடுச்சு. நான் உண்மையாவே தவிப்பில இருக்கேன் சந்தியா. இதை உன் பிடிவாதக்கார ப்ரெண்ட் எப்போ உணர்வா..?
இந்தக் கவலைதான் என்னை அரிச்சு, அரிச்சு, வியாதிக்காரன் ஆக்கிடுமோனு பயமா இருக்கு.’’
‘’போதும் நந்தா. கிழவன் மாதிரி பில்டப் பண்ணாதே.’’ என்றவளை குசும்பாய் பார்த்தபடி நாடியை நீவிக் கொண்டான்.
‘’அப்போ நான் கிழவன் இல்லையா சந்தியா..? ‘’
முகத்தை அஷ்ட கோணலாக்கி திருப்பிக் கொண்டவளை பார்க்க, சிரிப்பாய் வந்தது. ஆனாலும் கைகளைக் கட்டிக் கொண்டு, பார்த்துக் கொண்டே இருந்தான்.
‘’உடம்புக்கு என்ன நந்தா..?’’
‘’லைட்டா ஹார்ட் பெயினா இருந்தது.கேஸ்டிக் ப்ராபளமா இருக்கும்னு மருந்து எடுத்து இருக்கேன். என் பயம் அது இல்லை. எனக்கு வானுவை பார்க்கணும்.’’ குழந்தை போல் சொன்னவனின் முகத்தைப் பார்க்கவே தர்மசங்கடமாக இருந்தது.
நடுவில் புகுந்து வானதி கெடுத்திருக்கா விட்டால், இன்று யாழி தன் தந்தையின் அணைப்பில் இருந்திருப்பாள். அத்தனையும் ஒற்றை மயக்கத்தில் நிறுத்தி விட்டாள் என்றபோதும், உடல் உபாதையில் கூட ஒருசேர இருக்கும் இருவரின் ஒற்றுமையை மனதிற்குள் மெச்சாமல் இருக்க முடியவில்லை.
‘’ நான் என்ன நந்தா செய்யட்டும்..? அவ பிடி கொடுக்க மாட்டேங்கிறாளே. அவ மனசு முழுக்க, எந்த நிலையிலும் மிருதுளாவுக்கு போட்டியா தான் வந்துட்டதா சிந்தனை கூட வந்திடக் கூடாதுங்கிறதுல மட்டும் தான் இருக்கு.
அந்த முட்டாள் தன்னையும் யோசிக்கல, உன்னையும் யோசிக்கல, ஏன் என்னையும் யோசிக்கல. இப்போ உனக்கு உடம்பு முடியலைன்னு சொன்னா, பதறுவா, தன்னைத் தானே வருத்திக்குவா. ஆனால் அவள் சிந்தனையில் உன்னை வந்து சேரணும்கிற நிதர்சனம் உரைக்கவே உரைக்காது. செக்கு மாடு வட்டத்துக்குள்ள பழகின மாதிரி, அவள் எண்ணம் முழுக்க நீ மட்டும் தான்..! ஆனால் உன்னை அடைகிற வழி இருந்தும் அதை செயல்படுத்த அவளுக்கு உணர்வும் இல்லை.’’
இருவருக்கும் இடையே ஒரு கெட்டியான மெளனம் அப்பிக் கிடந்தது. எதிரில் இருந்த காப்பி நீர்த்து ஆறிப் போயிருக்க, ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொன்றுக்கு ஆர்டர் செய்தான்,
‘’ உனக்கு நேரமாகுது. நீ கிளம்பு சந்தியா. ஏதோ மனசுல இனம் புரியாத தவிப்பு. அதுக்கு முகம் தரத் தெரியல எனக்கு. உன்னைத் தேடி அதனால தான் வந்தேன். பார்ப்போம்.’’ எழுந்து கொண்டான்.
கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் அவனின் உள்ளத்துக்கு தளர்ச்சி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. எதையோ சொல்லத் தெரியாமல் தவிக்கிறான். ஒரு நேர்மையான ஆணின் பரிதவிப்பு ஆயிரம் ஆழிகளை விட ஆர்பரிப்பானது. உள்ளடக்கி, உள்ளடக்கி, தன் உணர்ச்சிகளுக்கு உயிரையே விலையாக தந்து கொண்டு இருக்கிறான், என்று புரிந்தபோது இயல்பாக அவன்மீது இரக்கம் சுரந்தது.
அவன் மறுபாதியிடம் பேச வேண்டும். எண்ணிக் கொண்டு அவளும் எழுந்து கொள்ள, சாலையைக் கடத்தி பத்திரமாய் பேங்கிற்குள் அனுப்பி வைத்து விட்டேதான் தன் காருக்குச் சென்றான்.
நேற்று முழுக்க அழைத்தும் யாழி இணைப்பில் வரவே இல்லை. இன்றும் அழைத்தான்… இதயம் தான் வலித்தான்.
"...காயமொன்று நீ கொடுத்தாய
காய்ந்த வடு நீங்கவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ
கைதவழும் சேய் கொடுத்தாய்
உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன்…
என் கதையை நீ எழுதி, ஏடுகளை மறைத்து விட்டாய்
கனவுகளே கனவுகளே
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ…"
4
கொல்கத்தா. லாலா லஜ்பதிராய் சாலை. 'குங்கட் கே பீச்சே…’ ஹிந்தி பாடலில் இருந்த மசாலாவை விட, சபகெட்டியில் அதிகமாய் இருந்தது போல், எலெக்ட்ரிக் லாந்தார்கள் ஏற்றிய தள்ளு வண்டி முழுக்க நிறைந்து இருந்தது தெருக்கள் முழுக்க.
குறுகிய தெருக்கள் முழுக்க தின்பண்டக் கடைகளாய் சொப்பி வழிய, அங்கிருந்த ஏதோ ஒரு கடையில், அம்ரித்துடன் நின்று சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தாள் யாழி.
‘’ சொல்லு, யாழினி. எப்படி இருக்கு இந்த மசாலா முர்கி…’’ கோழி காலை கவ்வி இழுத்துக் கொண்டு அம்ரித் கேட்டபோது , ஆள்காட்டி விரலை சப்பிக் கொண்டு இருந்தாள் யாழி.
‘’நல்லாத்தான் இருக்கு. ஆனால் பகதூர் ஸ்டீட் முர்கி மாதிரி இல்லடி. அங்கே ஒரு மசாலா போடுவான் தெரியுமா..? அச்சோ அள்ளும்.’’ வங்கம் தண்ணி பட்டபாடாய் அவளுக்கு வந்தது. கரு தரித்தது முதல், அத்தனையும் அவளுக்கு இங்கேதான். வானதியிடம் பேசுவதைத் தவிர வேறு யாரிடமும் தமிழ் தேவைப்படுவதில்லை என்றாலும், வானதி தமிழில் தான் பேசியாக வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்து இருந்தாள்.
‘’ இன்னொரு நாள் அங்கே போகலாம். நமக்கு பிராக்டிகல் இருக்கிற நாள் கட் அடிச்சிட்டு.’’
‘’பானார்ஜி கடை இருக்கானு விசாரிச்சிட்டு போகணும், அதுவும் அந்த மசாலா தூத்… உப்..! அப்பா..!’’ நாக்கை சுழற்றி சுவை காட்டிய போது, அந்த அழகு பார்க்க போதையாக இருந்தது.
ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், லெகின்ஸும். தூக்கி போட்ட குதிரைவாலும், ரசகுல்லா கன்னமும், அளவான நிறமுமாய் கண்களை கசக்கி பிழிந்து கவன ஈர்ப்பு செய்து கொண்டு இருந்தாள்.
கன்னத்தில் அடக்கிய கறித்துண்டு, அவள் கன்னக் கதுப்புகளை தின்ன அழைப்பு விடுப்பது போல இருந்தது. வானதிக்கு தெரிந்தால் அவ்வளவுதான். சுதந்திரத்தோடு சேர்த்து இலவச இணைப்பாய் சொல்லி மாளமுடியாத அளவிற்கு கட்டுபாடுகளையும் வாரி இரைத்துக் கொண்டே தான் சுற்றுவாள்.
மேகம் திரளத் தொடங்கி இருந்தது. காற்று ஊடாடி ஊடாடி மேக கர்பத்தை கலைக்க ஆரம்பித்து இருக்க, ஒருமணிநேரம் ஊரையே குளிர் பெட்டியில் வைத்து பதப்படுத்தி எடுத்ததுபோல், சில்’லென்று இருக்க, கைகளை உரசி கழுத்தில் வைத்துக் கொண்டாள்.
‘’ இன்னொரு ப்ளேட் முர்கி சொல்லவா..?’’ அம்ரித் கேட்டாள்.
‘’ வேண்டாம். எனக்கு தஹி வடா சொல்லு டி அதுக்கு மேல கொஞ்சமாய் சில்லி ப்ளாக்ஸ் தூவி. ‘’
சொல்லிவிட்டு மெல்ல வானத்தை அண்ணாந்து பார்க்க, அவசரமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்த மேகங்கள் அவளை ஆனந்தப்படுத்த ஆரம்பித்தது. மூடி இருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கி நின்றாள். அலைபேசி சிணுங்க எடுத்துப் பார்த்தவளின் முகத்தில் சின்ன சலிப்பு மிகுந்தது.
நந்தா..! மூன்று நாட்களாய் அழைத்துக் கொண்டே இருக்கிறான். அழைத்து அழைத்து மனம் வெறுத்து போய் வானதியிடம் புகாரும் சென்று இருக்கிறது.
காலையில் கிளம்பும் போதே அம்மாவிடம் இருந்து நந்தா அழைத்தால் பேச வேண்டும்' என்ற கண்டிப்பும் வந்திருந்தது. பெரிதாய் நந்தாவின் மீது பாசமும் அன்பும் இல்லைதான். எட்ட எட்ட விலகினாலும், வந்து ஒட்டி ஒட்டி அன்பு செய்யும் அந்த பாசத்தின் மீது ஒரு இனம் தெரியாத பிடிப்பு இருந்தது. தசையாடும் இயற்கையின் தீர்ப்பு.
கோபம் முட்டிக்கொண்டு வந்தாலும், தகப்பனின் முகத்தை பார்க்கும் போது அது ஒத்திப் போய்க்கொண்டே தான் இருக்கிறது, என்பதுதான் நிஜத்திலும் நிஜம்.
முதல் அழைப்பு முற்றுப்பெற்ற சில வினாடிகளிலேயே அடுத்த அழைப்பு வர, லேசாய் முகம் சுளித்தபடி எடுத்தாள். எப்போதும் வீடியோ காலில் தான் வருவான். இப்போதும் அப்படியே.
சட்டென்று தொடு திரை விலகி, முழு மதியாய் தன்முன்னே நின்ற மகளின் தோற்றம் நந்தாவை என்னவோ செய்தது.
‘’ பாப்பா..!’’ என்றான் பரவசமாய்.அந்த கண்ணின் பளபளப்பு, அடிவயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்ய, எடுக்கும் போது இருந்த இறுக்கமும் அழுத்தமும் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்க, இமைக்காமல் நந்தாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
’’என் பேரு பாப்பா இல்ல..! யாழி… யாழினி.’’ அந்த செப்பு உதடுகளின் அசைவை பார்த்துக் கொண்டே இருந்தான். பார்க்காமல் தன்னைப் பார்க்கும் அந்த கண்களில் நர்த்தனமாடிய ஒரு மயக்கும் அசைவும், அந்த தகப்பனை அங்கமெல்லாம் குளிர வைத்தது.
‘’கோபமா என்ன பாப்பாவுக்கு..? நான் கால் பண்ணிட்டே இருந்தேன்,எடுக்கவே இல்லையே…’’
பதிலில்லை. உதட்டு சுளிப்பு மட்டும் தான். பார்வை எங்கோ பதிந்து கொண்டது. மகளின் அத்தனை அசைவும் நந்தாவை மெய் மறக்க வைத்தது. கண்களை விலக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
கடைத் தெருவின் இரைச்சலும், லஜ்பதிராய் தெருவின் நெருக்கமும் திரையைத் தீண்டி தீண்டி நகர்ந்தது. மணிக்கட்டை திருப்பி நேரத்தைப் பார்த்தான். ஆறுக்கு இன்னும் ஐந்து நிமிடம் பாக்கி இருக்கிறது என்று சொல்ல, லேசான கவலையோடு மகள் முகத்தைப் பார்த்தான்.
‘’யாழி, எங்கே இருக்கே இப்போ..? அங்கே மழை வருதா..? ஸ்கிரின்ல தெரியுதே.’’
‘’ம்ம்..! க்ளைமேட் ரெம்ப ஜாலியா இருக்கு. காலையில இருந்து பயங்கர வெயில். இப்போ சில் சில் கூல் கூல்…’’ அண்ணாந்து பார்த்து கைகளை மடக்கி சைகை செய்தாள்.
‘’எங்கே இருக்கே இப்போ..? ‘’
‘’ லாலா லஜபதிராய் ஸ்டீட்ல. இங்கே மசாலா முர்கி ரொம்ப நல்லா இருக்கும். முர்கி, முர்கி.! அப்படின்னா உங்களுக்கு என்னன்னு தெரியுமா..?’’ தூக்கி போட்ட குதிரைவாலில் மிச்சமிருந்த முடி அனைத்தும் நெற்றியில் கொட்டி பூத்திருக்க அந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க மனசு தவியாய் தவித்தது.
‘’அதென்னமா முர்கி..! எனக்குத் தெரியாதே.’’என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.
‘’கோழி. இளம் கோழியை நல்லா மசாலா தடவி, கான் ப்ளாக்ஸ்ல புரட்டி, தவால போட்டு நிறைய எண்ணெய் விட்டு மொறு மொறுனு பொரிச்சு, சில்லி சாஸ் வச்சு தருவாங்க. அவ்வளவே நல்லா இருக்கும்.’’ கண்களை மூடி லயித்துச் சொன்னவளை அவள் அறியாமலே நூறு ஸ்டில் எடுத்து முடித்து இருந்தான். ஒவ்வொரு அசைவும் அவனுள் விரைவி விரைவி என்னவோ செய்து கொண்டு இருந்தது.
‘’இது உடம்புக்கு நல்லதா..? அம்மாக்கு நீ இப்படி சாப்பிடறது தெரியுமா..?’’
உதட்டை சுளித்துக் கொண்டாள்.
‘’தெரியாது. நீங்க அம்மாகிட்ட சொல்லக் கூடாது. ‘’ கைகளைக் கட்டிக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.
‘’ஏன் சொல்லக் கூடாது..?இது ஹெல்தியே கிடையாது இல்ல. அது என் பாப்பா உடம்புக்கு கெடுதல் தானே..?’’
‘’ரெகுர்லாம் இல்ல, எப்பயாச்சும் தான்.’’ குரலை உள்ளிழுத்து சொன்னாள். வானதியிடம் நிறைய பயமிருப்பது தெரிந்தது. அந்த கண்டிப்பு லேசான ஆச்சர்யத்தை தந்தது.
‘’ஏன் சொல்லக் கூடாதுனு கேட்டேன்.’’ என்றான் இன்னும் அழுத்தமாக
‘’ஏன்னா நீங்க…’’ நிறுத்திவிட்டாள். சொல்ல மாட்டாளா' என்று நந்தாவும், சொல்லி விடப் போகிறோம்' என்று யாழியும் சேர்ந்தே தவித்தார்கள்.
‘’சொல்லுடா…’’ என்றான் குரல் இடற. நிமிர்ந்து பார்த்தாள். வெறுப்பும் இல்லாத விருப்பும் இல்லாத தகப்பன். அம்மாவின் தனிமைக்கு சொந்தகாரன் என்ற வகையில் அவன் மீது அளப்பறிய கோபம் இருக்கிறது தான். ஆனால், அந்த உறவுக்காக தான் எத்தனை ஏங்குகிறோம் என்றும் அவள் மட்டும் தானே அறிந்தவள்.
‘’சொல்லேன் பாப்பா…’’ என்றான் ஏக்கத்தின் மூர்க்கத்தில்.
உதடு சுளித்து அதிருப்தி பட்டுக் கொண்டாள். அவளின் எந்த அலட்சியமும் நந்தாவை எதுவுமே செய்யவில்லை. இல்லாமையை விட எதுவாகவோ இருப்பது அத்தனை ஏகாந்தமாய் இருந்தது. மகளின் புறக்கணிப்பை விட, வெறுப்பு தித்திப்பாக இனித்தது.
’’எதுக்கு கால் பண்ணினீங்க..? நான் வீட்டுக்கு போகணும்.’’ என்றாள் முணுமுணுப்பாய்.
‘’எப்படி போவே..? வண்டி ஓட்டறியா..? கல்கத்தா ரெம்ப ஜனநெருக்கமான சிட்டியாச்சே..? பத்திரமா ஓட்டணும் இல்ல.’’
‘’நீங்க எதுக்கு அதைப்பத்தி சொல்றீங்க..? ஒருமுறை கூட கல்கத்தா வந்ததில்லை தானே..? நான் வண்டியெல்லாம் ஓட்ட மாட்டேன். அம்மாக்கு பிடிக்காது.’’
‘ என்னைப் பார்க்க வந்தாயா..?’ என்று கேட்காமல் கேட்கிறாள். நெகிழ்ந்து போய் நின்றான். வானதியின் மீது பொங்கி வந்த கோபத்தை அமைதியாக கட்டுப்படுத்திக் கொண்டான். அவளின் உருவமில்லாத பயத்துக்கு விலையில்லாத எத்தனை பேரின் உணர்வுகளை காவாக தந்து இருக்கிறாள்.
‘’ சரி, அப்போ கிளம்பு. மழை வந்திடும் இல்லே..? வீட்டுக்கு போயிட்டு கால் பண்றியா எனக்கு.’’ அவன் கோரிக்கைக்கு பிடித்தம் இல்லாமல் மெல்ல தலையசைத்தாள்.
அதற்குள் அம்ரித் எதையோ வாங்கிக் கொண்டு வர, அதை கேமரா அருகில் குவித்து காட்டிவிட்டு, விரல்களை மடக்கி, நல்லா இருக்கும்’ என்று சைகை செய்துவிட்டு மூன்று விரல்களை மட்டும் ஆட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்து, நந்தாவை தண்டித்தாள்.
+ + +
கல்கத்தா செண்ட் ஜான்ஸ் மிசினரி ஹாஸ்பிடல். மெல்லிய ஊசித் தூறல் ஈசித்துக் கொண்டு இருந்தது காரிடரை. உள்ளே வந்து கல்கத்தா டைம்சில் கண்களை சுழற்றிவிட்டு, தீதியின் ஆக்ரோச அறிக்கைகளை வாசித்து விட்டு, மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள்.
மணி ஆறு..! வீட்டுக்கு வந்தாச்சா.?’ என்று விசாரித்து யாழிக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டு, உள்ளே இருந்து வரும் அழைப்பிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். மதர் கேத்தரின் ரவுண்ட்ஸ் முடித்து திரும்பிப் போகும் போது மிசினரிகளிடம் இருந்து நல்ல தொகை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ஓதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் சொல்லிச் சென்றார்.
இரண்டு நாள்கள் முன்னர் நிர்வாகத்தினர் அத்தனை பேரும் செய்து கொண்ட முழு உடல்தகுதி பரிசோதனை அறிக்கையை வாங்கிப் போக வந்திருந்தாள்.
அத்தனை பேருக்கும் அறிக்கைகள் தனித்தனியாக அனுப்பப்பட்டு இருக்க, டீன் டாக்டர் போஸ் வானதியை வரச்சொல்லி தகவல் அனுப்பி இருந்தார். கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அழைப்பு வந்ததும் எழுந்து உள்ளே சென்றாள்.
‘’ வெல்கம் வானதி.’’ என்றார் பரிட்சயமான அன்பில்.
நிமிர்ந்து பார்த்து சிரித்தாள். மெல்ல இருக்கையை நிறைத்துக் கொள்ள, வழக்கமாக விசாரிப்புகள், மருத்துவமனை பற்றிய தகவல்கள் என்று நேரத்தைக் கடத்தி, உரையிட்ட மருத்துவ அறிக்கையை எடுத்து நீட்டினார், அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி.
" உங்களுக்கு நிறைய உபாதைகள், அதன் அறிகுறிகள் இருக்கிறதா முன்னேயே சொல்லி இருந்தீங்க. ஆனால் எந்த நோயுக்கான முகாந்திரமும் உடலில் இல்லை. அது உங்கள் மனதோடு சம்பந்தப்பட்டதா இருக்கலாம். மனதை காபந்து செய்யுங்கள் வானதி." என்றார் புன்னகையோடு.
"...உறக்கமில்லாமல்
அன்பே நான் ஏங்கும் ஏக்கம்
போதும்
இரக்கமில்லாமல்
என்னை நீ வாட்டலாமோ நாளும்
எந்நாளும்
தனிமையே எனது
நிலைமையா
தந்த கவிதையா கதையா
இரு கண்ணும்
என் நெஞ்சும் நீரிலாடுமோ
மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ…"
5
சென்னை மெடிக்கல் காலேஜ். அனாடமி வகுப்பு முடிந்து, அலுத்துப் போய் மரத்தடி சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து இருந்தாள் தபஸ்வி.
ஆர்த்தி வகுப்புகளை முடித்து விட்டு வந்து விட்டால்,கிளம்பி விடலாம் .நான்கு நாட்களாய் நந்தா விடுப்பில் இருந்ததால் கல்லூரிக்கு வந்து போகும் சிரமமே தெரியவில்லை.
பின்னால் வந்து தோளில் கை போட்டாள் ஆர்த்தி.
" என்னடி அனாடமி கிளாஸ்க்கு போயிட்டு வந்து மந்திரிச்சு விட்ட மாதிரியே திரியறே. அரண்டுட்டியோ…" வாய்விட்டுச் சிரிக்க, கைகளை ஊன்றி எழுந்து நின்றாள்.
"என்ன செய்ய..? நான் கைனகாலஜிஸ்ட்டாகியே தீரணும்னுகிறது என் அம்மாவோட லட்சியம். இப்போ நான் கிடந்து அல்லாடறேன். பசி உயிர் போகுது. ஏதாவது வயித்துக்கு போடணும். அதுக்கு முதல்ல குளிக்கணும்."
"டாக்டர் இப்படி அசூசை பார்க்க கூடாது மேடம்." ஆர்த்தி குறும்பாய் தோள்களை கட்டிக் கொள்ள, மெல்ல அவள் கைகளை பிரித்து விட்டாள்.
"உங்கப்பா வருவாரா..? "
" ம்ஹூம். அவர் லீவ் முடிஞ்சு ட்யூட்டியில ஜாயிண்ட் பண்ணிட்டாரு. நீ உன் வீட்டுக்கு கால் பண்ணு." என்னும் போதே உள்ளுக்குள் சிலிர்த்தது.
பள்ளி காலம் தொட்டு இருவரும் நெருங்கிய தோழிகள். கொஞ்சம் நெருக்கமாய் வசிப்பிடம் இருந்ததும் இரு குடும்பத்தின் நட்பை வெகுவாய் கெட்டிப் படுத்தி இருந்தது.
அலைபேசி எடுத்து தகவலை சொல்லி முடித்து வைத்த ஐந்தாவது நிமிடம், கே'போடு தபஸ்வி எதிர்பார்த்தது போலவே அமர் வந்து நிற்க, உள்ளுக்குள் பறந்த பட்டாம்பூச்சியை வெகு சிரமப்பட்டு கட்டி வைத்தாள்.
போலீஸ் டிரெயினிங்கில் இருந்தான். போஸ்டிங்கிற்கு முன்னமே மிடுக்கும் கம்பீரமும் முகத்தில் மெருகை ஏற்றி இருந்தது.
ஆர்த்திக்கு அப்பா இல்லை. அம்மா கல்லூரி பேராசிரியை. அமரும், ஆர்த்தியும் மட்டும்தான். நேர்த்தியான குடும்பச் சூழல். அப்பா இல்லாததால் அந்தப் பொறுப்பையும் சேர்த்து சுமக்கும் அமரின் கடமை உணர்வின் மீதுதான் இளமை பூஞ்சைக் காளானாய் காதலை படர விட்டு இருந்தது.
பசி சிறுகுடலை ருசித்துக் கொண்டிருந்த நிமிசம் தான், சரியாக அமர் வந்திருந்தான். பார்த்ததும எப்போதும் தபுவை கிறங்க வைக்கும் அந்த வசீகரச் சிரிப்பை சிரித்தான். குளோரோபார்ம் செலுத்தாமலே உடம்பு சொக்கிச் சரிந்தது.
" இன்னைக்கு அப்பா வரலியா தபு..?" என்றான்.
" இல்ல அமர். அப்பா ட்யூட்டில ஜாயிண்ட் பண்ணிட்டாரு. துர்யன் இருந்தா வருவான். அவனுக்கு காலேஜ்ல வேலை இருக்குன்னு சொல்லிட்டான். நீங்க டிரெயினிங் ஸ்பார்ட்க்கு போகலயா..?"
" முடிச்சிட்டு ஃபோர் ஒ கிளாக் வீட்டுக்கு வந்துட்டேன். இனி நாளைக்குத் தான்."
"நானும் ஒருத்தி இங்கே இருக்கேன்." நடுவில் புகுந்து கைகளை ஆட்டி ஆர்த்தி கேலி செய்ய அசடு வழிந்தபடி இருவரும் கேப்பில் ஏறிக் கொண்டார்கள்.
முன் இருக்கையில் டிரைவரோடு அமர்ந்து கொண்டான். ஒரு அத்துமீறிய பார்வையைக் கூட அவசியமின்றி விரயம் செய்யாமல் கண்ணியமாய் அமர்ந்து இருந்தவன் சொல்லாமல் கொள்ளாமல் அவள் நெஞ்சில் சிகரம் ஏறினான்.
வீடு வந்து சேர்ந்தும் வெகு நேரம் மட்டுக்குக்கும் நினைவுகளின் தித்திப்பு அடங்கவே இல்லை அவளுள்.
நிலைகளை மாற்றமல், சுளை தேடி தேன் உறிஞ்சும் பெரும் மாய வித்தை கொண்டது காதல் உலகம். கண்ணியமான மனிதர்களுக்கு மத்தியில் உருவாகும் ஈர்ப்பு விசை, பெரும் சக்தி வாய்ந்தது.
"வந்ததுல இருந்து கனா கண்டுட்டே இருக்கியே அம்மாலு, உன் அத்தைகாரி நம்பர் இதுல இருக்கு போட்டு குடேன்." பழசான கைத்தறி புடவை போல் உடம்பு முழுக்க ஏகப்பட்ட சுருக்கத்தோடு வந்து நின்ற கல்பனா பாட்டியை அயர்ச்சியாய் பார்த்தாள்.
சிந்தனை, சிறகில்லாமல் பறந்து கொண்டிருக்கும் போது, நடுவில் தொண தொணத்த படி அதென்ன டீல் செய்வது..? எரிச்சல் மண்டியது.
"சும்மா இருங்க பாட்டி..? அத்தை காலேஜ்ல இருந்து வந்திருக்க மாட்டாங்க. வந்தா வீட்டில வேலை இருக்கும் இல்ல..? அப்புறம் பேசிக்கலாம்." எழுந்து போய் விட்டாள்.
இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் எட்டி பார்க்கும் தூரம்தான். ஏனோ அது இளமையில் புரிவதில்லை.
கல்பனா மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டார். வலி எடுத்த கழுத்தை நீவி விட்டுக் கொண்டார்.
எப்போதும் போல வயதை கணக்கு போட ஆரம்பித்து இருந்தார். இப்போது எல்லாம் நாட்களை எண்ணி எண்ணி செலவு செய்து கொண்டு இருந்தார் சிக்கனமாக. மனசு முழுக்க வானதியும், தான் ஒரு முறை கூட பார்க்காத பேத்தியுமே நின்றார்கள்.
தொடுவானம் போல் கண்ணுக்கு எட்டியும் எட்டாமலும் நின்ற அந்த பந்தத்திற்கு பந்தக்கால் போட்டவர் என்ற வகையில், ஒரு டீஸ்பூன் குற்றவுணர்வு அதிகமாய்த்தான் இருந்தது.
வானதியிடம் அடிக்கடி பேசுவார் தான். பிடிவாதக்கார பேத்திதான் எத்தனை முயற்சி செய்தும் முகம் காட்ட மறுக்கிறாள்.
சில நாட்கள் முன்பு நந்தா தந்த யாழியின் படங்களை பார்த்ததில் இருந்து உள்ளுக்குள் ஒருவித தவிப்பு. அள்ளி அணைத்து, கொத்து முடியில் பின்னல் போட்டு, பால் கன்னம் வருடி, அந்த எழுத்தாணி மூக்கில் மூக்குத்தி போட்டு, காஞ்சிபுர பாவடை தாவணி உடுத்தி… வயதானவர் கனவில் இளமை மட்டுமே இருந்தது.
கொஞ்ச நாட்களாய் கண் கோளாறு செய்கிறது. எழுபதை தாண்டியாகி விட்டது. ஆரோக்கிய சதவிகிதம் பின்னடைவு தான் இனி. எல்லாம் முடிவதிற்குள் ஒரு காலத்தில், தனக்கு எல்லாமுமாய் இருந்தவளை பார்க்க வேண்டும்.
அது வரைக்கும், நடை தளராமல், பார்வை பஞ்சடையாமல், நடமாட வேண்டும். மனசு வைராக்கியமாய் காத்திருந்தது. ஆனால், அவள் வருவாளா..?
உதிரிப் பூவாய் உதிர்ந்து கொண்டிருந்த மழை, வேகமெடுத்து சரம் தொடுக்க ஆரம்பித்து இருந்தது.
யாழிக்கு அழைத்து அவள் வருகையை உறுதி செய்து கொண்ட பிறகு, மருத்துவமனை முகப்பில் இருந்த ஒய்வறையில் கண்களை மூடி அமர்ந்து இருந்தாள் வானதி.
உள்ளுக்குள் ஒரு பிரளயம் உண்டாகி கால்விரல் நரம்பு முதல் தலை உச்சி வரைக்கும் ஆட்கொண்டு இருந்தது.
வெளிச்சம் குறைவான நியான் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்த பரிசுத்தமான அறை. சுவற்றில் மேரியின் பிடியில் சிசுபாலன் இருந்தார். அந்த அமைதி தவளும் முகம், அவள் இதயத்தின் சர்வத்தை நுணுக்கி நூறாக்கியது.
மாடத்தில் மெழுகுவர்த்தி மேல் அடர்ந்த சுடர் ஒன்று குத்த வைத்து அமர்ந்திருக்க, அதற்கு நேர் எதிரே மதர் சுப்பீரியர் கேபிரியலாவின் தெய்வீக படம்.
' இத்தனை கால வாழ்க்கையின் அஸ்திவாரமும், அன்று மேய்ப்பன் இல்லாத இந்த செம்மறியை, அந்த மரி தோளில் ஏந்திய துவக்கம் தான்.
மேம்போக்காய் பார்த்தால் அங்கே எதுவுமே பிரச்சனையாய் இருக்கவில்லை தான். இவள் மட்டும் விலகாமல் இருந்திருந்தால், நந்தா என்ற பேரன்பான மனிதன் இரண்டு நல் இதயங்ளுக்கு நடுவே பயணம் செய்ய இயலாமல் இல்லாமலே போயிருப்பான்.
வடுவாய் கூட அங்கே வாழ்ந்து உறுத்தலை தந்துவிடவே கூடாது என்றுதான் பிரிந்து வந்தாள்.
உருவத்தில் மட்டும் தானே பிரிவு… உள்ளத்தில் இல்லயே. இந்த பிரிவுக்கு பிறகுதான் இருவரும் பிரிக்கவே இயலாமல் கலந்து போனார்கள்.
அவன் தீண்டல் அவளுக்கு தேவைப்பட்டதே இல்லை எப்போதும். அவன் குரலும், அதில் வழியும் அவளுக்கே அவளுக்கான பிரத்யேக அன்புமே போதுமானதாய் இருக்கும் எப்போதும்.
மதர் கேப்பரியலா மட்டும் இல்லாது போயிருந்தால் இத்தனை வருடம் தாக்கு பிடித்திருக்க முடியுமா..?' அயர்ந்த பெருமூச்சு ஒன்று எழுந்தது.
வைப்ரேசனில் இருந்த ஃபோன் மடியில் துள்ளத் துடித்து அடங்கி இருந்தது. நேரம் அனல் மேல் விழுந்த புனல் போல் இருந்த இடம் தெரியாமல் தொலைய, எழுந்து கொள்ள பிரியமின்றி அமர்ந்தே இருந்தாள்.
மூன்று முறை அழைத்து ஓய்ந்து, பொறுமையை காற்றில் பறக்க விட்டுவிட்டு யாழி தேடிக் கொண்டு வந்து நின்றாள். உடன் மம்தாவும்.
"மாய், யாழியே தேடிட்டு வந்திருச்சு." குரலுக்கு கட்டுபட்டு கண் திறந்து பார்த்தாள்.
கையில் சிப்ஸ் பாக்கெட்டை வைத்து நொறுக்கி கொண்டு, அம்மாவை முறைத்துக் கொண்டு நின்ற யாழியை பார்த்ததும் அடிவயிறு என்னவோ செய்தது. இருபது வருடங்கள், எந்த உறவுமே இல்லாமல், அம்மாவை மட்டுமே ஆட்கொண்டு வாழ்கிறாள்.
"என்னம்மா பண்றீங்க..?" இயல்பாய் கேட்டபடி இரண்டு சிப்சை எடுத்து அம்மாவுக்கு ஊட்ட, மெல்ல பலமற்று அசைய மறந்திருந்தது வானதியின் தாடைகள்.
" சாப்பிடலயா யாழி.? இப்படி ஜங் புட் சாப்பிடாதனு எத்தனை முறை சொல்றேன். மம்தா டிபன் செய்து தரலியா..? " மகளின் அடர்ந்த கேசத்தை ஒதுக்கி விட, அவள் வானதியின் மடியில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் பதின்ம வயது சிறுமி போல.
"மா இன்னைக்கு நந்தா கூட பேசினேன். அவரும் இதையேதான் சொன்னார். என்னை பார்த்த்த்த்த்த்துட்டே இருந்தாரு. லைப்ல முதல் முறையா அவர் கூட கோபப்படாம, சண்டை போடம பேசி இருக்கேன்." கழுத்தை கட்டிக் கொண்டு காலாட்டினாள்.
அமைதியாகவே இருந்தாள். மடிமீது அமர்ந்திருந்தவளின் மீது இறுக்கமாக விரல்களை பதியவிட்டு இருந்தாள். சஞ்சலமான மனநிலைக்கு அந்த அழுத்தம் ஒருவித இதமாக இருந்தது.
"மா, என்ன முகமே சரியில்லை. நந்தா உனக்கு கால் பண்ணி சண்டை போட்டாறா..? " வேண்டுமென்றே கண் சிமிட்டி கேட்டவளை பதில் சொல்லாமல் பார்த்தாள்.
"அப்பா'னு கூப்பிட மாட்டியா..?" மகளின் கன்னம் வருடி காது மடலை நிமிண்டி விட்டாள். அம்மாவின் நெஞ்சணையை பஞ்சணை ஆக்கி இருந்தாள் யாழி. சிப்ஸ் சாப்பிட்ட விரல் நுனியை குழந்தைபோல் சப்பித் தீர்க்க, அவளின் ஒவ்வொரு அசைவும், கண்களில் விழுந்து எண்ணத்தில் கலந்தது.
"அப்பாங்கிறது பட்டம் இல்லமா படிச்சு வாங்க. பதவி..!அதை அடைய போராடணும். அவர் எனக்கு என்ன செய்தார்? இந்த உபகாரம் கூட உங்களுக்குக்காத் தான்.
மா, வீட்டுக்கு போகலாம்மா. பசிக்குது." கொஞ்சியவள் மேற் கொண்டு சிந்திக்க விடாமல் அம்மாவை இழுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வந்ததும் முகம் அலம்பி உடை மாற்றி சோபாவில் சரிந்தவள் கண்கள், பெங்காளி தொடரில் லயித்துப் போக, சிந்தனையாகவே வானதி சமையலறையில் இயங்கிக் கொண்டிருந்தாள்.
புல்காவும், கடாய் பனீரும் செய்து முடித்து ஹாலுக்கு வந்த போது, யாழி அங்கே இல்லை.
விளக்குகள் தனிமையில் விழித்திருக்க, டி.வி. கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தது. பக்கவாட்டு ப்ரன்ச் டோர் திறந்திருக்க அங்கே வானதி போலவே ஒற்றையாய கிடந்த மடக்கு நாற்காலியில் கால்களை குறுக்கி அமர்ந்து இருந்தாள் யாழி.
"யாழி மா…" அம்மாவின் அழைப்பு காதில் விழுந்தாலும், கருத்தில் விழவே இல்லை.
பொட்டு பொட்டாய் இருந்த நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டே இருந்தாள். அருகில் வந்து மோடாவை நகர்த்திப் போட்டு முன்னே அமர்ந்த அம்மாவை பார்த்துவிட்டு, அந்த ஷணமே பார்வையை மாற்ற, வானதி புருவத்தை சுருக்கியபடி பார்த்தாள்.
"யாழி, திடீர்னு என்ன ஆச்சு..?"
பெற்றவளுக்கு பதில் சொல்லாமல், பார்வை அவளைத் தாண்டி குதித்து, ஹாலில் அனாதையாய் ஓடிக் கொண்டிருந்த டி.வி.யில் நிலைக்க வானதி புரியாமல் மகளைப் பார்த்தாள்.
" ஏன்மா, உனக்கு ஒரு முறை கூட நந்தாவோட அருகாமை தேவைப்படவே இல்லையா…" அந்தக் குரலில் வழிந்த உணர்வு இதுவரை வானதி அறியாதது.
மெல்லிய தடுமாற்றமும், பதட்டமும், வேர்வைச் சுரப்பிகளுக்கு வேலை வாய்ப்பை தந்திருக்க, கழுத்தடியில் கச கச' வென நனைய ஆரம்பித்தது.
"பசிக்குதுன்னு சொன்னியே யாழி, வா, தட்டெடுத்து வைக்கிறேன்." அவசரமாய் எழுந்தவள் கைகளைப் பற்றிக் கொண்டாள், எங்கோ வெறித்தபடி.
"சொல்லிட்டு போம்மா."
" அது உனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை யாழி மா." என்றாள் கண்டிப்பான குரலில்.
" அது தான் ஏன் மா..? தன் பிறப்பிற்க்கே அப்பா, அம்மாவுடைய அந்தரங்கம் தான் காரணம்னு குழந்தை உணரும் நிமிசம், தாம்பத்யத்தின் தயக்கம் எல்லாம் முடிஞ்சு போயிடுதுமா. வேர் இல்லாம மரமேது… எனக்கும் அது புரியற வயசுதான். ஒரு நீண்ட இடைவெளி… 20 வருசம், அதுவும் உணர்வுகள் கூர்மையான 20 வருசம்…
எனக்கு வலிக்குதுமா உன் தனிமை. அந்த சீரியல்ல காம உணர்வோட நியாயத்தைச் சொல்லி புது வாழ்க்கையைத் தேடி ஓடற ஒரு நடு வயது பெண்ணை பார்த்தப்போ, எனக்கு உன் முகம் நியாபகம் வந்து, அழுகை அழுகையா வந்தது."
சட்டென்று தளர்ந்து அம்மாவின் இடையைக் கட்டிக்கொண்டு விசும்ப, சொக்கிப் போனாள் வானதி. சொல்லில் வடிக்க இயலாத உணர்வாக இருந்தது.
" யா..ழி...'" என்றாள் கண்கள் ததும்ப. ஆணை பெண் அறிவதும், பெண்ணை ஆண் அறிவதும் காலத்தின் கட்டாயம். ஆனால் பெற்றவளை பிள்ளை அறிவது, பேறு அல்லவா..!பெற்ற மகளின் நுணுக்கமான கேள்விகள், வானதியை உணர்வுக் குவியலாக மாற்றி இருந்தது.
மகளின் தலைகோதி, முகம் துடைத்து விட்டு, இரண்டு தோள்களையும் பற்றி தூக்கி நிறுத்தினாள். சிணுங்கிக் கொண்டு துவளப் போனவளை, இழுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர்த்தி, புல்காவை எடுத்து வைத்தாள்.
"'எனக்கு சாப்பிட பிடிக்கல."' கையைக் கட்டிக் கொண்டு, அழிச்சாட்டியம் செய்தவளை, சட்டையே செய்யாமல் புல்காவை விள்வி கிரேவியில் தோய்த்து ஊட்ட ஆரம்பித்தாள்.
இரண்டு ரொட்டிகளை முறைத்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க, அதே தட்டில் தானும் எடுத்து வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்.
படுக்கையை தட்டிப் போட்டு, பேசி பேசி களைத்து கால்களை மடக்கிக் கொண்டு தூங்கியும் போனாள்.
முதுகில் தட்டி தட்டித் தந்தபடி மகளை உறங்க வைத்தவளுக்குத் தான் உறக்கம் ஒரு சொட்டுக் கூட வரவில்லை.
மகள் எடுத்து தாக்கிய ஆயுதம் கூராய் நெஞ்சுக்குள் குத்திக் கொண்டு நின்றது.
'... 20 வருடங்கள்… அதுவும்,கூர்மையான 20 வருடங்கள். ' மெல்ல ஒரு புன்னகை உதட்டில் விரிந்தது. எத்தனை சிந்திக்கிறாள், என் செல்ல மகள்…!
சமையல் அறையில் இருந்த சந்தியா, சர்க்கரை டப்பாவின் மேல் இருந்த டேப்பில் ஒடிய சமையல் குறிப்பை எட்டி எட்டிப் பார்த்து சமைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்க, அரைத்த சட்னியை வழித்துக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தான் சிவராமன்.
"ஏன் சந்தியா, இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படி யூ ட்யூப் பார்த்து சமைப்பே ? உனக்கு வெட்கமாவே இருக்காதா? " கேட்டவன் முதுகில் பொளேர் என்று அறை விழுந்தது.
"நான் எப்படி சமைச்சா உனக்கென்ன மேன்? பசிக்கும் போது சாப்பிட தட்டில ஏதாவது விழுதானு பாருங்க. " அவள் முடிக்கும் முன்னே ஹாலில் இருந்து கரண் சத்தமிட்டு அழைத்தான்.
" மீ, கால் வந்துட்டே இருக்கு உங்க நம்பர்ல."
"யார்னு பார்த்து சொல்லு கரண்.'' கொத கொதவென கிளறி இருந்த எனதயோ உள்ளங்கையில் கொஞ்சமாய் வைத்து நக்கி சுவைத்து தனக்கு தானே மெச்சிக் கொண்டு நின்றவளை திரும்பி நக்கலாய் பார்த்தான் சிவராமன்.
"என்ன நல்லா இருக்கு தாக்கும்…"
" அடி தூள்னு இருக்கு சிவா. இப்படியொரு வாங்கிபாத்'தை உன் பரம்பரையில இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க." கண்களை மூடி லயித்தவளை பார்த்த பார்வையில் கேலி கேட்பாரற்று கிடந்தது.
" அதுசரி, இப்படி நீயே கொஞ்சம் கொஞ்சமா நக்கி டேஸ்ட் பார்த்துட்டு என்னையும் என் புள்ளையையும் காப்பாத்தி விட்ரு." என்றவனை அடிக்க கை ஓங்க, போனுடன் கரண் சமையலறையில் இருந்தான்.
" மீ, வானு ஆன்ட்டி…" சட்டென்று முகத்தில் குறும்பு மறைய, அலைபேசியை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள். அழைத்து ஓய்ந்து சளைத்திருந்த அலைபேசியில் வானுவை அழைக்க, உடனே இணைப்பில் வந்தாள்.
"என்ன வானு..? காலையில தானே பேசினோம்? எதுவும் முக்கியமா?" குரலில் கவலை அலைகடலில் கட்டுமரமாய் தத்தளித்தது.
" முக்கியம்னு இல்ல. சும்மாதான்…" என்ற குரலே, இது சும்மாவே இல்லை' என்று சும்மா சும்மா மூளைக்குள் வந்து சொல்ல, கவனத்தை வானதி வார்த்தைகள் மீது, குவி லென்சாக்கினாள்.
"என்ன நினைக்கிறியோ பேசு. அது சும்மாவா இல்லையானு நான் முடிவு பண்ணிக்கிறேன்."
இரண்டு நிமிடம் மெளனத்தில் வீணாக்கிய பிறகு, வானதி தயக்கமாய் கேட்டாள்,
" நீ சாப்பிட்டியா சந்தி..?"
"விளக்கெண்ண. சொல்ல வந்ததை சொல்லு டி நீ. எனக்கு இன்னும் பி.பி-லாம் வரவே இல்ல. உன்னால வந்தது, உன்னை சும்மா விட மாட்டேன் பார்த்துக்க."
தவிப்பின் உச்சத்தில் வானதி நிற்பது புரிந்தது. கல்தூண் மனசு கூட காற்றுக்கு துருப்பிடிக்கும் காலத்தில் அவள் இருப்பதும் புரிந்தது.
"என்னடிமா யோசிக்கிறே? ஏதாவது பேசேன்."
"நான் கல்கத்தா வந்து இருபது வருசத்துக்கு மேல் ஆயிடுச்சு இல்ல. இருபது வருசமா நா…ன்… யாரை…யும் பார்க்…கல இல்…ல" குரல் நசுங்கி வந்தது.
"வார்த்தையை சாதுர்யமா, உனக்கு சாதகமா பயன்படுத்தாதே. நீ யாரையும் பார்க்க விடல."
"ப்ச். ரெண்டும் ஒண்ணு தான் டி." என்றாள் அலுப்பாக.
"அதெப்பிடி டி ஒண்ணாகும்? வனவாசத்துக்கும், சிறை வாசத்துக்கும் வித்யாசம் இருக்குல. நீ போனது வனவாசம். அதனால மத்தவங்களுக்குத் தான் சிறைவாசம்."
வானதி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, சந்தியாவின் இதயம் கனிந்துருக ஆரம்பித்தது.
"சரிடா, இப்ப என்னாச்சு? எதுக்கு இந்த சிந்தனை எல்லாம்? ஏதாவது கெட்ட கனவு பார்த்தியா?"
" சொல்லத் தெரியல. ஒரே தவிப்பா இருக்கு. காரணம் புரியல. நீண்ட தவத்துக்கு பிறகு, அந்த கடைசி நொடிகள்ல ஒரு நடுக்கம் உடம்பு முழுக்க ஒடுமே, அதுமாதிரி இருக்கு. எனக்கு, எனக்கு நந்தா…வை பார்க்கணும் போல இருக்கு…" வார்த்தைகளை கட்டுபாடாய் உதிர்த்த வானதியால், கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் போனது விசித்திரமே.
சந்தியா கண்களை மூடி நின்றாள். காதில் அலைபேசி ஆயிரம் உணர்வுகளின் கதையை பேசிக் கொண்டு இருந்தது ஆனால் அது எதுவுமே அவள் கவனத்தில் இல்லை. கண்கள் தன்னால் சுரக்க, உதடு தன்னிட்சையாய் துடிக்க, மூக்கு துவாரங்கள் விரிந்து, சிவந்து விஸ்தீனமாக… அந்த வார்த்தையின் வீச்சை அவளாலே தாங்க இயலவில்லையே, அந்த பைத்தியக்காரன் கேட்டால் என்னாவான்' என்ற கவலை அவளை வெட்டி சரித்திருந்தது.
"...நான் உன்னை நெனச்சேன்,
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சம் ஒண்ணாச்சு…
நம்ம யாரு பிரிச்சா,
ஒரு கோடு கிழிச்சா,
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு…
உன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு…"
6
லஸ் கார்னரை ஒட்டி மூன்றாவது திருப்பத்தில் இருந்த பொடிக்கில் உபயோகமே இல்லாத ஜீன்ஸுக்கு வேண்டா வெறுப்பாய் ஃஓஃ ஒரு குர்தியை வாங்கிக் கொண்டு, ஜீ பே செய்துவிட்டு காருக்கு வந்தாள் சந்தியா.
மாலை மங்கிப் போய் இரவு பவனி வந்திருந்தது. நகரமே விளக்கில் வீழ்ந்து கிடக்க, இன்னும் முகமும் மனசும் தெளியவே இல்லை.
வானதி என்ற அமரநதி, அவள் சிந்தனையில் ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தது. அவள் வார்த்தைகளின் கீறல், சரியாய் எதையோ சொன்னது. அவளாலே புரிந்து கொள்ள முடியாத உணர்வை, இவளுக்கு எப்படி புரிய வைப்பாள்?
ஒரு பாதையில், ஒரே பரிமாணத்தில் நேர்கோட்டில் பயணம் செய்யும் ரயில்கள் தடுமாறினால் அங்கே ஏதோ இடர்பாடு என்றுதானே பொருள்..? சொல்லத் தெரியாமல் தவிக்கிறாள்.
கொஞ்சம் அழுத்தமான சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடந்தவளை கொஞ்சம் தள்ளி ஒலித்த அழைப்பு நிமிர்ந்து பார்க்கச் சொன்னது.
நந்தா மகனோடு ஸ்போட்ஸ் ஷாப்பில் நின்றான். கையசைத்து விட்டு, காரை திருப்பிக் கொண்டு அவன் முன்னே நிறுத்த, அதே புன்முறுவலுடன் நின்றான். சட்டென்று அவன் முகத்தில் வானதி தெரிய துணுக்குற்றுப் போனாள்.
"நந்தா…" என்றாள் வழக்கமான உற்சாகம் இல்லாமல். கண்களை குறுக்கி முகத்தை பார்த்தான்.
"என்ன இப்படி நடுரோட்டில நின்னு சிந்திச்சுட்டு இருக்கே? ''
"கரணும் சிவாவும் பாண்டிச்சேரிக்கு ஒரு பங்சன்க்கு போய் இருக்காங்க. வீட்டில தனியா இருக்க போர் அடிச்சது. அதான் சும்மா."
" நம்ம வீட்டுக்கு வர வேண்டியது தானே? இந்த ஹோம்லி லுக் உனக்கு நல்லாவே இல்ல." பெரிதாய் சிரித்தான்.
கடைக்குள் துர்யன் ஸ்போட்ஸ் ஷு'வில் ரகம் பார்த்துக் கொண்டிருக்க, இருவரும் கடைவாசலில் ஆர்ச் வடிவில் இருந்த நீண்ட படிகட்டின் ஒரமாய் சென்று அமர்ந்தார்கள்.
"நந்தா, வானதி கிட்டே பேசினியா?" திடுப்பென்று கேட்பவளை யோசனையாய் பார்த்தான்.
பேசாத நாள் ஏது? நாளின் தொடக்கமும், நாளின் முடிவும் அவள் குரலோடு தான் என்பது சந்தியாவுக்கு புரியாமல் இருக்குமா?
"என்னாச்சு சந்தியா?"
"நேற்று என்கிட்ட பேசினாள். ஆனால் அந்த குரல்ல சொல்ல முடியாத எதுவோ ஒண்ணு. எனக்கு அது புரிபடல. உனக்கு புரியாம இருக்காது நந்தா, அதான்கேட்டேன்."
இரவு வானத்தின் மேகங்கள் கலைந்து போய்க் கொண்டு இருந்தன. கைகளை பின்பக்கமாய் ஊன்றி, கால்களை கீழ் படிக்கட்டுகளில் நீட்டிக் கொண்டான்.
" எனக்கு வானதியை பார்க்கணும் போல இருக்கு சந்தியா…"
அதே வார்த்தை. நேற்று ஈரப்பசையாய் அவள் சொன்ன அதே வார்த்தை. முகத்திலும், அகத்திலும், ஈயாடவில்லை சந்தியாவிற்கு
"அவள் வார்த்தைகளுக்கு நான் எத்தனை கட்டுபட்டவன் அப்படிங்கிறதுக்கு இந்த பிரிவுதான் தரச்சான்று.
அவள் உணர்வுகளின் சுதந்திரத்துக்கு என்னை விட யார் மதிப்பளிக்க முடியும்..? என்னை பார்க்க கூடாதுங்கிற கட்டுப்பாட்டை அவள் எத்தனை கடுங்காவலா தனக்குள்ள போட்டு வச்சிருக்கான்னு எனக்கு மட்டுமே தெரியும்.
இதுக்கு வெளிப்படையா அவள் ஆயிரம் புணுகு பூசலாம். ஆனால் நிஜத்தில் அவளால என்னை தன்னில் இருந்து பிரிச்சு பார்க்க முடியல, அதான் நிஜம். இந்த இக்கட்டை நான் எப்படி சரி செய்வேன் சந்தியா.? இது குழப்பம் இல்ல புரிய வைக்க. இது தவிப்பு. இதைச் சரி செய்ய எந்த ஒப்பனையும் ஒத்துழைக்காது.
அவளை பக்கத்திலே வச்சு அணு அணுவாய் சித்ரவதை செய்யக் கூடாதுனு தான் நான் அவள் கேட்டதுக்கு எல்லாம் தலையாட்டினதே." நீளமாய் பேசி முடித்த போது இருமல் வந்தது.
தன் கைப்பில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள்.
வாங்கி பருகிவிட்டு வெற்று வானத்தை பார்த்தான்.
"சரி, இப்போ இந்த புரிதல்ல எங்கே விரிசல் வந்தது..?"
"விரிசல் இல்ல, நெருடல். ஏனோ பரிட்சை ஹால்ல கடைசி அரை மணி நேரத்துக்கு ஆக்ரோசமா எழுதுவோமே அதே மாதிரி ஒரு பரிதவிப்பு. வானுவையும், பாப்பாவையும் பக்கத்துல வச்சுக்கணும்னு."
துர்யன் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தவன், சின்ன வியப்பு காட்டிவிட்டு, நந்தாவை அழைத்து சென்று பணம் செலுத்தி விட்டு பெரிய பையோடு காருக்கு நகர்ந்தான்.
"நான் டிராப் பண்ணட்டுமா சந்தியா? இப்படி தெருவில நின்னு பராக்கு பார்த்துட்டே எவ்வளவு நேரம் நிற்பே.?"
"நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு."
நந்தாவை அனுப்பிவிட்டு காருக்கு வந்தாள். மனம் முழுக்க நந்தாவின் வார்த்தைகளே நந்தவனத்து வண்டாக வட்டமடித்துக் கொண்டு இருந்தது.
'நிஜம்தான். அவன் வார்த்தை சத்தியமான நிஜம்தான். நந்தாவின் மீது வானதிக்கு இருக்கும் ப்ரேமை, வார்த்தைகளில் விஸ்தீணம் செய்ய முடியாதது.
அவள் இங்கிருந்து சென்ற பிறகு, கிட்டத்தட்ட பைத்தியக்காரன் போல் சுற்றி வந்த நந்தாவை, அத்தனை பேரும் அறிவார்கள். அந்த தவிப்பு, காதல் கடிமணம் புரிந்த மிருதுளாவை வெகுவாய் வெட்டி சரித்தது.
திரும்பி வந்த மறுபிறப்பிற்கு பிறகும், நந்தா கடமையில் மட்டும் கண்ணாய் நின்றானே தவிர, காதல் என்று இருந்த ஒன்று அடையாளம் தெரியாமல் தொலைந்து போயிருக்க, எல்லோரையும் பறிகொடுத்து அவனை மட்டுமே சாஸ்வதம் என்று நம்பி வந்தவளுக்கு அது பெரும் ஆற்றாமையில் மூழ்க வைத்தது.
அது நாளாக ஆக அவளை படுக்கையில் தள்ள, மனோவியாதி பிடித்தவள் போல் ஆகிப் போனாள்.
ஒருபக்கம் வானதி வயிற்றில் குழந்தையோடு இங்கிருந்து போனது வேறு அவளை குற்ற உணர்வில் ஆழ்த்தியது. அத்தனை துயரத்தையும் தன்னுள் அடக்க முடியாமல் தவிக்க, அவள் படுக்கையில் சரிந்த போதுதான் நந்தா தவித்துப் போனான்.
"கேர் எடுங்க சார். சுய பச்சாதாபம் கொடுமையான நோய். இப்படியே விட்டா அவங்களை மீட்கவே முடியாது." மருத்துவர்களின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகுதான் அவன் மிருதுளாவின் உணர்வுகளுக்கு அர்த்தம் செய்ய ஆரம்பித்தான்.
அவள் மீது வெறுப்போ கோபமோ என்றைக்குமே இருந்தது இல்லை. வானதி என்ற பெரும் வெள்ளத்தில், அவன் கரைந்து காணாமல் போனதால், இந்த கிணற்று நீரை லேசாய் மறந்து போய் இருந்தான்.
கடல் கடந்து போன பின்னே, தவளைக்கு கிணறே கடலானது போல் அவள் பேரன்பில் மூழ்கிப் போனான். அருகாமை தித்திக்க தித்திக்க, மிருதுளாவிற்கு செய்ய வேண்டிய நியாயம் உரைத்தது.
சாதுர்யன் பிறந்தபோது அதை வானதியிடம் சொல்ல அவன் பட்டபாடு. அவன் சொல்லி முடித்தபோது, கண்களை மூடி அமைதியாக நின்றவள், அடுத்து மூன்று மாதங்கள் அழைக்கவே இல்லை. தவித்துப் போனது நந்தா தான்.
மிசினரி வேலைகள், மதர் கேப்ரியாலா மரணம், என்று நந்தாவோடு முற்றாக பேசுவதை தவிர்த்து, எப்போதாவது குறுஞ்செய்தியுடன் முடித்துக் கொள்ள, அவளின் அந்த தனிமை தவிப்பை சந்தியா தான் மீட்டெடுத்தாள். ஆனால் சந்தியாவை வற்புறுத்தி அனுப்பியதே நந்தா தான்.
நேரில் வந்து பார்த்த போது, கை குழந்தையுடன், கையறு நிலையில் அமர்ந்து கிடந்தவளின் தோற்றம் சந்தியாவை உலுக்கி போட்டது.
"வானு, இத்தனை பூஞ்சையா நீ..?" என்று வியந்தபோது, முகம் காட்டாமல் கண்ணீரை எங்கோ மறைத்தாள்.
"எனக்கு வருத்தமோ, பொறாமையோ, கோபமோ இல்ல சந்தியா. ஆனால் மனசும் உடம்பும் ரொம்ப தனியா இருக்கிற மாதிரி இருக்கு. நந்தா அவங்க கூட சந்தோசமா இருக்கணும்னு தான் மனப்பூர்வமா விலகி வந்தேன். ஆனால் இதைக் கேள்விப் பட்டதும் அழுகையா வருதுடி. அது ஏன்..?" அப்பாவியாய் கேட்டவளை நெஞ்சோடு சேர்த்து அழுகையை அடை காத்தாள்.
" வானு…"
"எனக்கும் பாப்பாவுக்கும் யாருமே இல்லை'னு மனசு தவிக்குது. சந்தோசமான நிகழ்வாகவே இருந்தாலும், பெற்ற பெண்ணை மணமுடிச்சு புகுந்த வீட்டுக்கு அனுப்பும் போது, உயிரை அறுக்கிற மாதிரி வலிக்குமே, அப்படித்தான் எனக்கு வலிக்குது."
எழுந்து போய் ஜன்னல் அருகில் நின்று கொண்டாள். பொங்கி பொங்கி அழுகை வந்தது, புறங்கையால் துடைத்துக் கொண்டே நின்றாள்.
"நீ தானே வானு நந்தாவை உன்னை பார்க்க வரக் கூடாதுனு வச்சிருக்கே. இல்லைனா நீயும் இன்னொரு குழந்தை…" என்று ஆரம்பித்து, கூசிப் போய் நின்று விட்டவளை, வானதி பார்த்த பார்வையில் உணர்வுகள் அடி வாங்கியது.
" மாறி மாறி பிள்ளை வரம் தர்ற சாமியாடி நந்தா..? ஒவ்வொரு கலவியும் அவருக்கு குற்ற உணர்வை தந்திடவே கூடாதுன்னு தான் கண் காணாமே வந்தேன். ஆனால் சேர்ந்து பிரிஞ்சதும், அந்த மனுசன் எத்தனை தவிச்சிருப்பார் தெரியுமா? அதை அவங்க முன்னாடி வெளிக் காட்டிக்க முடியாம அடாது பாடுபட்டு இருப்பார் தெரியுமா?
மனசாட்சி உள்ள மனிதர்களை, நியாயங்கள் கூட தண்டிக்கத் தான் செய்யும். " என்றவள் மடியில மலர்ந்து கிடந்த இரண்டு வயது யாழியை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.
" பாப்பா வளர்ந்துட்டு இருக்கா. கண்டிப்பா நந்தாவை அவளுக்கு பிடிக்கும்னு என்னால சொல்லவே முடியாது. அவளுக்கு உலகம் புரிபடற வரைக்கும் சாதுர்யன் இருக்கிற விசயம் பாப்பாக்கு தெரியக் கூடாது." என்று சொல்லி 18 ஆண்டுகள் ஓடோடி விட்டது.
இதையேதான் நந்தாவிடமும் சொன்னாள். அவன் குற்றவுணர்வு இன்னும் கூடிப்போனது. ஆனாலும் இலக்கே இல்லாத அவர்கள் பயணத்தில், பொய்யும் உண்மையும் ஒரே கனம்தான் என்பதால் மௌனமே தற்காலிக வலி நிவாரணி ஆனது யாவருக்கும்.
*...ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை
இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா
தண்ணீரில் எழுத்தா…"
7
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம். வெளியில் வந்ததும் டாக்சி அமர்த்திக் கொண்டு மிசினரி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தாள் சந்தியா.
சந்தியா வருவதாய் சொல்லி இருந்ததால், வானதி ரிசப்சனிலேயே காத்து இருந்தாள்.
"மாய், துமி டிகா சோ..?" என்றபடி மம்தா அகலமாய் சிரித்து வரவேற்க,
"என்ன வானு இது, துணி துவைச்சாச்சா'னு வந்ததும் வராததுமா கேட்குறா.?" சிரித்தவள் இடையை அழுந்த கிள்ளி வளாகத்தை கடந்து பின் பக்கமாய் இருந்த கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்து சென்றாள்.
மம்தாவிடம் ஏதோ சொல்ல, அவள் தலையை தலையை ஆட்டிவிட்டு, சமையல் அறை புகுந்தாள்.
"குளிக்கிறயா சந்தியா?"
"செய்யலாம் டி. முதல்ல உன் புருசன் உனக்கும், உன் மகளுக்கும் வாங்கி தந்தனுப்பி இருக்க பொருளை எல்லாம் பிடி. என் பதவியென்ன, அந்தஸ்த்து என்ன..? உன் குடும்பத்துக்கு போர்ட்டர் வேலை பார்க்கிறேன். டயர்டா இருக்கு, முதல்ல ஒரு டீயை குடிக்கலாம். " என்றபடி தயக்கத்திற்கு பழகாத உரிமையோடு உள்ளே சென்று முகம் அலம்பி, தலையை வாரி முடியிட்டுக் கொண்டு வந்து சோபாவில் சரிந்தாள்.
" எங்கே யாழியைக் காணோம்..?"
"வந்திடுவா. பக்கத்திலே அவ ப்ரெண்டை பார்க்க போய் இருக்கா."
சூடான டீயும் பிஸ்கெட்டும் கொண்டு வந்து வைத்துவிட்டு, முகத்தை திருப்பி திருப்பி பார்த்து ஒரு வெட்கச் சிரிப்பை உதிர்த்து விட்டு போனாள் மம்தா.
" இவயேன்டி எப்போ என்னைப் பார்த்தாலும். ஒரு மார்க்கமா சிரிக்கிறா..?"
"பஃபூன் மாதிரி இருக்கியோ…"
"தேவைதான்டி எனக்கு. சரி சொல்லு உடம்பு எப்படி இருக்கு..?" பக்கத்தில் வந்து கைகளைப் பற்றி, விரல்களை நீவி விட்டு கேட்டவளை கண் இமைக்காமல் பார்த்தாள்.
"நந்தா எப்படி இருக்காரு..?"
"நான் உன்னைக் கேட்டேன்."
"நானும் உன்னைத்தான் கேட்கிறேன். நந்தா எப்படி இருக்காரு..?"
எழுந்தவள் தான் ஒரு
கோப்பையை எடுத்துக் கொண்டு, வானதிக்கு ஒரு கோப்பையை எடுத்து நீட்டினாள். துளி துளியாய் மிடறாய் இறங்கி நேரத்தை கடத்தியது.
" சொல்லத் தெரியல. ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் இங்கே வந்தப்போ, இதே கேள்வியை நீ கேட்டப்போ என்னால தெளிவான பதில் தர முடிஞ்ச மாதிரி இன்னைக்கு தர முடியல."
உரிய உதடு குவித்தவள், அப்படியே நின்று விட்டாள்.
"நீ கேட்ட கேள்விக்கும் இது தான் பதில். என்னால தெளிவா பதில் தர முடியல. உடம்பு உபாதை பண்ணல. மனசு ஏதோ பண்ணுது. தவிப்பா இருக்கு. நந்தாவை பார்க்க மனசு ஏங்குது. அத்தை போன வாரம் கால் பண்ணும் போது, தனக்கு சரியா கண் தெரிய மாட்டேங்குது. முழுசா பார்வை போறதுக்குள்ளயாவது திரும்ப உன்னையும், என் பேத்தியையும் பார்த்திட மாட்டேனா'னு அழுதபோது குற்ற உணர்ச்சியா இருந்தது."
இடைமறிக்காமல் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள் சந்தியா.
"ஆனால், எனக்கு யாழி'யை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு சந்தியா."
" வானு…"
"அவள் நிறைய சிந்திக்கிறா. அதுவும் மெல்லிய உணர்வுப் பூர்வமான விசயங்களை விவரிக்க முடியாத அளவுக்கு சிந்திக்கிறா. ' கூர்மையான இளமைக் காலத்துல தனிமையை எப்படி மா தாண்டி வந்தே'னு கேட்குறா. எனக்கு அவ்வளவு வியப்பா இருக்கு. அவளுக்குள்ள புரையோடிய கோபம் நந்தா மேல இருக்கு. அவளுக்கு நந்தாவை அவ்வளவு சீக்கிரம் புரியாது சந்தியா."
"இது மட்டும்தான் இந்த பிரிவுக்கு காரணமா..?" மெல்லிய புன்னகையோடு கேட்டபடி கோப்பைகளை எடுத்துப்போய் கழுவி ரேக்கில் எடுத்து வைத்தாள்.
வானதி சோபா முதுகில் மல்லார்ந்து தலையை சாய்த்து இருந்தாள்.
"தெரியல சந்தியா. சில உணர்வுகளும், உறவுகளும் விசித்திரமா இருக்கும். இந்த இருபது வருசத்திலே, வீணா, விக்கி, அத்தை, என் பொண்ணு தபு எல்லாரும் எத்தனையோ முறை கால் பண்ணி பேசி இருக்காங்க. ஆனால்… ஆனால்… ஒரு முறை கூட மிருதுளா பேசினது இல்ல.
அவங்க பேசணும்னு நினைக்கிறது அபத்தம் தான். உணர்வுகளை குளிர்சாதன பெட்டியில வச்சு பாதுகாக்கிற வரைக்கும் தான் அது கெட்டுப் போகாமல் இயல்பிலேயே இருக்கும். பெட்டியை விட்டு வெளியில் வந்தபிறகு அது கெட்டுபோய், வீச்சம் எடுக்கும்.
அவங்க என்னை ஏத்துக்கிட்டாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் நந்தாவை விட்டுத் தர மாட்டாங்கன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்." என்ற போது ஒரு கசப்பான புன்னகை இதழில் வழிந்தது.
பக்கத்தில் வந்து அமர்ந்து, மெல்ல அவள் தலை கோதினாள் சந்தியா. சட்டென்று மடி கவிழ்ந்து வானதி குழந்தை போல் குறுக்கி கொண்டாள்.
"வானு, உன் பல்ஸ் ரொம்ப அப்நார்மலா இருக்குடி. உடம்புக்கு ஏதாவதா..? என்கிட்ட மறைக்காம சொல்லுடி." குரலில் கவலை கொத்து கொத்தாய் வழிந்தது.
"ஏதோ பண்ணுது. சொல்லத் தெரியல. இந்த ஏதோ'வில இருக்கிற சேதி, எனக்கானதா இல்ல நந்தாவிற்கானதானு தெரியல. ஹாஸ்பிடல்ல கொஞ்சநாள் முன்னாடிதான் மாஸ்டர் செக்கப் பண்ணினேன். வழக்கத்தை விட படபடப்பும், இதய துடிப்பும் அதிகமா இருக்குன்னு வந்திருக்கு."
சந்தியா உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
"இதுக்கும் நந்தாவுக்கும் என்னடி சம்பந்தம்." என்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கண்களை மூடிக் கொண்டு, வலக்கையால் நெஞ்சை நீவி விட்டாள்.
"என் இதய துடிப்பே நந்தா தானே சந்தியா. அது சீரில்லாம இருக்குன்னா, என் நந்தாவுக்கு என்னவோனு என் உள்ளுணர்வு எனக்கு காட்டி கொடுக்குதே.
என்னை சிந்திச்சு சிந்திச்சு சிந்தையெல்லாம் சிக்கு விழுந்து போச்சோனு இப்போ பரிதவிப்பா இருக்கு. ஒரு நல்ல மனுசனை நான் என் சுயநலத்தால தண்டிச்சுட்டனோனு மனசு தவிக்குது." என்று முடித்தபோது விசும்பத் தொடங்கியவளை இழுத்து தன் நெஞ்சில் சரித்துக் கொண்டாள்.
"நீயா சுயநலவாதி.?" என்று கேட்டபோது பெரிய சிரிப்பு வர எழுந்து முறைத்து பார்த்தாள்.
அடுத்த வார்த்தை எடுப்பதிற்குள் யாழி பெரிய பைகளுடன் துள்ளலாய் உள்ளே ஓடி வந்து சந்தியாவைக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் முத்தமிட்டு, கடித்து, ஏதேதோ சில்மிசம் செய்து ஓய்ந்து இருந்தாள்.
"நாய்குட்டி நக்குற மாதிரி மூஞ்சியெல்லாம் நக்குறதை பாரு." வானதி கேலி செய்து சிரிக்க, அதைப் பற்றி அக்கறை அற்றவளாய் சந்தியாவின் இடுப்பை வளைத்து, கழுத்தில் தலை புதைத்தாள்.
"என்ன செல்லம் இத்தனை அன்பு.?" முகத்தை நிமிர்த்தி அழுந்த துடைத்து விட,
" இந்த 20 வருசத்துல என்னையும், அம்மாவையும் தேடி வர்றது நீங்க மட்டும்தானே..? அதான் உங்களை பார்த்ததும் அழுகை வருது." என்று சொன்னவளின் தலையை வருடியபடி வானதியை பார்க்க, அவள் கண்கள் கலங்கி இருந்தது.
மூவரும் பேசி, சிரித்து, உண்டு முடித்து, சின்னதாய் ஷாப்பிங் முடித்து, பாடவதியான இந்தி படத்தை டிரைவின் தியேட்டரில் பார்த்து, டாக்சியில் திரும்பும் போது, யாழினி சந்தியாவின் மடியில் தலைவைத்து உறங்கி இருந்தாள்.
அளவான நிறம்தான். ஆனால் அழகு என்றால் அப்படியொரு அழகு முகத்தில்.
" வானு, பேசாம நாம சம்பந்தி ஆயிடலாமா..?" கண் சிமிட்டி கேட்டபோது வானதிக்கு தூக்கி வாரிப் போட்டது.
"சந்தியா, அவ குழந்தை டி. இன்னும் டாக்சியில ஏறினதும் தூங்கிறது கூட மாறல. இப்பத்தான் யூ.ஜி பைனல் பண்ணி இருக்கா. நான் உன்னை வரச்சொன்னதே இதுக்காகத் தான்." என்று முடித்த போது சந்தியா யாழியின் கன்னத்தை வருடுவதை நிறுத்திவிட்டு கூர்ந்து பார்த்தாள்.
வானதி கண்களை சாலையில் பதித்து இருந்தாள்.
"சென்னைக்கு வந்துடலாம்னு யோசிக்கிறேன். இன்னும் யாழி கிட்டே இதுபத்தி பேசல. கண்டிப்பா முரண்டு பிடிப்பா. ஆனால் என் வார்த்தையை எந்த இடத்திலும் அவ மீற மாட்டா.
நந்தா பக்கத்திலே போகச் சொல்லி உள்ளுணர்வு சொல்லுது. தப்பும் தவறுமா மனசுக்குள்ள ஏதோ சிந்தனைகள் ஓடுது. அதை சரியா இனம் பிரிக்க முடியல என்னால. ஆனால் இனியும் நந்தாவை விட்டுட்டு இருக்கிறது சரியில்லைன்னு உள்ளுக்குள்ளே ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு. நான் அங்கே வந்தால் பல பிரச்சனைகள் வரும்தான். ஆனால் அதையெல்லாம் சந்திக்கவும், சிந்திக்கவும் இனியும் தயங்கிறதுல அர்த்தம் இல்லைனு தோணுது. " என்றவள் மெல்ல தலையை நீட்டி யாழி உறங்குவதை உறுதி செய்து கொண்டு, மெல்லிய குரலில் சொன்னாள்,
"அங்கே இரண்டு ஆண்களை யாழியால் எதிர்கொள்ளவும் முடியாது, ஏத்துக்கவும் முடியாது… ஒண்ணு நந்தா… இன்னொன்னு துர்யன்." என்ற போது நெடும் மூச்சு ஒன்று வெளியேறி இருந்தது.
ஆனால் இதைக்கேட்டுக் கொண்டிருந்த சந்தியா உணர்வுகளின் உச்சத்தில் இருந்தாள். எந்த மாற்றத்திற்காக 20 வருடங்களாய் நந்தாவோடு சேர்த்து மொத்த குடும்பமும் தவம் கிடந்ததோ அந்த வார்த்தையை கடைசியாய் வானதி சொல்லித்தான் விட்டாள்.
இதை நந்தா அறிந்தால் என்னாவான் என்று நெஞ்சு துள்ளாட்டம் போட்டு துடிக்க, அவள் அறிந்திருக்க நியாயமில்லை, இனித்தான் உணர்வுகளில் பின்னல் போட்டு, பூ சூட்டி பொட்டு வைக்கும் ரோலர் கோஸ்டர் சதிராட்டம் ஆரம்பமாகப் போகிறது என்று.
"...என் பாதைகள்,
என் பாதைகள் உனத விழிபார்த்துவந்து முடியுதடி,
என் இரவுகள்,
என் இரவுகள் உனது
முகம் பார்த்துவிடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்,
எனக்குள் உன்னை நீ ஊற்றிவிட்டாய்,
மூழ்கினேன் நான், உன் கண்ணிலே….
முன்பனியா, முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே,
விழுகிறதே, உயிர் நனைகிறதே!..."
9
இதையெல்லாம் காலம் கட்டுமானம் செய்தெல்லாம் வைத்திருக்கவில்லை. ஒரு பாதை ஓட்டத்தின், பயண சஞ்சலத்துடன் அத்தனை நிகழ்வுகளையும் கடந்து வர காலம் கற்று இருந்தது. எதிர்கொள்ளத் தெரியாத துணிவில்லாதவன் கூட, எதிர்காற்றில் வேகம் கூட்டி நடை போடும் வித்தையின் விஸ்தீனத்தை கால்கள் அவனுக்கு கற்றுத் தந்துவிடும்.
சில நாட்களாய் மனதில் நெட்டூரு போட்டுக் கொண்டே இருந்த உணர்வை இன்று சந்தியாவிடம் வெளிப்படுத்தி விட்டாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்ற சிந்தனைக்கு தன்னை சிக்குபடுத்திக் கொள்ளாமல் தான் காத்திருந்தாள் வானதி.
‘’நான் முடிவு பண்ணிட்டு நந்தாகிட்டே பேசும் வரைக்கும், நீயா எதுவும் பேசிக்க வேண்டாம். இந்த ஒருமுறையாவது நீ என் கூட நில்லு…’’ என்றாள் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது. தூரத்தில் ஐஸ்க்ரீமுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்த யாழியை யோசனையாய் பார்த்தாள் சந்தியா.
‘’யாழி சம்மதிப்பாளா..?’’
‘’கண்டிப்பா மாட்டா. நந்தா கால் பண்ணாலே அதை எடுக்கச் சொல்லி நான் போராட வேண்டி இருக்கும். எல்லாத்துக்கும் மேல, என் சிந்தனைகளுக்கு இன்னும் நானே உருவம் கொடுக்கல. அதுவரைக்கும் எதையும் வெளியில சொல்ல வேண்டாம் சந்தியா. நந்தாவுக்கு நான் அசைய ஆரம்பிச்சது தெரிஞ்சா, தன் அன்பைக் காட்டியே என்னை தவிடு பொடியாக்கிடுவாரு.
நான் யோசிக்கிறதை எந்த சேதாரமும் இல்லாமல் செயல்படுத்த எனக்கு ஒரு மூச்செடுக்கும் அவகாசம் வேணும் சந்தியா. முதல்ல யாழிமாகிட்டே பேசறேன்.ப்ளீஸ் அதுவரை யார்கிட்டயும் பேசிக்க வேண்டாம்.’’ என்று கரம் குவித்தவளை முறைத்து பார்த்துவிட்டு, தன்னோடு சேர்த்தாள். அவளைப் பொறுத்தவரை இந்த மாற்றமே பெறும் ஆசுவாசம்.
ஆனால் அத்தனை எளிதாய் மனிதனை ஆசுவாசப்பட காலம் அனுமதிப்பதில்லை. மெல்லிய கோடு ஒன்றே, விந்தையாய் உலகத்தின் எல்லைகளை பிரிக்க இயலும் என்றால், அந்த கோடால் உலகத்தின் அடையாளத்தை மாற்ற இயலுமானால், வேறு என்ன ஆதாரம் வேண்டும் நம்மை காலம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதிற்கு.
அதுவொரு வெள்ளிகிழமை. மிசினரியில் பிராத்தனை கூட்டம் முடிந்து வானதி வீட்டுக்கு வந்த நிமிசம், வீட்டிற்குள் அலைபேசி அலறிக் கொண்டு இருந்தது. பிராத்தனை கூட்டத்திற்கு செல்லும் போது, அலைபேசியை எடுத்துப் போகும் பழக்கமில்லை என்பதால், வேகமாய் வந்து எடுத்துப் பார்த்தவள் கண்கள் தெறித்து போகும் அளவிற்கு தவறிய அழைப்புகள்..!
நந்தாவின் எண், விக்னேஷ், வீணா , சந்தியா என்று அத்தனை பேரின் எண்களிலும் இருந்து அழைப்புகள் வந்து, கொட்டிக் கிடந்தது. இத்தனை பேரும் ஒட்டு மொத்தாய் அழைக்கும் அளவிற்கு என்ன நடந்தது அங்கே..? ஒருவேளை உள்ளுணர்வு சொல்லி சொல்லி எச்சரித்தது போல என் நந்தாவிற்கு ஏதுமோ…
வேகமாய் திருப்பி அழைக்க, அவர்கள் எடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட மூன்று மணிநேர போராட்டம். அடைய முடியாத தூரத்தை அவயங்கள் தொட முடியாத தொலைவை சிந்தனை தொட்டு தொட்டு வேதனையில் விம்ம வைத்தது.
இறுதியில் நந்தாதான் இவள் அழைப்பை பார்த்துவிட்டு மீண்டும் அழைத்தான்.
‘’என்னாச்சு நந்தா..?’’ அவள் பதட்டத்தை குரலில் ஏற்ற, நந்தா சோர்ந்து கிடந்தான்.
‘’அம்மாக்கு முடியல வானு.’’ என்றான்.
‘’என்னாச்சு..? இப்போ எப்படி…’’ வார்த்தைகள் தந்தி அடித்தது.
‘’ஐ.சி.யூ ல இருக்காங்க. இன்னும் எந்த தகவலும் வரல.’’ என்றவன் அங்கே இருந்த ப்ளாஸ்டிக் சேரில் சோர்ந்து போய் சரிந்தான். மேற்கொண்டு எப்படி உணர்வுகளை நகர்த்துவது என்று இருவருக்குமே தெரியவில்லை. யாருக்கு இப்போது யார் ஆறுதல் தருவது..?
‘’ திடீர்னு ஏன் நந்தா இப்படி..?’’ கேட்கும்போதே அழுதுவிட்டாள். ஆனால் எப்போதும் போல இப்போது நந்தா ஆற்றுப் படுத்தவே இல்லை. தலையை கோதிக்கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான். அதுவே அவளை அசைத்தது.
சிறுதுநேரம் அவளை அழ விட்டு விட்டு சொன்னான்,
‘’ அவங்களுக்கு வயசு எழுபதுக்கு மேல ஆகுது. இனி இது ஏன் வந்துச்சுன்னு ஆராய்ச்சி செய்ற வயசில்லை. அவங்களுக்கு முடியாம போன பத்து நிமிசமும் சுய உணர்வு இருந்துச்சு வானு. அப்போ அவங்க முகமெல்லாம் வேர்த்து, கண்கள் நட்டுப்போய் இருந்த நிலையிலும் என் கையை பிடிச்சிட்டு என்ன சொல்லி அழுதாங்க தெரியுமா,
‘... நந்தா கடைசியில என் வானதியை பார்க்காமேயே போயிடப் போறேனா..! என் பேத்தியை கட்டி அணைக்காமயே என் உடம்புக்கு நெருப்பு வைக்கப் போறியா..? என் கட்டை வேகாது நந்தா. நான் வானதியை பார்க்கணும்…’ இதுமட்டும் தான் அவங்க வாயில இருந்து வந்த வார்த்தைகள். அவங்களுடைய கடைசி நிமிடமாத் தான் எங்களுக்கு தெரிஞ்சது. அதனாலதான், உன்னை போன்லயாவது பார்க்கட்டும்னு கூப்பிட்டது.’’
‘’ ந…ந்…தா…’’
‘’நீ உடனே கிளம்பி வா’னு அதிகாரம் பண்ற உரிமை எனக்கு இருக்குன்னு நினைச்சா, நீ கிளம்பி வந்துடு. இருபது வருசமா சொல்ற அதே வார்த்தையைத்தான் இப்பவும் சொல்றேன். நான் உன்னை ஏமாற்றல வானு. இதுக்கு மேல அதை எப்படி புரிய வைப்பேன்..?’’
‘’ ஐயோ நந்தா…’’
‘’ இன்னைக்கு அம்மா இருக்கிற இடத்துக்கு நான் வர்றதுக்கு பெரிய அவகாசம் எல்லாம் தேவைப்படாது. என் பொண்ணை என்கிட்டே இருந்து இன்னும் எத்தனை காலத்துக்கு பிரிச்சு வைக்கப் போறே வானு..?’’
‘’ஐயோ நந்தா, அங்கே அவ வந்தால், உங்களுக்குத்தான் வேதனை அதிகமாகும். அதுவும் துர்யனைப் பார்த்தா…’’ என்றவள் மேற்கொண்டு பேசத் தெரியாமல் விசும்ப, நந்தாவின் மூக்குநுனி சிவந்தது.
‘’என் பொண்ணு தானே..? என்னை அடிச்சாலும் நான் வாங்கிக்குவேன். எனக்கு எந்த அவமானமும் இல்லை. நீயேன் அதையே சொல்லிட்டு இருக்கேன்னு தான் தெரியல.’’ சலித்து களைத்து எரிந்து விழுந்த அந்தக் குரல் அவளை விக்கித்து நிற்க வைத்தது. இதுவரை அவனிடம் இருந்து வெளிப்படாத ஒரு குரல்… இத்தனை நாள் அவனிடம் தான் இது இருந்ததா என்று எண்ணி தவிக்க வைக்கும் ஒரு குரல்.
‘’ நந்தா…’’
‘’நான் வைக்கிறேன் வானு.’’ அவன் இணைப்பை துண்டித்தது அவள் இதயத்தையே துண்டித்தது போல் இருந்தது.
அதன் பிறகு நந்தா பேசவே இல்லை. அரை மணிக்கொரு தரம், வீணாவிடமும், விக்கியிடமும் கேட்டுத்தான் விசயத்தை அறிந்து கொண்டாள்.
யாழி வந்து சொன்னபோது, அம்மாவின் பதட்டமும் கண்ணீரும் அவளை வெகுவாய் அசைத்தது. இரவு எத்தனை சொல்லியும் உண்ணாமல் படுத்துக் கொண்டாள் வானதி. மனசு முழுக்க, கருப்பு வெள்ளைப் படமாய் கல்பனாவின் முகமும், அவர் காட்டிய அன்பும், நந்தாவிற்காக தன்னை பெண் கேட்டதும் ,ஏய் பொண்ணே..’ என்று தன்னை விளித்ததும், மனசை அழுத்தியது.
இந்த இருபது வருடங்களில் அந்த பேதை தாய் எத்தனை முறை அழைத்து அழைத்து ஓய்ந்து இருப்பார், அவர் மனதின் தவிப்பும் வேதனையும் ஒரு சின்ன முடிவில் சரிசெய்திருக்க முடியுமே..’ என்று யோசித்தபோது குற்ற உணர்வாக இருந்தது..
அடுத்த நாள் மாலை தான் கல்பனாவை ரெகுலர் வார்டுக்கு மாற்ற,மெல்லிய ஆசுவாசம் வானதிக்கு வந்தது. நந்தா பேசினான் தான். ஆனால் அவன் குரலில் இனம்புரியாத விலகலும், தவிப்பும் தென்பட்டது, அல்லது தென்படுவதாக வானதிக்குத் தோன்றியது.
ஒரு வாரம் கழித்து ஒரு மதிய நேரத்தில் கல்பனாவே வீடியோ காலில் வர, நைந்துபோன தோற்றமும், மூப்பு முற்றி நெத்து விட்டிருந்த முகத் தோற்றமும், மருத்துவமனையின் உடையுமாய் பார்த்த நிமிசம் மனசு பதறிக் கொண்டு கண்ணீர் ததும்ப, கைகளால் வாயை அடைத்துக் கொண்டு கதற, ஹீனக் குரலில் கல்பனா அழைத்தார்.
பக்கத்தில் வீணா நின்று இருந்தாள்.
‘’ஏன் அத்தை இப்படி..?’’
‘’எழுபத்தி சொச்ச வயசிலும் இது இல்லாம எப்போ அப்புறம்..?’’ முடிவை உணர்ந்திருந்தது அந்த குரல்.
‘’ இது எல்லாம் வயசே இல்ல அத்தை. ‘’
‘’எதுக்குமே வயசே இல்ல வானதி. பத்து வயசு குழந்தையும் அகாலமா இறந்து போகுது, ஐம்பது வயதிலேயும் திருமணம் செய்து குடும்பம் நடத்தறாங்க. ஆனால், முதுமைக்கான அடையாளமும், அதன் பாதையும் யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது.
இனி இருந்துதான் என்ன செய்ய..? அவயம் தேய்ஞ்சும் ஆசை தேயாமே இந்த உயிரை பிடிச்சு வச்சிட்டு என்ன செய்யப் போறோம்..? கடமை'னு எதுவும் மிச்சமில்லை. ஆனால், ஆசையும், பிராயசித்தமும் அப்படியே இருக்கு.’’ என்றபோது லேசாய் மூச்சிரைத்தது.
‘’ அப்புறம் பேசலாம் அத்தை.ரெஸ்ட் எடுங்க.’’
‘’அப்புறங்கிற ஒண்ணு இல்லாமயே கூட போயிடும் வானதி. நான் இப்பவே சொல்லிடறனே. நான் ரொம்ப சுயநலவாதி வானதி. பூஞ்சை முகமும், கொட்டிக் கிடந்த அன்புமாய் என்னை குணப்படுத்த வந்து நின்ன உன் முகம் எனக்குள்ள அப்படியே தங்கிப் போச்சு என் செல்வமே..!
அந்த நல்ல குணத்தை என் வீட்டுக்கு சொந்தமாக்க நினைச்ச என் சுயநலத்தால, உடம்பாலயும் மனசாலயும் உன்னை நான் தண்டிச்சிருக்கேன். இன்னைக்கு நீ அனாதையா நிற்கிறதுக்கு என் சுயநலம் மட்டுமே காரணம். உன் இடத்தில இன்னொருத்தி வந்திருந்தா, நந்தா மட்டுமில்ல, இந்த வீட்டில யாராவது நிம்மதியா இத்தனை நாளும் வாழ்ந்திருக்க முடியுமா..? எல்லாமே உன்னாலே தானே..!
நான் செய்த இந்த துரோகத்துக்கு என்ன பிராயசித்தம் செய்யட்டும் நான்..! என் பேத்தி முகத்தை பார்க்கணும். கட்டிபிடிச்சு ஒரு பத்து நிமிசம் என் வயித்துக்குள்ள புதைச்சுக்கணும் அந்த முகத்தை. இது மட்டும்தான் இந்த காய்ஞ்ச உடம்புக்குள்ள மிச்சமிருக்கிற ஆசை. இது ரெண்டையும் தவிர இந்த நிமிசம் எனக்கு எதுவும் தேவையில்லை வானதி.
எனக்கு அந்த பாக்கியத்தை தருவியா அம்மாலு..?" படுக்கையில் சரிந்தபடி வீணா அலைபேசியை பிடித்து இருக்க, நடுங்கிய கையை கூப்பியபடி கேட்க, வானதி உடைந்து போய் கதறி விட்டாள்.
இணைப்பைத் துண்டித்தும் வெகுநேரம் மட்டுக்கும், அந்த பஞ்சடைத்த கண்ணும், முகமுமே நினைவு முழுக்க நின்று இருந்தது.
மாலை குளித்து விட்டு மாடியில் வந்து நின்றாள். இரண்டு நாளாய் பெய்து ஒய்ந்திருந்த மழை, மறுபடி வருவேன் என்பது போல மிரட்டிக் கொண்டு இருந்தது. கூடு கூடாய் சாம்பல் மேகங்கள் கருப்பு வானத்தில் அப்பிக் கிடந்தது. காற்று வீசிய திசைக்கு மேகங்கள் நகர்ந்து, கலைந்து, பிரிந்து சேர்ந்தது.
காற்றின் திசைக்கேற்ப பயணத்தை செலுத்தும் பாய்மரங்கள்… மீண்டும் அவளை நந்தாவை நோக்கி செலுத்துவதை உணர முடிந்தது. உலகம் முழுக்க ஒடட்டுமே அந்த நதி… கடலோடு கலப்பது தானே விதி. மெல்ல கண்களை மூடிக் கொண்டாள். மூளையில் இருந்து வார்த்தைகளை இறக்குமதி செய்து, நெஞ்சுக்குழியில் கோர்த்து எடுக்க ஆரம்பித்தாள், யாழினியிடம் பேசுவதிற்கு.
“...என் சுவாசக் காற்று
வரும்பாதை பாா்த்து
உயிா்தாங்கி நானிருப்பேன்;
மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலை மீது தீ குளிப்பேன்…
போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்…"
9
தின்னரை தடவி நகப் பூச்சை மொத்தமாய் சுரண்டி எடுத்து இருந்தாள் ஆர்த்தி. புது வண்ணத்துக்கு நகங்களை தயார் செய்து காத்திருக்க, ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்த தபஸ்வியை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
தனியாக வந்து இருக்கிறாள். அதுவும் ஸ்கூட்டியில் வந்து இருக்கிறாள். அவசரமாய் மடியில் கிடந்த பொருட்களை, எதிரில் இருந்த கூடையில் கிடத்திவிட்டு வாசலுக்கு வந்தாள். தபுவின் முகத்தில் சுரத்தே இல்லை.
" ஒய், என்னடி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வச்சு இருக்கே. பாட்டி எப்படி இருக்காங்க." கைப்பற்றி அழைத்துக் கொண்டு ஹாலுக்கு நகர, தபு அவள் கையை ஒதுக்கி விட்டு சிட் அவுட்டில் கிடந்த பிரம்பு நாற்காலியில் சரிந்து கொண்டாள்.
எப்போது வந்தாலும், அமரைத் தேடி அலைபாயும் கண்கள் இன்று ஒடுக்கத்திலேயே இருந்தது. அவன் உள்ளே இருக்கிறான் என்று தெரிந்தும் கண்களில் எந்த ஆவலும் தேடலும் இல்லை.
"தபு, பாட்டி எப்படி இருக்காங்க..? டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தாச்சா? நானும் அமரும் நேத்தே ஹாஸ்பிடல் கிளம்பினோம். அதுக்குள்ள அவனுக்கு டிபார்ட்மென்டுல இருந்து கால் வந்திடுச்சு." பக்கத்தில் வந்து தரையில் கை ஊன்றி அமர்ந்தபடி ஆர்த்தியின் அம்மா லதா கேட்க, தபஸ்வி மெல்ல தலை அசைத்தாள்.
"இப்போ நல்லா இருக்காங்க ஆன்ட்டி. அனேகமா நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவாங்க."
"ரொம்ப நல்ல விசயம். அப்போ வீட்டுக்கே வந்து பார்த்துக்கறோம். ஆனால் உன் முகம் ஏன்டா வாடி இருக்கு." என்றபடி அவள் கன்ன கதுப்பை மெல்ல வருடிக் கேட்க, உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த அமருக்கு சிரிப்பு வந்தது.
"ஒண்ணுமில்லே ஆன்ட்டி. கொஞ்சம் குழப்பம் இனம் புரியாத பயம்."
" அது சரி. டாக்டர்கே பயம் வந்தா. உன்கிட்ட வைத்தியம் பார்க்கிற பேசண்ட் நிலைமை என்னாகும் தபஸ்வி..?" அமர் கேட்டபடி தானும் ஒரு நாற்காலியில் வந்து அமர, அப்போதுதான் அவன் முகத்தையே நிமிர்ந்து பார்த்தாள்.
" சரிதான், டாக்டர்னா பயப்படவே கூடாதா? நல்ல கதையா இருக்கு. வீட்டில உணர்வு பூர்வமான சுழ்நிலை ஓடிட்டு இருக்கு அமர். அதை எப்படி கையாள்றதுன்னு எல்லோருக்குள்ளும் ஒரு தடுமாற்றம்." என்றவள் நிறுத்தி மெல்ல தயங்கினாள்.
"நதிமா, பாப்பாவை கூட்டிட்டு இங்கே வரப் போறாங்க." என்றாள் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல். ஒரு நொடி அங்கே கனத்த மெளனம் ததும்பி வழிந்தது.
லதா நெருங்கி அமர்ந்து தபஸ்வியை தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அந்த தாய்மை ஸ்பரிசத்தில் ஒரு துளி கண்ணீர் பொங்கி மூக்கின் ஓரம் வழிய, அவசரமாய் துடைத்துக் கொண்டாள்.
குடும்ப நண்பர்கள் என்பதால் தபு ஆர்த்தியிடம் சொல்லிய விசயங்கள், அத்தனை பேருக்கும் தெரிந்து இருந்தது. காரணம் புரியாமலே வானதியின் தியாகத்தின் மீது மட்டு இல்லாத மரியாதை அவர்களுக்கும் இருந்தது.
"நீ பயப்படாதே தபஸ்வி. நீ சொன்னது எல்லாம் வச்சுப் பார்த்தா உன் நதிமா பேரன்பான மனுசினு தான் தோணுது. கண்டிப்பா உனக்கோ உன் குடும்பத்திற்கோ எந்த வருத்தமும் வர விட மாட்டாங்க." லதா ஆதரவாய் சொல்ல மென்மையாக சிரித்தாள்.
"எனக்கு நதிமா'வை தெரியும். என் பிஞ்சு உடம்புல பட்ட அவங்க விரல்களின் ஸ்பரிசத்தை எனக்கு இப்பவும் அடையாளம் தெரியும். எனக்கே எனக்காக மட்டும்தான் அவங்க அப்பாவை கல்யாணம் பண்ணிட்டாங்க. இருபது வருச தனிமைக்கு பிறகு திரும்பி வர்றாங்க. அதுவும் பாட்டியுடைய ,அப்பாவுடைய பெரும் போராட்டத்தால்.
அம்மா நல்லவங்க தான். நதிமாவும் நல்லவங்க தான். என் அப்பாவும் நல்லவர் தான். இந்த மூணு பேர்ல யார் காயப்பட்டாலும் என்னால அதை தாங்க முடியாது. நான் பாப்பாவை வீடியோ கால்ல பார்த்து இருக்கேன். அப்பாவும் அவளை ஸ்டில்ஸ் எடுத்து காட்டுவார். ரொம்ப முன்கோபி மாதிரி இருக்கா. அது தான் ஒருவித குழப்பம், சொல்லத் தெரியாத பயம்." என்று சொல்லி சிரித்தபோது அங்கிருந்த மூவருக்கும் அவள் மீதான மதிப்பும், மரியாதையும் கூடித் தான் இருந்தது.
ஆர்த்தி கொண்டு வந்து தந்த ஜூசை மடக்கில் குடித்து காலி செய்து டம்ளரை வைத்தாள்.
" நீ நேத்து அனுப்பின நோட்ஸ்'ல நிறைய டவுட்ஸ் இருக்கு. வந்து க்ளாரிபை பண்ணு. நான் அப்பா வர்றதுக்குள்ள வீட்டுக்கு போகணும். அவர் இல்லைங்கிற தைரியத்துல ஸ்கூட்டியை எடுத்துட்டு வந்திருக்கேன்." ஆர்த்தியை இழுத்துக் கொண்டு அறைக்குள் நகர்ந்தாள்.
அமர் ஹாலில் வந்து அமர்ந்து டி.வியை ஆன் செய்து, வால்யூமை குறைத்து வைத்தான்.
' …பாப்பா கஹத்தே ஹை, படா நாம் கரேங்கா…' என்று தொண்ணுறுகளின் இளமையில் பாடிக் கொண்டு இருந்தார் அமீர்கான். அவனை அறியாமல் இதழ்களில் ஒரு புன்னகை பூத்தது.
'... பாப்பா முன்கோபி.' சற்றுமுன் தபு சொன்ன வார்த்தைகள் அத்தனை மென்மையாக இருந்தது. கண்ணில் பார்த்திராத தங்கையின் கல்யாண குணங்களை ரசிக்கும் மூத்தவளின் பாசமும், அந்த முன்கோபி பாப்பா எப்படி இருப்பாள் என்ற நினைப்பும் முரணாய் ஒரே நேரத்தில் முளைத்து முறுவலிக்க வைத்தது.
மதர் கேத்தரினின் கண்கள் பனித்து போய் இருந்தது. உணர்வுகளை கட்டுபடுத்தும் வெள்ளை அங்கிக்கு உள்ளேயும் உணர்வுகளின் ஊசலாட்டம் தெரிந்தது கண்ணீர் வழியே.
" ஆனந்தமும், பெரும் துன்பமும் ஒருசேர உணரும் நிகழ்வு இப்போது எனக்கு…" என்றவர், இறுக அணைத்து அவளை தன் இதயத்தோடு தழுவி நின்றார்.
இந்த இடமும், இந்த மனிதர்களும், இந்த நிழலும் இல்லாமல் போய் இருந்தால், அவள் உலகம் என்னாகி இருக்கும்..? நன்றி கடன் இமயத்தை விட உயர்ந்தது இல்லையா..?
" நல்ல முடிவு வானதி. நான் எப்பவும் சொல்றது தான், உனக்கு உன் கணவனின் அணைப்பு அவசியப்படாமல் இருக்கலாம், ஆனால் யாழிக்கு தகப்பனின் அரவணைப்பு நிச்சயம் தேவை. முரணாக நடந்த சில விசயங்களுக்காக வாழ்க்கை முழுக்க முரண்டு பிடிக்க வேண்டிய தேவை இல்லை.
ஆனால்,இந்த மிசினரிக்கு உன்னை மாதிரி ஒரு நிர்வாகி அவசியம் தேவை. உன்னை முழுக்க விடுவிக்க முடியாது. நீ இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது இங்கே வந்து போகணும்." கைகளை பற்றிக் கொண்டு சொன்ன போது, கண்ணீர் திரை மறைக்க, மெல்ல தலை அசைத்தாள்.
வீட்டிற்கு வந்து ராக்கிங் சேரில் சரிந்தபோது, ஒரு குழப்பமும், மனம் முழுக்க பயம் கவ்விய வாயு பிடிப்புமாய் இருந்தது.
நான்கு நாள்களாய் இதுபற்றி யாழியிடம் பேசி பேசி நலிந்து போன நினைவு அப்புகிறது.
சொன்ன போது விசித்திரமாய் பார்த்தாள்.
" எனக்கு அங்கே வர இஷ்டமில்லை மா. எனக்கு நந்தாவை பார்க்க விருப்பமில்லை." ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு, டேபிளை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தாள்.
" யாழி… அம்மாக்கு தெரியும். அடுத்து என்ன செய்றதுன்னு. " விவாதம் பண்ணத் தெரியாமல் வானதி மிரட்டுவது போல் ஆரம்பிக்க, எதிரில் வந்து நின்று கைகளை கட்டிக் கொண்டு அம்மாவை தீர்க்கமாய் பார்த்தாள்.
"பிறகு என்னை ஏன்மா கேட்கறீங்க..? என்னை அடிமாடுனா நீங்களே விலை வைங்க. பலி ஆடுனா நீங்களே கத்தியை உயர்த்துங்க. எனக்குன்னு எந்த கருத்தும் இருக்க கூடாதுனா, என்கிட்ட கேள்வி கேட்காதீங்க, கட்டளை மட்டும் இடுங்க."
எங்கு போய் கற்றுத் தொலைத்தது இந்தப் பெண், இப்படி ஓயாமல் பேச..?
இரவில் உணவு உண்ணும் போது கூட அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க வில்லை. தட்டில் சாப்பாட்டை போட்டுக் கொண்டு ஹாலில் சென்று டி.வி.யின் முன் அமர்ந்து கொண்டாள்.
அந்த நேரம் நந்தாவின் அழைப்பு வர, எட்டிப் பார்த்துவிட்டு உதடு சுளித்துவிட்டு, வேண்டும் என்றே வானதியை அழைத்துச் சொல்வதை தவிர்த்தாள்.
வானதி வந்து முறைத்துக் கொண்டு அழைப்பை எடுத்து, கல்பனாவின் உடல் நலம் விசாரித்து, யாழியை கூப்பிடச் சொல்லி நந்தா கேட்ட போது, ஏதோ சொல்லி சமாளித்து, அத்தனைக்கும் நடுவிலும் மகளை ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்.
பேசி முடித்து எதிரில் வந்து நின்ற அம்மாவிடம் கல்பனாவின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே இல்லை. அந்த இயல்பு வானதிக்கு நெருடலாய் இருந்தது.
கால்களை மடக்கி ஏதோ சிந்தனை வயப்பட்டவளாய் சுருங்கி கிடப்பவளின் எதிரில் வந்து தரையில் அமர்ந்தாள். யாழி கண்களை திறக்கவே இல்லை. முந்தானை எடுத்து முகத்தை துடைத்து விட்டுவிட்டு, மடக்கி இருந்த கால்களை பிரித்து இறக்கி விட்டுவிட்டு, மகளின் மடியில் தலை கவிழ்த்துக் கொண்டாள்.
யாழி உதடு கடித்து உணர்வை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். வழக்கமாய் இப்படி தலை கவிழும் தாமரை வேலையை யாழி தான் அம்மாவிடம் செய்வாள். இப்போது வானதி மகள் மடியில் அடைக்கலம் ஆனபோது, வருடத் துடித்த விரல்களை மடக்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
"யாழி, அம்மாகிட்ட பேசமாட்டியா? நான் என்ன தப்பு செய்தேன்டா..? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை..?"
"அதேதான் மா நானும் கேட்கிறேன். நாம என்னம்மா தப்பு செய்தோம்..? எதுக்கு இந்த தண்டனை..?"
"யாரும் நம்மை விலக்கி வைக்கல. நான் தான் விலகி வந்தேன் யாழி. இப்போ நானேதான் போக முடிவு எடுத்து இருக்கேன்."
"அட போங்கம்மா. மனைவி மேல அதிகாரம் செலுத்தாம இருக்கிறது சுதந்திரம்னு நீங்க சொல்லிப்பீங்க. எனக்கு அது அக்கறை இல்லாத செயல்னு தான் புரியும்.
அவர்கூட சண்டை போட எனக்கு எந்த அக்கறையும் இல்ல, ஆனால் அவருக்கு அந்த உயர் மதிப்பான இடத்தை தரவும் எனக்கு இஷ்டமில்லை."
வானதி தலையை உயர்த்தி மகளைப் பார்த்தாள். கண்கள் கண்ணீரில் தத்தளித்தது. முகத்தை அழுந்த துடைத்தபடி க்ரில் கேட்டில் தலை சரித்து சிறிது நேரம் நின்றவள் உள்ளே போய் விட்டாள்.
இரண்டு நாட்களாய் தாய் மகளுக்கு நடுவில் மௌன ஊஞ்சல் காற்றுக்கு ஆடிக் கொண்டு இருந்தது.
உள்ளுணர்வில் ஏதோ உபாதையாய் இருந்தது. நந்தாவிடம் சென்று சேர்ந்து விட வேண்டும் என்று உடலில் ஒவ்வொரு செல்'லும் முடிவெடுத்த பிறகு, யாழியின் இந்த திடமான மறுப்பு வானதியை ஒய்ந்து போக வைத்தது. இத்தனை நாள் காத்திருந்த உள்ளம் இனி மாட்டேன் என்று இவள் மூச்சின் வழி மூளைக்கு செய்தி அனுப்பியது.
ஒய்ந்து போனாள் வானதி. உடன் சேர்ந்து காய்ந்தும் போனாள். ஜுரத்தில் அனர்த்திக் கொண்டு படுக்கையில் விழ, மாலையில் வீடியோ காலில் வந்த நந்தா மூக்குறிஞ்சிக் கொண்டு இருந்தது விசித்திரமாக இருந்தது.
" என்னாச்சு நந்தா..?"
" ஹாஸ்பிடல் வீடு'னு அலைஞ்சதுல கோல்ட் அட்டாக் ஆகி இருக்கு வானு. முடியல." என்றான் டிஸ்யூவால் மூக்கை அழுத்திக் கொண்டு. உண்மையில் இது வானதிக்கு வெகு விசித்திரமாக இருந்தது.
ஒருவருக்குள் ஒருவர் கலந்து அடையாளம் தொலைத்து கொண்டிருப்பதாய் தோன்ற, உடல் முடிகள் சிலிர்த்து எழுந்து நின்று அவள் முகம் பார்த்தது.
இதையெல்லாம் மற்றவர்களிடம் சொன்னால் புரியுமா..? ஆனால் அவள் சொல்லவும் விரும்பவில்லை. விலை மதிப்பில்லாத இந்த உணர்வை சொல்லி அதன் வெளிச்சத்தை அவள் குறைக்கவும் விரும்பவில்லை.
இன்னொரு முனையில் அம்மாவின் மெளனத்தால் சோர்ந்து கிடந்த யாழிக்கு, அம்மாவின் உடல் நோவும் சேர்த்து உலுக்கி போட்டது.
'சீ போ…' என்று ஒதுக்கும் ரகமாக இருந்தால் விட்டுவிட்டு நகர்வாள், இங்கு முரண்பட்டது கோபமும், வெறுமையும் தானே.
இடையில் கல்பனா டிஸ்சார்ஜ் ஆன செய்தி கேட்டு மெல்லிய ஆசுவாசமாய் இருந்தது வானதிக்கு. என்றாலும் ஏனோ அன்றாடத்தில் அவள் கலக்க இயலவில்லை. விசை கையில் இருந்தாலும், காற்றாடியின் திசைக்கு கைகள் பொறுப்பாகாது.
ஒரு வார தேக்கத்தில், உடம்பு ஒட்டி கிடந்தது. உதடுகள் உலர்ந்து கறுத்து போய் இருந்தன. அதன் பிறகு மகளின் முடிவுகள் மீது ஆதிக்கம் செலுத்த இயலவில்லை. ஆனால் தன் உணர்ச்சிகளை மெளனப் பூட்டு போட்டு சாவியை தொலைத்து இருந்தாள்.
கல்லூரியில் சான்றிதழ் வாங்குவதிற்காக சென்ற போது, அம்ரிதா சொன்ன வார்த்தைகள் தான் யாழியின் உணர்வுகளை நெம்பி விட்டது.
" யாழி, உனக்கு உன் அப்பா அம்மா சேர்ந்து வாழணும்கிறது. தானே ஆசை. இப்போ அது நிறைவேறும் போது நீ தான் தடையா நிற்கிறே. புரியுதா..?" யாழிக்கும் அது புரிந்து தான் இருந்தது. ஆனாலும் ஏனோ மனம் வீம்பாய் ஏற்றுக் கொள்ள மறுத்தது.
அம்ரிதா பக்கத்தில் வந்தமர்ந்து தோழியின் சிறுமுகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு, உச்சியில் முத்தம் வைத்தாள்.
"ஊருக்கு போ. நீ ஆசைப்பட்ட மாதிரி அப்பா, அம்மாக்கு நடுவிலே உட்கார்ந்து கிரிக்கெட் மேட்ச் பாரு. அப்பா கூட சேர்ந்துட்டு அம்மாவை கேலி பண்ணு. அப்பாவோட வயித்தை கட்டிட்டு லாங் ட்ரைவ் போ. சென்னையில மேற்படிப்பு படி. சந்தோசமா இரு. நீ இல்லாம எனக்கு பெரிய வேதனை தான். ஆனால் நீயும் உன் அம்மாவும் படற கஷ்டத்துக்கு இதெல்லாம் எதுவுமில்லை." முடித்தபோது இருவரும் அழுது கொண்டு இருந்தனர். அழுகை கூட ஆனந்தம்தான் பிரசவ வேதனையின் முடிவில் என்பதுபோல், அந்த அழுகையின் இறுதி நுனியில் தான் யாழி சென்னை செல்லும் முடிவை எடுத்து, வீட்டிற்கு வந்து அதை அம்மாவின் முகத்தை பார்க்காமல் அறிவித்தது எல்லாம்.
ஆசுவாசமாய் இருந்தது, அதே நேரம் எப்படி இந்த விசயத்தை சந்திக்க போகிறோம் என்று குழப்பமாகவும் இருந்தது.
வீட்டில் இருந்த பொருட்களை மிசனரிக்கு தந்துவிட்டு, வந்தால் தங்குவதற்கு இரண்டு அறைகளையும், அத்தியாவசிய சாமான்களையும் போட்டு பூட்டி வைத்து விட்டாள்.
மம்தா யூனிவர்சல் சோக கீதமான கண்ணீரை பாடி வழியனுப்பி வைத்தாள், வலியை அனுப்ப வழியற்று தவித்தாள். ஏனோ பிரிவு எல்லா மொழிகளிலும் வலிக்கிறது. உரசல்களோடு இருந்தாலும், கடந்து போகின்றதை இதயம் அனுமதிப்பதில்லை. துண்டு நிழல் போலவாவது காலுக்கடியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.
" இதப் பாருமா, நாம அங்கே தனியாத்தான் இருக்கப் போறோம். சந்தியா ஆன்ட்டிகிட்ட சொல்லி வீடு பார்க்கச் சொல்லிடு. நான் அந்த வீட்டில நந்தா கூட இருக்க மாட்டேன்." சம்மதம் சொன்ன நாளில் இருந்து யாழியின் குரலில் இனம் தெரியாத பிடிவாதம் வந்து உட்கார்ந்து இருந்தது.
இதை நந்தாவிடம் கேட்டபோது, புருவத்தை சுறுக்கி அலைகற்றை வழியாய் முறைத்தான்.
" என்னை மொத்தமா வித்துட்டியா வானு..? நான் உன்மேல உரிமையில இல்லாது போனாலும்,அன்பின் அடிப்படையில் கூட அதிகாரம் செலுத்த கூடாதுனு நினைக்கிறியா.?"
"நந்தா…" என்றாள் தவிப்பின் உச்சத்தில்.
"இங்கே முதல்ல புறப்பட்டு வா. நம்ம வீட்டை பெரிதாய் எடுத்து கட்டி இருக்கோம். அதை விட விசாலமாய் இதயங்கள் இருக்கு. உனக்கா இந்த கூட்டில் இடமில்லாம போகப் போகுது…" என்று முடித்தபோது நெகிழ்ந்து இருந்தது குரல்.
"யாழி…" என்றாள் தவிப்பாக.
"பாப்பாவை நான் பார்த்துக்கறேன். முதல்ல இங்கே வாங்க. நான் வந்து அழைச்சிட்டு வர்றேன்." என்றவனை வன்மையாக மறுத்தாள். ஏனோ வலுவில் பிரிந்து வந்த தானே அவனிடம் திரும்பச் செல்வது தான் முறை என்று மனசு நியாயம் பேசியது.
தயக்கம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, என்று ஆயிரம் விசயங்கள் இருந்தாலும், யாழி என்ற பெரும் புயல், அங்கே சுருட்டி தின்னாமல் இருக்க வேண்டும் என்று வேண்டுதல் இதயத்தில் இல்லாமலும் இல்லை.
அத்தனை யோசனைகளையும் கைப்பையில் அடக்கிக் கொண்டு, ப்ளைட்டில் செல்லலாம் என்ற யாழியின் பிடிவாதத்தை மறுத்துவிட்டு, ஹவுராவில் ஸ்டேசனில் விழுந்த பச்சை கொடியசைப்பில் அவள் பயணம் சென்னையை நோக்கி ஆரம்பமானது.
இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். ரத்தம் சூடாகி, இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது.
சரியாய் இருபது வருடங்கள் … நந்தா என்ற விருட்சத்தின் வேர், அவள் எங்கு போனாலும் அவளை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்பதிற்கு இது தான் ஆதாரம். மடியில் இருந்த கைப்பையில், நகத்தால் நந்தா என்று கீறினாள்.
சொல்லாலும், செயலாலும் நந்தாவை கீறி கிழித்து எறியப் போகிறவள், எந்த அரவமும் இல்லாமல் கடந்து கொண்டிருந்த கொல்கத்தாவை கண்களால் தேக்கியபடி அமைதியாக எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.
"...உலகம் எனக்கென்றும்
விளங்காதது உறவே எனக்கின்று
விலங்கானது அடடா முந்தானை
சிறையானது இதுவே என் வாழ்வில்
முறையானது
பாறை ஒன்றின்
மேலே ஒரு பூவாய்
முளைத்தாயே உறவுக்கு
உயிர் தந்தாயே
உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தேன் நானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு…"
10
சென்ட்ரலில் வந்து இறங்கிய போது மணி ஒன்பதை தொட்டு இருந்தது. ஒரு நாளை தாண்டிய பயணம்.
நடைபாதையில் இறங்கி நின்றபோது, கால்களில் ரயிலின் தடதடப்பு மிச்சம் இருந்தது போல் இருக்க. இரவிலும் ரயில் நிலையம் விழித்திருந்தது.
அவளையும் மறந்து, கண்கள் நந்தாவோடு கடைசியாய் அமர்ந்திருந்த இடத்தை இதமாய் வருடிய நிமிசம், தொண்டை முடுச்சு ஏறி இறங்கியது.
மறுபடியும் அங்கே சென்று ஒரு நொடி அமர்ந்து கொள்ள இதயம் தவிக்க, யாழியை திரும்பிப் பார்த்தாள்.
குழப்பமான முகத்தோடு ஒருவரையும் தெரியாத அந்த இடத்தில் ஒவ்வொரு முகமாய் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
நந்தாவுக்கு தகவல் தெரியும். கண்டிப்பாக வந்துவிடுவான். சந்தியாவும் சும்மா இருக்க மாட்டாள். வந்துதான் விடுவாள். உலக அதிசயமாய் இன்று ரயில் முன்கூட்டி வந்து சேர்ந்து இருக்கிறது.
வானதியின் கண்கள் காலியாக கிடந்த அந்த இருக்கையிலேயே பதிந்து இருந்தது. உணர்வுகளையே வென்றவள், நினைவுகளிடம் டெபாசிட் இழந்து இருந்தாள்.
" யாழி …"
" ம்."
"இப்படி கொஞ்ச நேரம் இரு. நான் அடுத்த ப்ளாட்பாரத்துல சந்தியா வந்து வெயிட் பண்றாளானு பார்த்துட்டு வந்துடறேன்.ரயில் முன்கூட்டியே வந்துடுச்சுல.அவள் அதை கவனிக்காம பராக் பார்த்துட்டு நிற்பாள்."வானதி சொன்னது கொஞ்சம் விசித்திரமாய் இருந்தாலும் தலையாட்டினாள்.
வேகமாய் நடையை எட்டிப்போட்டு கிட்டத்தட்ட அந்த இருக்கையை நோக்கி ஓடியவள் இருக்கையின் பக்கவாட்டில் நின்று மெல்ல மூச்செடுத்தாள்.
நந்தா கைகளைப் பற்றியது, மீரா பொம்மையை தந்தது, எழுந்து போனது… ரேணிகுண்டாவில் இருந்து அழைத்த போதும், அவன் இங்கேயே அமர்ந்து கிடந்தது… அடுக்கடுக்காய் அத்தனையும் விரிய, மெல்ல இடம் மாற்றி நந்தா அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தாள். அவன் மடிமீதே அமர்ந்தது போல் மெல்லிய கூச்சம் இடுப்பிற்கு கீழ் பரவ, வேகமாய் எழுந்து தான் அமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.
மெல்ல பக்கவாட்டில் ஊன்றி இருந்த கரத்தை நீட்டி, நந்தா அமர்ந்திருந்த இடத்தை வருடித் தந்தாள். அழுகை தொண்டைக்குள் வெடித்து, உள்ளுக்குள் கரைந்தது. கண்களை மூடிக் கொண்டவளுக்கு, அத்தனையும் மறந்து போனது… யாழி உட்பட.
மணிக்கட்டை திருப்பி பார்த்த யாழிக்கு, மெல்லிய பசி அடிவயிற்றை நிமிண்டியது. புது இடத்திற்கு போனதும் அத்தனை இயல்பாய் எடுத்து உண்ண முடியுமா என்ற அவசர கவலை ஒருபக்கம் என்றால், இந்த அம்மா எங்கே போனார்' என்ற கிளை கவலை வேறு வந்திருக்க, கண்களை சுழற்றி பார்த்தாள். அம்மாவின் மெஜந்தா வண்ண புடவையே தென்படக் காணோம்.
ராட்சத பீமிற்கு பின்பக்கம் நாற்காலியில் அமர்ந்து, தன்னை மறந்து கண்களை முடி இருந்தவள், கண்டிப்பாய் தென்பட்டிருக்க மாட்டாள் தான்.
டிராலியின் மீது லேசாய் பின்பக்கம் படிய அமர்ந்து, இரு கைகளாலும் டிராலியின் பக்கங்களை பற்றிக் கொண்டு, வந்து போகும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் வந்து மோதியது அந்தக் குரல்…
"யாழி மா…" அவசரமாய் திறந்திருந்த கண்களை மூடிக் கொண்டாள். அடையாளம் தெரிந்த அந்தக் குரலின் பேரன்பு, அவளை அடியோடு வென்றாலும், இத்தனை நாள் எனக்கு நீயில்லையே' என்ற வீம்பு அவளை விம்ம வைத்தது. ஆயிரம் காரணம் தான் இருக்கட்டும், ஒரு தகப்பனின் ஸ்பரிசத்துக்கு ஏங்கும் தன் மகவை உணராதவன், என்ன சொன்னாலும் இழந்த காலம் திரும்ப வருமா..?
"யாழி மா…" இன்னும் குரல் பக்கத்தில் கேட்டது. அவசரமாய் அழுகையை அடக்கி முகத்தை இடப்புறமாய் திருப்பிக் கொண்டாள். உள்ளம் துடித்தது. அதை பிரதிபலிப்பது போல் உதடுகள் நடித்தது. கண் முழுக்க கண்ணீர் நிரம்பி இருக்க, இமை திறந்தால் விழி வெள்ளம் நிச்சயம் என்பதால், உடைந்து போய்விடுவோமோ என்று வெகுவாய் பயந்தாள்.
நொடிகள் சரிய, அடிகள் சமீபிப்பது நன்றாக உணர முடிந்தது. இந்த நிமிசத்தை சந்திக்காமல், எழுந்து ஓடி விடலாமா' என்று மூளை தப்பு தப்பாய் யோசனை சொல்ல, நகர முடியாத பாறையாகி இருந்தாள்.
பக்கத்தில் மூச்சு சத்தம் கேட்டது. முதன் முறையாக தகப்பன் வாசனை அடித்தது. ஒரு கரம் நீண்டு, அவள் இடக் கன்னத்தை பற்றி தன் புறம் திருப்ப விளைந்தது.
அழுகையும் வீம்பும் ஒரு சேர வெடிக்க, அந்த கரத்தை வேகமாக தட்டி விட்டாள். இமை திறக்காமல் கிடந்த போதும், கன்னம் நனைந்து கொண்டு இருந்தது.
" யாழி மா… அப்பா டா. என்னை பார்க்க மாட்டியா..? " நந்தாவின் குரல் அவனுக்கே அடையாளம் தெரியவில்லை.
மூடிய கண்களோடும், துடித்த அதரங்களோடும் வேகமாய் மாட்டேன் என்று தலை அசைத்தாள். அவள் குதிரைவால் அவளை முந்திக்கொண்டு மறுப்பு சொல்லி குதித்தது. நெற்றியில் கொட்டிக்கிடந்த முடியை ஆசையாய் ஒதுக்கி விட்டான். எத்தனை நாள் இதற்கு ஏங்கி இருக்கிறான்.
லேசாய் கால்நீட்டி டிராலியில் அமர்ந்து இருந்தவளின், எதிரில் வந்து நின்று முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.
" அப்பா எந்த தப்பும் செய்யலடா." குரல் கெஞ்சியது.
கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவன், மூடிய இமையில் மென்மையாய் முத்தமிட, சட்டென்று விழி பூட்டு, முத்தச் சாவிக்கு மொத்தமாய் விடுபட்டது.
கொட்டிய கண்ணீரோடு முதன் முறையாய் தகப்பனைப் பார்த்தாள். அந்த உயரமும், நிகு நிகுத்த நிறமும், முகத்தில் ஒளிர்விட்ட தேஜஸ்சும், இமைக்காமல் அப்படியே பார்த்தாள். அத்தனை குற்றச்சாட்டையும் மறந்து சத்தியமாய் மனசு கர்வமாய் உணர்ந்தது, இவன் என் தகப்பன் என்று…
"எதுக்கு என் பாப்பா, அப்பாவை பார்த்ததும் அழறாங்க…" மெல்ல யாழியின் தலையோடு மோதி, ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து கர்சிப் எடுத்து முகத்தை துடைத்து விட்டான் மறுப்பு காட்டி முகத்தை இப்படி அப்படி திருப்பி போக்கு காட்டினாள்.
" எனக்கு உங்களை பிடிக்கல." என்றாள் மூக்கு நுனி விடைக்க.
" இனி பிடிக்கும். யாழி பாப்பா அப்பா மாதிரி நல்ல உயரம்னு நினைச்சனே, அம்மா மாதிரி நார்மல் தானோ..?" என்றான் மெல்ல தாடையை வருடிக் கொண்டு.
வேகமாய் டிராலியில் இருந்து எழுந்து நின்றாள். நந்தாவே தான் அச்சு அசலாய். நிறம் மட்டும் வானதியைப் போல் பொது நிறம். ஆனால் அந்த முகலட்சணம் கண்டு, கொள்ளை கொள்ள இரு கண்கள் போதாது. நந்தாவின் தோளுக்கு உயர்ந்து நின்றாள்.
மெல்ல தோளில் கை போட்டுக் கொண்டான். இந்த முறை அவள் கைகளை விலக்கவில்லை. அமைதியாக எங்கோ வெற்த்துக் கொண்டு நின்றாள்.
‘’ அம்மா எங்கே யாழி..?’’
‘’ சந்தியா ஆன்ட்டியை தேடிட்டு போய் இருக்காங்க.’’ குரல் கிணற்றுக்குள் இருந்து வந்தது. சட்டென்று நந்தாவின் உணர்வு வெடித்தது. வானதி எங்கு போய் இருப்பாள் என்று உணர முடிந்தது. வேகமாய் பைகளை அள்ளிக் கொண்டான்.
‘’ என் கூட வா, யாழிமா.’’ என்றபடி நடக்க, யாழி சின்ன இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.
மனிதர்களை கடந்து நெரிசலை விளக்கி நடைமேடை கூரைகளையும், ராட்சஷ பீம்களையும் நடையால் பின் தள்ளி… தூரத்தில் இருந்து பார்த்த போதே, வானதியின் உருவம் கண்ணில் இருளை தாண்டி படிந்தது.
கண்களை மூடி லேசாய் சாய்ந்து அமர்ந்திருந்தாள். மெல்ல நடந்து போய் அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். மார்புக்கு குறுக்காய் கைகளை கட்டிக் கொண்டான். சட்டென்று ஏற்பட்ட அசைவில் கண்களை திறந்து பார்த்தாள். அவனும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். கண்களில் எந்த ஆச்சர்யமோ, அங்கலாய்ப்போ இல்லை. காணாமல் கண்ட பெரும் ஆவல் இல்லை. காத்திருப்பின் கோபம் இல்லை.
ஒருவராக ஒருவர் மாறிப் போய் இருந்ததால், ஆழத்தை விழுங்கிய ஆழ்கடல் போல் இருந்தது அவர்களின் உணர்வு.
‘’ நந்தா…’’ என்றாள் ஆவியெல்லாம் வார்த்தையில் திரட்டி, கண்களை மூடி மெல்ல தலையசைத்தான்.
‘’ உங்களுக்கு வயசே ஆகல நந்தா. நான் விட்டுட்டு போனா அதே இடத்தில தான் இருக்கீங்க.’’ என்றாள் புன்னகையுடன்.
‘’ விட்டுட்டு எங்கே போனே..? எனக்குள்ள தானே கலந்து போயிட்டே. செம்மண்ணில் இருந்து சிகப்பை பிரிப்பதை விட, கடுமையானது என்னில் கலந்த உன்னை பிரிப்பது. என்ன, அங்காங்கே லேசா நரை இருக்கு. அதுக்கு அர்த்தம் வயசாயிடுச்சுன்னு இல்ல, நமக்கு அனுபவம் கூடியிருச்சுன்னு அர்த்தம்.’’ இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். யாழி இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். எத்தனை பரவசம் அம்மாவின் முகத்தில். இத்தனை காதலை தருகிறாள் என்றால், நந்தா சாமானிய ஆள் இல்லைதான். தன்னையும் மறந்து போய், தங்களையும் மறந்து அமர்ந்திருந்த இருவரின் காதல் மோனத்தை கலைக்க விரும்பாமல், அமைதியாக அந்த காட்சியை தன்னுடைய அலைபேசியில் நிழற்படமாய் அடைத்துக் கொண்டு நின்றாள்.
கூவிக் கிளம்பிய ரயில் பறவை, அவர்களை குலுக்கி எழுப்பி விட்டது. தங்களையே பார்த்துக் கொண்டு நிற்கும் மகளை நோக்கி கரத்தை நீட்டி பற்றி இழுத்து தன் அருகில் அமர வைத்தாள். அந்த இருக்கையில் இடைவெளி விட்டிருந்த வாழ்க்கை, அதே இருக்கையில் மூவரையும் இணைத்தும் வைத்து இருந்தது.
காற்றின் திசைதேடி தத்தளித்த பாய்மரங்கள், மெல்ல தன் நிலைக்கு திரும்பி சீராகி இருந்தது. நீண்ட பெருமூச்சு ஏனோ மூவருக்கும் ஒருசேர வந்தது. இனி இந்தப்பயணம் என்ன தரப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், அதை சேர்ந்து அனுபவிக்க ஒரு அருகாமையை தந்து இருந்தது. எழுந்து கொண்டார்கள். மகளின் கையைப் பற்றிக் கொண்டே வந்தான். ஏனோ உரசலில் பற்றிக் கொள்ளும் நெருப்பை போல, ஒற்றை நொடியில் நந்தாவுக்குள் பற்றி எரிந்த பேரன்பின் நெருப்பில், யாழியால் இயல்பாக இணங்க முடியவில்லை.
பசிக்குது’ என்று உரிமையாய் சொல்ல இயலவில்லை. அவன் புஜத்தை பற்றிக் கொண்டு நடக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை. அத்தனை உரிமையும், அளவில்லாத ஏக்கமும் இருந்தும், ஏனோ மனது ஓயாமல் பேயிரைச்சல் போட்டது.
காரில் ஏறியது முதல் யாரோடும் யாரும் பேசிக் கொள்ளவில்லை. புது உணர்வை எப்படி கையாள்வது என்று தடுமாற்றத்தோடு அமர்ந்து இருந்தாள் வானதி. நந்தாவுக்கு சாதுர்யனை மகள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறாள் என்ற குழப்பமே மிகுத்தமாக இருந்தது. ஆனால் இனி என்ன நடக்குமோ என்று கவலை கொள்ளவெல்லாம் அவகாசம் இல்லை.
இரவின் அரவம் குறைந்த சாலையில் மூவரும் வேறு வேறு மனநிலையில் பயணம் செய்தபடி இருந்தனர். அது ஒருவித இறுக்கமாக இருந்தது. அதை நந்தாவேதான் உடைத்து எறிந்தான்.
‘’ சந்தியாவை நான் தான் வரவேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன். உன் ப்ரெண்டை பார்த்ததும் மனசு, அவளோட போக முடிவு செய்தாலும் செய்திடும் இல்ல..?’’ என்றான் சிரித்தபடி.
பதிலுக்கு சிரித்தாள். இதையும் தான் முன்பே யூகித்து இருந்தேன், என்ற தங்கள் மனபொருத்தத்தை வியந்து கொள்ளக்கூட ஒருவித சங்கோஜமாக இருந்தது.
‘’ விக்கி, வீணா எல்லாம் நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஓடி வந்துடுவாங்க. எப்போ எப்போனு காத்துட்டு இருக்காங்க.’’
‘’ ம்.’’
‘’ அம்மா நேற்றில இருந்து, தரையில இல்ல. பேத்திக்காக பார்த்து பார்த்து ஏதேதோ செய்துட்டு, சின்னப் பொண்ணு மாதிரி ஓடியாடி வேலை பார்த்துட்டு இருக்காங்க. ‘’
அவன் பாதையிலும் வார்த்தையிலும் கவனமாக இருந்தான். மிருதுளாவையோ, அவள் குழந்தைகளையோ பற்றி ஒற்றை வார்த்தை பேசாமல் வந்தான் வெகு கவனமாக. லேசான பெருமூச்சுடன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
தள்ளி இருந்த நிமிசம் வரைக்கும் நந்தா அவளுக்குரியவனாக மட்டுமே இருந்தான். ஒரு உலகத்தில் அவளும் நந்தாவும் மட்டுமே நீக்கமற நிறைந்து இருந்தார்கள். ஆனாலும் இனி அந்த உலகத்தில் தன்னைப் போலவே சம உரிமை கொண்ட இன்னொருத்தியையும் சந்திக்க வேண்டும். சிந்தனையில் ஒதுக்கியது போல், நிஜத்தில் அவளை ஒதுக்க முடியாது.
’’ பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்,
பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி… அதுதான் காதலின் சன்னிதி…’’
Currently viewing this topic 2 guests.
Latest Post: தாழம் பூ Our newest member: Shan1986 Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page