கையில் மிதக்கும் கனவா நீ..!
கதையை ரீரன் செய்யறேன்..
இவங்க தான் நம்ம கதையோட ஹீரோ & ஹீரோயின்..
தொடர்ந்து இவங்க கூட பயணித்து உங்க கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.. முன்பே இந்த கதையை படிச்சவங்க, ப்ளீஸ் டிவிஸ்ட் & சஸ்பென்ஸ் எதையும் உடைக்காதீங்க.. அப்போ தான் புதுசா படிக்கறவங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கும்..
வாங்க கதைக்குள்ளே போகலாம்..
அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீராமசந்த்ரருஷி
காயத்ரீச்சந்த ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா
மாருதாத்மஜ இதி பீஜம்
அஞ்ஜனாஸூனுரிதி சக்தி
ஸ்ரீராமதூத இதி கீலகம்
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக
என்ற மந்திர உச்சரிப்பின் சத்தத்தில் தன் பார்வையைத் திருப்பிய நேத்ரா அங்குக் கை கூப்பிக் கண் மூடி அமர்ந்திருந்தவனைக் கண்டு மீண்டும் தன் விழிகளை அந்த இடம் முழுவதும் ஒரு முறை சுழல விட்டு அனைத்தும் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டு அவனை நோக்கி நகர்ந்தாள்.
அவனின் வேண்டுதலை முடித்துக் கொண்டு கண் திறந்தவன், தன் முன் ஒரு சிறு புன்னகையோடு நின்றிருந்த நேத்ராவை கண்டு பயத்தோடு பார்க்கவும், “என்னாச்சு விக்ரம் பயமா இருக்கா...?” என மெல்லிய அன்பான குரலில் கேட்டாள் அவள்.
“எஸ் மிஸ்... கொஞ்சம் பயமாவும் பதட்டமாவும் இருக்கு...” என்றவனின் குரலே அவனின் பதற்றத்தின் அளவை அவளுக்குப் புரிய வைக்கப் போதுமானதாக இருக்க... “ஏன்...? என்ன ஆச்சு...? சரியா படிக்கலையா...?!” என்றவளுக்கு மறுப்பாகத் தலையசைத்தவன் “நோ மிஸ், நல்லாவே படிச்சிருக்கேன்... ஆனாலும் ரொம்பப் பயமாயிருக்கு...” என்றான்.
அதுவே அவனின் மனநிலையைத் தெளிவாகப் புரிய வைக்க... தன் கைக்கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தவள் பத்து மணியாக இன்னும் பத்து நிமிடம் இருப்பதை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு “ஸ்டுடென்ட்ஸ் என்னைக் கவனிங்க...” என அந்த அறையில் இருந்தவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள்.
“நீங்க இப்போ எழுத போறது வெறும் மாதிரி தேர்வு தான்... இந்தப் பத்தாம் வகுப்பு தேர்வை எல்லாரும் ஏதோ புலி வருது புலி வருதுன்னு பேசிப்பேசியே உங்க பதட்டத்தை அதிகரித்துக் இருப்பாங்க... அப்படி எல்லாம் நீங்கள் பார்த்து நடுங்க இது புலியோ சிங்கமோ இல்லை, இத்தனை வருடம் நீங்கள் எழுதிய மற்ற தேர்வை போலத் தான் இதுவும்... என்ன படித்து இருக்கீங்களோ அதைத் தெளிவாகவும் சரியாகவும் எழுதினாலே போதும், தேவையில்லாத பயமும் பதட்டமும் அவசியமில்லை...
நிறையப் பேர் இதைப் பற்றிப் பேசியே உங்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருந்தால் அதைத் தூக்கி தூர போட்டுட்டு ரிலாக்ஸ்டாக எழுதுங்க... அதிகபட்ச பயமும் பதட்டமும் நாம படித்ததை எல்லாம் மறக்கடித்துவிடும், அதற்குப் பிறகு இத்தனை நாள் படித்ததற்கு எந்தப் பயனுமே இல்லாமல் போய்டும்... இப்போது எழுதுவது மாதிரி தேர்வு தான் என்பதால் அந்தப் பயம் கூட உங்களுக்கு வேண்டாம்...
பொதுத் தேர்வை எப்படி எழுத வேண்டும் என்ன மாதிரியான கேள்விகள் வரும் அதற்கு எப்படித் தயாராக வேண்டும் என்பது போன்ற சில பயிற்சிகளுக்காகத் தான் இந்தத் தேர்வை இப்போ நீங்கள் எழுத போறீங்க... இதில் புதிதாக வேறு எதுவும் இல்லை நீங்க பயப்பட, இரண்டு நிமிஷம் பேனாவை எல்லாம் மூடி வைச்சுட்டுக் கண் மூடி மனதை ஒரு நிலைப்படுத்திப் பதட்டத்தைக் குறைத்து முதலில் அமைதியாகுங்க... அதன் பிறகு தெரிஞ்சதை எழுதுங்க, அவ்வளவுதான்...” என அன்பும் அமைதியுமான குரலில் பேசியவளின் வார்த்தைகளுக்கு உடனடியாகக் கட்டுப்பட்டு அதைப் பின்பற்றினர் அவளின் மாணவர்கள்.
நேத்ரா இருபத்து நான்கு வயதுடைய அழகான யுவதி. ஐந்தரை அடி உயரம் அதற்கேற்ற எடை, பால் நிறம், கவி பாடும் கண்கள் எனப் பார்ப்பவரை மீண்டும் ஒரு முறை திரும்பப் பார்க்க வைக்கும் அளவு அழகி. இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவள் என்றாலும் துறுதுறுப்பும் கொண்டாட்டமுமே வாழ்கை என்று எண்ணும் ரகமில்லை அன்பும் அமைதியுமானவள்.
இங்கு இவள் இப்படி என்றால்...! அங்கு ஒருவனோ...!!
தன் கையிலிருந்த புத்தம் புதிய ரகத் துப்பாக்கியை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்துப்படி இருந்தவன், தன் எதிரில் இருந்தவர்களை நோக்கி குறி வைத்து பார்த்து விட்டு, கைக்கு அடக்கமாக இருக்கிறதா...?! தன் பாக்கெட்டில் வைக்கவும் எடுக்கவும் எளிதாக இருக்கிறதா...?! என்றும் விரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றிப் பார்த்துச் சட்டெனக் குனிந்து நெளிந்து சுட வருகிறதா, என்றெல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி ‘என்னடா பண்ற...?’ என்பது போன்ற பாவனையில் பார்த்தபடி அமர்ந்திருந்த விற்பனையாளனை நோக்கி “எல்லாம் ஓகே... ஆனா ரேட் தான் கொஞ்சம் ஓவரா சொல்ற பாத்து சொல்லு அண்ணாத்தே...” என்றான்.
“எது இது ஓவரா... மார்கெட்ல போய் விசாரிச்சு பார் பா அப்போ தெரியும், நம்மகிட்ட ரேட்டும் சரி ஐட்டமும் சரி ரொம்பவும் தரமா இருக்கும்... அதிக விலைக்கு எல்லாம் விற்க மாட்டேன் பா... முப்பது வருஷமா இந்தத் தொழில்ல இருக்கோம், அப்பாகிட்ட இருந்து நான் தொழிலை கையில் எடுத்து நாலு வருஷம் ஆகுது... இதுவரைக்கும் போன பொருள் திரும்பி வந்தது இல்லை... நம்மகிட்ட க்வாலிடி அப்படி...” என்றவனைப் பார்த்து “அது தெரிஞ்சது தானே உன்னைத் தேடி வந்தேன்... பார்த்து சொல்லிக் கொடு அண்ணாத்தே...” என்றான் மீண்டும்.
“இல்லப்பா இதுக்கு மேல ஒத்தை பைசா குறைக்க முடியாது... புதுச் சரக்கு யா இந்த மாதிரி இன்னும் ஒண்ணு கூடப் போலீஸ், சிபிஐன்னு யாரு கையிலயும் இருக்காது... இப்பதான் நம்மாளுங்க ஸ்பெஷலா ரெடி பண்ணி மார்கெட்க்கு வந்திருக்கு... நீ வேண்டான்னா வாங்க ஆயிரம் பேர் இருக்காங்க...” என்றவன் தன் பிடியிலேயே நின்றுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
‘இனி இவனிடம் பேசி பலன் இல்லை’ என்பதனால் கையில் இருந்த துப்பாக்கியின் தரமும் மனதைக் கவர்ந்திடவே தன் இரண்டு பேண்ட் பாக்கெட்டிலும் ஒரே நேரத்தில் கையை நுழைத்து இரண்டு பணக் கட்டுக்களை எடுத்து டேபிளில் வைத்தவன், “சரி ஓகே, நான் வரேன்...” என்று கிளம்பினான்.
“தம்பி தப்பா எடுத்துகாதப்பா... இது புதுச் சரக்கு அதான் இந்த ரேட்டு... நீ பழைய சரக்கு ஏதாவது பாரேன், நாம பேசி குறைச்சிக்கலாம்...” என்று தத்தாத்ரேயனின் முகம் கசங்கவும் மனம் பொறுக்காமல் இறங்கி வந்தான் கள்ளத்துப்பாக்கி விற்பதையே தொழிலாக வைத்திருப்பவன்.
“இல்ல அண்ணாத்தே... எனக்கு இது தான் வேணும், நான் இதையே எடுத்துக்கறேன்... ஒன்னும் பிரச்சினை இல்லை...” என்று விட்டு வெளியேறிவனின் மனதில் தான் இதை முதன்முதலில் பயன்படுத்த வேண்டியது யாருக்கு என்பதும் எப்படி என்பதும் தெளிவான திட்டமாக ஓட துவங்கியிருந்தது.
புஷ்பாஞ்சலி கல்விக் குழுமம்
சென்னையில் மட்டும் பல கிளைகளைக் கொண்டு பரந்து விரிந்து இருக்கும் ஒரு கல்வி ஸ்தாபனம். அதில் ஒரு கிளையில் தான் நேத்ரா தமிழ் ஆசிரியையாகவும் பத்தாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வகுப்பாசிரியையாகவும் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறாள்.
நேத்ரா இங்குப் பணியில் சேர்ந்து பத்து மாதங்கள் தான் ஆகிறது. முதல் முறையாக அவள் வகுப்புப் பிள்ளைகள் பொதுத் தேர்வை எழுத போவதை எண்ணி அவர்களைப் போலப் பயமும் படபடப்பும் கொள்ளாமல், அதை எப்படி எளிதாக அணுகுவது பிள்ளைகளை எப்படி மிகுந்த சிரமம் எதுவுமின்றி எளிதாக அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கலாம் என்பது போன்றே இருந்தது அவளின் அணுகுமுறை எல்லாம்.
சென்ற வாரம் தொடங்கிய மாதிரி தேர்வுகள் அனைத்தும் முடிந்திருக்க... மாணவர்கள் எளிதாக மதிப்பெண் எடுக்கக் கூடிய வகையில் சில தேர்வுத் தாள்களைப் பல நாட்களாக உழைத்து தயார் செய்து முதல் மாதிரி தேர்வுக்கு அதைப் படித்துத் தயார் ஆகும்படி செய்திருந்தவள் அடுத்தத் தேர்வுக்கு வேண்டிய மாதிரி தாள்களை மீண்டும் தயார் செய்து தன் பென்ட்ரைவில் வைத்திருந்தாள் நேத்ரா.
அதைக் கொண்டு மீதமுள்ள நாட்களில் இன்னும் எளிதாக அவர்களைச் சிறு சிறு கேள்விகளில் கூடக் கவனம் செலுத்த வைத்து எளிதாக மதிப்பெண் எடுக்க வைக்க எண்ணியவள், அவற்றை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நகலெடுத்துக் கொண்டு நாளை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வெளியில் செல்ல கிளம்பியவளை அவளின் அறை தோழியும் நேத்ரா பணிபுரியும் பள்ளியிலேயே உடன் பணிபுரிபவளுமான வித்யா அந்த ஞாயிறு மதியத்தில் தனக்கு வேண்டிய அனைத்தையும் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி தி.நகர் அழைத்து (இழுத்து) சென்றாள்.
ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடை கடையாக ஏறி இறங்கியும் வித்யா எதுவும் பிடிக்கவில்லை என்று கூறி ஒன்றுமே வாங்காமல் சுற்றிக் கொண்டு இருக்க... நேத்ரா சற்றும் எதிர்பாராமல் அவள் கைப்பையைப் பிடிங்கிக் கொண்டு சென்றனர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்.
அதில் “திருடன்... திருடன்...” என்று நேத்ரா குரல் கொடுக்க, “பிடிங்க... பிடிங்க...” என்று வித்யா கத்த தொடங்கினாள். அங்குக் கூடியிருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை.
கொஞ்சம் தூரம் வரை ஓடி சென்ற நேத்ராவால் அவர்கள் எந்தப் பக்கம் போனார்கள் என்று கூட அடையாளம் காண முடியவில்லை. இதற்கு மேல் ஓடுவதிலும் எந்தப் பலனும் இல்லை என்பது புரிய நேத்ரா அங்கேயே நின்று நாலா புறமும் தன் பார்வையைச் சுழற்றிக் கொண்டிருக்க... மெதுவாகத் தன் உடலை தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் ஓடி வந்து அவளோடு இணைந்து கொண்டாள் வித்யா.
“ஹே... என்ன டி கிடைக்கலையா...” என்று கவலையோடு கேட்டவளுக்கு “ம்ஹும்...” என்று தலையசைத்தவள், “அவங்களுக்கு இது ரெகுலரான ஒரு விஷயம்... இப்போ நம்மகிட்ட இருந்து பேக் எடுத்தவங்களைப் பிடித்தாலும் நம்ம பொருள் அவங்க கையில் இருக்காது... இதற்குள் பல கைக்கு மாறி இருக்கும், தேடுவதும் வேஸ்ட்... பிடிக்கிறதும் வேஸ்ட்... இது ஒரு பெரிய நெட்வொர்க் இவங்களை எதுவும் செய்ய முடியாது...” என்றவள், “சரி வா... நாம போலாம்...” என்று தங்கள் இரு சக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.
நடந்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் “போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுமா... நாம எல்லாம் அவங்களைப் பிடிக்க முடியாது...” என்று போகிற போக்கில் கூறிவிட்டு நடந்தார்.
“சரி வா வித்து, நாம கிளம்புவோம்...” என்றபடி நேத்ரா நடக்கத் துவங்கவும், “முக்கியமான பொருள் எதுவும் இருக்கா தாரா... நாம வேணா ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துடுவோமா...?!” என்றபடி அவளோடு இணைந்துக் கொண்டாள் வித்யா.
“அதெல்லாம் எதுவும் வேண்டாம்... அதில் எடிஎம் கார்ட் இருந்துச்சு... பணம் ஒரு ஐநூறு ரூபா தான் இருந்தது... இது தவிரப் பெருசா அதுல ஒன்னும்...” என்று யோசனையோடு கூறிக் கொண்டிருந்தவள், “அச்சச்சோ இத்தனை நாள் கஷ்டப்பட்டு ரெடி செஞ்ச பென்டிரைவ் இருக்குடி...” என்றாள் மெல்ல தலையில் அடித்துக் கொண்டே.
“கார்ட்... கேஷ்... போச்சு, அதுக்குப் பீல் பண்ணல... இதுக்குப் போய்ப் பீல் பண்றா லூசு...” என்று அவளைக் கடிந்தபடியே வித்யா நடந்துக் கொண்டிருக்க... “கார்ட் பத்தி பேங்க்ல போய்க் கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுத்தா போதும், ஆனா பென்டிரைவ் அப்படிச் செய்ய முடியுமா...? அது என் எத்தனை நாள் உழைப்பு தெரியுமா...?!” என்று குறைபட்டுக் கொண்டாள்.
நடந்தவாறே தன் கையில் இருந்த கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தபடியே “இப்போ கூட நேரம் இருக்கு வா வித்து...” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
“அடியே உன் தொல்லை தாங்க முடியல... நீ வேணா போ டி... இந்த உடம்பை வெச்சுகிட்டு என்னால ஓட முடியாது... எனக்கு எந்த வேலையும் இல்லை நான் பொறுமையா வந்துக்கறேன்...” என்று வித்யா கதற, கதற அவளை இழுத்துக் கொண்டு சென்றே விடுதியை அடைந்து இருந்தாள் நேத்ரா.
அவசர அவசரமாகத் தன்னிடம் இருந்த புத்தகங்களை எல்லாம் சேகரித்து எடுத்துக் கொண்டு தெரு முனையில் இருந்த பிரவுசிங் சென்டரை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள் நேத்ரா.
தன் மடிகணினியில் இங்கு அமர்ந்து மீண்டும் அனைத்தையும் தயார் செய்து முடிப்பதற்குள் இரவு ஆகிவிடும், இன்று ஞாயிறு என்பதால் மாலைக்கு மேல் பிரவுசிங் சென்டர்கள் அனைத்தையும் மூடிவிடுவார்கள் என்பதாலேயே அங்கேயே அமர்ந்து தயார் செய்ய, செய்யப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள நினைத்தே அங்குச் சென்றாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பே அவளின் மடிகணினி சர்வீஸ்க்கு சென்று வந்து இருந்தது. இல்லையென்றால் அதில் சேகரித்து வைத்திருந்ததையே பயன்படுத்திக் கொண்டிருந்து இருப்பாள். அங்குச் சென்றே இருக்க மாட்டாள்.
அவளின் விடுதி இருந்த தெருமுனையில் இருக்கும் அந்த மூன்று அடுக்கு வணிக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் இருந்த ப்ராஜெக்ட் மற்றும் அசைன்மென்ட்களைச் செய்து முடிக்கும் சென்டரில் அமர்ந்து அவசர அவசரமாக எல்லாம் தயார் செய்து முடித்து நேத்ரா நிமிரும் போது நேரம் இரவு ஒன்பதைத் தொட்டிருந்தது.
நிமிர்ந்து நேரத்தை பார்த்தவள், தான் வந்து வெகுநேரம் ஆகிவிட்டு இருப்பதையே அப்போது தான் உணர்ந்து மெல்ல தன் தலையில் வலிக்காமல் அடித்துக் கொண்டவள், கொண்டு வந்திருந்த பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.
சரியாக அதே நேரம் அந்தச் சென்டரின் உரிமையாளர் நேத்ராவை நெருங்கி இருக்க... "சாரி... சாரிண்ணா... கொஞ்சம் லேட்டாயிடுச்சு..." என முகத்தைச் சுருக்கி அவள் அவசரமாகப் பேசத் துவங்கவும், "பரவாயில்ல மா... நேரம் ஆச்சே, இன்னும் முடியலையான்னு தான் பார்க்க வந்தேன்..." என்று கூறியவருக்குத் தான் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்டு அதை அவரிடம் கொடுத்து விட்டு அவசரமாக வெளியேறினாள் நேத்ரா.
ஆனால் வெளியே வந்த பிறகே அந்தத் தளத்தில் இருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருள் சூழ்ந்து இருப்பதைக் கண்டவளுக்கு இவ்வளவு நேரம் உள்ளே விளக்கொளியில் இருந்ததனால் நேரமும் சூழலும் தெரியாமலேயே போனது.
சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றியவள் விரைவாகத் தன் இருப்பிடம் செல்ல எண்ணி வேகத்தோடு நடக்கத் தொடங்கவும், இருள் சூழ்ந்த அந்தப் பகுதி அவளுக்கு ஒரு கலக்கத்தைக் கொடுத்தது.
பின்பக்கமாக இருக்கும் வீதிக்கு இறங்கி செல்லும் பாதையில் அங்கு வளாகத்திற்கு வெளியில் இருக்கும் வீதியோர உணவு கடைகள் வெளிச்சத்தைக் கொடுக்கும் என்பது நினைவுக்கு வர... இந்த இருளில் இறங்குவதை விட, அந்த வெளிச்சத்தில் இறங்கலாம் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாகச் சுற்றிக் கொண்டு பின் பக்க படி வழியே இறங்கியவள் முதல் தளத்தைக் கடந்து படிகளை நோக்கி நடந்த போது அங்கு இறுதியாக இருந்த கடையில் இருந்து வந்த வித்தியாசமான ஒலியில் தன் பார்வையை அந்தப் பக்கம் திருப்பியவள் விழிகள் அப்படியே நிலை குத்தி போக, அசையாமல் உறைந்து நின்றிருந்தாள்.
அங்கு இருந்ததோ ஒரு பினான்ஸ் கம்பெனி... முதலாளி நாற்காலியில் அமர்ந்திருந்தவன், ரத்த வெள்ளத்தில் தன் மார்பை பிடித்தப்படி துடிதுடித்துக் கொண்டிருக்க... கொஞ்சமும் பதட்டமில்லாமல் அவனின் துடிப்பை கண்கள் பளபளக்க பார்த்தபடி அங்குக் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தான் ஒருவன்.
அதைக் கண்டதில் மூச்சு விடக் கூட மறந்து பயத்தில் உறைந்து அப்படியே அசைவற்று நின்று இருந்தாள் நேத்ரா.
வெகு சாவகாசமாகத் துப்பாக்கியை அதில் அழுக்குப்பட்டதைத் துடைப்பது தான் முக்கியம் என்பது போல எண்ணி இப்படியும் அப்படியும் பார்த்து தன் சட்டையில் துடைத்தபடியே பேண்டின் பின் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டே திரும்பியவன் அப்போதே நுழைவாயிலின் எதிர்ப்புறத்தில் நின்றிருந்தவளை கண்டான்.
இந்தத் தளம் முழுவதும் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே உள்ளே நுழைந்து இருந்தவன், அவளை இங்குக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் ஒரு நொடி விழி சுருக்கமே காட்டிக் கொடுத்தது... பின் அந்த விழியில் ஒரு அலட்சிய பாவம் வந்து குடிக் கொள்ள... தன் வாயில் இருந்த சூயிங்கத்தை மென்றபடியே ஒவ்வொரு எட்டாக வைத்து அவன் நேத்ராவை நெருங்கவும், அதுவரை அசைவற்று இருந்த அந்தச் சிலைக்கு உயிர் வர, அவன் தன்னை நெருங்குவதற்குள் பதறி அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள் நேத்ரா.
அவளால் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகத்தோடு ஓடி அதே தெருவில் இருந்த தன் விடுதிக்குள் நுழைந்தவள் கொஞ்சமும் தன் வேகத்தைக் குறைக்காமல் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
பயத்தில் மனம் படபடக்க, அப்படியே படுக்கையில் சுருண்டு கொண்டவளுக்கு அறையில் இருந்த இருள் சற்று ஒளிந்துக் கொள்ள வசதியாக இருந்ததோ என்னவோ தடக் தடக் என்று துடிக்கும் மனதோடு அதிக நேரம் தலையணையை அணைத்தபடியே கிடந்தவளுக்கு இதைப்பற்றி யாரிடமும் பேசவோ பகிர்ந்துக் கொள்ளவோ கூடப் பயமாகத்தான் இருந்தது.
நல்லவேளை வித்யாவும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து இருக்க... என்ன...? ஏது...? என்று நேத்ராவின் நிலையைக் கண்டு கேள்வி கேட்டு தொல்லை செய்யவும் அங்கு ஆள் இல்லாமல் போனதினால் படபடவென அடித்துக் கொண்ட இதயத்தோடே வெகு நேரம் படுத்துக் கொண்டு இருந்தவளின் பதட்டம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.
அவள் இதயத்தின் துடிப்பும் படபடப்பும் சரியாகக் கேட்டது போல வழக்கம் போலவே ஒலித்தது அந்த மெசேஜ் வந்ததற்கான சத்தம். கண் மூடி படுத்துக் கொண்டிருந்தவள் ஒரு பரபரப்போடு எழுந்து அருகிலிருந்த அலைபேசியை எடுத்து பார்க்க... தான் எதிர்பார்த்து இருந்த நபரிடம் இருந்து தான் வந்திருந்தது மெசேஜ்.
“அம்மு”
“என்னாச்சுடா..?”
“ஆர் யூ ஓகே..?”
“என்ன ஆச்சு..?”
என்று அடுத்தடுத்து நேத்ரா பதில் அளிப்பதற்குள் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த மெசேஜ்களே அந்தப் பக்கம் இருந்து அனுப்புபவனின் பதட்டத்தை நேத்ராவிற்குச் சரியாகப் புரிய வைத்தது.
இருந்தும் “ஒண்ணுமில்லை” என்று மட்டும் பதிலளித்தாள் நேத்ரா. “ஏதாவது பிரச்சினையா” என மீண்டும் கேள்வி தான் அங்கிருந்து வந்தது. இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை வியந்ததைப் போன்றே இப்போதும் இவனுக்கு மட்டும் எப்படி என் ஒவ்வொரு உணர்வும் அசைவும் தெரிகிறது என்ற அதே வியப்போடு அமர்ந்து இருந்தவள் “இல்லை” என்றே கூறினாள். இன்று நடந்தவற்றைக் கூறி அவனையும் பதட்டப்பட வைக்க விரும்பாமல்.
“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்... மனசை போட்டு குழப்பிக்காதே, எப்பவும் நீ தனி ஆள் இல்ல, அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ...” என்று நீ சொன்ன எதையும் நான் நம்பவில்லை என்ற ரீதியிலேயே பதிலளித்தவன் மீண்டும் அதைப் பற்றிப் பேசி அவள் மனதை குழப்ப வேண்டாம் என்ற எண்ணத்தோடு “சாப்பிட்டாச்சா...? இன்னைக்கு எங்க போனீங்க இரண்டு பேரும், உன் பிரண்ட் இன்னைக்கு ஏதாவது வம்பு செஞ்சாளா...?” என்று அவள் மனதை திசை திருப்பினான்.
‘இன்னும் சாப்பிடவில்லை’ என்று பதிலளித்தால் அதற்குத் திட்டோ இல்லை அறிவுரையோ வழங்க ஆரம்பித்து விடுவான் என்று அறிந்து இருந்தவள் இப்போது இருக்கும் மனநிலையில் அதையெல்லாம் கேட்கும் மனது இல்லாததால் “சாப்பிட்டேன்’ என்று மட்டும் பதில் அளித்து விட்டு வேறு எதற்கும் பதில் அளிக்காமல் இருந்தாள்.
“சரி... சரி... நைட் ரொம்ப லேட் ஆச்சு பாரு... போய்ச் சாப்பிட்டு தூங்கு... எதுக்கும் மனசை போட்டு குழப்பிக்காதே... இந்த நேரத்துக்கு ஹாஸ்டலில் எல்லாம் காலியாகி இருக்குமே, நீ என்ன சாப்பிடுவே... நான் ஏதாவது ஆர்டர் செய்து அனுப்பவா... சாப்பிட்டுப் படுத்தாதான் நீ இப்போதிருக்கும் மனநிலையில் தூக்கம் கூட வரும்...” என்றான்.
“வேண்டாம் பழம் இருக்கு...” என்று பதிலளித்தாள் நேத்ரா. அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் ‘இப்போது அவள் நார்மலாக இல்லை என்று புரிய, அதையாவது சாப்பிட்டால் சரி...’ என்ற மனநிலையோடு மேலும் அவளை வற்புறுத்தாமல் “குட்நைட் அம்மு... டேக் கேர்...” என்று சற்று இடைவெளிவிட்டுக் கூறினான்.
‘இவனிடம் மட்டும் தன் உணர்வுகளை எப்போதும் மறைக்கவே முடியாதா...?’ என்ற சந்தேகம் எப்போதும் போல இப்போதும் மனதில் ஓட... இப்போது அவன் அமைதி காத்ததும் தனக்காகத் தான் என்பது தெரிந்ததால் எந்தப் பதிலும் அவனுக்கு அளிக்காமல் அந்த வாட்ஸ் அப் சாட்டில் தெரிந்த ராம் என்ற அவனின் பெயரையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நேத்ரா.
இரவு வெகு நேரத்திற்குப் பிறகு உறங்கியதாலோ என்னமோ காலை வித்யா கிளம்பிச் செல்லும் வரை கூட நேத்ரா எழுந்திருக்கவில்லை. வழக்கமாக இப்படி இருப்பவள் இல்லை என்பதனால் ‘உடம்பு முடியவில்லையோ...?!’ என்று நினைத்த வித்யா பள்ளிக்குக் கிளம்புவதற்கு முன் நேத்ராவை எழுப்பி விசாரிக்க... சற்றுத் தலைவலியாக இருப்பதாகவும் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாகப் பள்ளியில் தனக்காகக் கூறி விடுமாறும் சொன்னவள் மீண்டும் தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.
அன்று வித்யாவிற்கு வழக்கத்திற்கு மாறாகச் சற்று முன்னதாகச் செல்ல வேண்டியிருந்தது. அவளின் வகுப்புப் பிள்ளைகளுக்குக் காலை பிரேயர் நேர செய்தியும் பொன்மொழியும் வாசிக்கும் முறை இன்று இருந்ததனால் வழக்கமாகக் கிளம்புவதற்கு முக்கால் மணி நேரம் முன்பாகவே கிளம்பிச் சென்று விட்டாள்.
மைக்கில் வாசிக்கும் பிள்ளை வருவதற்குள் இன்றைய முக்கியமான செய்தி என்ன என்பதைச் சுருக்கமாக எழுதி வைத்துக் கொண்டு அதைப் பற்றிய தங்கள் பார்வையையும் சேர்த்து பேசும் அளவுக்கு அந்தப் பெண்ணைத் தயார்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அவசரமாகக் கிளம்பியவள், நேத்ரா தலைவலி என்று கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கமாக நேத்ரா இதுபோல் எல்லாம் கூறுபவள் இல்லை என்பதனால் நிஜமாகவே உடல்நிலை சரியில்லை போலும் என்ற எண்ணமே வித்யாவிற்கு இருந்தது.
முதல் முறையாக ஒரு கொலையை நேரடியாகப் பார்த்த பயமும் தான் பார்த்ததை அந்தக் கொலைகாரன் பார்த்து விட்டான் என்ற படபடப்பும் நேத்ராவை இரவெல்லாம் பாடாய்ப் படுத்திக் கொண்டு இருந்ததில் உறக்கம் என்பது வெகு தூர போயிருந்தது.
விடிய விடிய பயத்திலேயே விழித்துக் கொண்டு படுத்திருந்தவள் அவளையும் அறியாமல் விடிந்ததற்குப் பிறகே உறங்கியிருந்தாள். அதனாலேயே அவளால் இப்போது தலை பாரமாகக் கனத்ததில் எழுந்துக் கொள்ள முடியவில்லை.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எழுந்தவளுக்கு மீண்டும் அதே ஞாபகங்கள் வந்து சூழ்ந்து கொள்ள... படபடக்கும் மனதோடே பள்ளிக்குக் கிளம்பத் தயாரானாள். வழக்கமாக இவர்கள் இருவரும் பள்ளி பேருந்தில் தான் செல்வார்கள்.
இதுபோல ஏதாவது நேரம் மாற்றிச் செல்ல வேண்டியிருந்தால் தங்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இன்று வித்யா விரைவாகச் செல்ல வேண்டி இருந்ததனால் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டு இருக்க...
பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற நேத்ராவின் பார்வையில் எதிரில் இருந்த சிறிய தேநீர் கடையின் முன்பு தொங்கவிடப்பட்டிருந்த செய்தித்தாள் கண்ணில் பட... அதில் கொட்டை எழுத்தில் பிரபல பைனான்ஸியர் மோகித் ஜெயின் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை என்ற செய்தி கண்ணில் படவும், மீண்டும் இரவு தான் பார்த்த காட்சி அவளின் கண் முன் விரிந்தது.
அதே நேரம் நேத்ரா செல்ல வேண்டிய பேருந்து வந்துவிட... அதில் ஏறி முதலில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள், தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவரின் கையில் இருந்த செய்தித்தாளை கண்டு படித்து விட்டுத் தருவதாகக் கூறி அதை வாங்கி, அவசரமாக அதில் தன் பார்வையை ஓட்டத் தொடங்கினாள்.
பிரபல பைனான்சியர் மோஹித் ஜெய்யின் நேற்று இரவு அவரின் அலுவலகத்தில் வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த பத்து வருடமாகப் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மோஹித்துக்கு அவரின் தொழில் முறையிலும் சொந்த வாழ்க்கையிலும் ஏகப்பட்ட எதிரிகள் உள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலரிடம் அநியாய வட்டிக்குப் பணம் கொடுத்து வசூலித்து வந்ததனால் சாமானியர் முதல் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை அவரின் மீது ஆத்திரத்தில் இருந்தவர்களில் யாராவது இதைச் செய்து இருப்பார்களா என்ற கோணத்திலும் இதைத் தவிரவும் அவருக்குத் திரைமறைவு தொழில்கள் கூட உள்ளதாக ஒரு செய்தி காற்று வழி பரவுவதால் அதனால் ஏற்பட்ட பகையாலும் கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகவும், அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
எப்போதுமே தன்னோடு மூன்று நான்கு அடியாட்களை வைத்துக் கொண்டு வலம் வரும் மோஹித் ஜெயின் தனியாக மாட்டும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்து எவரும் அருகில் இல்லாத நேரத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதால் வெகு நாட்களாகத் திட்டம் தீட்டி நடத்தப்பட்ட கொலையாக இருக்குமோ என்ற ஒரு எண்ணமும் எழுந்துள்ளதாக மதுசூதனன் நம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தித்தாளை படித்து முடித்தவளுக்கு இரவு பார்த்த அந்தக் கொலைகாரனின் முகம் கண்முன் விரிந்தது. அத்தனை சர்வ சாதாரணமாக ஒரு கொலையைச் செய்து முடித்தவனின் வெகு இயல்பான செய்கைகள் அவனுக்குக் கொலைகள் புதிது இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துவது போலவே இருந்தது.
அதுவே அத்தனை சீக்கிரம் அவனை இவர்களால் பிடித்து விட முடியாது என்பதை நேத்ராவிற்குப் புரிய வைக்க... ‘அவனை எங்க இவங்க பிடிக்கப் போறாங்க...!!?’ என்று தனக்குள்ளேயே எண்ணியபடி பார்வையைத் திருப்பிவளுக்கு அவளின் பேருந்துக்கு அருகில் புல்லட்டில் கருப்பு நிற சட்டையும் ஆகாய நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து குளிர் கண்ணாடியோடு அலை அலையான கேசம் காற்றில் பறக்க, படு ஸ்டைலாக அவனே காட்சியளித்துக் கொண்டிருந்தான்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா