About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
ஹாய் மக்களே. நலமா? மீண்டும் உங்களை ஒரு கதையோடு சந்திக்க வருகிறேன். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் முன்பு வந்த கதை. நிச்சயம் தங்களைக் கவரும் என்று நம்புகிறேன். நன்றிகள்.
1
சொட்டத் தொடங்கிய மழை கொட்டத் தொடங்குவதிற்குள் வீட்டிற்கு சென்றாக வேண்டும். மழையின் சரசங்களை விரசமில்லாமல் ரசிக்கின்ற மனோநிலையில் தான் இருந்தான் நந்தகோபால் மாணிக்கவேல்..! கண்களை இடுக்கி மழையை ரசித்துக் கொண்டான். வெளிச்சம் குறைந்த இடத்தில் மழை கத்தி வைத்து அறுத்ததுபோல் பாதியில் இருந்து வெளிச்சத்தின் கீழ் தொங்கியது போல் இருந்தது.
வைப்பர் வழித்து வழித்து இவனுடைய பார்வையை சுத்தபடுத்திக் கொண்டு இருந்தது. சாலைகளின் இருமருங்கிலும் வெளிச்ச மரங்கள் தெருவிளக்கென்ற பெயரில் பூத்திருந்தன..! அவற்றுக்கு கீழே அழகாய் கொடிபோல் வெள்ளை நிழல் சீரான இடைவெளியில் படர்ந்து இருந்தது..!
நீண்டநாட்களுக்குப் பிறகு முகம் கழுவியிருந்த இலைகள் புத்தம் புதுசாய் அழகாய் இருந்தன..! இருட்டத் தொடங்கிய உலகத்தில் இளந்தளிர்கள் கூட ஈஸட்மேன் கலரில் கரும்பச்சையாக தெரிந்தன.
நிதானமாய் காரை பேருந்துகளுக்கு நடுவில் செலுத்திக் கொண்டு இருந்தான்..! கொஞ்சநேரம் இடைவெளி விட்டு கார் டிராபிக்கில் நின்றாலும், மழைத்துளி வந்து கண்ணாடியைத் தட்டிக் கொண்டு இருந்தது..!
தனியார் வங்கியில் லோன் டிபார்ட்மெண்ட் ஹெட்டாக இருந்தான். அலுக்காத சௌஜன்யங்கள் பொறுப்பான பெற்றோர்கள் கொஞ்சம் பிடித்தம் பண்ணி சொத்து சேர்த்து வைத்திருக்க, ஏப்பமிட்டு எதுக்களிக்காத வாழ்க்கைத் தரம்..!
அப்பர் மிடில் க்ளாஸ் என்பது அழகான நிலை. அங்கே வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வரைபடத்தை கையில் தந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துக் கொள்ளும் சவுகரியத்தை காலம் வழங்கி இருந்தது..! அப்பா கட்டி வைத்த வீட்டை ஆல்டர் செய்வதைவிட, அவரவர் ரசனைக்கு ஏற்ப, தானே வீட்டை வடிவமைத்துக் கொள்ளும் வாழ்க்கை என்பது பெரும் சந்தோச வரம் தான்.
ப்ளாடினம் வெள்ளை முத்து நிறத்தில் இருந்த ஹோண்டா சிட்டியை பதினாலு லகரத்துக்கு அவனே தேர்வு செய்து வாங்கினான். இ.எம்.ஐ. தான்..! இன்னும் ஏழு லட்சத்துக்கு மேல் பாக்கி இருக்கிறது..! கொஞ்சம் சிரமப்பட்டால் இதை கட்டி இருக்கலாம்.! ஆனால் நந்தாவுக்கு அதில் உடன்பாடில்லை. தன்னுடைய உழைப்பில் செலுத்தும் போதுதான் அக்கறை வருமென்ற பொறுப்பு இருந்தது..!
வாகனங்கள் மெல்ல நகரத் தொடங்கின..! நகரத்தின் அசௌகரியங்களில் இதுவும் ஒன்று..! ஆனால் இப்படி அசௌகரியப்படாமல் வாழவும் இயலவில்லை… அதுதான் நிஜம்.! விடுமுறை நாட்களில் ஓய்ந்து கிடக்கும் சாலைகளை அவ்வளவு இலகுவாய் ரசிக்கவும் முடியவில்லை தான்..!
நீந்திக் கடந்து கே.கே நகருக்கு வந்து சேர்ந்த போது இருள் முழுசாய் நகரத்தை போர்த்தி இருந்தது..!. பொட்டு பொட்டாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டு இருக்க அது பார்ப்பதிற்கு கருப்பு புடவைக்கு வெள்ளை கல்வைத்த அலங்கார வேலை போல் தெரிந்தது..!
அளவான, அழகான, அமைப்பான தனி வீடு..! காரை அடைக்கிக் கொள்ள நீலவண்ண ப்ளாஸ்டிக் செட்..! வீட்டை அணைத்தது போல் இருமருங்கிலும் மரம் செடிகள், தொட்டியில் அளவான வளர்ச்சியில் கால்மடக்கி கைமடக்கி செழித்திருந்தன போன்சாய்கள்..!
காரை பார்க் செய்துவிட்டு ஷுவைக் கழட்டி அதன் இடத்தில் வைத்துவிட்டு, வாசலில் இருந்த பைப்பிலேயே கை கால்களை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான்..! அம்மா, ஆறு மணிக்கே டி.வி.யில் சுவாரஸ்யப்பட்டு இருந்தார்..!
‘’வா நந்தா..! மழை அடிச்சுக் காய்ச்சுதுல” என்றார் டி.வி.யில் இருந்து கண் எடுக்காமல்..!
”ம்.பயங்கர மழை..! சின்ன மழைக்கே சென்னையில ஆறோடும்.. இப்போ சொல்லவே வேண்டாம்..! ” அலுத்துக் கொண்டே மாடிக்குச் சென்றான். அறையில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தது. கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்த வானதி.. அவன் முகம் பார்த்து சின்னதாய் சிரித்துக் கொண்டபடி கட்டிலை விட்டு இறங்கி வந்தாள்..!
அவன் முகத்தில் மாற்றம் இல்லை, இறுக்கமும் இல்லை, நெருக்கமும் இல்லை..! பையை டேபிளில் வைத்துவிட்டு வாஷ்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்..! பத்து நிமிடம் முழுதாய் எடுத்துக் கொண்டு வெளியில் வர, வானதி முழங்காலைக் கட்டிக் கொண்டு கட்டிலிலேயே அமர்ந்து இருந்தாள்..!
அவளைக் கடைக்கண்ணால் பார்த்தபடி கட்டிலின் மறுமுனையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு அருகில் சென்று அதன் கன்னத்தை மெல்ல தடவித் தந்தான். அம்மாவை அப்படியே உரித்துக் கொண்டு வந்திருந்தது. மெல்ல பெருமூச்சு விட்டபடி கட்டிலின் அருகில் அவன் இமைக்காமல் நிற்க,,
‘’காப்பி கொண்டு வரட்டுமா நந்தா..?” முதுகில் படர்ந்து கிடந்த அடர்ந்த கூந்தலை வழித்து முடிச்சிட்டபடியே கேட்டாள்.
தலையசைப்பு மட்டும் பதிலாய் வந்தது. கண்களைக் குறுக்கி அவனை முறைத்துப் பார்த்தாள்..!
’வாய் திறந்தா முத்தா உதிர்ந்திரும்..?’ முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர, அவள் இங்கிருந்து போன பிறகு பெருமூச்சு எட்டிப் பார்த்தது..!
’எப்படியிருந்தவள்... எப்படி, நடித்துக் கொண்டு இருக்கிறாள்...? ‘ கட்டிலில் கால் நீட்டி அமர்ந்துகொண்டான். தலையணையை சாய்வாக வைத்து அதன்மீது சாய்ந்து கொண்டான்..!
இடக்கையால் முகம் மறைத்து கொண்டு சாய்ந்திருக்க, அலுப்பு அப்படியே உறக்கத்திற்கு அள்ளிக்கொண்டு போனது.
‘’நந்தா, காபி...” இரண்டாம் அழைப்பிற்கும் அவன் கை இறக்கி கண் திறக்காததால், மெல்ல அவன் கைகளைத் தொட இருவருக்குமே அது உணர்வு மாற்றமாக இருக்க, குளிர்ந்த நெருப்பைத் தொட்டதுபோல், சூடான குளிர்ச்சி அவளுள் விரவியது. சட்டென்று கைகளை பின்னிழுத்துக் கொண்டாள்..! நிமிர்ந்து அமர்ந்து கொண்டவன், கோப்பையை வாங்கிக் கொண்டான்..!
‘’இன்னைக்கென்ன வந்தவுடனே தூக்கம்..? உடம்பு முடியலயா என்ன..?”
‘’ப்ச்..! அதெல்லாம் இல்ல..! கொஞ்சம் வேலை அதிகம்..! தபஸ்வியை ஏன் தூங்க வச்சே அதுக்குள்ளே…?” என்றான். குழந்தையை வருடிக்கொண்டே.
‘’இதென்ன வம்பு..! அவளுக்கு தூக்கம் வந்திருக்கும் தூங்கி இருப்பா..? இதுக்கெல்லாமா நான் காவல் நிற்க முடியும்..?” வழக்கமான வானதியின் நையாண்டி துவங்கிவிட்டது தெரிந்ததும் நந்தாவின் கடையிதழில் சின்னதாய் புன்னகை பூத்துக் கொண்டது..!
‘’ இது பொறுப்பான பேச்சா.?”
‘’எனக்குத்தான் பொறுப்பே இல்லைன்னு தானே என்னையும் சேர்த்து உங்க தலையில கட்டி வச்சிருக்காங்க..? இதுக்குமேலயும் என்கிட்ட பொறுப்பை எதிர்பார்த்தா எப்பிடி..?”
அவனிடம் வம்பளந்து கொண்டே, தன்னுடைய நீண்ட நெடும்கூந்தலை அழகாய் பின்னலிட்டுக் கொண்டாள். திருத்தமான முகத்தை அவளே ஒருநொடி ரசித்துக் கொண்டாள்..!
‘’நல்லாத்தான் இருக்கே, போதும் உன்னை நீயே ரசிச்சது.” அவன் மகளின் கன்னத்தை வருடிக் கொண்டே வானதியின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் கேலி செய்ய, முகம் திருப்பி அவனை முறைத்துவிட்டு குங்குமத்தை விள்வி நெற்றியிலும் வகிட்டிலும் வைத்துக்கொண்டாள்..
‘’அதுசரி, என்னை நானே ரசிச்சாத்தான் உண்டு..! சார் அதைச் செய்யப் போறதே இல்லை.”
”வானு...” அவன் குரலில் தவிப்பு ஏற, அதை தொடர விரும்பாமல்,
”பாப்பா எழுந்ததும், தூக்கிட்டு கீழே வந்து சேருங்க..! ‘’ சொல்லி விட்டு கீழே இறங்கிப் போனாள்.
அடுத்த சீரியலுக்கு கடந்திருந்த கல்பனா, வானதியைப் பார்த்ததும் முகம் திருப்பிக்கொள்ள, அதற்கு காரணம் என்ன என்று அறிந்தே இருந்ததால், நமுட்டுத் தனமாய் சிரித்தபடி சமையல்கட்டை நோக்கி நகர,
‘’நீயெல்லாம் ஒரு பொண்ணா டி..? உன்னை எதுக்கு இந்த வீட்டுக்கு அத்தனை பாடுபட்டு கொண்டு வந்தேன்...? எனக்கு ஒத்தாசணையா இருப்பேன்னு தானே..? இப்படி சகிச்சு கழுத்தறுக்கிறியே..? நான் பெத்த பொண்ணுதான் எனக்கு உதவாம இருக்கிறான்னா, வந்தவளாவது எனக்கு அணுசரணையா இருப்பாங்கிற ஆசையில மண் விழுந்திருச்சு” கல்பனா புலம்பிக்கொண்டே இருக்க, காப்பி டம்ளர்களோடு வந்தவள் ஒன்றை கல்பனாவிடம் நீட்டி விட்டு மற்றொன்றோடு சிட் அவுட்டுக்கு நகர்ந்தாள்.
‘’இந்தாடி.! உன்னைத்தான் உன்கிட்டத்தான் கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்..? நான் என்ன பைத்தியக்காரியா..?” என்ற மாமியாரை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்..!
‘’இப்பயென்ன நான் உங்க பக்கத்துல வந்து உட்காரணுமா..? அப்ப டி.வி.யை ஆஃப் பண்ணுங்க..!” காப்பியை உறிஞ்சிக் கொண்டே சொன்னாள்.
‘’அடுத்து எமலோக கலாட்டா’ ஆரம்பமாகுது வானு..! செமையா இருக்கும்..! வாடி சேர்ந்து பார்க்கலாம்...” பரிதாபமாக அழைத்த மாமியாரை கருணையே இல்லாமல் முறைத்தாள்..!
‘’அதுமட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது… நான் வேணும்னா சீரியலை நிறுத்துங்க, இல்லையா என்னை மறந்துடுங்க” சட்டமாய் சொல்லிவிட்டு மீண்டும் சிட் அவுட்டில் சென்று அமர்ந்து காப்பியை உறிஞ்ச ஆரம்பித்தாள்.
” நீயெல்லாம் ஒரு பொண்ணே இல்ல...”
‘’இருந்துட்டுப் போகட்டும்...” காப்பி துளித்துளியாய் தொண்டைக்குள் இறங்கியது. மந்தகாச சிரிப்பு கடை இதழில் அரும்பிக் கொண்டே இருந்தது.
‘’வானு.. தனியா பார்க்க கஷ்டமா இருக்குடி..! கம்பெனி குடுடி..!” பரிதாபமாக அழைத்த அத்தையை ஒரு நொடி குசும்பாய்ப் பார்த்தவள், முகம் திருப்பிக்கொண்டு சொட்டிய மழையை கம்பி பின்னல் வழியே ரசிக்க ஆரம்பித்தாள்..!
மழை சொட்டி சொட்டி தரையில் தேங்கி இருந்த நீரில் ஜலதரங்கம் வாசிக்க ஆரம்பித்தது. மழையை விட உலகத்தில் அழகான விசயம் இருக்கவே முடியாது என்று தோன்றியது..! எத்தனை உயரத்தில் இருந்தாலும் முடிவில் தரை தொட்டுத்தான் ஆகவேண்டும் என்ற வாழ்க்கை நியதியை மழையைக் கொண்டே இயற்கை உணர்த்தி இருப்பதாகத் தோன்றியது..!
நந்தா தபஸ்வியுடன் கீழே இறங்கி வந்தான்..! குழந்தையை கல்பனாவிடம் கொடுத்து விட்டு சிட் அவுட்டில் வந்து நின்றான். கம்பி வலை பின்னிய நீண்ட வராண்டா..! சாய்வு நாற்காலியில் தன்னைப் பொதித்துக் கொண்டு மெல்ல கால் ஊன்றி தன்னைத் தானே தாலாட்டிக் கொண்டு மழையோடு கலந்து கிடந்தவளின் முகத்தை ஒருநொடி உற்றுப் பார்த்தான். பரிவும் பரிதாபமும்
ஒருசேர வந்தது அவளைப் பார்க்க… சுடுமென்று தெரிந்தே நெருப்பைச் சூடிக் கொண்டவள்…
பார்வை தன்மீது கிடப்பதை உணர்வால் உணர்ந்து படக்கென திரும்பிப் பார்த்தாள்..! கைகளை கட்டிக் கொண்டு நிலைப்படியில்சாய்ந்து நிலைத்த விழிகளோடு தன்னை பார்த்துக் கொண்டு இருந்தவனை, ஒற்றைப் புருவம் உயர்த்தி என்ன..?’ என்று கேட்க, அவன் தலையசத்து ஒன்றுமில்லை என்று கூறினான்..!
‘’ஒண்ணுமில்லையா..? அப்புறம் எதுக்கு என்னை சைட் அடிக்கணும்..?”
‘’சைட்டா..? உன்னையா..? அது இந்த ஜென்மத்துல நடக்காது..! ‘’ அவன் அழுத்தமாகச் சொல்ல அந்த நொடி அவள் முகத்தில் சட்டென்று வெட்டி மறைந்த குட்டி துக்கத்தில் அவன் மனமும் நிஜமாகவே வாடித்தான் போனது..! வார்த்தையிலாவது
அவளை வருடித் தராத தன்னுடைய கயமையை நினைத்து தன்னைத் தானே வெறுத்துக் கொண்டான்.வருத்தப்பட்டாலும் அதை திருப்பி தராவிட்டால் அது வானதி இல்லையே..?
‘’அப்ப நான் குடுத்து வச்சவ தான்..! ‘’ என்றவள் மீண்டும் கண்களை மழையோடு கலக்கவிட, அவனுக்குமே தெரியும் தன் வார்த்தைகள் அவளுக்கு வலிக்க வைத்திருக்கும் என்று..!
மெல்ல பெருமூச்செறிந்தவன் அங்கிருந்து நகர்ந்து உள்ளே போனான். பேசியிருக்க கூடாதோ..?’ தாமதமாய் ஞானம் தோன்றியது.
‘’நந்தா பசிக்குதா..?” எட்டிப்பார்த்து இயல்பாக கேட்டாள்.
‘’அவ்வளவா இல்ல. நீ பொறுமையா வா.” என்றவன் மகளோடு விளையாட ஆரம்பிக்க, தம்பியும் தங்கையும் அவனோடு சேர்ந்துகொள்ள அரட்டைக் கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது..!
அவன் தங்கை வீணா கல்லூரியில் இறுதி ஆண்டு,,! தம்பி விக்னேஷ் எம்.பி.ஏ. வில் இருந்தான்..! அப்பா இல்லை. அம்மா கல்பனா கல்லூரியில் பேராசிரியராக இருந்து விருப்ப ஓய்வு வாங்கியவர். தம்பிக்கும், தங்கைக்கும் நந்தா தான் உலகமே..! இரண்டு வயது தபஸ்வி அத்தனை பேருக்கும் அங்கே தேவதை..!
‘’என்னடா உன் செமினாரெல்லாம் எப்படிப் போகுது..? ஒழுங்கா பண்றியா..? இல்ல கோட்டடிக்கப் போறியா..?”
”என்னால முடிஞ்சளவுக்கு செய்றேன் நந்தா..! அதுக்கு மேல கடவுள் விட்டவழி...” மேலே கையைக் காட்டினான்.
‘’அடேய் கொன்னுடுவேன் ஏதாவது சொதப்பி வச்சா..! ஒழுங்கா செய்..! வாழ்க்கையில ஒரு வருசம் மிஸ் ஆனா எவ்வளவோ விசயங்கள் கையை விட்டுப் போயிடும்.‘’ உணர்ந்து
சொன்னான்.வீணாவிடம் படிப்புக் குறித்து விசாரித்துக் öதீகாண்டான். வாரத்தில் ஒருமுறையாவது அவர்களுடைய படிப்பை விசாரிக்காமல் இருக்க மாட்டான்.! அக்கறையும் ,தேவையான இடங்களில் கண்டிப்பும் எப்போதுமே இருக்கும்..!
மழை இன்னும் வேகமெடுக்க ஆரம்பித்து இருந்தது. ஆங்காரக் குரலில் மழையின் இரைச்சல் அழகாக இருந்தது..! இன்னும் வானதி அங்கேயேதான் அமர்ந்திருந்தாள். அடித்து துவம்சம் செய்த மழையும், வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்த மின்னலும், உருட்டி மிரட்டிய இடியும், பார்த்துக்கொண்டே மெல்ல தன்னைத் தாலாட்டிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
உள்ளிருந்து மெல்ல எட்டிப்பார்த்த வீணா குரலைத் தாழ்த்தி அண்ணனிடம் கேட்டாள்,
‘’என்னாச்சு..? உன் பொண்டாட்டி மழையோட மழையா கலந்து போய் உட்கார்ந்திருக்காங்க..? சண்டையா..?” என்றவளின் குரலில் வழிந்த ஆர்வத்தை பார்த்து பெருசாய்ச் சிரித்தான்..!
‘’சண்டையா..? அதுவும் அவ கூடவா..?
சான்சே இல்லை..! மேடம் ஏதோ யோசனையா இருக்காங்க..! ‘’ என்றாலுமே அவளுடைய மௌனம் என்னவோ போல் தான் இருந்தது..!
‘’வானதி... ‘’ உள்ளிருந்து குரல் வெளியே ஓடிவர, தலை மட்டும் எட்டிப் பார்த்தது..!
‘’எஸ் யுவர் ஆனர்”
‘’ஏன் அந்த குளிர் காத்துல தனியா உட்காந்திருக்க..! எழுந்து உள்ளே வா”
‘’பிடிச்சிருக்கு நந்தா..! அப்புறம் வர்றேன்...” தலையை இழுத்துக் கொண்டாள்.
‘’பாப்பா உன்னைத் தேடறா...”
‘’கண்டிப்பாத் தேட மாட்டா..! ஏன்னா, அவ உங்க பொண்ணு.” பளிச் பளிச்சென்று மின்னல் வெட்டிய பதில்களால், தம்பி தங்கை இருவரும் வாய்பொத்திச் சிரிக்க, அசடு வழிய முறைத்தான்..!
‘’ பசிக்குது வானதி...” படக்கென இந்தமுறை எழுந்து உள்ளே வந்தாள்..! முகத்தில் முத்தாய் மழை வேர்த்திருந்தது. மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். அவர்களை கண்டுகொள்ளாமல் சீரியலில் மூழ்கிக் கிடந்த மாமியாரையும் பார்த்தாள். ஒன்றுமே பேசாமல் சமையல் கட்டிற்க்குள் புகுந்து கொண்டாள்.
தரையில் அமர்ந்திருந்த விக்னேஷ் தவழ்ந்து அண்ணன் அருகில் வந்து காதைக் கடித்தான்.
”உணமையைச் சொல்லு சண்டை தானே..? அண்ணியைத் திட்டினியா..? அவ்வளவு தைரியமெல்லாம் உனக்கு இல்ல… ஆனாலும் என்னமோ நடக்குது” என்றவன் தலையில் தட்டி வாயை மூடு என்றபடி சிறிதுநேரம் தபஸ்வியுடம் விளையாடிக் கொண்டிருந்தவன் கண்கள் சமையல் அறையைத் தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்தது..!
‘இது அவளின் இயல்பில்லை..! ஏதாவது வறுத்துக் கொட்டிக் கொண்டே இருப்பாள்..! சில நேரம் அலுப்பாய் இருக்கும், பலநேரம் அவளுடைய வார்த்தைகள் தான் ஆறுதலாய் இருக்கும்..!
தோசை ஊற்றி வெங்காயச் சட்னியும், தேங்காய்த் துவையலும் செய்து வைத்தாள். அத்தனை பேரும் சாப்பிட்டு முடிக்க, தபஸ்வியை உண்ணவைத்து விட்டு அடுக்களையை ஒளித்துவிட்டு, படுக்கைக்கு வரும்போது மணி பத்தைக் கடந்து இருந்தது.
குழந்தை உறங்கி இருந்தது. லேப்டாப்பில் மூழ்கி இருந்தான். பொதுமையாய் அவனைப் பார்த்து சிரித்தவள், ஐந்து நிமிடம் படுக்கையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தவள், குழந்தையின் நெற்றி முடியை ஒதுக்கி அதன் உச்சியில் முத்தம் பொதித்தவள், அதன் மறுபுறத்தில் திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவள் முதுகையே வெறித்துக் கொண்டு இருந்தவன், நாசியில் இருந்து நீண்ட நெடும் பெருமூச்சு புறப்பட்டு வந்தது..!
‘’வானதி, எனிதிங் ப்ராபளம்..? ‘’ தவிப்பான குரலில் கேட்டான்.
தலையை மட்டும் திருப்பிப் பார்த்து புருவம் உயர்த்தி அழகாய்ச் சிரித்தாள்
‘’என்னவாம் இப்போ..? பேசாத பேசாதன்னு திட்றது..! கொஞ்சநேரம் பேசாம இருந்தா, என்னாச்சுன்னு கேட்டுக் கேட்டே உயிர் எடுக்கிறது..! ஒண்ணுல்ல மிஸ்டர்..! நீங்க தூங்குங்க. நான் நல்லாத்தான் இருக்கேன்.” அலுத்துக்கொண்டே திரும்பி படுத்துக் கொண்டாள்.
நந்தா சின்னதாய்ச் சிரித்துக் கொண்டான். அவளை அளவெடுக்கும் கருவியே ஆண்டவன் படைக்கவில்லை. பத்து நிமிடத்தில் வேலையை முடித்துக்கொண்டு படுக்கையில் சரிந்தவன் மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்து போனான்..! சீரான இடைவெளியில் வந்த தடிமனான மூச்சு அவனின் ஆழ்ந்த உறக்கத்தைச் சொன்னது..! ஆனால் வானதியின் முதுகோ மெல்ல குலுங்கிக் கொண்டு இருந்தது.
புடவையைச் சுருட்டி விம்மி வெடித்த அழுகையை தொண்டைக்குள் மென்று விழுங்கிக் கொண்டு இருந்தாள் வானதி.
”...நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்...
நேற்று முதல் ஒர் நினைவு தந்தாய்...
நினைவு தராமல் நீ இருந்தால்,
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்..."
2
பூ மலர்வது போல வானம் பொல பொலக்கத் தொடங்கி இருந்தது. இன்னும் உறக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல் படுக்கையிலே இருந்தாள் சந்தியா.
தாறுமாறாய் போயிருந்த உடைகளை திருத்திக் கொள்ளாத சோம்பேறித்தனத்தை வளர்த்து இருந்தது தனியான படுக்கையறை..! இன்று ஞாயிற்றுக்கிழமை..! நிலைமையை அறிந்து சூரியன் தாமதித்து உதித்திருந்தால் என்ன என்ற அலுப்பு அவளுக்கு எட்டிப் பார்த்தது.
”தாயம்மா...” படுக்கையில் குப்புறக் கிடந்தபடி குரல் தந்தாள். மூன்றாவது சத்தத்திற்கு தாயம்மா உள்ளே எட்டிப் பார்த்தார்.
‘’கூப்பிட்டியா பாப்பா..? என்ன வேணும்..? மசாஜ் பண்ணி விடட்டா..? இல்ல குளிக்கப் போறியா..? பூரிக்கு பிசஞ்சு வச்சிருக்கேன், போடட்டா...” வாய் ஓயாமல் கேள்வியாய் வந்தது. அலுப்பாய் தலையை நிமிர்த்தி பார்த்தாள்.
‘’தாயம்மா.., கொஞ்சம் வாய் ஓயம்மா. என்ன சத்தத்தையே காணோம்னு கேட்டேன். எனக்கு சாப்பாடு வேணாம் இப்போ. நீங்க சாப்பிடுங்க. நான் ஓரேடியா மதியம் சாப்பிடுக்கறேன்.
எனக்கு தூக்கம் தூக்கமா வருது” மீண்டும் புரண்டு கட்டிலில் முகம் பொதித்து தலையணையை முகத்தில் அணைக்கட்டிக் கொண்டாள்.
‘’நீ சாப்பிடாம எனக்கெதுக்காம்..! நான் போய் இன்னொரு காப்பியை குடிச்சுக்கறேன்..! நேத்து செஞ்ச கேசரி இருக்கு. பரோட்டா ரெண்டை குருமால ஊறவச்சு ப்ரிட்ஜ்ல வச்சுட்டு படுத்தேன். அதை லைட்டா சாப்பிட்டுக்கறேன்..!” தாயம்மா அப்பாவியாய்ச் சொல்ல, முகம் உயர்த்தி கேலியாய்ப் பார்த்தாள் சந்தியா.
‘’ஏது, முக்கால் லிட்டர் காப்பி அதுக்குமேல இத்தனை அயிட்டம் சாப்பிடறதுக்குப் பேர் பட்டினியில்ல தாயம்மா,,, ஃபுல்கட்டு..! போய்ச் சாப்பிடுங்க..! ‘’ சிரித்துக்கொண்டே மீண்டும் தன்னை கட்டிலில் சரித்துக் கொண்டாள்.
தனியார் வங்கியில் உதவி மேலாளராக இருந்தாள். பெற்றவர்கள் இல்லை. கார்டியனாக இருந்த மாமா மலேசியாவில்..! வேலை கிடைத்ததும் தூரத்துக்கே தூரமான உறவினரான தாயம்மாவை அழைத்துக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொண்டாள். சுதந்திரமான வாழ்க்கை ஆனால் எல்லைகளை தாண்டாத சுதந்திரத்தால் எள்ளளவும் பாதிப்பில்லை..!
தன்னைத் தானே சுமப்பது இன்னும் அலுத்துப் போகாததுதான், துணை தேடிக் கொள்ளவில்லை என்பது ஒருவகையில் நிஜமாக இருந்தாலும், அந்த திருமணத்திற்கான அத்தனை காரியங்களையும் ஒருத்தியே ஆற்றவேண்டும் என்ற சோம்பேறித் தனத்தால் எதையும் யோசிக்காமல் அமைதியாக இருந்தாள்.
ஒரு எல்லைக்கு மேல் தனிமை கசந்து போகிறது. குறை சொல்லவும், குற்றம் சுமத்தவும், கேள்வி கேட்கவும், ஆளுமை செய்யவும் ஒரு துணையைத் தேடுகிறது. இந்த கூற்று இயல்பானவர்களுக்கு விசித்திரமாக இருக்கலாம் இயல்பில்லாத மனிதர்கள் மட்டுமே அறிவார்கள் இந்த கூற்றில் வழிந்து ததும்பும் ஆற்றாமையை. ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு அத்தியாவசியம் அன்பு செய்யவோ, பொழுதை விரட்டவோ… இல்லை விரக்தியில்லாமல் வாழ்வை விரட்டவோ அது அவரவர் வாழ்க்கையின் படிமநிலையைப் பொறுத்தது..!
தலையைணையை முகத்திற்கு அணையாக்கிக் கொண்டு படுத்திருந்தாள் சந்தியா. அலைபேசி சிணுங்கி அவளை எழுப்பி விட்டது. இன்னும் சோம்பல் முழுசாய் விலகி இருக்காத நிலையில் எண்களை பார்த்துவிட்டு எடுத்துக் கொண்டுசாய்ந்து அமர்ந்தாள்.
‘’இன்னும் தூக்கமா..?” அதட்டலாய் வந்த குரலில் தலையை களைத்துக் கொண்டு சிரித்தாள்.
‘’வேறென்ன பண்ணச் சொல்ற நந்தா..? ஓண்டிக்கட்டை..! உன்னை மாதிரி குடும்பஸ்தனா..? காலாகாலத்துல எழுந்து உட்கார்ந்திருக்க..?” சொல்லிவிட்டு பெருசாய் சிரித்தாள்.
”உன்னை யாரு அப்படி இருக்கச் சொன்னது..? நீதான் அழிச்சாட்டியம் பணற..?”
‘’ஓய், காலங்காத்தால எனக்கு எதுக்கு கால் பண்ணே..? இப்படி திட்டிக் கொட்டவா..? போனை வை முதல்ல..!”
‘’மணியை கொஞ்சம் நிமிர்ந்து பாரு, காலங்காத்தால மண்ணாங்கட்டின்னு..! இன்னைக்கு காலையிலயே இங்கே வர்றதா சொல்லி இருக்க..! நியாபகம் இருக்கா..? உனக்காக வெயிட் பண்ணி பார்த்துட்டு இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சோம்..! இடியாப்பம் வெஜ் குருமா...” பேரைச் சொன்னதும் கட்டிலில் துள்ளி எழுந்தமர்ந்தாள்.
‘’அய்யோ மிஸ் பண்ணிட்டனா..? எனக்கு ரெண்டு எடுத்து வச்சிருக்காளா உன் பொண்டாட்டி..? போனை அவகிட்டக் கொடு.”
‘’அவ வேலையா இருப்பா..! பின் குறிப்பு அவ உன்மேல கோபமா இருக்கா..! நான் காலை கட் பண்றேன்.”
‘’நந்தா... நந்தா... ஒரு நிமிசம்..! அரைமணி நேரத்துல அங்கே இருப்பேன்..! வானதிகிட்ட சொல்லிடு.” இணைப்பைத் துண்டித்து விட்டு கட்டிலில் துள்ளி எழுந்தமர்ந்தாள். மனசு லேசானது போல் இருந்தது. உலகத்தில் ஆயிரம் விசயம் இருந்தாலும், அவளுக்கு உலகமான விசயம் இந்த வாத்சல்யமான அன்பு மட்டும் தான்..!
வேகமாய் குளித்து தயாராகி காருக்கு வந்தாள்..! தாயம்மா அவளை முறைத்துப் பார்க்க, தாஜா செய்து கன்னத்தில் முத்தம் விதைத்துவிட்டு அவள் நகர, தாயம்மாவிற்கு பெருமூச்சு வந்தது..! இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப்பெண் தனியாகவே இருக்க’ என்ற கேள்வி மனசுக்குள் வந்து மோதிப்போனது..!
விடுமுறை நாளில் போக்குவரத்து தூங்கி வழிந்துகொண்டு இருந்தது..! நறுவிசான சாலைகளில் பதவிசாய் கார் வழுக்க, கே. கே. நகருக்கு வந்துசேர முழுசாய் பதினைந்து நிமிடங்கள் கையை விட்டுப் போய் இருந்தது..!
உள்ளே ஓடி வந்தவளை துள்ளி வந்து கட்டிக்கொண்டாள் வீணா..! அந்த இடமே வண்ணம் பூசிக்கொண்டது..!
‘’உய் பாப்பா.” என்றபடி தபஸ்வியை தூக்கி தட்டாமாலை சுற்றினாள்..!
‘’வாடிச் செல்லம் நீயாவது வந்தியே..! ‘’ கல்பனா அவளை எதிர்கொண்டு அழைத்துக் கொண்டு வர, மனசு முழுக்க சந்தோசம் பூத்துக் குலுங்கியது..!
விக்கியும் வீணாவும் ஆளுக்கொரு பக்கமாய் வந்து உட்கார்ந்து கொள்ள, அவர்கள் அடித்த லூட்டியை கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் நந்தா..!
சந்தியா இருக்கின்ற இடத்தில் கூட்டுப்புழுக்கள் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் வண்ணத்துப்பூச்சியாக விடும்..! ஆயிரம் பூக்கள் சேர்ந்து அழகாய் சரம் தொடுத்த மாலை அவள் அதுவும் வாடாத வசந்தமாலை..!
‘’நந்தா, எங்கே உன் பொண்டாட்டி..? ஆளையே காணோம் நான் வந்தது பிடிக்காம உள்ளேயே படுத்து இருக்காளா..?” எட்டிப் பார்த்து சத்தம் போட்டாள்.
‘’இப்பத்தான் வேலையெல்லாம் முடிச்சிட்டு மாடிக்குப் ப்ரெஸ்ஸாகப் போனா சந்தியா” என்றான்.
அவனுக்கு பதில் சொல்லாமல் மாடிக்கு சென்றவள், அறைக்கதவை திறந்து உள்ளே சென்றாள். அழகான நேர்த்தியான அறை பால்கனி கதவுகள் திறந்திருக்க, அங்கே கிடந்த பிரம்பு நாற்காலியில் தன்னை சுறுக்கிக் கொண்டு எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சந்தியா கதவைத் திறந்துகொண்டு வந்ததுகூட அவளுடைய கவனம் களைக்கவில்லை.!
பக்கவாட்டில் தெரிந்த அவளுடைய வாடாத கன்னத்தைப் பார்த்தாள் ஓரத்தில் இருந்த கருமணியில் கலக்கம் தெரிந்தது அதற்கான விளக்கம் தான் புரியவில்லை..! பின்னால் சென்று தோளில் முகம் புதைத்து, கன்னத்தோடு
கன்னம் இழையவிட திரும்பிப் பார்த்தவள் கண்கள் நொடிக்கு முன் இருந்த நிலைமாறி இயல்பானது..!
பட்டென்று சந்தியாவின் கன்னத்தில் அறைந்தாள்.
‘’ஏன்டி என்னை அடிக்கிறே..?”
‘’நொடிக்காம என்ன செய்யச் சொல்ற..? காலையிலயே வர்றேன்னு சொன்னது இந்த வாய்தானே..?” சந்தியாவின் உதட்டை பற்றித் திருகி தெறிக்கவிட, அவள் வலியில் அலறியே விட்டாள்..!
‘’ராட்சஷி, உன் புருசன்கிட்ட காட்டவேண்டிய அராத்து எல்லாத்தையும் என்கிட்ட காட்டிறியா..? அதுசரி இங்கேயேன் வந்து தனியா உட்கார்ந்து இருக்கடி..! கீழே எல்லாரும் செம ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க”
‘’இப்பத்தான் வந்தேன் சந்தியா, வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்தேன். கொஞ்சம் தனியா இருந்தா நல்லா இருக்கும் போல இருந்தது” என்றவளின் கண்களை வேதனையாய் கூர்ந்து பார்த்தாள்.
‘’தனியா இருந்தா உனக்கு நல்லாயிருக்கு. எனக்கு தனிமையை நினைச்சா பயமா இருக்கு..!” உணர்ந்து வந்த வார்த்தைகள் இருவருக்குள்ளும் உணர்வு போராட்டத்துக்கு வழிவகுக்க, நொடியில் தன்னுடைய குறும்பைத் தத்தெடுத்தாள் வானதி.
‘’இரு நந்தாகிட்ட இந்த வார்த்தையைச் சொல்றேன்… ஒரே மாசத்தில உன்னை குடும்பி ஆக்கிடுவாரு..! ‘’ எழுந்து ஓடப் போனவளை கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள்.
‘’அதெல்லாம் நாங்க நொந்தாகிட்ட சொல்லிக்கிறோம்.நீங்க ஒண்ணும் சொல்லத் தேவையில்லை. அதுசரி இடியாப்பம் எடுத்து வச்சிருக்கியா டி..! வச்சிருப்பேன்னு நட்பு உள்ளம் சொல்லுது” அவள் தோளில் கைபோட்டுக் கொண்டே நடக்க, இருவரும் கீழே வந்தார்கள்.
வெஜிடேபிள் புலாவ், சிக்கன் ஸ்டூ, இடியாப்பம், குருமா,! சந்தியா சப்புக்கொட்டிக் கொண்டாள்.
எந்தக் கூச்சமும் இல்லாமல் எடுத்துக் கொண்டு டி.வி பார்த்துக் கொண்டு இருந்த கல்பனாவின் அருகில் வந்து அமர்ந்துகொள்ள, கல்பனாவின் முகம் வெள்ளித்தட்டாய் மினுக்கிக் கொண்டது..!
”வாடி ராசாத்தி..! நீதான்டி எனக்கு சரி ஜோடி..!” இழுத்து பக்கத்தில் சந்தியாவை இருத்தாட்டிக் கொண்டார்.
”ரெண்டு நாளா செம்பருத்தி சீரியல் பார்க்கல ஆன்ட்டி என்னாச்சு சொல்லுங்க..! எனக்கென்னவோ இருக்கிறதுல பாக்கியலட்சுமி தான் ஹிட்டாக்கும் போல இருக்கு..! நல்லா இருக்கு ஆன்ட்டி. ட்ரை பண்ணிப் பாருங்க.!” என்றாள் இடியாப்பத்தை பிய்த்து வாயில் அதக்கிக் கொண்டே.
‘’கோமதி ஃபோன் பண்ணப்ப கூட சொன்னா..! ஆனால் அந்த நேரத்துல சன்’னுல வேற சீரியல் பார்த்துட்டு இருக்கனே. என்ன பண்றது..?” கல்பனாவின் முகத்தில் கவலை வந்து ஓட்டிக் கொள்ள, சந்தியா நிதானமாய் மென்று முழுங்கியபடி சொன்னாள்.
‘’ஹாட் ஸ்டார் இருக்கு ஆன்ட்டி நான் டவுன்லோட் பண்றேன். நீங்க பொறுமையாக் கூட பார்க்கலாம்..!” என்றவளை கன்னம் வழித்து நெட்டி முறித்தார் கல்பனா..!
‘’என் ராசாத்தி நீ மட்டும் என் பக்கத்துல இருந்திருந்தா எனக்கு எப்படி இருந்திருக்கும் ஜாலியா..! ரெண்டு பேரும்
சேர்ந்து எத்தனை சீரியல் பார்த்து இருக்கலாம்..! என்னால இந்த வீட்டில வாயாற நான் பார்த்த சீரியலை பேச முடியல… நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டனே நீயே நந்தாவைக் கட்டிக’னு கேட்டியா..?” கல்பனா புலம்ப, சட்டென்று நந்தாவின் முகம் மாறியது. மெல்லிய கடுமை ஏற வானதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவளோ தன்னுடைய அக்மார்க் சிரிப்பை உதிர்த்துவிடாமல் தபஸ்விக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தாள்.
‘’மா, போதும் விளையாட்டு..! ‘’ என்றான் அழுத்தமாக. அவனைத் திரும்பிப் பார்த்த சந்தியா அழகாய்ச் சிரித்தாள்.
‘’என்ன நந்தா பயமா இருக்கா..? உன் பொண்டாட்டி பக்கத்துல நிக்கிறான்னு” சந்தியா கண்ணடித்துச் சிரிக்க, இப்போது நந்தாவின் முகம் இன்னும் இருள் பூசியது..! வார்த்தைகள் விகல்பம் இல்லாமல் தான் வருகிறது..! ஆனால் விதிமீறி நடக்கும் விளையாட்டு அவன் விதியோடு விளையாடும் விளையாட்டாகப் போகுமோ, என்ற கவலை அவனை இயல்பாய் வருத்திக்கொண்டு இருந்தது..!
‘’ஒரு மண்ணாங்கட்டி பயமுமில்லை. அம்மா கூட சேர்ந்து டி.வி. பார்க்கணும்னா நீ அந்தம்மாவைக் கல்யாணம் பண்ணிக்க..! நந்தாவைக் கல்யாணம் பண்ணிக்க பேசிக்கா ஒரு குவாலிட்டி வேணும்… நீ பொண்ணா இருக்கணும்..! இப்படி ஆம்பளை மாதிரி சுத்தக்கூடாது” சந்தியாவின் பக்கத்தில் வந்து, எந்த வருத்தமும் இல்லாமல் தோள்மேல் கைபோட்டு அந்தச் சூழ்நிலையை வழக்கம்போல் தன்வசமாக்கிக் கொண்டாள் வானதி.
முறைப்பும் சிரிப்புமாய் அந்த பொழுதுகள் இனிப்பாய் நகர்ந்தது. வெல்லம் கொட்டிய நிமிசங்கள் சந்தியாவிற்கு பொழுது நகரவில்லை பறந்து கடந்தது. மாலையில் குழந்தையை அழைத்துக் கொண்டு பீச்சிற்கு கிளம்பிப் போனார்கள்.
தபஸ்வியை தோளில் கிடத்திக்கொண்டு தோழிகளுக்கு நட்பாட இடம் தந்துவிட்டு பின்னால் ஒதுங்கி நகர்ந்தான். கடற்கரை மணலில் கால்கள் புதைந்து போகாமல் பிடுங்கி பிடுங்கி, நட்டுக்கொண்டு இருந்தார்கள்..!
அங்கே விற்பனையான பண்டங்களில் எல்லாம் மணல் முத்திரை குத்தி இருந்தது..! காற்றுகூட கணம்கூடி நசநசத்துக் கொண்டிருக்க, கொஞ்சமாய் ஒருக்களித்திருந்த படகிற்கு அருகில் அமர்ந்து கொண்டார்கள்..!
செஞ் சூரியன் கடலுக்குள் ஒளியத் தொடங்கி இருக்க, மனிதர்கள் அடையாளங்களை களைந்து எறிந்துவிட்டு ஆங்காங்கே திட்டுத் திட்டாய் அப்பிகொண்டு இருந்தார்கள்..!
அலையோடு விளையாட தபஸ்வி அடம்பிடிக்க குழந்தையை தூக்கிக் கொண்டு அலையை நோக்கி நகர்ந்தாள் வானதி. நுரைக்க நுரைக்க பொங்கிக்கொண்டு வந்த அலைகளை அள்ளி இறைத்து உள்ளங்கையில் பொத்திக் கொண்டு மழலையாய்ச் சிரித்தாள் தபஸ்வி.
யோசிக்க நிமிசத்தை வழங்காமல் அலை சதிராடிக் கொண்டு இருந்தது… எப்போது அலை அடங்கும்..? சின்னப் பெருமூச்சு வந்தது வானதிக்கு… குழந்தையை கைகளில் பற்றிக்கொண்டு அலையோடு எதிராடத் தொடங்கி இருந்தாள், வாழ்க்கையைப் போலவே..!
கால்களை நீட்டிக்கொண்டு கைகளை பின்னால் ஊன்றிக்கொண்டு அவர்களை வேடிக்கை பார்க்கத தொடங்கி இருந்தான் நந்தா..! சற்றுத் தள்ளி சிப்பி பொறுக்கிக் கொண்டு இருந்த சந்தியாவின் பார்வை சில நிமிடங்கள் வானதியின் மீதே நிலைத்தது..!
‘’ நந்தா”
‘’ சொல்லு சந்தியா..! மீன் பஜ்ஜி வேணுமா..?”
‘’ப்ச்..! அதில்லை. வானதிக்கு என்ன ஆச்சு..? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா..?” சந்தியாவின் கேள்வியில் அவனுடைய தமனிகளில் தந்துகிகள் மீள, இருட்டில் சந்தியாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, அவள் கண்களை அடையாளம் காண முயன்று தோற்றுக் கொண்டு இருந்தான்..!
‘’சே..! அப்படில்லாம் எதுவுமில்லை சந்தியா. நீயா கற்பனை பண்ணிக்காதே..! அவ அதே வானதி தான் ” சமாதானமாய்ச் சொல்ல, பலமாய் தலையசைத்து ஆட்சேபித்தாள்..!
‘’நோ..! அவ இயல்பா இல்ல..! நடிக்கிறா..! அவ சந்தோசமா இல்ல நந்தா. கொஞ்சம் அவமேல கேர் எடுத்துக்கோ. கடவுள் உனக்கு அனுப்பின சந்தோசத்தை கொண்டு வந்து சேர்க்கிற முகவர் அவள்..! உன் வலியெல்லாம் அவ வாங்கிட்டா நந்தா. ஆனால் அவளுக்கும் வலிக்கும்னு வெளிப்படுத்திக்காமயே வாழ்ந்துட்டு இருக்கா..! இந்த ஊமை நாடகம் எல்லாரும் சேர்ந்து தான் போட்டுட்டு இருக்கோம்..! ‘’ அலைகளில் அலைந்து ஈரம் அப்பியிருந்த கைகளை உதறிக் கொண்டாள்.
இன்னும்கூட மணல்துகள்கள் அவள் கைகளில் மருதாணி போட்டுக் கொண்டு இருந்தது..! நந்தா கண்களை கடலுக்குள் விதைத்து விட்டு வெள்ளாமைக்கு காத்திருந்தான்..!
வெளிச்சம் குறைய குறைய கொசுக்களின் குத்தாட்டம் தொடங்கி இருந்தது..! அத்தனை காற்றுக்கு நடுவிலும் கொசுக்கள் காதுகளுக்குள் ரீங்காரம் போடத்தொடங்கி இருந்தன..!
”வானதி...” அலையை மீறி அவன் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.
‘கிளம்பலாம்..’ சைகை செய்தான். குழந்தையை அள்ளிக்கொண்டு அருகில் வந்தவளை ஆராய்ந்து கொண்டே இருந்தான். பாவனைகள் பேசும் அவளுடைய முகத்தின் தோரணையைப் பார்த்து அவனால் யூகிக்க முடியவில்லை சந்தியா சொல்வதில் என்ன நிஜம் இருக்கிறது என்று..!
இருளைக் கிழித்துக் கொண்டு மூவரும் நடந்தார்கள். குழந்தையை தூக்கிக் கொண்டு நடக்க சின்னதாய் சிரமப்பட்டாள். கைநீட்டி வாங்கிக் கொண்டான்.
”ஆன்டிக்கிட்டயும் வீணாகிட்டயும் சொல்லிடுங்க..! நான் அடுத்தவாரம் வர்றேன். இப்போ இப்படியே வீட்டுக்கு கிளம்பறேன்” மணிக்கட்டை திருப்பிப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
”எட்டு தானே ஆகுது..! வீட்டுக்கு வந்துட்டு போ சந்தியா”’ என்றாள் வானதி.
”வரலாம் தான்,,! ஆனா வீட்டில தாயம்மா பாவம் இல்லையா..? காலையில இருந்து வெட்டு வெட்டுன்னு தனியா உட்கார்ந்துட்டு இருப்பாங்க..! நான் அடுத்தமுறை அவங்களோட வர்றேன்” சொல்லிவிட்டு தபஸ்வியின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு வானதியின் கன்னத்தை மெல்லத் தடவ, குசும்பாய் பார்த்தாள்.
‘’என்னவாம் இன்னைக்கு திடீர்னு தாயம்மா மேல காதல் வந்திருக்கு..! ராத்திரி ஒன்பது மணி ஆச்சுன்னு கழுத்தைப் பிடிச்சு தள்ளினாலும் போக மாட்டியே இன்னைக்கு திடீர்னு தாயம்மா, எனக்கு அவங்க தான் தாய் அம்மான்னு டயலாக் எல்லாம் விடுற” வானதி கேட்டுவிட்டு புருவம் உயர்த்தி சிரிக்க, அவள் முகத்தையே ஒருநொடி பரிவாய்ப் பார்த்தாள்.
‘’ ம்..! வாஸ்தவம் தான் வானு..! ஆனால் யோச்சிச்சுப் பாரேன். ஒரு மனிதருக்கு சவுகரியங்களை செய்து தர்றது மட்டும் நல்ல வாழ்க்கைக்கான அடையாளமா இருக்கவே முடியாது..! மனித வாழ்க்கையை சாப்பாடு மட்டும் திருப்தியாக்கும்னு நான் நம்பல மனசோடு கூப்பாட்டுக்கு செவி சாய்க்கணும்..! ‘’ சொல்லிவிட்டு நந்தாவை நிமிர்ந்து பார்க்க, அவன் அந்த பார்வைக்கு பதில் சொல்ல விரும்பாமல் குழந்தையோடு காரை நோக்கி நடந்து கொண்டு இருந்தான்..!
சந்தியா கையசைத்து விட்டு தன்னுடைய காரில் ஏறிக் கொண்டு நகர, தூங்கிவிட்டு இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு வானதி ஏறிக் கொண்டாள்.
கார் சீரான வேகத்தில் இருந்தது. அரவம் இல்லாத சாலைகளை பார்க்க சுவாரஸ்யமாக இல்லை..! வெற்று வெளிச்சத்தை ரசிக்காமல் இருளில் இவர்களோடு ஓடி வந்து கொண்டிருந்த கடலின் மிச்சத்தை இன்னும் ஆசையாக பார்த்தபடியே வந்தாள்.
‘’வானதி.”
‘’ ம்...”
”ஆர் யூ ஒ.கே..? ‘’ குரலில் ஐயத்தோடு கேட்டவனை கண்கள் குறுக்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தாள்.
‘’என்ன திடீர்னு..? ‘’
‘’தோணுது வானதி. சந்தியாவும் அதையே கேட்கும்போது எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு..! ஆர் யூ ஒ.கே..!” என்றான்.குறும்பும் கேலியுமாய் அவனைப் பார்த்தாள்.
‘’இணக்கம்னா என்ன..? எப்பவும் சண்டை போட்டுட்டே இருக்கறதா..? நமக்குத்தான் அந்தப் பழக்கமே இல்லையே நந்தா..! நாம இப்படித்தான எப்பவும்” குழந்தையின் தலையை வருடித் தந்தாள். அதனை நெஞ்சோடு சேர்த்திருந்த கைகள் இன்னும்இன்னும் குழந்தையை இணக்கமாய் தன்னோடு சேர்த்துக்
கொண்டது..!
”நீ எதுக்கோ ஏங்கற மாதிரி மத்தவங்களுக்குத் தோணுது.” ஸ்டீயரிங்கில் கைகளை பதித்துக் கொண்டு பார்வையைத் திருப்பாமல் கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் இகழ்வை இதழ்களில் மறைத்துக் கொண்டு கேட்டாள்..!
‘’மத்தவங்களுக்கு தெரியுது..! உங்களுக்குத் தெரியல.நந்தா நமக்காகத்தானே வாழறோம்..? மத்தவங்க கருத்து இப்பயென்ன புதுசா நடுவில வந்து நர்த்தனம் ஆடுது..! இப்போ எனக்கு ஐஸ்க்ரீம் வேணும் நந்தா” என்றாள் சாலையை பார்த்துக் கொண்டே..!
அவன் திருப்பிப் பார்த்து சிரித்துக்கொண்டே பார்லரை நோக்கி வண்டியை நகர்த்தி நிறுத்தினான்.
" ...பூக்களில் உன்னால் சத்தம்,
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்,,,
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...
ஒரு பொய்யாவது சொல் கண்ணே...
உன் காதம் நான் தான் என்று...
அந்தச் சொல்லில் உயிர் வாழ்வேன்..."
3
துணிகளை ட்ரையரில் போட்டு குதிக்கவிட்டு விட்டு, ஓரமாய் உலர்ந்த துணிகளை எடுத்து மடித்து வைக்க ஆரம்பித்திருந்தாள் வானதி..! நந்தா இன்று விடுப்பில் இருந்தான்..! குழந்தையை மடியில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே ப்ரன்ச் விண்டோவின் முன்னாக அமர்ந்து, மொபைலில் மூழ்கி இருந்தான்..!
வானதியின் அலைபேசி அலறிக்கொண்டே இருந்தது..! எட்டிப் பார்த்தான். வானதி தன்னுடைய வேலைகளில் மூழ்கிக் கிடந்தாள்.
‘’வானு...” உள்பக்கம் திரும்பி குரல் கொடுத்தான்..! உதடு குவித்து வியப்புக் காட்டிக்கொண்டே முந்தானையில் கைகளைத் துடைத்துக் கொண்டே வந்தவள் அலைபேசியை எடுத்தாள்.
” சொல்லுங்கம்மா... நான் நல்லா இருக்கேன்..! நீங்க..?’
” .........”
‘’எல்லாரும் நல்லா இருக்காங்க..! வீட்டில தான் இருக்காரு. இன்னைக்கு லீவு போட்டுருக்காரு.”
‘’.......”
‘’இப்படியெல்லாம் கேள்வி கேட்டாத்தான் எனக்கு கோபம் வரும். அவர் எதுக்கு லீவு போட்டார்னு எனக்கு என்ன தெரியுமாம்..?”
‘’.....”
‘’நான் கேட்கவும் மாடேன் அவர் சொல்லவும் மாட்டாரு..!”
‘’......”
‘’சந்தியா கிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமா..?” என்றபோது மட்டும் நந்தாவைப் பார்த்து தலைசாய்த்து சிரிக்க, அந்த சிரிப்பில் அவன் ஒரு கணம் தடுமாறித்தான் போனான்.
‘’.......”
‘’என்ன பண்ணிடுவா..? சந்தியா, என்னை மாதிரியில்ல. ரெம்ப புத்திசாலி..! இவருக்காக எல்லாம் ஒரு பிறவியை வேஸ்ட் பண்ண மாட்டா..! இதென்னமா இவரை எப்பபாரு பாதுகாத்து வைக்கச் சொல்லிட்டே இருக்கே..! அவ்வளவு எல்லாம் வொர்த் இல்லமா உன் மருமக புள்ளை.”
டீபாயின் மேலிருந்த மேகசினை எடுத்து அவள் மீது அடித்துவிட்டு முறைக்க அடுத்த பத்துநிமிடம் அளவளால் முடிந்தபிறகு அதே பார்வையோடு அவனைப் பார்த்தாள்.
‘’என்ன கொழுப்பா..?”
‘’நான் கேட்கணும் அதை..! டிரையர்ல போட்டுட்டு வந்தேன். இந்நேரம் அது குதிச்சு முடிஞ்சிருக்கும்..! போய் துணிகளை பிழிஞ்சு காயப்போட்டா என்னவாம்..? ‘’
‘’பேச்சை மாத்தாத வானு..! என்னபத்தி என்ன மட்டம் தட்டிட்டு இருந்தே அம்மாகிட்ட..!” குழந்தையின் தலையை கோதிக் களைந்து கொண்டே கேட்டான்.
‘’பின்னே..! எப்பப்பாரு உங்களை பாதுகாக்கிற பாடிகார்டு வேலையைச் செய்யச் சொல்லிட்டு..! எனக்கு அந்த உத்யோகத்துல நம்பிக்கையே இல்ல நந்தா. கட்டுப்பட்டு நிக்கிறது காதலால இருக்கணும். கட்டிவைக்கிறது அவங்களுக்குள்ல இருக்கிற தாம்பத்யத்தால இருக்கணும்..! நமக்குள்ளதான்” என்றவள் சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.
ஒரு அசௌகரியமான மௌனம் அவர்கள் நடுவில் பாய்விரித்துக் கொள்ள, சட்டென்று தன்னை மீட்டெடுத்துக் கொண்ட வானதி வழக்கம் போல் தன்னுடைய முகத்தில் சிரிப்பை விளைவித்துக் கொண்டாள்.
‘’தபுக்கு, இன்னைக்கு வாக்ஸினேசன் போடப் போகணும். நினைவில இருக்குதானே..! நான் லன்ச்க்கு ரெடி பண்ணிட்டு வந்திடறேன்..! ‘’
‘’நில்லு வானதி..! ஹாஸ்பிடல் போயிட்டு அப்படியே ஹோட்டல் போயிட்டு வந்துடலாம். வரும்போது அம்மாக்கு பார்சல் வாங்கிக்கலாம். வீணாவும் விக்கியும் காலேஜ் போயாச்சு இல்லயா..? ‘’ என்றபடி குளியலறைக்குள் செல்ல, கீழே இறங்கி வந்தாள்.
உலக அதிசயமாக டி.வி ஆஃபில் இருந்தது. கன்னத்தில் கைவைத்துக் கொண்டு இருந்த கல்பனாவின் அருகில் சென்று அதேபோல் அமர்ந்து வம்பிற்கு இழுத்தாள்.
‘’என்னவாம்..? என் கல்பு, இப்படி ஜோகமா உட்கார்ந்து இருக்கு..! இந்நேரம் பாலபிஷேகம் சீரியல்ல பார்த்துட்டு இருக்கும் என் கல்பு” மாமியாரின் தோள்களை கட்டிக் கொள்ள, சுள்ளென்று முகத்தை வைத்துக்கொண்டு அவள் கைகளைத் தட்டிவிட்டார்.
‘’பேசாம போயிடு..! என்னை வம்புக்கு இழுத்த நான் சும்மா இருக்க மாட்டேன்..!”
‘’அட..! நான் நல்லா பேசினாக்கூட வம்புன்னு நினைச்சா எப்படி..? என்னாச்சு என் செல்ல அத்தமாக்கு..? டி.வி. கெட்டுப் போச்சா..?”
‘’அதெல்லாம் இல்ல..! இன்னைக்கு எபிசோட்ல ஹீரோயின் செத்து போயிட்டாடி..! என்னால பார்க்க முடியல. ஏதேதோ நியாபகம் வருது” சட்டென்று குரல் இடற. வானதி வேகமாய் சுதாரித்தாள்.
‘’ம்ம்ம்..! இதுக்குத்தான் இந்த பாடாவதி சீரியல்லாம் பார்க்க வேணாம்னு சொல்றது அத்தை..! சரி நானும் அவரும் வெளியே போறோம். நீங்க வர்றீங்களா.? தபுக்கு தடுப்பு ஊசி போடணும் இல்ல..! ‘’ மெல்ல கைகளைப் பற்றிக்கொண்டு அவள் கேட்க, அந்தக் கண்களில் வழிந்த பேரன்பில் அம்முதிய பெண்ணின் கர்ப்பக்குலையே ஈரம் சொறிந்தது.
”வேணாம்டா, நீங்க போயிட்டு வாங்க..! ‘’
‘’அப்புறம் நாங்க போனபிறகு எதையாவது நினைச்சு அழுதுட்டு இருக்கக் கூடாது அத்தை..! பேசாம வாங்க..!”
‘’இல்ல வானதி..! நான் எதையும் யோசிக்க மாட்டேன். நீ கிளம்பு, நீங்களே எப்பவாச்சும் தான் இப்படி வெளியே போறது” மெல்ல அவள் கன்னத்தைத் தட்டிச் சொல்ல, எழுந்து போனவள் ஐந்தாவது நிமிடம் காப்பியோடு வந்து நின்றாள்.
‘’இதை குடிங்க..! நான் இல்லாதப்போ கேசை பத்த வைக்கிறேன்னு களேபரம் பண்ணிட்டு இருக்ககூடாது..! நான் உங்களுக்கு ப்ரைட் ரைஸ் வாங்கிட்டு வர்றேன்’ சொல்லிவிட்டு குழந்தையாய் துள்ளி ஓடினாள்..!
வழக்கமாக வரும் மருத்துவமனை தான். தடுப்பு ஊசியை தனியாரிலும் பணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம் என்ற விதிமுறைகள் இருந்தது. கல் தோன்றா காலத்தில் இருந்த, அதே பாப்பா விரலை உதட்டில் வைத்து உஷ்ஷிக் கொண்டே இருந்தது படத்தில்..!
இரண்டு வயது முடிந்தும் இன்னும் சிணுங்கலும், செல்லமும் குறைந்தபாடில்லை...! வானதியின் மடியில் அமர்ந்து கோழிமுட்டைக் கண்களை உருட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது பேரழகு தபஸ்வி..!
நர்ஸ் ஃபார்மை கொண்டு வந்து நீட்டினாள்.
‘’அஞ்சு வயசுக்குள்ள மூணு இன்ஜெக்சன் போடணும். எத்தனை போட்டு இருக்கீங்க..?”
‘’இதுவரை எதுவும் போடல..!”
‘’சரிங்க இதுல பாப்பா வயசு டீடெயில் எழுதிக் குடுங்க. தனியா கார்டு தந்துடுவாங்க. ஒவ்வொரு தடவை இன்ஜெக்சன் போட்டதும் எண்ட்ரி போட்டுக்கணும்..! ” அவள் நீட்டி விட்டுப் போன விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டு நந்தா நிரப்ப ஆரம்பித்தான்.
குழந்தையின் பெயர், வயது, பிறந்த தேதி, பெற்றவர்கள் என்று வரிசையாக இருந்தது…! குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டே அவனுடைய கைகள் அங்கே எழுத்து விதைத்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
அப்பாவின் பெயர் நந்தகுமார் மாணிக்கவேல், அம்மா மிருதுளா நந்தகுமார்.
சட்டென்று கண்களை மூடிக்கொண்டாள். இமைக்குள் அலைமோதிய கண்ணீர் தன்னுடைய இயலாமையை காட்டிக் கொடுத்து விடுமோ என்ற அச்சம் அவளை அந்த நிமிசம் ஆட்கொண்டது.
தபஸ்வியை இறுக்கியிருந்த கரங்கள் இன்னுமின்னும் அழுத்தம் கூடியது..! கொட்டிக் கிடந்த அதன் தலைமுடியில் அவள் கைகள் ஆதிக்கம் செலுத்தி அலைபாய்ந்தது. குழந்தையின் தலையில் தன் நாடி பதித்து தனதுடமையாக்கிக் கொள்ள தவித்துக் கொண்டு இருந்தாள்.
அவளுடைய எந்தப் போராட்டமும் அறியாதவன், ஃபார்மை எழுதிக் கொண்டுகவுண்டருக்கு நகர்ந்தான். சரிபார்த்து அதில் சின்ன முத்திரையிட்டு அவர்கள் நீட்ட, வாங்கிக் கொண்டு திரும்பியவன் வானதியை பார்த்ததும் அதிர்ந்து போனான்.
‘’ என்னாச்சு வானதி..? எதுவும் முடியலயா..? ஆர் யூ ஓகே..?” மெல்ல புறங்கையால் அவள் நெற்றியைத் தொட்டுப்பார்க்க விளைய வேகமாய் முகத்தை இழுத்துக் கொண்டாள்.
‘’நான் நல்லாயிருக்கேன் நந்தா..! எதுவுமில்லை..! டாக்டரைப் பார்க்கலாமா..?” என்றாள் வேகமாக. அவளுடைய கண்களை உற்றுப் பார்த்தான். அவனுக்கு, அவளைப் புரியும்..! உள்ளுக்குள் எதையோ வைத்து போராடிக்கொண்டு இருக்கிறாள். ஓரளவு அத்தனையும் யூகிக்க முடிந்தாலும் இந்த நிமிசத்துக்கான வலியை அவனால் இனம் காண இயலவில்லை..!
இருக்கையில் வந்தமர்ந்தான். இவர்களுக்கு அழைப்பு வரும் மட்டுக்கும் காத்திருக்க ஆரம்பித்தார்கள். வழக்கமான கேலியும் குறும்பும் காணாமல் போயிருக்க, வானதி இவர்களைக் கடந்த மனிதர்களில் தனக்கான நிம்மதியைத் தேடிக் கொண்டு இருந்தாள்.
ஊசி போட்டு, குழந்தை அழுது, இடுப்பைத் தேய்த்து விட்டு அரைமணி நேரம் மொத்தமாய் காணாமல் போய் இருந்தது. கண்களால் அவளைத் துளைத்துக் கொண்டே வந்தாலும், விடை தெரிந்தும் இந்த கேள்விக்கான வினாதான் புரியவில்லை..!
ஒரு வார்த்தை கூட மொட்டவிழாத மௌனம் அவளுக்கு ரெம்பவே புதிது..! அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு மேல அவளுடைய எந்த உணர்வும் ஸ்தாபித்துக் கொண்டு இருக்காது..!
ஹோட்டலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தார்கள். மதியநேரத்திலும் மட்டாய்த் தான் கூட்டம் இருந்தது. கூட்டம் குறைவாக இருந்தாலும் இரைச்சலுக்கு குறைவே இல்லை என்று சொல்லும்படி இருந்தது..!
”என்ன சாப்பிடற வானதி” அவள் முகம் பார்த்து கேட்டான்.
‘’எனக்கு பசிக்கல நந்தா..! நீங்க மட்டும் சாப்பிடுங்களேன்..!” என்று தயங்கிக்கொண்டே சொன்னவளை சுள்ளென்று பார்த்தான்.
‘’என்னாச்சு உனக்கு..? இப்போ நல்லாத்தானே கிளம்பி வந்தே..? வரவர உன் சிந்தனைகள் எல்லாம் தப்பு தப்பா யோசிக்குது வானதி..! இப்போ நீ சாப்பிடறியா..? இல்ல கிளம்பிப் போயிடே இருக்கலாமா..?” அடக்கப்பட்ட குரலில் அழுத்தமாகக் கேட்க, மௌனியாகி விட்டாள்.
அவனே ஆர்டர் செய்தான். சாப்பிடச் சொல்லி அதிகாரம் செய்தான். அம்மாவிற்கும் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள். மடியில் உறங்கி இருந்த குழந்தையின் தலையை வருடிக் கொண்டே இன்னும் மௌனம் மென்றுகொண்டு இருந்தாள்.
வீட்டை சமீபிக்கும் போது சொன்னான்.
‘’வானதி..!உன்னை ஒவ்வொரு செகண்டும் சந்தோசமா வச்சுக்கத்தான் நான் ஆசைப்படறேன். ஆனால் என்னன்னு தெரியல நமக்குள்ள இருக்கிற இடைவெளி புரிதல் இல்லாமயே பெருசாகிட்டுப் போகுது.உன்னுடைய முககுறிப்பை புரிஞ்சுக்க முடியற என்னால உன்னுடைய அகத்தின் குறிப்பை புரிஞ்சுக்க முடியாம தடுமாற்றமா இருக்கு..!” அவன் தவிப்பாய்ச் சொன்னான்.
காரை வாசலில் நிறுத்தி இருந்தான். சீட் பெல்ட்டை தளர்த்திக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஒருநொடி இருவரின் கண்களும் ஆலிங்கனம் செய்து மீண்டது.
ஊசி போட்ட வலியில் உறங்கி அவள் மார்பில் ஐக்கியமாகி இருந்த குழந்தையை கைகளில் ஏந்திக் கொண்டாள். முத்தத்தால் அதன் உடலை தித்திக்க வைத்தாள். உறங்கும் குழந்தைக்கு முத்தம் வைக்ககூடாது என்ற மரபுச் சொல்லையும் உடைத்து விசிறி இருந்தாள். நெகிழ்ந்து போய் பார்த்துக்கொண்டே இருந்தான் நந்தா..!
‘’இது என் குழந்தை நந்தா..! பிறந்த மூணு மாசத்துல இருந்து நான் தான் இவளுக்கு எல்லாம்..! இது என் குழந்தை.”சட்டென்று உடைந்து போனவள் அவன் முன்னே அழுதே விடக்கூடாது என்ற வைராக்கியத்தில் குழந்தையோடு அகல, அவனோ விக்கித்துப் போய் அமர்ந்திருந்தான்..!
காரை விட்டு உள்ளே நுழையும் வரைக்கும் தான் அவளின் முகம் வெற்றிலையாய் வதங்கிக் கிடந்தது. உள்ளே போன நிமிசம் முகம் பச்சிலையாய் புத்துணர்வாகிக் கொண்டது..!
வாங்கி வந்திருந்த சாப்பாட்டை தட்டில் மாற்றி கொண்டு வந்து மாமியாருக்கு தந்தாள். தபஸ்வியை அறைக்குள் படுக்க வைத்து விட்டு கீழே வந்தாள். நந்தா இருக்கும் இடத்திற்கே போகவில்லை. அந்த புறக்கணிப்பு அவனை என்னவோ செய்தது..! காதுக்குள் சதாநேரமும் ரீங்காரம் செய்யும் ஒரு பொன்வண்டின் சத்தம் அங்கே இல்லாதது போல் இருந்தது..!
கல்பனா சாப்பிட்டு முடிக்க தட்டெடுத்து அலம்பி வைத்துவிட்டு சோபாவிலேயே படுத்துக் கொள்ள, கவனம் சீரியலில் தான் இருக்கிறது என்றாலும், சட்டென்று திரும்பி மருமகளைப் பார்த்தார் கல்பனா.
‘’ வானு...”
‘’ ம்”
‘’ வானுமா..!”
‘’ நான் தூங்கிட்டேன்...”
‘’ நானும் நம்பிட்டேன்...”
‘’ ....”
‘’எப்பவும் உன் ரூம்ல போய்த்தானே படுத்துகுவ..! இப்பயென்ன இங்கே படுத்திருக்க..? நந்தா மேலதான இருக்கான். நீ போ” மெல்ல தலை வருட, படக்கென கண்களை திறந்து பார்த்தவள், பொய்க் கோபமாய்ச் சொன்னாள்,
‘’இதெல்லாம் ஒரு மாமியார் பேசுற பேச்சா இது.? முதல்ல தூங்குங்க..! எனக்கு இந்த சீரியல் பார்க்கணும் போல இருக்கு.’
‘’யாரு, உனக்கு..? சீரியல்..? நான் நம்பணும்..! வானு என்ன பிரச்சனை ரெண்டு பேருக்கும்..? போகும்போது நல்லாத் தானே போனீங்க..? ”
‘’ஒண்ணும் பிரச்சனையில்ல அத்தை..! இப்பவும் நல்லாத்தான் இருக்கோம்..! என்ன புதுப்பொண்ணு மாப்பிள்ளையா..? எந்நேரமும் ஒண்ணாவே இருக்க.இதெல்லாம் யோசிச்சு உங்க மனசை கலவரப் படுத்திக்காதீங்க ப்ளீஸ்!”கீழே இறங்கி தரையில் அமர்ந்து மென்மையாகச் சொன்னாள்.
‘’நான் யோசிக்கல வானதி..!நீ வந்தபிறகு எதையும் யோசிக்கிற வாய்ப்பை நீ தரவே இல்ல..! ஆனா எங்க வலியெல்லாம் வாங்கிகிட்ட, நீ வலிக்காம வாழறியான்னு தெரியலயே.” அம்முதிய பெண்ணின் கண்கள் கண்ணீரை பதியமிட, அத்தையை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள்.
”இந்தப் பாருங்க ஓல்டு லேடி, சும்மா நொச்சு நொச்சுன்னு அழுதா எனக்கு பிடிக்காது. இதுக்குத்தான் சும்மா சீரியல் பார்க்காதம்மான்னு நான் தலைப்பாட அடிச்சுட்டு இருந்தேன். கேட்டாத்தானே..!
இப்பயென்ன நான் மாடிக்குப் போகணும்..! அவ்வளவு தானே..!” என்றவள் தலையில் அடித்துக் கொண்டு எழுந்துபோக, கல்பனாவின் கண்கள் சிலநொடிகள் அவளின் நடைபாதை நீளத்தை அளந்து கொண்டே இருந்தது..!
பனித்திருந்த கண்கள் கண்ணீரை உறைய வைத்திருந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு நயமாக நடிப்பாள்..?
அறைக்குள் வந்தாள். தபு இன்னும் விழித்திருக்க வில்லை. நந்தா உறக்கம் பிடிபடாமல் படுத்திருந்தான், கதவு திறந்து உள்ளே விழுந்த நளின நிழலில் முகம் அவனை நோக்கி நீண்டு வர, கண்களை திறந்து பார்த்தான்.
கால்மாட்டில் வந்தமர்ந்து அவன் கால் விரல்களுக்கு நெட்டி எடுத்தாள். சட்டென்று எழுந்தமர்ந்தான். கதவும், ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருந்ததால் ஒரு மிதமான இருள் அறைக்குள் வியாபித்துக் கொண்டு இருந்தது அந்த மதியவேளையில்..!
‘’ஆர் யூ ஒகே நவ்..?” என்றான்.
‘’எப்பவும் ஓ.கே தான்.இப்ப என்ன சொல்லிட்டாங்களாம்” என்றாள் கண்களைச் சிமிட்டி.
‘’ உன்னை எனக்குப் புரியும் வானதி..!”
‘’என்ன புரியுமாம்..! ஒருநாள் வீட்டில இருந்தாலும் எதையாவது யோசிட்டே இருக்காதீங்க..! படுத்து தூங்குங்க..! எனக்கும் தூக்கம் வருது,” எழுந்து நகர முற்பட்டவளின் கைகளை அழுந்தப் பற்றி இருந்தான்..! திரும்பிப் பார்த்தாள்.
‘’ஐயம் சாரி..! எல்லாத்துக்கும்.” என்றான். கைகளை உருவிக் கொண்டு படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள். இருவருக்கும் நடுவில் பெரும் உணர்வு போராட்டமாக இருந்தது. பேசிய வார்த்தைகளை விட, பேசாமல் பொத்தி வைத்த மௌனம் கணம்கூடி மனம் வதைத்தது..!
சிந்தனைகள் உள்ளிழுத்துக் கொள்ள, கண்களை மூடி உறக்கத்திற்குள் தன்னைத் தொலைத்தான். காலத்தின் மீதும், கடவுள் போட்ட கோலத்தின் மீதும் மெல்லிய அலுப்பு எட்டிப் பார்த்தது..!
‘...நந்தா எனக்கு பையன் தான் வேணும் உங்களை மாதிரி அமைதியா… உங்களை மாதிரி பொறுப்பா.’ மீசை முடியை பற்றி இழுத்துக் கொண்டே காதுகளுக்குள் கிசுகிசுத்த மிருதுளாவின் குரல். உடம்பெல்லாம் வேர்த்து விதிர்க்க வேகமாய் கட்டிலில் எழுந்தமர்ந்து கொண்டான்..!
தலையைப் பற்றிக் கொண்டான். ஓ’வென சத்தமிட்டு கதறவேண்டும் போல் இருந்தது. உறக்கத்தில் தபஸ்வி இருக்க, அதனை அணைத்துக் கொண்டு வானதி தூக்கத்தில் இருந்தாள். அவளின் கனிந்த முகத்தைப் பார்த்த நிமிசம் தொண்டைக்குழி ஏறித் தாழ்ந்தது..!
தான் யாருக்குமே நியாயம் செய்யவில்லையோ என்ற கேள்வி மீண்டும் அவனுடைய மனசை பதம் பார்க்க ஆரம்பித்தது.
வேகமாய் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான். உடம்பும் மனசும் நினைவுகளை கழுவும் வரைக்கும் நீருக்கடியிலே நின்றான்.
”...நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே..."
4
தன்னுடைய கேபினை விட்டு வெளியில் வந்த சந்தியா ஆழமாய் மூச்செடுத்தாள்.தரமான சாம்பார் வாசனை அடித்தது.
மூக்கைக் கோணி நாக்கை சப்புக் கொட்டிக் கொள்ள, கண்ணாடித் தடுப்பிற்கு பின்னே இருந்து பார்த்துக்கொண்டு இருந்த நந்தாவிற்கு சிரிப்பு வந்தது.
‘சரியான தீனிப் பண்டாரம்...’ தலையை அசைத்து சிரித்துக் கொண்ட நிமிசம், அவள் முன்னே வந்து நின்றாள்.
‘’எதுக்கு சிரிச்சே நந்தா… நான் உன்னை பார்த்துட்டேன்‘’ டேபிளில் கால் ஊன்றி வந்து அமர, கண்களில் கண்டிப்பு காட்டினான்.
‘’இது ஆபிஸ் சந்தியா..! நீ இங்கே அசிஸ்டெண்ட் மேனேஜர்.”
‘’உஷ்..! ஆமாமில்ல..! மறந்திடுச்சு..! ‘’ என்றவள் இறங்கி நாற்காலியில் அமர, நந்தா இன்னும் கண்களில் கடுமை குறையாமல் பார்த்தான்.
‘’நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க கூடாது. இயல்பா இருக்கிறது வேற. இயல்புக்கு ஒவ்வாமல் இருக்கிறது வேற. ஒரு பேங்குல அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட்டுங்கிறது சாதாரண விஷயமல்ல..! அந்த இடத்துக்கு நீ அப்படி இப்படியெல்லாம் வந்துடவும் இல்லை..!
அப்படி வந்த இடத்துக்கு உன் நடவடிக்கைகள் கண்ணியத்தை தரணும்..! இன்னும் சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்க கூடாது. இதை உடனே பெண்ணியம் குறித்த என்னுடைய பார்வைன்னு மடை மாத்தி விடக்கூடாது. இது கண்ணியம் குறித்த என்னுடைய பார்வை.
இந்த ஆபிஸ்ல எல்லாரும் உனக்குக் கீழதான். ஏன், நானோ கூட உனக்கு பதில் சொல்லவேண்டிய இடத்தில தான் இருக்கேன். அப்படிப்பட்ட இடத்துக்கு வர ஒரு பெண்ணா நீ எத்தனை போராடி இருக்கணும்..! அது எனக்கு நல்லாத் தெரியும். அந்த இடத்தோட பெருமையை நீ உணரணும்”
மென்மையான குரலில் சொன்னவனை ரெம்பவே பிடித்து இருந்தது சந்தியாவிற்கு.
‘’ஓ.கே. இனி பொறுப்பா நடந்துக்கறேன்” மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னவளை பார்க்க பார்க்க சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.
”ஓ.கே. ஈவினிங் பேசலாம். கிளம்பி உன்னுடைய கேபினுக்கு ஓடு.” அவன் விரட்ட, எழுந்து இரண்டெட்டு நடந்தவள், திரும்பி தோரணையாய் அவனைப் பார்த்தாள்.
‘’பை த பை..! இனிமேல் நீங்க என்னை மேடம்னு கூப்பிடணும். வா போ’னு கூப்பிடக்கூடாது மிஸ்டர் நந்தா.” அவள் சொல்லிவிட்டு எழுந்து போக நிஜமாக அவனுக்கு முட்டிக்கொண்டு தான் வந்தது.
இன்னும் குழந்தையாகவே இருக்கிறாள். அவளுடைய எந்தப் பருவமும் கொண்டாடப் படாததாலே, தன்னைச் சரியாய் செதுக்கிக் கொள்ளும் கலை அறியாத பெண்ணாகவே இருக்கிறாள்.
கார்டியனின் பாதுகாப்பில் அக்கறை இருந்தது. இன்றைய காலகட்டத்தில் அதுவே பெரிய விசயம். அப்படி இருக்க அன்பையெல்லாம் பெரிசாய் எதிர்பார்க்க முடியாது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசதி இருந்தது. அது இன்றைக்கு அவளை நல்ல இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..!
அதைத்தவிர வாழ்க்கை மீது பெருசாய் எதிர்ப்பார்ப்பும் இல்லை, குறைபாடும் இல்லை.
* * *
மெல்லிய கருமை வானத்தில் வட்டம் போட ஆரம்பித்து இருந்தது. மேகங்கள் கர்ப்பம் களைக்க தொடங்கி இருந்தன.
இலைகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டு காதல் பேசத் தொடங்கிய பொழுதுகள்,
திரண்ட மேகத்தின் இருண்ட முகம் பார்த்தபோது குதூகலமாக இருந்தது வானதிக்கு..! திட்டுத் திட்டாய் முகப்பூச்சு பூசிய பால்ய கால சிறுமிபோல், மேகங்கள் அப்பிய வானம் தெரிந்தது.
உலர்ந்த துணிகளை காப்பாற்றிய நிம்மதி அவள் முகத்தில் முறுவலித்தது. மழைத் துளித்துளியாய் கீழ் இறங்க, தன்னுடைய அறைக்கு வந்து பால்கனி கதவுகளை விரித்துக்கொண்டு நின்றாள்.
சாரல் அடித்த மழை, முகத்தில் பூத்தூவியது, கைகளை நீட்டி மழையை ஏந்திக் கொண்டாள். செப்புச் செப்பாய் கைகளில் சேகரமான மொத்த மழையையும் மீண்டும் தூரமாய் எரிந்து விளையாட ஆரம்பித்தாள்.
மிச்ச மழை அவள் மீதும் தெறித்தது. பொட்டுப் பொட்டாய் மழை அவள் தோளிலும், முகத்திலும், திவலைகளை இறைக்க, அது பனியில் குளித்த ரோஜா மொக்கைப் போல் அவளை ஜொலிக்க வைத்தது… அவ்வப்போது வெட்டிய மின்னலும், இடியும், அவளுக்கு ஆனந்தமாய் இருந்தது…
மாடிக்கு வந்தவள் வெகுநீண்ட நேரமாய் கீழே வராததால் தேடிக் கொண்டு மேலே வந்தான் நந்தா..! அவன் அறைக்கதவை திறந்ததும் அவள் கவனத்தில் பதியவில்லை..! கைகளை நீட்டி மழையை பிடித்து இறைத்துக் கொண்டே நின்றாள்.
நந்தாவின் முகத்தில் புன்முறுவல் பூத்தது. விளக்கைப் போடாமல் மெல்ல அவள் பின்னாக வந்து நின்றான். இருளும், ஒளியும் கலப்புத் திருமணம் செய்துகொண்டு இருந்த பின்மாலை வேளை. அறையில் நிலவிய அரைவட்ட இருளில் அவள் தரையிறங்கிய நிலவாய் இருந்தாள்.
அந்த மழையும், சூழலும், வெகு நீண்ட நாளைய பிணக்கும், சிலகாலமாய் இன்னதுதான் என்றறிய முடியாத அவர்களின் போராட்டமும் சேர்ந்து அவனை மெல்ல உணர்வு பிசக வைத்து இருந்தது. மெல்ல அறைக்கதவை சாத்திவிட்டு அவள் அருகில் வந்தான். அரவம் கூட அறியாத ஆனந்தத்தில் களித்துக்கொண்டு இருந்தாள்..!
அவள் தோளில் பூத்திருந்த மழைத்துளிகள் அவன் மனதில் கிளர்ச்சியை தூண்ட, மெல்ல பின்புறமிருந்து அவளைத் தன்னோடு சேர்த்துக்கொள்ள, அதிர்ந்து துள்ளித் திரும்பிப் பார்த்தவளின் விழிகள் தெறித்துப் போனது அதிர்வில்.
‘’நந்தா. என்னது இது..! விடுங்க என்னை, ப்ளீஸ்...” அவளுடைய குரல் வேகமாய்த் தொடங்கி தாபமாய் அடங்க, அவன் மேலும் மேலும் மழையோடு கரையத் தொடங்கி இருந்தான் அவளை அணைத்துக் கொண்டே...
இருவருக்குள்ளும் அன்பைத் தவிர எதையும் பரிமாறிக் கொண்டது இல்லை, இதுவரைக்கும்..! ஆனால், அதையும் தாண்டி அதே அன்பின் வழி, பரிமாற ஆயிரம் விசயங்கள் அவர்களுக்குள் இருப்பது புரிந்தது.
‘’என்ன நந்தா இது...” அவளுக்குள் வார்த்தைகள் எழும்பவேயில்லை. அதை கவனிக்கும் நிலையிலும் அவன் இல்லை..!
‘’எல்லாரும் கீழே இருக்காங்க நந்தா..! ‘’ அவன் மார்பில் புதைந்து கொண்டு திக்கித்திணறி வந்தது வார்த்தைகள்.
‘’தெரியும்..! இப்பயென்ன அதுக்கு...?” என்றவன் முற்றாய் உருமாறி இருந்தான். இத்தனை நாள் தேடாத உலகத்தை அவளிடம் தேடத் தொடங்க, உணர்வுகளின் பிடியில் இருவரும் நின்றார்கள்.
அவன் கண்கள் நினைவு சங்கிலியை விட்டு கட்டறுந்து கொண்டு இருந்தது..! முற்றாய் தன் நெஞ்சில் அடங்கிக் கொண்டு இருந்தவளின் சிகைக்குள் முகம் புதைத்தவன், மெல்ல சொன்னான்,
”மிருதுளா... மிருது... மிரு,,,து...” அவன் இமைகள் மூடியேதான் இருந்தது..! அவன் உணர்வுகளில் ஓடிய பிம்பத்தை வார்த்தைகளில் அவன் வடிக்க, நெருப்பை மிதித்தவள் போல் நின்றாள் வானதி..!
அவன் அணைப்பில் அடங்கிய தன் உடலை அருவருப்பாய் உணர்ந்தாள். ஒரு ஷணத்துக்கு கூட அதை தொடர விரும்பாமல் அவனை உதறிவிட்டு உதடு துடிக்க, கண்ணீர் வெடிக்க நின்றவளை புரியாமல் பார்த்தவன், சில சொற்ப நொடிகள் கால இயந்திரத்தில் பின்னோக்கிசெல்ல, அப்படியே குன்றிப் போனான்..!
அவன் உணர்வுகள் எல்லாம் வடிந்து போயிருக்க, குற்றவுணர்வில் தன்னை தொலைத்துக் கொண்டவன், அவளை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் நின்றான்.
ஒரு பெண்ணை அவமானப்படுத்த இதற்குமேல் வார்த்தைகள் தேவையில்லை…! இத்தனை நாள் அவன் தள்ளியிருந்த போதுகூட வராத தாழ்மை உணர்ச்சி அவன் அணைப்பில் வந்திருந்தது..!
எப்போதுமே அழாத அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அதைத்தான் நந்தாவால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை..! கட்டிலில் கால்மடக்கி முழுங்காலில் முகம்பொதித்து விசும்பியவளை என்ன வார்த்தை சொல்லி மீட்டு வருவது என்றறியாமல் நின்றான்.
‘’வானதி, ஐயம் சாரி..” என்றான் அடிபட்ட குரலில்.
‘’விட்டுடுங்க நந்தா,,,ப்ளீஸ்...” எப்போதும் கேலியும் குறும்புமாகவே பார்த்தவளை முதன்முறையாக கண்ணீரில் பார்த்த அவனுடைய இதயத்தை சுத்திகொண்டு யாரோ சுக்கல் நூறாக்கிக் கொண்டு இருந்தார்கள்.
‘’நான் உன்னைக் காயப்படுத்த அப்படியெல்லாம் பேசல. எனக்குள்ள நடந்த போராட்டத்துல என்னை மீறி வெளியே வந்த வார்த்தைகள். நீ அழறதை என்னால தாங்க முடியல ப்ளீஸ்.”
‘’போதும் எல்லாமே போதும்..! உங்களுக்கும், உங்க மனசில இருக்கிற பொண்ணுக்கும், நடுவில நடக்கிற உணர்ச்சிக்கு நான் என் உடம்பை ஊடகமா தரணுமா..? உங்க மனைவியை என்கிட்ட தேடினா, அப்போ நான் யார் உங்களுக்கு? ‘’ இடியைவிட வலுவாய் வந்து விழுந்தன வார்த்தைகள்..! ஒரு நொடி விக்கித்துப் போய் விட்டான்.
‘’ வானதி, என்ன வார்த்தைகள் இது..!”
‘’உங்களை காயப்படுத்த நான் என்னைக்குமே நினைச்சதில்லை. இனியும் நினைக்க மாட்டேன். அதேநேரம் என்னை நீங்க களங்கப்படுத்த நினைக்காதீங்க..! என்னால இந்த அவமானத்தைத் தாங்கவே முடியல.” அவளை சமாதானப்படுத்த
நீண்ட அவனுடைய கைகளை தடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
துடித்த உதடுகளையும், வழிந்த கண்ணீரையும் வேகமாய்ச் சமன் செய்தாள்..! முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு கீழே வந்தாள்.
‘’என்ன அண்ணி இவ்வளவு நேரம் எங்கே போனீங்க..? செம ஜாலியா இருந்தது கேம்” விக்கியும், வீணாவும் வானதியை கைநீட்டி அழைக்க., இத்தனைநேரத்து பரிதவிப்பையும் ஒரு சிறு முகம்கூட காட்டாமல் ஓடிச் சென்று அவர்கள் அருகில் அமர்ந்தாள்.
கருப்பும் வெள்ளையுமாய் ராஜாக்களும் சிப்பாய்களும் கட்டத்தில் போராடிக் கொண்டிருக்க, வானதி சில நகர்வுகளைச் செய்து, அவர்களோடு ஐக்கியமானாள். தபஸ்வி சிணுங்க ஆரம்பிக்க, அவளை தூக்கிக் கொண்டு நகர்ந்தாள்.
இரண்டு வயது முழுசாய் முடிந்துபோய் விட்டது. இப்போதுதான் கொஞ்சம் பேச வருகிறது..! அவள் தோளில் சாய்ந்து கொண்டு தன் பிஞ்சு விரலால் இவள் முகத்தில் கோலம்போடத் தொடங்க., இத்தனை நேரத்து போராட்டமும் மெல்ல அவளுக்குள் புதைந்து போக ஆரம்பித்தது.
”பசிக்குதா தபு..? பூஸ்ட் கலக்கித் தரட்டுமா..? ‘’ குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டாள். அதன் முகத்தை புடவைத் தலைப்பால் ஒற்றி எடுத்தாள். தாயின் முந்தானைதான் குழந்தையைத் தாலாட்டும் முதல் மடி. அவளின் முந்தியை எடுத்து முகமெல்லாம் போர்த்திக் கொண்டாள் குழந்தை.
‘’மா, மதை” வெளியில் விரல்நீட்டி மழைக்கு கொண்டு போகச் சொல்லி குதிக்க, குழந்தையை தோளோடு சேர்த்துக் கொண்டாள் அதன் தலையை முந்தானையில் சுற்றி, ஈரக்காற்று காதுகளுக்குள் புகுந்து கொள்ளாமல் நெஞ்சில் சாய்த்தபடி நிலைப்படியில் நின்றாள்.
ஊரே ஈரப்பட்டுக் கிடந்தது. பேயாட்டமோ, ஆர்பாட்டமோ இல்லாமல் மழை மட்டாய், ஆனால் தரையில் சிட்டாய் தவழ்ந்து கொண்டு இருக்க, மழை அழகில் சில நிமிசம் தன்னை மறந்து நின்றாள்.
மெல்ல மெல்ல நினைவு சற்றுமுன் நடந்தவற்றை மீட்டுக் கொண்டு இருக்க, இதயத்தில் இருந்து ரத்தம் கசிந்தது..! எத்தனை எத்தனித்தும் அந்த நினைவுகளில் இருந்து முழுசாய் கடந்து வரத்தான் இயலவில்லை..!
எதையும் மனசுக்குள் அசக்கிக் கொண்டு அசைபோடுவது அவளுடைய இயல்பில்லை… ஆனால் இப்போது நிகழ்ந்தவற்றை அசை போடுவது அல்லாமல் எதுவுமே அவளை மீட்டுத் தராது.
நந்தா கீழே இறங்கி வந்திருந்தான். சுரத்தில்லாத அவன் முகத்தையும், அழுது சிறுத்திருந்த வானதியின் கண்களையும் பார்த்து கல்பனாவின் மனம் சஞ்சலத்தில் வீழ்ந்து போனது..!
இந்த குடும்பம் சந்தோசமாக இருக்கிறதா இல்லை சந்தேகம் வராமல் நடிக்கிறதா என்று தெரியவில்லை..! அன்பை மட்டுமே கொண்டு அழகாய் புனையப்பட்ட தூக்கணாங் குருவிக்கூடு இது..!
ஒரு இடியையே இந்த வீட்டில் தாங்கிக்கொள்ள இயலவில்லை எனும்போது மீண்டும் மீண்டும் ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வது என்ற நியாயமான சிந்தனை அந்தத் தாயை ஆட்கொள்ளாமல் இல்லை..!
வழக்கமான துள்ளல் இல்லாத முகத்தோடு இருந்தவளை பார்த்து மனசு பொங்கிக்கொண்டே இருந்தது கல்பனாவிற்கு..! இரவு உணவு செய்ய சமையலறை சென்றவள் பின்னாக சென்று இடுப்பில் கைவைத்து வேடிக்கைப் பார்க்க, திரும்பிப் பார்த்தவள் குறும்பாகச் சிரித்தாள்..!
‘’என்னவாம் இப்போ..? அத்தைக்கு காப்பி வேணுமா..? என் பின்னால வந்து, எதுக்கு வேவு பார்க்கணும்..?”
‘’ ஏய்...திரும்பு இப்படி..?”
‘’என்ன அத்தை, மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு..! மாமியார் மருமகளை கொடுமை பண்ற சீரியல் பார்த்தீங்களாக்கும்”
திரும்பாமல் கபோர்டில் இருந்து எதையோ எடுக்கின்ற பாவனையில் நிற்க, இடுப்பில் கைவைத்துக் கொண்டு விலகாமல் ஆணியடித்தது போல் கல்பனா நின்று கொண்டே இருந்தார்.
வலுவில் வானதியின் தோள்களைத் தொட்டு திருப்பி, அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்து அந்த கண்களில் வழிந்த வலியை இனம் காண, சட்டென்று பார்வையை கீழே தாழ்த்திக் கொண்டாள்.
‘’ என்ன பிரச்சனை ரெண்டு பேருக்குள்ளும்..?” கேள்வி கூராய் வந்து நேராய் இவள் நெஞ்சில் அறைந்தது..!
‘’அப்படில்லாம் எதுவுமில்லை..! கற்பனையை குறைங்க” இயல்பாகச் சொல்ல, கல்பனாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது, பதறிப்போய் முந்தானை எடுத்து முதியவளின் முகம் ஒற்ற முனைய, அவளின் இருகைகளையும் பற்றிக் கொண்டார்.
‘’உன் சிரிப்புக்கு பின்னாடி இருக்கிற நிஜத்தையும், உன் அழுகைக்கு பின்னாடி இருக்கிற உணர்வையும் நான் கண்டுபிடிப்பேன் வானதி..! எங்க எல்லாரையும் மீட்டெடுத்த உன்னை எந்த இடத்திலயும் தொலைச்சுடக்கூடாதுன்னு நினைக்கிறேன்..! அவன் ரெபப் பாவம்..! நந்தாவால யாரையும் காயப்படுத்த முடியாது..! அவனையும் மீறி ஏதாவது தப்பு செய்திருந்த அதை பெரிசு பண்ணாதே.”
கல்பனா மருமகளின் தோளில் சாய குன்றிப் போனாள் வானதி. தன் உணர்வுகளை இந்த பாசமும் பரிதவிப்பும் வேரோடு சாய்த்துக் கொண்டே இருக்கிறதே என்ற அழுத்தம் அவள் நெஞ்சை சுட்டது.
‘’எதுவும் இல்ல அத்தை..! நீங்க கலங்காதீங்க. போய் மாத்திரையை போட்டுட்டு படுங்க, ” மெல்ல இறுக்கி தன்னுடைய அன்பை பேசியவள், இன்னும் இங்கே தாமதித்தால் வீணான வருத்தங்கள் வருமென்று கல்பனாவை அறைக்குள் அனுப்பி உறங்கச் சொல்லிவிட்டு, மாடிக்கு வந்தாள்.
கட்டிலில் கால்நீட்டி சிந்தனைக்குள் தன்னை தொலைத்து இருந்தான் நந்தா. இவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் சக்தியில்லாமல் சுழலும் மின்விசிறியில் தன் எண்ணத்தை குவித்து இருந்தான்.
ஜன்னல் வழியே மின்னல்வெட்டிக் கொண்டே இருந்தது. வெளிச்சம் புகுந்து அறைக்குள் கும்மியடித்த இருளை இல்லாமல் ஆக்க முயன்று கொண்டே இருந்தது. ஆனால் அந்த சொற்ப வெளிச்சத்தில் செத்துப் போகுமா இந்த கும்மிருட்டு..?
குழந்தைக்கு மறுபுறம் வந்து முதுகுகாட்டி படுத்துக் கொண்டாள். திரும்பிப் பார்த்தான் எந்தச் சலனமும் இல்லை..! ஒரு நெடிய பெருமூச்சு நெஞ்சுக்குழியில் பிறந்தது..! தன் இழப்பிற்கு அவளும் சேர்ந்து சிலுவை சுமக்கிறாள்.
எவ்வளவு அழகான பட்டாம்பூச்சி.... இன்று இவனாலே தன் நிறமிழந்து கொண்டு இருக்கிறது. அவள் மடிகவிழ்ந்து அழவேண்டும் போல் உணர்வு உந்தியது. ஆனால் அவளிடம் அன்பை மட்டுமல்ல ஆறுதலையும் தேடும் அருகதை தனக்கில்லை என்றுணர்ந்த நிமிசம், கண்களை மூடிக் கட்டுபடுத்திக் கொண்டான்.
‘’ஐ’யம் சாரி வானதி...” இருட்டில் அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
பதிலில்லை..! பரிதவித்துப் போனான். மொத்தமாய் எடுத்து வீசிவிட்டாளா..?’
‘’வானதி.” அவன் குரலில் இருந்த குளிர்வில், மழை சுட்டது.
திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
‘’எதுக்கு இதெல்லாம்..? பேசாம தூங்குங்க.” குரல் வறண்டு இருந்தாலும் அதில் வழிந்து பிரவாகமெடுத்த புரிதலில், சின்ன புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டான். மெல்ல நினைவுகள் பின்னோக்கி உருண்டோடத் தொடங்கி இருந்தது.
”...ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர்போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா... மன்னிப்பாயா...”
5
அப்பாவின் மறைவிற்கு பிறகு அத்தனையும் அம்மாதான். இடியைத் தாங்கும் பாறையும், காற்றைத் தாங்கும்
நாணலயும் தாங்கிக்கொண்டு இருப்பது ஒரே பூமிதான்.
இரும்பைக்கூட கரும்பைப் போல கடித்து கடந்துபோகும் மனிதர்கள் மத்தியில், மழையில் பூத்த பூஞ்சைக் காளான்போல் இருந்தது கல்பனாவின் குடும்பம்.
நகரத்து வாழ்க்கை அவர்கள் வாழ்க்கையில் எந்த நகர்தலையும் ஏற்படுத்தி விடவில்லை. அப்பாவின் மறைவிற்கு பிறகு, அம்மாவிடமே அப்பாவையும் தேடினார்கள். காதல்முதல், கழுத்து வலி வரைக்கும் நான்குபேரும் கலந்து பேசாத விசயமே இல்லை..!
இழப்பை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பால் கடந்து வந்தார்கள். அன்பைத் தவிர அவர்கள் நடுவில் பேசுபொருள் வேறில்லை.
நந்தாவுக்கு வங்கியில் பணி கிடைத்தபோது அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை..! ஆறுமாதம் அவனுக்கு பெங்களூரில் பயிற்சி காலமாய் இருந்தது. அங்கே அவனோடு பயிற்சிக்கு இணைந்தவர்கள் தான் மிருதுளாவும், சந்தியாவும்..!
ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்த மிருதுளா தான் அந்த பேட்சிலேயே சிறுபெண்..! அவளின் மிரட்சியான தோற்றமும் அழகும் முதல் நாளிலேயே நந்தாவின் கவனம் ஈர்த்தது. கிட்டத்தட்ட நாடு முழுதிலும் இருந்து இருநூறு பேருக்கு மேல் இணைந்த பயிற்சி அரங்கம் அது..!
ஓரிரு நாளிலேயே பார்வைகள் ஈர்த்து, ஸ்பரிசம் இல்லாத காதல் அவர்களுக்குள் உண்டாகிப் போனது. நந்தாவின் ஆளுமை அவளை வெகுவாய் ஈர்த்தது..! வேறுவேறு இடத்தில் இருந்து வந்திருந்தாலும் தமிழ் என்ற இனப்பற்று மூவரையும் கட்டிவைத்தது…
கட்டி வைத்திருந்த தமிழுக்குள் காதல் முட்டிக்கொண்டு முகம்காட்டி முளைத்தது..! மூன்று மாதத்து பழக்கத்திற்கு பின் நந்தாவுக்கு மிருதுளா மொத்தமாய் ஏழு ஜென்மத்திற்கு தேவைப்படுவாள் என்ற நிஜம் புரிந்தது..!
‘’நான் இப்பத்தான் பி.காம் முடிச்சேன். வீட்டுக்கு ஒரே பொண்ணு. அப்பா பிசினஸ்ல இருக்காரு. அம்மா ஹவுஸ் ஓய்ப்..!” அறிமுகப்படுத்த பெருசாக இல்லாத போது, வார்த்தைகள் சவுகரியப்பட்டுக் கொள்கின்றன..!
‘’வீட்டில மூத்தபுள்ளை பொறுப்பு அதிகம்..! தம்பி தங்கச்சிங்க இப்பத்தான் படிச்சிட்டு இருக்காங்க..! அம்மா என் விருப்பத்தை மறுக்கவே மாட்டாங்க..! நீ சொன்னா அம்மாவை அழைச்சிட்டு பொண்ணு பார்க்க வர்றேன்” சொல்லி சிரித்தான்.
காதல் இத்தனை இலகுவானதென்றால், ஏன் காதலை வன்மையாய் கவிஞர்கள் பல இடங்களில் பதிவு செய்கிறார்கள்…? புரியத்தான் இல்லை..! காதலுக்காக போராடிய சினிமாக்களும், காதலை நிறைவேறாத கனவு என்று வடித்துரைத்த காவியங்களும், இப்போது இருவரின் கண்ணுக்குமே கேலிகூத்தாய் தெரிந்தது.
அன்பு முளைத்த அடுத்த நாளே அம்மாவிடம் தான் கால் பண்ணிச் சொன்னான்.
‘’பொண்ணு எப்படி இருக்கா நந்தா..? ஒரு ஜென்மத்துக்கு தேவைப்படற உறவை ஒருசில நிமிசத்துல முடிவு செய்திருக்கே..! ஆனாலும் நீ தப்பா யோசிக்கவும் மாட்டே.. நமக்கு ஆண்டவன் தப்பா தரவும் மாட்டான்.
பொண்ணு பார்த்து பேசி முடிக்கிறோம் அதுவும் நம்பிக்கையில தானே..? மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைன்னா அதுக்குமேல என்ன இருக்கு..!” அன்பு மேவ அம்மா சொன்ன வார்த்தைகளே அவனை மெய் மறக்கவைத்தது..!
இதுதான் அவனும் அவன் சார்ந்த குடும்பமும். அன்பும், புரிதலும் நிறைந்த அழகான கூடு..! மிருதுளாவின் வீட்டில் பெரிசாய் கருத்து மாற்று இல்லை..! டிரெயினிங்கிற்கு நடுவில் கிடைத்த ஒருநாள் விடுப்பில் ஹைதரபாத்திற்கு சென்று வந்தார்கள் மிருதுளாவும், நந்தாவும். சந்தியாவும் உடன் செல்ல அந்த நாட்கள் அழகாக மாறி இருந்தது..!
கொஞ்சமாய் நெஞ்சுக்குள் இருந்த தயக்கம் எல்லாம், நந்தாவின் பணிவும் அன்புமான தோற்றத்தில் முற்றாய் முடிந்து போயிருக்க, காணும் இடமெல்லாம் காதலுக்கு பச்சைகொடி பறந்து பட்டொளி வீசியது..
டிரைனிங் முடித்து வந்த மூன்றே மாதத்தில் திருமணம்..! முதல் வருடம் நந்தாவுக்கு வேலை செங்கல்பட்டில் மிருதுளாவுக்கு நாகர்கோயிலில்.
ஓடி ஓடி குடும்பம் நடத்தினார்கள்..! சந்தியா கோவையில் இருந்தாள். நந்தா சென்னைக்கு மாற்றலில் வந்தான். மிருதுளா கர்பமாக, நான்கு மாதத்தோடு வீட்டிற்கு மெடிக்கல் லீவில் வந்து விட்டாள்..!
ஒருவருட காலம் அத்தனை அழகாக இருந்தது..! பதமாய் இதமாய் உலகத்தை கட்டிவைத்த தேவ சங்கிலிபோல்..! ஆனந்தம் விளையாடும் வீடானது..!
மணவாழ்க்கை இத்தனை மகிழ்வாய் அமைந்துபோனால் எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும்..? உள்ளங்கையில் வைத்து தாங்கிய நந்தா, தோழியிடம் கூட பேசமுடியாத விசயத்தை பேசி சிரிக்கும் மாமியார்..! பக்கத்திற்கு ஒரு குழந்தையாய் நாத்தினார், கொழுந்தன், திக்குமுக்காடிப் போனாள்..!
இரண்டு நாள் விடுப்பில் கூட அம்மா வீட்டிற்கு போக சங்கடப்பட்டாள்.
“அம்மா, அங்கே இருந்தா இந்நேரத்துக்கு அத்தனை சந்தோசமா இருக்கும். வீணாவோட லந்தும், விக்கியோட ஜோக்கும் இங்கே ஒண்டிக் குரங்கு மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டி இருக்கு..!” அலுத்துக் கொள்ளும் மகளை அதிசயமாய்ப் பார்த்தாள் சாவித்திரி.
‘’மாமியார் வீட்டுக்கு போறேன்னு சொல்லி அழுகற, முதல் மருமகள் நீதான் குட்டிமா.” சொல்லி சிரிப்பார்.
‘’மா, என்னம்மா இது பால் கொழுக்கட்டை நல்லாவேயில்லை. அத்தை செய்யும்போது அவ்வளவு டேஸ்டா இருக்கும்..! நான் தூங்கினாலும் எழுப்பி உட்கார வச்சு ஊட்டிவிடாம தூங்க விடமாங்கமா, பேசாம ஆந்திராவை விட்டுட்டு சென்னைக்கே இரண்டு பேரும் வந்துடுங்களேன்..! பக்கத்துல இருந்தா, அடிக்கடி வந்து என்னைப் பார்த்துட்டு போவீங்கள்ல.”
காலம் இனிப்பாய்க் கரைந்தால் அது உகப்பாய்த்தான் இருக்கும்..! வெல்லமாய்க் கரைந்து அவள் உள்ளத்தை குளிர வைத்தது..!
டெலிவரிக்கு கூட அம்மா வீட்டுக்கு போவதிற்கு மறுத்தாள். ஆனால் தலைப் பிரசவம் அந்த தாயுள்ளத்தை வருந்தவிடக்கூடாது என்று ஒன்பதாம் மாசம் பிறந்து பத்து நாள் கழித்துத்தான் அனுப்பி வைத்தான்.
போகும்போது அவள் உகுத்த கண்ணீரில் புகுந்தவீடே ஆடிப் போனது..!
‘’மிருது, டாக்டர் சொல்லியிருக்க தேதிக்கு மூணு நாள் முன்னாடியே நானும் நந்தாவும் அங்கே வந்துடுவோம். இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு..! நீ எதுக்கு கவலைப்படக் கூடாது..! ”
சுடுதண்ணியில கல் உப்பைப் போட்டு காலை உள்ளே வைக்கணும்..! பொறுக்கிற சூடு போதும்..! நினைப்பில வச்சுக்க. அதிகமா வெளியில போகவேண்டாம். வாக்கிங் போறதா இருந்தாக் கூட தோட்டத்துல நடந்தாப் போதும்.
வாய்வு அயிட்டம் சாப்பிட வேண்டாம்..! ராத்திரியில அம்மா கூடவே படுத்துக்க. தனியா படுத்துக்க வேண்டாம்..! தோள்ல சின்னதா நமைச்சல் வரும். அதுக்கெல்லாம் அலோபதி எடுத்துக்காத..! ‘’ வீட்டில் ஆரம்பித்த அறிவுரைகள் ரயிலடி வரைக்கும் தொடர்ந்து கொண்டே வந்தது..!
அருகில் அமர்ந்திருந்த சாவித்திரிக்கே ஒரு கேள்வி நெஞ்சுக்குள் வந்து தொக்கி நின்றது. இரண்டுபேரில் யார் மிருதுளாவின் அம்மாவென்று..!
திடமா இரு, திடமா இரு..’ என்று சொல்லிக்கொண்டே வந்த கல்பனா, ரயிலடிக்கு வந்ததும், தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் அழ, அந்தப் பிணைப்பில் நெகிழ்ந்து நின்றார்கள் அத்தனை பேரும்..!
‘’என்னமா இது..? நீங்களும் கூடப் போறீங்களா..? ” பக்கத்தில் வந்து தோளில் கைபோட்டுக் கொண்டு நந்தா, கேட்டபோது நெகிழ்வாய்ப் பார்த்தார்.
‘’அப்படிப் போகக்கூடாது நந்தா..! இரண்டு நாள் போகட்டும். போகலாம். உன்னால முடியாட்டி என்னை ரயிலேத்தி விட்ரு. நான் போயிக்கிறேன்.”
கையசைத்து, கணவனுக்கு கண் அசைத்து, இதயத்தின் செல் அசைத்து, அன்பு வழிந்த சொல் அசைத்து, அவளை அனுப்பி வைத்தார்கள்..!
உலகத்தை அன்பான விழிகொண்டு பார்த்தால், அத்தனை அணுவும் அழகாய்த்தான் இருக்கும்..! அதிகம் அதிர்ந்துகூட
பேசத் தெரியாத மிருதுளா அந்த குடும்பத்தோடு கலந்து போனாள் என்ற சொல்லைவிட, அவளுடைய அத்தனை அணுவும் அங்கே ஐக்கியப்பட்டுப் போனது என்றே தான் சொல்ல வேண்டும்..!
மூன்றாவது நாளே கல்பனா ஹைதராபாத் கிளம்பிப் போக, அவர் சென்றதில் இருந்து இரண்டாவது நாள் அவர்கள் அன்பின் தவமாய் தபஸ்வி பிறந்தாள்..! பிறக்கும் முன்னே குழந்தையை கையில் ஏந்திக்கொள்ள, நந்தா அங்கு வந்து சேர்ந்துவிட்டான்..!
நார்மல் டெலிவரி ஆனதில் அத்தனை பேரின் மனமும் நிறைந்து போனது..! இரண்டாம் நாளே மருத்துவமனையில் இருந்து திரும்பிய மிருதுளா பக்கத்திலேயே இருந்து அத்தனையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்ட, நந்தா அம்மாகூட சிலசமயம் சுணங்கிப் போகக் கூடும், ஆனால் இரவும் பகலும் பக்கத்திலேயே நின்ற மாமியார் தாயுக்கும் மேலான தாயாகி நின்றார்.
அதென்னவோ அந்தச்சூழல் விவரிக்க முடியாத அழகாக இருந்தது..! இணக்கமான உறவுகளில் அன்பின் தாலாட்டு மெத்த சுகந்தமாக இருந்தது..!
ஒருமாதம் ஓடிவிட்டு இருந்தது..! நந்தா இரண்டு மூன்று முறை வந்துவிட்டு போய் இருந்தான். அங்கே எல்லாம் சரியாக இருக்கிறது என்ற நம்பிக்கைத் துளிர்த்த நிமிசம், கல்பனா ஊருக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார்.
‘’தருமபுரியில இருக்கிற எங்க குடும்ப ஜோசியர் இன்னைக்கு ஹைதராபாத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு வர்றதா சொல்லி இருக்காரு சம்பந்திமா..! பாப்பாக்கு ஜாதகம் கணிச்சு, என்ன பேர் வைக்கிறதுன்னு கலந்து பேசிக்கலாம்.” மிருதுளாவின் அப்பா சொன்னபோது இசைவாய் தலையசைத்தார் கல்பனா..!
வந்த சங்கரன் பிள்ளை கட்டங்களை தேய்த்து கண்களைக் குறுக்கிக் கொண்டார். பிறந்த நேரத்தை துல்லியமாய்க் கேட்டு மீண்டும் தன்னுடைய ஐயத்தை போக்கிக் கொண்டார்..!
மஞ்சள் தடவிய பஞ்சாங்க புத்தகத்தை எடுத்து மீண்டும் தன்னுடைய சோதிட அறிவை சோதித்துக் கொண்டார்..! நெற்றியில் சுருக்கு நெளிந்தது..!
‘’குழந்தை பிறந்தநேரம் அத்தனை சாதகமா இல்லையே..! அதுதான் மறுபடியும் மறுபடியும் கேட்டு தெளிவு படுத்தினேன்.” கேட்காமலே இருந்திருக்கலாம்..! கேட்டபிறகு மனசு நெருடிக்கொண்டே தான் இருக்கும்..!
கவலை பூச்சு மேல்கோடிட்டது பெரியவர்களின் முகங்களில். ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘’என்ன சாமி செய்றது..? இத்தனை நேரம் இருந்த சந்தோசத்தை யாரோ இழுத்து வழிச்சு கொண்டு போனமாதிரி இருக்கு..! ‘’ சாவித்திரி வருத்தப்பட்டார்.
மிச்சம் இருந்த காப்பியையும் தொண்டையில் சரித்துக் கொண்டார். கைகளில் ஏதோ கணக்குகளை போட்டுக் கொண்டார். கண்களை மூடி விரல்களில் அபிநயம் பிடித்து மனதிற்குள் துல்லியமாய் யோசித்தார்..!
‘’குலதெய்வம் கோயிலுக்கு போய் ஒருஅர்ச்சனை பண்ணிட்டு, வஸ்திரம் குடுத்துட்டு வந்திடுங்க..! பதினொரு சுமங்கலிப் பொண்ணுங்களுக்கு வஸ்திரம், பூபழம், கிழங்கு மஞ்சள், குங்குமம், வச்சு உங்க பொண்ணு கையால குடுத்துட்டு வாங்க..!
அவங்களுக்கு கொஞ்சம் மாங்கல்ய தோஷம் இருக்கு. குழந்தை பிறந்தநேரமும் பெத்தவங்களுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கு.” நல்லது கேட்கத்தான் ஜோசியத்தை அணுகுவது..! நல்லது சொல்லும்போது பூரிக்கும் மனசு, சின்ன மாறாட்டங்களைக் கூட விரும்புவதில்லை என்பதுதான் நிஜம்..!
மிருதுளாவின் முகமும் அகமும் சுருங்கிப் போனது..! கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நந்தாவோடு வாழ்ந்த வாழ்க்கை அவளுக்கு இரண்டு யுகத்துக்கு ஒப்பானது..! அவன் இல்லாத உலகத்தை கற்பனையில் கூட அவளால் யோச்சிக்க முடியாது..!
முகம் சுணங்கி அமர்ந்திருந்தவளை, இரண்டு பெண்களும் தேற்ற வழியில்லாமல் அமர்ந்து இருந்தார்கள். அது மழை தொடங்கி இருந்த கார்காலத்தின் முதல் பருவம்..! மிருதுளாவின் குடும்பம் வெகுகாலமாய் ஆந்திராவில் இருந்தாலும் அவர்கள் குலதெய்வக் கோயில் தர்மபுரியில் இருந்தது.
எப்போது போவது என்ற கேள்வி எழுந்தபோது உடனடியாக போயே ஆகவேண்டும் என்று மிருதுளாதான் ஒற்றைக்காலில் நின்றாள். அவள் மனம் நந்தாவை எண்ணி பயந்துகொண்டு இருந்தது.
அவனிடம் சொன்னபோது பெரிதாய்ச் சிரித்தான்.
‘’மிருது, உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு டி..! இந்தகாலத்துலயும் இதெல்லாம நம்புற” அவன் டி’ என்ற அழைப்பில் அவள் எப்போதுமே கரைந்து காணாமல் போய்விடுவாள்..! இன்றைக்கு அதை ரசிக்கின்ற மனநிலையில் அவள் இல்லாததால் அதை யோசிக்க வகையற்று அமர்ந்திருந்தாள்..!
‘’ஓய் மிருது..! என்னாச்சு..?” என்றான் வீடியோ காலில். அவள் முகம் நிமிர்த்தி சிரித்தாள்.
‘’ஒண்ணுல்ல நந்தா..! சரியோ தப்போ, கேட்டபிற்கு இயல்பா இருக்க முடியல..! வியாதி இருக்கும்னு தோணின பிறகு டாக்டர் கிட்ட போகாம இருக்க முடியாதுல்ல..! பரிகாரம் பண்ணச் சொன்னபிறகு அமைதியா இருக்கமுடியல. கல் தடுக்கினாலும், கால் இடறினாலும் அதனாலயோன்னு பயமா இருக்கு..! உங்களுக்கு எதாவதுன்னா அப்புறம் நான் ஏது..?” பேசும் போதே கண்ணீர் வர, சென்னைக்கும் ஆந்திரத்துக்கும் இடையே அவர்கள் அன்பு கரையைக் கடந்து கொண்டு இருந்தது..!
”லூசு மாதிரி அழாதே மிருது..! இத்தனை தள்ளி இருக்கேன் என்னோட மனநிலையை நினைச்சுப் பாரு..! அம்மாவை கூப்பிடு என்ன பண்றாங்க.” அவளின் கரையைக் கடந்த கண்ணீரால் அவன் அன்பு அணையைக் கடந்து பெருக்கெடுத்துக் கொண்டு ஓடியது.
‘’எனக்கு உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுங்கிறது மட்டுமில்ல, எனக்கும் எதுவும் ஆயிடக்கூடாதுங்கிற பரிதவிப்பா இருக்கு..! ஏதோ ஆச்சயர்த்துல மலர்ந்த பூவோ, வழித்தடத்துல கிடச்ச வாழ்க்கை மாதிரி எனக்கே எனக்கான உயிரா நீங்க கிடைச்சிருக்கீங்க..!
மகராசின்னு யார் என்னை வாழ்த்தினது பழிச்சதோ தெரியல நீங்க மட்டுமில்ல, அத்தை வீணா,விக்கினு அத்தனை பேரும் எனக்கு கிடைச்ச பொக்கிஷம்..! எல்லார் கூடவும் சேர்ந்து பல வருசம் வாழணும்..! சந்தோசமா வாழணும்..! ‘’ அவள் கண்கள் பளபளத்தது.
அவள் நம்பிக்கையை குலைக்க அவன் விரும்பவில்லை..! அன்றைய பேச்சு அதிகாலை வரைக்கும் நீடித்தது..! பரிமாறிக்கொள்ள அன்பும், பசியாறிக் கொள்ள காதலும் அவர்களின் வாழ்க்கையை அழகாக்கியது..! கோயிலுக்கு போய்விட்டு வந்து பேசுவதாகச் சொன்னாள். அதன்பிறகு பேசவே இல்லை அவள்..!
அத்தனை பேரும் சேர்ந்துதான் கிளம்பினார்கள். ஆனால் காலையில் எழுந்ததில் இருந்து குழந்தைக்கு உடம்பு சுட ஆரம்பிக்க, மெல்லிய கவலை வந்து அவர்களை ஆட்கொண்டது..! அடுத்தடுத்து தடங்கல் வருகிறதே என்ற வருத்தமும், அழுத்தமும் மிருதுளாவின் மனதை அழுத்த, கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.
‘’அத்தை இன்னொரு நாள் போயிக்கலாமா..?” மிருதுளா வந்து பக்கத்தில் கேட்க, அவளின் கலங்கிய கண்களும் குழம்பிய முகமும் கல்பனாவை என்னவோ செய்தது..!
‘’புறப்பட்ட பயணத்தை நிறுத்தக்கூடாது மிருதுளா. அது நல்லதாவும் இருக்கலாம், கெட்டதாவும் இருக்கலாம். ஆனால் நம்ம ஏன் கெட்டதை நினைக்க..? நல்லதே நினைப்போம்..! நான் பாப்பாவை வச்சுக்கிட்டு வீட்டிலேயே இருந்துக்கறேன். நீயும் அப்பாவும் அம்மாவும் போயிட்டு வந்துடுங்க..!” குழந்தையை மடியில் கிடத்தி தாலாட்டிக் கொண்டே சொன்னார்.
யோசனையாய் பார்த்தாள்.
‘’எப்படியும் சாயங்காலத்துக்குள்ள வந்திடுவீங்க தானே..? பாப்பாக்கு பால் குடுத்துடு..! அப்புறம் குடுக்கறதுக்கு கொஞ்சமாய் தாய்பாலை கிண்ணத்துல சேர்ந்தி வச்சுடு..! அதுக்கு மீறி அழுதா நான் பசும்பால் கலந்து கொடுத்துக்கறேன். மழை வர்றதுக்குள்ள காலாகாலத்துல பூஜையை முடிச்சுட்டு வந்திடுங்க..!”
தயங்கி நின்றவளை ஒன்றுக்கு நான்கு முறை வற்புறுத்திச் சொல்லி கல்பனாதான் அனுப்பி வைத்தாள். பின்னாளில் இந்த நிகழ்வை எண்ணி கல்லாய்ச் சமைந்திருக்க போகிற காலத்தின் தீர்ப்பு அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை...
மழை மெல்லிய சங்குப்பூவாய் பெய்து கொண்டு இருந்தது. அரை மனதாய் மிருதுளா கிளம்பி நின்றாள். குழந்தையை அணைத்து முத்தமழை பொழிந்தாள். வயிற்றில் சுமந்தநொடி தொட்டு இந்த நிமிசம் தான் தபஸ்வியின் ஸ்பரிசத்தை தள்ளி வைப்பது போன்ற பிரம்மை அவளை ஆட்கொள்ள, மறுபடியும் குழந்தையை வாங்கி முத்தமழை பொழிந்து ஓய, பிள்ளைபெற்ற அனுபவப் பெண்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்..!
‘’மிருது, அப்படித்தான் இருக்கும்..! முதல் தடவையா வெளியே போறதாலே அப்படி இருக்கும்..! பத்திரமா போயிட்டு பரிகாரத்தை முடிச்சுட்டு வாங்க” மருமகளின் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி வைத்தாள்..!
அவர்கள் கிளம்பிப் போனதும் மழை ஊற்றெடுக்க ஆரம்பித்து இருந்தது. கரிய மேகங்கள் கன்னாபின்னாவென்று கரித்துக் கொட்ட தொடங்கி இருந்தன. ஊசித்தூறல்,பாசித்தூறல் என்ற நிலைமாறி ஊற்றுக்கண் ஒருபக்கமாய் ஓங்காரமெடுக்க ஆரம்பித்து இருந்தது.
மூன்று பிள்ளைகளை பெற்று வளர்த்த கல்பனாவிற்கு பேத்தியை கையாள்வது அத்தனை சிரமமாக எல்லாம் இல்லை..! குழந்தையை மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க வைத்துவிட்டு, தூளியில் போட்டுவிட்டு சமையல் கட்டிற்கு நகர்ந்தார். இட்லிகளை தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு அமர, மனசோ இனம் தெரியாமல் பிசைந்து கொண்டு இருந்தது..!
உள்ளுக்குள் ஏதோ உடைப்பாய், உதிரத்தில் இனம்புரியாத கொதிப்பாய், சாப்பாடு இறங்கவில்லை..! கை அலம்பிக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள். லேண்ட் லைன் ஒலித்தது..! கொஞ்ச யோசனையாக போய்த்தான் எடுத்தார். பெரும்பாலும் தெலுங்கில் தான் பேசுவார்கள்..! புரிந்துகொள்ள முடிந்தாலும், பதில்சொல்ல தெரியாது..!
மிருதுளா பெற்றோர்களோடு கிளம்பிச் சென்ற கார் ரிஜிஸ்டேசன் எண்ணை வைத்து தொலைபேசி எண்ணை அறிந்திருக்கிறார்கள்..!
அவர்கள் சொன்ன செய்திகளை வார்த்தையில் கோர்த்து யூகித்தபோது பூகம்பம் ஒன்று பூமியைவிட்டு கல்பனாவின் தலையில் இறங்கி இருந்தது..!
”...எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே
எவ்விதம் முடியும் இதுதான்
பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதை எல்லாம் மாறி வரும் பயணம்
முடிந்துவிடும் மாறுவதைபுரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை...”
6
வாழ்க்கை மீது கடுங்கோபம் வந்தது..! உவ்வா முள்ளாய் நெஞ்சில் குத்திக் கிழித்துக் கொண்டிருந்த நினைவுகளை களையவும் முடியாமல் அணியவும் முடியாமல் தவித்த நாட்களை மட்டும் வாழ்க்கை செப்பேட்டில் இருந்து கழித்துவிட்டால் எத்தனை சுகமாக இருக்கும்..!
ஒருநாள் என்பது இப்படி ஒரு யுகத்திற்கான கவலைகளை உள்ளடக்கியதாக இருக்குமா என்ன..? ஊர்ந்து ஊர்ந்து உச்சி அடைந்த இதயங்கள், தடுமாறி தலைக்குப்புற சரிந்த நிகழ்வாய் அது அமைந்து போனது..!
தொலைபேசி தலைகீழாய் தூக்குப்போட்டுத் தொங்க, கல்பனா அலறிய அலறலில் அந்த பிரதேசமே உறைந்து போனது..! ஆந்திரா தமிழ்நாடு எல்லையில், மிருதுளா சென்று கொண்டிருந்த கார் மீது சிலிண்டர் ஏற்றி வந்த டேங்கர் லாரிமோதி தீப்பிடித்து…
பரிகாரம் செய்யப் போனவள், காரியம் செய்வதிற்கு கூட பிடி சாம்பல் இல்லாமல் கருகிப் போனாள்..! பெற்றவர்களோடு சேர்ந்து போகும் பெரும் பேற்றையும் பெற்றவளாக தன்னை மாற்றிக் கொண்டாள்..!
எப்படி நடந்தது மற்ற விபரங்கள் எல்லாம் என்று கேட்டால் விளக்கவே தெரியாது. நந்தா எப்படி அங்கே வந்தான்,
உருக்குலைந்த மனைவியின் கடைசி மிச்சத்தையாவது பார்த்துவிடத் துடித்தான்,,, பிறந்து ஒருமாதமான குழந்தையும், அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத அன்னை இன்னொரு குழந்தையாக மாறியதை தாங்கவும் முடியாமல் எப்படி சென்னை அழைத்து வந்தான் என்று யோசிக்க ஆரம்பித்தால் அது மிகப்பெரிய கிளைக் கதையாக விரியும்..!
ஒவ்வொரு நாளையும் துளித் துளியாக வாழ்க்கையில் சேகரம் செய்து சந்தோசித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, வழிமாறிப்போன அந்த ஒருநாளின் கணத்தை தாங்கவே இயலவில்லை..!
‘’...போகமாட்டேன்னு சொன்னவளை வற்புறுத்தி போக வச்சி நானே என் மருமகளை கொன்னுட்டனே..! ‘’ இதைத்தவிர கல்பனாவின் வாயில் இருந்து ஒற்றை வார்த்தையும் வரவேயில்லை..!
நந்தா தடுமாறிப் போனான்..! அவன் வாழ்க்கையில் இதுவரை புரட்டியே பார்க்காத அனுபவப் பாடம்..! எப்படி இதையெல்லாம் கடந்து போவது..! வழியும் தெரியவில்லை, அவன் வலியும் குறையவில்லை.
ஆனால் அவன் சொந்த இழப்பைப் பற்றி சிந்திக்க விடாமல் காலம் அவனை நெருக்கி வைத்திருந்தது மட்டும்தான் ஒற்றை ஆறுதல்..! கைகுழந்தை, பராமரிக்க ஆளில்லை. அம்மாவோ அதைவிட குழந்தை போல் இருந்தாள். சரிந்து விழும் முந்தானையை ஒழுங்கு செய்யக்கூட தோன்றாமல் அமர்ந்திருந்த அம்மா அவன் நம்பிக்கையை அசைத்துக் கொண்டிருக்க, அவனுகாக இல்லாது போனாலும், அவனுக்குள் உயிர் வளர்த்த அத்தனை ஜீவனுக்காகவும் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
கல்லூரியில் முதலாம் ஆண்டில் இருந்த வீணாதான் ஓரளவு சமாளித்தாள் என்றாலும், அச்சிறுபெண் தோள்கள் பாரம் தாங்க பழகவே இல்லை..!
கூட்டுக்குள் வாழ்ந்த தூக்கணாங்குருவிகள், கூடு இழந்து தவிப்பது போல் இருந்தது..! தன்னையே மறந்திருந்த கல்பனாவை நம்பி குழந்தையை விட்டுவிட்டு போக பயமாகவும் இருந்தது..!
விக்கியும், வீணாவும் மாறி மாறி விடுப்புப் போட்டார்கள்.ஆனாலும் அவர்களுக்கு குழந்தையை கையாளத் தெரியவில்லை..! துவண்டு போனது குடும்பம்..! நடந்த பேரிழப்பை எண்ணி வருந்தக்கூட அவர்களிடத்தில் நேரமில்லை..!
தன்னைப் பெற்ற தாயையும், தான் பெற்ற சேயையும் ஒருசேர சுமக்கும் அபாக்கியவான் ஆனான் நந்தா..! அத்தனையும் மீறி படுக்கைக்கு வந்தால், தோளில் முகம்பொதிக்கும் அவளின் நினைவு வந்து துடிக்க வைக்கும்..! நடந்ததை நிகழ்ந்ததாய் நம்பவே அவன் ஆழ்மனசு மறுத்தது..!
தவிப்போடு கீழே இறங்கி வந்தால், அம்மா சோபாவில் அமர்ந்து விக்கி அழுது கொண்டு இருப்பாள்..! மடிகவிழ்ந்து தன் சோகம் கொட்டக்கூட ஆள் இல்லாமல் கையறு நிலையில் நிற்பான்..!
‘’நான் தப்பு பண்ணிட்டேன்.. நான் தப்பு பண்ணிட்டேன். மாட்டேன் மாட்டேன்னு சொன்னவளை, போகச்சொல்லி என் தங்கத்தை நெருப்பில கருக வச்சிட்டேன்..! அவ புள்ளை நாளைக்கு வந்து என் அம்மா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவேன்..? நந்தா அத்தனையும் என் தப்புத்தான்..! அந்த சிரிச்ச முகத்தை இனி என் ஜென்மத்துல பார்க்கவே முடியாதா..?” அரற்றி அழுபவளை என்ன சொல்லியும் தேற்ற வழியே இருக்காது..! அழுது அழுது சோர்ந்து தன்னால் உறங்கினால் தான் உண்டு..!
இருளில் கிடைத்த ஒற்றை தீக்குச்சியாய் அந்த சமயத்தில் தான் சந்தியா சென்னைக்கு மாற்றலில் வந்தாள்..! அதுவும் நந்தாவின் ப்ரான்சுக்கே. இளைப்பாறிக் கொள்ள ஒரு தோள் கிடைத்தது..! தன் கவலைகளை பேசக்கூட ஆள் அற்ற அவனுக்கு சந்தியாவின் வருகைக்கு பின் இளைப்பாறல் கிடைத்தாலும், நினைவுகள் கடப்பதிற்கு பதிலாய் கவலைகள் பவளப்பாறைகள் போல் வளர்ந்து முகடு தொட்டது..!
மூவரும் சேர்ந்து களித்த நாட்கள் அவன் வாழ்க்கையின் சந்தோசத்தை கழித்த நாட்களாய் மாறிப் போனது..! மூன்று மாதங்கள் கூட நிறையாத கைக்குழந்தை, அதை கவனிக்க வேண்டிய தாயோ அதைவிட நினைவு தெரியாத மென்குழந்தை..!
செயலற்றுப் போனான் நந்தா. சந்தியாவால் ஒரு எல்லைக்கு மேல் உடன்வந்து துணை நிற்க முடியவில்லை..! குழந்தையைத் தூக்கத் தெரியாமல், பாலூட்டத் தெரியாமல், குளிக்கவைக்கத் தெரியாமல் தவியாய் தவித்துக் கொண்டு இருந்தான் நந்தா. கல்பனாவை தெளிய வைத்தே ஆகவேண்டிய நிலையில் நின்றான். ஆனால் தெளிந்தால் அழுது தன்னை கரைத்துக்கொண்டு நின்றாள் அம்முதிய பெண்..!
‘’என்ன செய்யப் போறே நந்தா..? இப்படியே எப்படி காலம் நகரும்..! வீட்டில ரெண்டு சின்னப் பசங்க..! கைக்குழந்தை, அம்மான்னு என்ன செய்யப் போறே..? சீக்கிரம் அம்மா மீண்டு வரணும்..! இதைத் தவிர இப்போதைக்கு எந்த வழியும் இல்ல.” சந்தியா உண்மையான வேதனையோடு சொன்னாள்.
நந்தாவின் பாதிநாள் விடுப்பிலேயே கரைந்தது..! தன் நினைவுகளில் நீக்கமற கலந்து போனவளை நினைக்ககூட வழியில்லாமல் அவன் நிகழ்வை சுமந்து கொண்டு திரிந்தான்..!
உலகம் எத்தனை மென்மையானதோ, அத்தனை வன்மையானது என்று அன்றைக்குத்தான் புரிந்தது.இலை போட்டு விருந்து வைத்த அதே இறைமைதான், வலைபோட்டு மீனை பிடித்தும் துடிக்க வைத்தது..!
சந்தோசங்களை மட்டுமே பழக்கப்படுத்திய வாழ்க்கையால் சங்கடங்களை சந்திக்க இயலவில்லை..! மனசு பட்டுப்போனது. சந்தோசமோ துக்கமோ தன் தாயின் தோளிலேயே தளிராய் கிடந்து பழகியவனால், அந்தத் தாயின் பேதமையை சந்திக்கவும் இயலவில்லை… சிந்திக்கவும் மனதில்லை..!
சுருண்டு பேனான்..! பகல் முழுக்க போராடி துடித்தால், இரவில் அவள் நினைவு வந்து அவனை அலைக்கழிக்கும்..! உறக்கமும் கூட தராமல் இறைவன் அவனை இரக்கமில்லாமல் தண்டித்துக் கொண்டு இருந்தான்..!
அன்று வங்கியில் அரைநாள் விடுப்போடு அவன் வெளியில் வர, தொடர்ந்து வந்து புருவம் உயர்த்தினாள் சந்தியா..!
”காலையில இருந்து அம்மாவுக்கும் உடம்பு முடியல சந்தியா..! விக்கி செமினார் போயிட்டான். வீணாக்கு செமஸ்டர் போகுது..! எனக்கு ரெம்ப ஸ்ட்ரஸ்ஸா இருக்கு..! மிருதுளா போய் இன்னும் இரண்டு மாசம் கூட முடியல..! என்னால இந்த வாழ்க்கையை சுமக்க முடியல சந்தியா. இப்படியே போயிடுமா இந்தக் காலம்..?” அவன் குரல் இடற, காற்றில் அலைந்த முடியை ஒருமுகப் படுத்திக்கொண்டே சொன்னாள்.
‘’எப்பவும் வாழ்க்கையை முனையில நின்னு பார்க்கவே கூடாது நந்தா..! பாசிடிவ், ஆர் நெகடிவ் நாம நிக்கிற முனையைத் தவிர, இந்த உலகத்துல எதுவுமில்லைன்னு தோணும்..! நடுவில நின்னு பார்த்தா, நல்லதும் கெட்டதும் சமதூரத்துல தெரியும்..! எந்தப் பக்கமும் வாழ்க்கை முள் முனை மாறும்கிற
நம்பிக்கையைத் தரும்..! உனக்கு சின்ன ஆறுதலோட தான் வந்தேன் அதுக்குள்ள நீ கிளம்பிட்டே.” அவனோடு காருக்குள் வந்து அமர்ந்தாள்.
கண்களில் சின்ன வெளிச்சம் வந்தது அவனுக்கு..!
‘’இந்த பொண்ணைப் பாரு” மொபைல் தொடு திரையை தள்ளி ஒரு புகைப்படத்தை எடுத்து நீட்டினாள். கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் சொல்லி முடிக்கும் வரைக்கும் தள்ளி நிற்பது என்ற கணக்குப்படி அமைதியாக வாங்கிப் பார்த்தான்..,
சொல்லி வைத்து செய்து முடித்த ஓவியம் போல் இருந்தாள்..! கண்களில் அப்படியொரு ஈர்ப்பு..! இதழ்களில் ஒரு வெள்ளைப் புன்னகை..!
‘’யார் இவங்க..?”
‘’வானதி. உனக்காகத் தான் பார்த்து இருக்கேன்.” அவள் இயல்பாய்ச் சொல்ல, நந்தாவின் கண்கள் கொவ்வைப் பழமாக சிவந்து போனது..!
‘’ யூ சிட்..! பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு..? ‘’
‘’உனக்குத்தான் பிடிச்சிருக்கு..! இது என் ஃப்ரெண்ட்..! நானும் இவளும் ஒண்ணாத்தான் படிச்சோம்..! சைக்காலஜி படிச்சிருக்கா..! அம்மா மட்டும் தான்.அவங்க புனேயில தன்னுடைய தம்பி வீட்டில இருக்காங்க..! இவ இங்கே தனியார் மருத்துவமனையில சைக்கலாஜிக்கல் ட்ரிட்மெண்ட் பண்றா..! அது தவிர தனியா நிறையப் பேருக்கு நல்லெண்ண அடிப்படையில சிகிச்சை தந்துட்டு இருக்கா.
அவகிட்ட நான் ஆன்ட்டி பத்தி பேசினேன் நந்தா..! சீ இஸ் ரெடி டூ ஹெல்ப் யூ..! இது அவளோட நம்பர்..! நீயே அவகிட்டப் பேசு.” எண்களை எழுதி கைகளில் தந்துவிட்டு போனாள்..! வாங்கி காக்கிதத்தை திருப்பிப் பார்த்தான்..! அவன் வாழ்க்கையே திரும்பிப் பூக்கப் போகிறது என்று அறியாமல்.
* * *
கபேயில் நல்ல கூட்டமிருந்தது..! பருவத்தின் விளிம்பில் நின்றவர்கள் துணைகளோடு குழுமி இருக்க, இதுபோல் கடந்த தன் வாழ்வும் அவள் வாழ்வும் நெஞ்சில் சாமரம் வீசி தன்னால் விலகியது. சின்ன பெருமூச்சை வெளித்தள்ளினான். ஆனால் இதையெல்லாம் யோசித்துக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அவனுக்கு இப்போது நேரமில்லை..!
சட்டையை மேலேற்றி நேரத்தை ஒத்துப் பார்த்துக் கொண்டான்..! டேபிளில் அமர்ந்து அலைபேசியை எடுத்து அழைக்க முனைவதிற்குள் அவள் வந்து எதிரில் நின்றாள்.அதன்பிறகு அவனுக்கு யாதுமாகிக் கொண்டாள்..!
‘’நீங்கதான் நந்தாவா..?” கையில் இருந்த அலைபேசியில் இருந்த புகைப்படத்தை ஒத்திசைத்துக் கொண்டாள்.
‘’ஆமாம் நீங்க வானதி..?”
‘’ம்...” சின்ன புன்னகையுடன் அவன் எதிரில் அமர்ந்துகொண்டாள்.
‘’நீங்க கால் பண்ணும்போது பக்கத்தில தான் இருந்தேன்..! அதான் நேர்லயே பேசலாம்னு வந்துட்டேன்..! சந்தியா என்னோட பழைய ப்ரெண்ட். இன்னும் சொல்லப் போனால் எங்களுக்குள்ள தொடர்பே இல்லாமப் போயிடுச்சு..! அப்படி ஒரு சூழ்நிலையிலதான் அவளை சமீபித்துல எங்க ஹாஸ்பிடல்ல சந்திச்சேன்..! மறுபடியும் நட்பு துளிர்க்க ஆரம்பிச்சாச்சு. நட்பில மட்டும் அந்த சவுகரியம் இருக்கு இல்லையா..?”
அவள் குரலில் ஒரு அன்பிருந்தது… அவள் குரலும் முகமும், கண்களும் அன்பை மட்டுமே பேசிக்கொண்டு இருந்தது. பேரழகெல்லாம் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது. ஆனால் அதைத்தாண்டி பேரன்பு மட்டுமே எல்லோராலும் விரும்பப்படுகிறது.
நடந்த விசயங்களை நந்தா சொல்லி முடிக்கும் வரைக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள்.
‘’ ஐ’யம் சாரி” என்றாள் உண்மையான வருத்தத்தோடு.
‘’சின்னக் குழந்தையை வச்சிட்டு ரெம்பவே கஷ்டப்படுறீங்களே..? நானும் அந்தமாதிரி ஒரு சூழ்நிலையில வளர்ந்ததால உங்களுடைய இந்த தவிப்பும் கவலையும் எனக்கு நல்லாவே புரியுது..! என் அப்பா இறந்தபிறகு அம்மா கிட்டத்தட்ட இதே நிலையிலதான் இருந்தாங்க. இன்னும்கூட தனியா இருந்தா அவங்க தன்னை மீட்டெடுக்க முடியாத நிலைக்கு போயிடுவாங்கன்னு தான் அவங்களை மாமா வீட்டோட தங்க வச்சதே..! மொத்தத்துல நான் தனியா வாழ வேண்டியதாயிடுச்சு” சிரித்துக் கொண்டாள்.
இன்னும் கொஞ்சம் தகவல்களை கேட்டு சேகரித்துக் கொண்டு அடுத்தநாள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லிவிட்டு எழுந்து போனாள்..!
அடுத்தநாள் மாலையில் நந்தா இருக்கின்ற நேரத்தில்தான் வீட்டிற்கு வந்தாள். தன்னை சந்தியாவின் தோழி என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். மற்றபடி தன்னுடைய தொழிலோ நோக்கமோ எதையுமே வெளிப்படுத்திக் கொள்ளவில்லை..!
கவுன்சிலிங் தருகின்ற ஒரு பெண்ணுக்கான தொழில்த்தனம் எதுவுமேயில்லாத மென் இயல்பில் இருந்தாள். அதுவே கல்பனாவை வெகுவாய் கவர்ந்தது..!
‘’இப்பயென்ன எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டு இருக்கீங்க. பாருங்க ஆன்ட்டி… இழப்புகளுக்காக வருத்தப்பட்டது போதும், வாங்க இருப்புகளுக்கு நம்ம வாழ்க்கையை மாத்திக்குவோம்” உள்ளங் கையை மெதுவாய் பற்றி அழுத்திக் கொண்டு சொன்னபோது ஒரு சிரிப்பு சிரித்தது, அவ்வளவு அழகாய் இருந்தது..!
”வாழவேண்டிய குழந்தை போயிட்டா..! இனி நான் இருந்து என்ன பண்ணப் போறேன்..? போக மாட்டேன்னு சொன்ன குழந்தையை போ போன்னு சொல்லி அனுப்பி வச்சனே...” மீண்டும் அழுகை பொங்க, வானதி மாறாத முக முறுவலோடு கனிவாய்ப் பார்த்தாள்.
‘’சரிதான்..! ஒரு உயிர் வாழறதையும், வாழாம வாழ்க்கை முடிஞ்சு போறதையும், உங்க வார்த்தையா நிர்ணயம் பண்ணிடும்..! அவ்வளவு சக்தி இருக்கு உங்களுக்கு அப்படியா..?” வானதியின் கேள்வியில் குழம்பிப் போய் முகம் நிமிர்த்த,
‘’நடக்கிறது உங்க வார்த்தையால வந்தது இல்ல..! கண் திறந்ததால தான் உலகம் விழிச்சதுன்னு நினைக்கிறது பத்தாம் பசலித்தனம் இல்லையாமா..? உங்களுக்கு, உங்க வயசுக்கு எத்தனை அனுபவம் பார்த்து இருப்பீங்க..? அப்பறம் ஏன் எல்லாமே நம்மாள தான்னு நினைக்கிறீங்க..!”
”நான் வாழ்ந்து என்ன செய்யப் போறேன்..? வாழவேண்டிய அந்த மொட்டே என் கண்முன்னாலே கருகிப் போயிடுச்சேம்மா..! இந்த வீட்டில மருமகளாவா இருந்தா, இன்னொரு மகளா இல்ல அவளை நான் பார்த்தேன்..! இந்த ரெண்டு வருசத்துல, எங்க உலகமாவே இருந்து அவளே அதை உருக்குலைச்சுட்டும் போயிட்டாளே...” அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
‘’வாழ வேண்டாம்தான்..! உங்களுக்கு வயசு அறுபதைத் தொட்டாச்சு..! போனாப் போகுதுன்னு போயிடலாம்..! ஆனா உங்க அன்பு மருமகள் உங்க கையில ஒரு அழகான பொறுப்பைத் தந்திருக்காளே, அதை யார் பார்க்கிறது..? கவலைப்பட்டதும் செத்து போயிட ஆரம்பிச்சா, இந்த உலகத்துல கடமைன்னு ஒண்ணு இல்லாமயே போயிடும் இல்லையாமா..!
உங்களை விட உங்க பையன் நிலைமை ரெம்பவே மோசம்..! இன்னும் அவரால அவர் மனைவியோட இழப்பையே முழுசா கிரகிக்க முடியல..! உள்ளிழுத்த மூச்சை வெளித் தள்ளினாத்தான், அதுபேர் சுவாசம்..! கவலையும் அப்படித்தானே! இழுத்துப் பிடிச்ச வேதனையை, அவர் வெளியே தள்ளணும்..! அதன்பிறகு தான் அவரால வாழமுடியும்..! அவர் வாழ வேண்டாமா..?” அவ்வளவு தன்மையாக கேட்டாள்..!உயிரே கரைந்து போய்விடும் போல் இருந்தது கல்பனாவிற்கு..!
‘’வாழணும்... என் புள்ளை வாழணும்.. என் குழந்தைங்க எல்லாரும் வாழணும்..! என் பேத்தி நல்லா இருக்கணும்.” கேவிக் கேவி அழுகை வந்தது..! அவள் மெல்ல மெல்ல அந்த கல்லைக் கரைத்தாள்.
”... உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்
கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்...”
இருள் இல்லாத வாழ்க்கை இல்லை, ஆனால் இருள் மட்டுமேவும் வாழ்க்கை இல்லை, வானதி என்ற நிலவு வான்வழி இல்லாமல் தரைவழி ஊர்ந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வந்தது. சிறுகற்களால் மேவிய பாறையை பூக்கள் தூவி புதுசாக மாற்றித் தந்தாள்..!
எதையும் மறக்க கற்றுத்தரவில்லை. கடமையை நினைக்க கற்றுத் தந்தாள்..! குழந்தையை பார்த்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய அவசியத்தை பேசினாள். வீணாவிற்கும், விக்கிக்கும் தோழியாக மாறிப் போனாள். கடமைக்கு மனசை சுத்தம் செய்யவந்த நிலைமாறி, அந்தக் குடும்பத்தின் அங்கமாக மாறிப் போனாள்.
எல்லாவற்றுக்கும் மேலாய் ஏனோ தபஸ்வியிடம் அப்படி ஒரு பிணைப்பு..! தான் அங்கு மனநிலையை மாற்ற வந்தவள் என்ற பணியே மறந்துபோய், பிணி போக்கும் மருந்தாகிக் கொண்டாள்..!
மழை நேரத்து மழைக்குடை போல் அந்தக் குடும்பத்திற்கு தோன்றியது..! மிருதுளாவை கடந்து வரும் தோணியாக அவள் இருந்தாள்..!
‘’டி,வி. பாருங்க ஆன்ட்டி..! கேம் ஷோ பாருங்க, சூப்பர் சிங்கர் பாருங்க. கார்டூன் நெட்வ்ர்க் பாருங்க. அட சீரியல்ல என்ன குறை..? அதையும் தான் பாருங்க..! ‘’ என்று ஆரம்பித்து டி.வி. யை கல்பனாவிற்கு பழக்கியதே வானதி தான்..!
கல்பனாவின் கவனத்தை திசை திருப்பி, உலகம் என்றால் அத்தனையும் தான் என்று காட்டிக் கொடுத்தாள்..!
‘’எல்லோரோட வாழ்க்கையும் இவ்வளவுதான்..! என்ன சிலருக்கு அது மெகா சீரியல், சிலருக்கு வாரந்தரி..! யோச்சிச்சுப் பாருங்க..! அதுக்காக நம்முடைய பங்கை சுவாரஸ்யம் இல்லாம செய்யலாமா..? பாப்பா உங்களை நம்பி இருக்கு..! இந்த வீட்டில உங்களைத் தவிர யாரால அந்தக் குழந்தையை வளர்த்து எடுக்க முடியும்..?” அவள் வார்த்தைகளில் பெரிய வசீகரம் இல்லை, ஆனால் அதைச் சொன்ன குழைவில், நெளிவில் அத்தனை வசீகரம் இருந்தது..!
அதைக்கேட்டு கள் உண்ட மந்தியாய் தலை அசைப்பார் கல்பனா..! வானதியின் வரவிற்கு பிறகு மெல்லிய இளைப்பாறல் நந்தாவின் வாழ்கையில் கிடைத்தது..! ஆற அமர தன்னுடைய இழப்பை எண்ணி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மூழுகினால் தானே திமிறிக் கொண்டு வெளியில் வர முடியும்..! நீந்திக் கொண்டே இருந்தால் கரையேறுவது எப்போது..?
பிரச்சனைகளோடு சேர்த்து பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய இடத்தில் இருந்தான் நந்தா..! வீட்டில் மூத்த பிள்ளை தன்னை விட தன் குடும்பத்தை சிந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
ஒரு மாதத்திலேயே நல்ல மாற்றம் ஏற்பட்டு இருந்தது கல்பனாவிடம். அழுதாலும், அந்த வெடித்துக் கிளம்பிய கண்ணீர் தான் அவர்கள் பட்ட துயரத்திற்கு ஒரே வடிகால்..! அதுதான் இயல்பானதும் கூட..!
”ரெம்ப ரெம்ப நன்றி மிஸ். வானதி..! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல..! இதை ஏதோ கடமைன்னு நீங்க செய்த மாதிரி எனக்குத் தெரியல..! அத்தனை இணக்கமா நீங்க இருந்ததாலே தான் அம்மாகிட்ட குறிப்பிட்டுச் சொல்லும்படி மாற்றம் வந்திருக்கு..! இன்னும் எவ்வளவு நாள் அவங்களுக்கு கவுன்சிலிங் தேவைப்படும்..?” இரவும் பகலும் கைகோர்த்துக் கொண்டிருந்த மாலை வேளையில் நந்தா கபேயில் கோல்ட் காப்பியை ருசித்தபடி கேட்டான்..!
மழிக்கப்படாத தாடி அவனுடைய பொலிவைக் குறைத்து, முகத்தின் துயர்வை அதிகப்படுத்திக் காட்டியது..! ஜீவன் மறந்திருந்த அவன் கண்களைப் பார்த்தபோது அவன் எத்தனை தூரம் அந்தப் பெண்ணை நேசித்திருப்பான் என்று உணர முடிந்தது..!
‘’இன்னும் அவங்க முழுசா இயல்பை ஏத்துக்கல சார்..! ஆனால் என்னால ஆனா முயற்சிகளை செய்துட்டுத்தான் இருக்கேன். இது உடல் நோய் இல்லை… இதுக்கு மருந்து மாத்திரைகள் எதுக்கும் உபயோகம் ஆகாது..! வேணும்னா அவங்களை தூங்க வைக்க மாத்திரைகள் தரலாம். ஆனால் அவங்களுக்கு மாற்றம் உள்ளுக்குள்ள இருந்து வரணும்..! அதுதான் அவங்களை நிரந்தரமா மீட்டுத் தரும்..!” அவளுடைய குரலில் இருந்த வருத்தத்தை மிக சரியாய் இனம் கண்டு கொண்டான்..!
தலை அசைத்தான்..! அவளுக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்று கேட்டபோது, பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்..!
‘’இதுல யோசிக்க என்ன இருக்கு மிஸ் வானதி..! இது உங்களுடைய வேலை இதுக்கு முன்னாடியும் இந்த வேலையை நீங்க நிறையவே செய்து இருப்பீங்க..! அது மாதிரித்தான் இதுவும். தயக்கம் இல்லாம நீங்க சொல்லுங்க.” என்றபோது அவள் நெற்றியில் சுருக்கக் கோடுகள் இட வலமாய் ஓடியது..!
‘’சொல்லப் போனால் நான் இப்படி தனியா கவுன்சிலிங் அதிகம் கொடுக்கப் போனதில்ல..! போன ஓரிரு இடங்களும் சேவை அடிப்படையில் செய்ததுதான். ஆனால் இந்தமுறை நான் நிஜத்துல ரெம்பவே நெகிழ்ந்து போனது, ஒரு மொத்தக் குடும்பமும் தாண்டி வர முடியாத இழப்பில் தவிக்கும் போது அவர்களைச் சுற்றி ஒரு அழகான தேவதை. குழந்தை, அந்த குழந்தைக்காகவே அந்த மொத்தக் குடும்பமும் மீள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது நான் செய்தது வேலையா பார்க்க முடியல என்னுடைய கடமையாத்தான் பார்க்க முடிஞ்சது.”
அவள் சொன்னபோது நெகிழ்வாய்ப் பார்த்தான். அவள் எத்தனை மறுத்தும் ஒரு கணிசமான தொகையை அவள் கையில் திணித்து விட்டுத்தான் நகர்ந்தான்..!
அவள் அகத்தில் இருந்த நிம்மதி மறுநாள் நந்தாவின் வீட்டிற்கு வந்த போது முற்றாக முடிந்து போய் இருந்தது..! முன்மாலை நேரம் அது. வழக்கமாய் மருத்துவமனையில் பணி முடிந்து ஆறு மணிக்கு மேல் ஹாஸ்டல் திரும்பும் போதுதான் நந்தாவின் வீட்டிற்கு சென்று ஒருமணி நேரம் கல்பனாவுடன் பேசிக்கொண்டு விட்டு வருவாள்..!
நிலைமை மெல்ல மெல்ல சீரடையத் தொடங்க, நித்தம் வருவதென்பதை மாற்றி, ஒருநாள் விட்டு ஒருநாள் சென்று வரலாம் என்ற திட்டமிடல் இருந்தது..! அன்று கிளம்பும்போது சந்தியாவிடம் இருந்து அழைப்பு வர அவளையும் அங்கே வரச் சொல்லிவிட்டு வானதி ஆட்டோ பிடித்திருந்தாள்..!
மணி நான்கை எட்டி இருக்க, இவள் சென்ற போது வீட்டின் கதவு திறந்தேதான் இருந்தது. அந்தச் செயலே கொஞ்சம் அச்சத்தைத் தர, வாசலில் செருப்பை உதறிவிட்டு வேகமாய் உள்ளே சென்றாள். ஹாலில் டி,வி ஓடிக் கொண்டிருக்க, அதில் ஏதோ ஒரு நெடுந் தொடரில் தன் நினைவுகளை தொலைத்துவிட்டு வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தார் கல்பனா..!
இவள் வந்த அரவம் கூடத் தெரியவில்லை..! கண்கள் டி.வி.யில் வெறித்திருக்க, கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது..! ஆனால் உள்ளே நுழைந்த வானதியின் பார்வையில் இதைவிட வேறோர் காட்சி தான் நெஞ்சை உறைய வைத்தது..!
ஹாலில் நடுநாயகமாக இருந்த மரத்தொட்டிலில் குழந்தை படுத்து இருக்க, அதன் மேல் போட்டிருந்த துவலையை கையால் இழுத்து இழுத்து முழுசாய் முகத்தை மூடிக் கொண்டு இருந்தது..! மெல்ல அதன் மூச்சுத் தடைபடத் தொடங்க, திணற ஆரம்பித்து இருந்தது..!
இது எதையும் உணரும் பிரக்ஞை இல்லாமல் கல்பனா அமர்ந்திருக்க, குழந்தையின் கைகால் அசைவைப் பார்த்த வானதி தாவிக் கொண்டு வந்து குழந்தையை அள்ளிக் கொண்டாள்..! ஒரு சிறு நூலிழை நேரம் தாமதித்திருந்தால்,
இப்போது என்னாகி இருக்கும் என்றே சொல்ல முடியாது..!
அவளை அறியாமல் உடல் அதிர, கண்கள் நடுக்கத்தில் கண்ணீர் கக்க, அப்படியே நிற்க அந்தநேரம் மிகச்சரியாக நந்தாவும், சந்தியாவும் வந்து சேர, நடந்ததை யூகிக்க ஒருசில நொடிகள்கூட தேவைப் படவில்லை..!
அம்மாவை உலுக்கி உணர்வுக்கு கொண்டு வந்தான்..!
”ஐயோ அம்மா, என்ன பண்ண இருந்தீங்கன்னு உங்களுக்குத் தெரியுதா..? இந்நேரம் இங்கே வானதி மட்டும் வந்திருக்காட்டி பாப்பா நமகில்லமா..! நினைச்சுப் பார்க்கிற சக்திகூட எனக்கில்லமா..! நான் நடை பிணமா இருக்கேன்.. என்னை உயிர் ஜடமா மாத்திடாதீங்க..!” இரண்டு அந்நியப் பெண்கள் நிற்பதையும் மறந்து அவன் கண்ணீர் விட, அந்த இடமே ஒரு உணர்வு குவியலாகி போனது..!கல்பனா வாய்விட்டு கதறி அழுதார்..!
‘’நான் தப்பு பண்ணிட்டேன்.தப்பு பண்ணிட்டேன்..! டி.வி.யில நான் பார்க்கிற சீரியல்ல புதுசா கல்யாணம் ஆகிப் போற பொண்ணும் மாப்பிள்ளையும் செத்துப் போகிற மாதிரி காட்சி..! என்னால அந்தக் காட்சியை அத்தனை இயல்பா கடந்து போக முடியல..!
இப்படித்தானே.., இப்படித்தானே என் மிருதுளாவும் வெந்து தணலாகி இருப்பா..! நினைக்க முடியலயே என்னால..!” அவர் அழுதபோது குழந்தையோடு வந்த வானதி கல்பனாவை தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.
இறுக்கி தலையோடு தலை வைத்து அன்பு செய்தாள்.
‘’எமோசனல் ஆகாதீங்க ஆன்ட்டி. எல்லாம் சரியாகிடும். அது தான் நான் வந்திருக்கேன்ல...” மென்மையாய் சொன்னவளின் கண்களையே கூர்ந்து பார்த்தாள். பக்கத்தில் நின்ற சந்தியாவையும் பார்த்தார்.
‘’சந்தியா... இந்தப் பொண்ணு உன் ப்ரெண்டு தானே..?”
‘’ஆமாம் ஆன்ட்டி.
”எனக்கு இவளை ரெம்ப பிடிச்சிருக்கு..! நோயில படுத்திருந்த என்னை இப்படி பாயில எழுப்பி உட்கார வச்சது அவதான்..! நான் உலுத்துப்போன கட்டை..! எத்தனை என்னை மீட்டெடுத்தாலும் இந்த குடும்பத்தை சுமக்கிற வலுவெல்லாம் என் தோளுக்கு வருமான்னு தெரியல… எங்க நந்தாவை இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்குமா..? நீ கேட்டுச் சொல்லேன்...” சந்தியாவின் கைகளைப் பற்றிக்கொண்டு அந்த கிழத்தி கண்ணீர்விட, ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது அத்தனை பேருக்கும்..!
வானதி மட்டுமல்ல, இந்தத் தாக்குதலை நந்தாவே எதிர்பார்த்திருக்க வில்லை..! குழந்தையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு அவள் நின்ற கோலமே அவளின் நடுக்கத்தைச் சொன்னது…
‘’ம்ம்மா... என்னது இது...” பல்லைக் கடித்தான்
எதையும் சட்டை செய்யாமல் தடுமாறி வானதியின் முன்னே வந்து நின்றாள். முந்திச்சேலை நழுவிக் கீழே விழுந்திருந்தது. அதுகூட உணர்வில் இல்லை..! முகம் முழுக்க சிவந்து தவிப்பில் தத்தளித்தது..!
”வானதி எங்க நந்தா ரெம்ப நல்ல பையன்..! அவன் மிருதுளாவை எப்படி வச்சிருந்தான்னு உன் ப்ரெண்ட் சந்தியாகிட்ட கேளு..! அந்த பாவிக்குத்தான் இவன்கூட வாழக் கொடுத்து வைக்கல..!
உன்னை எனக்கு ரெம்ப பிடிக்குது..! நீ இருக்கிற கொஞ்சநேரம் எனக்கு எல்லாமே மறந்து போயிடுது..! உன் பேச்சு என்னை மெசமரிசம் பண்ணுது..! உன் குரல்ல அத்தனை வசீகரம் இருக்கு..! நீ இருந்தா எல்லாம் சரியாகும் போல இருக்கு..!
இப்போ இப்போக்கூட பார்த்தே தானே, நீ மட்டும் இல்லைன்னா இந்த பைத்தியக்காரச்சி பாப்பாவை சாகக் கொடுத்திருப்பேன். இப்படித் தான் நான் என் மிருதுளாவையும் கவனம் இல்லாம தொலைச்சுட்டேன்… நான் பாவி பாவி.” தலையில் அடித்துக் கொண்டு அழ, தவித்துப் போனார்கள்..!
கைசூப்பிக் கொண்டு உறக்கத்திற்கு போய் இருந்த குழந்தையின் சுவாசத்தை உறுதி செய்துகொண்டு நந்தாவிடம் குழந்தையைத் தந்தாள். ஏனோ முதன்முறையாக அவனுடைய கண்களை சந்திக்க இடறியது..!
தலையை கையில் பிடித்து அழுது கொண்டிருந்த கல்பனாவின் முந்தானையை எடுத்து மேலே சுற்றி சரிசெய்து விட்டாள். நந்தா நெகிழ்வாய்ப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘’ஆன்ட்டி ரெம்ப எமோசனல் ஆகாதீங்க ஆன்ட்டி..! கொஞ்சம் சரியாக முயற்சி செய்ங்க..! எதிர்பாராத அதிர்ச்சிதான் உங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு..! முதல்ல அமைதியா உட்காருங்க.” என்றவள் சோபாவில் அமரவைத்து ஜக்கில் இருந்த தண்ணீரை டம்ளரில் சரித்துக் கொடுத்தாள்..!
அவளே சமையல் கட்டிற்குச் சென்று அத்தனை பேருக்கும் காப்பி கலந்துகொண்டு வர, நந்தா தர்மசங்கடமாய்ப் பார்த்தான்..!
‘’ஐயம் சாரி..! உங்களுக்கு வீண் சிரமம்…” என்றவனிடம் புன்னகையை சேர்த்து தந்துவிட்டு காப்பியோடு கல்பனாவின் அருகில் அமர்ந்துகொண்டாள். அவர் குடித்து ஓயும் வரைக்கும் மென்மையாய் முதுகு தடவி விட்டாள்..!
‘’ஆன்ட்டி எல்லாத்தையும் இயல்பா எடுத்துக்கணும். நான் இதுக்கு முன்னாடியும் பலமுறை சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். பிம்பத்தை பார்த்து நிஜத்தை உடைக்க கூடாது..! டி,வி.யில நடக்கிறது பொழுது போக்கு..! அதை பார்த்துட்டு நம்முடைய கடந்துகாலத்தை யோசிக்க ஆரம்பிக்க கூடாது..!
நடந்திருக்க கூடாதுன்னு நாம நினைக்கிற எதையும், மறுபடியும் நம்ம வாழ்க்கையில நடக்கமா தடுக்க மட்டுத்தான் முடியுமே தவிர நடந்ததை மாற்ற முடியுமா..? இல்லைதானே..? ஆனால் உங்களுடைய எண்ணச் சிதறலால, அதே விசயம் மறுபடியும் இங்கே நடந்திருக்கும் கொஞ்ச முன்னாடி..! யோச்சிச்சுப் பாருங்க.
இனி எத்தனை யோசித்தாலும் சரிசெய்யவே முடியாத கணங்களுக்காக இப்போ இருக்கிற இந்த பொன்னான நிமிசங்களை இழக்கறது முட்டாள்தனம் இல்லையா..?” ஒரு குழந்தைக்கு கூட புரியும் மொழியில், வன விலங்குகள் கூட ரசிக்கும் குரலில் வானதி சொல்ல, அங்கே நிலவிய அமைதிக்கு, அது அவ்வளவு அழகாக இருந்தது.
கல்பனா புரிந்தது போல் தலையாட்டிக் கொண்டே அமர்ந்திருந்தார். சிலநிமிட வார்த்தையாடலுக்கு பிறகு, வானதி எழுந்து கொண்டாள். சந்தியாவிடமும், நந்தாவிடமும் சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி நடக்க, அதுவரைக்கும் தரைபார்த்துக் கொண்டிருந்த கல்பனா நிமிர்ந்து அமர்ந்து அழைத்தார்.
‘’ ஏய் பொண்ணு நில்லு...” நின்று திரும்பிப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள்.
‘’ சொல்லுங்க ஆன்ட்டி.”
‘’ஐ லவ் யூ, ஐ லவ் யூ சோ மச்..! ஆனால் இந்த வயசுக்கு மேல என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுவும் நீயும் நானும் கல்யாணம் பண்ணிட்டா நல்லாவா இருக்கும்..!
அதனால என் பையனை பண்ணிக்கோ..! யோசிச்சு சொல்லு ஆனால் எனக்கு பிடிச்ச பதிலைச் சொல்லு..! ” சோபாவில் கையூன்றி இவளைப் பார்த்து கண்சிமிட்டிச் சொன்ன போது அத்தனை பேரும் விக்கித்துப் போனார்கள் என்றால், வானதி வெட்கித்துப் போனாள்..!உலக வரலாற்றில் இப்படியொரு காதல் ப்ரபோசல் நடந்திருக்கவே வாய்ப்பும் இல்லை, இனி நடக்கும் என்ற சாத்தியக் கூறும் இல்லை..!
வானதி சிவந்தபடி அங்கிருந்து வெளியேற, கோபாவேசமாக வந்து முன்னால் நின்ற மகனைப் பார்த்துச் சொன்னார்,
‘’நந்தா, நான் மட்டுமில்ல இந்த வீடே சரியாகணும்னா அவ இந்த வீட்டுக்கு மருமகளாகணும்.” தீர்க்கமாய் வந்தது வார்த்தைகள்.
”மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்கவேண்டும்
குலமகளாய் கிடைப்பதற்கோகொடுத்து வைக்கவேண்டும்
அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம்
நீ அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க...”
8
பெசன்ட் நகர் பீச்சை ஒட்டி இருந்தது அந்த பீச் ரெஸ்டாரென்ட். கடல் காற்று உடல் நீவிக்கொண்டு இருந்தது. அத்தனை பேரின் பண்டங்களிலும் மண் அள்ளிப்போட்டுக் கொண்டு இருந்தது காற்று..!
குர்தியும் ஜீன்ஸுமாய் அமர்ந்திருந்தாள் சந்தியா. அவள் எதிரில் அமர்ந்து நகம் கடித்துக் கொண்டு இருந்தாள் வானதி. அவள் உடுத்தியிருந்த பருத்தி புடவை அடிக்கடி அத்துமீறி களைத்து விளையாடியது உப்புக் காற்று..!
‘’ஐயம் சாரி வானதி..! அவங்க அப்படி கேட்பாங்கன்னு நந்தாவே எதிர்பார்க்கல..! இன்பேக்ட் இதுக்குமேல அந்த வீட்டுக்கு நீ கவுன்சிலிங் வருவியான்னே அவருக்கு சந்தேகம் வந்துடுச்சு..! ஆனால் உனக்கே கல்பனா ஆன்ட்டியோட உடல்நிலையைத் தெரியும். அவங்க மனநிலையும் தெரியும்..!
நாம பலமனிதர்களை சந்திச்சு இருக்கோம். ஆனால் நிஜத்துல அந்தக் குடும்பம் அத்தனை அழகான பூஞ்சைக் குடும்பம். சின்ன சின்ன தவறுகளுக்கு கூட கழுவேறி தண்டனை கேட்குற நேர்மையான மனசு எனக்குள்ள வியப்பா விழுந்து விதைமாதிரி வளர்ந்த குடும்பம் அது..!
அவங்களால தன்னால் தன் மகன் வாழ்க்கையை இழந்ததையும் பேத்தி இப்படி ஆனதையும் தாங்கிக்க முடியல..! அந்த வலியை இறக்கி வைக்க முடியாம தவிக்கிறாங்க..! நீ அவங்களை குணப்படுத்த வந்திருக்கேன்னு மறந்துட்டு உன்னையே கேட்குறாங்க. நீ அதை பெருசு பண்ணாதே”
ஆர்டர் செய்த கோன் ஐஸ்க்ரீம் வந்தது… டிஷ்யூ உடன்..! குவிந்திருந்த ஐஸ்க்ரீம் கோபுரத்தை காற்றுக் களைத்து விளையாடியது அவற்றில் சில துளிகள் இவர்கள் கன்னத்தில் பொட்டு வைத்தது. அந்த குளிரில் ஐஸ்க்ரீம் சுவைப்பதே அவ்வளவு ஜில்லிப்பாய் இருந்தது.
‘’நான் அதை பெருசா எடுத்துக்கல சந்தியா..! ஆனால் நந்தா என்ன யோசிச்சுருப்பார்னு எனக்கு வருத்தமா இருக்கு..! அவங்க மனைவி இறந்த துக்கத்தை அனுபவிக்க கூட வழியில்லாம அவங்க நிலைமை இருக்கிறதை பார்க்கும்போது மனசிற்கு வருத்தமா இருக்கு..!”
‘’பாவம்டி அவரு..! அத்தனை ஆழமான அன்பு ரெண்டு பேருக்கும் நடுவில. கனவில கூட இப்படி ஆகும்னு அவங்க நினைக்கவே இல்ல. இதுமாதிரி அடிகளுக்கு பழக்கப்படாததால அவரால வலி தாங்க முடியல அதுதான் நிஜம்..! ஆனால் வலிக்காத மாதிரி நடிக்கிறாரு.”
காற்றுக் களைத்துப்போட்ட மணலை, அலை வந்து ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தது..! இருவரும் அலையின் ஓரம் நடந்தார்கள். வானதியின் மனசு அலைபாய்ந்து கொண்டே இருந்தது..!
அன்பான குடும்பம்.. அவள் சுவைத்தே இராத அன்பு அவள் சுவாசித்தே இராத அன்பு! அப்பாவின் மரணத்திற்கு பின் கிட்டத்தட்ட அம்மா இப்படித்தான் ஆகிப் போனார். அப்போது வானதிக்கு ஏதுமே அறியாத பருவம்.
தனித்திருந்தாலே தன்னை மாய்த்துக் கொள்வார் என்ற பயத்தில் தான் தம்பியின் குடும்பத்தோடு செல்ல, காலப்போக்கில் அவர்கள் வீட்டிற்கு சம்பளம் இல்லாத வேலைக்காரி ஆனார்.
உடன் இருந்த சிறு மகளின் கனவுகளைப் பற்றியும் துளிகூட யோசிக்கவில்லை.
சிறகு முளைத்த கிளிகள் பறக்க நினைப்பது இயல்புதானே. வானதி அந்த அடக்குமுறை சாம்ராஜ்யத்தை விட்டு தன்னை விடுவித்துக் கொண்டாள். அப்பாவின் சொத்து ஓரளவு இருந்தது. அது அவளின் படிப்பிற்கு உதவியது. அம்மாவை சென்னைக்கே அழைத்தாள். ஆனால் முழுக்க தன்னம்பிக்கையைத் தொலைத்து இருந்த அம்மா, தம்பியின் உதவியில்லாமல் தன்னால் மூச்சு விடக்கூட இயலாது என்று மறுக்க, தனியாக வந்து ஹாஸ்டலில் சேர்ந்து, வாழ்க்கை பிடித்தமில்லாமல் நகர்ந்து கொண்டு இருந்தது.
ஆனால் கண்ணில் காணும் அத்தனையும் ரசிக்கும் இயல்பு வானதிக்கு இருந்தது. கடினமாக இருந்த பாதையை ரசித்துக் கொண்டே கடந்து கொண்டு இருந்தாள். மூன்று மாததுக்கு ஒருமுறை புனே சென்று அம்மாவை பார்த்துவிட்டு வருவாள்.
வானதி அம்மாவை இங்கே அழைப்பதும், அம்மா வானதியை புனேவுக்கு அழைப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்தது. இவள் அங்கே வந்து தங்குவதை மாமாவின் குடும்பம் ரசிக்கவில்லை என்றும் அறிவாள்..! சம்பாதிக்க ஆரம்பித்த நாள்தொட்டு அம்மா அங்கே தங்கி இருப்பதிற்கான ஒரு கணிசமான தொகையை மாமா வீட்டிற்கு தந்து கொண்டேதான் இருந்தாள்.
விருப்பமில்லா விட்டாலும் தனிமை பழகித்தான் போய்விட்டது. ஆனால் நந்தாவின் குடும்பத்தைப் போல் தித்திப்பான மக்ரூன் குடும்பத்தைப் பார்த்தபோது அவள் கரைந்து போனாள். வாயில் போட்டதும் கரைந்து காணாமல் போகும் மக்ரூன்கள்.
தித்திப்பாய் அடிநாக்கில் ஒருநாள் முழுக்க இனிக்கும் மக்ரூன்கள் நினைத்த மாத்திரத்தில் சுவை நாக்கில் ஊறவேண்டும்..! அப்படியொரு இயல்பான குடும்பம்.இழப்பும் துக்கமும் வாட்டி வதைத்தபோதே அந்தக் குடும்பம் அழகாய்த்தான் இருந்தது. அதெல்லாம் இல்லாத நிலையில் அது எத்தனை சௌஜன்யமான குடும்பம் என்று யோசிக்கவே கதகதப்பாய் இருந்தது..!
இருவரும் எழுந்து நடந்தார்கள். மௌனியாய் நடந்து கொண்டே வந்த தோழியை கொஞ்சம் புதிராகப் பார்த்தாள்.
‘’ஏன் சந்தியா, நந்தா பத்தி என்ன நினைக்கிறே..? ‘’ எடுத்து வைத்த அடிகளை ஆராய்ந்தபடி அடுத்த அடிகுறித்த ஆராய்ச்சியில் இருந்தாள் வானதி. திரும்பி ஆச்சர்யமாய் அவளின் முகம் பார்த்தாள்…
‘’என்ன நினைக்க. எனக்கு ப்ரெண்ட்..! இத்தனை அன்பான பக்குவமான கண்ணியமான மனுசன் இந்தகாலத்துல ரெம்ப அதிசயம். அவருக்கு மிருதுளா மேல இருந்த காதலுக்கு பல இடங்களில் சாட்சியாய் நான் இருந்திருக்கிறேன். இப்போ அவருக்கு ஏற்பட்டு இருக்கிற இந்த இழப்போட வலியையும் பார்த்துகிட்டே இருக்கேன்.
எல்லாம் சரியாகணும் நந்தாவோட வாழ்க்கைச் சரியானால் அதுக்காக முதல்ல சந்தோசப்படுற மனுசி நானாகத்தான் இருப்பேன்.”
அடுத்தடுத்து மருத்துவமனையில் வேலைகள் அதிகம் இருந்ததால் வானதியால் நந்தாவின் வீட்டிற்கு செல்ல இயலாமல் போனது என்பதுதான் நிஜமாக இருந்தாலும், நந்தாவின் சிந்தனையில் அது வேறுவித உணர்வை உண்டாக்கி இருந்தது.
அம்மாவின் வார்த்தைகள் வானதியை காயப்படுத்தி விட்டதோ என்று கலங்க ஆரம்பித்தான் நந்தா.! முன்பே சுமக்க ஒவ்வாத சுமைகள் தோளில் இருக்க, இந்த புதுச்சுமையும் அவனை கல்லாக்கி வைத்திருந்தது..!
குழந்தையை அம்மா கவனிக்கத் தவறிய நிகழ்விற்கு பிறகு, அம்மாவிடம் குழந்தையை தனியாக விட்டு விட்டுப் போகவே தயங்கிக் கொண்டு இருந்தான். அவன் நினைவுகளை மட்டும் சுமந்து சுகப்பட்டுக் கொண்டு இருக்கும் இயல்பு சராசரி. கடந்து போன இனிப்பிற்கு மிச்சமிருக்கும் ஒற்றை தித்திப்புத்தான் அவனுடைய தபஸ்வி.
தன்னைகூட அவனால் மறந்துவிட முடியும்...குழந்தையை எப்படி மறந்திருக்க..? விக்கியை இரண்டு நாள் விடுப்பெடுக்கச் சொல்ல, அவன் இசைவாய்த் தலையசைத்தாலும், உள்ளுக்குள் குற்றவுணர்வாய் இருந்தது..!
படிப்பில் மும்முரமாக இருக்கவேண்டிய வேளைகளில் தன்னுடைய சொந்தக் காரணத்துக்காக தம்பி தங்கையை அலைக்கழிப்பதுபோல் மனசு கவலைப்பட்டது.
‘’ ஐ’யம் சாரி விக்கி..! நானே உன் படிப்பைக் கொடுக்கிறேன்னு தோணுது.” நந்தா சொல்ல, விக்கி தாவி வந்து அண்ணனைப் பற்றிக் கொண்டான்.
”என்னண்ணா இது..?இது உனக்கு மட்டுமில்ல… எல்லாருக்கும் தான் துக்கம்..! இந்த கஷ்டத்தை நாம நாலு பேரும் சேர்ந்துதான் கடந்து வரணும்..! அம்மா மட்டும் சரியா இருந்திருந்தா நாம மேனேஜ் பண்ணியிருக்கலாம்..! ”
இருக்கும் சூழ்நிலைக்கு அம்மா குழந்தையை கவனித்துக் கொள்ளவில்லையே என்ற கவலையெல்லாம் போய், தனியே அம்மாவை எப்படி வீட்டில் விட்டு விட்டுப்போவது என்ற கவலையே இப்போது மனசை அரிக்க ஆரம்பித்தது..! பிரக்ஞை மறந்து தன்னால் அழுது தன்னால் பிதற்றி, கண்முன்னால் என்ன நடந்தாலும் உணராமல், சிலநேரம் கல்பனா தன்னாலே சரியாகி குழந்தையை அள்ளிக் கொஞ்சிக் கொண்டும் இருந்தார்..!
நான்கு நாள்கள், கற்பூரமாய் காணாமல் போய் இருந்தது. பேங்கில் ஆடிட்டிங் இருந்ததால், நந்தாவால் விடுப்பே போட இயலவில்லை. விக்கி மூன்று நாட்கள் உடன் இருந்தான். இது வீணாவின் முறை..! அதிகமாய் விடுப்பு எடுத்துக் கொண்டே இருப்பதால் செமஸ்டர் எழுத அனுமதிக்கமாட்டோம் என்ற சுற்றறிக்கை வர, மிரண்டுபோனாள் வீணா.
மொத்தத்தில் காலம் நந்தாவின் கைபிடித்து புது வாழ்க்கைக்குள் நில்லாமல் சுழலவிட்டது..! இதற்கெல்லாம் ஒரே தீர்வு அம்மா நிலைப்பட வேண்டும். அதற்கு அவரை வழிநடத்த வேண்டும். தீர்மானமாய் வண்டியை எடுத்துக் கொண்டு வானதியைப் பார்க்க ஹாஸ்பிடல் சென்றான்..!
கொத்து கொத்தாய்ப் பூத்திருந்த பேர் தெரியாத பூக்கள் கொண்ட அனாமதேய மரத்தில், இலைகள் சலசலத்துக் கொண்டதால் காற்று பெருக்கெடுத்துக் கொண்டு இருந்தது..! உள்ளே சென்று சந்திக்கும் பிரயாசை இல்லாமல், வண்டியை பார்க்கிங்கில் விட்டுவிட்டு மர நிழலில் காத்திருந்தான்.
மருத்துவமனையின் பிரத்யேக சுறுசுறுப்பும், பரபரப்பும் துளிகூட மட்டுப்பட்டு இருக்கவில்லை..! விசிட்டிங் ஹவர் இன்னும் முடிந்திருக்காத படியால் உள்ளுக்கும் புறத்துக்குமாய் மனிதத் தலைகள் மொய்த்துக் கொண்டு இருந்தன..! மணிக்கட்டைத் திருப்பி மணி பார்க்கவும், வானதி வெளியில் வரவும் சரியாக இருந்தது.
இருவர் கண்களிலும் ஒரு அறிமுகமும், இதழ்களில் புன்னகையும் தவழ்ந்தது..!
‘’என்ன சார் இங்கே..? என்னைப் பார்க்கவா..?” என்றாள் இனிதிலும் இனிதான குரலில்.
‘’ம்.கொஞ்சம் பேசணும். ” மறுப்பே சொல்லாமல் காரில் ஏறிக் கொண்டாள்..!
சாலையை மிதித்து கார் விரைய,பேசிக் கொள்ள வார்த்தைகள் இல்லாததால் இருவருக்கும் நடுவில் மௌனம் பொதுத் தேர்வு நடத்திக்கொண்டு இருந்தது..!
கூட்டம் அதிகமில்லாத கபேயில் நிறுத்திக் கொண்டான். இத்தனை முஸ்தீபுகளுடன் என்ன பேசப் போகிறான் என்ற கேள்விகள் முளைத்தாலும், அதைப் பறித்து பத்திரமாக வைத்துவிட்டாள்..
”என்ன சாப்பிடறீங்க..?” என்றான் மென்மையாக.
‘’அஸ் யூ லைக்”
‘’நான் கேட்டது உங்க விருப்பம் பத்தி..! என் விருப்பமும் உங்க விருப்பமும் ஒண்ணா இருக்கவேண்டியதில்ல.” அவனுடைய விளக்கம் நேர்மையாக இருந்தது, சிரித்துக் கொண்டாள்.
‘’பரிசும் விருந்தும் கொடுக்கிறவங்க அன்பையும்,நட்பையும் பேசறது. அதுல இடையில புகுந்து ஆர்டர் கொடுக்கறது மரியாதை இல்ல. நீங்களே சொல்லுங்க எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புன்னு ஒண்ணும் இல்ல.”
இருவருக்கும் கோல்ட் காப்பி ஆர்டர் செய்தான். மெல்லிய இசை அந்தச் சூழ்நிலையை ரம்மியமாய்த் தாலாட்டிகொண்டு இருந்தது. ஆங்காங்கே டேபிளில் காதலர்கள் உலகத்தை மறந்து கொண்டு இருக்க, அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை இருவருமே..!
‘’முதல்ல சாரி..! அம்மா அன்னைக்கு அப்படிக் கேட்டதுக்கு. ஆனால் உங்களுக்கு அவங்களுடைய மனநிலை நல்லாவே தெரியும்கிறதாலே அவங்க, அந்த கேள்விக்கு பின்னால் எந்த உள்நோக்கமும் இல்லைன்னு உணர்ந்துக்க முடியும்னு நம்பறேன்.”புன்முறுவலாய் தலையசைத்தாள்.
‘’ஆனால் நீங்க அந்த கேள்விக்குப் பிறகு வீட்டுக்கு வரவே இல்லை.” என்றான் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்து.அவசரமாய் நிமிர்ந்து அமர்ந்தாள்.
‘’அடடா, நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க மிஸ்டர் நந்தா, அதுவந்து எனக்கு ஹாஸ்பிடல்ல, ஓவர் டைம் ட்யூட்டி போட்டு இருந்தாங்க. எல்லாம் முடிச்சு நான் ஹாஸ்டல் திரும்பறதுக்குள்ளவே நேரம் ஆயிடுது..! என்கிட்ட வேகில்சும் இல்ல. அதனால என்னால வரமுடியல…” எப்போதும் போல தேனிசைக்கும் குரலில் சொன்னாள்.
‘’ஐ’யம் சாரி..! உங்களைத் தப்பா யோசிச்சதுக்கு. ஆனால் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை..! எனக்கு கொஞ்சம் தெளிவான பதில் வேணும்..! அம்மா எப்போ இயல்பாவாங்க..?” இந்தக்கேள்வி கேட்டபோது அவனுடைய வயதையும் மறந்து சிறுகுழந்தையாக மாறி இருந்தான்..!
‘’எனக்கு உங்க சூழ்நிலை புரியுது மிஸ்டர் நந்தா..! அவங்க மனநிலை மருந்தால சரியாகிறது இல்ல மறந்தா சரியாகறது. அவங்க மறக்கணும்..! நடந்த எல்லாத்தையும் மறக்கணும்.” ஆழமாய் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
நெடும் மூச்செடுத்து வெளியில் விட்டான், இழப்பின் வலி மறந்திருந்தாலும் வடுக்கள் அவன் கண்களில் நிறைந்து போய் இருந்தது.
‘’அது நடக்கிற காரியமா..? எத்தனை நாள் நம்மகூட வாழ்ந்தாங்ககிற எண்ணிக்கைத் தேவையில்லை. நம்மகூட எப்படி வாழ்ந்தாங்கங்கிற நினைப்புத்தானே வாழ்க்கை..? மிருதுளாவை அத்தனை சீக்கிரம் எங்க வாழ்க்கையில இருந்து கடந்து வரவே முடியாது..!” குரல் இடறியது. அதை மறைக்க அவசரமாய் ஒரு மிடறு கோல்டு காப்பியை உறிஞ்சிக் கொண்டான்..!
அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
‘’அம்மா மட்டும் சரியானால் எல்லாம் ஓரளவு சரியாகிடும். இது உடல்நலக் கோளாறுனா நான் உலகத்துல எந்த முனைக்கும் போய் அம்மாவை சரி பண்ணிட்டு வந்திடுவேன்..! ஆனால் இது அவங்க மனசோட மாறாட்டம்..! உணர வேண்டிய விசயங்களை நுகரமுடியாது இல்லையா..?
இல்ல, இதைவிட சிறப்பான ட்ரீட்மெண்ட் அம்மாவை குணப்படுத்தும்னு உங்களுக்குத் தோணினா அதைப்பத்தி எனக்கு கொஞ்சம் கைட் பண்ணுங்க..! நான் சரிபண்ண வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்..!
என்னுடைய சுயநலத்துக்காக என் தம்பி தங்கச்சிங்க வாழ்க்கையை நான் பணயம் வைக்கிற மாதிரி கில்டி ஃபீலா இருக்கு..! இந்த அலை எப்போ ஓய்ஞ்சு நான் நீராடறதுங்கிற கவலை இப்போ எல்லாம் அலைகழிக்குது..!” இத்தனை நாளில் சற்று நீளமாய் அவன் பேசியது இன்றுதான் என்று தோன்றியது..!வெளியில் வானம் சிணுங்கத் தொடங்கி இருந்தது.
‘’நீங்க கேட்குற எல்லா கேள்விகளுக்கும் என்கிட்ட எந்த பதிலும் இல்லை..! கண்டிப்பா ஆன்ட்டிக்கு சரியாகும். ஆனால் நீங்க கேட்குற கால அளவுக்குள்ள இல்லை..! அவங்க மனசு பூ மாதிரி மனசுன்னு கூட சொல்ல முடியாது, ஒரு பூவின் ஒற்றை இதழ்மாதிரி..! அத்தனை மென்மையா இருக்கு..!
அப்படிப்பட்ட ஒரு தாய்க்கு குழந்தையா பிறந்ததுக்கு நீங்க குடுத்து வச்சிருக்கணும் ‘’ அவள் நெகிழவாய்ச் சொல்ல, நந்தாவின் கண்கள் கலங்கிப் போனது..!
‘’தன்னைச் சுற்றி இருக்கிற உயிர்களை அவ்வளவு நேசிக்கிறாங்க அவங்க..! உங்க காதலையும், அதன்பின்னான வாழ்க்கையும் அவங்க மனசில படிமமாத் தேங்கிப் போய் இருக்கு..! உங்கள் மனைவி, குழந்தைன்னு ஒவ்வொன்றையும் ஒரு பொக்கிஷமாய் மனசுக்குள்ள பதிச்சு வச்சிருக்க அந்தத் தாயால, தன் வார்த்தையால உங்க வாழ்க்கை முடிஞ்சு போச்சோங்கிற குற்றவுணர்ச்சியில இருந்து மீளவே முடியல.
மருந்துகளாலும், மனநலன் காக்கிற கவுன்சிலிங்குகளாலும் அவங்க கொஞ்சம் மீண்டு வந்தாலும், நடந்ததை நினைவூட்டும் அதுபோன்ற நிகழ்வுகளோ, காட்சிகளோ அவங்க கண்ணுல பட்டா தன்னை மறந்துடறாங்க.”
தலையசைத்தான். இதுக்கு அடுத்தென்ன வழி’ என்பதுபோல கைகளை விரித்துக் கேள்வி கேட்டான்.
‘’கவுன்சிலிங் கண்டிப்பா மாத்தும்..! ஆனால் அவங்க ஆழ்மனசு மாறணும்னா நீங்க கொஞ்சம் மாறணும்” என்றாள் கைவிரல்களை ஆராய்ந்து கொண்டே.நெற்றி சுறுக்கி அவள் முகத்தை பார்த்தான்.
‘’புரியல மிஸ் வானதி..! நான் என்ன மாறணும்..?”
‘’நீங்க சீக்கிரம் ஒரு லைப்ல செட்டிலாகிக்கங்க. அதுதான் இப்போ உங்களுக்கு இருக்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு.” அவள் அமைதியாய் சொன்னாள்.
‘’வாட்..?” அமர்ந்திருந்த நாற்காலியை பின்னுக்குத் தள்ளிவிட்டு அவன் விஸ்வரூபமாய் எழுந்து நின்றான். அவன் கண்களில் கக்கிய நெருப்பு இன்னும் சிலநிமிசத்தில் அவள் கண்களில் நீரை உகுக்க வைக்கப் போகிறது என்றறியாமல்..!
‘ மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் சிந்தும் ஓவியம்…’’
9
இருள் வானத்தின் நிறமேற்றிக் கொண்டு இருந்தது. நட்சத்திர பொட்டுக்கள் ஆகாயத்தில் மொல்டிங்கில் துளையிட்டது போல் இருந்தது. கண்ணாடி கதவுகளில் பின்னாலே தெரிந்தவற்றை கண்களால் உள்வாங்கிக் கொண்டாள் வானதி..!
பெருவிரலால் மற்றேனய விரல்களின் பின்புறத்தை மெல்லத் தடவி தன்னுடைய கோபத்தை குறைக்கும் முயற்சியில் இருந்தான் நந்தா. எழுந்து நின்ற வேகத்தில், வானதியின் விழிகளில் விழுந்து தெறித்த ஒருவித சங்கடத்தைப் பார்த்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
‘’வாட் யூ மீன்..? ‘’என்றான் பற்களை நறநறத்துக் கொண்டு. ஒரு சொற்ப நொடி தாமதித்து இருந்தால் அவனால் யோசிக்க முடிந்திருக்கும் தன்னுடைய ஆளுமை உரிமையில்லாத இடத்தில் பிரவாகமாகிக் கொண்டு இருக்கிறது என்று.
‘’ரிலாக்ஸ் ஆகுங்க மிஸ்டர் நந்தா..! எதுக்காக இத்தனை கோபம்..?”
‘’இது கோபமில்லை, அழுத்தம். என்னுடைய சூழ்நிலையை வச்சு என்னுடைய முடிவுகளை மத்தவங்க நிர்ணயிக்கிறது என்னுடைய சுயமரியாதைக்கு சவால்”அவனுடைய கோபம் பிடிபட்டாலும், அது தன்னிடம் ஏன் இத்தனை ஆவேசமாய் வெளிப்படுகிறது என்ற நூலிழைதான் அவளுக்கு இன்னுமே பிடிபடவில்லை..!
‘’நான் ஒரு மனநல ஆலோசகர் மிஸ்டர் நந்தா..! என்னை நம்பி தன்னுடைய மனசை ஒப்படைக்கிறவங்களுக்கு எனக்குப் புரிந்தவகையில் சரிபடுத்த முயற்சி பண்றேன்.” அவள் குரலில் ஒலித்த நெகிழ்வில் தான் மீண்டும் இயல்புக்கு வந்தான். இருக்கையில் அமர்ந்தாலும், மனமும், உடம்பும் எதையோ பேசிவிடும் உடல்மொழியில் இருந்தது..!
‘’என்னுடைய மனைவி இறந்து முழுசா இன்னும் ஆறுமாசம் ஆகல..! நான் இயல்பா என்னை மாத்திட்டு வாழ முயற்சி செய்றதுக்கு காரணமே என் குடும்பம் மட்டும் தான். அம்மாவுடைய மனநிலையும் தம்பி, தங்கச்சியுடைய எதிர்காலமும், என் குழந்தையின் வாழ்க்கையும் என்னை இயல்பா இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தி வச்சிருக்கு.. இதை வச்சிட்டு என்கிட்ட எல்லாமும் இயல்பா மாறிட்டது மாதிரியான எண்ணத்துல பேசவேண்டாம் மிஸ் வானதி.”
அவன் வார்த்தைகளில் கடுமைகூட, அதில் தெறித்த அனலில் தன்னைப்பற்றிய பார்வை அவன் வரையில் மாறிப்போனது போல் தோன்ற கழிவிரக்கம் சூழ்ந்தவளாய் வேகமாய் இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள் கண்களில் சுடுதண்ணீர் சுரக்க,
”ஐயம் சாரி மிஸ்டர் நந்தா. என்னுடைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருந்தால், உங்களுக்கு நான் சொன்ன வார்த்தைகளில் நீங்க யோசிக்கிற மாதிரியான எந்த பின் அர்த்தமும் இல்லை..! அதுதான் நிஜம். நான் ஓரு நல்லொண்ண ஆலோசனையாத் தான் அந்த விசயத்தை பகிர்ந்துகிட்டேன். நான் இப்போ கிளம்பறேன்” அவசரமாய் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்து நேரத்தை சரிபார்த்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து கொள்ள, தன்னுடைய வார்த்தை பிரயோகம் வானதியைக் காயப்படுத்தி இருப்பதை உணர்ந்து ஒருநொடி ஸ்தம்பித்துப் போனான்.
அவள் துளிர்த்த விழிமொட்டை மறைத்துக்கொண்டு மெல்ல நகர,அவன் பதறிப்போய் பின்னிருந்து குரல் தந்தான்..!
‘’ஐயம் சாரி மிஸ் வானதி..! நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..! நான் என்னுடைய மனநிலையைச் சொன்னேன்”
‘’நானும் உங்க அம்மாவுடைய மனநிலையை மனசில வச்சுத்தான் சொன்னேன். இதுல நீங்க யோசிக்கிற மாதிரி எந்த பின்புலமும் இல்லை..! ‘’ அழுத்தம் திருத்தமாக வார்த்தைகள் வர, அப்போதுதான் அம்மா அன்று வானதியின் முன்னாக வைத்த கோரிக்கையும் நினைவுதட்ட, சட்டென்று பதட்டமானான்.
” ஓ..! நான் அப்படி எதுவும் யோசிக்கல வானதி. கொஞ்சம் இப்படி உட்காருங்க. சில விசயங்களை நான் தெளிவு படுத்திடறேன். ஒருவேளை இந்த வார்த்தைகளை நீங்க தொடராம போனால் நமக்கு நடுவில சமமில்லாத புரிதலே காலத்துக்கும் நீடிக்க வேண்டி வரலாம்.” அவன் வார்த்தைகளில் இருந்த அழுத்தத்திற்கு மரியாதை தந்து மீண்டும் இடத்தில் அமர்ந்தாள்.
கைகளைக் கட்டிக் கொண்டாள். அவனே பேசட்டும் என்று மௌனத்தை பூசிக்சகொண்டாள்.
‘’மிருதுளாவும் நானும் லவ் மேரேஜ் பண்ணிட்டோம்.இதுக்கு மேல அன்பில்லைங்கிற அளவிற்கு இந்த இரண்டு வருசத்துல வாழ்க்கையை பகிர்ந்து கிட்டாச்சு..! வாழ்க்கை மொத்தத்துல தேடல்னா, எங்களுக்கான தேடல் முடிஞ்சு போயாச்சு. கடந்துபோன நாள்கள்ல ஏதாவது வருத்தமோ அழுத்தமோ இருந்தாத்தானே நான் அடுத்தென்னனு யோசிக்க..?
எனக்கு இப்போத் தேவை ஒரு தனிமை..! எனக்கு கிடைச்ச அற்புதத்தையெல்லாம் யோசிச்சு யோசிச்சு அசைபோடற தனிமை. ஆனால். அதுக்குகூட வழியில்லாம என் வாழ்க்கை என்னை சுழற்றி அடிச்சுட்டு இருக்கு. ”அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.
‘’மிருதுளா இடத்தில இன்னொரு ஜீவனை என்னால யோசிக்கக் கூட முடியாது..! அது இன்னைக்கு மட்டுமில்ல… என்னைக்குமே..! எனக்குத் தேவை என் அம்மாவுடைய மன, உடல் ஆரோக்கியம் மட்டும்தான்..! அதுக்கு மட்டும் எனக்கு உங்கள் உதவி தேவைப்படும்” அதுக்கு மட்டும் என்ற இடத்தில் அவனுடையஅழுத்தத்தை வானதி ரசிக்கவில்லை என்றாலுமே, அவளின் குணமே எல்லாவற்றையும் எள்ளலாய் கடந்துபோவது என்பதால், அந்த வார்த்தைகளையும் வலிக்காமல் வாங்கிக் கொண்டாள்.
‘’நான் ஆரம்பத்திலே இருந்தே அதுக்காக மட்டும்தான் மிஸ்டர் நந்தா பேசிட்டு இருக்கேன். என்னைப் பத்திய உங்களுடைய கணிப்பு இன்னும் கொஞ்சம் உயர்வா இருந்தா நல்லா இருக்குமோன்னு தோணுது.” புன்சிரிப்புடன் சொல்ல, இன்றைக்கு தனக்கு என்னானது என்ற புதுக் கவலை அவனுக்கு முளைத்துக் கொண்டது.
அவனின் தவிப்பை ரசித்தவள், மெல்ல முகம் நிமிர்த்தி தன்மையான புன்னகையை உள்வாங்கிக் கொண்டு சொன்னாள்.
‘’மறுமணம் பற்றிய உங்களுடைய முடிவும், பார்வையும், உங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம்..! அதைப்பத்தி கருத்துச் சொல்லவோ உங்க கருத்துக்குள்ள புகுந்து அதை மாத்திக் காட்டவோ நான் அதிகப்பிரசங்கி இல்லை..! ஆனால் அதேவேளை ஒரு முழு வாழ்க்கையும் நினைவுகளோடு கடந்துபோக நினைக்கிறது கூட சரியான முடிவா இருக்கும்னு தோணல..!” அவள் அப்படிச் சொன்னபோது விதி அவளைப் பார்த்து வேதனையாய்ச் சிரித்தது அவள் அறியாதது..!
‘’இந்த உலகத்துல நமக்கு யாருடைய தேவையும் இல்லாம இருக்கலாம். ஆனால் நம்முடைய அன்பும் ஆறுதலும் தேவைப்படற இடத்துல அதை வழங்காம இருக்கிறதும் தப்புத்தான்.இன்னொரு மணம்கிறது உயிரோடு இல்லாத துணைக்கு செய்ற அநீதி ஆகவே ஆகாது..! உயிர்வாழ உணவு மாதிரி, இந்த உலகத்துல எல்லா உயிருக்கும் இன்னொரு உயிரோட அன்னோன்யம் தேவை..! அதை கொச்சையா சிந்திக்கிறதும், இச்சையா அணுகறதும் அவங்கவங்க இஷ்டம்..!
இன்னொரு மணம்கிறதை நீங்க மனோரீதியான தேவைன்னு அணுகுனா எந்தத் துன்பமும் வராது..! அதுக்கு உண்டான கால அவகாசத்தையும் நீங்களே முடிவு பண்ணிக்கலாம்..! நான் இப்போ கிளம்பறேன். நாளைக்கு முடிஞ்சளவு சீக்கிரமா வர முயற்சி செய்றேன்.” எழுந்து கொண்டாள். முகத்தில் அலைபாய்ந்த கூந்தலை பின்னாகத் தள்ளிவிட்டுக் கொண்டு முன்னே நடந்தாள்.
மெல்லிய பிரமிப்பு அவள் மீது படந்தது அந்த நிமிசத்தில் தான்..! அது முனைகூட மடங்காமல் எந்தக் குறையும் இல்லாமல் இந்த நிமிசம் வரைக்கும் அவனுள் பத்திரமாய் பதியமிடப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அடுத்த நாள் வீட்டிற்கு வந்தவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. மருகாத அன்போடு நின்றாள். கொஞ்சம் தவிப்பும், சின்ன குற்றவுணர்வுடன் அவள் விழிகளை எதிர்கொள்ள இயலாமல் நந்தாதான் குன்றிப்போய் இருந்தான்.
வானதியைக் கண்ட கல்பனாவின் கண்களில் விரிந்த தேடலை கவனிக்கத் தவறவில்லை இருவரும்.
‘’ஏன் வரல ஒரு வாரமா..! என்மேல கோபம்னு தெரியுது..! நீ வராததால வீடே விரிச்சினு இருந்தது” குழந்தையைப் போல் சொன்ன கல்பனாவைப் பார்க்க பார்க்க மனது குதூகலித்தது.
வேலை என்ற நினைப்பை மீறி மெல்லிய பிணைப்பு அந்த வீட்டோடு உண்டாகிப் போனது. சிரிப்பும், பேச்சும் லயிப்புமாய் ஒரு இழப்பில் இருந்து அவர்களை மீட்டுக்கொண்டு வந்தாள். மருத்துவமனை செல்ல வேண்டாத நாட்களில் முழுநாளும் அவர்களோடு கழிக்கத் தொடங்கி இருந்தாள்.
வீணாவும் விக்கியும் இயல்பாகி இருந்தார்கள். புயலில் சாய்ந்த மரத்திற்கு பக்கத்தில் துளிர்த்து இருந்த தளிர் வெகு அழகாய் இருந்தது. இழப்புகள் இயல்பானது என்று அவர்களுக்கு கற்றுத் தந்தாள்.
காலம் ஆற்றாத காயமும் இல்லை, மரணம் என்ற நிதர்சனத்தை எந்த நிமிசமும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தை புரியவைத்தாள். எதையும் அறிவுரையாய் அவள் கடத்தவில்லை, அவர்களே புரிந்துகொள்ள மெல்லிய இடைவெளி தந்து நின்றாள்.
அவள் தோள் கொடுக்க ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல நந்தாவின் சுமை சுகமாகி இருந்தது, மிருதுளாவின் மீதிருந்த அன்பு மிருதுவாக அப்படியே தான் இருந்தது. ஆனால் வாழ்க்கை இன்னுமொரு வாய்ப்பை அனைவருக்கும் தருமென்ற தாரகம் புரிந்தது.
சுழலும் பூமியில் கீழ்மேலாய் துயரங்களும், துடிக்க வைக்கும் நிஜங்களும் வந்து உரசிக் கொண்டே தான் இருக்கின்றன..! கவலை
என்ற கண்ணாடியைக் காலத்துக்கும் பொருத்திக்கொண்டே அலைய முடியாது.
இழப்புகளை மட்டுமே யோசிக்கின்ற வாழ்க்கையில் வாய்ப்புக்கு வழியே இருக்காது..! வானதி வெளிச்சமற்ற காட்டுக்குள் வெளிச்சமாய் விழுந்து கிடந்தாள். அவளின் இயல்பான அழகும், மேகத்தைப் போன்ற கனிவும், குரலில் ஒலித்த தெளிவும், ஒப்பனையில்லாத அன்பும், மெல்ல இருளை விலகவைத்தது.இடையில் அவள் வந்ததால், அவர்களுக்குள் சின்ன ஓய்வு கிடைத்தது. சந்தியாவும், கிடைக்கின்ற ஓய்வுகளில் நந்தாவின் வீட்டிற்கு வந்து கல்பனாவின் தனிமைக்கு துணையானாள்.
நந்தாவுக்கு பேங்க் வேலையாக மூன்று நாள் பெங்களூர் செல்லவேண்டி இருக்க, வானதிதான் பகல்முழுக்க கல்பனாவின் துணையாக வந்திருந்தாள். மனதை திசை திருப்ப அவள் கற்றுத் தந்ததுதான் இந்த சீரியல் மந்திரம்..!
வாசிக்கவும், நேசிக்கவும் புத்தகங்களைக் கொண்டுவந்து தந்தாள். அதைப்பற்றி விவாதித்து கல்பனாவின் கவனத்தை திசைமாற்றினாள். ஒரு குழந்தைபோல் பாவித்து குற்றவுணர்வில் தவித்த அந்த கிழத்தியை மெல்ல மெல்ல மீட்டெடுத்து தந்தாள்.
பாட்டிக்கும் பேத்திக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தி அந்தக் குழந்தைக்கு இனி எல்லாமே அவர்தான் என்று புரியவைத்தாள். மேகத்தில் இருந்த கருப்புக் களைய வானத்தில் இருந்த வெளுப்பு மெல்ல மெல்ல பிரகாசித்தது.
அந்த மூன்று நாட்களில் அவர்களுக்குள் இருந்த நெருக்கம் அதிகமாகிக் கொண்டது. மிருதுளாவைப் பற்றிய சிந்தனைகளை இயல்பாக பேசும் வரைக்கும் கல்பனாவை ஆட்டிப் படைக்கும் மனசிதைவு சரியாகாது என்று கணித்தவள், எதைக் கடக்க வேண்டுமோ அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தாள்.
”...இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று,,,”
10
ஏதாவது ஒரு கணத்தில் ஏதாவது நிஜத்தில் வாழ்க்கைபற்றிய பார்வை மாறித்தான் போகிறது. பிரதானங்களின் வேற்றுமைகள் காலப்போக்கில் ஒரு கட்டத்திற்குள் கட்டுப்படாத நிஜத்தை நோக்கி நடைபயில ஆரம்பிக்கிறது..! வானதி என்ற நதி பாய்ந்து அவர்கள் வாழ்க்கையில் வறண்ட பக்கங்களில் வளம்கொழிக்க வைக்க ஆரம்பித்தன..!
பெரிதாய் எதையும் அவள் செய்யவே இல்லை... எதுவும் பெரிதாகாமல் செய்துகொண்டாள். வாழ்க்கைஎன்பதில் உள்ள சின்ன சின்ன மாறட்டங்களை தெளியவைத்தாள்..! பொதுவாய் உளவியல் ஆலோசகர்களுக்கு இருக்கும் பொறுமையும், அமைதியும் அவளிடம் இயற்கையாகவே இருந்தாலும், அவளின் குணமும் சூழலும் அவளை சரியாகவே செதுக்கி இருந்தது.
சிலந்திக்கும் சுவற்றிக்கும் நடுவில் படரும் நூலாம்படை போல் ஒருவித பந்தம் கல்பனாவின் மனதில் உண்டாகி இருந்தது. இந்த நான்கு மாதத்தில் மனது பக்குவப்பட்டு இருந்தாலும், இப்போது வானதியின் மீது ஒருதாயாய் அன்பு மிகுந்து கொண்டு இருந்தது.
குழந்தையை தூக்கிக்கொண்டு கோயிலுக்கு சென்றிருந்தார்கள். ஏழு மாதம் கடந்திருந்ததால், முகம் பார்த்து சிரிக்க பழகி இருந்தது. அது அடையாளம் காணத் தொடங்கி முதலில் கண்டது வானதியின் முகம் என்பதால், அந்த முகத்தில் அன்னையின் நிழலைத் தேடியதோ என்னவோ, அவளுடைய காலடிச் சத்தம் கேட்டாலே துள்ளிக் கொண்டு கை அசைத்து கால் அசைத்து சிரிக்கும் போது இதயமே நழுகி இளகும்.
கோயில் திட்டில் குழந்தையோடு வானதி அமர்ந்திருக்க, அந்தக் காட்சியைப் பார்த்தபடியே கல்பனா எதிரில் அமர்ந்திருந்தார். ஒரு நொடி ஆச்சர்யமாய்க்கூட இருந்தது வானதிக்கு. அவள் மருத்துவம் செய்ய வந்து தானே மருந்தாகிப் போன விசித்திரம் வேறெங்க்கும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை..!
உள்ளத்து குளத்தில் கல்லெறிந்தது போல் மனசுக்குள் ஒரு சலனம் படர்ந்து கொண்டு இருந்தாலும், ஏதோ ஒரு நிறைவு. இருளில் அசையும் ஒற்றைச்சுடர் மொத்த இருளையும் முழுங்கிக் கொண்டது போல் சக மனுசியாய் அந்த குடும்பத்தின் நிறைவு ஏதோ ஒரு வகையில் தன் கையில் தவழ்ந்து கொண்டு இருப்பது போல் இருந்தது..
நித்தமும் விடிந்து முடியும் வாழ்க்கையில் யாருக்கேனும் ஒரு நிமிடம் உபயோகப்படும் வாழ்க்கை வாழ்ந்தால் அதைவிட நிறைவு எதுவுமேயில்லை. இதுதான் அவள் உளவியலில் கற்றுவைத்த சிந்தனை. கல்பனாவின் மனநிலையில் தன்னுடைய வார்த்தைகள் மட்டுமல்ல வாத்சல்யமும் ஒரு மாற்றத்தை உண்டாக்கி தருகிறது என்றால் அதைவிட மகிழ்வு எதுவுமேயில்லை என்று தோன்றியது.
‘’ஆன்ட்டி நாளைக்கு நான் பூனே போறேன்.அம்மாவைப் பார்க்க..! திரும்பி வர நாலு நாளாகும். இந்த சின்ன இடைவெளியில எதையும் யோசிச்சு உங்களை நீங்க கஷ்டப்படுத்திக்க வேண்டாம். ஐ ஹோப் நீங்க குழந்தையைத் தனியாவே பார்த்துக்குவீங்கன்னு நம்பறேன். இது உங்களுக்கு நான் வைக்கிற டெஸ்ட் மாதிரின்னு கூட நினைச்சுக்கலாம்,” மெல்லிய புன்னகையுடன் சொன்னவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தார் கல்பனா.
தகித்த வெயிலுக்கு குடித்த இளநீர் போல் இருந்தாள் அவள்..! தத்தளிக்க கடலில் தன்னைக் காப்பாற்ற வந்த கட்டுமரம் போல் தோன்றியது..! அன்பை இழந்த இடத்தில் அன்பை விதைத்த அவள் ஏதோ ஒரு புள்ளியில் கல்பனாவின் மனதில் உயரத்துக்கு போய் விட்டாள். இழப்புக்களை அவளின் சிரிப்புகள் ஈடுகட்டும் அல்லது, இணையான அன்பைத் தரும், என்று மனசாட்சி அடித்துக் கூறியது.
பிரகாரத்திடலில் குழந்தையோடு அமர்ந்திருந்தவளை பார்த்த ஷணம், மனசு நிறைவாக உணர்ந்தது. கோயில் மணி அடித்தது. மனம் நிம்மதியில் திளைத்தது.
‘’தனியாவே பார்த்துக்குவேன் வானதி. நீ எப்போ திரும்பி வருவே..?”
‘’ஏழெட்டு மாசம் கழிச்சு போறேன் ஆன்ட்டி ஒரு வாரமாவது ஆகும். உங்களுக்காக சீக்கிரம் திரும்பி வரப் பார்க்கிறேன்.” முத்துப் பல் தெரிய சிரித்தாள்.
‘’வானதி, நான் அன்னைக்கு கேட்டதை யோசிச்சயா.?” சட்டென்று கேட்கவும், உடம்பு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. அந்த கேள்வியில்.ஆனால் அன்று நந்தா கூர்மையாய் வீசிய வார்த்தைகள் அடிமனசில் வந்து போக, வழக்கம்போல் மென்மையாக பார்த்துச் சிரித்தாள்.
‘’அதெல்லாம் விளையாட்டுக்கு ஆன்ட்டி, நாமதானே லவ் பண்றோம்? நமக்கு நடுவில உங்க புள்ளை எதுக்கு வந்துட்டு..?” சிரித்துக் கொண்டு கல்பனாவை தன்னோடு சேர்க்க, விலகி அமர்ந்து முகத்தில் முறுவலிப்பைக் காட்டினாள்.
‘’நந்தா ரெம்ப ரெம்ப நல்ல பையன் வானதி. அவனை இரண்டாம் தாரம்னு தாழ்வா நினைக்காதே.”
‘’சே,நான் அப்படியெல்லாம் எப்போ நினைச்சேன் ஆன்ட்டி..? ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இதெல்லாம் அத்தனை இயல்பான விசயம் எல்லாம் இல்ல..உங்களை விட அவரோட இழப்பும் வலியும் அதிகம்..! இத்தனை குறுகிய இடைவெளியில அவரை இன்னொரு வாழ்க்கைக்கு வற்புறுத்தாதீங்க.”உண்மையான அக்கறையோடு சொன்ன வளை இன்னும் அன்புமேவ பார்த்தாள்.
‘’ஏன் மத்தவங்க தப்பா பேசுவாங்கன்னு யோசிக்கிறியா வானதி..? நம்முடைய தேவையும் சூழலும், வலியும் நமக்கு மட்டும்தான் தெரியும். ஒரே வானத்துல கண்டத்துக்கும், நாட்டுக்கும் ஒரு பொழுது தெரியறது இல்லையா..? அவங்கவங்க பார்வையை பொறுத்தது அது..! இரண்டாம் திருமணம் ஆணும் பெண்ணும் செய்துக்கறது செக்சுக்காக மட்டும் தான்னு நினைக்கிறதை விட முட்டாள்த்தனம் எதுவுமில்லை..!”
கல்பனா பேசிக் கொண்டே செல்ல, அதற்குள் குழந்தை சிணுங்க,மெல்ல கால்களை தாலாட்டி குழந்தையை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். கருவில் சுமக்காமல் இந்தப் பூஞ்சுமை அவள் தோளில் தள்ளாடிக்கொண்டு இருந்தது.
‘’நான் எப்போ அப்படிச் சொன்னேன் ஆன்ட்டி..? தன்னுடைய நியாயமான தேவைகளுக்காக ஒரு மனிதன் துணை தேடிக்கறதுல
எந்தத் தப்பும் இல்லை. அதுல கால நிர்ணயம்கிறதும், ஆண் பெண்கிற பாகுபாடும் தேவையே இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட உங்க பிள்ளையோட மனநிலை, சூழ்நிலை எல்லாம் யோசிக்காமே யார்கிட்டயும் இப்படி கேள்வி கேட்டு தர்மசங்கடப் படுத்தாதீங்க. இந்த சம்பிரதாயம் எல்லாம் இல்லாட்டியும், எப்பவும் நீங்க என் டார்லிங் தான்.” இறுக்கிக் கொண்டு முன் உச்சியில் முத்தம் பதித்து சொன்னவள் எழுந்து கொண்டாள்.
வீட்டிற்கு வந்த கல்பனாவின் மனதில் சஞ்சலம் ஓடிக் கொண்டே இருந்தது. இரவு படுக்கையில் சரிந்தாலும், பிரகாரத் திடலில் குழந்தையோடு அமர்ந்திருந்த வானதியின் தோற்றமே மனதிற்குள் வந்து போனது.
ஏதோ ஒருவகையில் மிருதுளாவின் இழப்பை அவள் நிறைவு செய்வாள் என்று கல்பனாவின் மனசு அடித்துச் சொன்னது.நந்தா மிருதுளாவின் காதல் வாழ்க்கை முடிந்து போக தானும் ஒரு காரணமாகி விட்டோம் என்ற குற்றவுணர்வு கல்பனாவின் ஆழ்மனதில் தங்கிப் போயிருந்தது.
ஏதோ ஒரு புள்ளியில் கல்பனாவின் மனதில் விழுந்த பிம்பம் வானதி அந்த வெற்றிடத்தை இல்லாமல் ஆக்கி நந்தாவின் வாழ்க்கையை பூக்க வைப்பாள் என்று அடித்துச் சொல்லிக் கொண்டே இருந்தது.
வானதி கிளம்பிப் போய் இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. ஓரளவு கல்பனாவே குழந்தையை பார்த்துக் கொள்ள ஆரம்பித்திருக்க, ஒரு நீண்ட நெடிய மூச்சு நந்தாவிற்கு உண்டானது.
இயல்பாய் இருந்த எல்லாம் இயல்பு தப்பிய மனநிலையில் இருந்து மனது கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ள கிடைத்த இடைவெளி போல்.
‘’ரெம்ப நிம்மதியா இருக்குமா.என்னால உங்களை சுயம் இழந்த மனுஷியாப் பார்க்கவே முடியல. அப்பாவை இழந்த நிலையில் கல்லூரியில் வேலைக்குப் போய் எங்க மூணு பேரையும் ஆளாக்க நீங்க பட்ட கஷ்டங்களையும், அந்த கஷ்டத்திலயும் உங்ககிட்ட இருந்த ஆளுமையையும் பார்த்து வளர்ந்தவன்மா நான்.
இப்போ நீங்க உடைஞ்சும், உருக்குலைஞ்சும் நின்னதைப் பார்க்க எனக்கு கொஞ்சம்கூட தைரியம் இல்லை… இரண்டு தலைகளை உடம்பில சுமந்த மாதிரி தலைசாய்க்க முடியாத இம்சையாய் இருந்தது.”
குழந்தை போல மடியில் வந்து கவிழ்ந்துகொண்ட மகனைப் பார்த்து அந்தத் தாயின் மனசு நெகிழ்ந்து போனது.ஒரு தொடையில் நந்தா சரிய, மறுபக்கம் வீணா வந்து படுத்துக் கொண்டாள்.நீட்டி இருந்த காலில் விக்கி வந்து படுத்துக் கொண்டு குறுகுறுப்பு மூட்ட, அந்தக் காட்சி நிறைவிற்கே நிறைவாய் இருந்தது.
இவ்வளவுதான் அவர்கள் குடும்பம். அவர்களுக்குத் தெரிந்த மொழி அன்பு மட்டும் தான். கோழியின் சிறகுக்குள் கொண்டாட்டம் போடும் சிறு குஞ்சாய் வாழ்ந்தவர்கள்.உலகம் எத்தனை மாறினாலும், அவர்களுக்கு சொர்க்கமே அம்மாவின் மடியில் தான் இருந்தது.
மகனின் சிகை அளந்தது கைகள்.
‘’ நந்தா...”
‘’ சொல்லுங்கம்மா”
”வானதி ஊருக்கு போயிட்டா..! உனக்குத் தெரியும் தானே..?”
” ம்”
‘’வர ஒரு வாரம் ஆகுமாம்..!”
‘’ தெரியும்மா”
‘’எனக்கு கஷ்டமா இருக்குடா..” என்ற அம்மாவை படக்கென முகம் நிமிர்த்திப் பார்த்தான்..!
‘’என்னமா இது..? அவங்க இங்கே கவுன்சிலிங் தர வந்தவங்கம்மா. எந்த இடத்துல அந்த பொண்ணுகிட்ட லாக் ஆனிங்கன்னு தெரியலியே.” மென்மையாய்ச் சிரித்தான்.
‘’அந்தப் பொண்ணுகிட்ட எனக்கு மிருதுளா தெரியறா நந்தா...” கல்பனா மென்மையாய் சொல்ல சட்டென்று எழுந்து அமர்ந்தான் நந்தா. முகத்தில் கரிய மேகத்திட்டாய் கவலைப் படர்ந்தது.
‘’மிருதுளா இல்லம்மா. இனி அவ வரமாட்டா. அவளுடைய அடையாளத்தை எங்கேயும் தேடாதீங்க.அவளை மறந்தாத்தான் நீங்க இயல்பாக முடியும். நீங்க இயல்பானாத்தான் இந்தக் குடும்பம் இளைப்பாற முடியும்.”
‘’ஓய்வு மட்டுமே வாழ்க்கை இல்லை நந்தா. இயக்கமும் தான். நான் நிம்மதியா இருக்கிறதைப் பத்தியே பேசிட்டு இருந்தா, நீ சந்தோசமா இருக்கிறதைப் பத்தி எப்போ நான் யோசிக்க.?”
அம்மாவின் வார்த்தைகள் பிடிக்காமல் நந்தா எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றான். மடியில் படுத்திருந்த வீணா முகம் உயர்த்தி அம்மாவைப் பார்த்தாள். சின்னத் தெளிவும் குழப்பமும் அச்சிறு பெண்ணின் கண்களில் முட்டிகொண்டு இருந்தது.
‘’அம்மா, அண்ணனுக்கு கொஞ்சம் இளைப்பாற டயம் குடுமா. யோசிச்சு முடிவெடுக்கட்டும். இத்தனை சீக்கிரம் அடுத்த வாழ்க்கைக்கு போனா மத்தவங்கள் பார்வைக்கு ஒரு மாதிரியா இருக்காதாமா? அந்தக் கண்ணோட்டத்திலும் நீங்க யோசிக்கணும் இல்லையா?” கேட்ட மகளை நிமிர்ந்து பார்த்து இகழ்வாய் சிரித்தார் கல்பனா.
‘’எதுக்கு? துக்கத்தைக் கரைக்கவா.? இழப்புங்கிறது கடல்ல விழுந்த பாறை மாதிரி. அது கண்ணுக்குத் தெரியாம உள்ளுக்கு கிடக்குமே தவிர, கரைஞ்சு போகாது. ஊருக்கு காட்டிக்க வேணா நாளைத்தள்ளி பவிசு காட்டலாம்.
மறந்துட்டு வாழவெல்லாம் முடியாது. நினைவுகளுக்காக கனவுகளைத் தொலைக்கவும் கூடாது.அவயத்தோட தான் பிறக்கிறோம். ஏதாவது ஒரு விபத்துல குறையாகிப் போச்சுன்னா, வாழப் பழகி நாம வாழறது இல்லையா. அந்த மாதிரித்தான்.
மிருதுளா மேல உள்ள அன்பிற்காக நந்தா தன்னுடைய இளமையை தானமா தர்றது எந்த வகையிலும் நியாயமில்லை… கொஞ்ச நாள் நெருடலா இருக்கும். காலப்போக்கில் எல்லாம் சரியாகிடும், வானதி ரெம்ப ரெம்ப நல்ல பொண்ணு. உறவு இருந்தும் தனிமையில வாழ்றா..! அவளைத் தவற விடக்கூடாதுன்னு உள்மனசு சொல்லுது.., தவறவும் விட மாட்டேன்.”
இத்தனை தெளிவாக பேசிய அம்மாவை வாய்பிளந்து பார்த்துக் கொண்டு நின்றாள் வீணா. ஒருவிதத்தில் மனசு பூரித்துக் கொண்டு இருந்தது. நிஜம்தான். கல்பனா மெல்ல மாடிக்குச் செல்ல, தென்னை மரக்கீற்று வந்து முதுகில் உரச, கைப்பிடித் திட்டில் அமர்ந்து இருந்தான் நந்தா.
நிலவு பாதி விழுந்திருந்த முகத்தில் மீதிக்கு இருள் மிச்சமாகி இருந்தது.
கல்பனா வந்து தோள் தொட மெல்ல நிமிர்ந்து பார்த்துவிட்டு குழப்பமாக முகம் திருப்பிக் கொண்டான். ஆதரவாய் முதுகு நீவித் தந்தாள் அந்தத் தாய்.
‘’ நந்தா... என்ன யோசிக்கிற..?”
‘’நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ணுமா மிருதுளா..! அவ்வளவு ஆசை ஆசையாய் எங்க வாழ்க்கை ஆரம்பமாச்சு. அவ இல்லாம போன ஒரு வருசத்துக்குள்ள, நான் அடுத்த வாழ்க்கைக்கு யோசிக்கிறது அசிங்கமா இருக்கு..! ‘’ என்றான் வெடுக்கென்று.
‘’ யாருக்கு அசிங்கம்...?”
‘’ எங்க உண்மையான காதலுக்கு..!”
‘’நீ கல்யாணம் பண்ணிட்டா அந்தக் காதல் உண்மை இல்லைன்னு யார் சொல்றது..? ”
அமைதியாக இருந்தான்.
‘’உங்க காதல் உண்மைன்னா நீ அதை யாருக்கு நிருபிச்சுக் காட்ட வேண்டாம். அதேமாதிரித்தான் நீ மிருதுளா மேல வச்ச காதலை உன் வாழ்க்கையை சமர்ப்பணம் செஞ்சுதான் மிருதுளாவோட ஆன்மாவுக்கு நிரூபிக்கணும்னா, அது உண்மையான காதலாவே இருக்க முடியாது.” ஒருவகையில் அம்மா தன்னோடு வாதிட்டுக் கொண்டு இருந்தது பெரும் மகிழ்வாக தான் இருந்தது நந்தாவிற்குள்..!
இந்த தெளிவும் உறுதியும் கண்டிப்பாய் வானதியின் உளவியல் சிகிச்சையால் மட்டுமே சாத்தியமானது..! இதில் மாற்றுக் கருத்தே இல்லை. சட்டென்று கண்களை மூட வானதியின் முகம் வந்து அவன் கண்களில் தங்கிப் போனது.
”...இது கால தேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெற போகும் துன்பத்தின் துவக்கம்.
11
இத்தோடு முடித்துக் கொள்ளலாம் என்பதுபோல் நந்தா பேசாது இருக்க, இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறேன் என்பதுபோல் கல்பனா நின்றார்,
அம்மா, பனிக்காற்று வீசுது. நீங்க கீழே போங்க. உடம்புக்கு ஒத்துக்காது.” என்றான் அழுத்தமான குரலில்.
’போறேன் நந்தா. அதுக்கு முன்னாடி உனக்கு சில விசயங்களை புரிய வச்சுட்டுப் போறேன். நீ யோசிக்கிற துரோகம் எல்லாம் இதுல எதுவுமே இல்லை. உயிரோடவும் உணர்வோடவும் மனைவி இருக்கும்போது நீ இன்னொரு துணை தேடிக்கிட்டாத் தான் அது துரோகம். அவ இல்லாம போனபிறகு உன்னுடைய உணர்ச்சிகள் மரத்துத்தான்யா போகும்... மறந்து போகாது. காலம் கட்டி இழுக்கிற பாதையில நீ கண்டிப்பா போய்த்தான் ஆகணும்.
உன் தம்பி தங்கைகள் வாழ்க்கை, என்னுடைய நிறைவான கடைசி அத்தியாயம் எல்லாம் நீ சொல்ற பதில்ல தான் இருக்கு. எனக்கு வானதியை பிடிச்சிருக்கு. என் உள்ளுணர்வு சொல்லுது. அந்தப் பொண்ணு ஒரு தேவதை மாதிரி நமக்கு இருப்பா. இதுக்குமேல சொல்லத் தெரியல.” இரண்டு கைகளையும் விரித்துச் சொல்லிவிட்டு தளர்வாய் இறங்கி கீழே போனார்.
தெளிந்த அவன் மனக்குளத்தில் கல் வீசி விட்டு அம்மா போய் இருந்தாலும், மிருதுளாவின் காதலை ஒன்றும் அத்தனை எளிதாக கடந்து வர முடியாது என்று அவன் அறிந்தே இருந்தான்.
ஒருவாரம் கழித்து புனேயில் இருந்து வந்திருந்தாலும் வானதி கவுன்சிலிங் வரமுடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்ள, அம்மாவும் ஓரளவு தெளிந்திருந்ததால், நந்தா வானதியை அழைக்காமல் தன்னுடைய வேலைகளின் மூழ்கிக் போனான்.
வழக்கம் போல் ஞாயிறுகளில் வந்து நிற்கும் சந்தியாவைப் பார்த்ததும், கல்பனா ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டு விசும்ப, கொஞ்சமாய் பதறிப்போனாள் அந்நாகரிகப் பெண்.
‘’என்னாச்சு ஆன்ட்டி? நந்தா எதுவும் சொன்னானா?இல்ல தபஸ்விக்கு எதுவும் பிரச்சனையா.?” அவள் பதற,
‘’இவன் வானதியை என்னவோ சொல்லி வச்சிருக்கான் சந்தியா.
அதான் அந்தப் பொண்ணு இங்கே வராம நின்னுடுச்சு. இவன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கான்னு நீதான் கேட்டுச் சொல்லேன்.” என்றபோது நந்தாவை நிமிர்ந்து பார்க்க அவனுடைய பார்வை வேறு பக்கம் திசைமாறி இருந்தது.
‘’நந்தா,என்ன சொன்னீங்க?”என்று கேட்டவளை திரும்பி முறைத்தான்.
‘’நான் எதுவும் சொல்லல சந்தியா. அவங்கதான் கடலை உடைச்ச மாதிரி படக்படக்’னு பேசுறாங்களே, பின்னே எதுக்கு கவுன்சிலிங்குன்னு நினைச்சு அந்தப் பெண்ணே நின்னிருக்கலாம்.” என்றான் அமைதியாக
சந்தியா சிரிப்பை ஒளித்துக்கொண்டு அமைதியாக பார்க்க, கல்பனாவின் முகம் கோபத்தில் சிவந்து போனது.
‘’ஏன் சந்தியா,இந்தப்பய உன்னை காதலிக்கிறானா?அப்படி ஏதாவது இருந்த சொல்லிடுங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல. நீயும் ரெம்ப நல்ல பொண்ணு தான்.ஆனால் என் கண்ணை மறைச்சு நாடகமாடிட்டு என்னை பாடப்படுத்த வேணாம்னு சொல்லிடு.”அம்மாவின் அர்த்தமில்லாத பேச்சால் நந்தா கொதித்துப் போனாலும், சந்தியாவின் மனநிலையை எண்ணி வருத்தம் பின்னவும் அமர்ந்து இருந்தான்.
‘’மா, என்ன பேச்சு இதெல்லாம்? சந்தியா என்ன யோசிப்பானு கூட நினைக்காமே… இதெல்லாம் டூ மச் மா.வீட்டுக்கு வர்ற பொண்ணூங்க எல்லாத்தையும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேட்குறது ரெம்ப ஓவரா இருக்கு.எனக்கு ரெம்ப அசிங்கமாவும் இருக்கு. இன்னொரு காதல் என் வாழ்க்கையில வராது. அப்படி வந்தாலும் கண்டிப்பா சந்தியா மேல வரவே வராது” அவன் அடித்துச் சொல்ல, சந்தியாவிற்கு கோபத்திற்கு பதில் சிரிப்பே முட்டிக்கொண்டு வந்தது.
”எதுக்கு நந்தா டென்சன் ஆகிட்டு?ஆன்ட்டி உன்னை குறைஞ்ச விலையில தள்ளி விட்றலாம்னு பார்க்கிறாங்க.நாங்க நல்ல நண்பர்கள்.அதை வேறயா மாத்தி எங்க நட்பை நாங்களே கொச்சை படுத்திக்க மாட்டோம். இப்ப எதுக்கு இத்தனை அடம் பண்ணிட்டு இருக்கீங்க..?நந்தாவுக்கும் கொஞ்சம் டைம் குடுங்கம்மா.நான் சொல்லியா நீங்க தெரிஞ்சுக்கப் போறீங்க.
தாம்பத்தியம் சிலருக்கு பசிக்கானது… சிலருக்கு ருசிக்கானது. நந்தா மாதிரி ஒரு சிலருக்கு அது உயிர்க்கு சமமானது. அவர்க்கும் மிருதுளாவுக்கும் நடுவில இருந்த தாம்பத்யம், பிரசாதம் மாதிரி. அதுல இருந்த புனிதத்தன்மை அவர் மட்டுமே அறிவார். அதனால அவருடைய எல்லைக்கோடுகளை அவரே நிர்ணயம் பண்ணிட்டு வர்ற வரைக்கும் காத்திருப்போம்.” புன்முறுவல் மாறாமல் சொன்னாள்.
நெகிழ்ந்து போனான் நந்தா. இதற்குமேல் ஒரு நட்பு அடையாளம் காண முடியுமா.புரிதலின் எல்லை அல்லவா இதெல்லாம்.
தன்னை சரிசெய்து கொள்ள இயலாமல் நந்தா எழுந்து உள்ளே போக, கல்பனாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள் சந்தியா.
‘’எல்லாம் சரியாகும் ஆன்ட்டி.நந்தா ரெம்ப ரெம்ப மென்மையானவர். அவரால சட்னு எதையும் கடந்து வரமுடியாது.”
‘’ஆனால் அதுக்குள்ள வானதி போயிட்டா என்ன பண்றது.” அப்பாவியாய்க் கேட்ட கல்பனாவை ஆச்சர்யமாய் நிமிர்ந்து பார்த்தாள். அப்படியென்ன நம்பிக்கை அவள் மீது..?
‘’போக மாட்டா ஆன்ட்டி.அதுசரி அவமேல அப்படியென்ன நம்பிக்கையாம்..என்மேல கூட வராதது.”
‘’சந்தியா, அந்தப் பொண்ணு பேசற ஒவ்வொரு வார்த்தையும் மனசுக்குள்ள விதை தூவி பயிராக்கும் தெரியுமா..? இங்கே வந்தா என்கூட மட்டும் தானே பேசிட்டே இருப்பா..! எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவளுடைய வார்த்தைகள்..!
உதட்டுல இருந்து வராது வார்த்தைகள். மனசில இருந்து வரும். என்ன பேசினாலும் சீரியசாகவே மாட்டா.சிரிச்சுட்டே கவுண்டர் குடுப்பா.எல்லாத்துக்கும் மேல அந்த கண்ணுல இருக்கற தாய்மை அது எங்க பாப்பாக்கு வேணும் சந்தியா..நான் என்ன சொல்றேன்னு எனக்குப் புரியல. உனக்குப் புரியுதா சந்தியா..?” அப்பாவியாய்க் கேட்க தன்னோடு சேர்த்துக் கொண்டாள் அக்கிழத்தியை.
வானதியைப் பற்றித் தெரியும். அவள் அன்பு அவள் தொழில் அல்ல, அது அவளின் குணம்.கல்பனாவின் கணிப்புப்படி நிச்சயம் வானதியை மணந்தால், நந்தாவின் வாழ்க்கை சீர்பட்டுக் போகும் என்பதைவிட, தபஸ்வி நிஜமான தாயன்பை அடைவாள் தான்.
* * *
வானதி நகம் பார்த்துக் கொண்டே சொன்ன செய்தியில் சந்தியா சின்ன சஞ்சலமானாள். காரை நிறுத்திவிட்டு இருவரும் பூங்காவின் நிழலில் சிமெண்ட் பெஞ்சில் தங்களை கிடத்திக்கொண்டு இருந்தார்கள்.வருவோருக்கும் போவோருக்கும் இலை தூவி ஆசிர்வாதித்துக் கொண்டு இருந்தன, பூங்கா மரங்கள். உள்ளே ஒளிந்து கொண்டு குரலை மட்டும் வாடகைக்கு விட்டுருந்த குயில்களின் முகத்தை அறிய அடிக்கடி அண்ணாந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டாள் வானதி.
காக்கைகள் எச்சமிட்டு எச்சமிட்டு அங்கே இருந்த திட்டுக்களுக்கு வெள்ளை அடித்து இருந்தன.
‘’கல்யாணமா..? இதை எப்படி உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிற கல்பனா ஆன்ட்டிகிட்டச் சொல்லுவேன்?” குசும்பாய்க் கேட்டவளை முறைத்துப் பார்த்தாள்.
‘’கொன்னுடுவேன் பார்த்துக்க..! கொழுப்பா உனக்கு..?” முத்துப்பல் தெரிய சிரித்தாலும் முகம் முழுக்க குழப்பமே மண்டிக் கிடந்தது.
‘’அம்மாவுக்கு ரெம்ப உடம்பு முடியல சந்தியா...!”
‘’அச்சோ என்னடி சொல்ற..?”
‘’ஹார்ட்டுல ப்ளாக் இருக்குன்னு டாக்டர் சொல்றாங்க. என்கூட வாம்மான்னு சொன்னா கேட்கவே மாட்டேங்கிறாங்க சந்தியா.. பத்ததுக்கு என்னையும் அங்கேயே கூப்பிடறாங்க. மாமா குடும்பத்துக்கு அம்மா அங்கே இருக்கிறதே பாரமா இருக்கு. இதுல நான் எங்கே போய் இருக்கிறதாம்...” ஆற்றாமையோடு கேட்க, சந்தியா அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
‘’இதெல்லாம் அம்மாவுக்கு புரியாம இல்ல, ஆனால் அவங்க மனசு இன்செக்யூரா ஃபீல் பண்ணுது..! எனக்கு இதை எப்படி சரி பண்றதுன்னே தெரியல..! அங்கே போய் ஒரு வேலையைத் தேடிட்டு அம்மாவை கூப்பிட்டு போயிடலாம்னு பார்த்தா, எனக்கு சரியான வேலையும் அங்கே அமைய மாட்டேங்குது.” நடுத்தர வர்க்கத்தின் கவலைகளை அவள் பட்டியலிட, அமைதியாக அமர்ந்து இருந்தாள் சந்தியா.
‘’இப்போ எல்லாத்துக்கும் மேல அம்மாவுக்கு என்னைத் தனியா விட்டுட்டு போயிடுவோம்கிற கவலை வந்திருச்சு.அதான் கல்யாணத்துக்கு அவசர அவசரமா ஏற்பாடு நடக்குது.எனக்கு மறுக்க முடியல, மறுக்கவும் காரணம் இல்ல” என்றாள் யதார்த்தமாக.
சந்தியாவுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை, வானதியைத் தெரியும்… தரிசாய்ப் போன நந்தாவின் வாழ்க்கையை அவளை அல்லாள் வேறு யாரும் புணரமைக்க முடியாது. அதேநேரம் அவளுக்கு நந்தாவையும் தெரியும். அன்பிற்கும், உறவின் அருகாமைக்கும் ஏங்கும் வானதியின் வாழ்க்கையை நந்தாவை அன்றி யாரும் முழுமையாக்க முடியாது.
எந்த இடத்திலும் அவள் இதை யோசித்து இருக்கவில்லை.ஆனால் கல்பனா திரும்பத் திரும்ப அவர்களை இணைத்துப் பேசி பேசி சந்தியாவின் மனதில் ஒருவித இலகுவான கற்பனையை உண்டாக்கி இருந்தார். தடுமாறிய மனநிலையில் இருந்த நந்தாவிற்கு வழிகாட்ட வேண்டியது தன்னுடைய நட்பின் கடமை என்று எண்ணம் அவளுக்குள் விளைந்து இருந்தது.
பூங்காவில் கடந்துபோன ஜதைகளை இருவரும் விரசமில்லாமல் ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். வானதியின் கண்களை உற்றுப் பார்த்தாள். அதில் தெரிந்த சின்னக் குழப்பத்திற்கான நூலிழை புரிந்தாலும், அதை எந்த இடத்தில் அவிழ்ந்து சரிசெய்வது என்று புரிபடாமல் அமர்ந்து இருந்தாள்.
‘’நிஜமாவே உனக்கு நந்தாவை பிடிக்கலயா வானதி?”
‘’இந்தக் கேள்வி உனக்கே அபத்தமா தெரியலயா சந்தியா? ஏன் பிடிக்கணும்?அவர் எனக்கு ஒரு க்ளைண்ட். என் பேசண்டோட ரிலேடிவ். அவ்வளவுதான். ‘’
”அப்போ தபஸ்வி?கல்பனா ஆன்ட்டி?” இந்தக் கேள்வியில் தடுமாறினாலும் பதில்தர தோன்றாமல் அமர்ந்திருந்தாள் வானதி.
‘’என்னுடைய வேலைகளை முழு ஈடுபாட்டோடு செய்றேன் சந்தியா. இதுக்கு மேல என்ன சொல்ல?”
‘’நந்தா நல்லவர் வானதி.உன்னை மாதிரி துணை அவருக்கும்.அவரை மாதிரி ஒரு இணை உனக்கும் தேவை. கல்பனா ஆன்ட்டி தூவின விதை என் மனசிலயும் துளிர்க்க ஆரம்பிச்சாச்சு.ஏன் உன் கண்ணுல ஒரு தடுமாற்றமும், நந்தா கண்ணுல ஒரு தவிப்பும் இருக்கு. ஆனாலும் ரெண்டு பேரும் எதையோ மறைக்கிறீங்க.”
சந்தியா சொன்னபோது அந்த இடத்தை விட்டு விருட்டென வந்து விட்டாலும், அந்த எண்ணத்தை விட்டு அவ்வளவு எளிதாய் கடந்து வரத்தான் இயலவில்லை.
சந்தியா வந்து சொன்ன போது நந்தாவின் முகமும் இதே உணர்வைத்தான் தத்தெடுத்து இருந்தது..! காதல் இல்லை, ஆனால் ஏதோ ஒரு பேர் சொல்லத் தெரியாத நிம்மதி கைவிட்டுப் போனது போல்.‘’நல்ல பொண்ணு நந்தா.ஆறு மாசமா நானும் பார்க்கிறேன். ஒருதுளி போலித்தனம் இல்லை.இதுக்கு மேல ஒருத்தி உன் வாழ்க்கைக்கு மட்டுமல்ல… நம்ம குடும்பத்தோட நிம்மதிக்கும் கிடைக்கவே மாட்டா.நான்போய் அவளைப் பார்த்து பேசறேன். ‘’ வரிந்து கட்டிக் கொண்டு நின்ற அம்மாவை விசித்திரமாய்ப் பார்த்தான்.
ஆயிரம் யோசனையோடு தான் வானதியைப் பார்க்க பீச் ரெஸ்டாரண்டுக்குச் சென்றான். அவன் வாழ்க்கையே மாறிப்போன தருணம் அது.சொல்லி அடித்துக் கொண்டு இருந்தது அலைகள் சோர்ந்து போகாத அதன் முயற்சியிடம் மனிதர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.காதுக்குள் புகுந்து காற்று காதல் வீசிக்கொண்டு இருந்தது. கொஞ்சம் விருப்பமாகவும், மிதமிஞ்சிய தயக்கமாகவும் தான் வானதி அங்கு அமர்ந்திருந்தாள்.
காற்று உடம்பு குடைய குடைய எங்கிருந்தாவது வாடகை வெயில் வாங்கி உடம்பு போர்த்திக் கொள்ள மனசு ஆதங்கப்பட்டது. இவள் சென்ற சிறிது நேரம் கழித்துத்தான் நந்தா வந்தான். அன்னிய முகங்களுக்கு நடுவே அறிமுக முகத்தை கண்கள் பொறுக்கித் திண்பது அணுசரணையாக இருந்தது.
அம்மாவின் உடல்நிலை மனநிலையைப் பற்றி விசாரித்துக் கொண்டான். அவளின் புனே பயணங்கள் குறித்து சம்பிரதாயமாக விசாரித்துக் கொண்டான். எதற்கு வந்திருக்கிறோம் என்று இருவருக்குமே தெரிந்திருந்தும் எப்படி ஆரம்பிப்பது என்றறியாமல் அமைதியாக இருந்தார்கள் வேறு பேச்சை வளர்த்துக் கொண்டு,
‘’வானதி, அம்மா நீங்க அவங்களோடயே இருக்கணும்னு ரெம்ப விரும்பறாங்க.” இத்தனை கண்ணியமாய் யாரும் வார்த்தைகளை ஆரம்பித்து இருக்க முடியாது.புன்முறுவல் பூத்துக் கொண்டாள்.
‘’எனக்கு இந்த சூழ்நிலையை எப்படி பேஸ் பண்றதுன்னு தெரியல.இன்னொரு வாழ்க்கையைப் பத்தி நான் சிந்திச்சும் இருக்கல. ஆனால் இப்போ அதைப்பத்தி மட்டுமே சிந்திக்க வேண்டிய இடத்துல அம்மா என்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க. கொஞ்சம் தர்ம சங்கடமாகவும் ரெம்ப குழப்பமாகவும் இருக்கு.‘’ நியாயமான தன்னுடைய மனநிலையை ஒத்துக்கொண்டான்.
”உங்களுடைய சிந்தனைகள் தப்பில்லை மிஸ்டர் நந்தா. அதேநேரம் அம்மாவுடைய அறிவுரையிலயும் தப்பில்லை. ஆனால் அதுக்கான கால அளவை நிர்ணயிச்சுக்கறது உங்க விருப்பம்.”
கடல் காற்று உடம்பு கோதியது. அவர்களுக்குள் இருந்த கண்ணியமான இடைவெளியே, அன்பை வளர்க்க போதுமானதாக இருந்தது.
‘’அடுத்தவங்களுக்காக தெளிவா முடிவெடுக்கற நம்மால் ஏன் நமக்குன்னு வரும்போது எதையும் யோசிக்க முடியல…” சிரித்துக் கொண்டான்.
‘’மிருதுளாவோடு சேர்ந்து வாழ்ந்த நாட்கள் அடிமனசில இன்னும் கல்வெட்டாத்தான் இருக்கு. அதை மறக்கவும் தவிர்க்கவும் முடியாது.அந்த சுவடு மறையறதுக்குள்ளே இன்னோரு வாழ்க்கைக்குள்ள போறதை என்னால சிந்திச்சுகூட பார்க்க முடியாது. ஆனால் காலம் என்னை அந்த இடத்துல கொண்டுவந்து நிறுத்தி இருக்கு இத்தனை சீக்கிரமே.”
‘’வாழ்க்கையே அனுபவம் தானே? அழகான அனுபங்களை தர்ற மனிதர்கள் வாழ்க்கையில வந்துட்டேத்தான் இருப்பாங்க அதில் எந்த அனுபவம் நமக்கானதுன்னு நாமதான் முடிவு பண்ணிக்கணும் மிஸ்டர் நந்தா.”
‘’ இப்போ எனகிருக்க மனநிலையில் கண்டிப்பா எனக்கு மன ஆறுதல் தேவைதான். ஆனால் என்னுடைய மன ஆறுதலுக்காக நான் ஒரு பொண்ணை ஏத்துகிட்டா அந்த பெண்ணுடைய வாழ்க்கைக்கு நான் ஆறுதலாவும், மாறுதலாவும், காதலாவும் இருப்பேனான்னு சொல்லவும் முடியாது.” அவன் பூடகமாகச் சொல்ல நிமிர்ந்து பார்த்தாள். மெல்லிய புன்னகை இதழ்களில் பிறந்து தவழ்ந்தது.
‘’யாருக்கோங்கிற திரைச் சீலையை விலக்கிட்டு நமக்குன்னு விசயத்தை பேச ஆரம்பிச்சா, நாம இங்கே உட்கார்ந்து பேசிட்டு இருக்கறதுக்கு சீக்கிரம் ஒரு முடிவு கிடைக்கும்ணு நம்பறேன்.
எனக்கு அம்மா மட்டும்தான்.. புனேல இருக்காங்க. அம்மாவே விலகி இருக்கிற வித்தியாசமான வாழ்க்கை சூழ்நிலையில வளர்ந்தவ நான். இப்போ கல்பனா ஆன்ட்டிக்கு ஏற்பட்டு இருக்கிற நிலைதான் என் அம்மாவுக்கும். ஆனா அவங்களை உரிய நேரத்தில அந்த இக்கட்டான மனநிலையில் இருந்து காப்பாத்த எந்த வானதியும் வரல.
எல்லா இடத்திலயும் ஒரு தனிமையையும், அந்தத் தனிமையில ஒரு கழி விரக்கத்தையும் பயத்தையும் சுமந்துட்டு வாழ்ற பரிதாபமான வாழ்க்கை.அவங்களால தன்னையே சுமக்க முடியாதபோது நானும் பாரமாகக் கூடாதுன்னு தான் தனியா வாழ்றேன். இவ்வளவுதான் என்னுடைய முன்கதைச் சுருக்கம்.
இப்போ புனோவிற்க்கு போன போது அம்மா என்னுடைய கல்யாணத்தைப் பத்தி பேச ஆரம்பிச்சு இருக்காங்க. அவங்க உடல்நிலையை யோசிச்சு. நான் கல்யாணத்தை மறுக்க எந்தக் காரணமும் இல்லை. இன்னொருபக்கம் அது அம்மாவுடைய உடல்நிலையை இன்னும் பாதிக்கும்.நான் தெளிவான மனநிலையோட தான் சென்னைக்குத் திரும்பி வந்தேன்..! ஆனால் இங்கே வந்தபிறகு சட்னு உங்க வீட்டுக்கு வரவும் இந்த விசயத்தை ஆன்ட்டிக்கிட்ட ஷேர் பண்ணிக்கவும் சஞ்சலமா இருக்கு.
இந்த குழப்பத்தையும் சஞ்சலத்தையும் நான் விசித்திரமா உணர்றேன். இந்த மனநிலைக்கு என்ன பேர்னு எனக்குத் தெரியல.” மென்மையாய்ச் சிரித்தாள். மேற்கொண்டு அந்த
பேச்சை நகர்த்த தெரியவில்லை இருவருக்குமே. காற்றடிக்கும் திசைக்கு நகர்ந்தோடும் பாய்மரக்கப்பல் போல் இருந்தார்கள் இருவரும்.
‘’ஒரு இரண்டாம் நிலை வாழ்க்கையை ஏத்துக்கிற அவசியத்துல நீங்க இல்லைன்னு நினைக்கிறேன்.” என்றான் பார்வையை தூரமாக பதியம் வைத்துக் கொண்டு.
”இரண்டாம் தாரமா இருக்கிறதில் தப்பில்லை. இரண்டாம் தரமா இருக்கிறதுதான் தப்பு.எனக்கு மனிதர்களை குவாலட்டி கண்ட்ரோல் ஆபிசர் மாதிரி தரம் பிரிக்கவெல்லாம் தெரியாது.அதுல எனக்கு இஷ்டமும் இல்லை.புரிதல்கள் உள்ள வாழ்க்கை எந்த நிலையில் இருந்தாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை.” அழுத்தமாக அவள் சொன்னது பிடித்தமாக இருந்தது.
கேள்வியும் கேட்கவில்லை, அதற்கு அவன் பதிலும் சொல்லவில்லை ஆனால் அவர்கள் யோசித்து வந்த விசயத்திற்கு முடிவு தெரிந்திருந்தது. எழுந்து கொண்டார்கள். காற்றோடு போட்டி போட்டு நடக்க நடக்க, மனசு இதமாக உணர்ந்தது.
அதன்பிறகான விசயங்கள் எப்படி நடந்தது என்று கேட்டால், இருவருக்குமே சொல்லத் தெரியாது..! முகம் முழுக்க நிறைவோடு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொள்வார்கள்.
எதிர்பார்ப்பே இல்லாமல் வானதி அவனின் துணைவியானாள். இப்படியும் ஒரு பெண்ணா?’ என்று விசித்திரமாய் பார்க்க வைத்தாள் உலகத்தையே.
”...என்றுமவள் எங்கள் வீட்டுத்
திருமகளாவாள்
அந்த இனிய மகள் எனது தாய்க்கு
மருமகளானாள் இன்று
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
12
புரண்டு படுத்தபோது நினைவுகள் முடிவுக்கு வந்திருந்தது. எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று வந்தான், தானே ஒளிர்ந்து கொண்டு இருந்த சுவர் கடிகாரத்தில் மணியை முகர்ந்தான். மூன்று என்று காட்டியது. இயற்கை காற்று ஜன்னல் வழி இன்னல் இல்லாமல் வந்து போனது.
திரும்பிப் பார்த்தான். குழந்தையை அணைத்துக் கொண்டு வானதி உறங்கி இருந்தாள். தன்னை மறந்த உறக்கம். மிடறு விழுங்கியபடி அவள் முகத்தைப் பார்த்தான்..! களங்கமோ சலனமோ இல்லை. அவன் வாழ்க்கையோடு இணைந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது… இன்னும் ஒரு மனைவிக்கான அங்கீகாரத்தை அவனும் தரவில்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு பூரண யுகத்திற்கான புரிதல்களையும், சந்தோசங்களையும் அந்த மொத்தக் குடும்பத்திற்கும் அவள் அள்ளித் தந்திருப்பது நெகிழ்வாய் இருந்தது.
எழுந்து போய் அவள் கால் மாட்டில் அமர்ந்து கொண்டான். அவள் முகத்தை பார்த்துக் கொண்டே மென்மையாய் அவள் கால்களை வருடித் தந்தான், புருவம் உயர்ந்து, லேசாய் தொடுதலை உணர முயன்றாலும், தூக்கம் களையாமல் உறக்கத்தில் இருந்தாள்.
சம்மணமிட்டு கட்டிலில் அமர்ந்துகொண்டான். அவள் கால்களை மடியில் ஏந்திக்கொண்டு கொலுசுரசும் கெண்டைக் கால்களை மென்மையாய் நீவித்தந்தான். கண்களில் அத்தனை நிம்மதி படர்ந்தது. இருட்டில் வெண்மையாய் ஒளிர்ந்த பாதங்களை தடவித் தர, இரண்டாவது வருடலில் விசுக்கென முகம் நிமிர்த்தி அமர்ந்து கொண்டாள்.
‘’என்ன பண்றீங்க நந்தா?” கைகளை மடியில் ஊன்றிக் கொண்டு சிரிப்போடு கேட்டவளை, எந்த ஆசைக் கணவனும் அந்த நேரத்தில் தள்ளிவைக்க மாட்டான் தான்.
”சும்மாதான்” என்றான் அவள் கால் விரல்களை நெட்டி எடுத்துக் கொண்டே.இரண்டு கைகளையும் பின்னால் ஊன்றி சின்னதாய் வளைந்து சாய்ந்து கொண்டு ஏகாந்தமாய்ச் சிரித்தாள்.
‘’சும்மா எதுக்கு என் காலை பிடிச்சிட்டு இருக்கீங்களாம்… எதுவும் மன்னிப்பு வேணுமாக்கும்?காலை பிடிக்கிறது ஒண்ணும் அத்தனை அசிங்கமான காரியமா என்ன? மனுசங்க உறுப்பில எதுக்கு உயர்வு தாழ்வு?கால் தாழ்ந்ததும் இல்ல தலை உயர்ந்ததும் இல்ல’ அர்த்த ராத்திரியில் சொன்னாலும் அர்த்தமான ஒரு தத்துவத்தைச் சொன்னவளை மெச்சுதலாய்ப் பார்த்தான்.
‘’ஐ’யம் சாரி வானதி. உன்னை கஷ்டப்படுத்தவோ அசிங்கப்படுத்தவோ நான் மிருதுளா பேரைச் சொல்லல. உடம்பு யாரா இருந்தாலும், உணர்ச்சி அவளை மட்டுமே அடையாளம் காணுது. இது தற்செயலா ஏற்பட்ட விபத்து..! ஆனால் அது உன்னுடைய மனசை எத்தனை பாதிச்சிருக்கும்னு நினைக்கையிலே எனக்கு அவ்வளவு கோபம் வருது என்மேலயே.
அதுவும் நீ அழும்போது என்னால தாங்கவே முடியல வானதி.உன்கிட்ட கண்ணீர்கூட இருக்கமுடியுமா..?’ன்னு என்மனசு என்னையே கேள்வி கேட்டது, என்னால தூங்கவே முடியல.” அவன் கண்களில் மிதந்த பளபளப்பு அவளை உருக்கினாலும், அவனுடைய விளக்கம் அவள் கவலைகளை ஆற்றுவதிற்கு பதில் அதிகரிக்கவே செய்தது.
‘’விட்டுடலாம் நந்தா” என்றாள் மென்மையாக. அவன் மடியில் இருந்து வலுவில் கால்களை உருவிக் கொள்ள எத்தனிக்க, அவன் அவள் கால்களை இறுக பற்றிக்கொண்டு இருந்தான்.
‘’விட்டுட நாம வேற யாரோ இல்ல வானதி. கணவன் மனைவி.” அவன் அழுத்தமாய்ச் சொல்ல, கொஞ்சம் இகழ்வாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருட்டில் அந்த நிகழ்வை அவன் கவனித்து இருக்க இயலாதுதான்.
‘’ம்.கணவன் மனைவிதான்.ஆனால் அந்த உறவுக்கான எந்த சம்பிரதாயங்களும் நமக்குள்ள இல்ல.ஆனால் அது இல்லாமயே பெரிய புரிதலும்,அன்பும் நமக்கு இருக்கு. அது எனக்குப் போதுமானது. நான் எந்த அளவு திருப்தியா இருக்கேன், எதுக்கு அழறேன், எதுக்கு சிரிக்கிறேன்னெல்லாம் கண்காணிக்க ஆரம்பிச்ச உங்க மனநிம்மதிதான் பறிபோகும்.
இருட்டில வந்து கால பிடிக்கிறது,மழையில வந்து கட்டிப் பிடிக்கிறது,இப்படியெல்லாம் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக்க வேணாம் மிஸ்டர்.நாளைக்கு பேங்குக்கு போக வேண்டாமா?போய்த் தூங்குங்க.” கால்களை உருவிக் கொண்டு கண் சிமிட்டிக் கொண்டு தலையணையில் புதைந்தாள்.
ஓற்றைப் படையில் நிமிசங்கள் கடந்திருந்தது. எந்தச் சலனமும் இல்லாமல் இருக்க,முகம் உயர்த்திப் பார்த்தாள்.நந்தா அப்படியே அமர்ந்து அவள் முகத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
‘’நந்தா போய் தூங்குங்க இப்போ என்ன வேணூம் என்கிட்ட இருந்து?”
‘’அந்த நிமிசம் உன் மனசு என்னபாடு பட்டிருக்கும்.உதடு துடிச்சு நீ பேசினதை என்னால மறக்கவே முடியல வானதி.ஐ’யம் அசேம் வானதி.என்ன நினைச்சே அப்போ..?” அவன் பரிதாபமாக கேட்க, முகம் உயர்த்தி அவனை குறும்பாகப் பார்த்தாள்.
‘’உணர வேண்டியதை வார்த்தைகளால் விளக்க முடியாது மிஸ்டர்.எனக்கு என்ன தோணுச்சுன்னு நிஜமாவே உங்களுக்குத் தெரியணும்னா, மறுபடியும் என்னை கட்டிப் பிடிங்க. நான் மெய் மறந்து ‘பாபு...பாபு...’னு சொல்றேன். அந்த நிமிசம் உங்களுக்குத் தெரியும் எனக்கு என்ன தோணுச்சுன்னு.” சொல்லிவிட்டு அவள் தலையணையால் முகம்மூடிக் கொண்டு உள்ளுக்குள் சிரிக்க, நந்தா உறைந்து போனான்.
அவன் வேகமாய் எழுந்து தன்னுடைய இடத்தில் சென்று சரிந்தாலும், மனம் படபடத்துக் கொண்டே இருந்தது. மூடிய இமைக்கு மேலேயும் கோபம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது.
மிகச்சரியான ஐந்து நிமிடத்திற்கு பிறகு சின்ன செருமலோடு அவளை திரும்பிப் பார்க்க, அவளும் அவனையே நிமிர்ந்து பார்த்தாள்.
‘’என்னவாம், இன்னும் தூக்கம் வரமா டென்சனா உட்கார்ந்துட்டு..?”
”நத்திங்.அதுசரி பாபு யாரு?” என்றான் குரலில் உணர்வைக் காட்டாமல்.
‘’பாபு என் பழைய காதலர்.” சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
* * *
கண் திறந்தபோது இமை திகுதிகுத்துக் கொண்டே இருந்தது. இரவு முழுக்க குழப்பமும் கோபமும் தூங்கவிடாமல் உறக்கத்தை திண்றதால் அதிகாலை கண் அயர்ந்து இருந்தான். கீழே பூஜை மணியின் சத்தத்தில் தான் கண் விழித்துப் பார்த்தான்.
எட்டுடன் மணி முட்டிக் கொண்டு நின்றது. போர்வையை உதறிவிட்டு வேகமாய் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கீழே சென்றான். விக்கியும், வீணாவும் கல்லூரிக்கு கிளம்ப பரபரப்பாய் இருந்தார்கள்.
‘’என்னண்ணே இன்னைக்கு பேங்குக்கு போகலயா.?இவ்வளவு லேட்டா இறங்கி வர்றே?” விக்கி சாப்பிட்டுக் கொண்டே விசாரிக்க, அவனுடைய கண்களை அனிட்சையாக வானதியைப் பார்க்க, அவள் சிரிப்பை ஒளித்துக்கொண்டு நின்றாள்.
‘’அவர் நைட்டெல்லாம் கால் பிடிச்சிட்டு இருந்தார் விக்கி.”அவள் குசும்பாய்ச் சொல்ல, விசுக்கென அவளை நிமிர்ந்து பார்த்தான். விக்கி வாயில் அடைத்த இட்லியோடு இருவரையும் மாறி மாறிப் பார்க்க, கண்களாலாயே கடிந்து கொண்டவனை வம்பிழுப்பதில் மனசு ஏகாந்தம் கொண்டது அந்தநொடி.
‘’ஆமாம் விக்கி.கட்டில் கால் ரெம்ப டேமேஜ் ஆயிடுச்சு. அதனால ராத்திரியெல்லாம் அதை பிடிச்சிட்டே இருந்தாரு. அதுனால தூங்கல.”
‘’ஓ,நான்கூட என்னமோன்னு நினைச்சேன்,” அவன் குரல் அடக்கிச் சிரிக்க, நந்தாதான் அயர்ந்து போனான், இருவரும் போட்டு போட்டுத் தாக்கியதில்.
‘’என்னடா நினைச்சே..? ‘’
‘’பதறாதண்ணே.அண்ணிக்கு கால்வலி வந்து நீ பிடிச்சு விட்டுட்டு இருந்தியோன்னு நினைச்சேன்.”அவன் குசும்பாய்ச் சொல்ல, அப்படியே சிரித்துக் கொண்டு உள்ளே நகர்ந்தாள் வானதி.முறைப்பாய் தம்பியைப் பார்த்தவன்,
‘’இதிலெல்லாம் கற்பனை அஞ்சு நிமிசத்துல கதை திரைக்கதை எல்லாம் எழுதி ஓய்ஞ்சிடும் உனக்கு.இது ஃபைனல் இயர்தானே உனக்கு.? பி.ஜி முடிச்சிட்டு என்ன பண்ணலாம்னு யோசிச்சியா?” விறைப்பாய் கேட்டவனை,சிரித்துக் கொண்டே ரசித்தான் விக்கி.
‘’கேம்பஸ்ல செலக்ட் ஆகியிருக்கேன்ணே.இன்னும் நிறைய கம்பெனிஸ் யூனிவர்சிட்டிக்கே வந்துட்டே இருக்காங்க. கண்டிப்பா நீ பெருமைப்படற மாதிரி ஒரு இடத்தில உட்காருவேன்.” என்றான்.
தலை அசைத்துவிட்டு மாடிக்குச் சென்றான். வேகமாய் குளித்து உடை மாற்றிக் கொண்டு தயாராக, குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு வானதி அறைக்கேத் தேடிக் கொண்டு வந்தாள். அவளை நிமிர்ந்து பார்க்காமல் முகத்தை உம்மென்று வைத்திருந்தான்..!
‘’நந்தா, சாப்பிடலயா? நான் இங்கேயே எடுத்துட்டு வரவா?”
‘’ப்ச்.எனக்கு பசிக்கல. ஆல்ரெடி எனக்கு ரெம்ப லேட்டாயிடுச்சு.” முகம் பார்க்காமல் பதில் சொன்னான்.
அவன் முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றாள் புன்முறுவல் மாறாமல்.
‘’ஏதாவது என்கிட்ட விசாரிக்கணுமா..? ‘’ என்றாள் சிரிப்போடே. திரும்பிப் பார்த்து முறைத்தான்.
‘’வாழ்க்கையில முதல் தடவையா முறைக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.அதான் சரியா முறைக்கத் தெரியல. ‘’
”எனக்கு டைம் ஆச்சு வானு.வம்பு பண்ணாதே.”
‘’அடேங்கப்பா.அதென்ன வானு’னு செல்லமால்லாம் கூப்பிட்டு.?”
‘’ஏன் நான் கூப்பிட்டதே இல்லையா உன்னை? ‘’
‘’நீங்க கூப்பிட்டு இருப்பீங்க தான்.எனக்குத்தான் காதுல விழல.” அவள் விடாது வம்பு செய்ய, தோள்களைக் குலுக்கிக் கொண்டு கிளம்பி விட்டான்.அவளிடம் கோபப்படும் முறைகூட அவன் கற்று வைத்திருக்கவில்லை.
‘’நம்ம பஞ்சாயத்தை ஈவினிங் வச்சுக்கலாம். எனக்கு நிஜமாவே டைம் ஆகுது.” அவன் பேக்கை எடுத்துக் கொண்டு கீழிறங்க முற்பட,
”சாப்பிடாமப் போறது கஷ்டமா இருக்கு நந்தா. என்னால தானே? நான் உங்களை வம்பு பண்ணத்தான் அப்படிச் சொன்னேன். எனக்கு எந்த பாபுவையும் தெரியாது.‘’ கண்கள் தரை பார்க்கச் சொல்ல, அவன் இதழ்களில் மடங்கி பிறந்தது ஒரு அழகான புன்னகை..!
அருகில் வந்து அவள் மேவாயைப் பற்றி நிமிர்த்தினான்.
‘’இருந்திருக்க வாய்ப்பில்லைன்னு நல்லாத் தெரியும். அப்படி இருந்திருந்தாலும், அதில் பெரிய குற்றமில்லைன்னு எனக்குப் புரியும்..! எனக்கு புரியவைக்க உன்னை ஏன் அசிங்கப்படுத்திக்கிட்டேன்னு தான் எனக்கு கோபம்..! சாப்பிடாததுக்கு காரணம் நிஜமாவே டைம் ஆயிடுச்சு வானு...” என்றான்.
”அப்பா டாட்டா...” வானதியின் இடுப்பில் அமர்ந்து தோளில் முகம் புதைத்துக் கொண்டு, தன்னுடைய கொழு கொழுப்பான கைகளை அசைத்து தபஸ்வி சொல்ல, அருகில் வந்து குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தான். முகம் நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தான்.
தோளில் சரிந்திருந்த தபஸ்வியின் கண்களை மெல்ல தன் வலக்கையால் மூட, பதறிப் போய் பார்த்த வானதியின் கன்னத்தில் சத்தமெழுப்பாமல்
ஒரு முத்தத்தை பதிக்க,அவள் ஸ்தம்பித்துப் போனாள் அவன் முதல் இதழ் ஸ்பரிசத்தில்..!
சட்டென்று விலகியவன், படபடவென படிக்கட்டில் இறங்கி கீழே போக, அவள்தான் அந்த படபடப்பை மறைக்க வெகு சிரமப்பட்டாள்..
அன்றைய பொழுது செய்த காரியங்கள் அத்தனையும்மனசிற்கு பிடித்தமானதாக இருந்தது..! பெண் என்ன அத்தனை பலகீனமானவளா தன்னுடைய உணர்வுகளை காட்டும்போது..? ஆணின் தீண்டலுக்கு தவம் கிடக்கும் பதுமைதானா பெண்கள்..? மனசு கேள்வி கேட்கும் போது சிரிப்பு வந்தது..!
அன்பை எல்லைகளைத் தாண்டிய உணர்வுகளில் பரிமாற கடவுள் ஆசிர்வதித்த பந்தம் கணவன் மனைவி பந்தம் மட்டும்தான்..! மற்ற உறவுகள் வேறொன்றாய் மாறவே முடியாது..! ஆனால் கணவன் மனைவி மட்டும் தான் வாழ்க்கையில் வேறெந்த இடத்தையும் தன் இணைக்கு வழங்கமுடியும்..!
ஒரு கணவன், அண்ணனாய், தம்பியாய், நண்பனாய் தந்தையாய், யாதுமாகிக் கொள்ளலாம், ஆனால் எந்த உறவும் கணவனின் இடத்தையோ அன்யோன்யத்தையோ வழங்கி விடவே முடியது…
எல்லையே இல்லாத அந்த நேசத்தில் நிழலே நிறமாக இருக்கும் என்னும்போது, அதன் வேர் எத்தனை சுகமாக இருக்கும்..? இதை ஆண் பெண் உறவென்ற அர்த்தமற்ற சிந்தனையில் மட்டும் பார்க்கும் போது ஆண் பெண் உறவில் இருக்கும், அண்டத்தின் அடிநாதம் புரியாது போய் விடும் இதை புணர்வாய் பார்த்தால், அதில் லயிப்பு இருக்காது… அதை உணர்வாய்ப் பார்த்தால் மட்டுமே உலகத்தின் அத்தனை உயிரினங்களுமே ஜதையாக படைக்கப்படு இருப்பது புரியும்..!
நந்தாவின் அன்பும் அக்கறையும் எப்போதும் அவள் அறிந்ததுதான். அதன் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்கும்போது மனது அவளை விட்டு ஒரடி தள்ளி நிற்பது போல்தான் மனசு உவகையாய் இருந்தது. நாள்முழுக்க ஒரு சின்ன புன்னகை இதழ்களில் சாஸ்வதமாய்த் தங்கிக் கொண்டது..!
சமையலை வேகமாய் முடித்து, குழந்தைக்கு ஊட்டி முடித்து உறங்க வைத்தாள். வீணா மதியமே வீட்டுக்கு வந்திருக்க, இருவரும் இணைந்து பேசிக்கொண்டே சமையலில் மூழ்க, கல்பனா டி,வி.யில் தன்னை முழுதாய் தொலைத்து இருந்தார்.
அலைபேசி சிணுங்கிக் கொண்டே இருந்தது..! வந்து பார்த்தவள் விழிகள் சின்ன வியப்பைக் காட்டியது..! அவள் பணிபுரிந்த மருத்துவமனையில் இருந்துதான். அழைப்பு வந்திருந்தது.
திருமணத்திற்கு பிறகு பணிக்குச் செல்ல வேண்டாம் என்பது போன்ற எந்த அறிவுறுத்தலும் நந்தாவின் தரப்பில் இருந்து இல்லை. கல்பனாவிடம் இருந்து எந்த எர்மறை கருத்துகளும் இல்லாத போதும் வானதியே தன்னுடைய பணியில் இருந்து விடுவித்துக் கொண்டாள்.
என்னதான் இந்த திருமணம் பெரிய கனவுகளைச் சுமந்து கொண்டு நடக்கவில்லை என்றாலும், ஒரு நீண்ட பயணத்தை ஹாஸ்டலிலேயே நடத்திக் கொண்டு இருந்தவளுக்கு குடும்பம் ,வாழ்க்கை என்பது பெரும் ஆசையாக இருந்தது. அதுவும், அவளை ஆராதிக்கும் அன்போடு இருந்த கல்பனாவும் அன்னை முகம்தேடும் நிமிசம் தொட்டு இவள் சின்ன முகத்தையே பார்த்த தபஸ்வியின் அருகாமை, மின்னாமல் மிளுங்காமல், சுமக்காமல் கணக்காமல் ஒரு குழந்தையை நெஞ்சில் சுமக்கும் பாக்கியம் இதெல்லாம் சேர்ந்து வானதிக்குள் வண்ண வண்ணக் கனவுகளை உண்டாக்கி இருக்க, தானே முன்வந்து வேலையை விட்டு விட்டாள்.
‘’எனக்கு ரெம்ப கில்ட்டியா இருக்கு வானதி.உன்னுடைய தொழில்ல நீ எத்தனை சிறப்பான பொண்ணுங்கறதுக்கு என் அம்மாவே சாட்சி.அப்படி இருக்கும்போது நீ வேலையை விட்டுட்டு சும்மா இருக்கிறதைப் பார்க்கும்போது மனசுக்கு என்னவோ பண்ணுது.‘’ திருமணம் ஆன புதிதில் நந்தா சொன்னபோது அவனை அன்பாய்ப் பார்த்தாள்.
‘’இதுல இன்னொரு கோணமும் இருக்கு நந்தா.நான் பெரும்பாலும் ஹாஸ்டல்லயே வாழ்ந்துட்டேன். ஒரு குடும்பம் அதோட அமைப்பு, அங்கே இருக்கிற நல்லது கெட்டது, கோபம் தாபம் இது எதுவுமே எனக்குத் தெரியாது நந்தா..! கண்டிப்பா நான் என் கெரியரை விட்டுட்டு முடங்கிப் போக விரும்பல. ஆனால் என் தேவை இருக்கிற இடத்தில கரைஞ்சு போக விரும்பறேன், சந்நிதானத்தில மணக்கிற போது மட்டும் விபூதிக்கு தனி மணம் இருக்கிற மாதிரி.
தபஸ்வி கொஞ்சம் வளரட்டும். அத்தையும் இன்னும் கொஞ்சம் மாறட்டும்.அப்பவும் என்னுடைய தேவை உளவியல் துறைக்கு இருந்தா கண்டிப்பா நான் போவேன். இப்போ என்னை இந்த வாழ்க்கையை அனுபவிக்க விடுங்களேன்...” குழந்தையை அள்ளிக் கொண்டு அவள் கீழே போன போது இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அந்த நிமிசம் ஏற்பட்ட பிடிப்பு இந்த நிமிசம் அவளுக்கு இரட்டிப்பாக இருந்ததே தவிர குறைந்தோ மறைந்தோ போகவே இல்லை..! நந்தாவும் சிலமுறை அவளிடம் இதுபற்றி பேசிவிட்டு அவளுக்கு விருப்பம் இல்லையென்பதை அறிந்து அமைதியானாலும், ஒரு நேர்த்தியான உளவியல் நிபுணரை, அன்பைக் காட்டி அடைக்கி வைத்திருக்கிறோமே என்றுகூட நினைத்தாலும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கைதான் சிறப்பான வாழ்க்கை என்பதை அவன் அறிந்தே இருந்ததால் தன்னுடைய வாழ்க்கை குறித்த முடிவுகளை எடுக்கின்ற சுதந்திரத்தை அவளுக்கு தந்துவிட்டு அமைதியாகிக் கொண்டான்.
வேலையை விட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இப்போது எதற்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு என்று யோசித்தபடி தான் எடுத்தாள். சீப் டாக்டர் முரளிதரன் குருசாமி தான்..!
சம்பிரதாய நலவிசாரிப்புகள், மற்றேனய பேச்சுக்கள் என்று முடிந்த கடைசி நொடியில் சொன்னார், அவளை மறுபடியும் பணிக்குத் திரும்பச் சொல்லி.
‘நீங்க தன்னலம் இல்லாம இந்தப்பணியை சேவையாய் செய்ற பெண்..! மிகக்குறுகிய காலம்தான் நம்ம ஹாஸ்பிடல்ல நீங்கள் வேலை செஞ்சது. ஆனாலும் உங்க திறமையை மறக்கவே முடியுது. இன்னைக்கும் கூட பல பேசண்டுகள் கவுன்சிலிங் விசயமா ஹாஸ்பிடல் வரும்போது பிரத்யேகமாக உங்க பேரைச்சொல்லி விசாரிச்சுட்டு போறாங்க.
ஜஸ்ட் இந்தக் கால் உங்களை அழைப்பதிற்குத்தான்.ஐ திங்க். உங்க தேனிலவு காலம் முடிஞ்சு இருக்கும்.இப்போ நீங்க மறுபடியும் பணிக்குத் திரும்பற எண்ணம் ஏதாவது இருந்தா கண்டிப்பா உங்களுக்காக நம்முடைய மருத்துவமனை திறந்தே இருக்கும் மிஸஸ். வானதி.” அவர் சொல்லி விட்டு வைத்துவிட, அவள் இடுப்பில் இருந்த தபஸ்வி. இவள் முகவாயைப் பற்றித் திருப்பி,
‘’யாதுமா..?” என்றாள் மழலையாய்.
”...நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
13
இரவு பூச்சிகளின் ரீங்காரம் தோட்டத்தில் கேட்டது. நிலாப் பாட்டுக்கு அது மெட்டமைப்பது போல் இருந்தது. மழைக்காலத்துக்கும் பனிகாலத்துக்கும் இடைப்பட்ட, ஒருகாலம் இது..! பகலில் சாரல் மழையும், தூறல் மழையும் அடித்துக் கொண்டு இருந்தாலும், மாலை மயங்க மயங்க பனியும் குளிரும் ஆடையை மீறி அத்துமீறி அணைத்துக் கொள்ளும் முன்பனிக்காலம்..!
செடிகளின் இலைகள் பனிக்காய்ச்சலில் இரவெல்லாம் வெதும்பிக் கிடக்கும்..! மயிலுக்கு போர்வைத் தந்த பேகன் கண்டால் இந்த தொட்டிச் செடிகளுக்கும் ஏதாவது பட்டுத்துணியில் போர்வை தந்திருப்பான்..! அதிகாலையில் இலைகளின் வாயில், சுவைத்த பனியின் மிச்சம் ஒட்டியிருக்கும்… பூக்களுக்கு பனிப் பரு முளைத்திருக்கும்… இதெல்லாம் வானதி காலம்காலமாய் ரசிக்கும் காட்சி.
இன்று கையில் குழந்தையோடு பார்க்கிங்கில் அமர்ந்து அவர்களின் கடித்துப் போட்டது போன்ற சின்னத் தோட்டத்தை வேடிக்கை பார்ப்பது அலாதி சுகமாக இருந்தது. ரசிப்புக்கு நடுவே குழந்தையை கவனிக்கவும் தவறவில்லை. உல்லன் குல்லாவும் ஸ்வெட்டரும் போட்டு பூப்பந்து போல் சுற்றி இருந்தாலும், தன்னுடைய முந்தானையில் அதை முக்கால் முகம்
மறைத்து வைத்துக் கொள்வதுதான் அவளுக்கு பெரிய கவச உடைபோல் தோணும்..!
பனியில் நிலா கொஞ்சமாய் கருத்து இருப்பது போல் அசட்டுத்தனமாய்த் தோன்றியது..! தோட்டத்தில் கிடந்த நாகரிக ஸ்டில் நாற்காலியில் சாவதானமாய் அமர்ந்திருந்தாள். உள்ளே குடுமபமே அரட்டையில் இருக்க, அவளுக்கு எப்போதும் போல் தபஸ்வி போதுமானவளாய் இருந்தாள்..!
‘’மா பேய் கத்துது..! ‘’ மிச்சம் இருந்த கொஞ்சமே கொஞ்சமான முகத்தை வெளியில் நீட்டி தபு கண்களை உருட்டி, காதுகளை கவனம் தீட்டி சொல்லுகின்ற அழகைப் பார்த்தால், பேய் அருகில் நின்றாலே அள்ளிக் கொஞ்சி விட்டுத்தான் போகும்..!
”அது பேயெல்லாம் இல்ல பாப்பா..! பூச்சி..! உள்ளே அப்பா, பாட்டி சித்து, அத்தி எல்லாரும் பேசறாங்க இல்ல..! அதேமாதிரி பூச்சியும் அவங்க வீட்டில உட்கார்ந்து பேசிட்டு இருக்கு அந்த சத்தம் இது..! ‘’ குழந்தையை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள்.
‘’மா, அந்த பூச்சி கூட பேசலாம் மா...” திக்கித் திணறிச் சொன்ன குழந்தையை இன்னும் பனிக் காத்து அடிக்காமல் தன்னோடு சேர்த்துக் கொள்ள, உள்ளே இருந்து பார்த்துக் கொண்டு இருந்த நந்தாவின் முகத்தில் புன்னகை பிறந்தது. எழுந்து வெளியே வந்தான்.
காலியான நாற்காலியை நகர்த்திப் போட்டுக் கொண்டு வானதியின் அருகில் அமர, அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக வர, ஐந்து நிமிடத்தில் தோட்டம் களைகட்டியது.
‘’எனக்கு பனி ஆகாது..! எல்லாரும் உள்ளே வாங்க..!”
சொல்லிக் கொண்டே இருந்தாலும் அவர்களை விட்டு இம்மிகூட அசையாமல் அங்கேயே அமர்ந்து கிடந்தார் கல்பனா..!
சிறு வயது நினைவுகளில் ஆரம்பித்து, அத்தனை பேருக்கும் தனித்தனியாய்ச் சொல்ல சுவாரஸ்யங்கள் இருந்தது நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது,..
பேசிச் சிரித்து, எழுந்து கதவடைத்து படுக்கைக்கு வந்தபோது மணி பனிரெண்டைத் தாண்டி இருந்தது..! குழந்தை அவள் தோளிலேயே உறங்கி இருக்க, குழந்தையை நந்தாவின் கையில் தந்து படுக்கைக்கு அனுப்பி வைத்தாள்..!
அடுக்களையில் நுழையப் போனவளின் பின்னாக வந்து நின்றான்.
‘’மணி பனிரெண்டு ஆகுது வானதி..! நீ வரலியா..?” என்றவனை குசும்பாய்ப் பார்க்க, அவன் புரியாமல் விழித்தான்.
‘’என்னவாம் இப்ப..? நாங்க பக்கத்துல இல்லாட்டி சார்க்கு தூக்கம் வராதக்கும்..? அப்படியே வளைச்சு வளைச்சு ரொமான்ஸ் பண்ணிடற மாதிரி...” கன்னத்தில் நாக்கை உருட்ட, நிமிர்ந்து பார்த்து தலை சாய்த்து சிரித்தபோது ஒரு இளநகை அவன் முகத்தில் துளிர் விட்டது..!
‘’உன் நக்கலுக்கு அளவில்லாமல் போச்சு..! இதுக்குமேல சமையல் கட்டுல என்ன செய்யப் போறன்னுதான் கூப்பிட்டேன். உன்னையும் கொஞ்சம் பார்த்துக்க வேண்டாமா..?” கரிசனமாக கேட்டவனை அன்புமேவப் பார்த்தாள்.
‘’ ம்..! வாஸ்தவம் தான். அத்தை இத்தனைநேரம் சொல்லச் சொல்ல கேட்காமல் பனியில உட்கார்ந்து கிடந்தாச்சு..! காலையில எழுந்திருக்கும் போதே இஸ்னோபோலியா நெஞ்சில் இறைக்கும்..! வென்னீர் போட்டு ப்ளாஸ்க்கில வச்சிட்டு வர்றேன்.
என்னைக் கூப்பிடவும் மாட்டாங்க. நைட்டுல அவங்களா எழுந்திருச்சு தட்டு தடுமாறிக்கிட்டு இருப்பாங்க..! ‘’ வாய் பேச்சில் இருந்தாலும், கை லைட்டரைத் தேடி அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை அடுப்பில் ஏற்றி இருந்தது..!
நந்தா தலையசைத்து விட்டு மாடிக்கு வந்தான்..! குழந்தையை கட்டிலில் படிக்கவைத்து விட்டு கட்டிலில் கால்நீட்டி கொண்டான்..! வானதி நினைத்த நிமிசம் மனசுக்குள் தாழம்பூவின் வாசத்துக்கு ஓடோடி வரும் பூநாகமாய் மாறியது..!
‘என்ன பெண் இவள்..! எங்கிருந்து இந்த குடுமபத்திற்காக பிறந்து வந்திருக்கிறாள்..! ஆலை இல்லாத ஊருக்கு வந்த இலுப்பை அல்ல இவள்... ஆலும் வேலும் அரசும் வேம்புமாய் இந்த பூமியை வளத்துக்கு ஆளும் பெண் தரு அவள்..!
இப்படி கடமையாய் ஒரு குடும்பத்தில் தன்னைக் கரைத்துக் கொள்வதுதான் வரலாற்றுக் கால பெண்ணுக்கான அடையாளமா..? நிச்சயம் அல்லவே அல்ல..! ஒரு பெண் என்பவள் காப்பவளாய் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நல்ல ஆண் அல்ல, அவள் பூப்பவளாக இருக்கவேண்டும்..!
அந்த குடும்பத்தின் அத்தனை உணர்வையும் தன்னுடைய உணர்வில் ஏற்றிக்கொண்டு அந்தக் குடும்பத்திற்கு பூப்பவளாக இருக்க வேண்டும்..! தியாகம் என்பது நல்ல இணைக்கான அடையாளமாய் இருக்க முடியாது..! புரிதல்கள்..! உன்னது என்னது என்ற பாகுபாடுகளைக் கடந்து, இணைப்போ ஏற்போ அது நம்மளுது என்ற உணர்வே நல்ல மனையறத்தின் அடையாளம்..!
அந்த மனநலம் யாரும் கற்றுத் தராமல் வானதிக்கு தன்னால் வந்திருந்தது..!
அதுவும் அவளுக்கு தபஸ்வியின் மீதுண்டான அன்பும் ஈர்ப்பும் சொல்லி மாளாது..! இத்தனை அழகாய், இத்தனை இதமாய் இவ்வளவு சீக்கிரமாய் தன்னை தாய்மையை உணர வைத்த வகையில் அந்தக் குழந்தை அவளுக்கு மெத்த சிறப்பான உணர்வைத் தந்திருந்தது தான்..!
அறைக்கு வந்தபோது இன்னும் சில நிமிடங்கள் கையை விட்டு கரைந்து இருந்தது கையை தலைக்குத் தந்துகொண்டு நந்தா அமைதியாக படுத்திருந்தான்.
”இன்னும் தூங்கலயா..?” அவன் கால்மட்டில் அமர்ந்து கொண்டு மெல்லக் கேட்டாள். எழுந்து அமர்ந்து கொண்டான். அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
”இன்னைக்கு என்ன நாள்னு உனக்குத் தெரியுமா..?” என்றான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே. அவள் முகத்தில் வழக்கமான சிரிப்பு சாஸ்வதமாகிக் கொண்டு இருந்தது.
‘’என்னோட பிறந்த நாள்..! அதனால என்ன..?” இயல்பாகக் கேட்டாள்.
‘’என்கிட்ட சொல்லத் தோணல பாரேன்...” என்றான் ஆதங்கமாக.
‘’நான் சொல்லாட்டி என்ன..? உங்களுக்காகத் தான் நான் பிறந்து இருக்கேன்னு கடவுள் சொல்லிடாரே...” இப்போதும் அவள் குசும்பாய்ச் சொல்ல, அவனுடைய முகத்தில் இன்னும் சில டெசிபல் புன்னகை விரிந்தது.
பின்னே கையைச் செலுத்தி தலையணைக்கடியில் இருந்து எதையோ எடுத்து அவள் முன்னே நீட்டினான். பின்க் வண்ண தாளில் சுற்றப்பட்டு இருந்த சிறிய அட்டைப் பெட்டி..! அதன் தலையில் சாட்டின் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.
வாங்கி சுற்றி சுற்றிப் பார்த்தாள். சின்னதாய்ச் சிரித்துக் கொண்டாள்.
‘’எதுக்கு இந்த மிகைப்படுத்தல் அலங்காரம் எல்லாம். உள்ளே இருக்கிற கிப்டை விடவா இந்த அலங்கார பேப்பர் மயக்கப் போகுது. அதுக்கு ஒரு டை கட்டி ப்போ வச்சு, என்ன சார் இதெல்லாம். வரவர காலேஜ் பையன்களுக்கு டஃப் கொடுக்க ஆரம்பிச்சாச்சே.” அவள் அதிராமல் சிரித்த நிமிசம், தசமி நிலாவின் கால்பங்கு வெளிச்சத்தில் அறையின் மினுக்கில் அத்தனை அழகாக இருந்தது அவள் முகம்..!
‘’ஓபன் பண்ணிப் பாரு வானதி...’
அட்டைப் பெட்டியில் சுற்றிருந்த ஃபோவையும், பளபளத்த ரேபரையும் கிழிக்காமல் அழகாய் பிரித்தாள்..! அந்த நேர்த்தியை பார்த்துக் கொண்டே கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
”அது குப்பைக்கு போகவேண்டிய கவர் வானதி..! அதையேன் இத்தனை பொறுமையா பிரிக்கிற..?” என்றான் சிரித்துக் கொண்டு.
”இறந்துதான் போகப் போறோம்னு தெரிஞ்சும் பிறந்தநாள் கொண்டறோமே அது மாதிரித்தான்…”
‘’அநியாயத்துக்கு தத்துவம் பேச ஆரம்பிச்சுட்ட.”
”தத்துவம் பேசுறதே அநியாயமா சார்... இதென்ன நியாயம்..! நந்தா கசக்கி பிழிஞ்சு எதையும் அடையறதுல எனக்கு நம்பிக்கையே இல்ல..! பொறுமையா லயிப்பா கிடைக்கணும்.” முகமெல்லாம் சிரிப்போடு அவள் பிரித்து எடுத்துக் கொண்டு இருந்தாள்.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். சின்ன ப்ளாஸ்டிk டப்பாவில் பொதிந்திருந்த லாகெட் ரோஸ் வண்ண டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது..! தங்க இறகுகள் விரிந்து இருக்க அவற்றை பற்றிக்கொண்டு இருந்தது ஆங்கில எழுத்துக்கள். என்.வி...
முகம் மாறவே இல்லை.., முறுவலிப்பாய் கைகளில் ஏந்திக்கொண்டு அந்த லாக்கெட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..!
‘’பிடிச்சிருக்கா வானதி...” என்றான்.
‘’முதன்முறையா நீங்க குடுத்த பரிசு பிடிச்சிருக்கு..!” அவன் வலக்கையை எடுத்து புறங்கையை கன்னத்தில் வைத்துக் கொண்டா. மெல்ல இடக்கையால் அவள் தலை கோதினான். நிமிர்ந்து குறும்பாய் பார்த்து சிரித்தாள்.
‘’சார் பார்முக்கு வர்ற மாதிரி இருக்கே..! அதென்ன என்,வி..? நான் வெஜ்ஜா..?” கேலி செய்தாள்.
‘’நந்தாவோட வானதி...! நிஜத்தில இந்த நந்தாவுக்கே வானம் நீ...” அவன் குரல் நெகிழந்து இருந்தது. நிமிர்ந்து அமர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
‘’ரெம்ப சந்தோசமான தருணம் இது நந்தா..! என்னைவிட யார் அதிர்ஷ்டம் செய்திருக்க போறாங்க..!”
‘’இல்ல வானதி..! நிஜத்துல நான் தான் அதிர்ஷ்டக்காரன், நீ இல்ல.. ஒரு கணவனுக்கான எந்த கடமையும் செய்யல..! எனக்கு நினைக்கும் போது அத்தனை வலிக்குது.” கண்கள் இருட்டில் பளபளத்தது. அந்த பளபளப்பை நிலவின் வெளிச்சம் ஊர்முழுக்க தம்பட்டம் அடித்தது.
‘’இப் யூ டோண்ட் மைண்ட், நான் கொஞ்சநேரம் உங்க தோள்ல சாய்ஞ்சுக்கிட்டுமா..!” அவள் அப்பாவியாய் கேட்க, அவன் நெக்குருகிப் போனான். கை இரண்டையும் விரித்து அவளை நோக்கி நீட்ட. மெல்லிய புன்னகையை சிந்தியபடி. அவன் அழைப்பைப் தவிர்த்து மெல்ல நகர்ந்து அவன் அருகில் அமர்ந்து வலது தோளில் முகம் சாய்த்துக் கொண்டாள்.
‘’புணர்வினால கணவன் மனைவியாய் ஒருத்தரைஒருத்தர் நிலைப்பட்டுக் கொள்ள, ஒரு ராத்திரி போதும்..! ஆனால் புரிதலின் உணர்வினால ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து கணவன் மனைவியாய் இணைய ஒரு ஜென்மம் ஆனாலும் முடியாது. அந்த பாக்கியம் நமக்கு இத்தனை சீக்கிரம் கிடைச்சிருக்கே இதைவிட என்ன இருக்கு நந்தா..?”
சிறிது நேரம் பேசிக் கொள்ளவில்லை..! அவன் தோளில் சிட்டிகைநேரம் கண் மூடி இருந்தாள். வேறெதுவும் பிரத்யேகமாக தேவைப் படவில்லை.! மூன்று நிமிடம் முடிவுற்ற நிலையில் தலை நிமிர்த்தி கொண்டாள். அவன் கையோடு பிணைந்திருந்த கைகளில் மெல்லிய அழுத்தம் காட்டினாள்.
நந்தாவின் புறங்கையில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு கட்டிலை விட்டு இறங்கி மறுமுனையில் சென்று தபஸ்வியை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனாள்.
நந்தா தான் தவிப்பின் உச்சத்தில் இருந்தான். அவளிடம் ஏதாவது ஒரு குறை இருந்தால், இட்டு நிரப்பலாம்..! இவள் நிறைகுடமாக இருக்கிறாள்... தன்னின் எதைத் தந்து அவளை தத்தெடுக்க..?
”...உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே கண்மணியே...”
14
வாழ்க்கை என்பது சுவாரஸ்யமான கவிதைதான்… முதல் அடியின் சுவாரஸ்யம் என்பது அடுத்த அடியின் மறைப் பொருளில் இருக்கிறது.நேற்றைய நாளை வைத்து இன்றைய நாளை முடிவு செய்து கொண்டால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமில்லை.
சந்தியாவுக்கு சென்னையிலேயே வேறு ப்ரென்ச்சிற்கு மாற்றல் வந்திருந்தது.
‘’நிம்மதி சந்தியா.இனியாவது ஒரு நிஜமான அதிகாரி கீழே வேலை செய்வேன்.”நந்தா சொல்லிக் கொண்டு சிரித்தான். புதிய அலுவலகம் தண்டையார் பேட்டையை ஒட்டிய மகேந்திரா நகரில் இருந்ததால் அவளுக்கு பணிச்சுமையால் உடல் சுமையும் கூடிப்போனது. அவ்வப்போது அலைபேசியில் அழைத்து பேசுவதோடு சரி, நந்தாவின் வீட்டிற்கு வந்து போக முடிவதில்லை..!
இரண்டாவது சனிக்கிழமை அது..! இன்று விடுப்பு நாள் தான்..! ஆனாலும் சந்தியா சீக்கிரமே எழுந்து கொண்டு இருந்தாள். மனதிலும், முகத்திலும் இளமையின் மெருகு கூடி இருந்தது.
‘’எங்கே பாப்பா கிளம்பிட்டே நந்தா தம்பி வீட்டுக்கா..?” தாயம்மா கேட்ட போது என்ன பதில் சொல்வது என்றறியாமல் விழிக்க, அழைப்பு மணி அடித்து அவள் அவஸ்தையை குறைத்தது.
கதவு திறந்த தாயம்மாவின் முகத்தில் பாதியை கண்களே விலை பேசிக் கொண்டு இருக்க, நிலைப்படையில் தலை சாய்த்துக் கொண்டு சிரித்தாள் வானதி.
‘’வானதி பாப்பா. வா... வா.” கண்கள் விரித்துக் கொண்டே கையில் இருந்த தபஸ்விக்கு கை நீட்ட. அது மாட்டேன் என்று வானதியின் தோள் சாய்ந்து கொண்டது. உள்ளிருந்து வந்த சந்தியாவின் முகத்தில் சந்தோச வேட்டு வெடிக்க, உற்சாகமாய் வந்து கைகளைப் பற்றிக் கொண்டாள்.
‘’வாங்க வாங்க மிஸ்டர் நந்தா..! என்ன இவ்வளவுதூரம்..?”
‘’ஏன் வரக்கூடாதா..? நீங்கதான் எங்களை மறந்தாச்சு..! ப்ரான்ச் மாறினதும் ஆளும் மாறியாச்சு.” சிரித்தாள். சந்தியாவின் முகத்தில் சின்ன சங்கடம் சூழ்ந்தது.
‘’அப்படியெல்லாம் இல்ல வானதி..! கொஞ்சம் ஓர்க் லோடு அதிகம்.”
”நம்பிட்டேன்.”
”நம்பாட்டி போடி..! இப்பக்கூட உங்களை எல்லாம் பார்க்க வர்றதுக்குத் தான் நான் தயாராகிட்டு இருந்தேன்.”
‘’பாருடா..!”
‘’என்ன பாப்பா இப்படிச் சொல்றே..?அவசரமா வெளியில போறதாயில்ல சொன்னே..! நந்தா தம்பியைப் பார்க்கப் போறதா சொல்லவே இல்லையே. சொல்லி இருந்தா நானும் ஒருநடை வந்திருப்பனே..! எனக்கும் கல்பனாம்மாவைப் பார்த்து ரெம்ப நாளாகுது.” தாயம்மா சொல்ல வானதியின் கண்களில் குழப்பம் முடிச்சிட, நிமிர்ந்து பார்த்தா:ள்.
சந்தியா பார்வையை தவிர்த்தாள்.
‘’தாயம்மா, வானுக்கும் தபுவுக்கும் ஏதாவது சாப்பிடக் குடுங்க..! எங்கடி உன் புருசர்... வரலியா..? நீ இரு நான் வந்துடறேன்.” சார்ஜில் இருந்த அலைபேசியை எடுத்துக்கொண்டு மாடிக்கு தனியாகச் செல்ல, அவள் படிக்கட்டை நசுக்கி நசுக்கி நகர்ந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் வானதி..!
இதழ்களில் புன்னகை பூத்தது.
தாயம்மா வந்து ஏதேதோ பேசிக்கொண்டு இருக்க, ஐந்து நிமிடத்தை முழுதாய் செலவளித்த பிறகு சந்தியா கீழே வந்தாள், வழக்கமான முக மலர்வோடு..!
‘’சொல்லுடி காத்து என்ன இந்தப்பக்கம் அடிச்சிருக்கு…”
‘’சந்தியா ராகம் கேட்காததால, காத்து தேடிட்டு வந்திருக்கு..!”
”நல்லது தான்..!” என்றவள் தபஸ்வியை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்துவிட,
சொற்பநொடிகள் அவள் முகத்தை ஸ்கேன் செய்ய செலவளித்து விட்டு வானதி கேட்டாள்,
‘’யார் அது..? உன் கூட வேலை செய்றவரா..?” ப்ளவர் வாஷில் இருந்த பூக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டே வானதி இயல்பாய்க் கேட்க, சந்தியா அதிர்ந்து மீண்டாள்.
‘’ எது வானதி..?”
‘’பொய் சொல்ல வராது உனக்கு வீணா ட்ரை பண்ணாதே. ”
எதிரில் கிடந்த சோபாவில் வந்தமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு குறும்பாய் வானதியைப் பார்த்தாள்.
‘’அதெல்லாம் அப்புறம் சொல்லலாம்..! எப்படிக் கண்டுபிடிச்சே..?”
‘’பெரிய கம்பசூத்திரம் பாரு..! இயல்பை விட்டு நகர்ந்து போனா வண்டி எங்கேயோ ஜெர்க் ஆகுதுன்னு தானே அர்த்தம்..! தப்பென்ன இருக்கு இதுல..? மறைக்கும் போதுதான் கற்பனை தறிகெட்டு ஓடும்..! ‘’
”சிவா அவர் பேரு.”
‘’அவராம்ல அவரு..! என் புருசனை ஆயிரம் அவன் இவன்னு கூப்பிட்டு. சிவா அவன் இவன்னு சொல்லுடி..! ”
‘’நக்கலை உன் புருசன் கிட்ட வச்சுக்கோ..! ப்ரான்ச் செக்சன் ஆபிசர்..! பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்கிறோம்..! இன்னும் எனக்குள்ளேயே முழுமையான தீர்மானத்துக்கு வரலை. வந்தபிறகு உங்க கிட்ட பேசலாம்னு இருந்தேன்.”
‘’யோசிக்க என்ன இருக்கு சந்தியா..? பிடிச்சா முடிச்சிட வேண்டியது தானே..? நான் நந்தாவை வரச் சொல்லட்டுமா..? எனக்கும் முன்நின்று யாருக்காது கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா இருக்குடி.” கையை பற்றி குலுக்கியவளை வெகுண்டு போய் பார்த்தாள்.
‘’உனக்கு ஆசையா இருந்தா இன்னொரு கல்யாணத்தை நந்தாவுக்கு பண்ணி வச்சு அவளையும் உன்கூட வச்சுக்க..! அதுக்கு நான் தானா கிடைச்சேன்..?” இருவரின் அன்யோன்யத்தையும் ரசித்தபடி தாயம்மா பலகாரத்தோடு வந்தார்.
‘’ஏன் பாப்பா என்கிட்ட கூட சொல்லவே இல்லை..! நான் வேற தானே..?”
‘’அட எனக்கே முடிவு தெரியாதப்ப நான் எப்படிம்மா ஊர் முழுக்க சொல்லித் திரிய..? என் முகத்தையும் ஒருத்தருக்கு பிடிக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலயே.”
இருவரும் சேர்ந்து சிரித்த சத்தம் கிணிங் சிலிங் என்று சுவற்றில் மோதியது.
‘’ஜோக் அடிக்கிறது இருக்கட்டும் சந்தியா. உனக்கு பிடிச்சிருக்கா..? அடுத்து என்ன செய்யலாம்னு நந்தாகிட்ட பேசலாம். என்னவோ இனம் தெரியாத நிம்மதி மனசுக்குள்ள..! சொல்லத் தெரியல.” என்றவளின் அருகில் வந்தமர்ந்து கைகளைப் பற்றிக் கொண்டாள்.
‘’எவ்வளவு நல்லவளா இருக்கே வானு நீ...” என்றாள் நெகிழ்வாக.
”ப்ச்..! இதுல என்ன நல்லதனம் வந்ததுன்னு நீ நினைச்சே..? நம்மளை மாதிரி எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது அவ்வளவு பெரிய விசயமாகிடுச்சா என்ன..? உனக்கு ஒரு வாழ்க்கை வேணும்னு நான் ரெம்பவே யோசிப்பேன். ஆனால் அது உன்னுடைய சந்தோசத்துக்கு வாய்காலா, உன் தனிமைக்கு வடிகாலா இருக்கணுமே தவிர, உன் எதிர்பார்ப்பை அழிக்கிறதா இருக்க கூடாது…
ஒண்ணு செய்யலாமா நீ சிவாவை இங்கே வரச்சொல்லு. இல்லயில்ல நம்ம வீட்டுக்கு வரச்சொல்லிடு..! அத்தையும் இருப்பாங்க..! நந்தாவும் இருப்பாரு..! ஒரு சின்ன கெட் டூ கெதர் மாதிரி, ஒருத்தொருக்கொருத்தர் புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.”
வானதி சொன்னதோடு நில்லாமல், நந்தாவுக்கு அழைத்து விசயத்தை சொல்லிவிட்டு, சந்தியாவையும் தாயம்மாவையும் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு கிளம்ப, சந்தியாவிற்கு ஙே’ வென வந்தது..!
‘’என்னடி இதெல்லாம்..? என்னை கொஞ்சம் கூட யோசிக்க விட மாட்டியா..?”
”எல்லாம் நீ யோசிச்சாச்சு..! இல்லாமத் தான் சேர்ந்து ஊர் சுத்திறியோ..?”
‘’அடிப்பாவி அப்படில்லாம் நான் பண்ணவே இல்ல..! நீயா கற்பனை பண்ணிட்டு என்னை உயிர் எடுக்காதே..!”
‘’வாயை மூடிட்டு வா. எனக்கு இப்போ ஒரு பங்சன் அரேஞ்ச் பண்ணியே ஆகணும். ரெம்ப ஆசையா இருக்கு.” சிரிப்பை இதழ்களுக்குள் ஒளித்துக் கொண்டு வானதி வழித்தடத்தில் பார்வைத் தடத்தை பதித்துக் கொண்டாள்.
‘’அடிப்பாவி உன்னையெல்லாம் நம்பி நான் வர்றேன் பாரு..! என்னைச் சொல்லணும்.” சந்தியா நொந்து கொண்டாலும், அந்த நிமிசத்தில் வானதியின் கேலியும், மகிழ்வும் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது.
வீட்டிற்கு வந்து விசயத்தைச் சொல்லி, அத்தனை கொண்டாட்டங்களையும் தனக்கானதாக தத்தெடுத்துக் கொண்டு துள்ளி குதித்து ஓடியவளை நந்தாவே விசித்திரமாய்ப் பார்த்தான்.
‘’என்னாச்சு சந்தியா இவளுக்கு..? ‘’
‘’அவகிட்டயேன் கேட்கிறீங்க என்கிட்ட கேளுங்க..! எனக்கு கூடப்பிறந்தவங்க யாரும் இல்ல..! நினைவு தெரிஞ்ச நாள் முழுக்க ஹாஸ்டல்லயே வாழ்ந்தாச்சு. கல்யாணம், விசேம்ங்கிறதை எப்படி அரேஞ்ச் பண்றதுன்னு கூடத் தெரியாது.
நமக்கும் ஒரு கல்யாணம் நடந்ததே... உப்பு சப்பில்லாம..! சரி முறைக்காதீங்க... பேசல எதுவும். அடுத்தடுத்து நம்ம வீட்டில விக்கியோட கல்யாணம், வீணா கல்யாணம் எல்லாம் இருக்கு. எனக்கு எப்படி அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்றதுன்னு கூடத் தெரியாது. அதான் இவளை வச்சு கத்துக்க போறேன்.”
‘’பாருடா நந்தா உன் பொண்டாட்டி என்னை எக்ஸ்பிரிமெண்ட் எலி ஆக்கிட்டதை..! ‘’
பேச்சுக்களும் சிரிப்புகளும், அழகாய் பரிமாறப் பட்டுக் கொண்டே இருந்தது. வேலைகள் ஒருபக்கம் நடந்தேற, அந்த சின்ன சந்தோசத்திற்கே அந்த வீடு பூம்பொழில் பொழிந்து கொண்டது.
மிளகாய் வண்ண ஆர்கண்டி சேலையில் வானதி தேவதையாய் அவன் கண்ணில் தெரிந்தாள். தன்னைப் போலவே சந்தியாவிற்கும் அழகாய் உடுத்தி விட்டாள்.
அந்த சிவா இயல்பான தோற்றத்தில் இருந்தான். இளமையும், உயரமும் அவனுக்கு கூடுதல் மதிப்பெண் போட வைத்தது..!
‘ எப்படி.? ‘ கண்ணால் கேட்டவளை சின்னதாய் உதடு பிதுக்கிக் கொண்டு சொன்னாள்.
‘’ நாட் பேட்...”
‘’கொன்னுடுவேன் உன்னை..! அவருக்கென்ன குறை..? சும்மா அலட்சியமா உதடு பிதுக்குற..?”
‘’இதப்பாரு, இதுக்குப் பேர்தான் பக்கா காதல். உன் கண்ணுக்கு சிறப்பா தெரியறது எல்லாம் எனக்கும் தெரிய வேண்டியது இல்ல..! உன் கண்ணுக்கு ராஜகுமாரனா தெரிஞ்சாலும், என் பார்வைக்கு நந்தா அளவுக்கெல்லாம் இல்லைதான்.” கேக்குகளை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டே சொன்னவளை இடுப்பில் கைவைத்துக் கொண்டு முறைத்துப் பார்த்தாள்.
‘’உன்னை அந்த மடையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க கூடாதுடி. நான் தப்பு பண்ணிட்டேன்.” சொல்லிச் சிரித்தாலும், அவளின் கண்கள் நிறைவில் மிதந்தது. சிவா மென்மையானவனாக இருந்தான். எல்லாவற்றையும் விட அவர்களின் அலைவரிசை அழகாய் ஒத்துப் போய் இருந்தது. அதுதான் மகிழ்வே..! பெரிய உறவுச் சிக்கல் இல்லாத மனிதனாகவும் இருந்தான்.
அப்பா மட்டும் தான். அதுவும் கிராமத்தில். விவசாயக் குடும்பம். முடிவெடுக்கும் பொறுப்போடே வளர்க்கபட்டு இருப்பதாலோ என்னவோ தன்னுடைய வாழ்க்கை மீது அவனுக்கு அக்கறையும், பொறுப்பும் இருப்பது தெரிந்தது.
திட்டமிடல் எதுவுமில்லாமல் அந்த பொழுதுகள் தன்னால் அழகாய் வடிவமைத்துக் கொண்டன. அவளுக்காக குடும்பம் இல்லாவிட்டாலும், சந்தியாவை தத்தெடுத்த நந்தாவின் குடும்பம் சிவாவை நெக்குருக வைத்தது.
அடுத்து வந்த நாட்களில், பொறுப்பை நந்தா கைகளில் எடுத்துக் கொண்டான். அம்மாவை அழைத்துப் போய் சிவாவின் அப்பாவோடு பேசி வந்தான். வந்தார்கள்… பார்த்தார்கள்… தேதி முடிவானது என்று அத்தனையும் படாபட் வேகத்தில் நடக்க, சந்தியாதான் அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்தாள்.
சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு வம்பளந்தாள்.
‘’என்னடி இது புருசனும் பொண்டாட்டியும் இப்படி ஜெட் வேகத்தில் ஓடறீங்க..? என்னால ஈடு கொடுக்க முடியல. என்ன, வாரா வாரம் உங்க வீட்டுக்கு சாப்பிட வந்து உட்கார்ந்துக்கிறேன்னு தானே என்னைப் பிடுச்சு தள்ளி விடப் பார்க்கிறீங்க..?
உங்க நினைப்பு ஈடேறாது. நான் சிவாவைக் கூட்டிட்டு இங்கே வந்துடுவேன் ஞாயிற்றுக் கிழமையானாலே...” கழுவி வைத்திருந்த கேரட்டை எடுத்து கடித்தபடி சொன்னவளை முறைத்துப் பார்த்தாள்.
”எப்படி வேணா பேசிக்க. எனக்கு எந்தக் கவலையும் இல்லை. யோசிச்சுப் பாரு..! எனக்கும் உனக்கும் ஒரே வயசு. என் பொண்ணுக்கு இரண்டு வயசகுõது. இன்னும் நீ பப்பா மாதிரி சுத்திட்டு இருக்கே.” பேச்சு பேச்சாக இருந்தாலும், அரிசி களைந்து குக்கரில் போட்டு விசிலை மாட்டி இருந்தாள்.
‘’கல்யாணம் பண்ணிக்கவே பிறந்தமாடி..? என்ன பேச்சு இது..?”
‘’கல்யாணம் கூட பண்ணிக்காம, பிறந்ததுக்கு என்னதான் சாதிக்கப் போறோமாம்…”
‘’நான் குழப்பத்துலயே இருக்கேன் வானு இன்னும்..! சுதந்திரமா வாழ்ந்தாச்சு. இதுக்கு மேல இன்னொரு மனிதரை வாழ்க்கையில அணுசரிக்க முடியுமான்னு தெரியல.”
சந்தியாவின் கைகளைப் பற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். டைனிங் டேபிள் சேரில் அமர வைத்தாள். கையை கன்னத்தில் ஊன்றிக் கொண்டே அவள் முகத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
‘’சந்தியா எத்தனை முறை குழம்பினாலும், தெளிந்து போகும் குளத்து தண்ணியா இருக்கணும் மனசு..! நம்ம வாழ்க்கையை நாமதான் உளி கொண்டு செதுக்கப் போறோம். தேவையில்லாத விசயத்தைத் தான் செதுக்கி எரியணும்..!தேவையானதை செதுக்க வேண்டியது இல்லை..!
சுதந்திரமா பெண்கள் இருக்கணும்கிறதுக்கு அர்த்தம், கடைசியில யாருமில்லாத நிராதரவா நிற்கிறதா..? உனக்கு எல்லாம் புரியும். உனக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே அடுத்த படியில கால் எடுத்து வைக்கும் போது ஒரு நடுக்கமும் ஒரு தவிப்பும் நிச்சயம் தோணும் தான்.!
அங்கேயே நிற்காம கொஞ்சம் அடுத்த சிந்தனைக்கு போகலாம்.
இந்த நிமிசம் திரும்ப கிடைக்காது சந்தியா. யோச்சிச்சுப் பாரு. இதை அனுபவிக்கத் தவறிப்போனா திரும்ப கிடைக்குமா..?
சரியா வரும் சந்தியா. நீ என்னைவிட சந்தோசமா இருப்பே.” சொல்லி அவள் கன்னத்தை தட்ட, சரியாய் குக்கர் விசிலடிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்சிரித்தார்கள்.
‘’குக்கரே விசிலடிச்சிருச்சு பாரு.” இருவரும் சிரித்துக் கொள்ள, சந்தியா வானதியின் தோளில் சாய்ந்து கொண்டாள். நிறைவாக இருந்தது. அந்த நட்பென்ற நல்ல மரத்தின் நிழலுக்கு மணம் இருந்தது.
”... அடி ஏன்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ
வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன..?”
15
வேலநத்தம் தருமபுரியை ஒட்டி உள்பாதையில் நகர்ந்ததுஅந்த சின்ன கிராமம்.ஊராட்சி ஒன்றிய பகுதி அது. ஒருஆரம்பப் பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் இருந்தது. சுகாதார மையம் ஒன்று சிதிலமான ஓட்டுக் கூரையில் இருந்தது
சத்துணவுக் கூடம் ஒன்றும், அங்கன் வாடியும் கூட அங்கே இருந்தது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்க ஆரம்பித்த பிறகு, பெண்களின் சுதந்திரம் சின்னதாய் கை ஓங்கி விட்டது என்பது என்னவோ உண்மைதான்.
மரத்தடியில் இருந்த இடுப்புப் பெருத்த திட்டில் அமர்ந்து பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள் பாப்பு. விலை குறைந்த பருத்திச் சேலையும், அதே வண்ணத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். முகத்தில் அத்தனை தேஜஸ். கழுத்தில் சின்னதாய் மணிமாலையும் மெல்லிய தாலிச்சரடும் இருந்தது.
‘’பாப்புக்கா, இதுக்கென்ன அர்த்தம்..? இதை எப்படிச் சொல்றது..?” கிழிந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவள் பக்கத்தில் வந்தமர்ந்த லட்சுமிக்கு ஊட்டச் சத்தில்லாத முகம். கண்களில் ஒரு மிரட்சி நிரந்தரமாக குடியிருந்தது.
”அது ஒட்டகச் சிவிங்கி..! ஜிராபி’னு சொல்லணும்.” பாப்பு சிரித்துக் கொண்டே சொன்னாள். விசுவிசுவென காற்று அடிக்க அவ்வளவு பெரிய மரம் தலையாட்டி ஆட்டம் போட்டது.
‘’ஒட்டகத்திற்கும் ஒட்டகச் சிவிங்கிக்கும் என்ன வித்யாசம்..?” லட்சுமி கேட்க, பாப்பு வாய் திறப்பதிற்குள் இன்னொரு சிறிசு அமர்ந்தபடி ஓட்டைப் பல் தெரிய சிரித்தது.
‘’ பேர் தான் வித்யாசம். இதுகூடா தெரியல...”
‘’ போடி ஓட்டைப் பல்லு.”
‘’ நீ போடி ஊலை மூக்கு”
ஹே’சிரிப்பும் ரசிப்புமாய் அவர்களின் கள்ளமற்ற உரையாடல் நீள, அதை ஆச்சர்யமாய் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் பாப்பு.
அத்தனையும் கேட்டது போல் இருக்கிறது. ஆனால் எங்கே எப்போது..? தெரியவில்லை..! அதை யோசித்தால் மூளைக்குள் ஆயிரம் பூரான்கள் நெளிவது போல் குடைசலாக இருந்தது.
‘’பாப்புக்கா, மத்தியானம் ஆகுதுல..! அம்மாச்சி உன்னைத் தேடிட்டு இருந்தது. நீயெதுக்கு இதுக கிட்ட உட்காந்து மாரடிச்சுட்டு இருக்கிறவ..? இந்த ஞாயித்துக் கிழமை ஆனா இங்கே வந்து உட்கார்ந்துட்டு இவுக உயிரை எடுக்க வேண்டியது தான் உங்களுக்கு வேலையா..? முதல்ல சோளிகளை பார்த்துட்டு அவுக அவுக வீட்டுக்கு ஓடுங்க.” அத்தனை பிள்ளைகளையும் ஒற்றை மிரட்டலில் துரத்தி அடித்துவிட்டு முன்னே வந்து நின்ற ஒயிலா நிறம் குறைந்து களை மிகுந்து இருந்தாள்.
லட்சணமான முகம்.அடர்ந்த தலைமுடியை இறுக பின்னிக் கொண்டு இருந்தாள். விளக்கெண்ணெய் தடவியதால் முடி படிந்து அழகாய் இருந்தது.
‘’வீட்டுக்கு போலாமா பாப்புக்கா..?” வரிசைப் பற்கள் தெரிய சிரித்தாள்.
பொதுமையாய் தலை ஆட்டிவிட்டு உடன் நடக்க, வெயிலை விரட்டிக் கொண்டு இருந்தது வீசிய காற்று..! கொஞ்சூண்டு பாதையும், இருமருங்கும் பசும் தோகையுமாக இருந்த வயல்வெளியைப் பார்க்க அழகாய் இருந்தது.
‘’ஓயிலா...”
‘’சொல்லுங்கக்கா.”
”இந்த பாதையில்லாம் ரெம்ப பழக்கமானதா தெரியுது. நான் இதுக்கு முன்னாடி இங்கே வந்திருக்கேனா..?”
‘’என்னக்கா இது..! இந்த ஆலமரத்தடியில தானே நீங்க எப்பவும் பாடம் எடுக்கிறது..!”
‘’நான் அதைக் கேட்கல ஒயிலா… அதோ பஸ் போகுதுல புழுதி மண்சாலை… அது பக்கத்துல மெயின் ரோடு போகுதே. அந்த ஏற்றத் தாழ்வான பாதை இதெல்லாம் என்னவோ ரெம்ப பரிட்சயம் ஆன மாதிரி இருக்கு. ஒவ்வொரு முறையும் இங்கே வரும்போது எனக்கு அடிவயித்தை பிசையுது.”சொல்லிக் கொண்டே அந்த மேடேறிய தார் ரோட்டைத் திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தாள்.
மனசுக்குள் புகையாய் நிழலாய் அனலாய் சில நினைவுகள். வந்து மோதியது. ஆனால் அது இன்னவென்று சொல்லத் தெரியவில்லை. ஊருக்கு வாசல் போல் இருந்தது வயல்வெளிகள். அறுவடைக்குப் பிறகு ஆறிக்கிடந்த மண்ணில் வெங்காயம் போட்டு இருந்தார்கள்,
விளைந்து நின்ற வெங்காயத் தாள்களை பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள். மர கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள், வாசலில் பாத்திகளின் பயிரான ஏதேதோ பூச்செடிகள்… பக்கத்தில் கற்பூர வல்லியும், கற்றாழையும் ஆரோக்கியத்திற்கு நாங்க கேரண்டி என்று சொல்லிக் கொண்டு இருந்தன..!
”பாப்பு என்ன இன்னைக்கு இம்புட்டு நேரம் அங்கேயே உட்கார்ந்துட்டே…” அம்மாச்சி கேட்டபோதும் சிந்தனை களையாமல் அமர்ந்து இருந்தாள்.
‘’பாப்பு” சத்தம் கொஞ்சம் உயரவும் தலை உயர்த்திப் பார்த்தாள்.
”சொல்லுங்க அம்மாச்சி.”
‘’என்ன யோசனை, அதுல வீசுது மஞ்ச வாசனை”
‘’எல்லாமே ஏற்கனவே பார்த்த மாதிரியே இருக்கு..! ஆனால் எங்கே என்னன்னு தெரியல. கிணத்துக்குள்ள கிடக்கிற கல்லு மாதிரி அடிமனசில ஏதோ தட்டுப்படுது..! ஆனால் என்னன்னு தெரியல.” கைகளை விரித்து அப்பிராணியாய்ச் சொன்னாள்.
அம்மாயி இழுத்து பெருமூச்சு விட்டு, இத்துப்போன தன்னுடைய நெஞ்சைத் தாலாட்டிக் கொண்டது.
‘’வரும்தேன். நதிமூலம் புரியுது, ஆனால் ரிஷிமூலம் தெரியாது. அப்படித்தான் ஆகிப் போச்சு உன்னோட பொழைப்பு..! செதுக்கி வச்ச சாமி சிலையாட்டம் இருக்கே. உன்னை நினைப்புத் தட்டாம யார் கையிலயும் சேர்க்கவும் முடியாது.!
மனசைப் போட்டு மாவாட்டாத.! எல்லாம் விதிச்சது தான் நடக்கும். அந்த அங்காளம்மாகிட்ட கோபம் இருந்தாலும், இரக்கமானவ. சோதிக்கறதும் அவதான் சுகப்படுத்தறதும் அவதான். மனசை போட்டு மருகிட்டு நிக்காம நடையில விதியைத் தந்துட்டு, போய் வேலையைப் பாரு.” ஆறுதலாய் சொல்லி அனுப்ப, பாப்பு உள்ளே நகர்ந்தாள். அவளைத் தொடர்ந்து ஒயிலாவும் நகர, கிழவி முந்திச்சேலையை இழுத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்து கொண்டது.
பாக்கு உரலை எடுத்து கொட்டப் பாக்கை வைத்து நங் நங்’ன நய்யத் தொடங்க, அந்த சத்தத்தின் ரிதத்தில் மனசு இரு வருடங்கள் இடம் விட்டு விலகியோடியது...
* * *
அதுவொரு மதியவேளை
நாச்சியார் கோயிலில் மாசாணி ஆத்தாளுக்கு தீர்த்தவாரி. ஊரு விட்டு வந்தாலும், மாசாணி மனசு முழுக்க ஒய்யாரி தான். முப்பது வருசத்துக்கு மேலாக ஒண்டிப் பொழப்புதான் அம்மாயிக்கு.கணவன் செத்துப் போனபிறகு வயல் வரப்பை காபந்து செய்வதும், வளர்ப்பு பேத்தி ஒயிலாவை பார்த்துக் கொள்வது
மட்டும் தான் அம்மாயிக்கு வேலையே..! சொந்த பேர் மறந்துபோய் ஊர் தந்த பேரே நிலைத்துப் போனது.
நல்ல மனசுள்ள நல்ல மனுசி..! ஊரிலிருந்து திரும்பி வந்து பஸ்ஸை விட்டு இறங்கியதும், கொஞ்சம் தூரம் நடந்திருப்பார். வெயில் கொடுமையில் நெத்திப் பொட்டில் புள்ளி புள்ளியாய் வேர்வை துளிர்த்து இருந்தது. வீட்டுக்குப் போனது, மண்பானைத் தண்ணீர் ஒரு சொம்பைக் குடித்து விட்டு ,வேப்ப மரத்துக்கீழே கயித்துக் கட்டிலை தட்டிப்போட்டு மல்லந்து கிடந்தால் தான் இந்த கட்டை சுகப்படும். முந்திச் சேலையில் முக்காடு போட்டுக் கொண்டு, முணுமுணுத்துக் கொண்டே நடக்க, வயலை ஒட்டிய இறக்கத்தில் அந்தப் பெண் மலங்க விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
பார்த்த முகமாக இல்லையே. யோசனையோடு பக்கத்தில் சென்றதும் லேசாய் அடிவயிறு புரட்டியது. அந்த முகமும், உடையும், நாகரிகத் தோற்றமும், நிச்சயம் பட்டணக்கரைப் பெண் என்று கட்டியம் சொன்னது.
மலங்க விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். கண்ணில் ஒரு அழுகை உறைந்து போய் இருந்தது. துவங்கிய அழுகை விறைத்துப் போனது போல் ஒருவித பிரம்மையும் பயமும் கலந்த கண்கள்.
ஒருபக்கம் முந்தி முழுசாய் விலகி இருந்தது. அதைச் சரி செய்ய தெரியாத பிரம்மை நிலையில் இருந்தாள். உயர் தரமான ஆடை அணிந்து இருந்தாள். ஆனால் அதெல்லாம் உணராமல் சேற்றில் சம்மணமிட்டு அமர்ந்து கிடந்தாள். கழுத்திலும் காதிலும் இயல்பான நகைகள் இருந்தது… முக்கியமாய் தாலிச்சரடு இருந்தது.
‘’யாருமா நீ..? படிச்ச புள்ளையட்டம் இருக்கே, இங்கே எதுக்கு வந்து உட்கார்ந்து கிடக்கே.., யாரும் உன்கிட்டா தப்பா நடந்துகிட்டாங்களா...” வேகமாய் மார்புச் சேலையை சரிசெய்து விட்டார். குனிந்து பார்த்தாள். ஏன் தொடுகிறாய்..?’ என்று உணர்ந்து கேட்கவே இல்லை.
அடுத்து வந்த அரைமணி நேரமும் கேள்வியாய்க் கேட்டு ஓய்ந்து போய் சேர் அப்பிய அவளை கைத்தாங்கலாய் பக்கத்தில் இருந்த ஓடையில் நிறுத்தி ஓரளவு சுத்தம் செய்து கைகளைப் பற்றிக் கொண்டு அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.
முதலுதவி கைப்பக்குவத்தில் செய்து கொடுத்தாள். நாடி பிடித்து பார்த்தாள். உறைந்து கிடந்ததை வைத்து யூகிக்க முடிந்தது. மூளை பலத்த அதிர்ச்சி வாங்கி இருக்கிறது என்று….
‘’என்ன அம்மாச்சி…? என்ன செய்யப் போறே..? பேசாம போலீஸ்ல கொண்டு போய் ஒப்படைச்சிடலாமா..?” ஒயிலா கேட்ட போது வேகமாய் தலையசைத்து கிழவி மறுப்புச் சொன்னது.
‘’வேணாம் ஒயிலா என்னால ஆகாது அந்த வேலையைச் செய்ய. அந்த குட்டி யாரோ எவரோ, அதுக்கு தொட்டாலும் பிரக்ஞை இல்ல. தனக்கு என்ன நடந்ததுன்னும் தெரியல.வெள்ளாமைக்கு ஆட்டுக்கும் எப்பவும் பகைதான்னு உனக்குத் தெரியாதா..?
சுயபுத்தியோட, பாதுகாப்போட போற பொம்பளைக்கே நீதியும் இல்ல காவலும் இல்ல. இதுல தன்னையறியாத பச்சை மண்ணாட்டம் இருக்கா. நினைப்பைத் தொலைச்சு இருக்கா பாவம். இவளைக் கொண்டு போய் போலீஸ்ல ஒப்படைச்சு நாமே வம்பை வெலைக்கு வாங்கணுமா..?நினைப்புக்கு தடுப்புத்தான் விழுந்திருக்கு அது கண்டிப்பா தட்டி எழும்பும். அதுவரைக்கும் அது நம்மகூடவே இருந்துட்டு போகட்டும்.” உறுதியாக வந்தது வார்த்தைகள்..!
உறங்கி எழுந்தவள் மார்பை பிடித்துக் கொண்டு அழ, புகட்டாத அமுது அவளை புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது என்று அறிந்து இன்னுமொரு வீசை தவிப்பு கூடிப் போனது அவர்களுக்கு..!
திருமணமானவள்... குழந்தை பெற்றவள்... எங்கேயோ திசை மாறி நினைவு தப்பி இருக்கிறாள். பச்சிலை உரசி பத்துப் போட்டு மார்பின் கணம் குறைத்தது அம்மாச்சி. ஆனாலும் யார் அவள்...என்ற கேள்வி மனசை அரிக்காமல் இல்லை.
விக்கிரகம் போல் இருந்தாள். அவளை உரிமையில்லாதவர்கள் கையில் ஓப்படைக்க பயமாக இருந்தது. அது போலீஸ் ஆனாலுமே..! கண்டிப்பாய் தேடி வருவார்கள் என்று உள்மனசு சொல்லியது.
டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் சிகிச்சை தந்தது அம்மாச்சி. ஒரு வாரத்தில் உடம்பு கொஞ்சம் தேறி வந்தது. ஆனால் அவளுக்கு மேல்நிலை நினைவுகள் எழும்பி வந்ததே தவிர, அடி ஆழத்தில் தேங்கிப்போன நினைவுகள் எழவே இல்லை..!
படித்தது நினைவில் இருந்தது… படிப்பித்தவர் நினைவில் இல்லை. நதிமூலம் புரிந்தது. ஆனால் ரிஷிமூலம் புரியவில்லை. மூளையை கசக்கி கசக்கிப் பார்த்தும் தன்னுடைய பெயரைக் கூட நினைவில் கொண்டு வர, முடியாமல் தவித்தாள்.
‘’எல்லாமே பார்த்த மாதிரியே இருக்கு..! எங்கே பார்த்தேன்னு தான் தெரியல.” கண்கள் கரித்தது. கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து வைத்து கண்கள் பொங்க பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
‘’போலீஸ் கிட்ட போகலமா..?” அவள் தெளிந்து அமர்ந்திருந்த ஒரு நாளில் அம்மாச்சி பக்கத்தில் வந்தமர்ந்து வாஞ்சையாய் தலைகோதிக் கேட்டது… கண்களை மூடி வேகமாக ஆட்சேபித்தாள்.
‘’வேணாம் பாட்டி..! எனக்கு என்னையே அடையாளம் தெரியல. யாராவது வந்து நான் தான் உன் புருசன்னு சொன்னாலும், உன் அப்பா அம்மான்னு சொன்னாலும் என்னால இல்லைன்னு சொல்ல முடியாதுல” நியாயமான கேள்வி.
‘’அவங்களுக்கு அம்னீசியாங்கிற நினைவு பிறழ்ச்சி வந்திருக்கு. அவங்க ஏதோ ஒரு பலமான அதிர்ச்சியில எல்லாத்தையும் மறந்துட்டாங்க. ஆனால் அது என்னன்னு தான் தெரியல. இதுவும் ஒரு வகையான ஸ்டோக் மாதிரித்தான். அதிர்ச்சியால செயல்படாம போறது. கண்டிப்பா இந்த நிலை மாறும். ஆனால் கால அவகாசம் மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்டது.” கண்ணாடியைக் கழட்டி மூச்சைத் துப்பி துடைத்துக் கொண்டே டாக்டர் சொன்னார்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிப் போய்விட்டது. முகவரி இல்லாத கடிதமாக அவள் சுத்திக் கொண்டு இருந்தாள்.
ஆரம்பத்தில் பட்டணத்துப் பொண்ணு என்று அழைத்து அழைத்து, பிறகு அவள் பாப்பு வாகிக் கொண்டாள்.
பாடம் கற்றுத் தந்தாள். சுற்றுப் பகுதிகளை நடந்து கடந்து தன்னுடைய தொலைந்த நினைவுகளின் மூலம், எங்கேயாவது இருக்கிறதா என்று தேடி அலைந்து கொண்டு இருந்தாள்.
நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது… ஆனால் நம்பிக்கை மட்டும் நகராமல் அப்படியே நின்றது.
‘நான் யார்..? யாருக்கு மனைவி..? யாரைப் பெற்றேன்... யாரால் பெறப்பட்டேன்..? எந்த ஊர்... என் அடையாளம் தான் என்ன..?’ நித்தமும் இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தாள் தனக்குள்ளேயும், தன் உணர்வுகுள்ளேயும்..! அவள் மிருதுளா..!
”..நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கெனச் சொன்னானடி....”
16
மஞ்சளாய் பூத்திருந்தது ஆவரஞ் செடிகள். அதில் தும்பிகளும் வண்டுகளும் துள்ளல் இசை இசைத்துக் கொண்டு இருந்தது.
கல்யாண நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. அத்தனை வேலைகளையும் வானதியும், நந்தாவும் தான் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். சந்தியாவிற்கென்று யாரும் இல்லை. மலேசியா மாமாவும். ஆல் தி பெஸ்ட்’ என்ற வாழ்த்தோடு நிறுத்திக் கொண்டார்
சிவாவுக்காவது தூரத்தில் உறவென்று சிலர் இருந்தார்கள். ஆனால் சந்தியாவுக்கு அதற்கும் யாருமில்லாததால், நந்தாவும் வானதியுமே யாதுமாகிக் கொண்டு நின்றார்கள்..!
ஓடி ஓடி வேலை செய்தவர்களை பார்த்து உள்நெஞ்சு குமைய நின்றாள் சந்தியா. பெத்த பெண்ணுக்கு செய்வது போல் கல்பனாவும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, தான் இழந்த உறவெல்லாம் இன்னொரு உருவத்தில் கிட்டியது போல் சந்தியா உணர்ந்தாள்.
திருமணத்திற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே அவளும் தாயம்மாவும் கிளம்பி நந்தாவின் வீட்டோடு வந்து சேர்ந்திருந்தார்கள். குதூகலத்திற்கு குறையேயில்லை,மகிழம் பூ மனசில் நின்றாள். மகிழம் பூ மனம் எல்லாம் மகிழும் பூ.
திருமணத்திற்கு இடையில் ஒருநாள் தான் இருந்தது. சந்தியாவின் புறத்தில் நட்பும் உறவும் எல்லாமே நந்தாவின் குடும்பம் மட்டும் தான். திருத்தணியில் திருமணம் முடித்து, அன்று மாலை பார்க் ஷெர்டனில் ரிசப்சன் வைத்திருந்தார்கள். இருவருமே உயர்ந்த பணியில் இருந்ததால் நிறையப் பேர் வருகை இருப்பதால், எல்லா ஏற்பாடும் விமர்சையாக நடந்து கொண்டு இருந்தது.
‘’முதல்ல பொம்பளையா இருக்க முயற்சி பண்ணு சந்தியா..! யூ ட்யூப் பார்த்து புடவை கட்டிக்கிறியே, வெட்கமா இல்ல...” புதுப் புடவைக்கு மஞ்சள் தொட்டு வைத்துக் கொண்டே கேட்டாள்
”நீ பெரிய கெழவி போடி..! ஆன்ட்டி எனக்கு கத்து தருவாங்க.” கல்பனாவின் தோளில் வந்து சாய்ந்து கொண்டாள். புறங்கையால் நெற்றியை துடைத்துக் கொண்டே கேட்டாள்.
‘’அத்தை, அவளுக்கு கத்துக் கொடுக்க கூடாது. ஏழு கழுதை வயசாகுது..! இன்னும் புடவை கட்டத் தெரியாம இருக்கா நானெல்லாம் யார்கிட்ட கத்துக்கிட்டனாம்.” வானதி திட்ட வட்டமாய்ச் சொல்ல, கல்பனா அவள் அறியாமல் வலக்கையால் முகம் மறைத்துக் கொண்டு கண்ணடித்தார்.
‘’என்ன ரெண்டு பேருக்கு நடுவிலயும் ஒப்பந்தம் போகுது..! இதப்பாருங்க கல்பனாம்மா, அவளுக்கு மட்டும் நீங்க கத்துத் தந்தீங்க நான் உங்க புள்ளையை டைவர்ஸ் பண்ணிடுவேன்.” உள்ளங்கையில் வரைக்கும் அப்பி இருந்த மஞ்சள் அவளின் குங்குமக் கைகளில் அத்தனை அழகாக இருந்தது..!
‘’அடிப்பாவி இவ்வளவு கெட்டவளா நீ..! எனக்கு நீயே கத்துக் குடுடி. சாட்சிக்காரன் கால்ல விழறதை விட சண்டைக்காரன் கால்ல விழுந்துட்டு போயிடலாம் இல்ல...” சந்தியா வந்து கன்னத்தோடு கன்னம் வைத்து இழைய, வானதி அவள் கன்னத்தில் மஞ்சளால் நலுங்கு வைத்தாள்..!
‘’நிஜமா சொல்லவா, எனக்கு இதுமாதிரி எல்லாம் இயல்பா இருக்க ஆசையா இருக்கும் எப்பவும். நான் கோயம்புத்தூர்ல ட்யூட்டில இருந்தப்போ, கீழ் போசன் இருந்த ஆன்ட்டி அத்தனை விசயத்தையும் அழகா ஃபாலோ பண்ணுவாங்க..!
கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை, விரதம், எல்லாமே பக்காவா அவங்களுக்குத் தெரியும்..! என்னவோ அவங்களைப் பார்க்கும் போது அப்படி நாமளும் இல்லையேனு மனசு தவிக்க வைக்கும்..! புடவை கட்டிக்கணும், இன்னைக்கு இந்த விசேசம்னு சொல்லிட்டு அதுக்கான சம்பிராதாயங்களை செய்யணும், இப்படி நிறைய நிறைய ஆசைகள். எனக்கு சொல்லித் தரவும் யாருமில்லை வழி நடத்தவும் ஆளில்லை. காட்டு மரமா இருந்தாலும் நான் கட்டுப்பாடா இருந்ததே பெரிய விசயம் தான்.” உற்சாகமாய்த் தொடங்கி உதிர்ந்து போன வார்த்தைகளோடு அவள் முடித்தபோது வானதிக்கு வலித்தது..!
இயல்பு வாழ்க்கை இல்லாமல் போவதின் வலி என்னவென்று அவள் அறியாததா என்ன..?
திரும்பிப் பார்த்து சந்தியாவை செல்லமாய் முறைத்தாள்..!
‘’ஓ.கே.! ஓ.கே..! ரெம்ப ஓவரா பண்ணாதே..! நீ யூ ட்புப் பார்த்து கத்துகிட்டு இரு. நான் வந்து டெமோ பண்ணிக் காட்டறேன்..!‘’ சொல்லிவிட்டு கை அலம்பிக் கொண்டு அறைக்கு வரவும், அவளுடைய அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது..!
சிரித்த முகத்துடன் இணைப்பிற்கு வந்தவள் முகம் நொடியில் கறுத்த முகமானது..! சின்ன நடுக்கம் விழிகளில் விழுந்து தொண்டையில் பயமுடிச்சாய் இறங்கியது. அலைபேசியை கட்டிலில் போட்டு விட்டு இரண்டு கைகளையும் ஊன்றி கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்..!
பார்வை தரையில் நங்கூரம் போட்டு இருக்க, ஒரு சில நிமிடங்கள் ஆனது அவள் சுதாரித்துக் கொண்டு மீள..!
அறைக்குள் வந்த நந்தா, அவளின் அதிர்ந்த தோற்றத்தில் கொஞ்சமாய் கலவரமானான்..!
‘’என்னாச்சு வானதி..? ஏன் இப்படி வந்து உட்கார்ந்து இருக்கே..? ஏதாவது பிரச்சனையா..? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா..? ‘’ நெற்றியில் கைவைத்து பார்த்தான். நிமிர்ந்தவள் கண்ணில் கலக்கத்தைப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.
‘’ வானு...”
‘’கொஞ்சம் கதவு சாத்திட்டு வாங்களேன் நாம பேசறது சந்தியாக்கு கேட்க வேண்டாம். ப்ளீஸ்.” அவன் கதவடைத்து விட்டு வந்து எதிரில் நின்றான்..!
‘’புனேல இருந்து மாமா கால் பண்ணி இருந்தாரு. அம்மாக்கு மாசிவ் அட்டாக்” அழுகை கண்ணில் இருந்து வழிந்து அவள் கன்னத்தை கடித்தது..!
‘’ஓ மை காட்..! இப்போ எப்படி இருக்காங்க..? ‘’
‘’எமர்ஜென்சியில தான். மாமா நம்மை உடனே கிளம்பி வரச் சொல்றாரு.” உதடு அழுந்த கடித்துக் கொண்டாள். மெல்ல அவள் தோளை அணைத்து ஆறுதல் சொன்னான்..!
‘’கிளம்பிடலாம். இரு..! நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்…”
‘’ஒரு நிமிசம் நந்தா..! ‘’ அவள் அழைப்பிற்கு கட்டுண்டு திரும்பிப் பார்த்தான்..!
‘’நீங்க வேண்டாம். எனக்கு மட்டும் ப்ளைட்டுல டிக்கெட் போடுங்க..! நாளைக்கு ஒருநாள் தான் மிச்சம் இருக்கு சந்தியாவோட கல்யாணத்துக்கு நம்ம ரெண்டு பேருமே இல்லாட்டி ரெம்ப கஷ்டம் நந்தா.” அந்த பரபரப்பிலும் அவளின் நிதானம் வியக்க வைத்தது.
‘’இதைவிட அது முக்கியமா வானதி..?”
‘’சந்தியாவுக்கு இதுதான் முக்கியம்..! அவளுக்கு நம்மைத் தவிர யாருமில்லை நந்தா..! ரெண்டு பேரும் கிளம்பி போயிட்டா இந்த பங்சனே நின்னு போயிடும் நந்தா..! எனக்கு தனியா புனே போயிட்டு வர்றது புதுசில்லை தானே..? நான் போயிட்டு அம்மா டிஸ்சார்ஜ் ஆனதும் கிளம்பி வர்றேன்.அத்தையை சமாளிச்சுக்கங்க..! முகத்துல எதுவும் காட்டிக்க வேண்டாம்” அவனுடைய பதிலுக்கு காத்திராமல் தன்னுடைய உடைகளையும், தபஸ்வியின் உடைகளையும் எடுத்து பேக்கில் அடைக்க ஆரம்பிக்க, நந்தா கொஞ்சம் தர்மசங்கடமாய் அவளைப் பார்த்தான்..!
‘’வானு, பாப்பா டிரஸ் எல்லாம் எதுக்கு எடுத்து வைக்கிறே..?”
‘’அவளும் என்கூட தான வருவா..? நான் இல்லாம அவளால இருக்க முடியாதுல..? சின்னக் குழந்தை எப்படி அம்மாவை விட்டுட்டு இருக்கும் நந்தா...” அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், சொல்லிக் கொண்டே தன்னுடைய வேலையில் மும்முரம் காட்ட. அவன் மெல்ல அவள் புஜத்தைப் பற்றி நிமிர்த்தினான்.
‘’அதில்ல வானு… தபு வேண்டாம். நீ மட்டும் போயிட்டு வா...” மெல்லிய குரலில் தயக்கமாகச் சொல்ல, நிமிர்ந்து அவன் கண்களில் உண்மை தேடி ஆராய்ந்தவள் இதயத்தில் இன்னொரு வலி பிறக்க, கண்களை அழுந்த மூடியபடி அப்படியே நின்றாள்..!
‘’ஓ..! நான் அவளுக்கு ஆக்டிங் மம்மி தானே.. பயலாஜிக்கல் இல்லை தானே..? அப்பப்போ மறந்துடறேன் நந்தா..! என் குழந்தையை சுமக்க முடிஞ்ச என்னால அது என் பிள்ளை இல்லைங்கிற நிஜத்தை சுமக்க முடியல.” அழவில்லை, ஆனால் அவள் பேசியதை கேட்பவர்களை கதறியழ வைத்து விடும் அந்த குரலில் மண்டிக் கிடந்த வலி..!
தபஸ்வியின் துணிகளை எடுத்து கீழே வைக்க, துடித்து போய் அவளைப் பார்த்தான்.
‘’நான் அதுக்கு சொல்லல வானதி..! புது இடத்துல உன்னால அவளை தனியா சமாளிக்க முடியாது. அங்கே என்ன சூழ்நிலையோ நீ அங்கே போயும், பாப்பாவைப் பார்த்துட்டு இருக்க முடியாதில்ல..? அதுக்குத் தான் சொன்னேன்..!” புரியவைக்க உரிய வார்த்தைகளுக்கு அவன் அலைந்து கொண்டிருக்க, அவளோ கண்களை மூடி சுதாரித்து தன்னை மீட்டெடுத்தாள்.
”பரவாயில்ல விடுங்க நந்தா. நான் கிளம்பறேன் டிக்கெட் மட்டும் போடுங்க...” தன் முகம் பார்க்காமல் துணிகளை அடுக்கியடி பேசியவளை மீணடும் புஜம் பற்றித் திருப்பி நிஜம் பேசும் விழிகளில் எதையோ தேடினான்
‘’வானு, உனக்குப் புரியுதா நான் என்ன சொல்ல வர்றேன்னு...” என்றான் தவிப்பாக. கொஞ்சம் வலியாக இதழ் சுளித்தாள்.
‘’புரியுது, நான் என்னன்னு…”
‘’அய்யோ’னு வருது எனக்கு..! நீ தபுவை தூக்கிட்டுப் போ.” வேகமாய் குழந்தையின் துணிகளை எடுத்து அவள் பைக்குள் வலுவில் திணிக்க, அவன் கைகளைப் பற்றிக் கொண்டு தடுத்தாள்..!
‘’வேண்டாம் நந்தா ப்ளீஸ். நாம ரெண்டு பேர்ல யாருடைய பக்கம் நெகிழ்ந்து இருக்குன்னு தெரியல. ஒருவேளை என்னோடது இல்லைங்கிற நிஜத்தாலயே இன்னும் இன்னும் எனக்குள்ள இறுக்கி என் உரிமையை நிலைநாட்டிக்க நினைக்கிறேனா..? தெரியல. இப்போ நான் இருக்கிற மனநிலையில எதையும் யோசிக்க முடியல. என்னை விட்டுங்களேன்.” அவள் கை கூப்ப வேதனையான பெருமூச்சோடு அலைபேசியோடு டிக்கெட் புக் செய்வதிற்கு நகர்ந்தான்.
அம்மாவின் முகமும், அவளோடு கழித்த நாட்களும் நினைவில் வந்து வந்து அவள் நிதானத்தை சூறையாடிக் கொண்டு இருந்தது. அவளின் அமைதி நந்தாவை என்னவோ செய்தது..!
‘’தனியாப் போயிடுவியா வானதி..?” என்றான் அவள் தோள்களைத் தொட்டு..!
‘’தனியா போயிடுவேனோ’ன்னு பயமா இருக்கு...” அவள் கூறிய மறைபொருளில் அவன் தவியாய் தவித்துப் போனான். அருகில் வந்து அவள் முகத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டான். மொட்டவிழ்ந்த கண்ணீரை ஒற்றை விரலில் சுண்டி அந்த அறைக்குள் முத்தை விதைத்தான்.
‘’என்னை நம்பலயா இன்னும்..? நான் எந்த உள் நோக்கத்துலயும் அதைச் சொல்லல வானதி..! நாம கணவன் மனைவிங்கறதுக்கு ஆதரமா இருக்கிறது இந்த புரிதல்கள் மட்டும் தான்..! அதுலயே நீ நம்பிக்கை இழந்து போனா, நான் என்னம்மா செய்வேன்.” அவன் குரலில் ஈரம் சொட்டியது.
‘’நந்தா... வானதி...” அம்மா அறைக் கதவைத் தட்ட, இருவரும் உணர்வை மீட்டார்கள். கதவு திறந்து அம்மாவை உள்ளே அழைத்தான். விசயத்தை சொன்னபோது கல்பனாவின் முகம் கலவரமானது.
‘’நீயும் கூடப்போயிடு நந்தா..! நான் விக்கியை வச்சு எல்லாத்தையும் கவனிச்சுக்கறேன்..!”
‘’வேண்டாம் அத்தை..! பெருசா பயப்பட எதுவும் இருக்காது. அங்கே மாமா பேமிலி இருக்கு..! பார்த்துக்குவாங்க. ஆனால், சந்தியாக்கு யாருமே இல்ல அத்தை..! ரெம்ப தனிமையா உணர்வா. நான் பார்த்துக்கறேன்..!
தபுவைப் பார்த்துக்கங்க. அவளுக்கு தரவேண்டிய விட்டமின் டேப்லெட்ஸ் அந்த ஒயிட் பாக்ஸ்ல இருக்கு..! மறக்காம தந்துடுங்க. இல்லைன்னா ரெம்ப டல்லாயிடுவா..! நேரத்துக்கு தூங்க வச்சிடுங்க. தூங்க மாட்டேன்னு அடம் பண்ணா, என் துப்பட்டாவை கையில கொடுங்க, தூங்கிடுவா..! முதுகில தட்டிக் கொடுங்க... ரீ ரீ’னு சொல்லணும்... அதுதான் அவளுக்கு பிடிக்கும். கூடவே அவளும் அதையே சொல்லுவா..! உடனே தூங்கிடுவா.
நந்தா வர்ற வரைக்கும் உங்க ரூம்ல இருக்கட்டும். அப்புறம் அவர் தூக்கிட்டு வந்துடுவாரு..! கல்யாண களேபரத்துல பாப்பாவை பார்த்துக்காம விட்டுடாதீங்க..! கவனமா இருங்க..” தயாராகிக் கொண்டே அவள் தாயாராகி அறிவுரைகளை வழங்கிக் கொண்டு இருக்க, நந்தாவும் கல்பனாவும் ஒருவரையொருவர் வேதனையாகப் பார்த்து மிடறு விழுங்கிக் கொண்டார்கள்..!
‘’நீ தூக்கிட்டு போயிடேன் வானதி..! ‘’ கல்பனா அழுத்தமாகச் சொல்ல, அடுத்த நொடி அவளுடையா பார்வை நந்தாவைத் தொட்டு மீண்டது.
‘’முதல்ல அப்படித்தான் யோசிச்சேன் அத்தை..! இப்போ சரியா வராதுன்னு தோணுது. அவ இங்கேயே இருக்கட்டும். நான் சீக்கிரம் வந்துடறேன்…”
சந்தியாவிடம் சொல்லிக் கொள்ள, அவள் சொல்ல முடியாத வலியில் நின்றாள். தனக்கு இருந்த ஒற்றை நிழலும் திருமண சமயத்தில் ஒதுங்கிப் போவது போல் இருந்தது. ஆனால் அவள் சூழலை கருத்தில் கொண்டு தன்னை சமன்படுத்திக் கொண்டு நின்றாள்.
‘’சந்தோசமா இரு சந்தியா..! நிச்சயம் நீ ஹனிமூன் கிளம்பறதுக்குள்ள திரும்பி வந்துடுவேன்.” புன்முறுவலோடு கட்டி அணைத்து அன்பை பரிமாறி விட்டுத்தான் கிளம்பிப் போனாள்.
வழி நெடுக, நந்தா அவள் முகத்தை ஆராய்ந்தபடியே காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
உளவியல் கற்றவள் ஆதலால் தன் உள்ளத்தின் கண்களை முகத்தில் திறக்காமல் இருந்தாள்.
‘’வானதி.., ஆர் யூ ஒகே நவ்..”
திரும்பிப் பார்த்து மெலிதாக சிரித்தாள்
‘’நார்மலா இருக்கேங்க..! வேற சொல்லத் தெரியல. அம்மாவுடனான நியாபகங்கள் எல்லாம் வரிசையா வருது..! பூனேக்கு போற அவகாசத்தை விட, கூடு மாறி இந்த நிமிசம் அம்மாக்குள்ள போயிட மாட்டோமான்னு எனக்கு தோணுது.” அழுகை வரவர சின்னதாய்ச் சிரித்தாள்.
அவளை வழி அனுப்பி விட்டு வீடு வந்த போதுதான் சுனாமி வந்து சுருட்டிக் கொண்டு போன உலகம் போல வெறுமையான அமைதியாக இருந்தது..!
கண்களை மூடிக்கொண்டு அமைதியாக கட்டிலில் வந்து சரிந்து கொண்டான்..! அறை முழுக்க அவளின் வாசம் நினைவு முழுக்க அவள் அன்பின் நேசம்.
”...வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பே
கண்ணில் நீரைக் காணாமல்கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன்...”
17
கார்மேகத்தை வெயில் திண்ணக் தொடங்கிய மழைவிழுங்கிய பொழுதுகள் அவை..! வெயிலுக்கும் மழைக்கும் யார் பூமியை ஆட்கொள்வது என்ற போட்டித் தேர்வு உத்தேசமாக நடந்தேறிக் கொண்டு இருந்தது..!
சென்று சேர்ந்ததும் தகவல் தந்ததோடு சரி… வானதியிடம் இருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. கல்யாண வேலையில் வானதியை அடிக்கடி விசாரிக்கவும் முடியவில்லை..! நினைத்ததை விட இதமாய் அமைந்து போனது கல்யாண நிகழ்வு… புடவை கட்டிக்கொண்டு வந்தபோது தன்னை மறந்து சந்தியாவின் மனசு வானதியைத் தேடியது.
இத்தனையும் பார்த்து பார்த்து செய்தவள் தன்னை இந்தக் கோலத்தில் பார்க்க முடிவில்லையே என்று தவிப்பு சந்தியாவுகுள்ளும் இருக்க, ஒரு செல்பி எடுத்து வானதிக்கு வாட்ஸ் அப் செய்து விட்டாள்.
திருமணம், ரிசப்சன் என்று அத்தனையும் முடிந்து ஓய்ந்த வந்து கட்டிலில் சரிந்த நிமிசம், அவனுடைய மனம் இளைப்பாற வானதியின் முகம் தேடியது..!
அலைபேசியை எடுத்து அவளை அலைகற்றை வழியாக அழைத்தான்.
எடுத்தவள். மௌனமாக இருந்தாள். முந்திக் கொண்டு வரும் முதல் கேள்வி வராததே சிந்திக்க வைத்தது.
‘’வானதி, எப்படி இருக்கே..? ஏன் ரெண்டு நாளா கால் பண்ணல”
‘’உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான்ங்க..! கல்யாணம் நல்லபடி முடிஞ்சதா..? ‘’ குரலில் சோர்வு தெரிந்தது.
‘’எல்லாம் நல்லபடி முடிஞ்சாச்சு..! சந்தியா உன்னை ரெம்பவே மிஸ் பண்ணா..! அவங்க வீட்டுக்கு கிளம்பிப் போயிட்டாங்க.”
‘’ தபு என்ன பண்றாங்க..? அத்தை... வீணா...”
”கொஞ்சம் பொறு வானதி..! எல்லாம் நல்லா இருக்காங்க தபு தூங்கியாச்சு. உன்னைத் தேட்டிட்டே இருந்தா. அதெல்லாம் இருக்கட்டும். அத்தை எப்படி இருக்காங்க..? நீ எப்போ திரும்பி வரப் போறே..?”
சொற்ப நிமிடங்கள் அமைதி யாத்திரை..! பின் குரலைச் செருமிக் கொண்டு சொன்னாள்.
‘’இப்போ பரவாயில்ல. நான் ரெண்டொரு நாள்ல வந்திடறேன்ங்க.” குரலில் சுரத்தே இல்லை. குரலைக் கொண்டு நிகழ்வை யூகிக்க முடிந்தது. ஆனால், நிகழ்ந்ததை யூகிக்க முடியவில்லை..! கண்களை மூடிக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான். மனதை எதுவோ பிசைந்தது.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவளிடம் இருந்து அழைப்பில்லை. தவிப்பாய் இருந்தாலும், அடிக்கடி அவள் சூழ்நிலை தெரியாமல் அழைத்து சங்கடப்படுத்த வேண்டாமே என்ற நிதர்சனத்தை உணர்ந்ததால் அமைதியாக இருந்து கொண்டான்.
மூன்றாம் நாள் காலையில் வந்து இறங்கினாள். முகமெல்லாம் சோர்வின் மிச்சம் இருந்தது. ஒரு வாரத்தில் ஆளே உருக்குலைந்து போய் இருந்தாள். அல்லது இவர்கள் கண்ணுக்கு அப்படித் தெரிந்தாள்.
முகம் அலம்பிக் கொண்டு வந்து அமர்ந்தாள். அப்போதும் முகத்தில் தெளிவில்லை. கண்களில் கறையாய் கண்ணீரின் காய்ந்த துளிகள் இருப்பது போல் தெரிந்தது..
சூடான காப்பியைக் கொண்டு வந்து அவள் கைகளில் தந்தார் கல்பனா. நந்தா அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.
‘’அம்மா எப்படி இருக்காங்க வானதி..?” கல்பனா முகத்தை ஆராய்ந்தபடி கேட்க, உறிஞ்சிய காப்பியை முழுங்க வழியில்லாமல் ஒரு நொடி அமைதியாக அமர்ந்திருந்தவள் கல்பனாவின் முகத்தை கூர்ந்து ஆராய்ந்தாள். டம்ளரை டீபாயில் வைத்துவிட்டு எழுந்து போய் கல்பனாவை இறுக அணைத்துக் கதற, ஒரு நொடி தாயும் மகனும் விக்கித்துப் போனார்கள்…
‘’வா..ன..தி...”
‘’அம்... மா இறந்து...ட்டாங்க... அ..த்..தை..” தன்னுடைய துக்கத்தை எல்லாம் கல்பனாவின் தோளில் கேவலாக வெளிப்படுத்தி வெடித்து அழுதாள் வானதி.
* * *
அழுது களைத்திருந்த கண்களில் அயர்ச்சி மிச்சமாக இருந்தது. குளித்து முடித்து தலை உலர்த்தி இருந்தாள். காய்ந்த சருகாய் முடி முதுகெல்லாம் அலைபாய்ந்து கொண்டு இருந்தது. மடியில் மகளை சரித்திருந்தாள். அவள் புடவை முனையை உருட்டிக் கொண்டே உறக்கத்தை தழுவி இருக்க, பால்கனி கதவைத் திறந்தமர்ந்து சுவற்றில் சாய்ந்திருந்தாள்.
உள்ளே வந்த நந்தா மெல்லிய பெருமூச்சோடு குழந்தையை எடுத்து படுக்கையில் படுக்கவைத்து விட்டு அருகில் வந்தமர்ந்தான். நிலவின் வெளிச்சத்தில் அவள் முகத்தின் ஒருபுறம் வெளிச்சம் சூழ்ந்து இருந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் கண்களில் மின்மினிப் பூச்சியாய் கண்ணீர் மினுக்கியது.
‘’ஏன் வானதி ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல..? கால் பண்ணி ஷேர் பண்ணிக்க கூட உனக்குத் தோணல இல்ல..?” அவன் வேதனையாய்க் கேட்டான்.
‘’சொல்ல வேண்டாம்னு நினைக்கல நந்தா. ஆனால் தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க..? ஒரு கல்யாண சமயத்துல இதைச்சொல்லி என்னாகப் போகுது..? இது இறக்கி வைக்கிற சுமையில்ல இதை உங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் கடத்தி இந்த நிமிசத்து வருத்தத்தை அன்னைக்கே கொண்டு வர்றதுல என்ன இருக்கு..?
சந்தியா பாவம். தன்னை எப்பவும் அவள் டவுனா உணர்வா. அப்படி இருக்க அவள் கல்யாண சமயத்துல எலலாரையும் கஷ்டப்படுத்தி என்னாகப் போகுது..? அம்மாக்கு எல்லாமே மாமாவும் அவர் குடும்பமும் தான். கடைசியில அவங்களே எல்லாம் பார்த்துட்டாங்க. வழக்கம் போல நான் ஒதுங்கியே தான் நின்னேன்.”
அவள் குரல் இடற, இன்னும் நெருங்கி அமர்ந்து அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டான். அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
‘’வருத்தப்படாதே வானதி..! ரெம்ப சங்கடமா இருக்கு...”
”நான் ரெம்ப பாவம் நந்தா” அவன் தோளில் முழுமையாய் புதைந்து கொண்டு அவன் விசும்ப, தவிப்பாய்ப் பார்த்தான்.
‘’ வானதி...”
‘’அப்பா விவரம் தெரியாத வயசிலயே போயிட்டாரு..! அவருடைய பிம்பம் மட்டும் தான் எனக்கு நிழலா இருக்கு மனசில. அம்மாக்கு தன்னைச் சுமக்கவே தெம்பில்லை. என்னை எப்படிச் சுமப்பாங்க..? அவங்களுக்கு ஏற்பட்ட மனோரீதியான அழுத்தம், அவங்களை தனிமையை விட்டு வெருண்டு ஓட வச்சது..!
இதுல பாதிக்கப்பட்டது நான் தான்..! கடைசி வரைக்கும் எனக்கு அப்பா அம்மா கூட வாழ்ற பாக்கியம், எனக்கான வீடு,அடையாளம் எதுவுமே எனக்கு கிடைக்கல.
எல்லாரையும் போல எனக்குன்னு சொந்தமா எதுவுமே இல்ல.என் வீடு, என் குடும்பம், என் மனிதர்கள்னு உரிமை கொண்டாட எனக்கு யாருமே இல்லை..! காத்து அடிக்கிற திசைக்கு பயணமாகிற பாய்மரக் கப்பல் மாதிரி நானும் எனக்கான தனியான திசையே இல்லாம போயிட்டேன்.”
அவள் குலுங்கி குலுங்கி அழ, அவன் மேல் சர்ட்டின் தோள் முழுக்க தன் கண்ணீரால் கரைத்து இருந்தாள். இன்னும் இன்னும் இறுக்கம் கூட்டினான்.
‘’அம்மா கொஞ்நாளாவது என்கூட இருக்கணும், எல்லாரையும் போல சீராடவும் தாலாட்டவும் எனக்கும் அம்மா வேணும்னு ஆசைப்பட்டேன்..! ஆனால் கடைசி வரைக்கும் அது நடக்கவே இல்லை. தாய் வீட்டுக்கு கூட நான் விருந்தாளியாத் தான் போய் வந்திருக்கேன். இப்போ அந்த விருந்தாடலும் முடிஞ்சு போச்சு. நான் அனாதை ஆயிட்டேன் நந்தா...” கதறி அழுதவளை பதறிப்போய் முகம் நிமிர்த்தினான். வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டான்..!
‘’என்ன வார்த்தை இது வானதி... நான் இருக்கும்போது..! ‘’
”நான் அனாதை தான் நந்தா..! எனக்குன்னு யாருமில்லை, எதுவுமில்லை..! எனக்கு சொந்தம்கிற எதுவும் நிஜமான சொந்தமா இல்ல. எனக்கு அம்மா இருந்தாங்க எனக்கு சொந்தமாஅவங்க இல்ல. புருசன், குழந்தைன்னு நானே சொந்தம் கொண்டாடி எனக்குள்ள கற்பனை வளர்த்துகிட்டாலும், அதுவும் என்னுது இல்ல... எனக்கானதும் இல்ல... என்னை மாதிரி ஒரு பாவப்பட்ட பிறவியைப் பார்த்து இருக்கீங்களா..?”
அவன் தோள்களைப் பற்றி ஆக்ரோசமாக குலுக்க, அவள் தனக்குள் உடைந்து உருமாறிக் கொண்டு இருக்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது..!
‘’வானதி கண்ட்ரோல் பண்ணு...”
‘’தபுவை என்கூட எடுத்துட்டுப் போக உரிமையில்ல. வாடகை கூடுல தங்கின மாதிரி என்னுடைய மனசு உணர்வில்லாம தவிக்குது..! நான் எதுக்கு நந்தா பிறந்தேன்...” அவளுடைய உதடு துடித்தது..!
‘’திருப்பியும் சொல்றேன். நான் தபுவை அப்படி நினைச்சு உன்கூட அனுப்ப யோசிக்கல. உன்னால சமாளிக்க முடியாதுன்னு நினைச்சேன். இது எல்லாமே உன்னதுதான்... இந்த வீடு, இங்குள்ள மனிதர்கள் எல்லாமே உனக்கானவங்க தான்... ஏன் நானும் உனக்கானவன் தான் வானதி...” இறுதி வார்த்தையில் முற்றாய் உருகி இருந்தான்.
சுதாரிக்க மறந்திருந்தாள் வானதி..! தலையை அசைத்து தன்னுடைய ஆற்றாமையைத் வெளித்தள்ள முயல, இந்த நிமிசம் அவளுடைய மனநிலை நிராதரவாய் நிற்பதை உணர முடிந்தது.
இப்போது அவளுக்குத் தேவை ஆறுதல் அல்ல அரவணைப்பு...நம்பிக்கை,.. பிடியை இறுக்கியவன், அள்ளிக் கொண்டு பால்கனி கதவடைத்து கட்டிலை நோக்கி நகர்ந்தான்...
’...உனக்காக நான் இருக்கிறேன்...’ என்று அவளை ஒவ்வொரு நொடியும் உணர வைத்தான்..!
முதலில் திணறி மறுத்தாலும் நிமிசத்தின் முடிவுகளில் முழுவதுமாய் அவன் அன்பில் தன்னைத் தொலைத்திருந்தாள். அவள் தனக்கானவள் என்று ஒவ்வொரு நொடியிலும் நந்தா உணர வைத்தான்..!
* * *
உறக்கத்தின் முடிவில் உடம்பை உதறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் மிருதுளா, நேரத்தை பார்த்தாள். மணி இரண்டைத் தாண்டி இருந்தது.
மெல்லிய வெளிச்சத்தில் அம்மாச்சி கட்டிலில் படுத்திருக்க, உளி கொண்டு இதயத்தை பிளந்தது போல் வலித்தது. ஏனென்று தெரியவில்லை. பெருதாய் அழ வேண்டும் போல் இருந்தது.
பக்கத்தில் படுத்திருந்த ஒயிலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். கதவைத் திறந்து கொண்டு வாசலில் வந்து நின்றாள். நிலா முழுசாய் வளர்ந்து பூப்பெய்தி இருந்தது. அந்த வெளிச்சமே போதும் மொத்த இருளையும் மூச்சடைக்க வைக்க.
’மனசு இனம் தெரியாமல் தவித்தது. எழுந்து கொண்டாள். சிமெண்ட் தொட்டியில் இருந்த நீரை எடுத்து முகத்தில் அடித்து கழுவிக் கொண்டாள்..! தொண்டையில் அடைத்துக் கொண்டு எதுவோ ஜீரணம் செய்ய இயலாமல் தவிக்க வைக்கிறது. ஆனால் காரணம் தான் புரியவில்லை.
வெகுநேரத்திற்கு பிறகு தான் உறக்கம் அவளை ஆட்கொண்டது. அம்மாச்சி காலையிலேயே கிளம்பி கழனிக்கு போய்விட்டது. ஒயிலா வாசலில் அமர்ந்து கம்பை நேம்பிக் கொண்டு இருந்தாள்.
இரவு வெகுநேரம் தூங்காததால் கண்கள் திகுதிகு’வென எரிய, எழுந்து அமர்ந்து உள்ளங்கையை பார்த்துக் கொண்டாள். கண்களை இறுக்கமூடி தான் யாரென்ற நினைவுகளை மீட்டுக் கொள்ள முயன்று மறுநொடி அது இயலாததால், பெருமூச்சோடு எழுந்துகொள்ள, சரியாய் வாசலில் பரபரப்புக் கேட்டது. பெரும் இடி சத்தத்தோடு..!
போட்டது போட்டபடி எழுந்து ஓட, வாசலில் நின்ற ஓயிலாவின் முகம் ரத்த சிகப்பாகி இருந்தது
‘’என்னாச்சு ஓயிலா...” கேள்விக்கு முன்னே பதிலை உணர முடிந்தது.
இவர்களின் நீண்ட வாசலை தாண்டி இருந்த சின்ன ஒற்றையடிப் பாதையில் இருந்தது பல வீடுகள்..! அதில் ஒன்றுதான் இவள் பாடம் சொல்லித் தரும் லட்சுமியின் வீடும்..! கொஞ்சம் உயரம் குறைந்த சீமையோட்டு வீடு..!
அங்கே இருந்து ஜுவாலை ஜுவாலையாக நெருப்பு பொங்கிக் கொண்டு வர, அதில் இருந்து கரும்புகையும் கக்கிக் கொண்டு வெளியில் வந்தது..!
கண்கள் தெறிக்க நின்றாள் மிருதுளா..!
‘’அய்யோ ஒயிலா என்னாச்சு..! அங்கே நெருப்பு பத்தி எரியுது…”
‘’கேஸ் அடுப்பு வெடுச்சிருச்சாம் பாப்புக்கா..! ராத்திரி அடுப்பை மூடலயோ என்னவோ, காலையில் காப்பி போட அடுப்பை பத்த வச்சிருக்காக வெடிச்சிருச்சு. முழுக்க புகை மூட்டம். யாரும் பக்கத்துல போக முடியல.” ஒயிலாவின் பார்வை நெருப்பில் கிடந்தாலும், வார்த்தைகள் தன்னால் வந்தது.
ஆனால் மிருதுளாவின் பார்வை... அந்த புகையில் கருகிக் கொண்டு இருந்தது. கிராமத்து ஜனங்கள் எல்லாம் கொத்தாய் அங்கே பூத்துக் கொண்டார்கள்..!
கூட்டம் கூட்டம்... அலறல், அழுகை..! கண்களை இறுக்கிக் கொண்டாள். உள்ளுக்குள் எதுவோ உடைந்து உருக்குலைந்து போக, தன்னைத் தானே தேற்ற வழியற்றுக் கொண்டு கயிறு அறுந்து கொண்டு இருந்தது அவளுடைய உணர்வுகள்..!
தீயணைப்பு வாகனம் பீய்ங் என்ற சத்தத்தோடு வந்து நீர் பீய்ச்சத் தொடங்க, அந்தச் சத்தமும், ஊழியர்களின் இரும்புத் தொப்பியும்… பயர் ப்ரூப் ஜாக்கெட்டும்… கக்கிய கரும் புகையும், பரபரப்பும், பரிதவிப்பும், மிருதுளாவின் மூளைக்குள் பூரான் ஊறத் தொடங்கி இருந்தது.
‘’...மிருதுளா மயக்கம் வர்றாப்புல இருக்கு..! பி.பி மாத்திரை மறந்துட்டு வந்துட்டேன்... உனக்கு பேர் நியாபகம் இருக்கா...” யாரோ கேட்டார்கள்.
‘’... பக்கத்தில் ஏதாவது மெடிக்கல் சாப் இருந்தா வண்டியை ஓரங்கட்டுங்க..! மருந்து வாங்கிட்டு வந்துடலாம்...” யார் சொல்வதோ கலங்கலாய் நினைவில் வந்தது.
தலையை வேகமாய் உலுப்பிக் கொண்டு நினைவில் கொண்டு வர பிரயத்தனம் செய்து கொண்டு இருந்தாள். முடியவில்லை..! அந்தக் குரல்கள் மட்டும் பழக்கமாய் பரிச்சயமாய் நெருக்கமாய் குரல்வளையை நெறித்தது.
மூடிய கண்களுக்குள் பழைய நினைவுகள் பேயாட்டம் போட, கண்களுக்கு வெளியே தற்போதைய நிகழ்வுகள் சத்தமாய் வந்து மூளையில் மோதி நினைவை வசமிழக்க வைத்துக் கொண்டு இருந்தது. இரண்டுக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு இருந்தது.
அத்தனையும் சேர்ந்து தன்னுடைய உணர்வை உருக்குலைக்க, கண்களை அழுந்த மூடி தன்னை மீட்டுக்கொள்ள முயன்று முடியாமல் தலையை கைகளில் பற்றிக்கொண்டு கீழே சரிந்தாள் மிருதுளா.
”...என்னை மறந்ததேன் தென்றலே?
சென்று நீ என் நிலை சொல்லி வா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ...”
18
மருத்துவமனை வளாகம் தன்னுடைய மகத்துவத்தை துளிகூட இழந்து விடாமல் தான் இருந்தது. இரண்டு பக்கமும் வரிசை கட்டிக் கொண்டு இருந்த சுத்தமான ஸ்டீல் நாற்காலிகளில் மனிதர்கள் தங்களை நிறைத்துக் கொண்டு இருந்தார்கள்.
அம்மாச்சி உடல் தளர்ந்து இருந்தாலும் உறுதி குறையாத பாவனையோடு அமர்ந்து இருக்க, பக்கத்தில் இருந்த ஓயிலா காப்பி வாங்கி வந்து அம்மாச்சியிடம் தந்தாள்.
குடிக்காமல் அதில் மேல் தள்ளும் ஆவியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தது.
‘’என்ன அம்மாச்சி யோசனை..? ‘’
‘’சட்னு பாப்பு மயக்கம் போட்டு விழுந்ததும் எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. சீமைத் தண்ணி தெளிச்ச சீக்கு கோழியாட்டம் ஆயிடுச்சு என்னோட நிலைமை..! ‘’ அம்மாச்சி விசனமாகச் சொன்னது. டாக்டர்களும், நர்சுகளும் இங்குமங்குமாய் நடைபோட்டுக் கொண்டு இருக்க, உள்ளிருந்து வந்து யாரும் நல்ல செய்தியை எத்தி வைக்கத்தான் இல்லை..!
பொழுதுகள் புலப்பெயர்ச்சி செய்து கொண்டு இருந்தது. ஒரு நீண்ட காத்திருப்புக்கு பிறகு வந்த வெள்ளுடை நர்ஸ் உள்ளே வரச் சொல்லி தகவல் தர, அம்மாச்சி இதயம் எகிற உள்ளே போக, ஒயிலா தோளைத் தொத்திக் கொண்டு பின் தொடர்ந்தாள்..!
‘’பயப்பட எதுவுமில்லை..! நேர்ல நெருப்பை பிடிச்சதைப் பார்த்த அதிர்வு தான். இப்போ மயக்கம் தெளிஞ்சு உட்கார்ந்து இருக்காங்க.” சின்ன புன்னகையை இலவசமாகத் தந்து செய்தியை உடன் வழங்கினார் மருத்துவர்.
”மயக்கம் தெளிஞ்சு எழுந்துட்டாங்க. ஆனால் தன் பேர் மிருதுளானு சொல்றாங்க. அவங்க பேசுற விசயங்கள் பல முன்னுக்கு பின் முரணா இருக்கிற மாதிரி இருக்கு..! நீங்க வந்து பாருங்க.” டாக்டர் முன்னே நடக்க, அவரைத் தொடர்ந்து அம்மாச்சியும், ஓயிலாவும் பின்னாகச் சென்றார்கள்..!
கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து இருந்தாள். கண்கள் வெறுமையில் இருந்தது… தவிப்பாய் தகிப்பாய்.
அம்மாச்சியைப் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது. வேகமாய் கட்டிலை விட்டு இறங்க முற்பட நர்ஸ் வந்து தடுத்துக் கொண்டார்.
‘’பாட்டி இத்தனை நாள் நான் இங்கேதான் இருந்தேனா..? அச்சோ நான் வீட்டுக்குப் போகணும்..! நந்தா, பாப்பா, அத்தை எல்லாம் என்னா ஆகியிருப்பாங்க என்னைக் காணாம..? அப்பாவும் அம்மாவும் தான் என் கண் முன்னாலயே.” முகத்தை மூடிக் கொண்டு விசும்பினாள்.
டாக்டர் அம்மாச்சியைத் திரும்பிப் பார்க்க, கிழவியின் முகத்தில் மகிழ்வு துளிர்த்திருந்தது..!
‘’ஆத்தா மகமாயி கண்ணைத் திறந்துட்டா..! டாக்டர் இப்ப என்னாச்சு அந்தப் பொண்ணுக்கு.”
‘’அதிர்ச்சியில நினைவு திரும்பி இருக்கு..!”
‘’நல்லது தான்..! அதேநேரம் எங்களையும் அடையாளம் தெரியுதே/”
‘’எல்லாருக்கும் கடந்த காலம் நினைவில் வந்ததும், நிகழ்காலம் மறந்து போக வேண்டிய சாத்தியமில்லை. அவங்களுக்கு ஏற்பட்டு இருந்தது எந்தவிதமான மூளை பாதிப்பும் இல்லை..! அதிர்ச்சியால் அவங்க மூளையின் சில பகுதிகள் செயல்படாமல் ஸ்தம்பிச்சு போயிருந்தது. அது மட்டும்தான் காரணம்..! அவங்க நினைவுகளை மீட்டெடுத்துட்டாங்க. இன்னைக்கு ஈவினிங்கே நீங்க அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிட்டுப் போகலாம்..!”
டாக்டர் நகரவும் அம்மாச்சி மிருதுளாவின் அருகில் வந்தமர்ந்து தலையை மென்மையாய்க் கோதித் தர, அவள் முகம் துடிக்க, நிமிர்ந்து பார்த்தாள். வார்த்தைகள் ஒத்துழைக்க வில்லை. கைகளை உயர்த்தி குவித்தாள்..!
‘’அச்சோ பாப்பு. எதுக்கு ஆத்தா கண் கலங்கிற..? எல்லாம் நல்லதுக்குத்தேன்.”
‘’நான் நடந்ததுக்கு அழுகறேன் அம்மாச்சி… இன்னைக்கு தேதி என்ன,,? இது எந்த வருசம்..?”
அம்மாச்சி சொல்ல, இரண்டு கைகளாலும் வாயை மூடி அதிர்வைக் கட்டுப்படுத்தினாள்.
‘’இரண்டரை வருசத்துக்கு பக்கத்துல ஆகுது..! அதெல்லாம் நடந்து போய்.” நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டு தலைகுனிய கண்ணீர் தன்னால் தரை பார்த்தது.
‘’ என்ன நடந்தது பாப்பு..?”
அம்மாச்சி கேட்க நிமிர்ந்து அமர்ந்தாள்.
* * *
கார் தர்மபுரியை ஓட்டிய கிளைச் சாலையில் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது. வெயில் என்றால் அத்தனை வெயில்.
கண்கள் சொருக அமர்ந்திருந்த அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா.
‘’என்னப்பா தூக்கம் வருதா..? அப்படியே சாய்ஞ்சு படுத்துக்கங்க.”மிருதுளா சொன்ன போது வேகமாய் கைகளை அசைத்து மறுப்புச்
சொன்னார்.
‘’மயக்கமா இருக்கு மிருதுளா காலையில பி.பி மாத்திரை போட்டுக்க மறந்துட்டு வந்துட்டேன். கோயிலுக்கு போனா பொங்கல் வச்சு முடிக்கிற வரைக்கும் எதுவும் சாப்பிடவும் முடியாது வெயில் வேற இந்தக் காந்து காந்துது என்ன பண்ணப் போறேன்னு தெரியலியே.” அப்பாவின் குரலில் வழிந்த அயர்ச்சியில் மிருதுளாவையும் கவலை கை பற்றிக் கொண்டது..!
வீட்டுக்கு திரும்பிப் போய் எடுத்து வரவும் முடியாது. ஏதோ நினைவில் தட்டியவளாக கைப்பையை குடைந்தாள். இரண்டு நாள்களுக்கு முன்புதான் மருந்து வாங்கி வந்திருந்த ரசீது இருந்தது.
‘’டிரைவர் பக்கத்தில ஏதாவது மெடிக்கல்ஸ் இருந்தா வண்டியை நிறுத்துங்க..! கொஞ்சம் டேப்லெட்ஸ் வாங்கிக்கலாம்.”
‘’என்ன மிருது..? உனக்கு பேர் தெரியுமா..?”
‘’லாஸ்ட் டைம் மருந்து வாங்கின பில் இருக்குப்பா. அதுல மாத்திரைப் பேர் இருக்கு. அதைக் காட்டி வாங்கிக்கலாம்.. இன்னைக்கு முழுக்க உங்களால சமாளிக்க முடியாது…” பார்வையை பதியம் வைக்க சாலையை ஒட்டி தள்ளி இருந்த சறுக்குப் பாதையில் ஒரு துணை சாலை கிளை பிரிந்தது..!
வண்டியை ஒரம் கட்டச் சொன்னாள். இறங்கிக் கொண்டாள். வண்டிக்குள் இருந்த பெற்றவர்களைப் பார்த்தாள்..!அசௌகரியமாக இருந்தது வயிற்றுக்குள்..! ஏனென்று புரியவில்லை.!
‘’மா, பக்கத்துல ஒரு ரோடு போகுது..! நான் உள்ளே போய் பார்க்கிறேன். கண்டிப்பா மெடிக்கல்ஸ் இருக்கும், மருந்து வாங்கிட்டு வந்துடறேன்”
‘’டிரைவர்கிட்ட குடுத்து அனுப்புமா.”
‘’இதுல எந்த டேப்லெட்டுன்னு பேர் தெரியலப்பா. கேட்டுட்டுத் தான் வாங்கணும். கையில் கேஸும் அதிகம் இல்ல. கூகுள் பே பண்ணனும். அதனால நான் போனாத்தான் வசதி..!”
‘’அப்ப எல்லாரும் கார்லயே போகலாம் நீயேன்மா தனியாப் போறே, பச்சை உடம்புக்காரி.”
‘’சின்ன ரோடா இருக்குமா அது பார்க்க..! போயிட்டு ரிவர்ஸ் எடுக்கிறது கஷ்டம். நீங்க இருங்க நான் பத்து நிமிசத்துல வந்துடறேன்.” கைப்பையை எடுத்துக் கொண்டாள். இமைக்காமல் இருவரையும் பார்த்தாள். எதிர் பக்கமாய் சாலையைக் கடந்து அந்த குறுகலான தெருவில் புகுந்தாள்.
சில மீட்டர் தொலைவில் இருந்தது மெடிக்கல் ஷாப். மருந்து வாங்கிக் கொண்டு திரும்பி நடக்க எத்தனித்த வேளையில் உலகத்தையே உலுக்கி வீசி எரியும் ஒரு அதி பயங்கரச் சத்தம், உயிரை உருக்கி உணர்வைத் துவட்டியது.
என்னவென்று யூகிக்காமலே தலை தெறிக்க ஓடினாள். கூட்டம் கொத்துக் கொத்தாய் எங்கிருந்தோ திரண்டு இருந்தது. குறுகலான சந்தைக் கடக்க கடக்க, கலவையாய் கேட்ட செய்தி,
‘...நின்னுகிட்டு இருந்த கார் மேல டேங்கர் லாரி மோதிடுச்சாம்..! தீ பிடுச்சிருச்சு...” வந்த வார்த்தைகள் எதுவும் இன்ப வார்த்தைகளாக இல்லை. கால்களில் புலிப் பாய்ச்சல் தேவைப்பட்டது என்றாலும், அந்த புள்ளிமானால் அதற்குமேல் இயலவில்லை.
மெயின் ரோட்டை சமீபித்தவள் ஈரக்குலையே அறுந்து கீழே விழுந்தது போல் இருந்தது. அந்த பிரவாகமே குளிர் காயும் அளவிற்கு நெருப்பு வளையம் வளையமாக வானத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டு இருக்க, லாரியும், இவர்கள் காரும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது… காற்று கரம் நீட்டி கரும் புகையை ருசித்துக் கொண்டு இருந்தது.
கூட்டம் தீயணைப்பு சத்தம்... ஏதேதோ கலவையாய் அவளுடைய மூளைக்கு வருகிறது, ஆனால் அது துளிகூட கீழிறங்கி இதயத்தை எட்டவே முடியவில்லை..! மூளைக்கும் இதயத்துக்கும் நடுவில் ஏதே அடைப்பு, சிந்திக்க தடுத்த தடுப்பு.எந்தச் சத்தமும் செவிகளின் வழி சிந்தையைச் சென்றடைய வில்லை.
‘... பத்திரமா போயிட்டு வந்துடு மிருதுளா...’ அதுதான் அவள் கடைசியாய் கேட்ட நினைவுச் சொல்..! அதன்பிறகு கால்கள் போன போக்கில் காலம் அவளை கொண்டு வந்து சேர்த்திருந்தது..!
அம்மாச்சியின் மடியில் தலை வைத்துப் படித்திருந்தாள். அழுது சிரித்து வேதனைப்பட்டு விம்மிச் சிரித்து அத்தனையும் முடிந்து போய் இருந்தது. இரவு ரயிலுக்கு சென்னை கிளம்புகிறார்கள்.
அலை அலையாய் வந்த நினைவுகளில் அலைபேசி எண்கள் எல்லாம் அடித்து போய்விட்டது. எத்தனை யோசித்தும் நந்தாவின் எண்ணோ, மற்றவர்கள் எண்ணோ நினைவில் வரவில்லை. சற்று இளைப்பாறிக் கொண்டு இருந்தால் மீட்டெடுக்க முடிந்திருக்கும் தான். ஆனால் அவள் அவசரம், யோசிக்கவே அவளை அனுமதிக்க வில்லை.
துடித்துக் கொண்டு இருந்தது அவளுடைய கர்பக்குலை. குழந்தையைப் பார்க்க வேண்டும்... தவமாய் தவமிருந்து அவள் பெற்ற தபஸ்வி... அவளுக்கும் நந்தாவிற்குமான காதலின் சின்னம்..! வானவூர்தியை விட வேக ஊர்தி எதுவுமில்லையே என்று அவளுடைய இதயம் தகித்தது..!
”இடையில் என்ன நடந்து இருந்தாலும், அதுக்கு நீயோ உன்னைச் சுத்தி இருக்கவங்களோ காரணமே இல்ல..! என்ன நடந்து இருந்தாலும் ஏத்துக்க மனசை திடப்படுத்தி வச்சுக்க பாப்பு,” அம்மாச்சி சொன்னபோது கண்களில் ஆறாய் பெருகிய நீரோடு நிமிர்ந்து பார்த்தாள்.
‘’புரியுது அம்மாச்சி..! நான் எல்லாத்தையும் ஏத்துகிற மனநிலையில தான் இருக்கேன்..! என் வாழ்க்கை ஒருவேளை பறி போய் இருக்கலாம். ஆனால் என் குழந்தை, அதுக்கு யாருமே எந்த நிலையிலும் உரிமையாக முடியாது..! என்னை இந்த உலகத்துக்கு தந்த உயிர்கள் என் கண் முன்னாலே கருகிப் போன பிறகு, என்னால இந்த உலகத்தைப் பார்த்த என் குழந்தை மட்டும்தான் எனக்கு எல்லாமே..! நான் தைரியமாத்தான் இருக்கேன் அம்மாச்சி. ” திடமாய்ச் சொன்னவளை அன்பு மேவ பார்த்தார்.
வந்த நினைவுகளோடு, இங்கே விளைந்த நினைவுகளையும் சேர்த்துக் கொண்டு அத்தனை பேரிடமும் விடை பெற்றுக் கொண்டு அம்மாச்சியை அழைத்துக் கொண்டு ரயிலேறி விட்டாள்.
* * *
பொழுது புலர்ந்தது ஞாம் செய்த தவத்தால்...’ வார்த்தைகள் நெஞ்சில் நிம்மதியை வார்த்துக் கொண்டு இருந்தது. விடியலுக்கு முன்னே விழித்துக் கொண்டு விட்டாள் வானதி..!
உறங்கும் நந்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இந்த இரு நாட்களாக அவன் காட்டிய அன்பில் தன்னை முழுதாய் மறந்து இருந்தாள். இழப்பின் வலியை ,அணைப்பின் வழியிலே கரைக்க முடியும் என்று வித்தை காட்டி இருந்தான்.
அம்மாவின் இழப்பு மறந்து போகவில்லை. ஆனால் கொஞ்சம் மனசு ஆறுதலாய்த் தான் இருந்தது. நிராதரவாய் காற்றில் சுழன்றாடிய கொடிக்கு பற்றாதாரம் கிடைத்தது போல் மனசு நினைத்தது.
‘’மா, பசிக்குது...” கண்ணைக் கசக்கிக் கொண்டு தன்முன்னே எழுந்தமர்ந்த தபஸ்வியை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தாள். கைகளை நீட்டியதும், தாவிக் கொண்டு எழுந்து வந்து அவளின் வலத் தோளில் படுத்துக் கொண்டது.
‘’இன்னைக்கு என்ன என் பாப்பாக்கு இவ்வளவு சீக்கிரம் பசிக்குது..? நைட் சாப்பிடாம தூங்கியாச்சா என் பேபி.’ குழந்தையை நிமிர்த்தி அதன் வயிற்றில் பலூன் ஊதி கிச்சு கிச்சு மூட்ட, தோட்டத்தில் மலர்ந்த பூக்கள், அந்த சின்ன இதழ்களிலும் சிரிப்பாய் பூத்தது.
‘’மா, இன்னைக்கு ஒரு நாள் ப்ரெஸ் பண்ண வேண்டாம்..! ‘’
”அச்சோ..! இது பேட் ஹேபிட்... ‘’ குழந்தையை அள்ளிக் கொண்டு கீழே வந்தாள். பல் தேய்த்து முகம் அலம்பி, அதன் திரண்ட முடியை வழித்து ஜுட்டு போட்டு விட்டாள். பூஸ்ட்டைக் கலந்து கையில் தந்துவிட்டு தோட்டத்தை கூட்டி பெருக்கி, வாசலில் கோலமிட்டு நிமிர்ந்த நிமிசம், வாசலில் ஆட்டோ வந்து நின்றது.
சொருகிய புடவையைத் தளர்த்தி விட்டுக் கொண்டாள். பெருக்கு மாத்தை ஓரமாக வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். பின் கொசுவம் வைத்து புடவையை கட்டி இருந்த வயதான பெண்மணியும் பக்கத்தில் இன்னொரு பெண்ணும் இறங்கி வந்தார்கள்..! அதிகம் விடிந்திராத பொழுது... அழுத்தமாக பார்வையைப் பதித்தாள் மட்டுமே, வடிவத்தைக் கடந்து உருவம் தெரியும். உற்றுப் பார்க்க பார்க்க, பாதத்துக்கும் பூமிக்கும் இடையே வேர்வை போர்வை போத்திக் கொண்டது.
போட்டோவில் பலமுறை பார்த்து இருக்கிறாள்... அவள் தானா..? அவளே தானா..? எப்படி..? இது கனவா..? இதே எண்ணம் தான் எதிர் வரிசை பெண்ணுக்கும் ஏற்பட்டு இருக்க வேண்டும். இருவருக்கும் இடையில் இருந்த சொற்ப தூரத்தை சிந்தித்துக் கொண்டே கடந்து கொண்டு இருந்தார்கள்.
‘’மி..ரு..து..ளா...” வாய் தன்னால் முணுமுணுக்க, கண்கள் தன்னால் தரையில் அவள் கால்களைத் தேடியது. இருவரும் கண்களால் பரஸ்பரம் முகர்ந்து கொண்டு நின்றார்கள்.
”..மாலையிட்டால் ஒரு முறைதான் என்று நினைப்பது பெண்மையன்றோ...
ஒரு மாலையை இரண்டு தோளுக்கு சூடுவது இறைவன் தன்மையன்றோ...
அது ஏட்டில் உள்ள கதை... இது என்றும் தொடரும் கதை...
அது பொம்மைக் கல்யாணம்... இது உண்மைக் கல்யாணம்
19
இன்று மட்டும் ரெண்டு சூரியன் முளைத்து பூமிப் பந்தை இன்னுமின்னும் வெளிச்சமாக்கிக் கொண்டு இருந்தது. வேலை முடிந்தும் வீட்டுக்கு திரும்பாத நிலா. வெளிச்சத்திற்கு குளுமை கூட்ட அழகாய்த்தான் இருக்கிறது இந்த அவனியெல்லாம்.துளைக்குள் புகுந்த காற்று இசையாய் இன்பம் சேர்ப்பது போல் துன்பத்தில் விளைந்த இந்த இன்பம், அத்தனை அழகாய் இருந்தது.
கடிகார முள்ளை மெல்லத் திருப்பி இழந்த காலத்தில் வைப்பது போல், சொற்ப நொடிகளுக்கு முன்னே நடந்தது எல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே ஒரு தேவதை பாதை விரித்தது போல் நிகழ்ந்து இருந்தது.
உறங்கிய வீடு அதிகாலையில் விழித்தெழுந்து கொண்டது. கல்பனாவின் கண்களில் தெரிந்த ஆனந்தமும், நந்தாவின் கண்களில் மிதந்த ஆத்மார்த்தமும், அழுகையும் சிரிப்பும்…. அப்பப்பா… மனிதர்கள் இத்தனை உணர்வுகளை சுமந்து கொண்டுதான் பயணப்படுகிறார்களா என்ன..?
கருவின் வாசத்தை தாயின் கண்ணீரின் வாசத்தில் முகர்ந்ததோ அந்தப் பிஞ்சு, கண்மணிகளில் ஊடாடி ஊடாடி தன்னைத் தேடிக் கொண்டு இருந்தது. தொப்புள்கொடியை அறுத்தே இருந்தாலும், ஆன்மாவின் ஆதாரம் இணைத்தது. உதிர்ந்தே கிடந்தாலும், மலர்ந்த செடியின் முகவரியை, மலருக்கு அடையாளம் தெரிந்தது..!
கை நீட்டியதும் தாவிக் கொண்டு தாயிடம் இடம் பெயர, ஒரு விழி நிறைந்தது மறுவிழியோ கண்ணீரில் கரைந்தது. வந்து சில மணி நேரமாகிறது. இன்னும் மிருதுளாவின் மடியை விட்டு இறங்கவே இல்லை. வானதிக்கு தாய்மை ஆர்பரிப்பும் தாங்கவே இல்லை.
‘’எல்லாம் அந்த மகமாயி கருணை.ஒழுது போன உயிர், பழுது பார்த்து வந்த மாதிரியில கிடைச்சு இருக்கு..! சித்தம் கலங்கின மாதிரி வந்து நின்னவளை, நான் தான் கூட்டிப் போனேன்..!
சாமி கணக்குப்படி இம்புட்டு நாள் பிரிஞ்சு இருக்கணும்னு எழுதி இருக்கு.எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் இல்லையா..? ஆனால் வர்றதுக்குள்ள விரும்பத்தகாததும் நடந்துதான் போச்சு. ஆனாலும் இது சாமி கணக்குன்னா அதுவும் சாமி கணக்குத்தான், வரும்போதே பாப்பு எல்லாத்தையும் ஏத்துக்கிற மனசோட தான் வந்திருக்கு.” வானதியைத் தொட்டு மீண்ட கண்களில் அம்மாச்சி சொல்ல, அங்கே நிலவிய தர்ம சங்கடத்தை தவிர்க்க, வானதி சமையலறைக்குள் நகர்ந்து கொண்டாள்.
நேரம் குறைய குறைய, மயக்க மருந்தின் வீரியம் மட்டுப்பட்ட பிறகு விரியமாய் பாவும் வலிகள் இங்கேயும் பாவத் தொடங்கி இருந்தது. இரு துருவங்களை அங்கே ஒரு இடத்தில் கட்டிவைத்தது போல் அவஸ்தையாக இருந்தது..!
மாண்டவள் மீண்டது ஆனந்தம் தான், யார் மறுத்தது. ஆனால் தாய்மைக் கோலம் பூண்டவளின் நிலைமை இனி என்னாகும்..?
உள்ளுக்குள் உடைந்து தன்னை அடையாளம் தெரியாமல் நிற்கும் ஒருத்தி, பேதமை உடை களைந்து நினைவு வாங்கி, கனவாகப் போன வாழ்க்கையைத் தேடி வந்த இன்னொருத்தி... நந்தா தான் அடுத்த அடி எடுத்து வைக்க பூமி இல்லாமல் நின்றான்..!
வானதி எப்போதும் போல் இப்போதும் பக்குவம் காட்டினாள். இப்போது விளக்க வேண்டியது மிருதுளாவிற்கு தான்..! அவள் நம்பிக்கையை எந்த இடத்திலும் தான் தகர்க்க வில்லை என்ற நிஜத்தை புரிய வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
ஏற்றுக் கொள்வேன்’ என்று சொல்லிவிட்டு வந்தே இருந்தாலும், அனலுக்குள் விழுந்த பிறகுதான் கொதிநிலையை உணர்ந்தாள் மிருதுளா. மகளை மடியில் இறுக்கிக் கொண்டு வெறித்த விழிகளோடு அமர்ந்திருந்தவளின் கைகளைப் பற்றி மென்மையாய் அழுத்த, அந்த அழுத்தத்தில் இருந்த உண்மையில் மிருதுளா இன்னும் இன்னும் மிருதுவானாள்.
‘’மாடிக்கு வா மிருதுளா உனக்கு எல்லாம் தெளிவாச் சொல்றேன்.” மறுப்புச் சொல்லாமல் அவன் பின்னாக எழுந்து போனாள். சமையலறையில் இருந்த வானதிக்குள் கேவல் வெடித்தது. விசிலடித்த குக்கரோடு சேர்த்து தன்னுடைய உணர்வுகளையும் வெளித் தள்ளிக் கொண்டாள்.
அறைக்குள் அடியெடுத்து வைத்ததும், பழைய நினைவுகள் அலையாய் எழுந்து ஆர்பரித்து அடங்க, இருவரும் பார்வையால் தழுவிக் கொள்ள, அனிட்சையாய் மிருதுளா அவன் மார்பில் முகம் பொதித்து விசும்பினாள்.
‘’ஏன் மிருதுளா நமக்கு மட்டும் இப்படி ஆச்சு.” என்றான் அவள் தலையில் நாடி பதித்து..! ”
‘’எப்படி சட்னு இன்னொரு பொண்ணு கூட உங்களால... அத்தனை பலகீனமானவரா நந்தா நீங்க..?” உதடு துடிக்க கேட்டவளை கட்டிலில் அமரவைத்து ஜக்கில் இருந்த நீரைச் சரித்துத் தந்தான். குடிக்காமல் பக்கத்தில் வைத்தாள்.
தரையில் அவளுக்கு நேராக அமர்ந்து கொண்டான். அவள் வலக்கையைப் பற்றிக் கொண்டபடி பேச ஆரம்பித்தான்.
வார்த்தைகளுக்கு சக்தி வேண்டும்... அதில் நடந்ததை வரைபடம் போட்டுக் காட்டிவிடும் பெரும் சாமர்த்தியம் வேண்டும்..! அவனுடைய வார்த்தைகளில் அத்தனை வழுவிருந்தது. நிகழ்ந்ததை எல்லாம் நீக்கமற பேசினான் தன்னுடைய காதல் மனதை சாட்சியாக வைத்து.
மிருதுளாவின் அகாலம், அம்மாவின் புத்தி நெகிழ்வு, கையறு நிலை, தபஸ்வியின் தாய்மை பரிதவிப்பு, என்று அத்தனையும் சொன்னான். வானதி என்ற தேவதையின் வரவு, எதிர்பார்ப்பு இல்லாத அவளுடைய இதயம், இருவரின் நட்பு, அதில் கனிந்த உறவு வரைக்கும் அத்தனையும் சொன்னான்... எதையும் மறைக்கவில்லை.
நியாயமாகவே இருந்தாலும், தனக்கு நேர்ந்த அநீதியை அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள எந்த இதயம் ஒப்பும்...? கைகளை பின்னுக்கு ஊன்றி அமைதியாக கண்களை மூடி அமர்ந்து இருந்தாள்.
அவள் மடியில் சரிந்து கவிழ்ந்தான். இருவரும் கண்களும் ஆறாகி இருந்தது..!
‘’என் வாழ்க்கையில மட்டும் ஒவ்வொரு அசைவும் எதிர்பாராத எதிர்கோணத்திலேயே நிற்குது..! எனக்கு அது ஏன்னு மட்டும் புரியல..! என் வாழ்க்கையில நடந்தது எல்லாம் நல்லதுதான். ஆனால் சுமக்க முடியாத அளவிற்கு..!
உனக்கு பிறகுன்னு நான் எதையுமே யோசிக்கல. உன் இடத்துக்கு வர ஒருத்தி உன்னை மாதிரி நல்லவளா இருக்கணும். தபஸ்வியை தன் குழந்தையா சுவீகரிக்கணும்..! குழந்தை பூ மாதிரித்தான், அதன் மென்மையை சுமக்கிற பெரும் பராக்கிரமசாலியா இங்கே யாருமே இல்லை, அதுதான் நிஜம் மிருதுளா..! இன்னைக்கு வானதி மட்டும் இல்லாட்டி, தபஸ்வி, அம்மா, இந்தக் குடும்பம்... அவ்வளவு ஏன் நான் கூட இல்லை.”
இறுதி வார்த்தையில் மட்டும் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். வேதனை இருந்தது அந்த அங்கீகரிப்பில். தடுமாறிப் போய் ஏதோ பேச விளைந்தவனை கை உயர்த்தி தடுத்தாள்.
‘’நடந்ததுக்கு விளக்கம் வாங்கிக்கறதை விட, இனி என்ன நடக்கணும்னு விளக்கமா யோசிச்சா நல்லா இருக்கும். எனக்கு இயல்பு புரியும். ஒரளவுக்கு யூகிச்சுத்தான் வந்தேன்..! ஆனாலும்
சந்திக்கிற போது சகிச்சுக்க முடியல. சாதாரண மனுசி தானே நானும்.” சொன்னபோது குரல் இடறி உள்ளுக்குள்ளே நழுவி இருந்தது..!
இருவரும் மௌனத்தை அணைத்துக் கொண்டார்கள்… தள்ளி அமர்ந்து.
‘’நடந்தது மாறாது... அதை மாத்துற சக்தியும் நமக்கு கிடையாது. அப்படி மாத்தற வாய்ப்பை மட்டும் கடவுள் எனக்குத் தந்தா, நான் முதல்ல மாத்த நினைக்கிறது அந்த விபத்தைத் தான்...காத்தோட காத்தா கரைஞ்சு போன என்னைப் பெத்தவங்க முகத்தை மறுபடி பார்த்துக்க ஆசைப்படறது தான்”
‘’மிருதுளா... ப்ளீஸ்...”
‘’அழுதுக்கறேன் நந்தா, என் அப்பா அம்மா இழப்புக்கு நான் இன்னும் அழவே இல்லையே. உறைஞ்சு போனதுக்கு பதிலா நான் கரைஞ்சு போயிருந்தா நல்லா இருந்திருக்குமே.” தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். ஆற்றுபடுத்த வழியில்லாமல், அமர்ந்திருந்தான்.
வேகமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னை மீட்டுக் கொண்டாள்.
‘’ இப்போ எனக்கு சமமான இடத்துல இன்னொரு பொண்ணு, இதை எப்படி சந்திக்கப் போறேன்னு தெரியல. ஆனால் சந்தி சிரிக்கற மாதிரி மட்டும் நடந்துக்க மாட்டேன்.”
‘’ மிருது...”
‘’நடக்க கூடாதது நடந்திருச்சு. அதுக்காக மாற்ற முடியாததை ஏத்துக்க பழகிக்கணும். வேற வழியில்லாமல் போனாலும்..! என்னால பிரச்சனை வராது நந்தா...” அழுத்தமாகச் சொல்லி விட்டு வருத்தமாக எழுந்து போனாள்..!ஓரளவு நந்தாவின் மனம் அமைதியாகி இருந்தது..!
கீழே இறங்கி வந்தான். வானதியைச் சந்திக்க கண்கள் பயந்தது. அவள் என்ன யோசிப்பாள், என்ன மாதிரியான மனநிலையில் இருப்பாள் எதுவுமே அவனால் யூகிக்க முடியவில்லை..!
அம்மாச்சி சாப்பிட்டு விட்டு சோபாவில் உறங்கி இருக்க, வீணாவும், விக்கியும் அவரவர் வேலைகளில் தங்களை புகுத்திக் கொண்டு அவ்விடத்தை விட்டு சவுகரியமாய் அகன்றிருக்க, கல்பனா மட்டும் குழந்தையோடு ஹாலில் யோசனையாய் அமர்ந்திருந்தார். இறங்கி வந்தவன் விழிகள் அனிட்சையாய் வானதியைத் தேட அதை இனம் கண்ட கல்பனாவின் முகம் வதங்கிப் போனது.
‘’ நந்தா...”
‘’மா...”
”என்னவோ பண்ணுதுடா உடம்பும் மனசும்..! வானதியை நிமிர்ந்து பார்க்கவே பயமா இருக்கு. பாப்பாவையும் அவ வந்து தூக்கவே இல்லை..! தூக்குன்னு சொல்லவும் பயமா இருக்கு..! எனக்கு மறுபடியும் இந்த அழுத்தத்துல பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குடா.” சொன்ன அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்..! வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
எழுந்து சமையலறைக்குப் போனான். வாசலுக்கு முதுகு காட்டிக் கொண்டு சின்க்கில் எதையோ கழுவிக்கொண்டு நின்றாள். அரவம் தெரிந்தும் திரும்பும் ஆசையற்று அமைதியாக நின்றாள்..!
‘’வானதி...”
‘’சொல்லுங்க நந்தா...” குரல் மட்டும்தான் பின்னால் வந்தது முகம் முன்னாலேயே நின்றது..!
‘’இப்போ எப்படி ஃபீல் பண்றே...” வார்த்தைகளை ஈரப்படுத்தி ஈரப்படுத்தி பிரசவிப்பதிற்குள், பாதி உதிர்ந்து போய் உயிர்ப்பில்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்தது..!
திரும்பிப் பார்த்த கண்களில் எப்போதும் இவன் ரசிக்கும் குறும்பும் மகிழ்வும் இல்லவே இல்லை. வெறுமையும், விரக்தியும் விளாவி வைத்தது போல் இருந்தது அவளுடைய முகத்தோற்றம்..!
‘’எப்படி ஃபீல் பண்ணனும்னு சொல்லுங்க பண்றேன்.”
‘’யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு. மிருதுளா எல்லாத்தையும் இழந்து வந்திருக்கா..! தராசுல உங்க ரெண்டு பேர்ல யாருடைய துக்கம் அதிகம்னு கேட்டா ஒரு நூலிழை கூட உயர்வு தாழ்வு இருக்காது.”
மேற்கொண்டு அவனை பேச அனுமதிக்காமல் கைகளை உயர்த்தினாள்.
‘’சாப்பாடு தயார் ஆயிடுச்சு நந்தா..! நான் டைனிங் டேபிள்ல எடுத்து வச்சிட்டுப் போறேன்..! எனக்கு கோயிலுக்கு போகணும் போல இருக்கு..! எல்லாரும் சாப்பிடுங்க. சந்தியாகிட்ட விசயத்தை சொல்லி இருக்கேன். அவளும் வர்றேன்னு சொல்லி இருக்கா. இந்த நிமிசத்தின் சந்தோசத்தை அனுபவிச்சுக்கங்க..! அது திரும்பக் கிடைக்காது.”
வருத்தத்தை குரலில் காட்டாமல் அவள் சொன்னபோது அவனுக்கு கத்திக் கூச்சலிட வேண்டும் போல் இருந்தது..!
‘’வானதி...”
‘’எனக்கு இந்த நிமிசம் உங்களுடைய மனநிலை இங்கே எல்லோருடைய மனநிலையும் புரியுது..! தொலைஞ்சதுன்னு நீங்க நினைச்ச அத்தனை சந்தோசங்களும் முகிழ்ந்து வந்திருக்கு. இதெல்லாம் சாதரணமான விஷயங்கள் இல்லை. ஆனால் நான் இருக்கிறதால உங்க யாராலும் சந்தோசப்பட முடியல,எனக்குப் புரியுது.
சந்தோசப்படுங்க நந்தா... நம்முடைய உணர்ச்சிகளுக்கு நாமே நியாயம் செய்யாட்டி யார் செய்ய முடியும்..? எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்..! நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன் பளீஸ்...” எத்தனை கட்டுபடுத்தினாலும் கண்ணீர் மட்டும் காட்டிக் கொடுத்து தொலைக்கிறது உணர்ச்சிகளின் முகத்துவாரத்தை..!
வெளியில் வந்தவள், அங்கே அமர்ந்திருந்த கல்பனாவையோ குழந்தையையோ ஏறிட்டும் பார்க்காமல் வெளியில் போக, மொத்த வானத்தையும் ஒற்றைத் தலையில் சுமப்பது போல் வலித்தது தாயுக்கும் மகனுக்கும்..!
அவள் தன்னை தூக்காமல் கடந்து போவதைப் பார்த்த தபஸ்வி,
‘’அம்மா...” என்று சத்தமாய் அழைக்க, சுமக்காத அவள் கர்ப்பக்குலை சூழில்லாமல் கனத்தது. வார்த்தைகள் கால்களை கட்டிப் போட, கால்கள் அடியெடுக்க இடம் தராமல் கனத்தது..!
இத்தனை நேரம் காபந்து பண்ணிய கண்ணீர். நீர் பந்தாய் கன்னத்தில் உருண்டு உருமாற, வேகமாய் புறங்கையில் துடைத்துக் கொண்டாள்.
‘’மா, எங்கே போறே..? நானும் வர்றேன்... ‘’ இருக்கையில் இருந்து இறங்கி இவளை நோக்கி நகர, ஒரு கையில் வாயடைத்து அழுகையை தரை மட்டமாக்கியவள், வேகமாய் அங்கிருந்து வெளியில் வந்தவள், வீதியெல்லாம் அழுது கொண்டே நடந்தாள்.
சந்தியாவின் கண்களில் மகிழ்வும், கண்ணீரையும் ஓருசேர பார்த்த மிருதுளா, காலம் எத்தனை ஆனாலும் நட்ட இடத்தில் துளிர்க்கும் தங்களுடைய நட்பு மரத்தை எண்ணி ஒரு நொடி வியந்துதான் போனாள்..!
எல்லா மகிழ்ச்சியின் முடிவும் வானதியிடமே வந்து நின்றது..! நிலைமையை உணர்ந்தவள் தனிமையில் நந்தாவிடம் வந்து நின்றாள்.
‘’வானு எங்கே நந்தா..?”
‘’கோயிலுக்கு.”
‘’அவ ரெம்ப ரெம்ப பக்குவமானவ நந்தா..! கண்டிப்பா இந்தச் சூழ்நிலை அவளுக்கு அதிர்வா இருந்தாலும் நிதானமா கடந்து வருவா. மிருதுளாவும் அப்படித்தான்..! நீ மட்டும் கொஞ்சம் தைரியமா இருக்கணும் நந்தா.
எந்தக் கோயிலுக்கு போயிருக்கா..? நான் போய் பார்க்கிறேன்” சொல்லிவிட்டு அலைபேசியில் வானதியின் எண்ணை அழைத்துக் கொண்டே நகர, பெருமூச்சு விட்டுக் கொண்டான்..!
வந்தவர்கள் சொல்வதெல்லாம் வாழ்க்கையல்ல… சந்திப்பவருக்கே அந்த சங்கடங்கள் புரியும்..!
மாலையில் அம்மாச்சி ஊருக்கு கிளம்பி விட நன்றிப் பெருக்கை தந்து வழியனுப்பி வைத்தார்கள்..! மாலை மடங்கியும் வானதி வீட்டுக்கே வரவேயில்லை. சிரித்தாலும் நந்தாவின் இதழ்களில் உயிர்ப்பே இல்லை. இந்த நிமிசம் எந்ததிசையை நோக்கி நகர்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை.
இரவில் அவள் திரும்பிய போது சாப்பாட்டுக் கடை முடிந்து மிருதுளா படுக்கைக்குச் சென்றே விட்டு இருந்தாள். சில தர்மசங்கடங்களைத் தவிர்க்கவே அவள் தாமதித்து இருக்கிறாள் என்று புரிந்தபோது நந்தாவுக்கும் இதயத்தை ட்ரில் வைத்து குடைந்து துருவியது போல் இருந்தது..!
‘’சாப்பிட்டீங்களா அத்தை.” கல்பனாவின் முன்னால் வந்து நின்று கேட்க, பதிலற்று வேகமாய் தலை அசைத்தார். கண்கள் அவளை துலாவிக் கொண்டே இருக்க, எதிர்வினை ஆற்றாமல் போய் சாப்பிட அமர்ந்தாள்.
அவள் இயல்பாக இருப்பதாய்க் காட்டிக் கொண்டாலும் இதயம் இவர்களுக்கு ரணமாக வலித்தது..! தலையில் கைவைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து இருந்தான் நந்தா.
வேலைகளை முடித்துக் கொண்டு வந்தவள், அமர்ந்தபடி பார்த்தவனை நிமிர்ந்து பார்க்காமல் தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். குளிர்காற்று வீசி சூழலை இளக வைக்க முயன்று கொண்டு இருந்தது.
காற்று வீசி வீசி இருளின் கறுப்பை கலைக்க முயல, உயரத்தில் இருந்த அந்த நிலாவை, துயரத்தில் இருந்தவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தாள். கல்பனா மகனின் அருகில் வந்து தோளைத் தொட்டார். நிமிர்ந்து பார்த்தான்.
‘’நீ போய் பேசு நந்தா..! அவளை விட்டு எதுவுமே போகலைங்கிற நம்பிக்கையைக் கொடு..! அவ இல்லாட்டி உனக்கு எதுவுமில்லைங்கிற உறுதியைக் கொடு..! அவளை உடைஞ்சு போக விட்றாத நந்தா. அவ மட்டும் இல்லைன்னா, இந்த குடும்பம் சிதைஞ்சு சின்னா பின்னமாகி இருக்கும் இந்தநேரம். ‘’ அம்மாவின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவனைக் கரைத்தது. எழுந்து வெளியில் வந்தான்.
”...ஈன்ற தாயை நான் கண்டதில்லை...
எனது தெயவம் வேறெங்கும் இல்லை...
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்...
உதயநிலவே கண் துயில்வாயே...”
20
கூடை நாற்காலியில் எதிரில் வந்தமர்ந்தவனை பார்க்காமல் பார்வையை இருளில் ஒளித்து வைத்திருந்தாள்.
”பனி கொட்டுது வானதி..! எதுக்கு இங்கே வந்து உட்கார்ந்து இருக்கே..? ‘’
பதிலில்லை.
‘’வானதி. பேசு வானதி. எதுவா இருந்தாலும் பேசிடு. இந்தக் கோபமும் அழுத்தமும் உனக்கு புதுசு..! உனக்குள்ள நடக்கிற போராட்டங்களை உணர முடியாதவன்னா என்னை நினைச்சே..?” ஏனோ இந்த நிமிசம் அவன் யாரோவாக அவளுக்குத் தோன்றினான்.
‘’உங்களுக்கு மிருதுளா திரும்பி வந்ததுல சந்தோசமே இல்லையா நந்தா..” பட்டென்று கேட்கத் திணறிப் போனான்.
‘’எப்படி இல்லாம இருக்க முடியும்..? அதே நேரம் உன்னையும் என்னால எப்படி கடக்க முடியும்..? நீ என் தேவதை வானதி..! இந்த குடும்பத்தை நீ எந்த இடத்தில இருந்து மீட்டு எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். இப்போ நீ கலங்கி நிற்கும் போது இந்த மொத்தக் குடும்பமும் பரிதவிக்குது..!”
நந்தா வெகுவாய் நெகிழ்ந்து இருந்தான். இரண்டு வருட திருமண பந்தத்தில் வெற்று இரண்டு நாளைய தாம்பத்தியம் தான் அவர்களுக்கு நடுவில்... ஆனால் அதை ஒருநாளும்முகத்தில் காட்டாமல், அவள் கடந்து வந்த நிமிசம் எல்லாம் கண்ணில் சொட்ட, அப்படியே தலையைத் தேய்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.
‘’நேரமாகுது நந்தா போய்த் தூங்குங்க..! இது உணர்வு ரீதியான போராட்டம்… நீங்க நினக்கிற மாதிரி அத்தனை சீக்கிரம் விடை கிடைக்காது..! மிருதுளா எதுவும் யோசிக்கப் போறாங்க. நீங்க போங்க.” பார்வையை தரையில் பதித்துக் கொண்டே சொன்னாள்.
அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அயர்ச்சியாய் அடுத்த நொடி வானம் பார்த்தான்..! வட்ட நிலவை சுற்றியும் கருந்திட்டு மேகம் நேற்று இரவு தன் நெஞ்சில் ஏந்தி இருந்த அவள் முகமும், விரிந்து மார்பில் படர்ந்திருந்த கருங்கூந்தலும் நினைப்பில் வர, தகித்துப் போனான்.
வேகமாய் எழுந்து வந்து அவள் முன்னே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான். சோகம் தாங்கிய அவள் சித்திர முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு நீர் சொப்பிய கண்களை நிமிர்ந்து பார்த்தான்.
‘’வானு... ஐ’யம் சாரி வானு..! என்னை விட்டு போயிடாதடி. நான் நொறுங்கி போயிடுவேன். ஏதாவது சொல்லு சண்டை போடு, பயப்படு, கோபப்படு, எல்லாத்தையும் விட்டுட்டு இப்படி அமைதியா இருக்காதே... எனக்கு பயமா இருக்கு..!”
ஏந்திய கைகள் கண்ணீரால் நனைந்தது. துடித்துப் போய் பார்த்தான் மெல்லிய நிலவின் வெளிச்சத்தில் அவள் கண்களில் இருந்து வெள்ளிக் கோடாய் தண்ணீர் தரை இறங்கிக் கொண்டு இருந்தது.
இத்தனை நாள் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக அவள் கண்ணீரைப் பார்க்கிறான்..!
அவளுக்கு இந்த நிமிசம் இருக்கின்ற மனநிலையை உணர முடிந்தது. மிருதுளாவும் அதே நிலையில் இருந்தாலும், அவளைப் பொறுத்தவரை தொலைந்த வாழ்க்கை கிடைத்து இருக்கிறது..! ஆனால் வானதிக்கு கையில் இருந்த உலகம் கைநழுவிப் போய் விட்டது. இந்த நிமிசம் அவளின் இதயம் எத்தனை வலிதாங்கி இருக்கும் என்பது அறியாததா என்ன..?
தன் கன்னத்தை பற்றி இருந்த கைகளை மென்மையாக பிரித்து விட்டாள்..!
‘’ போங்க நந்தா, நேரமாகுது..”
‘’அப்போ...நீ...” அடுத்த வார்த்தைக்கு நாவு ஒத்துழைக்க மறுத்தது. இருவருமே வேதனையை, மிடறாய் மாற்றி விழுங்கினார்கள். இந்த அவஸ்த்தையை இதற்கு மேலும் நீடிக்க விரும்பாமல் அவளே சொன்னாள்.
‘’நான் கீழ அத்தை ரூம்ல படுத்துக்கறேன்..! பல விசயங்களை ஒருசேர யோசிக்காதீங்க. பாய்மரக் கப்பல் மாதிரி இருங்க. காற்று வீசுற திசைக்கு பயணம் செய்யத் தயாரா இருங்க.”
அந்த நிலையிலும் அவளின் நிதானமான பேச்சு அவனை நெக்குருக வைத்தது..! அவளுடைய வலக்கையை எடுத்து தன் தலையில் வைத்தான்.
‘’என்கிட்ட சொல்லாம எங்கேயும் போகக் கூடாது வானதி..! என்னுடைய அனுமதி இல்லாம உன்னுடைய நகர்தல் இருக்கவே கூடாது என்மேல சத்தியமா” என்றான் அழுத்தமாக.
ஈர இமைகளோடு இருந்த கண்களை மூடி மென்மையாக தலை அசைத்து ஆமோதித்தாள். மனமே இல்லாமல் நடந்தான். அவளைக் கடந்த ஒவ்வொரு அடியும், கணமானதாய், சுமக்க இயலாததாய் இருந்தது.
சிறிதுநேரம் தனிமை திண்ற பிறகு வானதி எழுந்து கொண்டாள். கதவடைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.. பார்வை அனிட்சையாய் மாடியைத் தொட்டது... அடைத்திருந்த அறைக்கதவு, தடுத்திருந்த உணர்வுகளை தட்டி எழுப்பியது.என்னதான் மனச்சமாதானம் செய்து கொண்டாலும் அந்த ஆற்றாமையில் அவள் ஆவி துடித்தது.
இன்றைய விடியல் மட்டுக்கும் அவளுக்காய் இருந்த எதுவுமே இப்போது அவளுடையதாய் இல்லை. இந்த வீடு, மனிதர்கள், படுக்கை அறை அத்தனையும் ஒரு பொழுது சூர்யோதயத்தில் உதவாமல் போய் விட்டது..!
நிற்கின்றாள்... நிலை தடுமாறி... எங்கே செல்வது என்றும் அறியாமல்.
ஓரிரு நாளில் மெல்ல மெல்ல இயல்பு துளிர்த்துக் கொண்டது. நல்லவர்கள் கூட்டத்தில் நடப்பது மட்டுமல்ல, சிந்திப்பதும் நல்லவைகள் தான் என்று நன்றாகவே புரிந்தது. ஆனால் நடப்பது நல்லவையா என்று கேட்டால் வார்த்தைகள் இருக்காது..!
கடல் நோக்கி ஓடும் நதி, விலாசம் கொண்டு விசாரித்து வருவதில்லை..! அதனதன் போக்கில் அழகான ஜதிகள். கழுத்தைச் சுற்றிக் கொண்டு கைவளைவில் கிடந்த தபஸ்விக்கு எப்படி தாய்மையின் வாசம் புரிந்தது, அது அறியாதது தான்..! தள்ளி நின்று கை நீட்டியதும் தாவிக் கொண்டு போனதுமே, வானதியின் இதயம் இரண்டாக உடைந்து போனது..!
‘’எனக்கு ரெண்டு அம்மாவா டாடி..?” பிஞ்சு விரலை நீட்டி நந்தாவின் முகத்துக்கு நேரே கேள்வி கேட்டபோது இயலாமையில் தவித்தான்..!
மெல்ல மெல்ல வேர் பற்றிக் கொண்டாள் மிருதுளா. கல்பனாவின் வாஞ்சையும் அன்பும் அவளை இன்னும் இன்னும் குளிர வைத்தது.
ஆனால் வானதி தான் புணரமைக்கப்படாத சிற்பத்தைப் போல் சிதிலமாகிக் கொண்டே இருந்தாள் தன்னுள். அங்கு எதுவுமே அவளுக்கு குறைந்து போயிருக்கவில்லை. ஆனால் அவள் மட்டும் உள்ளுள்ளே சிதைந்து போய் இருந்தாள்..!
பிறப்பில் இருந்து தனியாகவே வாழ்ந்த ஒரு பெண், தன்னைத் தானே சரிசெய்யும் சுயம்பு போல வாழ்ந்து வாழ்க்கையில் கிடைத்த ஒற்றை ஆதாரமும் உதிர்ந்து போனது... விழுந்த நிழலிலும் வெயில் அடித்தது..!
‘’வானதி எப்பப் பார்த்தாலும் தோட்டத்திலே வந்து உட்கார்ந்து கிடந்தா என்ன அர்த்தம்..! இங்கே எதுவும் மாறிடல. முதல்ல அதை நீ உணர்ந்துக்க. அதை விட்டுட்டு இப்படி ஒதுங்கி ஒதுங்கிப் போனா என்ன அர்த்தம்..? அப்புறம் உன் கல்புக்கு மறுபடியும் பைத்தியம் பிடிச்சிடும் ஆமாம், மிருதுளாவும் உன்னை மாதிரித்தான் ரெம்ப நல்ல பொண்ணு..!
அவள் எவ்வளவு நல்லவளா இருந்திருந்தா அவளை இழந்ததுக்கு நான் பைத்தியம் பிடிச்சு உட்கார்ந்திருப்பேன். நீ அப்பவே முடிவு பண்ணிக்க வேண்டாமா..? அவகிட்ட வந்து இயல்பா பேசு.. பாப்பா உன்னை ரெம்ப தேடுறா... நீ இப்படி தூக்காம தள்ளித் தள்ளி நின்னா அவ மறந்துடுவா தானே..? கருவில சுமந்த தாய் வேணா மிருதுளாவா இருக்கலாம். ஆனால் நீ உயிரில சுமந்த தாய் வானதி..! நீ இப்படி இருக்காதே பெண்ணே.” கல்பனா வந்து வாஞ்சையாய் தலைகோதிய போதும் அமைதியாகவே இருந்தாள்.
ஏனோ மனசு எதை நோக்கியும் நகரவே இல்லை.. விருப்பு வெறுப்பற்ற அமைதி, சிந்திக்காத மூளையைப் போல் சுகமாக இருந்தது.
‘’எனக்கு இந்த அமைதி பிடிச்சிருக்கு அத்தை… என்னை இப்படியே விட்டுடங்க.” என்றாள் அலுப்பாக. முறைத்துப் பார்த்த கல்பனா உள்ளே வேகமாய்ச் சென்று குழந்தையை அள்ளிக்கொண்டு வந்து வானதியின் மடியில் படுக்க வைத்தாள். கள்ளம் அறியாத பிள்ளை உள்ளம் கபடில்லாமல் முகம் பார்த்து சிரிக்க, உள்ளுக்குள் ஏதோ வொன்று உடைந்து உருக்குலைந்தது..!
‘’அம்மா.” என்றது அந்த அன்பின் பூச்செண்டு. கண்களை கசக்காமலே கண்ணீர் வழிந்தது..!
‘’ஏன்மா, நீ மாடிக்கு தாய்ச்சிக்க வரல...” என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அவள் விக்கித்து நிற்க, கல்பனா வேதனையில் அழுதே விட்டார்.
ஒரு பெண்ணாய் இந்த நிமிசம் வானதியின் நிலை அவர் அறியாததா..? ஆனால் அதை அவள் முன்னே காட்டினால் அவள் இன்னுமின்னும் அல்லவா நொறுங்கிப் போவாள்..!
ஐந்து நிமிட இடைவெளியில் வெளியில் வந்த மிருதுளா, வானதியின் மார்பில் சாய்ந்து தன்னால் பேசிக் கொண்டு இருக்கும் மகளையும், சோர்ந்து இருந்த வானதியையும் பார்த்தாள். ஏனோ ஆலகால விஷமாய் சிருஷ்டிக்கவே பட்டு இருந்த உறவுமுறையே ஆனாலும், வானதியை வெறுக்க அவளுடைய மனசு ஒப்பவே இல்லை.
இவள் மட்டும் கட்டிக் காப்பாத்தி தந்திருக்கா விட்டால், இப்போது இருக்கும் எதுவுமே இல்லாமல் போயிருக்கும்..! காற்றுக்கு அசையும் சுடரை உள்ளங்கையில் அணை கட்டி காப்பாற்றி, இருண்ட வீட்டுக்கு ஒளியாகவே இருந்திருக்கிறாள்.
‘’என்ன மிருதுளா..?” என்றார் கல்பனா.
‘’பாப்பாக்கு சாப்பாடு ஊட்டணும் அத்தை..! அதான்.” என்றாள் தயக்கமாக. வேகமாய் குழந்தையை அத்தையிடம் தந்தாள் வானதி நிமிர்ந்து பார்க்காமலே. இரவல் மூச்சு எத்தனை நாளைக்கு உதவப் போகிறது..!
அவளின் உணர்வைச் சரியாக உணர்ந்த மிருதுளா மென்மையாகச் சொன்னாள்,
‘’இல்ல அத்தை சாப்பாடு ஊட்டணும் நேரம் ஆச்சு அதான்.” கல்பனாவிற்கு நன்றாகவே புரிந்தது. நெருப்பில் பூப் பூத்தால் அதற்கு செடியா பொறுப்பு.இயல்பாக பேசுகிறதெல்லாம் இயல்பில்லாத உறவு முறைக்கு இணக்கமாக இருக்காது தான். அதில் யார்மீதும் குற்றமில்லை.
‘’நீ இப்போ இயல்பா இருக்கப் போறியா இல்லையா வானதி..? உன்னைப் பார்த்தா எனக்கு ரெம்ப ரெம்ப கோபமா வருது.. உன்னை மாதிரித்தான் மிருதுளாவும். வருத்தப்பட்டா தான். ஏன் இந்த விசயத்துல உன் அளவிற்கு அவளுக்கும் தானே பாதிப்பு இருக்கு..! அவள் இயல்பாகலயா..? நீ மட்டும் ஏன் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கே வானதி..?” கல்பனா அவளை மீட்டெடுக்கத்தான் பேசினார். ஆனால் அந்த வார்த்தைகள் சூட்டுக்கோலால் அவள் நெஞ்சில் சுரீரென கோடிழுத்தது போல் இருந்தது.!
நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் நீரால் நிறைய, தவித்துப் போனார் கல்பனா.
‘’அம்மாடி அழுகாத அம்மாடி..!” அவள் தலையை நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள, வேகமாக விலகி அமர்ந்தாள்.
‘’என்னுடைய இழப்பு என்னோட வலி..! ஒரு இடைவெளிக்குப் பிறகு வந்த மிருதுளாவுக்கு விட்டுப் போன எல்லாமே திரும்ப கிடைச்சிருச்சு. எதையும் இழக்கல அத்தை. என்னைத் தவிர அவங்க வாழ்க்கையில பெருசா இடறும் இல்ல. ஆனால் நான் எல்லாம் இழந்துட்டேன். மனைவிங்கற மரியாதையை, அம்மாங்கற அடையாளத்தை, இந்த வீட்டு மருமகள்ங்கிற அந்தஸ்த்தை எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா இழந்துட்டேன்.. இத்தனை நாள் அனுபவிச்சது எதுவுமே எனக்கானது இல்ல அந்த நிஜம் என் நெஞ்சில் அறையுது அத்தை, என்னை யார் கூடவும் ஒப்பிடாதீங்க. என்னை என் போக்கில விட்ருங்க. அடிபட்ட பறவை தன்னைத்தானே சிகிச்சிக்கிற மாதிரி, என் வலியை நான் சமாதானம் சொல்லி மீண்டு வர்றேன். விட்ருங்க.” தலையை உதறிக் கொண்டு உள்ளே எழுந்து போனாள்.
தூணாய் துரும்பாய் ஊனாய் உயிராய் அந்த வீட்டில் இருந்த வானதி, இப்போது அங்கே பூஜையறையில் அøந்தாடும் சுடராய் இருந்தாள்.
அத்தனை பேருக்கும் அவளிடம் அன்பிருந்தது. ஆனால் முன்புபோல் அத்தனை இயக்கத்திற்கும் அவள் அவசியம் தேவைப்படவில்லை..!
இறந்து மீண்டதால் அவள் இருப்பாதாரம் நிரூபிக்க, ஆதார் கார்டு வாங்க, வேறு ஏதேனும் அரசாங்க நடவடிக்கைகள் இருக்கிறதா என்று ஆராய மிருதுளாவும் நந்தாவும் அடிக்கடி வெளியில் செல்ல நேர்ந்தது.
வெளியில் கிளம்பும் போது வானதியின் கையில் குழந்தையைத் தர, தான் கோயிலுக்கு போக வேண்டும் என்று சொல்லி பார்த்துக் கொள்ள மறுத்து விட்டாள். நந்தா அவளின் அமைதியை சுமக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்..!
அருகில் இருந்த கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று நேரம் காலம் தெரியாமல் அமர்ந்து கிடப்பாள். பலநேரம் விக்கியோ, நந்தாவோ வந்துதான் அழைத்துப் போவார்கள்..!
‘’அண்ணீ, என்னாச்சு அண்ணி ஏன் இந்த அமைதி.” விக்கி கேட்டபோது சிரித்துக் கொண்டே அமைதியைத் தரித்துக் கொண்டாள்.
‘’அங்கே எதுவும் மாறல அண்ணி..! உளவியல் தெரிஞ்ச நீங்களே இவ்வளவு சுணங்கிப் போகலாமா..? கஷ்டமா இருக்கு அண்ணி. பழையபடி நீங்க மாறணும்..! நந்தா ரெம்ப ரெம்ப நல்லவன் அண்ணி. அதை நான் சொல்லித் தான் நீங்க புரிஞ்சுக்க வேண்டிய கட்டாயத்துல இல்ல. உங்க குழப்பத்தில என்ன நியாயம் இருக்கோ, அதே நியாயம் நந்தாவுடைய அன்பிலும் இருக்கும்..! ” விக்கி பேசிக் கொண்டே வருவான்.
எல்லாமும் எல்லோர்க்கும் புரிந்துபட வேண்டிய கட்டாயம் இல்லை தான். சில பிரத்யேகங்களின் வலியும், அவசியமும், வாசமும் மற்றொருவரால் அத்தனை எளிதாய் அடையாளம் காணப்பட்டு விட முடியாதுதான்.
அதே வீட்டில் தான் இருந்தாள். அடிக்கடி கவனிக்கபடாத மேற்சுவர் போல் அத்தனை பேரையும் அரவணைத்துக் கொண்டு அங்கேதான் இருந்தாள்.
அதுவொரு வெள்ளிக் கிழமை..! கல்பனா விக்கியுடன் பேங்க்க்கில் வேலை இருப்பதாய்ச் சொல்லிவிட்டு நகர, மிருதுளா சமையலில் மும்முரமாக இருந்தாள்.
என்னதான் பிணக்குகள் இல்லாமலே இருந்தாலும், எப்படி இந்த மாறுபட்ட உறவு நிலையில் இருக்கும் இரு பெண்கள், இயல்பாக உறவாட முடியும்..? ஒருவருடைய இயக்கத்தை மற்றவர் சுமுகமாக ரசிக்க முடியும்..? சினிமாவிலேயே இதெல்லாம் சாத்தியமாகத போது, இயல்பு வாழ்க்கையில் எப்படி நடக்கும்..?
ஆனால் இருவருமே மென்மையான புரிதல் உள்ளவர்கள் என்பதால், பெருவாரியான நேரங்களில் விலகி நிற்கவே கற்றுக் கொண்டு இருக்கிறார்கள் உள்ளபடி..!
மிருதுளா சமையலில் இருக்க, வானதி அறைக்குள்ளே அமர்ந்து இருந்தாள். இளம் வயதுதான் பொறுப்புகள் குறைந்து போனதால், இருப்புகள் அவஸ்தையாய் இருந்தது. சும்மா இருப்பவனின் பொழுதுகள் எத்தனை சுவாரஸ்யமற்றது என்று அறிந்தே இருக்கிறாள் தான்..!
அறை வாசலில் வந்து நின்றாள். பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்த தபஸ்வி நிமிர்ந்து பார்த்து முகமெல்லாம் பூரிக்க சிரிக்க, இத்தனை நாள் இடுப்பை விட்டு இறக்காமல் வளர்த்த வானதியின் தாய்மை குழந்தையை சுமக்காததில் வலித்தது..!
‘’அம்மா... வா...” வானதியை நோக்கி கை நீட்ட, அவள் இதயமே இளகி வயிற்றுக்குள் வழிந்து போனதுபோல் துயரம் அடிவயிற்றைக் கவ்வ, அப்படியே நெகிழ்ந்து போய் நின்றாள்.
‘’அம்மா சமையல் பண்ணிட்டு இருக்கேன்..! வந்துடுவேன் தபுமா..! நீ விளையாடிட்டு இரு.” மிருதுளா குரல் மட்டும் தந்து குழந்தையை சமாதானப்படுத்த முயல, குழந்தையை நோக்கிச் செல்ல அடியெடுத்த காலை அந்தரத்தில் நிறுத்தி வைத்தவள், அப்படியே நின்றாள். இந்த அழைப்பு அவளை நோக்கி வந்திருந்தாலும், இந்த அழைப்பில் அவளுக்கான உரிமம் அவளைப் பொறுத்த வரைக்கும் காலாவதி ஆகிவிட்டது.
அறைக்குள் மீண்டும் சென்றவள் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். இந்த சிறிய இடைவெளியிலேயே சுமக்க முடியாமல் இருக்க, மீதி நாட்களை எப்படி கடப்பது..?
கோயிலில் நடை சாத்தி இருந்தது. அடுத்த திறப்பு மாலையில் தான். உட்கார இடமில்லை. கால் போன போக்கில் நடந்து கொண்டே இருந்தவள் வீட்டுக்கு திரும்பிய போது நடையில் நிறையவே செருப்பு கிடந்தது.
இன்று வீணாவின் கல்லூரியில் ஃபேர்வெல் டே..! முடித்துவிட்டு திரும்பிய போது தோழிகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தாள். இதற்குமுன் அப்படி அழைத்து வந்த பழக்கமில்லை என்பதால், வானதிக்கு யாரையும் பார்த்த நினைவில்லை..!
நடையில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நகர, அவளைப் பார்த்ததும் தோழிகளின் முகத்தில் சின்ன ஆச்சர்யம் உதிக்க, வீணாவை திரும்பிப் பார்த்தார்கள்..
‘’இவங்க யாருடி..?” என்றாள் தோழியில் ஒருத்தி. சட்டென்று வீணாவின் முகமும் தர்மசங்கடத்தில் சுண்டிப் போக, என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள். வானதிக்கு சபையில் நிர்வாணம் உடுத்தியது போல் இருந்தது.
”அண்ணி தான்டி...” என்றாள் அடிக்குரலில்.
‘’என்ன அண்ணியா..? உங்க சின்ன அண்ணனுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு..? எங்ககிட்ட எல்லாம் சொல்லல...” பிரச்சனைகளை சந்திக்காதவர்களுக்கு பிரச்சனையில் இருப்பவர்களின் மூலம், புரிவதில்லை/
‘’இல்ல... சின்ன அண்ணனுக்கு கல்யாணம் ஆகல, இவங்க அண்ணின்னா அண்ணி மாதிரித் தான்..! சரி மாடிக்கு வாங்க, மொட்டை மாடியில மாடித் தோட்டம் போட்டு இருக்கோம். பட்டன் ரோஸ் இருக்கு பார்க்கிறீங்களா...” பேச்சை மாற்றி அவர்களை கிளப்பிக் கொண்டு மாடிக்கு வீணா நகர, நின்ற இடத்திலேயே ஆணி அடித்தது போல் நின்ற வானதியைப் பார்க்க பார்க்க மிருதுளாவிற்கே பாவமாக இருந்தது..!
தன்னுடைய உயிர்தெழுதனினால் முற்றாய் பாதிக்கப்பட்டது வானதிதான் என்று நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் என்ன செய்ய இருக்கட்டும்’ என்று இடம்விட்டு நகர்ந்து கொள்ள இதொன்றும் இருக்கை அல்லவே... பறவைக்கு முளைத்த இறக்கை அல்லவா...? இறக்கை இழந்தபிறகு எப்படி உயிர்க்க..?
ஆனாலும் வானதியின் அமைதியும், கையறு நிலையும் ஏனோ மனசிற்குள் அழுத்தமான வலியைத் தந்தது. அள்ளிக்கொள்ள இயலாமல் தபஸ்வியைத் தள்ளி நின்று ரசிப்பதைப் பார்த்து ஏனோ அவளுடைய தாய்மையை சூறையாடிக் கொண்டது போல் தவித்தாள் மிருதுளா.
”...கனவில் வந்தவர் யாரென கேட்டேன்...
கணவர் என்றார் தோழி...
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
மறைவது ஏன் தோழி...
இளமையெல்லாம் கனவு மயம்
இதில் கரைந்தது சிலகாலம்..
தெள்வும் அறியாது, முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்...”
21
மருத்துவமனை வளாகத்தில் வந்து நின்ற நிமிசம், வானதிக்குள் ஏதேதோ எண்ணங்கள் கிளர்ந்து வந்தது. புங்கை மர நிழலில் ஒருநாள் இவளுக்காக நந்தா காத்திருந்த காட்சிகள் மனக்கண்ணில் பழைய படமாய் விரிந்து வியாபித்தது.
அங்கே விழுந்து கிடந்த மரத்தின் நிழலில், நந்தாவின் அடையாளம் இன்னும் துருத்திக் கொண்டு துளிராய் இருந்தது. அதே இடத்தில் வந்து ஐந்து நிமிடங்கள் நின்று இளைப்பாறிக் கொண்டாள்.
மர நிழல் போர்வை போத்தியது மன நிழல் அவனை நினைக்க வைத்தது இரண்டு வருடங்களில் அங்கே நிறையவே மாறி இருந்தது சூழல்..! பழகிய முகங்கள் பலரைக் காணோம். தெரிந்த சிலர் அவளைக் கண்டதும் ஓடோடி வந்தார்கள் பேசிச் சிரிக்க.
வெகு நாளைக்குப் பிறகு மனம் திறந்து பேசியது போல் உணர்ந்தாள். டாக்டர் ஜோத்வாவை பார்க்க ஏற்கனவே அனுமதி வாங்கி இருந்தாள். அழைப்பு வந்ததும் உள்ளே போனாள். அவர் மாறாமல் அப்படியே இருந்தார்.
அந்த பார்வையின் கம்பீரமும் சேவையில் உத்வேகமும் துளிகூட மட்டாகாமல் அப்படியே இருந்தார்.
‘’சொல்லுங்க வானதி, எப்படி இருக்கீங்க..? ஹனிமூன் ப்ரியட் ஓவராகிடுச்சா.” என்றார் அழகான புன்னகையோடு, பதில் புன்னகை செய்து கொண்டாள்.
‘’மறுபடியும் ட்யூட்டியில ஜாயிண்ட் பண்ண விரும்பறேன் டாக்டர்.” என்றாள் அழுத்தமாக. புருவம் தூக்கி ஆச்சர்யப்பட்டார்.
‘’எவிரிதிங் ஓகே..?” என்றார் கூர்மையாக பார்த்தபடி.தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.
‘’வாழ்க்கை நம் போக்குல நகர்றது இல்லையே டாக்டர். அது போக்குல நம்மை இழுத்துப் போகும் போது எதிர் வினை ஆற்றாமல் அமைதியா நீர் போக்கில் போறது தான் புத்திசாலித்தனம்” ஏதோ வருத்தம் இருப்பதை அவரால் உணர முடிந்தாலும், அடுத்தவர் வாழ்க்கையில் நிற்க வேண்டிய எல்லைகளை அறிந்தவர் என்பதால் அமைதியாக இருந்தார்.
‘’மறுபடியும் எனக்கு போஸ்டிங் தேவைப்படுது டாக்டர்..! முடியுமா..?” என்றாள் கனிவாக.
”வித் ப்ளசர் வானதி..! உங்களை மாதிரியான நேர்த்தியும் நேர்மையுமான உழைப்பாளிக்கு எந்த நிறுவனமும் காத்து தான் இருக்கும்..!
ஆனால் முடிவுகளை எடுக்கும் முன்னே அந்த முடிவு இப்போத் தேவையான்னு முடிவு செய்துக்கங்க..! எல்லாம் ஏற்பாடு செய்துட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்றேன். அப்போ நீங்க வந்து என்னைச் சந்திங்க.” விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்தாள். காலார நடந்தாள்... தொலைத்திருந்த பாதைகள்... நடந்தே கரைத்திருந்த தூரங்கள் அவை..! வேடிக்கை பார்த்துக் கொண்டே ஹாஸ்டல் இருக்கும் தெருவை அடைந்தாள். ஹாஸ்டல் இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருந்தது.
காரிடரில் நின்று வேடிக்கைப் பார்த்தாள். ஆயிரமாயிரம் நினைவுகள் அலைமோதிக் கொண்டு வந்தது..!
நினைவுகள் மட்டும் விந்தையான கண்ணாடி சிரித்த நிகழ்வுகளை எண்ணி கண்ணீர் சிந்த வைக்கும், அழுத நினைவுகளை எண்ணி சிரிப்பாடி நினைக்க வைக்கும்..! கேட்டைத் தாண்டி நடந்து போக வழியில்லாமல் அமைதியாக நின்றாள்.
பின்னால் கார் ஹாரன் சத்தம் கேட்டு யதேட்சையாக திரும்ப நந்தா கண்ணாடியை இறக்கி தலை நீட்டிப் பார்த்தான்..!
பக்கத்தில் வந்து கார் நின்று, கதவைத் திறக்க, அமைதியாக ஏறிக் கொண்டாள். மெயின் ரோட்டைத் தொட்டதும் மெதுவாக முகம் திருப்பிப் பார்த்தான். சலனமேயில்லாமல் பாதையில் பார்வையை பதித்து இருந்தாள்.
‘’இன்னும் தெளியலியா வானதி..? இன்னும் எத்தனை நாளைக்கு சிந்தனையிலேயே உன்னை நீயே தண்டிச்சுக்கப் போறே..?” என்றான் பரிதவிப்பாய். மௌனமாய் அமர்ந்து இருந்தாள். அந்த அமைதி தான் அவனை அணு அணுவாய் சிதைத்துக் கொண்டு இருந்தது.
‘’நான் ஒரு யோசனை சொல்லட்டுமா..! இது யோசனை தான். இதுக்கும் மனசை போட்டு வருத்திக்க கூடாது...” பீடிகை பலமாக இருந்தது. அப்படியென்றால் இதயத்தில் வெடிச்சத்தம் உறுதிதான்..!
‘’உனக்கு மிருதுளா கூட அந்த வீட்டில ஷேர் பண்ணிக்கிறது கஷ்டமா இருந்தா தனியா வீடு பார்த்துக்கலாமா..?” நிதானமாய் அந்த வார்த்தைகளை அவள் தப்பாய் அர்த்தப்படுத்திக் கொள்வாளோ என்று நிதானித்துத் தான் பேசிக்கொண்டு இருந்தான்.
‘’எனக்கு மட்டும் தனி வீடா நந்தா..? அப்போ நீங்க எங்கே இருப்பீங்க நந்தா..? அத்தை, வீணா, விக்கி எல்லாம் எங்கே இருப்பாங்க நந்தா..? நான் சுமக்கல, அவளுக்காக பால் சுரக்கல. ஆனால், எந்த இடத்துல அம்மாவின் அன்பைத் தர தவறி இருக்கேன் தபுவுக்கு, அவ எங்கே இருப்பா நந்தா..? சொல்லுங்க...” ஆக்ரோசமா அவன் சட்டையைப் பற்றி உலுக்க, அப்படியே விக்கித்துப் போனான் நந்தா.
வேகமாய் காரை ஓரமாய் ப்ரேக் அடித்து நிறுத்தி இருக்க, உதடு துடிக்க உணர்ச்சி பிளம்பாய் அமர்ந்திருந்தவள் அவன் பார்வைக்கும் ஸ்பரிசத்துக்கும் புதிதாய்த் தெரிந்தாள்..!
‘’வானு.. நான் சொல்ல வர்றதை நீ புரிஞ்சுக்கல…”
‘’என்ன சொல்ல வர்றீங்க..? நான் உங்க சின்ன வீடா..? அதான சொல்ல வர்றீங்க..? மிருதுளா வந்துட்டதால நான் சட்டப்படி உங்க மனைவி இல்ல,அதான சொல்ல வர்றீங்க..‘’ மெல்ல தலையில் அடித்துக் கொண்டு அழ, நந்தா உள்ளபடி குற்றவுணர்வில் அமர்ந்து இருந்தான்..!
இந்த கண்ணீரும், அவலமும் எத்தனை கையறு நிலையில் தன்னை அவள் உணர்ந்து கொண்டு இருக்கிறாள் என்று சொல்லாமல் சொன்னது..! சரியாக்க முனைந்து மேலும் மேலும் பிரச்சனையை ரணமாக்குகிறோம் என்று உணர்ந்தான்.
அவளே அழுது ஓயட்டும் என்று காத்திருந்தான். பக்கத்தில் அவளை இழுத்து கர்ச்சீப்பால் முகத்தை அழுந்த துடைத்து விட்டான். டாஷ்போர்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கத் தந்தான்..! அமைதியாக வாங்கிக் கொண்டாள்.
நெருங்கி அமர்ந்து அவளின் முகம் நோக்கி குனிய, சட்டென்று விலகி அமர்ந்தாள். கண்களில் இனம் புரியாத வெறுமை. தவித்துப் போய் பார்த்தான்.
‘’என்னாச்சு வானு..! அடம்பிடிக்காத ப்ளீஸ். ஏன் என்னை விட்டு வில்புல்லா தனியா போறே..? இதுல என் தப்பு என்ன இருக்கு..?” என்றான் பரிதாபமாக.
‘’யார்மேலயும் தப்பில்லை நந்தா..! ஏனோ நீங்க தொடும் போது ரெம்ப அன்னியத்தனமா இருக்கு..! இது சரியாகுமான்னு தெரியல. முறைப்படி கல்யாணம் பண்ணிட்டுத்தான் வந்திருக்கேன். ஆனால் எல்லார் முன்னாடியும் கம்பீரமா நான் நந்தா ஓய்ப்’னு சொல்ல எதுவோ தடுக்குது..!
எனக்கு மட்டுமல்ல இந்த உணர்வு… வீட்டில எல்லாருக்கும் தான். வீணா அவங்க தோழிகள் முன்னாடி இதை பிரகடனப்படுத்த தயங்கின போதுதான் எனக்கு ரெம்ப ரெம்ப வலிச்சது..!
ஏன் நந்தா பேசாம நான் இங்கிருந்து போயிடவா..? எனக்கு உங்க அனுமதி வேணும். குறைந்தபட்சம் உங்களுக்காவது நிம்மதி கிடைக்கும் இல்ல...” அப்பாவியாய் அவள் கேட்டபோது அவனுடைய ஆன்மாவே வேரோடு சாய்ந்தது போல் இருந்தது..!
‘அத்தனை பலகீனமானதாக அவர்களின் காதல்..? கணவன் மனைவிக்கான எந்த லவுகீகங்களுமே இல்லாமல், அன்பை மட்டுமே கொண்டு விளைந்த உறவல்லவா..? எத்தனை எளிதாக கேட்கிறாள் போய் விடவா என்று...’
கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.
அவன் தோள் சாய்ந்து கண்ணீர் ஆற்றச் சொல்லி உணர்வு கட்டளை இட்டது. ஆனால் உள்ளுணர்வு அவள் இன்னொருத்திக்கும் கணவன் என்று எள்ளிச் சிரித்தது..!
‘’உனக்கு அங்கே என்ன பிரச்சனை வானதி..? நீ என்னை விட்டு போகணும்னு யோசிக்கிற அளவுக்கு..! இப்பவும் சொல்றேன் நீ என்மேல
சத்தியம் பண்ணி இருக்கே என் அனுமதி இல்லாம நீ எங்கேயும் போக மாட்டேன்னு...! மெல்ல மெல்ல கடந்து வா. எதுவும் அங்கே மாறிடல. நீ அதே வானதிதான். அந்த வீட்டுக்கு..! வானத்துல இருந்து வந்த சிண்ட்ரல்லா தேவதை”
கண்களை மூடி மென்மையாய் தலை அசைத்தாள் வேலைக்கு போகப் போவதாய்ச் சொன்னாள். நந்தா நிஜமாகவே சந்தோசப்பட்டான்.. வேறெந்த பேச்சும் பிரத்யேகமா இருவருக்கும் நடுவில் இல்லை..!
மீண்டு வருவாள்... மீண்டும் வருவாள்... என்ற நம்பிக்கை மட்டும் மனதில் இருந்தது..!
ஆனால் ஒற்றைப் பார்வையில் காதல் வளர்த்த நூலம்படை அன்பு எங்கோ பிசகிப் போனது போல் தான் தோன்றியது. யோசனையாய் அமர்ந்திர்ந்த நந்தாவின் முன்னே கல்பனா வந்து நிற்க, நிமிர்ந்து பார்த்து சோர்வாய்ச் சிரித்தான்..!
‘’என்னம்மா, ஏதாவது பேசணுமா..?” என்றான்.
‘’என்னவோ பேசணும்னு தோணுது..! ஆனால் அது என்னன்னு தான் எனக்குத் தெரியல..!” என்றார் அப்பாவியாக.
‘’எல்லாரும் என்ன பண்றாங்கம்மா..?”
”அவங்க அவங்க வேலையில இருக்காங்க..! வானதி வழக்கம் போல ரூமுக்குள்ள அடைஞ்சு கிடக்கிறா..! நந்தா ரெம்ப குற்றவுணர்வா இருக்குய்யா..! பட்டாம் பூச்சி மாதிரி இருந்த பொண்ணை, நான் தான் வலுக்கட்டாயமா உன்னுடைய வாழ்க்கையில கொண்டு வந்து சேர்த்தேன்..! என்ன நடந்தாலும் அதுக்கு முடிவில எனக்கு குற்றவுணர்வா மட்டும் இருக்குதேய்யா அது ஏன்..?”
அம்மா அப்பிராணியாய்க் கேட்க, நந்தா விரக்தியாய்ச் சிரித்தான்.
”ஏன்னா நாமயெல்லாம் இயல்பிலே ரெம்ப ரெம்ப நல்லவங்கமா. அதனால தான் நம்மகிட்ட மட்டும் மனசாட்சி உரத்த குரல்ல பேசுது..! இதுல வேடிக்கை என்ன தெரியுமமா..? தன்னுடைய வாழ்க்கையில வர்ற பொண்ணு நல்லவளா இருக்க மாட்டாளானு தவம் இருக்கிற ஆண்களையும், வந்தவ சரியில்லையேன்னு வேதனைப் படற ஆண்களையும் தான் நாம பார்த்து இருக்கோம்..! ஆனால் என் வாழ்க்கையில் வந்த இரண்டு பொண்ணுகளுமே தேவதைகள். ஆனாலும் நான் சந்தோசமா இல்லை. இதுதான் விதியோட விளையாட்டு.” நியாயத்துக்கே நியாயமான வார்த்தைகள்.
அழிக்க வில்லன்கள் இல்லாவிட்டாலும், விதி நடத்துகிற சதுரங்க விளையாட்டில், காய்கள் அதன் போக்கில் தான் நகரும். இதுதான் காலதேவனின் கட்டளை..!
வானதி மருத்துவமனை செல்ல ஆரம்பித்த பிறகு கொஞ்சம் மனம் மிருதுவானது போல் உணர்ந்தாள். உளவியல் ரீதியான சம்பாசணைகளில் ஈடுபடும் போது அது தனக்கும் ஒத்தது என்று மனதிற்குள் நெட்டுரு போட்டுக் கொண்டு விட்டுக் கொள்வாள்..!
சின்னதாய் சிரிக்கவும், முகத்தில் தெளிவை விதைக்கவும் கற்று இருந்தாள். தபஸ்வியை முழுசாய் தள்ளி வைத்து துடித்துக் கொண்டு இருந்த மனசு, தன்னையறியாமல் அவளை நெருங்கி முத்தமிட்டு தன்னை முழுதாய் இழந்துவிடாமல் தற்காத்துக் கொள்ள இந்த மாற்றம் ஒத்து வந்தது..!
‘அம்மா...’ என்ற குழந்தையின் அழைப்பில் தனக்கும் பங்கிருப்பதாய் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். மாற்றம் நிகழவில்லை. ஆனால் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள ஆரம்பித்து இருந்தாள். இவளின் இயல்பான சிரிப்புக்கு அந்த மொத்தக் குடும்பமே தவம் இருக்கிறது என்று அறிந்து தன்னை தட்டி, தானே விழி திறந்தாள்..!
மருத்துவமனை சென்றிருந்தாள், ட்யூட்டி முடிந்து ஓய்வறைக்குத் திரும்பியவள், அப்படியே கண்கள் சொருக, பக்கத்தில் இருந்த டாக்டர்கள் பதறிப் போனார்கள்..! பத்து நிமிடம் கூட முழுசாய் தேவைப் படவில்லை..! சாக்லெட்டை உரித்து சரளா டாக்டர் வாயில் திணித்தபோது கண்ணீர் முட்டியது. இனிப்பாய் தொண்டையில் அழுகை வந்தது..!
‘’கங்கிராட்ஸ் வானதி..! அம்மாவாகப் போறே” சொன்னபோது அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது..!
மூன்று மாத தபஸ்வியை கையில் ஏந்திய அந்த கணமே அவள் நிஜத்தில் அம்மாவாகி விட்டாள். இப்போது பிரசவிக்க போகிறாள்.தவிர அந்த பதவியை அடையப் போகிறாள் என்று அர்த்தம் இல்லை..!
லேபில் சென்று வேகமாய் டெஸ்டுக்கு கொடுத்தாள். நகம் கடித்துக் கொண்டாள். இத்தனை நாள் இக்கெட்டெல்லாம் மறந்து மனசு இன்பமாய் தவித்தது..!
நந்தாவிடம் பேசவேண்டும் போல் இருந்தது. ரிசல்ட் இருபது நிமிசத்தில் வர, கைகள் நடுங்க வாங்கிக் கொண்டாள். அறுபது நாள் கர்ப்பம் என்று உறுதிவர உருகிப் போனாள்.
அந்த நிமிசம் என்னனெனவோ தோன்றியது, அத்தையைப் பார்த்து மடி கவிழ்ந்து சிரிக்க வேண்டும்… நந்தாவின் காதல் வழியும் கண்களைப் பார்க்க வேண்டும்... எல்லாவற்றையும் மீறி தபுவை அள்ளி அணைத்து வயிற்றோடு இறுக்கிக் கொள்ள வேண்டும்..!
எல்லாவற்றையும் மறந்தாள். வேகமாய் விடுப்புச் சொல்லி விட்டு சுவீட் கடைக்கு ஓடினாள். கை நிறைய ஸ்வீட்டுகளை அள்ளிக் கொண்டாள். தபுவுக்கு ஆள் உயர கரடி பொம்மையை வாங்கிக் கொண்டாள்..! ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
சின்ன கல்பாத்தித் தோட்டத்தைக் கடந்து மெல்ல நடக்க, அடைக்கப்பட்ட கதவுகளுக்கு உள்ளே சிரிப்புச் சத்தம், சிணுங்கல் சத்தம்... வாசலில் நந்தாவின் கார் நின்றது..! நடையில் அவன் செருப்புக் கிடந்தது..!
யூகிக்க ஒரு நிமிசம் கூடத் தேவைப்பட வில்லை..! கணவன் மனைவிதான் நியாயமே நியாயமான உறவுதான்...! மட்டில்லா காதல் தான்.. இவளை அணைக்கும் போதுகூட அவளைத் தேடிய அளவிற்கு மெய்யன்பின் காதல் தான். அவர்களுக்குள் இருக்கும் சிரிப்பும் இணக்கமும் யாருக்காகவும் ஒத்தி வைக்கப்பட வேண்டியதும் அல்லவே.
ஆனால் இங்கே வெளியில் ஒரு உள்ளம் இருக்கிறது மிருதுளாவிற்கு நியாயத்தை சொன்னாலும் அவளின் அந்தரங்கம் இந்த சின்னச் சிரிப்புக்கே அதிர்கிறதே இதை எப்படி விவரிக்க..?
குப்பென்ற பூத்திருந்த சந்தோசத்தில் வந்தவளுக்கு, உள்ளுக்குள் ஒரு வலிமலை வளர்ந்து அவள் நுரையீரலை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டு இருந்தது. அடிவயிற்றை நீவிக் கொண்டாள். அழவேண்டும் போல் இருந்தது. பகிர்ந்து கொள்ள வந்த செய்தியை யாரோ பகிஸ்கரித்துப் போனது போல் உணர்ந்தாள்.கையில் இருந்த பொம்மையை வாசலில் வைத்துவிட்டு வந்தவழியே தளர்ந்து நடந்தாள்..!
மிருதுளா தந்த மோரைக் குடித்தவன் எழுந்து கொண்டான்.
‘’ஒரு மோர் தர்றதுக்கு இத்தனை பில்டப்பு. ஏன் மிருது..! ஒரு பென் டிரைவ் மறந்துட்டு போயிட்டேன்.. அதை எடுக்க வந்தேன். அது குடிக்கத் தர்றேன், இதைத் தர்றேன்னு பெருசா பில்டப் பண்ணிட்டு கடைசியில தந்தது அரை டம்ளர் மோரு..! உன்னையெல்லாம் என்ன செய்றது..? அதுசரி அம்மா பாப்பாவை தூக்கிட்டு எங்கே போய் இருக்காங்க.” காலி டம்ளரை அவளிடம் நீட்டிக் கொண்டே கேட்டான்.
‘’அவங்களுக்கு ஏதோ திங்ஸ் வாங்கப் போய் இருக்காங்க..! கூடவே சின்ன மேடத்தையும் அழைச்சிட்டு போய் இருக்காங்க.”
தலையாட்டியபடி கதவு திறக்க, சாய்ந்திருந்த கரடி பொம்மை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது, நந்தா துணுக்குற்றுப் போய் மிருதுளாவைப் பார்க்க. அவள் தெரியவில்லை’ என்று தோள் குலுக்கினாள்.
எடுத்துப் பார்த்தான் ஸ்டிக்கரில் விலைக்கு கீழே, கடை முகவரி இருக்க, அது வானதியின் மருத்துவமனைக்கு அருகில் இருக்கிறது என்றறிய, அவனுக்குள் விளக்க முடியாத குழப்பம் வந்து முன் உச்சியில் முடிச்சு போட்டுக் கொண்டு நின்றது..! என்ன நினைத்துக் கொண்டு இங்கிருந்து சென்றிருப்பாள் எண்ணும்போதே இதயம் வலித்தது..!
”,,,கடவுள் தந்த
இரு மலர்கள் கண்மலர்ந்த
பொன் மலர்கள் ஒன்று பாவை
கூந்தலிலே ஒன்று பாதை
ஓரத்திலே...”
22
கிருஷ்ணர் ஊதிய குழலில் ராதை பேதையாகி மயங்கி நிற்க, அந்தக் காட்சியை கண்ணால் பார்த்துக் கொண்டே சம்மணமிட்டு தரையில் அமர்ந்திருந்தாள் வானதி.
வலக்கரம் அடிவயிற்றில் மென்மையாய் வருடிக் கொண்டு இருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பிருந்த வேதனை இல்லை. இதயத்தை விட்டு எதுவோ இறங்கி ஓடிவிட்டது போல் ஒருவித இயலாமை மட்டும் மனசிற்குள் வளையமிட்டுக் கொண்டே இருந்தது.
எதுவுமே தவறில்லை தான்… நந்தாவின் காதலின் முழு அடையாளமே மிருதுளா மட்டும் தான். இவள்பால் அவனுக்கு ஏற்பட்ட அன்புகூட, இரக்கத்தில் சுரந்ததே அன்றி மனமயக்கத்தில் பிறந்தது அல்ல. அப்படி இருக்க, இயல்பாய் அவர்களிடம் இருக்கும் நெருக்கம் வானதியை எந்த இடத்தில் அசைக்கிறது..?
கோயில் தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.உள்ளுக்குள் பூபூத்த சந்தோசங்கள் அத்தனையும் தன்னால் கரைந்து போய் இருந்தது..! ஒருவித தனிமை... இனம் புரியாத வெறுமை.
கோயிலுக்கு பலர் வந்து போனார்கள். நொந்து போன இவள் முகத்தைப் பார்த்து, கொஞ்சமாய் இரக்கம் தந்து போனார்கள். தெரியாத முகங்களை பார்ப்பது ருசியாக இருக்கும்போல் இருந்தது. கருப்பு வண்ணம் பூசி வானம் இருட்டைக் காட்டி மிரட்டத் தொடங்க, கைகளை ஊன்றிக்கொண்டு எழுந்து கொண்டாள். மெல்ல தெருவில் இறங்கி நடந்தாள். மரித்துக் கிடந்த அலைபேசி வைபரேசனில் குதித்துக் கொண்டு இருந்தது. எடுத்துப் பார்க்க இஷ்டமேயில்லை. யாருக்கு தேவைப்படப் போகிறோம்..?’ என்ற விரக்தி அவளை முழுதாய் தின்று விட்டு இருந்தது.
வழியில் இருந்த ஒரு கடை வாசலில் நின்றாள். அங்கே ஷோகேஸில் இருந்த பொம்மை கவனம் ஈர்த்தது..! தம்பூராவில் தலை சாய்த்து வெள்ளுடை துறவியாய் பக்த மீரா. அந்த முகத்தில் வழிந்த கனிவும், அதன் பின்னாக ஒளிந்து கிடந்த நெகிழ்வும் அவள் அடிவயிற்றை பிரட்ட, விலைகேட்டு வாங்கிக் கொண்டாள்.
காலையில் இருந்து சாப்பிடாத வயிறு பசிக்கவே இல்லை..! வீட்டை சமீபிக்கும் முன்னே விக்கி பைக்கில் வந்து நின்றான், பதட்டமான முகத்தோடு.
‘’எங்கண்ணி போனீங்க..? வீடே களேபரமாயிடுச்சு..! கால் பண்ணாலும் எடுக்கல. இப்பத்தான் கிருஷ்ணர் கோயிலுக்கு போய் பார்த்துட்டு வர்றேன். ” கேட்டவனை அழுத்தமாக பார்த்தாள். பதில் பேசாமல் நடக்க. கொஞ்சம் குழப்பமாகிப் போய் பின்னால் வந்தான்.
‘’என்னாச்சு அண்ணி எதுவும் பேசாம போறீங்க..?”
‘’என்ன பேசச் சொல்றே..? நான் எங்கே போனாலும் உங்க வீட்டில எல்லார்கிட்டயும் அனுமதி வாங்கிட்டுத்தான் போகணுமா..? எனக்கு போக வேண்டிய இடத்துக்கு நான் தானே போகணும்..! உங்க எல்லாருக்கும் சேவகம் பண்றது மட்டும் என் வேலை இல்ல”
தெருவிளக்கின் அடியில் நின்ற விக்கி இருள் முழுங்கிய இரவாக அப்படியே சமைந்து
போய் இருந்தான்.என்னவார்த்தைகள் இவை..? இதுவரைக்கும் நுகராத வார்த்தைகள்..! வானதியின் வாயில் இருந்து இதுபோன்ற வார்த்தைகள் கேட்டதே இல்லை
‘’வண்டியில ஏறுங்க அண்ணி.”
”வேண்டாம் விக்கி நான் நடந்தே வர்றேன்.” வார்த்தை மட்டும் தான் பின்னால் வந்தது. அவள் நடந்து கடந்து போய் இருந்தாள்.
வீட்டிற்கு வந்தபோது குடும்பமே வாசலில் அவளுக்காக காத்திருந்தது..! பேத்தியோடு வாசலில் நின்ற கல்பனாதன் முந்திக் கொண்டு வந்து முன்னால் நின்றார்.
‘’எங்கே போனே வானதி..? ஆறு மணிக்கு வீட்டுக்கு வர வேண்டிய பொண்ணு ஒன்பது மணி ஆகியும் வராட்டி என்னன்னு நினைக்க..? கால் பண்ணா எடுக்க மாட்டியா..? உனக்கு இப்பல்லாம் என் மேல பயம் இல்லாமப் போயிடுச்சு..! இரு இரு நான் மாமியார் பவிசை காட்டுறேன். இந்தா உன் பொண்ணைப் பிடி..! எவ்வளவு நேரத்துக்குத் தான் நான் தூக்கி வச்சிட்டு நிற்க” வழக்கமான வம்போடு கல்பனா நிற்க, அழுந்த முகம் பார்த்தாள். கை நீட்டி இவள் அழைக்கும் அந்த சொற்ப நொடிக்காக காத்திருந்த தபஸ்வியின் குலோப் ஜாமூன் விழிகளை நிமிர்ந்து பார்த்தாள்.
கண்களை மூடி தன்னைச் சமன் செய்து கொண்டாள்.
‘’எனக்கு வேலை இருக்கு. என்கிட்ட தராதீங்க. அவங்க அம்மா இருப்பாங்க அவங்ககிட்ட கொடுங்க. அப்புறம் இனிமேல் என் பொண்ணுன்னு சொல்லாதீங்க..! ‘’ சுரீரென இருந்தது வார்த்தைகள். கண்ணாடிப் பாத்திரம் தரையில் விழுந்து நொறுங்கியது போல்..!
நந்தா அதிரவே இல்லை. மதியத்தில் இருந்து அவனுடைய மனம் யோசித்துக் கொண்டிருந்தது தான்..! ஆனால் சந்திக்கும் போது ரெம்பவே வலித்தது.
‘’என்ன நந்தா இது..?” கல்பனா பக்கத்தில் வந்து கைகளை விரிக்க, மகளை வாங்கிக் கொண்டவன், அம்மாவை தோளோடு சேர்த்துக் கொண்டான்.
அறைக்குள் சென்றவள் முதலில் கைப்பையில் இருந்து மீரா சிலையை எடுத்து கட்டிலுக்கு அருகில் இருந்த டேபிளில் வைத்தாள். ஒரு கணம் அந்த முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். பெருமூச்சு தன்னால் பிரவாகமானது.
குளியலறைக்குள் வந்து புத்துணர்வாகிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை..! டைனிங் டேபிளுக்குச் சென்று தனக்குத் தேவையானதை எடுத்து வைத்துச் சாப்பிட ஆரம்பிக்க, கல்பனா மகனின் முகத்தில் விடைதேட முனைந்து தோற்றார்.
‘’அம்மா...” மறுபடியும் மீட்டிய வீணை நாதம், அடிவயிற்றில் எதையோ சுரக்க வைத்தாலும் இரக்கமில்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
சாப்பிட்டு முடித்து நிதானமாக நந்தாவின் முன் வந்து நின்றாள். அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. குழந்தையின் கைகளைப் பற்றி அழுந்த அதன் உள்ளங்கையில் முத்தம் விதைத்தாள்.
‘’இதப்பாரு தபுமா, நான் உன் அம்மா இல்ல, சித்தி..! இனிமேல் அம்மான்னு கூப்பிடக் கூடாது சரியா..?” அன்பும் அழுத்தமும் மிளிர்ந்த குரலில் சொல்ல, நந்தாவின் முகம் கோபத்தில் சிவந்து போனது.
‘’போதும் வானதி..! இத்தோடு நிறுத்திக்கலாம். நீ பாட்டுக்கு உளறிட்டு இருக்காதே. குழந்தைங்ககிட்ட எதை பேசணும்னு நான் சொல்லித்தான் நீ தெர்ஞ்சுக்கணுமா...?”
‘’தப்பில்ல நந்தா.! இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு அவளுக்கு புரியத்தான் போகுது..! அப்போ அவளா புரிஞ்சுட்டு முகம் சுளிக்கறதுக்கு முன்னே நாமே புரிய வச்சிடலாம்” என்றாள் வெடுக்கென்று.
‘’இதுல முகம் சுளிக்க என்ன இருக்கு..? இங்கே யாரும் யாரையும் திட்டமிட்டு ஏமாத்தல வானதி.. இயல்பை புரிஞ்சுக்க..!”
‘’எனக்கு புரிஞ்ச வரையில் எல்லாமே போதும்..! இனி நான் யாருன்னு தபுவுக்கு புரிய வைங்க..! கூத்துல வேசம் கட்டி அடவு கட்டின காலமெல்லாம் முடிஞ்சு போச்சு. இப்பத்தான் எனக்கு கூத்தாட வேண்டிய அவசியமில்லையே.என்ன ஒரே திருப்தி நான் உங்க கூத்தியாள்னு புரிஞ்சுக்க அவசியம் இல்லாம. இதை என் கழுத்துல கட்டி இருக்கீங்க..! அந்த வரைக்கும் நான் தப்பிச்சேன்.” கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து நீட்ட, விக்கித்துப் போனது நந்தா மட்டுமல்ல, வீட்டில் இருந்த மற்றவர்களும் தான்..!
‘’வானதி. என்ன வார்த்தைகள் பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா..?” என்றான் அழுத்தமாக,
‘’எல்லாம் தெரியுது. இனியாவதுஎன்னை யோசிக்கிறேன்” முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
கண்களை மூடிக் கொண்டான். குழந்தையோடு மெல்ல தன்னுடைய அறைக்குத் திரும்பினான்.
வானதியும் படுக்கையில் வந்து விழுந்தாள். மீரா அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மீராவின் கையில் இருந்த தம்பூராவை மெல்ல மீட்டி பார்த்தாள். சத்தமில்லாத ஒரு சலனம் ஏற்பட்டு அடங்கியது.
அடிவயிற்றை நீவிக் கொண்டாள். தன்னுடைய ஆனந்தம் பகிரப்படாமலே போனது என்றபோது மிடறு விழுங்கிக் கொண்டாள் ஆழமாக.
மேகங்கள் மென்மையானது என்று யார் சொன்னது..? ஒரு துண்டு மேகம் உள்ளபடி பத்து யானையைப் போல் கனக்குமாம்..! அப்படி இருக்க மென்மைக்கு அதை யார் உவமை சொன்னது.
வானதியும் மேகத்தைப் போல் கனமாய் மிதந்து கொண்டு இருந்தாள். உருமாறிய ரணங்கள் அவள் உள்ளத்தில் வலியாய் இறங்கிப் போனதோ என்ற சந்தேக ரேகை சஞ்சலப்படுத்தும் அளவுக்கு அவளுடைய மனசு இருந்தது.
இளகி மடங்கும் ரப்பர் தான் நெருப்பில் உருகி உருமாறி குளிர்ந்த பிறகு நெகிழும் தன்மையற்று நிமிர்ந்து நிற்கும்..! நாணல் மாறிப் போய் நங்கூரம் ஆவதுபோல் இருக்கும் அதனுடைய தோற்றம்..! அப்படித்தான் இருந்தது வானதியின் நிலைமை..!
அவளா இது..? அத்தனை இதயங்களிலும் அன்பைச் சமைத்த அற்புத மனுசியான அவளா இது..? கோபம் அறியாத முகமும், குளிர்ந்து குழப்பமற்ற நெற்றியும், தடுக்கி விழுந்தவர்களைத் தாங்கிக் கொள்ள கையேந்தும் இருந்த அன்புமாய் இருந்த அவளா அது.?ஒட்டாமல் இருந்தாள். இன்னும் சொல்லப்போனால் இத்தனை நாள் முகத்தில் மண்டியிட்டுக் கிடந்த குழப்பம் எல்லாம் முற்றாய் முடிந்து போய் இருக்க, அமைதியான இறுக்கம் அவள் முகத்தில் இருந்தது.அத்தனை பேரையும் விலக்கி தனக்குத்தானே ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு.சந்தியா சொன்ன சேதியில் வீடே பூரித்துப் போனது..! ஸ்வீட்டை எடுத்து அவள் வாயில் திணித்து சந்தோசத்தில் திணற வைத்தாள் மிருதுளா. தன்னுடைய அறைவாசலில் அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் வானதி.
‘’அக்கா, உங்களை ஒரு அம்மாவா யோசிக்ககூட முடியல. இன்னும் விளையாட்டுப் பிள்ளையாத் தான் தெரியறீங்க.” வீணா சொன்னபோது முதன்முறையாய் ஒரு பெண்ணின் வார்த்தைக்கே சிவந்துபோனாள் சந்தியா.
‘’அச்சோ..! எதுக்கு இத்தனை ஆர்பாட்டம் பண்றீங்க..! ஜஸ்ட் ரெண்டு மாசம் தான ஆகி இருக்கு..! ஆனால் டெஸ்ட் ரிப்போர்ட் வந்ததும் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருந்தது. எனக்குன்னு சந்தோசங்களை பகிர்ந்துக்க யார் இருக்கா உங்களை எல்லாம் தவிர, அதான் ஓடி வந்தேன்.” எப்போதும் படபடக்கும் சந்தியாவின் முகம்கூட தாய்மையின் கனிவை வாங்கி இருந்தது.
வானதி மெல்ல தன்னுடைய வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அதே இரண்டு மாதங்கள் தான் அவள் அடிவயிற்றின் பூப்பந்திற்கும்..!
விலகி நிற்கின்ற வானதியின் அருகில் வந்து தோளில் கை போட்டுக் கொண்டாள்..! அவள் தானே தன்னுடைய வாழ்க்கையை அத்தனை அக்கறையையாய் சரியாக்கி தந்தவள்..! மெல்ல அவள் முகத்தை தன் புறமாக திருப்பி புருவத்தை நெறித்து உயர்த்தி அவளைப் பார்த்தாள்
‘’சொல்லுங்க மேடம்..! நீங்க எப்போ குட் நியூஸ் சொல்லப் போறீங்க..? வரவர உனக்கு எதுலயும் ஆர்வம் இல்லாமப் போச்சு, இதுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்னா முதல்ல ஒரு குழந்தையைப் பெத்துக்க.” சந்தியாவின் வார்த்தைகளை ரசிக்க மாட்டாமல் மிருதுளா சமையலறைக்குள் நகர. அதை கவனித்த வானதி, தோளில் இருந்த கையை வேகமாக எடுத்து விட்டு விலகி நின்றாள்.
‘’என்னாச்சு வானு..?”
‘’எனனாகணும்..? அதை நீதான் சொல்லு..! நான் அமைதியா தானே நிற்கிறேன்..? என்னை வச்சு இந்த கேலியும் கிண்டலும் இப்போ எதுக்கு..?”
‘’என்னடி இது..? நான் என்ன இப்போ நேத்தா உன்கிட்ட இந்த மாதிரி எல்லாம் பேசறேன்..? ”
‘’ஆனால் இனி பேசாதே..! எந்த கேலியும் பேசாதே..! என் வாழ்க்கை கேலி கூத்தானதுல உனக்கும் பங்கு இருக்கு..! உனக்கு ஆகமாட்டாத சாப்பாட்டை நீ என் பக்கம் நகர்த்தும் போதே நான் யோசிச்சு இருக்கணும்..! தவறிட்டேன். என் வாழ்க்கையை தவற விட்டுட்டேன். ”
வானதிக்கு இப்படிக்கூட பேச வருமா..? சந்தியா உறைந்து போய் நிற்க, சில நாட்களாய் கண்கூடாக இதையெல்லாம் காணுகின்ற மற்றவர்களுக்கு அந்த வார்த்தைகள் அதிர்வுக்கு பதிலாய் பெரும் சோர்வைத் தான் தந்தது.
திரும்பி கல்பனாவைப் பார்க்க, அந்த பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் தலை தாள, வானதியின் புஜத்தைப் பற்றிக் கொண்டு அறைக்குள் அழைத்துப் போனாள் சந்தியா.
‘’என்னாச்சுடி என்னவோ போல பேசற..? இதை வச்சு உன்னை நாங்க வேற மாதிரி யோசிக்கணுமா..?”
‘’அது உன் சவுகரியம். என் பிரச்சனை இல்லை சந்தியா..” என்றாள் கையைக் கட்டிக் கொண்டு.
சந்தியாவால் ஒரு அதிர்ச்சியையே தாங்கிக் கொள்ள இயலவில்லை என்னும் போது… அடுத்தடுத்து நிகழும் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்ள முடியும்..?
”வானதி நிஜமாவே உனக்கு என்னதான் ஆச்சு..? நீ இப்படியெல்லாம் நடக்கிறதைப் பார்த்தா மிருதுளா வந்ததுல உனக்கு இஷ்டமில்லைன்னு நினைக்க வைக்காதா..? நீ அப்படிபட்டவ இல்லைடி.” சொன்னவளின் நம்பிக்கையில் நெஞ்சுக்குழியில் ஒரு நெருப்புக் குமிழ் எழுந்தாலும் அமைதியாகவே அமர்ந்து இருந்தாள்.
‘’குழப்பத்துல இருக்கியாடி வானதி..,” மெல்ல அவள் கன்னம் தீண்டி அன்பு செய்ய திம்மென்றே அமர்ந்து இருந்தாள். பக்கத்தில் அமர்ந்து அவள் உள்ளங்கையை பற்றிக் கொண்டாள்.
‘’எனக்கு உன்னைத் தெரியும். நீ இயல்பான மனுசி இல்ல. உளவியல் நிபுணர். மத்தவங்களின் மன ஓட்டத்தை உன்னால உணர முடியும்..! உன்னுடைய செயலும் வார்த்தையும் இங்கே என்ன வகையான தாக்கத்தை தருமென்று உனக்குப் புரியும்..! அப்படி இருந்தும் நீ இப்படி நடந்துக்கறேன்னா, வேண்டாம் வானதி நல்லவர்களுக்கு இடையே நடக்கிற போர் நல்ல விளைவைத் தராது.”
சந்தியாவின் கைகளை விலக்கி விட்டாள். மெல்ல எழுந்து நின்றாள்.
‘’ நீ கிளம்பு சந்தியா”
‘’கிளம்பத்தான் போறேன்..! நீ போட்டுட்டு இருக்கிற முகமூடியை கழட்டி வீசு..! எதுவா இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..! எல்லாம் சரியாகும். குழப்பமான மனநிலையில் எடுக்கிற முடிவுகள் எதுவும் சரியா இருக்காது..! நந்தாவை விட ஒரு சிறப்பான துணை உனக்கு கிடைக்காது..! யோசிச்சு யோசிச்சு தன்னுடைய வாலுக்கு தானே தீ வச்சுகிட்ட வானரம் ஆயிடாத..!” அழுத்தமாக சொல்லிவிட்டு வெளியில் சென்றவளை, பார்த்தபடி இன்னும் அழுத்தமாக தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.
வரும்போது இருந்த உற்சாகம் முழுசாய் வடிந்து போய் இருக்க, சந்தியா அழுத்தமான மனநிலையை உணர்ந்தாள்.
கண்ணீல் நீரோடு வந்து நின்ற கல்பனாவை தோளோடு தோளாய் சேர்த்துக் கொண்டாள்.
‘’அவ குழப்பத்துல இருக்கா ஆன்ட்டி. மீண்டு வருவா..! இத்தனை பேர் உணர்வுகளை பாதுக்காத்த அவளால் தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள்ள கொண்டு வர முடியாதா என்ன..? பொறுத்திருக்கலாம். எத்தனை காலம் மேகத்துக்குள்ள மறைஞ்சு நிலவு ஆட்டம் காட்டும்..? வெளியே வந்து தானே ஆகணும். அவளும் மீண்டு வருவா...”
தன்னுடைய காரை நோக்கி நகர்ந்தாள். ஆனால் நிலவு வருவதிற்குள் பொழுது விடிந்து விட்டால், நிலவின் வெளிச்சம் மற்றவர் கண்களுக்கு புலப்படாமலே போய்விடும் என்பதை சந்தியா உணரத் தவறிப் போய்விட்டாள் பாவம்..!
”...அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள்
ஏனோஅவளுடைய தலைஎழுத்து மன்னனை மணந்தாள்
அது வரை தான் தன் கதையை என்னிடம் சொன்னாள்
நான் அதில் இருக்கும் என் கதையை
உன்னிடம் சொன்னேன்
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்கதையை கூறவா ,,,”
23
நாட்கள் நலிந்து மெலியத் தொடங்கி இருந்தது..! வானதி முற்றாக மாறி இருந்தாள். வீட்டில் அத்தனை பேரிடமும் இணக்கம் குறைந்திருந்தது. உறக்கமும், உணவும் மட்டுமே வீட்டில் நடந்தது அன்றி எதுவுமே பேச்சு வார்த்தைகள் இல்லை..!
கீழ் தளத்தில் இருந்த சின்ன அறையை தன்னுடைய உபயோகத்திற்காக எடுத்துக் கொண்டு அங்கே இடம் பெயர, கல்பனா உள்பட அத்தனை பேரும் துடித்துத் தான் போனார்கள்.
‘’நீ நடந்துக்கறது உனக்கு சரியா இருக்கா வானதி..? இங்கே யார் உன்னை என்ன செய்தா..! நீயா உன்னை தண்டிச்சுகிட்டு எங்க கண்ணுல ரத்தக் கண்ணீர் வர வைக்கப் பார்க்கிறே..? இது நல்லதுக்கில்ல..! ‘’ கல்பனாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை..!
தன்னுடைய உடைமைகளுடன் அவள் இடம் பெயர்ந்த போது நிஜமாகவே நந்தாவின் மனசு அத்தனை வலித்தது. கட்டிலும் மெத்தையும், கபோர்டும் வாங்கிக் கொண்டு வந்து வைத்தான்..!
அமைதியாக மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தாள். அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கத் தவிர்க்கும் அவளுடைய ஒத்துழையாமையில், உண்மையில் உள்ளம் கன்றித்தான் போனான்..!
‘ எதற்காக இத்தனை விலகி நிற்கிறாள்..? அந்த சிரிப்பும், எந்த சூழ்நிலையிலும் இளைப்பாறும் குறும்பும், நேசமும் அத்தனை பேரையும் நேசிக்கும் பாசமும் இனி இல்லவே இல்லையா...’ என சிந்தனையே அவன் இதயத்தை அறுத்தது..!
சொற்ப நிமிசம் அங்கேயே நின்று பார்த்தான். அவள் முகம் நிமிர்த்தி பார்க்காததால், பெருமூச்சை இரைத்துவிட்டு வெளியில் வந்தான். தன்னுடைய மௌனத்தால் அத்தனை இதயங்களையும் ரணப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்ற வலியே இன்னும் இன்னும் அவளை சோர்வாக்கியது..!
உள்ளுக்குள் பூத்திருந்த பூவின் குறிப்பை தன்னுடைய சொல்லுக்குள் கொண்டு வராமல் மௌனம் காத்தாள். அடிக்கடி மசக்கையின் நோவில் சுருண்டு அறைக்குள் முடங்கிக் கொண்டாள். அதற்கு இந்தத் தனிமை அவளுக்கு ஏதுவாய் நின்று, சாதுவாய் தலை நீவியது..!
அவளுடைய மௌனங்கள் கோபமாக புரிந்து கொள்ளப்பட்டது. பல நேரங்களில், நம்முடைய உணர்வு மற்றவர்களிடம் வேறு ரூபத்தில் சென்று சேர்கிறது..! அந்த உணர்வு மாறாட்டங்களும் பலநேரம் சவுகரியமாகத்தான் போய் விடுகிறது..!
கோபப் போர்வை போர்த்தி தன்னுடைய இயலாமையை தூங்க வைத்தாள்..! நீர்கூட காற்றைக் குடித்தால் தான் நீர்க்குமிழி ஆகும்..! அவள் நினைவுகள் கூட மீட்டெடுத்தால் தான் மறுமூச்சு வாங்கும்..!
ஒரு பெண்ணின் மன உணர்வுகளை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள இயலும்தான். ஆனால் ஒரு பெண்ணின் உணர்ச்சிகளின் வரையறைகளை அவளையன்றி யாராலும் வரையறுத்து சொல்லிவிடவே முடியாது..!
இந்த குடும்பத்தை தாங்கிப் பிடித்த தேர்காலின் அச்சாணி முறிந்துதான் போய்விட்டது..! மீண்டும் அந்தநாள் வந்துவிடாதா என்று ஏங்கிக் கொண்டே இருந்தான் நந்தா..!
அன்று நந்தா பேங்கில் இருந்து திரும்பி வந்தபோதே மணி ஏழைக் கடந்து இருந்தது..! அணைத்து வைக்கப்பட்டு இருந்த டி.வி.யை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் கல்பனா..!
இன்னும் வானதி வீட்டுக்கு வந்திருக்கவில்லை..!
‘’நந்தா மணி எட்டாகப் போகுது..! இன்னும் வானதி வீட்டுக்கு வரல. ரெம்ப பதட்டமா இருக்குய்யா...” என்ற அம்மாவை அயர்ச்சியாய் நிமிர்ந்து பார்த்தான்.
‘’வந்துடுவாம்மா சின்ன குழந்தையா என்ன..?”
‘’ஆனா, அவ சின்னக்குழந்தையை விட மோசமான மனநிலையில இருக்காடா..! அது நமக்குத் தெரியுமே..! அடுக்கடுக்காய் அவ வாழ்க்கையில் அடிகள். அம்மாவுடைய இழப்பை ஜீரணம் பண்ணி முடிக்கறதுக்குள்ள இன்னொரு மன உளைச்சல்..! அவளும் என்னதான் சாமி பண்ணுவா..!
யோசிச்சுப் பாரு..! இந்த நிலைமை எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் தானே..? சும்மா வைத்தியத்துக்கு வந்த பொண்ணை வலுக்கட்டாயமாய் உன்னுடைய வாழ்க்கையில் கொண்டு வந்தது நான் தான்..! ‘’ கல்பனா விசும்ப, நந்தா ஆற்றாமையாய் அருகில் வந்து அம்மாவின் தோள் தொட்டான்..!
மிருதுளாவின் முகம் நொடியில் கசங்கியது..! இறங்கட்டுமா என்று கேட்டு கண்ணீர் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது..!
‘’என்னம்மா இது..? வானதி அப்படியெல்லாம் யோசிகிறவ இல்லம்மா. இப்போ இருக்கிற இந்த மனநிலை மாறும்..! மீண்டு வருவாமா.”
‘’எல்லாத்துக்கும் காரணம் நான் வந்ததுதான் இல்லய்யா நந்தா...” மிருதுளா அழுகையுடனே கேட்க, இன்னும் நொந்து போனான்..!
‘’அய்யோ, மிருதுளா நீயும் தயவு செஞ்சு என்னுடைய உணர்வுகளை புரிஞ்சுக்காம நடந்துக்காதே..! இந்த சம்பவத்துல நீயும் வானதியும் சமதூரத்தில தான் இருக்கீங்க..! மனரீதியா நீ இப்படியொரு நிகழ்வை எதிர்பார்த்தே தான் வந்திருக்க..! அதனால உனக்கு ஆற்றாமையா இருந்தாலும் அதிர்வு குறைவாகத்தான் இருக்கு..!
ஆனால் அவள் எல்லாத்தையும் சந்திக்கிற மனுசிதான்..! அவ ஏன் இப்படி நடந்துக்கறான்னு எனக்கும் தெரியல..! ஒருவேளை தபுவை அவளால உன்கிட்ட இழக்க முடியாத அழுத்தமா..? தெரியல..! ,முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் மாதிரித்தான் மிருதுளா வானதி, பாப்பாவை வளர்த்தது..!
ஒருமுறை ஃபாமில் அம்மாங்கிற இடத்துல உன்பேரை எழுதினதையே அவளால தாங்க முடியல..! அப்படிப்பட்ட அவளுடைய மனசு தபுவை தக்கவைக்க முடியாத ஆற்றாமையில தவிக்குதா...”
நந்தாவின் முகம் வருத்தம் மிகுந்திருக்க, தபஸ்வியை இடுப்பில் சுமந்திருந்த மிருதுளாவின் கரம், இன்னும் இன்னும் இறுக்கியது..!
குழந்தையை தன் தோளோடு சேர்த்து இன்னும் தனக்குள் அழுத்திக் கொண்டாள்..!
‘’இனி ஒருகாலும் அந்த உரிமையை நான் விட்டுத் தரமாட்டேன். உலகத்துல யாருமே பங்கு போட்டுக்க முடியாத ஒண்ணையே நான் பங்கு போட்டுட்டேன்..! ஏன்னா அது எந்த தப்பினாலும் நடந்த விசயமில்லை, விதி..! வேறென்ன சொல்ல..? ஆனால் என் தாய்மை, எனக்கான பொக்கிசம்..! என் குழந்தைக்கு அம்மாங்கிற ஸ்தானத்தை நான் யார் கூடவும் பங்கு போட்டுக்க மாட்டேன் நந்தா..! தபு எனக்கு மட்டும் தான் குழந்தை..!
ஒருவேளை உங்ககூட தனியா இருக்க முடியலைன்னு அப்படி மூர்க்கமா நடந்துக்கறாங்களோ..?அவங்க விருப்பப்பட்டா தனியா வீடெடுத்து தங்க வைங்க..! ‘’ சொன்னபோது வேதனையில் அவள் குரல் இடறி பிசக, வெறுப்பின் உச்சத்தில் அவள் முகம் பார்த்தான்.
தன் தாயின் முன்னிலையில் தன் அந்தரங்கத்தை மனைவியே ஜலதரங்கம் வாசித்தது அவனுக்கு உண்மையாகவே வலித்தது..!
‘’மிருதுளா, உனக்கு அதெல்லாம் புரிய நியாயமில்லை..! ஏன்னா நீ எனக்கு இயல்பான காதல் மனைவி..! ஆனால் வானதிங்கிற மனுசிக்கும் எனக்கும் நடுவில இருந்த புரிதலும், நட்பும் நீ அறிஞ்சிருக்க நியாயமில்லை..! நீ சொன்னியே தனிமை, அந்த தனிமையில ஒரு அறையில சகல உரிமையோடும் இருந்தும் நாங்க நண்பர்களாகவே கடந்து வந்திருக்கோம். அது உனக்குத் தெரியுமா..?” உணர்ச்சி மிகுதியில் அவனுடைய உதடுகள் துடிக்க, மிருதுளா அப்படியே அயர்ந்து போனாள்..!
‘’ சாரி, நந்தா நான் தப்பாச் சொல்லல..
‘’நீ தப்பாவே சொன்னாலும் நான் கவலைப்படப் போறதில்லை..! தன்னுடைய ஏக்கத்தையும் கவலைகளையும் தனக்குள்ள போட்டு முழுங்கிட்டு இந்த குடும்பத்தை உள்ளங்கையில தாங்கினா..!
அவளுக்கு தர மாட்டேன்னு நீ சொல்ற உன்னுடைய குழந்தை. அவமட்டும் காப்பாத்தி தந்திருக்காட்டி நீ ஆளுமை செலுத்த உன்கிட்ட தங்கி இருக்காது..! இதெல்லாம் அவளுடைய மகிமைன்னு நீ நினைக்க நான் சொல்லல, அவளும் ஒரு மனுசின்னு நீ உணரணும்னு சொல்றேன்.” காட்டமாய் வந்த பதிலில் மிருதுளா லேசாய்த் தடுமாறிப் போனாள்.
‘’ஐ’யம் சாரி நந்தா.”
‘’நீ சொல்ற தனிமைக்காக ஏங்கிற மனுசியும் அவ இல்ல அதுக்காக ஆர்பாட்டம் செய்ற சராசரியும் அவ இல்ல உள்ளுக்குள்ள எதையோ வச்சுகிட்டு புளுங்கிட்டு இருக்கா. அதைத்தான் என்னால தாங்க முடியல.” நிஜமான வருத்தத்தில் சொன்னான்..!வானதியின் எண்ணுக்கு அழைக்க அலைபேசியை எடுக்க, வாசலில் ஆட்டோ வந்து
நின்றது..! சோர்வு பூசிய முகத்தோடு வானதி இறங்கி வர, பதறிப் போனார் கல்பனா..! வேகமாய் சென்று கைத்தாங்கலாய் அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்துவிட்டு தண்ணீர் எடுத்து வர சமையலறைக்குள் ஓட,
அவள் எதிரில் வந்து கைகளைக் கட்டிக்கொண்டு தீர்க்கமாய் பார்த்தபடி அமர்ந்து இருந்தான் நந்தா..!
துவண்டு போய் இருந்தாள்..! கர்ப்பத்தின் பலஹீனம் அவளை புரட்டி எடுக்கிறது என்பது அவள் மட்டுமே அறிந்தது..! அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் பிரயாசை இல்லாமல்,அமர்ந்திருந்தவளைப் பார்க்க பார்க்க ஆற்றாமை பொங்கிக் கொண்டு வந்தது..!
‘’ இன்னும் என்னவெல்லாம் செய்வே வானதி..? நான் என்ன தப்பு செய்தேன்..? உன்னை ஏமாத்தினனா..? இல்லை பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டனா..? நடந்தது யாருமே எதிர்பார்க்காத விபத்து..! உன்னைப் போல பாதிக்கப்பட்ட மிருதுளா இந்த விசயத்தை இயல்பா கடந்து வரும்போது நீ மட்டும் ஏன் வானதி இப்படி நடந்துக்கற..? என்னை நீ தவிர்க்கும்போது என் மனசு தகிக்குது வானதி..! உனக்கு ஏன் அது புரியல” அவன் கெஞ்சலும் கோபமுமான குரலில் கேட்க,
வெகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவனுடைய முகம் பார்த்தாள்..! அதில் கோபமும் இகழ்வும் மண்டிக் கிடந்தது..! நிமிர்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு, கைகள் இரண்டையும் சோபாவின் இருபுறமும் பரவவிட்டுக் கொள்ள, அதிர்ந்து போனான் நந்தா,
‘’என்ன சொல்ல வர்றீங்க மிஸ்டர் நந்தா..! நானும் உங்ககிட்ட கேட்கறேன் நீங்க பதில் சொல்லுங்க..! எனக்கு ஒரு முன்னால் காதலனோ கணவனோ இருந்து இக்கட்டுல தொலைஞ்சு போய் இப்போ திரும்பி வந்தா, அவரையும் சேர்த்துட்டு இந்த வீட்டில வாழ அனுமதி குடுப்பீங்களா மிஸ்டர் நந்தா..?” தோரணையா அமர்ந்து கொண்டு அவள் கேட்ட கேள்வியில் நந்தா அதிர்ந்து போய் இருக்கையை விட்டு எழுந்து நின்றான் என்றால், கல்பனாவின் கையில் இருந்த தண்ணீர் சொம்பு தரையில் கண்ணீர் விட்டுச் சிதறியது..!
”இரண்டாவதா இன்னுமொரு விசயம் சொன்னீங்க இல்ல..! உங்களுடைய காதல் மனைவி, இயல்பா எடுத்துக்கிட்ட விசயத்தை நான் எடுத்துக்கல அதானே..? நான் இப்படி ஒதுங்கிப் போகாம என்னுடைய உரிமை போராட்டத்தை நடத்த ஆரம்பிச்சு இருந்தால், அவங்க அடுத்த கட்ட நகர்வுக்கு போயிருக்க வேண்டி இருந்திருக்கும்..! நான் தான் வலிய வில்லி அவதாரம் போட்டுக்கிட்டனே... அப்போ அவங்க ஆட்டோமேடிக்கா நல்லவங்க ஆயிடுவாங்க தானே...” கம்பீரமாய், தோரணையாய் பேசிய அவளின் ஆளுமை எல்லாம் கடைசி வார்த்தையில் அடிபட்டுப் போக, உடைய காத்திருந்த உறுதியை இறுகப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்..!
வலிக்க வைத்து விட்டாள்..! ஆனால் அவன் வசமிழந்து போய் விடவில்லை. நேரே அவள் முன்னாக போய் மண்டியிட்டு அமர்ந்தான். அவளின் சோர்ந்த முகமும், களைத்த கண்களும் அவனை என்னவோ செய்தது..! அவள் உயிருக்குள் மலர்ந்திருக்கும் தன்னுடைய உயிரின் வாசத்தை அவனால் உணர முடிந்தது..! ஆனால் அதுதான் என்று இனம் காண முடியவில்லை..!
அவள் முந்தானையை எடுத்தே அவளின் களைத்த முகத்தை துடைத்து விட்டான். உள்ளுக்குள் கரைந்து கொண்டு இருந்தாலும், உறுதியில் கல்லுக்கு சமமாய் தன்னைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்..!
‘’என்ன பண்ணுது உடம்புக்கு..? என்கிட்ட அடம் பண்ணாத வானதி..! நீ எத்தனை கரியை பூசிட்டு வந்து நின்னு பயமுறுத்த நினைச்சாலும்., உன் நிழலுக்கு கூட கருப்பு ஏறாது வானதி..! என்னை விட யாருக்கு உன்னைப் புரியும்” அவன் ஒவ்வொரு வார்த்தைகளும் குளிர் மூச்சாய் சுவாசத்தை நிறைத்தது.! இதற்குமேல் என்னதான் வேண்டும் ஒரு மனுசிக்கு..? சக உயிரால் புரிந்து கொள்ளப்படுவதைத் தவிர பேரானந்தம் என்னதான் இருந்துவிடப் போகிறது..?
தலையைக் குனிந்து கண்ணீரைச் சமாதி வைத்தாள். கல்பனா நிலைமையை உணர்ந்து மெல்ல அங்கிருந்து நகர, இன்னும் அவளை நெருங்கி முழங்காலிட்டு அமர்ந்தான். ஆறடி ஆணான அவன் மூன்றடியாய் தன்முன்னே மடங்கி தொழுது கொண்டு அமர்ந்திருப்பது அவளை என்னவோ செய்தது.
‘’தப்பு நடந்திருந்தா திருத்திக்கலாம் வானதி..! ஆனால் நடந்தது தவறு..! அதை என்ன செய்து நான் மாத்த..? உன் முன்னாடி மண்டி போட்டு உட்கார்ந்திருக்க இந்த நந்தா, உனக்கு காதலோட எல்லையை காட்டினவனா இல்லாமல் வேணா இருக்கலாம். ஆனால் கண்ணியத்தையும் அன்பையும் நான் காட்டலயா வானதி..? இல்ல, நீ அதை உணரலயா..? என்னை இதுக்கு மேலயும் தண்டிக்காதே வானதி..! நான் ரெம்ப ரெம்ப நொந்து போயிடுவேன்..!” அந்த நடுஹாலில் அத்தனை சூழலையும் மறந்து சட்டென்று அவள் மடி கவிழ்ந்து அவன் அழ, வானதி சுக்கல் நூறாய் நொறுங்கிப் போனாள்..!
”... உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்...”
24
உதிர்ந்து கிடந்த மல்லிகை மொக்குகளை யார் எடுத்து சரம் தொடுப்பது..? நட்சத்திரங்களுக்கு மட்டும் எப்போதும் சருகாகும் வாய்ப்புக்கள் இல்லையோ..? வாடாத பூக்களாய் வாழ்க்கை முழுவதும் சிரிக்கும் நட்சத்திரங்கள், என்றாவது ஒருநாள் எரிநட்சத்திரமாய் வாழ்க்கையை வெறுத்து கடலுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றன..!
இத்தனை வேடிக்கை பார்த்தும் இன்னும் தீராது என்பதுபோல் கண்சிமிட்டிக் கொண்டு இருந்தன நட்சத்திரங்கள் எல்லாம்..! அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாலும் தன்னை தன்னுடைய உடல் நலிவை பலகீனப்படுத்திக் கொள்ளாமல் தான் இருந்தாள் வானதி..!
மருத்துவமனையிலேயே இருப்பதால், அடிக்கடி செக்கப்பிற்கு செல்ல அவளுக்கு வசதியாக இருந்தது..! மூன்றாம் மாசம் என்பதால் குமட்டல் அவளை வெகுவாய் பலகீனப்படுத்திக் கொண்டு இருந்தது. உள்ளபடி அவளுடைய இதயம் நந்தாவின் அருகாமையை நாடித் தவித்தது..!
அவனுடைய தோளில் தலை சாய்த்து, அவன் கைகளைப் பற்றிக் கொண்டு இந்த பொன்னான காலத்தை கடந்து வரவேண்டும் என்ற சராசரி கனவுகள் அவளுக்கும் உதித்துக்கொண்டு தான் இருந்தது..!
ஓய்வறையில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள். வாசலில் நிழலாட தலை உயர்த்திப் பார்த்தாள். சந்தியா..! மார்புக்கு குறுக்காய் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள். முகம் நிமிர்த்திப் பார்த்ததும் இயல்பாய்ச் சிரித்தாள்..! ஆனால் அதற்கு பதில் மொழி பகராமல் சந்தியா சிலைபோல நின்றாள்..!
‘’என்ன சந்தியா இத்தனை தூரம்..? என்னை பார்க்கவா.?”
‘’அதுக்கும் சேர்த்துத் தான்..! செக்கப்பிற்கு உன் ஹாஸ்பிடல் தான் வர்றேன் ரெகுலரா” அருகில் வந்தவளின் வயிற்றில் கைவைத்துப் பார்த்தாள். நெகிழ்வாய் இருந்தது..! தன் உணர்வைத் தானே மீட்டுக் கொண்டாள் அழுத்தமாக..!
கையை விலக்கிவிட்டு அருகில் அமர்ந்தாள். ஒரு வார்த்தையும் பேசாமல் வானதியின் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்..! சில நிமிட குறுகுறுப் பார்வையில் வானதிக்கு லேசாய் வேர்த்தது. எதுவும் இனம்கண்டு கொண்டு வந்திருக்காளோ..?’
‘’என்னடி இப்படி பார்க்கிறே..? இதுவரைக்கும் என்னை பார்த்ததே இல்லையோ..?” என்றாள் மெல்லிய புன்னகையோடு..!
‘’பார்த்திருக்கேன்..! ஆனா வில்லியா இப்பத்தான பார்க்கிறேன்..!” அந்தக் குரலில் வழிந்த அங்கலாய்ப்பில் தன்னை மறந்து வானதியே சிரித்து விட்டாள்..!
‘’யார் வில்லி..? நானா..! அதுக்கெல்லாம் இந்த பிஞ்சு முகம் வொர்த் இல்ல.” சின்னதாய் சிரித்து சூழலை இலகுவாக்கினாள்..!
அவள் வலதுகையை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள் சந்தியா..! அந்த கதகதப்பு அத்தனை இதமாக இருந்தது..!
‘’என்னாச்சு வானதி..? உன்னுடைய மனநிலை எனக்குப் புரியுது.! ஆனால் இது யாரும் எதிர்பார்க்காத சூழல் இல்லையா..? இதை எப்படி பேஸ் பண்ணனும்னு கொஞ்சம் யோசிக்க கூடாதா...”மௌனமே பதிலாக கிடைத்தது.
‘’ஒரு வீட்டில இரண்டு மனைவிகளோடு சேர்ந்து வாழற்து அத்தனை சுலபமில்லைங்கிறது எத்தனை நிஜமோ அத்தனை நிஜம் அது இயலாத காரியமில்லைங்கிறதும்..! கெட்ட சிந்தனையுள்ள பலர் சேர்ந்து வாழற உலகத்தில நல்ல சிந்தனையுள்ள நீங்க எல்லாம் எப்படிடி சேர்ந்து வாழ முடியாமப் போகும்..!”
ஆத்திரமாய்க் கேட்க கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சந்தியாவின் முகத்தை கூர்மையாக பார்க்க ஆரம்பித்தாள்..!
‘’இது உன் இயல்பில்ல..! நாணல் கூட வளையத் தயங்கும்ச நீ அதுக்கு முன்னே வளைஞ்சு நிற்பே..! அத்தனை அன்புள்ளம் உள்ள உன்னால, பிரச்சனையே இல்லாத இடத்தில கற்பனையால பிரச்சனயை எப்படி உருவாக்க முடியும்..? எனக்கு அதுதான் புரியாம இருக்கு..!”
வானதி கண்களை மூடிக் கொண்டாள். சந்தியா பேச இடைவெளி விட்டு அமைதியாக காத்திருக்க, அவள் தோளைப் பற்றி வேகமாய் தன்புறமாகத் திருப்பினாள் சந்தியா.
‘’மௌனம் எல்லாத்துக்கும் பதிலில்லை சந்தியா..! ஆனால் பல பிரச்சனைகள் மௌனமா இருக்கிறதால தான் தீராமல் இருக்கு..! நீ பேசணும். என்கிட்ட பேசித்தான் ஆகணும்.” நட்பின் கரத்தை வழுவில் அவள் மீது விரித்து பதிலுக்கு வலை விரித்திருந்தாள் சந்தியா..!
” நான் அப்படியேதான் இருக்கேன் சந்தியா..!”
‘’அப்புறம் ஏன் நடிக்கிறே..?” கேள்வியில் வானதியே திணறித்தான் போனாள்..!
‘’நான் நடிக்கல சந்தியா இதுதான் இயல்பு. அட்ஜஸ்ட்டபுள் டைப்புங்கிறதுக்கு அர்த்தம், நம்முடைய எல்லா உரிமைகளையும் தியாகம் பண்றதா..? தியாகம் பண்றது ரெம்ப மேலான குணம் தான், ஆனால் செய்றது நாம இருக்கும் போதுதான் அதோட வேதனை தெரியும்..!
இது உணர்வு ரீதியான பிரச்சனை இதை அத்தனை எளிதா கடந்து வரமுடியாது சந்தியா..! அதைச் சொன்னாலும் புரியாது. பார்க்கும் சக்தி இல்லாதவங்களுக்கு எப்படி நிறத்தை வேறுபடுத்திக் காட்டுவே..? அது எப்படி அவங்களுக்கு புரியும்..? நான் அந்த நிலையிலதான் இருக்கேன்..! என்னுடைய உணர்வுகளை கடை விரிக்க எனக்குத் தெரியல…
எழுந்து சென்று ஜன்னலின் அருகில் நின்று கொண்டாள், குளிர்ந்த காற்று உடலில் வருடி. அனல் குறைத்தது..! சொற்ப வினாடிகள் காத்திருந்த சந்தியா எழுந்து தோள் குலுக்கிக் கொண்டாள்.
‘’சரி தப்புன்னு நேர்மை நியாயம் இதெல்லாத்தையும் விட மிகவும் நுட்பமானது அன்பு.! உன்னால அந்த அன்பை கடந்தும் வர முடியாது. நீ தபு மேல வச்சிருக்க அன்பு, சாதாரணமானதில்ல.! சட்டென்னு அந்த குழந்தையை உன்னால பங்கு போட்டுக்க முடியல. அதுதான் பிரச்சனையின் மூலம்..! உணர்ச்சிகளை கையாளும் துறையில இருக்கிற உன்னால முடியாதான்னும் எனக்குத் தெரியல..!
ஆனால் எதையும் உபதேசிக்கறது சுலபம், உத்தேசித்து அதை கடைபிடிக்கிறது ரெம்ப ரெம்ப கஷ்டம்..! எனக்கு அதுவும் புரியுது. ஆனால் மை லவ்லி ப்ரெண்ட், ஒண்ணே ஒண்ணுதான் உன்கிட்ட நான் கேட்கிறதும். சரிபண்ண முயற்சி செய்..! சரிஞ்சு போகாம இருக்க முயற்சி செய். அடிப்படையில நீங்க மூணு பேருமே நல்லவங்க. இதுல யார் தோத்துப் போனாலும், உங்க மூணு பேருக்குமே தோழியான என் நெஞ்சில் தான் உதிரம் வரும்..!” இறுக அணைத்து தோளில் முகம் பொதித்தாள்..!
சிறு நிமிடங்கள், சுகமும் இல்லாமல் துக்கமும் இல்லாமல் கடந்து போய் இருந்தது. வானதியின் கண்களைப் பார்த்தாள்..! பொய்யே பேசத் தெரியாத அந்த கண்களில் புறத்தில் ஒளிந்திருந்த வலியை அவளால் இனம் காண முடிந்தது..!
கணவனை பங்கு போடுவது என்பது சிந்தனையில் சிக்காத வலிதான்... அதுவும் வானதி போல், உறவுகளின் நிழலே படராமல் வளர்ந்தவளின் மனோநிலை
சொல்லில் அகப்படுமா..? ஆனால் நிழலை இழந்து நிறமிழந்து வந்திருக்கும் மிருதுளாவின் துயரமும் லேசானதில்லையே.சந்தியாவாலே இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்ல
இயலவில்லை..! விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்தாள். ஜன்னலுக்கு வெளியே கேள்வியை விதைத்து விட்டு, பார்வையாலே பதில் தேடிக்கொண்டு இருந்தாள் வானத்திலே..!
அந்த நாளும் வந்துதான் போனது..! காற்று வீசி வீசி சந்தனம் கரைத்து காட்டை மணக்க வைக்கும் மாயவித்தை போல், வானதி என்ற மனுசி அந்த குடும்பத்தை மணக்க வைக்க சந்தனமாய் கரைந்து போய் இருக்கிறாள்..!
தபஸ்வியின் மூன்றாவது பிறந்தநாள்..! மிருதுளா காணும் தன் மகளின் முதல் பிறந்தநாள்..! அந்த நாளின் வலி அவளுள், பிரசவித்த நாளின் வலியை நினைவில் கொண்டு வந்து நிறுத்தி, அதைத் தொடர்ந்து நிகழ்ந்து போன அத்தனை வலிகளையும் நினைவூட்டி இமை நனைக்க, நந்தாவின் தோளில் கரைந்து தன்னை மீட்க ஆட்பட்டுக் கொண்டு இருந்தாள்..!
‘’என்ன மிருது..! பழைய நியாபகமா...” என்றான் கன்னம் வருடி.சின்ன கேவல் வெடித்து தோளில் இறங்கியது.
‘’சொல்லத் தெரியல நந்தா..! நான் எத்தனை இழந்துட்டேன் இந்த மூணு வருசத்துல..! என்னை பெத்தவங்க, என் வாழ்க்கை... என் குழந்தைன்னு எத்தனையோ விசயங்களை இழந்துட்டேன்..! யோசிச்சுப் பார்த்தா, இப்போத்தான் லேபர் பெயின்வந்து உங்க கைகையைப் பிடிச்சுட்டு நான் லேபர் ரூமுக்கு போன மாதிரி இருக்கு..!” இருவரின் கைகளும் தன்னிட்சையாக குழந்தையின் தலையை வருட, அது விசும்பி திரும்பி படுத்தது..!
இருவரும் எழுந்து பால்கனிக்கு வந்தார்கள், வழக்கமான நிலாதான்..! கொஞ்சம் மனவருத்தம் போலும், வெளிச்சம் குறைத்து சிறுத்துப் போய் இருந்தது..!
‘’நாளைக்கு நம்ம பாப்பாக்கு மூணாவது பிறந்த நாள்...” மிருதுளா சொன்னபோது, சென்ற ஆண்டு இந்த நாளில் வானதி செய்த ஆர்பாட்டங்கள் நினைவில் வர, அனிட்சையாய் பூத்த மலர், ஆர்பாட்டம் செய்யாமல் அமைதியாக அடங்கிப் போனது..!
ஆனால் அந்த எண்ணச் சிதைவை மிருதுளா அழகாகவே இனம் கண்டாள்..!
‘’என்ன யோசனை..? அவங்களைப் பத்தியா..?” குரலில் மெல்லிய கோபம் மிகுந்திருந்தது..! பதில் சொல்லாமல் நிலா வெளிச்சத்தில் கைகளை கூராய்ந்து கொண்டு இருந்தான்..!
’‘இது நியாயமா..? தபஸ்வி நம்ம குழந்தை நந்தா...”
‘’ஆனால் அவளுடைய வாழ்க்கையில வானதிக்கும் பங்கு இருக்கு மிருதுளா.”
‘’நான் இன்னும் எதை எதைத்தான் அவங்ககூட பங்கு போட்டுக்க..? அதையாவது சொல்லுங்க.
தொலைஞ்ச நினைவு திரும்பாமயே இருந்திருக்காதான்னு என் நெஞ்சு ரணப்படுது..! ஒரே வீட்டில ரெண்டு மனைவிகளோட ஒற்றுமையா குடும்பம் நடத்திற ஆண்மகன்கிற விருதை நீங்க வாங்க நான் இன்னும் என்னென்னலாம் செய்ய..? முடியல நந்தா.” அழுத்தமாகவும் கோபமாகவும் மிருதுளா பேசிய வார்த்தைகள் நந்தாவை தாக்கியதோ இல்லையோ, வழக்கம் போல தோட்டத்து நாற்காலியின் தன்னை முடக்கிக் கொண்டு இருந்த வானதியின் காதுகளை துல்லியமாய் ஊசி கொண்டு துளைத்தது..!
கண்களை மூடிக் கொண்டாள்..! மிருதுளாவின் உணர்வுகளில் இருந்த நியாயம் கண்டிப்பா நந்தாவைச் சரியாச் சேராமல் போனாலும், அது வானதிக்கு நன்றாகவே புரியும்..!
”தப்பு மிருதுளா... அவளைப் பத்தி தெரியாம பேசாதே..! அவள் தேவதை மிருதுளா...”
‘’ அப்போ நான் பிசாசா நந்தா...”
‘’அப்படி நான் எப்போச் சொன்னேன்..? நீயும் காணாக் கிடைக்காத தேவதைதான்.!”
‘’நீங்க ஆண்கிற சவுகரியத்தால இரண்டு தேவதைகள் கூட ஒரே நேரத்துல வாழலாம் அப்படித்தானே...” சுரீரென வந்தது வார்த்தைகள். வீரியத்தில் ஆறு கண்களும் தனித்தனி உணர்வுகளில் பொங்கியது..!
‘’நான் அப்படி வாழச் சொல்லல..! ஆனால் வாழ்க்கை ஒண்ணும் சிலேட்டுல எழுதின கவிதை இல்லை, அழிச்சு அழிச்சு மறுபடி எழுத..! அது கல்வெட்டு..! ஒரு தடவை எழுதிட்டா எழுதினது தான்..! அதை உடைச்சு எரியத்தான் முடியுமே தவிர, உருவு மாற்ற முடியாது..!” அவனிடமிருந்து அழுத்தமாய் வந்த வார்த்தைகள் அவளுக்கு பிடித்தமாய் இல்லை
‘’மாற்ற முடியாததை நான் ஏத்துக்கணும், ஏன் அவங்களும் ஏத்துக்கணும்..! அது சரிதான்..! இதுக்கு அர்த்தம் என் வாழ்க்கையில அவங்களை ஏத்துகணும்கிறது இல்லை.” உறுதியாய் வந்த வார்த்தைகளில் நந்தா அயர்ந்து போனான்..! சொற்ப நிமிடங்கள் அமைதியே நீடிக்க, கண்களை மூடி காதுகளை தீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் வானதி..!
நிலா நகர்ந்து நகர்ந்து அதே இடத்தில் நின்றது.! வெற்றிடத்தை விரக்கிக் கொண்டிருந்த நந்தாவின் தோளில் ஆற்றாமையால் சாய்ந்து கொண்டாள்.
‘’ஐ’யம் சாரி நந்தா..! ‘’ என்றாள் குரல் கரகரக்க..!
‘’நீ எதுக்கு சாரி கேட்குற மிருதுளா..? நீ என்ன தப்பு செஞ்சே..? தப்பே செய்யாம தண்டனை அனுபவிக்கிற பாவப்பட்ட ஜென்மங்கள் நாம மூணு பேரும் தான்..! தப்புக்களையும் குற்றங்களையும் அனாயசமாய் செய்துட்டு சந்தோசமா இருக்கிறவங்க மத்தியில ஒரு சின்ன காட்சி பிழையாலே, நம்ம வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. காலம் முழுக்க எனக்கு மட்டும் சங்கமம்ங்கிறது சபிக்கப்பட்டாதாவே போச்சு.முடிவுல யாரை நினைச்சாவது குற்றவுணர்வில் தகிக்கிறது என்னுடைய சாபமாகிடுச்சு..! நான் யாரையும் ஏமாத்தல மிருதுளா” நியாயமான வார்த்தைகள்..!
வானதி அழுகையை அடக்க முடியாமல், இரண்டு கைகளாலும் வாயை அடைக்க, நுரையிரலில் உட்புகுந்த காற்று வெளியேற வழியற்று தடைபட, கட்டுபடுத்த இயலாமல் இருமித் தொலைத்தாள்.
மிருதுளாவும், நந்தாவும் வேகமாக பால்கனி வழியாக எட்டிப் பார்க்க, அங்கிருந்து அவசரமாக எழுந்து போன வானதி கண்ணில்பட, நந்தா இன்னும் இன்னும் தவித்துப் போனான்..! நெற்றி பொட்டை நீவிக் கொண்டே மிருதுளாவைப் பார்க்க, அவளுடைய கண்களிலும் குற்ற உணர்வு மிச்சம் இருந்தது..!
‘’கேட்ருப்பாங்களா..?” என்றாள் வேதனையாக..! தெரியல..’ என்பதாய் தோள் குலுக்கினான். நாளை விடியலை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருந்தது..!
அறைக்கு திரும்பிய வானதியோ மீராவை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்..! மீரா கையில் இருந்த தம்பூராவை இவள் மீட்டிப் பார்த்தாள். மனம் ஆறாமல் வலித்தது போர்வையை எடுத்து முகம் முழுக்க போர்த்தி தன்னுடைய துக்கத்தை உலகத்தின் பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டாள்..!
”,,,என்றும் சிலையான
உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா,,, ”
25
வெளிச்சத்தின் வீச்சத்தை எடுத்துக் கொண்டு பூமிப் பந்து சூர்யக் கதிர்களை தின்ன ஆரம்பித்திருந்தது,,! வானதியின் இதயத்துடிப்பு காலையில் இருந்தே சீராக இல்லை. மனம் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க, கட்டுப்பாடு இல்லாமல் மனம் பரிதவிப்புக் கொண்டு இருந்தது.
அம்மா என்றழைத்தபடி பக்கத்தில் வந்து தோளில் சாய்ந்து கொண்ட குழந்தையை கணத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள், அதன் சுருள் சுருள் கோசம், என்னை கொஞ்சம் கோதி விடேன் என்று கொஞ்சி கூத்திட, கண்களை மூடி அழுந்த தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அள்ளச் சொல்லி மனது துடித்தாலும் தள்ளச் சொல்லி உணர்வு கடிந்தது.
”இதப்பாரு தபூமா, நான் அம்மா இல்ல... அப்படி இனி கூப்பிட்டா உன்னை அடிப்பேன்..!” கைகளைப் பற்றிக் கொண்டுச் சொல்ல, நோக்கமும் காரணமும் புரிபடதா அந்தப் பிஞ்சு கைகளை வாயில் வைத்து ஆச்சர்யப்பட, இன்னும் கனிந்து போனாள் வானதி.
‘’அப்புறம் எப்படிமா சொல்ல..?” சின்னக் கண்களில் இரண்டு திராட்சை குண்டு மிதந்து சிரிக்க, வானதியின் அடிவயிறே கலங்கியது அந்தப் பார்வையில்..!
‘ எத்தனை நேசித்து இந்தச் சிற்பத்தை தனக்குள் செதுக்கி வைத்தாள்... குளிரும், பனியும் தீண்டாமல் தன் வெளிவயிற்றில் கர்ப்பம் சுமந்தாள். இத்தனையும் இனி எனக்கில்லையா..?’ அவளின் தாய்மை அவளை அணுவோடு சரித்தது..!
”மா, எப்படிம்மா கூப்பிட..?” பிஞ்சுக் கையால் கனவு கலைக்க, மிடறு விழுங்கினாள்.
‘’கூப்பிடாதே தபுமா..! உங்க அம்மா உள்ள இருக்காங்களே. அவங்களை மட்டும் கூப்பிடு..! என்னை எதுக்கும் கூப்பிடாதே..! நான் உன்கூட வர மாட்டேன், போதுமா.” கடினத்தை நாவில் படைத்துக் கொண்டாள்..! உகப்பாய் இல்லாவிட்டாலும் கசப்பாய்த்தான் வார்த்தைகளை இறக்கி விட்டாள்.
புரியாமல் பார்த்துக் கொண்டே நின்றது குழந்தை.
‘’மா, தபுவுக்கு ஹேப்பி பர்த்டே...” சொல்லிக் கொண்டே அவள் மீது மீண்டும் சரிய, குளிர் மலையொன்று அவள் மீது குதித்து கவிழ்ந்தது போல் இருந்தது..! அணைக்க நீண்ட கரத்தை பிணைக்க வழியற்று அமர்ந்திருந்தாள்.
தோட்டத்தில் இருந்த பூக்கள் எல்லாம் அதன் புன்னகையில் பேச்சற்றுப் போயிருக்க, இத்தனை இக்கட்டை தன்னுடைய இதயத்துக்கு மட்டும் அந்த இறைவன் எதற்குத்தான் தருகிறானோ என்று வேதனையாய் இருந்தது..!
அடுத்த வந்த நிகழ்வு, அவள் மனம் எடுத்து வந்த முடிவில்லை. இயல்பாய் செய்த செயல் ஒன்று, அவள் இதயத்தையே வேரறுக்க வைக்கப் போகிறது என்பது அறியாதது..!
‘’நீ உள்ளே போ...“’ என்று சொல்ல விளையத்தான், குழந்தையை கொஞ்சமாய் முந்தித் தள்ள அந்த வாழைத் தண்டு பாதங்களுக்கு அதுவே வலியைத் தந்திருக்க வேண்டுமோ, பூச்சுமக்க இயலாமல் கிளைகள் முறிந்திருக்க நேருமோ, யாமறியோம் பராபரமே.
சின்னதாய்த் தான், குழந்தையை அவ்விடத்தில் இருந்து விலக்க, அது பாத்தியில் தடுமாறி சமன் செய்ய வைத்திருந்த மண்வெட்டியின் மீது சரிய.. செம்மண்ணுக்கு அங்கே குருதி தந்து நிறம் ஈந்தது அந்த பூப்பந்து.
‘’அம்மா...” போட்ட அலறலில் இரு வயிறும் கலங்கியது… அவர்கள் இதயமே நொறுங்கியது..! வானதி சிலையாக நின்றாள். இயக்கத்தை அவள் இதயம் மறந்திருக்க. அங்கே அலறலும், தவிப்பும் மட்டும் தான் கேட்டுக் கொண்டு இருந்தது..!
வலப்பக்க கண் இமைக்கு மேல் தொட்டு, காதைக் கிழித்துக் கொண்டு போயிருந்தது அந்த கொடூர மண்வெட்டி..! மண் வெட்டும் லாவகத்தில் மலரை வெட்டி ரத்தத்தை ருசித்திருந்தது..!
நடந்ததை யூகித்த அவர்கள், கோபப் படவும், ஆர்பாட்டம் செய்யவும் நேரமில்லாமல் குழந்தையை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி ஒரு முழுநாளும் முழுங்கிக் கொண்டபின் தான், தலையைச்சுற்றி தலைப்பாகை கட்டியது போல், வெள்ளைக் கட்டோடு வந்து சேர்ந்தார்கள்..!
வாசலிலேயே அமர்ந்திருந்தாள் வானதி..! ஓடிப் போய் அள்ள உரிமையும் இல்லாமல், ஒதுங்கி போய்விட கல் இதயமும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
வீட்டில் இருந்த வீணாவும், வெளியில் இருந்து வந்த விக்கியும் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை. திருப்பிக் கிடந்த கரப்பான் பூச்சிபோல் தவித்துக் கிடந்தாள்.
அவர்களை விட்டு விலகிப் போய் விட இத்தனை நாள் அழிச்சாட்டியம் செய்த மனசு, இந்த நிமிசம் அது நடந்து விடுமோ என்று அச்சப்பட்டது..!
வெளிச்சம் மங்கிய மாலையில் தான் மூவரும் தபுவை அள்ளிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்..! வதங்கிப் போய் மயக்கத்தில் கிடந்தது குழந்தை. வெள்ளைக் கட்டையும் மீறி சிகப்பு திட்டாய் ரத்தம் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தது.
இவளின் பரிதவிப்பை பார்த்த மிருதுளா, நந்தாவின் கையில் இருந்த குழந்தையை வேகமாக வாங்கிக் கொள்ள, விபரீதம் நடக்கப் போகிறது என்று உணர்ந்த நந்தா, கண்களை அழுந்த மூடித் திறந்தான்.
‘’ப்ளிஸ், மிருதுளா, நிதானமா இரு..! தவறி வார்த்தைகளை விட்டுடாதே. ” என்றான் கெஞ்சலாக. ஒரு பார்வை அவன் மீது உக்கிரமாய் பதிய, அனல் கக்கிய விழிச் சாரலில் அமைதியாக தவித்தான் நந்தா.
‘’பாப்பாக்கு இப்ப எப்படி இருக்கு அத்தை..?” கல்பனாவிடம் கேட்க, பதில் சொல்லும் நிலையற்று அவர் தரை பார்க்க, அத்தனை ஒதுக்கங்களையும் தாண்டி, அவளின் தாய்மை, சதுக்கத்தில் ஏறி நின்று சதுராட்டம் போட்டது.
குழந்தையை தடவ கை நீள, அதற்கு முன்னே நீண்ட ஒருகரம் அவள் கன்னத்தை பதம் பார்க்க, அவள் மட்டுமல்ல அத்தனை பேரின் சப்தமும் ஒடுங்க, கண்ணீர் முத்தொன்று தெறித்து நந்தாவின் காலடியில் உருண்டு மன்னிப்புக்கு மன்றாடியது..!
‘’என் குழந்தையைத் தொட்ட பிச்சுடுவேன் உன்னை..! சீ, நீயெல்லாம் ஒரு மனுசியா.! உன் காலை அம்மா அம்மா’னு சுத்தி வந்த அந்த பிஞ்சை காயப்படுத்த உனக்கு எப்படி மனசு வந்தது..? இன்னைக்கு பிறந்த நாள்னு உன்னைத் தானே முதல்ல பார்க்கணும்னு நான் அனுப்பி வச்சேன்..!
உன்னை போட்டியாவோ உலகத்தின் வழக்கத்தில் பார்க்கிற சக்களத்தியாவோ நான் பார்க்கவே இல்லையே... என்னை மாதிரி நடுவழியில பயணத்தை தவறவிட்ட சகமனுசியாத் தானே பார்த்தேன்..! உனக்கிருக்கிற ஆற்றாமையும் கவலையும் உன்னைவிட அதிகமா உரிமைப்பட்ட எனக்கு இருக்கு. ஆனால் என் தனிப்பட்ட கவலையை இழப்பைவிட உனக்கு செய்ய வேண்டிய நியாயதுக்காகத் தான் நான் உன்னை இங்கே தங்க அனுமதிச்சேன்..! ஆனால், எப்போ நீ என் குழந்தையைக் கொல்லப் பார்த்தியோ இனி உனக்கு இந்த வீட்டுல இடமில்லை.”
இத்தனை நேரமும் வார்த்தைகள் வலுவாய் தாக்கினாலும், கொல்லப் பார்த்தாய்..’ என்ற ஒற்றைச் சொல்லில் நெருப்பு பிடித்த இதயம் அவள் அடிவயிற்றில் நழுவி விழ, வார்த்தைகாளை தாங்க மாட்டாமல் வயிற்றைப் பற்றிக் கொண்டு சுவற்றில் சரிந்தாள். விசும்பலும் கேவலும் முந்திக்கொண்டு யார் முதலில் வெளியில் வருவது என்று முஸ்தீபுகள் இல்லாமல் வெளியில் தகித்து சேர்ந்தே குதித்தார்கள்.
கல்பனாவும், நந்தாவும் அவளை ஏந்திக்கொள்ள வழியில்லாமல் நொறுங்கிப் போய் நிற்க, நந்தாவின் குரலுக்கு கட்டுபடும் முடிவை எப்போதோ மாற்றிக் கொண்டு இருந்தாள் மிருதுளா..!
”உனக்கு என்ன தேவை..? இவரா..? எடுத்துக்கோ..! அவர்கூட தனியா இருக்க முடியலைன்னு தானே இந்த கோபமும், எரிச்சலும் ஆதங்கமும்..! உன்னோட விரகவேசத்துக்கு நீ போட்டுகிட்ட முகமூடி தானே தாய்மை..! இப்போ தெரிஞ்சிருக்குமே, அசலுக்கும் நகலுக்குமான வித்யாசம்..!
இதப்பாருங்க நந்தா, இவளை தனியா கூட்டிட்டு போயிடுங்க. மாளிகையில மகாராணியாக் கூட வச்சுக்கங்க..! ஆனால் இனி இவ இருக்கிற வீட்டில நானும். என் குழந்தையும் இருக்க மாட்டோம்..! ‘’ குழந்தையோடு மாடிக்கு கடகடவென படியேற, வானதி தாழ்ந்த தலை உயர்த்த வழியற்று நின்றாள். கன்னத்தின் ஈரத்தை காயவிடாமல் நீர் ஊற்றிக் கொண்டே இருந்தது..!
எத்தனை வலிமையான வார்த்தைகள்..! அந்தரங்கத்தை வேரறுக்க இதைவிட வேறென்ன வேண்டும். மொத்த குடும்பத்தின் முன்னால் முகம் நிமிர்த்த முடியாமல், காமமே சுகிக்காத அவள், காமுகி ஆகிப் போனாள்..!
மூடிய அறைக்குள் பேணிய கண்ணியம் எல்லாம், கண்மூடி திறக்கும் நொடிகளில் முடிந்து போய் இருந்தது..! கூடிக் கழித்தார்களா என்ன..? தேடிய சில தேடல்கள் கூட தேகப்பசி இல்லையே... இழப்பின் வலியில் நின்றவளுக்கு நான் இருக்கிறேன் ‘ என்று அவன் சொன்ன ஆறுதல் மொழி தானே கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். நந்தாவின் முன்னாக வந்து நிற்க, கல்பனாவின் கண்கள் குற்ற உணர்வில் நீர் திறக்க, எடுத்த வார்த்தைகளை முடிக்க முடியாமல் தவித்தார்..!
‘’எனக்கு அனுமதி குடுங்க நந்தா... நான் போயிடறேன், ப்ளீஸ்.” அவள் கை எடுத்து கூப்ப, வெடித்துச் சிதறிய கேவலை கட்டுபடுத்த இயலாமல் கல்பனா அவளை தாவி அணைத்தார்.
”அய்யோ, உன்னை இந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்திட்டனே, எல்லாம் என்னால தானே..?” தலையில் அடித்துக் கொள்ள, அங்கே உணர்வு போர்க்களமானது அனைவரும் இதயமும்..!
‘’வேண்டாம் வானதி, நான் சொல்றதை கொஞ்சம் கேளு.”
‘’போதும் நந்தா. இது ஒருவித நுட்பமான உறவுநிலை..! நீர் மேல போடற கோலம் மாதிரி. எத்தனை லாவகமா போட்டாலும் உருவம் கிடைக்காது. நான் எந்த தப்பும் செய்யல நந்தா..! அதுவும் தபுவுக்கு எதிரா, நான் என்ன, இந்த முறையைக் கையாண்டுதான் அவங்க சொன்னதை அடையணுமா..?” அவள் உதடு துடிக்க கேட்டபோது உணர்வு துடிக்க நின்றாலும், அங்கே பொத்தி வைத்திருந்த மௌனமே அவளை வெட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது..!
‘’நீங்க யாரும் என்னை நம்பலியா..?” என்றாள் கண்ணீர் மிஞ்ச ஆற்றாமையாக.
‘’அப்படி இல்ல வானதி.. நீ இயல்பா இருந்திருந்தா, மிருதுளா இத்தனை சந்தேகப்படவும் வாய்ப்பில்லாம இருந்திருக்குமே வானதி..! இன்னைக்கு இப்படி தவிச்சு நீ நின்னிருக்கவும் வேண்டாமே.” கல்பனாவின் வார்த்தைகளில் இன்னொரு பாறாங்கல் அவளுடைய நெஞ்சத்தில் விழ, இரண்டு கைகளாலும் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டு சிலநொடிகள் போராடி தன்னை மீட்டெடுத்துக் கொண்டாள்..!
அழுது சிறுத்த கண்ணோடு நந்தாவைப் பார்க்க, இந்த நொடியும் அவன் பரிசுத்த அன்போடே பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘’ப்ளீஸ் நந்தா எனக்கு விடுதலை கொடுங்க..! என்னை வார்த்தையால கட்டிப் போடாதீங்க. நான் ரெம்ப பாவம் நந்தா. என் உணர்வுகளை இதுக்கு மேல கட்டிப் போடாதீங்க.என் மனசாட்சிக்கு என்னை நியாயம் செய்ய விடுங்க.” பேசிக் கொண்டே இருந்தவள் சட்டென்று அவனுடைய காலில் விழுந்து கதற. மொத்த குடும்பமும் மூச்சடைத்து நின்றது..!
”...காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்...”
26
காலத்தை தவிர காயத்துக்கு மருந்தில்லை. ரணப்பட்ட இதயத்தை வலிப்படுத்தி வலிப்படுத்தி துன்பம் விதைக்காமல் அதன் போக்கில் விட்டால் எல்லாம் மெல்ல மாறும்.. மெல்ல மெல்ல சீராகும்..!
வார்த்தைகள் தெறித்த இடமெல்லாம் கொதித்து கொப்புளமாய் பூத்துப் போனது..! மிருதுளா மௌனம் பூசிக் கொள்ள, வானதி அமைதியில் தன்னைக் கரைத்துக் கொண்டாள். காயம் ஆழமாக இருந்தாலும் மெல்ல மெல்ல தபஸ்வியின் உடல்நிலை தேறிக் கொண்டு இருந்தது. அன்று சொன்ன வார்த்தைகள் ஆத்திரத்தில் பிரிந்த நெல்லிக்காய் மூட்டையாகிப் போனாலும், அதன்பிறகு ஏனோ மிருதுளா அதைப்பற்றி பேசவே இல்லை..!
வானதியும் பெரும்பாலும் அறைக்குள் தன்னை சிறை வைத்தாள். யாரும் அறியாத வண்ணம், தபுவைப் பார்த்து கண்ணீரில் உடல் வருடித் தந்தாள். சும்மா இருந்தவளை அழைத்து பூச்சுமையைத் தந்து அதில் அவள் சுகப்பட்டு சுகப்பட்டு பூவுக்குள் விழுந்த வண்டு தேனில் குளித்து திகட்டாமல் மூழ்குவது போல், தன்னை மறந்திருக்கும் நிமிசம், பூவிதழ் மூட, உள்ளுக்குள்ளே செத்துப் போகுமாமே வண்டு, சிறை உடைக்க மனமற்று… அதுபோல் குடும்ப உறவுக்காக ஏங்கியவள் கையில் ஒரு குடும்பத்தை தந்து, அந்த குடும்பத்தில் அவள் கரைந்து காணாமல் போன நிமிசம் எந்த உறவும் அவளுக்கு இல்லையென்று சொன்னால் எப்படி மீள்வாள்..!
அவளுடைய அமைதி அந்த மொத்த குடும்பத்தையும் கரைத்தது..! மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு சிறு குற்றமும் பெரும் தண்டனையாக இருக்குமாம்..! அன்று காலில் விழுந்து மடங்கி அழுத வானதியின் தோற்றத்தில் இருந்த கையறு நிலையை கடந்து வரவே இயலவில்லை, அதுவும் நந்தாவால்..!
முச்சூடும் மீராவின் சிலையை கையில் ஏந்திக் கொண்டே அமர்ந்திருந்த வானதியின் இதயமோ, அடுத்த கட்டத்தில் இருந்தது.! மூன்று நாள் விடுப்பில் அறைக்குள்ளே தன்னை முடக்கிக் கொண்டு இருந்தவள், மருத்துவமனைக்கு இயல்பாக கிளம்பிப் போனாள்..!
அத்தனையும் இயல்பானது போல் கல்பனாவின் மனசு கொஞ்சம் இளைப்பாற, மாலையில் வழக்கம் போல் தாமதித்து வராமல், நேரத்துக்கே வந்து சேர்ந்தாள். முகத்தில் சோர்வு இருந்தது. கண்களில் கீழ் வட்டம் சேர்ந்திருந்தது, ஒரு ஷணம் தன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டாளா என்று அவன் மனசு தவிக்க, அவன் எதிர்பார்ப்பின் சத்தம் அவளுக்கு எட்டியதோ என்னவோ, நிமிர்ந்து பார்த்ததோடு மட்டுமல்லாமல் சின்னதாய்ச் சிரித்தாள்..!
இயல்பாய் சமையலறைக்குள் சென்று அனைவருக்கும் காப்பி போட்டு அவளே எடுத்து வந்து தந்தாள்..!
‘’ஈஸ்வரா...” கல்பனாவின் கைகள் தன்னால் உயர்ந்து வணங்கியது.
ஆனால் இது சூறாவளிக்கு கட்டியம் கூறும் சுழல் காற்றுபோல் தோன்றியது நந்தாவுக்கு..!
‘’நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றாள் பொதுமையாக. எல்லோரும் புரியாதிருக்க, நந்தா மட்டும் யூகித்திருந்தான்..!
‘’நான் ஹாஸ்பிடல்ல பேசிட்டேன். டாக்டர் புனேல இருக்கிற அவருடைய நண்பருடைய ஹாஸ்பிடலுக்கு என்னை ரெகமண்ட் பண்ணி இருக்காரு..! மத்த இடங்களை விட, பூனேனா எனக்கு இன்னும் வசதியா இருக்கும்..! மாமா குடும்பமும் அங்கே இருக்கு..! பக்கத்துலயே ஏதாவது ஹாஸ்டல் பார்த்துட்டா என் காலம் ஓடிடும்.” இதற்கு மேல் நாசூக்காய் தன்னுடைய கையறு நிலையைச் சொல்ல முடியாது..!
கல்பனா நெஞ்சை பிடித்து அதிர்ந்து இருக்க, மற்றவர்கள் பேச்சற்று அமர்ந்திருக்க, மிருதுளா குற்றவுணர்வில் அமர்ந்து இருந்தாள். நந்தா தீர்க்கமான முகத்தோடு அவளைப் பார்த்தான்..!
‘’எனக்கு உன் வாழ்க்கையில பங்கு இருக்கு வானதி..! நீயா எதையும் முடிவு செய்திட முடியாது. முறைப்படிதான் நாம கல்யாணம் பண்ணி இருக்கோம். சட்னு நீயா எந்த முடிவையும் எடுத்திட முடியாது.
நீ எங்கே போகவும் நான் அனுமதிக்கணும்..! முதல்ல அதை மனசில ஏத்திக்க..!” இந்த பேச்சை இதற்குமேல் பேசாதே என்பதுபோல் அவன் நிற்க, அவளோ இன்றில்லாமல் போனால் என்று பேச’ என்பது போல் நின்றாள்.
‘’இயல்பான குடும்பங்களிலேயே இதுமாதிரியான விசயங்கள் இருக்கும்தான்..! இது மாறுபட்ட உறவுநிலை..! மிருதுளா குழந்தைக்கு அடிபட்ட வருத்தத்திலே ஏதோ வார்த்தையை விட்டுட்டா. அதுக்காக நீ கிளம்பிப் போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்..? உன் அம்மா இருந்த காலத்திலேயே உனக்கு மாமா குடும்பத்தோடு எந்த பிணைப்பும் இல்ல, இப்போ நீ போய் நின்னா யார் உன்னை கவனிச்சுக்கப் போறாங்க..? ‘’ கல்பனா தவிப்பாய் கேட்க, வானதி எழுந்து கொண்டாள்.
‘’நான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன் அத்தை..! என்னை விட்ருங்க. தயவுசெஞ்சு கட்டி வைக்காதீங்க..! ஒரு ஒற்றைத் திரியாய், கழிக்க முடியாத உங்களுடைய இரவுப் பயணத்துக்கு துணையா வந்தேன், பொழுது விடிஞ்சாச்சு..! இனி நான் இங்கே தேவையில்லை..! ‘’ பேசிய அவள் திடமாக நின்றாள். ஆனால் பேசாத மற்றவர்களுக்கு தொண்டை அடைத்தது..!
‘’தனியா இருக்கிறதும், எனக்கு நானே சம்பாதிச்சுக்கறதும் என் மன வியாதிகளை நானே குணப்படுத்திக்கறதும் எனக்கு புதுசில்ல, இடையில் வந்த இந்த அன்பும், அக்கறையும் அரவணைப்பும் தான் புதுசு.”
‘’நான் இருக்கும் போது உன்னைத் தனியா வாழ அனுமதிக்க மாட்டேன் வானதி..! நமக்கு நடுவில இருக்கிற அன்பை யார் வார்த்தைகளும் காயப்படுத்தி விடாது வானதி.” நந்தா முன்னே வந்து அவள் புஜத்தைப் பற்றி தன்னுடைய புறமாக திருப்பி அவள் கண்களில் எப்போதும் அவனுக்காக பூத்திருக்கும் அன்பைத் தேடினான்.
‘’என் அம்மா இருந்தபோதும் நான் தனியாத்தான் நந்தா வாழ்ந்தேன். எனக்கு தனிமை புதுசில்ல. பட்டாம்பூச்சியைப் பிடிச்சு கையில சிறைபிடிச்சு வைக்கிறதில்ல அன்பு..! நான் வாழ்க்கைத் துணைன்னு நம்பி வந்தது, எனக்கு வெறும் வழித்துணை தான்னு ஆயிடுச்சு..! அதை யோசிக்க நான் விரும்பல.” சன்னமான குரலில் சொன்னவளின் முகத்தை நிமிர்த்தி ஆக்ரோசமாய் பார்த்தான். கண்கள் கலங்கி உதடு துடித்தது..!
‘’என்ன, நீ தியாகி நாங்க எல்லாம் கெட்டவங்களா..? உனக்கு இங்கே என்ன பிரச்சனை..? அதைச் சொல்லு..! மிருதுளா பேசினதுக்காக மட்டும் நீ போகல அது எனக்குத் தெரியும்..! உன் மனசில ரெம்ப நாளாவே எதுவோ ஓடுது..! திரும்பியும் சொல்றேன். நான் உன்னை ஏமாத்தல வானதி. என் உயிர் இருக்கிற வரைக்கும் அதைச் செய்யவும் மாட்டேன்..!” அவன் குரல் உயர அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே பிடித்திருந்த கைகளை விடுவித்துக் கொண்டு தள்ளி நின்றாள்.
‘’அத்தனையும் பிரச்சனைதான்..! நாளைக்கு விக்கி கல்யாணம் முதற்கொண்டு வீணா கல்யாணம் வரைக்கும் அத்தனையும் பிரச்சனை தான்..! சாதரணமா வந்த கல்லூரித் தோழிங்க கிட்டாயே வீணாவால என்னை கம்பீரமா அறிமுகப்படுத்தி வைக்க முடியல. ஏதோ குற்றம் செய்த மாதிரி நான் ஒதுங்கி நிற்கிறேன்.”
‘’அய்யோ அண்ணி நான் அப்படி நினைக்கல. ஆனா எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியல.” என்றாள் அப்பாவியாக. பக்கத்தில் வந்து அவளை தன்னோடு சேர்த்துக் கொள்ள, நெகிழ்ந்து போய் அவள் மார்போடு ஒன்றிக் கொண்டாள்..!
‘’சாரி அண்ணி. உங்களுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்..?”
‘’இதை நான் யாரையும் குத்திக்காட்டச்சொல்லல. நான் சிரிச்சுக்கிட்டுத் தான் இந்த வீட்டுக்கு வந்தேன். சிலகாலங்கள் உங்க சிரிப்புக்கு காரணமாய் இருந்தேன்..! இப்போ சிரிச்ச முகமாய் விடை பெற்றுப் போகத் தான் ஆசைப்படறேன்..! சோதிச்சு பார்க்க இதுவொன்னும் ஆய்வுக்கூடம் இல்ல, வாழ்க்கை..! கொஞ்சம் நெருடலா இருந்தாலும் இதுதான் சரியா இருக்கும்..!
இன்னும் ரெண்டொரு நாள்ல நான் கிளம்ப வேண்டி இருக்கும்..! நான் தயாராகிறேன்.” நகரப் போனவளை ஆக்ரோசமாய் பிடித்து நிறுத்தி கன்னத்தில் மாறி மாறி அறைய எந்த எதிர்ப்பும் சொல்லாமல் அமைதியா நின்றாள் வானதி.
‘’நீ போயிடுவியா..? அதை நானும் பார்க்கிறேன். நீ எங்க வாழ்க்கையில வேண்டும்னு ஆசைப்பட்டு கேட்டது நான்... நந்தா இல்ல..! நமக்குள்ள தான் அந்தக் காதல் இருக்கு..! எனக்காகத் தான் நீ என் மகனை கட்டிட்டே, இப்போ நீ போக என் அனுமதி வேணும் முதல்ல அதை புரிஞ்சுக்க.” கல்பனாவிற்கு மேல்கீழ் மூச்சு வாங்கியது.
அந்த கிழத்தியின் தலையை தன்னுடைய கைகளால் பற்றிக் கொண்டு நெற்றியோடு நெற்றி சேர்த்து சிரித்தாள் வலியாக.
‘’என்னால முடியல கல்பு, என்னை விட்டுங்களேன்..! என்னுதுன்னு நம்புன எல்லாமே எனக்கு சொந்தமில்லைன்னு தெரிஞ்ச பிறகு தள்ளி நிற்கிறது நரகவேதனையா இருக்கு..! ”
அவள் கண்கள் அனிட்சையாய் தபஸ்வியை தழுவி வர, உயிரை அறுத்தது போல் வலித்தது..! கல்பனா ஷோபாவில் சரிந்து அமர்ந்து அழத் தொடங்க, பெருமூச்சோடு நகரப் போனவளை, கண்ணீரோடு பார்த்தான். ஆயிரம் இருந்தது பேச, அதை அடித்து துவம்சம் செய்தது ஆழ்மன தவிப்பு.
பேசத் துடித்த அவனுடைய இதழ்களை அவளின் வெறுமைப் பார்வை நிறுத்தி வைக்க, அமைதியாகிப் போனான்..!
ஒரு பேரலை அங்கே பேச்சற்று முடிந்து போய் இருந்தது..! சுனாமியாய் அவர்கள் வாழ்வில் வந்து சுகப்படுத்தி, ஆறுதல்படுத்தி, அன்பை விதைத்து, அன்புக்காக காத்திருந்து, ஒரு சுனாமி போலே அவர்களை சுருட்டிக் கொண்டு போய் இருந்தாள்..!
இடையில் வந்த மூன்று நாள்களும் பேச்சற்ற போராட்டத்தில் கழிந்து போனது. எண்ணி எண்ணி துக்கத்தில் விழுந்த கல்பனாவின் உடல்நிலையும் நசிந்து தேறியது..!
தன்னிடம் இருந்த பட்டு புடவை, நகைகளை வீணாவுக்கு அன்பு பரிசாகத் தந்தபோது வாங்காமல் கதறி அழுதாள்..!
‘’ஏன் அண்ணி இப்பவே எல்லாத்தையும் என்கிட்டத் தர்றீங்க..? அப்போ என் கல்யாணத்துக்கு கூட வர மாட்டீங்களா..? நான் என்ன அண்ணி செஞ்சேன்..:? என்மேல என்ன கோபம்..?” விசித்து விசித்து அழ, அவள் முகத்தைக் கையில் ஏந்தி அழுந்தத் துடைத்து விட்டாள்..!
‘’வருவேன் வீணா..! ஆனால் அண்ணிங்கிற உரிமையில என்னால எதையும் செய்ய முடியாதுல..? ஒரு உறையில ரெண்டு கத்தி இருந்தா நல்லாவா இருக்கும்.? நீ இயல்பா இரு” தட்டிக் கொடுத்தாள்.
விக்கிக்கு தன் கையில் இருந்த சேமிப்பு காசில் பெரும் தொகையைத் தர பதறிப் போனான்.
‘’வச்சுக்க விக்கி..! வேலைக்கு போகப் போறே, ஆசைப்பட்ட பைக்கை வாங்கிக்கோ..! அண்ணியோட கிப்ட்..! அண்ணிதான்னு நீ நினைச்சா வாங்கிக்க. அப்படி இல்லைன்னு நினைச்சா விட்டுடு...” இக்கட்டாய் கேள்வி கேட்க, அதற்குமேல் அவன் எங்கிருந்து மறுக்க..?
உள்ளபடி மிருதுளாதான் குற்றவுணர்வில் நின்றாள். தன்னுடைய வார்த்தைகள் வானதியின் தன்மானத்தை தவிடு பொடியாக்கி விட்டது போல் இருந்தது..! அவளைப் பார்த்த நிமிசம் தொட்டு இந்த நிமிசம் வரைக்கும் அந்த பேரமைதியான முகத்தின் மீது இனம்புரியாத பிடிப்பு அவளுக்குமே இருந்தது..!
இன்று மொத்தமாய் போகிறாள் என்றதும் அடி மனசை எதுவோ அணு அணுவாய் சிதைத்துக் கொண்டு இருந்தது.
அதுவும் முதல்நாள் அவள் முன் வந்து நின்று குழைந்து நெகிழ்ந்து குழந்தையை கடைசியாய் வெளியில் அழைத்துப் போக அனுமதி கேட்ட காட்சியில், தன்னுடைய பெற்ற பாசத்துக்கு முன்னே எந்த இடத்தில் வானதியின் வளர்த்த பாசம் பின் தங்கிப் போனது என்ற ஆற்றாமையாய் இருந்தது..!
குழந்தையை வாங்கிய வேகத்தில் வாரி இறைத்த முத்தத்தில் மிருதுளாவின் ரத்தமே சுண்டிப் போனது..! எந்த இடத்தில் அவளின் அன்பை கணிக்கத் தவறிப் போனோம்..! காயம்பட்ட இடத்தில் தன் இதழ்களால் ஒற்றி எடுத்தபோதே, மொத்தமாய் உடைந்து போய் இருந்தாள் மிருதுளா.
‘’ஐயம் சாரி...” என்றாள் தரை பார்த்துக் கொண்டே. நிமிர்ந்து பார்த்தாள் நியதிகளை உடைத்து கண்ணீர் கரை புரண்டு விடுமோ என்ற பயம் மிருதுளாவுக்குமே இருந்தது..!
புன்னகையுடன் குழந்தையை தனக்குள்ளே அழுத்திக் கொண்டு திரும்பி நடந்தவள், ஒருநொடி தாமதித்தாள்…
‘’நீங்க யோசிச்ச மாதிரி நான் ருக்மணி இல்ல... ராதாவும் இல்ல... நான் மீரா... அந்த நந்தகோபாலனுக்காகவே பிறப்பெடுத்து அவனோடு கலந்ததும் மறைஞ்சு போன மீரா. நந்தகோபாலனுக்கு மனைவிகள் பலபேர் இருக்கலாம். ஆனால் அவங்க யாருக்குமே கிடைக்காத பாக்கியம் உயிரோடு அவனுள் உறையற பெரும் பேரு மீராவுக்கு மட்டும் தான் கிடைச்சது.” சொல்லிவிட்டு போய் விட்டாள்.
”...கை விளக்கை ஏற்றி வைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக...”
27
ஒரு அரைநாள் அவகாசத்தில் தபஸ்வியை தன்னுடமையாய் கைமாற்றாய் வாங்கிச் சென்று தன்னுடைய தாய்மைக்கு அணி சேர்த்துக் கொண்டாள்..! இதற்கு முன்னும் இதுபோன்ற பயணங்கள் அவர்களுக்குள் நிகழ்ந்து இருக்கிறது தான். ஆனால் இதுதான் கிட்டத்தட்ட அவர்களுக்குள் நிகழும் கடைசிப் பயணம்போல் நந்தாவலுமே உணர முடிந்தது..!
அவன் உணர்வுகளின் பிடியில் இருக்க, அவளோ தெளிந்த மனநிலையில் அமர்ந்திருந்தாள். இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்ற பேரமைதி அவளுடைய முகத்தில்.
நான்கு மாதங்களுக்கு முன்பிருந்த அதே மனநிலை. அதே வாழ்க்கை ஒருநாளில் வாழ்ந்து கழித்துவிட அவளின் மனசு தவித்தது. அதுவும் தபஸ்வியைக் கையில் வாங்கியதும் அவளுக்குள் ஊற்றெடுத்த உணர்வை பிள்ளை பெற்று எடுத்த நிமிசத்தில் கூட உணர்ந்திருக்கத் தான் முடியாது..!
‘’பீச்சுக்கு போகலாம் நந்தா...” விண்ணப்பம் வந்தபோது லேசாய் பெருமூச்சு விட்டான். இனிமேல் தன்னை கடற்கரைக்கு வராமல் தடுப்பதிற்கே இந்த பயணம் என்று அவன் சிந்தையில்,ஊறியதை சிந்தாமல் சிதறாமல் அவள் படம் பிடிக்க, இருவரின் இதழ்களிலும் ஒருசேர புன்னகை விளைந்தது….
‘’ தி லாஸ்ட் சப்பர், மாதிரி தி லாஸ்ட் விசிட்.” அவனுடைய இதழ்கள் தன்னால் முணுமுணுத்தது. அந்த வார்த்தைகள் அவளுக்கு நிறையவே வலித்தது.
”எதுக்குமே முடிவில்லை நந்தா..! அதுவும் பந்தங்களுக்கு ஏது முடிவு..?”
‘’முடிவில்லாம இருக்கலாம். ஆனால் நினைவிருக்குமே..! இந்த கடற்கரையில் உன் காலடித் தடங்களை நான் இத்தனை கோடி சுவடுகள் நடுவில் தேடி எடுக்க ஆரம்பிப்பனே. என்னால எதை மறக்க முடியும்..? தன் படைப்பை காற்று களைச்சிடுமோன்னு பயப்படற மணல் சிற்ப கலைஞன் மாதிரி, எனக்கு பரிதவிப்பா இருக்கு.” அவன் கண்கள் பளபளத்தது. தனியாய் அமர்ந்திருந்தார்கள். குழந்தையை தனக்குள் புதைத்து தன்னுடைய முந்தானையால் காற்றுத் தீண்டாமல் காவல் வைத்து இருந்தாள்.
அந்த கதகதப்பான தாய்மைக்கு நிகரான சொர்க்கம் இல்லை என்பதை நந்தா அறிந்தே இருந்தான். சூரியன் செந்சாந்தாய் இருந்தான். கடல்நீரை குடித்ததினால் போதையில் நிறமிழுந்திருக்கலாம்.
அலைகள் கண்ணுக்கு முன்னே,நாகத்தைப் போல் படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்தன. பேச ஆயிரம் விசயங்கள் இருந்தாலும் பேசி முடித்துக் கொள்ள இருவருக்குமே இஷ்டமில்லை…
தன் இரு கரங்களுக்குள் அவள் வலக்கரத்தை பிடித்து வைத்திருந்தான். ஏதேதோ நினைத்துக் கொண்டே மிடறு விழுங்கிக் கொண்டு இருந்தான். அவன் விழுங்கிய வேகத்தில் மொத்தக் கடலும் காலியாகி விடுமோ என்று எண்ணும் அளவிற்கு தொண்டை முடிச்சு ஏறித் தாழ்ந்தது..!
‘’போன உடனே வேலையில ஜாயிண்ட் பண்ணிடுவியா வானதி..? நான்கூட வந்து எல்லாம் செட்டில் பண்ணி வச்சிட்டு வரட்டுமா..?” என்றான் ஈரமான வார்த்தைகளோடு.
அவனின் உணர்வுகளை புரிந்தவளாகச் சொன்னாள்.
‘’ நந்தா, இத்தனை எமோசனல் ஆகவேண்டாம். பூனே எனக்கு பழக்கமான இடம்தான்..! மாமா, அவருடைய பிள்ளைங்க எல்லாரும் அங்கே இருக்காங்க. பார்த்துக்கறேன்.”
‘’நான் உன் புருசன் வானதி.” என்றான் உதடு துடிக்க..! அதைச் சொல்லும்போது அவன் உணர்வில், வார்த்தையில் இருந்த ஆற்றாமையில் நெகிழ்ந்து போனாள்.
‘’அது என்னுடைய பாக்கியம் நந்தா..! உங்களை மாதிரி ஒரு நேர்மையான, அன்பான, சாதுவான, சகலமான மனிதரை நான் இனி என் வாழ்கையில பார்க்க முடியாது.” ஆத்மார்த்தமாய்ச் சொன்னபோது அவனுடைய நெகிழ்வு இன்னும் இன்னும் கூடிப் போனது..!
‘’அப்புறம் ஏன் வானதி இந்த முடிவு..? சேர்ந்து இருக்கிறது சாத்தியமில்லைன்னு தெரிஞ்சா தனியாவது இருந்திருக்கலாமே. இப்படி கண்காணாம போய் என்னை குற்றவுணர்வில் தவிக்க வைக்கணுமா..?”
‘’யார் கூடயிருந்தும் உங்களை பிரிக்க வரல நந்தா நான்..! உங்க வாழ்க்கைக்கு வரமா வந்த நானே உங்க வாழ்க்கையை சாபமா மாற்றணுமா..?”
‘’அய்யோ’னு கடலை நோக்கி கத்தணும் போல இருக்கு..! இந்த முடிவுல எனக்கு துளிகூட இஷ்டமில்லை..! ஆனால் நீ என் உள்ளங்கையில் இருக்கிற பட்டாம்பூச்சி வானதி. இறுக்கி பிடிச்சா உன்னை ஓரேடியா இழந்திடுவேணோன்னு பயமா இருக்கு..! உன்னை கோடைவாசம் தான் அனுப்பறேன். வனவாசம் இல்ல. நீ இளைப்பாறிட்டு மறுபடி என்கிட்ட திரும்பி வந்தாகணும்.” என்றான் அழுத்தமாக..!
அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவன் அறிந்திருக்க நியாயமில்லை, இது கோடைவாசமுமில்லை, வனவாசமும் இல்லை, இது அஞ்ஞான வாசமென்று..! அறிந்த அவளுக்கு மனம் எதிரில் இருந்த அலைகூட உலையாய் கொதித்தது..!
இருட்டு வந்து மேலே விழுந்து அவர்கள் நிழலைத் திருடிக் கொள்ள, போர்த்திய இருளை விலக்கிக் கொண்டு எழுந்து நின்றார்கள். கலங்கரை விளக்கம் சரியாய் முகத்தில் டார்ச் அடித்தது..!
மணலில் கால் புதைய நடந்தார்கள். கணவன் மனைவி என்ற சம்பிரதாயங்கள் மறந்து, காதல் துளிர்த்திருந்தது கண்ணியமாய் இருவருக்கும் நடுவில். உறங்கிய தபஸ்வியை இன்னும் இன்னும் தனக்குள் இறுக்கிக் கொண்டாள்.
மெயின் ரோட்டிற்கு வந்து காரை நோக்கி சின்னப்பயணம். வழி நெடுகிலும் தெருவிளக்குகள் தலைகுனிந்து மனிதர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அந்த வெளிச்சத் திட்டைச்
சுற்றியபடி ஈசல்பூச்சிகள் குலவை பாடிக்கொண்டு இருந்தன..!
ஒவ்வொரு கம்பத்திற்கு கீழும் நடந்த அந்த கச்சேரியை புன்முறுவலுடன் ரசித்துக் கொண்டே நடந்தவளை திரும்பிப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தினான்.
கேட்காமலே கேள்விகள் எங்கே புரிகிறதோ, அந்த உறவுகளுக்குள் பின்னிக் கிடக்கும் பந்தவேள்விக்கு நிகரான பந்தம் உலகில் இல்லை..!
‘’ஒண்ணுல்ல நந்தா சின்ன வாழ்க்கை தானே அந்த விட்டில்களுக்கு அதுக்கே எத்தனை ஆர்பரிப்பான சந்தோசம் பாருங்க..! அப்படி இருக்கணும்..! சின்னதோ பெருசோ சந்தோசத்தை அனுபவிச்சு கடந்துக்கணும் இல்ல” என்றவளை திரும்பி முறைக்க அவள் சிரிப்புச் சத்தம் அவனை இன்னும் கோபமாக்கியது..!
‘’ஊருக்கெல்லாம் சொல்லுச்சாம் பல்லி, களனிப்பானையில குதிச்சுச்சாம் துள்ளி. சின்ன வாழ்க்கை தானே அதுல எதுக்கு இந்த சத்தியசோதனை..! பிரச்சனைகள் நிழல் மாதிரி தான்..! காலையில இருக்கிற நீளம் மதியம் இருக்காது. மாறிட்டே இருக்கும். மிருதுளா அற்புதமான பொண்ணு..! இந்த பிரச்சனையை நீயும் நானும் அணுகினதை விட அவள் தான் பக்குவமா அணுகி இருக்கானு உன்னால மறுக்க முடியாது..!
நாம மூணுபேரும் நல்லவங்களா இருக்கிறது தான் பிரச்சனையா..? எனக்கு அதுவும் தெரியல..! கல்லுக்குள்ள இருக்கிற தேரைக்கும் ஆண்டவன் உணவை வைப்பான் வானதி..! அவன் கருணையாளன். நிச்சயம் நம்முடைய பிரச்சனைகளை கொஞ்சம் பொறுமையா நாம யோசிச்சு இருக்கலாம்.” என்றான் தவிப்பாக.
நடந்து கொண்டே இருந்தவள் நடைமேடையில் அப்படியே நின்றாள். கண்கள் இலக்கின்றி கருத்த கடலையும் வெளுத்த அலையையும் விரக்கியது. நான்கு எட்டு நடந்தவன் திரும்பிப் பார்த்தான். அப்படியே நின்றவளின் அருகில் வந்தான். மெல்ல தோளைத் தொட்டு அவள் விரக்தி களைத்தான்.
‘’கல்லுக்குள்ள இருக்கிற தேரைக்கும் உணவை வைத்தான் தான் நந்தா அது இறைவனுடைய கருணையைக் காட்டலாம். ஆனால் பாவம் அந்த வாயில்லா ஜீவனை எதுக்கு நந்தா கொண்டு போய் கல்லுக்குள்ள வச்சாரு..? தன்னை கருணையாளன்னு ஊரே போற்றவா..? இது கருணையா அல்லது கடவுளோட ஏகாதிபத்தியமா.?
கருணை தர்ற கடவுள் தானே கஷ்டமும் தர்றாரு.எல்லாருக்கும் ஒரே விதமான தேவையைக் கொடுத்துட்டு,அந்த தேவையை ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை முழுவதும் உணர்வுபூர்வமாகவும், சிலருக்கு வாழ்க்கை முழுசும் உணவுக்காகவும் வாழணும்னு ஏன் நந்தா நியதி வைக்கிறாரு அந்தக் கடவுள்.பாறையில இருக்கிற தவளை தாவிக் குதிக்கிறப்போ, கல்லுக்குள்ள இருக்கிற தேரை மட்டும் வந்து விழுகிற சின்னப் பூச்சிக்காகவே மூச்சு முட்டிட்டு நகரக்கூட வழியில்லாத வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கே, அந்த வாழ்க்கை எதுக்கு,கடவுளோட கருணையை உலகத்துக்கு நிரூபிக்க மட்டும் தானா?அப்படிப் பார்த்தா, தாவிக் குதிக்கிற தவளைக்குத் தானே கடவுளோட காருண்யம் அதிகமா இருக்கு.
உணவுக்கு மட்டும் வாழ்ற தவளைக்கும் உணர்வு இருக்கு நந்தா அதைப் புரிஞ்சுக்கங்க.” ஆக்ரோசமாய் விழுந்த வார்த்தைகளில் நந்தா ஆடிப் போய் நின்றான். இந்த வானதி அவன் பார்வைக்கு புத்தம் புதிசு.
ஒரு நொடியில் தன்னை மீட்டெடுத்தவள், மெல்ல வேகமாய் கண்களை துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள்.
‘’பயந்துட்டீங்களா.? வாங்க போகலாம்.” அவன் தோள் குலுக்கிச் சிரித்தாலும் அவன் மனசு மட்டும் அந்த விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள் போல் அவள் வார்த்தைகளைச் சுற்றிக்
கொண்டே இருந்தது,
வழக்கமாக சாப்பிடும் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டார்கள். தபுஸ்விக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு வாய் துடைத்து விட்டாள். வீட்டில் எல்லோருக்கும் உணவும் பரிசுகளும் வாங்கிக் கொண்டார்கள். நந்தா அவளுக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கித் தந்தான்..!
மாமா வீட்டு முகவரி, மருத்துவமனை பற்றிய தகவல்களை வழிநெடுக துருவித் துருவிக் கேட்டுக் கொண்டே வந்தான். உடன் வர அவன் அத்தனை அடம் பிடித்தும் அவள் மறுத்ததை அவன் ரசிக்கவில்லை..!
‘’உங்களுக்கு கடமை இருக்கு நந்தா நான் மறுக்கல. நான் எந்த பந்தத்தையும் முறிச்சிட்டுப் போகல..! விலகித்தான் போறேன்..! அதுதான் நம்ம மூணு பேர் வாழ்க்கைக்கும் நல்லது..! நான் எவ்வளவு தூரம் போனாலும் என் வாழ்க்கை கயிற்றோட ஒருமுனை உங்ககிட்ட தந்துட்டுத் தான் போறேன்..! கண்ணுக்கு தெரியாத தூரத்தில இருந்தாலும் உங்க கட்டுப்பாட்டுல தான் நந்தா நான் இருப்பேன்..! உங்க கை அசைவில தான் நந்தா நான் இருப்பேன். கை விட்டுட மாட்டிங்கங்கற நம்பிக்கையோட இருப்பேன்.
இந்த உலகமே சலிச்சுப் போகிற ஒரு நொடியில் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஓடி வந்து தோள் சாய்ஞ்சுக்க ஒரு சிறந்த நண்பன்..,” ஒரு நொடி தாமதித்து,
‘’...கணவன் எனக்காக இங்கே இருப்பார்ங்கிற நம்பிக்கை இருக்கு நந்தா..! வேறென்ன நந்தா நமக்குள்ள தேவைப்பட்டு இருக்கு..? ஆறுதலுக்குள்ள அடைக்கலமான உறவுதானே நம்மோடது..!” அத்தனை உணர்வுகளும் வெடித்துச் சிதற அவளுடைய உதடு ஒரு நொடி துடித்து அடங்கியது..!
வண்டியை ப்ரேக் அடித்து ஓரங்கட்டி இருந்தான்..! திரும்பிப் பார்த்தான்..! தப்ஸ்வி ஆனந்தமாய் சீட்டில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்க, வானதியை இழுத்தணைத்து இறுகத் தழுவினான்.
ஆரத் தழுவிய ஆலிங்கனம். உயிர்கள் கரைந்து உருமாறி இடம்மாறிக் கொள்ளும் அளவிற்கு ஆக்ரோசமான தழுவல்..! தோளில் முகம் புதைத்து, தோற்றுப் போன தங்களுடைய உறவை எண்ணி கண்ணீரில் கரைந்தான்..!
அவளை விட அவனே நிறைய அழுதான்..! சொல்லத் தெரியவில்லை அந்த நிமிசத்து வலியை… உடல் தேவைக்காக உருவானதல்ல அவர்கள் பந்தம். இதுபோன்ற பந்தம் இனி யாருக்கும் வாய்க்க போவதுமில்லை..!
இரண்டாவது என்ற முரண்பாட்டை வென்று இருந்தது அவர்கள் உறவுநிலை.
”...பழகி வந்த புதிய சுகம் பாதியிலே முடிந்தாலும்
எழுதி வைத்த ஓவியம் போல்
இருக்கின்றாய் இதயத்தில் நீ
இதயத்தில் நீ
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்...”
28
அந்த இரவு மட்டும் அத்தனை அழகாய் ஜொலித்தது. மை தீட்டிக் கொண்ட வெண்ணிலவு போல் ரசனையாக இருந்தது..! பிரிவு என்பது நிதர்சனமான பிறகு அதை அழகாய் ஏற்றுக் கொள்வதுபோல் பக்குவப்பட்ட நிலை வேறெதுவும் இல்லை..!
வானதி மறுபிறப்பு எடுத்தது போல் மீண்டும் பழைய உருவெடுத்தாள். முழு இரவும் பேசி சிரித்து, கல்பனாவையும் மற்றவர்களையும் இலகுவான மனநிலைக்கு மாற்றி வைத்தாள்..!
‘’புனேவுக்கு போகாம அந்த பூந்தமல்லியில தான் இரேன்டி..! எனக்கு யாருமே வேணாம் வானதி..! எங்க வாழ்க்கைக்கு நீ வேணும்னு ஆசைப்பட்டது உன்னை லவ் பண்ணது எல்லாம் நான் தான்..! நான் உன்கூடவே வந்திடறேன் வானதி..! என் பிள்ளைகளை விட உன்னைத் தானே நான் நம்பறேன்..!” மருமகள் முகத்தை கைகளால் ஏந்திக் கொண்டு சொன்ன போது அப்படியே உருக்குலைந்து போனாள் வானதி..! உறுதியெல்லாம்
இறுதிபட்டு போயிருக்க, கண்களை மூடிக்கொண்டாள் வலி மறைக்க..!
‘’உருவம் தானே அத்தை தள்ளி இருக்கப் போகுது..? உள்ளம் எப்பவும் உங்கக்கிட்டத் தானே இருக்கப் போகுது.” சமாதானமாய்ச் சொன்னவளை முறைக்க, அழகாய்ச் சிரித்தாள்.
‘’வீட்டில வயசுக்கு வந்த பொண்ணு இருக்கா..! அவ கல்யாணம் இருக்கு..! விக்கியோட வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கு..! பாப்பா ஸ்கூலுக்கு போகப் போறா. இப்படி ஆயிரம் கடமைகள் காத்திருக்கு கல்பனாமாவுக்கு. அதையெல்லாம் விட்டுட்டு என்கூட ஓடி வந்தா எப்படி..?” தலையோடு தலை சேர்த்து அன்பு செய்ய நெகிழ்ந்து கிடந்தார்கள் அனைவரும்..!
ஓராயிரம் இரவுகளுக்கான நினைவுகளை ஓரிரவில் உருவாக்கிக் கொண்டாள். குழந்தை பற்றிய உண்மையைச் சொல்லாதது இன்னும் மனசை கசக்கியது..! அந்த நிஜம் மட்டும் தெரிந்தால் நிச்சயம் அவளை நகர அனுமதிக்க மாட்டார்கள். கனவுகளைப் போல கர்பத்தையும் யாரும் அறியாமல் தனக்குள்ளே சுமந்து கொண்டு, அடிக்கடி வந்து போவதாய் பொய் சொல்லிவிட்டு அதிகாலையில் அவர்களை கடந்து போக வேண்டிய பயணத்துக்கு ஆயத்தமாகி விட்டாள்!
* * *
ரயிலடிகளில் சந்தடிகள் ஆரம்பமாகி விட்டு இருந்தது. பேட்ச் அணிந்த கூலிகளும் நடைபாதை வியாபாரிகளும் சோர்வான விழிப்போடே அங்கே நடமாடிக் கொண்டு இருந்தார்கள். வெயிட்டிங் ரூமில் பலர் தரையில் பெட்சீட் விரித்து படுத்திருக்க, கூக்குரல் இட்டபடி ரயில் வண்டிகள் ஆரவாரம் செய்தும் கடந்து கொண்டும் இருந்தன..!
பச்சை வண்ண சில்க் காட்டனில் ஒதுக்கவே முடியாதா ஓவியம் போல் இருந்தாள். பசிநேரத்து தாளிப்பு போல் கண்ணியத்தை விரும்பும் கண்களுக்கு எல்லாம் கண்டிப்பாய் ருசிப்பாள். ஒரு நல்ல தோழியாய், அன்புத் தங்கையாய்.
6:50க்கு வந்திருக்க வேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் இன்றும் தாமதமாக்கி விடும்போல் இருந்தது..! முன்கூட்டியே வந்திருந்ததால், வெயிலில் கிடந்த சில்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள். வெயில் விழுந்து பார்வையை கட்டுப்படுத்த கண்களை குறுக்கிக் கொண்டாள்.
நந்தாவின் அசாதாரண மௌனம் என்னவோ செய்தது..! அவனுள் நிகழும் குற்றவுணர்வு போராட்டத்தை யூகிக்க முடிந்தது. பக்கவாட்டில் இருந்த பையில் இருந்து கைநீள அட்டைப் பெட்டியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். அவளுள்ளும் வெகு நீண்ட நேரமாய் ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டு இருந்தது… கர்பத்தை நந்தாவிடம் சொல்வதா வேண்டாமா என்று.
‘’நந்தா”
‘’ ம்...”
‘’ஏன் அமைதியாவே இருக்கீங்க..?”
‘’என் உணர்வுகளைப் பத்தி உனக்கென்ன கவலை வானதி..! நீ சந்தோசமா கிளம்பு.” என்றான் விட்டேர்த்தியாக.
‘’தவிர்க்க முடியல நந்தா..! புரிஞ்சுக்கங்க..!”பதிலில்லை.
மூன்றாவது ப்ளாட் பாரத்தில் இருந்து இன்னொரு ரயில்வண்டி புறப்பட்டுச் சென்றது. அதுபோட்ட சத்தத்தில் பிரிவு பயமுறுத்தியது.
அவன் வலக்கையை எடுத்து தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள். காரணம் அவனுக்கு புரியவில்லை. புரிந்த அவளுக்கு அதை விவரிக்கத் தெரியவில்லை..! குழந்தையின் தலைவருடி அவன் குதூகலிப்பது போல் கற்பனைத்துக் கொண்டாள்..!
மடியில் இருந்த பெட்டியை அவனிடம் நீட்ட, கேள்வியாய் பார்த்தபடி வாங்கிக் கொண்டான். புருவத்தை தூக்கி பிரித்துப் பார்க்கச் சொன்னாள். திறந்து பார்த்தான்..! வெள்ளை டிஷ்யூவை விலக்க, தம்பூராவை மீட்டியபடி பக்த மீரா..! வெள்ளை பளிங்குச் சிலை. அதன் கையில் இருந்த தம்பூராவோ இழுத்துகட்டிய நரம்பு தந்துகிகளுடன் உயிர்ப்பாய் இருந்தது.அந்தக் கண்களில் இருந்த ஜீவன் அந்த ஜீவனுக்குள் இருந்த ப்ரேமை... சிலையே அவன் உயிர் கருக்க, அதை ரசித்துக் கொண்டு இருந்த அவனையே ரசித்தபடி அருகில் அமர்ந்திருந்தாள் வானதி..!
‘’ மீரா” என்றான் மெல்லிய முணுமுணுப்பாய்.
‘’ இல்ல.., வானதி. இந்த நந்தகோபலுக்காக மட்டும் வாழற வானதி.” அந்த வார்த்தையில் அவனுடைய அத்தனை அணுக்களும் அதிர்ந்து அடங்க, சிக்காத வார்த்தைகளுக்குள் அவன் சிக்குப்பட்டுக் கிடந்தான்..!
அவன் ஒற்றைக் கரத்தை எடுத்து தன் மொத்தக் கரத்திற்குள் மறைத்துக் கொண்டாள்.
‘’முடியல நந்தா..! என்னால உங்களை பங்கு போட்டுக்க முடியல.” உதடு துடித்து வெடித்துக் கொண்டு அழுகை வந்தது.
‘’இதை நான் சொன்னால் எல்லாரும் சிரிப்பாங்க..! காதலிச்சு கல்யாணம் பண்ணிட்ட மிருதுளா எல்லாத்துக்கும் தயாரா இருக்கும் போது நீ எதுக்கு இத்தனை பண்றேன்னு கூடத் தோணும்..! தெரியல, மனிதர்களுக்கான அன்பின் எல்லை என்னன்னு எனக்குத் தெரியல. இந்த உறவு இப்படித்தான் இருக்கணும்னு எந்த வரைமுறையும் இல்ல.
கணவன் மனைவின்னா, காமமும் காதலும், ஆளுமையும், அடிக்கடி போடற சண்டையும் தான் அடையாளமா நந்தா..? அதைத் தாண்டி எனக்கு உங்க மேல வந்த ஈர்ப்புக்கு என்ன பேர்னு தெரியல..! உங்ககூட சேர்ந்து வாழ்றதுங்கறது உங்க அருகாமையானு எனக்குத் தெரியல.! அதைத்தாண்டி நமக்குள்ள இருந்த பிணைப்புக்கு ஈடான உறவுநிலை எதுவுமில்லை நந்தா.
நான் ராதையா இருந்து உங்க காதலுக்கு காத்திருக்கல. பாமாவா, ருக்மணியா நின்னு உங்கமேல உரிமைச் சண்டை போடவும் விரும்பல. எனக்கு எதுக்கு நந்தா உரிமை..? நான் உங்க மீரா..! இந்த நந்தகோபலனுடைய மீரா... தன் காதலை அவன் காலடியில் சமர்பிச்சு, காலமெல்லாம் காத்திருந்து, இறுதியில் தனக்கென எந்த அடையாளமும் இல்லாமல், காற்றோடு கரைஞ்சு கண்ணனுக்குள்ள உறைஞ்சு போன பக்த மீரா.
எனக்கு இயல்பான உணர்வுகளோட, ஏத்துகிட்டோ சகிச்சுகிட்டோ அங்கே இருக்க முடியல.! கண்ணனை தனக்கானவனா மட்டும் மீரா நினைக்கல. ஆனால், தான் அவனுக்கானவள் மட்டும்தான்னு நினைச்சா. அதனால தான் அவளால யார் கூடவும் பொருந்தி வாழ முடியல. என் நிலைமையும் கிட்டத்தட்ட அதுதான் நந்தா..!
எங்கே இருந்தாலும் என் நிழலும், சுவாசமும், என் நினைவும் உங்களை மட்டும்தான் பேசும்..! மத்தவங்களுக்கு இந்த நிலையைச் சொல்லாமல் நான் போகலாம். ஆனால் உங்களுக்குச் சொல்லாமல் போறதுல எனக்கு துளிகூட விருப்பம் இல்லை நந்தா..என்னை மன்னிச்சுடுங்க.” அவனை நெருங்கி அமர்ந்தாள். அவன் நொறுங்கிக் கிடந்தான்தப்புக்கள் நிகழவில்லை எங்குமே... ஆனால் சில தவறுகள் நிகழ்ந்து போனதால், அவர்கள் தவித்துக் கொணடு இருக்கிறார்கள்... உணர்வுகளால் தகித்துக் கொண்டு இருக்கிறார்கள்... உலகத்தின் பார்வையை தவிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்... உறங்காத உணர்வுகளால் தங்களை மறைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கூக்குரலிட்டபடி வண்டி வந்தது, நின்றது, தாமதித்து மனிதர்களை கவ்விக் கொண்டு சென்றது.
அவன் எதுவுமே சொல்லவில்லை. இறுதி நிமிசம் வரைக்கும் அவள் கைகளைப் பற்றிக் கொண்டே அமர்ந்திருந்தான். பிரியா விடை என்ற வார்த்தையே அவனுக்கு அபத்தமாகத் தான் தோன்றியது..!
’...வந்து போ, கால் பண்ணு… தகவல் குடு...’ இப்படி எந்தச் சம்பிரதாய வார்த்தைகளுமே அங்கே பகிரப்படவே இல்லை..! அதற்கு அவசியமும் இல்லை.
வலசைக்கு வந்து போகும் பறவைகளுக்கு எல்லாம் வழியனுப்பு வைபவம் தேவையில்லை. இளைப்பாற வந்த பறவைகள் இன்முகத்துடன் திரும்பி போவதைத் தவிர, வேறென்ன தேவை அவைகளுக்கு..? அவனுடைய அந்த மணிப்புறாவும் தன்னுடைய பணி முடித்து திரும்பிப் போகிறாள். தேவையென்ற சிந்தனை துளிர்க்கும் முன்னே திரும்பி வருவாள். முடித்துக் கொள்ள விரும்பாத அவனோ அடுத்தென்ன என்ற கேள்வியை கேட்கவே இல்லை. ஆனால் வெயில் விழுந்த அந்த இடத்திலேயே மணிக்கணக்காய் அமர்ந்து இருந்தான்.
தரையில் கிடந்த தன்னுடைய தனி நிழலை வேதனையாய் பார்த்தான். இத்தனை நிமிசமாய் இரண்டற கலந்திருந்த அவள் நிழல், அவனை இல்லாமல் கொன்று கொண்டு இருந்தது.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ தெரியவில்லை.. நண்பகலை தீண்டி இருந்த நிமிசம் அலைபேசியின் அலறல் கொஞ்சமாய் அவன் உணர்வை களைக்க வேகமாய் எடுத்தான். அவள் தான்..! வேகமாய் உயிர் கொடுத்தான் அழைப்பிற்கு.
‘’நந்தா”
‘’வானதி”
‘’அங்கேயேதான் இருக்கீங்களா இன்னும்.” அங்கே புன்னகை விரிய, இங்கேயும் இதழ்கள் விரிந்தது..!
‘’எப்படி..?” என்றான் சிரிப்பாடிக் கொண்டு.
”அதன் ரயில் கூவுதே.”
‘’எங்கே இருந்து கால் பண்றே வானதி..?’
‘’ரேணிகுண்டால இருந்து,,! இப்போத்தான் ரயிலை விட்டு இறங்கினேன்” அவள் மென்மையாகச் சொல்ல, அவனுக்கு சின்ன பரபரப்பு பற்றிக் கொண்டது..!
‘’என்னாச்சு வானதி..? ஏதாவது பிரச்சனையா..?” குரலில் வழிந்த பதட்டத்தில் வழிந்து ஓடிய அன்பை ரசித்தவளாய் மென்மையாய் சிரித்தாள்..!
”சொல்ல வந்த செய்தியை இன்னும் முழுசா சொல்லி முடிக்கல. அதை உங்ககிட்ட சேர்க்காமயும் போக மனசு ஒப்பல. முன்னமே சொல்லி இருந்தா என்னை அங்கிருந்து வர அனுமதிச்சே இருக்க மாட்டீங்க.” பீடிகை பலமாக, அவன் நாடியில் துடிப்பின் வேகம் அதிகமானது..!
‘’நான் நா..ன் கர்ப்பமா இருக்கேன் நந்தா.உணர்வுப் பூர்வமான அம்மாவா என் தபஸ்விக்கு இருந்தேன். இப்போ உடல் ரீதியாகவும் அம்மாவாகப் போறேன்” அவள் சொல்லச் சொல்ல நந்தா இன்னுமின்னும் அலைப்புறுதலில் நின்றான். உடலும் உள்ளமும் அவளை நோக்கி ஓட, கோபமும் கூட முட்டிக் கொண்டு வந்தது.
‘’நீயெல்லாம் ஒரு மனுசியே இல்ல வானதி. நான் அப்படி என்ன தப்பு செய்தேன்..? எனக்கு மட்டும் ஏன் இத்தனை வலியான தண்டணை..! நீ எங்கேயும் போக வேண்டாம். முதல்ல அப்படியே சென்னைக்கு திரும்பி வர்றே..! இல்லாட்டி நாளை காலையில நான் அங்கே இருப்பேன்..!
என்ன நினைச்சே நீ மட்டும் தான் தியாகி..! நாங்க எல்லாம் சுயநலக் கிருமிங்கன்னா..? அம்மா கிட்ட சொன்னா அவங்க எத்தனை சந்தோசப் படுவாங்க தெரியுமா..? எனக்கு உன்னை இப்பவே பார்க்கணும் வானதி.” அடுக்கடுக்காய் தன்னுடைய உணர்வுகளை கொட்டிக் கொண்டு இருந்தான். இடைபுகுந்து தடுக்காமல் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள்..!
‘’அத்தைகிட்ட சொன்னா சந்தோசப்படுவாங்க தான் நந்தா, ஆனால் மிருதுளா சந்தோசாப்படுவாங்களா..?” அவள் கேள்வி வந்து அறைந்த வேகத்தில் அவன் நிஜமாகவே நிலைதடுமாறிப் போனான். கண்களை மூடி அமைதியாக நின்றான்.
‘’பதில் சொல்ல முடியலயில நந்தா..! அதை நான் உணர்ந்ததால் தான் என்னை இயற்கை வெளிப்படுத்திக்கறதுக்கு முன்னாடி அங்கிருந்து விலகி வர கொஞ்சம் கடினமா இருந்தேன்..! வலியும் வருத்தமும் அவங்க உயிரை வதைச்சிட்டே இருக்கும் நந்தா, அது நல்லதில்ல..! அவங்க வெகு இயல்பான மனுசி..! அவங்க வாழ்க்கையில தான் தெரிஞ்சோ தெரியாமலோ நான் பங்குக்கு வந்துட்டேன். நிம்மதியில வரவேண்டாம்னு தான் சொல்லாம கிளம்பி வந்தேன்.”
அவள் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளாமல அவன் நின்றான். அவன் நரம்பெல்லாம் கோபத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து இருந்தது ஒருசேரவே..!
‘’நீ எதுவும் பேசவேண்டாம்..! நீ அங்கேயே இரு. நான் ப்ளைட் பிடிச்சு வந்து சேர்றேன்..!” அலைபேசியை துண்டிக்க போக, குரல் உயர்த்தி கண்டிப்பாய் வார்த்தைகள் வந்தது..!
‘’இன்னொரு விசயமும் இருக்கு நந்தா..! நான் புனே போகல..!”
சுரீரென நிமிர்ந்தான்.
‘’என்ன சொல்றே..? வானதி உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா..?”
‘’இல்ல நந்தா..! நான் புனேக்கு போகல. அங்கேயும் எனக்கு யாருமில்லை. அம்மா இருந்த போதே என்னைப் பத்தி யோசிக்காத மாமாவும் அவர் குடும்பமும் இனிதான் எனக்கு உதவிடப் போறாங்களா..?” அவள் மெல்லச் சிரிக்க நந்தா முழுக்கவே தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து இருந்தான்..
‘’ஏய் முட்டாள்..! உனக்கு அறிவில்ல..? மனசுக்குள்ள பெரிய இவன்னு நினைப்பா..? உன்னைத் தவிர இங்கே யாருக்கும் அறிவில்லை அப்படித்தானே..?”
‘’நந்தா ப்ளீஸ்..!”
‘’நண்பனுக்கான ஒரு அங்கீகாரத்தை தந்திருந்தாலாவாது என்னை மதிச்சு சொல்லியிருப்ப இல்லையா..?”
‘’நான் சந்தியாகிட்டாயும் எதுவும் சொல்லல நந்தா.”
சொற்ப நொடிகள் அசௌகரியமான மௌனம் நிலவியதும் அதற்கு காரணம், இந்த பெரும் அதிர்வை அவனால் எதிர்கொண்டு கடந்து வர இயலவில்லை என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
‘’நான் உங்க எல்லாரையும் விட்டுட்டு காணாமல் எல்லாம் போகல..! தள்ளித்தான் போறேன். அதுவும் நான் போற இடம் தெரிஞ்சா நீங்க கண்டிப்பா என்னைத் தேடி வருவீங்கன்னு எனக்குத் தெரிஞ்சதால தான் சொல்லாமல் போறேன். மற்றபடி உங்க அடையாளத்தைத் தான் அடிவயித்துல சுமந்துட்டுப் போறேனே.” இடக்கையால் வயிற்றைத் தடவியபடி சொல்ல, கண்கள் இருவருக்கும் ஒருசேர பொங்கியது..!
‘’எனக்கு மட்டும் என் குழந்தையைப் பார்க்கிற ஆசை இருக்காது அப்படித்தானே..? ஏன் வானதி..! எப்பப் பார்த்தாலும் எல்லாருக்காகவும் வாழ்றேன்னு சொல்லிட்டு இந்த நிமிசம் உலகத்துலயே முதல் சுயநலவாதி நீதான்னு நிரூபிச்சுட்டு இருக்கே.”
கொஞ்சம் சத்தமாகவே அவள் சிரிக்க, அவன் கோபம் இன்னும் உச்சமானது.
‘’திட்டுங்க நல்லாத் திட்டுங்க..! அழுத்தமான முடிவா இருந்தாலும் இதுதான் ஆரோக்கியமான முடிவு..! மிருதுளாங்கிற மனுசியுடைய மனோதிடத்தை கூறுபோட்டு பார்க்க கூடாது நந்தா..! நான் உங்களை விட்டு எங்கேயும் போகல. குழந்தை பிறந்ததும் முதல் தகவல் உங்களுக்குத்தான் வரும்..!
நான் போறது ஒரு மிஷினரி ஹாஸ்பிடலுக்கு, கல்கத்தாவுக்கு. பாதுகாப்புக்கும் நிம்மதிக்கும் துளி பங்கம் இல்லாத இடம்..! என்னை நினைச்சு வருத்தப்படாதீங்க நந்தா. உங்க கிட்ட பேசிட்டே தான் இருப்பேன்..! என்னைக்கு உங்க எல்லாரையும் பார்க்கணும்னு தோணுதோ, அந்த நிமிசம் ஓடோடி வந்துடப் போறேன். ப்ளீஸ்.”
‘’இனிமேல் நமக்குள்ள வெறும் அலைபேசி தொடர்பு மட்டும் தான்னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்ற..! அப்படித்தானே..?”
‘’தெரியல இந்த நதியோட்டத்துல நம்ம வாழ்க்கைபடகு எந்தக் கரைக்கு போய்ச் சேரப் போகுதுன்னு தெரியல..! நாம எதையும் திட்டமிடல..! நம்முடைய இந்த வாழ்க்கை பாய்மரக்கப்பல் மாதிரி தானே நந்தா. வேறு எந்த உந்து சக்தியும் தேவைப்படாமல், கடல் மேல வீசும் காற்றின் ஆற்றலைக் கொண்டு மட்டுமே தன்னுடைய பயணத்தை செய்யும் பாய்மரக்கப்பல்..! பாய்மரக் கப்பலை செலுத்த பெருசா இயந்திரங்களின் துணை தேவை இல்ல, காற்றை நம்பி தன்னைத் தந்தால், அது போகவேண்டிய திசையில சரியா கொண்டு போய்ச் சேர்த்திடும்..!
இந்த வானதியின் வாழ்க்கையும் பாய்மரக் கப்பல் தான். அம்மா இருந்தபோது காற்று என்னை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்தது..! யுகத்திற்கு தேவையான அன்பை என் இதயத்துலயும், உங்க பிம்பத்தை எனக்குள்ளயும் சுமந்துட்டு நிற்கிற என்னை, இப்போ காற்று வேறெங்கோ செலுத்துது..! இது முதலும் அல்ல, முடிவும் அல்ல... பயணம்... காற்றோடு என்னை செலுத்தும் பாய்மரத்தின் பயணம். முழு மனசா எனக்கு விடை கொடுங்க நந்தா.” குரல் கமற அவள் கேட்டபோது தலை அசைப்பதைத் தவிர அவனுக்கு வழிதான் ஏது..!
இன்னொரு நாள்காட்டியின் சுழற்சியில் காற்றின் திசைவேகத்தில் அந்த பாய்மரக்கப்பல் தன் கடலில் வந்து சேரும் என்று திசை பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.காத்திருப்பதும், தவமிருப்பதும் பெண்களின் ஆபரணம் என்று யார் சொன்னது.. அது ஆண்களுக்கும் அமைந்து போகிறது தான்..!
இதயத்தில் ஒருத்திக்கு இடம் கொடுத்திருந்தான். ஆனால் இன்னொருத்திக்கோ இதயத்தையே கொடுத்திருந்தான்..! இரண்டுமே சுயநலமில்லாத உண்மையான பேரன்பு..!
கண்ணுக்குள் விழுந்து நெஞ்சுக்குள் கரைந்துபோன தன் பக்த மீராவின் அன்பில் சிலிர்த்துப் போனான்,,,மூடித்திறந்த கண்களுக்குள் அவள் ஜோதியாய் ஜொலித்தாள்.
காற்று வீசும் திசையை வேகமாக திரும்பிப் பார்த்தான்.! தரை மேல் வீசிய காற்று, அலைமேல் வீசி, அந்த பாய்மரக் கப்பலை தன் திசை நோக்கி நகர்த்தி கரைசேர்க்க அத்தனை கடவுள்களிடமும் விண்ணப்பம் வைத்தான். தன் நிழலை மிதித்துக் கொண்டான். பாதையை விழுங்கி விழுங்கி பயணங்கள் நடந்தேறியது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு பயணத்தில், தன் அன்புத் தோழியின் நிழல். தன் நிழல் மீது விழுந்து துணையாக நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு குறையாமல் இருந்தது..!
‘’…இங்கே. ஒருவன் காத்திருந்தாலும் இளமை
அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம்
அமைதியில் வாழ்க மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க வாழ்க வாழ்க
Currently viewing this topic 1 guest.
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: yogeswathy Balan Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page