All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நேசம் 17

 

VSV 22 – நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ
(@vsv22)
Trusted Member Author
Joined: 7 months ago
Posts: 18
Topic starter  

நேசம் 17

“பாரி நான் கேட்கிறேன்னு என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. இன்னும் உங்களோட காதலனை நீங்க நினைச்சுக்கிட்டு தான் இருக்கீங்களா?” ஏன் கேட்கிறோம் என்று தெரியாமல் போனாலும் கேட்டு வைத்தான் பிரகலாதன்.

“நான் அவரை நினைக்க எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ரோஜா. அவர் மேலான உரிமைகள் எல்லாம், ஒருவார்த்தை கூட சொல்லாம என்கிட்ட இருந்து பறிக்கப்பட்டுடுச்சு. இனி நான் யாரோ, அவர் யாரோ.” என்றவள், அழுகிறாள் என்பதை உணர முடிந்தது பிரகலாதனால்.

“உங்களை வேண்டாம் னு சொன்னவருக்காக நீங்க அழக்கூடாது பாரி. அவர் முன்னால் வாழ்ந்து காட்டணும்.” என்க,

“வாழ்ந்து காட்டி என்ன பண்ணப் போறேன் ரோஜா. முதலில் என்னால் எப்படி வாழ்ந்து காட்ட முடியும். அவரோட சேர்த்து நான் எப்பேற்பட்ட கற்பனைகள் எல்லாம் கண்டு வைச்சிருந்தேன் தெரியுமா? அதையெல்லாம் இன்னொருத்தர் கூட வாழ முடியுமான்னு யோசிச்சாலே ஒரே அருவருப்பா இருக்கு.

மோர்ஓவர் அப்படி நான் செஞ்சா என் கூடப்பிறந்தவ என்னைப் பத்தி என் காதலைப் பத்தி சொன்னது சரின்னு ஆகிடுமே. அதுக்கு நான் வழி அமைக்க மாட்டேன்.” என்றாள்.

“இது என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம். யாரோ ஏதோ சொன்னாங்க என்பதற்காக நீங்க காலத்துக்கும் ஒத்தையில் கிடக்க முடியுமா?” பிரகலாதனுக்கு கோபம் வந்தது.

“அவங்க என்னைப் பத்தி தப்பா பேசி இருந்தா சரிதான் போங்கடான்னு போய் இருப்பேன். ஆனா அவங்க தப்பா பேசினது என்னோட காதலைப் பத்தி. அதை எப்படி என்னால் மறக்கவோ மன்னிக்கவோ முடியும்.

 என் காதலைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும். நான் பெத்தெடுக்காத என்னோட முதல் குழந்தை என்னோட காதல். அவருக்காக நான் என்னவெல்லாம் செஞ்சிருக்கேன், என்னவெல்லாம் செய்ய நினைச்சிருந்தேன்னு யாருக்கும் புரியாது பிரகலாதன்.

என்னைப் போய் எத்தனை கேவலமா நினைச்சுட்டாங்க. மத்தவங்க பேசினதைக் கூட என்னால் கடந்து போக முடியும். ஆனா அவரும் அமைதியா இருந்து அவங்க சொன்னது தான் சரின்னு சொல்லாமல் சொல்லிட்டாரே. அசிங்கமா இருக்கு ரோஜா.” என்றவள் அதன்பிறகு இணையத் தொடர்பை துண்டித்துவிட்டுச் செல்ல பிரகலாதனுக்கு மனதில் இனம் புரியாத வலி.

உண்மையான காதல் என்று கிடையாது. உண்மை இருந்தால் தான் காதல். மற்றதெல்லாம் வெறும் வேஷம் என்று சில நாள்களுக்கு முன்பு அவனைப் பார்க்க வந்திருந்த ஒருவர் சொல்லி இருந்தது நினைவு வந்தது அவனுக்கு.

காதலிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் காதலை எத்தனை உயர்வாக நினைக்கிறார்கள். தள்ளி நின்று பார்த்து காதல் என்றால் இதுதானே என பொதுவாக சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதைக் கடவுள் போலப் பார்க்கும் அளவு அத்தனை புனிதமானதா காதல்.

“ஒருவேளை எதிர்காலத்தில் நானும் காதலித்தால் இப்படித்தான் என் காதலைக் கொண்டாடுவேனா?” என்று ஏதோதோ நினைத்து அந்த நாளைக் கடந்தான்.

அடுத்தடுத்த நாள்கள் பாரியிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒருமுறை அலைபேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் ஒருகட்டத்தில் தானாக முன்வந்து குறுஞ்செய்தி அனுப்பிவிட, அதன்பிறகே அவள் இணையத்தொடர்பை இன்னும் உயிர்ப்பிக்கவில்லை என்று புரிந்துகொண்டான்.

அதனைத் தொடர்ந்த இரண்டு நாள்களுக்கும் அவளிடம் இருந்து எந்தக் குறுஞ்செய்தியும் வந்திருக்கவில்லை எனவும் பயம் வந்து என்றோ ஒருநாள் பத்திரப்படுத்தி வைத்திருந்த கண்ணனின் எண்ணைத் தொடர்பு கொண்டான். இரண்டு முறை முழு அழைப்பும் சென்ற பின்னாலும் தொடர்பு கிடைக்கவில்லை எனவும் பயம் வந்தது அவனுக்கு.

அவன் நினைத்தது சரிதான் என்பது போல் பிரளயம் நடந்து கொண்டிருந்தது பாரியின் வீட்டில். மல்லிகா தான் எண்ணையில் இட்ட கடுகாக வெடித்துக்கொண்டிருந்தார்.

“என்னைப் பத்தி விசாரிக்க உங்க பொண்ணு யாரு? பல வருஷத்துக்கு முன்னாடி நான் யார்கிட்ட போனேன். என்ன பண்ணேங்கிற விவரம் எல்லாம் அவளுக்குத் தேவை தானா? அதை வைச்சு என்ன செய்யப் போறாளாம்.” என்று நடுவீட்டில் நின்று கத்திக்கொண்டிருந்தார்.

அவரைத் தடுக்கும் அளவு வலிமை இல்லாதவர்களாக அருகே நின்றிருந்தனர் நரசிம்மன் வெங்கடாச்சலம் இருவரும்.

“சம்பந்தியம்மா இத்தனை கேட்கிறாங்களே வாயைத் திறந்து பதில் சொல்லேன் பாரி. என்ன விஷயம் எதுக்கா இப்படி கல்லை விழுங்கினவ மாதிரி இருக்க.” தாமரை மகளைப் போட்டு உலுக்க,

“நான் காதலிச்சவர் என்கிட்ட கேட்ட ஒரே விஷயம் அவர் அம்மா என்ன பேசினாலும் பொறுத்துப் போகணும் என்பது தான். நான் ஏன் பொறுத்துப் போகணும். அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கிட்டு சரிபண்ண நினைச்சேன். அதுக்காகத் தான் சிலரைப் போய் பார்த்தேன். ஆனா அதெல்லாம் பழங்காலம். இனி யாரும் எக்கேடும் கெட்டுப் போகட்டும் எனக்கென்ன வந்துச்சு.” என்றுவிட்டு தன் அறைக்குள் செல்லப் பார்த்தவளை, “அம்மாவைப் பத்தி உனக்கு என்ன தெரியும் பாரி.” என்று கேட்டு நிறுத்தினான் நரசிம்மன்.

“பெத்த பையன் கட்டின புருஷன்னு கூடப் பார்க்காம எப்பப் பார் அவங்களை நோகடிச்சு அதில் திருப்தி காணுறாங்கன்னா அவங்க ஆம்பிளைங்களால் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கணும். அதோட விளைவு தான் கோபத்தில் எதிரொளிக்கிதுன்னு நினைச்சேன்.

என் யூகம் உண்மையாவும் இருக்கலாம், பொய்யாவும் இருக்கலாம். ஒருவேளை உண்மையா இருந்தா என்னால் ஆன உதவிகளைச் செய்யலாமேங்கிற எண்ணத்தில் தான் அவங்களோட தோழிகளைப் பத்தி வெங்கடாச்சலாம் அங்கிள் கிட்ட விசாரிச்சு நானே தனிப்பட்ட முறையில் போய் பார்தேன். யாருக்கும் எதுவும் தெரியாமப் போனாலும் ஒருத்தங்களுக்கு கொஞ்சம் விவரம் தெரிஞ்சிருந்தது.” என்றுவிட்டு நழுவப் பார்த்தாள்.

“அவங்கிட்ட இருந்து நீ என்ன விவரம் தெரிஞ்சுக்கிட்ட.” நரசிம்மன் அழுத்தம் திருத்தமாகக் கேட்க, “அவங்க உங்களை வெறுப்பதற்கான காரணம்.” என்று நிறுத்தினாள்.

“என்ன சொல்ற நீ.” நரசிம்மன் கேட்க, “வேண்டாம். நீ எதையும் சொல்ல வேண்டாம்.” அவசரமாக முன்வந்தார் மல்லிகா.

“நமக்குக் கல்யாணம் நடந்த பின்னால் இதைச் சொல்ல நினைச்சிருந்தேன். ஆனா நடந்த சம்பவங்களில் நான் மறந்துட்டேன். உங்க அம்மா ஒரு சம்பவத்தால் கொஞ்சம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்காங்க. அவங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வர அவங்களுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணுங்க. முக்கியமான விஷயம் மனநல மருத்துவர் ஒரு பொண்ணா இருக்கிறது பெட்டர்.” என்றாள்.

“என் பொண்டாட்டிக்கு என்னம்மா ஆச்சு.” வெங்கடாச்சலம் கேட்க, அவ்வளவு நேரம் பாரி இழுத்துப் பிடித்திருந்த பொறுமை பறந்து போனது. அவளும் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவள் என்பதால் சுற்றி சுற்றி கேட்கப்படும் கேள்விகளால் எரிச்சல் அடைந்தாள்.

நரசிம்மனைப் பார்த்தவள், “நீங்க பதினோறாம் வகுப்பு படிக்கும் போது உங்களோட நண்பரா அறிமுகம் ஆன சுரேனை நினைவு இருக்கா உங்களுக்கு. அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்து போவானே.

அவனும், அவனோட அப்பாவும் நீங்களும் உங்க அப்பாவும் இல்லாத நேரத்தில் உங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. உங்க அம்மாவை பலவந்தப்படுத்தி இருக்காங்க.” என்க, அத்தனை பேருக்கும் பகீர் என்றது. மல்லிகா கத்தி கதறி அழத்துவங்கிவிட்டார். வெங்கடாச்சலத்திற்கு இரத்தம் மொத்தமும் கொதித்தது.

சம்பவம் நடக்கிறதுக்கு இரண்டு நாள் முன்னாடி இருந்து ஏதோ தப்பா நடக்கப் போகுதுன்னு சொல்லிக்கிட்டே இருந்திருக்காங்க. வெங்கடாச்சலாம் அங்கிள் அதைப் பெருசா எடுத்துக்காம ஊர் பக்கம் ஒரு கல்யாணத்துக்கு தனியா போய் இருக்கார். அப்புறம் நீங்க என்சிசி கேம்ப்புக்கு வெளியூர் போய் இருக்கீங்க. கூடவே அம்மா மட்டும் வீட்டில் தனியா இருக்காங்கன்னுஉங்க கேடுகெட்ட நண்பன்கிட்ட சொன்னதும் நீங்க தான். அதனால் உங்க மேலும் கோபம். அவங்க சின்னதில் இருந்தே கொஞ்சம் கரார் தான் என்றாலும் இந்த சம்பவத்துக்கு அப்புறம் அவங்க ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க.

வீட்டில் ஒருத்தங்களுக்கு உடம்பில் நடந்த கொடூரமும் தெரியல. அதை நினைச்சு நினைச்சு மனசுக்குள் தினம் தினம் அவங்களுக்கு நடந்த கொடூரமும் தெரியல. என்ன தான் ஆம்பிளைங்களோ போங்க.” என்று நேரடியாக நரசிம்மன் மற்றும் வெங்கடாச்சலம் இருவரையும் சாடிவிட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள்.

வெளியே நெடுநேரம் காரசாரமான பேச்சுவார்த்தை நடந்தது தெரிந்தது. என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாததால் படுத்து உறங்கிவிட்டாள் பாரி. இப்போதெல்லாம் அவளுக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் உறக்கம் வந்தது.

அடுத்த நாளில் வெங்கடாச்சலம் கட்டாய பணி ஓய்வு வாங்கிக்கொண்டு, மனைவியின் மன அமைதிக்காக சொந்த ஊர் சென்றுவிட்டார் என்றும் நரசிம்மனும் செம்பருத்தியும் இனி இந்த வீட்டில் தான் இருக்கப் போகிறார்கள் என்னும் செய்தியும் குறிஞ்சி மூலமாக அவளுக்குக் கிடைத்தது.

“சந்தோஷம் இனியாச்சும் அந்த அம்மா மனசுக்கு சாந்தி கிடைக்கட்டும்.” என்றதோடு முடித்துக்கொண்டாள்.

“இந்த விஷயம் தெரிஞ்ச அன்னைக்கே நீ என்கிட்ட சொல்லி இருந்தா இது எதுவுமே நடந்திருக்காது தானே பாரி.” ஆதங்கம் தாங்காமல் கேட்டாள் குறிஞ்சி.

“பெத்த பொண்ணுக்கு நடந்த அநியாயத்தை அப்பாவும் அம்மாவும் கேட்பது கொடூரம் னா அம்மாவுக்கு நடந்த அநியாயத்தைஅவங்க பெத்த பையனும் பொண்ணும் கேட்பது நரகம். அது இவருக்குக் கிடைக்க வேண்டாம் னு நினைச்சேன். பச்... அதெல்லாம் பழைய கதை.போங்க போய் வேலையைப் பாருங்க.” என்று காட்டமாகக் கத்தி வைத்தாள் பாரி.

அன்றைய மாலை நேரம் முல்லை வந்தாள், தயாகாப் போகும் நல்ல செய்தியோடு. கணவனிடம் சொன்ன பிறகு அவள் வாயால் பாரியிடம் தான் இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்கிற பேரவாவில் ஓடி வந்திருந்தவளை விஷயம் கேள்விப்பட்டு கொண்டாடித் தீர்த்துவிட்டாள் பாரி.

நெடுநாளைக்குப் பிறகு சமையலறை சென்றவள் தன் கரத்தால் அவசரமாக இனிப்பு செய்து கொண்டு வந்து ஊட்டிவிட்டாள்.

அழகன் செம்பருத்தியை வேற்றுகிரக வாசி போல் பார்த்தாலும் மற்றவர்களிடம் முகம் சுளிக்கவில்லை. முல்லையும், பாரியும் குழந்தையைப் பற்றி பற்பல கனவுகளைக் கண்டுகொண்டு இருக்க கண்ணனோடு இருந்தவன் அவனும் நரசிம்மனும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

வீட்டின் சூழ்நிலை நல்லபடியாக மாறிக்கொண்டே வருவதில் கண்ணனுக்கு சற்றே நிம்மதி. நரசிம்மனுக்கு பாரிக்கு நன்றி சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. தன் தாயின் மனதில் இருக்கும் ஆராத ரணத்தை ஆற்றுவதற்கு அவளால் தான் வாய்ப்பு கிடைத்தது என்னும் நன்றியுணர்ச்சியோடு பார்த்தான். வழக்கம் போல் தன் அவசரப்புத்தியால் அதைத் தவறாகப் புரிந்துகொண்டாள் செம்பருத்தி.

“எதுக்காகப் பாரியைப் பார்க்கிறீங்க.” என நேரடியாக நரசிம்மனிடம் கேட்க முடியாது தவிப்பாகச் சுற்றி வந்தவள், ஒருகட்டத்தில் தன் தாயிடம், “முல்லைக்கு கல்யாணம் ஆகும் வரைக்கும் தானே பாரி இங்க இருக்கப் போறதா சொன்னா. மறுபடியும் கிளம்பிடுவாளா அம்மா?” தங்கையின் மேல் இருக்கும் அக்கறை என்பது போல் காட்டிக்கொண்டு விவரம் கேட்டாள்.

“நீ கொஞ்சம் சும்மா இருக்கியா? அவ இதை மறந்து போயிட்டான்னு நினைக்கிறேன். நீ ஞாபகப்படுத்திடாதே.” என்றுவிட்டு தன் அன்றாட வேலைகளைப் பார்த்தார் தாமரை.

செம்பருத்திக்கு மனம் ஒருநிலையில் இல்லை. நரசிம்மன் தன் கையை விட்டுச் சென்றுவிடுவானோ என்கிற பயம் வந்தது. அவன் தாயின் தேள்கொடுக்கு நாக்கிற்காகத் தான் அவன் தன்னைத் திருமணம் செய்துகொண்டான் மற்றபடி தன்மேல் சின்ன சபலம் கூட அவனுக்கு இல்லை என்பதை அவள் அறிவாள். அந்த உண்மை தான் அவளை பயமுறுத்தியது.

நரசிம்மனைத் தன்னோடு பிணைத்து வைப்பதற்கு என்ன கிடைக்கும் என்று யோசித்தவள் கண்ணில் பட்டாள் குறிஞ்சி. அண்ணியானவள் அண்ணனுடன் வாழ்வைத் துவங்கி, அவர்கள் வாழ்க்கை விடிந்துவிட்டால் அதைக் கொண்டு தன் வாழ்க்கையை விடிய வைத்துவிடலாம் என்னும் நம்பிக்கையில் குறிஞ்சியை தனியே பிடித்தாள்.

“இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இப்படி எங்க அண்ணனை தள்ளி வைச்சிருக்கிறதா எண்ணம். உங்க முதல் புருஷன் நினைப்பு உங்களைத் தள்ளி இருக்கச் சொல்லுதுன்னு பொய் எல்லாம் என்கிட்ட வேண்டாம். இத்தனை வருஷத்துக்குப் பிறகு அதெல்லாம் சாத்தியம் இல்லாத ஒன்னு. எங்க அண்ணன் உங்களைத் தப்பா நினைக்கக் கூடாதுன்னு தானே விட்டுப் பிடிக்கிற வித்தையை விளையாடுறீங்க. போதும் எல்லாத்தையும் நிறுத்திக்கிட்டு அவனோட வாழப் பாருங்க.

என் தங்கச்சி உலகமே அழிஞ்ச போல இருக்கா. என் நிலையும் அப்படித்தான். என் அண்ணனாச்சும் நல்லா வாழட்டும். எங்க அப்பா அம்மா பாவம். அவங்களுக்காகவாச்சும் உங்க நடிப்பை நிறுத்துங்க.” கடுமையான குரலில் சொல்லி முடிக்க குறிஞ்சிக்கு அழுகை வந்தது.

அவள் இதை கண்ணனிடம் சொல்ல, கண்ணன் செம்பருத்தியை நன்றாகத் திட்டிவிட்டான். அந்தக் கடுப்பில் இருந்தவள் இன்னமும் பாரியிடம் நன்றி சொல்ல வேண்டுமே என்கிற உந்துதலில் அவளையே பார்த்துக்கொண்டிருந்த நரசிம்மனைப் பார்த்து இன்னமும் கோபம் கொண்டாள்.

அடுத்த நாளே தன்னுடன் வங்கியில் வேலை செய்யும் ஒருவனை வீட்டிற்கு வரவழைத்து பாரிக்கு பாத்திருக்கும் மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.

யாரிடமும் கேட்காமல் அவளாக இப்படி ஒரு காரியத்தைச் செய்ததில் அனைவருக்கும் அதிர்ச்சி தான் என்றாலும், அவள் அழைப்பை ஏற்று வந்தவன் முன்னால் தங்கள் வீட்டுப் பெண்ணை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று அமர வைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது தான் அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பதும், பிரசவத்தில் மனைவி இறந்துவிட  ஆறு மாதத்தில் கைக்குழந்தை வைத்திருப்பவன் என்பதும் தெரியவந்தது. பயங்கர அதிருப்தி கண்ணன் மற்றும் நரசிம்மனுக்கு. தாமரைக்கு கூட பிடித்தம் இல்லை. விஷ்ணு தீயாய் முறைத்துக்கொண்டிருந்தார் மகனை.

“பாரியை அழைத்து வருகிறேன் என்று அவள் அறைக்குள் சென்ற செம்பருத்தி விஷயத்தைச் சொல்ல, ஏற்கனவே மாதவிலக்கில் ஹார்மோன் ஏற்ற இறக்கத்தில் மனஅழுத்தமும் சேர்ந்து கொள்ள கோபம் மற்றும் எரிச்சலின் உச்சகட்டத்தில் இருந்தவள் அக்கா என்றும் பாராமல் கை நீட்டி அடித்துவிட்டாள்.

 அதே சமயம் இங்கே, “மன்னிக்கணும் சார். ஜாதகப்படி என் பொண்ணுக்கு கல்யாண யோகம் இன்னும் வரல. செம்பருத்திக்கு இதில் நம்பிக்கை இல்லாததால் உங்களை வரச்சொல்லிட்டா.” என்று வந்தவனைப் பாந்தமாக வெளியே அனுப்பி வைத்தார்கள் கண்ணனும், விஷ்ணுவும்.

“அண்ணா உன் தங்கச்சியைப் பாரு என்னைக் கை நீட்டி அடிச்சுட்டா.” என்றபடி வந்த தங்கையை முறைத்தான் கண்ணன்.

அதன்பிறகே தன் நண்பன் அங்கே இல்லாதது கண்டு செம்பருத்தி திகைக்க, “பாரிக்கு இரண்டாம் தார மாப்பிள்ளையை ஏன் பார்த்த செம்பா.” கோபமாகக் கேட்டான் கண்ணன்.

“இரண்டாம் தாரம் னா என்ன குறைச்சல். நல்ல மனுஷன், நல்ல சம்பளம், நல்ல குடும்பம், வயசும் கம்மி தான்.” வேகமாகச் சொன்னாள்.

“அப்ப நீயே கல்யாணம் பண்ணி இருக்க வேண்யடிது தானே.” விஷ்ணு கோபமாகக் கேட்க, பதில் சொல்ல முடியவில்லை அவளால்.

“என்ன பிரச்சனை செம்பருத்தி உனக்கு.” நரசிம்மன் கேட்க, “நீங்க தான் என் பிரச்சனை. எப்ப பார் நீங்க அவளை உத்து உத்துப் பார்க்கிறது தான் எனக்குப் பிரச்சனை.

நீங்களும் அவளும் ஒரே வீட்டில் இருக்கிறது எனக்குப் பிடிக்கல. எப்ப என்ன ஆகுமோன்னு பயந்துக்கிட்டே இருக்க என்னால் முடியாது.

அவளை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்ல முடியாது. எனக்கும் உங்களோட சேர்ந்து என் அம்மா கூட இருக்க தான் ஆசை. அதனால் தான் அவளுக்குக் கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியாகிடும் னு நினைச்சேன்.” எப்போதும் போல் மனதில் தோன்றியதை அப்படியே சொன்னாள்.

“பார்த்தியா நீ பொண்ணு பெத்து வளர்த்து வைச்சிருக்கிற இலட்சணத்தை. இவ பண்றது எல்லாம் இவளுக்கு அசிங்கமா இருக்கோ இல்லையோ எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.” என்றுவிட்டு விஷ்ணு உள்ளே சென்றுவிட, யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்காமல் நரசிம்மன் வெளியே சென்றுவிட்டான்.

“எப்படி டி நீ எனக்கும் பாரிக்கும் நடுவில் பிறந்து தொலைச்ச.” என்று கோபமாகக் கேட்டுவிட்டு கடந்தான் கண்ணன்.

அடுத்த இரண்டு நாள்கள் நரசிம்மன்இவர்கள் வீடு வரவில்லை. தாயின் இல்லத்தில் தனியாய் தங்கிக்கொண்டான். அவனாக செம்பருத்தியை தொடர்பு கொள்ளவில்லை. அவள் தொடர்பு கொண்ட போதும் ஏற்கவில்லை. செம்பருத்தி இதைப் பற்றி கண்ணன் மற்றும் குறிஞ்சியிடம் சொன்ன போது, அவன் கோபம் குறைவதற்கான நேரத்தை அவளுக்குக் கொடு விரைவில் வந்துவிடுவான் என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையைப் பார்த்தார்கள்.

சோகமாக இருக்கும் மூத்த மகளை குளிர்விக்க மட்டன் பிரியாணி செய்தார் தாமரை. இதுவும் பாரிக்குப் பெரிதாக பிடிக்காது தான். ஆனால் தான் மட்டும் தனியா அமர்ந்த இரண்டு மூன்று பேர் சாப்பிடும் அளவு சாப்பாட்டை அவள் ஒருத்தி மட்டும் சாப்பிடுவதை விசித்திரமாகப் பார்த்தார் தாமரை. மகளிடம் ஏதோ சரியில்லை என்பது அவருக்குப் பிடிபட்டது. அதைப் பற்றி பேசுவதற்காக அவள் அறைக்குள் சென்றார்.

அந்த நேரம் எதேச்சையாக அங்கே வந்த செம்பருத்தி, “அப்பா, அண்ணன் இப்ப அம்மா. அடுத்தது யார் சிம்மன் தானே. என்னவோ நான் தான் திட்டம் போட்டு சிம்மனை உன்கிட்ட இருந்து பறிச்சிட்டதா எல்லோரும் சொன்னாங்க. ஆனா நீ தான் என்கிட்ட இருந்து அவரைப் பிரிக்கப் பார்க்கிற. அதைச் சொன்னா யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க.” என்று கண்டபடிக் கத்திக்கொண்டே இருந்தாள்.

என்னவும் செய்துகொள் என்று அமைதியாகத் தன்வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த பாரி, ஒருகட்டத்தில் செம்பருத்தி, “இரண்டாம் தாரமா உன்னைக் கொடுக்கக் கூடாதுன்னு அத்தனை பேரும் என்னைச் சத்தம் போட்டாங்க. காதலிக்கிறேன்னு அத்தனை இடம் சுத்தினீங்களே ஒழுக்கமாவா இருந்திருப்பீங்க. அப்படிப் பார்த்தா நீயும் இப்ப இரண்டாம் தாரம் தானே.” என்று வார்த்தையை முடிக்க கூட இல்லை அவள் தலைமுடியை வலிக்கும் அளவு பற்றினாள் பாரி.

அவள் கண்ணில் இருந்த ரௌத்திரத்தைப் பார்த்து தாமரையே ஒருகணம் அரண்டு தான் போனார்.

செம்பருத்தியும் இன்று பாரிக்கு இணையானகோபத்தில் இருந்ததால் பாரியைப் பிடித்து தள்ளிவிட பாரி கபோர்டின் மூலையில் முட்டி இரத்தம் வடியும் தலையோடு கீழே விழுந்தாள்.

சத்தம் கேட்டு ஓடி வந்த விஷ்ணு, “நான் வரும் போது நீ இந்த வீட்டில் இருந்த உன்னைக் கொன்னு போடக் கூட தயங்க மாட்டேன்.” என்றுவிட்டு சின்ன மகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார்.

இதற்கு நடுவே கண்ணனைத் தொடர்பு கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவனோடு தனியே பேச வந்து, பாரியைப் பற்றி அனைத்தையும்சொல்லி முடித்தான் பிரகலாதன்.

கண்ணனுக்கு ஒரு கணம் உயிரே நின்றது போல் ஆனது. தாங்கள் அத்தனை பேர் அருகில் இருந்தும் தங்கை தனியாக இத்தனை பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கிறாளா என்னும் நினைப்பில் பிரகலாதனையும் அழைத்துக்கொண்டு இல்லம் வந்தான்.

அங்கே செம்பருத்தி செய்து வைத்த குளறுபடிகள் தெரிய வர, பேயாட்டம் ஆடினான் கண்ணன்.

செம்பருத்திக்கு எந்தப் பக்கம் போனாலும் அடியாக விழ, அமைதியாக நின்றாள்.

முதல் முறையாக பாரியைப் புகைப்படத்தில் பார்த்தான் பிரகலாதன். அழகு முகம் பார்த்ததும் மனதில் ஒட்டிக்கொண்டது. அவளை நினைத்து வலித்த மனதை சமன்செய்தவன், இது தான் பேச வேண்டிய நேரம் என்பதை உணர்ந்து முன்வந்தான்.

அந்த நேரம் குறிஞ்சி மூலமாக விஷயம் கேள்விப்பட்டு நரசிம்மனும் வந்து சேர்ந்தான்.

  

 

 

 

 

 

   

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page