All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நேசம் 16

 

VSV 22 – நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ
(@vsv22)
Trusted Member Author
Joined: 7 months ago
Posts: 18
Topic starter  

நேசம் 16

     செம்பருத்தியும், நரசிம்மனும் வந்திருந்தார்கள். இங்கிருந்து சென்ற நாளில் இருந்து செம்பருத்தி நிம்மதியாக இல்லை. ஒன்றைத் தொட்டு இன்னொன்றுக்கு அவளுக்கும் மல்லிகாவிற்கும் முட்டிக்கொண்டே வந்தது.

     மல்லிகா வழக்கம் போல் தன் அதிகாரத்தைக் காட்ட நினைக்க, செம்பருத்திக்கு பணிந்து போக முடியவில்லை. இருந்தாலும் சொன்ன வார்த்தைகளை நினைத்து பல்லைக் கடித்துப் பொறுத்துப் போனாள்.

     நரசிம்மன் அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவள் மனம் எதிர்பார்த்தது. நரசிம்மன் ஆதரவாக இருந்தான் தான். ஆனால் அன்பாக இருந்தானா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

     ஆதரவு யாராலும் யாருக்கும் கொடுத்துவிட முடியும். ஆனால் அன்பு அதுவாக உருவாக வேண்டியது. அதைக் கட்டாயப்படுத்தி பெற முடியாது என்பதை அவள் புரிந்துகொண்டிருக்கவில்லை. கணவனிடம் கிடைக்காத அன்பைத் தேடி அடிக்கடி தாய் இல்லம் வருவாள்.

     தமக்கை வருவது, போவது மட்டும் இல்லை தன் வீட்டில் என்ன நடக்கிறது என்று எதுவுமே பாரிக்குத் தெரியாது. அவள் உலகம் தனியாகச் சுழல ஆரம்பித்து வெகு நாள்களாகி இருந்தது.

     செம்பருத்தி வீட்டை விட்டுச் சென்ற பின்னால் தான் பாரி கண்ணுக்குத் தெரிந்தாள் போலும். “ஏன் கண்ணா பாரி வேலைக்கு போறதில்லை.” என்று விசாரித்தார் தாமரை.

     “பாரி வேலையை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. வேலையில் கவனம் வைக்கிற நிலையில் அவ இல்லையாம்.” என்றான்.

     “இதெல்லாம் ஒரு காரணமா? இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே இருக்கப் போறா. வேலைக்குப் போகச் சொல்லு. அங்கே போய் நாலு பேரைப் பார்த்து பழகினா எல்லாம் சரியாகிடும்.” போற போக்கில் சொல்லிவிட்டுப் போனார் தாமரை.

     கண்ணனுக்கும் இது நல்ல யோசனையாகத் தான் தோன்றியது. ஆனால் இதைப் பற்றி அவன் அருமைத் தங்கையிடம் யார் பேசுவது. இல்லை யாரும் பேசினால் தான் அதைக் கேட்டு நடந்து கொள்ளும் நிலையில் அவள் இருக்கிறாளா? என நினைத்துப் பெருமூச்சுவிட்டான்.

     அவன் கவனித்தவரை, சில நாள்கள் முன்பு வரை எந்த வேலையும் செய்யாமல் எப்போது பார் புத்தகமும் கையுமாக இருந்த பாரி இப்போது வெகு அரிதாகத் தான் கதைகள் படிக்கிறாள். தன் அறையைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறாள். சின்னச்சின்ன வேலைகளைச் செய்கிறாள். அவ்வப்போது வெளியே கூட சென்றுவருகிறாள். இதன் அர்த்தம் அவள் நடந்தவைகளில் இருந்து வெளியே வரத்துவங்கிவிட்டாள் என அவனாக ஒரு கணக்குப் போட்டிருந்தான்.

     அவள் பார்க்க நன்றாக இருப்பது போல் தோன்றினாலும் அவள் அவளாக இல்லை என்பது அவளுக்கு மட்டும் தான் தெரிந்தது.

     என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் எப்போது பார் தன்னைப் பாதித்த அந்த கதையைப் பற்றியே  யோசித்துக்கொண்டிருப்பாள். திடீரென அழுவாள். திடீரென கோபம் கொள்வாள்.

     பல நேரம் சரியாகச் சாப்பிடாமல் இருப்பவள், திடீரென பசியை விட மூன்று மடங்கு சாப்பிடுவாள். தேவையில்லாமல் பணத்தை அதிகம் செலவளித்தாள். காரணம் இன்றி கபோர்டை திறந்து திறந்து மூடுவாள். பாத்ரூம் லைட்டை அணைத்துவிட்டு வந்தோமா இல்லையா என்பதை அடிக்கடி சோதிப்பாள். அமர்ந்துவிட்டு எழும் போது சின்னதாய் மெத்தைக்கவர் கசங்கினாலும் பெரும்பிரயத்தனப்பட்டு சரிசெய்வாள். நேரம் போகாமல் உடைகள் அனைத்தையும் வண்ணங்களுக்கு ஏற்ப அழகாக அடுக்கி வைப்பாள். புத்தகங்களை அகர வரிசைப்படி அழகாக அடுக்கி வைப்பாள். அது அகர வரிசைப்படி தான் இருக்கிறதா என்பதை அடிக்கடி சோதித்துப் பார்ப்பாள்.

     ஆர்வமாக முல்லைக்கு அழைத்துப் பேசுவாள். சிறிது நேரத்தில் ஆர்வம் மொத்தமும் வடிந்து போக அழைப்பைத் துண்டித்துவிடுவாள். காரமாக சாப்பிட வேண்டும் போலத் தோன்றவும் எதையாவது ஆர்டர் செய்வாள். அது வந்து சேரும் நேரத்திற்குள் பசியோடு சேர்த்து ஆர்வமும் போய்விடுவதால், வந்த உணவை பிரிக்காமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவாள்.

     அவள் மனநிலை மாற்றங்கள் அவளாலே புரிந்துகொள்ளும் அளவில் தான் இருந்தது. அதனைக் கொண்டு தன்னிடம் எதுவோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டாள்.

     இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் படித்திருந்த போதும் தான் இந்தளவு ஒரு கதைக்காக பாதிக்கப்படவில்லையே. இந்தக் கதை மட்டும் ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது என்று யோசித்தவளுக்கு, ரோஜா பேச்சோடு பேச்சாக சொன்ன மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறலாமே என்கிற வார்த்தைகள் தேவையான பதிலைக் கொடுத்தது.

     தொட்டதெற்கெல்லாம் பயம் கொள்பவர்களைத் தான் பேய் சுலபமாகப் பிடிக்கும் என்பார்கள். அதற்காக பலமானவர்ளை பேய் பிடிப்பதே இல்லை என்று ஆகிவிடாதே. அந்த வகையில் சற்றே தைரியமான பெண்ணாக இருந்தாலும் அவளுக்கும் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று புரிந்தது பாரிக்கு. அது புரிந்ததும் கசப்பான சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது அவளிடத்தில்.

     உடம்பில் வந்திருக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டாலே அதில் இருந்து தப்பிப்பது ஐம்பது சதவிகிதம் உறுதியாகிவிடும் என்பார்கள் மருத்துவர்கள். அது மனநோய்க்கும் பொருந்தும். அந்த வகையில் இந்த நொடியே மீட்சிக்கான பாதையில் கால் வைத்துவிட்டாள் பாரிஜாதம்.

     குடும்பத்தினருக்கு விஷயம் தெரியவந்தால், அவர்கள் எனக்கு செய்த துரோகமும் அதன் வீரியமும் அவர்களுக்குப் புரியவரும். எப்படியும் மனநல சிகிச்சைக்காக அழைப்பார்கள். அப்போது தான் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் தானே. இத்தனை நாள் என்னைக் கஷ்டப்படுத்தியவர்களுக்கு இந்த தண்டனையைக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தவளுக்கு அவளுக்குள் இருந்த மனநோய் கொடுத்த  அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

     பெற்றவர்களைப் பழிவாங்குவதை விடுத்து எப்படியாவது இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று சரியான முடிவுக்கு வந்தாள். அதற்காக கூட குடும்பத்தினரின் உதவியை நாட மனம் வரவில்லை. முல்லையைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை அவளுக்கு. அதனால் இறுதி முடிவாக குடும்பத்தினருக்குத் தெரியாமல் சிகிச்சை மேற்க்கொள்வது என்கிற முடிவுக்கு வந்தாள்.

     புதைகுழிக்குள் விழுந்தால் தானாக அதைவிட்டு வெளியே வர யோசிக்கக்கூடாது. எத்தனை முயற்சி செய்கிறோமோ அந்த அளவு வேகமாக உள்ளே இழுக்கப்படுவோம். அந்த நேரத்தில் அன்பானவர்கள் உதவியை நாடுவதே சாலச்சிறந்தது.

      மாறாக சிலந்தி வலைக்குள் விழுந்துவிட்டால் எத்தனை முடியுமோ அத்தனை வேகமாக அதில் இருந்து தானே முயற்சி செய்து வெளியே வரவேண்டும். எத்தனை தாமதப்படுத்துகிறேமோ அத்தனை தூரம் பாதிப்பு அதிகம் ஆகும். கூடவே உதவிக்கென்று யாரையும் அழைத்தால் அவர்களும் சிலந்தி வலைக்குள் சிக்கி மூச்சடைக்க வாய்ப்பு அதிகம்.

     துன்பம் பெரியதோ, சின்னதோ அதை அனுபவிக்கும் நபர் தானாக முன்வந்து அதை விட்டு முற்றும் முழுதாக வெளியேற வேண்டும் என்று நினைக்காத வரை பிரச்சனை தீராது.

     அந்த வகையில் மனஅழுத்தத்தை விட்டு வெளியே வரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட நபர் தீர்மானித்துவிட்டால் எத்தனை பெரிய பாதிப்பாக இருந்தாலும் தப்பித்துவிடலாம். பாரிக்கு பல நாள்களுக்குப் பிறகு மனதில் நம்பிக்கை வந்தது.

      முதல் காரியமாக தன்னில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாள். இணையத்தில் மனநிலையை சந்தோஷமாக வைத்துக்கொள்வதைப் பற்றி சிலபல குறிப்புகள் எடுத்தாள்.

     மனஅழுத்தம் என்பதன் சுருக்கம் சந்தோஷம்  மற்றும் நிம்மதியின் பற்றாக்குறை. அதற்குக் காரணம் சில ஹார்மோன் குறைபாடுகள். எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை மனதை பராமரிக்கும் முறை ஆகியவற்றில் தான் இந்த ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம் உள்ளது.

     மனம் மகிழ்வாக இருப்பதற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன் செரோட்டோனின். அந்த செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கு என்ன வழி என்று இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தாள்.

     உணவில் சில மாற்றங்களைச் செய்வதோடு, இசையோடு சேர்ந்த இயற்கையும் இதற்கு நன்றாக உதவி செய்யும் என்று தெரிந்துகொண்டாள்.

     மீட்சிக்கான முதல் படியாக முல்லையின் வீட்டில் இருந்து வந்த பிறகு எப்போதும் சாற்றியே இருக்கும் ஜன்னலைத் திறந்து காற்று மற்றும் சூரியவெளிச்சத்தை அறைக்குள் அனுமதித்தாள்.

     பல நாளுக்குப் பிறகு தனக்குப் பிடித்த ஹார்லிக்ஸ்ஸை கலந்து மிதமான சூடு கொண்ட பாலை அனுபவித்துக் குடித்தாள். இந்த நொடியே எல்லாம் சரியாகிவிட்டது போல் தோன்றியது அவளுக்கு. ஆனால் சுக்கல் சுக்கலாக உடைந்த கண்ணாடித்துண்டுகள் அத்னை சீக்கிரத்தில் ஒட்டாது என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

     அவள் மனது வைத்தால் தான் மனஅழுத்தம் குறையும் என்பது உண்மை தான். அதற்காக அவள்மனது வைத்தவுடன் எல்லாம் நடந்துவிடும் என்று இல்லையே.

     ஓரளவு நிம்மதியாக இருந்த அவள் மனநிலை சற்று நேரத்திலேயே மாறியது. நெஞ்சத்தில் குடிகொண்டிருந்த நிம்மதி பறிபோய், வெற்று அறைக்குள் அவள் மட்டும் அமர்ந்திருப்பது போல் வெறுமையாய் இருந்தது. மூளை வழக்கம் போல் அந்தக் கதையை யோசிக்கச் சொல்லி துன்புறுத்தியது.

      போதைப்பழக்கம் போல் தான் இந்த கதைக்கு பழகிவிட்டோமோ என்கிற கோபம் வர, பாலைக் குடித்து விட்டு வைத்திருந்த கப்பைக் கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியைப் போட்டு உடைத்தாள்.

     கபோர்டைத் திறந்து பார்த்து பார்த்து அடுக்கி வைத்திருந்த உடைகளை இழுத்து அறை எங்கும் வீசி எறிந்தாள். காதிற்குப் பின்னால் இருந்து முகத்தில் வந்து விழுந்த கற்றை முடியை இரண்டு முறை ஒதுக்கி விட்டவள் மூன்றாம் முறையும் அது அதே போல் செய்யவும் கோபத்தில் அப்படியே பிய்த்து எறிந்தாள். அதில் தோன்றிய வலி அவளைக் கொஞ்சம் நிதானிக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்தால் கண்ணில் படும் அனைத்தையும் போட்டு உடைத்துவிடுவோம் என்று புரிய சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

     மூச்சுமுட்டும் அளவு இருந்த மனப்புழுக்கம் இயற்றைக் காற்று மற்றும் இதமான மாலை நேரத்து வெயிலுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. கூடவே அவள் பார்த்து பார்த்து அமைத்து காத்த தோட்டத்தின் செடிகள் காற்றில் அசைந்து அவளை உரச,

     “என்னடா எனக்கு ஆறுதல் சொல்றீங்களா? நோயால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தை விட நோய் குணமாகும் காலம் கொடூரமானதா இருக்கும் னு சொல்லுவாங்க. அது உண்மை தான் போல. ரொம்பக் கஷ்டமா இருக்குடா.” செடிகொடிகளுடன் பேசியபடி கல்திண்டில் அமர்ந்தவள் வழக்கம் போல் கதையின் நினைப்பில் சுயத்தை தொலைத்து அமர்ந்துவிட அவளைத் தேடி வந்தான் கண்ணன்.

     அவள் அருகே அமர்ந்து அவள் கரத்தை எடுத்து தன் கரத்திற்குள் வைத்துக்கொண்டு வேலைக்கு மீண்டும் செல்வதைப் பற்றி பேச ஆரம்பித்தான். பாரி அவனை உணராமல் அப்படியே சிலையாய் இருந்தாள்.

     அவள் நிலை தெரியாமல் தங்கை தன்பேச்சைக் கவனிக்கிறாள் என்னும் நினைப்பில் மேற்க்கொண்டு பேசிக்கொண்டே இருந்தான் கண்ணன். சற்றே பலமாக அடித்த காற்றில் சுயநினைவுக்கு வந்த பாரி, கண்ணனின் கரத்தில் இருந்து தன் கரத்தை உருவிக்கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றாள். அவளுக்குள் நடப்பது புரியாமல் பாரி தேறி வருகிறாள் என்று சற்றே நிம்மதி அடைந்தான் கண்ணன்.

     இரண்டு நாள்களில் இத்தனை பாடுகளைச் சந்தித்த பிறகு தான் ரோஜா என நினைத்து புலனத்தின் எண்ணை சேர்த்து மின்னஞ்சல் மூலம் பிரகலாதனைத் தொடர்பு கொண்டாள் பாரி.

     இதற்கு நடுவில் பாரியின் பிரச்சனை, அதன் தீவிரம், அதில் இருந்து அவளை மீட்டுக்கொண்டு வருவதற்கான வழிமுறை என முழுக்க முழுக்க பாரியைப் பற்றி மட்டும் தான் யோசித்தான் பிரகலாதன்.

     பாரிக்கு வந்திருக்கும் பிரச்சனை OCD (Obsessive Compulsive Disorder). தன்னை அதிகம் பாதித்த நிகழ்வின் நினைவில் இருந்து தப்பிப்பதற்காக வேறு ஒன்றிற்கு அடிமையாவது, இந்த நோயின் முக்கியமான அறிகுறி.

     கடந்த காலத்தில் மனதை அதிகம் பாதித்த நிகழ்வால் தன்னை நினைத்தே ஒருவர் அருவருப்பாகக் கருதுகிறார் என்றால், நிகழ்காலத்தில் அடிக்கடி கைகளைக் கழுவுவதன் மூலமும், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குளிப்பதன் மூலமும், சின்ன கவனச்சிதறலும் சிறிய மகழ்ச்சியும் அவர்களுக்குக் கிடைக்கும். சுத்தமாக இருப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக சுற்றி இருக்கும் அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்பார்கள்.

     இதுவே கடந்தகாலத்தில் சம்பந்தப்பட்ட மனிதரின் மனதைப் பாதித்த நிகழ்வு அவர்களின் கவனக்குறைவால் நடந்திருந்தால், அதன் விளைவாக இப்போது அதீத நேர்த்தியாக இருப்பார்கள். ஒரே விஷயத்தை பலமுறை சோதனை செய்வார்கள். பொருள்களை எடுத்த இடத்தில் மிகச்சரியாக வைப்பார்கள்.

     அந்த வகையில் தன் குடும்பத்தினர் செய்த துரோகத்தின் நினைவுகள் தாங்கமுடியாமல், புத்தகங்கள் வாசிப்பதற்கு அடிமையாகி இப்போது அந்த புத்தகத்தாலும் பாதிக்கப்பட்டு நிற்கிறாள் பாரி. இந்த நோயின் மிகப்பெரிய பாதிப்பு மாறும் மனநிலை.

     ஒரு மாதத்தை எடுத்துக்கொண்டால், அதில் முதல் பத்து நாள் ஓரளவு நல்ல மனநிலையோடு இருப்பார்கள். அடுத்த பத்து நாள்கள் தொடர்நினைவுகளுக்கும், அதை நினைக்கக் கூடாது என்கிற சுயகட்டுப்பாட்டுக்கும் நடுவில் போராடுவார்கள். மூன்றாவது பத்து நாள் தான் கொடூரத்தின் உச்சம். முற்றும் முழுவதுமாக தேவையில்லாத தொடர் நிகழ்வுகளுக்கு தங்கள் மனம் மற்றும் புத்தியைக் கடன் கொடுத்துவிட்டு அது கொடுக்கும் பாரத்தைத் தாங்க முடியாது கிடப்பார்கள். பாரியும் இப்படித்தான் சுழல் போன்று திரும்பி திரும்பி தாக்கும் நோயால் பாதிக்கப்பட்டு சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.

     இந்த நோயை முற்றும் முழுதாக குணப்படுத்த முடியாமல் போனாலும், நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதற்குப் பெரிதாக நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலே இந்த நோயில் இருந்து தப்பித்துவிடலாம்.

     இதற்கு முன்னர் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு சிகிச்சை அளித்திருப்பதால் பாரியை சரிசெய்து விட முடியும் என்கிற நம்பிக்கையில், அவள் தன்னைத் தொடர்பு கொள்ளும் நேரம் அவளிடம் என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருந்த பிரகலாதன் அதன்படியே பேச்சை ஆரம்பித்தான்.

     இந்த நோயைப் பொறுத்தவரை நோயின் தீவிரத்தை குறைப்பதற்கு செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் நோயாளியை பேச விட வேண்டும். அவர் மனதில் இருக்கும் அழுத்தங்கள் மொத்தத்தையும் பேசி வெளியே காட்ட வேண்டும். அதனால் பாரியைப் பேச வைக்க முடிவு செய்தான். பிரச்சனையைப் பற்றி தான் பேச வேண்டும் என்று இல்லாமல் பேசவேண்டும். அவளையே மறக்கும் அளவு சுவாரசியமாகப் பேச வேண்டும். அவளையே மறந்துவிட்ட பின்பு தேவையில்லாதவற்றை நினைக்க அவளுக்கு எங்கே நேரம் இருக்கும் என நினைத்தான்.

     சில பொதுவான பேச்சுகளுக்குப் பிறகு, ”உங்களுக்கு மகாபாரத்தில் எந்த கேரக்டர் பிடிக்கும்.” என்கிற பொதுவான கேள்வியை முன்வைத்தான் பிரகலாதன்.

     இப்படியே பேசி பேசி அவள் மனதில் கொஞ்சம் நம்பிக்கையைப் பிடித்தபின்னர், தான் ரோஜா இல்லை அவள் அண்ணன் பிரகலாதன் என்கிற உண்மையைச் சொல்லி அவளைத் தன்னிடம் சிகிச்சைக்காக வரவழைக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் உண்மையைச் சொல்லும் நேரம் அவன் மொத்தமாக அவள் வசம் சென்று இருப்பான் என்று அவனுக்கு இப்போது தெரிந்திருக்கவில்லை.

     தான் கேட்ட கேள்விக்குப் பதிலாக பாரிஜாதத்திடம் இருந்து கிருஷ்ணன், அர்ஜீனன் இல்லை கர்ணன் என்பதில் ஏதாவது ஒரு பதில் வரும் என்று எதிர்பார்த்திருக்க, “தர்மன்.” என அவன் எதிர்பாராத பதிலைச் சொன்னாள் பாரிஜாதம்.

     “தர்மரா?” என்ன முயன்றும் பிரகலாதனால் தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

     “எஸ் எனக்கு அவரைத் தான் பிடிக்கும். இப்ப வரும் சீரியல்கள் எல்லாம் அவரவருக்குப் பிடித்த நாயகர்களை மிகைப்படுத்திக் காட்ட மத்தவங்களோட உண்மையான பலத்தை மறைச்சுட்டாங்க என்பது என்னோட எண்ணம்.  அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தர்மர் தான்.

     பதினெட்டாம் நாள் குருக்ஷத்திர போர் முடிஞ்சு, மரணப்படுக்கையில் இருந்த துரியோதனனுக்கு மனதில் இருந்த மூணு கேள்விகள் அவர் உயிரைப் போகவிடாம பிடிச்சு வைச்சிருந்ததாம். அதைப் புரிஞ்சுக்கிட்டு கிருஷ்ணர் முன்வந்தாராம்.

     முதல் கேள்வியா அஸ்தினாபுரத்தை சுற்றி வானளவு உயர்ந்த கோட்டைச்சுவரை நான் எழுப்பி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்கன்னு கேட்டாராம் துரியோதனன். நகுலன் உதவியோட குதிரைப்படை மூலமா அந்தக் கோட்டையை ஒன்னும் இல்லாம ஆக்கி இருப்பேன்னு சொன்னாராம் கிருஷ்ணன்.

     காரணம், மழை பெய்யும் போது காற்றை விட வேகமாகப் பாய்ந்து துளி கூட நனையாமல் சரியான இடத்துக்கு வந்து சேரக்கூடிய அளவு வேகமா குதிரை ஓட்டும் திறமை நகுலனுக்கு உண்டாம்.

     இரண்டாவது கேள்வியா சித்தப்பா விதுரனை நான் யுத்தத்தில் இறக்கி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்கன்னு துரியோதனன் கேட்டப்ப, ‘யுத்தத்தில் பங்கெடுக்க மாட்டேன்னு சொன்ன என்னோட வாக்கை மீறி சுதர்ஷண சக்கரத்தோட நான் களத்தில் இறங்கி இருப்பேன்னு சொன்னாராம் கிருஷ்ணன்.

     சரி என்னோட கடைசிக் கேள்வி, துரோணாச்சாரியார் மரணத்திற்குப் பிறகு நான் அஸ்வத்தாமனை சேனாதிபதியாக்கி இருந்தா என்ன செய்திருப்பீங்கன்னு கேட்டதுக்கு, ‘ரொம்ப சுலபம் நான் தர்மரை கோபப்படுத்தி இருப்பேன். அவரோட கோபக்கனல் ஒட்டுமொத்த கௌரவப்படையையே அழிச்சிருக்கும்’ னு சிரிச்சுக்கிட்டே சொன்னாராம் கிருஷ்ணன்.”

     “சூதாட்டம் நடந்து அதனைத் தொடர்ந்து நடந்த அத்தனை அட்டகாசங்களுக்குப் பிறகு வனவாசத்துக்குப் புறப்பட்டாங்க பாண்டவர்களும், பாஞ்சாலியும். அப்ப தனக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத கோபத்தால் தப்பு செய்யாத யாருக்கும் எந்தப் பாதகமும் வந்திடக்கூடாதுன்னு குனிந்த தலை நிமிராமல் தர்மர் நடந்து போனாருன்னு சொல்வாங்க.

     அத்தனை சக்திசாலி அவர். கட்டுக்கடங்காத சக்திகள் தனக்குள் இருந்தாலும், அதையெல்லாம் கட்டுப்படுத்தி வாழ்ந்தவர். அவரோட ஒரு துளி இரத்தம் தரையில் சிந்தினாலும் அந்த இடமே பசுமை எல்லாம் மறைந்து பாலைவனமா மாறிடுமாம்.

     அஞ்ஞாதவாசத்தில் தர்மர் யாருன்னு தெரியாம அரசர் விராடர் ஒரு விளையாட்டின் போது தோல்வியைத் தாங்கிக்க முடியாம கைக்கு வாகா மாட்டிய தாயக்கட்டைகளை வைத்து தருமரை அடிக்க நெற்றியில் இருந்து இரத்தம் வருமாம்.

     அங்க அரசிக்கு சேவை செய்துக்கிட்டு இருந்த திரௌபதி வேகமா வந்து தருமரின் இரத்தத்தை தண்ணீரில் பிடிப்பாங்களாம். தப்பித்தவறி அந்த இரத்தம் தரையில் பட்டு இருந்தாலும் விராடனோட நாடே வீணாப் போய் இருக்குமாம்.

     அது மட்டும் இல்ல, தர்மரோட ரதம் என்னைக்கும் பூமியில் இருந்து ஒரு அடி மேல தான் இருக்குமாம். குரு துரோணரைக் கொல்லும் போது நடத்தப்பட்ட சூழ்ச்சியில் பாதி உண்மையை மட்டும் சொன்ன பிறகு தான் அவர் ரதம் தரையைத் தொட்டதாம். எல்லாத்துக்கும் மேல உடலோட சொர்க்கபுரியை அடைந்தது அவர் ஒருத்தர் தானாம்.” என்று தர்மனின் சிறப்புகளைச்சொல்லி முடித்தாள் பாரிஜாதம்.

     “இத்தனை சிறப்பு இருந்து என்ன பிரயோஜனம். மனைவியை பந்தயத்தில் வைச்சு தோத்துப் போயிட்டாரே.” என்றான் பிரகலாதன்.

     “உண்மை தான். அவர் செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு தான். ஆனாப் பாருங்க எதிராளி வைக்கும் பந்தயத்துக்கு ஈடா தானே இவர் பணயம் வைக்க முடியும்.

     துரியோதனன் நாட்டைப் பணயமா வைக்கும் போது தர்மரும் நாட்டை வைச்சார். துரியோதனன் தன் தம்பிகளைப் பணயம் வைக்கும் போது தர்மர் தன் தம்பிகளை வைச்சார். கடைசியா துரியோதனன் தன்னோட மனைவி பானுமதியை பந்தயத்தில் வைச்சதும், தர்மனும் பாஞ்சாலியை வைச்சார். அதுக்காக அவர் செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன். தப்பு தான். அந்தத் தப்புக்காகத் தான் அரச குலங்கள் அத்தனைக்கும் ராஜாவா இருக்க வேண்டியவர் காட்டில் வாழ்ந்தார். போரோட முடிவில் வாரிசு இல்லாமல் போனார்.

     மகாபாரத்தைப் பொறுத்தவரை யாரும் முழுக்க முழுக்க நல்லவங்க இல்லை. செய்த தப்பை உணர்ந்து, முழு மனசோட மன்னிப்புக் கேட்டு, அதற்கான தண்டனையை ஏத்துக்கிட்டவங்களை கடவுள் மன்னித்து அருள் புரிவார் னு சொல்வதற்காக எழுத்தப்பட்ட காவியம் தான் அது.

     எனக்கு தர்மரைப் பிடிக்கும். அவர் செய்த தவறுகளைத் தாண்டி அவர்கிட்ட இருக்கும் நல்ல குணங்களுக்காக நான் அவரை மதிக்கிறேன்.” என்றாள்.

     “எல்லாத்தையும் வித்தியாசமான கோணத்தில் நின்னு பார்க்கிறீங்க பாரிஜாதம். எனக்கு உங்களோட எண்ணங்கள் ரொம்பப் பிடிச்சிருக்கு.” பேச்சை நீட்டிக்கப் பார்த்தான் பிரகலாதன்.

     ஆனால் அதற்குள் பாரியின் மனநிலை மாறிவிட்டிருந்தது. “இதைப் பத்தி எதுக்காக நாம இப்ப பேசிக்கிட்டு இருக்கோம்.” என்று அனுப்பினாள்.

     அவள் எழுதி அனுப்பும் வார்த்தைகளை குரலாகக் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு அவள் கோபம் கூட புரிந்தது. “ஆமா அதைப் பத்தி பேசினா அனுமார் வால் மாதிரி போய்கிட்டே இருக்கும். நாம அதை விட்டுட்டு வேற பேசலாம். உங்களுக்கு கவிதைகள் பிடிக்குமா?” என்று இறங்கி வந்தான்.

     “கதை, கவிதை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லையே. எனக்கு கவிதைகள் ரொம்பப் பிடிக்கும். கவித்துவமா வரும் திரைப்பட பாடல் வரிகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நா.முத்துக்குமார் பாடல்களை நினைச்சு நினைச்சு அதிசயித்து போய் இருக்கேன்.” என்று சொல்லி அவளாக அவனுக்கு ஒரு பாயிண்ட்டை எடுத்துக்கொடுத்தாள்.

     “என்ன மாதிரி மனுஷன் ங்க அவர். அவரோட திறமைக்கு கோவிலே கட்டலாம். ‘ஒரு பாதிக்கதவு நீயடி, மறுபாதிக் கதவு நானடா’ பாட்டு கேட்டு இருக்கீங்களா? காதலையும், கதவையும் ஒப்புமைப்படுத்தி என்ன மாதிரி கற்பனைங்க அதெல்லாம்.” சிலாகித்துச் சொன்னான்.

     விருப்பங்களைப் பற்றி பேசும் போது தன்னால் சின்ன சந்தோஷம் வந்து ஒட்டிக்கொண்டது பாரியிடத்தில். “ஆமா, காதல் படம் பார்த்து இருக்கீங்க தானே. அதில் வருமே வரிகள். ‘வெந்நீரில் நீ குளிக்க விறகாகித் தீக்குளிப்பேன்’ எத்தனை ஆழமான வரி. அவரோட பாடல்களைக் கேட்டா காதலிக்காதவங்களுக்கு கூட காதலிக்க ஆசை வரும்.” என்றாள். விட்டுச்சென்ற காதலனை நினைத்து வருந்துகிறாளோ என்று வருந்தினான் பிரகலாதன்.

     “அந்தப் பாட்டில் இன்னொரு வரி கூட நல்லா இருக்கும். ‘வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை. வருங்காலம் காயம் ஆற்றும்.’ அர்த்தத்துடன் சொன்னான்.

     அதைக் கண்டுகொள்ளாமல் புதுப்பேட்டை படத்தில் வருமே,

“இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும்

உன்னை விட்டு விலகிவிடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலேயே

உனக்குத் துணை என்று விளங்கிவிடும்.”

இந்த வரிகள் கேட்டு இருக்கீங்களா சொல்லும் போது பாரியின்

 மனம் வலிப்பதை இங்கே உணர்ந்தான் பிரகலாதன்.

 

“கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட

பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்

புயல் போன பின்பும் புதுப்பூக்கள் பூக்கும்.”

அவளைப் போலவே சுற்றிவளைத்து பாடல் மூலம் ஆறுதல் சொன்னான் பிரகலாதன்.

     இன்னொரு பாட்டு கேள்விப்பட்டு இருக்கீங்களா?

“காற்றின் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை.” என்றாள் பாரி.

     உன்னை நான் இப்படியே விடப்போவதில்லை பாரி. என்று மனதோடு நினைத்தவன், எனக்கு அவரோட எழுத்தில் ரொம்பப் பிடிச்ச பாட்டு ஒன்னு இருக்கு.

“வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே

வரப்பென்றும் அழியாதடி

தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே

கண்ணாடி மறக்காதடி”

என்று அனுப்பினான் பிரகலாதன்.

     அன்றைய நாள் முழுவதும் அவள் சோகமான பாடல்களை அனுப்புவதும் அதற்குப் பதில் சொல்லும் வகையில் அவன் அர்த்தமுள்ள பாடல்களை அனுப்புவதுமாகத் தொடர்ந்தது அவர்களின் பேச்சுவார்த்தை.

     அவளுடைய சிகிச்சைக்காக என்று ஆரம்பித்த பிரகலாதனின் பேச்சுவார்த்தை அடுத்தடுத்த நாள்களிலும் மிகவும் சுவாசரியமாகவே தொடர்ந்தது.

     அண்ணனின் நடவடிக்கைகளை ரோஜாவும் கவனிக்கவே செய்தாள். “என்னண்ணா எப்பப் பார்த்தாலும் செல்போனும் கையும் அலையுறீங்க. செல்போன் வெளிச்சத்தில் உங்க முகம் இன்னும் ப்ரைட்டா தெரியுது எனக்கு. அண்ணி யாரும் செட் ஆகிட்டாங்களா.” சிரிப்புடன் கேட்க, “அப்படியெல்லாம் இல்லை ரோஜா.” என்றவன் ஆதி முதல் அந்தமாய் அனைத்தையும் சொல்லி முடித்தான் தங்கையிடம்.

     “என்னண்ணா நீங்க. நான் உங்களை அந்தப் பொண்ணுகிட்ட பேசச் சொன்னது அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையான்னு கண்டுபிடிச்சு உங்க க்ளினிக் வரச்சொல்லி தான். ஆனா நீங்க ஏன் இப்படி அவங்களுக்கே தெரியாம அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க நினைக்கிறீங்க.” என்றாள்.

     “அவ பாவம் ரோஜா. ஏற்கனவே அழுத்தம் தாங்க முடியாம வெடிக்கிற நிலையில் தான் இருக்கா. இந்த விஷயமும் தெரிஞ்சா தாங்க மாட்டா. அதோட அவளுக்கு அவ குடும்பத்தில் யாரோடவும் பெருசா டச் இல்லை.” என்றான்.

     “அதுக்காக உங்க வேலை எல்லாம் போட்டுட்டு அவ பேசும் நேரம் எல்லாம் நீங்க பேசிக்கிட்டு இருப்பீங்களா? அந்தப் பொண்ணைப் பார்த்துக்க வேண்டியது அவ வீட்டு ஆளுங்களோட வேலை உங்க வேலை இல்லை.” என்றாள். அவள் என்னவோ நியாயமாகத் தான் பேசினாள். ஆனால் அவனுக்குத் தான் அது அநியாயமாகத் தோன்றியது.

     தங்கையிடம் எதுவும் சொல்லமால் தனியறைக்குள் அடைந்து கொண்டு நிறைய யோசித்தான்.

     “தங்கை சொன்னது சரிதானே. பாரிஜாதம் தனிமையில் இருக்கிறாள். மனஅழுத்தம் தாங்க முடியாமல் யாரிடம் பேசுகிறோம் என்று கூடத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறாள். தானும் ஏன் சரிக்கு சமமாக அவளோடு பேசவேண்டும்.” என்று நினைத்தவன் அன்று இரவு முழுவதும் அவளோடு பேசவில்லை.

     அடுத்த நாள் காலையில் அவன்கண் விழித்ததே, “என்னாச்சு ரோஜா உடம்பு ஏதும் சரியில்லையா?” என்கிற பாரியின் கேள்வியில் தான்.

     இதற்கு முன்பு பார்த்தே இராத பெண் தான் என்றாலும் சில நாள்களாக நன்றாகப் பேசிப் பழகியவள் என்பதால் ஒருநாள் இரவில் பேசாமல் விட்டது கூட பாரியைப் பாதித்தது.

     “பாரி நான் உங்க அப்பா இல்ல அண்ணன் கிட்ட பேசலாமா?” என்று டைப் செய்த பிரகலாதன் அதை அனுப்புவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து, இறுதியில் அனுப்பாமல் விட்டுவிட்டான்.

     அவள் பேஸ்புக் பக்கத்தை தேடி அதில் இருந்து தமையன் கண்ணன் எண்ணைக் கண்டுபிடித்தான் பிரகலாதன். கண்டுபிடித்து என்ன பிரயோஜனம் அதை செல்போனின் ஒரு மூலையில் உறங்கப் போட்டுவிட்டு பாரியுடன் தினமும் பேசினான்.

     படிப்பு, வேலை என்று இருந்ததால் பிரகலாதனும் தன் விருப்பு வெறுப்புகளைப் பற்றி பெரிதாக யாரிடமும் பேசி இருக்கவில்லை. தங்கை நெருக்கம் தான் என்றாலும் இத்தனை நெருக்கமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

     பாரியுடன் நல்ல தோழமையை வளர்த்துக்கொண்டவனுக்கு அவளுடன் பேசுவதற்கு தினம்தினம் புதுப்புது விஷயங்கள் நிறைய கிடைத்தது. இங்கு பாரியும் அப்படித்தான்.

     சமீபத்தில் தான் முல்லைக்குத் திருமணம் ஆகி இருந்தது. திருமணத்திற்குச் சென்றவளின் உடல்மெலிவைக் கண்டு அத்தனை வருந்தினாள் முல்லை. பாரி தான் அதையும் இதையும் சொல்லி ஆறுதல் படுத்தி அழகனின் கையில் அவளைப் பத்திரமாகப் பிடித்துக்கொடுத்து வீடு வந்து சேர்ந்தாள்.

     தன் வாழ்வில் முல்லையின் இடத்தை இன்னொருவர் பிடிப்பது சாத்தியம் இல்லாதது என்றாலும், தற்சமயம் ரோஜாவும் தனக்குப் பிரியமானவளாக மாறிவிட்டாள் என்று கருதிய பாரிஜாதம். தினம்தினம் அவளிடம் பேசுவதற்காக பல விஷயங்களைப் புதிதாக யோசிக்கத் துவங்கி இருந்தாள்.

     சுழற்சி முறையில் அவ்வப்போது அவளைத் தாக்கும் நினைவுகள் வந்து போகாது இல்லை. அதிலும் மாதவிடாய் நாள்களில் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களின் காரணமாக தேவையில்லாத நினைவுகளால் அதிகம் மனது கிடந்து துடிக்கும்.

     கண்ணீரில் கரைந்து கழியும் நான்கு நாள்களுக்குப் பிறகு ஓரளவு மனம் தெம்பு பெற, ரோஜா என நினைத்து மீண்டும் மீண்டும் பிரகலாதனுடன் பேசத்துவங்குவாள்.  

 

 

      

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page