About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
கதைகள் படிப்பது மட்டும் தான் வேலை என்பது போல் காலை, மதியம், மாலை, இரவு என ஒருநாளுக்கு நான்கு கதைகள் படித்தாள். அந்த வகையில் ஒரு மாதத்தில் நாற்பத்தியெட்டு நாவல்கள் வரை படித்து முடித்த பாரிஜாதத்தை, அவள் படித்த ஒரு கதை விடாமல் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
பொதுவாக ஒரு கதையில் எத்தனை கதாபாத்திரங்கள் வந்தாலும் பெரும்பான்மையானவர்களின் கவனம் முழுக்க கதாநாயகன் மற்றும் கதாநாயகி மேல் தான் இருக்கும்.
கதையின் முக்கியமான கதாபாத்திரங்களான அவர்களுக்கு சின்னதாக ஏதாவது நடந்தாலும் அது நேயர்களைப் பாதிக்கும் அளவு, மற்ற கதாபாத்திரங்களுக்கு நடக்கும் மிகப்பெரிய அநியாயங்கள் மனதைத் தாக்குவதில்லை.
ஆனால் பாரி சற்றே விதிவிலக்கானவள். முடிந்தவரை எல்லா சூழ்நிலையிலும், அவளைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் நடுநிலையாக இருக்க விரும்புபவள் என்பதால் அவள் படித்த பல நாவல்களில் அவளுக்குச் சின்னச்சின்ன நெருடல்கள் வரத்தான் செய்தது.
யாருடைய ரசனையும் இன்னொருவரின் ரசயோடு நூறு சதவிகிதம் அப்படியே ஒத்துப் போவது சாத்தியம் இல்லை என்பது அவளுக்கும் புரிந்திருந்தபடியால் அவள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு கதை அவளை அதிகமாகத் தொந்தரவு செய்தது.
கதைப்படி கதாநாயகி காதலித்தது ஒருவனை, திருமணம் செய்து கொண்டது இன்னொருவனை. நேயர்களுக்கு அவள் மேல் இருக்கும் மதிப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, காதல், திருமணம் இரண்டிற்கும் அவள் உண்மையாகத் தான் இருந்தாள், ஆனால் காதலன் தான் சரியில்லை. அந்த வகையில் அவள் அவனை விட்டு விலகி கதாநாயகனைத் திருமணம் செய்து கொண்டது மிகச்சரியான ஒன்றே என்று நேயர்களை நினைக்க வைப்பதற்காக, அவள் மேல் உண்மையான அன்பு வைத்திருந்த முன்னாள் காதலனின் காதலை வெகு மட்டமாகக் காண்பித்து நாயகி, நாயகன் இருவர் மட்டுமே சரி என்று முடித்திருந்தார் அந்த எழுத்தாளர்.
அதில் கோபமான கோபம் பாரிக்கு. “காதலன் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நாயகியின் பக்கம் மட்டுமே நின்று கோடிட்டு காண்பித்து, அவன் கதாநாயகியை திருமணம் செய்துகொள்ளத் தகுதியானவன் இல்லை என்று காட்டியது அவளுக்குக் கோபத்தையும், வேதனையையும் ஒருங்கே கிளப்பியது.
இக்கட்டான நிலையில் தீர்க்கமான முடிவெடுத்து அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளத் தெரியாத காதலன் கதாநாயகியைத் திருமணம் செய்து கொள்ளத் தகுதியானவன் இல்லை என்று காட்சியும், வசனமும் எழுதிய அதே எழுத்தாளர், அவருடைய கதாநாயகி அனைத்து சூழ்நிலையிலும் இப்படி தீர்க்கமான முடிவு எடுத்தது போல் காட்டினாரா என்றால் அது தான் இல்லை.
நாயகன், நாயகி இருவரில் ஒருவர் தவறு செய்தாலோ இல்லை ஒரு இக்கட்டான நிலையில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறினாலோ, எல்லா நேரமும் சரியாக இருக்க, சரியானதைச் செய்ய அவர்கள் ஒன்றும் தெய்வம் அல்ல. குற்றம் குறை உள்ள சாதாரண மனிதர்கள் என்று மேற்க்கோள் காட்டிவிட்டு சாதாரணமாக அடுத்த காட்சிக்கு சென்றுவிடுகிறார்.
ஆனால் இதையே அந்தக் காதலன் செய்த போது, அவன் காதல் பொய், அவன் கோழை, சந்தர்பவாதி, முதுகெலும்பு இல்லாதவன் என்று பட்டப்பெயர் சூட்டி ஒதுக்கி வைத்துவிடுகிறார். இது என்ன நியாயம் என்று வெகுண்டெழுந்தாள் பாரி.”
“நாயகன், நாயகி என்றால் மனிதர்களாக இருப்பதற்காக சின்னச் சின்ன தவறுகள் செய்யலாம். சில நேரங்களில் சரியான முடிவெடுக்க முடியாமல் திண்டாடலாம். சில நேரம் தவறு என்று தெரிந்தெ செய்யலாம். ஆனால் இதையே மற்றவர்கள் இவர்களுக்குச் செய்தால் அதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பது போன்ற காட்சிகள் அபத்தமாகத் தோன்றியது பாரிஜாதத்திற்கு.”
“நாயகன் மற்றும் நாயகியின் பார்வையில் இருந்து மட்டும் தான் கதை நகரும் என்றால் அவர்களை மட்டுமே வைத்து கதையை எழுத வேண்டியது தானே. எதற்காக மற்ற கதாபாத்திரங்களை உள்ளே கொண்டு வர வேண்டும், நாயகன் நாயகியை நல்லவர்களாகக் காட்ட அவர்களின் நிலையைத் தாழ்த்த வேண்டும்.
நாயகன், நாயகியின் உணர்வுகள் மட்டுமே பிரதானம், அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்கள் மட்டுமே சரி என்று காட்டப்படுவது, அவர்களுக்கு நடுவில் வந்த ஒரே காரணத்துக்காக காதலனுக்கு அவனைப் படைத்த எழுத்தாளரே செய்யும் நம்பிக்கை துரோகம் போல் தோன்றியது பாரிக்கு.
கூடவே சம்பவம் ஒன்று நடக்கும் போது, அதில் சம்பந்தப்பட்ட இருவர் பக்கமும் இருக்கும் நியாய அநியாயங்களைத் தீர விசாரித்து அதன் பின்னரே யாராவது ஒரு பக்கம் நிற்க வேண்டும். அதை விடுத்து ஆரம்பத்தில் இருந்து ஒருவர் பக்கமே நிற்பவர் எப்படி நியாயவானாக இருக்க முடியும்.” என எழுத்தாளரையும் சாடியது அவள் மனம். முன்பு போல் இருந்தாலும் இந்த மாதிரியான பாரபட்சங்கள் அவளுக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கும் தான். ஆனால் இப்போது இருக்கும் கோபத்தில் இருந்து அளவீட்டில் வேறுபட்டதாக இருந்திருக்கும்.
அவளுக்கு இதை நினைத்து கோபம் மட்டும் தான் வந்ததா என்றால் இல்லை. எழுத்தாளர் மீதான வருத்தம், எழுத்தாளரோடு ஒன்றி தவறு செய்யாத கதாபாத்திரத்தை கண்டபடி திட்டித்தீர்க்கும் மற்ற வாசகர்கள் மீதான வருத்தம், குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் மீது கொண்ட கருணையோடு சேர்த்து எதற்கென்றே தெரியாமல் உள்ளுக்குள் பொங்கி வரும் கோபம், அழுகை எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழி பண்ணியது.
கோடை மழை நேரம் போல் சட்சட்டென்று மாறியது பாரியின் மனநிலை. ஒருநேரம் இது நமக்கு தேவையில்லாத வேலை. படித்தோம், கடந்தோம் என்று இருப்பது தான் நல்லது என்று நினைப்பவள் அடுத்த சில நொடிகளில் அவள் தீர்மானத்தை மறந்தவளாக குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காக வருந்தத் துவங்கிவிடுவாள்.
“ஏன் இப்படி நடந்தது? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? காதலன் பாவம் இல்லையா? அவனைப் படைத்தவரே அவனுக்குத் துரோகம் செய்தால் அவன் என்ன செய்வான்.
தவறு செய்தது அனைவருக்கும் பிடித்த கதாநாயகி, கதாநாயகன் என்றால் இப்படித் தான் பூசி மொழுகுவார்களா? இதற்கு இத்தனை நேயர்கள் விருப்பம் வேறு தெரிவித்து இருக்கிறார்களே. அவர்கள் நியாய, அநியாயம் தெரியாதவர்களா இல்லை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களா?” என்கிற யோசனை கரையான் புற்று கட்டும் வேகத்தில் பாரியின் மனது, மூளை, நினைவு அனைத்தையும் அபகரித்தது.
என்ன முயன்றும் அவளால் அந்த நினைவுகளில் இருந்து வெளிவர முடியவில்லை. வேறு கதை படித்தால் இந்தக் கதையின் தாக்கம் குறையும் என்று நினைத்து மற்ற கதைகளைப் படித்தாள். ஆனால் கவனம் சற்று திசைமாறும் போதெல்லாம் இந்தக் கதை தான் அவள் நெஞ்சை நிறைத்து அழுத்தியது.
படிக்கும் வகையை மாற்றினாள். திரில்லர், மாயாஜாலக்கதைகள் என்று படித்தும் அவளுக்கு திருப்தி இல்லை. பூதம் காக்கும் புதையல் போல் என்ன செய்தும் நிறைய மாட்டேன் என்று அடம்பிடித்த மனதையும், முந்தைய கதையை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் மூளையையும் என்ன செய்வது என்று புரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அழத் துவங்கினாள்.
நிஜ வாழ்க்கையில் தனக்கு நடந்த பாரபட்சம் போலத்தானே கற்பனை உலகத்தில் அந்தக் காதலன் கதாபாத்திரத்திற்கும் நடந்திருக்கிறது. என்னைப் பற்றி என்னவர்கள் யாரும் யோசிக்காது போனது போல், அவனைப் பற்றி அவனை உருவாக்கிய எழுத்தாளரே நினைக்காமல் போனாரே.
தான் உருவாக்கிய ஒரு பிள்ளைக்கு அநியாயத்தை நிகழ்த்திவிட்டு, இன்னொரு பிள்ளையை எப்படி அந்த எழுத்தாளரால் பாராட்டி எழுத முடிகிறது என்று யோசித்து தனக்குள் மருகினாள்.
தனக்கு நடந்த அநியாயத்திற்கு தன்னவர்களிடம் நியாயம் கேட்காது விட்டவள், தன்னைப் பாதித்த அந்த கதாபாத்திரத்துக்காக அதை உருவாக்கிய எழுத்தாளரிடம் நியாயம் கேட்க நினைத்தாள்.
அந்த எண்ணம் தோன்றிய நொடியில் அவளுக்குள் ஒரு உத்வேகம் பிறந்தது. வலி கொஞ்சம் மறைந்தது போல் இருந்தது. அதன்பிறகு வேறு எந்த வேலையும் அவளால் செய்ய முடியவில்லை. வேறு கதைகள் கூட படிக்க முடியவில்லை. அந்த எழுத்தாளரிடம் பேசினால் தான் மூளைக்குள் அடங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் அதிர்வு அடங்கும் என்பது புரிய, குறிப்பிட்ட அந்தக் கதையின் எழுத்தாளரும் பிரகலாதன் தங்கையுமான ரோஜாவின் மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடித்து தன் வருத்தத்தை பதிவு செய்து அனுப்பினாள் பாரிஜாதம்.
“எழுத்து உலகம் என்பது பொழுது போக்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட உலகமும் அல்ல, எழுத்தாளர்கள் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டும் அதன் உள்ளே காலடி வைப்பதும் ரசிக்கத்தக்கது அல்ல.
தான் படைத்த பிரபஞ்சம் மேலும் அழகாக வேண்டும் என்பதற்காக சின்ன இலை ஆரம்பித்து மிகப்பெரிய நீலத்திமிங்கலம் வரை பார்த்து பார்த்து படைத்த பிரம்மனின் வேலையைப் போன்றது எழுத்தாளர்களால் பார்த்து பார்த்து படைக்கப்படும் கதைப் புத்தகம்.
அழகான கதாபாத்திரங்களைக் கொண்டு நேர்த்தியான காட்சியமைப்புகள் மூலம் ஒரு கதையை முடித்து வைப்பது என்பது பிரம்மனின் படைப்புத் தொழிலுக்கு ஒப்பானதே.
பிரம்மனுக்காவது படைப்பது மட்டும் தான் வேலை. எழுத்தாளர் பிரம்மனுக்கும் மேலானவர்கள் என்றே சொல்ல வேண்டும். கதாபாத்திரங்களைப் படைக்கும் போது பிரம்மாவாகவும், அவர்கள் செய்த பாவங்களுக்கான கர்ம பலனைக் கொடுத்து பின் காப்பதில் விஷ்ணுவாகவும், சரி தவறு புரிந்தும் தவறை மட்டுமே செய்பவர்களை அழிப்பதில் சிவனாகவும் இருக்கும் எழுத்தாளர்களின் பணி அவ்வளவு இலகுவானது இல்லை.”
“இறை நம்பிக்கை இல்லாதவராக இருப்பின் எழுத்தாளரானவர் தன்னைத் தானே நீதிபதியாக கற்பனை செய்துகொள்ளுதல் நலம். நியாய சபையில் நீதிபதிக்கும், மும்மூர்த்திகளுக்கும் ஒரே நிலை தான்.”
“எழுத்தாளர் தான் படைக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் குணநலன்களுக்கு ஏற்ப சரியான நியாயத்தை வழங்க வேண்டும். அது தான் அந்த படைப்பாளருக்கும் அழகு, படைப்புக்கும் அழகு.
ஆனால் சில எழுத்தாளர்கள் தான் படைத்த கதாபாத்திரங்களுக்கு நடுவே பாரபட்சம் காட்டி, தனக்கும் தன் வாசகர்களுக்கும் பிடித்தமான நாயகன், நாயகியை மற்ற அனைவரும் நூறு சதவிகிதம் விரும்ப வேண்டும் என்பதற்காக அவர்களுக்குப் போட்டியாக வருபவர்களை தவறாகச் சித்திகரிப்பது தவறான ஒன்று.
சமீப காலமாக அதிகரித்து வருவது என்னை அதிகம் வேதனைப்படுத்துகிறது. அதில் எனக்குப் பிடித்த எழுத்தாளரான நீங்களும் சேர்ந்திருக்கிறது வேதனையைக் கொடுக்கிது. உங்கள் கதையில் உங்கள் நாயகிக்கு வீரமங்கை, தியாகி என்கிற பெயர் வாங்கிக் கொடுப்பதற்காக நீங்கள் செய்த செயல்கள் சற்றே அதிகம் என்று தோன்றுகிறது.” என்று முடிந்த மின்னஞ்சலையும், அதைப் படித்த பின்னர் சோகமாக அமர்ந்திருக்கும் தன் தங்கையையும் பார்த்து பார்த்து சிரித்தான் பிரகலாதன்.
ரோஜாவும் மிகப்பெரிய கதைவிரும்பி. சிறுவயதில் அவள் உறங்குவதற்கு கதை சொல்கிறேன் என்று புராணக்கதைகள், பக்தி கதைகள் எனப் பலவற்றை அவள் பாட்டி சொல்லி பழக்கி வைத்திருக்க அன்றே அவள் மனதில் விழுந்த விதை நாளடைவில் ஆலமரமாக முளைத்திருந்தது.
பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு அதைத் தொடர்ந்து இன்று ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் போதும் அந்த ஆர்வம் மாறாமல் இருக்க, பல எழுத்தாளர்களின் பலவிதமான புத்தகங்களைப் படித்து முடித்திருந்தாள். பாடல் கேட்பது, திரைப்படங்கள் கேட்பது, நண்பர்களுடன் சுற்றுலா எனப் பல கேளிக்கை பழக்கங்கள் இருந்தாலும் விருப்பமானது கதைகள் வாசிப்பு தான்.
மழையில்லா நாளில் தோன்றும் அதிசய மின்னல் போல் எதிர்பாராமல் ரோஜாவுக்குள் விழுந்தது தான், நாமும் கதை எழுதினால் என்ன என்கிற எண்ணம்.
அனைத்தையும் சுலபமாக்கிக்கொடுக்கும் இணையம் இவளைப் போன்ற கனவுகளோடு இருப்பவர்களுக்காகவும் சில செயலிகளைத் தன்னகத்தே கொண்டிருக்க, தனக்குள் தோன்றிய கற்பனையை கதையாக வடிக்க ஆரம்பித்தாள் ரோஜா.
சித்திரமும் கைப்பழக்கமும் என்பது போல் இத்தனை வருடங்களாக அவள் கற்று தேர்ந்து வைத்திருந்த பல விஷயங்கள் அவளுக்கு உதவி செய்ய, ஒரு வருடத்திற்குள்ளேயே நல்ல எழுத்தாளராக வளர்ந்திருந்தாள்.
நல்ல கருத்து இருக்கிறதோ இல்லையோ வாசகர்களின் மனதை நிறைக்கும்படி எழுதக் கற்றுக்கொண்டிருந்தாள். பிரகலாதன் எதிலும் தங்கையைத் தடுக்கவில்லை. அவ்வப்போது வரும் கதைக்கான விமர்சனங்களைத் தன் அண்ணனிடம் காட்டி பெருமைப்படுவாள் ரோஜா.
கல்லூரியில் சிறந்த ஆசிரியராகப் பட்டம் வாங்கினால் கிடைப்பதை விடவும் அதிக ஆனந்தம் கதைக்காக கிடைக்கும் விமர்சனங்களில் கிடைப்பதாகத் தோன்றும் அவளுக்கு.
எதிர்மறையான கருத்துகளும் சில நேரங்களில் வரத்தான் செய்யும். ஆனால் அது கதைக்கான விமர்சனமாக அன்றி, அவளைப் போன்ற சகஎழுத்தளாரின் தீவிர விசிறியால் வேண்டும் என்றே முன்வைக்கப்பட்ட வன்ம வார்த்தைகளாக இருக்கும்.
முதல்முறை இப்படி நடந்த போது மிகவும் வேதனைப்பட்டு தன் அண்ணனிடம் ஒருநாள் இரவு முழுக்க புலம்பினாள் ரோஜா. அவள் புலம்பி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த பிரகலாதன் அதன்பிறகு தேவையான புத்திமதி சொல்லி தங்கைக்கு சரியான பாதையைக் காட்டி இருந்தான். அன்றில் இருந்து யார் வன்மத்தும் வருத்தம் கொள்ளாத ரோஜா, இன்று பாரியின் வார்த்தைகளால் மனம் வருத்தப்பட்டு அண்ணனிடம் சோககீதம் வாசித்துக்கொண்டிருக்கிறாள்.
“அந்தப் பொண்ணு பொலைட்டா தானே தன்னோட வருத்தத்தை பதிவு செஞ்சிருக்கு. இதில் நீ இத்தனை சோகமாக ஒன்னும் இல்லையே.” தங்கையிடம் கேட்டான் பிரகலாதன்.
“உனக்குப் புரியலன்னா, அவங்க சுத்தி வளைச்சு நான் கதை எழுதவே இலாயக்கு இல்லாதவன்னு சொன்ன மாதிரி தோணுது.” வருத்தமாய் சொன்னாள் ரோஜா.
“அந்தப் பொண்ணு சொன்ன வார்த்தை எல்லாம் சரியா இருக்கிற மாதிரி தான் எனக்குத் தோணுது.” பிரகலாதன் சொல்ல ரோஜா அசௌகர்யமாக உணர்ந்தாள்.
அதை உணர்ந்தவன் போல், “சரி இந்தப் பிரச்சனைக்கு உரிய கதையைச் சொல்லு. நான் கேட்கிறேன்.” பஞ்சாயத்து பேசும் நீதிபதி போல் பிரகலாதன் கதை கேட்க அமர, ரோஜாவும் ஆரம்பம் முதல் அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அவன் இதுவரை பெரிதாக கதைகள் என்று எதையும் படித்ததில்லை. தங்கையின் கதைகள் சிலவற்றை படிக்க ஆரம்பித்திருக்கிறான். ஆனால் அவனால் முடிக்க முடியவில்லை. அவன் ரசனை வேறு என்பதால் ரோஜாவும் அவனை வற்புறுத்தியது இல்லை. இன்று தான் முதல் முறையாக ஒரு கதையை முழுதாகக் கேட்டான் பிரகலாதன். அவனுக்கு அதில் நிறைய ஓட்டைகள் தெரிந்தது.
“என்ன ரோஜா இது. ஹீரோயினை என்னவோ தியாகச் செம்மல் மாதிரி போட்ரே பண்ணி இருக்க. ஆனா என்னோட பார்வையில் சரியான சுயநலவாதியா தெரியுறா அவ.” பிரகலாதன் சொல்ல ரோஜாவுக்கு அதிர்ச்சியானது.
“தன்னைக் காதலிச்சுட்டு மறக்க முடியாமல் கஷ்டப்படுறவனை கட்டாயப்படுத்தி, தன்னோட தங்கைக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறவ எப்படி தியாகியாக முடியும்.” கேட்டவனுக்கு நிஜமாகவே புரியவில்லை தான்.
“அண்ணா அதெல்லாம் உனக்குப் புரியாது. அந்த லவ்வர் கேரக்டரை அப்படியே விட்டா அவனோட பேன்ஸ்க்கு கஷ்டமா இருக்கும் தானே. அதனால் தான் அவனுக்கு ஒரு ஜோடியைக் கொண்டு வந்தேன். இதெல்லாம் கதை உலகத்தில் சகஜம்.
இப்படி லவ் பெயிலியர் ஆனவங்களுக்கு யாரைக் காதலிச்சாங்களோ அவங்க குடும்பத்தில் இருந்து தான் ஜோடி அமையும். சில நேரம் இவங்களுக்கு தனிக்கதை கூட வரும். இதெல்லாம் எங்களுக்கு சகஜம். அந்தப் பொண்ணு பாரிஜாதம் தான் சாதாரண விஷயத்தை ஊதி பெருசாக்கிடுச்சு.” தோளைக் குலுக்கியபடிச் சொன்னாள் ரோஜா.
“உன் மேல் தப்பு இல்லன்னு நீ நினைக்கிற தானே. அப்ப அந்த மெயிலை தட்டி விட்டுட்டு நீ அடுத்த வேலையைப் பாரு.” என்ற பிரகலாதன் தன் வேலையைப் பார்க்க புறப்பட்டான்.
அடுத்தடுத்த நாள்களில் பாரியிடம் இருந்து ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் வந்து குதித்தது ரோஜாவுக்கு. ஒவ்வொரு மின்னஞ்சலிலும் அவள் வேறு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தாலும் அவள் சொல்ல வந்தது என்னவோ ஒரு விஷயத்தை தான்.
“அந்தக் காதலன் கதாபாத்திரம் பாவம் இல்லையா? நீங்களே அவனுக்குப் பாவம் பண்ணா, துரோகம் பண்ணா அவன் எங்க போவான். அவனுக்கு சரியான நியாயத்தை நீங்க கொடுத்திருக்கணும்.” என்பதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க, முடிந்தவரை பொறுமையாக பதில் அனுப்பிக்கொண்டிருந்த ரோஜாவுக்கு ஒரு கட்டத்தில் கோபம் வந்துவிட்டது.
“என்னோட அந்தக் கதை பிடிக்கலன்னா வேற கதை படிங்க. இல்ல என்னோட கதைகளே பிடிக்கலையா? வேற எழுத்தாளர்களோட கதைகளைப் படிங்க. சும்மா ஒரே விஷயத்தை என்கிட்ட பேசுறதால் என்ன ஆகிடப் போகுது.
உங்க எதிர்பார்ப்பு தான் என்ன? நான் செஞ்சது தப்புன்னு ஒத்துக்கணுமா? ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட கதையை மாத்தணுமா? நீங்களே சொல்லுங்க நான் அப்படிச் செஞ்சா அது நல்லாவா இருக்கும். நான் எழுதிய கதை சரிதான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இதை இத்தோட விட்டுடுவோம்.” என்று முடித்துவிட்டாள்.
அடுத்த சில நாள்கள் பாரிஜாதத்திடம் இருந்து எந்த மின்னெஞ்சலும் வரவில்லை. தான் அதிகம் பேசிவிட்டோமோ என்று தோன்றியது ரோஜாவிற்கு.
தன் கதையைப் படித்து ஒருவர் சந்தோஷப்பட்டால் மட்டும் தான் அது தன் எழுத்திற்கு கிடைத்த வெற்றியா? அழுகை, கோபம், எரிச்சல் என எந்த உணர்வை வாசகர்கள் காட்டினாலும், அதன் அர்த்தம் தன் கதை அவர்களைப் பாதித்து இருக்கிறது என்பது தானே.
இதற்காக போய் அந்தப் பெண்ணிடம் இப்படிப் பேசி இருக்க வேண்டுமா என யோசித்து, ரோஜாவுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினாள். அவள் எழுதிய முழுக்க முழுக்க காமெடியான ஒரு கதையின் பெயரைச் சொல்லி அதைப் படித்துப் பார்க்கச்சொல்லி பரிந்துரை செய்தாள். உடன் பதில் வந்தது பாரிஜாதத்திடம் இருந்து.
“நான் அதைப் படிச்சுட்டேன். அந்தக் கதை மட்டும் இல்ல. உங்களோட எல்லாக் கதைகளையும் நான் படிச்சுட்டேன். அதனால் தான் என்னால் நீங்க காட்டிய பாரபட்சத்தை ஏத்துக்க முடியல.” என்று பதில் அனுப்பி இருக்க, மறுபடியும் முதலில் இருந்தா என பயந்தாள் ரோஜா. ஆனாலும் அதன்பிறகு பாரியிடம் இருந்து பெரிதாக மின்னஞ்சல் எதுவும் வராது இருந்தது.
ஒரு நாள் நடுஇரவு நேரத்தில், “எதுக்காக இப்படி எழுதுனீங்க. என்னால் உறங்க முடியல. எப்பவும் அந்தக் கதையும் கதாபாத்திரமும் தான் கண்ணுக்குள் இருக்கு.” என்று மின்னஞ்சல் வந்திருக்க, அடுத்த நாள் காலையில் அதைப் பார்த்த ரோஜாவுக்கு பாரிஜாதத்திற்கு ஏதோ பிரச்சனை என்று தோன்றியது.
எத்தனை பெரிய சோகமாக இருந்தாலும் நீண்ட நாள்களுக்கு ஒரே அளவான பாதிப்பை அது கொடுக்காது என்பதை அவள் அறிவாள்.
அப்படி இருக்க கதை சம்பந்தமாக அவளும் பாரியும் பேசிக்கொள்ள ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட பின்பும் பாரியிடம் இருந்து வந்த இந்த மின்னெஞ்சல் அவளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.
விடிந்தும் விடியாத அந்த நேரத்தில் தமையனிடம் இத்தனை நாள் தனக்கும் பாரிஜாதத்துக்கும் நடுவில் நடந்த பேச்சுவார்த்தை அனைத்தையும் காட்டினாள். பொறுமையாகப் படித்துப் பார்த்த பிரகலாதன் தன் புருவத்தை நீவிவிட்டான்.
“நீ என்னண்ணா நினைக்கிற. எனக்கு என்னவோ அந்தப் பொண்ணு நல்ல நிலையில் இல்லன்னு தோணுது.” ரோஜா பதற்றமாகச் சொல்ல, “இதில் நாம உடனடியா ஒரு முடிவுக்கு வர முடியாது ரோஜா. ஒருவேளை அந்தப் பொண்ணு திட்டம் போட்டு இப்படிப் பண்ணி இருந்தா.
நீ தான் சொல்லுவியே, ஒரு ரைட்டரோட விசிறிகள் இன்னொரு ரைட்டரை எமோஷனலா தாக்கி அவங்களை எழுத விடாம செய்ய முயற்சி பண்ணுவாங்கன்னு. இது அப்படியான முயற்சியா இருந்தா.” சந்தேகமாய் சொன்னான் பிரகலாதன்.
“இல்லண்ணா இந்தப் பொண்ணு என்கிட்ட பேச ஆரம்பிச்ச நேரமே சுத்தி எல்லாப் பக்கமும் தேட ஆரம்பிச்சுட்டேன். அவளுக்கு வேற எந்த ரைட்டர்களிடமும் சம்பந்தம் இல்லை. அவ தனி ஆள் தான்.” என்றாள்.
பிரகலாதன் யோசித்துக்கொண்டே இருக்கவும், “ஏதாச்சும் பண்ணுன்னா ஒருவேளை நிஜமாவே அந்தப் பொண்ணுக்கு மனநல உதவி தேவைப்பட்டுச்சுன்னா அதை உன்னைத் தாண்டி யாரால் கொடுக்க முடியும்.
எனக்காக நீ அந்தப் பொண்ணுகிட்ட பேசி பார். நாலு வார்த்தை பேசி, எதிராளியை நானூறு வார்த்தை பேச வைக்கிற யுக்தியில் உன்னை மிஞ்ச யாரு இருக்கா. பேசிப் பாரேன்.” கிட்டத்தட்ட கெஞ்சினாள் ரோஜா.
சில நாள்கள் என்றாலும் தனக்கு மனஉளைச்சலை உண்டாக்கிய முகம் தெரியாத பெண்ணின் மனநிலையை எண்ணி வருத்தப்படும் தங்கையை அதிகம் பிடித்தது அண்ணனுக்கு. அவளுக்காக பாரிஜாதத்திடம் ரோஜாவைப் போலவே பேச ஆரம்பித்தான் பிரகலாதன்.
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Manjula Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page